Jump to content

இலங்கை ராணுவத்தின் போர்க் கொள்ளை!


Recommended Posts

இலங்கை ராணுவத்தின் போர்க் கொள்ளை!

அஜித் போயகொட

 

 
lanka_3049788f.jpg
 

அழிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டால், கண்ணில் படும் அனைத்தையும் நாசப்படுத்த வேண்டும் எனும் உள்ளுணர்வு உருவாகிவிடும்போலும்!

என்னுடைய ராணுவ வாழ்க்கையின் போக்கைத் தீர்மானித்த மிக முக்கியமான தருணம் அது. வடக்குத் தீவுகளில் உள்ள காரைநகரில், 1991-ல் நாங்கள் நடத்திய ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து நடந்த சம்பவம். நோய்வாய்ப்பட்ட, பலவீனமான மக்களை எதிர்கொள்ளும்போது போரின் பாதிப்புகளை உங்களால் உணர முடியும்.

கடைசியாக எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடக்குப் பகுதியில் பணிபுரிந்த நான், அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்துக்கு மாறுதலுக்காகக் காத்திருந்தேன். காரைநகரின் கடற்படைத் தளம் முற்றுகையிடப்பட்டிருந்ததால், ஒரு மாதத்துக்கு முன்பாகவே எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவைப் பெற்ற சமயத்தில், நான் இருந்த முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கப்படவிருந்த செய்தி கிழக்குப் பகுதியில் கிடைத்தது. கடல் வழியைத் தவிர, மற்ற அனைத்தும் முற்றுகைக்குள்ளாகியிருந்தன.

மரணத்தின் நிழல்

இரவில் தளத்தின் மீது கடுமையான மோர்ட்டர் (சிறுபீரங்கி) குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வானொலியில் செய்தி கிடைத்தது. திரிகோணமலையிலிருந்து கிளம்பியபோது, சக கடற்படை அதிகாரிகள் எனக்குக் கைகொடுத்து வாழ்த்துத் தெரிவிக்கக்கூட விரும்பவில்லை. நான் நிச்சயம் சாகத்தான் போகிறேன் என்றே அவர்கள் கருதினார்கள்.

இரவில் நாங்கள் பீரங்கி பொருத்தப்பட்ட படகில் அங்கிருந்து கிளம்பி, கிழக்குக் கடற்கரை வழியாகவும், தீவின் தலைப்பகுதியைச் சுற்றிக்கொண்டும் பயணம் செய்தோம். திரிகோணமலையிலிருந்து முல்லைத்தீவைக் கடந்து, பருத்தித் துறைக்குச் சென்று காலையில் காரைநகரை அடைந்தோம். கடல் மார்க்கமாக வந்தது பாதுகாப்பானதாக இருந்தது. காரைநகர் கடல் வழியில் இலங்கைக் கடற்படை ரோந்து வந்தது. நாங்கள் தளத்தை அடைந்தபோது, காயமடைந்தவர்கள் அங்கிருந்து அருகில் உள்ள பலாலி விமானப்படை தளத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

இரவு நேரப் பணியில் இருந்த வீரர்கள் தங்கள் பணியை முடித்துக்கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு, பல முறை வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அன்றைய நாள் இரவில் இன்னும் அதிகத் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம் என்றும் அங்கிருந்து கிளம்பிக்கொண்டிருந்த வீரர்கள் எங்களிடம் தெரிவித்தனர். தளத்தில் இரண்டாம் நிலை அதிகாரியாக எனக்குப் பணி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வுகளில் ஒரு ஒழுங்கு இருந்தது. சண்டையின்போது பொதுவாகப் பகல் நேரத்தில் இடையில் சற்று நேரம் ஓய்வு கடைப்பிடிக்கப்பட்டது. இரவில் விமானம் வழியாகப் பார்க்க முடியாத அளவுக்கு இருளில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைத்தது. அதனால், பொதுவாக அவர்கள் இரவு நேரங்களிலேயே தாக்குதல் நடத்தினர். ‘பாஸிலான் 5000’, ‘பாஸிலான் 2000’ என்று அழைக்கப்படும் உள்ளூர் தயாரிப்பு மோர்ட்டர் குண்டுகள் மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தார்கள். எத்தனை மோர்ட்டர்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை அந்தக் குண்டுகளுக்குள் இருந்த பெல்லட்டுகளின் எண்ணிக்கை உணர்த்தின. இவை புலிகள் பிரத்யேகமாகத் தயாரிக்கும் வெடிகுண்டுகள். பஸ்களின் நடைப்பகுதியில் உள்ள அலுமினியத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. ஆனால், இந்தக் குண்டுகள், அவற்றின் கூர்முனை கீழே படும்படி நேரடியாகத் தரையில் விழுந்தால்தான் வெடிக்கும். வெடிக்காத குண்டுகளைக் காலை நேரங்களில் நாங்கள் சேகரித்தோம். உண்மையில், பல குண்டுகள் வீணடிக்கப்பட்டிருந்தன. போகப்போகத் தங்கள் தொழில்நுட்பத்தைப் புலிகள் மேம்படுத்தினார்கள்.

முடிவுக்கு வந்த முற்றுகை

எனக்கு நினைவு தெரிந்து, பல வாரங்களுக்கு இரவில்தான் பெரும்பாலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஏப்ரல் மாத இறுதியில் நாங்கள் பதில் தாக்குதல்களைத் தொடங்கினோம். அதிகாலையில், விமானப் படைகள் ராணுவ தளத்தைச் சுற்றியுள்ள இடங்களில் குண்டுகளை வீசி, ராணுவத்தினருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தன. ஆயுதம் தாங்கிய வாகனங்களில் சென்ற ராணுவத்தினர், புலிகளின் தற்காப்பு வியூகங்களைத் தகர்த்தபடி முன்னேறிச் சென்றனர். அவற்றைத் தொடர்ந்து காலாட்படை வீரர்கள் சென்றனர். தரைப் பகுதிகளை ராணுவத்தினர் கைப்பற்றியவுடன், கடற்படைத் துருப்புகள் அந்தப் பகுதிகளில் நிலைபெறத் தொடங்கின. எங்கள் தரப்பில் சில வீரர்கள் உயிரிழந்தனர். சிலருக்குக் காயம் ஏற்பட்டது. கடற்படைத் தளத்தை இழந்துவிடக் கூடாது என்பது வியூகரீதியாக முக்கியமாக இருந்தது. பதில் தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுற்றதும், நாங்கள் தளத்தை விட்டு வெளியில் வந்தோம். புலிகளின் தாக்குதல் அத்தனை மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடவில்லை என்பதை எங்களால் உணர முடிந்தது. மோர்ட்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால், வேறுவிதமான அழிவுகள் ஏற்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

காரைநகரில், கண்ணில் பட்ட அனைத்துமே சேதப்படுத்தப்பட்டிருந்தன. அப்பகுதியைக் கடந்து சென்ற ராணுவ வீரர்களால் 90% வீடுகள் வலுக்கட்டாயமாக உடைத்துத் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. தமிழர்களின் கிராமத்தின் வழியே செல்லும்போது, சிங்கள ராணுவம் எந்த மாதிரியான மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் என்பதை நான் நேரில் பார்த்தது அங்குதான். பார்வையில் என்ன பட்டாலும் அதைச் சேதப்படுத்தினார்கள். அலமாரிகள் திறந்துகிடந்தன. ஆடைகள் கலைக்கப்பட்டுக் கிடந்தன. குடும்பப் புகைப்படங்கள் நொறுக்கப் பட்டிருந்தன. கட்டப்பட்டிருந்த ஆடு, மாடுகள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. சில வீடுகளுக்குள் பசுக்கள் இருந்ததைப் பார்த்தேன். அங்கிருந்து வெளியேறியவர்கள் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துப் பார்த்தார்கள் என்றால், மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டார்கள் என்று தோன்றியது. ஒருவேளை, அவர்கள் இளைஞர்களாக இருந்தால், விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்துவிடுவார்கள் என்றும் தோன்றியது.

அதிகாரத்தின் அச்சுறுத்தல்

கோயில்களுக்குச் சென்றுவிடும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ராணுவம்தான் அப்படி அறிவித்தது. எந்த ஒரு ராணுவம் அணிவகுத்துச் செல்லும்போதும், வீடுகளுக்குள் ஏதேனும் அசைவு தென்பட்டால், கொஞ்சம்கூடத் தயங்காமல் சுட்டுவிடுவார்கள். ஆனால், வழிபாட்டுத் தலங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்பது ஒரு விதி. எனவே, கோயில்களுக்குச் சென்றுவிடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பிற்பாடு, சோதனை நடத்துவதற்கும் அது எளிய வழியாக இருந்தது.

ஒரு சில நாட்களிலேயே, அந்தத் தீவு ராணுவத்தின் தரைப்படை கட்டுப்பாட்டில் வந்தது. மக்களைச் சோதனையிடும் பொறுப்பும் அவர்கள் வசம் வந்தது; புலிகள் மக்களிடையே ஊடுருவியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய! ஆனால், வேறு வகையான அராஜகங்களையும் என்னால் கவனிக்க முடிந்தது. அதனால்தான், ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகப் பிரித்து நிறுத்துமாறு ராணுவத்தினர் சொன்னபோது நான் ஆட்சேபித்தேன். அப்பெண்களுக்கு என்ன நேருமோ எனும் அச்சம் என்னிடம் இருந்தது.

இவ்விஷயத்தில் கடற்படை தலையிட வேண்டும் என்று வடக்குப் பகுதி தளபதியான எனது மேலதிகாரியிடம் சொன்னேன். இறுதிப் பொறுப்பு நம்முடையதுதான். எனவே, இப்போது நாம் தலையிட்டாக வேண்டும் என்றேன். ராணுவ நடவடிக்கைகளுக்கு ராணுவம்தான் பொறுப்பு என்றாலும், மக்களின் பாதுகாப்புக்கும், நலனுக்கும் கடற்படைதான் பொறுப்பு. ராணுவத்தினரின் செய்கைகள் நமக்குத்தான் பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே, முதலிலிருந்தே நாம் இவ்விஷயத்தில் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும் என்றேன். என்ன ஆனாலும் சரி, குடும்பங்கள் ஒன்றாகவே வைக்கப்பட வேண்டும் என்று கூறினேன். குடும்பத்துடன் இருந்தால் மக்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். அண்டை வீட்டுக்காரர்களுடன் இருந்தால்கூட அப்படி உணர மாட்டார்கள் என்று கருதுகிறேன். இதையடுத்து, பொதுமக்கள் தொடர்பான இறுதி முடிவுகளை கடற்படை பொறுப்பு தளபதிதான் எடுப்பார் என்று முடிவெடுக்கப்பட்டது.

திட்டமிட்ட திருட்டு

கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தீவை விட்டு, தரைப்படை வீரர்கள் வெளியேறத் தொடங்கினார்கள். வீரர்கள் அங்கிருந்த வீடுகளில் பொருட்களைத் திருடியது, அவர்கள் வெளியேறிச் சென்ற பிறகு தெரியவந்தது. தங்கள் வீரர்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளிடம் சொன்னேன்.

மிகவும் கவனமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை அது. பூஜை அறையில்தான் பொதுவாகக் குடும்பங்களின் நகை, பணம் வைக்கப்பட்டிருக்கும் என்பது ராணுவ வீரர்களுக்குத் தெரியும். அதற்காகத்தான் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தார்கள் - தங்க நகைகளைத் தேடி. இதுபோன்ற கொள்ளைகளைப் பற்றி நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், நேரில் பார்த்தது அதுதான் முதல் முறை.

நினைத்துப் பாருங்கள்… இன்றைக்கு உங்கள் வீடு நல்ல நிலையில் இருக்கிறது. திடீரென்று வீட்டை விட்டு வெளியேறி, வேறு எங்காவது போக வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லப்படுகிறது. சில வாரங்கள் கழித்து, திரும்பி வந்து பார்த்தால் உங்கள் வீடு சூறையாடப்பட்டிருக்கிறது. உங்களுக்கு எப்படி இருக்கும்? அது உங்கள் வாழ்நாள் சேமிப்பாக இருக்கும். எல்லாம் போய்விட்டிருக்கும். தலைமுறை தலைமுறையாகச் சேகரிக்கப்பட்ட உழைப்பின் பலன் அனைத்தும் நாசப்படுத்தப்பட்டிருக்கும்.

ஒரு குடும்பத்தின் புகைப்பட ஆல்பத்தைப் பற்றி ஒரு அந்நியருக்கு என்ன கவலை. ஆனால், அந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை அது ஒரு பொக்கிஷம். அந்த ஆல்பத்தில் பல நினைவுகளின் தொகுப்பு பாதுகாப்பாகச் சேகரிக்கப்பட்டிருக்கும். இப்போது அந்த நினைவுகள் அத்தனையும் அலங்கோலமாகியிருக்கும்.

ஒருமுறை இரவு உணவு முடிந்தவுடன், “ஏன் இத்தனை கொள்ளைச் சம்பவங்கள் நடக்கின்றன?” என்று சில இளம் அதிகாரிகளிடம் கேட்டேன். படையினர் இப்படிச் செய்ய எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள் என்றேன். இப்படியெல்லாம் செய்வது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குச் சாதகமாக அமைந்துவிடுமே என்றும் கேட்டேன். உடனே, வீரர்கள் கண்ணிவெடித் தாக்குதலில் காயமடைந்து கை,கால்களை இழந்தால் அவர்களுக்குக் காப்பீடு தேவைப்படும் என்றெல்லாம் ஒரு நீண்ட கதையைச் சொன்னார்கள். “இதோ பாருங்கள், உங்கள் படை வீரர்களின் கை,கால்களைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அரசு இருக்கிறது; அமைச்சகம் இருக்கிறது. உங்கள் வீரர்களின் நலனை அவர்கள் பொறுப்புடன் கவனித்துக்கொள்வார்கள். பொதுமக்களிடம் கொள்ளையடிக்க வேண்டியதில்லை” என்று சொன்னேன். போரில் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்று அவர்கள் வாதிட்டனர். இருக்கலாம். ஆனால், நாம் பயிற்சி பெற்ற, நேர்மையான வீரர்கள் என்றால், நமக்குக் கீழ் பணியாற்றும் படை வீரர்களை முறைப்படுத்த வேண்டும். சிலரால் இதைச் செய்ய முடிந்தாலே அந்த மாற்றத்தை நாம் கொண்டுவந்துவிட முடியும். ஆனால், அதைச் செய்ய யாரும் விரும்புவதில்லை. அதனால் அவர்கள் பலனடைகிறார்களா, அல்லது அதுதான் எளிதான தெரிவாக இருக்கிறதா?

அழிவின் கோர முகம்

ஒரு இடத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னர், வீரர்களிடம் ஏதேனும் திருட்டுப் பொருட்கள் இருக்கின்றனவா என்று சோதிப்பது கடற்படையில் வழக்கமான நடைமுறை. தங்கள் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதாக வீரர்கள் புகார் சொல்வதுண்டு. ஆனால், துப்பாக்கிகளைப் பரிசோதிப்பதுபோல் இதுவும் ஒரு பயிற்சிதான். துப்பாக்கி சுடும் பயிற்சி முடிந்தவுடன், துப்பாக்கியும் உங்கள் ‘பாக்கெட்’டும் காலியாகத்தான் இருக்கின்றன என்பதை நிரூபித்தாக வேண்டும். இது பாதுகாப்பு தொடர்பானது. வருத்தம் கொள்வதற்கு அதில் ஏதும் இல்லை. போர்ச் சூழலில் இருக்கிறோம் என்று காரணம் காட்டி, காலப்போக்கில் இந்த நடைமுறைகள் குறைக்கப்பட்டுவிட்டன. ஆனால், நீங்கள் அமைதிச் சூழலில் இருந்தாலும் சரி; போர்ச் சூழலாக இருந்தாலும் சரி, தவறு தவறுதான்!

என்னால் கொள்ளையைத் தடுக்க முடியவில்லை. ஆனால், திருடிய பொருட்களுடன் தீவை விட்டு வீரர்கள் வெளியேறுவதைத் தடுக்க முடிந்தது. தரைப்படை வீரர்கள் கடற்படைப் படகுகளில்தான் பயணித்தாக வேண்டும். எனவே, வீரர்களின் உடைமைகளைத் தவிர வேறு பொருட்களுக்குப் படகுகளில் அனுமதி இல்லை என்று ஒரு உத்தரவு பிறப்பித்தேன். திருடப்பட்ட பொருட்கள் அத்தனையும் நடைபாதை மேடை மீது குவித்து வைக்கப்பட வேண்டியதாயிற்று!

அங்கு குவிக்கப்பட்டிருந்த பொருட்களில் ‘ஃபிரேம்’செய்யப்பட்ட திருமணப் புகைப்படங்களும் இருந்தன. அவை யாரோ சிலரின் புகைப்படங்கள்; யாருடைய வீடுகளிலிருந்தோ எடுக்கப்பட்டிருந்தன. அதாவது, பணம் மட்டும் விஷயமல்ல. இதை எப்படி விளக்க முடியும் என்று தெரியவில்லை. குழந்தைகள் பயன்படுத்திய பொம்மைகள், சைக்கிள்கள் என்று என்னென்னவோ பொருட்கள் இருந்தன. ஆரம்பத்தில் அது சாதாரணமான திருட்டைப் போல்தான் இருந்தது. அப்புறம்தான் அது முற்றிலும் வேறு மாதிரியானது என்று தெரிந்தது. அதாவது, போர் வெற்றிச் சின்னங்களைச் சேகரிப்பது. அழிக்க வேண்டும் என்று உங்களுக்கு உத்தரவிடப்பட்டால், கண்ணில் படும் அனைத்தையும் நாசப்படுத்த வேண்டும் எனும் உள்ளுணர்வு உங்களுக்குள் உருவாகிவிடும்போலும்!

இலங்கைக் கடற்படையில் ‘கொமடோர்’ பதவியில் இருந்த அஜித் போயகொடவின் ‘எ லாங் வாட்ச்: வார், கேப்டிவிட்டி அண்ட் ரிட்டர்ன் இன் லங்கா’ புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அஜித் போயகொட சொல்ல, கேட்டு எழுதியவர் சுனிலா கலப்பட்டி.

© ‘தி கார்டியன்’

தமிழில்: வெ.சந்திரமோகன்

http://tamil.thehindu.com/opinion/columns/இலங்கை-ராணுவத்தின்-போர்க்-கொள்ளை/article9238285.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.