Jump to content

நான் பானுஜன் அல்ல; மோனிஷா! – இறுதிப்பகுதி : யாழ் திருநங்கை..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
September 16, 2016
3784
DSC01136.jpg

மோனல். இந்தப்பெயரை சொன்னால் வீட்டில் கொலை ஒன்றுதான் விழாத குறை. மற்றும்படி எல்லாம் நடக்கும். நடந்து விட்டது. உடலில் உள்ள ஆறிப்போன காயங்களின் தழும்புகள் அதற்கு சாட்சி. எனது அடையாளங்களுடன் வாழ கொடுத்த விலைகள் அவை. உள்ளூர மோனலாகவும் வீட்டில் பானுஜனாகவும் வாழும் இரண்டக வாழ்க்கையொன்றை வாழ்கிறேன். பானுஜன் என பெற்றோர் சூட்டிய பெயரும், உடல் தோற்றமும் வேண்டாத அடையாளமாக மாற, மோனலாக நானே மாறினேன். நீண்ட போராட்டத்தின் பின் எனது அடையாளங்களை கண்டடைந்துள்ளேன். ஆம். நானொரு திருநங்கை. மோனிசா என்று எனக்கு பெயரிட்டுள்ளேன். சுருக்கமாக மோனல் என்கிறார்கள். இன்னும் நிறையப் பெயர்களும் வைத்துள்ளனர். திருநங்கைகள் குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாமல் இப்போதும் அலி, ஒம்பது மாதிரியான கொச்சை வசனங்கள் பேசிக்கொண்டிருக்கும் குறைச்சமூகத்தில், மோனல்களாக மாறிய பானுஜன்களும், பானுஜன்களாக மாறிய மோனல்களும் எதிர்கொள்ளும் சவால்கள் சாதாரணமானவையல்ல. தமது அடையாளங்களை நிரூபிக்க அவர்கள் குடும்பத்தில் தொடங்கி வசையாக பேசும் அறிமுகமேயில்லாத ஒவ்வொருவருடனும் போராடிக் கொண்டிருக்க வேண்டும்.

வசை, பாலியல் சீண்டல், குடும்பத்திற்குள் தினம்தினம் நடக்கும் அடி, உதை, சித்திரவதைகளை கடந்துதான் திருநங்கைகள் தமது அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு திருநங்கைக்கு பின்னாலும் இரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கும் ஏராளம் கதைகள் உள்ளன. ஒவ்வொரு திருநங்கையும் வலியும், அவமானமும் நிறைந்த அந்த கதைகளை கடந்துதான் வந்திருக்கிறார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

யாழ்ப்பாணத்தில் மிகச்சாதாரண குடும்பத்தில் பானுஜனாக பிறந்து இன்று மோனலாக மாறியது வரையான காலத்தை, அந்தக்காலம் என்னில் பதித்த ரணமான நினைவுகளை எனது அடையாளங்களை நிரூபிக்க நான் கொடுத்த விலைகளை தொடராக இந்தப்பகுதியில் எழுதவிருக்கிறேன்.

1998 இல் நான் பிறந்தேன். எனக்கு பெற்றோர் இட்டபெயர் பானுஜன். சிறுவயதிலிருந்தே நான் மிகுந்த மென்மையாக இருந்ததாக கூறுவார்கள். வீட்டுக்கு அண்மையிலிருந்த பாடசாலையில் சேர்க்கப்பட்டேன். பாடசாலை காலத்தில் எனக்கு நிறைய நண்பர்கள். அவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள்தான். பெண்களுடன் பழகுவதே எனக்கு இயல்பாக இருந்தது. அப்போது யுத்த நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருந்தது. எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது எங்கள் குடும்பம் இந்தியாவிற்கு அகதியாக சென்றது. அங்கு பாடசாலைக்கல்வியை தொடர்ந்தேன். பாடசாலையில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் இருக்கை போடப்பட்டிருந்தது. ஆனால் என்னால் ஆண்களின் வரிசையில் உட்கார முடியவில்லை. பெண்களின் வரிசைதான் எனது வரிசையென உண்மையாகவே உணர்ந்தேன். ஆனால், சில பெண்கள் சிரித்து சத்தமிட, ஆசிரியர் வந்து எனக்கு தண்டனை தந்தார். அத்துடன், ஆண்கள் வரிசையிலேயே உட்கார வேண்டுமென கடுமையான உத்தரவிட்டார். எனக்குள் என்ன பிரச்சனையென்பதை புரியவும் முடியவில்லை, அதை ஆசிரியருக்கு புரிய வைக்கவும் முடியவில்லை.

DSC01141.jpgநாட்டுநிலைமைகள் ஓரளவு சீராக எனது குடும்பம் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியது.  நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் என்னை சேர்த்தார்கள். நாளாகநாளாக நானொரு பெண் என்பதை தீவிரமாக உணரவும், நம்பவும் தொடங்கினேன். ஆண் தோற்றமிருந்தாலும், எனது உணர்வுகள் அனைத்தும் பெண்மைதான் என்பதை மெதுமெதுவாக உணரத் தொடங்கினேன். எனது ஒவ்வொரு அசைவிலும் பெண்மை மிகுந்திருப்பதாக நண்பர்கள் கேலி செய்வதை அப்போது சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டேன். நாளாகநாளாக பிரச்சனைகள் எழத் தொடங்கின. எல்லாம் எனக்குள்ளான மனப்போராட்டங்கள்தான். ஒரு ஆணாக இருந்தும் மாணவர் வரிசையில் என்னால் உட்கார முடியாமலிருந்தது. மாணவர்களுடன் நெருங்கிப்பழகுவதை, ஒன்றாக உட்கார்வதை என்னால் நினைத்தும் பார்க்க முடியாமல் இருந்தது. ஏதோ நெருப்பின் மேல் உட்கார்வதை போலிருந்தது. அப்படியான சமயங்களில் பதற்றமும், மனப்பயமும் கூடி இயல்பற்ற தன்மையாக இருந்தேன். இதனால், மாணவர் வரிசையிலும் இல்லாமல், மாணவியர் வரிசையிலும் இல்லாமல் இரண்டு வரிசைக்கும் நடுவில் உட்கார தொடங்கினேன். ஏழு, எட்டு வயதில் பெண்களிற்கு நடுவில் உட்கார ஆரம்பித்து, நான் யார் என குழம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் பதின்னான்கு, பதினைந்து வயதில் நான் யார் என்பதை கண்டடைய தொடங்கினேன். எது என்னுடைய திசையென்பது புரிய ஆரம்பித்தது. எங்கள் வகுப்பாசிரியர் ஒருநாள் என்னை தனிமையில் அழைத்து பேசினார். அவரிடம் அனைத்தையும் சொன்னேன். என்னால் ஆண்களுடன் உட்கார, ஒன்றாக பழக முடியாமலுள்ளதை சொன்னேன். எனக்குள்ளிருக்கும் பெண்மையை சொன்னேன். மறுநாள் பெற்றோரை அழைத்து வரச்சொன்னார்.

மறுநாள் பெற்றோர் பாடசாலைக்கு சென்று ஆசிரியரை சந்தித்தனர். அதுதான் பெற்றோருக்கு என்னைப்பற்றி கிடைத்த முதல் தகவல். ஆசிரியர் விடயங்களை கூறி, என் மாற்றத்தை புரிய வைத்து, கவனமாக பார்க்கும்படி ஆலோசனை கூறி அனுப்பியுள்ளார். நான் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வர அன்று ஆரம்பித்தது பிரச்சனை. அப்பா
இயலுமானவரை என்னை அடித்தார். சாதாரண விடயங்களிற்கு அடித்தால், பெரிதாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருப்பேன். ஆனால் அப்பா அடித்தது, “எனக்கு” எதிராக. எனது உணர்வு வெளிப்பாடுகளிற்கு எதிராக. பொம்பிளை மாதிரி திரிவியா எனக்கேட்டு அடித்தார். நான் அசையாமல் நின்றேன். அப்போது எனக்கு பதினைந்து வயது.

அதன்பின் பாடசாலைக்குள் விரைவாக கதை பரவியது. எல்லா மாணவர்களும் என்னை இளக்காரமாக பார்க்க தொடங்கினார்கள். “ஏய் அலி” என கூப்பிட்டனர். பானுஜன் என்ற பெயர் மாறி அலியானது. அப்போது பாடசாலையில் இருந்த அதிபர், ஆசிரியர்கள் யாரும் அதை தடுக்கவில்லை. எனக்கு ஆறுதலாக இருக்கவுமில்லை.
“ஆணாக இரு.. ஆணாக இரு” என வீட்டில் அன்றாடம் தொடர்ந்த உடல், உள சித்திரவதைகள், தண்டனைகள், பாடசாலை அவமானங்கள் என சிறிய வயதிலேயே நான் சந்தித்த சவால்கள் அனேகம். இன்னொரு பிஞ்சு அதை எதிர்கொள்ளவும் கூடாது. திருநங்கைகள் கல்வியில், வேலை வாய்ப்பில் உயர்ந்த இடங்களை அடைந்து, தனித்துவமானவர்களாக மிளிர்வதெனில் அவர்களின் இளமைக்காலம், பாடசாலைக்கல்வி சீராக, நெருக்கடியில்லாமல் இருக்கவேண்டும். அதற்கு அரசுகள் திருநங்கைகளை பாதுகாக்க, அவர்களின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். அவர்களின் தனியடையாளம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சமூகத்தில் வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

திருநங்கையாக இந்த உலகத்தில் நான் சந்திக்க ஆரம்பித்த பிரச்சனைகள், சவால்கள், அவமானங்கள் அனைத்திற்கும் பிள்ளையார் சுழியிட்டது அந்தப்பாடசாலை வாழ்க்கைதான்.அப்போது எனக்கு ஏற்பட்ட முதற்காதல், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விபத்துக்கள், இயல்பான உலகத்தைவிட்டு தள்ளிச்செல்ல வைத்ததெல்லாம் அதன் தொடர்ச்சிதான்.

 தொடரும்…

 

http://deepam.news/2016/09/16/நான்-பானுஜன்-அல்ல-மோனிஷா-1/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்...தொடருங்கள் பிழம்பு ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பானுஜன் அல்ல மோனிஷா! -2

 

September 20, 2016
174
WP_20160906_10_46_02_Pro-696x392.jpg

முதற்காதல் ஒரு குழந்தையின் முத்தம் போலப் பரிசுத்தமானது. நம்மையறியாமலே நம்முள் ஒருவகைக்  கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்திவிடும்.  எல்லோருடைய வாழ்விலும் பருவமாற்றத்தில் கடந்து சென்ற ஒரு காதல்கதை நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். ஒரு சராசரி மனித உயிரியாக எனக்குள்ளும் அந்தக் காதல் மலர்ந்தது. ஆனால் இந்தக் காதல் அபூர்வமானது. அது ஒர் ‘அவள்’ மீது ஏற்பட்ட காதலல்ல அது ‘அவன்’ மீது ஏற்ப்பட்ட காதல்.

அவன் என் அயல்வீட்டுத் தோழன்.என் சக பராயத்தவன். எப்பொழுதெல்லாம் அவனைக் காண்கிறேனோ அப்பொழுதெல்லாம் என் மனத்தில் ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் செட்டை கட்டிப்பறந்தன. ஏனோ இனம் புரியாத ஒரு படபடப்பு என்னில் ஒட்டிக்கொள்ளும். வெட்கம் வேறு பிடுங்கித்தின்றது. தினம் தினம் எப்படியாவது அவனைப் பார்த்துவிட வேண்டும் என மனது அடித்துக் கொள்ளும். ஆனால் அவனுடன் பேசுவததென்றாலே கையும் காலும் வெடவெடத்துப் போய்விடும். அப்பொழுது நடிகர் குணால் மிகவும் பிரபலமாக இருந்தார். என் அவன் கூட குணாலின் சாயலிலே இருந்தான்.  மோனல் என எனது பெயரினை நான் மாற்றிவைத்துக் கொண்ட பின்ணணியில் கூட என் முதற்காதல் இருந்தது.இப்படியே அவன் மீதான காதலின் பெறுமதி நாளுக்குநாள் ஏறுவரிசையில் சென்றது. ஒரு கட்டத்தில் பாடப்புத்தகங்களிலெல்லாம் அவன் பெயரினைக் கிறுக்கி வைக்கும் அளவிற்குக் கிறுக்குக் கூடிப்போனது. இப்படி ஒருநாள் கணக்குப் புத்தகத்தில் அவன் பெயரினை எழுதி வைத்து விட்டு உறங்கிவிட்டேன். வீட்டில் உள்ளவர்கள் பார்த்து விட்டனர். விடயம் அவன் காதுகள் வரை சென்றது.42-6.png

அவர்கள் பார்வையில் எப்போதும் நான் பானுஜன்தான். அதனால்தான் என்னவோ, அவர்கள் அன்று நான் புத்தகத்தில் கிறுக்கியததை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஏதோ சக நண்பன் பெயரினை விளையாட்டாகக் கிறுக்கிவைத்துள்ளான் என்றே நினைத்திருந்தனர். ஆனால் அன்று முதல் என் காதல் ஊரறிந்த பரகசியமாகிவிட்டது. பானுஜன் என்ற என் பெயரே மறந்து போகும் அளவிற்கு பற்பல புதுப்புது பெயர்களை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். அலி, ரொபி, சூப்புத்தடி என தத்தமது மொழியறிவிற்கு எட்டிய வகையில் எல்லாம் புதிய புதிய பல பெயர்களை வைத்தனர். ஆனால் எனது மன உணர்ச்சியைப் பற்றி யாரும் கருத்தில் கொள்ளவில்லை. இப்போது அவர்களுக்கு தேவையானதெல்லாம் கிண்டலடித்து கேலிபேசுவதற்கான ஒரு வேடிக்கைப் பொருள். அது தம்மைப் போல இரத்தமும் சதையும் இணைந்த உணர்ச்சியுள்ள ஒரு ஜீவன் என்பது அவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. வகுப்பில் தனியாக இருக்கிறான், ஆசிரியர்கள் கேள்வி கேட்டால் நெளிந்து நெளிந்து பதில் செல்கிறான், பெண்கள் போல நடக்கின்றான், இவன் அப்படி, இப்படி என இட்டுக்கட்டி அப்பாவிடம் சொல்லிவிட்டார்கள். அவ்வளவுதான் அன்றிரவு அப்பா ருத்திர தாண்டவம் ஆடிவிட்டார். கோவம், அவமானம் இரண்டையும் ஒன்றாக எப்பெழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா?.  நான் உணர்ந்திருக்கின்றேன்.

அது வாழ்வதில் அர்த்தமில்லை என்ற முடிவிற்கு நான் வந்த தருணம்.எப்படியாவது என் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு தீவிரமாக வலுப்பெற்றது. ஆனால் என்ன செய்வது என்றுதான் புரியவில்லை. அப்போது மலத்தியோன்தான் என் கண்ணில் தென்பட்டது. ஏதா ஒரு வேகத்தில் கரைத்துக் குடித்துவிட்டேன். மலத்தியோனைக் குடித்தது மட்டுமன்றி  நித்திரைக் குளிசைகளையும் அள்ளிப் போட்டுக் கொண்டு உறங்கிவிட்டேன். கண்விழித்தபோதுதான் தெரிந்ததது நான் இருப்பது ஒரு மருத்துவமனை. மரணம் கூட என்னை நேசிக்கவில்லைப் போல. அன்று நான் பிழைத்துக்கொண்டேன். ஆனால் அதன் பின்புதான் எனக்கான சோதனைகள் ஆரம்பித்தன. மருந்தினைக் குடித்து விட்டு சிகிச்சை பெற்றுக் கொண்ட பின்பு எனது பாடசாலை வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போய் விட்டது. என்னை ஆண்கள் வரிசையில் அமருமாறு பாடசாலை சமூகம் நிர்ப்பந்தித்திருந்தது. ஆனால் என்னால் ஆண்கள் மத்தியில் சமமான ஒரு ஆணாக இருக்க முடியவில்லை. நானும் கூட ஒரு ஆணாக வாழ விரும்பவில்லை. அதேநேரம் பெண்கள் வரிசையில் ஒரு பெண்ணாகவும் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. எனவே ஆண்கள் வரிசைக்கும் பெண்கள் வரிசைக்கும் இடையில் கதிரை, மேசை போட்டு தனியாக அமர்ந்து விட்டேன். யாருடனும் பேசுவதற்குக் கூட அந்த நேரத்தில் பிடிக்கவில்லை.

ஆனால் மனதிற்குள் ஆயிரம் சுனாமி அலைகள் ஓயாமல் அடித்துக் கொண்டே இருந்தன. அப்பொழுது என் மன உணர்வை எங்காவது ஒரு இடத்தில் கொட்டித்தீர்க்க வேண்டும் எனத் தோன்றியது. அவர் எனது பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் வயது முதிர்ந்தவர். எனது பாடசாலையின் கண்டிப்பான ஆசிரியரும் அவர்தான். அவரிடம் வீட்டுப்பாடம் செய்யாமல் பல தடவை அடிகூட வாங்கியிருக்கின்றேன். ஆனாலும் அந்த ஆசிரியரிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று நினைத்தேன்.  எனது மனப்பாரத்தை ஒருவாறு இறக்கிவைக்கத் தீர்மானித்தேன்.

தெடரும்…

மோனிஷா

http://deepam.news/2016/09/20/நான்-பானுஜன்-அல்ல-மோனிஷா-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பானுஜன் அல்ல; மோனிஷா! – 3

September 28, 2016
22
WP_20160906_10_46_02_Pro-696x392.jpg

முதன் முதலாக ஒரு மனித உயிரி என்னை ஆதரவாகப் பார்த்த தருணமது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அன்று மதிய உணவிற்கான இடைவேளயில் அவரைச் சந்திப்பதாகத் தீர்மானித்தேன். ‘நான் ஆணாக இருக்க விரும்பவில்லை. பெண்ணாகவே வாழவிரும்புகின்றேன்’ என்றேன். முதலில் அவர் என்னைக் குழப்பத்துடன்தான் பார்த்தார். அவரிற்கு நான் ஏதோ பிதற்றுவது போலவே இருந்திருக்க வேண்டும். ஆனால் சில நிமிடங்களில் அவர் என்னைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். பார்வையில் ஒருவித கனிவு தெரிந்தது. ஆம், அந்த ஆசிரியர் என்னைப் புரிந்துகொண்டார்.

புரிந்து கொண்டது மட்டுமன்றி, மறுநாள் பெற்றோரை வரவழைத்துப் பேசினார். ஆனால் என்ன பேசினார் என்றுதான் தெரியவில்லை. வழமை போல அப்பா இரவில் குடித்துவிட்டு வந்து, அன்று வீட்டில் ருத்திர தாண்டவம் ஆடினார். வலிகள் கண்டு கண்டு இந்தத் தேகம் மரத்துப்போய்விட்டது. மனதில் வன்மம் கூடவே, ஒரு கட்டத்தில் கல் போல இருந்துவிட்டேன். என் மொளனம் மேலும் மேலும் அவரை வெறிகொள்ள வைத்திருக்க வேண்டும். ஆத்திரம் தீரும் வரை அடித்துத் துவைத்து விட்டார். ஆனால் என் கண்கள் அப்போது அழுவதற்குக் கூட அவருக்கு ஒத்துழைக்கவில்லை.

யார் யாரோ  உறவினர்கள்  எல்லாம்  வீட்டிற்கு  வருவார்கள்.  குசலம் விசாரிப்பார்கள். அவர்களின் பார்வையில் நான் நாணிக் குறுகிக்போய்விட்டேன். ஒரு புழுவை விட அற்பமாக உணர்தேன்.  சிலர் என்னைக் கண்டு காறி உமிழ்ந்தார்கள். என்னும் சிலர் என்னைக் கண்டு அச்சப்பட்டார்கள். அருகில் வராமல் தெறித்தோடினார்கள். பலருக்கு நானொரு வேடிக்கை வினோதம். அவர்களுக்குத் தெரியாமல் நான் மாறிக்கொண்டேயிருந்தேன் .

அப்பொழுது, ஆண்கள் என்றாலே ஏதோ நரலோகத்தின் எமதூதர்கள் போல இருந்தது எனக்கு. வீட்டிற்கு வரும் ஆண்களிற் கெல்லாம் கற்களால் எறிந்தேன். கோபத்தில் வாயில் வந்தபடியெல்லாம் ஏசினேன். ஆனால் என் செய்கைகள் அவருக்கு விசித்திரமாகத் தோன்றியிருக்கிறது. அதாவது பித்து நிலை.  எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கின்றது என பலரும் பலவாறு பேசினார்கள். அதனால்தான் நான் பெண்கள் போல நடந்து கொள்கின்றேன். கற்களால் எறிகின்றேன் எனக் கூறினார்கள். ஆனால் அம்மா மட்டும் எதுவுமே போசாமல் அழுதுகொண்டேயிருந்தாள். அதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

ஒருநாள் கோயிலுக்குப் போகப்போவதாகச் சொல்லி என்னை ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். நானும் ஏதோ விபூதி போட்டு, வேப்பிலை அடிக்கப் போகின்றார்கள் போல என எண்ணிக்கொண்டேன். ஆனால் அன்று நடந்த கதைவேறு. உண்மையில் நான் அழைத்துச் செல்லப்பட்டது, கோயிலுக்கல்ல. அதுவொரு வைத்தியசாலை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் இடம். ஆம், அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு சென்றது தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு. அங்கு எனக்கு ஊசி மூலமாக மருந்து ஒன்று ஏற்றப்பட்டது. அதன் விபரங்கள் எனக்குத் தெரியவில்லை.  அது ஏற்றப்பட்டதன் பின்பு, நான்கு நாட்களின் பின்னர்தான் நான் கண்விழித்தேன். வாழ்க்கையில் அது எனக்கொரு புது அனுபவமாக இருந்தது.

அதன் பின்பு மனநல மருத்துவர் சிவயோகனிடம் அனுப்பி வைக்கப்பட்டேன். அவர் என்னைப் பதினெட்டு வயது வரும்வரை காத்திருக்கச் சொன்னார். அதன் பின்பு தூரத்து உறவுக்கார் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தேன். அங்குதான் அந்தச் சம்பவம் நடந்தது. அவருக்கு ஒரு 65 வயதிருக்கும். ஒருவகையில் எனக்குத் தாத்தா முறையானவர். அன்று சாய்மனைக்கதிரையில் அமர்ந்திருந்தபடி என்னை அழைத்தார். நானும் ஏதோ உடல்நலம் சரியில்லைப் போலஎன எண்ணியபடி அருகில் சென்றேன். ஆனால் அந்த வஞ்சகன் என்னை அசிங்கமாகத் தொட்டான். உறவிற்கு அழைத்தான். வெலவெலத்துப் போய்விட்டேன். கைகளை உதறிவிட்டு என் அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டேன். அவர் மனைவி வரும் வரை கதவினை இறுக்கமாகத்தாள்பாழ் இட்டுக் கொண்டு அறைக்குள்ளேயே முடங்கியிருந்தேன்.

http://deepam.news/2016/09/28/நான்-பானுஜன்-அல்ல-மோனிஷா-3/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


  கணத்த மனதோடு வாசிக்கிறேன்....தொடருங்கள் பிழம்பு... tw_anguished: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுக் கதையையும்... வாசித்து விட்டு,  எனது  கருத்தை எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

நாகரீகம் நன்கு வளர்ந்துள்ள மேற்கத்தைய தேசங்களிலேயே Transgender பெண்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். எனவே, ஊரில் வாழ்கின்ற  மோனிஷாவின் கதையை வாசிக்கும்போது எமது சமூகத்தை குறைப்பட்டுக்கொள்ள முடியவில்லை. சமூகத்தில் எல்லோரையும் போல் வாழ்வது மோனிஷாக்களுக்கு மிகவும் கடினமாகவே இருக்கும். ஆனால், நிச்சயம் காலப்போக்கில் இன்னும் ஓர் 10 - 50 வருடங்களில் நல்ல  சமூகமாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் சுண்ணாகத்தில் ஒருவர் இருந்தார், ஒரு நாள் சாரம் சேட்டுடனும்(ஆணாக) மறுநாள் பஞ்சாபியுடனும்*(பெண்ணாக) வருவார். அமைப்பு கூப்பிட்டு ஏதாவது ஒன்றாக இரு என்று அறிவுறுத்தியது. பஞ்சாபியை தேர்வு செய்தார்.

*அந்த நாட்களில் பஞ்சாபி இப்போ சுடிதார்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பானுஜன் அல்ல மோனிஷா! – 4

October 4, 2016
29
WP_20160906_10_46_02_Pro-696x392.jpg

வர் என் சொந்தக்காரன். வயதானவர். மனைவியுடன் வசித்து வந்தார். எனது வீட்டில் நெருக்கடி அதிகரிக்க அவர்களின் வீட்டில் தங்க சென்றபோதுதான் அந்த கொடுமை நிகழ்ந்தது. என்னோடு மிக நல்லவர் போல் ஆறுதல் கூறி நன்றாக பழகுவார். என்னை அன்பால் அரவனைக்கின்றார் என்று நினைத்தேன். ஒருநாள் அவரது மனைவி இல்லை. வெளியே போயிருந்தார். அன்று அவரும் நானும்தான். படம் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். ‘பிள்ளஞ்தண்ணி கொஞ்சம் கொண்டு வா’ என்றார். தண்ணீரை எடுத்து கொண்டு சென்றேன். அவர் சாய்மனை கதிரையில் உட்கார்ந்திருந்தார்.

நான் தண்ணீரை கொடுக்க வாங்கவில்லை. எல்லைமீற முயன்றார். எனக்கு உடம்பெல்லாம் நடுநடுங்க தொடங்கிவிட்டது. அவரை உதறிவிட்டு அறைக்குள் ஓடிச்சென்று தாளிட்டு விட்டேன். அவரது மனைவி வீட்டுக்கு வந்த பின்னர்தான் வெளியில் வந்தேன். ‘என்னடா முகம் எல்லாம் வேர்த்திருக்கு. என்னாச்சு’ என்று கேட்டார். நடந்ததை கூறினேன். அவருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் எல்லோருடனும் அப்படிதான், பாசமாக பிள்ளை என்று அணைத்திருப்பார் என்று சொல்லி, என்னை திட்டினார். நான் சொல்வது உண்மையாக இருக்காதென்ற முன்முடிவுடன் இருந்தார். நான் அந்த வீட்டை விட்டும் வெளியேறினேன்.

திருநங்கைகள் என்பவர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்லவென்றுதான் இந்த சமூகம் நினைக்கிறது. திருநங்கைகள் இழிவானவர்கள், அவர்கள் பொருட்படுத்த தக்கவர்கள் அல்ல, உண்மை பேசமாட்டார்கள் என பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். எல்லா சுய சமாதானங்களையும் விடுங்கள். வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என இரண்டு இடங்களில் கருத்தமர்வு நடக்கிறது. இரண்டு இடங்களிலும் உங்களிற்கு அறிமுகமற்றவர்கள் கருத்தமர்வில் கலந்து கொள்கிறார்கள். ஒரு இடத்தில் கலந்து கொள்பவர் திருநங்கை. நீங்கள் எங்கு போவீர்கள்? நிச்சயம் திருநங்கை வளவாளராக இருக்குமிடத்திற்கு செல்லப்போவதில்லை. ஒரு திருநங்கை நமக்கு எதை கற்றுத்தரப் போகிறதென நினைப்பீர்கள். உங்கள் ஒவ்வொருவரையும் போலத்தான் ஒவ்வொருவரும் இருக்கிறார்கள். அதனால்த்தான் இந்த சமூகமே திருநங்கைகளிற்கு எதிரானது என்றேன். இந்த சமூகத்தை எதிர்கொள்ள எவ்வளவு விலைகள் கொடுக்க வேண்டுமென்பதை திருநங்கையாக நான் உணர்ந்து கொண்டுள்ளேன். எனக்கு முன்பாக நின்று பேசும் ஒவ்வொரு மனிதனும் கேலியும், கிண்டலும், வசையும்தான் பேசினார்கள். என்னை புரிந்து கொண்டவர்கள் இந்த சமூகத்தில் மிகச்சிலர்தான்.

என் ஒற்றைக்கை விரல்களே போதும், இந்த சமூகத்தில் எனக்கு ஆதரவாக இருப்பவர்களை கணக்கிட. என்னை முழுமையாக புரிந்து எனக்கு இன்றுவரை ஆறுதலாக இருக்கும் அம்மம்மாதான் என் உலகம். அவருக்கு வரும் ஓய்வூதியத்தில் என்னுடன் வாழ்கிறார். உலகமும், உறவுகளும் என்னை அவமானச் சின்னமாக பார்த்தபோதும், அவர் என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டார். என் தாய்போல, தந்தைபோல, சகோதரி போல, நண்பி போல அவரே இருக்கிறார்.உலகத்தில் நான் படும் அவமானங்களையெல்லாம் அம்மம்மாவின் மடியில் இறக்கி வைத்துவிட்டுத்தான் உறங்கச் செல்கிறேன். இந்த உலகத்தின் சவால்களையெல்லாம் வென்றுவர அவர் புத்திசொல்லிக்கொண்டிருக்கிறார். அவரது அச்சமெல்லாம், நான் சின்னவயதாக இருப்பதும், அவர் அந்திமகாலத்தில் இருப்பதும். தனக்குப்பின்னால் நான் என்ன செய்வேன் என கவலைப்பட தொடங்கிவிட்டார்.

ஏனெனில், இந்த சமூகத்தின் சவால்களை கடப்பது இன்னும் எனக்கு சிரமமாகத்தான் உள்ளது. வீதிக்கிறங்கினால் சூப்பி, அலி, ஒன்பது என விதவிதமாக கொச்சையாக கூப்பிடுவார்கள். அவர்களின் பாலியல் வக்கிரம் வெளிப்படும். நீங்கள் இப்பொழுது இசைப்பிரியா பற்றி பேசுகிறீர்கள். ஆயுதம் தூக்காத ஒரு பெண்ணை நூற்றுக்கணக்கான ஆண்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி, மனவக்கிரங்களை தீர்த்து கொண்டார்கள் என்கிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஒவ்வொரு ஆணும் உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். நான் வீதியில் தனிமையில் செல்லும் போது நல்லூரடி, அரசடி, கந்தர்மடம், ஆரியகுளம், யாழ்நகரத்தில் வீதியோரம் நிற்கும் ஆண்களின் சுயரூபத்தை பார்த்திருக்கிறேன். யாருமில்லாத சமயத்தில் ஒரு திருநங்கையிடம் எப்படி வக்கிரப் பேச்சு பேசுகிறீர்கள் என்பதற்கு என் ஒவ்வொரு பயணமும் சாட்சி.

ஓவ்வொரு நாளும் நான் யாராவது ஒருவனால் பாலுறவிற்கு அழைக்கப்படுகிறேன். வீதியில் அழைத்துவிட்டு, வெடித்து சிரிப்பார்கள். இதனால் இப்பொழுது வீட்டைவிட்டு வெளியில் செல்வதென்றாலே அடிவயிறு குமையும். வாசலை கடக்க, கால்களின் கீழே நெருப்பு பற்றிக்கொள்ளும்.

எனது அச்சம் நியாயமானதென்பது ஒருமுறை நிரூபணமானது. எப்பொழுதும் வீதியில் சுற்றித்திரியும் சிலர் என்னை கடத்தினார்கள். கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்வதுதான் அவர்களின் நோக்கம். அதனால் யாழ்ப்பாண பத்திரிகைகள், இணையங்களின் முதல்பக்க செய்தியாகவும் ஆனேன்.

 (தொடரும்)

 

http://deepam.news/2016/10/04/நான்-பானுஜன்-அல்ல-மோனிஷா-4/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பானுஜன் அல்ல மோனிஷா! -5

October 13, 2016
115
2016-09-12-12.00.28.png

ரு திருநங்கையாக இந்த வாழ்க்கையையும், சூழலையும் பாதுகாப்பற்றதாகவே நான்உணர்ந்து கொண்டிருந்தேன். இதில் எழுதுவதை விட சிரமமானது அந்த வாழ்க்கை. சில வலிகளிற்கும் அவமானங்களிற்கும் நிகரான வார்த்தைகள் கிடையாது. அந்த வலிகளையும், அவமானங்களையும் வார்த்தைகளில் சொல்ல முடியாது. அதிகமேன், நடந்த முடிந்தபின்னர் மீண்டுமொருமுறை முழமையாக நினைவுகொள்ளவும் முடியாது. அவ்வளவு கனதி, கொடூரமானது.

அப்படியான கனத்த அனுபவங்கைள நான் தினமும் சந்தித்து கொண்டிருந்த பருவம். உலகத்தின் முன் திருநங்கையாக நான் காலடியெடுத்து வைத்த காலம். அவமானங்கள், கேலிகள், வசைகளை எதிர்கொள்ளத் தொடங்கியிருந்தேன். ஓவ்வொரு வசைச்சொல்லை உதிர்க்கும் உதடுகளையும், கேலி பேசும் வாய்களையும் மிக நன்றாகவே மனது பதிந்து வைத்திருந்தது. அதனால் சிலரை பார்த்தாலே வேறுதிசையில் சென்றுவிடுவேன்.

எங்கள் வீட்டுக்கருகில், வீதியில், சுற்றயலில் இருந்த எண்ணற்ற முகங்கள் அசிங்க முகங்களாக மனதில் பதிந்துவிட்டது. அவர்களை எதிர்ப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நான் காயப்படுத்தப்படுவேன். இப்படியான சிலர் மிக அசிங்கமாக என்னை கேலி செய்தபடி பின்னாலேயே சுற்றுவார்கள். பாலியல் உறவிற்கு அழைப்பார்கள். இதில் எங்கள் கிராமத்தை சேர்ந்த இருவர் முக்கியமானவர்கள். அப்பொழுது நான் என்னளவில் மாற்றத்தை உணர்ந்து கொண்டிருந்த சமயம். தோற்றத்திலல்லாமல் செயற்பாட்டில் பெண்மை வெளிப்பட்ட காலம் அது. ஒருநாள் நான் தனிமையில் சென்று கொண்டிருக்க, பின்னால் வந்து பாலியல் உறவிற்கு அழைத்தார்கள். நான் அவர்களை தவிர்த்துவிட்டு, விரைவாக சென்று விட்டேன்.

மறுநாள், நல்லூரடியில் சென்றுகொண்டிருந்தேன். ஆள்நடமாட்டம் குறைவான நேரம். இருவரும் சைக்கிளில் வந்து மறித்தார்கள். தங்களுடன் வரச்சொன்னார்னள். நான் அவர்களை தவிர்த்து வேகமாக செல்ல முயல, கையை பிடித்து இழுத்தார்கள். உதறிவிட்டு ஓடினேன். ஆனால் அவர்கள் என்னை பிடித்துவிட்டனர். சைக்கிளின் முன்பக்கத்தில் என்னை இருத்திக் கொண்டு சென்றார்கள். பாடசாலையொன்றிற்கு முன்பாக உள்ள பற்றைக்குள் கொண்டு சென்று, என் கை,கால், வாயை கட்டி அவர்கள் குரூர எண்ணத்தை செயற்படுத்தினார்கள்.

விடயம் முடிய அவர்கள் தப்பியோடிவிட்டனர். நான் வீட்டுக்கு சென்று நடந்ததை சொன்னேன். பின்னர் வைத்திய
சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டேன். மறுநாள் யாழ்ப்பாண பத்திரிகை, இணையங்கள் பரபரப்பு செய்திவெளியிட்டன. எல்லா ஊடகங்களும் பாதிக்கப்பட்ட நான் யார் என்பதை துப்பறிந்து, என்னை நெருங்கவே முயன்றன. வைத்தியசாலை, சட்டபாதுகாப்பு இருந்தபடியால் தப்பித்தேன். இல்லையென்றால், என் சிறுபராயத்திலேயே ஊடகங்கள் என்னை கொன்றிருக்கும். என் படம் கிடைத்திருந்தால் நிச்சயம், படத்துடன் செய்தி பிரசுரித்திருப்பார்கள். அவர்கள் யாருக்கும் இந்த அசிங்கத்தை செய்தவர்கள் யார் என்பதிலோ, அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதிலோ துளியும் ஆர்வம் கிடையாது.

என்னுடன் அத்துமீறி நடந்தவன் ஒருவனிற்கு எச்.ஐ.வி தொற்றுள்ளதென்ற அதிர்ச்சி தகவல் பின்னர்தான் தெரியவந்தது. மருத்துவமனையில் எனக்கு தொடர்சிகிச்சை, பரிசோதனை நடத்தப்பட்டது. நல்லவேளையாக, அப்படியொரு அபாயத்தில் சிக்கவில்லை. இப்பொழுது மகிழ்ச்சியாக இரத்ததானமும் செய்கிறேன்.

யாழில் பாலியல் தொழிலாளிகள் இருக்கிறார்கள். உலகத்தின் எல்லா மூலையிலும் அவர்கள் இருக்கிறார்கள். திருநங்கைகளும் பாலியல் தொழிலாளிகளாக உள்ளனர். ஏன், யாழ்ப்பாணத்தில்கூட அப்படியிருக்கிறார்கள். ஆனால், பெண்களையே பாலியல் பிண்டங்களாகவும், திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழிலாளிகள்தான் என்பதை போலவும் சமூகம் தவறாக கருதுகிறது. தென்னிந்திய சினிமாவில் திருநங்கைகள் என்றால் பாலியல் தொழில் செய்பவர்கள், கேலிக்குரியவர்கள் என்பதை போன்ற சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகள் வீட்டிலும், சமூகத்திலும் சவால்களை சந்திக்க இதுதான் பிரதான காரணம். திருநங்கைகளும் மனிதர்களே, பால்நிலை வேறுபாட்டால் அவர்களை கேலிக் குரியவர்களாக பார்ப்பது தவறென்பது நமது சமூகத்தில் சொல்லிக்கொடுக்கப்படவில்லை. அதனால்த்தான் ஒவ்வொரு திருநங்கையும் வீட்டிலும், சமூகத்திலும் சிக்கல்களை சந்திக்கிறார்கள்.

நான் எனது வீட்டில், பெற்றோர்களுடன் வசிப்பதில்லை. எனது வீட்டில், பெற்றோர்களால் இழைக்கப்பட்ட கொடுமையிலிருந்து காவல்த்துறைதான் காப்பாற்றியது. அவர்களின் பார்வையில் நான் வேண்டாத பிள்ளை. நான் இருப்பதை அவமான சின்னமாக கருதினார்கள். நான் செத்துப்போவதையே விரும்பினார்கள். தினம்தினம் அடித்தார்கள், சித்திரவதை செய்தார்கள், வார்த்தைகளால் கொன்றார்கள். இனிதாங்கவே முடியாதென்ற போது காவலநிலையத்திற்குதான் ஓடினேன். அவர்கள்தான் பெற்றோரை அழைத்து கண்டித்து, ஆலொசனை சொல்லி அனுப்புவார்கள்.

என்னை பெற்றோர் புரிந்துகொள்ளவில்லையென்றபோது ஆரம்பத்தில் கோபமும், வேதனையும் இருந்தது. இப்போது இல்லை. இந்த சமூகம் எப்படியானது, அவர்கள் என்னவிதமாக உருவாக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டுவிட்டேன். பதினெட்டு வயது முடிவதற்குள் எனக்கு உலகம் கற்றுத்தந்தது அனேகம். இந்த சமூகத்தின் ஒரு அங்கம்தான் எனது குடும்பமும். இந்த சமூகம் எப்படி உருவாக்கப்பட்டதோ, அப்படித்தான் அவர்களும் உருவாக்கப்பட்டனர். இந்த சமூக அமைப்பு மாறும்வரை குடும்பத்தில், வீட்டில் மாற்றம் வருமென எதிர்பார்க்க முடியாது.

அதனால் யார் மீதும் இப்போது கோபம் கிடையாது.

 

http://deepam.news/2016/10/13/நான்-பானுஜன்-அல்ல-மோனிஷா-5/

தொடரும்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பானுஜன் அல்ல மோனிஷா! – 6

ந்த சமூகத்தில் நான் சந்தித்த வசைகள், அவமானங்களிற்கு நிகராக வீட்டில் கொடுமைகளை அனுபவித்தேன். திருநங்கை என்பது அவமானம் என்பதாக வீட்டில் உணர்வதால் இந்த கொடுமை.

அனேகமாக இன்றும் நான் இரண்டக வாழ்க்கைதான் வாழ வேண்டியுள்ளது. ஒரு திருநங்கையாக சுதந்திரமாக உலாவுவதும், பேசுவதும், நடப்பதும் வீட்டிற்கு வெளியில்தான். வீட்டுக்குள் அந்த சுதந்திரம் கிடையாது. வீட்டுக்குள் பானுஜனாகத்தான் வாழ வேண்டியிருந்தது. பெண்களிற்கான உடைகளை வீட்டில் மறைத்து வைத்திருப்பேன். அலங்காரப்பொருட்களையும் மறைத்து வைத்திருப்பேன். என் உணர்வுகளையும், உடைகளையும் மறைத்து வைத்திருப்பதுதான் வாழ்க்கையாக இருந்தது. அந்த ஆடைகளை அணிந்து, ஒரு பெண்ணாக வெளியில் செல்லும் கணத்திற்காக மனது காத்திருக்கும். பெண்களின் ஆடை அணிந்து, பெண்ணாக அலங்காரம் செய்து வீட்டைவிட்டு வெளியில் செல்லும் கணம்தான் வாழ்வின் மகோன்னத பொழுதாக அமையும். அது எல்லா நாளும் வாய்க்காது. வீட்டிலுள்ள எல்லோரையும் போக்குகாட்டுவதென்றால் சும்மாவா?

எனது உடைப்பைக்குள் பெண்களிற்கான உடைகளும், அலங்காரப் பொருட்களும் இருக்கும். யாருமறியாமல் அதை மலசல கூடத்திற்குள் எடுத்துச்சென்று, உடைமாற்றிக்கொள்ள வேண்டும். யாருமறியாமல் வீட்டின் பின்பக்கத்தால் வெளியேறி வீதிக்கு செல்ல வேண்டும். இந்த முயற்சிகள் கிட்டத்தட்ட உயிரைப்பணயம் வைப்பதை போன்றவை. யாரும் கண்டுவிட்டால் அவ்வளவுதான். அடி, உதைதான். இரும்புக்கம்பியாலும் அடிவாங்கியிருக்கிறேன். வீதியில் யாரும் கண்டாலும் அடிதான். அப்பா, தம்பி, நெருங்கிய இரத்த உறவுகள் என பலரின் அடிக்கு பயந்து வாழ வேண்டிய கொடூரநாட்கள் அவை. இத்தனை தடைகளையும் கடந்து, வீதிக்கிறங்கும்போதுதான் ஒரு நிறைவு பிறக்கும். இந்த உலகம் எனக்கானதாகவும் தோன்றும்.

திருநங்கையாக எனது உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்த பின்னர் ஒருநாள் கூட யாரும் வீட்டில் ஆறுதலாக கதைத்ததில்லை. ஒரு போர்க்களத்தில் வாழ்வதை போலத்தான் வாழ வேண்டியிருந்தது. எதிரிகளை எதிர்கொள்ள வியூகம் வகுப்பதைபோல ஒவ்வொரு கணமும் வியூகம் வகுக்க வேண்டியிருந்தது. போர்க்களத்திலேயே வாழ்வது மிகக்கொடுமையானது. அதனால் பெரும்பாலும் அறையை பூட்டிவிட்டே இருந்துவிடுவேன்.

இப்படியே வாழ முடியாதென்ற முடிவிற்கு வந்தபோது வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன். ஆனால் பதினெட்டு வயதுதான் ஆகிக்கொண்டிருக்கும், திருநங்கையாக உள்ள, திருநங்கையென்பதாலேயே படிப்பை தொடர முடியாத ஒருத்தியால் எங்கு போக முடியும்? சமூகம் என்னை எப்படி எதிர்கொள்ளும்? எப்படி எதிர்நீச்சலிடுவது? இப்படி ஆயிரம் கேள்விகள். இதனால் அம்மம்மாவிடமே சென்றேன். என் வாழ்வில் எல்லாமாக அவர்தான் இருக்கிறார். இந்த உலகத்தில் என்னை புரிந்து கொண்ட, என்னையும் அங்கீகரித்த முதல் மனிதப் பிறவி அவர்தான். மிகச்சின்ன வயதில் திருநங்கையென்ற அடையாளத்துடன், குடும்ப எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் திண்டாடி, அடுத்து என்னவென தெரியாமல் இருந்த என்னை அணைத்துக் கொண்டது அவர்தான்.

அவர் இல்லாமல் இருந்திருந்தால், நான் இருந்திருப்பேனோ தெரியாது. இந்த தொடரும் இருந்திருக்குமோ தெரியாது. அவர் ஒரு சமூக அறிவுள்ள, புரட்சியாளர் கிடையாது. எல்லா வயோதிக பெண்மணிகளை போலவும் சிந்திக்க, பேச தெரிந்தவர்தான். ஆனால் கடவுளை நம்புகிறார். கடவுளின் படைப்புக்களை புரிந்து கொள்கிறார். நான் திருநங்கையானதற்கு யார்தான் என்ன செய்ய முடியும், இருக்கும்வரை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றுதான் என்னை அரவணைத்தார். எனக்கு அடைக்கலம் கொடுக்க கூடாதென உறவுகள் அவரை நச்சரித்தபடியே இருக்கிறார்கள். என் ஒருத்திக்காக எல்லா உறவுகளையும் எதிர்க்க துணிந்தார். அம்மம்மாவிற்கு அப்பால் என்னை அதிகம் பாதுகாத்தது காவல்த்துறையும், சட்டமுமே. பதினைந்தாவது வயதில் கொலை செய்யப்பட்டு விடுவேன் என்ற அச்சத்தில் காவல்நிலையம் ஓடிச்சென்றேன். இன்றுவரை அங்கு அடைக்கலம் புகுவது தொடர்கிறது. நான் அடைக்கலம் புகுந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காவல்த்துறையினர் மனிதர்களாக நடந்தார்கள். சட்டத்தின் துணையுடன் என்னை பாதுகாத்தார்கள்.

திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை எனது குடும்பத்தில் ஏற்படுத்த அவர்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த தொடர் எழுத ஆரம்பித்த பின்னர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் பதிவிட வேண்டும். இந்த  தொடரின் முதலாவது பகுதி வெளியானது. அடுத்த நாள் நான் காவல்நிலையம் ஓடிச்செல்ல வேண்டியிருந்தது.

 மோனிஷா

(தொடரும்)

http://deepam.news/2016/10/17/நான்-பானுஜன்-அல்ல-மோனிஷா-6/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பானுஜன் அல்ல மோனிஷா! – 7

 

டக்கு கிழக்கில் யாழ்ப்பாணத்தில்தான் திருநங்கைகள் ஓரளவு வெளிப்படையாக செயற்படுகிறார்கள். முழுமையான அமைப்பாக அல்லாவிட்டாலும் ஓரிரண்டு அமைப்புக்கள் திருநங்கைகள் சார்ந்து யாழில் இயங்குகின்றன. திருநங்கைகளை முழுமையாக ஒருங்கிணைக்க, கல்வி தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியாவிட்டாலும் திருநங்கைகளை ஒன்றுதிரட்ட, சமூகத்தில் சிறிய அசைவை ஏற்படுத்த அவற்றால் முடிந்திருக்கிறது.

கிளிநொச்சியில், மன்னாரில், வவுனியாவில், கிழக்கில் திருநங்கைகள் பகிரங்கமாக அடையாளத்தை வெளிப்படுத்த தயங்கும் நிலைமையே உள்ளது. இந்த பகுதிகளிலுள்ள திருநங்கைகள் சிலர் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள். இங்குள்ள திருநங்கைகளுடன் இணைந்திருக்கிறார்கள். திருநங்கைகள் எதிர்கொள்ளும் பெரிய சவால் வேலை வாய்ப்பு. திருநங்கை அடையாளத்தை வெளிப்படுத்திய நாளில் இருந்து அவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமை. நான் பாடசாலையில் நீடிக்க முடியாததை போன்ற நிலைமைதான் ஒவ்வொரு திருநங்கைக்கும்.போதிய புரிதல் இல்லாத சமூகம், ஆசிரியர்கள், கேலி பேசும் மாணவர்கள் என திருநங்கைகள் எதிர்கொள்ளவே முடியாத சவால் பாடசாலை.

கல்வியை நிறுத்தியவர்களிற்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. வீட்டில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. உதவிகளும் கிடைக்காது. திருநங்கை அடையாளத்தை பிள்ளை சுமந்த கோபத்தில் பெற்றோரும் எதிர்நிலையில் இருந்திருப்பார்கள். பின்னர் புரிதல் கிடைத்து, பிள்ளையை ஏதாவதொரு தொழில்கல்விக்கு தயார்படுத்த முயற்சிக்கும் போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. திருநங்கைகளிற்கு தமிழர்களின் உயர்கல்வி, தொழில்கல்வி நிலையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. பெண், ஆண் அடையாளத்துடன்தான் அங்கு செல்ல முடியும். திருநங்கைகள் எங்கு உட்கார்வதென பதில் கேள்வி கேட்பார்கள். உழைப்பு என்பதற்காக எல்லாவித வாய்ப்பையும் சமூகம் திருநங்கைகளிடமிருந்து பறிக்கிறது. எந்த வாய்ப்பையும் வழங்காமல், பிறரில் தங்கியிருக்கும்- அடையாளம் அற்றவர்களாக திருநங்கைகள் இருக்க வேண்டுமென சமூகஅமைப்பு விரும்புகிறது. அவர்களை போகப்பொருளாகவும் பாவனை செய்கிறது. அதனால்த்தான் திருநங்கைகளை பெரும்பாலான ஆண்கள் பாலியல் சீண்டலிற்கு உள்ளாக்குகிறார்கள்.

கல்வியை முழுமையான நிறைவு செய்தாத நான் தொழில் பிரச்சனையை இப்பொழுது எதிர்கொள்கிறேன். ஒருமுறை கச்சேரியடியில் உள்ள விடுதி ஒன்றில் வேலைக்கு போனேன். துப்பரவு பணி எனக்கு கிடைத்தது. இரண்டு வாரங்கள் சாதாரணமாக கடந்தது. ஒருநாள் விருந்தினர் தங்கியிருக்கும் அறைகளை சுத்தம் செய்ய சென்றேன். அறையொன்றில் தங்கியிருந்து விருந்தினன் ஒருவன் என்னை அழைத்து ஆபாசமாக பேசி, உறவிற்கு அழைத்தான். சாதாரணமாக ஒரு பெண்ணை யாரும் இப்படி அணுகுவதில்லை. பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் நெருக்கடிகள் அதிகமென்றாலும், இப்படியான பகிரங்க சீண்டல்கள் கிடையாது. திருநங்கைகள் என்றால் எப்படியும் நடக்கலாம், அவர்கள் குரலற்றவர்கள் என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்.

பிறகொருநாள் விடுதியில் தங்கியிருந்த சிங்கள பயணியொருவர் தன்னுடன் உறவிற்கு வருமாறு சிறிய துண்டில் எழுதி இன்னொருவர் மூலம் கொடுத்தனுப்பியிருந்தார். அந்த துண்டை கொண்டு வந்தவர்தான் எழுதுவதில் உதவியிருக்கலாம். இந்த விவகாரத்தை முதலாளி, என் வீட்டில் சொல்ல முடியாது. சொன்னால், நீ இப்பிடி திரிஞ்சால் கண்டவனும் சேட்டை விடுவான்தானே என இலகுவாக கடந்து செல்வார்கள்.

இப்படியான நெருக்கடிகளால் அந்த வேலையை தொடர முடியவில்லை. பின்னர் புடைவைக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். நிறையப்பையன்கள் கடைக்கு முன்பாக கூடத் தொடங்கினார்கள். ‘அலியை பார்க்கப் போறம்’ என கூச்சலிடுவார்கள். கடையில் வேலை செய்த மற்றைய பெண்கள் முகம் சுளிக்க தொடங்க, முதலாளி என்னை வேலையிலிருந்து நிறுத்தினார். திருநங்கைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும், பத்து வருடத்தின் பின் என் வாழ்க்கை எப்படியிருக்கும் என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. எனக்கு ஆறுதலாக உள்ள வெகுசிலரும் பத்துவருடத்தின் பின் உயிருடன் இருப்பார்களா தெரியவில்லை. அவர்கள் இல்லாத உலகத்தை நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது. எப்படியோ திருநங்கைகளின் உலகம் இறக்கும்வரை போராட்டம்தான்.

கடந்த ஆறு இதழ்களில் திருநங்கைகளின் உலகம் பற்றிய எனது சிறு அனுபவங்களை எழுதியுள்ளேன். திருநங்கைகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை இந்தவகையான எழுத்துக்கள் முற்றாக நிறுத்துமென நான் கற்பனை செய்யவில்லை. ஆனால், சிறிய விழிப்புணர்வையாவது உண்டாக்கியிருக்குமென நம்புகிறேன்.

அப்படியேதும் நிகழ்ந்திருந்தால் அந்த மகிழ்ச்சியை நான் மட்டுமே உரித்தாக்கி கொள்வது முறையல்ல. தீபம் பத்திரிகைதான் இந்த வாய்ப்பை உருவாக்கி தந்தது. அது இல்லாவிட்டால் இப்படியொரு வாய்ப்பே கிடைத்திருக்காது. அடுத்ததாக, என்கதையை எழுதுவதில் ஒத்தாசையாக இருந்த தீபத்தின் பிரியந்தினி, சியா ஆகியோருக்கும் நன்றியுடையவனாக இருப்பேன்.

இந்த உலகம் பெரியதுதான். அதில் ஏராளம் ஜன்னல்களும், கதவுகளும் இருக்கலாம். ஆனால், சாவிகள்தான் எமக்கு கிடைக்கவில்லை.    (முற்றும்)

-மோனிஷா

http://deepam.news/2016/10/25/நான்-பானுஜன்-அல்ல-மோனிஷா-7/

Link to comment
Share on other sites

மனதை கனக்க வைத்த தொடர். எமது சமூகம் மாற இன்னும் பல ஆண்டுகள் கடக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு திருநங்கைகளுக்கு பாதுகாப்பான வேலை வாய்ப்புக்களை வட மாகாண சபையும், நல் உள்ளம் கொண்டோரும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்கள்... திருநங்கைக ளாக பிறந்தது அவர்கள் குற்றமல்ல என்பதனை, எமது சமூகம் உணர்ந்து.. அவர்களுக்குரிய மரியாதையை... வழங்க முன் வர வேண்டும். 

மோனிஷாவின் கட்டுரை.... எனது மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று உறுதியாக கூறுகின்றேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.