Jump to content

தேன்மொழி தேவிகா...!


Recommended Posts

தேவிகா: 1.தேன்மொழி தேவிகா...!

 

தேவிகா நடித்த தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவானவை.

அவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்த உதவிய ஒவ்வொரு சினிமாவுமே தென்னகத் திரை வரலாற்றின் பொற்கால அத்தியாயம்.

கிடைத்தத் தரமான வேடங்களில் அதி அற்புதமாக வாழ்ந்து காட்டியவர். இன்றளவும் அனைத்துத் தமிழர்களின் இதயங்களிலும் நிரந்தர இடம் பிடித்தவர் தேவிகா!

‘வேர்க்கடலைத் தோல்களும் கள்ளங்கபடமற்ற சிரிப்பொலியும்... ’ அது தேவிகாவின் ஷூட்டிங் என்று, லைட் மேன், ஸ்டில்ஸ் போட்டோகிராபர் உள்ளிட்டத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எளிதில் அடையாளம் காட்டி விடும்.

‘நாட்டிய தாரா’ என்ற தெலுங்கு டப்பிங் சினிமா முதல் முதலாக தேவிகாவை தமிழக ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது.

1958ல் வெளியானது பரணி பிக்சர்ஸ் ‘மணமகன் தேவை’ நகைச்சுவைச் சித்திரம். பானுமதியின் தயாரிப்பு. நடிகர் திலகமும் - பானுமதியும் ஜோடியாக நடித்தனர். அதில் ஹீரோயினின் தங்கையாக முக்கிய வேடத்தில் ‘பிரமீளா’ என்கிற பெயரில் அறிமுகமானார் புதுமுகம் தேவிகா.

அது தேவிகாவின் மூன்றாவது டாக்கி.

ஒட்டு மொத்தத் திரைக்கதையும் தேவிகாவின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி அமைந்திருக்கும். முதல் இணை காமெடி நடிகர் ஏ. கருணாநிதி.

பானுமதியின் ஆதரவால் அடுத்து சிவாஜி-பானுமதி இணைந்து நடித்த ராணி லலிதாங்கி படத்திலும் தேவிகா இடம் பெற்றார்.

ஆனந்த விகடன் மணமகன் தேவை திரை விமர்சனத்தில் அக்கறையுடன் பிரமீளா குறித்தும் எழுதியது.

சந்தர் -‘யாரோ புதுப் பெண் நடிச்சிருக்காப் போலிருக்கே? ’

சேகர் - ‘பிரமீளாவா? நல்ல முகம். நல்ல குரல். நடிப்பைப் பத்தி போக போகத்தான் தெரியணும். ’

ஆனந்த விகடனின் கூற்று விரைவில் பலித்தது.

இயற்கையின் தூரிகை வரைந்த அவரது ஓவிய இதழ்களின் தமிழ் உச்சரிப்புக்கு, இலங்கை வானொலி நற்சான்றிதழ் வழங்கியது.

‘தேன்மொழி தேவிகா! ’ என்கிற அடைமொழியோடு சிலோன் ரேடியோ அறிவிப்பாளர்கள் தேவிகாவைத் தனித்துச் சிறப்பித்தார்கள்.

இருபதாம் நூற்றாண்டு பயாஸ்கோப்பில் சுடர் விட்டுப் பிரகாசித்தக் கனவுக் கன்னிகளில் தேவிகா மிக மிக வித்தியாசமானவர்.

நட்சத்திரங்களுக்கே உரிய பாசாங்குகள் அற்றவர். ஒளிவு மறைவின்றி உள்ளத்தில் பட்டதைப் பட பட வென்று பேசிப் பட்டாசாக தூள் கிளப்பியவர் நமது தேவிகா.

எடுத்த எடுப்பில் ஹீரோயினாகிப் புகழின் இமயம் சென்றவர் அல்ல. ஒவ்வொரு படியாக ஏறி 1963ல் தமிழ் சினிமாவின் உச்சம் தொட்டவர்!

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். என்று தமிழ்த் திரையுலகின் முக்கியத் தூண்களுடன் ஜோடி சேர்ந்த போதும், எந்த வித இமேஜூம் பார்க்காதவர்.

கல்யாண் குமார், ஆர்.எஸ். மனோகர், பிரேம் நசீர், கே. பாலாஜி, ’வீரத்திருமகன்’ புகழ் ஆனந்தன் என அடுத்த வரிசை நடிகர்களுடனும் தயங்காமல் இணைந்து நடித்தார்.

தேவிகாவுடன் அதிகப்படங்களில் பங்கேற்ற ஹீரோக்கள் நடிகர் திலகமும் - நவரஸத்திலகமும்.

------ சினிமா ஸ்டாராக அறிமுகமான சூழல் குறித்த தேவிகாவின் நினைவலைகள்-

‘எனக்குச் சொந்த ஊர் ஆந்திராவிலுள்ள சித்தூர். சகோதரிகள் இருவர். ஒரு சகோதரர். பழமையில் ஊறிய குடும்பம். ஆகவே கட்டுப்பாடுகள் ஜாஸ்தி. வீட்ல சினிமா மேல அத்தனை நல்ல அபிப்ராயம் கிடையாது.

என்னோட பாட்டிக்குக் கலைகள்ள ஈடுபாடு ஜாஸ்தி. கர்நாடக சங்கீதம்னா உசுரை விட்டுடுவாங்க. அருமையாப் பாடவும் செய்வாங்க.

ஒரு நவராத்திரி சமயம். பாட்டி பாட நான் மகிஷாசுர மர்த்தினியா வேஷம் போட்டுக்கிட்டு நடனம் ஆடியிருக்கேன். நடிப்பு, நாட்டியம்னு நான் எடுத்த முதல் அவதாரம் அது.

பாட்டிக்கு ஜோசியத்துல அபாரமான நம்பிக்கை. பேத்தியோட எதிர்காலம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சுக்குற ஆசை என்னை விட பாட்டிக்கே அதிகம்.

குடும்ப ஜோதிடர் கிட்டே என் ஜாதகத்தைக் கொடுத்துப் பலன் பார்க்கச் சொன்னாங்க.

‘கலைத்துறையில் உங்கக் குழந்தைக்கு மிகப் பிரமாதமான பேரும் புகழும் சித்திக்கும்’னு ஜொதிடர் ஆருடம் சொன்னாராம்.

வயலின், பாட்டு கிளாஸ்னு வீட்டிலேயே வகுப்புகள் ஆரம்பமாயின. என் அக்காவுக்குப் பாட்டில் ஆர்வம் கிடையாது. நான் நல்லா பாடுவேன்.

ஆடல் பாடல்ல முழுத் தேர்ச்சி பெறுவதற்குள் பாட்டியின் ஆர்வம் மற்றும் ஜொசியத்தில் கூறியது போல் அரிதாரம் பூச வேண்டியதாயிற்று. ’ - தேவிகா.

------------------தேவிகாவின் இயற்பெயர் பிரமீளா. வீட்டில் செல்லமாக ‘ராணி’ என்றும் அழைத்தார்கள். சென்னை ஐஸ் ஹவுஸில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளிக் கூட முன்னாள் மாணவி.

வி.என். ரெட்டி இயக்கிய ‘புட்டிலு’ தெலுங்கு படத்தில் நடனமாட தேவிகாவுக்கு முதல் சந்தர்ப்பம் கிடைத்தது. டைரக்டர் வி.என். ரெட்டி. இயக்குநர் அதன் நாயகி ஜமுனாவிடம்,

‘ராணி பெரிய நடிகை ஆகி விடுவாள்’ என்பாராம். ஜமுனாவின் முகம் அதைக் கேட்டு கோபத்தில் தாறுமாறாகச் சிவக்குமாம்.

‘ரேசுகா’ இரண்டாவதாக வெளியானது. என்.டி. ராமாராவுடன் இணைந்து தேவிகா நடித்த முதல் படம். மிகப் பெரிய வெற்றி. ‘நாட்டுக்கு ஒரு வீரன்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தமிழகத்திலும் பரவலாக ஓடியது.

சென்னையில் ஒட்டப்பட்ட சினிமா போஸ்டர்களில் பிரமீளாவை இனம் கண்டு கொண்டனர் பள்ளித் தோழிகள். வகுப்பில் அவர்களது கேலி கிண்டல் தாங்க மாட்டாமல் படிப்பு பாதியில் நின்றது.

பிரமீளா உறவுகளின் ஒட்டு மொத்த எதிரி. அவரது தந்தையை ஏமாற்றி, பெரியப்பா சொத்துகளை அபகரித்துக் கொண்ட அவலமும் நிகழ்ந்தது. அதனால் செல்வ செழிப்புடன் விளங்கிய தேவிகாவின் வீடு காலப்போக்கில் நலிவுற்றது.

சினிமா நடிகையாக மாறியதால் தேவிகாவின் குடும்பத்தை சொந்தபந்தங்கள் விலக்கி வைத்தன. எதைப் பற்றியும் பயப்படாமல் தேவிகா நடிப்பில் முழு மூச்சுடன் களம் இறங்கினார்.

---------- ராணி, பிரமீளா என்றெல்லாம் விதவிதமாக அழைக்கப்பட்டவர், தேவிகாவாக மாறியது எவ்விதம்?

சேலம் ரத்னா ஸ்டுடியோ. எம்.ஏ. வி. பிக்சர்ஸின் முதலாளி படப்பிடிப்பு. ஒப்பனை அறையின் வாயிலில் எந்தெந்தக் கலைஞர்களுக்கு மேக் அப் என்றப் பட்டியலை ஒட்டுவது உதவி இயக்குநர்களின் அன்றாட வேலை.

அன்றைய தினம் அதில் ‘தேவிகா’ என்று எழுதி இருந்தார்கள். முதலாளி படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தவர் பிரமீளா.

‘தேவிகா யாருங்க? ’ன்னு காரை விட்டு இறங்கும் போது பதற்றத்துடன் கேட்டார். தனக்கான ஹீரோயின் சான்ஸ் பறி போய் விட்டதோ என்கிற பீதி பிரமீளாவின் குரலில்.

‘பிரமீளா’ என்கிற தெலுங்கு பெயர் வேண்டாம் என்று எண்ணி, தேவிகா என்பதாக மாற்றியிருக்கிற விஷயத்தை எடுத்துக் கூறினார்கள்.

அதைக் கேட்ட மாத்திரத்தில் பிரமீளாவின் முகத்தில் அதிர்ச்சியின் அங்கப் பிரதட்சனம்.

நீண்ட காலம் ஷூட்டிங்கில் தேவிகா என்று கூப்பிட்டால் பதில் சொல்லாமல் மவுனமாகவே இருப்பார். ஆதரவாக வற்புறுத்தி கோபத்துக்குக் காரணம் கேட்டால்,

‘எங்கம்மா எவ்ளோ ஆசையா பிரமீளான்னு பேரு வெச்சாங்க... அதுல எனக்கு இஷ்டம் ஜாஸ்தி.அதைப் போய் மாத்தி வெச்சிட்டிங்களே... என் பெயரை தேவிகான்னு நீங்க மாத்தினது பிடிக்கலே’ என்பார் வருத்தம் கலந்த ஆத்திரத்துடன் - ‘வெகுளிப் பெண்’ தேவிகா.

-----------‘எனக்குத் தமிழ்ல பெரிய லிஃப்ட்னு பார்த்தா அது முதலாளி தான். டைரக்டர் முக்தா சீனிவாசனுக்கு முதல் படம்.

என்.டி.ஆர்.- சிவாஜி- பத்மினி நடிக்க, பிரம்மாண்டமா ‘சம்பூர்ண இராமாயணம்’ எடுத்த எம்.ஏ. வேணுவின் தயாரிப்பு.

‘முதலாளி’ல கூட முதல்ல பத்மினியை புக் பண்றதா இருந்திருக்காங்க. அவங்க ‘பர்தேஷ்’ங்கிற இந்திப்படத்துல நடிக்கப் போயிட்டதால எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

 

நானும் எஸ்.எஸ். ராஜேந்திரனும் ஜோடியா நடிச்சோம். ஆறாயிரம் அடி வரை வளர்ந்தப்ப, பட அதிபர் எம். ஏ. வேணு, ‘அவர் நினைச்ச மாதிரி வரலன்னு’ சொல்லி படத்தை நிறுத்திட்டார். முக்தா சார் ரொம்ப வேதனைப்பட்டார். முதல் படமாயிற்றே...

அதுக்கப்புறமா எஸ்.எஸ். ஆர். தலையிட்டு, தயாரிப்பாளருக்கு தைரியமூட்டினார். மறுபடியும் ஷூட்டிங் தொடங்கியது.

1957 தீபாவளி அன்னிக்கு நடிகர் திலகத்தின் அம்பிகாபதி, புரட்சி நடிகரின் மகாதேவி ஆகிய மெகா படங்களுக்கு மத்தியில் சின்ன பட்ஜெட் படமான முதலாளியும் ரிலிசானது.

முதன் முதலா நான் ஹீரோயினா நடிச்ச படம் ஓடுமாங்கிற பயம் உள்ளுக்குள்ள வந்துடுச்சி. என்னால் எந்தத் தோல்வியையும் தாங்க முடியாது. முதலாளி கண்டிப்பா வெற்றி பெறாது என்கிற அவநம்பிக்கையில் அது வெளியான அன்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன்.

சினிமாவில் ஹீரோவின் பின்னால் சைக்கிளில் அமர்ந்து ஹீரோயின் டபுள்ஸ் போறது முதலாளியில் இருந்து ஆரம்பமாச்சு.

முதலாளி தோல்வி அடைந்திருந்தால் அத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டிருப்பேன். ஆனால் முதலாளி வசூலில் மாபெரும் வெற்றி அடைந்தது.

ஒரு படத்தின் வெற்றியில் அதில் பங்கு பெறும் கலைஞர்களின் வளர்ச்சியும் இருக்கிறது. அதை அனுபவபூர்வமாக நானும் உணர்ந்தேன். ‘முதலாளி’க்குக் கிடைத்த பேரும் புகழும் என்னையும் பிரபலப்படுத்தியது. ’ தேவிகா.

கே.வி. மகாதேவன் - கா.மு. ஷெரிஃப் கூட்டணியின் காலத்தால் அழியாத - ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே, குங்குமப் பொட்டுக்காரா, நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு போன்ற இனிய பாடல்களின் பங்களிப்பும் ‘முதலாளி’ முன்னுக்கு வர உதவியது.

ஆனந்த விகடன் முதலாளி படத்தை முழு மனதாகப் பாராட்டி எழுதியது.

முனுசாமி -:‘தேவிகான்னு ஒரு பொண்ணு வள்ளியா வருது. ஆடுது, பாடுது, அதை விட நல்லா ஓடுது! அது போடற டிரஸ்ஸூம் ஆடற ஆட்டமும் பார்த்தா, ஒருத்தரும் தொழிலாளின்னு சொல்ல மாட்டாங்க.

மாணிக்கம்- : ஹீரோயின் ஆச்சே. சும்மா விட்டுட முடியுமா?’ டைரக்டர் யாரு?

முனுசாமி- : யாரோ புதிசு. அதான் படத்தில புதுமை அதிகமா இருக்கு.

மாணிக்கம்- : மொத்தத்தில இந்தப் படமே ...

முனுசாமி- : புது மாதிரி, சமூகக் கதையில சமூகத்தைத் திட்டல்லே. அடிக்கல்லே. துப்பாக்கி இல்லே! கோர்ட் இல்லே! ஆக்ஸிடென்ட் இல்லே. ஆஸ்பத்திரி இல்லே. அழுகை இல்லே!

மாணிக்கம்- : அப்படியானால் நான் பார்க்காமல் இருக்கப் போறதில்ல!’

-------------- 1957ன் சிறந்தத் தமிழ்ப்படமாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றது முதலாளி.

தேவிகாவுக்கு மிகப் பெரிய முகவரியை முதலாளி ஏற்படுத்தித் தந்தது. ஆனாலும் அவரால் தமிழ்த் திரையில் உடனடியாக விண்ணைத் தொட முடியவில்லை.

அதற்கு ஒரே காரணம் மொழிப் பிரச்சனை.

அன்றைய நாடக உலகில் ‘சேவா ஸ்டேஜ்’ மகத்தானதொரு கலைக் கூடம். சிவாஜி, முத்துராமன், பண்டரிபாய், எம்.என். ராஜம் போன்ற சாதனைக் கலைஞர்களின் நடிப்பு பட்டை தீட்டப்பட்ட இடம். அதன் நிறுவனர் குணச்சித்திரக் கலைஞர் எஸ். வி. சகஸ்ரநாமம்.

‘சேவா ஸ்டேஜ் நாடகங்களில் நடிக்க ஒரு பெண் ரொம்ப ஆர்வத்துடன் இருக்கிறார். வாய்ப்பு இருந்தால் தெரிவியுங்கள்... ’ என்று சகஸ்ரநாமத்திடம் கேட்டுக் கொண்டார் ஜெமினி ஸ்டுடியோ காஸ்ட்யூமர் ராமாராவ்.

அவர் மூலம் தேவிகா சகஸ்ர நாமத்துக்கு அறிமுகமானார்.

சேவா ஸ்டேஜின் கண்கள் நாடகம் சினிமாவான போது தேவிகாவை நடிக்க அழைத்தார்கள். அவரைப் பார்த்ததும் ஏனோ திருப்பி அனுப்பினார் எஸ். வி.சகஸ்ரநாமம்.

எதிர் பாராத விதமாக தேவிகாவுக்கு ஏற்றத்தை வழங்கிச் சிறந்த நடிகையாக உருவாக்கியதும் அதே சேவா ஸ்டேஜே.

‘ சேவா ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்ட் எம்.என். ராஜம். சினிமால பிரபலமானதால அவங்க போட்டுக்கிட்டிருந்த ஹீரோயின் ரோல்ல நாடகத்துல நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தார் எஸ். வி. சகஸ்ரநாமம். முதலாளியோட சக்ஸஸால அவரால் மீண்டும் விரும்பி அழைக்கப்பட்டேன்.

ஒரே ஒரு வாரம் ரிகர்ஸல்ல கலந்துக்கிட்டேன்.

சகஸ்ரநாமம் வீட்டிலேயே ஒத்திகை நடக்கும். எங்கூட முத்துராமன், பண்டரிபாயின் தங்கை மைனாவதி ஆகியோரும் சேர்ந்து நடிப்பாங்க.

டிராமால ரசிகர்களை நேருக்கு நேரா சந்திக்க பயம். அதனால தரையைப் பார்த்துக்கிட்டு வசனம் பேசுவேன். அல்லது மோட்டுவளையைப் பார்த்துக்கிட்டு டயலாக் சொல்லுவேன்.

‘வானவில்’னு சேவா ஸ்டேஜ்ல ஒரு நாடகம். நானும் சிவாஜியும் புரட்சிக்காரர்களாக நடித்தோம். ராஜா அண்ணாமலை மன்றத்தில் அன்னிக்கு அரங்கேற்றம்.

சிவாஜி எம்மேலே சந்தேகப்பட்டு என் கழுத்தை நெரிக்கிற கட்டம்.

‘கத்து... கத்து... வீல்னு அலறுன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.

ஊஹும்... எங்கிட்டயிருந்து எந்தச் சத்தமும் வரல. ஒண்ணும் நடக்கலே. நல்ல வேளை. யாரோ போய் வேகமாத் திரையை இறக்கி விட்டுட்டாங்க. அதுக்கப்புறமா மெல்ல மேடையில சமாளிக்கிற தைரியம் வந்தது.

தமிழைச் சத்தம் போட்டுப் பேசிப் பழகிச் சீக்கிரத்துலயே ‘வானவில்’ நாடகப் புகழ் தேவிகா ஆயிட்டேன்.

தொடக்கத்துலே எனக்கு முப்பது ரூபாய் சம்பளம். பின்னால அது நாற்பது, ஐம்பதுன்னு வளர்ந்து நூறு ரூபாய் வரை உசந்து போச்சு.

சேவா ஸ்டேஜ்ல ரிகர்ஸல்ல பங்கேற்க எனக்கு மட்டும் கார் அனுப்பிக் கூட்டி வரச் சொல்வாங்க. மத்த நடிகர் நடிகைகள் பஸ்ல வருவாங்க.

எஸ். வி. சகஸ்ரநாமம் சார் என்னை கவுரவமா நடத்தினார். அதனால் 1957 முதல் 1962 வரை ஆறு ஆண்டுகள் சேவா ஸ்டேஜ்ல பராசக்தி, பாம்பே மெயில் உள்ளிட்டப் பிரபல நாடகங்கள்ள நடிச்சேன்.

வானவில் நாடகத்துல என் நடிப்பைப் பார்த்துட்டு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ‘நல்லா பண்ணினேம்மா’ என்று வாழ்த்தினார்.

சரியா நடிக்காம இருந்தாலோ, சரி வர தமிழ் வசனம் பேசாமல் இருந்திருந்தாலோ கலைவாணர் பாராட்டியிருப்பாரா... அந்தப் பாராட்டுக்குப் பின்னணியில இருந்தவர் எஸ். வி. சகஸ்ரநாமம்.

நடிக்க வந்த புதுசுல தமிழ் சரியா வாயில வராது. நாடக அனுபவம் எனக்குக் கற்றுத் தந்த பரிசு, ஒழுங்காத் தமிழ் பேச வந்தது. அதற்குக் காரணம் எஸ். வி. சகஸ்ரநாமம் சார் கொடுத்த பயிற்சி. ’தேவிகா.

http://www.dinamani.com/junction/kanavukkannigal/2016/aug/20/1தேன்மொழி-தேவிகா-2557681--1.html

Link to comment
Share on other sites

தேவிகா: 2.பாலிருக்கும் பழமிருக்கும்...!

 

 

‘மாடர்ன் தியேட்டர்ஸ் கம்பெனி படம்னாலே நடிக்கறவங்கப் பயப்படுவாங்க. அதாவது தொழில்லப் பய பக்தியோட நடிப்புல முழு கவனத்தோடு செயல்படுவாங்க. அரட்டைக் கச்சேரிக்கெல்லாம் இடம் தராத கட்டுப்பாடுள்ள கம்பெனி அது. சேலத்துலருந்து ஆரவல்லி படத்துக்காக எனக்கு முதலில் வாய்ப்பு வந்தது. சான்ஸ் கிடைச்சும் நடிக்க முடியாமல் போனது. ’- தேவிகா.

ஏவி.எம். மின் சகோதரி, களத்தூர் கண்ணம்மா,- அஞ்சலிதேவியுடன் நாகநந்தினி, பங்காளிகள்- பானுமதியுடன் கானல் நீர், என தேவிகாவுக்குக் கிடைத்த அனைத்துச் சந்தர்ப்பங்களும் சிறிய மற்றும் வேம்ப் ரோல்களாகவே அமைந்தன.

ஹீரோயினுக்கு நிழலாக உப பாத்திரங்களிலேயே அவரை ஒப்பனை செய்ய வைத்தன.

செகன்ட் ஹீரோயினாகத் திரையில் தோன்றியத் திறமை மிக்க ஏராளமான நடிகைகள், முதலிடத்துக்கு வர முடியாமல் முடங்கி, பின் காணாமல் போவது இன்று வரை நீடிக்கிறது.

‘ஓ காதல் கண்மணி’ மூலம் மணிரத்னம் அறிமுகப்படுத்திய நித்யா மேனனுக்கும் இந்த நொடியில் அதே அச்சம்!

அத்தகைய அவல நிலையை ஆர்வத்தாலும், இடை விடாத முயற்சிகளாலும், கடினமான உழைப்பாலும், இயல்பான நடிப்பாற்றலாலும் உடைத்தெறிந்து உச்சம் தொட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியோர் அரிய சாதனைக்கு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் தேவிகா!

தேவிகாவுக்குப் பின்னர் தமிழில் முகம் காட்டியவர் சரோஜாதேவி. அவரைத் தென்னக சினிமாவின் முடி சூடா ராணியாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள் தமிழர்கள்.

கோலிவுட்டில் யாரும் தேடி வராத சூழல். சரோவின் காற்று புகாத கேரள மண்ணில் பிரேம் நசீருடன், அரை டஜன் மலையாளச் சித்திரங்களில் ஜோடியாக நடித்தார் தேவிகா.

அப்போது தமிழில் தேவிகாவுக்குக் கை கொடுத்த ஒரே படம் மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே.

‘கொடுமைக்கார மாமியார் சி.கே.சரஸ்வதியிடம் சிக்கி அவதியுறும் மருமகளாக தேவிகா மிகையில்லாமல் செய்திருக்கிறார்.

கொடுமை வெள்ளம் தலைக்கு மேல் ஓடி விட்ட போது மாமியாரை ஒரு தள்ளு தள்ளி விட்டு, தொட்டிலில் இருந்து குழந்தையைத் தாவி எடுத்து அணைத்துக் கொள்ளும் கட்டம் ரசிக்கத்தக்கது. ’ என தேவிகாவின் நடிப்பை ‘குமுதம்’ மெச்சி எழுதியது.

தமிழகத்தில் அத்தனைப் பிரமாதமாக ஓடாத மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே தெலுங்கில் தேவிகா நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்றது.

ரேசுக்கா படத்துக்குப் பின்னர் மீண்டும் என்.டி. ராமாராவுடன் ஜோடி சேரும் அதிர்ஷ்டத்தை தேவிகாவுக்கு வழங்கியது ‘சபாஷ் ராமு’. மிகத் துணிச்சலுடன் அதில் பத்து வயது குழந்தைக்குத் தாயாராகத் தாலாட்டு பாடினார் இளம் ஹீரோயின் தேவிகா.

என்.டி.ஆர்.-தேவிகா இணையை ரசித்து மாபெரும் கூட்டம் கூடியது. சபாஷ் ராமு சக்கை போடு போட்டது.

அதே நேரத்தில் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.- சரோஜாதேவி ஜோடி தூள் கிளப்பி வந்தது. அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பை விடவும், ஆந்திராவில் என்.டி. ஆர்.-தேவிகா ஜதைக்கான மவுசும் வற்றாத வசூலும் நிச்சயம் அதிகம்!

தமிழில் தனக்கொருத் திருப்பம் ஏற்படாதா என்று ஏங்கிய தேவிகாவின் தலையெழுத்தை, 1961ல் வெளியான ‘பாவ மன்னிப்பு’ அடியோடு மாற்றி எழுதியது.

அதற்குக் காரணமான மும்மூர்த்திகள் முறையே 1.ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் 2. நடிகர் திலகம் 3. ஏ.பீம்சிங்.

சின்னதோ பெரியதோ முகம் சுளிக்காமல் தனக்கு வாய்த்த வேடங்களை தேவிகா, தயங்காமல் ஏற்றுக் கொண்டு நடிப்பில் பரிமளித்த விதம் அவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும்.

அம்மூவரும் பங்கேற்ற பாவமன்னிப்பு மெகா பட்ஜெட் படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக முதன் முதலாக நடிக்கும் அபூர்வ வாய்ப்பு தேவிகாவைத் தேடி வந்தது.

‘பிரசிடென்ட் பஞ்சாட்சரம்’ நாடகம் ரசிக ரஞ்சனி சபாவில் நடந்தது. அதில் தேவிகா நடித்ததைப் பார்த்து விட்டு, மொத்தம் மூன்று சினிமாவுக்கு ஒப்பந்தங்கள் போட்டோம்.

1.இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்துக்குச் ‘சகோதரி’ 2. மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்குக் ‘களத்தூர் கண்ணம்மா’ 3. நாலாயிரத்து ஐநூறு ரூபாய் ஊதியத்துக்கு ‘பாவ மன்னிப்பு’.

பாவ மன்னிப்பு படத்துக்கு அப்புறம் தேவிகாவுக்கு ஒரு பெரிய பிரேக் கிடைத்தது.’ - ஏவி.எம். சரவணன்.

‘சாவித்ரி பாராட்டுகிறார் போல் இல்லை. மின்ன வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு ஒளியூட்டியிருப்பது தேவிகாவுக்குத்தான். ’என்று, பாவ மன்னிப்பு திரை விமரிசனத்தில் குமுதம் வெளிப்படையாகவே போட்டு உடைத்தது.

சிவாஜிக்கு இணையாக அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க இன்னொரு நாயகி கிடைத்து விட்டார் என்று பாவ மன்னிப்பின் மகத்தான வெற்றி நிருபித்தது.

பாவ மன்னிப்பு சென்னை சாந்தி தியேட்டரில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் சினிமா.

பாவ மன்னிப்பு படப் பாடல்களாக கண்ணதாசன் - எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தி சேர்ந்திசையில் எட்டுத் தேன் கிண்ணங்கள் இன்று வரை ரசிகர்களைத் திக்குமுக்காடச் செய்கின்றன. அவற்றில் எது மிகச் சிறந்தது என்று போட்டியும் நடத்தப்பட்டது.

பாவ மன்னிப்பில் சிவாஜி-தேவிகா பங்கேற்ற பாலிருக்கும் பழமிருக்கும் டூயட் பாடலும் அதற்கான காட்சியும் என்றுமே மறக்க முடியாதவை.

சாவித்ரியும் தேவிகாவும் பங்கேற்ற அத்தான் என் அத்தான்’ பாடலில் பி. சுசிலாவின் குயில் குரலில் தேவிகாவின் ஆகாய விழிகள் இரண்டும், புறாக்கள் இடம் மாறுவதைப் போல் நகர்வது நெஞ்சில் நிலைத்து விட்ட ஒன்று!

1961ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த படமாக இரண்டாவது பரிசை ஜனாதிபதியிடமிருந்து தட்டி வந்தது பாவ மன்னிப்பு. அத்தகைய அரிய விருதை இன்று வரை அடுத்து ஒரு தமிழ்ப்படமும் பெறவில்லை என்பது அவசியம் குறிப்பிடத்தக்கது.

பாவ மன்னிப்புக்குப் பிறகு தேவிகாவின் புகழைச் சிகரத்தில் ஏற்றி வைத்தது நெஞ்சில் ஓர் ஆலயம். அதில் ஆரம்பத்தில் தேவிகா கிடையாது.

சீதா என்கிறப் புனிதமான வேடத்துக்கு டைரக்டர் ஸ்ரீதரின் முதல் சாய்ஸ் விஜயகுமாரி. ஏற்கனவே ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு மூலம் தாய்க்குலங்களின் மனம் கவர்ந்த குணச்சித்திர நாயகியாக விஜயகுமாரி புகழ் பெற்றிருந்தார்.

நெஞ்சில் ஓர் ஆலயம் வெளி வந்த அதே 1962ல், ஸ்ரீதரின் போலீஸ்காரன் மகள் படத்தில் டைட்டில் ரோலில் விஜயகுமாரி மிகப் பிரமாதமாக நடித்திருப்பார்.

பிறகு ஏன் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் விஜயகுமாரி இல்லை? அதற்கானப் பதிலை டைரக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் விஜயகுமாரி நடிக்க ஒப்புக் கொண்டார். அதன் கதையை எஸ்.எஸ். ஆர். கேட்க விரும்புகிறார் என்று தெரிந்ததும், எனக்குக் கோபம் வந்து விட்டது. இலேசான அவமானமாக உணர்ந்தேன் என்று கூடச் சொல்லலாம்.

விஜயகுமாரி நடிக்கச் சம்மதித்த பின்னர் அவருடைய கணவர் கதை என்ன என்று கேட்பது எனக்குச் சரியென்று படவில்லை. அந்தக் கணமே விஜயகுமாரி என் படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவிக்கச் சொல்லி விட்டேன்.

‘விஜயகுமாரிக்குப் பதில் யார்? ’

சட்டென்று என் நினைவுக்கு வந்தவர் தேவிகா. அப்போது அவர் இரண்டாம் கதாநாயகி என்ற அளவில் நடித்து வந்தார்.

அவரது திறமையை அறிந்து, ஹீரோயினாக என் படத்தில் பிரமோஷன் கொடுக்கத் தீர்மானித்தேன். ’ -ஸ்ரீதர்.

நெஞ்சில் ஓர் ஆலயம் விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. அநேக முறைகள் திரையிடப்பட்டும் வாங்க ஆளில்லை. கடைசியில் வேறு வழியின்றி ஸ்ரீதரே சென்னை கேஸினோ திரை அரங்கில் ரிலீஸ் செய்தார்.

சிறந்த படம் என்கிறப் பெயருடன் நெஞ்சில் ஓர் ஆலயம் கேஸினோவில் மட்டும் ஒன்றரை லட்சம் வசூல் செய்தது.

 

‘எந்தக் காடசியிலுமே அப்போதுதான் சோப்பு போட்டு முகம் கழுவிக் கொண்டு வந்தவர் போல் சீதாவாக வரும் தேவிகா காட்சி தருவதில் வியப்பில்லை. மனமும் அழுக்கற்று இருப்பதைக் காட்ட முடிகிறதே அதுவே சிறப்பு.

தனக்குத் தாலி கட்டிய மணாளன்... மரணப்படுக்கையில் கிடப்பதைக் காணும் போது படக்கூடிய மன வேதனையை, கணவனை நேசிப்பதையே கடமையாகக் கொண்ட படித்த, பண்புள்ள மனைவியை தேவிகா அழகாகச் சித்திரித்திருக்கிறார்’என்று குமுதம் தேவிகாவுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தது.

அதே ஆண்டின் இறுதியில் வெளியானது சுமைதாங்கி. ரா.கி. ரங்கராஜனின் கதை. ஸ்ரீதரின் படைப்பாக்கத்தில் ஜெமினி கணேசன்-தேவிகா காதல் ஜோடியாக நடித்தனர். மெல்லிய காதலுடன் நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கையை மிக இயல்பாக திரையில் எடுத்துச் சொன்ன முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமை பெற்றது.

‘சுமைதாங்கியில் தேவிகாவுக்கு அதிக ரோல் இல்லை. ஆனாலும் மனதில் தங்கும்படியாக நடித்திருக்கிறார் என்றது ஆனந்த விகடன்.

ஜெமினி கணேசனின் ஒப்பற்ற நடிப்பாற்றலுக்கு ஓர் உதாரணச் சித்திரம் சுமைதாங்கி! நடிகர் திலகத்தைக் கடந்து 1962ன் மிகச் சிறந்த நடிகராக ஜெமினி தேர்வாகக் காரணமாக இருந்தது.

அப்படி இருந்தும் ஜெமினி கணேசனுக்கு ஒரு படி மேலாக,

‘நடிப்பில் முதல் இடம் பெறுபவர் தேவிகா. நம் மனத்தில் நிறைந்து விடுகிறார். ஜெமினி கணேசனிடம் சுருக் சுருக்கென்று பேசுவதும்... சுடச் சுடப் பதில் கொடுப்பதும், பிறகு காதலில் குழைவதும் இறுதியில் ஏமாற்றம் அடைந்து துடிப்பதும் எல்லாருடைய மனத்திலும் பதிந்து விடுகின்றன’ என்றெல்லாம் தேவிகாவைத் தூக்கிப் பிடித்து ‘கல்கி’ வார இதழ் மனமாறப் பாராட்டி எழுதியது.

நெஞ்சில் ஓர் ஆலயம் தேவிகாவை ‘காதல்’ பட நாயகி பானுமதிக்கு இணையாக, 1962ன் சிறந்த நடிகையாக உச்சத்தில் கொண்டு நிறுத்தியது குமுதம். அதே ஆண்டின் சிறந்த பிராந்திய மொழிச்சித்திரமாக நெஞ்சில் ஓர் ஆலயம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மத்திய அரசின் வெள்ளிப்பதக்கத்தை விருதாகப் பெற்றது.

கால்ஷீட் விஷயத்தில் சரோஜாதேவியின் நடவடிக்கை பிடிக்காதவர்கள், இருக்கவே இருக்கிறார் தேவிகா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

தேவிகாவின் பக்கம் காற்று பலமாக வீசத் தொடங்கியது.

சுந்தர்லால் நஹாதா அந்நாளில் கொடி கட்டிப் பறந்த பட முதலாளி. அவரது சகோதரரின் மனைவி நடிகை ஜெயப்பிரதா.

தமிழிலும் கொடி மலர், வீர அபிமன்யு, அவள், ராதா உள்ளிட்ட ஏராளமான சினிமாக்களைத் தயாரித்தவர். சபாஷ் ராமுடு அவரது படைப்பு. 25 வாரங்களைக் கடந்தும் வாரிக் குவித்தது.

தெலுங்கில் தேவிகாவின் ராசியான படக் கம்பெனியாக ‘நஹாதா பிலிம்ஸ்’ வெற்றி நடை போட்டது.

1972 வரையில் சுந்தர்லால் நஹாதாவின் பேனரில் என்.டி.ஆர். - தேவிகா ஜோடி சேர்ந்த அத்தனைப் படங்களும் வெள்ளி விழா கொண்டாடின. தெலுங்குத் திரையில் தேவிகா, என்.டி. ஆரின் தீராக் காதலியாக வலம் வர சபாஷ் ராமுடுவே அஸ்திவாரம்.

தேவிகாவை இந்திக்கும் அழைத்துச் சென்றது சுந்தர்லால் நஹாதாவின் சாந்தி நிவாஸம்.

சாந்தி நிவாஸம் படத்தில் தேவிகாவுக்குக் குணவதியான பாசமுள்ள அண்ணி வேடம். மிக அருமையான கதாபாத்திரம். அவரிடம் கண்ணியமாக நேசம் பாராட்டும் மைத்துனர் ஏ. நாகேஸ்வரராவ்.

இருவரையும் இணைத்து அவ்வீட்டுப் பெண்களே களங்கம் கற்பிக்கிறார்கள். க்ளைமாக்சில் தற்கொலைக்கும் தயாராகிற நாயகியின் தூய்மையைக் குடும்பத்தினர் உணர்ந்து திருந்துவதே திரைக்கதை.

சாந்தி நிவாஸம் ஓஹோவென்று ஓடியது. படத்தின் வசூலை கவனித்த ஜெமினி எஸ்.எஸ். வாசன் அதை இந்தியில் எடுக்க ஏற்பாடு செய்தார்.

ஹீரோயின் ரோலில் நடிக்க மீனாகுமாரியிடம் கால்ஷீட் கேட்டார்கள். மீனாகுமாரி கைவிரித்த பின்பு தேவிகாவை வாசன் கூப்பிட்டனுப்பினார்.

ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனுடனான சந்திப்பு குறித்து தேவிகா தெரிவித்தவை-

‘என்னை உட்காரும்மா என்றவர், சாந்தி நிவாஸ் படத்துல நீ பண்ணின ரோலை இந்தியிலயும் பண்றியாம்மான்னு கேட்டார்.

அதிர்ச்சி. ஆச்சரியம். சந்தோஷம் எல்லாம் என்னை ஒரு சேரத் தாக்கின. இதே ஜெமினியில் வாசன் சாரைப் பார்த்து அநேக முறைகள் வாய்ப்பு கேட்டிருக்கிறேன். தருவதாகச் சொன்னவர், பல அலுவல்களுக்கிடையே அதை மறந்திருந்தார். அவரே என்னை அழைத்துப் பெரிய வாய்ப்பை வழங்கும்போது மறுக்க முடியுமா? உற்சாகமாக ஒப்புக் கொண்டேன்.

அந்த இந்திப்படம் கரானா. தமிழில் குடும்பம் என்று அர்த்தம். என் கணவராக ராஜ்குமாரும் கொழுந்தனாக ராஜேந்திர குமாரும் நடித்தார்கள். பிரபல இந்தி நட்சத்திரம் ஆஷா பரேக்கும் கரானாவில் முக்கிய வேடத்தில் இடம் பெற்றார்.

சாந்தி நிவாஸம் படத்தை விடப் பல மடங்கு கரானா வசூலித்தது. வடக்கே வருஷக்கணக்கில் ஓடிப் பொன் விழா கொண்டாடியது.

இந்தி சினிமாவில் எனது அனுபவத்தில் நான் கண்டது- சின்ன நடிகை, பெரிய ஸ்டார் என்ற வித்தியாசம் பாராட்டுவதோ, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு பேசாமல் இருப்பதோ பம்பாய் நட்சத்திரங்களிடம் கிடையாது.

தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பார்கள். இப்படி நடி... அப்படி நடி என்று நம்ம ஊர் சிவாஜி போல் கற்றுத் தர ஆள் இல்லை.

மும்பையில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் தமிழ், தெலுங்கு என்று இங்கேயே பிஸி ஆக இருந்ததால் தொடர்ந்து நிறைய இந்தி சினிமாக்களில் நடிக்க முடியாமல் போனது.

வாசன் சாரைப் பத்தி சொல்லணும்னா நிறைய விஷயம் சொல்லிக்கிட்டே போகலாம். கதை விஷயத்தில் அவரை எளிதில் திருப்திப்படுத்தி விட முடியாது. காரணம் ஜனங்களின் ரசனையை அவர் மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்.

தனது மனத்தோடு கதை இலாகாவின் சிந்தனையும் ஒத்துப் போகிறதா என்பதை உற்று கவனிப்பார். திரைக்கதை விவாதத்தில் மாறுபாடான கருத்துக்கள் எழுந்தால் மீண்டும் மீண்டும் அனைவரின் ஆலோசனைகளையும் கேட்பார்.

கடைசியில் துல்லியமான தீர்மானத்துக்கு வருவார். லைட் பாயின் எண்ணத்தைக் கூட அலட்சியப்படுத்த மாட்டார்.

காட்சிகளைப் படமாக்கும் போது ஏகப்பட்ட டேக்குகளை எடுப்பார். எதற்காக இத்தனை ஷாட் என்று ஆச்சரியமாகத் தோன்றும்.

திரையில் பார்க்கும் போது அவற்றை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்று பிரமிப்பு தட்டும். ’- தேவிகா.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

தேவிகா: 3. நடிப்பு தண்ணீர் பட்ட பாடு..!

hqdefault2

தேவிகா மிக அதிகப் படங்களில் நடித்த ஆண்டு 1963. அவ்வருடத்தில் அவர் நடித்தவை மக்களின் நினைவில் நீங்காத இடம் பிடித்தன.

‘ஷீஷ் பரிஷ்’ என்ற பெயரில் வெளியாகி தோல்வி  அடைந்த வங்காள சினிமாவின் தழுவல்- கண்ணதாசனின் வானம்பாடி. தமிழில் வெற்றி பெற்ற ஒரே காரணம் தேவிகா!

1963  மார்ச் 9ல் திரைக்கு வந்தது. வானம்பாடியை உருவாக்கியவர் ஒளிப்பதிவாளர்- டைரக்டர் ஜி.ஆர். நாதன்.

‘காத்திருந்த கண்கள்’- சாவித்ரிக்குப் பிறகு, இரட்டை வேடத்தில் இறக்கை கட்டிப் பறக்கும் வாய்ப்பு வானம்பாடியில் தேவிகாவுக்கு வாய்த்தது.
ஓ.ஏ. கே. தேவரைச் சுட்டு விட்டு, ரயிலில் எழுந்து தற்கொலைக்கு முயலும் மீனாவாகவும், கணவர் ஆர்.எஸ். மனோகரின் கொடுமை தாளாமல் வீட்டை விட்டு வெளியேறி, ‘பாடகி கவுசல்யா’ என்ற பெயரில் வாழும்  ‘அபலை சுமதி’யாகவும் மாறுபட்ட இரு ரோல்கள் தேவிகாவுக்கு.

சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் ஆகிய  சொந்தப்படங்களின் படு தோல்வியால், அன்றாடம் கடன் தொல்லையில் சிக்கித் தத்தளித்தார் கவிஞர் கண்ணதாசன். இடையில் கோவை செழியனுடன் இணைந்து சுமைதாங்கி படத்தைத் தொடங்கினார் கவிஞர். ஸ்ரீதரின் சுமை தாங்கி  கண்ணதாசனுக்கு நல்ல வருவாயைத் தேடித் தந்தது. ஆனாலும் அசல் மலையளவு பாக்கி இருப்பதாக பைனான்ஸியர்கள் வழக்கு போட்டனர்.

கோர்ட் படிகளில்  ஏறிய நேரம் போக, கவிஞர் தயாரித்த படம் வானம்பாடி.
சின்னப்பாதேவர் வானம்பாடியைப்  பார்த்துப் பாராட்டியதோடு நில்லாமல்,  மிக நல்ல  விலைக்கும் விற்றுக் கொடுத்தார்.

வானம்பாடி வெற்றிச் சிறகுகளை  விரித்துப் பறந்ததில் கண்ணதாசனின் துக்கம் தீர்ந்தது.

‘டூயல் ரோலில் திறம்பட சமாளித்திருக்கிறார் தேவிகா. மீனாவின் பயந்த தோற்றத்தில் அவர் முகத்தில்  கண்ட கலவரத்துக்கும், கவுசல்யாவின் அலட்சிய பாவத்தில்  காணும் செருக்குக்கும் எத்தனை வேறுபாடு!
நீதிமன்றத்தில் தனக்கு வாழ்வளிக்குமாறு தாய் மாமனை தேவிகா கெஞ்சுவது உருக்கமாக இருக்கிறது.’
என்று தேவிகாவின் இரட்டை வேட நடிப்புக்குக் கட்டியம் கூறியது கல்கி.

‘ உணர்ச்சிகளை  அமரிக்கையாக அதே சமயம்  முழுமையாகச் சித்தரிக்கும்  மென்மையான முகம்  தேவிகாவுக்கு அமைந்திருப்பதால், நடிப்பு தேவிகாவுக்குத் தண்ணீர்பட்ட பாடாக இருக்கிறது!’ என்று குமுதம் தன்  விமர்சனத்தில் வியந்தது.

கே. . மகாதேவன் - கண்ணதாசன் கூட்டணியில் வானம்பாடியில் ஒலித்த கங்கைக்கரை தோட்டம், தூக்கணாங்குருவிக் கூடு, ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள், கடவுள் மனிதனாக, ஏட்டில் எழுதி வைத்தேன், யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம், நில் கவனி புறப்படு என ஒவ்வொரு பாடலும் பாதாம் அல்வாவாக இனித்தன.

எப்போது திரையிட்டாலும் அரங்கம் வழியும் கறுப்பு வெள்ளைப் படங்களில் ஒன்றாக வானம்பாடி சிரஞ்சீ த்துவம் பெற்றது.

வானம்பாடியின்  மற்றொரு சிறப்பம்சம் அதுவே டி.ஆர். ராஜகுமாரி நடித்த கடைசி சினிமா!

தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரியுடன் இணைந்து நடிக்கும் அரிய சந்தர்ப்பமும் தேவிகாவுக்குக் கிடைத்தது.

1963 கோடை  விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட ஜூன் மாதம். சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர். எனத் தமிழ் சினிமாவின் மூவேந்தர்களுடன் தேவிகா ஜோடியாக நடித்த, மூன்று படங்களும் வரிசையாக ரிலிஸ் ஆகியிருந்தன.

 சென்னை மவுண்ட் ரோடு கெயிட்டி தியேட்டரில் குலமகள் ராதை. அருகில் காசினோ ல் இதயத்தில் நீ, சற்றுத் தள்ளி பாரகன் டாக்கீஸில் ஆனந்த ஜோதி.
தேவிகாவின் நட்சத்திர வாழ்வில் அது ஓர் அரிய நிகழ்வு!

வகுப்பைக் கட் செய்து  விட்டு, தேவிகாவின் புதுப்படங்களைத் திரையில் காண க்யூவில் முண்டியடித்தன அரும்பு மீசைகள்.

‘சந்திரலேகா’- கால சர்க்கஸ்காரி டி.ஆர். ராஜகுமாரிக்குப் பின்னர், குலமகள் ராதையில் நடிகர் திலகத்துடன்  ‘பார்’விளையாடும்  வித்தியாசமான வேடம் தேவிகாவுக்கு.  

லீலா என்கிற கதாபாத்திரத்தில் காதல் நாயகனோடு கட்டுக் கோப்பாக, குடித்தனம் நடத்தத் துடிக்கும் இளம் சர்க்கஸ்காரியின் ஏக்கத்தை, அருமையாகப் பிரதி பலித்துக் காட்டினார் தேவிகா. போட்டிக்கு சரோஜாதேவி வேறு.
அகிலனின் ‘வாழ்வு எங்கே ?’ புதினமே  ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் குலமகள் ராதை. ‘நீண்ட காலத் தயாரிப்பில் சிக்கும் படங்கள் கண்டிப்பாகத் தோல்வியையே தழுவும்’ என்கிற எழுதப்படாத விதியை குலமகள் ராதை அடியோடு மாற்றிக் காட்டியது.

சினிமா சின்னத் திரைக்குள் அடங்கும் வரையில் எப்போது வெளியானாலும், வசூலை வாரிக்குவிக்கும் வெற்றிச் சித்திரமாக ‘குலமகள் ராதை’ கொலுவிருந்தது.

தேவிகா சர்க்கஸ் வலையில்  விழுந்து ஆடிப்பாடி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள், கள்ளமலர்ச் சிரிப்பிலே,’ உள்ளிட்டப் பாடல்கள்  தேவிகாவின் இயல்பான கவர்ச்சியைத் திரையில் கூடுதலாகக் காட்டின.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும்- தேவிகாவும் ஜோடியாக  நடித்த ஒரே படம் என்கிற பெருமைக்குரியது ஆனந்தஜோதி. பி.எஸ். வீரப்பாவின் தயாரிப்பு.

பொதுவாக எம்.ஜி.ஆர். பட டைட்டில்கள் எல்லாமே நாயகன் புகழ் பாடுவதாகவே அமையும். அகிலனின் ‘கயல்விழி’ நாவலை ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனாக’ திரையில் மாற்றி இயக்கியவர் மக்கள் திலகம்.

முதலும் கடைசியுமாக நாயகன் - நாயகி இருவரது பெயரையும் இணைத்துப் பெயர் சூட்டப்பட்ட ஒரே எம்.ஜி.ஆர். படம் ஆனந்தஜோதி!

தேவிகாவின் சோக கீதங்கள் ‘நினைக்கத் தெரிந்த மனமே, காலமகள் கண் திறப்பாள் செல்லையா’ இரண்டும் சென்ற நூற்றாண்டில் நேயர்களால் மிக அதிக முறை விரும்பி கேட்கப்பட்டவை.

எம்.ஜி.ஆர். க ஞர் மணிமாறனாகவும் டிரில் மாஸ்டர் ஆனந்தனாகவும் தோன்றினார். நடிப்பில் ‘ஜோதி’யாக ஒளி வீசிய தேவிகாவும்- வாத்தியாரும் இடம் பெற்ற ’ பனி இல்லாத மார்கழியா, பொய்யிலே பிறந்து... இரண்டு டூயட்களும் இன்றைக்கும் நேயர்  விருப்பத்தில் தவறாமல் ஒலிக்கின்றன.
ஆனந்தஜோதி அகன்றதொரு வசூல் வெளிச்சம் பரப்பியும், தேவிகாவுடன் தொடர்ந்து டூயட் பாடுவதை எம்.ஜி.ஆர். ஏனோ ஒரே படத்துடன் நிறுத்திக் கொண்டார்.

ஸ்ரீதர்-தேவிகா காம்பினேஷனில்  அடுத்த சினிமா நெஞ்சம் மறப்பதில்லை. தமிழில் வெளியான முதல்  பூர்வ ஜென்ம கதை. வெற்றிகரமாக ஓடியது.
தேவிகாவுக்கு கண்ணம்மா,  ஜெயா என்று இரு வேடங்கள். முதல் ஜென்மத்தில் ஜமீனில் வேலை செய்யும் கூலிக்காரப் பெண் கண்ணம்மாவாக தேவிகா!
ஜமீன்தார் எம்.என். நம்பியாரின் மகன் கல்யாண்குமாரை, அவர் ஜமீன் பரம்பரை என அறியாமல் காதலித்து, ஜமீன்தாரால் கொலை செய்யப்படும் பரிதாபத்துக்குரிய வேடம்.

தேவிகா பாடி நடித்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ சோக கீதம்,  தமிழ் சினிமா படப் பாடல்களில் தனி வரலாறு படைத்தது. பி. சுசிலாவின் புகழை கின்னஸில் எழுதியது.
----------
தேவிகாவுக்கு மாபெரும் நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கிய ஸ்ரீதர் பற்றி தேவிகா கூறியவை-

‘ ஜெமினியின் கரானா இந்தி சினிமா பார்த்துட்டு டைரக்டர் ஸ்ரீதர் எங்க வீட்டுக்கு வந்து நெஞ்சில் ஓர் ஆலயம் கதை சொன்னார். அப்ப ரிலீசாயிருந்த அவரோட தேன் நிலவு சரியாப் போகலை. கதை எனக்கு ரொம்பப் பிடிச்சது. சரி சார் நானே நடிக்கிறேன்னு ஸ்ரீதர் சாரிடம் தெரிவித்தேன்.

மஞ்சளும் குங்குமமும் குலமகளின் இரு கண்கள். பெண்ணாகப் பிறந்திருந்தும் கூட அதை நான் புரிந்து கொள்ளப் பல ஆண்டுகள் ஆகியது.

மஞ்சள் குங்குமத்தின் மங்கல மகிமையை நான் உணர்ந்து கொள்ளக் காரணமானவர்  டைரக்டர் ஸ்ரீதர்.

சிறு வயது முதல் எப்போதும் நான் குங்குமம் இட்டுக் கொள்வதில்லை. சேவா ஸ்டேஜில்  நடித்துக் கொண்டிருக்கும் போது, எஸ்.வி . சகஸ்ரநாமம் என் முகத்தை உற்று கவனித்துவி ட்டு, ‘உன் நெற்றியில் சாணத்தை எடுத்துப் பூசுகிறேன். அப்போது தான் நீ குங்குமம் இடுவாய்...’ என்பார்.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் எனது கணவராக  நடிக்கும் முத்துராமனின் பெயரில், அர்ச்சனை செய்து குங்குமம் பெற்று வருமாறு, குட்டி பத்மினியின் அம்மாவிடம் நான் கேட்பதாக ஒரு காட்சி வரும்.

அப்போது டைரக்டர் ஸ்ரீதரின் இந்து மதம் குறித்த நம்பிக்கையைப் பார்த்து நான் மனத்துக்குள் சிரித்தேன்.
‘நீ கிருத்துவப் பெண்ணா...’ என்று கூடப் பலர் என்னிடம் கேலியாகக் கேட்டது உண்டு. திருமணத்துக்குப் பிறகு என் போக்கு அடியோடு மாறியது. ஒரு நாள்  நெற்றித் திலகம் என் கைபட்டுக் கலைந்தது தெரிந்ததும் நான் துடிதுடித்துப் போனேன்.

கணவர் வீடு திரும்பியதும் வெங்கடேச பெருமாள் படத்தின் முன்பு போய், சுவாமிக்கு ஆரத்தி எடுத்து அவரை  எனக்குக் குங்குமம் இடச் சொன்னேன். அதன் பிறகே எனக்கு நிம்மதி பிறந்தது.

ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் ஒரு புறம் என்னைச் சிறந்த நடிகையாக்கி அழகு பார்த்தது. இன்னொரு பக்கம் ஓர் இளம் மனைவியாக  தாம்பத்ய பந்தத்தின் அருமையை எனக்கு எடுத்துக் காட்டியது. 

டைரக்டர் ஸ்ரீதர்  நம் தேசத்து மாதர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையை எண்ணி  மனமாறப் பாராட்டினேன்.

நெஞ்சில் ஓர் ஆலயம்  முதல் வாரம் சுமாராத்தான் போச்சுது. அப்புறம் நல்ல படம்னு ரசிகர்களுக்குத் தெரிஞ்சதுமே பிரமாதமா ஓட ஆரம்பிச்சது.
ஸ்ரீதர் எனக்கு ரொம்பவே உதவினார். நெஞ்சில் ஓர் ஆலயம் வெற்றியைத் தொடர்ந்து அவரோட சுமை தாங்கி, நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் தொடர்ந்து என் நடிப்புக்குப் பெயரையும்  புகழையும் தேடித் தந்தன.
ஸ்ரீதர் நடிச்சிக்காட்டும் போதே நமக்குத் தன்னாலயே நடிப்பு வந்துடும்.’ - தேவிகா.
ஸ்ரீதரின் உதவியாளர் சித்ராலயா கோபு. அவர் தேவிகா பற்றி எழுதியவை.
எப்போதும் வேடிக்கையும்  விளையாட்டுமாக கலகலப்பாகப் பேசும் சுபாவம் கொண்டவர். குறும்புத்தனம் அதிகம் கொண்ட குழந்தை மாதிரியானவர் தேவிகா.

ஹீரோயின் தேவிகாவும் வில்லன் எம்.என். நம்பியாரும் ஒரே இடத்தில் இருந்தால் வேடிக்கைக்குப் பஞ்சம் இருக்காது.

திகில் படமான நெஞ்சம் மறப்பதில்லை அவுட்டோரில் அப்படியோர் சந்தர்ப்பம் எங்கள் யூனிட்டுக்குக் கிடைத்தது.  அவர்கள் இருவரின் அரட்டைக் கச்சேரியால், ஓயாத கலாட்டாக்களால் எங்களுக்குச் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகி விட்டது.

ஸ்ரீதரின் மூன்று படைப்புகளில் தொடர்ந்து நாயகியாக நடித்த பெருமை தேவிகாவுக்கு மட்டுமே உண்டு!

 ஒவ்வொரு படமும் முடியும் தருணத்தில், எங்கள் யூனிட்டில் வேலை செய்த தொழிலாளர்கள் அத்தனை பேருக்கும் தன் கையிலிருந்து பணத்தைப் பகிர்ந்து கொடுத்தார்.

அபாரமான நடிப்புத் திறமையோடு இயற்கையிலேயே இளகிய மனமும் கொண்டவர் தேவிகா.’ -கோபு.
ஆரவல்லியில் தவறவி ட்ட வாய்ப்பு மறுபடியும் மாடர்ன் தியேட்டர்ஸின்  யாருக்குச் சொந்தம் படத்தில் தேவிகாவுக்குக் கிடைத்தது. ஹீரோ கல்யாண்குமார்.

இதயத்தில் நீ முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் தேவிகா நடித்த ஒரே படம். தேவிகாவின் பாட்டு ராசி அதிலும்  உறுதியானது.
 உறவு என்றொரு சொல் இருந்தால், பூ வரையும் பூங்கொடியே போன்ற இதயத்தில் நீ படப் பாடல்கள் அவற்றை எழுதிய கவிஞர் வாலிக்கு மிகப் பெரிய வாழ்வு தந்தன.

டைரக்டர் ஏ. பீம்சிங்கின் படங்களில் தொடர்ந்து பங்கேற்றவர்கள் தேவிகாவும் - ஆரூர்தாஸூம். ஆனால் ஆரூர்தாஸூம் - தேவிகாவும் பீம்சிங் இயக்கத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையாமல் போனது.

நடிகர் திலகமும் தேவிகாவும் ஜோடியாக நடித்த வெற்றிச் சித்திரங்களில் ஒன்று பி. மாதவன்  டைரக்ட் செய்த அன்னை இல்லம். 1963 தீபாவளிக்கு வெளியாகி 100 நாட்களைக் கடந்து ஓடியது.

அன்னை இல்லம் படத்தில் சிவாஜி தேவிகாவை கேலி செய்து பாடும்
‘நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது.’ சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

சென்ற நூற்றாண்டில் மிக அதிக முறை சென்னை வானொலியிலும் ஒலித்த ஈவ் டீஸிங் சாங்! அன்னை இல்லம் படத்துக்குத் திரைக்கதை வசனம் ஆரூர்தாஸ்.

‘நான் தப்பித்தவறி ஒரு வசனத்தை மறந்திட்டாலோ, இல்லே மாத்திச் சொல்லிட்டாலோ உடனே கோவம் வந்து என்னைத் திட்டுறீங்க.
‘அழகா இருந்தா மட்டும் போதுமா? ஒழுங்கா வசனம் பேசி நடிக்க வேணாமா? நீயெல்லாம் ஏன் நடிக்க வந்தேன்னு கேக்குறீங்க.’

ஆனா சாவித்ரியம்மான்னா மட்டும் ஏங்க அப்படி பயப்படுறீங்க? அவுங்ககிட்டேயிருந்து போன் வந்துருக்குன்னு சொன்னா ஏன் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடுறீங்க. அந்தம்மா உங்களை ஏன் இப்படிப் பயமுறுத்தி வெச்சிருக்காங்க? அப்படி நீங்க என்னத் தப்புப் பண்ணுனீங்க? எங்கிட்ட மட்டும் சொல்லுங்களேன். ப்ளீஸ்...’

அப்படிச் சொல்லி என்னைக் கேலி செய்யும் ஹீரோயின் வேறு யாருமல்ல. ‘வெகுளிப்பெண்’ என்ற சொந்தப்படத்தை எடுத்து, தன் வாழ்க்கையிலும் ஒரு வெகுளிப் பெண்ணாகவே வாழ்ந்து- அகால மரணம் அடைந்த என் அன்பிற்கும், அனுதாபத்துக்கும் உரிய திருமதி தேவிகாதான்.

நான் வசனம் எழுதி எம்.ஜி.ஆர்.- சாவித்ரி இரண்டாவது முறையாக இணைந்து  நடித்த பரிசு  படப்பிடிப்பு கோடம்பாக்கம் வாகினி ஸ்டுடியோ லும், சிவாஜி - தேவிகா ஜோடி சேர்ந்த அன்னை இல்லம் ஷூட்டிங் அடையாறு நெப்டியூன்  (சத்யா) ஸ்டுடியோவிலும் நடந்து கொண்டிருந்தன.

அங்கே எம்.ஜி.ஆர்.! இங்கே சிவாஜி! இருவருக்கும் வசனம் சொல்லித் தர, ஒரே நாளில் நான் பல தடவைகள் மாறி மாறி போய் வந்து கொண்டிருந்தேன்.
சில சமயங்களில் என்னை உடனே வாஹினிக்கு வரச் சொல்லி சாவித்ரியிடமிருந்து போன் வரும். நான் அவசர அவசரமாகத் தெற்கே உள்ள அடையாறிலிருந்து மேற்கே இருக்கும் கோடம்பாக்கத்திற்கு அனுமார் மாதிரி அப்படியே தாவிப்பறந்து போய்விடுவேன்.

அதை வைத்துத்தான் தேவிகா என்னைக் கேலி செய்வார். அன்று தேவிகா சொன்னதில் ஓர் அர்த்தமும் இருந்தது என்பேன் - ஆரூர்தாஸ்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

தேவிகா 4. மறக்க முடியுமா...?

 


கிடைத்த சந்தர்ப்பத்தை இறுகப் பற்றிக் கொண்டு தனது அசாத்தியத் திறமையால், மேலும் பல படிகள் வேக வேகமாக முன்னேறிச் சென்றார் தேவிகா.

தேவிகாவின் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு 1964, 1965 -1966ஆம் ஆண்டுகளில் தேவிகாவின் படங்கள் பெரும்பாலும் அவர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்ததாகவே அமைந்தது.

இடையில் இரு மாறுபட்ட படங்கள் வாழ்க்கைப்படகு மற்றும் கலைஞரின் மறக்க முடியுமா? அவை சிவாஜி இல்லாமலும், ஒப்பற்ற நடிப்பில் தேவிகா  சிறகு விரிக்க முடியும் என நிருபித்தன.

வாழ்க்கைப்படகு சினிமாவில் நடிக்க நேர்ந்தது குறித்து தேவிகா-
‘ஜெமினியில் வைஜெயந்திமாலா நாயகியாக நடிக்க ஜிந்தகி என்ற இந்தி சினிமாவைத் தயாரித்தார்கள்.  ஜிந்தகி பெரும் வெற்றி பெறவே  அதை ஒரே சமயத்தில் தமிழ்-தெலுங்கு இரண்டிலும் படமாக்க வாசன் திட்டமிட்டார்.

தெலுங்குக்கு என்.டி.ராமாராவ்-  தமிழுக்கு ஜெமினி கணேசன் நாயகர்கள் என முடிவானது.அந்தத் தருணத்தில் வாசன் சாரிடமிருந்து மீண்டும் எனக்கொரு வசந்த அழைப்பு வந்தது.
‘என்னோட இந்தப் படத்தில் இரண்டு மொழிக்கும் ஹீரோதான்  தனித் தனியே             தவிர, ஹீரோயின் நீ தாம்மா...’ என்றார். என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை ரொம்பவே என்னை உற்சாகப்படுத்தியது.

14.jpg

இந்தி, தெலுங்கில் ஓஹோவென்று ஓடிய ஜிந்தகி தமிழில் வாழ்க்கைப் படகு என்ற பெயரில் ரீமேக் ஆனது.

நேற்று வரை நீ யாரோ, சின்ன சின்னக் கண்ணனுக்கு, ஆயிரம் பெண்மை மலரட்டுமே, உன்னைத்தான் நான் அறிவேன், பழநி சந்தனவாடை... என்று,  விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் படத்தில் ஒலித்த கண்ணதாசனின் அத்தனைப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை.

எல்லா அம்சங்களும் சிறப்பாக இருந்தும், சில நேரங்களின்  ஜனங்களின் முடிவைப் புரிந்து கொள்வது சிரமமாகி விடுகிறது. வாழ்க்கைப் படகு வசூலில் தோல்வி  அடைந்தது. நான் மனம் நொந்து போனேன்.

வாழ்க்கைப் படகு பிரமாதமாக வெற்றி பெறாவிட்டாலும், வைஜெயந்திமாலா அதில் எனது நடிப்பைப் பாராட்டி வாழ்த்தியதை  என்னால் என்றும் மறக்க முடியாது.

‘வாழ்க்கைப்படகு படத்தைப் பொறுத்தவரையில் தேவிகாவுக்கே முதல் பரிசு. தேவிகாவின் அடக்கமான நடிப்பில் நிறைவைக் காண்கிறோம்.

தன் உதிரத்தில் உதிர்ந்த குழந்தை  என்று உணராமல்,  கணவர் அதனுடன் கொஞ்சி  விளையாடுவதை மறைவிலிருந்து கண்டு, உளம் நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் சொறிகிறாரே தேவிகா... அதுதான்  நடிப்பின் உச்சம்.’ என்று ‘குமுதம்’ என்னைப் பாராட்டி எழுதியது நினைவில் நிற்கிறது.

ஆனந்த விகடன் இதழில் மீனாட்சி அம்மாள்- ‘தேவிகா இந்த மாதிரி நடித்து நான் பார்த்ததே கிடையாது. பிரமாதமாக நடனம் ஆடியும் நடித்துமிருக்கிறார். எனக்கு ரொம்பப் பிடிச்சதுங்க...’என்று  சொல்வது போல் எழுதி இருந்தார்கள்.

‘என்னை நம்பி வாசன் சார் ஒப்படைத்த பணியை ஒழுங்காகச் செய்தேன்’ என்கிற மனநிறைவு ஏற்பட்டது.  

ஒரு மொழியில் வாசன் சார் எடுக்கிற சினிமா நல்லா ஓடினா, அந்தப் படத்தை மறுபடியும் ரீமேக் செய்யும் போது ஒரிஜினல் சினிமாவில் நடித்தவர்கள், என்ன மாதிரி காஸ்ட்யூம் பயன்படுத்தினாங்களோ அதே கலரில் டிரஸ் தந்து நடிக்கச் சொல்லுவார்.

வாழ்க்கைப் படகு அவுட்டோர்லயும் அப்படி எனக்கு நடந்தது. ஜோக் நீர் வீழ்ச்சில வைஜெயந்தி மாலா யூஸ் பண்ண அதே கலர் டிரஸ்ஸில் என்னை வைத்து ஒரு லாங் ஷாட் எடுத்தாங்க. நான் அதைப் போட்டுக்கிட்டு ஓடினப்ப வாசன் சார் மனைவி  பார்த்துருக்காங்க.

‘என்னது இது... வைஜெயந்தி மாலா ஓடின மாதிரி இருக்குன்னு’ சொல்லியிருக்காங்க. உடனே யூனிட்ல,  ‘இல்லம்மா தேவிகாதான் ஓடினாங்கன்னு’ பதில் சொன்னாங்களாம். ஆனா அவங்க அதை நம்பவே இல்லையாம்.  

என்னை முதன் முதலா பார்த்தப்ப திருமதி பட்டம்மாள் வாசன், ’ என்னோட இன்னொரு பெண் நீ தாம்மா.’ என்று வாயாரச் சொன்னதை, அந்த ஆழமான அன்பை என்னால் எப்படி மறக்க முடியும்?

இப்ப ஜெமினி ஸ்டுடியோ இல்லை. எப்பவாச்சும் அந்தப் பக்கம் போனா, சட்டுன்னு பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வரும். கூடவே அழுகையும் வந்துடும்.’ -தேவிகா.
-------------

‘சந்தானம்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியான சினிமா, தமிழில் கலைஞரின் ‘மறக்க முடியுமா?’ என்றானது. 1966 ஆகஸ்டு வெளியீடு.

மு. கருணாநிதியின் வசனத்தில் தேவிகா நடித்த ஒரே படம். அவருக்கு ஜோடி முத்துராமன்.

parithaabaam_2104548g.jpg

கருணாநிதி எழுதிய உரையாடல்கள்  தமிழகத்தில் தளிர்களுக்கும் மனப்பாடம்.  அவர் எழுதிய சினிமா பாடல்களைக் கேட்டால் சட்டென்று பட்டியலிட தி.மு.க.வினர் கூடத் திணறுவார்கள்.

உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நீங்காத இடம் பிடித்த கலைஞரின் ஒரே பாடல், மறக்க முடியுமா? படத்தில், பி. சுசிலாவின் குரலில், தேவிகா பாடுவதாக அமைந்த

’காகித ஓடம் கடல் அலை மீது’ மட்டுமே.
பூமி சுற்றும் வரை கலைஞர், தேவிகா, பி. சுசிலா மூவரையும் ஞாபகப்படுத்தும் சோக கீதம்! அந்தப் பாடலுக்கு ஒரு வரலாறே உண்டு.

மறக்க முடியுமா படத்தின் இசை அமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி. பாடல் எழுத வந்தவர் கவிஞர் மாயவநாதன்.பாடலாசிரியரிடம் ‘மாயவநாதா, மாயவநாதா, மாயவநாதா என்று மூன்று முறை கூறி, இதுதான் ட்யூன். பாட்டை எழுதுங்கள்’ என்றார் டி.கே. ராமமூர்த்தி.

திணறிப் போனார் இளம் கவிஞர். பிறகு கலைஞரிடம் போய் தன் இயலாமையைத் தெரிவித்தார். ‘ராமமூர்த்தியிடம் ட்யூன் கேட்டால் என் பெயரையே மீண்டும் மீண்டும் சொல்கிறார். அதை வைத்து எப்படிப் பாட்டு எழுதுவது...?’ என்றவாறே திரும்பிச் சென்றார்.

மு.கருணாநிதி தனக்கே உரிய புத்திசாலித்தனத்துடன் 1.மாயவநாதா - காகித ஓடம்,2. மாயவநாதா-கடல் அலை மீது, 3. மாயவநாதா- போவது போலே மூவரும் போவோம் என்று எழுதினார்.

சற்றும் எதிர்பாராமல் கலைஞர் தீட்டிய பாடல் அரசியலை  விடவும் அழியாப் புகழை அவருக்குத் தேடித் தந்தது.வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் அபலைப் பெண் தங்கம். பால்ய வயதில் அநாதையாகி, உடன் பிறந்தவர்களை தொலைத்தது மட்டுமல்லாது காதல் கணவனையும் இழந்த கைம்பெண்.

விதி அவளை  விலைமாதாக வீதியில் நிறுத்தி அரங்கேற்றம் செய்கிறது. தங்கம் தனது சகோதரி என்பதை அறியாது, குடிபோதையில் சிறு வயதில் ஆழ்மனத்தில் நன்கு பதிந்த‘காகித ஓடம் கடல் அலை மீது’ பாடலைப் பாடியவாறு, தம்பி மாணிக்கம் அக்காளிடமே இன்பம் துய்க்க வருகிறான். அதே ‘காகித ஓடம்’ பாடலால் தம்பியை இனம் கண்டு கொள்கிறாள் தங்கம்.

அவமானத்தில் அலறித் துடித்து, துயரத்தின் தாக்கம் தாளாமல் உயிரை  விடுகிறாள். மாணிக்கமாக நடித்தவர் எஸ்.எஸ். ஆர். தங்கமாக மாறுபட்டக் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் தன் அற்புத நடிப்பால் பொன்னாக ஓளி வீசினார் தேவிகா.

உவமைக் கவிஞர் சுரதா எழுதி, பி. சுசிலாவின் குரலில் ஒலித்த ‘வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ’ என்ற பாடலும் மறக்க முடியுமாவின் மற்றொரு சூப்பர்ஹிட் பாடல்.
---------
மறக்க முடியுமா படத்திற்குப் பிறகு தமிழில் தேவிகா நாயகியாக நடித்தவை 1968ல் தெய்வீக உறவு, தேவி  ஆகியன.

தெய்வீக உறவு படத்தில் தேவிகாவுக்கு சீதா-கீதா என இரட்டை வேடங்கள். அவருக்கு ஜோடி மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் தெய்வீக உறவு.

ஏ.கே. வேலன் தயாரித்து இயக்கிய படம் தேவி . தேவிகாவின் ராசியான ஹீரோ முத்துராமன் நடித்தும் ஓடவில்லை.

1968க்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாகத் தன் முழு கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார் தேவிகா. தமிழில் அவரது ஹீரோயின் எபிசோட் நிறைவு பெற்றது.
----------

இனி தேவிகாவின் இனிய அனுபவங்கள் உங்களுக்காக-  
‘குடும்பப் பாங்கான கேரக்டர்களை எனக்குத் தந்து ரசிகர்களிடம், குறிப்பாகத் தாய்மார்களிடம் என்னை நல்ல விதத்தில் வெளிப்படுத்திய டைரக்டர் ஏ. பீம்சிங். தனது படங்களில் தொடர்ந்து அதிக முறை பங்கேற்க வைத்து, என் திறமையை வளர்த்தவரும் அவரே.

நடிச்செல்லாம் காட்ட மாட்டார்.

‘இதுதாம்மா கதை. அதுல உன் கேரக்டர் இப்படியிருக்கணும்னு’ சொல்லி அப்பவே அந்தக் கதாபாத்திரம் மேலே நமக்கு ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தி விடுவார்.

பீம்சிங் இயக்கத்தில் ஆரம்பத்தில் நான் தோன்றிய சகோதரி, களத்தூர் கண்ணம்மா, சிவாஜியோடு நடித்த பாவமன்னிப்பு, பந்த பாசம், பழநி, சாந்தி, அத்தனையிலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இப்பவும் அவை ஜனங்களால் ரசிக்கப்படுகிறது.

பி.ஆர். பந்தலு ஒரு தயாரிப்பாளர் மட்டுமல்ல. சிறந்த டைரக்டரும் கூட. அவர் ஒரு முறை என்னிடம்,  ‘நடிப்புங்கறது விளையாட்டு மைதானத்துல பந்தாடற மாதிரிதான் தேவிகாம்மா...’ என்றார்.

ஒரு காட்சியைச் சொல்லிட்டு,  ‘இது தாம்மா சீன். நீ உன் திறமையைக் காட்டு. ஏதாவது சந்தேகம்னா சிவாஜி சார் உன்னை கைடு பண்ணுவார்.’ என்பார்.

தெலுங்கிலும் பந்தலு சாரின் ஏழெட்டு சினிமாக்களில் நான் நடித்திருக்கிறேன். கர்ணன், முரடன் முத்து போன்ற பத்மினி பிக்சர்ஸ் படைப்புகளில்  பட்டை தீட்டப்பட்ட என் நடிப்புக்கு, டைரக்டர் பந்தலுவின் அத்தகைய அணுகுமுறையும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.

முரடன் முத்து படத்துக்குப் பிறகு நான் ரொம்பவே பிஸி  ஆகிட்டதால் பந்தலு சார் படங்களுக்கு அவர் கேட்ட தேதிகளில் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போயிற்று.

தெலுங்கில் என்னைப் பிரபலப்படுத்திய டைரக்டர்னா அவர் சி.எஸ். ராவ். நடிகை ராஜ சுலோசனாவின் கணவர்.

நான் நடித்து சுந்தர்லால் நஹாதா எடுத்த அத்தனை சினிமாக்களிலும் ராவ் சாரே டைரக்டர். நல்லா ஆக்ட் பண்ணி காட்டுவார். என்னோட அதிகமா டூயட் பாடிய  ஒரே ஹீரோ என்.டி. ராமாராவ். கணக்கு பார்த்தா 50 படங்களுக்கு மேலயே இருக்கும்.

maxresdefault_%281%29.jpg

தெலுங்கு செட்கள்ள அவரோட ஜோடியா நிச்சயம் நான் தான் நடிச்சிட்டிருப்பேன்ற பரிபூரண நம்பிக்கை என்.டி.ஆர். ரசிகர்களுக்கு உண்டு. அதனால தேவிகாகாரு எங்கே காணோம்னு என்.டி.ஆர். கிட்டயே உரிமையா கேட்பாங்களாம்.

படத் தொழிலில் அன்றாடம் நான் சந்திக்கிற பிரச்னைகளை எல்லாம் எப்போதுமே  வெளியில் சொல்ல மாட்டேன். எனக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்வேன்.‘நான் நெருக்கடிகளில் சிக்கித் தவிப்பதை எப்படியோ  தெரிந்து கொண்டு, என்.டி. ராமாராவ் என்றுமே என்னால் மறக்க முடியாத பல உதவிகளைச் செய்திருக்கிறார்!’-- தேவிகா.
---------------

இயல்பாகவே பெண்களைப் புரிந்து கொள்வதில் ஆயிரமாயிரம் சிரமங்கள் உண்டு. அதிலும் தேவிகா என்கிற  ஒளி வீசும் திரைத் தாரகையை, எளிதில் உணர்ந்து கொண்டு நடிப்பு சொல்லித் தருவது,  எம்.ஜி.ஆர்.- சிவாஜியை இயக்கிய கே. சங்கர் போன்ற இமாலய இயக்குநர்களுக்கு அதிகபட்ச சவாலாக இருந்தது.

கே. சங்கரும் தேவிகாவும் தொடர்ந்து ஆடிப்பெருக்கு, ஆண்டவன் கட்டளை, அன்புக்கரங்கள் ஆகிய மூன்று படங்களில் பணியாற்றினார்கள். தேவிகாவுடனான கே. சங்கரின் தோழமை அனுபவம் -

‘ஆடிப்பெருக்கு சினிமாவில் தேவிகா நடிக்க வந்தார். முதல் பார்வையிலேயே எனக்கு தேவிகா பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் ஏற்படவில்லை.

ஏன் எப்படியடா... இவரை வைத்து...  என்று தயக்கமாகக் கூடத் தோன்றியது. ஆனால் ஆரம்ப தினத்தன்றே ஆளை எடை போடுவதில், எனக்கு அத்தனை சாமர்த்தியம் போதாது என்பதைத் தெரிந்து கொண்டேன்.

நான் நினைத்தற்கு மாறாக, கட்டிய பசுவாக நடந்து கொண்டு தேவிகா என்னைத் திகைக்க வைத்தார்.

ஒரு காட்சியைப் படமாக்கும் முன் இருமுறை ஒத்திகை பார்த்துவிட்டு, பாதகமில்லை படமாக்குவோம் என்று அரை மனத்துடன் ஷாட் வைத்தால் ஹீரோயின் தேவிகா என்னை ஓகே சொல்லவே  விட மாட்டார்.

பூரணத் திருப்தி என்று நான் கூறுகிற வரையில், தனக்கே தனது நடிப்பு நிறைவு என்று தேவிகாவின் உள்ளத்தில் உறைத்தால்  மட்டுமே, அதுவும் கூடுதல் ரிகர்சல்களுக்குப் பிறகு ஒரு சீனை எடுக்கலாம் என்பார்.

காட்சி சிறப்பாக வர எத்தனை முறை வேண்டுமானாலும் அலுக்காமல் சலிக்காமல் ஒத்திகை பார்த்துக் கொள்வார். தேவிகாவின் நடிப்பைக் கண்டு நான் முகம் சுளித்ததே கிடையாது.

 

தொழிலில் நேர்த்தியாக நடந்து கொள்ளும் தேவிகாவுக்குக் குசும்பும் கூடப் பிறந்த ஒன்று. எனது கேமரா மேன் தம்பு. பாவம் அவர்...

அநேக தொல்லைகளுக்குப் பிறகு அவுட்டோரில் ஆங்கிள்,  லைட்டிங் எல்லாம் பார்த்து, ஒளிப்பதிவாளர் தம்பு கேமராவை ஓட  விடும் நேரம், தேவிகா டச் அப் என்பார்.

மீண்டும் அவரது எழில் கொஞ்சும் இதழ்களுக்கு ஒய்யாரமாக உதட்டுச் சாயம் பூசிக் கொள்வார். கண்களில் மை கரைந்து  விட்டதா என்று திரும்பவும் கண்ணாடி பார்ப்பார். ‘ஒன் மினிட் ப்ளீஸ்...’ என்று தேவிகா கொஞ்சிக் கொஞ்சி கெஞ்சுகையில் எங்கள் கோபம் மறைந்தே போகும்.’ -கே. சங்கர்.   

‘பொள்ளாச்சி சிவலிங்கம் வீரப்பா’- வில்லன்களுக்கான இலக்கணத்துக்குத் தமிழ் சினிமா ல் பிள்ளையார் சுழி போட்ட பிதாமகன்.

அருமையான குணச்சித்திர நடிகர். தேவிகா எம்.ஜி.ஆரோடும், சிவாஜியோடும் நடித்த  ஆனந்த ஜோதி, ஆண்டவன் கட்டளை படங்களின் தயாரிப்பாளர்.

‘தேவிகா எனக்கு ஒரு பாப்பா. நானும் அதுவும் முதலாளி- நடிகை மாதிரியா பழகறோம். தேவிகா நம்ம வீட்டுப் புள்ள மாதிரி. நினைச்சா வண்டியைத் தூக்கிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடும்.

ஃப்ரண்ட்ஷிப்காக ஷூட்டிங்  டிலே ஆனதா உண்டுங்களா...? அது அறவே கிடையாது. தேவிகா எங்க வீட்டுப் பெண். எங்க படத்துல உசுரைக் கொடுத்துத்தான் நடிக்கும். ஆண்டவன் கட்டளை அவுட்டோர்ல தேவிகா உசுருக்கே ஆபத்து ஏற்பட இருந்துச்சே...’

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

தேவிகா 5. காட் பாதர்..!

 

 

கண்ணதாசனின் நட்புக் களஞ்சியத்தில் கடைசிவரை நம்பகமான தோழியாக உலா வந்து, கவிஞரது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தவர் தேவிகா.

‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே...!’என்ற ஆனந்தஜோதி படப்பாடலை உரிமையுடன் உற்சாகம் பொங்கக் கவிஞர் முன்பே பாடி, சகஜமாக கேலி, கிண்டல் செய்யும் அளவு கண்ணதாசனின் அன்பையும் அன்யோன்யத்தையும் பெற்றவர் தேவிகா.

பாலிருக்கும் பழமிருக்கும், சொன்னது நீதானா, என்ன நினைத்து, முத்தான முத்தல்லவோ, வாழ நினைத்தால் வாழலாம், அத்திக்காய் காய் காய்,  கங்கைக்கரை தோட்டம், ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள், தூக்கனாங் குருவிக்கூடு, கள்ள மலர்ச் சிரிப்பிலே, இரவுக்கு ஆயிரம் கண்கள், நினைக்கத் தெரிந்த மனமே, கால மகள் கண் திறப்பாள் செல்லையா,  நெஞ்சம் மறப்பதில்லை, கண்கள் எங்கே, கண்ணுக்குக் குலமேது, அமைதியான நதியினிலே, அழகே வா, ஆயிரம் பெண்மை மலரட்டுமே, உன்னைத்தான் நான் அறிவேன், ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம், நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், பொதிகை மலை உச்சியிலே, ஓஹோ ஒஹோ ஓடும் எண்ணங்களே, சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று, என்று காலத்தால் அழியாத சாகாவரம் பெற்ற கவிஞர் - பி. சுசிலா இணைந்த சிரஞ்சீவி  திரை கானங்களுக்கு மிக அதிகமாக வாயசைத்த பெருமைமிக்கவர் தேவிகா.

கவிஞர் தயாரித்த மாறுபட்ட திரைப்படம் தாயே உனக்காக. அதில் சிவாஜி-பத்மினி, எஸ்.எஸ்.ஆர்- விஜயகுமாரி,  முத்துராமன்-தேவிகா ஆகியோர் கவுரவ வேடங்களில் நடித்திருந்தனர். அதில் ரீடா என்கிற கிருத்துவப் பெண் வேடம் தேவிகாவுக்கு.

KANNADASAN.jpg

தேவிகா பாடுவதாக அதில் இடம் பெற்ற ‘ஏசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்’ என்கிற பாடல்  வானொலி நேயர்களால் மிக நீண்ட காலம் விரும்பிக் கேட்கப்பட்டது.கிருத்துமஸ் தோறும் தவறாமல் ஒலிபரப்பாகும்.   

இத்தனைக்கும் அந்தப் பாடலைப் பாடியவர் பி. சுசிலா இல்லை. புதிய பாடகியான வசந்தா. யார் பின்னணி பாடினாலும் கவிஞர் - தேவிகா இணைந்து பணியாற்றிய பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை.

கண்ணதாசன் பற்றிய தேவிகாவின் மலரும் நினைவுகள்-
‘கவிஞர் பற்றி நிறையவே சொல்லலாம். அவர் எனக்கு ஒரு காட்ஃபாதர் மாதிரி.

நெஞ்சில் ஓர் ஆலயம் தயாரானதும் ரஷ் பார்த்த கவிஞர் கண்ணதாசன் என்னிடம், ‘தேவிகா... நீ வேணும்னா பாரேன். இந்தப் படம் வெளிவந்த பிறகு  நீ கேட்காமலே உன் சம்பளம் கூடிடும்’ என்றார். அந்த அளவுக்குக் கதை மீதும் என் கேரக்டர் மீதும் கவிஞருக்கு நம்பிக்கை.

என் வாழ்வில் நான் மறக்க முடியாத மிகச் சிலரில் கவிஞரும் இருக்கிறார். கலை உலகில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் மனிதர்களையே, பெரும்பாலும் சந்தித்து வந்த எனக்கு கவிஞர் ஒரு குழந்தை மனம் படைத்தவராகத் தெரிந்தார்.

அப்ப நாங்க வெங்கட் நாராயணா ரோட்டில் உள்ள வீட்டில் இருந்தோம். கவிஞருக்கு எங்க வீடு பக்கம்.

நேரம் கிடைக்கிறப்ப வருவார். பல விஷயம் பேசுவார். கண்ணதாசன் மனசு ஒரு குழந்தை மாதிரி. அவர் தப்பாவே ஏதாவது சொன்னாலும் நமக்கு சீரியஸா எடுத்துக்கத் தோணாது.

கவிஞர் எனக்கு எவ்வளவோ செய்திருக்கிறார். ஏற்ற சமயத்துல உதவியிருக்கிறார். பதிலுக்கு நான் செய்ததெல்லாம் ஒரு தடவை கண்ணதாசன் பிறந்த நாளுக்கு அவரது போட்டோவை வெள்ளி பிரேம் போட்டு பிரஸண்ட் பண்ணினேன் அவ்வளவே.

ஒரு தரம் என்னிடம் பேசறப்ப, ‘எனக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் என்னடிங்கிற வார்த்தை வந்துடும். நானும் எத்தனையோ முறை பார்க்குறேன். உங்கிட்ட பேசறப்ப மட்டும் ‘என்னம்மான்னு’மட்டுமே வருதும்பார்.

திடீர்னு ஒரு டைரக்டர் கிட்டே இப்ப சண்டை போட்டுக்கிட்டு வந்தேன்னாரு. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. எதுக்காகத் தகராறு வந்துச்சுன்னு கேட்டேன்.

‘அட உனக்காகத்தாம்மா... உன்னைப் பத்தித் தப்பாப் பேசினார். அது எனக்குப் பிடிக்கலே. என்னால அதை சகிச்சுக்க முடியலே. உன்னை எனக்கு நல்லாவே தெரியும். அப்படியிருக்க எங்கிட்டயே உன்னைக் குறைச்சு சொல்லலாமா...?’ என்றார் கவிஞர்.

அந்தப் பதிலிலும் அதை அவர் சொன்ன த்வனியிலும் தெரிந்த அக்கறையில் மெய் சிலிர்த்துப் போனேன்.

தனக்கு வேண்டியவர்களை யாராவது பழித்து விட்டால் கண்ணதாசனுக்குக் கடும் கோபம் வரும்.

அவர்களை உண்டு இல்லை என்று ஒரு வழி ஆக்கி விடுவார். அவர்களால் தனக்கு இத்தனை லாபம் இருக்கிறதே... பகைத்துக் கொள்ளக் கூடாதே என்றெல்லாம் உள்ளுக்குள்ளே கணக்கு பண்ண மாட்டார். தனக்கு எது நியாயம் என்று தோன்றுகிறதோ அதை அப்படியே வெளிப்படுத்துவார்.

மனசுக்குள் ஒண்ணை வெச்சிக்கிட்டு வெளியில் நாடகம் நடிக்கிற  வித்தையெல்லாம் கண்ணதாசனுக்கு தெரியவே தெரியாது.

அவர் தயாரித்த படங்களில் தொடர்ந்து நடிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. அதுலயும் கறுப்புப் பணம் மாதிரியான சில சினிமா மிஸ் ஆச்சு.  என் கால்ஷீட்டுக்காகக் காத்திருந்து பார்த்துட்டு அது கிடைக்காதுன்னு தெரிஞ்சதும் கே.ஆர்.விஜயாவை நடிக்க வைத்தார்.

கடைசியா அமெரிக்கா போறப்பவும் எங்கிட்ட சொல்லிட்டுப் போனார். அங்கேயே அவர் காலமாயிட்டார்ன்ற தகவல் கிடைச்சதும் நான் தூங்கவே இல்ல.

நமக்கு வேண்டியவங்க இறந்துட்டா என்ன மாதிரி பாதிக்கப்படுவோமோ அதே உணர்வு எனக்குக் கவிஞர் மரணத்துல இருந்தது.

கண்ணதாசன் தனது வாழ்க்கைச் சரித்திரத்தில் மூன்று நடிகைகளை மட்டுமே பாராட்டி எழுதியிருக்கிறார். அந்தப் பட்டியலில் டி.ஆர். ராஜகுமாரி, மனோரமா ஆகியோருடன் நானும் இடம் பெற்றுள்ளேன் என்பதே எனக்குக் கிடைத்த பெருமை! ’ - தேவிகா.

devika.jpg

குமுதம் வார இதழில் வெளியானது கவிஞர் கண்ணதாசனின்  ‘இந்த வாரம் சந்தித்தேன்’ தொடர். அதில் ஓர்   அத்தியாயத்தில், தனக்கும் தேவிகாவுக்கும் இடையே நிலவிய தோழமை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார் கவிஞர்.

‘சினிமா நடிகைகள் எல்லாருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு. கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு. அதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா!

அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைய பல நடிகைகளை விட, நன்றாகவே நடித்தார். அழகாகவே இருந்தார். வாழ்க்கையை தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் தோல்வி  அடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.      

‘என்ன, உங்கள் படங்களில் தேவிகாவை  விட்டால் வேறு யாரும் கிடைக்க வி வில்லையா?’ என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள்.

‘எந்தக் குடை என்னை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத்தானே நான் தேர்ந்தெடுக்க முடியும்’ என்பேன் நான்.

தேவிகா படப்பிடிப்புக்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்ய மாட்டார். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களில் முழுக்கப் பங்கு கொள்வார்.

என்னைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நான் திட்டிவிட்டாலும், அழுது  விடுவாரே தவிர, முறைத்துக் கொள்ள மாட்டார்.     

தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான தேவிகா, தெலுங்கை  விடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார்.

குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று. இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப் பேச அவர் என்னைச் சந்தித்தார்.

குடும்பத்துக்காகவே வாழும் சினிமா நடிகைகளில் தேவிகாவும் ஒருவர். எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை.

‘அப்பா ’ என்றொரு தமிழ் சொல் தமிழில் உண்டு. இது ’பா ’ என்பதன் எதிர்மறை. ’பிரதட்சிணம் அப்பிரதட்சிணம்’ என்பது போல், ‘ஒரு பாவமும் அறியாதவர்’ என்பதே அதற்குப் பொருள்.

மனமறிந்து அல்ல தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா.

Kannadasan.jpg

‘ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான்’ என்றபடி, அவருக்குச் சில சோதனைகள் வந்தன. ஆண் துணை இல்லாத தேவிகா, அந்தச் சோதனைகளிலிருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டியவரானார்.

‘நந்தன் படைத்த பண்டம்,  நாய்பாதி, பேய்பாதி’ என்பார்கள் என் தாயார்.

அது போல், தேவிகாவின் பணத்தையும் சிலர் சாப்பிட்டு விட்டுப் போனார்கள். அதனை எண்ணி தேவிகா துன்புறவில்லை.

எப்போது அவருக்கு எந்தத் துன்பம் வந்தாலும், எனக்குத்தான் டெலிபோன் செய்வார். என்னவோ ஆண்டவன் அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமையைக் கொடுத்தான். எனக்கு இருப்பது போலவே தேவிகாவுக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கிறது.

சினிமா உலகில், ஒவ்வொரு நாளும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்காகவே வாழும் உயர்ந்த பெண்களில் ஒருத்தி தேவிகா.

துரதிர்ஷ்டவசமாக எனது மங்கல மங்கை படம் பாதியிலேயே நின்று  விட்டது. அதில் ஒரு  விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை.

லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ்தான் யுத்தத்தின் போது, சினிமா நடிகர் நடிகைகள் பெரும்பாலோரோடு, நானும் பஞ்சாப் முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்தேன்.  

இரண்டு  விமானப் படை வானூர்திகளில் பயணம்.  விமானம் உயரமாக இருக்கும். அதற்கும் ஏணிக்கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும்.

எல்லாரும் மளமளவென்று ஏறி  விடுவார்கள். எனக்கு மட்டும் கால்கள் நடுங்கும். அந்நேரம் எனக்குக் கை கொடுத்து  விமானத்துக்குள், இழுத்துக் கொள்வார் தேவிகா.

வாழும் போது உலகம் கூட வரும். தாழும் போது ஓடி விடும். இது வாடிக்கை. இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா.

சினிமா படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில் அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.

கதை, வசனம், பாட்டு, இயக்கம், நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய காலம் அது.

சமயங்களில் தனியாக உட்கார்ந்திருக்கும் போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன்.

சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும். அவற்றில் தேவிகாவின் வடிவமும் உண்டு.

தேவிகா - ஒரு நாள் கூடப் படப்பிடிப்பை ரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா.

என் முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, ‘அண்ணனுக்கு என்ன கவலை?’ என்று கேட்டு, என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கி விடும் தேவிகா.

அவர் ஒரு சினிமா நடிகைதான்.

ஆனால் பல குடும்பப் பெண்களை  விட உயர்ந்த குணம் படைத்தவர்.

‘பிரமீளா’ என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள்?’

--கண்ணதாசன்.

***

தேவிகாவின் மனம் திறந்த மடல் -

பிறந்த தேதி- ஆகஸ்டு 16.

நட்சத்திரம்-பூரம்

ராசி- சிம்மம்.

பிடித்தது - சிதார், வீணை இசை கேட்பது

பிடிக்காதது - பகலில் தூங்குவது.

கோபம்- அசுத்தமானவர்கள், பொய் சொல்பவர்கள்,
திருடுகிறவர்கள், ஆகியோரை நினைத்தால் வருவது.

விருப்பமான உணவு- சிக்கன்.

அஞ்சுவது - இருட்டுக்கும், தேளுக்கும்

பிடித்த வண்ணம் - ஆரஞ்சு. சிவப்பு

சிரிப்பு - அதிகமாகச் சிரித்துச் சிரித்து என் உடலே பெருத்துவிட்டது.

பொறாமை - ஒல்லிக்குச்சி மனுஷிகளிடம் ஏற்படுவது.
அடுத்து அதிக நேரம் தூங்குபவர்களைப் பார்த்து. - கவலைகளை மறந்து எவ்வளவு நிம்மதியாகத் தூங்குகிறார்களே என்று மலைத்துப் போவேன்.

மூட நம்பிக்கை -  சாஸ்திரத்தில் பலத்த ஈர்ப்பு உண்டு எனக்கு. ராகு காலத்தில் புதிதாக யார் வந்தாலும் பேச மாட்டேன்.

அதிகாலையில் என்னை யார் சந்திக்க வந்தாலும் இல்லை என்று சொல்லச் சொல்வேன். எந்த முகத்திலாவது  விழித்து அன்றைய பொழுது பூராவும் போராட்டமாகி  விட்டால் என்ன செய்வது?

மறக்கவே முடியாத ஒரே சம்பவம்-  பிரபலமானத்  திரைத்தாரகையாக என்னிடம் ஓடி வந்து எத்தனையோ பேர் கையெழுத்து வாங்கிப் போவார்கள். பாரதப் பிரதமர் - லால் பகதூர் சாஸ்திரி அவர்களது மனைவியை நேரில் சந்தித்து, நான் ஆட்டோகிராஃப் வாங்கியது, என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளில் மிக முக்கியமானது.

ஆசைகள் - எனக்குப் படிக்கிற ஆசை அதிகம்.  

உலகம் சுற்ற. ஆசைக்கு  ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஓர் ஆணும் பெற்றுக் கொள்ள.

எங்காவது கிராமத்துக்குச் சென்று அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எனக்கு எப்போதும் உண்டு.

பெருமைகள் - 1. நடிகர் திலகமும் நானும் ஜோடியாக நடித்த முதல் படம் பாவ மன்னிப்பு. அது வெள்ளி விழா கொண்டாடியதும், அகில இந்தியாவிலேயே சிறந்த இரண்டாவது படமாக தேசிய விருது பெற்றதும்.

2. என்னோடு அதிகத் தமிழ்ப் படங்களில் நடித்த ஹீரோ சிவாஜி கணேசன் என்பதில் கிடைத்த பேரும் புகழும்!

3. நான் தயாரித்த வெகுளிப்பெண் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதில் இன்னொரு சிறப்பு வெகுளிப்பெண்  பூஜைக்கு வந்து படத்தை ஆரம்பித்து வைத்தவர் என்.டி.ஆர்.

அதற்காகக் கல்கத்தா சென்று பரிசு பெற்ற போது என்னுடன் சேர்ந்து 1971 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர்  விருது பெற்றவர் எம்.ஜி.ஆர்.!

பின்னாளில் இருவரும் முதல்வர்களாக தென்னாட்டை ஆண்டதும், தெலுங்கு கங்கையான கிருஷ்ணா நதி நீரை சென்னைக்குக் கொண்டு வந்ததும் சரித்திரத்தில் இடம் பெற்றன.

வேறு எந்த பிரபல நடிகைக்காவது அத்தகைய பெருமை வாய்த்திருக்குமா...! - தேவிகா.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

தேவிகா 6. பாகற்காய் நாழிகை!

 

 
devika_2460695g

பாராட்டு, விருது, பெரிய தலைவர்களின் சந்திப்பு, முக்கியப் பிரமுகர்களின் தோழமை என  எத்தனையோ இனிப்பான சம்பவங்கள் பிரபல நட்சத்திரங்களின் வாழ்க்கையில் நாள் தோறும் வந்து போகும். ஆரம்ப கால கசப்புகளுக்கும் பஞ்சம் இராது.

ஆனால் தேவிகாவுக்கு நிகழ்ந்த அவமரியாதை அவர் தென்னகத்திரையில் கொடி கட்டிப் பறந்த போது அரங்கேறியது. மனத்தேமலாகிக் கடைசி வரையில்  மாறாமலே போனது.

அந்தப் பாகற்காய் நாழிகைக்குக் காரணம் கே. பாலசந்தர்.

அவரது எதிர் நீச்சல் நாடகம் சினிமாவாகி மாபெரும் வெற்றிச் சித்திரமாக வசூலித்தது. அடுத்து அதே ஸ்டைலில் கே.பி. உருவாக்கிய நாடகம் நவக்கிரகம்.

நவக்கிரகமும் மேடையில் சக்கை போடு போட்டது. அன்றைய பிரபல தி.மு.க. எம்.எல். ஏ.வும், சினிமா பிரமுகருமான இராம. அரங்கண்ணல் நவக்கிரகம் நாடகத்தைத் திரைப்படமாக்க முன் வந்தார்.

நாகேஷ், மனோரமா, ஸ்ரீகாந்த் முதலிய பிரபல நட்சத்திரங்கள் நாடகத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மனோரமா அகிலாண்டம் என்கிற அட்டகாசமான பாத்திரத்தில் பிரமாதமாக நடித்து நாடகத்தின் வெற்றிக்கு அஸ்திவாரமாக நின்றார்.

நாகேஷின் மைத்துனர் செல்வராஜ். அவர் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக நாகேஷ், மனோரமா மீது கடும் கோபத்தில் இருந்தார்.

‘இனி மனோரமாவுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்’ என்று தனது கலையுலக சகாக்களிடம் நாகேஷ் அறிவித்து விட்டார். நவக்கிரகம் படமானது.

நவக்கிரகத்தில் மட்டுமாவது அகிலாண்டமாக மனோரமாவையே நடிக்க வைக்க கே. பாலசந்தர், நாகேஷிடம் கெஞ்சினார். எத்தனை முறை வற்புறுத்தியும் நாகேஷ் மசியவே இல்லை.

இன்னொரு அகிலாண்டத்தை எங்கே தேடிப் பிடிப்பது? மனோரமா மாதிரி யார் நடிப்பார்கள்? என்கிற கேள்விகள் கே.பி.யின் உள்ளத்தைத் துளைத்தன. தூக்கத்தைக் கெடுத்தன.

கே. பி.யின் உதவியாளர்கள் அகிலாண்டம் ரோலுக்கு ஆளுக்கொரு பெயரைச் சொன்னார்கள். ஆனால் இயக்குநர் சிகரத்தின் நினைவுக்கு வந்த ஒரே ஒருவர் தேவிகா.

தேவிகாவின் நடிப்பு அபாரமாக மிளிர்ந்த நீலவானம் சினிமாவின் கதை வசனகர்த்தா கே. பாலசந்தர். தேவிகாவின் மேன்மையை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்.

காலை ஏழு மணி. ஏவி.எம். ஸ்டுடியோ. இரண்டாவது தளம். இயல்பான பரபரப்புடன் டைரக்டர் நுழைந்து, எப்போதும் கேட்கும் கேள்வியை கேட்கிறார்.

‘ஆர்ட்டிஸ்ட் வந்தாச்சா...? ’

‘ஸ்ரீகாந்த் மேக் அப் ரூமில் இருக்கிறார்’ என்கிற பதில் கிடைக்கிறது.

‘அப்ப தேவிகா இன்னும் வரவில்லையோ... கே.பாலசந்தரின் இயக்கத்தில்  நடிக்க ஆசைப்பட்டு உடனே கால்ஷீட் கொடுத்தவர் தேவிகா. குறித்த நேரத்தில் வராமல் போவாரா...? ’

இயக்குநர் சிகரத்துக்கு அந்த இனிய காலைப் பொழுது ஒரு சவாலாகத் தோன்றியது.

சட்டென்று ஷூட்டிங் தொடங்குவதற்கான அறிகுறிகளைக் காணோம். 

கே.பி.யின் உதவியாளர்கள் ஏதோ நாடகக் காட்சி போல் டைரக்டரின் கண் எதிரேயே குறுக்கும் நெடுக்குமாக நடை பழகினார்கள்.

‘அருள் பிலிம்ஸ்’ தயாரிப்பு நிர்வாகி பாலகிருஷ்ணன். கே.பாலசந்தரிடம் மிகவும் தயங்கித் தயங்கி ‘ஒரு சின்னப் பிரச்சனை’  என்று தொடங்கிப் பதற்றத்துக்கான முடிச்சை அவிழ்த்தார்.

‘அம்மா வேடத்தில் நடிக்கத் தயங்குகிறார் தேவிகா. அதுவும் மூக்குக் கண்ணாடியுடன் நடிக்க அவர் விரும்பவில்லை. ’

‘இவ்வளவுதானே... நான் வந்து தேவிகாவுக்கு விவரமாக எடுத்துச் சொல்லட்டுமா’ என்றார் கே.பாலசந்தர்.

தேவிகா ‘அகிலாண்டமாக’ அவதரிக்க, அரிதாரம் பூசி ஒப்பனை அறையில் கனவுகளுடன் காத்திருந்தார். தேவிகாவின் கோரிக்கை நியாயமானது.

‘கொல வெறி’ அனிருத், மற்றும் படுகொலை செய்யப்பட்ட ‘சுவாதி’ குறித்து, முக நூலில் தன் கருத்தை பகிரங்கமாகக் கூறித் தொடர்ந்து விவகாரங்களில் சிக்கிக் கொண்டவர்,  மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் ‘ஓய்.ஜி. மகேந்திரன்’.

1969ல் அவர் இளைஞர். கிண்டி என் ஜினியரிங் கல்லூரி மாணவர்.

படித்துக் கொண்டே தந்தை ஓய்.ஜி.பார்த்தசாரதியின் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக் குழுவில் பங்கேற்றார் மகேந்திரன்.

நவக்கிரகம் சினிமாவில் அவரை அகிலாண்டத்தின் 15 வயது மகனாக, அரை டவுஸருடன் அறிமுகப்படுத்த கே.பாலசந்தர் விரும்பினார்.

ஒய். ஜி. மகேந்திரனின் தாயாராக  நடிப்பது தேவிகாவுக்குச் சிக்கலான விஷயமாகத் தோன்றியது. தமிழில் தேவிகாவுக்கு அப்போது படங்கள் ஏதுமில்லை. ஆனால்  ஆந்திராவில் நம்பர் ஒன் ஹீரோயின் அவர்!

‘ஒரு படம் முழுவதும் அம்மா வேடத்தில் நடிப்பதால், நாயகியாக நடிக்கும் அத்தனை சினிமாக்களும் பாதிக்கப்படும் என்கிற சூழல்.

‘பாலசந்தர் மேக் அப் அறைக்கு வந்து நவக்கிரகம் திரைக்கதையில் தனக்காக மாற்றங்களைச் செய்வார். தன்னைச் சமாதானப்படுத்தி அகிலாண்டமாக வெற்றி நடை போடுதற்கு உதவுவார். மீண்டும் ஒரு திருப்புமுனையை கே.பி. மூலம் பெறலாம்’என்பதான இன்ப அலைகள் தேவிகாவுக்குள் தவழ்ந்தன.

கே. பாலசந்தரா கொக்கா!

அரும்பு மீசை ஒய்.ஜி. மகேந்திரனை, தேவிகாவுக்காக அரங்கேற்றத்திலேயே கைவிடுவதில் பாலசந்தருக்கு உடன்பாடு கிடையாது.

தேவிகா இருக்கும் திசையைத் திரும்பிக் கூடப் பார்க்காமல், பேக் ஆஃப் சொல்லிவிட்டு காரில் ஏறிப் பறந்தார் கே.பி.

K_Balachandar.jpg

தேவிகாவுக்கு அதை விட என்ன அவமானம் வேண்டும்! 

நவக்கிரகம் சினிமாவில் தேவிகாவுக்குப் பதிலாக அகிலாண்டமாகத் தோன்றியவர் பத்மினியின் தங்கை ராகினி.

தமிழ் சினிமாவில் ராகினியின் பங்களிப்பு சொற்பம். ஆரம்பத்தில் அவர் நடன நங்கை. உத்தமபுத்திரன் காலத்து காமெடி நடிகை.  ஒரு சில படங்களில் ஹீரோயின்  அவ்வளவே.

ராகினியை அகிலாண்டமாக எதிர் கொள்ள இயலாமல் நெளிந்தார்கள் தமிழர்கள். நவக்கிரகம் படத்தை வசூலில் தோல்வியுறச் செய்தார்கள்.

தேவிகா நடித்திருந்தால் நிச்சயம் நவக்கிரகம் தோல்வி அடைந்திருக்காது. மாறுபட்ட தேவிகாவை உருவாக்க கே.பி. கொடுத்து வைக்கவில்லை.

தேவிகாவின் காதல் உலகுக்குத் தெரிய வந்த போது அதிர்ச்சி அடையாதவர்களே கிடையாது, அவரது காதலர் தேவதாஸ்  உள்பட.

ஆந்திராவில் என்.டி.ஆரின் ஆதர்ச நாயகி, தமிழில் நடிகர் திலகத்தின் வெற்றிகரமான இணை தேவிகா. தென்னகத்திரையில் உச்சாணிக் கொம்பில் இருந்த நேரம்.

தேவிகா தேவதாஸை மனமாற விரும்பினார். இயல்பிலேயே இளகிய மனம் கொண்டவர். ஏற்றத் தாழ்வுகள் பாராமல் எல்லாத் தரப்பு நடிகர்களுடனும் இணைந்து நடித்தவர்.

தேவிகா   தன்னை  நேசிப்பதைக் கேட்டுப் பரவசத்துக்குப் பதிலாக தேவதாஸ் பதற்றம் அடைந்ததே நிஜம்! நாம் காதலிக்க வேண்டாம். அது சரியாக வராது என்று மறுத்து ஒதுங்கியதே சத்தியம்!

யார் அந்த தேவதாஸ்?

சாமான்யமானவரா... அல்ல.

ஆரம்ப காலத் தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர் - கண்ணாம்பா நடித்த அசோக் குமார்  மறக்க முடியாத வெற்றிப்படம். அதைத் தயாரித்தவர் மதுரை முருகன் தியேட்டர்ஸ் முதலாளி சுந்தரராம அய்யர். அவரது  மகன் தேவதாஸ்.

தேவதாஸ் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்தவர் பால கிருஷ்ணன்.- இன்றையப் பிரபல கதாசிரியர்- பட அதிபர் கலைஞானம்.

தேவிகா தயாரித்த வெகுளிப்பென் சினிமா - கலைஞானம் எழுதிய வெள்ளிக்கிழமை மேடை நாடகத்தின் திரை வடிவம்.

மதுரையில் பாகப்பிரிவினை வெள்ளி விழா. அந்நிகழ்வில் கலந்து கொள்ள டைரக்டர் ஏ. பீம்சிங் சென்ற சமயம்.

‘என் பையன் கூட சினிமால வர ஆசைப்படறான். உங்களால் ஏதாவது முடியுமானால் பாருங்கள்.’

தேவதாஸ் தந்தையின் நேரடியான கோரிக்கை.

தன்னிடம் பணிவோடு வந்த விண்ணப்பத்தை பீம்சிங்கால் தட்டிக் கழிக்க முடியவில்லை.

‘சென்னைக்கு வரச் சொல்லுங்கள்’ என்றார்.

பாச மலர் ஷூட்டிங் ஆரம்பமானது. ஏற்கனவே இருந்த பீம்சிங்கின் மூன்று அஸிஸ்டெண்ட்களைக் கடந்து நாலாவது ஆளாக கிளாப் போர்டை சுமந்து நின்றார் தேவதாஸூம்.

RPR_16.jpg

மிகப் பிரபலமான மருத்துவர்களை, அதிகச் சம்பளம் வாங்கும் சினிமா ஹீரோக்களை, டைரக்டர்களை ஆலை முதலாளிகளை, முன்னணி தொழில் அதிபர்களை, திருமணம் செய்வது பலகனவுக்கன்னிகளின் சாமர்த்தியம்.

தேவிகா ஒருவர் மட்டுமே இன்று வரை விதிவிலக்கு.

எப்படியாவது தேவதாஸை மணப்பது என்று கங்கனம் கட்டிக்கொண்டு நடமாடினார். முடியவே முடியாது என மறுத்த தேவதாஸின் கால்களில் விழுந்து கதறி அழுது, காதலுக்காகத் தன் கண்ணீரால் பாத பூஜையும் செய்தார் தேவிகா.

தனது எதிர் காலம் இன்னதென்று விளங்காத துணை இயக்குநரை, மணாளனாக வரிக்க அவரது கருணை மனத்தால் மட்டுமே முடிந்தது.------------

திருமணத்துக்குப் பிறகு தேவிகா அவரது காதல் கணவர் தேவதாஸை டைரக்டராக்கி அழகு பார்த்தார். அதற்காக அவர் சொந்தத்தில் தயாரித்த படம் வெகுளிப் பெண்.

1971ல் வெளியான சிவாஜி- பத்மினி- சரோஜாதேவி நடித்த தேனும் பாலும், சிவகுமார்-லட்சுமி நடித்த திருமகள், ஜெமினி கணேசன் நடிக்க சவுகார் ஜானகி தயாரித்த ரங்க ராட்டினம், தேவிகாவின் வெகுளிப் பெண் ஆகிய எல்லா சினிமாக்களுமே ஒரே மாதிரியான கதை அம்சம் கொண்டவை. அவற்றில் வெகுளிப்பெண் மட்டும் மக்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்த்தது.

எதிர் பாராத சூழலில் பருவப் பெண் ஒருத்தி கற்பைப் பறி கொடுப்பாள். அதனை அம்மா, அக்கா, அண்ணி யாராவது வீட்டு ஆண்களிடம் மூடி மறைப்பதே திரைக்கதை.

வெகுளிப் பெண் படத்தில் மூத்த சகோதரி தன் தங்கையின் கர்ப்பத்தை மறைத்து, அவள் பெறுகிற குழந்தையைத் தனக்குப் பிறந்ததாகச் சொல்லி அனைவரையும் நம்ப வைப்பாள்.

தங்கை ராதாவாக வெண்ணிற ஆடை நிர்மலா. அவரது அக்கா ஜானகியாக தேவிகா நடித்தார்கள்.

ஜெமினிகணேசன், முத்துராமன், கே.பாலாஜி, நாகேஷ் ஆகியோரில் யார் நிர்மலாவைச் சீரழித்தவர் என்கிற சஸ்பென்ஸ் படம் முழுவதும் நிலவும்.

திருமணமாகாத  தங்கைக்குப் பிறந்த குழந்தையைத் தன்னுடையதாகக் கூறி அநேக அவஸ்தைகளுக்கு ஆளாகும் மாறுபட்ட கதாபாத்திரம் தேவிகாவுக்கு. 

குழந்தையின் பிறந்த நாள் விழாவில் அது யாருடையது என்கிற சந்தேகம் எழுகிறது. வி. குமார் இசையமைப்பில், தேவிகாவுக்காக பி. சுசிலா பாடுவதாக,  எப்போதும் போல் கதைக்கும் காட்சிக்கும் பொருத்தமாக கண்ணதாசன் எழுதிய பாடல்-

‘முள்ளுக்கு ரோஜா சொந்தம் முத்துக்குச் சிப்பி சொந்தம்

பிள்ளைக்கு அன்னை அல்லவோ என் கண்ணா

பெண்மைக்குத் தாய்மை அல்லவோ. ’

அந்த  ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களுள் அதுவும் ஒன்று.

1971 ஆம் ஆண்டின் சிறந்தத் தமிழ்ப் படமாக தேசிய விருது பெற்றது வெகுளிப்பெண்.

சிவாஜி- கே. பாலாஜி போன்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, தேவிகா எங்கிருந்தோ வந்தாள், பாரத விலாஸ், அன்புச் சகோதரர்கள், உள்ளிட்ட  சினிமாக்களில் குணச்சித்திர வேடங்களில்  தோன்றினார். அந்த மூன்று படங்களும் தேவிகாவின் முத்தான நடிப்புக்கு முழு முகவரி தந்தன.

குறிப்பாக எங்கிருந்தோ வந்தாள் படத்தில் கே.பாலாஜி ஜோடியாக தேவிகா ஏற்ற அண்ணி அமிர்தம் என்கிற கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.

அன்புச் சகோதரர்களில் மேஜர் சுந்தரராஜனின் மனைவியாக லட்சுமி என்கிற கேரக்டர். அனுதாபத்துக்குரியது.

செல்வ சீமாட்டி ஜமுனாவைக் காதலித்துச் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகக் கை விடுவார் மேஜர். அவரை ஜமுனா பழி வாங்க நினைத்து, ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் வறுமையில் வாட்டி எடுப்பதே திரைக்கதை.

‘என் கணவரை ஏதும் செய்து விடாதே. அவர் செய்த தவறை மன்னித்து எங்களை நிம்மதியாக வாழவிடு!’ என்று ஜமுனாவிடம் தேவிகா கெஞ்சிக் கதறும் கட்டங்கள் தாய்க்குலங்களைக் கண்ணீர் சிந்த வைத்தன.

அன்புச் சகோதரர்கள் படத்தின் வெற்றிக்கு தேவிகாவின் குணச்சித்திர நடிப்பு நங்கூரம் பாய்ச்சியது.

சத்யம் படத்தில் நடிகர் திலகத்தின் நாயகியாகத் தமிழ் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றார் தேவிகா. அதில் அவருக்கு மைத்துனராக வந்தவர் கமல்ஹாசன்.

ஆனாலும் ஸ்ரீதர் தேவிகாவை மறப்பதாக இல்லை. கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகள் கழித்து 1986ல், கமல்  நடிக்க ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய  படம்’நானும் ஒரு தொழிலாளி’  அதில் கமலுக்கு அண்ணியாக தேவிகாவை மீண்டும் திரையில் தோன்ற வைத்தார்.

நானும் ஒரு தொழிலாளி தேவிகா நடித்த கடைசித் தமிழ்ப்படம் என்று நினைக்கிறேன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று ஒரே நேரத்தில் அநேக மொழிகளில் கொடி கட்டிப் பறந்த மிகச் சில நாயகிகளில் தேவிகாவும் ஒருவர்.

அன்றைய நட்சத்திரங்களில் பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் போதே ‘மத்யமா’ இந்தித் தேர்வு  எழுதி தேர்ச்சி பெற்றவர் தேவிகா. இந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் தனியே ஆசிரியர் வைத்துச் சரளமாக இந்தியில் உரையாட  ட்யூஷன் எடுத்துக் கொண்டார். அவரது இந்தி பண்டிட்டின் பெயர்  சூரஜ் நாராயண் சின்ஹா.

‘தேவிகா எனது முதல் தர மாணவி. எதையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் நிறைந்தவர். ஜெமினியின் கரானா இந்தி சினிமா ஷூட்டிங்கில் தேவிகாவின் இந்தி உச்சரிப்பை ராஜேந்திரகுமார், ஆஷாபரேக் உள்ளிட்ட வடக்கத்திய நட்சத்திரங்கள் மனப்பூர்வமாகப் பாராட்டியதை நான் நேரிலேயே பார்த்தேன். ’ என்று தேவிகாவுக்குப் பத்திரிகை பேட்டி ஒன்றில் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளார் சின்ஹா.

தேவிகாவைப் பயன் படுத்திக்கொள்ளாத புகழ் பெற்ற படக் கம்பெனிகள்  தேவர் பிலிம்ஸ். ஆர்.ஆர். பிக்சர்ஸ். 

சரோஜாதேவி, ஜெயலலிதா, கே.ஆர். விஜயா ஆகியோரைத் தொடர்ந்து நாயகிகளாக நடிக்க வைத்த தேவர், டி.ஆர். ராமண்ணா இருவரும் ஏனோ தேவிகாவை மறந்து விட்டார்கள்.

தேவிகாவை இயக்காத பிரபல டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சு, கே.எஸ். கோபாலகிருஷ்ணன், கே.பாலசந்தர்.

எம்.ஜி.ஆருடன் ஏன் தொடர்ந்து நடிக்கவில்லை என்கிற கேள்விக்கு தேவிகாவின் பதில்-

‘ என் கைவசம் நிறையவே படங்கள் இருந்தன. அதில் பல சின்ன பட்ஜெட்டில் உருவாகும் குறுகிய காலத் தயாரிப்புகள். எம்.ஜி.ஆர். படம் என்றாலே பெரிய மூலதனத்துடன் உருவாகித் திரைக்கு வர  நீண்ட காலம் பிடிக்கும்.

எற்கனவே தமிழில் சிவாஜி, தெலுங்கில் என்.டி.ஆர். படங்களுக்குத் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து வந்தேன். நான் இருந்த பிஸியான சூழலில் எம்.ஜி.ஆருடன்  மீண்டும் ஜோடி சேர முடியாமல் போனது. ’

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

தேவிகா 7.நடிகர் திலகத்துடன்...!

 

 
im0804-60_karnan

1961 மே 27. பத்மினியின்  திருமணம் நடைபெற்றது. அவர் சினிமாவிலிருந்து விலகிச் சென்றார். சிவாஜியும்-- தேவிகாவும் முதன் முதலாக இணை சேர்ந்த  பாவமன்னிப்பு வெள்ளிவிழா கொண்டாடியது. 

பத்மினி மீண்டும் சிவாஜியுடன் சினிமாவில் டூயட் பாட சில வருடங்கள் பிடித்தது. இடைப்பட்ட ஐந்து ஆண்டுகள் நடிகர் திலகத்துக்குப் பொருத்தமான  ஜோடியாக வெற்றிகரமாக வலம் வரும் அதிர்ஷ்டம் தேவிகாவுக்கு அமைந்தது.

மாபெரும் பிரம்மப் பிரயத்தனங்களுக்குப் பிறகே பத்மினியால் சிவாஜி- தேவிகா ஜோடியைப் பிரிக்க முடிந்தது. அந்த அளவுக்குத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் ஆகிய மூன்று தரப்பினராலும் சிவாஜி- தேவிகா ஜோடிக்கு அற்புத வரவேற்பு கிட்டியது.

1961 முதல் 1965 வரை எம்.ஜி.ஆர்.-சரோ, சிவாஜி -தேவிகா, ஜெமினி -சாவித்ரி இணைகள் தமிழ் டாக்கியை ஆண்டன.

சிவாஜியுடன் தேவிகா இணைந்து நடித்த ஆண்டவன் கட்டளை, பி.எஸ். வீரப்பாவின் தயாரிப்பு. ஆலயமணி வெற்றிக்குப் பிறகு கே. சங்கர் இயக்கத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தது.

ஆலயமணியைப் போலவே சென்னையில் நாலு தியேட்டர்களில் நூறு நாள்களைக் கடந்து சாதனை படைக்கும் என எண்ணினார் வீரப்பா. ஆனால் ஐம்பது நாட்களைத் தாண்டி ஓடியதே தவிர வெற்றி விழா கொண்டாடவில்லை.

கணேசனின்  மிகையான நடிப்பு மீதான மீடியாவின் கடுமையான விமரிசனங்கள், படத்தின் ஓட்டத்தையும் வசூலையும் பாதித்தன.

சிவாஜியின் ஓவர் ஆக்டிங்கால் சிதைந்த படங்களில் ஒன்றாக ஆண்டவன் கட்டளை ஆகிப் போனது.

பேராசிரியர் கிருஷ்ணன் மதிப்பிற்குரிய மேதை என்பதைக் காட்டிலும், படித்த கோமாளியாகத் தெரிய காரணம் சிவாஜியின் மிகையான நடிப்பு.  என்று குமுதம் தன் விமரிசனத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது.

தேவிகா நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்த படங்களில் ஆண்டவன் கட்டளைக்குத் தனி மகுடம் சூட்டலாம்.

விவேகானந்தர் போல் பரம புருஷராக வாழத் துடிக்கும் பேராசிரியர் கிருஷ்ணனை, வலியச் சென்று காதலிக்க வைக்கும் துணிச்சல் மிக்க கல்லூரி மாணவி ராதாவாக தேவிகா வாழ்ந்து காட்டியிருந்தார்.

‘அழகே வா அருகே வா‘ பாடலில் கவர்ச்சிக்கும் விரசத்துக்குமான மெல்லிய வேற்றுமையை-  ஒற்றைக் குழல் ஈர முகத்தில் விழும் எழிலிலும்,  நீரில் நனைந்த வாளிப்பான தோற்றத்திலும், மிக நுண்ணிய சிருங்கார பாவனைகளிலும் தேவிகா அற்புதமாக வெளிப்படுத்தினார்.

தேவிகாவின் பெர்ஃபாமன்ஸை ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட முன்னணி வார இதழ்கள் மனமாரப் பாராட்டின.

‘குறை சொல்ல முடியாமல் நடித்திருக்கிறார் தேவிகா. அதுவும் கடைசியில் பழைய நினைவுகளை மறந்த நிலையில் கண்களை உருட்டி, மிரட்சியுடன், நீ யாரு? நீ என்ன சொல்றே’ என்று நடிகர் திலகத்திடம் கேட்கும் இடங்கள்  மெய் சிலிர்க்க வைக்கின்றன. ' என்று போற்றி எழுதியது ஆனந்த விகடன்.

தேவிகாவின் சிறந்த நடிப்பை அத்தனைச் சீக்கிரத்தில் மறக்க முடியாமல், அதைக் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து முரடன் முத்து விமர்சனத்திலும் எதிரொலித்தது.

மீனாட்சி- ‘தேவிகா பத்தி ஒண்ணும் சொல்லலையே? '

சண்முகம் பிள்ளை- ‘என்ன இருக்கு சொல்றதுக்கு. ஆண்டவன் கட்டளைல அவங்களுக்குச் சிறப்பான ரோல்.  அதைவிடப் பிரமாதமா இதுல என்ன பண்ணிட முடியும். கொடுத்த சந்தர்ப்பத்தை நல்லா பண்ணி இருக்காங்க. '

தேவிகாவின் பிசிறு இல்லாத நடிப்பு நிறைவு. புன்னகை செய்தே பேராசிரியரைக் கவரும் பாணியும், பழைய நினைவு மறந்த அரைப் பைத்தியமாக உலவும் முறையும் நிறைவைத் தருகின்றன. ' என்றது குமுதம்.

நீலவானம் பட விமர்சனத்தில் ஆனந்த விகடன் தேவிகாவை கை கொடுத்த தெய்வம் சாவித்ரி ரேஞ்சுக்கு  உயர்த்தி எழுதியது. தேவிகாவின் நடிப்பால் காப்பாற்றப்பட்டது நீலவானம் என்று அதிரடியாக அறிவித்தது. 

அன்புக் கரங்கள்- அன்னம் கதாபாத்திரமும், நீலவானமும் கௌரி கேரக்டரும் 1965ல் பேசும் படம் இதழால் தேவிகாவின்  சிறந்த நடிப்புக்காகப் பெரிதும் பாரட்டப்பட்டன.

சிவாஜியிடமிருந்து சிறந்த நடிப்பைக் கற்றுக் கொண்ட அனுபவம் குறித்து தேவிகா உங்களுடன் -

‘நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, தன்னோடு நடிப்பவர்களின் திறமையும் வெளிப்பட வேண்டும் என்று நினைக்கிற பண்பிலும் அவர் திலகம்!

பாவமன்னிப்பு படத்தில் ரஹீமாக வாழ்ந்து காட்டியிருப்பார். அதில் சிவாஜியுடன் நாயகியாக நடித்த முதல் சீனை என்னால் என்றும் மறக்கவே முடியாது. காரணம் அது ரஹீமை நான் ஜெயிலில் சந்திக்கும் சோகமயமான கட்டம்.

உள்ளேயிருந்து சிவாஜி கதற, வெளியே நிற்கும் நான் புலம்ப... அதனை க்ளைமாக்ஸ் காட்சிக்குக் கொடுக்கிற  முக்கியத்துவத்துடன், அதிக அக்கறையோடு முதலில் படமாக்கினார் டைரக்டர் ஏ. பீம்சிங்.

சிறைக் கம்பிகளைப் பிடித்தவாறு அதில் முகம் புதைத்து நான் அழ வேண்டும். புதிதாக பெயிண்ட் அடித்திருப்பார்கள் போல. அது என் கைகளில் ஒட்டிக்கொண்டு விட்டது.

சிவாஜிக்கு அதைப் பார்த்ததும் பயங்கர கோபம் ஏற்பட்டது. என் படபடப்பு மேலும் கூடியது. 

‘ கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பலம் கொண்ட  மட்டும் அதை ஆட்டி விட்டால் போதுமா...? கண்ணீர் விட்டுக் கதறும் நடிப்பு வந்து விடுமா உனக்கு? இந்தக் கம்பிகள் போலியானவை. நிஜக்கம்பிகள் போல் இவற்றை  உலுக்கினால் இவை என்ன ஆகும்? எப்பவும்  சுய நினைவோடு நடிக்கணும்.

அப்பத்தான் நீ நடிப்பில் உச்சம் தொட முடியும். இப்ப நான் மேரியாக நடிப்பதை நீ பார்... ' என்ற சிவாஜி,

கம்பிகளுக்குப் பூசப்பட்ட புது சாயம் கொஞ்சமும்  கைகளில் படாமல், உணர்ச்சி வசப்பட்டு அழகாக நடித்துக் காட்டினார்.

அன்புக்கரங்கள் படத்தில் நான் மணிமாலாவைச் செல்லமாகக் கடிந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டம். விளையாட்டுக் கோபம் காட்ட வேண்டிய இடத்தில், அதை உணராமல் நான் நிஜமாகவே கோபித்துக் கொள்வது போல  நடித்தேன்.

அதைப் பார்த்த சிவாஜி, ‘இந்த சீன்ல இப்பிடித்தான் நடிப்பீங்களா..? கொஞ்சம் தள்ளுங்க நான் நடிச்சிக் காட்டறேன்.

நடிக்கறதே பொய்யான சமாசாரம். நீ போலியா கோவிச்சிக்கிட்டுப் பாசாங்கு பண்ணணும். அதை விட்டுட்டு முகத்துல இவ்வளவு கடுப்பைக் காமிச்சா காட்சி எப்படி சரியா வரும்?

நீ அவளுக்கு புத்தி சொல்றதுல உள்ளூற அன்பும் பாசமும் எதிரொலிக்கணும். அது உன் ஆதங்கமா வெளிப்படணுமே தவிர ஆத்திரமா மாறிப்போயிடக் கூடாது.

டூரிங் டாக்கீஸுல படம் பார்க்கறவனுக்கும் நீ பொய்யாத்தான் கோவிச்சிக்கிறன்னு புரியறாப்பல நடிக்கணும். என்ன நான் சொல்றது விளங்குதான்னு’ கேட்டுட்டு  நான் எப்படிப்பட்ட பாவத்தோடு பேசணும்னு நடிச்சிக் காமிச்சார்.

போலியான கோபத்தில் கூட இவ்வளவு நுணுக்கங்களா...! என்று வியந்தேன்.

அவரோட நடிச்சதாலதான்  நான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா  நிக்கிறேன்னு கூடச் சொல்லலாம். செட்ல எனக்கு சீன் இல்லாத நேரத்துல லைட் பாய் கிட்ட பேசிட்டிருப்பேன். உடனே சிவாஜி என்னிடம்,

‘ஹீரோ கிட்டப் பேசறது தேவையில்லன்னு நினைக்கிற’ என்று நையாண்டியாகக் கேட்டிருக்கிறார். எனக்கு பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை. ஒரு வித அச்சத்தினால்  பெரியவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன்.

ஷாட்ல எப்படி நடிக்கணும்னு எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டு கம்மியா பண்ணுவார். கூட நடிக்கிறவங்களுக்கும் பேர் வரணும்னு நினைப்பார்... அவர் தான் சிவாஜி.

அதுக்குச் சரியான எடுத்துக்காட்டு வேணும்னா  ‘நீல வானம்’  படத்தைச் சொல்லலாம். ‘அதுல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கிடைக்கிற கேரக்டர். ஹீரோவுக்கு அதிக வேலை கிடையாது.’

அந்த விஷயம் சிவாஜிக்குத் தெரிவிக்கப்பட்டும் அவர் பிடிவாதமா  நடித்தார். என் கேரக்டர் ஓங்கி நிற்க வேண்டிய கட்டங்கள் அத்தனையிலும் எனக்காக விட்டுக் கொடுத்து நடிச்சிருக்கார்.

நான் எந்த சீன்லயாவது நடிப்பை கோட்டை விட்டுட்டேன்னா, ‘மண்டு மண்டு’ ன்னுச் செல்லமா கோவிச்சுக்குவார். அப்புறம் அந்தக் காட்சியில் என் நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.

நான் கர்ப்பிணியா நடிக்க வேண்டிய காட்சி. தாய்மை அடைந்த பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் செய்து காட்டி என் நடிப்பை மேம்படுத்தினார்.

அந்த மாதிரி யார் நன்றாக நடித்தாலும் காட்சி முடிந்த பிறகு பாராட்டி விடுவார். அது அவருக்கு மட்டுமே உரிய பெருந்தண்மைக் குணம்!

(தேவிகாவின் கூற்று அத்தனையும் நிஜம். 1970களில்  தனது சினிமாக்களைப் பற்றி சுய விமர்சனம் செய்த நடிகர் திலகம், நீல வானம் பற்றிக் குறிப்பிடுகையில்,

‘திருமதி தேவிகாவின் சிறந்த நடிப்பைக் கொண்ட படம்! ' என்று வெளிப்படையாகவே தேவிகாவுக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறார்.

சிவாஜி படப்பட்டியலில் நாயகிகள் குறித்த கணேசனின் பாராட்டு மிக மிக அபூர்வம்!)

‘சிவாஜி எப்பப் பார்த்தாலும், ‘சவுக்கியமா... நல்லா இருக்கியா? 'ன்னு ரெண்டே வார்த்தைகள் தான் கேட்பார். அதில் ஓர் ஆழமான அன்பு ஒளிந்திருக்கும். எனக்கு ஆதரவாக இருந்த அவரது அன்பில் நான்  ஒரு போதும் அதிகம் உரிமை எடுத்துக் கொண்டது கிடையாது.

என் மகள் கனகாவுக்கு அப்ப 4 வயது. சிவாஜி தச்சோளி அம்பு மலையாள சினிமாவில் நடிக்கும் போது கை உடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

அவரைப் பார்த்து நலம் விசாரிக்கப் போயிருந்தேன். கனகாவும் என்னுடன் அழைத்துச் சென்றேன். வலியைச் சற்றே மறந்து ஜாலியாக உரையாடியவர், கனகாவைப் பார்த்து ‘உன் பேர் என்னடா’...ன்னு கேட்டார்.

கனகா பதில் பேசாமல் நின்றாள். சிவாஜி மறுபடியும் செல்லமாக அதையே வினவினார். கனகா வாயை இறுக்க மூடிக்கிட்டா. பேசவே இல்லை.

சிவாஜி என்னைப் பார்த்தார்.

‘என்ன பிள்ளை வளர்த்துருக்கே. ' என்றார் இலேசான கோபத்துடன்.

‘என் பொண்ணு என்ன மாதிரியே வளர்ந்திருக்கா... ' என்று சொல்லி சமாளித்தேன். அது நிஜமே. நானும் ஆரம்பத்தில் அறிமுகம் இல்லாதவங்க கிட்டே பேசவே மாட்டேன். ' தேவிகா.

சிவாஜி கணேசனும்-தேவிகாவும் உச்ச நட்சத்திர ஜோடிகளாக ஜொலித்த 1964. தேவிகா பற்றி  நடிகர்திலகம் கூறியவை-

‘நல்ல பெண். திறமை உள்ளவர். மேலும் முன்னுக்கு வரக் கூடியவர். சொன்னதைச் சட்டென்று புரிந்து கொள்வதுடன் அப்படியே சிரமப்பட்டு நடிப்பில் கொண்டு வந்து விடுவார்.

ஷூட்டிங்குக்கு வருவதில் ரொம்ப கரெக்ட்.  சின்ன உதாரணம்- ‘ஆண்டவன் கட்டளை’ படப்பிடிப்பு.

‘அழகே வா அருகே வா

அலையே வா தலைவா வா... ’

பாடல் காட்சியில் தேவிகாவை அலை அடித்துக் கொண்டு போய் விட்டது. அந்த விபத்தில் தேவிகா பிழைத்ததே பகவான் புண்ணியம். உயிர் பயத்தால் தொடர்ந்து அவர் நடிக்க வரமாட்டார் என்று எண்ணினேன்.

மறு நாளே அவர் வழக்கம் போல் வேலைக்கு வந்து எங்களைத் திகைக்க வைத்தார்.

தொழிலில் எத்தனை ஈடுபாடோ அதே சமயம் விளையாட்டுப் பேச்சிலும் சமர்த்து. ஷூட்டிங் சமயத்தில் நிருபர்கள் யாராவது வந்தால் போச்சு. தேவிகாவுக்கு நேரம் போவதே தெரியாது. ’- வி.சி. கணேசன்.

சிவாஜியும் தேவிகாவும் ஜோடி சேர்ந்த படங்களில் சிகரம் ‘கர்ணன்’ அதைப் பற்றி எழுதாமல் தேவிகாவின் திரையுலக அனுபவங்களைப் பூர்த்தி செய்திட முடியாது.

தமிழில் அதிசயிக்கத் தக்க வகையில் நாற்பது லட்சம் பொருட்செலவில் ஈஸ்ட்மென் கலரில் உருவான முதல் பிரம்மாண்ட புராணச் சித்திரம்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல்கள் இடம் பெற்ற முதல் இதிகாசப் படம்!

காற்றுள்ளவரை காதுகளில் தேனைப் பாய்ச்சும் கந்தர்வ கானங்கள் கர்ணன் படப் பாடல்கள். பெங்களூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் கண்ணதாசனால் மூன்றே நாள்களில் முழுமையாக எழுதப்பட்டவை.

1962-1963ல் தயாராகி 1964 தைத் திருநாளில் வெளியானது கர்ணன். தேவிகா கர்ணனின் மனைவி சுபாங்கி.

 பணத்தைத் தண்ணீராக வாரி இறைத்து ஒவ்வொரு அரங்கமும் போடப்பட்டது. சுபாங்கியின் வளைகாப்பு மஹாலுக்கு மட்டும் லட்சக்கணக்கில் செலவு செய்து, விஜயா ஸ்டுடியோவில் மாபெரும் செட் அமைக்கப் பட்டது.

துரியோதனன் மனைவி பானுமதியாக நடித்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி. அவர் சுபாங்கியைத் தாய் வீட்டுக்கு வழி அனுப்பிப் பாடுவதாக வந்த, ‘மஞ்சள் பூசி மலர்கள் தூவி’ என்று தொடங்கும் வளைகாப்புப் பாடலில் தேவிகாவை வாழ்த்தி 45 நடனப் பெண்கள் ஆடினார்கள்.

ஒவ்வொரு காட்சியிலும் தேவிகாவின் அழகிய தோற்றமும், தலை அலங்காரமும், உடலெங்கும் ஜொலி ஜொலிக்கும் விலை மதிப்பற்ற ஆடை அணிகலன்களும் பிரமிக்க வைக்கும்.

அன்றைய தேதியில் வேறு எந்த பிரபல நடிகைக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு! தேவிகாவை மாத்திரம் தேடி வர மிக முக்கிய காரணம் எஸ். வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்.

 பி.எஸ். இராமையா எழுதிய ‘தேரோட்டி மகன்’ நாடகத்தை அப்போது சேவா ஸ்டேஜ் வெற்றிகரமாக நடத்தி வந்தது.

அதில் தேவிகா துரியோதனன் மனைவி பானுமதியாக, மேடையில்  இதிகாச வசனங்களைப் பேசிச் சிறந்த அனுபவம் பெற்றிருந்தார்.

தேரோட்டி மகன் கதையில் சுபாங்கியை, கர்ணனை அவன் தேரோட்டி மகன் என்பதற்காக வெறுத்து ஒதுக்கும் வில்லியாகக் காட்டினார்கள்.

போருக்குச் செல்லும் கர்ணனை சுபாங்கி வழியனுப்ப மறுப்பாள். பானுமதியாக நடிக்கும் தேவிகாவிடம் கர்ணன் வீரத்திலகம் இட்டுச் செல்லும் கட்டம் கைத்தட்டலைப் பெறும்.

பந்துலு வியாசர் எழுதிய மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு கர்ணன் படத்தை உருவாக்கினார்.

அதன் படி கர்ணனுக்கு விருஷசேனன் என்ற வாரிசு உண்டு. அவன் போரில் மடிவதாகக் காட்டப்பட்டது. அதனால் கர்ணன் படத்தில் சுபாங்கி கதாபாத்திரம் உன்னதமாக அமைந்தது. தேவிகாவின் ஸ்டார் இமேஜ் மேலும் உயர்ந்தது.

யூ ட்யூபில் பதிவேற்றப்பட்டு பார் முழுவதும் நிற மொழி பேதங்களைக் கடந்து அனிருத்தின் கொலவெறி பாடல் பரவி புயலைக் கிளப்பிய  2012.  மார்ச் மாதம்- 16 ஆம் தேதி  நவீன தொழில் நுட்பத்தில் கர்ணன் மீண்டும் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

எல்லாரும் ‘கொல வெறி’யில் லயித்திருக்க  யாரும் எதிர்பாராத வகையில், எளிதாக இருபத்தைந்து வாரங்களைக் கடந்தது  கர்ணன்.

அதே மார்ச் 30ல் மாபெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான தனுஷின் 3  உள்ளிட்டப் புதிய சினிமாக்களை விட, கோடிக்கணக்கில் வசூலித்து அரிய சாதனை படைத்தது கர்ணன்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

தேவிகா 8. லா பாயிண்ட்...

 


சிவந்த நிறத்துடன் ஒல்லியாகத் திரையில் மின்னத் தொடங்கியவர் தேவிகா. முதுமையில் பொலிவிழந்து கறுத்து,  காலம் கொடுத்த காயங்களால் கடைசியில் ‘சொர்ணாக்கா’ ரேஞ்சுக்கு மாறிப் போனார்!

தேவிகாவின் நேற்றைய நினைவுத் தூறல்கள் உங்களுக்காக-

‘அப்பா எலட்ரிக்கல் இன்ஜினியர். எங்க சித்தப்பா வாசுதேவ நாயுடு. பார் அட் லா படித்தவர். 1940ல் சென்னை நகர மேயராக பெரும் செல்வாக்குடன் வாழ்ந்தவர். அத்தகையப் பெருமையும் பாரம்பரியமும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவள் நான்.  

சினிமாவில் நடிக்கும் ஆசை எப்படி எனக்கு வரும்?

ஏழைகளுக்கு இலவச வைத்தியம் செய்யற டாக்டரா வரணும். அல்லது நியாயம் கிடைக்காத நலிவுற்ற ஜனங்களுக்காக வாதாடற, இலவச வக்கீலாகணும்ங்கிற சிந்தனை எனக்குள்ள வளர்ந்தது.

சின்ன வயசிலேயே நான் ரொம்ப முசுடு. புருவத்தைக் கூட எப்பவும் சுருக்கியே வைத்திருப்பேன். ஸ்கூல்ல யாரோடயும் சேர்ந்து பழகினது இல்ல. தனியாவே இருப்பேன். சிநேகிதிகளே கிடையாது.

நினைவு தெரிஞ்ச  நாள் முதலா அநியாயத்தைக் கண்டு பொறுக்க மாட்டேன்.

வைக்கோல் போர்ல கன்னுக்குட்டி செஞ்சு, அதை வெச்சு மாட்டை ஏமாத்திப் பால் கறக்கற மனுஷன் என்னை ரொம்ப பாதிச்சிருக்கான். இதென்ன அக்கிரமம்னு உள்ளுக்குள்ளயே குமுறியிருக்கேன்.

யார் கிட்டே பேசினாலும் லா பாயிண்ட் பேசுவேன்.

என்னோட லா பாயிண்ட் சுபாவத்தைப் பார்த்து எனக்கு டியூஷன் எடுக்கிற டீச்சரெல்லாம் அதிர்ந்து போயிருக்காங்க. எங்கிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தைப் பட்டிருக்காங்க.

ஒரு நாள் அப்பா எங்கிட்ட, ‘என்ன ராணி உன் சித்தப்பா போல அட்வகேட் ஆகப் போறியா’ ன்னு கூட கேட்டிருக்கார்.

டாக்டருக்கா...? வக்கீலுக்கா...? எதுக்குப் படிக்கலாம்னு முடிவு பண்றதுக்குள்ள குடும்பத்துல சொத்துப் பிரச்சனை வந்துடுச்சி. பங்காளிங்க தகராறுல அப்பா சம்பாதிச்சு வாங்கின நிலங்களை வித்து சாப்பிடற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

நான் நடிக்க ஆரம்பித்து இரண்டு மூன்று படங்கள் வரையில் சினிமா எனக்கு ஒரு புதிராகத்தான் இருந்தது. முதலாளி வெற்றி பெறாவிட்டால் பழையபடி பள்ளிக்கே திரும்பி விடுவதென்று முடிவு செய்தேன்.

கடைக்குப் போய்ப் பாடப் புத்தகங்களை வாங்கி வந்தேன். எனக்கு ட்யூஷன் சொல்லித் தர ஒரு மாஸ்டரையும் ஏற்பாடு செய்து தயாராக வைத்திருந்தேன்.

முதலாளி படத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு என்னை அடியோடு மாற்றியது. படிப்பாவது புத்தகங்களாவது...

எல்லாவற்றையும் கட்டி பரணில் ஏற்றி வைத்தேன். எனக்குப் பாடம் சொல்லித் தரக் காத்திருந்த ஆசிரியர் பெருந்தகைக்கும் பெரிய கும்பிடாகப் போட்டு வழி அனுப்பினேன்.

ஆனாலும் என் மனத்தின் ஒரு மூலையில் படித்துப் பட்டம் பெறவில்லையே என்கிற குறை நிரம்பி வழிந்தது.

படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நாள்களில் வீட்டில் தனியாக இருக்கையில் புத்தகங்களே எனக்குத் துணை. என்னுடையப் புத்தகப் பைத்தியம் பள்ளிக் கூடத்திலிருந்து தொடங்கிய ஒன்று.

புத்தரைப் பற்றியும் அக்பரைக் குறித்தும் வாசிக்கும் வேளையில் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்துக்கே சென்று மானசீகமாகக் கற்பனைகளில் மூழ்கி எழுவேன்.

அத்தகைய கற்பனா சக்தி சினிமா நடிகையான எனக்குக் கை கொடுக்கிறது.

எனக்குத் தரப்படும் வேஷங்களை முன் கூட்டியே இருதயத்தில் இருத்தி, இந்தக் கதாபாத்திரத்தைத் திரையில் இப்படிச் சித்தரிக்க வேண்டும், இன்ன விதத்தில் அலங்கரித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் எண்ணிச் சிறப்பாக நடிக்க உதவுகிறது.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தைத் தியேட்டரில் ஜனங்களோடு அமர்ந்து பார்த்தேன். என்னையும் அறியாமல் அநேக இடங்களில் அழுது தீர்த்தேன்.   

அப்பா இருக்கும் வரை என் சினிமா ஒண்ணு கூட பார்த்ததில்லை. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் என் நடிப்பை அப்பா பார்க்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டேன். அதனால் அப்பாவிடம்,

‘உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ போடட்டுமான்னு’ கேட்டேன்.

‘அப்பாவோ சாதாரணமா  அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல’ என்றார். விடாம நான் வற்புறுத்தினேன்.  ‘அடப்போம்மா... வர்ற சினிமாக்கள் எல்லாம் ஒண்ணு கல்யாணத்துல முடியும். இல்லேன்னா ஹீரோ- ஹீரோயின் யாராச்சும் செத்துப் போறதா முடிப்பாங்க’ என்று கூறி, என் ஆர்வத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். என் படம் ஒன்றைக் கூட அப்பா பார்க்கவேயில்லை என்கிற வருத்தம் எனக்குள் எப்போதும் உண்டு.

என் தாயார்! அவரைப் பற்றி நான் ஒன்றுமே சொல்ல மாட்டேன். வீட்டு வேலையே அவருக்குச் சரியாக இருக்கும். படம் பார்க்க நேரம் ஏது? நான் பிரபல நடிகையாகிக் கஷ்டப்பட்டு சம்பாதித்து நாங்கள் இழந்த செல்வத்தையெல்லாம் மீட்டேன்.

இத்தனைப் புகழ் பெற்ற நடிகையாக இருந்தும் பிளாட்டினம், தங்கம், வைரம், வைடூரியம், வெள்ளி எதிலும் நகை செய்து அழகாக அணிந்து கொள்ளத் தோன்றாது.

அவ்வளவு ஏன்? கண்ணைப் பறிக்கிற மாதிரி பகட்டாகக் கூட புடவை உடுத்த விரும்பியதில்லை. அப்படி நான் பற்றற்றுப் போனதற்குக் காரணம் என் தாயார்.

நான் சத்தியத்துக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவள். 1965ல் எனக்கும்  அம்மாவுக்கும் சண்டை வந்து விட்டது. என் நகைகளையெல்லாம் கழற்றி வீசி விட்டு, இனி நான் அவற்றை மறுபடியும் அணியவே மாட்டேன் என்று சாமி மீது சத்தியம் செய்தேன்.

அதிலிருந்து இன்று வரை ஒரு பொட்டு நகை கூட நான் போட்டுக் கொள்வது கிடையாது.

3-nenjam-marappathillai.jpg

தாலியைக் கூடக் கழுத்தில் அணியாமல் கையில் கட்டியிருந்தேன். என்னைப் பார்த்தவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்.

கோயிலுக்குப் போய் பூஜைகள் செய்து விட்டு தாலியை மட்டும் இப்போது அணிந்து இருக்கிறேன்.

கனகா சின்ன வயசுல கொஞ்சம் பலவீனமா இருந்தா. அதுக்கு முழுக் காரணமும் நானே.

ஒரு பெண் தாய்மை அடைந்ததும் ஆரோக்யமான உணவு வகைகளைப் பல வீடுகளில் பட்டியல் போட்டு கொடுத்திருவாங்க. என் விஷயமே தனி.

கர்ப்ப காலத்துலயும் பிஸியா நடிக்க வேண்டி வந்தது. ஒழுங்கா சாப்பிட நேரம் கிடையாது. ஒரு கோழித் துண்டு, கொஞ்சம் காபின்னு வாய்க்குள்ளத்  தள்ளிட்டு ஷூட்டிங் கிளம்பிடுவேன்.

வயிறு காட்டிக் கொடுத்து உடம்பு உப்பி, படங்களோட கண்டியூனிடி பாதிக்கப்படக் கூடாதுன்னு டயட்ல வேற இருந்தேன். அது கர்ப்பத்துலயிருந்த சிசுவை பாதிச்சு குழந்தை வீக்கா பொறந்துடுச்சு.

என் கடந்த கால நினைவுகள் தரும் பாடம், பணத்தையே யாரும் நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது. செல்வம் போய் விட்டால் பிறகு சீமான்களால் வாழவே முடியாது.

என்னைப் போன்றக் கலைஞர்கள் கற்றத் தொழிலை மட்டும் நம்பி இருக்க வேண்டும். அதுவே வாழ்க்கையில் என்றும் கை கொடுக்கும். என் வாழ்க்கை முழுவதும் முயற்சிகளாகவே இருந்திருக்கிறது. அதுவே எனக்குப் பலன் தந்தது.’ -தேவிகா.
-----------------
வெகுளிப்பெண் படத்துக்குப் பின்னர் தேவிகா சொந்தப்படம் எதுவும் தயாரிக்கவுமில்லை. அவரது கணவர் தேவதாஸ் இயக்கவும் இல்லை. இருவரும் பிரிந்து விட்டனர்.   

ஏனைய கலையரசிகளின் மண வாழ்வு போலவே தேவிகாவின் கல்யாண வசந்தமும் சீக்கிரத்திலேயே முறிந்தது. தேவதாஸ் உடனான தாம்பத்ய வாழ்வின் ஒரே பலன் தேவிகா பெற்றெடுத்த கனகா.

கனகாவுக்கு அடித்த அதிர்ஷ்டமும் தொடர் வெற்றிகளும்  வேறு ஹீரோயின்களால் கற்பனை செய்து பார்க்க முடியாதது. 1989 கோடையில் கங்கை அமரனின் கரகாட்டக்காரன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

KANAGA_PIC.jpg

வருடக் கணக்கில் ஓடி கரகாட்டக்காரன் படைத்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அம்மா என்று பேச ஆரம்பித்தத் தமிழகத்தின் மழலைப் பட்டாளம் அடுத்து உச்சரித்த சொற்கள் ‘மாங்குயிலே பூங்குயிலே... ’

உலகத் தமிழர்களின் நிரந்தரப் பொழுது போக்குப் பெட்டகமாகக்  கரகாட்டக்காரனுக்குத் தனி இடம் என்றும் உண்டு.

மிகக் குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் கனகாவின் இருப்பு கல்லாபெட்டிகளை நிரப்பியது.

கமல்  தவிர  நடிகர் திலகத்துடன் ‘முதல் குரல்’ உள்ளிட்ட அநேக சினிமாக்களில், சூப்பர் ஸ்டார் ரஜினி, மம்முட்டி, மோகன்லால் முதலிய அநேக நட்சத்திரங்களும் கனகாவுடன் ஜோடி சேர்ந்தார்கள்.

ஏவி.எம்., சிவாஜி பிலிம்ஸ், முக்தா பிலிம்ஸ், லட்சுமி ப்ரொடக்ஷன்ஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் கனகா நாயகியாக நடிக்கப் படம் தயாரித்தன.

டீரிம் கேர்ள் ஆகி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் கனகா பற்றிய பரபரப்பு சற்றே தணிந்தது. அத்தகைய சூழலில் பிலிமாலயா ஜனவரி 93 இதழில் கனகாவின் நேர் காணல் வெளியானது.

‘இப்போதெல்லாம் உங்கள் படங்கள் நிறைய ரிலிசாவதில்லையே... ஏன்? ’ஓர் இடைவெளி விழுந்த மாதிரி? ’

‘நான் எப்பொழுதும் போலவே பிஸியாகவே இருக்கிறேன். ஆனால் நடித்து முடித்த படங்கள் தொடர்ச்சியாக வருவதில்லை. இப்பக் கூட நான் நடிச்ச  சாமுண்டி நல்லாத்தானே போகுது. ’

‘உங்களுக்குப் பின் வந்த நடிகையெரல்லாம் கையில் நிறைய படங்களுடன் இருக்கும் போது, உங்களிடம் மட்டும் அவ்வளவு படங்கள் இல்லையே ஏன்? ’

எத்தனைப் படம் வருதுங்கிறது எனக்கு முக்கியமில்ல. என்ன மாதிரி நடிச்சிருக்கோம், எப்படி படம் ஹிட்டாகுதுங்கறது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

வருஷத்துக்கு ஆறு படம் நடிச்சாப் போதும்னு நினைக்கிறேன். ஒரு படத்துக்குக் கால்ஷீட் கொடுத்துட்டா எந்தக் காலத்திலிருந்தும் அதிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு இங்கே எட்டு நாள் அங்கே ரெண்டு நாள்னு பிய்ச்சிக் கொடுக்கிற பழக்கம் என்னிடம் கிடையாது.

‘நீங்கள் நடித்ததில் பெரும்பாலானவை வெற்றிப்படங்கள். ஆனால் ஏன் உங்களால் நம்பர் ஒன் அந்தஸ்துக்குச் செல்ல முடியவில்லை.? ’

‘நான் நடிச்சதில் கிட்டத்தட்ட 80% ஹிட்டானவை. கரகாட்டக்காரன் மட்டுமல்ல. மலையாளத்தில் நான் அறிமுகமான ‘காட் ஃபாதர்’ சினிமாவும் ஒரு வருஷம் ஓடியது. இந்த  மாதிரி சூப்பர் டூப்பர் சக்ஸஸ் வேற யாருக்கும் உண்டா? குறுகிய காலத்துல இவ்வளவு ஹிட்ஸ் கொடுத்த ஆர்ட்டிஸ்ட் நானாத்தான் இருக்க முடியும்.

Kanaka3007_01.jpg

நம்பர் ஒன் என்றால் என்ன?  அதன் இலக்கணம் என்னன்னு எனக்குப் புரியல. அதிகப்படங்கள்ள நடிக்கிறதா?  சூப்பர் ஹிட்ஸ் மட்டும் அதிகமா கொடுக்கிறதா? ஆடியன்ஸ் மனசுல நிக்கிற மாதிரி நல்ல ரோல்ல மாத்திரம் நடிக்கிறதா? எனக்கு விளங்கல.

இந்த நம்பர் ஒன் வாதத்தில் எனக்கு நம்பிக்கையுமில்லை. ஆர்வமுமில்லை. ’

‘நீங்க எதிர்பார்த்த அளவுக்கு வளரவில்லை. அதற்கு உங்கள் அம்மா தேவிகாவின் கெடுபிடிகளும் ஒரு காரணம் என்று சொல்கிறார்களே...?

‘எந்தத் தாயும் தன் மகள் முன்னுக்கு வரக் கூடாதுன்னு நினைக்க மாட்டாங்க. எனக்கு என் அம்மாவை விட்டா வெல்விஷர் யாருங்க இருக்காங்க?

என் அம்மா எங்கிட்ட காட்டுற அக்கறையையும் அன்பையும் மத்தவங்க எப்படித்  தவறா நினைக்கலாம்? ’-கனகா.
---------------
ஹீரோ - காமெடியன் என்று கலைஞர்களுக்கிடையே  அந்தஸ்த்தில் பேதம் காணத் தெரியாதவர் தேவிகா. தனது நட்சத்திர மகளை விவேக் ஜோடியாக ராம. நாராயணனின் இயக்கத்தில் நடிக்க வைத்தார்.

அதற்குப் பின்னர் கனகாவை முன்னணி நாயகர்களுடன் காண முடியாமலே போனது.

ஓர் உதாரணம்.

இயக்குநர் ஸ்ரீதரின் நெருங்கிய உறவினர் மற்றும்  உதவியாளர் டைரக்டர் சி.வி. ராஜேந்திரன். தேவிகாவை நன்கு அறிந்தவர்.

மோகன்லால்-கனகா ஜோடியாக நடித்த மலையாள சினிமா ‘காலனி’ கேரளத்தில் வெற்றிகரமாக ஓடியது.

‘சங்கிலி’ மூலம் பிரபுவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சி.வி. ராஜேந்திரன். அவரது தயாரிப்பில் பிரபு நாயகனாக நடிக்க ‘காலனி’- தமிழில் ‘வியட்னாம் காலனி’யாக ரிமேக் ஆனது.

சிவாஜி - தேவிகா ஜோடி போல அவர்களது வாரிசுகளான பிரபு- கனகா இணைந்து நடித்த கும்பக்கரை தங்கய்யா, தாலாட்டு கேக்குதம்மா, பெரிய குடும்பம் ஆகிய மூன்று படங்களும் 100 நாள்களைக் கடந்து ஓடின. அப்படியிருந்தும் வியட்னாம் காலனி தமிழ்ப்படத்தில் நாயகியாக நடித்தவர் வினிதா.

இரண்டாம் வரிசை நடிகர்களுடன் இணைந்து கனகா நடித்த, சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றிகரமாக ஓடின. இருந்தும் மீண்டும் அவரை கனவுக்கன்னியாக நோக்க டவுஸர்கள் தயாரில்லை என்றானது.

படத்துக்குப் படம் மாறுபட்ட வேடங்களை ஏற்று  நடிக்காமல், பாவாடை தாவணியுடன் கிராமத்துப் பெண்ணாகவே கனகா அதிகம் நடித்தது, அவரது மார்க்கெட் விழுந்ததற்கு மிக முக்கிய காரணம் என்றனர் சினிமா நிருபர்கள்.

கனகாவுக்காகப் பட அதிபர்களிடம் தேவிகா விதித்ததாகச் சொல்லப்பட்ட சில நிபந்தனைகள்-

1. கதை சரியில்லாம எவ்வளவோ படங்கள் வருது. கனகா செய்யாத கேரக்டரா வரணும்.
2. அடுத்தவங்க டேட்ஸ்ல கிளாஷ் ஆகக்கூடாது.
3. இந்த மாசம் பூஜை இன்னும் பதினஞ்சு நாள்ல படத்தை ஆரம்பிச்சுடுவோம்னு சொல்லிட்டு வர்ற புது கம்பெனிகளை நான் கிட்டயே சேர்க்கறதில்ல.
4. கண்ட கண்ட ரோல்ல நடிச்சு கனகா தன் பெயரை கெடுத்துக்கக் கூடாது.

கனகாவின் கால்ஷீட் தொடங்கி சகல விஷயங்களிலும், தேவிகாவின் தலையீடு  நிலவியதாகப் பட அதிபர்களால் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.

‘என் பொண்ணு மேலே உள்ள அக்கறையில, ஏற்கனவே சினிமா ஃபீல்டுல ஆர்ட்டிஸ்டா இருந்த அனுபவத்தில,  நான் ஏனோ தானோன்னு இருக்காம கண்ணும் கருத்துமா கூடவே இருந்து,  கண்டிப்பா கனகாவை வழி நடத்தறதை கெடுபிடிகள்னு சொன்னா நான் என்ன சொல்றது? ’- தேவிகா.

கமல்- ரஜினி  ஜோடியாக நடிக்க  குஷ்பூ-கவுதமி இருவரும், வரிந்து கட்டிக் கொண்டு போட்டி போட்டனர். அதனால் கனகா பல நல்ல வாய்ப்புகளைப் பறி கொடுத்ததாக தேவிகா தனக்கு நெருக்கமானவர்களிடம் குமுறினார்.

கனகா இழந்த மார்க்கெட்டை திரும்பப் பெற முடியவில்லை. ஒரே செல்ல மகளின் எதிர்காலம் குறித்த கவலை தேவிகாவைத் தின்று தீர்த்தது.

தேவிகா கத்தோலிக்க கிருத்தவ மதத்தைச் சார்ந்தவர் என்று சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ் குறிப்பிட்டுள்ளார். மகளுக்காகக் கடைசியில் மயிலாப்பூர் கோலவிழி அம்மனைச் சரண் அடைந்தார்.

இயற்கை எய்துவது என்பது எல்லாருக்குமான பொதுவான விதி. தள்ளாமை வருவதற்கு முன்பாகவே தேவிகா 2002 மே இரண்டாம் தேதி ஆண்டவரது நிழலில் இளைப்பாறினார்.

அவரது அகால மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்னொரு தேவிகா இனி இல்லை என்று உளமாற வருந்தினர் பொற்காலத் தமிழ் சினிமா ரசிகர்கள்.

‘கள்ள மலர்ச் சிரிப்பிலே’ என்கிறப்  பாடலில் நடித்தவரின் உள்ளத்தில் எள் அளவும் கள்ளம் இல்லை என்பதைக்  கடவுள் மாத்திரமே அறிவார்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.