Jump to content

மலைக்க வைக்கும் மரியானா பள்ளம்... ஆழ்கடல் பயணத்தின் ஆச்சர்ய தகவல்கள்


Recommended Posts

மலைக்க வைக்கும் மரியானா பள்ளம்... ஆழ்கடல் பயணத்தின் ஆச்சர்ய தகவல்கள் ( பகுதி -1 )

AK_1.jpg

ந்த உலகில் மனிதனின் காலடி படாத இடம் ஆழ்கடல்தான். ஏன் மனிதனின் காலடி பட வாய்ப்பே இல்லாத இடமும், ஆழ்கடல்தான். அது ஏன்? அறிந்து கொள்ள ஆழ்கடலுக்குள் பயணிப்போம் வாருங்கள்...

கண்களுக்கு முழுமையாக தென்படாத, விண்வெளியைப் போன்று எண்ணிலடங்கா ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றது, ஆழ்கடல்! கடலின் அடியிலும் வெளியிலிருப்பது போல ஏராளமான எரிமலைகள், பள்ளத்தாக்குகள், மாபெரும் மலைத்தொடர்கள், சிறு குன்றுகள் எல்லாம் இருக்கின்றன. கணக்கிலடங்காத எண்ணிக்கையில், கடல் வாழ் விலங்குகள் உயிர் வாழ்கின்றன. ஆனால், அவற்றைப்பற்றி எல்லாம் நாம் முழுமையாக அறிந்து கொண்டோமா என்றால் 'இல்லை' என்பதே பதில்.

பல்வேறு கிரகங்களுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி ஆராய்ச்சி செய்து வரும் நாம், நமது பூமியிலிருக்கும் ஆழ்கடலை இன்னும் முழுமையாக ஆராய்ச்சி செய்து முடிக்கவில்லை. ஏனெனில், விண்வெளிப் பயணத்தை விட மிகவும் கடினமானது ஆழ்கடல் பயணம்தான்.

இதற்கு முக்கியக் காரணம், கடலின் அழுத்தம். நாம் கீழே செல்லச் செல்ல நீரின் எடை அதிகரித்து, அந்த எடை எல்லாப் பக்கங்களிலிருந்தும் நம்மை அழுத்தும். பத்து மீட்டர் ஆழத்தில் நீரின் அழுத்தம் இரண்டு மடங்காகி இருக்கும். அவ்வாறு ஒவ்வொரு பத்து மீட்டர் ஆழத்திற்கும் கடலின் அழுத்தமும் இரு மடங்காக, அதிகரித்துக்கொண்டே செல்லும். தவிர, இன்னுமொரு பிரச்னை உண்டு. சூரிய ஒளியானது சுமார் இருநூறு மீட்டர் ஆழம் வரையே ஊடுருவும் என்றாலும், ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஓரளவு வெளிச்சம் தெரியும். அதன் பின்னர் கும்மிருட்டுதான்.    

நம்மால் சுவாசக் கருவி அணிந்து கொண்டு ஆயிரம் அடி வரை கூட இறங்க முடியும்.  ஆனால் நீண்ட நேரம் கடலின் ஆழத்தில் இருந்தால், கொப்புளங்கள், மூட்டுவலி போன்ற சில உடல் உபாதைகள் வரும் அபாயம் உண்டு. நீர்மூழ்கிக் கப்பல்கள் கூட ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழே பயணிக்காது. ஏனெனில், கடல் நீரின் அழுத்தத்தால் நீர்மூழ்கியும் வெடித்துச் சிதறி விட வாய்ப்பிருக்கிறது. இதனாலேயே ஆழ்கடல் குறித்த கேள்விகளுக்கு, வெகுநாட்களுக்கு விடை கிடைக்கவில்லை.

மரியானா அகழி

இந்த உலகிலேயே மிக ஆழமானப் பகுதி, மரியானா அகழியில் அமைந்துள்ள 'சேலஞ்சர் மடு' என்ற பள்ளம் தான். பசிபிக் கடலில் உள்ள ஆரம் போன்ற வளைவான மரியானா தீவுகளுக்குக் கிழக்கே அமைந்துள்ளது, மரியானா அகழி. வளர்பிறை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளதால், 'மரியானா நீள்வரிப்பள்ளம்' என்று அழைக்கப்படுகின்றது.

இந்த அகழியானது, பசிபிக் நிலத்தகடும், மரியானா நிலத்தகடும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது 2550 கிலோ மீட்டர் நீளமும், 69 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இதன் ஆழம் 35,840 அடி  ஆகும். சேலஞ்சர் ஆழப்படுகுழி 36200 அடி  (அதாவது 11034 மீட்டர்) ஆழமுடையது.

உங்கள் ஒற்றை விரல் நகத்தின் மீது ஆயிரம் கிலோ எடையை வைத்தால் எப்படி இருக்கும்? (படிக்கும் போதே வலிக்கிறது அல்லவா?) இப்பகுதியின் நீரினால் ஏற்படும் அழுத்தம் அந்த அளவுக்கு இருக்கும். (அதாவது 1086 பார்கள் அழுத்தம்) சேலஞ்சர் மடுவில் உள்ள நீரின் வெப்பநிலை, அதிகபட்சம் நான்கு டிகிரி செல்சியஸ் வரை. உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை இதனுள்ளே வைத்தால், அதற்கு பிறகும் ஏழாயிரம் அடி மிச்சமிருக்கும் என்றால், இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளலாம்.

AK_2.jpg

மவுன கிய எரிமலை

இந்த சமயத்தில் ஒரு பொது அறிவுத்தகவல்- உலகிலேயே மிக உயரமான இடம் எவரெஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். பொதுவாக உயர அளவீடுகள், கடல் மட்டத்திலிருந்து அளவிடப்படுகின்றன. ஹவாய் தீவிலிருக்கும் 'மவுன கிய' எனும் எரிமலை,  கடல் மட்டத்திலிருந்து சுமார் 13802 அடி உயரம் உடையது. இந்த எரிமலை கடலினுள் அமிழ்ந்துள்ளது. அங்கிருந்து கணக்கிட்டால், இதன் உயரமானது 33000 அடியாகும். எவரெஸ்ட்டின் உயரம் 29029 அடிதான். எனவே உண்மையில், உலகிலேயே உயரமான இடம் மவுன கிய எரிமலைதான். கடல் மட்டத்திலிருந்து மட்டுமே கணக்கீடுகள் எடுக்கப்படுவதால் மவுன கிய எரிமலை அந்தப் பெருமையை எவரெஸ்ட்டிடம் இழந்து விட்டது.

மவுன கிய எரிமலையில் ஏராளமான தொலைநோக்கிகள் நிறுவப்பட்டுள்ளன. நகரங்களின் வெளிச்சம், ஓசை போன்ற மாசுக்கள் இல்லாமல் இந்த எரிமலையின் உச்சியில் நிலவும் சுற்றுப்புறமானது, வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது.

தற்போது இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒருங்கிணைந்து, சுமார் 140 கோடி அமெரிக்க டாலர் செலவில், உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை இந்த எரிமலையில் நிறுவி வருகின்றன. இதுதான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும். இதன் மூலம் 500 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஒருவரின் சட்டையிலிருக்கும் பட்டனைக் கூட மிகத்துல்லியமாக ஆராய முடியும். இந்த மிகப்பிரம்மாண்ட தொலைநோக்கியின் கட்டுமானம் 2022-ம் ஆண்டுதான் முடியும்.

சிம்போரஸோ எரிமலை

சரி. நாம் மீண்டும் மரியானா அகழிக்கு வருவோம்.

சேலஞ்சர் மடுவின் தரைப்பகுதி, பூமியின் மிக ஆழத்தில் இருந்தாலும், அது பூமியின் மையத்திற்கு அருகில் இல்லை. ஏனென்றால், நமது பூமியின் ஒழுங்கற்ற வடிவமே இதற்கு காரணம். பூமி ஒரு முழுமையான வட்டமானது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். (பண்டை காலத்தில் உலகம் தட்டையானது என நினைத்துக் கொண்டிருந்தது தனிக்கதை!). ஆனால் பூமியானது ஒரு ஒழுங்கற்ற (சிறிது பேரிக்காய் போன்ற) வடிவத்தில் இருக்கிறது. தன்னைத்தானே சுற்றி வரும் மைய ஈர்ப்பு விசையின் காரணமாக பூமத்திய ரேகைப் பகுதியில் சற்று உப்பிக் காணப்படுகிறது. பூமியின் துருவங்களின் விட்டமானது, பூமி மையத்திற்கு நெருக்கமாக உள்ளது.  இதனால் பூமியின் மையத்திற்கு மிக அருகில் உள்ளது, ஆர்க்டிக் கடலின் தரைப்பகுதியே ஆகும்.

இப்போது மீண்டுமொரு பொது அறிவுத்தகவல்- உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் தானே பூமியின் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் இடமாக இருக்கக் கூடும்? காதைத் தீட்டிக் கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு இன்னொரு ரகசியம் சொல்கிறேன். ஈக்குவடாரில் உள்ள சிம்போரஸோ எனும் எரிமலைதான், பூமியின் மையத்திலிருந்து அதிதொலைவு (20548 அடிகள்) உள்ள இடம். காரணம் இப்போது புரிந்திருக்குமே? எவரெஸ்ட்டை (29029 அடிகள்) விட உயரம் குறைவாக இருந்தாலும், இந்த எரிமலையின் அமைவிடமான ஈக்குவடாரில் பூமி உப்பலாகக் காணப்படுவதால் இது சாத்தியமானது.

AK_3.jpg

சரி! இந்த மரியானா பள்ளம் எப்படி ஏற்பட்டது? சுருக்கமாக IBM என்றழைக்கப்படுகின்ற 'ஐஸு-போனின்-மரியானா (Izu-Bonin-Mariana)'  நிலத்தகடுகளினால் உண்டானது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு, பசிபிக் நிலத்தகடும் சிறிய மரியானா நிலத்தகடும் ஒன்றையொன்று மோதிக் கொண்டபோது, பசிபிக் நிலத்தகடானது மரியானாவின் அடியில் சென்றது. இதனால் இந்த மாபெரும் அகழி உருவானது. இது சுமாராக 180 மில்லியன் வருடங்கள் பழமையானது.

மரியானா அகழியின் தரையை தொட்ட சாதனையாளர்கள்

இங்கிலாந்துக் கடற்படையைச் சேர்ந்த சேலஞ்சர் என்ற கப்பல்தான் முதன்முதலில், இந்த இடத்தின் ஆழத்தை 26850 அடி என்று கண்டறிந்து, உலகுக்கு அறிவித்தது. 1875 ம் ஆண்டு ஒலி அதிர்வு முறையில் இதைக் கணித்துச் சொன்னார்கள். இந்தக் கப்பலை பெருமைப்படுத்தும் விதமாகவே, இந்த ஆழ்குழிக்கு 'சேலஞ்சர் படுகுழி' எனப் பெயரிடப்பட்டது. 1995-ம் ஆண்டு, கைகோ என்ற ஆள் இல்லாத நீர்மூழ்கியும் அதன் பின்னர் 2009 ம் ஆண்டு நெரயஸ் என்ற மற்றுமொரு ஆள் இல்லாத நீர்மூழ்கியும் இந்த ஆழத்தை தொட்டுவிட்டு வெற்றியுடன் திரும்பின.

உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டைக் கூட ஆயிரக்கணக்கானவர்கள் தொட்டு விட்டு திரும்பியிருக்கிறார்கள். ஆனால், இன்றைய நாள் வரை மரியானா அகழியின் தரை வரை சென்று திரும்பியவர்கள் மூன்றே பேர்தான். அதில் ஒருவர் உலகறிந்த, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான ஜேம்ஸ் கேமரோன். மற்ற இருவர், அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த டான் வால்ஷ் மற்றும் ஜேக்குஸ் பிக்கார்டு ஆவர்.

'அதெப்படி? அதிக ஆழம் செல்லும்போது நீர்மூழ்கி கூட வெடித்துச் சிதற வாய்ப்பிருக்கிறது என்றீர்களே... 'என்பவர்களுக்கு, அதிக ஆழத்தில் நீரின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு கருவியை வடிவமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது கைகொடுத்தவர்தான் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜீன் பெலிக்ஸ் பிக்கார்டு. இவர் மேலே சொல்லப்பட்ட இருவரில் ஒருவரான ஜேக்குஸ் பிக்கார்டின் தந்தையாவார்.

இவர் பலூனில் பறந்து பல சாதனைகளை படைத்தவர். அவ்வாறு பலூனில் பறப்பதற்காக வடிவமைத்திருந்த கருவியில், நீர்க்குமிழியின் தத்துவத்தைப் பயன்படுத்தி, சிறிய மாற்றங்களைச் செய்து கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு கருவியை வடிவமைத்தார். எடை குறைவாகக் காணும் இயல்புடைய திரவத்தை, ஒரு தொட்டியில் கேப்ஸ்யூல் வடிவிலான ஒரு இரும்பு உருளையின் மேல் அடைத்து, ஆழ்கடலுக்குள் செல்ல ஏதுவாக இரும்பு பட்டைகளையும், மேலே எழும்பி வருவதற்காக மின் மோட்டாரையும் இணைத்தார். ஆளில்லாமல் அனுப்பி பல முறை சோதனை செய்து வெற்றி கண்டார்.

இந்தக்கருவி, அதற்கு பிறகு பலரால் இன்னும் மேம்படுத்தப்பட்டது. முதன்முறையாக ஒரு மனிதனை ஏற்றிக்கொண்டு 13701 அடி ஆழம் வரைச் சென்று, சோதனையில் வெற்றியும் காணப்பட்டது. ஆனால், அதிக ஆழம் செல்வதற்கு இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு 1960-ம் ஆண்டு, தங்களது எட்டாவது முயற்சியில், மரியானா படுகுழிக்கு உள்ளே புகுந்தனர் ஜீன் பெலிக்ஸ் பிக்கார்டின் மகனான ஜேக்குஸ் பிக்கார்டும், அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த கேப்டன் டான் வால்ஷ் என்பவரும்.

அவர்கள் சென்ற நீர்முழ்கியின் பெயர் ட்ரெயிஸ்ட். அதில் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தன. வினாடிக்கு 0.914 நாட் என்ற வேகத்தில் அவர்கள் பயணித்தனர். வான்டன் எனும் அமெரிக்கப் போர்க்கப்பல், அவர்கள் பயணித்த பேத்திஸ்க்கோப் ட்ரெயிஸ்டியுடன் தொடர்பிலிருந்தது. அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவியின் மூலம் ஏழு வினாடிகள் கழித்துதான் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

AK_4.jpg

32500 அடிகள் இறங்கியிருந்தபோது, வெளிப்புறத்தில் ஏதோ சத்தம் கேட்டது. அதே நேரம் அவர்கள் இருந்த அறை குலுங்கியது. "நாம் தரையைத் தொட்டு விட்டோமோ?" என்றார் வால்ஷ்.  

"இல்லையே, ஆழம் காட்டும் கருவியில் அவ்வாறு காட்டப்படவில்லையே" என்றார் பிக்கார்ட்.

அவர்களின் கலம் மெதுவாக கீழிறங்கிக் கொண்டிருந்தது. கீழே தரை தென்படவில்லை.

ஒருவேளை ஏதேனும் பெரிய கடல்மிருகத்தை மோதி விட்டோமோ? இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அவர்களின் எதிரிலிருந்த கருவிகள் எல்லாம் எந்தவித தவறையும் காட்டவில்லை. உடனே பிராண வாயு உள் செலுத்தும் கருவி உள்பட, ஒலி எழுப்பக்கூடிய கருவிகள் அனைத்தையும் சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர். அந்த மயான அமைதியிலும், வெளிப்புறத்திலிருந்து எதுவோ உடைவது போன்ற ‘க்ரீச், க்ரீச்’ எனும் சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில், உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்து கீழே செல்வது, இல்லையெனில் திரும்ப சென்று விடுவது என்று இரண்டே வாய்ப்புகள் அவர்களிடத்திலிருந்தன. அவர்கள் தேர்ந்தெடுத்தது முதலாவது வாய்ப்பை. தொடர்ந்து பயணித்து அவர்கள் மரியானா அகழியின் ஆழத்தை (35,797 அடி) அடைந்தனர். கிட்டத்தட்ட ஐந்து மணி நேர பயணத்தில் ஆழத்தைத் தொட்டு விட்டனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான சாதனை செய்யப்பட்டு விட்டது.  

ஆனால் அவர்கள் உணர்ந்த அந்த சத்தம் மட்டும் என்னவென்று தெரியவில்லை. வெளியே பார்க்க உதவும் துளை வழியே எட்டிப் பார்த்தார் வால்ஷ். அவர்களுக்கும் வெளிப்புற நீரின் அழுத்தத்திற்கும் இடையே இரு கண்ணாடிகள் மட்டுமே உண்டு.

"அந்த சத்தம் எங்கிருந்து வந்தது தெரியுமா... கண்டுபிடித்து விட்டேன்." என்றார் புன்முறுவலுடன்.

 

வெளியே பார்க்க உதவும் கண்ணாடிகளில், வெளிப்புறக் கண்ணாடி விரிசல் விட்டிருந்திருக்கிறது. அந்த விரிசலின் ஒலியையே அவர்கள் கேட்டிருந்திருக்கிறார்கள். அந்த விரிசல் மட்டும் பெரிதாகி உடைந்து, உள்ளிருக்கும் கண்ணாடியும் உடைந்திருந்தால் இருவரும் உயிருடன் தப்பித்திருக்க முடியாது. சில சரித்திரச் சாதனைகள் படைக்கப்படும்போது, சோதனைகளும் தாமாக விலகி விடுகின்றன போலும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

மலைக்க வைக்கும் மரியானா பள்ளம்... ஆழ்கடல் பயணத்தின் ஆச்சர்ய தகவல்கள் ( பகுதி -2 )

JC_6.jpg

ந்த ஆழத்தில் பிராண வாயு இல்லாமலும், அதிகபட்ச அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டும் உயிர்கள் வாழ்வது கடினம் என்றும் உயிரியலாளர்கள் எண்ணினார்கள். அவர்களை ஆச்சர்யப்படுத்தும் விதமாக அந்த ஆழத்திலும் ஜெல்லி மீன்களும், சிறிய தட்டை வடிவ மீன்களும் நீந்திக் கொண்டு இருந்ததை இருவரும் கண்டார்கள். சுமார் இருபது நிமிடங்கள் மட்டுமே அவர்கள் அங்கு செலவிட்டார்கள். பின்னர் வெற்றிகரமாக மேலே இருந்த கப்பலை அடைந்தனர்.

இவர்களுக்குப் பிறகு, சுமார் ஐம்பது ஆண்டுகள் வரை மரியானா ஆழ்கடலில் இறங்கி ஆராய எவரும் துணியவில்லை. ஆனால் 2005 முதலே அதற்காகத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்து வந்தார் ஜேம்ஸ் கேமரூன். பலமுறை ஆழ்கடலுக்குள் மூழ்கி, பயிற்சி பெற்று வந்தார்.

ஆழ்கடலுக்கும் அவருக்கும் உள்ள பிணைப்பு வேறு எவருக்கும் இல்லாதது என்று சொல்லலாம். ஏனெனில், 1989-லேயே அபைஸ் எனும் ஆழ்கடல் பயணம் குறித்த படத்தை அவர் எடுத்திருந்தார். இதுவரை அந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் உடனே தேடிப் பார்த்து விடுங்கள். ஆழ்கடலில் விசித்திர உலகம் ஒன்று இயங்குவதாகப் படத்தை அவர் முடித்திருந்தார்.

அப்போது முதல் 80 முறை (பின்னர் டைட்டானிக்குக்காகவும்) ஆழ்கடல் பயணம் மேற்கொண்டார்.

JC_5.jpg

2012-ம் ஆண்டு, ஜேம்ஸ் கேமரூன் 24 அடி நீளமும் 12 டன் எடையும் கொண்ட, 'ஆழ்கடல் சேலஞ்சர்' எனும் நீர்மூழ்கியில் தனியொருவனாக பயணித்தார். இந்த நீர்மூழ்கியினை ரோன் ஆலம் என்பவரின் உதவியோடு அவரே வடிவமைத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட இந்தக்கலம், அறிவியல் சோதனைக்குத் தேவையான உபகரணங்களுடன் 3டி கேமராவும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சோதனை செய்வதற்காக மண்ணை அள்ளும் மின்கைகளும் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றை உள்ளிருந்தபடியே அவரால் இயக்க முடியும். நீர்முழ்கியின் உள்ளே அவர் அமர்ந்து செயல்படும் இடம் வெறும் மூன்றரை அடி அகலம்  உடையதாகவே  இருந்தது. வெளிப்புறம் இரும்பால் ஆன 64 மில்லி மீட்டர் அளவுக்கான இடம் மட்டுமே இருந்தது.

இந்த நீர்மூழ்கியை செங்குத்தாக மட்டுமே பயணிக்கும்படி வடிவமைத்திருந்தனர். ராக்கெட்டுகளில் உபயோகிக்கக்கூடிய thrusters மூலம், நெக்கித் தள்ளுதல் முறையில் தரைத்தளத்தில் பயணிக்க இயலும். இதனுடன் நிலைப்படுத்துவதற்காக 500 கிலோ எடை இணைக்கப்பட்டிருந்தது. அது விடுவிக்கப்படும்போது கலம் மேலே எழும்பும். ஒருவேளை அது வேலை செய்யத் தவறினால் மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

JC_2a.jpg

கேமரூன் ஏற்கனவே 27000 அடி வரை இறங்கியிருந்தார். மேலும், பல சோதனை பயணங்களுக்குப் பிறகு, வெற்றிகரமாக மரியானா அகழியின் சேலஞ்சர் பள்ளத்தில் இறங்கினார். இரண்டரை மணி நேரத்தில் 35,756 அடி ஆழம் தொட்டவுடன், அவர் கடலின் மேற்பரப்பில் இருந்தவர்களிடம் உரையாடியதை, “ 'இது ஒரு மனிதனின் சிறிய காலடி, ஆனால் மனித குலத்துக்கோ பெரும் பாய்ச்சல்'  என்ற நீல் ஆம்ஸ்ட்ராங் பேச்சைப்போல நான் தயார் செய்திருக்கவில்லை. நான் பேசியதெல்லாம் 'நண்பர்களே, 35756 அடிகள் தரையைத் தொட்டு விட்டேன். உயிர்காக்கும் கருவிகள் வேலை செய்கின்றன. அனைத்தும் நல்ல முறையில் இயங்குகின்றன' என்பது மட்டுமே." என  நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்.

கடல் நீரின் அழுத்தத்தை தாங்கும் திறனை சோதிக்க, அவருடன் ஒரு ரோலெக்ஸ் கடிகாரமும் பயணித்தது. அந்த அதிகபட்ச நீரின் அழுத்தத்திலும் அது நன்றாக வேலை செய்தது. ரோலெக்ஸ் நிறுவனமும் இந்த முயற்சிக்கு நிதியுதவி செய்திருந்தது. முன்னர் மரியானா அகழிக்கு பயணித்த டான் வால்ஷ், பிக்கார்டும் கூட தங்களுடன் ரோலெக்ஸ் கடிகாரத்தை எடுத்துச் சென்றிருந்தனர்.

ஏற்கனவே சொன்ன உந்தித் தள்ளும் முறையில் ஒரு மைல் தொலைவு பயணித்தார் கேமரூன். அந்த பயணத்தின் வழியே சில ஆழ்கடல் விலங்கினங்களை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். மண்ணை அள்ளும் இயந்திரக்கை மூலம் மண் மாதிரிகளை சேகரித்தார். மரியானா அகழியில் ஐந்து மணி நேரம் இருந்து ஆராய திட்டமிட்டிருந்தார். இயந்திரக் கைகளின் எண்ணெய்க் கசிவின் காரணமாக,  வெளிப்புறக் கண்ணாடி மறைத்ததால் கேமரூனால் தொடர்ந்து எதையும் பார்க்க இயலவில்லை. இது தவிர நெக்கித் தள்ளும் அமைப்பும் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து கொண்டே வந்து,  கடைசியில் முழுவதுமாக நின்று விட்டது.

இதனால் மீதமிருக்கும் நேரத்தில், அறிவியல் ஆராய்ச்சிக்கான எந்த விதமான பணியிலும் ஈடுபட இயலாது என்ற சூழ்நிலையில், திரும்பச் செல்லும் முடிவெடுத்தார்.  இதன் காரணமாக அவரால் அடியில் இரண்டரை மணி நேரங்களே செலவிட முடிந்தது. 'இது ஒரு புதிய உலகிற்கு சென்று வந்தது, போலிருந்தது' என்று தம் பயணத்தைப் பற்றி கேமரூன் குறிப்பிடுகிறார்.

தவிர, அவரது வாழ்நாள் சாதனையாக இந்தப் பயணம் கருதப்படுகிறது. இந்த ஆழ்கடல் பயணம் ஒரு ஆவணப்படமாக நேஷனல் ஜியாகிராபிக் சானலில் வந்துள்ளது.

தற்போது அவர் எடுத்து வரும் அவதார் படத்தின் அடுத்த பாகங்களுக்காகத்தான் மரியானா அகழிக்குள் வந்தார் என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது. அதில் உண்மையில்லாமல் இல்லை. அவதார் பாகம் இரண்டில்,  பண்டோரா கிரகத்தின் கடல்சார் உயிரினங்கள் குறித்து அதிகம் இருக்கும் என்று சூசகமாக அவர் தெரிவித்திருக்கிறார்.     

கீழே உள்ள படத்தில், கேமரூன் சென்று வந்த கலமும் (Deepsea Challenger), டான் வால்ஷ் மற்றும் பிக்கார்டு சென்று வந்த கலமும் (Bathyscape Trieste) ஒன்றாக காட்டப்பட்டுள்ளன.

JC_a3.jpg

ட்ரெயிஸ்டி தற்போது அமெரிக்க அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. கேமரூன் பயணித்த கலமானது வேறொரு நிறுவனத்திற்கு தானமாக வழங்கப்பட்டு விட்டது. அந்த கலத்தை எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட சிறு விபத்தில், அது பலத்த சேதமடைந்து விட்டது.

கடந்த சில மாதங்களாக ஒக்கியனோஸ் எக்ஸ்ப்ளோரர் எனும் கப்பல் மூலம் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் நிறைய புதிய உயிரினங்கள் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மரியானா அகழி குறித்தும்,  ஆழ்கடல் உலகத்தில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பது குறித்தும் தொடர்ந்து ஆராய்ந்து வந்த வண்ணம் இருக்கிறார்கள், அறிவியலாளர்கள்.

மிகவும் ஆழமான பகுதிகளில் காணக் கிடைக்கும் வேறு சில உயிரினங்கள்:

மரியானா அகழியினுள் 47 மைல்கள் தொலைவுக்கு நான்கு பாலங்கள், பாலம் போன்ற அமைப்புகள் இருப்பதைக் கூட கண்டறிந்திருக்கிறார்கள். இவை 6600 அடிகள் உயரத்திலிருக்கின்றன. அதில் 1980-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாலம், சேலஞ்சர் படுகுழிக்கு மேல் இரண்டரை கிலோமீட்டர் உயரத்தில் இருக்கிறது.

JC_4a.jpg

ஆழ்கடலில் நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்றும், அதன் மூலம் உயிர்கள் வாழும் சூழல் நிலவுகின்றது என்றும் கூறப்படுகிறது. தவிர மில்லியன் வருடங்கள் பழமையான பாறைகள், நீருடன் வினை புரிவதால் உண்டாகும் வாயுக்கள், தனிமங்கள் மூலம் உயிர்கள் உருவாவதாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

மரியானா அகழியினுள் நிலவும் கடும்குளிருக்கு நேர் எதிரான ஒரு விஷயமும் அங்கு இருக்கிறது. அவை சூடான காற்றை வெளியிடும் குழிகள். இவைகள் 450°C வெப்பமான சூடான காற்றை வெளியிடுகின்றன. அதிசயத்தக்க விஷயமாக இந்த நீர் கொதிப்பதில்லை. அங்கு இருக்கும் அழுத்தம் நீரின் கொதிநிலையை குறைத்து விடுகிறது. இவை, மூலம் தாதுக்களும் வெளியாகின்றன.

சேற்று எரிமலைகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மரியானா பள்ளத்திலும் சேற்று எரிமலைகள் காணப்படுகின்றன. சேற்று எரிமலைகள் என்பவை, எரிமலைக்குழம்பாக புதைச்சேற்றை வெளிப்படுத்துவன. நமது அந்தமான் தீவுகளிலும் இவ்வகை புதைச்சேற்று எரிமலைகள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் வெளிவரும் வாயுக்களால் உயிர் வாழும் சூழல் உருவாகியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கடல்களின் சராசரி ஆழங்கள்

ஆழ்கடலுக்குள், அடர்த்தியான கடல் நீரைத் துளைத்துக்கொண்டு மிகத்துல்லியமாக ஆழத்தைக் கணக்கிட்டு விட முடியாது. நூறு மீட்டர்கள் வரை வேறுபாடு இருக்கலாம். உலகெங்கும் உள்ள கடல்களின் சராசரி ஆழங்கள் வருமாறு...

ஆர்ட்டிக் பெருங்கடல்: 3400 அடி.  இதன் ஆழமான பகுதி 17881 அடியாகும். இந்தியப்பெருங்கடல்: 12740 அடி, இதன் ஆழமானப் பகுதி 25344 அடி ஆழமானது. அட்லாண்டிக் பெருங்கடல்: 12254 அடி, இதன் ஆழமானப் பகுதி 28374 அடியாகும். பசிபிக் பெருங்கடல்: 13740 அடி. உலகின் ஆழமானப் பகுதி, பசிபிக் பெருங்கடலில்தான் உள்ளது. அதன் ஆழம் 36200 அடி!

ஆயிரம் கோடி உயிரினங்கள்

மரியானா அகழியின் ஆள்கூறுகள்: 11"21' வடக்கு அட்ச ரேகை மற்றும் 142" 12' கிழக்கு  தீர்க்க ரேகை.  மரியானா அகழிக்கு அருகாமையிலிருக்கும் நாடு சுமார் முந்நூறு மைல்கள் தொலைவிலிருக்கும் சிறிய நாடான குவாம். இந்த குவாம், முதலில் ஸ்பெயினின் காலனியாக இருந்து, அமெரிக்காவின் பிடிக்கு வந்து, பின்னர் ஜப்பானின் கைக்குப் போனது. (பியர்ல் ஹார்பர் நினைவிருக்கிறதா?) இரண்டாம் உலகப்போரின் போது மீண்டும் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு வந்தது. மரியானா தீவுகள் ஜப்பானுக்கு தெற்கேயும், பப்புவா நியூகினியா தீவுகளுக்கு வடக்கேயும் பிலிப்பைன்சுக்கு மேற்கேயும் அமைந்துள்ளன. மரியானா அகழியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

இந்த பூமியில் நிகற்புதம் (என்ன வார்த்தைகள் சம்பந்தமில்லாமல் இருக்கிறது என்கிறீர்களா? பத்து நிகற்புதம் மற்றும் அற்புதம் என்றால் என்ன என கூகுளாண்டவரைக் கேட்கவும்) உயிரினங்கள் வாழ்கின்றனவாம். அவற்றில் இன்னும் கண்டுபிடிக்கப்படாதவை அற்புதம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நவீனன்....! அற்புதம் ....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.