Jump to content

புரதச் சுரங்கம்


Recommended Posts

குறுந்தொடர்- 1: புரதச் சுரங்கம்

19_2917301f.jpg
 

நீயென்ன பெரிய பருப்பா?‘ என்று உதிரியாகத் திரிபவர்கள், சிறுரவுடி களைப் பார்த்துச் சினிமாவில் கேட்பதைப் பார்த்திருக்கலாம். மனிதர்கள் எப்படியோ தெரியாது, நிச்சயமாகச் சாப்பிடப்படும் ‘பருப்பு’, பார்க்கச் சிறிதாக இருந்தாலும் பெரிதுதான். காரணம் அதில் இருக்கும் அபரிமிதச் சத்து, அதிலும் தசைகளையும் உடலையும் ஊட்டி வளர்க்கும் புரதச் சத்து. பருப்பு வகைத் தாவரங்களின் காய்களையும் விதைகளையும் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருகிறார்கள்.

குழந்தைக்குச் செரிமானத் திறன் மேம்பட்டவுடன், முதலில் தரப்படுவது சோறும் மசிக்கப்பட்ட பருப்பும் சேர்ந்த பருப்புச்சோறுதான் (கொங்கு பகுதி அரிசி பருப்பு சாதம் கதை தனி).

அதேபோலத் தமிழகத்தில் சாம்பார், கேரளத்தில் புட்டு மற்றும் ஆப்பத்துடன் வரும் கடலைக்கறி, வடஇந்தியாவில் சப்பாத்தியுடன் வரும் தால் எனப்படும் பருப்பு மசியல் எனப் பருப்பு இல்லாமல் இந்திய உணவைக் கற்பனை செய்தே பார்க்க முடியாது. பருப்பு வகைத் தாவரங்கள் நம் தினசரி உணவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.

எளிமையின் உச்சம்

மாவுச் சத்து, புரதச் சத்து, (நல்ல) கொழுப்புச் சத்து, வைட்டமின், கனிமச்சத்து போன்றவை கலந்த சதவிகித உணவு ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படைத் தேவை. இதில் விலங்குப் புரதத்தைச் சாப்பிடாதவர்கள், தாவரப் புரதத்துக்குப் பருப்பு வகைகளையே நம்பியிருக் கிறார்கள். தமிழகத்திலும் இந்தியாவிலும் புரதச் சத்துத் தேவையைப் பெருமளவு நிறைவு செய்வது பருப்பு வகைகள்தான்.

பருப்பு வகைகளின் சிறப்புகளைச் சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது என்றாலும், முக்கியமான சிறப்புகள்: இவற்றைச் சமைப்பது எளிது, அதேநேரம் உடலுக்குப் பெரிய தீங்கு செய்வதில்லை. வயலில் இவற்றை விளைவிப்பதும் மிகக் கஷ்டமானதோ அதிகப்படி தண்ணீரை உறிஞ்சுவதோ இல்லை.

எப்படி வருகிறது?

ஆங்கிலத்திலோ, லத்தீனிலோ லெக்யூம் (legume) என்று சொல்வது பருப்பு வகைத் தாவரங்களைக் குறிக்கிறது. Fabaceae அல்லது Leguminosae என்பது அவரை வகை தாவரக் குடும்பத்தின் தாவரவியல் பெயர். பருப்பு வகைத் தாவரங்கள் பல்வேறு வகைப்பட்டவை. பொதுவாக அவரை, துவரை, பயறு, மொச்சை, பட்டாணி வகைத் தாவரங்களின் விதை காய வைக்கப்பட்டு, மேல்தோல் நீக்கப்பட்ட பிறகு பருப்பு எனப்படுகிறது.

இந்தத் தாவரங்கள்தான் நம்மைச் சூழ்ந்திருக்கும் காற்றில் நிரம்பியிருக்கும் நைட்ரஜனை (78 %) சேகரித்து, மண்ணில் நிலைநிறுத்துகின்றன. அவரை இனத் தாவரங்களின் வேர்க்கணுக்களில் ரைசோபியா பாக்டீரியா இருக்கிறது.

இது, அந்தத் தாவரங்களுடன் ஒன்றி வாழ்ந்தபடி மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. இதனால் மண் வளம்மிக்கதாக மாறுகிறது. இதன் காரணமாகப் பயிற்சி சுழற்சி முறையில் வயலின் வளத்தை மேம்படுத்துவதற்குக் காலங்காலமாக இந்தப் பயிர்களைப் பயிரிடுவதை உழவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் இந்தச் செயல்பாட்டால் இந்தத் தாவரங்களின் விதைகள் புரதச் சத்து நிரம்பியவையாக உள்ளன.

எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

பருப்பு வகைத் தாவரங்களின் இலைகள் கூட்டிலைகள், சின்னச்சின்ன இரட்டை இலைகளாக, வரிசையாக இருக்கும். நீண்ட பச்சை நெற்று அல்லது உறையில் விதைகள் நிரம்பியதாக இவற்றின் காய் அமைந்திருக்கும். இந்தத் தாவரங்களின் விதைகள் காய வைக்கப்பட்டு மட்டுமல்லாமல், பச்சைக் காயாகவும் பயன்பாட்டில் உள்ளன. தாவர வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில், வகைகளில் அவரைக் குடும்பத் தாவரங்கள் சாப்பிடப்பட்டு வருகின்றன.

# அவரை, பீன்ஸ், தட்டைப்பயற்றங்காய் (காராமணி) வகைத் தாவரங்கள் பச்சை காயாகவே சாப்பிடப்படுகின்றன. அவற்றின் விதைகள் மட்டுமில்லாமல், முற்றாத மேலுறையும் உண்ணப்படுகிறது.

# அதேபோலக் காராமணி, பட்டாணி, மொச்சை போன்ற விதைகள் முதிர்ந்தவுடன் காய வைக்கப்படாமல் உண்ணப்படுகின்றன. இவற்றைச் சமைப்பது எளிது. அந்த நிலையில் வெளிப்புற உறை கடினப்பட்டிருப்பதால் சாப்பிடப்படுவதில்லை.

# அதற்குப் பிறகு நன்கு முதிர்ந்த காய்கள் வெளிப்புற உறையுடன் காய வைக்கப்படுகின்றன. பிறகு வெளிப்புற உறை அகற்றப்பட்டு, காய்ந்த முழு விதைகள் உண்ணப்படுகின்றன. இவற்றை நீண்ட நேரம் வேக வேண்டும்.

# காய வைக்கப்பட்ட முழு விதைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, தண்ணீரை வடித்து முளைக்க விடப்படுகிறது. இப்படி முளைவிட்ட விதைகள் சத்து மிகுந்தவை. பொதுவாக ஓர் இரவு முழுக்க ஊற வைக்கப்பட்டு, தண்ணீரை வடித்துத் துணியில் கட்டியோ அல்லது பாத்திரத்திலோ வைக்கலாம். முளைகட்டிய பச்சைப் பயற்றை அப்படியே சாப்பிடலாம். முடியாதவற்றை எளிதாக வேக வைத்துவிடலாம்.

# காய வைக்கப்பட்ட பயற்றை அரைத்து மாவாகப் பயன்படுத்தலாம். இப்படிக் கிடைக்கும் கடலை மாவு பலகாரங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. சில மாவுகள் சூப்பில் சேர்க்கப்படுகின்றன.

இப்படிப் பச்சைக்காய், பச்சையான பயறு, முழு விதை, முளைகட்டிய பயறு, பருப்பு, மாவு எனப் பல வகைகளிலும் பருப்பு வகைத் தாவரங்கள் சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விதைகள் காய வைக்கப்பட்டு, இரண்டாக உடைக்கப்பட்டால் பருப்பு. இந்தப் பருப்பு வகைகள் நன்கு செரிமானம் ஆவதற்கும், வேக வைப்பதற்கும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சீரகம், மிளகு போன்ற தாளிப்புப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன.

உலகம் கொண்டாடுகிறது

பருப்புப் பயன்பாட்டைச் சார்ந்து நமக்கு வலுவான பின்னணி இருக்கும் அதேநேரம், 2016-ம் ஆண்டை ‘சர்வதேசப் பருப்பு ஆண்’டாக (International Pulses year) ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது. ஊட்டச்சத்துமிக்க பயறு, பருப்பு, மொச்சை, பட்டாணி வகைகள் தரும் ஊட்டச்சத்தைப் பிரபலப்படுத்துவதே இந்த அறிவிப்பின் நோக்கம். அடுத்து வரும் வாரங்களில் நாம் அதிகம் உண்ணும் ஒவ்வொரு பருப்பு வகையிலும் பொதிந்திருக்கும் ஊட்டச்சத்து, நம் உடலுக்கு அது தரும் ஆரோக்கியப் பலன்கள், பயன்பாடுகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மருந்தாகும் பருப்பு

18_2917303a.jpg

பண்டைய சித்த மருத்துவக் குறிப்புகளிலும், பருப்புகளைப் பற்றி நிறைய குறிப்பிடப்பட்டுள்ளது. 'பயற்றங்காயை கறியாக உண்ணில் நன்மை உண்டாகும்' எனத் தேரையர் குறிப்பிட்டுள்ளார். அகத்தியர் பாடல்களிலும் பருப்பு வகைகளைப் பற்றி குறிப்புகள் உள்ளன. பருப்புகள் தரும் முக்கிய ஆரோக்கியப் பலன்கள்:

மசித்த பருப்புடன் நெய் சேர்த்துச் சாப்பிடுவது, மெலிந்த உடலைத் தேற்றுவதற்கான சிறந்த உணவு.

கர்ப்பக் காலத்தில் பனிக்குட நீர் அதிகரிப் பதற்குப் பருப்பில் உள்ள புரதம் அவசியம்.

பெரும்பாலான பயறு வகைகள் இனிப்புச் சுவையைக் கொண்டுள்ளன. இனிப்பு சுவை உடலுக்கு உடனடி ஆற்றலும் தசைகளுக்கு ஊட்டமும் தரக்கூடியது. குளிர்ச்சியுண்டாக்கும் செய்கையும் பயறு வகைகளுக்கு உண்டு. அதனால் குழந்தைகளுக்குப் பாலை மறக்கச் செய்வதற்கான நல்ல உணவாகப் பருப்பு வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

புரதக்குறைவால் உண்டாகும் கால் வீக்கம் (pedal odema) வராமல் தடுக்க, பருப்பு வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

தீப்புண்களுக்கு மருந்தாக சில பருப்பு வகைகள் பயன்படுகின்றன.

 

http://tamil.thehindu.com/general/health/குறுந்தொடர்-1-புரதச்-சுரங்கம்/article8800327.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

புரதச் சுரங்கம் 2: உடலுக்கு உரம் தரும் முதன்மைப் பருப்பு

dhaniyam_2671870f_2926255f.jpg

சாம்பார் இல்லாத இட்லியையோ, சோற்றையோ நினைத்துப் பார்க்க முடியுமா? சாம்பாரின் வரலாறு நீண்டது இல்லை என்றாலும்கூட, இன்றைக்கு நம் உணவில் சாம்பார் முக்கிய இடம் பிடித்துவிட்டது. தஞ்சை சரபோஜி வம்சத்தின் கொடையான சாம்பாருக்கு அடிப்படை பருப்பு, அதாவது துவரம் பருப்பு.

பொதுவாகவே பருப்பு என்று சொன்னால், அது மஞ்சள் நிறம் கொண்ட துவரம் பருப்புதான். துவரம் பருப்பை வேக வைத்து, தாளிப்புப் பொருட்களைச் சேர்த்து மசிப்பது தென்னிந்தியாவில் பொதுவாகப் பருப்பு என்றோ, பருப்பு மசியல் என்றோ அழைக்கப்படுகிறது. நாடு முழுவதுமே இந்தப் பருப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

தீபகற்ப இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தோன்றியதாகக் கருதப்படும் இத்தாவரம், ஆப்பிரிக்காவுக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது என்பதால் வறண்ட, புரதச் சத்து பற்றாக்குறை உள்ள பகுதிகளில் பயிரிட ஏற்ற பருப்பு வகை. துவரை மானாவாரியாகவே அதிகம் பயிரிடப்படுவதால், தண்ணீர் விரயமாவதில்லை. அத்துடன் மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்தி, மண்ணை வளப்படுத்தவும் துவரை உதவுகிறது.

பயன்பாடு

இந்திய உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் பருப்பு வகை இது. சாம்பார், பருப்பு சோறு, அரிசி பருப்பு சாதம் தொடங்கிப் பல உணவுப் பண்டங்கள் இதை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படுகின்றன. மசிக்கப்பட்ட பருப்பாகத் தனியாகவும், சாலடில் சேர்க்கப்படும் பொருளாகவும் இருக்கிறது. ரசத்திலும் சில நேரம் சேர்க்கப்படுவது உண்டு. வடஇந்தியாவில், குறிப்பாகக் குஜராத்தில் சப்பாத்தியுடன் தரப்படும் தால் எனப்படும் பருப்பு மசியல், துவரம் பருப்பு மசியலே.

ஊட்டச்சத்து

இதில் புரதச் சத்து அதிகம் என்பதால், உடலுக்குச் சரிவிகித உணவைத் தருவதற்குப் பயன்படுகிறது. புரதச் சத்தைப்போலவே வைட்டமின் சி சத்து, அமினோ அமிலம், நார்ச்சத்து போன்றவை அதிகம். இதில் உள்ள கார்போஹைட்ரேட் சத்து (மாவுச் சத்து), ரத்தச் சர்க்கரை அளவை ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது, உடலுக்குத் தேவையான சக்தியையும் தருகிறது. விஷயம் என்னவென்றால் கொலஸ்ட்ரால் கொஞ்சம்கூட இல்லை.

தெரியுமா?

துவரம்பருப்பு 3,500 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகிறது. இப்போது உலகம் முழுவதும் சராசரியாக ஓர் ஆண்டில் 20 லட்சம் கிலோ பயிரிடப்படுகிறது. இதில் 82 சதவீதம் இந்தியாவில்தான் பயிராகிறது.

உணவுப் பயிர் என்பதைத் தாண்டி, பல்வேறு வகைகளில் பயன்படுகிறது. விவசாயிகளுக்கு மூடாக்கு பயிராகவும், கால்நடைகளுக்கு ஏற்ற தீவனமாகவும் பயன்படுகிறது.

இந்தப் பருப்பு காய வைக்கப்பட்டு, பழுப்புப் பச்சை தோல் நீக்கப்பட்டு, இரண்டாக உடைக்கப்பட்டே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் அரை உருளை வடிவத்தில் இருக்கும் இந்தப் பருப்பை எளிதாக வேக வைப்பதற்கு, கொஞ்சம் நேரம் ஊற வைத்தாக வேண்டும். வெந்நீரில் ஊற வைப்பது நல்லது. பருப்பு சுவை தூக்கலாக இருக்கும்.

எளிய செரிமானத்துக்கு...

துவரம் பருப்பு வாயுத் தொல்லையை ஏற்படுத்தக்கூடும். அதைத் தவிர்க்கவே துவரம்பருப்பின் மேல் செம்மண்ணைப் பூசிக் காய வைத்து, பின் கழுவி எடுத்துப் பயன்படுத்துவது பாரம்பரிய வழக்கம். இப்படிச் செய்வதால் வாயுத் தொல்லை நீங்கும். இந்தப் பாரம்பரியப் பதப்படுத்தும் முறைக்குப் பின்னர்க் கிடைக்கும் துவரம்பருப்பின் சுவையும் மணமும் அருமையாக இருக்கும். ஊட்டச்சத்தும் இழக்கப்படாமல் இருக்கும்.

அதேபோலப் பருப்பை வேக வைக்கும்போது கொஞ்சம் விளக்கெண்ணெயைச் சேர்த்து வேக வைத்தால், துவரம் பருப்பு வேகும்போது நுரைக்காமல், பாத்திரத்தை விட்டு வெளியே வராமல் வெந்திருக்கும். நன்றாகச் செரிமானமும் அடையும். இது சேலம் மாவட்ட வழக்கு.

நவதானியங்களில் ஒன்று

பழைய பெயர்கள்: தோரை, யவை, காச்சி, ஆடகி, ஆடகம்

தாவரவியல் பெயர்: Cajanus cajan

ஆங்கிலப் பெயர்: Toor Dal / Tuvar dal / Pigeon Pea

உடலுக்கு வலுவைக் கொடுக்கவும் உடல் எடையை அதிகரிக்கவும் கொடுக்கப்படும் ‘பஞ்சமுட்டிக் கஞ்சி’யில் துவரை முக்கியமான பொருளாகச் சேர்க்கப்படுகிறது. நோய்நிலை காரண மாக மெலிந்தவர்களுக்கும் சோர்வுற்றவர்களுக்கும் உடலை உரமாக்கும் துவரை, முதன்மையான ஊட்டச்சத்து உணவு என்பதில் சந்தேகமில்லை.

துவரம் பருப்பு ரசம்:

துவரம் பருப்பு ரசத்தை ஒரு மருந்தாகச் சித்த மருத்துவ நூலான ’தேரையர் குணவாகடம்’ குறிப்பிட்டுள்ளது. மிளகு, பூண்டு சேர்த்துத் தயாரிக்கப்படும் துவரம்பருப்பு ரசம், செரிமானம் சார்ந்த கோளாறுகளை நீக்கப் பயன்படுகிறது.

பத்திய உணவு:

பத்திய உணவாகத் துவரம் பருப்பு பயன்படுகிறது. பண்டைக் காலத்தில் உண்ணா நோன்பின் முடிவில் சாப்பிடும் உணவாக, துவரம் பருப்பை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர்.

(அடுத்த வாரம்: கொழுப்பைக் குறைத்து இதயம் காக்கும் பருப்பு)

 

http://tamil.thehindu.com/general/health/புரதச்-சுரங்கம்-2-உடலுக்கு-உரம்-தரும்-முதன்மைப்-பருப்பு/article8828227.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கொழுப்பைக் குறைத்து இதயம் காக்கும் பருப்பு

green_gram_2934892f.jpg
 

பச்சைப் பயிர் என்று பலரும் எழுதுவதைப் பார்த்திருப்போம். அவர்கள் எழுத நினைத்தது என்னவோ, பச்சைப் பயற்றைப் பற்றித்தான் இருக்கும். ஆனால், தவறாகப் பச்சைப் பயிறு, பச்சை பயிரு என்றோ அது முடிந்திருக்கும்.

மேற்கு இந்தியாவின் ஈரமான தேக்குமரக் காடுகளைத் தாயகமாகக் கொண்டது பச்சைப் பயறு. இன்றைக்கு இந்தியா, பாகிஸ்தான், தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் விளைகிறது. தெற்காசிய உணவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழக/கேரள எல்லைப் பகுதியில் வாழும் முதுவர் இனப் பழங்குடிகளின் உணவில் பச்சைப் பயறு முக்கிய இடம்பிடித்திருக்கிறது.

ஆலிவ் பச்சை நிறத்தில் சிறிய, நீள்உருளை வடிவத்தில் வழுவழுவென்று, நல்ல மணத்துடன் இருக்கும். பச்சைப் பயறு காய வைக்கப்பட்டு, தோல் நீக்கப்பட்டு, உடைக்கப்பட்டால் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

பயன்பாடு

முழு பச்சைப் பயறு முளைகட்டிப் பச்சை யாகவோ வேக வைக்கப்பட்டோ, முளைகட்டாமல் வேக வைக்கப்பட்டோ சுண்டலாகப் பயன்படுத்தப்படுகிறது. பச்சைப் பயற்றை வேக வைப்பதற்குக் கொஞ்ச நேரம் ஊற வைக்க வேண்டும்.

முளை கட்டப்பட்ட பச்சைப் பயறு உப்பு-எலுமிச்சை சாறு கலந்தும் சாலட்டில் சேர்க்கப்பட்டும் சாப்பிடப்படுவது உண்டு. பச்சைப் பயறு மிகவும் ஆரோக்கியமான நொறுவை. ஏனென்றால், தாவரங்கள் வளர வைட்டமின், கனிமச்சத்து, அமினோ அமிலங்கள், பைட்டோ கெமிக்கல்கள் போன்றவை தேவைப்படும் என்பதால், முளைவிட்ட பயறு வகைகளில் புரதத்துடன் மேற்கண்ட சத்துகளும் நிரம்பியிருக்கும்.

ஆந்திரப் பிரதேசத்தில் பச்சைப் பயறு மாவு பெசரட்டு என்ற பெயரில் அடைதோசையாகச் சாப்பிடப்படுகிறது. சீனாவில் நிலவு கேக் மற்றும் இனிப்பு பானம், பிலிப்பைன்ஸில் இறால் வதக்கல், இந்தோனேசியாவில் இனிப்பு, ஹாங்காங்கில் ஐஸ்கிரீம் என்று பல்வேறு வகைகளில் பச்சைப் பயறு பயன்படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்து

இதில் புரதச் சத்தும் அமினோ அமிலமும் அதிகம். உடலுக்குத் தீங்கு பயக்கும் டிரான்ஸ் ஃபேட், சாச்சுரேடட் கொழுப்பு இதில் இல்லை.

உடலுக்கு அவசியம் தேவைப்படும் ஒன்பது அமினோ அமிலங்களில் லைசீன் என்ற அமினோ அமிலத்தை அதிகம் கொண்டது.

நீரில் கரையக்கூடிய, நீரில் கரையாத நார்ச்சத்தை அதிகம் கொண்டிருப்பதால், சரிவிகித உணவையும் உடலுக்குத் தேவையான ஊட்டத்தையும் பராமரிக்க உதவுகிறது.

குறிப்பாக இதில் இருக்கும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, எல்.டி.எல். கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் செய்கிறது.

ரத்தத்தில் மெதுவாகவும் படிப்படியாகவும் சர்க்கரைப் பொருளை இது வெளியிடுவதால், ரத்தச் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

பச்சைப் பயற்றை மட்டுமில்லாமல் எல்லாப் பயறு வகைகளையுமே தோலை அகற்றாமல், உடைக்காமல் பயன்படுத்துவதுதான் அதிக ஊட்டம் தரக்கூடியது. ஏனென்றால், தோலில் இரும்புச்சத்து இருக்கிறது. l

காலரா, தட்டம்மை, சின்னம்மையின்போது பச்சைப் பயறு ஊற வைத்த தண்ணீரைக் குடிப்பது உடலுக்கு நல்லதாகக் கருதப்படுகிறது.

இது எளிதில் ஜீரணமாகக் கூடியது, மலத்தை இளக உதவுகிறது.

ptவயிற்றுப் பொருமலையோ, ‘காஸை‘யோ ஏற்படுத்தாது.

தெரியுமா?

பச்சைப் பயறு மாவு அல்லது பயத்த மாவை சருமத்தில் தேய்த்துக்கொள்வது தோலைப் பராமரித்து, நல்ல நிறத்தைத் தக்க வைப்பதற்குப் பயன்படும். சோப்புக்குப் பதிலாகக் குளியல் பொடியாக இதைப் பயன்படுத்தலாம்; குறிப்பாகக் குழந்தைகளுக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும். தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘நலங்கு மாவு’ எனும் மூலிகைக் கலவையில், பச்சைப் பயறு சேர்க்கப்படுகிறது.

(அடுத்த வாரம்: பருப்பு எடுக்கும் பல அவதாரங்கள்)

 

http://tamil.thehindu.com/general/health/கொழுப்பைக்-குறைத்து-இதயம்-காக்கும்-பருப்பு/article8858747.ece

புரதச் சுரங்கம் 4: பெண்கள் போற்ற வேண்டிய பருப்பு- வெள்ளைக் கொண்டைக்கடலை

kadalai___2943708f.jpg
 

ரோமானியர்களுக்கும் வெள்ளைக் கொண்டைக்கடலைக்கும் தொடர்பு உண்டு. இதன் தாவரவியல் பெயரின் முன்பகுதியான ‘Cicer’ என்ற பெயரைப் பரிந்துரைத்தவர் ரோமானிய இயற்கையியலாளர் பிளினி. கறுப்புக் கொண்டைக் கடலையைவிட இது அளவில் சற்றுப் பெரிது, சற்று நெகிழ்வானதும்கூட.

இது முதன்முதலில் மத்தியகிழக்கு நாடுகளில் பயிரிடப்பட்டதாகக் கருதப்படுகிறது. இப்போதும் காட்டுப் பயிராக உள்ளது. இது கறுப்புக் கொண்டைக்கடலையின் வழித்தோன்றல்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்ட பிறகு, பயிரிடும் முறைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மேல் தோலின் நிறம் வெளுத்தது மட்டுமில்லாமல், கடலையின் அளவும் பெரிதாக மாறிவிட்டது. ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வந்ததால், ‘காபூலி கொண்டைக்கடலை’ எனப்படுகிறது. சென்னா என்று பொதுவாக அறியப்படுகிறது. தமிழில் வெள்ளை கொண்டைக்கடலை.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தெற்கு ஐரோப்பா, வட அமெரிக்கப் பகுதிகளில் இது பயிரிடப்படுகிறது. மத்தியகிழக்கு நாடுகளில் ஃபிளாஃபெல், ஹம்மூஸ் எனப்படும் ரொட்டிக்கான தொடுகறி போன்ற கொண்டைக்கடலை உணவு வகைகள் பிரபலம்.

பயன்பாடு

கறுப்புக் கொண்டைக் கடலையைப் போல் பல வகைகளில் இது பயன்படுத்தப்படா விட்டாலும் சுண்டலாகவும் குருமாவிலும் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. ‘சோளா பட்டூரா’ என்ற மெகா சைஸ் பூரியுடன் தொடுகறியாக வருவது வெள்ளைக் கொண்டைக்கடலை மசாலாதான். சில நேரம் குழம்பிலும் சேர்க்கப்படுவது உண்டு. புரதம் நிறைந்த இந்தப் பருப்பை, சில மணி நேரம் ஊற வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

ஊட்டச்சத்து

கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால், செரிமானக் கோளாறுகளைச் சீர்செய்ய உதவியாக இருக்கிறது.

எலும்பு, தசை, குருத்தெலும்பு, தோல், ரத்தம் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் புரதத்தை இது அதிகம் தருகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்க அடிப்படைத் தேவையாக இருக்கும் மாங்கனீசு இதில் அதிகமாக இருக்கிறது.

ஒரு கப் கொண்டைக்கடலையை உட்கொண்டால் அன்றாட தேவையில் 84.5% மாங்கனீசு கிடைக்கும்.

இரும்புச்சத்தைக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு மிகவும் நல்லது.

சாப்போனின் என்ற ஆன்டி ஆக்சிடண்ட்டை அதிக அளவு கொண்டிருப்பதால் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், பைட்டோ ஆஸ்டிரோஜன்ஸ் எனப்படும் தாவர ஹார்மோன்களைக் கொண்டிருப்பதால் பெண்களின் ஹார்மோன் அளவை சீராகப் பராமரிக்க உதவுகிறது.

குறைந்த சர்க்கரை அளவை கொண்டிருப்பதால், மெதுவாகச் செரிமானம் அடையும், எடைகுறைப்புக்கும் உதவும்.

கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், உடலின் ரத்தச் சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவுகிறது.

உயர் ரத்தஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

தெரியுமா?

கொண்டைக்கடலை, மத்தியக் கிழக்கு நாடுகளில் 7,500 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டது.

(அடுத்த வாரம்: பலகாரங்கள் தரும் பருப்பு)

 

http://tamil.thehindu.com/general/health/புரதச்-சுரங்கம்-4-பெண்கள்-போற்ற-வேண்டிய-பருப்பு-வெள்ளைக்-கொண்டைக்கடலை/article8890536.ece

Link to comment
Share on other sites

புரதச் சுரங்கம் 5: மாரடைப்பைத் தடுக்கும் கர்ப்பிணிகளுக்கும் உதவும் கறுப்புக் கொண்டைக் கடலை

bangal_gram_2952549f.jpg
 

கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று கடந்த வாரம் பார்த்த வெள்ளை கொண்டைக்கடலை, மற்றொன்று நமக்கெல்லாம் நன்கு தெரிந்த கறுப்புக் கொண்டைக்கடலை. இது அளவில் சற்றுச் சிறியது, உறுதியானது. பொதுவாகச் சுண்டலாகவும் குழம்பில் சேர்க்கப்பட்டும் சாப்பிடப்படும் இது, நாடு முழுவதும் முக்கிய இடம்பிடித்திருக்கிறது.

கறுப்புக் கொண்டைக்கடலை உள்நாட்டு வகையாகத் தற்போது கருதப்பட்டாலும், தென்கிழக்கு துருக்கியில் இருந்து வந்ததுதான். வெள்ளை கொண்டைக்கடலை இந்தியாவுக்கு வரும் முன்னரே, கறுப்பான கொண்டைக்கடலை நம் மண்ணைத் தொட்டுவிட்டது. இப்போது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் பெருமளவு விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் அதேநேரம், உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்று.

பழுப்பும் கறுப்பும் கலந்த நிறத்தில் சிறியதாக இருந்தாலும், புரதம் நிரம்பியது. அதன் எல்லா வளர்ச்சி நிலைகளிலும் உண்ணப்படுகிறது. கறுப்புக் கொண்டைக்கடலையின் காய் பச்சையாக இருக்கும்போதே வேக வைக்கப்பட்டுச் சாலடிலும், வடஇந்தியச் சாட் நொறுவைகளிலும் சேர்க்கப்படுகிறது. முதிர்ந்த கறுப்புக் கொண்டைக்கடலையை ஊற வைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

பயன்பாடு

சுண்டல் என்றாலே, பொதுவாகக் கறுப்புக் கொண்டைக்கடலை சுண்டல்தான். உறுதியாகவும் இனிப்பு சுவை இல்லாமலும் இருப்பதால் உப்பு சேர்த்தோ, வேக வைத்தோ, வறுக்கப்பட்டோ சாப்பிடப்படுகிறது. பொரிகடலை கடைகளில் விற்கப்படும் உப்புக்கடலை, மிகவும் பிரபலமான ஒரு நொறுவை. உடைச்ச கடலை எனப்படும் பொட்டுக்கடலையும் அதற்கு இணையாகப் பிரபலமானதுதான்.

சுண்டல் என்றாலே, பொதுவாகக் கறுப்புக் கொண்டைக்கடலை சுண்டல்தான். உறுதியாகவும் இனிப்பு சுவை இல்லாமலும் இருப்பதால் உப்பு சேர்த்தோ, வேக வைத்தோ, வறுக்கப்பட்டோ சாப்பிடப்படுகிறது. பொரிகடலை கடைகளில் விற்கப்படும் உப்புக்கடலை, மிகவும் பிரபலமான ஒரு நொறுவை. உடைச்ச கடலை எனப்படும் பொட்டுக்கடலையும் அதற்கு இணையாகப் பிரபலமானதுதான்.

புட்டு, ஆப்பத்துக்குச் சிறப்பு சுவை சேர்க்கும் கேரளக் கடலைக்கறி, கறுப்புக் கொண்டைக்கடலை குழம்புதான். இது முளை கட்டப்பட்டுச் சாலட்களில் சேர்க்கப்படுகிறது. கெட்டி குழம்பு, சூப்புகளில் இடம்பிடிக்கிறது. தெற்காசியாவில் பல்வேறு சுவையான உணவு வகைகளில், கறுப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தப்படுகிறது. இதை வறுத்துப் பொடி செய்து, நீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் காப்பியைப் போலப் பயன்படுத்தலாம்.

ஊட்டச்சத்து

l கறுப்பு கொண்டைக்கடலையில் போலி அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. இது மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.

l கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற ஃபைட்டோ வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.

l வெள்ளைக் கொண்டைக்கடலையைவிட இதில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு.

l குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

l இதன் சாறு இரும்புச்சத்து நிரம்பியது. இரும்புச் சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.

l இதில் இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன.

l அளவுடன் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவும்.

l வேக வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை ஒரு கப் 269 கலோரி சக்தியைத் தரும். அதேநேரம் இதில் இருக்கும் 15 கிராம் புரதம், ஒரு நாளைக்குத் தேவையான 2000 கலோரி உணவில் 30 சதவீதத்தை ஆரோக்கியமான வகையில் தரக்கூடியது.

மருந்தாக…

l முதிராத கொண்டைக்கடலையில் சிறிது நீர் விட்டு அருந்த, சீதக்கழிச்சல் உடனடியாகக் கட்டுப்படும்.

l சிறுநீர்ப்பெருக்கி செய்கை இருப்பதால், சிறுநீர் அடைப்பை சரி செய்யும் தன்மை, கறுப்புக் கொண்டைக்கடலை சுடுநீருக்கு உண்டு.

l இளம் கொண்டைக்கடலை விதைகளுக்குக் காமம் பெருக்கும் செய்கை உண்டு.

l கொண்டைக்கடலைச் செடியின் மீது ஒரு வெள்ளைத் துணியை இட்டு, அதன் மீது படியும் பனி நீரைப் பிழிந்து சேகரிப்பது ‘கடலைப் புளிப்பு’ என்று அழைக்கப்படுகிறது. செரியாமை, வாந்தி போன்ற நோய்களுக்கு இந்தப் புளிப்பு நீர் மருந்தாகப் பயன்படுகிறது.

தெரியுமா?

கறுப்புக் கொண்டைக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடும் இந்தியா.

முதன்மை புரதத் தேர்வு

கடலைப் பருப்பு

ஆங்கிலப் பெயர்: Bengal Gram (Split) / Split black chickpea

வரலாற்றின் ஆரம்பக் காலத்திலேயே பயிரிடப்பட்ட பருப்பு வகை இது. இந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலம். குறிப்பாகப் பருப்பு வடை, அடை போன்ற மொறுமொறு உணவு வகைகள், லட்டு போன்ற இனிப்புகள் செய்யப் பயன்படும் கடலை மாவு போன்றவற்றுக்கு அடிப்படை கடலைப்பருப்புதான். சுவையைக் கூட்டுவதற்காகக் கூட்டுகளிலும் இது சேர்க்கப் படுவது உண்டு.

கடலைப் பருப்பும் கொண்டைக்கடலையும் முற்றிலும் வேறு வேறானவை அல்ல; நெருங்கிய உறவு கொண்டவை. கடலைப்பருப்பு விதைகள் தோலுடன் கறுப்பாகவும், சிறியதாக வும், சொரசொரப்பாகவும் இருக்கும். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், மெக்சிகோவில் அதிகம் பயிரிடப்படுகிறது.

இளம் கொண்டைக்கடலை நெற்றுகள் முற்றுவதற்கு முன்பாகவே பறிக்கப்பட்டு, மேல்தோல் உரிக்கப்பட்டு, விதை இரண்டாக உடைக்கப்பட்டால் அதுவே கடலைப் பருப்பு. மஞ்சள் நிறத்தில், கொண்டைக்கடலையைவிட சிறியதாகவும் சற்று இனிப்பாகவும் இருக்கும். இதைக் கொஞ்ச நேரம் ஊற வைத்து வேக வேண்டும்; உடனடியாக மசியாது. இந்தியாவில் சைவ உணவு சாப்பிடுபவர்களின் புரதத்துக்கான முதன்மைத் தேர்வு கடலைப்பருப்புதான்.

பொட்டுக்கடலையோடு நெய்யும் ஏலக்காயும் சேர்த்துச் செய்யப்படும் உருண்டை, புரதச்சத்து நிறைந்த பிரபலமான தின்பண்டம். ஏலக்காய் சேர்வதால் வாயுத் தொந்தரவு உண்டாகாது. பருப்புப் பொடிகளிலும் பொட்டுக்கடலை சேர்க்கப்படுவது உண்டு. கடலை மாவு குளியல் பொடியாகப் பயன்படுகிறது.

ஊட்டச்சத்து

l கடலைப்பருப்பு புரதம் நிரம்பியது என்பதால், இறைச்சிக்கு மாற்றாகக் கருதப்படுகிறது.

l கடலைப்பருப்பைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், புரதச் சத்துக் குறைபாடு நீங்கும்.

l ரத்தநாளங்களில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

l சர்க்கரையை மெதுவாக வெளியிடுவதால், நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

தெரியுமா?

கடலைப்பருப்பு முடி உதிர்வதைக் குறைத்து, கூந்தலைப் பராமரிக்க உதவுகிறது.

வேறு பெயர்: சூரம்

தாவரவியல் பெயர்: Cicer reticulatum

ஆங்கிலப் பெயர்: Kala Channa / Black Channa / Black chickpea

(அடுத்த வாரம்: கறுப்பு உருளையின் அற்புதம்)

 

http://tamil.thehindu.com/general/health/புரதச்-சுரங்கம்-5-மாரடைப்பைத்-தடுக்கும்-கர்ப்பிணிகளுக்கும்-உதவும்-கறுப்புக்-கொண்டைக்-கடலை/article8921191.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

உடல் வளர்க்கும் உளுந்து

ulunthu_2961575f.jpg
 

இட்லி, தோசை இல்லாத ஒரு நாளையோ, உளுந்து வடை இல்லாத விசேஷ நாட்களையோ நினைத்துப் பார்க்க முடியுமா? இந்த மூன்றுக்கும் அடிப்படை உளுந்து. இந்தப் பண்டங்கள் அனைத்தும் கோயில் பிரசாதமாக முதலில் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக உளுந்து எனப்பட்டாலும், தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. நீள்உருளை வடிவத்தில், பளபளப்பாக இருக்கும் இது தனி நறுமணம் அற்றது. அதேநேரம் மண் வாசம் அதிகமாகவே இருக்கும். இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் - அதிகம் பயன்படுத்தப்படும் பயறு வகை இதுவே. பஞ்சாபி உணவு வகையிலும் இது மிகவும் பிரபலம்.

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் Leuconostoc mesenteroides என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாமே.

பயன்பாடு

கறுப்பு உளுந்து முழுதாகவோ, இரண்டாக உடைக்கப்பட்டோ அரைக்கப்பட்டு இட்லி, தோசை மாவில் பயன்படுத்தப்படுகிறது. இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது. வடஇந்தியாவில் தால் மக்கானிக்கு இதுவே அடிப்படை. வெங்காயம், பூண்டுடன் சேர்த்து உளுந்து வறுக்கப்பட்டு நொறுவையாகச் சாப்பிடப்படுவதும் உண்டு. அதேபோல, பச்சை உளுந்தை மாவாக்கித் தேன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், உடல் வலிமை பெறும்.

ஊட்டச்சத்து

இனிப்புச் சுவையோடு குளிர்ச்சித் தன்மையையும் கொண்டிருப்பதால் வேனிற் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தலாம். பித்தத்தைத் தணிக்க உதவும்.

# முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது.

# நிறைந்த இது, பெண்களின் உடலுக்கு வலுவைத் தரும் என்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.

# உடலைத் தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுகிறது.

# செரிமான அமைப்பை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவுகிறது.

# கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எனவே, உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துவந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.

தெரியுமா?

இந்தியாவின் பல பகுதிகளில் உளுந்துத் தட்டை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மாதவிடாய் வலி நீக்கும் வெள்ளை உளுந்து

வெள்ளை உளுந்துதான் தற்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இட்லி, தோசை, வடை போன்றவை வெள்ளையாக இருக்க வேண்டுமென்று உணவகங்கள் நினைத்த காரணத்தால், வெள்ளை உளுந்து பிரபலமாகி இருக்கலாம்.

பயன்பாடு

அரிசியோடு சேர்த்து மாவாக அரைக்கப்பட்டு இட்லி தோசைக்கும், தனியாக அரைக்கப்பட்டு வடைக்கும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மங்கள நிகழ்வுகளில் ’உளுத்தஞ்சோறு’ நெடுங்காலமாக இடம்பெற்றுவருவதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

ஊட்டச்சத்து

ulunthu1_2961576a.jpg

# வெள்ளை உளுந்தில் கறுப்பு உளுந்தைவிடச் சற்றே ஊட்டச்சத்து குறைவு. இதில் கார்போஹைட்ரேட்டும் புரதமும் இருக்கின்றன.

# இது தரும் சக்தியும் கொழுப்பும் ஆரோக்கியமான மனித உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

# உளுந்தங்களி பெண்களுக்கு உகந்தது. மாதவிடாயைச் சீராக்குவது மட்டுமில்லாமல் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.

# தாய்ப்பால் பெருக்க உளுந்து பயன்படும். ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு, உளுந்து மாவைக் கொடுக்கலாம். மலத்தை வெளித் தள்ளவும் உதவுகிறது.

# தோல் நீக்கப்பட்ட உளுந்து, பாலுணர்வைத் தூண்டக்கூடியதாகக் கருதப்படுகிறது.

இதை அதிகமாகச் சாப்பிடுவது வாயுவை ஏற்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் இதில் ஆக்சாலிக் அமிலம் இருப்பதால், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.

பண்டைய பெயர்: மாடம், மாஷம்

தாவரவியல் பெயர்: Vigna mungo

ஆங்கிலப் பெயர்: Urad Dha#/ Black Gram

ஆங்கிலப் பெயர்: Husked black gram/ Husked urad dha#

# மெலிந்த உடலைப் பருக்கச் செய்ய உளுத்தங் கஞ்சி சிறந்த உணவு.

# சிறுநீர் சார்ந்த நோய்கள் நீங்க, உளுந்து ஊறிய நீரை தினமும் பருகலாம்.

# தோல் நீக்கப்படாத உளுந்து எலும்புகளுக்கு பலத்தைக் கொடுக்கும். ‘எலும்புருக்கி’ நோய் தீரும் என்று குறிப்பிட்டிருக்கிறார் சித்தர் அகத்தியர்.

# உளுந்து மூலம் செய்யப்படும் உளுந்துத் தைலம், சித்த மருத்துவத்தில் வாத நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. வலிமை இழந்த தசைக்கு வலுவூட்ட உளுந்துத் தைலம் உதவுகிறது. தொக்கண முறைகளில் அதிக அளவில் உளுந்துத் தைலம் பயன்படுத்தப்படுகிறது.

# முளைகட்டிய உளுந்து மூட்டு வலிக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது.

# எலும்பு முறிவிற்கு தண்ணீரில் ஊற வைத்து, காய வைத்து,அரைத்த கறுப்பு உளுந்து மாவு முட்டை வெண்கரு இட்டு குழைத்து துணி சுற்றி கட்டுதல் சித்த மருத்துவ வழிமுறை

 

http://tamil.thehindu.com/general/health/உடல்-வளர்க்கும்-உளுந்து/article8952399.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

 

புரதச்சுரங்கம் 7: தட்டைப்பயிறு- கொழுப்பைக் குறைக்கும் பயறு

fat_2970901f.jpg
 

தட்டைப்பயறு அல்லது காராமணி என்றழைக்கப்படும் பயறு வகை, நமது கிராமங்களில் மட்டுமல்லாமல் உலகெங்கும் பரவலாகப் பயிரிடப்படும்,அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்று என்ற தகவல் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அது அக்மார்க் உண்மை.

தட்டைப்பயறைத் தனியாகச் சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். துவர்ப்போடு இனிப்பும் கலந்த சுவையுடையது. தட்டைப்பயறு சுண்டல், தட்டைப்பயறு புளிக்குழம்பின் தனிச்சுவை மிகப் பிரபலம். தமிழகத்தில் மாசி, பங்குனி மாதங்களில் செய்யப்படும் கொழுக்கட்டைகளிலும் கேரளத்தில் சுகியன்களிலும் மசிக்கப்பட்ட தட்டைப்பயறு சேர்க்கப்படுகிறது.

கறுப்புக் கண்

தட்டைப்பயறின் அறிவியல் சிற்றினப் பெயரான unguiculata என்பதற்குச் சிறிய வளைந்த நகம் போன்றது என்று அர்த்தம். இவற்றின் மலர் இதழ்களின் காம்புப் பகுதிகள், சிறிதாக வளைந்திருப்பதே இந்தப் பெயருக்குக் காரணம். தட்டைப்பயறு நெற்றை உடைத்தால் பயறு பச்சையாக இருக்கும். காய வைத்தால் பழுப்பு நிறத்துக்கோ, மங்கலான மஞ்சள் நிறத்துக்கோ மாறும். நெற்றில் பயறு ஒட்டியுள்ள பகுதி, சிறிய கறுப்புக் கண்ணைப் போன்றிருக்கும்.

ஆப்பிரிக்காவில் உள்ள சவானா காடுகளில் வளர்ந்து, உணவாகப் பயன் தரும் முக்கியப் பயறு வகை இது. மேற்கு ஆப்பிரிக்காவில்தான் முதலில் காட்டுப் பயிர்களிலிருந்து வயல்வெளி பயிராக இது மாற்றப்பட்டது. மத்திய கானா பகுதியில் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இது நடந்திருக்கலாம். அதன் பிறகு, இரண்டாவது முறையாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயிராக்கப்பட்டிருக்க வேண்டும். இன்றைக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா, மத்திய-தெற்கு அமெரிக்கக் கண்டங்களில் அதிகம் சாப்பிடப்படும் மிகவும் முக்கியமான பயறு வகையாக உள்ளது.

வறட்சியைத் தாங்கக்கூடிய, வெப்பத்தைத் தாங்கக்கூடிய பயிர் என்பதால் வறண்ட பகுதிகள், வெப்பமண்டலப் பகுதிகளில் பயிரிட ஏற்றது. அது மட்டுமல்லாமல் சோளம், சிறுதானியங்கள், இருங்குசோளம், கரும்பு, பருத்தி ஆகியவற்றுக்கு இடையே ஊடுபயிராகவும் இதைப் பயிரிடலாம். தட்டைப்பயறின் மேலுறையை - தட்டையைக் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம்.

பயன்பாடு

சமைப்பதற்கு முன் தட்டைப்பயறை 5-7 மணி நேரம் ஊற வைத்தே பயன்படுத்த வேண்டும். இதைச் சுண்டலாகவோ, மசித்தோ பயன்படுத்தலாம். நேரடியாக மட்டுமில்லாமல் முளைகட்டியும் பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவு உப்பு சேர்த்தால் சுவை கூடும். இதைப் பயன்படுத்தி டோஃபு, மாவு, சாலட், சூப் போன்றவையும் செய்யப்படுவது உண்டு.

உளுந்துக்கு மாற்றாக இட்லி, தோசை மாவில் தட்டைப்பயறைச் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். சுவை மிகுந்து இருக்கும்.

ஊட்டச்சத்து

1. தட்டைப்பயறில் நார்ச்சத்து அதிகம், கொலஸ்ட்ராலைக் குறைக்க இது உதவுகிறது.

2. இறைச்சிக்குப் பதிலாக இதைச் சாப்பிட்டு அதிகப் புரதத்தை உடலில் சேர்த்துக்கொள்ளலாம்.

3. உடலின் நீர்ச் சமநிலையைப் பராமரிக்க, ரத்தஅழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க, இதயத் துடிப்பு சீராக இருக்கத் தட்டைப்பயறு உதவும்.

4. பெரும்பாலான பயறு வகைகளைப் போலவே, மண்ணில் நைட்ரஜன் வளம் அதிகரிக்கத் தட்டைப்பயறு பயிர் உதவுகிறது. அதன்காரணமாக ஊட்டச்சத்தும் இதில் அதிகம். கால்சியம் 41 மி.கி., ஃபோலேட் 356 மைக்ரோ கிராம், புரதம் 13 கிராம், நார்ச்சத்து 11 கிராம், வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துகள் உள்ளன.

5. தட்டைப்பயறு தாவரத்தின் இலை மிக அதிகப் புரதச்சத்தையும் ஊட்டச்சத்தையும் கொண்டது. அதனால் தட்டைப்பயறைப் பச்சையாகப் பயன்படுத்துவதைப் போலவே, தட்டைப்பயறு இலையையும் சமைத்துச் சாப்பிடலாம்.

தெரியுமா?

இன்றளவும் முதலில் பயிராக்கப்பட்ட தாய்மண்ணான ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான், உலகின் 66 சதவீதத் தட்டைப்பயறு உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரேசில்தான், உலகில் தட்டைப்பயறு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் இரண்டாவது நாடு. அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் புத்தாண்டு நாளில் தட்டைப்பயறைச் சாப்பிடுவது, அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்பது நம்பிக்கை.

தட்டைப்பயறு / காராமணி

ஆங்கிலத்தில்: Cowpea/ Black-eyed Beans (சில நாடுகளில்)

தாவரவியல் பெயர்: Vigna unguiculata

மருந்தாக…

தட்டைப்பயறைக் காய வைத்துப் பொடி செய்து, மிதமான வெந்நீரில் கலந்து குடிக்க வயிற்றுப் புண்கள் ஆறும். கோழையை வெளியேற்றும் தன்மை கொண்டது. வீரிய விருத்திக்கு முளைகட்டிய தட்டைப்பயறு சுண்டலை ஆண்கள் சாப்பிடலாம்.

தட்டைப்பயறுக்குப் பூஞ்சைத் தொற்றை அழிக்கும் தன்மை (Anti-fungal) இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எதிர் ஆக்ஸிகரணச் செய்கையும் (Anti-oxidant) இதற்கு உண்டு. சிக்கில் செல் அனீமியா எனும் நோயில் இதன் செயல்பாடு குறித்து ஆராய்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

முக்கியமான வாயுப் பதார்த்தம் என்பதால் மிளகு/சீரகம் சேர்த்தே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் வயிற்று மந்தத்தை உருவாக்கும். முறையாகப் பயன்படுத்தும்போது உடலுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கக் கூடியது.

http://tamil.thehindu.com/general/health/புரதச்சுரங்கம்-7-தட்டைப்பயிறு-கொழுப்பைக்-குறைக்கும்-பயறு/article8984302.ece

 

புரதச் சுரங்கம் 8: மொச்சை- பொங்கல் படையல் பயறு

bean_2983107f.jpg
 

மொச்சை பயறுத் தாவரம், அவரைக் குடும்பத் தாவரங்களுள் (ஃபேபேசியே) முக்கியமானது. தமிழகத்தில் புரதத் தேவையை நிறைவு செய்வதற்காக அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறி வகை, அவரைக் குடும்பத் தாவரங்களே. அந்த வகையில் மொச்சை மிக முக்கியமானது.

பொங்கல் பண்டிகைக்கான படையல் விருந்தில் மொச்சைப் பயறு முக்கிய இடம்பிடித்திருக்கிறது. மொச்சை கெட்டிக்குழம்பு, மொச்சைப் பிரட்டல் போன்றவையும் பிரபலமானவையே. தமிழகம் மட்டுமல்லாமல் மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் புரதத் தேவையை நிறைவு செய்யும் முக்கியப் பயறு வகை இது.

பயன்பாடு

மொச்சைப் பயறு, பயிராக்கப்பட்ட தாவரங்களில் மிகப் பழமையான ஒன்று. ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் இந்தத் தாவரம், உலகெங்கும் உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் உண்ணப்படுகிறது.

மொச்சையில் பல்வேறு வகைகள் உண்டு. வகைக்கு ஏற்பப் பல்வேறு வடிவம், அளவு, நிறங்களில் நெற்று இருக்கும். பொதுவாகப் பிரகாசமான கருஞ்சிவப்பு, வெளிறிய பச்சை நிறங்களில் நெற்று காணப்படும். விதைகள் வெள்ளை, பழுப்பு, சிவப்பு, கறுப்பு நிறங்களில் வருகிறது. நாட்டு மொச்சை வகையும் பாம்பு மொச்சை வகையும் பரவலாக அறியப்பட்டவை.

மொச்சையும் அவரைக்காயும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. மொச்சையின் மேலுறையைச் சாப்பிட முடியாது, கடினமாக இருக்கும். உள்ளிருக்கும் விதை சாப்பிடப்படுகிறது. அதேநேரம் அவரைக்காயை மேலுறையுடன் சமைத்துச் சாப்பிடலாம். ஆனால், அவரை விதை காய வைத்துச் சாப்பிடப்படுவதில்லை.

மொச்சையின் விதை பச்சையாகவும் காய வைக்கப்பட்ட பிறகும் சமைத்து உண்ணப்படுகிறது. மொச்சையில் டானின், டிரைப்சின் போன்றவை இருப்பதால் சமைப்பதற்கு முன் ஊறவைத்து, மேற்கண்ட வேதிப்பொருட்களை நீக்க வேண்டும். அவித்தே சாப்பிட வேண்டும். உப்பு சேர்த்து அவித்தால் சுவையாக இருக்கும்.

மொச்சை பயற்றை முளைகட்டி மேல்தோல் நீக்கிச் சாப்பிட்டால், அதற்குப் பெயர் பிதுக்குப் பருப்பு. மொச்சையை ஊற வைத்து, மேல்தோலை நீக்கிவிட்டு உப்பு, காரம் சேர்த்து உலர்த்தி, நெய் விட்டு வறுத்துச் சாப்பிடுவது கிராமத்து நடைமுறை. சில இடங்களில் உப்பு, கார்ப்பு இன்றி வேறு காய்கறிகளுடன் கலந்தும் பயன்படுத்தப்படுகிறது.

மொச்சை பயற்றை உண்பதால் சிலருக்கு அரிப்பு ஏற்படும். அதைத் தவிர்ப்பதற்கு மதுரை, விருதுநகர் மாவட்ட மக்கள் நூதன முறையைப் பயன்படுத்துகின்றனர். மொச்சையை அவிக்கும்போது, முழு தும்பைச் செடியை இட்டு அவித்தால் மொச்சை சிறிது இனிப்பைப் பெறும், அரிப்பும் ஏற்படாது.

சாப்பிடும் போது தும்பையை நீக்கிவிடலாம்.

மற்றப் பயன்கள்

பொதுவாகப் பயறுக்காகப் பயிரிடப்பட்டாலும், கால்நடைத் தீவனமாகவும் அலங்காரத் தாவரமாகவும் மருத்துவத் தாவரமாகவும்கூட இது வளர்க்கப்படுகிறது. புதர் போல வளரும் இந்தத் தாவரம் கேழ்வரகு, கம்பு, சோளம், இருங்குசோளம், நிலக்கடலை, ஆமணக்கு போன்றவற்றுக்கு இடையே ஊடுபயிராகவும் பயிரிடப்படுவது உண்டு.

மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்துவதற்கு மொச்சை உள்ளிட்ட அவரைக் குடும்பத் தாவரங்களைப் பயிர் சுழற்சி முறையில் பயன்படுத்துவது வழக்கம். அது மட்டுமல்லாமல், மொச்சைத் தாவர இலைகள் மக்குவதன் காரணமாகவும் மண்ணுக்கு அதிக அளவில் நைட்ரஜன் கிடைக்கிறது. அதனால் மூடாக்கு பயிராகவும் இயற்கை உரமாகவும் மொச்சைத் தாவரம் பயன்படுத்தப்படுகிறது. வறட்சியிலும் தாக்குப்பிடிக்கக்கூடிய திறனைக் கொண்டது.

ஊட்டச்சத்து

l மொச்சையில் 20-28 சதவீதம் புரதம், அதேபோல வைட்டமின்களும், கனிமச்சத்தும் அதிகம்.

l காய்ச்சலை மட்டுப்படுத்தும், அளவாகச் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமலைக் குறைக்கும், செரிமானத்தைத் தூண்டும், மலத்தைப் பெருக்கும்.

l வலிப்பு நோயை மட்டுப்படுத்தும்.

l உடலைத் தேற்றக்கூடியது.

l நமீபியாவில் மொச்சையின் வேர் இதயக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

l பிலிப்பைன்ஸ், சீனாவில் பாலுணர்வு தூண்டியாக மொச்சை கருதப்படுகிறது.

l கென்யாவில் உள்ள கிகுயு பழங்குடிகள் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மொச்சைப் பயற்றையும் வாழைப்பழத்தையும் காலம்காலமாகக் கலந்து கொடுத்து வருகின்றனர். எனவே, சத்து மாவுக் கலவையிலும் மொச்சையைச் சேர்த்துக்கொள்ளலாம்.

l வாயுவைத் தூண்டும் என்பதால், இதை அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

தாவரவியல் பெயர்: Lablab purpureus

ஆங்கிலப் பெயர்: Lablab-bean / Indian bean

நவதானியங்களில் ஒன்று

l உடலை வளர்க்கும் இனிப்பு சுவை கொண்டது மொச்சை. உடலுக்குக் குளிர்ச்சித் தன்மையைக் கொடுக்கக்கூடியது. ‘கோர உட்டிணம் தணிக்கும்’ என்ற சித்தர் அகத்தியரின் பாடல் வரியின் மூலம், மிகுதியான உடல்சூட்டை மொச்சை குறைக்கும் என்பது தெளிவாகிறது.

l பாலுண்ணி (Molluscum contagiosum) மீது மொச்சையை உரைத்து வெளிப்பிரயோகமாகத் தொடர்ந்து பூசிவர, பாலுண்ணி மறையும் என்கிறது சித்த மருத்துவக் குறிப்பு.

http://tamil.thehindu.com/general/health/புரதச்-சுரங்கம்-8-மொச்சை-பொங்கல்-படையல்-பயறு/article9021755.ece

 

புரதச் சுரங்கம் 9: உலகை ஆளும் பருப்பு

par_2988530f.jpg
 

ஆசியாவில் பிறந்து, உலகெங்கும் அதிக அளவில் பயிரிடப்படும், உண்ணப்படும் மொச்சைப் பயறு வகை சோயா. புரதம் நிறைந்துள்ள சோயா, விலங்குப் புரதத்துக்கும் பாலுக்கும் சிறந்த மாற்றாகப் பரிந்துரைக்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது.

தாவரப் புரதங்களில் மிக அதிகப் புரதச் சதவீதத்தைக் கொண்டது சோயா. வேறெந்த பயறு வகைத் தாவரமும் சோயா அளவுக்கு அதிகபட்சப் புரதத்தைக் கொண்டிருக்கவில்லை. சமச்சீரான உணவில் புரதத் தேவையை நிறைவு செய்வதற்குச் சோயாவை எடுத்துக்கொள்ளலாம்.

சீனாவின் கண்டுபிடிப்பு

சோயா மொச்சை சீனாவைத் தாயகமாகக் கொண்டது. 13,000 ஆண்டுகளுக்கு முன்பே பயிரிடப்பட்டதாகக் கருதப்படும் இது, சீனர்களின் அத்தியாவசிய உணவாக இருந்தது. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஆசிய நாடுகளில் சோயா அறிமுகமானது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கம்வரை மேற்கத்திய நாடுகளில் கால்நடைத் தீவனமாக மட்டுமே சோயா கருதப்பட்டுவந்தது. 1970-களில் இருந்து சோயா உணவை உட்கொள்வதும், இறைச்சி பால் பொருட்களுக்கு மாற்றாகச் சோயா பால், சோயா வெண்ணெய், சோயா தயிர் போன்றவற்றைப் பயன்படுத்துவதும் அதிகரித்தது. இன்றைக்கு, உலகிலேயே மிக அதிகமாக விளைவிக்கப்படும், பயன்படுத்தப்படும் மொச்சைப் பயறு சோயாதான்.

பயன்பாடு

பொதுவாகப் பச்சையாக இருந்தாலும், மஞ்சள், பழுப்பு, கறுப்பு நிறங்களிலும் சோயா கிடைக்கிறது. பச்சையாகவும் சமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. சோயா பால், டோஃபு, சோயா புரதம், சோயா மாவு, சோயா சாஸ் போன்ற இதன் மதிப்புக்கூட்டு பொருட்களும் பிரபலம்.

சோயாவை சமைக்கவும், எளிதாகச் செரிமானம் ஆகவும் ஊற வைப்பது நல்லது. இதை வேகவைத்துச் சாப்பிடுவதே சிறந்தது. அந்த நடைமுறையில் தேவையற்ற சில வேதிப்பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.

தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள், சிறுநீரகக் கல் இருப்பவர்கள், ஒவ்வாமைப் பிரச்சினை இருப்பவர்கள், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்கள் சோயாவைத் தவிர்ப்பது நல்லது.

sweet_2988537a.png

ஊட்டச்சத்து

100 கிராம் சோயாவில் 17 கிராம் புரதம், 10 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.

புரதச் சத்தைத் தவிர, வைட்டமின்கள், கனிமச்சத்துகள், நீரில் கரையாத நார்ச்சத்து நிறைந்தது. அதனால், மலக்கட்டு வராமல் தடுக்கும்.

சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு, சோயா சிறந்த பலனை அளிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சோயாவில் உடலுக்குத் தேவையான எட்டு அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருக்கின்றன.

விலங்குப் புரதம் உடலில் கொழுப்பு அளவை அதிகரிக்கும் அதேநேரம், சோயா புரதம் உடலில் கொழுப்பு அளவை குறைக்கிறது.

சோயாவில் உள்ள பைட்டோஸ்டீரால்ஸ் - கொழுப்பு, ஸ்டீராய்டு ஹார்மோன்களின் வடிவத்தை ஒத்தவை. உடலில் கொழுப்பு படிவதை இவை தடுக்கின்றன.

மலச்சிக்கல், நீரிழிவு நோய், அதிகக் கொழுப்பால் அவதிப்படுபவர்கள் இதைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

பொதுவாகத் தாவரங்களில் காணப்படும் வேதிப்பொருட்களான ஃபைட்டோஈஸ்ட்ரோஜென்ஸ் சோயாவில் அதிகம். அதிலும் குறிப்பாக இதில் உள்ள ஐசோஃபிளேவோன்ஸ் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.

புற்றுநோய், இதய நோய், எலும்பு வலுவிழப்பு நோய் உள்ளிட்டவற்றையும் ஐசோஃபிளேவோன்ஸ் மட்டுப்படுத்தும்.

அதேபோல, பெண்களின் உடலில் அதிகமாக ஈஸ்ட்ரோஜென் சுரந்தாலோ ஹார்மோன் சமநிலையின்மை இருந்தாலோ, அதைச் சீரமைப்பதற்குச் சோயா உதவும். பி.எம்.எஸ்., எண்டோமெட்ரியோசிஸ் போன்ற நோய்களை மட்டுப்படுத்தவும் சோயா உதவும்.

மெனோபாஸ் காலத்தில் பெண்கள் சோயா சாப்பிடுவது சிறந்தது. ஏனென்றால் மெனோபாஸின்போது, ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைகிறது. சோயாவில் உள்ள ஈஸ்ட்ரோஜென் அதை ஈடு செய்யும்.

சோயாவில் இரும்புச்சத்து அதிகம். அதேநேரம் உடல் அதை கிரகித்துக்கொள்வதைப் பைடேட், சோயா புரதம் போன்றவை தடுக்கின்றன. சோயாவை முளைகட்டிச் சாப்பிட்டால் இரும்புச்சத்து அதிகம் கிரகிக்கப்படும்.

மற்றப் பருப்புகளைவிட சோயாவில் சுண்ணாம்புச்சத்து அதிகம், வைட்டமின் 'டி'யும் இருக்கிறது. மாட்டுப் பாலைவிட, சோயா பாலில் உள்ள சுண்ணாம்புச்சத்து உடலில் அதிகமாகக் கிரகித்துக்கொள்ளப்படும்.

சோயாவில் வைட்டமின் பி (நியாசின், பைரிடாக்சின், ஃபோலாசின்), வைட்டமின் பி 12 போன்றவை அதிகம்.

மக்னீசியம், செலெனியம் போன்ற கனிமச்சத்துகளும் உள்ளன.

மற்றப் பயறு வகைகளைவிட சோயாவில் கொழுப்புச்சத்து அதிகம். அதேநேரம் அதில் பெருமளவு நிறைவுறா - அன்சாச்சுரேடட் கொழுப்பு, அதாவது நல்ல கொழுப்பு இருக்கிறது. சோயாவில் கெட்ட கொழுப்பு இருந்தாலும், அதன் அளவு மிகவும் குறைவு.

உடலுக்கு நன்மை பயக்கும் நிறைவுறா கொழுப்பில் ஒன்றான ‘ஒமேகா 3 கொழுப்பு அமிலம்’ சோயாவில் இருக்கிறது. இந்த அமிலம் இருக்கும் ஒரு சில தாவரப்பொருட்களில் சோயாவும் ஒன்று. இந்த அமிலம் இதய நோய்களையும் புற்றுநோயையும் தடுக்கிறது.

பால் பொருட்கள் ஒவ்வாமை (Lactose intolerance) இருப்பவர்களும் ‘Hereditary Lactose deficiency’ நோய் இருப்பவர்களும் பால் பொருட்களுக்கு மாற்றாகச் சோயாவைப் பயன்படுத்தலாம்.

மருந்தாக...

அறுவைசிகிச்சை மூலம் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நீக்கப்பட்ட பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் பற்றாக்குறையால் திடீரென உடலின் ஒரு பாகம் சூடாகும் (Hot flash). அத்துடன் அடிக்கடி அதிகக் கோபமடைதல், பெண் பிறப்புறுப்பில் திரவ வறட்சியால் பாலுறவின்போது அடிக்கடி நீர்க்கடுப்பு, முதுகுவலி போன்றவையும் ஏற்படலாம். இதைத் தீர்க்கும் சிறந்த உணவு சோயாதான்.

வறண்ட சருமம் கொண்டவர்களுக்கும், முடி உதிர்தல் பிரச்சினை உள்ளவர்களுக்கும் சோயா சிறந்த உணவு. தோல் சுருக்கத்தைக் குறைக்கும் பண்பும் சோயாவுக்கு உண்டு.

புரஸ்த கோளம் வராமல் தடுக்கும் தன்மை சோயாவுக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 

http://tamil.thehindu.com/general/health/புரதச்-சுரங்கம்-9-உலகை-ஆளும்-பருப்பு/article9039935.ece

Link to comment
Share on other sites

புரதச் சுரங்கம் 10: சப்பாத்தியுடன் வந்த இதயத்தின் நண்பன்

par_2988530f.jpg

ராஜ்மா என்ற பெயரில் நாம் அறிந்த உணவுப் பண்டம், சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளும் ஒரு வகை பிரட்டல். மோட்டாவான பயறு விதையைக் கொண்டு செய்யப்படும் இந்தப் பிரட்டலின் பெயரே, அந்தப் பயற்றுக்கான பெயராகவும் மாறிவிட்டது. இன்றைக்கு இந்தியா முழுவதும் அந்தப் பிரட்டலின் பெயரிலேயே, சுவை மிகுந்த அந்தப் பயறு விதையும் அழைக்கப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் அதிகப் புழக்கத்தில் இல்லாத பயறு வகை இது. கிடைக்கும் பயறு விதைகளிலேயே மிகப் பெரியதும்கூட. சிவப்பு, பழுப்பு கலந்த நிறத்தில் சிறுநீரகத்தைப் போலவே இருக்கும். அதனால் ஆங்கிலத்தில் கிட்னி பீன்ஸ் எனப்படுகிறது. வடஇந்தியாவிலும் மெக்சிகோவிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சப்பாத்தி போன்ற வட இந்திய உணவுகளுடன், சமீபகாலமாக இந்தப் பயறு வகையும் பிரபலமாகியுள்ளது.

பயன்பாடு

பெரிதான இந்தப் பயறு விதையை, மிக நீண்ட நேரம் ஊற வைக்க வேண்டும், இல்லையென்றால் வேகாது. இந்தப் பயற்றின் தோலில் சில நச்சுப்பொருட்கள் இருக்க வாய்ப்பு உண்டு. வேக வைக்கும்போது இது வெளியேறி விடும்.

சிவப்பு ராஜ்மாதான் பரவலாகக் கிடைக்கிறது. இது சாலட், பிரட்டல், குழம்பு, கெட்டிக்குழம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தனியாகச் சாப்பிடுவதைவிட, மற்றத் தானிய உணவு வகைகளுடன் சேர்த்துச் சாப்பிடும்போது ராஜ்மாவில் உள்ள புரதம் முழுமையாக உட்கிரகிக்கப்படும்.

ஊட்டச்சத்து

ராஜ்மாவில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனிமச்சத்துகள் அதிகம்.

இதில் இருக்கும் நார்ச்சத்து, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கக் கூடியது. மலத்தின் அளவையும் பெருக்கும்.

கரையக்கூடிய நார்ச்சத்து இதில் அதிகமாக இருக்கிறது. உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த நார்ச்சத்து உதவும்.

ஆங்கிலத்தில்: Kidney Beans

தாவரவியல் பெயர்: Phaseolus vulgaris

கரையக்கூடிய நார்ச்சத்து இதில் அதிகமாக இருக்கிறது. உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த நார்ச்சத்து உதவும்.

இதிலுள்ள அதிகப் புரதம், ரத்தசர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கும். அதன்மூலம் உடலின் ரத்தசர்க்கரை அளவை ஆரோக்கியமாகப் பராமரிக்கலாம்.

இதில் உள்ள இரும்புச்சத்து உடலுக்கு அதிகச் சக்தியைத் தரும், செரிமானத்துக்கும் உதவும்.

இதைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இதயத்தை வலுப்படுத்தும். இதிலுள்ள ஃபோலேட், இதய நோய்களுக்கு ஒரு காரணியான ‘Homocysteine’ அளவை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஃபோலேட் சத்து கர்ப்பிணிகளுக்கும் உகந்தது.

குடல் பகுதிகளில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கையை அதிகரித்து, குடலுக்கு வலிமையைக் கொடுக்கும்.

அத்தியாவசிய வைட்டமின் சத்துகள் இதில் அதிகம். இந்த வைட்டமின்கள், மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்து வதாக நம்பப்படுகிறது.

இதில் எதிர்-ஆக்ஸிகரணப் பொருள் (ஆன்டி ஆக்சிடண்ட்) அதிகம்.

தெரியுமா?

மற்றப் பயறு, பட்டாணி வகைகளைப் போல் ராஜ்மாவை முளைகட்டிப் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், இது ஊறுவதற்கே நீண்ட நேரம் பிடிக்கும்.

ராஜ்மா ஆங்கிலத்தில்: Kidney Beans

தாவரவியல் பெயர்: Phaseolus vulgaris

 

மைசூருக்கும் பருப்புக்கும் என்ன சம்பந்தம்?

மைசூர் பருப்பு, மைசூர் பருப்பு என்று சொல்லக் கேட்டிருப்போம். மைசூருக்கும் இந்தப் பருப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்தியில் மசூர் தால் எனப்படும் பருப்பு, தமிழகம் வந்தபோது மைசூர் பருப்பாகிவிட்டது.

துவரம் பருப்பைப் போன்ற தோற்றத்துடன், ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் பருப்பு இது. தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற போதிலும், கொஞ்சம் கொஞ்சமாக இது அறிமுகமாகிவருகிறது. இந்தப் பருப்பு எகிப்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. கி.மு. 11,000 ஆண்டிலிருந்து கிரேக்கர்கள் மசூர் பருப்பைப் பயிரிட்டுவந்ததாக நம்பப்படுகிறது.

பயன்பாடு

சோறு, சப்பாத்தியுடன் சேர்த்தோ அல்லது சூப்பின் சுவை, மணத்தைக் கூட்டவோ இந்தப் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. வடஇந்தியாவில் கிச்சடி தயாரிப்பில் அரிசியுடன் இந்தப் பருப்பும் சேர்க்கப்படுகிறது. இதை நீண்ட நேரம் ஊற வைக்க வேண்டியதில்லை, விரைவாக வெந்துவிடும்.

ஊட்டச்சத்து

இதில் புரதம் அதிகமென்பதால், விலங்கு புரதத்துக்குச் சிறந்த மாற்று. முளைகட்டிப் பயன்படுத்தினால் புரதக் கூறின் முழு பயன்களையும் பெறலாம்.

அதிக நார்ச்சத்து உண்டு. உடலில் சேர்ந்த கெட்ட கொழுப்பை நீக்க இது உதவும்.

இது சிறந்த ஆன்டி ஆக்சிடண்டும்கூட.

உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்தைத் தருவதால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உடலின் ஆற்றலை எளிதில் மீட்டெடுக்க உதவும்.

உணவு எதிர்க்களிக்கும் தொந்தரவுகளுக்கு இந்தப் பருப்பு தீர்வு தரும். இதைக்கொண்டு பித்த நீர்சுரப்பை முறைப்படுத்துவது பற்றி சில ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பருப்பை மசித்து முகப்பூச் சாகப் பயன்படுத்தினால் தோலில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு முகம் புத்துணர்வு பெறும். தோலின் மேற்பகுதியை மென்மையாக்க உதவுகிறது.

இது தோல் நோய்களைக் குறைக்க உதவுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

தெரியுமா?

மசூர் பருப்பை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு கனடா.

மசூர் பருப்பு ஆங்கிலத்தில்: Red Lentil / Masoor Dal

தாவரவியல் பெயர்: Lens culinaris

http://tamil.thehindu.com/general/health/புரதச்-சுரங்கம்-10-சப்பாத்தியுடன்-வந்த-இதயத்தின்-நண்பன்/article9069447.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

புரதச் சுரங்கம் 11: பட்டாணியில் பொதிந்திருக்கும் பேரூட்டம்

protein_3005384f.jpg
 

கடற்கரைக்குப் போனால் பட்டாணி சுண்டல், ரோட்டுக் கடைகளில் மாலை நேர நொறுவையாக மசாலாவில் தளபுளவென குதித்துக்கொண்டிருக் கும் பட்டாணி, ஸ்டார் ஹோட்டல்களில் பீங்கான் பாத்திரத்தில் தளும்பாமல் வரும் சூப்பில் மிதந்துவரும் பட்டாணி, சப்பாத்திக்கான தொடுகறியாகப் பட்டாணி மசாலா... இப்படி எளிமையான உணவு முதல் நாகரிக மோஸ்தர் ஏறிய உணவுவரை பச்சைப் பட்டாணிக்கு முக்கிய இடம் உண்டு.

நாட்டின் வடமேற்கில் உள்ள இமயமலை சமவெளிப் பகுதியைத் தாயகமாகக் கொண்டது பட்டாணி. அதேநேரம் மத்திய ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளின் வழியாக உலகம் முழுவதும் வேளாண் பயிராக இது பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வேளாண்மையின் ஆரம்பகாலத்தில் பயிரிடப்பட்ட உணவுப் பயிர்களில் பட்டாணியும் ஒன்று. அதனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இது பயிரிடப்பட்டு வருகிறது.

ஃபேபேசியே குடும்பத்தைச் சேர்ந்த கொடி வகைத் தாவரமான பட்டாணி, தோட்டங்களில் சாதாரணமாக வளர்க்கப்பட்டது. பச்சைப் பட்டாணி இனிப்பானது. அதேநேரம் காய்ந்த பிறகு இளம்பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும், இனிப்புச் சுவையும் குறைந்துவிடும். ஆரம்பக் காலத்தில் பட்டாணியைக் காய வைத்தே சாப்பிட்டிருக்கிறார்கள். பிறகுதான் பச்சையாகவும் சாப்பிடலாம் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

தற்போது உலகின் முதன்மை பட்டாணி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் கனடாதான். அதற்கடுத்ததாக ஃபிரான்ஸ், சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் வருகின்றன. இந்தியாதான் பச்சைப் பட்டாணியை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

பயன்பாடு

பட்டாணியை வேக வைப்பதற்கு முன், கொஞ்ச நேரம் ஊற வைத்தாலே போதும். இதை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் பொருமலை ஏற்படுத்தலாம், சிலருக்கு நன்றாகச் செரிமானம் ஆகாமல் போகலாம். இதைத் தவிர்ப்பதற்கு ஊற வைத்து முளைகட்டுவது ஒரு நல்ல வழி.

பட்டாணிக் கொடியின் பற்றுக்கம்பியும்கூட சில பகுதிகளில் உண்ணப்படுகிறது. கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சாலட்களிலும் சமையலிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

சந்தையில் கிடைக்கும் சாயம் பூசப்பட்ட பச்சைப் பட்டாணியைத் தவிர்ப்பது நல்லது. பட்டாணியைச் சிறிது நேரம் நீரில் ஊற வைத்தால், நீர் பச்சை நிறமாக மாறுவதைக் கொண்டு சாயம் சேர்க்கப்பட்டதைக் கண்டுபிடிக்கலாம்.

ஊட்டச்சத்து

# பட்டாணியில் கரையும் நார்ச்சத்து, கரையாத நார்ச்சத்து அதிகம் உண்டு. ஒரு கோப்பைப் பட்டாணியில் 19 கிராம் நார்ச்சத்து இருக்கும். நார்ச்சத்து குடலைத் தூய்மைப்படுத்தக்கூடியது.

# ஒரு கோப்பைப் பட்டாணியில் 16 கிராம் புரதச் சத்து இருக்கிறது. விலங்குப் புரதம் கிடைக்காதவர்கள் பட்டாணியை மாற்றாகப் பயன்படுத்தலாம்.

# பட்டாணியில் கால்சியம், இரும்புச்சத்து, செம்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், மக்னீஷியம் போன்ற கனிமச்சத்துகள் உண்டு.

# பட்டாணியில் கொழுப்பு குறைவு. அதுவும் பெரும்பாலும் நல்ல கொழுப்பு.

# இதிலுள்ள பைட்டோஸ்டீரால் உடலின் கெட்ட கொழுப்பு அளவை குறைத்து எலும்பை வலுப்படுத்தக்கூடியது. எலும்பு வலுவிழப்பு நோயை (ஆஸ்டியோ போரோசிஸ்) குறைக்கும். நரம்புச் சிதைவைக் குறைத்து அல்சைமர் நோயையும் மட்டுப்படுத்தும்.

# செரிமானத்தை மேம்படுத்துவதாலும், விரைவாகச் சாப்பிட்ட நிறைவைத் தருவதாலும் எடை குறைப்புக்கும் பட்டாணி உதவும்.

# இரும்புச்சத்து குறைபாடு உடையவர்களுக்கு இது நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும். அதனால் குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், மாதவிடாய் பிரச்சினை இருப்பவர்களுக்கு இதைப் பரிந்துரைக்கலாம்.

# ரத்தச் சர்க்கரை அளவை சீர்ப் படுத்தும் என்பதால், நீரிழிவு நோயைக் குறைக்கும் தன்மையும் உண்டு.

# உடல் வீக்கத்தைக் குறைக்கும் Pisumsaponins, pisomosides போன்ற தாவர நுண்ணூட்டச்சத்துகள் (ஃபைட்டோநியூட்ரியன்ட்ஸ்) இதில் அதிகம். அதன் காரணமாகவே அதன் அறிவியல் பெயர் pisum என்று வந்தது.

# இதில் இருக்கும் coumestro# என்ற பாலிபீனால் வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.

# பட்டாணியில் வைட்டமின் சத்துகளும் அதிகம். வைட்டமின் ஏ, வைட்டமின் பி (ஃபோலேட்), வைட்டமின் கே, நியாசின், தயமின் போன்றவை உள்ளன.

# இதில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் ‘சி’யை இதிலிருந்தே பெறலாம். வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலத்தைத் தருகிறது. நீரில் கரையக்கூடிய இந்த வேதிப்பொருள் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடக் கூடியது. நோய் தடுப்பாற்றலைப் பெருக்கும்.

# வைட்டமின் கே எலும்பை வலுப்படுத்தி, எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

# கண்பார்வைக்கு உதவும் Lutein, zeaxanthin போன்ற பொருட்கள் பட்டாணியில் அதிகம் இருப்பதால், சிறுவயது முதலே குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம்.

# பச்சை பட்டாணியில் ’சாப்போனின்’ (Saponin) அதிகமாக உள்ளது. இதற்கு வீக்கமுறுக்கி (Anti-inflammatory) செய்கை இருப்பதால் வாத நோய்களுக்குச் சிறந்தது.

# உடலுக்கு நன்மை தரும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பீட்டா கரோட்டீன் பட்டாணியில் பொதிந்து கிடக்கின்றன.

பட்டாணி

ஆங்கிலப் பெயர்: Green Pea/ White Pea/ Mattar

தாவரவியல் பெயர்: Pisum sativum

 

(நிறைவடைந்தது)

தொடர் உருவாக்கத்தில் உதவியவர்கள்:

இயற்கை வேளாண் நிபுணர்கள் - பாமயன், அனந்து,

அரசு சித்த மருத்துவர்கள் - டாக்டர் ஜெ. ஸ்ரீராம், டாக்டர் வி. விக்ரம்குமார்.

 

http://tamil.thehindu.com/general/health/புரதச்-சுரங்கம்-11-பட்டாணியில்-பொதிந்திருக்கும்-பேரூட்டம்/article9094103.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.