Jump to content

மனச்சிறையில் சில மர்மங்கள்


Recommended Posts

மனச்சிறையில் சில மர்மங்கள் - 1

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

p12a.jpg

மீதமிருக்கும் காதல்கள்

கல்பனா ஒரு பக்திமான். முருகன்தான் அவளுடைய இஷ்ட தெய்வம். அந்த ஊரின் பிரபல முருகன் கோயில்களில் இவள் ஒரு முக்கியப் புள்ளி. அவள் வீட்டு பூஜை அறையே ஒரு மினி முருகன் கோயில் மாதிரிதான் இருக்கும். ஆனால், திடீரென்று அவளுடைய 20 வயது மகன் அன்பு, அருள் வந்து சாமி ஆடியதைப் பார்த்து அவளுக்கு பெரும் கவலை ஏற்பட்டது.

அன்பு, ஆ... ஊ... என்று கத்தினான். ஏ... என்று எகிறினான். சில நிமிடங்கள் சிலை மாதிரி இருந்தான். அப்புறம் ஓ... என்று அழுதான். உடனே ஈ... என்று பல்லைக் காட்டி ஓவராய் சிரித்தான். கல்பனாவுக்கு இவனுடைய நடத்தை பயத்தைக் கிளப்பியது.

சத்தம் கேட்டு வந்த அண்டை அயலார் எல்லாம், “இவ பாட்டுக்கு பிள்ளைங்களை கவனிக்காம சாமி சாமினு சுத்திக்கிட்டு இருந்தா. அதான், பையனுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு” என்று கிசுகிசுத்தபோதுதான், திடீரென வீறுகொண்டு, “ஏய்... நான்தான் கதிர்காமன் வந்திருக்கேன்” என்றான் அன்பு.

உடனே எல்லோரும், ‘ஓம் முருகா, அரோகரா, சிவ சிவா’’ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு, அன்புக்கு மரியாதை செய்து, சூடம் ஏற்றி, முருகனை மலையேறவைத்தார்கள்.

அதற்குப் பிறகும் அன்பு அமைதியாகவே இருந்தான். தனிமையை விரும்பினான். அவனுடைய அறையை இருட்டாக்கிக் கொண்டான். சாப்பிடாமல் உடல் மெலிந்தான். தூக்கமும் குறைவுதான்போல. ஆனால், கல்பனாவுக்கு எதையும் தெளிவாகக் கவனிக்கக்கூட முடியவில்லை. அவளுக்கும் அவள் கணவனுக்கும் ரொம்ப காலமாகவே உறவு கசந்துவிட்டதால், இவள் ஏற்கெனவே மனமுடைந்துபோய், முருகனே கதி என்று கிடந்தாள். குழந்தைகளின் நலன் கருதி கணவனோடு ஒரே வீட்டில் வாழ்வதை சகித்துக்கொள்ளும் பெண்களின் பேசிக் ஃபார்முலாவை அவளும் கடைப்பிடித்திருந்தாள். ஆனால், இப்போது இத்தனை நாள் கஷ்டப்பட்டதற்கெல்லாம் பலனே இல்லாமல் பையன் இப்படிச் சித்தம் கலங்கி இருப்பதைப் பார்த்தால்…

p12.jpg

கல்பனா முடிந்த மட்டும் தன் மகனுக்கு உதவ முயன்றாள். கோயிலில் அன்புக்கான பிரத்யேக பூஜைகள், மிக வலிமை எனக் கருதப்பட்ட சண்டி யாகம், பரிகாரங்கள், க்ஷேத்திராடங்கள் எல்லாமே செய்தும், அன்பு அடிக்கடி ஆள் மாறி, மிருகம் மாதிரியும், முருகன் மாதிரியும், சிலை மாதிரியும் நடந்துகொள்ள, மனமுடைந்துபோய், ஒரு மனநல மருத்துவரை அணுக முடிவுசெய்தாள். ‘‘முருகா என் பையனுக்கு வந்தது சின்னப் பிரச்்னையா இருந்துடச் செய்யப்பா.  எந்தவித மோசமான சேதியும் எனக்கு வந்துடக் கூடாதப்பா, கடம்பா, கார்த்திகேயா”... டாக்டரின் காத்திருப்பு அறையில் இவள் மனதுக்குள் கந்தசஷ்டி கவசம் ஒப்பித்துக் கொண்டிருக்க... உள்ளே அன்பு, டாக்டரிடம் தன் பிரச்னைகளைச் சொல்லிக்கொண்டிருந்தான்.

“அவ்வளவு உயிருக்கு உயிரா லவ் பண்ணேன் டாக்டர். நானும் அவளும் சந்திச்சு, பேசி, சிரிக்காத இடமே எங்க வீட்டுல இல்ல. எங்க ஊர் முழுக்க ஒரு ரெஸ்டாரென்ட், பீச், சினிமா தியேட்டர் பாக்கி இல்லை. அவ்வளவு சுத்தி இருக்கோம்.  அவளோட டைம் ஸ்பென்ட் பண்ணுறதுலயே நான் பரீட்சைக்குக் கூடப் படிக்கல. பரீட்சைக்கு ரெண்டு நாள் முன்னாடி, பார்த்திபனை அவ வீட்டுல கொஞ்சிக்கிட்டு இருக்குறத பார்த்தேன். எப்படி நீ எனக்கு இப்படித் துரோகம் பண்ணலாம்னு சண்டை போட்டேன். அவ ரொம்ப சிம்பிளா, ‘வர வர எனக்கு உன்னைப் பிடிக்கவே இல்லை.  சொன்னா நீ ரொம்ப ஃபீல் பண்ணுவியே, எப்படிச் சொல்றதுனு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்… இட் இஸ் ஓவர் அன்பு’னு போயிட்டா. அன்னிலேர்ந்து எனக்கு வாழவே பிடிக்கல. அவளால பரீட்சைக்கும் நான் பிரிப்பேர் பண்ணல. பரீட்சை எழுதவும் எனக்கு மூடே இல்லை. எங்க பார்த்தாலும் அவ நினைப்பாவே வருது. எனக்கு வாழவே பிடிக்கல’’ தேம்பி அழுதுகொண்டிருந்தான் அன்பு.

அவன் அழுது முடித்தபின் டாக்டர் கேட்டார். ‘‘சப்போஸ் திஸ் இஸ் அ நாவல்... நீதான் நாவலோட ஹீரோ. ஏழாவது சாப்டர்ல ஹீரோவுக்கும் அவனோட கேர்ள் ஃப்ரெண்டுக்கும் பிரேக் அப் ஆயுடுது… அத்தோட அந்தக் கதைய முடிச்சிட்டா நல்லா இருக்குமா?”

‘‘நோ டாக்டர், நான் வாழணும். எங்க அம்மா அப்பா என் மேல உயிரையே வெச்சிருக்காங்க. எங்கம்மா எனக்காகத்தான் என் அப்பாவோட அயோக்கியதனத்தை எல்லாம் பொறுத்துக்கிட்டு அந்த வீட்டுல இருக்காங்க. எங்க அம்மா படுற கஷ்டத்தை எல்லாம் பார்த்து நானே நினைச்சிருக்கேன். என் வைஃப்க்கு நான் ரொம்ப லவ்விங் ஹஸ்பண்டா இருக்கணும்னு. அதுதான் இவகிட்டயும் அவ்வளவு அன்பா இருப்பேன். அவளை நான் மறக்கணும் டாக்டர். அவ ஞாபகங்கள் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. அது மட்டும் இல்லன்னா நான் பாட்டுக்கு இருப்பேன் டாக்டர். Time healsனு சொல்வாங்களே டாக்டர், கால போக்குல இந்தக் கதையோட ஹீரோவும் இதை எல்லாம் கடந்துவந்து வெற்றியாளனாயிடணும். ஆனா, இந்த லவ் மேட்டரை எங்கம்மாகிட்ட சொல்லிடாதீங்க டாக்டர். வாழ்க்கை முழுக்கச் சொல்லிக் காட்டியே கொன்னுடுவாங்க.”
அம்மாவிடம் டாக்டர், “லைட்டா கொஞ்சம் டிப்ரஷன்” என்று மட்டும்தான் சொன்னார்.  மாத்திரைகளை எழுதித் தந்தார்.  மாத்திரைகளைச் சாப்பிட்டு,  நிம்மதியானான்  அன்பு. முருகன் அருள் அத்தோடு ஓய்ந்தது. தூக்கம், பசி, மனநிலை, ஈடுபாடுகள் எல்லாமே நார்மல் ஆயின. இருந்தாலும் அவனால் படிக்க மட்டும் முடியவில்லை.

“புக்கைத் திறந்தாலே அவ நினைப்புதான் வருது டாக்டர். மத்த காதல் ஜோடிகளைப் பார்க்கும்போது அவ்வளவு பொறாமையா இருக்கு. அவளுக்கு ஏன் என்னைப் பிடிக்காம போச்சு? என்னை வேண்டானு சொன்னவளை நான் பழிவாங்கணும்னு தோணுது டாக்டர்.”

காதல் தோல்வி என்பது ரொம்பவும் கொடுமையான ஓர் அனுபவம்தான். அந்தக் கால அரேபியன் மருத்துவத்தில் அதற்கு ‘இஷ்க் பிமாரி’ என்று பெயர். அரேபிய மருத்துவ நூலில் சொல்லப்பட்ட அத்தனை நோய் அறிகுறிகளும் இன்றளவும் பொருந்தும்.

எல்லா உயிரினங்களுக்கும் ‘லைஃப் சைக்கிள்’ என்பது ஒன்றேதான். குட்டியாய்ப் பிறப்போம்... வளர்ந்து குழந்தையாவோம். குழந்தைப் பருவம் விளையாட்டு ரீதியில் வாழ்வைப் புரிந்து கொள்வதற்கான காலம். விளையாட்டும், உணவும்தான் இந்த வயதின் பிரதான வேட்கை. பதின்பருவம் வாழ்க்கையோடு மோதி அனுபவரீதியாக உலகைப் புரிந்துகொள்ளும் காலம்.  துணை தேடலும், இனச்சேர்க்கையும்தான் பதின் பருவத்தின் பிரதான வேட்கை.

காட்டுவாசிகள் இன்றும் பதின்பருவத்தில்தான் திருமணம் செய்கிறார்கள். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கும் முன்புவரை நம் கொள்ளு தாத்தாவும், மிஸஸ் கொள்ளுவும்கூட டீன் ஏஜில் திருமணம் செய்துகொண்டவர்கள்.

ஆனால், நகர்ப்புறங்களில் வாழும் இன்றைய மனிதர்கள் டீன் ஏஜில் திருமணம் செய்வதில்லை. உடலோ, மனதோ, முதிராத இந்த வயதில் திருமணம் என்பது உடல் சுகத்தைத் தந்தாலும், கூடவே கண்ணுக்குத் தெரியாமல் அதனோடு பின்னிப் பிணைந்திருக்கும் குடும்பச் சுமைகளை பதின்பருவ மூளை எப்படிச் சமாளிக்கும்? அந்தக் காலத்திலாவது மருத்துவ வசதிகள் கிடையாது. அதனால் ஜனத்தொகை குறைவு. ஆனால், இன்று ஜனத்தொகை இவ்வளவு அதிகமாய் இருக்கும்போது, பதின்பருவத்திலேயே குட்டிப் போட ஆரம்பித்தால்...

ஆனால், இயற்கைக்குப் பொருளாதாரத்தைப் பற்றி எல்லாம் கவலையே இல்லை. பதின்பருவத்தை அடைந்த உடனே காதல் எனும் மாபெரும் தேடலை அது மனதுக்குள் தூண்டிவிடும். சிலர், அதனைத் தாண்டி தலைப்படுவர். பலர் அதனை செய்து சீரழிவர்.

எல்லாவற்றையும் சொல்லித் தரும் நம் பெற்றோரும், பள்ளிக்கூடமும், எந்தப் பதின்பருவ காதல், காம வேட்கைகளை எப்படிக் கையாள்வது என்கிற முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருவதே இல்லை.

அதனால்தான் ஒவ்வொரு தனி மனிதனும், மனுஷியும் சுயமாகவே காதலில் விழுந்து, அதில் நீந்தி, அதன் சாதக பாதகங்களைத் தாமாகவே கற்று அறிந்துகொள்ள வேண்டிய நிலைமை இருக்கிறது.

ஆனால், இயற்்கையில் காதலின் அவசியம் என்ன தெரியுமா?

காதல், ஜோடி சேர்்தல், இணைந்தே இருத்தல் என்பது எல்லாம், ரொம்பவும் அரிதான வாழ்வியல் யுக்திகள். பெரும்பாலான மிருகங்கள் காதல் செய்வதில்லை. இனச்சேர்க்கை காலத்தில் முகம்கூட பாராமல் மானாவாரியாய்ப் புணர்ந்துவிட்டு, பிரிந்து போய்விடும். பிறகு பெண் மட்டும் குட்டிகளைத் தனியே வளர்க்கும் அல்லது முட்டை இட்டு விட்டு, அடுத்த சீஸனுக்கு ரெடியாகும்.

மிகச் சில ஜீவராசிகள் மட்டுமே காதல், புணர்ச்சி, குட்டி, அதன் பிறகும் பிரிவில்லா இன்பச்சேர்க்கை என்கிற ரீதியில் வாழ்கின்றன. உதாரணத்துக்குப் பறவைகள்... மனிதர்கள்... டால்ஃபின்கள். இந்த மூன்றுமே வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த உயிர்கள். ஆனால், மூன்றும் ஒரே காதல் செய்யும் ஒரே யுக்தியைப் பயன்படுத்துகின்றன. ஏன்?... ஏன் என்றால், இந்த மூன்றின் குட்டி வளர்ப்பும் ரொம்பவே சிரமம். ஒரே ஒரு பெற்றோரால் இந்தக் குட்டிகளைத் தனியாக வளர்த்துவிட முடியாது. இந்தக் குட்டிகள் ரொம்ப காலத்துக்குப் பெற்றோரைச் சார்ந்தே இருக்கும் என்பதால், அதன் ஆயுட்காலத்தின் பெரும் பகுதி பிள்ளை வளர்ப்புக்கே போய்விடும் என்பதால், தாய் தந்தை இரண்டும் சேர்ந்து ஒற்றுமையாய் வாழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

p12b.jpg

இதை அனுசரித்துதான், இந்தச் சில உயிரினங்களுக்கு மட்டும் காதல் எனும் ரசாயனப் போதையை இவற்றின் மனதில் இயற்கை ஒளித்துவைத்திருக்கிறது. காதல் எனும் போதை இருப்பதால்தான் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்க முயல்கிறார்கள். இவர்கள் சேர்ந்தே இருந்தால்தானே பெற்றோர் கடமையை ஆளுக்குப் பாதி பாதியாய் சுமந்து குட்டிகளைச் சிறப்பாக வளர்க்கலாம்.

இவ்வளவெல்லாம் செய்த இயற்கை, இன்னும் ஒரு சூட்சுமமும் செய்தது. ஒரு குட்டி ப்ளாஷ்பேக். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு குட்டி மனிதக் கூட்டம். மொத்தம் 30 பேர். பதின்பருவத்தினர் ஒரு டஸன். ஒரு 15 வயது பெண்ணும், 17 வயதும் ஆணும் காதலிக்கிறார்கள். வேட்டைக்குப் போன அந்தக் காதலன் செத்துவிட்டான்.  இப்போது அவன் காதலி என்ன செய்தால்...அவளுக்கும், அவளுக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கும், அவள் கூட்டத்துக்கும் நன்மை?

(1) இறந்துபோன காதலனை நினைத்து நினைத்து ஏங்கி உருகி இவளும் செத்துவிடலாம். (2) அவன் நினைவாகவே திருமணமே செய்துகொள்ளாமல் துறவி ஆகிவிடலாம். (3) கொஞ்ச நாள் அழுது புலம்பிவிட்டு, பிறகு தெளிந்து மீண்டும் காதல் கொண்டு மீண்டும் வெற்றிகரமாய் குழந்தை பெற்று வளர்க்கலாம்.

இந்த மூன்றில் கடைசி யுக்தி மட்டுமே இயற்கைக்குப் பொருத்தமானது. ஏனென்றால், இயற்கையில் உயிரினங்களின் தலையாயப் பணி மேலும் பல உயிர்களை உருவாக்குவதுதான்.

அதனால்தான் ஒரு காதல் பலிக்காவிட்டால், மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த காதலில் விழும் தன்மை மனிதர்களுக்கு உண்டு. அதனால்தான் மனிதக் கலவி முறையை serial monogamy என்போம். அதனால் ஒரு காதல் தோற்றுப் போனால், அத்தோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. மனம், ஆறி... தேறி மீண்டும் காதல்கொள்ளும். அதுவரை தாக்குப்பிடித்தால் மட்டுமே போதும்.

ஒரு சராசரி மனிதர் தன் வாழ்நாளில், கிட்டத்தட்ட ஆறு முதல் 10 முறை காதல் கொள்கிறார். அதனால், முதல் காதலோடு வாழ்க்கை முடிந்துவிடாது. ஒரு குட்டி pause-க்கு அப்புறம், சூப்பராய் பயணம் தொடரத்தான் செய்யும்.

அன்பு, இதை அறிந்தபோது நம்பிக்கை பெற்றான். Whatever happens, life goes on என்று உறுதியானான். ‘இஷ்க் பிமாரி’ விலகியது.

(மர்மம் அறிவோம்)

vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தொடர்...தொடருங்கள் நவீனன்

Link to comment
Share on other sites

மனச்சிறையில் சில மர்மங்கள் - 2

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

p12a.jpg

கைக்கிளை காயங்கள்

கீரதனுக்கு தன் மகள் மீது எக்கச்சக்க பாசம். அவ்வளவு பாசத்துக்கும், அவ்வப்போது எட்டிப் பார்க்கும், “என் மகளைப்போல வருமா?” என்ற பெருமைக்கும் பாகி தகுதியானவள்தான்.

அடுத்த வருஷம் அவளுக்கு ஒரு நல்ல வரனைப் பார்த்துக் கட்டிக் கொடுத்துட்டா, வேற எந்தக் கவலையுமே இல்லாம நிம்மதியா ரிடையர்ட் ஆகலாம் என்ற நினைப்பில் இருந்தார் பகீரதன்.

வேலைக்குப் போய் ஆறேழு மாதங்கள் ஆன பிறகு, “பாகி, இப்ப மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாதான் அடுத்த ரெண்டு வருஷத்துக்குள்ள அமையும். நல்ல மாப்பிள்ளை கிடைக்கிறது...” என்று அவர் ஆரம்பிக்கும்போதே பாகி பூடகமாகச் சிரித்தாள். வாழ்நாளிலேயே அவள் முதல் முறையாய் இப்படி ஒரு கள்ளச் சிரிப்பு சிரிக்க, பகீரதனுக்கு பக் என்று ஆனது. “எம்மா, நீ மனசுக்குள்ள யாரையாவது நினைச்சிருக்கியா?”

பாகி மீண்டும் ஒரு புன்னகையுடன் வெட்கப்பட்டுத் தலைக்குனிய, பகீரதன் மனதில் ஆயிரம் கவலைகள். முதலில் நம் இனமா... நம் பிரிவா... நம்ம வகையராவா... அதன்பிறகு, நல்லவனா... என் பொண்ணை நல்லா வெச்சிப்பானா... குடும்பம் எப்படியோ... படிப்பு, வருமானம், ஜாதகம்? 
“யாருமா அது?” என்றார் கலவரத்துடன்.

“எங்க டீம் லீடர்.”

“பேர் என்ன?”

“நதீம் முகமது.”

“என்னது முஸ்லிமா!”

“ரொம்ப நல்லவருப்பா. இவ்வளவு நல்ல மனுஷனை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லப்பா. ப்ளீஸ் அப்பா. நீங்க ஒரு தடவை வந்து அவரைச் சந்திச்சீங்கன்னா, உங்களுக்கே புரியும்.”

 “என்னம்மா சொல்ற?  ஊர்ல எல்லாம் என்னைக் காறி துப்பமாட்டாளா? பெரிசா ஐ.ஐ.டி-ல படிச்சு, மெட்ராஸுல வேலை செய்யுறா மகனு பீத்திண்டு இருந்தாரே, இப்ப பார், அவர் பொண்ணு ஒரு முஸ்லிமைக் கட்டிக்கப் போறாளாம்னு என்னைப்பற்றி அசிங்கமா பேசுவாளே!”

“நீங்க இப்படி பேக்வேர்டா இருப்பீங்கனு நானும் நினைக்கவே இல்லை. இனிமே நீங்க ஃபார்வர்டு கம்யூனிட்டினு சொல்லிக்காதீங்க.”

“இந்த வேலையும் வேண்டாம்... ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். பேசாம ஊருக்கு வந்து சேரு.”

அவரை, சட்டையே செய்யாமல் அழுதுகொண்டு இருந்தாள் பாகி. 

ஊருக்கு வந்ததும், மனைவியிடம் தன் கோபத்தை எல்லாம் காட்டினார் பகீரதன், “என்ன பிள்ளைய பெத்து வெச்சிருக்க நீ? முஸ்லிமைத்தான் கட்டிப்பாளாம். வெளியில் தலைக்காட்ட முடியாதபடி பண்ணிடுவாபோல இருக்கே… இவளையா நான் அவ்வளவு ஒசத்தியா தலை மேல வெச்சி கொண்டாடிக்கிட்டு இருந்தேன்.”

ஆனால், மனசு கேட்கவில்லை.  பாகியின் ரூம்மேட் யசோதாவுக்கு போன் செய்து பேசினார். “பாகி எப்படி இருக்கா?”

“கொஞ்ச நாளாவே அவ சரியில்லை அங்கிள். நானே எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்.  நைட் மூணு மணி வரைக்கும் என்னமோ கிறுக்கிக்கிட்டு இருக்குறா. காலையில் பத்து பதினோரு மணிக்கு தானா எந்திரிக்கிறா. ஆஃபீஸுக்கு தினமும் லேட். எங்க
டி.எல் திட்டுறார். இவ பாட்டுக்கு கிறுக்காட்டமா அவரைப் பார்த்துச் சிரிக்கிறா.”

“உனக்கும் அவளுக்கும் ஒரே டி.எல்-லாமா?”

‘‘ஆமா அங்கிள்.”

”உங்க டி.எல் எப்படி?”

“அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன்.”

என்னமோ அவனைப் பற்றி யாரும் நல்ல வார்த்தைகள் சொன்னால் பகீரதனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

p12.jpg

இந்தப் பிரச்னை குறித்து அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் ஒரு நாள் அந்த போன் கால் வந்தது, “ஹலோ, நான் நதீம் முகமது பேசுறேன்…” என்றதுமே பகீரதனுக்கு தூக்கிவாரிப் போட்டது. அடப்பாவி, இவன் பொண்ணு கேட்கப் போறானோ, என்ன தைரியம்? சட்டென போனை வைத்துவிட்டார்.

மறுபடியும் போன் வந்தது, “மிஸ்டர் பகீரதன்... உங்க பொண்ணு விஷயமா பேசணும்.”

“என்ன பேச வேண்டி இருக்கு?”

“உங்க பொண்ணை நாங்க வேலைல வெச்சிக்க முடியாது. அவங்களுக்கு மனநிலை சரியில்லைனு தோணுது. நீங்க…”

“என்னடா சொன்னே! என் பொண்ணுக்கு மனநிலை சரியில்லையா?’’ வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளைச் சொல்லி அவனை லட்சார்ச்சனை செய்த பிறகே ஓய்ந்தார் பகீரதன்.

அத்தனையும் கேட்டுமுடித்துவிட்டு, “உங்களுக்கு இது ரொம்ப பெரிய ஷாக்கா இருக்கும்னு எனக்குப் புரியுது. நாங்க போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம்னு இருக்கோம். அதுக்குள்ள உங்க பொண்ணை வந்து கூட்டிட்டுப் போயிடுங்க” என்றான் அவன் மிக அமைதியாய்.
பகீரதனுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நெஞ்சழுத்தம்? கோபத்தில் அவசர அவசரமாய் கிளம்பி சென்னை வந்தார் பகீரதன். அவருக்காகவே காத்திருந்ததுபோல, அவர் பெயரைக் கேட்டதும், ஹெச்.ஆர் மேனேஜர் அவரைத் தன் தனி அறைக்கு அழைத்துப் போனார்.

“சார், உங்களை கான்டாக்ட் பண்ண நாங்க ரெண்டு வாரமா டிரை பண்றோம். பாகிக்கு மைண்ட் டிஸ்டர்ப்டா இருக்குன்னு நினைக்கிறேன்.”

“என் பொண்ணைப் பத்தி” என்று பகீரதன் கோபமாய்ப் பேசும்போதே, அந்தம்மா ஒரு கோப்பை திறந்து பல பேப்பர்களை அவர் எதிரில் அடுக்கினார், “உங்க மகள் எங்க ஸ்டாப்ஃபை தொல்லை பண்றாங்க. நதீம் முகமது இமெயிலை ஹாக் பண்றாங்க. அவருக்கு கல்யாணமாகி ரெண்டு பசங்க இருக்காங்க. நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கலைன்னா உன் பசங்களை கொன்னுடுவேனு மிரட்டி வாட்ஸ்அப்ல மெசேஜ் அனுப்பிக்கிட்டு இருக்காங்க.”

பகீரதன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்தார். முஸ்லிம்னு மட்டும்தான்னு நினைச்சேன், அவனுக்குக் கல்யாணம் வேற ஆயிடுச்சாமே!

‘‘நதீமோட மிஸஸ் போனுக்கும் உங்க பொண்ணு இதே மாதிரி மிரட்டல் எல்லாம் அனுப்பிட்டதுனால, அவங்க போலீஸுக்கு போயே தீருவேனு கோபமா இருக்காங்க. சார், நீங்க தயவுசெய்து உங்க பொண்ணைக் கூட்டிட்டுப் போயிடுங்க. அவங்க வேலைக்குச் சேர்ந்ததிலிருந்தே வெரி பேட் ஒர்க் பர்ஃபாமென்ஸ். எதையுமே புரிஞ்சிக்கிறதில்லை. தானா பேசுறாங்க... தானா சிரிக்கிறாங்க. நாங்களும் எங்க ஆபீஸ் சைக்காலஜிஸ்ட்கிட்ட கவுன்சலிங்கெல்லாம் அனுப்பிப் பார்த்துட்டோம். நோ யூஸ். பிரச்னை இப்ப போலீஸ் வரைக்கும் போகுறாப்புல இருக்கு. ஒரு பொண்ணோட லைஃப்னுதான் உங்களை பர்சனலா கூப்பிட்டுச் சொல்றேன்.”

பகீரதனுக்கு பாதி புரியவில்லை. ஆனால், தன் மகள் ஏதோ பிரச்னையில் இருப்பது புரிந்தது. அவளை உடனே தன்னோடு கொண்டு போய்விட வேண்டும் என்று தெரிந்தது. “உங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். உங்களைக் கூட்டிட்டுப் போக உங்கப்பா வந்திருக்கார் பாகி” என்று இன்டர்காமில் ஹெச்.ஆர் அழைத்தார். பாகி வந்தாள். அதே சாந்தமான, பவ்யமான பாவனையோடு. பகீரதன் கண்கலங்கி, “அம்மா, பாகி” என்று அழ, உண்மையிலேயே அம்மாவுக்குத்தான் என்னவோ என்று பயந்து, பாகி அப்பாவோடு கிளம்பிவிட்டாள்.

எதற்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டை போய்ப் பார்த்து தெளிவு பெற்றுவிடுவது நல்லது என்று முடிவெடுத்தார் அப்பா.  “எதுக்குப்பா சைக்கியாட்ரிஸ்ட்?” என்று பாகி கேட்டபோது, “அம்மாவுக்காக” என்று சொல்லிவிட்டு, டாக்டரிடம் தனியாகப் பேச வாய்ப்புக் கிடைத்ததுமே, எல்லா விவரங்களையும் சொன்னார் பகீரதன். டாக்டர் பாகியிடம் சில நிமிடங்கள் தனியாகப் பேசினார், பிறகு பகீரதனை தனியே அழைத்து, “உங்க மகளுக்கு பிரச்னை இருக்குறது உண்மைதான்” என்றார்.

p12c.jpg

“டெலூஷன் ஆஃப் லவ்னு சொல்வோம். 

தி கிளாரம்பாட் சின்ரோம். ஆண்டாள், பெருமாளை லவ் பண்ணது... மீரா, கிருஷ்ணாவை லவ் பண்ணது...உங்க பொண்ணு, அவங்க நதீமை லவ் பண்றது… எல்லாமே காதல்ன்ற ஒரு கருத்துப் பிறழ்வுதான். மனச்சிதைவு நோய்ல இது ஒரு வகை. மருந்து குடுத்தா சரியாயிடும்.”

”மருந்து குடுத்தா காதல் நோய் எப்படி டாக்டர் குணமாகும்?”

”சார், இது நிஜ காதல் இல்லை. வெறும் பிரமை. நமக்கெல்லாம் அது கற்பனைனு தெரியும். ஆனா அவங்க அதை நிஜம்னு ஆணித்தரமா நம்புவாங்க. இந்த மாதிரி வலுவான பொய் நம்பிக்கைகளைத்தான் டெலூஷன்னு சொல்வோம். பொதுவா தன்னை விட அதிக அந்தஸ்துல இருக்குற கவர்ச்சியான ஆள் மேலதான் இந்த டெலூஷன் ஆஃப் லவ் வரும். சில கேஸ்ல இவங்க லவ் பண்ணுறதா நினைக்கிறவருக்கு இவங்களை யாருனே தெரியாது. இவங்களே ஒருதலையாய் காதல்னு கற்பனை பண்ணிக்கிட்டு, மனசு பேதலிச்சிப் போவாங்க. இதெல்லாம் மூளையில டோபமின் மாதிரியான ரசாயனங்கள் அதிகமா சுரக்குறதனால வர பிரமைகள். அதிகப்படியான டோபமின்னை குறைக்கிற மருந்தைத் தொடர்ந்து சாப்பிட்டா, படிப்படியாச் சரியாயிடும்.”

இப்படி எல்லாம் ஒரு நோயா என்ற வியப்போடு மகளுக்கான மருந்துகளை வாங்கிக்கொண்டு, “அதுக்குள்ள அந்தப் பிள்ளையாண்டானை எப்படி எல்லாம் திட்டிட்டோமே, கடவுளே, என்னை மன்னிச்சிடு. என் பிள்ளையக் காப்பாத்து, உனக்கு 100 தேங்காய்….” என்று சேவிக்க ஆரம்பித்தவர், “ச்சு, உனக்கு திருக்கல்யாணம் பண்ணிவெக்குறேன்” என்று பிரார்த்தனையை மாற்றிக்கொண்டார்!

(மர்மம் அறிவோம்)

vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நவீனன்....!

இப்பதான் நிம்மதியாய் இருக்கு....! அப்ப நம்மட காதல் எல்லாம் உந்தக் கடைசிக்கு முதல் பந்திக்குள்ள அடங்கிடுது....!!

Link to comment
Share on other sites

மனச்சிறையில் சில மர்மங்கள் - 3

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

அழகே சுகமா?

‘கபாலி’ பட டிரைலரில் ரஜினி சொல்வாரே, “கன்னத்தில மரு வெச்சிக்கிட்டு”னு... அதுபோன்ற ஒரு பெரிய மரு, முத்துவுக்கும் இருந்தது. ‘‘அதிர்ஷ்ட மச்சம். மத்த பிள்ளைகளுக்கு எல்லாம் திருஷ்டிபட்டுடக் கூடாதுனு அம்மா வெச்சிவிட்டாதான் உண்டு. ஆனா, என் பிள்ளையை பிரம்மாவே மச்சத்தோடவே படைச்சிட்டாரே” என்று அவன் அம்மா அவ்வளவு சந்தோஷப்பட்ட அந்த அம்சம்தான் முத்துவின் வாழ்வையே துவம்சம் செய்துகொண்டிருந்தது.

சிறுவயது முதலே அவனைக் கவனிப்பதற்கு முன் அவனது மருவை கவனித்துவிடுவார்கள் எல்லோரும். ஆனால், அப்போதெல்லாம் அதைப் பற்றி அவன் அதிகம் யோசித்திருக்கவில்லை. ஆனால், பருவ வயதை அடைந்த உடனே அந்த மரு, அவனைப் படுத்தியபாடு இருக்கிறதே… சதா கண்ணாடி முன்னாலேயே நின்று அந்த மருவை அணு அணுவாய் ஆராய்வான். “ஏம்மா... என்னை இப்படி அசிங்கமா பெத்து வெச்சிருக்கே. ரவுடி மாதிரி, இப்படி ஒரு மரு! எல்லாரும் என்னை எப்படிக் கேலி செய்யுறாங்க தெரியுமா... யார் மூஞ்சையும் நேருக்குநேர் பார்க்க முடியுதா?”  என்று அவன் புலம்பாத நாளே இல்லை. 

சரிதான் வயசுக் கோளாறு, இந்த வயசுல அழகைப் பற்றிக் கவலைப்படாதவர் யார், என்று அப்பா அசட்டையாக இருந்தார்.  போகப்போக இந்த மரு சமாசாரம் மாபெரும் பிரச்னையாய் மாறியது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க ஆரம்பித்தான். வீட்டுக்கு விருந்தினர் வந்தால் தனி அறையிலேயே பதுங்கிக் கிடந்தான். வந்தவர்கள் போகும்வரை வெளியிலேயே வரமாட்டான்.

p12b.jpg

பள்ளிக்கூடம் போவதற்கு அத்தனை அழிசாட்டியம். பாதிநாட்கள் போவதே இல்லை. மற்ற நாட்கள் எல்லாம் லேட்.  வேளா வேலைக்குச் சாப்பிடுவதில்லை. சாப்பிடக் கூப்பிட்டால், “ரொம்ப முக்கியம்” என்று முகத்தைச் சுளித்தான்.  இரவெல்லாம் தூங்காமல் கிடந்தான். என்னடா உனக்குப் பிரச்னை என்றபோது ஓ... என்று ஒரே அழுகை. “எனக்கு வாழவே பிடிக்கலை. என்னையே எனக்குப் பிடிக்கலை, பேசாம நான் செத்துப் போயிடுறேன்” என்று சோகத்தில் கரைந்தான்.

“இப்ப என்ன ஆயிடுச்சுனு இப்படி எல்லாம் பேசுற” என்றாள் அம்மா. முத்து முகத்தைக் கைகளில் பொத்திக்கொண்டு, “என்னையே எனக்குப் பிடிக்கலை. எல்லாரும் என்னைப் பார்த்து சிரிக்கிறாங்க. மருவும் அதுவுமா ரொம்ப கேவலமா இருக்குறேன். இந்த மூஞ்சை வெச்சிக்கிட்டு என்னால வெளியில தலைக்காட்ட முடியலை.”

“உனக்கென்னடா குறைச்சல், எவ்வளவு அழகா லட்சணமா இருக்குற” என்று அம்மா, அக்கா, தாத்தா, பாட்டி, ஆபீஸிலிருந்து பாதியிலேயே திரும்பி வந்த அப்பா என யார் சொல்லியும் மனம் ஆறாமல் முத்து அழுதுகொண்டே இருக்க, “கடவுள் படைச்சா எல்லாம் கரெக்டா தான்டா இருக்கும்” என்று சொல்லிப் பார்த்தார்கள். “இதைவிட பெரிய மரு இருக்குறவனெல்லாம் ஜாலியா கான்ஃபிடெண்டா இருக்கான். நீ என்னடா இந்தச் சின்ன விஷயத்தைப் போய் பெரிசு பண்ணிக்கிட்டு இருக்குற” என்றனர். 

“இல்லை, எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி இந்த மருவை எடுத்தாதான்” என்று முத்து அடம்பிடிக்க, அது அநாவசியம், அதிக செலவு என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல், உண்ணாவிரதம், பள்ளிக்குப் போகாமை என்று பல பிளாக் மெயில்களுக்குப் பிறகு, “போய் தொலையட்டும், நிம்மதியா இருந்தாபோதும்” என்று பிளாஸ்டிக் சர்ஜனைப் பார்த்து, அந்த மருவை வெற்றிகரமாக நீக்கினார்கள். ‘அப்பாடா... தொல்லை முடிந்தது’ என்று எல்லோரும் நிம்மதியானார்கள். முத்துவும் அமைதியாக இருந்தான்.

ஆனால், கட்டுப் பிரித்த அன்றே மறுபடியும் ஆரம்பித்துவிட்டான். ‘‘இந்தத் தழும்பை பார்த்தீங்களா. அச்சச்சோ, அப்படியே ரவுடி பயல் மாதிரியே இருக்கேனே.”

“இத்துனூண்டு தழும்பு, கிட்டவந்து உத்துப் பார்த்தாதான் லேசா தெரியுது. இதை ஏண்டா பெரிசுபடுத்துற” என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், “இவ்வளவு காசை செலவு பண்ணி ஆபரேஷன் பண்ணியும் எனக்குச் சரியாகலையே. என் வாழ்க்கை ஃபுல்லா நான் கஷ்டப்படணும்னு இருக்குபோல. இதுக்கு பேசாம நான் செத்தே போயிடலாம்” என்று மறுபடியும் அவன் வாழ்க்கையின் ஓரத்துக்கே போய்விட, அவன் அம்மாவும் அப்பாவும், பிளாஸ்டிக் சர்ஜனிடம் போய் முறையிட... டாக்டர், “சர்ஜரியோட தழும்பு யூஷுவலா சில மாசங்கள்ல மறைஞ்சுடும். கொஞ்சம் சதைப் போட்டு, வெயிட் ஏறிட்டா தெரியாமலே போயிடும்” என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னார். 

p12a.jpg

எந்தச் சமாதானத்தையும் முத்து ஏற்கவில்லை. டி.வி-யில் பார்த்த ஒரு சித்த மருத்துவரையும் போய்க் கேட்டார்கள்.  அவர், பல பொடி டப்பாக்களைக் கொடுத்தார். ‘‘அரசமரத்து பாலைத் தடவி வந்தால் தழும்பு மறைந்துவிடும்’’ என்றார். அரசமரத்தைத் தேடிப் பிடித்து, அதிலிருந்து பாலை இறக்குமதி செய்துதந்தாள் அம்மா. தினமும் அரசம்பால் ஆராதனை செய்து முயன்றான் முத்து. ஒரு மாதம் கழித்தும் மாற்றமே இல்லை என்றதும் மேலும் மனமுடைந்தான்.

அதற்குள் பள்ளிக்கூட ஆசிரியர் பெற்றோரைக் கூப்பிட்டுப் பேசினார். “முத்து வகுப்பைக் கவனிக்கிறதே இல்லை. எப்ப பார்த்தாலும் டல்லாவே இருக்கான். மிட்டர்ம் டெஸ்டுல எல்லா சப்ஜெக்ட்லயுமே ஃபெயில்.”

“அவன் நல்லா படிக்கிற பையன்தான் சார். ஆனா...”

“என்னை கன்வின்ஸ் பண்ண டிரை பண்ணாதீங்கம்மா. உங்களைவிட அதிக நேரம் நாங்கதான் அவனை நேருக்குநேர் கவனிக்கிறோம். அவனுக்கு மனசு சரியில்லைனு நினைக்கிறேன். சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போங்க” என்றார். ‘ஒரு மரு பிரச்னைக்கு எல்லாமா, மென்டல் டாக்டரைப் போய்ப் பார்க்கணும்’ என்று அவன் பெற்றோர் தயங்க, அதற்குள் முத்து மறுபடியும் சாப்பிடாமல், தூங்காமல், படிக்காமல் சூனியம் பிடித்தவனைப்போலத் தன் தழும்பைப் பற்றிப் புலம்பிக்கொண்டே இருக்க, ஒருவழியாக அவனை மனநல மருத்துவரிடம் அழைத்துப்போனார் அப்பா.

டாக்டர், முத்துவின் முழுநீள சோகக் கதையைக் கேட்டுவிட்டு, மிகவும் இலகுவாக, “ஒண்ணுமில்லை, மாத்திரை சாப்பிட்டாச் சரியாயிடும்” என்றார் அவர். இத்தனை நாட்களாய் இவன் படுத்திய பாட்டுக்கு இவ்வளவு சுருக்கமான, குட்டியூண்டு தீர்வா என்று அவன் பெற்றோர் வியந்தார்கள். ஆனால், உண்மையிலேயே அந்தக் குட்டி மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்ததில் முத்து சரியாகத் தூங்கினான்; சாப்பிட்டான்; படித்தான்; புலம்பாமல் தன்னம்பிக்கையோடு பிறரை எதிர்கொள்ளவும் ஆரம்பித்தான்.

அவன் பெற்றோருக்கு ரொம்ப ஆச்சர்யம். இந்த மாத்திரைக்கும் அவன் மரு பிரச்னைக்கும் என்ன சம்பந்தம்?

வெரி சிம்பிள். முத்துவுக்கு இருந்தது Body Dysmorphophobia என்கிற ஒரு வகை பதற்றக் கோளாறு. இந்த நோய் இருப்பவர்களுக்கு, “என் மூக்கு கோணலா இருக்கு, என் பல்லு கலர் மாறி இருக்கு, என் தோளில் ஏதோ தேமல் இருக்கு’’ என்று தங்கள் உடல் அமைப்பைப் பற்றி ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து, சதா சர்வ காலமும் அதைப் பற்றியே யோசித்து, கவலைப்பட்டு, அதை மறுசீர் அமைப்பதைப் பற்றிய கற்பனையிலேயே இருப்பார்கள்.
 
‘‘இந்தக் கர்மம்பிடிச்ச நோயெல்லாம் எப்படி டாக்டர் வந்து தொலைக்கிறது?”

p12.jpg

நம் மூளையின் நரம்புமுனைகளில் செரடோனின் என்கிற ஒரு ஸ்பெஷல் தகவல் தொடர்பு ரசாயனம் இயங்குகிறது. அது நம் மூளையைச் சாந்தப்படுத்தி, சமாதானமாய் வைத்திருக்க உதவுகிறது. இந்த செரடோனின் அளவு குறைந்துபோனால், அநாவசிய கவலை, பயம், சோகம் எல்லாம் ஏற்பட்டுவிடுகிறது.

மனச்சிறையில் சில மர்மங்கள் - 2

பதின் பருவத்தில் எல்லாப் பிள்ளைகளுக்குமே கொஞ்சம் கூச்சம், நம்மைப் பிறர் எப்படி மதிப்பிடுவார்களோ என்று அச்சம், தேறுவோமா என்கிற பயம் எல்லாமே வருவது இயல்புதான். ஆனால், இவை எல்லாம் அளவு மீறிப்போய், தன் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளை இந்தக் கலவரம் பாதித்தால், நார்மல் எனும் எல்லைக்கோட்டைத் தாண்டி, அசாதாரணம் என்கிற அபாய அளவைத் தொட்டுவிட்டது என்று அர்த்தம்.

சீக்கிரமே இதைக் கவனித்துத் தகுந்த வைத்தியம் செய்துவிட்டால், பிரச்னை எல்லாம் மாயமாய் மறைந்துவிடும். முத்துவும் மருந்து சாப்பிட்டான், சைக்கோதெரபி செய்துகொண்டான். முழுமையாக குணமாகிவிட்டான்.

(மர்மம் அறிவோம்)

vikatan

Link to comment
Share on other sites

மனச்சிறையில் சில மர்மங்கள் - 4

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

p12a.jpg

முதிர்கன்னிகளின் உணர்வுகள்!

எல்லாப் பெண்களையும் போலவே சுஜியும் நிறையக் கனவுகள் கண்டிருந்தாள். அவளுக்கென்று அன்பு செலுத்த அழகான, திறமையான, காதலில் கசிந்துருகும் ஓர் அற்புதமான ஆண் கிடைப்பான். அவனோடு எப்படி எல்லாம் ரொமான்ஸ் செய்யலாம் என்று…! அட இவளே சும்மா இருந்தாலும்கூட அவள் காதில் தானாய் வந்து விழுந்த சினிமா பாடல்கள், கண்ணில் அவ்வப்போது பட்ட காட்சிகள் எல்லாம் அவள் ரொமான்ஸ் கனவுகளுக்கு எரிபொருளை ஊற்றிக்கொண்டே இருக்க, ‘முதல் முத்தம்’, ‘முதல் அணைப்பு’, ‘முதல் புணர்ச்சி’ என்று சதாசர்வகாலமும் இதே கற்பனையில் அவள் கிடந்த காலமும் இருந்தது.

ஆனால், இந்த எந்த ஆசைகளுமே நிறைவேறவில்லை என்பதுதான் அவள் வாழ்வின் மிகக் கசப்பான உண்மை.  சின்ன வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் உடல்நலம் சரியில்லாதவர். அண்ணன்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்தார்கள். அவ்வப்போது, ‘‘நம்ம சுஜிக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்’’ என்று ஆரம்பிப்பார்கள். அத்தோடு சரி.  

அதற்குள் இவளுக்கும் 39 வயதாகிவிட்டது. அவளுக்கு வயதாகிவிட்டதை இப்போதுதான் கண்டுபிடித்தவர்களைப்போல, ‘‘அடுத்த வருஷம் 40 வயசாகப் போகுது. அதுக்குமேல மாப்பிள்ளை கிடைக்குறது கஷ்டம்’’ என்று மீண்டும் பேச்சு எடுத்தார்கள்.

ஆனால், மீண்டும் வாழ்வியல் பிரச்னைகள், ஜாதகப் பிரச்னைகள், கிடைத்த சில மாப்பிள்ளைகள் பொருத்தமில்லாமல் போனார்கள் அல்லது பிடிக்கவில்லை என்று போனார்கள்… இப்படியாக, 46 வயதாகியும் சுஜிக்கு இன்னும் திருமணமே நடக்கவில்லை.

அம்மா, கிராமத்தில் மூத்த அண்ணனின் தயவில் வசிக்க, சுஜி சென்னையில் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி, வங்கி வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள். வேலையில் இவளை வெல்ல முடியாதுதான். இருந்தாலும், ‘‘ஏன் மேடம் இன்னமும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க?’’ என்றோ, ‘‘அப்புறம், உங்க பசங்க என்ன பண்றாங்க?’’ என்றோ யாராவது கேட்டுவிட்டால் போதும். அவள் கட்டுப்பாட்டை மீறி முகம் வாடிவிடும்; குரல் தழுதழுக்கும்; சில சமயம் கண்ணீர்கூட எட்டிப்பார்க்கும்.

ஆனால், போகப்போக இந்தக் கேள்விகள் பழகிப் போயின. பிரியாவின் நட்புக் கிடைத்தது. பிரியா இவளுடைய புது ரூம்மேட். 50 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. பார்க்க இன்னமும் 30 வயது பெண் மாதிரியே இருப்பாள். தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதை பிரியா மிகவும் கேஷுவலாக எடுத்துக்கொள்வாள்.

‘‘எப்படி பிரியா இப்படி லைஃபை என்ஜாய் பண்ண முடியுது?’’ என்று சுஜி பொறாமையாய்க் கேட்டாள்.

‘‘இந்த ஜென்மத்துல எனக்கு வாய்த்தது இதுதான்னு நான் அதை அக்செப்ட் பண்ணிக் கிட்டேன் சுஜி. இதுல இருக்குற செளகர்யத்தை உணர்றேன். புருஷன், பிள்ளைக்காக வாழ்ந்துட்டு, மிச்சம் மீதிக் காலத்தைத் தனக்காக வாழுறதைவிட, முழுக்க முழுக்க எனக்காக மட்டும் வாழுறது ஒரு வகையில பெரிய சுதந்திரம்தானே’’ என்று பிரியாவும் சுஜிக்கு எவ்வளவோ ஐடியாக்களைச் சொல்லித் தந்தாள். 

பிரியாவின் நட்புக் கிடைத்தபிறகு சுஜியும் வாழ்வை ரசிக்கப் பழக்கிக்கொண்டாள். இருவரும் சேர்ந்து 108 திவ்ய தேசங்களுக்குப் போகத் திட்டமிட்டு, எல்லா வார இறுதிகளிலும் ஒவ்வொரு கோயிலாகப் போக ஆரம்பித்தார்கள்.

அப்போதுதான் பிரச்னையே ஆரம்பித்தது. அலங்கார பூஷிதமாய் காட்சி அளித்த, அந்த சாமி சிலைகளைப் பார்த்த சுஜிக்கு, மனசு சரியில்லை. ‘‘வா போகலாம்’’ என்று தோழியை அழைத்துக் கொண்டு பாதியிலேயே வெளியேறிவிட்டாள்.

அடுத்து லிஸ்ட்டில் இருந்த கோயில்களை எல்லாம் பார்க்கப் போனபோதும், சரியாகச் சிலையின் எதிரில் போய் நின்றுவிட்டு, சட்டென முகம் வியர்க்க, தவிப்புடன் வெளியேறியவள், ‘‘பிரியா... என்னால முடியலை. இனிமே நான் கோயிலுக்கே வரலை’’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
‘‘என்ன சுஜிம்மா? ஏன்டா செல்லம்?’’ என்று பிரியா எவ்வளவோ தேற்றிய பிறகுதான் சொன்னாள். ‘‘சாமி சிலைய பார்த்த எனக்குத் தப்புத்தப்பா எண்ணம் வருது. சாமிய போய்... கடவுளே!’’

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா ரேண்டமா ஏதோ தோணியிருக்கும். சரி விடு, திவ்ய தேசம் ப்ளானை இத்தோட விட்டுடுவோம்’’ என்று ஆறுதல்படுத்தி சுஜியை ஹாஸ்டலுக்கு அழைத்து வந்தாள் பிரியா.

ஆனால், அன்றிலிருந்து சுஜிக்கு மனசே சரியில்லை. தூக்கம் குறைந்தது, பசியே இல்லை. சதா மனம் சஞ்சலமாகவே இருந்தது. வேலையிலும் கவனமே இல்லை. லீவு போட்டுவிட்டு அறையிலேயே அடைந்துகிடக்க ஆரம்பித்தாள். பீச், சினிமா, கச்சேரி என எதற்கும் சுஜியை அழைத்தும் அவள் வராததால், அவளை சைக்கியாட்ரிஸ்டிடம் அழைத்துப் போனாள் பிரியா.

சைக்கியாட்ரிஸ்ட் கொடுத்த மருந்துகளில் நாளடைவில் சுஜி சரியாகிவந்தாள். தூக்கம், பசி, வேலை, செயல்பாடு எல்லாமே சரியாகிவிட்டது. இருந்தாலும், ‘‘எந்த ஆம்பளையையும் நிமிர்ந்து பார்க்கப் பயமா இருக்கு டாக்டர். எங்க ஏதாவது தப்பான எண்ணம் வந்துடுமோ. அதைவிட, எனக்கு அப்படி ஓர் எண்ணம் வர்றது எதிராளிக்குத் தெரிஞ்சா, அது எவ்வளவு அசிங்கம். என்னைப்பத்தி அதுக்கப்புறம் அவங்க என்ன நினைப்பாங்க...’’ என்று ரொம்பவே கவலைப்பட்டாள். ‘‘எனக்கு இது மாதிரியான எண்ணமே இனிமே வரக் கூடாது டாக்டர். ப்ளீஸ், அதுக்கு ஏதாவது மருந்து குடுங்களேன்.’’

‘‘அது நடக்காது சுஜி. செக்‌ஸீவல் ஃபீலிங்ன்றது அடிப்படையான விஷயம். அதை நிறுத்த எல்லாம் மாத்திரை தர முடியாது. ஒண்ணு செய்யலாம். உங்களோட இந்த ரியாக்‌ஷனை மாத்தலாம்.’’

‘‘எப்படி டாக்டர்?’’

எல்லா உயிரினங்களுக்கும் இனவிருத்தி என்பது அடிப்படையான ஓர் இலக்கு. இந்த இலக்கை அடைவதற்காக, இனச்சேர்க்கை இச்சை (mating instinct) என்பதை இயற்கை மிக வலிமையாக மனதில் பதித்துவைத்திருக்கிறது.  பருவ காலத்தில் இந்த இச்சைக்கு இணங்கி, உயிர்கள் துணை தேடும், புணரும். முட்டையோ, குட்டியோ இடும் அல்லது ஈனும். ஆனால், இந்த இச்சையை நிறைவேற்றிக்கொள்ள முடியாவிட்டால், ‘‘பார், இதை நீ இன்னும் செய்யவில்லை. இது முக்கியமானது’’ என்று ஆழ்மனம் கனவுகள் மூலமாக, எதேச்சையான யோசனைகள் மூலமாக, திடீரென்று யாரையாவது பார்த்தால் ஏற்படும் கிளர்ச்சி மூலமாய் நினைவுப்படுத்திக் கொண்டேதான் இருக்கும். அப்போதாவது இந்தப் பெண் இனப்பெருக்கம் குறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்கமாட்டாளா என்று மனம் இப்படி எல்லாம் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளைச் செய்கிறது.
மனம் இப்படிச் செயல்படுவது அதன் இயல்பு. எல்லா உயிர்களுக்கும் இருக்கும் பொதுவான ஒரு போக்கு.  இதில், சுஜி என்கிற ஒரே ஒரு பெண் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்? ஏன் விதிவிலக்காக வேண்டும் என்று அந்தப் பெண்ணுக்குத் தோன்றுகிறது? இந்த செக்ஸ் எண்ணங்கள் அவளுக்குக் கலவரத்தைக் கொடுப்பதினால்தானே? அதைக் கண்டு, அவள் மிரள்வதினால்தானே? ஒருவேளை சுஜி தனக்கு ஏற்படும் செக்ஸ் சம்பந்தமான எண்ணங்களைக் கண்டு கேஷுவலாக இருக்கப் பழகினால்... அதன்பிறகு, அது அவளை அச்சுறுத்தாதே.

p12.jpg

‘‘அதெப்படி டாக்டர், ஒரு பொண்ணுக்கு இப்படி எல்லாம் தோணலாம்? ஆம்பளைங்களுக்குத்தானே இப்படி எல்லாம் தோணும்… நான் ரொம்ப நல்ல பொண்ணு டாக்டர். எனக்கு இப்படி எல்லாம் எண்ணமே வரக் கூடாது.’’

இப்படி எல்லாம் ஓவராய் சுயக்கட்டுப்பாடு விதிப்பதால்தான் இந்த மாதிரி அநாவசிய அவஸ்தைகள் வந்து சேருகின்றன. பெண்களுக்கு செக்ஸ் எண்ணமே வராது என்று யார் சொன்னது? ‘‘உயிர் தவ சிறிது, காமமோ பெரிதே’’ என்று சங்க காலத்திலேயே தமிழ்ப் பெண்கள் பாடி இருக்கிறார்கள். அதன் பிறகு வந்த பக்தி இலக்கியங்களில்கூட பெண்களும், பெண்களாய்த் தங்களை நாயகி பாவத்தில் நினைத்துக்கொண்ட ஆழ்வார்களும், கலவியல் தவிப்புக்களைப் பற்றிப் பாடி இருக்கிறார்கள். ‘துறவரம்தான் போவேன்’ என்று பிடிவாதம் பிடித்த ஆதிசங்கர்கூட பெண் தெய்வத்தின் அங்க அழகுகளைப் பற்றி நீட்டி முழக்கி செளந்தர்ய லகரி பாடி இருக்கிறார். இயற்கை அவ்வளவு வலிமையானது. இயற்கையின் அமைப்பில் கலவி ஓர் அத்தியாவசிய உந்துதல். அதற்குப் பெண்களும் உட்பட்டவர்களே.

பெண்களுக்குக் கலவியல் நாட்டம் இல்லை என்றால், இந்திய - சீன ஜனத்தொகை எல்லாம் என்ன டெஸ்ட்டியூபில் உருவானதா? நல்ல பெண், கெட்ட பெண் என்கிற பாகுபாடெல்லாம் ஹார்மோன்களுக்குக் கிடையாது. அது எல்லோருக்குள்ளும் சுரக்கும், இது இயல்பு, அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக என்னை நான் வெறுக்கவில்லை. இதெல்லாம் இயற்கைக்கு உட்பட்டதே என்று புரிந்துகொண்டால், எந்த எண்ணமும் துன்புறுத்தாது. ‘‘அச்சோ... இது மோசம். இதை எண்ணும் நானும் மோசம்’’ என்று ஓர் இயலாமை உணர்வோடு இதை எதிர்கொண்டால் சாதாரண எண்ணங்கள்கூட நம்மைச் சிதைத்துவிடும். அதுவே, எல்லோருக்கும் ஏற்படுகிற சாதாரணமான எண்ணம் எனக்கும் ஏற்பட்டது. சரிவிடு கழுதைய என்று அசட்டை செய்தால், எந்த எண்ணமும் அச்சுறுத்தாது என்று பலமுறை desensitize செய்து பயிற்றுவிக்கப்பட்டார் சுஜி.

பிரியாவும் பக்க பலமாய் இருந்தாள். ஆண்களைப் பற்றிய தங்கள் ரசனைகளை வெளிப்படையாகப் பேசிக்கொண்டார்கள். சுஜியின் சங்கோஜங்களும் விலகிவிட, மீண்டும் இருவரும் திவ்யதேச சுற்றுலாவுக்குத் தயாரானார்கள்.

(மர்மம் அறிவோம்)

vikatan

Link to comment
Share on other sites

மனச்சிறையில் சில மர்மங்கள் - 5

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

p12.jpg

பொங்கி வரும் தீஞ்சுவையே!

பெரிய பணக்காரன் ஆக வேண்டும், எல்லோரும் தன்னை அண்ணாந்து பார்த்து, ‘ஆஹா எவ்வளவு பெரிய ஆள்’ என்று பாராட்டி, பொறாமைப்பட வேண்டும் என்பதுதான் சிறுவனாக இருந்தபோதிலிருந்து லோகுவுக்கு ஒரு பெரிய கனவாக இருந்தது. ஆனால், அவனுக்குப் படிப்பு ஏறவேயில்லை. 

படிப்பு வரவில்லை என்றால் என்ன, படிக்காதவர்கள் ஜெயிக்கவில்லையா? படிக்காமல் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்களை நினைத்துத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டான் லோகு. எப்படியாவது ஒரு பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்று ஆசையில் இருந்தான். இப்படியான வேட்கையில் அவன் சந்தித்த பெண்தான் ஃபிலாரென்ஸ் மேரி. அவள் ஒரு பணக்காரரின் செல்லமகள். படிப்பு, வீடு, சர்ச் தவிர வேறு வெளி உலகமே தெரியாத அவளுக்கு லோகுவின் கேலிப் பேச்சும், சாகச மனப்பான்மையும், சிரித்த முகமும், சில்மிஷங்களும் ரொம்பவே பிடித்துப் போய்விட, செம்புலம் சேர்ந்த நீர்த்துளிபோல இருவரும் கலந்தனர்.

‘‘அஞ்சு மாசமா பீரியட்டே வரலை டாக்டர்’’ என்று டாக்டரிடம்  சொன்னார் மேரியின் அம்மா தெல்மா. அப்போதுதான் மேரிக்குத் தெரியும், இப்படி எல்லாம் அன்பு செய்தால் வயிற்றில் குழந்தை உருவாகும் என்று.

‘‘முளைச்சி மூணு இலைகூட விடலை, இப்படி வந்து நிக்கிறியே, யாருடீ அவன்?’’ என அம்மா உடைந்துபோய் அழுதாள். லோகுவை அழைத்துப் பேசினார் அப்பா.  தீவிர கத்தோலிக்க நம்பிக்கை கொண்ட அவருக்கு கருக்கலைப்புச் செய்ய மனமில்லை. வேறு வழியில்லாமல், 16 வயது ஃபிலாரென்ஸ் மேரிக்கும், 20 வயதான லோகுவுக்கும் வேளாங்கண்ணியில் திருமணம் நடந்தது.  அடுத்த சில மாதங்களிலேயே ஊட்டியில் அவர்களுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அப்போதுதான் குடும்பப் பாரம் என்றால் என்ன என்பதே லோகுவுக்குப் புரிய ஆரம்பித்தது. காதல் செய்ய அவனுக்கு காசே தேவைபட்டி ருக்கவில்லை.  ஆனால், குடும்பம் நடத்த, குழந்தைக்குத் தடுப்பூசி போட, பால் பவுடர் வாங்க, எனச் செலவுகள் தீராதத் தலைவலியாய் அமைய, இவ்வளவு சீக்கிரம் ஏன்தான் கல்யாணம் பண்ணித் தொலைச்சேனோ என்று ஒவ்வொரு நாளும் நொந்துபோனான்.

அம்மாவிடம் செலவுக்குப் பணம் கேட்டால், ‘‘உங்க அப்பன் புத்திதானே உனக்கும் வரும். இந்த வயசுல நீ கல்யாணம் பண்ணிக்கலைன்னு யார் அழுதா? என்கிட்ட வந்து காசு கேக்குற வேலையே வெச்சிக்காதே’’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

மேரியின் அப்பாவைக் கேட்டால் காசு கொடுப்பார், ஆனால், ‘‘இதுக்கெல்லாம் துப்பில்லை, குழந்தை மட்டும் பெத்துக்கத் தெரியுதா?’’ என்று நறுக்கென்று ஏதாவது பேசுவார். அதை நினைத்து நினைத்து லோகு வாரக்கணக்கில் வாடிப் போவான். இந்தக் கொடுமையிலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை.

இந்த அனுபவம் மேரிக்கு முதிர்ச்சியைக் கொடுத்தது. ‘‘படிச்சி ஒரு நல்ல வேலைக்குப் போகலாமே மாமா” என்றாள். அவளுடைய அன்புக்கு இணங்கி அதையும் முயன்றான் லோகு. ஆனால், படிப்பு வந்தால்தானே? எங்கேயாவது வேலைக்குப் போகலாம் என்றால், ஆரம்பநிலை ஊழியனாகவே சேர்த்துக்கொண்டார்கள். மிகச் சொற்ப சம்பளம் மட்டுமே தந்தார்கள். நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்தான். தோல்வி. சினிமாவில் நடிக்க முயன்றான். படுதோல்வி. பூ வியாபாரம் செய்தான் மரண தோல்வி.

p12c.jpgமனசு நிறைய கவலையில் அவன் வாழ்க்கையை வெறுத்திருந்தபோதுதான், அவனுடைய புதிய நண்பன், ‘‘விடுடா மச்சான், இந்தா... இதைப் பிடி’’ என்றான்.  அவன் கொடுத்த பொருள், ‘இரண்டு வளி’ யிலேயே இன்பமாய் இருந்தது. மெல்லிசைகூட மின்சாரம் மாதிரி சுரீர் என்று ஏறியது. மேரியின் சமையல்கூட அமிர்தம் மாதிரி இருந்தது.  அவனுக்குள் அவன் இறைவன் ஆனது மாதிரியே இருந்தது.

மேரியின் பரிசுத்தமான உலகில் போதைகளைப் பற்றிய தகவல் எதுவுமே இல்லை என்பதால், லோகு சந்தோஷமாய் இருப்பதைப் பார்த்து நம்பிக்கை கொண்டாள். ‘‘பிசினஸ் நல்லா போகுதா, இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க’’ என்றாள் சிரிப்போடு.

‘‘எல்லாமே நல்லாத்தான் போகுது. இனி நல்லாவே போகும். உனக்கு என்ன வேணும்னு கேளு கண்மணி, மாமா நான் உடனே வாங்கித் தர்றேன்’’ என்று லோகு மமதையில் சிரிக்க, ‘‘அவ்வளவு பணமா... எப்படி?’’ என்றாள் மேரி.

‘‘கண்ணா, நான் கடவுளாயிட்டேன். சிவன் தெரியுமா சிவன்?’’ என்று லோகு ஒரு காலைத் தூக்கி அபிநயம் பிடித்தான். திடீரென்று குழந்தையைக் காலடியில் போட்டு டான்ஸ் ஆடுவதைப்போல போஸ் கொடுக்கவும் பயந்தேபோனாள். ‘‘என்ன ஆச்சு உங்களுக்கு?’’ என்று பாய்ந்துவந்து பிள்ளையைத் தூக்கிக்கொண்டாள்.

கிளுக்கென்று சிரித்தான் லோகு, ‘‘சிவன்னா உனக்குப் பிடிக்காதில்லை, ஏசு ஆகட்டுமா. வா... நான் உனக்குப் பாவமன்னிப்புத் தர்றேன்’’ என்று அவளை முரட்டுத்தனமாய் பிடித்து இழுக்க, சத்தம் கேட்டு அவள் அம்மா வந்தார்.  ‘‘மேரி என்னாச்சும்மா?’’

‘‘உன் பொண்ணு பிரெக்னென்ட் ஆயிட்டா. போடி, நீயும் உன்…’’ என்று லோகு கெட்ட வார்த்தைகள் பேச ஆரம்பிக்க, அவன் சுயபுத்தியில் இல்லை என்று உணர்ந்த தெல்மா, மகளையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வெளியேறி கதவை மூடினாள். ‘‘குடிச்சிருக்கானா?’’

‘‘தெரியலம்மா.”

மகளின் ஆற்றாமையை நினைத்துத் தலையில் அடித்துக்கொண்டு, ‘‘மாதாவே, என் மகளை நீதான் காப்பாத்தணும்.’’

லோகுவின் போக்கு ரொம்பவே மாறிப்போனது.  சரியாகத் தூங்குவதில்லை, சாப்பிடுவதில்லை. சதா, தன்னுடைய அதிசய ஆற்றல்களைப் பற்றியும், தன்னுடைய ஆடம்பரத் திட்டங்களைப் பற்றியுமே பேசினான்.  ‘‘அதெல்லாம் எப்படி முடியும்?’’ என்றால் பாடுவதும், ஆடுவதும் எனக் கோலாகலமாய் இருந்தான்.

‘‘உங்களுக்கு என்ன ஆச்சு, குடிச்சிருக்கீங்களா?’’ என்று மேரி அழுதாள்.

‘‘குடிக்கலைடீ, சுவாசிக்கிறேன். மூலிகை டீ, உனக்கென்ன தெரியும்?” என்றெல்லாம் அவன் பிதற்ற, பங்குத் தந்தையைக் கூப்பிட்டு என்ன என்று பார்க்கச் சொன்னார் மேரியின் அப்பா.

பாஸ்டர் பார்த்துவிட்டு, ‘‘கஞ்சா அடிச்சிட்டு உளறுகிறான். டாக்டர்கிட்ட காமிங்க’’ என்றார்.

லோகு டாக்டரிடம் வருவதாகவே இல்லை. ‘‘சினிமா எடுக்குறாங்களாம்.  உங்களைத்தான் கதாநாயகனாய்ப் போடப் போறாங்களாம்’’ என்றெல்லாம் சொல்லி, அவனை நைசாக டாக்டரிடம் அழைத்துப் போனார்கள். லோகுவும் ஹீரோ மாதிரி உடையணிந்து மிகுந்த ஸ்டைலாய் டாக்டரைப் போய்ப் பார்த்தான், ‘‘யாரு டாக்டர் டைரக்டர்? மணிரத்னமா... ஷங்கரா?’’ என்றான்.

p12a.jpg

‘‘நான் ரெண்டு பேருகிட்டயும் பேசிட்டுச் சொல்றேன்.  ஆனா ஹீரோ இப்படி ஒல்லியா இருந்தா எப்படி. இந்த மாத்திரைங்களச் சாப்பிட்டுட்டு கொஞ்சம் உடம்பை ஏத்திக்கிட்டு வாங்க ஹீரோ’’ என்று தன் கையாலேயே மாத்திரைகளைப் பிரித்து அவனிடம் நீட்ட, ‘‘எத்தனை கிலோ ஏத்தணும்?’’ என்றபடி மாத்திரைகளை விழுங்கினான் லோகு.

அவனை, மேரி அழைத்துக்கொண்டு போனதும் அவள் அப்பா, ‘‘என்ன டாக்டர் பிராப்ளம்.  ரெண்டு வாரமா இவன் படுத்துறபாடு, தாங்க முடியல.  யார் யார்கிட்டயோ லட்சக்கணக்குல பணத்தைக் கடன் வாங்கி இருக்கான். எப்படிச் செலவு பண்ணான்னே தெரியலை.’’

‘‘கஞ்சா யூஸ் பண்ணதுனால மனசு சிதைஞ்சு போயிருக்கு. ‘டெலூஷன் ஆ கிராண்டியர்’னு சொல்வோம். தன்னைப் பற்றிய ஓவர் கான்ஃபிடென்ஸ்... அதிசய ஆற்றல் இருக்குறதா நம்புறது. கஞ்சா மாதிரியான போதைப் பொருட்கள் பயன்படுத்தும்போது அது மூளையில் டோபமின் எனும் நுன் ரசாயனத்தின் அளவை அதிகரித்து விடுகிறது.  டோபமின் அளவு மீறுவதால், பிரமைகள், தன்னைப் பற்றிய மிகையான பிரதாபங்கள், சந்தோஷம்தரும் விஷயங்களில் அதிகமான ஈடுபாடு, யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், கற்பனையிலேயே கோட்டை கட்டிக்கொண்டிருக்கும் தன்மை எல்லாமே ஏற்படுகிறது. மனம் அதிக எழுச்சியில் இருப்பதால் தூக்கம் தேவையில்லை, சாப்பாடே தேவையில்லை என்று உடல் தேவைகளைப் புறக்கணித்து இன்பத் தேடலிலேயே நாட்டம் அதிகரிக்கும். ஆனால் மருந்துகள், இந்த டோபமின் அளவைப் படிப்படியாக எதிர்த்து, குறைத்துக்கொண்டே வரும். போகப்போக இந்தப் பிரமைகள் எல்லாம் மறைந்து, இயல்புநிலை திரும்பும்’’ என்றார் டாக்டர்.

இதே நேரத்தில், வெளியே டாக்ஸிகாரரிடம் விவாதம் செய்துகொண்டிருந்தான் லோகு. 

‘‘என் வயசுல நான் எத்தனை கஞ்சாக் கிராக்குங்களைப் பார்த்திருப்பேன்’’ என்று சிரித்தார் டாக்ஸிகாரர்.

(மர்மம் அறிவோம்)

vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீயா நானா ? நிகழ்ச்சியில் ஒருமுறை இவர் கலந்து கொண்டிருந்தார் 
யூடூப் பில் பார்த்தேன் அவரின் பேச்சை கேட்டு அப்போதே நினைத்தேன் 
இவர் ஒரு திறமையான சைக்கோலஜிஸ்ட் என்று.

டாக்டர் ஷாலினி கதை ஊடாக முக்கிய விடயங்களை நகர்த்துவது என்பது 
ரொம்ப சாமர்த்தியமான ஒன்று 
பாராட்டுக்கள் !

இணைப்பிட்கு நன்றி !

Link to comment
Share on other sites

 

மனச்சிறையில் சில மர்மங்கள் - 6

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

p12a.jpg

காதல் பிழையை காற்றினில் வீசி...

பிரேமாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவளுடைய ஒரே மகள் துதிமலருக்கு வயது 30 தாண்டி விட்டது. அக்கம் பக்கத்து வீட்டார், உறவுக்காரர்கள், சகாக்கள், குடும்ப நண்பர்கள் என்று எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி, “துதிக்கு ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலை?” என்பதுதான்.

“வெளியில தலைகாட்ட முடியலைம்மா. தயவுசெய்து கல்யாணத்துக்கு ஒத்துக்கோ. நீ நல்லா இருப்பேம்மா. நாங்க உனக்கு நல்ல பையனைத்தான் பார்ப்போம். தயவுசெய்து என் மேல கொஞ்சம் நம்பிக்கை வை” என்று அவள் அம்மா அவளுடன் மல்லுகட்டாத நாளே இல்லை எனலாம்.

ஆனால், துதி மசியவே இல்லை. “இந்த டாபிக்கையே எடுக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது. தினமும் இதே டார்ச்சரா போச்சு, இதுக்கு மேல இது பத்தி பேசுனீங்க, நான் ஹாஸ்டலுக்குப் போய்த் தங்கிடுவேன்” என்று கத்தினாள்.

பக்கத்து வீடுகளில், குழந்தைகளைப் பார்க்கும்போது, ஏக்கம் பிடுங்கித் தின்னும். “குடுத்துவெச்சவங்க” என்று பெருமூச்செரிப்பாள் தன்னை அறியாமல்.

“வேண்ணா இன்னொன்னை பெத்துக்கோங்க, இந்தக் காலத்துல 60 வயசுலகூட பிள்ளை பெக்க முடியும்” என்று முகத்தில் அறைந்தார்போல நறுக்கென்று பேசுவாள் துதி.

பெற்ற தாய் என்றுகூடப் பார்க்காமல் இவ்வளவு கடுமையாகப் பேச இவளால் எப்படி முடிகிறது? பெற்ற வயிறு பற்றி எரியும்படி செய்கிறாளே, இந்தப் பாவத்துக்கு எல்லாம்… என்று நுனிநாக்குவரை வரும் சாபங்களைக் கஷ்டப்பட்டு விழுங்குவாள் பிரேமா. ஆனால், என்னதான் பிரச்னை என்பது அவளுக்கும்கூடத் தெரியவில்லை. சின்ன வயதில் எல்லாக் குழந்தைகளையும் போலவே துதியும் அப்பா அம்மா விளையாட்டெல்லாம் ஆடி, ‘‘என் பேபி” என்று குட்டிப் பொம்மையைக் கட்டித் தூங்கியவள்தான்.  ‘‘எப்பம்மா நான் பிக் லேடி ஆவேன்? எப்ப எனக்கு பீபி... டும்டும் கல்யாணம்?” என்று ஆறு வயதிலேயே ஆசைபட்டவள்தான். பதின் பருவத்தின்போது பக்கத்து வீட்டுப் பையனோடு தெருமுனையில் நின்று பேசியதற்காக அப்பாவிடம் அடி வாங்கியவள்தான்.

அப்போதெல்லாம் அவள் திருமணத்தை எதிர்த்திருக்கவில்லை. கல்லூரி காலத்திலும்கூட, “அம்மா நான் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா நீ கோச்சுப்பியா?” என்றெல்லாம் கேட்டிருந்தாள்.

ஆனால், மேல் படிப்புக்காக பாம்பே போனபோது தான், என்னமோ நடந்துருக்கும் என்று யூகித்தாள் பிரேமா. அங்கே நான்கு ஆண்டுகள் மேல்படிப்பு படிக்கப் போனவள், அத்தோடு முழுவதுமாய் மாறி இருந்தாள். விடுமுறை நாட்களிலும் பெற்றோரைப் பார்க்க வரமாட்டாள். போனில்கூட ரொம்ப நேரம் பேசமாட்டாள். பிறவி வாயாடி இப்படி அளந்து பேசுகிறாளே என்று அம்மா விசாரித்தபோது, “ச்சு, எப்பயும் ஒரே மாதிரி இருப்பாங்களா... வயசாகுதில்ல?” என்றாள்.

வழுக்கி விழுந்து பிரேமாவுக்கு கை எலும்பு உடைந்திருந்தபோது, ஒரே ஒரு முறை அம்மாவைப் பார்க்க வந்த துதி, மருத்துவமனையில் தாயோடு தங்கியிருந்த எல்லா இரவுகளிலும் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்திருந்தாள் பிரேமா. “யாருடி, விடிய விடியப் பேசிகிட்டு” என்று நைசாய் கேட்டுப் பார்த்தாள்.

“ச்சு, க்ளாஸ் மேட். வேற எதுவும் இல்லை” என்று அத்தோடு வெட்டினாள்.

துதி தூங்கும்போது, திருட்டுத்தனமாய் போனை எடுத்து, யாரிடம் இவ்வளவு நேரம் பேசுகிறாள் என்று தேடினாள். நாகு என்ற நபரிடம் இவள் மணிக்கணக்கில் பேசியிருப்பது தெரிந்தது. நாகு ஆணா, பெண்ணா? ஒருவேளை என் மகள் லெஸ்பியனாக இருப்பாளோ, அதனால்தான் திருமணம் வேண்டாம் என்கிறாளோ? இரவெல்லாம் உறக்கமே இல்லாமல் தவித்துப்போனாள் அம்மா.

மகள் ஊருக்குக் கிளம்பிச் செல்லும்போது பொறுக்க முடியாமல் கேட்டாள், “நாகுன்றது யாரு?”

“என் போனை நோண்டுனீங்களா? இவ்வளவு சீப்பா நீங்க நடந்துப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை, சீ” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு போயே போய்விட்டாள் துதி.

பிரேமாவுக்குச் சொல்லி அழக்கூட நாதி இல்லை. துதி பிறந்த காலம் தொட்டே, கணவன் ராகவனுடன்  மணவாழ்க்கை கசந்திருந்தது. அதனாலேயே பிரேமா தன் தாய் வீட்டிலேயே தங்கி வேலைக்குப் போய் தன் மகளை ஆளாக்கி இருந்தாள். அதனால் துதிக்கு அவள் தந்தையோடு பெரிதாக உறவில்லை. ஆரம்பத்தில் எல்லாப் பெண் பிள்ளைகளைப் போலவே அவளும் கொஞ்சும் அப்பா பைத்தியமாகதான் இருந்திருந்தாள். ஆனால், நாளடைவில் ராகவனின் குடிப்பழக்கமும், பொறுப்பற்ற தன்மையையும் வெட்டி பந்தாவையும் பார்த்து, “சே, அப்பானு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு” என்று வெறுத்திருந்தாள் துதி.

தன் அக்காள் மகனிடம் தான் குறித்துவைத்திருந்த நாகுவின் போன் எண்ணைத் தந்து, துப்புத்துலக்கச் சொன்னாள். அடுத்த நாளே தகவல் சொன்னான், “தொத்தா, அது யாரோ நாகார்ஜுன ராவாம். ஹைதராபாத் யுனிவர்சிட்டியோட புரஃபசர். வயசு 52. அவர் பொண்டாட்டி பேரு ஹேமலதா, ரெண்டு மகள்கள்” என்று அவன் விவரங்களைப் படிக்கும்போதே,  துதி அவரிடம் ரகசியக் குரலில் கொஞ்சிப் பேசியது நினைவுக்கு வர, இன்னும் அதிக கலவரத்துக்கு உள்ளானாள். இந்த மனுஷன்கிட்ட அவ ஏன் இவ்வளவு நேரம் கொஞ்சிப் பேசினா?

இரண்டு நாள் இதுபற்றிப் பலவிதமாய் யோசித்து கலவரமடைந்த பிரேமா, மூன்றாம் நாள் நெஞ்சுவலியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட, மீண்டும் அம்மாவைப் பார்க்க பறந்துவந்தாள் துதி. “உங்க அம்மாவுக்கு ரொம்ப பதற்றம் இருக்கு. சைக்கியாட்ரிஸ்ட் வந்து பார்ப்பாங்க” என்று சொல்லிவிட்டுப் போனார் தலைமைச் செவிலி.

“நீங்கதான் அவங்க மகளா, என்கூட வாங்க” என்று நர்ஸ் துதியை டாக்டரின் தனி அறைக்கு அழைத்துப் போய்விட்டாள்.

“உங்க அம்மாவுக்கு, ‘அக்யூட் ஸ்டிரெஸ்’ இருக்கு துதிமலர்.  என்ன பிரச்னை? டூ யூ ஹாவ் எனி ஐடியா?” என்று டாக்டர் பேச ஆரம்பிக்க, தனக்குத் திருமணமாகாததுதான் அம்மாவின் கவலைக்குக் காரணம் என்று ஒப்புக்கொண்டாள் துதி.  டாக்டர் ரொம்பவும் நுணுக்கமாய், அக்கறையாய் என்ன ஏது என்று கேட்கக்கேட்க, யாரிடமாவது சொல்லி அழமாட்டோமா என்று தேக்கிவைத்திருந்த கஷ்டத்தை எல்லாம் கொட்டித் தீர்க்கலானாள் துதி.

“….அவர் எப்போதுமே சொல்வார் டாக்டர், இது நடக்காது, நான் கல்யாணமானவன்னு. ஆனா, என்னாலதான் அவரை மறக்க முடியலை. இதெல்லாம் தெரிஞ்சா எங்கம்மா மனசு தாங்காது. அதனாலதான் நான் இந்த ஊருக்கே வராம இருந்துட்டேன். இப்பகூட அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னுதான் சொல்றாரு. ஆனா அவர் பொண்டாட்டி, பிள்ளைய நினைச்சா எனக்குக் கவலையா இருக்கு. என்னால ஒரு குடும்பம் கெட்டுப்போயிடக் கூடாதுனு இருக்கு. ஆனா என்னால அவரை மறக்க முடியல. எத்தனையோ பசங்க என் மேல ஆசைப்படுறாங்க. ஆனா, எனக்கு யார் மேலயும் இன்ட்ரஸ்ட்டே வர மாட்டேங்குது. என் வயசு பசங்க ரொம்ப இம்மெச்சூர்டா இருக்காங்க. பொம்பளைன்னா இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு சில்லியா யோசிக்கிறாங்க. நாகு ரொம்ப பரந்த மனசுக்காரர். எனக்கொரு அம்மாவா, அப்பாவா, குருவா… எல்லாமாவும் இருக்கார்…” துதி அழுது முடித்ததும், டாக்டர் சொன்னார்.

“எலெக்ட்ரா காம்பிளெக்ஸ்னு சொல்வோம். பொதுவா எல்லாப் பொண்ணுங்களுமே எங்கப்பா மாதிரி ஒரு துணைவன் அமையணும்னு ஆசைப்படுவாங்க. ஆனா, மனசு முதிர்ச்சி அடையும்போது, அப்பாவை வெறும் ஒரு ஹீரோவா பார்க்காம, அவரோட குறைநிறைகளைக் கவனிக்க ஆரம்பிப்பாங்க. அப்பா அம்மாவோட துணைவன், எனக்குன்னு தனியா வேற ஒரு துணைவனைத் தேர்ந்தெடுக்கணும்னு புரிஞ்சிப்பாங்க. அப்பா ஏக்கம் அதிகமா இருக்குற ரொம்ப சில பேர் ஃபாதர் ஃபிகர் மேல இருக்குற மோகத்துல ரொம்ப சீனியர் ஆசாமியக் காதலிக்க ஆரம்பிச்சிடுவாங்க.

ஆனா, உங்க புரஃபசர் உங்களோட குரு. நீங்க சிஷ்யை. உங்க அறியாமையில குரு மேல ஆசைப் பட்டிருக்கலாம். ஆனா அவர்? குரு சிஷ்ய உறவு, அப்பா - மகள் உறவு மாதிரி, டாக்டர் - பேஷன்ட் உறவு மாதிரி ரொம்ப ஸ்பெஷலானது. இதுல சபலமே வரக் கூடாது. வந்தா அதை professional incestனுதான் சொல்லணும். 

இட் இஸ் ஓகே, என்ன நடந்ததோ அது நடந்ததுதான். அதை இனிமே மாத்த முடியாது. இனிமே என்ன பண்ணலாம்னு யோசியுங்க?”

“எங்கம்மா என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாங்க டாக்டர், ஆனா என்னாலதான் இவரை மறக்கவே முடியல.  நாகுவை நான் கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு எனக்குத் தெரியும், ஆனா வேற யாரையும் கட்டிக்கவும் என் மனசு ஒத்துக்கமாட்டேங்குதே, நான் என்ன செய்ய?”

p12b.jpg

இதுபோன்ற ஆழமான முரண்பாட்டுக் கோளாறுகளைப் போக்க EMDR மாதிரியான சைக்கோதெரபி முறைகள் உள்ளன.  துதிக்கு தன் வயதைவிட மிக முதியவரை நேசிக்கத் தோன்றியதே அவளுடைய சிறு வயது தந்தை தேவைகள் தீராத ஏக்கமாய் மாறியதால்தான். அந்தச் சிறு வயது நினைவுகளில் இருக்கும் துயரைப் போக்க EMDR சிகிச்சை உதவி செய்ய, சில வாரங்களிலேயே துதி, “என்னென்ன கிறுக்குத்தனம் பண்ணியிருக்கேன் நான்” என்று தன்னை நினைத்துச் சிரித்துக்கொண்டாள்.

ரொம்ப காலமாய் அவள் மேல் விருப்பம் தெரிவித்து வந்த தன் சகா ஒருவனோடு தீவிரப் பேச்சு வார்த்தையில் ஈடுபட ஆரம்பித்தாள்.  மகள் தனக்குப் பொருத்தமான ஒரு பையனோடு பேசும் அளவு மாறி இருக்கிறாளே என்று நிம்மதியும் நம்பிக்கையுமாய் காத்திருந்தாள் பிரேமா

(மர்மம் அறிவோம்)

vikatan

 

Link to comment
Share on other sites

மனச்சிறையில் சில மர்மங்கள் - 7

ஊறல் உபாதை!டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

பிராமி பாட்டிக்கு 70 வயது. அவரைப் பிடிக்காதவர் அந்த ஏரியாவில் கிடையாது. தனக்குத் தெரிந்தவர், தெரியாதவர் என்று எந்தவிதப் பாகுபாடும் இன்றி, எல்லோரிடமும் மிகப் பாசமாகப் பழகக்கூடியவர்.

யார் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும், முதலில் வந்து ஆஜராகி, ‘‘இப்படிச் செய்... அப்படிச் செய்’’ என்று எல்லோருக்கும் இலவச அறிவுரை கொடுப்பார். ஹாசியமாய்ப் பேசுவார். ‘மூத்த சுமங்கலி’ என்று எல்லோராலும் சுபகாரியத்துக்கு அழைக்கப்படுவார்.

அபிராமி பாட்டியின் கணவருக்கு இடுப்பு எலும்பு முறிந்துபோய், அவர் 10 நாட்கள் ஹாஸ்பிட்டலில் தங்க நேர்ந்தது. அவருக்கு உதவியாகப் பாட்டியும் அங்கேயே தங்கிவிட, ஒரு வழியாகத் தாத்தா குணமாகி வீடு வந்து சேர்ந்தார். ஆனால், பாட்டிக்குத்தான் புதிய பிரச்னை கிளம்பியது.

‘‘தலை சீவியே 10 நாளாச்சு. தலையெல்லாம் ஒரே பேன்’’ என்று தலைவாரி சுத்தம் செய்வதிலேயே நொந்துபோனார் பாட்டி. இப்படித் தலைவாரி பேன் வேட்டை ஆடி முடித்தபிறகாவது பாட்டி வழக்கமான சிரித்த முகத்தோடு பேசுவார் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்க... பாட்டியோ, ‘‘உடம்பெல்லாம் ஒரே அரிப்பு. உடம்பெல்லாம் சின்னச்சின்னதா, கறுப்பு கறுப்பா பூச்சி ஊறுர மாதிரியே இருக்கு’’ என்று அடிக்கடி தன் தோலைச் சொறிய ஆரம்பித்தார்.

p30.jpg

‘‘அது ஒண்ணுமில்லை பாட்டி. இத்தனை நாளா தலையச் சொறிஞ்சி, பேனு பேனா எடுத்துப் பார்த்துப் பழகிப் போயிடுச்சில்லை. அதான் எதைப் பார்த்தாலும் உங்களுக்கு பேனு மாதிரியே தெரியுது’’ என்று பேத்திகூட விளக்கம் சொல்லிப் பார்த்தாள்.

‘‘இல்லடி, பேனு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாதா? இது வேற கறுப்புப் பூச்சி.  இப்படி அரிச்சிக்கிட்டே இருக்கே, இந்தப் பூச்சி ஊறுரதைத் தாங்க முடியலையே’’ என்று அபிராமி பாட்டி, ஒரு நாளைக்கு இரண்டுமுறை குளித்தார்.

மஞ்சள், வேப்பிலை எல்லாம் அரைத்துத் தோலில் பத்து போட்டுப் பார்த்தார்.

உசத்தி சோப்பு, பவுடர் எல்லாம் போட்டுப் பார்த்தார்.

ஊகூம்... அரிப்பு அடங்கவே இல்லை.

பாட்டிக்கு இந்தப் பிரச்னையே இரவு பகலாய் பாடாய்ப்படுத்த, தூக்கம் கெட்டுப்போனது.

‘‘டி.வி பார்க்க முடியுதா, சாப்பிட முடியுதா, நிம்மதியா தூங்க முடியுதா? இந்தப் பூச்சி சதா ஊறிகிட்டே இருக்கே?’’ என்று பாட்டி எவ்வளவோ புலம்பினார். யாரும் இதை சீரியஸாகவே எடுத்துக்கொள்ளவே இல்லை.

எல்லோரும் பிஸியாய் அவரவர் வேலையிலேயே மும்முரமாய் இருக்க, பாட்டி, தன் கணவன், மகன், மகள், மருமகள், பேரன் பேத்திகள், வருவோர் போவோர் என்று எல்லோரிடமும் இது பற்றியே புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

அட, வெறுமனே புலம்பினால்கூட பரவாயில்லையே.

‘‘இதோ பாருங்க, இத்தனை பூச்சி ஊறுது’’ என்று ஒரு டப்பாவைத் திறந்துகாட்டினார்.

எல்லோரும் டப்பாவை ஆவலாய்ப் பார்த்தால், டப்பா காலியாக இருந்தது. ‘‘எங்க பாட்டி பூச்சி?’’

‘‘டப்பா நிறையப் பிடிச்சி வெச்சிருக்கேனே, தெரியலையா?’’

எவ்வளவு உற்றுப் பாத்தாலும் டப்பா காலியாகவே தெரிய, ‘‘எங்க பாட்டி என் கண்ணுக்குத் தெரியலையே?’’

‘‘தெரியலையா? இதோ ஓடுது பார். கறுப்பா, குட்டிகுட்டியா இத்தனை ஓடுதே. தெரியுதா?’’

பாட்டிக்கு அந்தப் பூச்சிகள் மிகத் துல்லியமாகத் தெரிந்தன. ஆனால், அவரைத் தவிர வேறு யாருடைய கண்களுக்கும் அந்தப் பூச்சிகள் தெரியவே இல்லை.

‘‘என்ன பாட்டி, எங்க கண்ணுக்குத் தெரியலையே, சும்மா கதைவிடாதீங்க’’ என்று எல்லோருமே பாட்டியைக் கேலி செய்ய பாட்டிக்குக் கோபம் வந்துவிட்டது. ‘‘அப்ப, நான் என்ன சும்மாவா சொல்றேன். எல்லோரும் என்னோட விளையாடுறீங்களா? என் கண்ணுக்குத் தெரியுறது அதெப்படி உங்க கண்ணுக்குத் தெரியாம போகும்?’’ என்று பாட்டி கடும் சினத்துடன் சண்டைக்கே வந்துவிட, சரிதான்... பாட்டிக்கு ஏதோ ஆகிவிட்டது. வயதான காலத்தில் இனி அவரோடு எதற்கு அநாவசிய வாக்குவாதம் என்று எல்லோருமே, ‘‘ஆமாம் பாட்டி... பூச்சி தெரியுது’’ என்று ஒத்து ஊதினார்கள்.

ஆனால், பாட்டி அத்தோடு விட்டால்தானே? ‘‘உடம்பெல்லாம் பூச்சி ஓடுதே. யாராவது என்னைக் கவனிக்கிறீங்களா?’’ என்று சதா இதைப் பற்றியே புலம்பிக்கொண்டே இருந்தார். ‘‘நான் உங்களுக்கு எல்லாம் எவ்வளவு செய்திருப்பேன். எனக்கு உடம்புக்கு முடியலைன்னா, யாராவது ஏதாவது செய்றீங்களா?’’

‘‘நிஜமாவே பூச்சி இருந்தாத்தானே பாட்டி...’’ என்றால் போதும், ‘‘அப்ப நான் என்ன பொய்யா சொல்றேன்?’’ என்று அதற்கும் பாட்டி சண்டைக்கு வந்துவிடுவார்.

‘‘அம்மாதான் இத்தனை நாளா சொல்றாங்களே... நிஜமோ, பொய்யோ, அவங்க திருப்திக்காவது தோல் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய்க் காட்டக் கூடாதா? சதா சொறிஞ்சிக்கிட்டு இருக்குறதைப் பார்க்க சகிக்க முடியலையே’’ என்று பலர் புகார் தெரிவித்ததும்தான், கடைசியாய் ஒருநாள் பாட்டியைத் தோல் டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள்.

ஆனால் தோல் டாக்டரோ, ‘‘சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட காட்டுங்க’’ என்று சொல்லிவிட்டார்.

‘‘பூச்சி ஊறுற பிரச்னைக்குக்கூடவா சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட போவாங்க. இது தோல் பிரச்னைதானே. நீங்களே பார்க்கலாமே?’’

‘‘தோல்ல உண்மையிலேயே பூச்சு ஊறினாதான், அது தோல் பிரச்னை. இவங்களுக்கு நிஜமா தோல்ல எந்தப் பூச்சியும் ஊறலையே…’’

‘‘அப்ப சும்மா பொய் சொல்றாங்களா?’’

p30a.jpg

‘‘இல்லை, இது ஒருவிதமான பிரமை. தோல்ல எந்தப் பிரச்னையுமே இல்லை. மனசுலதான் பிராப்ளம். அதனாலதான் சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போகச் சொல்றேன்’’ என்று தோல் டாக்டர் விளக்கம் சொன்னதுதான் தாமதம்... அபிராமி பாட்டிக்கு ஏகத்துக்கு கோபம் வந்தது. ‘‘எனக்கு என்ன பைத்தியமா? என்னை எதுக்கு சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட எல்லாம் அனுப்புறீங்க?’’ எனக் குதித்தார்.

‘‘அப்படி இல்லை பாட்டி. உங்களுக்கு இந்த அரிப்புனால தூக்கமே வரலை இல்லையா? அவங்கதான் தூக்கத்துக்கு எல்லாம் மருந்து எழுதித் தர்ற டாக்டர். நீங்க சும்மா ஒரே ஒரு தடவைப் போய்ப் பார்த்து, தூக்கத்துக்கு மட்டும் மருந்தை வாங்கிட்டு வாங்க. மிச்சத்தை நான் பார்த்துக்குறேன்’’ என்று தோல் டாக்டர் பலவிதமாய் கன்வின்ஸ் செய்ய, பாட்டி ஒரு வழியாக, ‘‘அரிப்பு நின்னாப் போதும்’’ என்று சைக்கியாட்ரிஸ்ட்டை பார்க்கச் சம்மதித்தார்.

சைக்கியாட்ரிஸ்ட்டை பார்க்கப் போன போதும் தன் பூச்சி டப்பா சகிதம்தான் வந்தார் பாட்டி. டாக்டரை பார்த்ததும், டப்பாவைத் திறந்துகாட்டி, ‘‘இதோ பாருங்க... இந்தப் பூச்சிதான்’’ என்று தன் கதையை வழக்கமான சோகத்துடன் ஒப்பித்தார்.

டாக்டரும் மிகவும் சிரத்தையாகக் கதையைக் கேட்டுவிட்டு, டப்பாவில் உண்மையிலேயே பூச்சி இருப்பதுபோல முகத்தை வைத்துக்கொண்டு, ‘‘ஆமாம். கஷ்டமாதான் இருக்கும்’’ என்று எல்லாம் புரிந்தமாதிரி தலையை ஆட்ட, நிஜமாகவே டப்பாவில் பூச்சி இருக்கிறதோ என்று உடன் வந்தவருக்கே சந்தேகம் வந்துவிட்டது.

ஆனால் டாக்டரோ, படு மும்முரமாக, ‘‘இந்தப் பூச்சிதானே, நீங்க கவலைப்படாதீங்க பாட்டி. ஒரு மாத்திரை தர்றேன். அதைச் சாப்பிட்டு பாருங்களேன். பூச்சி போன இடம் தெரியாம காணாமப் போயிடும்’’ என்று மிகவும் நம்பிக்கையாகச் சொன்னார்.

பாட்டிக்கு, ‘‘அப்பாடா... கடைசியில, நான் சொல்றதை சீரியஸாகக் கேட்க ஓர் ஆள் கிடைச்சாங்களே’’ என்ற நிம்மதியே பெரிய சந்தோஷத்தைத் தர, ‘‘உங்களுக்காவது என் கஷ்டம் புரியுதே டாக்டர்’’ என்று பெருமூச்செறிந்தார்.

‘‘டோன்ட் ஒர்ரி பாட்டி. மாத்திரையைச் சாப்பிட்டு, நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு, 10 நாள் கழிச்சி வாங்க. அதுக்குள்ள இந்தப் பிரச்னை தீர்ந்திடும்’’ என்று டாக்டர் ராத்திரி, ஒரு வேளைக்கு மட்டும் ஒரு மாத்திரையை எழுதித் தந்தார்.

பாட்டி திருப்தியுடன் மருந்தை உபயோகிக்க சம்மதிக்க, தினமும் தொடர்ந்து அந்த மருந்தைச் சாப்பிட்டதில், பூச்சி தொல்லைவிட்டது. சில நாட்களிலேயே, ஊறுவது குறைந்து, ஒரே வாரத்தில் பூச்சிகள் முற்றிலுமாக காணாமலேயே போயின. அட பாட்டியின் உடம்பில் ஊறிய பூச்சிகள் மட்டும்தான் காணாமல் போயின என்று பார்த்தால், பெரிய ஆச்சர்யமாக, அதுவரை அவர் டப்பாவில் அடைபட்டிருந்த பூச்சிகள்கூட மாயமாய் மறைந்துவிட்டிருந்தன. அதைப் பார்த்ததும் பாட்டிக்கு ஏக சந்தோஷம்.

மறுமுறை சைக்கியாட்ரிஸ்ட்டை போய்ப் பார்த்தபோது, டப்பாவைத் திறந்துகாட்டினார். ‘‘பூச்சி எல்லாம் போச்சுப் பாருங்க.’’ டாக்டர் ரொம்ப சீரியஸாய் டப்பாவை எட்டிப் பார்த்தார். ‘‘ஆமாம் பாட்டி’’ என்று ஆமோதித்துவிட்டு, மீண்டும் மருந்தை எழுதிச் சீட்டை நீட்டினார். ‘‘சரி... மருந்து டோஸ் கம்மி பண்ணி இருக்கேன். விடாமச் சாப்பிடுங்க. பூச்சி திரும்ப வந்திடக் கூடாதில்லை.’’

‘‘அதான் அரிப்பு போயிடுச்சே. இனிமே எதுக்கு மருந்து?’’ என்று பாட்டி ஆட்சேபித்தார்.

‘‘மருந்தை நிறுத்தினா, பூச்சி திரும்ப வந்துடுமே’’ என்றார் டாக்டர்.

‘‘நிஜமாவா? அப்படினா சரி’’ என்று பாட்டி மருந்தை வாங்கிக்கொண்டு போய்விட, அவர் மகனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ‘‘அதெப்படி டாக்டர், எங்க கண்ணுக்குத் தெரியாத பூச்சி அவங்க கண்ணுக்கு மட்டும் தெரியுது.  உங்க மருந்தைச் சாப்பிட்டதால எப்படி அதை நிறுத்த முடிஞ்சது?’’

‘‘அவங்க மூளையோட நடுப்பகுதியில் டோபமின் ரசாயனம் அதிகமா சுரக்குறதுனால தான் அவங்க உடம்பெல்லாம் அரிக்குது. இதனாலேயே அவங்களுக்குப் பூச்சி கண்ணுல தெரிய ஆரம்பிச்சிடுது. இந்த டோபமின்னை குறைக்கிற மாத்திரையைச் சாப்பிட்டா ஆட்டோமேட்டிக்கா இந்த அரிப்பு நின்னுப் போயிடுது. அதனால பூச்சின்ற சென்சேஷனும் சரியாயிடுது.’’

“அப்ப, இந்த அரிப்பு, பூச்சு எல்லாமே வெறும் ஒரு ரசாயனத்தினால வந்த வினைதானா?’’ ‘‘மத்தவங்களுக்கு வேற வேற காரணங்கள் இருக்கலாம். ஆனா பாட்டி மாதிரி வயசானவங்க மூளையில இப்படி ஒரு ரசாயன மாற்றம் ஏற்படுறதனாலதான் தன்மேல பூச்சி ஊறுறதா அவங்க நம்புறாங்க. இதை, ‘எக்பாம் சின்ரோம்’னு சொல்வோம். வயசானவங்களுக்கு மட்டுமே வர்ற ஒரு விதமான சைக்கியாட்ரிக் பிராப்ளம். பட் டோன்ட் ஒர்ரி, இந்த மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக்கிட்டா இந்தப் பிரச்னை இனிமே வரவே வராது.’’

‘‘என்னமோ டாக்டர், மறுபடியும் பூச்சி டப்பாவைக் கையில் எடுக்காம இருந்தா சரி’’ என்று சிரித்தார் மகன்.

(மர்மம் அறிவோம்)

vikatan

Link to comment
Share on other sites

 

மனச்சிறையில் சில மர்மங்கள் - 8

நசையறு மனம் கேட்டாள்...டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

p30a.jpg

“ஏய் ஏய் மீனா, ப்ளீஸ் நீ என் வீட்டுக்கு வராதே” என்று சொல்லிவிட்டாள் ஹேமா.

“ஏன்?” என்றாள் மீனா.

“உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எங்கம்மா என்னைத் திட்டிக்கிட்டே இருக்காங்க. நீ ரொம்ப குட் கேர்ளாம். நான் உன்னை மாதிரி ஏன் இல்லைன்னு டெய்லி திட்டுறாங்கப்பா. இனிமே நான் உங்க வீட்டுக்கு வர்றேன்” என்று ஹேமா சொல்லிவிட, மீனா அன்றிலிருந்து ஹேமா வீட்டுக்குப் போவதை நிறுத்திக்கொண்டாள்.

மகள் தனியே உட்கார்ந்துக்கொண்டிருப்பதைக் கவனித்த மீனாவின் அம்மா, “என்னாச்சுச் செல்லம், ஹேமா வீட்டுக்குப் போகலையா?” என்றாள்.

“அவ இனி வராதேனுட்டா” என்றாள் மீனா மரத்துப்போன குரலில்.

“ஏன்?”

மீனா நடந்ததைச் சொல்ல, அம்மா உடனே, “முதல்ல உனக்குச் சுத்திப்போடணும். ஊர் கண்ணெல்லாம் என் பிள்ளை மேலதான்” என்று உப்புக் கற்களால் மகளைச் சுற்றி எடுத்தாள். “சரி, நீ உன் பொம்மைகளோட போய் விளையாடு. நான் போன் பண்ணி ஹேமாவை இங்கே வரச் சொல்றேன்.”

ஹேமா வந்தாள். மீனாவுக்கு ஓர் அதிர்ச்சி தரலாம் என்று சத்தம்போடாமல் பின்னாலிருந்து, அவள் கண்களை மறைக்கத் திட்டம்போட்டு இரண்டு அடி அறையினுள் வந்ததும்தான் அதைக் கவனித்தாள்.

மீனா கைகளை அசைத்து யாரிடமோ பேசிக்கொண்டிருந்தாள், “விடு, என்கிட்ட இப்படிப் பேசாதேன்னு எத்தனை தடவை அம்மா சொல்லியிருக்கா. என்னால தாங்க முடியலையே” என்று அழுகையுடன் முகத்தை மூடிக்கொண்டாள் மீனா.

ஹேமா திடுக்கிட்டு அறையைச் சுற்றிப் பார்த்தாள், யாருமே இல்லை. பிறகு யாருடன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறாள் மீனா?

அப்போதுதான் அறையினுள் நுழைந்தவளைப் போல, “மீனா” என்று அழைத்தபடியே உள்ளே போனாள்.

மீனா கண்களைத் துடைத்துக்கொண்டு, எதுவுமே நடக்காததுபோல ஹேமாவைப் பார்த்தாள். அவள் கண்களில் நீர் ததும்புவதை ஹேமா கவனித்துவிட்டாள்.  “என்ன, யார்கிட்டப் பேசிக்கிட்டு இருந்தே?”

“இல்லையே, நான் யார்கிட்டயும் பேசலையே.”

“சரி... வா, வெளியேபோய் டென்னிஸ் ஆடலாம்.”

“இல்லை, நான் வரலை.”

“ஏன்?”

“டென்னிஸ் ஒரே போர். எனக்குப் பிடிக்காது.”

“சரி வா, நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஹோம் ஒர்க் பண்ணலாம்.”

“அதெல்லாம் வேண்டாம்” என்ற மீனா அந்த இடத்தைவிட்டு நகரவேயில்லை.

“நான் ஆன்ட்டிகிட்ட போய் ஜூஸ் வாங்கிட்டு வர்றேன்” என்று ஓடினாள். சமையல் அறையில் மீனாவின் அம்மாவை நெருங்கி, “மீனாவுக்கு என்னாச்சு ஆன்ட்டி?” என்றாள்.

“அவளுக்கு என்ன, நல்லாத்தானே இருக்கா…”

“ஸ்கூல் திறந்ததுலேர்ந்தே அவ சரியாவே இல்லை. மிஸ்ஸும் சொன்னாங்க…”

“என்ன சொன்னாங்க?”

“அவ கிளாஸை கவனிக்கலையாம், ஸ்டாண்ட் அப் ஆன் தி பென்ஞ்ச்னு சொல்லிட்டாங்க.

இன்னொருநாள், ஹோம் ஒர்க்கை செய்யலைன்னு கெட் அவுட் ஆஃப் தி கிளாஸ்னு சொல்லிட்டாங்க.”

அம்மாவால் இதை நம்பவே முடியவில்லை.  

“இப்படி எல்லாம் செய்யவே மாட்டாளே….” என்றபடி, மகளின் அறைக்குப் போனாள்.

அவள் ஸ்கூல் பையைத் திறந்து நோட்டுப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தாள். ஹேமா சொன்னது உண்மைதான் என்று புரிந்தது.

சில வாரங்களாகவே மீனா சாப்பிட ஆர்வமின்றி மிகவும் அமைதியாக இருந்ததும் நினைவுக்கு வந்தது.

அம்மா கவலையுற்று பால்கனியில் நின்றுகொண்டிருந்த மகளைக் கவனித்தாள். சோர்வாகச் சாய்ந்துகொண்டிருந்த அன்பு மகள் திடீரென்று, “சீ, போசாதே போ!” என்று விருட்டென திரும்பிக்கொண்டு, கண்கலங்கி காதுகளைக் கைகளால் பொத்திக்கொள்ள அம்மாவுக்கு பகீர் என்றது. 

உடனே, “மீனா” என்று அழைத்தாள்.

மீனா மிரண்டுபோய்த் திரும்பினாள், “என்ன பண்ணுது உனக்கு? ஏன் நீயாப் பேசிக்கிற?”

“இல்லையே, நான் பேசலையே…” என்று மீனா மேலும் மிரண்டு விழிக்க, உடனே தன் கணவனுக்கு போன் செய்தாள் தாய்.

‘‘என்னங்க... எனக்குப் பயமா இருக்கு. என் குழந்தைக்கு என்னமோ ஆயிடுச்சு” என்று விசும்பினாள்.

மாலை வீடு திரும்பிய கணவர், “எங்க பாட்டியும் எப்பயாவது இப்படித்தான், தானாகப் பேசிப்பாங்க. ஒண்ணும் பெரிய விஷயமில்லை, விடு” என்றார்.

“தானா பேசுறத விடுங்க. ஏன் கிளாஸ் ஒர்க், ஹோம் ஒர்க் எல்லாம் எழுதலை? ஏன் முன்னை மாதிரி கலகலப்பா இல்லை? எனக்கென்னவோ பயமா இருக்கு.  டாக்டர்கிட்டப் போகலாம்.”

“எதுக்கெடுத்தாலும் அபாயச் சங்கை ஊதுறதே வேலை உனக்கு” என்றபடி தன் வேலையில் மூழ்கினார்.

ஆனால், அம்மாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. மகளை இறுக்க அணைத்துக் கொண்டாள், “மீனா, நீ எவ்வளவு குட் கேர்ள்.  எல்லா வேலையும் நீயே செய்துடுவியே செல்லம். ஏன் வர வர ஹோம் ஒர்க்கைக்கூட எழுதுறதே இல்லை நீ?”

மீனா தன் தவற்றை மறைக்காமல், “மிஸ்கூட உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றாள்.

“ஓ!”

“போன மண்டேவே சொன்னாங்க. நான்தான் சொல்ல மறந்துட்டேன்.”

சற்றுநேரம் அமைதியாய் இருந்த மீனா, திடீரென்று, “அம்மா, நான் செத்துப் போயிடவா?” என்றாள்.

அம்மாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. மகளைக் கட்டிக்கொண்டு அவள் முகத்தை உற்றுப் பார்த்தாள், “ஏம்மா அப்படிச் சொல்ற? என்னாச்சு உனக்கு?”

“எனக்கு லைஃப்பே பிடிக்கலை.  பயமா இருக்கு.  என்னாலதான் உங்களுக்குக் கஷ்டம்” என்று அழுதபடியே அம்மாவின் நெஞ்சில் முகத்தைப் புதைத்தாள்.

“சே... சே, என்ன பேச்சு இது?  அம்மா உன்மேல உயிரையே வெச்சிருக்கேன். அழாதே கண்ணு” என்று அம்மா அவளைத் தட்டிக்கொடுத்து, தூங்க வைத்தார். மறுநாள் காலை, முதல் வேலையாக டாக்டருக்கு போன் செய்து, பிரச்னையைக் கூறினாள்.

“எதற்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்கிட்டக் கூட்டிட்டுப் போறதுதான் நல்லது” என்று அவர் சொல்ல, சைக்கியாட்ரிஸ்ட்டிடம் அழைத்துச் சென்றாள் அம்மா.

டாக்டர் எடுத்த எடுப்பிலேயே, “குழந்தைகிட்டத் தனியாப் பேசணும்” என்றார்.

“குழந்தைகளுக்குக்கூடவா மனநோய் வரும்?” என்ற எண்ணமே அவளைச் சஞ்சலப்படுத்தியது.

மீனாவை, டாக்டர் உள்ளே அழைத்துச் சென்றார்.  சிறிதுநேரம் கழித்து அம்மாவை உள்ளே அழைத்தார். டாக்டர் குழந்தையிடம், “உன் காதுல கேட்குற குரல்கள் ஹாப்பியா பேசுதா?... சோகமாப் பேசுதா?” என்று கேட்க, குழந்தை, “ஸேடா பேசுது, திட்டுது” என்றதைக் கேட்டதும் அம்மா குழம்பிப்போய் டாக்டரைப் பார்க்க குழந்தையிடம், “ஓகே, போய் ஒரு டிராயிங் வரைஞ்சிட்டு வாயேன்” என்று வெளியே அனுப்பிவிட்டு, தாயிடம் பேசினார் டாக்டர். “எத்தனைநாளா இப்படி டல்லா இருக்கா மீனா?”

“அவ எப்பவுமே கொஞ்சம் அமைதியான டைப்தான். ஒரு மாசமா இப்படி இருக்கிறா” என்றாள் அம்மா.

டாக்டர்,  “கவலைப்படாதீங்க.  சரி பண்ணிடலாம்” என்றதும், “இவளுக்கு என்ன பிராப்ளம் டாக்டர்?” என்றாள் அம்மா ஆதங்கமாய்.

“குழந்தை மன அழுத்தத்தில் இருக்கா. அதனால்தான் எதுலேயும் ஆர்வமில்லை, கவனமில்லை. தூக்கம், பசி, பிடித்ததுனு எல்லாமே குறைஞ்சிருக்கு.  இதைக் கவனிக்காம விட்டதுனால பிரச்னை கொஞ்சம் ஆழமாகி, அவ காதுல திட்டுற மாதிரி, மிரட்டுற மாதிரிக் குரல்கள் கேட்குது.  அதான் அவ ரொம்பப் பயந்துபோயிருக்கா.”

“அவ மூளையில் சுரக்கவேண்டிய சில சத்துக்கள் இப்பக் குறைவா இருக்கு. மாத்திரை சாப்பிட்டாச் சரியாப் போயிடும். சில வாரத்துல பழைய மாதிரியே குட் கேர்ள் ஆயிடுவா, டோண்ட் ஒர்ரி” என்று டாக்டர் மாத்திரைகளை எழுதித்தந்தார்.

மாத்திரைகள் கொடுத்ததும் படிப்படியாக, மீனா முன்னேறி வர அம்மாவுக்கு அப்போதுதான் நம்பிக்கையே வந்தது.  சில வாரங்களில் மீனா பழைய மாதிரியே சுயமுனைப்புடன் ஹோம் ஒர்க், கிளாஸ் ஒர்க் எல்லாமே சரியாக எழுதி, பரீட்சையிலும் நல்ல மதிப்பெண் வாங்கிவிட, சாக்லெட் சகிதம்போய் டாக்டருக்கு நன்றி சொன்னாள், “என் பொண்ணு நல்லாயிட்டா டாக்டர்.”

“வெரி குட்” என்று டாக்டர் மறுபடியும் மாத்திரை சீட்டை நீட்ட, “அவதான் நல்லாயிட்டாளே மேடம், இனிமே எதுக்கு மாத்திரை?” என்றாள் அம்மா.

p30b.jpg

“மருந்து ரத்தத்துல இருக்குறதனாலதான் மூளை சரியா இயங்குது.  இப்ப திடீர்னு மருந்தை நிறுத்திட்டா, மறுபடியும் பிரச்னை தலைதூக்கிடும். அதனால் நான் செக்பண்ணிச் சொல்றவரைக்கும் மருந்தை நிறுத்தக் கூடாது” என்று டாக்டர், அம்மாவுக்கு விளக்கம் சொல்லிவிட்டு மீனாவை அழைத்து, “இப்ப நீ ரொம்ப சூப்பரா படிக்கிறியாமே, வெரி குட் என மெல்லச் சிரித்துத் தலையாட்ட, “மீனா நல்லானதே போதும் டாக்டர்” என்று சீட்டுடன் கிளம்பினாள் அம்மா.

(மர்மம் அறிவோம்)

vikatan

Link to comment
Share on other sites

மனச்சிறையில் சில மர்மங்கள் - 9

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

p30aa.jpg

வாசுவைப் பற்றி அவன் அம்மா எப்போதும் கவலைப்பட்டதே கிடையாது. மற்ற குழந்தைகளாவது மணலில் விளையாடுவது, கைகளை அழுக்காக்கிக் கொள்வது, ஹோம் ஒர்க் எழுதாமல் வம்பு செய்வது என்று இருப்பார்கள். ஆனால், வாசு ஒரு நாள்கூட அம்மாவுக்கு எந்தக் கஷ்டமும் கொடுத்ததே இல்லை.

தன் வேலைகளைத் தானே செய்துகொள்வான். அதேபோல், எல்லா விஷயத்திலும் ரொம்பவே சுத்தமாக இருப்பான். கழிப்பறைக்குப் போய் வந்தால் கையைச் சோப் போட்டு கழுவுவது, சுத்தமான மேசை நாற்காலிகளில் மட்டும் அமர்வது, யூனிஃபார்ம் சட்டையின் மடிப்புக்கூட கலையாமல் வீட்டுக்கு வருவது என்று எல்லாவற்றிலுமே சுத்தத்தைக் கடைப்பிடிப்பான். அதுவும் ஏழு வயசிலேயே.

வாசு, சமீபகாலமாய் ரொம்பவே அதிகமாகச் சாமி கும்பிட ஆரம்பித்திருந்தான்.

பள்ளிக்கூடத்திலும் அதிகபட்ச பக்தியைக் கடைப்பிடித்தான். எந்த அளவுக்கு என்றால், ஒவ்வொரு முறை எழுத ஆரம்பிக்கும்போதும் பிள்ளையார் சுழி போட வேண்டும் என்று ஆரம்பித்தவன், ஒரு சுழிக்குப் பதிலாக 11 சுழிகள் போட ஆரம்பித்தான். அவன் பிள்ளையார் சுழிகள் போடுவதற்குள்... மிஸ், போர்டில் எழுதியதை அழித்துவிட்டு, அடுத்த பத்தியை எழுதிவிடுவார். இதனால், கிளாஸ் ஒர்க் நோட்டை அவனால் சரியாக நிரப்ப முடியவில்லை.

இதற்கிடையில், பள்ளிக்கூடத்தில் சுகாதாரம் பற்றி வகுப்பு நடத்தினாலும் நடத்தினார்கள், இவன், கிருமிகள் பரவி இருப்பதாக நினைத்து நினைத்துப் பயப்பட ஆரம்பித்தான். மற்ற மாணவர்கள் தன்னைத் தொட்டால் அவனுக்குப் பிடிக்காமல் போனது, யார் அருகிலும் உட்கார்ந்து சாப்பிடவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. மற்றவர் மூச்சுக்காற்று தன் மீது பட்டால் தனக்கு ஏதாவது நோய் ஏற்பட்டு விடுமோ என்று பயந்து, உடனே ஓடிப்போய் தன் கைகளைக் கழுவ ஆரம்பித்தான். அதுவும் ஒரு தடவை, இரண்டு தடவை இல்லை. சரியாக 11 முறை கழுவினால்தான் சுத்தமாகிவிட்டதாய் அவனுக்குத் தோன்றியது. 

“பாத்ரூம் போய் இவ்வளவு நேரமாச்சு, இன்னும் அங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே” என்று அம்மாவும், அப்பாவும் எவ்வளவோ திட்டியும் விட்டார்கள், அதுபற்றிக் கவலையேபடாமல் தனக்குத் திருப்தி வரும்வரை குளித்துக்கொண்டே இருந்தான் வாசு.  

ஏன் இப்படி இருக்கிறான், எப்படி அவனிடம் இதுபற்றிக் கேட்பது என்று யோசிக்கும்போதே, வாசு அம்மாவை உலுக்கிக்கேட்டான். “அம்மா, நான் நல்ல பையன்தானே? என்னை நல்ல பையன்னு சொல்லுங்களேன்.”

p30a.jpg

“ஆமாண்டா, நீ ரொம்ப நல்ல பையன்தான்” என்று அம்மா அவனைத் தன் நெஞ்சோடு அணைக்க, வாசு திமிறிக்கொண்டு விலகினான். “என்னைக் கட்டிப் பிடிக்காதீங்க… எனக்குக் கெட்டகெட்ட எண்ணங்களா வருது.”

அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. “சேசே, நீ எவ்வளவு குட்டிப்பையன். உனக்கு அப்படி எல்லாம் வராதுடா.  யூ ஆர் எ குட் பாய்.”

வாசு அழவே ஆரம்பித்துவிட்டான். “இல்லை. நான் குட் பாய் இல்லை. எனக்கு ரொம்ப ரொம்ப பேட் தாட்ஸ் எல்லாம் வருது. என்னால அதை நிறுத்தவே முடியலை. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.”

வாசுவின் அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன பேட் தாட்ஸ்? அம்மாகிட்டச் சொல்லு. நான் சரி பண்றேன்.”

“என்னை பேட் பாய்ன்னு நினைக்கக் கூடாது.”

“இல்லை, நினைக்கமாட்டேன். தைரியமாச் சொல்லு.”

வாசு தயங்கிதயங்கிச் சொன்னான், “நீங்களும் அப்பாவும் ஒண்ணா இருக்குறதைப் பார்த்தா எனக்கு பேட் தாட்ஸ் எல்லாம் வருது.”

அய்யய்யோ!  பார்க்கக் கூடாத எதையாவது பார்த்துவிட்டு பயந்திருக்கிறானோ. இருக்காதே, உச்சகட்ட எச்சரிக்கையைத்தானே இதுவரை கடைப்பிடித்து வருகிறோம். அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க, பையன் அழுதபடியே தூங்கிப்போனான். அடுத்தநாள் மாலை வாசுவின் ஸ்கூல் டீச்சர், அவனின் டைரியில், “பேரன்ட்ஸ் வந்து பார்க்கவும்” என்று எழுதி அனுப்பியிருந்தார்.

“இது என்ன, புது பிரச்னை?” என்று பெற்றோர் இருவரும் மறுநாள் டீச்சர் எதிரில் ஆஜராகினர்.

வாசுவைப் பற்றி டீச்சர் வண்டி வண்டியாய் புகார்களை வாரி இறைத்தார். “வாசு கிளாஸை கவனிக்கிறதே இல்லை.  எப்பப் பார்த்தாலும் நோட் புக்ல எதையாவது கிறுக்கிக்கிட்டு இருக்கான். கிளாஸ் ஒர்க், ஹோம் ஒர்க் எதையுமே சரியா கம்ப்ளீட் பண்ணுறதே இல்லை. மத்த பசங்க தன்னைத் தொட்டவுடனே ஆத்திரத்தோட கையத் தொடச்சிக்கிறான், ஊதி விட்டுக்குறான். எல்லாப் பசங்களும் அவனைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணுறாங்க. இவன் யாரோடவும் சேர மாட்டேன்றான். தனியா உட்கார்ந்து சாப்பிடுறான். உங்க பையன் சரியா இல்லை. அவனை நீங்க திருத்தி மத்த பசங்ககிட்ட சேர்ந்து பழக வெக்கலைன்னா இந்த ஸ்கூலை அவன் கன்டினியூ பண்ணுறது ரொம்பக் கஷ்டம்.”

டீச்சர் சொல்வது எதுவும் பொய் அல்ல  என்று வாசுவின் அப்பா, அம்மா இருவரின் உள்ளுணர்வும் சொல்லியது.

வீட்டில் அம்மாவுக்கு வேலையில் மனசே ஓடவில்லை. அவளைப் பார்க்க வந்த தோழி, “என்னடி... இப்படி டல்லா இருக்கே?” என்று கேட்க, தன் மகனைப் பற்றிச் சொன்னாள். “உன் பையனை ஒரு சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போயேன்” என்றாள்.

வாசுவை சைக்கியாட்ரிஸ்ட்டிடம் கூட்டிப் போயினர். டாக்டரிடம் அவன் நிறையப் பேசினான். “என் மனசு என்னை எப்பவுமே பேட் பாய்னே சொல்லுது டாக்டர். நான் குட் பாயா இருக்கணும்னுதான் ட்ரை பண்றேன். ஆனா, கெட்டகெட்ட தாட்ஸா வருது. என்னால அதை கன்ட்ரோலே பண்ண முடியலை.”

P30.jpg

வாசுவின் பெற்றோருக்கு பல சந்தேகங்கள் இருந்தன. “என்ன டாக்டர் பிராப்ளம் அவனுக்கு?”

“ஓ.சி.டி-னு சொல்வோம். அப்ஸெசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸாடர். அதாவது ஒரே எண்ணம் திரும்பத்திரும்ப மனசுல சுழன்றுக்கிட்டே இருக்கும். அது அனாவசிய சிந்தனை. அதை நிறுத்திட்டு, வேற வேலையப் பார்க்கலாம்னு அவங்களுக்கே தெரியும். இருந்தாலும், அவங்க கன்ட்ரோலையும் மீறி அந்த எண்ணம் மனசுலேயே ஒட்டிக்கிட்டு இருக்குறதைத்தான் அப்செஷன்னு சொல்வோம். பொதுவா இந்த மாதிரி அஞ்சு ரக அப்செஷன்ஸ் இருக்கலாம். சுத்தம், அசுத்தம் என்பதைப் பற்றிய யோசனை ஒரு டைப். கடவுள் வழிபாடு பத்தின யோசனை ரெண்டாவது டைப். வன்முறையைப் பற்றிய யோசனை மூணாவது ரகம். இது சரியா, தவறா என்பது மாதிரியான நியாய தர்மச் சிந்தனைகள் இன்னொரு டைப். செக்ஸ் சம்பந்தமான யோசனைகள் ஐந்தாவது டைப்.”

“இந்த மாதிரி எண்ணங்கள் வர்றதை நிறுத்தணும்னுதான் வாசுவும் ட்ரை பண்றான். இத்தனை தடவை சாமி கும்பிடணும், இத்தனை தடவை கை கழுவணும்னு எல்லாம் அவனே சில சம்பிரதாயங்களைச் செய்யுறான். இந்தச் சம்பிரதாயங்களைச் செய்தே தீரணும்னு அவன் மனசு கட்டாயப்படுத்துது.  செய்யலைன்னா மனசு அமைதியே ஆகமாட்டேங்குதுனுதான் தனக்குப் பிடிக்கலைனாலும், வேறு வழியே இல்லாம கட்டாயத்துனால சில காரியங்களை அவன் திரும்பத்திரும்பச் செய்றான்.  இதைத்தான் கம்பல்சிவ் பிஹேவியர்னு சொல்வோம். திரும்பத்திரும்ப ஒரே அப்ஸெசிவ் எண்ணம், திரும்பத்திரும்ப ஒரே கம்பல்சிவ் செயல்கள்னு இருக்குறதனாலேதான் இதை அப்ஸெசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸாடர்னு சொல்றோம்.”

“ஏன் டாக்டர் இவனுக்கு இப்படி எல்லாம் வருது?”

டாக்டர் தலையசைத்தார். “ஆனா இதைவிட மோசமான, வைத்தியமே பண்ண முடியாத வியாதி எல்லாம் எவ்வளவோ இருக்கே. இவனுக்கு இருக்குறது ஒரு சிம்பிள் ரசாயனக் குறைபாடு. நம்ம மூளையில செரடோனின்ங்குற ஒரு ரசாயனம் இருக்கு. இதுதான் நம்ம மனசோட அம்மா மாதிரி. இதைச் செய், இதைச் செய்யாதே, இப்படி இரு, இருக்காதேன்னு எல்லாம் நம்ம மனசைக் கன்ட்ரோல் பண்ணுறதே இந்த செரடோனின்தான். இந்த செரடோனின் சரியான அளவுல சுரந்தா மனசு சரியா இயங்கும், கட்டுப்பாட்டோட இருக்கும். ஆனா, சில பேருக்கு இந்த செரடோனின் அளவு குறைவா இருக்குறதுனால அவங்க மனசு இந்தச் சுயக் கட்டுப்பாட்டை இழந்திடுது. அதனாலதான் மனசு தறிகெட்டு ஏதோதோ வேண்டாத விஷயங்களைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிடுது.”

“வாசுவுக்கு இந்த செரடோனினை சரியான அளவுக்குக் கொண்டு வர முடியாதா டாக்டர்?”

“அதுக்குதான் இந்த மாத்திரை. இது வாசுவோட மூளையில வேலை செய்து செரடோனின் அளவை அதிகரிக்கும். செரடோனின் அதிகமாகி, இயல்பு அளவைத் தொட்டதும் இந்த அப்ஸெசிவ் எண்ணங்கள், இந்த கம்பல்சிவ் செயல்கள் எல்லாமே நின்னுடும். கவலைப்பட வேண்டாம்.”

(மர்மம் அறிவோம்)

vikatan

Link to comment
Share on other sites

மனச்சிறையில் சில மர்மங்கள் - 10

தொடர்டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்

 

p30a.jpg

கெட்டவார்த்தை படலம்

‘‘பெற்றால்தான் பிள்ளையா, தத்தெடுத்துக்கொள்ளலாமே” என்ற முடிவுக்கு வந்தார்கள் ஷோபாவும் ராஜுவும். குழந்தைகள் காப்பகத்துக்கு முதல் முறை போனபோதுதான் அவர்கள் குட்டி சூரியை சந்தித்தனர். சூரி தன் பெரிய கண்களும், பொக்கை வாயுமாகச் சிரித்த அந்த முதல் கணத்திலிருந்தே அவன்மீது ஒரு தனிப்பட்ட பிரியம் பீறிட ஆரம்பித்தது. அவனைவிட்டு வரவே மனமின்றி, “ப்ளீஸ் இப்பவே எங்ககிட்டக் குடுத்துடுங்க” என்று கெஞ்சினாள் ஷோபா. ஆனால், சட்டப்படி குழந்தையைத் தத்தெடுக்க கொஞ்சம் காலம் ஆனது. கடைசியாக, ஒரு நாள் சூரியை அவர்களிடமே ஒப்படைத்தார்கள். அன்றைக்குத்தான் ஷோபாவின் வாழ்வில் பொன்நாள்.

அன்றிலிருந்து சூரியை அன்பில் அபிஷேகித்து, ஆசையுடன் பராமரித்தாள் ஷோபா. நாளடைவில் சூரியின் மீதான அந்தப் பிரியம் மிக வலிமையான ஒரு பந்தமாகவே மாறிவிட, அவன் மேல் உயிரானாள் ஷோபா. “ரொம்ப செல்லம் கொடுத்துக் கெடுக்குற!” என்று பிறர் முகம் சுளித்ததையும் பொருட்படுத்தாமல், சூரியை ஒரு ராஜகுமாரன் மாதிரி சகல வசதிகளுடன் வளர்த்தாள். சூரியும் மிகவும் சுட்டி. மளமளவென வளர்ந்து தாயை மகிழ்வித்தான். போகப்போக எல்லோரும் அவனை “எங்க வீட்டுப் பிள்ளை” என ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

அந்தச் சமயத்தில்தான் பள்ளி ஆசிரியை, “சூரி அம்மா, உங்களோட கொஞ்சம் தனியாப் பேசணும். டைம் கிடைக்கும்போது ஸ்கூலுக்கு வாங்க” என்று போன் செய்தார்.

இரண்டு நாட்கள் கழித்து, பள்ளி ஆசிரியரைப் போய் பார்த்தபோது, ஒரு பெரிய குண்டைத் தூக்கி போட்டார் டீச்சர். “நானும் ரொம்ப நாளா கவனிச்சிக்கிட்டே வர்றேன், உங்க பையனோட நடத்தையே சரியில்லை. கிளாஸ் டைம்ல உடம்பை எப்படி எப்படியோ வளைச்சு காமெடி பண்றான். எல்லா பசங்களும் அவனை ஜோக்கர் மாதிரி பார்த்துச் சிரிக்கிறாங்க. கிளாஸோட அமைதியே போயிடுது. அதுகூடப் பரவாயில்லை. ஆனா ஐ ஆம் வெரி சாரி டூ டெல் யூ திஸ். உங்க பையன் ரொம்பக் கெட்ட வார்த்தை பேசுறான். காதுல கேட்க முடியாத அளவுக்கு ரொம்ப அசிங்கமாப் பேசுறான். நான் ஏற்கெனவே கூப்பிட்டு ரெண்டு தடவை வார்ன் பண்ணிட்டேன். அப்படி இருந்தும் துணிச்சலா அவன் பாட்டுக்கு என் முன்னாடியே அசிங்கமாப் பேசிக்கிட்டே போறான்.”

“இருக்கவே இருக்காது. நான் நம்பவே மாட்டேன். என் சூரி ரொம்ப நல்ல பையனாச்சே. அவனாவது கெட்ட வார்த்தையாவது” என்று ஆட்சேபிக்க வாயைத் திறந்த அம்மாவுக்கு சட்டென அப்போது தான் நினைவுக்கு வந்தது, வீட்டு வேலைக்காரியும், டிரைவரும்கூட இதுபற்றி முன்பு சாடை மாடையாகப் புகார் சொன்னது.

“இதுதான் லாஸ்ட் அண்ட் ஃபைனல் வார்னிங். உங்க பையன் இனி ஸ்கூல்ல இப்படிச் சில்மிஷம் பண்ணான்னா, பிரின்சிபல்கிட்ட ரிப்போர்ட் பண்றதைத் தவிர எனக்கு வேற வழியே இல்லை” என்றார் டீச்சர் மிகக் கோபமாய்.

அயர்வுடன் போய் சூரியை அழைத்துக் கொண்டாள் அம்மா. மகன் வண்டியில் ஏறும்வரை காத்திருந்துவிட்டு, “ஸ்கூல்ல கெட்ட வார்த்தை பேசினியாமே?” என்று கேட்கும்போதே அவள் குரல் நடுங்கி, கை உதறியது. அவனை அடிக்க கை துடித்தது. ஆனால், இதுவரை எதற்குமே அடித்திராத தன் அன்பு மகனை எப்படித் திடீரென்று அடிப்பது? எதுவாக இருந்தாலும், அன்பாய் பேசிச் சரி செய்யலாம் என்று தோன்றியது. அதற்குள் கண்களில் நீர் கரைபுரள, அதைத் துடைத்துக்கொண்டு, “ஏன் அப்படிப் பண்ணே?” என்றாள் கம்மியக் குரலில்.

சூரியின் கண்கள் பதற்றத்தில் அதிகமாய் படபடத்தன. அவன் கை பரபரப்பில் தானே லேசாய் காற்றில் கையெழுத்து போட்டு அடங்கியது.

“அம்மா கேக்குறேனில்லை, பதில் சொல்லு சூரி?”

அவன் சற்றுநேரம் பயந்து விழித்துவிட்டு, “எனக்கே தெரியலை மம்மி. தானா வாய்லேர்ந்து என்னென்னமோ வார்த்தை வந்துடுது. சாரி” என்றான்.

“அதெப்படி, உனக்கே தெரியாம தானா கெட்ட வார்த்தை வரும்?”

சூரி எதுவும் பேசாமல் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டான். அன்றெல்லாம் அம்மா பக்கத்திலேயே போகவில்லை.  சாப்பிடவில்லை. விளையாடப் போகவில்லை. அம்மாவும் கோபமாகவே இருந்ததால் அவனைச் சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை. இரவு அவன் அவள் பக்கத்தில் வந்து படுத்து, வழக்கம்போல, அவள் இடுப்பின் மேல் முழங்காலைப் போட்டு வளைந்து சுருள, அந்த அணைப்பில் அவள் அவனை மன்னித்துவிட்டாள். “என் மேல பிராமிஸ் பண்ணு. இனி இப்படிக் கெட்ட வார்த்தை பேசக் கூடாது.”

“பிராமிஸ்” என்று சின்னக் குரலில் சொல்லிவிட்டு அவள் முதுகில் முகம் புதைத்தான் மகன்.

ஆனால், ஒரே வாரத்தில் ஆசிரியை முன்பைவிட அதிகக் கோபத்துடன், “உங்களோட பேசணும்” என்று சொல்ல, என்ன பிரச்னையோ என்று பயந்துகொண்டே பள்ளிக்கூடம் போனாள் அம்மா.

“நான் ஏற்கெனவே சொன்னேனில்லையா சூரி மம்மி. அவன் இன்னும் கெட்ட வார்த்தை பேசுறதை நிறுத்தலை. நாளைக்கு நீங்க வந்து பிரின்ஸிபாலை பாருங்க” என்று டீச்சர் கோபமாகப் போய்விட, சூரியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி, “ஏன் இப்படி எல்லாம் செய்து அம்மாவைக் கஷ்டப்படுத்துற” என்று மனம் உடைந்து கடிந்தாள் அம்மா.

“நான் வேணும்னு சொல்லலை மம்மி. வாய்லேர்ந்து அதுவாவே.’’

“ஷட் அப்! பொய் பேசாதே!” என்று அம்மா கத்திவிட, கோபித்துக்கொண்டு போய் சோஃபாவில் படுத்துக்கொண்டான் சூரி.

p30.jpg

மறுநாள் ஷோபாவிடம், ‘‘அவனை கண்டிச்சீங்களா?” என்றார் பிரின்சிபால்.

“பேசி பார்த்தேன் மேடம். அவன் வேணும்னே அப்படிச் செய்யலை, வாய்லேர்ந்து அவனை அறியாம அப்படியெல்லாம் வார்த்தைகள் வந்துடுறதா சொல்றான். ஸோ சாரி” என்றாள் அம்மா தலைகுனிந்து. 

“நான் சொன்னா நீங்க தப்பா நினைக்கக் கூடாது. இந்த பையனுக்கு டீசி கொடுக்க எனக்கு மனசில்லை. அதே சமயம் இந்த மாதிரி தப்பான நடவடிக்கையை சரிபடுத்தாம விட முடியாதே. நீங்க வேண்ணா சூரியை ஒரு சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போங்களேன்” என்றார் தலைமை ஆசிரியை.

டாக்டர் என்றதுமே சூரிக்கு பயம் தலைக்கேறியது. அதுவும் டாக்டர் அவன் அம்மாவை அனுப்பிவிட்டு, “இங்கே வாயேன்” என்று அவனைப் பக்கத்தில் உட்கார வைக்க, அவனை அறியாமல் கண்ணிமைகள் படபடக்க ஆரம்பித்தன.

“உனக்குக் கப்பல் செய்யத் தெரியுமா?” என்று டாக்டர் காகிதத்தை நீட்டி, “எங்கே ஒரு கத்திக் கப்பல் செய் பார்ப்போம்’’ என்றார்.

டாக்டர், தொடர்ந்து கத்திக் கப்பல், பாய்மரக் கப்பல், ராக்கெட் என்று ஏதோதோ செய்ய ஊக்குவிக்க, ‘‘சரிதான் இந்த டாக்டர் ஊசி போடமாட்டாங்கபோல” என்று ரிலாக்ஸாகி, பயத்தை மறந்து ஆர்வமாய், மிக்கி மவுஸ், போக்கே மேன், டோரா புஜ்ஜி எல்லாம் வரைந்து காட்ட ஆரம்பித்தான். 

டாக்டர் சொன்ன கதையைக் கேட்டு முடித்து, பதிலுக்கு இவனும் ஒரு கதை எல்லாம் சொல்லி முடித்து, “வெரி குட் வெளிய போய் ராக்கெட் விடேன். நான் அம்மாகிட்ட பேசுறேன்” என்றார் டாக்டர்.

ஷோபாவிடம், “உங்க பையன் சாதாரணமா இருக்கும்போதும், தன்னை அறியாம ஏதோ சத்தம் போட்டுக்கிட்டே இருக்குறானே, அது எத்தனை நாளா இருக்கு?” என்றார் டாக்டர்.

“சத்தம் போடுறானா? நான் கவனிச்சதே இல்லையே!” என்று அதிர்ந்தாள் அம்மா.

“ம், லைட்டா சின்னச்சின்ன மிஷின் சத்தம், மிருக சத்தங்கள், கனைக்கிற, உருமுற சத்தம்…”

“ஓ, அது சும்மா விளையாட்டா அப்படித்தான்... அது ரொம்ப நாளா, கிட்டத்தட்ட ஒண்ணு ஒன்றரை வருஷமா….”

“ஐ ஸீ, திடீர்திடீர்னு கையை அசைக்கிறது? தோளைக் குலுக்குறது, டேபிளை இப்படி ஒரு மாதிரி தட்டுறானே, அது?”

“அதுவும் எப்பயாவது விளையாட்டாச் செய்வான் டாக்டர்?”

‘‘எத்தனை நாளா?”

“நான் சரியாக் கவனிக்கலை. ரொம்ப நாளா, ரெண்டு வருஷத்துக்கு மேலகூட இருக்கும். ஏன் டாக்டர் அதனால என்ன? அவன் என் தத்துப் பிள்ளை டாக்டர். அதனால அவனுக்கு மனசுல ஏதாவது பிரச்னையா? அவன் நிஜ அம்மாவை மிஸ் பண்றானா?”

“சே...சே. நத்திங் லைக் தட். நீங்க சொல்றது, அவன் டீச்சர் சொல்றது, நேர்ல பரிசோதனை செய்து பார்த்தது, இதை எல்லாம் வெச்சு பார்க்கும்போது உங்க பையனுக்கு ‘டொரெட் டிஸாடர்’ இருக்கும்னு தோணுது. இது ஒரு விதமான நரம்பு ரசாயனக் கோளாறு. இவனை மாதிரி சின்ன வயசு ஆம்பளை பசங்களுக்கு வர்ற பிராப்ளம். இந்த மாதிரி திடீர் திடீர்னு தன்னை அறியாம கெட்ட வார்த்தை பேசுறது, தன் கட்டுப்பாட்டை மீறி உடம்பு அசஞ்சி டிக்ஸ் ஏற்படுறது, அர்த்தமில்லாத சத்தங்கள் எழுப்புறது... எல்லாமே டொரெட்ல ஏற்படுற அறிகுறிகள்தான்.”

“தன்னை அறியாம கெட்ட வார்த்தை பேசுற மாதிரிகூட ஒரு வியாதி இருக்கா டாக்டர்? அதிசயமா இருக்கே!”

“ஆமா. இதுக்குனு சில மாத்திரைகள் இருக்கு. அதைச் சாப்பிட்டா இந்த மாதிரி பிரச்னையைக் கட்டுப்படுத்திடலாம்” என்று டாக்டர் மருந்துகளை எழுதி கையோடு பள்ளிகூடத்துக்கு ஒரு கடிதமும் எழுதித்தர, மறுநாள் சூரி, கடிதம் சகிதம் பள்ளிக்கூடம் போனான்.

இரண்டு மூன்று வாரங்களிலேயே அவனுடைய கெட்ட வார்த்தை பேசும் படலம் நின்றுவிட, “அப்பாடா, என் பிள்ளை பிழைத்தானே” என்று நிம்மதியுற்றாள் அவன் தாய். ஆனால், இப்படி எல்லாம் ஒரு வியாதியா என்கிற அவள் ஆச்சர்யம் மட்டும் தீர ரொம்ப நாளானது.

(மர்மம் அறிவோம்)

vikatan

Link to comment
Share on other sites

மனச்சிறையில் சில மர்மங்கள் - 11

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

அடைக்கும் தாழ்!

னநல மருத்துவர் பேச ஆரம்பித்ததுமே, தன் மொத்தக் கதையையும் சொல்லிப் புலம்பி அழுதாள் மாதவி. “அவர்மீது நான் உசுரையே வெச்சி தொலச்சிட்டேன் டாக்டர். இப்படிச் சொல்லாமக் கொள்ளாம ஊரைவிட்டே போயிட்டாரே. அவர் இல்லாம என்னால் இனிமே எப்படி வாழ முடியும்?”

“ரொம்ப நல்லவன்தான்... இன்னொருத்தன் பொண்டாட்டியை இப்படி ஏமாத்தி யூஸ் பண்ணிப்பானா?”

“அவர் என்னை யூஸ் பண்ணலை டாக்டர். உண்மையிலேயே அவர் என்மீது பிரியமாதான் இருந்தாரு” என்று மீண்டும் குமுறி குமுறி அழுதாள் மாதவி.

வெளியே அவள் கணவனும் குழந்தைகளும் அவள் சீக்கிரம் சரியாக வேண்டும் என்று ஆஸ்பத்திரி அரசமரத்தடியில் இருந்த பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

மாதவி அழுது முடிக்கும்வரை காத்திருந்துவிட்டு மருத்துவர் அவளுக்கு எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“அந்த ஆறுமுகம் உண்மையிலேயே உன்னை லவ் பண்ணி இருந்தா உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டிருப்பான். ‘என்னோட வந்துடு, நீ இல்லாம என்னால இருக்க முடியாதுனு’ சொல்லி இருப்பான். அந்த மாதிரி ஏதாவது சொன்னானா?”

மாதவிக்கு அப்போதுதான் அது உரைக்கவே செய்தது. “இல்லை. அப்படி ஒரு தடவைகூடச் சொன்னதில்லை.”

“உனக்கு ஆம்பளைங்களப் பத்தி என்ன தெரியும்?” என்றார் டாக்டர்.

“ஒண்ணுமே தெரியாது டாக்டர். 10-வது முடிச்ச உடனே கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. என் வீட்டுக்காரர், பசங்க, இது மட்டும்தான் என் உலகம். ஆறுமுகம் அண்ணாச்சி கடைக்குப் போனபோது என்கூட நல்லாப் பேசுவார். போகப்போக இப்படி...”

p30a.jpg

சாதாரணமாய் பெண்களைவிட ஆண்களுக்குத்தான் கலவியல் தேவை அதிகம். காரணம், அவர்கள் உடலில் ஓடும் டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார்மோன். அதனால் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் லேசு பாசாய் ரூட்விட்டுப் பார்ப்பது பல ஆண்களுக்கு இயல்பு. ஆனால், பொதுவாய் பெண்கள் மிக உஷாராய் இருப்பார்கள்.

ஆண், பெண்ணுக்குச் சம்பாதித்துத் தரவோ, அவளுக்குச் சாப்பாடு போடவோ தயாராக இருந்தால்தான் அவன் மனைவி அவனோடு கூடுவதற்குத் தயாராகிறாள். இப்படி எந்த விதத்திலும் பெண்ணுக்கு அனுகூலம் இல்லாதவன் என்றால், பெண்கள் பொதுவாய் அவனைச் சீண்டுவதே இல்லை. அது கட்டிய கணவனாக இருந்தாலும்கூட அவனை விலக்கி வைத்துவிடுகிறாள். இதனால் ஒரு சில ஆண்கள், கலவியல் தொழிலாளர்களை நாடிச் செல்கின்றனர்.

வேறு சிலர், ஓர் ஏமாளிப் பெண்ணைப் பிடித்து, ஆசை வார்த்தை பேசி, அவளைத் தன் வசப்படுத்திக்கொள்வான். இப்படித் தன் தேவைக்காக நயவஞ்சகமாய் ஏமாற்றும் ஆண், மாதவி மாதிரி அடக்க ஒடுக்கமான வெளி உலகம் அறியாத குடும்பத்துப் பெண்ணைத்தான் தேர்ந்தெடுப்பான். அவனுக்கு ஆகப் போகும் ஒரே செலவு, ‘‘உன் உதடுகள் ரொம்ப செக்ஸியா இருக்கு’’ என்பது போன்ற தித்திப்பாய் சில வார்த்தைகள்.

இதில்தான் பெண்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பொதுவாய் ஆண்களுக்கு அழகாக, தித்திப்பாக, அலங்காரமாக, நுணுக்கமாக எல்லாம் பேசவே வராது. வெட்டு ஒன்று... துண்டு இரண்டு என்று சுவாரஸ்யமே இல்லாமல்தான் பேசுவார்கள். காரணம், ஆணின் மூளையில் மொழிக்குண்டான மையம் மிகவும் சின்னதாக இருக்கிறது. பெண்ணுக்குத்தான் மூளையின் மொழி மையம் மிகப் பெரிதாக இருக்கும். அதனால்தான் பெண்கள் பிறவியிலேயே பேச்சில் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். 

இப்படிச் சின்னதாய் இருக்கும் இந்த மொழி மையத்தை வைத்துக்கொண்டு ஒரு சராசரி ஆண் சாதாரணமாய் பேசுவதே பெரிய விஷயம். இந்தக் குட்டி மொழி மையத்தை வைத்துக்கொண்டு ஒருவன் சுவாரஸ்யமாய், அலங்காரமாய் பேசுகிறான் என்றால், அவன் பல பெண்களிடம் இப்படிப் பேசிப்பேசி ரொம்பவே பிராக்டீஸ் ஆனப் பேர்வழி. இப்படி வார்த்தை ஜாலம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு பெண்களை வேட்டையாடும் பல ஆண்கள் இருக்கிறார்கள்.அவர்களிடம் பெண்கள் உஷாராக இருப்பது அவசியம்.

ஆறுமுகம் அண்ணாச்சியின் மனைவி அரசு வேலையில் இருந்தாள். அவன் நடத்திவரும் கடையை ஒழுங்காய் கவனிக்காமல், அடுத்தவன் மனைவியோடு சல்லாபிக்கவே நேரத்தைச் செலவழித்தான். கடைசியில், மாதவியின் மனதில் ஆசையை வளர்த்து, அவன் இல்லாமல் அவளால் இருக்க முடியாது என்ற நிலைக்கு அவள் மனதை மயக்கி, கடைசியில் தன் மனைவியின் பின்னால் போய் ஒளிந்துகொண்டான் ஆறுமுகம்.

இவனை மாதிரி வெட்டி ஆஃபீசர்கள்தான் பொழுதுபோக்காகக் கண்டவன் மனைவிக்குக் கடலை போடுகின்றனர். ஆக, உருப்படாத, முதுகெலும்பு இல்லாத, தன் மனைவியோடு ஈடுகொடுக்க முடியாதவர்கள்தான் அடுத்தவன் மனைவிக்கு இப்படித் திருட்டுத்தனமாய் ரூட் விடுகிறார்கள். இதை எல்லாப் பெண்களும் புரிந்துகொண்டால், மாதவி மாதிரி ஏமாறாமல் இருக்கலாம்.

மாதவியின் ஒரே பலவீனம், அவளுக்கு ஆறுமுகம் ஆடிய ஆட்டம் புரியாத அறியாமைதான். அவளுக்கு ஆண்களின் அந்தரங்க ஆட்ட முறைகள் தெரிந்திருந்தால் ஆறுமுகத்தின் வலையில் அவள் விழுந்திருக்க மாட்டாள்.

p30.jpg

இந்த எல்லா விளக்கங்களையும் கேட்ட பிறகுதான் மாதவிக்கு, தான் ஏமாந்த விஷயமே புரிந்தது. புரிந்தபிறகு இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள்.

 “அப்படினா... அவன் என்மீது அன்பே வெக்கலையா?  எல்லாம் என் உடம்புக்காகத்தானா? அய்யோ... என் புருஷன் முகத்துல நான் இனிமே எப்படி முழிப்பேன்? அவரு எவ்வளவு நல்லவரு. இவ்வளவும் தெரிஞ்சுமே இதுவரைக்கும் என்னை ஒரு வார்த்தைகூட சீ...ன்னு சொல்லலையே?”
“ஆமா, உன் ஹஸ்பண்ட் ரொம்ப நல்லவர். நிஜமான ஆம்பளை. அதனால்தான் அவருக்கு பாயின்டு பாயின்டா பேச வரலை. அதனால்தான் அவரால் உன் உதடுகள் செக்ஸியா இருக்குனு எல்லாம் ஸ்வீட்டா பேசத் தெரியலை. அவருக்கு அப்படி எல்லாம் ஜாலியா பேச வரலைனாலும், உன் உடம்புக்கு ஒண்ணுன்னா அவர்தானே பதறுறாரு. தினமும் ஐ லவ் யூன்னு சொன்னாதான் அன்பா? இப்படி உனக்காகத் தவிக்கிறாரே, அதுதான் உண்மையான அன்பு.”

‘‘ஆமா டாக்டர், அவருக்கு என் மேல் ரொம்ப அன்பு. எனக்கு ஒண்ணுன்னா அவரால் தாங்கவே முடியாது.”

“அப்படிப்பட்ட ஹஸ்பண்ட் கிடைச்சும் எவனோ ஒருத்தனுக்காகச் சாகப் போயிட்டியே... நடந்தது நடந்துச்சு. இனிமே உன் வீட்டுக்காரரோட சந்தோஷமா இருக்கப் பாரு.” 

“இனிமே கண்டவனை நம்பி ஏமாறக் கூடாது. வீட்டுக்காரரோட இனி சந்தோஷமாய் இருக்கணும். இவ்வளவையும் மீறி என்னை ஏத்துக்குற மனுஷனை எவ்வளவு தாங்குனாலும் தகும்” என்று நினைத்துக்கொண்டே எழுந்தாள் மாதவி.

(மர்மம் அறிவோம்)

vikatan

Link to comment
Share on other sites

மனச்சிறையில் சில மர்மங்கள் - 12

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

குறும்புகளின் மன்னன்!

“பிள்ளையா இது, சரியான வாலா இருக்கே” என்றுதான் எல்லா அம்மாக்களும் சிபியை வர்ணிப்பார்கள். சும்மா விளையாட்டுக்கு அல்லது செல்லமாக அப்படிச் சொன்னாலும் பரவாயில்லையே. நிஜமான வெறுப்புடன் பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லாம் இப்படிச் சொல்லும்போது பெற்ற வயிறு பற்றி எரியத்தானே செய்யும்.   

ஆனால், சிபி லேசுபட்டவன் இல்லை. 

வளரவளர அவனைப் பற்றிய குற்றச்சாட்டுகளும் நீண்டுக்கொண்டே போயின.

“ஓர் இடத்துல உட்கார மாட்டேங்கிறான்.  கிளாஸ்ல மத்த பசங்களை எல்லாம் டிஸ்டர்ப் பண்றான். பாடத்தைக் கவனிக்கறதே இல்லை. யார் மேலயும் பயமே இல்லை. கிளாஸ் நடத்தும்போது சத்தமா சினிமாப் பாட்டுப் பாடுறான். கொஞ்சம் கண்டிச்சுவைங்க.”

“உங்க சிபி என் பையனை அடிச்சிட்டான், கிள்ளிட்டான், ரப்பரை எடுத்துட்டான், பேப்பரை கிழிச்சிட்டான்.”

“என்ன பிள்ளை வளர்க்குறீங்க நீங்க?”

p18a.jpg

- இப்படி எல்லாம் தினமும் பல பேர் தன் மகனைப் பற்றி குறைசொல்லும்போது, அம்மாவுக்கு மனசு தாங்காது. அழுகையுடன் அவனிடம் மன்றாடிக் கேட்டுப் பார்த்தாயிற்று, “எல்லாரும் உன்னைப் பத்திப் பெருமையாப் பேசணும்னு அம்மா ஆசைப்படுறேன். நீ இப்படிக் கெட்டப்பெயர் வாங்குறியே, அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குத் தெரியுமா?” என்றாள் அம்மா.

ரொம்பவும் அன்பாய் அருகில் வந்து தடவிக்கொடுத்து, “ஸாரிம்மா, இனிமே இப்படிச் செய்யவே மாட்டேன்” என்பான். ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே புதிய பிரச்னையோடு வந்துநிற்பான்.

“அப்பா கூட இருந்தாத்தான் பயம் வரும். பிள்ளை லைஃப்தானே முக்கியம். உங்க வீட்டுக்காரரை வேலைய விட்டுட்டு இந்தியாவுக்கு வரச் சொல்லுங்க. நம்ம ஊர்ல இல்லாத வேலையா?” என்று சிலர் யோசனை சொன்னார்கள்.

கணவரிடம் இதுபற்றிப் பேசினால், அவரோ, “குழந்தை அப்படித்தான் இருப்பான். சின்ன வயசுல நான் செய்யாத குறும்பா? போகப் போகச் சரியாகிடுவான்” என்றார் சிபியின் அப்பா.

அடம், பிடிவாதம், முரட்டுத்தனம், கோபம் வந்தால் அம்மாவையே போட்டுத்தாக்குவது என்று அவன் கொட்டம் அதிகரித்துக் கொண்டேபோக, “இவனை என்னதான் பண்ணுறதுன்னே எனக்குத் தெரியலையே” என்று அம்மா அவஸ்தைப்பட்டாள்.

எப்படியாவது அவனைத் திருத்தி, படிப்பில் தேற வைத்துவிடலாம் என்று அவன் அம்மா எவ்வளவோ போராடினாள். ஆனால், அவனை ஹோம் ஒர்க் செய்ய வைப்பதற்குள் உயிர் போய் திரும்பும். ஒரு நிமிடம்கூடப் பாடத்தில் முழுதாய் கவனம் செலுத்தமாட்டான். ஒரு வரி எழுதுவதற்குள், “பசிக்குது, சாப்பிட ஏதாவது தாங்க” என்பான். 

“இப்பத்தானேடா சாப்பிட்ட!” என்று அம்மா கேட்டால், “அது சாதம். எனக்குப் பிடிக்கலை. சாக்லேட் வாங்கித் தந்தாத்தான் படிப்பேன்” என்று அடம்பிடிப்பான்.

“சாக்லேட் வாங்கித் தந்தா ஹோம் ஒர்க்கை முடிச்சிடுவியா?”

p18.jpg“ஓ!”

சாக்லேட் தருவாள். சாப்பிடுவான். கொஞ்ச நேரம் ஹோம் ஒர்க்செய்வதுபோல, குனிவான். ஆனால் பாதியிலேயே நிமிர்ந்து, “எனக்கு ஒண்ணுக்கு வருது” என்று சட்டென்று ஓடிவிடுவான். 

கிளைமாக்ஸாய் பள்ளித் தலைமை ஆசிரியை அம்மாவைக் கூப்பிட்டுச் சொல்லியேவிட்டார். “கிளாஸ் ஒர்க்கை எல்லாம் சரியா கம்ப்ளீட் பண்ணுறதில்லை. ஹோம் ஒர்க்கை நீங்க எழுதித் தர்றீங்க. இவனுக்குப் படிப்பில ஆர்வமே இல்லை. எப்பப் பார்த்தாலும் மத்த பசங்களை டிஸ்டர்ப் பண்றான். எவ்வளவு திட்டினாலும், பனிஷ்மென்ட் கொடுத்தாலும், பயப்படுறதே இல்லை. எதிர்த்துப் பேசுறான்.  தமாஷ் பண்றான். யார் மேலயும் பயமே இல்லை. இவனால மத்த பசங்களும் கெட்டுப் போறாங்க. உங்க பையனை இந்த ஸ்கூல்ல வெச்சிக்க முடியாது” என்று சொன்னதுதான் தாமதம். அம்மா கண்ணில் இருந்து கங்கைபோல கண்ணீர் பொத்துக்கொண்டு பாய, பிரின்சிபால் இரக்கப்பட்டு, “ஒண்ணு செய்யலாம், உங்க பையனை ஒரு சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போங்க. அவங்க பார்த்துச் சரி செய்துட்டா, திரும்பவும் சேர்த்துக்குறேன்.  இல்லைனா முடியாது” என்றார் திட்டவட்டமாய்.

எப்படியோ, மகனைக் காப்பாற்ற இன்னும் ஒரு வழி பாக்கி இருக்கிறதே என்ற சந்தோஷத்தில் அம்மா அவசர அவசரமாக மகனை இழுத்துக்கொண்டு மனநல மருத்துவரிடம் போனார்.

சாதாரணமாகக் குழந்தைகள், மருத்துவர் என்றதுமே அஞ்சுவார்கள். சிபியாவது பயப்படுவதாவது. அவன் பாட்டுக்கு ஜாலியாய் டாக்டரின் அறைக்குள் போனான். அம்மாவும் டாக்டரும் பேசிக்கொண்டிருக்க, அவன் அறையை நோட்டம்விட்டான். இரண்டு நிமிடம், மரியாதை நிமித்தமாய் உட்கார்ந்து பார்த்தான். அப்புறம் இருப்புக்கொள்ளாமல் எழுந்து அறையைச் சுற்றி நடக்க ஆரம்பித்தான்.

அம்மா உடனே, “டாக்டர் முன்னாடி, என்ன இது மரியாதை இல்லாமல், உட்கார்” என்று அதட்டினார். டாக்டரோ, “அவன் விருப்பப்படி விடுங்கள்” என்றுவிட, சிபி, அறையைச் சுற்றி நடந்துவந்து, அங்கிருந்த ஒவ்வொரு பொருளாக எடுத்து விளையாட ஆரம்பித்தான். 

“சரி, நாங்க ரெண்டுபேரும் பேசிக்கிறோம், நீங்க கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க” என்று அம்மாவை வெளியே அனுப்பினார் டாக்டர். 

சற்றுநேரம் கழித்து சிபி வெளியே ஓடிவந்து, “அம்மா, டாக்டர் உன்னைக் கூப்பிடுறாங்க. உள்ளே போ” என்று ஊருக்கே கேட்கும்படி உரக்கக் கூறினான். 

“உங்க பையனுக்கு ADHD இருக்கு. கவனக்குறைவு -அட்டென்ஷன் டெஃபிசிட்னு இதைச் சொல்வாங்க. அதனால்தான் அவனால தொடர்ந்து ஒரே விஷயத்துல கவனம் செலுத்த முடியறதில்லை. அத்தோட ரொம்ப ஹைபர் ஆக்டிவ்வா இருக்கான். துறுதுறுன்னு, அடக்க முடியாத அளவுக்கு இருக்கான். வேண்டுமென்றே அவன் இப்படிச் செய்யலை. சில குழந்தைகளுக்கு முன்மூளை செயல்பாட்டுல இப்படி ஒரு கோளாறு ஏற்படும்.”

p18b.jpg

“இதனால் அவன் உயிருக்கு ஏதாவது?”

“சேசே... இதனால் உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லை. ஆனா, இப்படிக் கவனம் இல்லாம இருக்குறதினால அவனுக்குப் பல விஷயங்களைக் கத்துக்க முடியாமப் போயிடும். இவ்வளவு ஹைபர் ஆக்டிவ்வா இருந்தான்னா, உங்களுக்கும் கஷ்டம், மத்தவங்களுக்கும் சிரமம்.”

“இதுக்கு என்னதான் டாக்டர் செய்யுறது?”

“இதுக்கெல்லாம் மருந்து இருக்கு. தினமும் கொடுத்தீங்கன்னா, அவனோட பிரச்னை சரியாயிடும். மத்த குழந்தைகள் மாதிரி கவனம் செலுத்தி, கட்டுப்பாடோட இருக்க ஆரம்பிச்சிடுவான்.”

இத்தனை வருஷப் பிரச்னைக்கு ஒரே ஒரு சின்ன மாத்திரைதான் தீர்வா? அம்மாவால் நம்பவே முடியவில்லை. டாக்டர் சொன்னது போலவே மருந்தை சிபிக்குக் கொடுத்து வந்தாள் அம்மா.

ஆச்சர்யம்னா ஆச்சர்யம். சாப்பிட, தூங்க, குளிக்க, கிளம்ப என்று அவன் அதுவரை படுத்தியதெல்லாம் மாறி சமர்த்தாகச் செயல்படத் தொடங்கினான் சிபி.  டீச்சர், “பரவாயில்லை இப்ப எல்லாம் கிளாஸைக் கவனிக்கிறான்.  போர்டுல எழுதிப் போடுறதை எல்லாம் சரியா எழுதிக்கிறான்” என்று பாராட்டினார். 

மற்ற பிள்ளைகளின் தாய்மார்களும், “சிபி ரொம்ப குட் பாய் ஆயிட்டானே. இப்ப எல்லாம் முன்னே மாதிரி குறும்பே பண்ணுறதில்லை” என்று சந்தோஷப்பட, அதைக் கேட்ட சிபிக்கு பெருமை. அவன் அம்மாவுக்குப் பேரானந்தம்.

(மர்மம் அறிவோம்)

vikatan

Link to comment
Share on other sites

மனச்சிறையில் சில மர்மங்கள் - 13

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

கற்கை நன்றே!

வேணுவுக்கு கல்விமேல் அவ்வளவு காதல். “பி.ஹெச்டி முடிச்சிட்டா, காலேஜ் வாத்தியாரா வேலைக்குப் போயிடுவேன்ப்பா” என்று அப்பாவை தேற்றினான். அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா கொடுக்கும் பணத்தைப்பெற வெட்கப்பட்டான். அவனுக்கு அரசாங்கமே படிப்புக்கு உதவித்தொகை தரும். ஆனால், இவன் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அரசாங்க உதவிப் பணம் அவன் கையில் வந்த பாடில்லை. அடுத்த வாரம், அடுத்த மாசம் என்று இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

உதவித்தொகை கிடைத்திருந்தால் மன நிம்மதியுடன் படித்திருக்கலாம். அது கிடைக்கத் தாமதமானதால் இவன் ஒவ்வொரு விடுமுறைக்கும் வீட்டுக்குப் போகவே அஞ்சினான்.

கல்லூரியில் ஜூனியர்களுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்தான். ஆனால் கறாராகக் காசு கேட்க அவனுக்கு மனம் வரவில்லை. அதனால் பலர், “அப்புறம் தர்றேன், காசா முக்கியம், நமக்குள்ள என்ன இதெல்லாம்” என்ற ரீதியில் அவனைத் தட்டிக்கழித்தனர்.

பணநெருக்கடி தலைதூக்க, மீண்டும் கல்லூரி அலுவலகத்துக்குப்போய், “ஸ்காலர்ஷிப் பணம் வந்துடுச்சா?” என்று குமாஸ்தாவை விசாரித்தான்.

அந்தப் பெண்மணி அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை, “போய் தபால்ல கேளுப்பா” என்றார்.

தபால் குமாஸ்தாவிடம் போய் நின்றான், “ரெஜிஸ்டர்ல நீயே பாருப்பா” என்றார்.

பார்த்தான், வந்திருக்கவில்லை. “ரெண்டு வருஷமாச்சு, இன்னும் வரலையே” என்று தபால் குமாஸ்தாவிடம் பெருமூச்சுவிட்டான்.

“என்ன வரலை?”

“ஸ்காலர்ஷிப் பணம்”

தபால் குமாஸ்தா குரலைத் தாழ்த்தி, “ஓ! நீ அந்தச் சாதியா?” என்றார்.

p18b.jpg

இத்தனை நாள் கல்வி நிலையங்களில் பயணித்து வந்தவன் வேணு. இருந்தாலும் இந்தக் கேள்வி புதிதுபோல அவனை நோகடித்தது. எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தான். அந்தத் தபால் குமாஸ்தா, “தம்பி” என்று அழைத்தார்.

ரோஷமாய் முகத்தை நிமிர்த்தி அவரைப் பார்த்தான் வேணு.

“ஸ்காலர்ஷிப் எல்லாம் அப்ளை பண்ணாத்தான் வரும். நீ கொடுத்த அப்ளிகேஷனை அந்த செக்‌ஷன்ல ஃபார்வர்ட் பண்ணலைன்னா ஸ்காலர்ஷிப் பணம் வராது.”

வேணுக்கு திக் என்றானது. 

“ஸ்காலர்ஷிப் தொகை அதிகமா இருந்தா நீங்க அவங்களைக் கொஞ்சம் கவனிக்கணும்னு எதிர்பாப்பாங்க.  உங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்குறதுனால அவங்களுக்கு என்ன லாபம்னு யோசிப்பாங்க.”

அரசாங்கம் தகுதியான மாணவர்களுக்கு தரும் உதவித்தொகையில் இவர்கள் லாபம் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? அறச்சீற்றம் பொங்கி வர, வேணு மாணவர் இலாகா குமாஸ்தாவிடம் திரும்பிப் போனான், “மேடம் என் அப்ளிகேஷனை நீங்க கவர்மென்ட்டுக்கு ஃபார்வர்டு பண்ணீங்களா இல்லையா?”

“லஞ்ச் டைம்” என்று அந்தப் பெண்மணி அசட்டையாகப் பையைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து போய்விட்டார்.

வேணுவுக்கு மனம் ஆறவே இல்லை. சாதியின் அடிப்படையில் ஏற்பட்ட அவமானங்களும், அசெளகரியங்களும் அலை அலையாய் நினைவுக்கு வர, அன்றிலிருந்து தூக்கம் இழந்தான். ஆராய்ச்சியில்  கவனம் இழந்தான்.

யாரிடமாவது புலம்பித் தீர்ந்தால் மனம் ஆறுமே என்று தோன்ற, நண்பர்களிடம் சொல்லலாம் என்று நினைத்தான். இதனால் நண்பர்களுக்கு இவன் சாதி தெரிய வரும். அதன்பிறகு அவர்களுக்குள் இருக்கும் சமத்துவம் மாறிவிடுமோ என்ற அச்சம் அவனுக்கு.

ஆசிரியர்கள் யாரிடமாவது சொல்லலாம் என்றால், இவன் காதுபடவே அவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டைச் சாடியவர்கள் அவர்கள்.

எதற்கும் சம்பந்தமே இல்லாத வெளி மனிதரிடம் போய் பேசுவது என்று நினைத்து மனநல மருத்துவரைச் சந்தித்தான்.

p18a.jpg

இவன் தனது கஷ்டங்களை எல்லாம் கொட்டித் தீர்த்தான், “எனக்கு என்ன பண்றதுனே தெரியல டாக்டர்?” என்று புலம்பி முடித்ததும் டாக்டர் கேட்டார், “உங்களோட கட்டமைப்புல இருக்குற யாராலயும் உங்களுக்கு உதவி செய்ய முடியலன்னா வெளியில வேற யாராவது அதிக செல்வாக்கு இருக்குற மனிதரால உங்களுக்கு உதவிசெய்ய முடியலாம் இல்லையா? உங்க ஊர் எம்.எல்.ஏ., உங்க சாதித் தலைவர்…”

“அதுபத்தி நான் யோசிச்சதில்லை.”

“திங்க் அபவுட் இட். உங்களுக்கு உதவிசெய்ற பவர் யாருக்கு இருக்குனு யோசியுங்க. பிரச்னையை மையமா வெச்சி யோசிக்காதீங்க, என்னென்ன தீர்வுகள் இருக்கும்னு விதம்விதமா திருப்பிப் போட்டு யோசியுங்க. Solution focusedஆ யோசிங்க.”

என்ன தீர்வு, யாரிடம் கிடைக்கும், என்றெல்லாம் யோசித்து, கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான் வேணு. பல்கலைக்கழக நூலகத்தில் இருந்த கம்ப்யூட்டரின் இணையதளத்தில் அந்த மனிதரின் இணையதள முகவரியைக் கண்டுபிடித்து, அவருக்கு இ-மெயில் அனுப்பினான்.

தன் பிரச்னைகளைச் சுருக்கமாக விவரித்து, ‘‘எனக்கு அருள்கூர்ந்து உதவுமாறு” மன்றாடிக் கேட்டுக்கொண்டான்.

சில நாட்கள் கழிந்த பின்னர் கல்லூரிக்கு வந்த போது, அவன் விடுதி நண்பர்கள் எல்லாம் கலவரத்தோடு இருந்தார்கள்.

“டேய் எங்கடா போய் தொலஞ்ச, வி.சி. ஆபீஸ்லேர்ந்து உன்னைத்தேடி ஆள் வந்தது. ஏதாவது பிரச்னையில மாட்டியிருக்கியா?”

துணைவேந்தர் அலுவலகத்துக்கு உடனே கிளம்பினான் வேணு. இவனைப் பார்த்ததும்  பியூன் உடனே உள்ளே ஓடிவிட்டு, திரும்ப வந்து, “போப்பா, சார் உன்னை உடனே வரச் சொன்னார்.”

துணைவேந்தர் கோபமாய் எழுந்து நின்றார், “இங்க நான் ஒருத்தன் எதுக்கு இருக்கேன். உனக்கு ஏதாவது பிரச்னைனா என்கிட்டதானே வந்து சொல்லணும்.  அதை விட்டுட்டு ஜனாதிபதிக்கு இ-மெயில் அனுப்பியிருக்க!”

அதைக் கேட்டதும் வேணுவுக்கு ஒரே சந்தோஷம். ஜனாதிபதி தன் பிரச்னையைத் தீர்த்து வைக்கிறாரோ இல்லையோ, குறைந்தபட்சம் ஒரு கடைக்கோடி இந்தியனின் கண்ணீருக்குச் செவி சாய்த்திருக்கிறாரே!!

“உனக்கு என்ன பிரச்னை? எனக்கு விவரமா ஒரு லெட்டர்ல எழுதிக் கொடு” என்றார் துணைவேந்தர்.

வேணு தன் உதவித்தொகைப் பிரச்னையை எழுதித்தந்தான்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் துணைவேந்தர் அலுவலகக் குமாஸ்தாவைப் போய் பார்த்தான்.

“ஏம்பா அப்ளிகேஷனையே தப்பும் தவறுமா எழுதிட்டு, இதை எப்படி கவர்மென்ட்டுக்கு அனுப்புறதாம்? இந்தாப் பிடி, புது அப்ளிகேஷன், ஒழுங்க நிரப்பிக்கொடு.”

என் அப்ளிகேஷனையே தொலைத்து விட்டார்களா? இவனுடைய புதிய மனு அரசுக்குப் போய் சேர்ந்து இனிமேல் அவர்கள் இவனுக்கு உதவித்தொகையைக் கணக்கில் இட்டு, நிலுவையில் இருக்கும் தொகையையும் சேர்த்துத் தருவதற்குள் என் படிப்பே முடிந்துவிடுமே!

p18.jpg

மனசு சுமையில் துவள ஆரம்பிக்கும்போதே வேணுவுக்குக் கவலையைமீறி ஒரு புன்சிரிப்பும் மலர்ந்தது. இல்லைன்னா இருக்கவே இருக்கார் ஜனாதிபதி. அன்று டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது, “மனிதன் ஒரு சமூக விலங்கு. அதனால், நான்தான் டாமினென்ட் என்று உயர் அந்தஸ்துக்குப் போட்டிபோடும் தன்மை, மனிதர்களுக்கு உண்டு. ஆண், பெண் என்கிற பாலினப் போராட்டங்கள், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற வர்க்கப் போராட்டங்கள், வல்லரசு... சாதா அரசு என்கிற உலக அரசியல், என்று எதுவாக இருந்தாலும், தன் ஆதிக்கத்தை நிலைநாட்டத்தான் மனிதர்கள் முயல்கிறார்கள்.  இதற்காக ஏதாவது பிரசார உத்தியைக் கையாளுகிறார்கள். ஆனால் அறிவியல் இதை எல்லாம் ஏற்பதில்லை.  All life has equal value. எல்லா சிங்கங்களும் சமம், எல்லா முயல்களும் சமம், அதேபோலதான் எல்லா மனிதர்களும், அடிப்படையில் சமம்.  யாரும் உயர்ந்தவரும் இல்லை, யாரும் தாழ்ந்தவரும் இல்லை. எல்லாமே அவரவர் பிழைப்பைச் சுலபமாக்கிக்கொள்ள பிறரைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் கடைசியில் இயற்கையில் இருக்கும் ஒரே விதி, survival of the fittest என்பதுதான்.  சூழலோடு பொருந்திப்போகத் தெரிந்தவர் மட்டுமே பிழைத்துக்கொள்ள முடியும். அநாவசிய வெட்கம், மானம், ரோஷம்கூடச் சில சமயம் பிழைக்க விடாது. அநாவசிய சென்டிமென்ட்டை விட்டுட்டு, எந்தச் சூழ்நிலையிலும் பொருந்திப்போய் பிழைக்கும் வழியைப் பார்.”

ஒன்றுமே நடக்காததுபோல புது அப்ளிகேஷனை துணைவேந்தரிடம் கொடுத்தான். “எல்லாம் சரியா எழுதி இருக்கேன், இந்தத் தடவை எப்படியாவது உதவித்தொகை கிடைச்சா நல்லா இருக்கும். அப்பா, ஆட்டோ ஓட்டி என்னைப் படிக்க வைக்கிறார். ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணுங்களேன்” வெட்கத்தைவிட்டுத் தன் கண்ணீரைத் தடுக்காமல் அப்படியே வெளியேறிவிட்டான்.

துணைவேந்தருக்கு அவன் கண்ணீர் சங்கடமாக இருந்தது. “சரி, நீ போய் படிக்கிற வேலைய பாருப்பா. ஸ்காலர்ஷிப் பணம் வரும் வரைக்கும் இந்தப் பணத்தை செலவுக்கு வெச்சிக்கோ”, என்று தன் பாக்கெட்டில் இருந்து சில ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்துக் கொடுத்தார்.

முன்புபோல இருந்தால் வெட்கப்பட்டு, ரோஷப்பட்டு, ‘வேண்டாம்’ என்று வந்திருப்பான். ஆனால் இப்போது, “தாங்க் யூ வெரி மச். ஸ்காலர்ஷிப் வந்ததும் திருப்பித் தந்துடுறேன் சார்” என்று வாங்கிக்கொண்டான்.

“எனக்குத் திருப்பித் தர வேண்டாம், உன்னை மாதிரி கஷ்டப்படுற வேற யாருக்காவது நீ உதவி செய்தாபோதும்” என்று அவனை அனுப்பிவைத்தார் வி.சி.

(மர்மம் அறிவோம்)

vikatan

Link to comment
Share on other sites

மனச்சிறையில் சில மர்மங்கள் - 14

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

p18.jpg

கடந்து போனவள்

சுடிதார் போட்டுக்கிட்டா, பைக்ல ரெண்டு பக்கமும் கால போட்டுக்கிட்டு வசதியா உட்கார்ந்துட்டு வருவேனில்லை?” என்று வசுமதி திருமணமான புதிதில் பலமுறை கேட்டுப் பார்த்து விட்டாள். ஆனால், பூங்குன்றனுக்கு அதில் உடன்பாடில்லை, “அப்படி ஒண்ணும் நீ வசதியா உட்காரணும்னு அவசியமில்லை. அடக்க ஒடுக்கமா தமிழ்ப் பொண்ணா லட்சணமா வந்தாபோதும்” என்று கோபமாய்ச் சொல்லிவிட்டான்.

அப்படி எல்லாம் அவள் விட்டுக்கொடுத்து வாழ்ந்ததன் பலனாய் பிறந்தவன்தான் அருண்மொழி வர்மன். மகனின் கதகதப்பான கமகமக்கும் உடலை கட்டிக்கொண்டால், ‘இதுவே பேரானந்தம்’ என்று மனம் நிறைந்துபோவாள். அவனது ஒவ்வொரு செய்கையையும் ரசித்து ரசித்து போனில் போட்டோ பிடித்துவைத்தாள். அவன் எட்டு மாதங்களிலேயே அவளை, “அம்மா” என்று அழைத்தது அவள் வாழ்நாளில் உச்சகட்ட உவகை.

‘‘சரி சரி கொஞ்சுனது போதும். சீக்கிரம் வந்து தொலை. டாக்டரைப் பார்த்துட்டு உன்னை மறுபடியும் வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுட்டு, நான் வேலைக்குப் போகணும்’’ அன்றைக்கும் சிடுசிடுத்துக்கொண்டே இருந்தான் பூங்குன்றன். குழந்தையை இடது கையால் பிடித்துக்கொண்டு பைக்கில் ஏறி உட்கார்ந்து, கணவனின் தோளைப் வலது கையால் பிடித்துக்கொண்டாள்.

கிளினிக்குக்கு முன்னால் சிக்னலில் திரும்பும்போது, எதிரில் ஒரு மாடு திடீரென்று குறுக்கே வர, பூங்குன்றன், சடன் பிரேக் போட்டான். அதை எதிர்பார்த்திராத வசுமதியின் கையைவிட்டு குழந்தை நழுவி, பறந்துபோய் பாதையில் விழ, வசுமதியும் பூங்குன்றனும் தடுமாறிக் கீழே விழுந்தனர். வசுமதியின் கால் உடையும் சத்தம் அவள் காதுகளுக்கே தெளிவாகக் கேட்டது. அப்போதும், மகனைப் பற்றிய கவலையோடு, கைகளால் இழைந்துக்கொண்டு போய் அருண்மொழி வர்மனைத் தூக்கினாள். குழந்தை இறந்துகிடந்தான். அத்தோடு வசுமதியும் மயக்கமுற்றாள்.

அவள் மீண்டும் சுய நினைவுக்குத் திரும்பியபோது, “கடைசியா ஒரு தடவை அவனைத் தொட்டு பார்த்துடம்மா” என்று அம்மா நீட்டிய மகனின் சடலத்தைத் தொட்டவள், அது சில்லென்று ஐஸ் மாதிரி இருப்பதை உணர்ந்து மீண்டும் மயக்கமானாள்.

சில நாட்களில் உடைந்த அவள் கால்கூட கூடி இருந்தது. ஆனால், மனதளவில் அவள் ரொம்பவே மாறிப் போயிருந்தாள். அதுவரை கணவனைக் கண்டு அஞ்சி, பார்த்துப் பார்த்து அவனுக்குப் பணிவிடை செய்தவள், அதற்கு மேல் அவனைச் சட்டையே செய்வதில்லை. அவள் வீட்டில் சமையலே நடப்பதில்லை. சாப்பிடாமல், சரியாக உடை அணியாமல் அவள் புத்திரசோகத்தில் பேதளித்துக் கிடந்தாள். மகனைப் பறிகொடுத்த துயரிலிருந்து சீக்கிரம் மீண்டுவிட்டான் பூங்குன்றன். “அடுத்த குழந்தை பிறந்தா எல்லாம் சரியாயிடும்” என்று பலரும் ஆறுதல் சொல்ல, இவனும் மனைவியை நெருங்கி, உரிமையாய்த் தொட்டான்.

அடுத்தகணம் காளி அவதாரம் எடுத்தவள்போல, அவனை நொறுக்கி எடுத்துவிட்டாள் வசுமதி. “நீ எல்லாம் ஒரு மனுஷனா? எப்படிடா உனக்கு இந்த நெனப்பெல்லாம் வருது? ஒழுங்கா சுடிதார் போட்டு, ரெண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்திருந்தா என் பிள்ளை அப்படி விழுந்து செத்திருப்பானா? சடன் பிரேக் போட்டு என் பிள்ளையக் கொன்னுட்டு இப்ப...” வசுமதி பச்சைப் பச்சையாய்ப் பேசி, அழுது ஓய்ந்தாள். ஒரு பெண்ணின் கோபத்துக்கு எத்தனை வீரியம் உண்டு என்று உணர்ந்ததிலிருந்து, மனைவியை நெருங்குவதே இல்லை அவன்.

பூங்குன்றன், வசுமதியிடம் ஏதும் சொல்லாமல், திடுமென ஒரு நாள் அவளை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனான். யாரோ என்னவோ, அலுவலக வேலையாய் வந்திருப்பான்போல என்று எதையும் கவனிக்காமல் தன் உலகிலேயே மூழ்கி இருந்த வசுமதி, திடீரென்று, “பையன் போனது மறக்க முடியலையா?” என்று கேட்ட முகத்தை ஏறிட்டாள்.

என்ன ஆயிற்றோ, வசுமதிக்கு அடக்க முடியாத கண்ணீர். “நான் கடைசியா அவனை தொட்டப்போ, அவன் ஜில்லுனு ஐஸ் மாதிரி இருந்தான். என்னால் அதை எப்படி மறக்க முடியும்? தினமும் கதகதன்னு இருக்கும் அவனோடு அந்தக் குட்டி உடம்பு ஜில்லுனு ஐஸ் மாதிரி...” வசுமதி ரொம்ப நேரத்துக்கு அழுது புலம்பினாள். “பைக்குல குழந்தைய எந்தப் பொம்பளைத் தூக்கிட்டுப் போனாலும் என்னால அதைப் பார்க்க முடியலை. அறிவுகெட்ட முண்டமேனு அவங்க தலையிலே ஓங்கிக் கொட்டணும்போல இருக்கு. அன்னைக்கு மட்டும் நான் ரெண்டு பக்கமும் காலைப் போட்டு உட்கார்ந்திருந்தா என் பையனை நான் அப்படி பறக்க விட்டிருக்க மாட்டேனே?” என்று சொல்லி முடித்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள்.

p18a.jpg

டாக்டர், அவளுக்கு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். “இந்த மாத்திரைகளைச் சாப்பிடும்போது, கர்ப்பம் ஆயிடாம பார்த்துக்கணும்.” வசுமதி விரக்தியாய் தலையசைக்க, பூங்குன்றன், “அவளுக்கு என்ன பிரச்னை?” என்று விசாரித்தான்.

“PTSDனு சொல்வோம், போஸ்ட் டுரமாடிக் ஸ்ட்ரெஸ் டிஸாடர். எதிர்பாராத சம்பவத்துனால மனசொடஞ்சி இன்னும் மீளாம இருக்காங்க. இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டா, தூக்கம், பசி, கவனம் எல்லாம் இம்ப்ரூவ் ஆகும். சைக்கோதெரபி பண்ணா இந்த PTSD-லேர்ந்து மீண்டு வந்துடுவாங்க. அடுத்த வாரம் கூட்டிட்டு வாங்க.”

“தெரபியா, எனக்கு எதுக்கு? எதுவும் வேண்டாம்” என்று வசுமதி ஆட்சேபிக்க... டாக்டர், ‘‘மருந்தில்லை... ஊசியில்லை. சும்மா வெறுமனே பேசுவதுதானே, மறுக்கக் கூடாது’’ என்றார். அப்போதுதான் வசுமதி கவனித்தாள், டாக்டர் கர்ப்பமாய் இருப்பதை.

அடுத்த வாரம் என்னவோ, அவளுக்கே டாக்டரை பார்க்கத் தோன்றியது. டாக்டர் அவளை உட்கார வைத்து அவள் கண்முன் விரல்களை அசைத்து, “நடந்ததிலேயே மோசமான சம்பவத்தை நினைத்தால், என்ன உருவம் மனதில் தோன்றுகிறது?” என்று கேட்க, சுரீர் என்று அருண்மொழி வர்மன் காற்றில் பறந்த காட்சி மனதில் பாய, ஓ என்று கத்தி அழ ஆரம்பித்துவிட்டாள் வசுமதி.

இப்படி வாரம் ஒரு முறை அந்த டாக்டரிடம் போய் உட்கார்ந்து அவர் விரல் அசைவுக்கு தன் கண்களை அசைத்து மனதில் அலை அலையாய் பொங்கி வரும் விஷயங்களைப் பற்றிப் பேசுவது வசுமதிக்கு ஏனோ பெரிய ஆறுதலாய் இருந்தது. டாக்டரை நினைத்தால் கொஞ்சம் கவலையாகவும் இருந்தும், “நீங்க இப்படி வாயும் வயிறுமா இருக்கும்போது, நான் வேற இப்படி எல்லாம் அபசகுனமா பேசுனா, உள்ள இருக்குற பாப்பாவுக்கு ஏதாவது ஆயிடாதா டாக்டர்?”

டாக்டர் பதில் ஏதும் சொல்லாமல் நமட்டுச் சிரிப்புடன், “கோ வித் தட்” என்று விரல்களை அசைத்துக்கொண்டே இருக்க, வசுமதியின் மனத்திரையில் குழந்தையின் சிரிப்பும், மென்மையும், தொட்டால் மெத்தென்று பாயும் உஷ்ணமும் வந்து விழ, அன்று தெரபி முடிந்து நாற்காலியைவிட்டு எழுந்து வெளியேற கதவைத் திறந்தவள்... நின்று, திரும்பி டாக்டரைப் பார்த்தாள். “இந்த மருந்தை சாப்பிடும்போது கர்ப்பமாகக் கூடாதுனு சொன்னீங்களே? அதை நிறுத்திடட்டுமா?”

டாக்டர், ‘‘ஷ்யூர், நிறுத்திடுங்க” என்று முறுவலிக்க, அன்று ஆட்டோவில் வீட்டுக்குப் போகும்போது, பூங்குன்றனின் கையை பிடித்துக்கொண்டாள் வசுமதி. பூங்குன்றனுக்கு பேரதிர்ச்சி. பயந்து பயந்து அவன் அவளை நெருங்கி வர, சிரித்த முகத்துடன் அவனை ஊக்குவித்தாள்.

See Also: மனச்சிறையில் சில மர்மங்கள் - 13

அந்த மாதம் வசுமதிக்கு மென்ஸஸ் வரவில்லை என்று கர்ப்பச்சோதனை பட்டையை வாங்கிவர கடைக்குப் போனான் பூங்குன்றன். ‘ஒரு குழந்தை, மனைவியின் கையில்... இன்னொரு குழந்தை’ என்று பைக்கில் வந்து இறங்கிய ஆசாமியைப் பார்த்தான். “பிரதர், ரெண்டு பக்கமும் காலைப் போட்டு உட்கார்ந்தாதான் குழந்தையைப் பத்திரமா பிடிக்க முடியும். இல்லைனா ஆபத்து” என்று எச்சரித்தான் அநிச்சையாக.

“அப்படி எல்லாம் நடக்காதுப்பா” என்று அந்த ஆள் அசட்டையாய் சொல்ல, “எனக்கே நடந்திருக்கு, சொன்னாக் கேளுப்பா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்தான். “டெஸ்ட் பாஸிடிவ்வா இருக்கணுமே” என்று பிரார்த்தித்தபடியே.

(மர்மம் அறிவோம்)

vikatan

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
 

மனச்சிறையில் சில மர்மங்கள் - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

ஆசை 100 வரை!டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

p18a.jpg

லீலாவுக்கு அவளுடைய பூஜை அறைதான் உலகம். கிழமை தவறாமல் விரதம் இருப்பது, நல்ல நாள் என்றால் அதற்கேற்றாற்போல பூஜை, புனஸ்காரம் என்று பக்தி பழமாக இருந்தாள் லீலா.

அவரது நம்பிக்கைக்கு விரோதமாக யாராவது நடந்துகொண்டால், லீலாவுக்கு அவ்வளவு கோபம் வரும். இதனாலேயே தன் கடைசி மருமகள் பிரேமிக்கும் லீலாவுக்கும் எப்போதுமே கடுமையான மோதல்கள் இருக்கும். காரணம். பிரேமிக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.

இப்படி... தன் கடைசி மருமகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டு இருந்ததில் மற்ற விஷயங்களைக் கோட்டைவிட்டாள் லீலா. பிரேமி திடீரென்று ஒரு நாள், ‘‘ஆன்டி, அங்கிள நீங்க கொஞ்சம் கண்டிக்கணும்’’ என்றபோது, உர் என்று முகத்தை வைத்துக்கொண்டாள் லீலா.

‘‘அவரைப்பற்றிப் பேச உனக்கு என்ன தகுதி இருக்கு?’’

‘‘நம்ம சண்டைய அப்புறம் வெச்சிக்கலாம். நான் சொல்றது ரொம்ப சீரியஸான மேட்டர். இப்படியே போனா அவரை போலீஸ் பிடிச்சிட்டுப் போயிடும்.’’

‘‘என்னடீ சொல்ற?’’

பிரேமி, மாமியாரின் மிக அருகில் குனிந்து சொன்னாள். ‘‘அங்கிள் பக்கத்து வீட்டுக் குழந்தை களுக்கு திருக்குறள் சொல்லித் தர்றேன்னு என்னமோ தப்பா நடந்துக்குறார்.’’

லீலாவுக்கு பக் என்றது. ‘‘ச்சீ, சும்மா உளறாதே. அவர் ரொம்ப நல்லவர். அபாண்டமா பேசுனா உன் நாக்கு அழுகிடும். முருகா, என் காதுல இதெல்லாம் கேட்கணும்னு இருக்கே’’ என்று குடுகுடுவென பூஜை அறைக்கு ஓடி, விளக்கை ஏற்றி, ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தாள் லீலா.

ஆனால், அவள் மனசு முழுக்க ஷண்முகத்தை பற்றியே சிந்தனை இருந்தது. திருமணமான புதிதில் இருந்து அவள் கணவனுக்கு தாம்பத்யத்தில் கொஞ்சம் கூடுதல் ஈடுபாடுதான். முன் ஒரு காலத்தில் அவன் தன் மைத்துனியோடு தவறாக நடந்துகொள்ள முயன்றபோது லீலாவே அதை நேரில் பார்த்து விட்டாள். அவரோடு கடுமையாகச் சண்டை போட்டிருந்தாள். அதற்கு ஷண்முகம் சொன்ன ஒரே பதில், ‘‘நீ ஒழுங்கா என்னோட ஒத்துழைச்சா, நான் ஏன் இப்படி அவஸ்தைப்படறேன்? உனக்குப் புருஷனைவிட சாமிதானே முக்கியம். இப்படி இருக்குறவ ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட? சாமியாராபோய் தொலஞ்சி இருக்க வேண்டியது தானே. என் வாழ்க்கையாவது நல்லா இருந்திருக்கும்.’’

அதற்குப் பிறகு அவர்களது தாம்பத்ய வாழ்க்கை பெரிதாகத் தொடந்திருக்கவில்லை.

புத்தகங்கள், இலக்கியம், கருத்தரங்கு, சமூக சேவை என்று ஷண்முகம் பொழுதைக் கழிக்க... லீலாவோ கடவுளே கதி என்று இருந்தாள். 

பிரேமி சொன்ன பிறகுதான் லீலா கொஞ்சம் கொஞ்சமாகக் கவனிக்க ஆரம்பித்தாள். பிஸ்கெட்டும், கேக்கும் வாங்கிவந்து அக்கம்பக்கத்துச் சிறுமியர் களுக்குக் கொடுத்து ஷண்முகம் அவர்களுடன் பழகுவதைப் பார்த்தபிறகுதான், அவரை அலட்சிய மாகவிட்டது எவ்வளவு பெரிய ஆபத்து என்று தோன்றியது லீலாவுக்கு.

இரவெல்லாம் தூக்கமே இல்லாமல் புரண்டு கொண்டிருந்த லீலா, திடீரென்று நெஞ்சுவலியால் துடிக்க டாக்டரிடம் அழைத்துப் போனார்கள்.

பரிசோதனையில், ‘‘எல்லா ரிப்போர்ட்டும் நார்மலாதான் இருக்கு’’ என்றார் டாக்டர். பின்னர் ஏன் லீலாவுக்கு நெஞ்சுவலி வருது என்று எல்லோரும் வருந்த... பிரேமி, மாமியாரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள். மனசுடைந்த லீலா அழுதுகொண்டே டாக்டரிடம், ‘‘நான் என்ன பண்ணுவேன் டாக்டர்? இந்த வயசுல அந்த மனுஷன் இப்படி நடந்துக்கிட்டா மானம் போகுது. கேட்டா நான் ஒண்ணுமே பண்ணலைன்னு சாதிப்பார். இல்லைன்னா, இந்த வயசுல நான் கூடப் படுக்க வரலைன்னு வெட்கங்கெட்டதனமா ஏதாவது அசிங்கமாப் பேசுவார்.’’

‘‘உங்களுக்கு அப்படி ஒண்ணும் வயசாயிடலையே. 54 எல்லாம் ஒரு பெரிய வயசில்லை. இந்த வயசுலகூட இப்பெல்லாம் குழந்தை பெத்துக்குறாங்களே!’’

லீலா ஆச்சர்யமாகப் பார்க்க, டாக்டர்

தொடர்ந்தார். பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிட்டால், அதனால் கலவியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்துவிடக் கூடாது. மாதவிடாய் நின்றுவிட்டால், குழந்தைகள் பெரியவர்களாகி விட்டால், பேரன், பேத்தி பிறந்துவிட்டால் என்று ஏதேதோ காரணங்களுக்காகப் பல பெண்கள் கணவனோடு கூடுவதை நிறுத்திவிடுகிறார்கள். ‘‘இந்த வயசுக்கு மேல இதென்ன கர்மம்...’’ என்று அலுத்துக்கொள்கிறார்கள். ‘மாதவிடாய் நின்றுபோன பிறகும் பெண்களால் கலவிக்கொள்ள முடியும்’ என்கிறது அறிவியல். அதுவும் போக, ஆண்களுக்கு வயதுக்குவந்த நாள் தொடங்கி வாழ்நாள் முழுவதும் கலவியல் நாட்டம் இருப்பது இயல்பு. அந்தக் காலம் என்றால், மனைவிக்கு வயதாகிவிட்டதை சாக்காக்கிக்கொண்டு அடுத்த இளம் மனைவியையோ அல்லது இன்னொரு பெண்ணையோ சேர்த்துக் கொள்வது சமூக அங்கீகாரம் பெற்ற நடவடிக்கையாக இருந்தது. ஆனால், இன்று அவை எல்லாம் சட்டவிரோதமானச் செயல், ஒழுக்கக் கேடு என்று கருதப்படுகின்றன. 

ஒருவனுக்கு ஒருத்தி மட்டும்தான் என்று வாழும் இன்றையச் சூழலில்... அந்த ஒருத்தி, அவனுக்குக் கடைசிவரை நல்ல கலவியல் துணையாக இருந்தால்தானே, அந்த ஆணும் மகிழ்ச்சியோடு இருப்பான். பெண்ணும் கடைசிவரை இளமைத் துடிப்போடு இருக்க முடியும். வயசானாலும் கணவன், மனைவி இடையே உறவு சுவாரஸ்யமாக இருந்தால்தானே சமுதாயத்துக்கு முன்மாதிரியாக இருக்க முடியும். ஆசை என்பது 100 வயசுவரை. அதை விட்டுவிட்டு மனைவி, கணவனைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் வெளியில் அல்லவா செல்வார்கள். இதனால், பல அப்பாவிச் சிறுமிகளின் வாழ்க்கைக்கூடச் சீரழியக்  காரணமாகிவிடுகிறது.

லீலா பலத்த யோசனையோடு கேட்டார். ‘‘அந்தக் காலத்துலேயே எனக்கு இதெல்லாம் பிடிக்காது டாக்டர். இந்த வயசுல என்னைப்போய், என்னால் எப்படி டாக்டர்...’’ என்று வெகுவாக அலுத்துக் கொண்டார்.

‘‘அந்தக் காலத்துலேயே நீங்க இதுக்குச் சரியா சிகிச்சை எடுத்திருந்தா இப்ப உங்க கணவர் இந்த மாதிரி ஆகியிருக்க மாட்டாரே. இப்பவாவது இதை இயல்பா எடுத்துக்கோங்க. உங்க பேரக்குழந்தை மேல, உங்க அன்பை எப்படி வெளிப்படுத்துவீங்க? கட்டிப்பிடிச்சு கொஞ்சி முத்தமிட்டுத்தானே. அதே மாதிரி உங்க கணவன்கிட்டயும் அன்பா இருங்க. இனிமே அவர் உங்களைத் தொட்டா இறுகிப்போய் அருவெருப்பு காட்டாம, கொஞ்சம் இலகுவா இருங்க.  கலவின்றது ஆணைவிடப் பெண்ணுக்குத் தான் பல மடங்கு அதிகமான இன்பத்தை தரும். அதனால இதை அவருக்காக பண்ணுற ஏதோ பெரிய தியாகம்னு நினைக்காதீங்க. உங்களைவிடச் சின்ன வயசு பெண்கள் பல பேர் அனுபவிச்சிருக்க சந்தோஷத்தை, நீங்க மட்டும் அதை இன்னும் உணர்ந்ததே இல்லைனா எப்படி?’’ என்றார் டாக்டர்.

லீலாவுக்கு எல்லாமே புதிதாக இருந்தது.

‘‘அவளுக்கு என்ன டாக்டர்?’’ என்று கேட்டு உள்ளே நுழைந்தார் ஷண்முகம்.

ஷண்முகத்தோடு டாக்டர் நிறைய நேரம் பேசினார். கலவியல் ஈடுபாடு பற்றிக் கேட்டதும் ஷண்முகம் என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கினார்.

முதியவர்களுக்கும் கலவியல் தேவைகள் இருக்கும். அதுதான் இயல்பு. சிலருக்கு வாழ்க்கைத் துணை சரியாக அமைந்தால், முதுமையிலும் சுகமாய் வாழ முடியும். துணை சரியாக வாய்க்கவில்லை என்றால், மதம், மொழி, கலை என்று வேறு ஏதாவது ஒரு தேடலில் தங்கள் மனதை திசை திருப்பிக்கொள்கி றார்கள். ஒருசிலர், புதிய உறவோடும் வேறு சிலர், தகாதவர்களோடும் உறவுகொள்கிறார்கள். இன்னும் சிலர், சிறியவர்களோடு சில்மிஷம் செய்கிறார்கள்.  இந்தச் சிறுவர்களோடு கலவியல் விளையாட்டுக்களில் ஈடுபடுவது மிகவும் கடுமையான தண்டனைக்கு உட்பட்டது. Protection of Children from sexual offences act என்கிற POSCO சட்டம் 2012-ல் ஏற்படுத்தப்பட்ட பிறகு, குழந்தைகளிடம் தவறாக நடக்கும் பலருக்குக் கடுமையான தண்டனைகள் கிடைத்துள்ளன. 

p18b.jpg

ஷண்முகம் திடுக்கிட்டு டாக்டரைப் பார்க்க, எதுவுமே நடக்காததுபோல டாக்டர் தொடர்ந்தார். ‘‘நீங்களும் கவனமா இருங்க சார். உங்க பேரன் பேத்தி, அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகள், யார்கிட்ட யாவது யாராவது தப்பா நடந்தா நீங்களும் கண்டியுங்க. புகார் குடுங்க.’’

‘‘சரி... சரி’’ என்று ஷண்முகம் தலையாட்ட, ‘‘உங்களுக்கும் உங்க மனைவிக்கும் குடும்ப வாழ்க்கை எப்படிப் போயிட்டு இருக்கு?’’ என டாக்டர் கேட்டார்.

எல்லாவற்றையும் ஷண்முகம் பெருமூச்சுடன் எடுத்துச்சொல்ல... டாக்டர், ‘‘அதை எல்லாம் இனிமே சரி பண்ணிடலாம். நீங்களும் அவங்ககிட்ட கொஞ்சம் அன்பா, அரவனைப்பா இருந்தீங்கன்னா... போகப்போக உங்க ஒய்ஃபோட செக்ஸ் லைஃப்பும் இம்ப்ரூவ் ஆயிடும்’’ என்று சொல்லி மாத்திரை சீட்டை நீட்டினார். 

“எனக்கு எதுக்கு மருந்து?” என்றார் ஷண்முகம் புரியாமல்.

‘‘உங்க sexual welbeing-க்காக.’’

வெளியே வந்த மாமனாரின் மருந்துச்சீட்டை வாங்கி, மாமியாருடைய சீட்டோடு சேர்ந்து மருந்துக்கடையில் நீட்டினாள் பிரேமி.

(மர்மம் அறிவோம்)

vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனச்சிறையின் கம்பிகள் எல்லாம் ஒவ்வொன்றாய்த் தெறிக்கிறது....!

ஐ ஆம் வெரி ஸ்மார்ட் , ஐ ஹாவ் நோ பிராப்ளம் என்று யாரெல்லாம் கெத்தாய் இருக்கிறிங்களோ அவர்கள்தான்  முதலில்  இதைப்  படிக்க வேண்டும் ....!

நான் படிச்சிட்டன் ......! tw_blush:

Link to comment
Share on other sites

 

மனச்சிறையில் சில மர்மங்கள் - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

உள்ளே ஒரு வற்றாத ஜீவநதி!டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

 

p18a.jpg

வியர்வையைத் துடைத்துக்கொண்டு பேருந்து நிலையத்துக்குப் போய்ச் சேர்ந்தான் ராஜு. பேருந்து வரத் தாமதமாக, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அக்கம்பக்கம் வேடிக்கை பார்க்கையில்தான் சுவரில் ஒட்டி இருந்த அந்த மஞ்சள் நிற விளம்பரத்தைப் பார்த்தான். அதைப் பார்த்தவுடன் அவனது அடி வயிறு அவஸ்தைக்கு உள்ளாகியது.

ஏன் இப்படி எல்லாம் பொது இடங்களில் விளம்பரம் செய்கிறார்கள்? கொஞ்சம்கூட நாகரிகமே இல்லாமல், செக்ஸ் பிரச்னையா என்று? பெண்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? பெரியவர்கள்... அம்மாக்கள்... பள்ளிக்குழந்தைகள்! ச்சீ... எழுந்து உலவ ஆரம்பித்தான் ராஜு.

பொது இடங்களில் மட்டுமில்லை. ஏதாவது பத்திரிகை வாங்கிப் படிக்கலாம் என்றால், அதிலும் இப்படித்தான். பரம்பரை பரம்பரையாய் செக்ஸ் பிரச்னைகளுக்கு மட்டுமே வைத்தியம் செய்பவர்களைப் பற்றிய விளம்பரங்கள்...

ராஜுவுக்கு 14 வயதிலிருந்து இந்தக் கஷ்டம். இப்போது 20 வயதாகிவிட்டது.

எத்தனை நாளைக்குத்தான் இப்படி அவஸ்தைப்படுவது என்று ஒருமுறை இவன் துணிந்து, அந்த லேகிய மருத்துவரை அவர் தங்கி இருந்த லாட்ஜில் போய்ப் பார்த்தான். அங்கு போகவே அவனுக்கு அவ்வளவு சங்கோஜம்.  இதயம் பக் பக் என்று அடித்துக்கொண்டது. அந்த டாக்டர், வெத்தலை பாக்கு வாயோடு, எகத்தாளமாய் கேட்டார், ‘‘என்ன கை பழக்கமா?’’

இவன் வெட்கம் பிடுங்கித் திங்க... தலையாட்டினான்.

“விந்து முந்துதா?”

“ஆமாம்.”

“எத்தனை நாளா?”

“தெரியலை.”

“இப்படியே பண்ணிட்டு இருந்தா ஆண்மையே இருக்காது. உன் பொண்டாட்டி உன்னைவிட்டுட்டு ஓடிடுவா. இந்த லேகியத்தை ஆறு மாசத்துக்குச் சாப்பிடணும். கை பழக்கத்தை நிறுத்தணும்.”

லேகிய பாட்டில் காலி ஆயிற்று. ஆனால், அவன் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இனிமேல் தொடர்ந்து வாழ்வதா, வேற என்னதான் வழி என்று அவன் தவித்துக்கொண்டு இருந்தான். அவன் வேலை செய்த அச்சகத்தின் உரிமையாளர், ‘‘என்ன பிரச்னைடா, என்கிட்ட சொல்லக்கூடாதா?’’ என்று தனியே அழைத்துப் பேசினார்.

‘‘எனக்கு பயமா இருக்குண்ணே. நெஞ்சு அழுந்துது. வாழவே பிடிக்கலை’’ என்று சொல்லும்போதே கண்கலங்கி, குரல் தடுமாற, ‘‘அண்ணன் இருக்கேன்டா. கவலைப்படாதே. டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போறேன்’’ என்று சொல்லி டாக்டரிடம் போனார்கள். அஞ்சி அமைதியாய் இருந்த ராஜுவிடம், டாக்டரே பல கேள்விகளைக் கேட்க அனைத்துக்கும் பதிலளித்தான்.

‘‘இது நம்மூர்ல நிறைய வாலிபர்களுக்கு இருக்குற பிரச்னைதான். பட் டோண்ட் வொர்ரி. ஒண்ணும் பெரிய பிராப்ளமில்லை. நம்ம ஊர்ல ஆண் பிள்ளைகளுக்கு அவங்க உடம்பைப் பற்றியும் அதன் செயல்பாட்டைப் பற்றியும் யாரும் சொல்லித் தர்றதில்லை. அதனால்தான் நார்மல் உடல் இயக்கத்தைப் பார்த்தே பயப்படுற நிலைமை.’’

‘‘அப்படினா பொண்ணுங்களுக்குத் தன்னைப்பற்றி எல்லாமே தெரியுமா டாக்டர்?’’

“பொண்ணுங்க வயசுக்கு வந்தா மற்ற பெண்கள், தங்கள் அனுபவத்தைச் சொல்லி, அந்தப் பொண்ணுக்கு புரியவெப்பாங்க. இதெல்லாம் அவங்களோட வழக்கமான சமாசாரங்கள். ஆனா, ஆம்பளைங்க யாரும் இதுபற்றி வெளிப்படையாப் பேசிக்கிறதில்லை.’’

தொடர்ந்து டாக்டர் படம் படமாய் வரைந்து விளக்கங்கள் சொல்ல, ராஜுவும் நிம்மதி பெருக கேட்டுக்கொண்டான்.

‘‘மனித உடம்பில் உள்ள எல்லாச் செல்களிலும் 46 குரோமோஸோம்கள் இருக்கும். ஆனால், இனபெருக்கச் செல்களில் மட்டும் 23 குரோமோஸோம் கொண்ட உயிரணுக்கள் இருக்கும். அப்படி ஆண் உடம்பில் உற்பத்தியாகும் இனபெருக்கச் செல்லுக்கு விந்தணு, ஸ்பர்ம் என்று பெயர். பெண் உடம்பில் உற்பத்தியாகும் செல்லுக்கு கருமுட்டை, ஓவம் என்று பெயர். இரண்டிலுமே 23 குரோமோஸோம்கள்தான் என்றாலும், பெண் உற்பத்தி செய்யும் செல் மிகப் பெரியது. பெண் உடலில் முதன்முதலில் கருமுட்டை உற்பத்தி தொடங்கினால், அந்த பெண் பூப்பெய்து, வயதுக்கு வந்துவிட்டதாக அர்த்தம். அதேபோல, ஓர் ஆணின் உடம்பில் விந்தணுக்களின் உற்பத்தி தொடங்கிவிட்டால், அவன் வயதுக்கு வந்துவிட்டான் என்று அர்த்தம்.

பெண் உடம்பில் மாதத்துக்கு ஒரே ஒரு கருமுட்டை மட்டுமே உருவாகும். ஆனால், ஆணுக்கு தினமும் 100–200 மில்லியன் விந்தணுக்கள் உருவாகும். இந்த விந்தணுக்கள் நீந்திப்போக, அவன் விரைப்பை குழாய்களில் நிறைய போஷாக்கு நீரும் உற்பத்தியாகிறது. இப்படியாக ஒரு நாளைக்கு 2–5 மில்லி திரவியம் அவன் விரைகளில் உருவாகின்றன. இது இப்படி இருக்க... விடியற்காலை வேளையில், 3-5 மணியளவில் மூளையில் இருக்கும் பிட்யூட்டரி சுரபி, வளர்ச்சிக்கான ஹார்மோன், தைராய்டு ஹார்மோன், பாலியல் ஹார்மோன் என அன்றாடத் தேவைக்கான பல ஹார்மோன்களைச் சுரக்கிறது. இப்படி ஆணின் உடலில் டெஸ்டோச்டிரொன் என்கிற பாலியல் ஹார்மோன் ஊறிய உடனே அவனது மனம் எந்தவித முன்னேற்பாடும் இன்றி கலவியல் கனவுகளுக்கு உள்ளாகும்.  டெஸ்டோச்டிரொன் அவனது விரை அழுத்தத்தை அதிகரிப்பதால், அவனுடைய விந்தணுக்கள் எல்லாம் வெளியேறும். இப்படி ஒருவனுக்கு தினசரி விந்து வெளியேறினால் அவன் உடல் சரியாக இயங்குவதாய் அர்த்தம்.  யாருக்காவது இப்படி வெளியேறவில்லை என்றால், அவன் உடம்பில் உற்பத்தியே இல்லை அல்லது தடைபட்டிருக்கிறது என்று அர்த்தம்.

p18b.jpg

இப்போது ஓர் ஆண் வயதுக்குவந்து 10-15 ஆண்டுகள் கழித்துத்தான் திருமணமே செய்துகொள்கிறான். இருந்தாலும், அவன் உடல் தினமும் விந்தணுக்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும். இப்படி உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கும் விந்தணுக்களையும், அதன் உபரிநீரையும் சேமிக்க முடியாது. தினசரி பல மில்லியன் கணக்கில் உருவாகும் விந்தணுக்கள் வெளியேறினாலும் எந்த நஷ்டமும் இல்லை. இன்றும் சில போலி மருத்துவர்கள், அறிவியல் தெரியாமல் வெறுமனே விந்து வெளியேறினால் அது என்னவோ பெரிய ஆபத்து மாதிரி பீதியைக் கிளப்புகிறார்கள்.’’

‘‘அப்படின்னா, இது ஒரு பிரச்னையே இல்லையா டாக்டர்? நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டு இத்தனை நாள் வேஸ்டா பயந்தேனா?’’

‘‘இப்பதான் உனக்கு எல்லாம் சரியா புரிஞ்சிடுச்சே. நதியில தண்ணி ஓடுனாதான் அது நதி. நின்னுட்டா, அது வெறும் மணல். உன் வாழ்நாள் முழுக்க உனக்குள்ள ஓடுற வற்றாத ஜீவநதி இந்த விந்து. ரிலாக்ஸ் அண்ட் பீ கான்ஃபிடெண்ட்’’ என்று டாக்டர் ஊக்கப்படுத்தி ராஜுவை அனுப்பினார்.

‘‘அட ஒண்ணுமே இல்லாத செக்ஸ் மேட்டரை போஸ்டர் அடிச்சி, பிரச்னையா சித்தரிச்சு, இதுல போய் பணம் கறக்குறாங்களே.. பாவி மனுசங்க” என்ற மனக்குமுறலோடு போனான் ராஜு.

(நிறைவு பெற்றது)

vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.