Jump to content

மச்சு பிச்சு என்னும் கனவு நகரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மச்சு பிச்சு என்னும் கனவு நகரம்

 

(Machu Pichchu, Peru)

பெருவினுள் இருக்கும் மச்சு பிச்சுவிற்கு செல்வதென்பது என் கனவுகளில் ஒன்றாக இருந்தது. கனவுகளில் அநேகம் கைக்கெட்டாத கனிகளாய்த் தூரத் தூரப் போய்க்கொண்டிருந்ததால் இதுவும் அவ்வளவு எளிதில் நிறைவேறாத ஒன்றெனவே நினைத்துக்கொண்டிருந்தேன். தற்செயலாய் பெருவிற்குச் செல்லல் சாத்தியமானதும், மச்சு பிச்சுவில் கால் வைக்கும்வரை, இது நிஜத்தில் நிகழ்கின்றதென என்னால் நம்பமுடியாதே இருந்தது.

1.jpg

மச்சு பிச்சு, பெருவின் தலைநகரான லிமாவிலிருந்து ஏறத்தாள 300 கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கின்றது. மச்சு பிச்சுவிற்குப் போவதற்கு லிமாவிலிருந்து குஸ்கோ என்கின்ற நகருக்கு ரெயினிலோ அல்லது விமானத்திலோ போகலாம். விமானத்தில் குஸ்கோ நகரை அண்மித்தபோது இந்த நகரில் எப்படி விமானத்தை தரையிறக்கப் போகின்றார்களோ என்கின்ற சிறு அச்சம் வந்திருந்தது. எனெனில் அந்தளவிற்கு நிறைய மலைகள் உடைய சமதரையற்ற நிலப்பகுதி அது. மேலும் கடல்மட்டத்திலிருந்து 3000 மீற்றர்களுக்கு மேலே இருக்கின்றது. தலையிடி/தலைச்சுற்றல் இன்றி இந்த நகரின் காலநிலையை அவ்வளவு எளிதில் எல்லோராலும் உள்வாங்கிக்கொள்ளவும் முடியாது.

 

மச்சு பிச்சுவிற்குப் போவதென்பதை பலர் மாதக்கணக்காய்த் திட்டமிடுவார்கள். எல்லாவற்றையும் ஒழுங்காய்த் தயார் செய்துவிட்டுத்தான் பெருவிற்குள்ளேயே கால் வைப்பார்கள். நான் அப்படியில்லாது வருவது வரட்டுமென பெருவிற்குப் போய் மச்சு பிச்சுவிற்கான திட்டத்தைப் போடுவோமெனப் போயிருந்தேன். மச்சு பிச்சுவிற்குள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களே நுழைவதற்கு அனுமதி இருக்கிறது. மொன்ரானா அல்லது ஹயானா பிச்சு போன்ற அருகருகிலிருக்கும் மலைகளிலிருந்து மச்சு பிச்சுவின் அழகைப் பருகவேண்டுமென்றால் அதற்கும் தனியே நுழைவுச்சீட்டுக்கள் எடுக்கவேண்டும். ஹயானா பிச்சுவில் ஏறுவதற்கு இருநூறு பேர் மட்டுமே ஒரு நாளில் அனுமதிக்கப்படுவார்கள்.

நான் பெருவிற்குள் இறங்கிய முதல்வாரம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் சில தினங்கள் மச்சு பிச்சுவிற்கான பயணமும் தடைபட்டிருந்ததென அங்கே தற்செயலாய் சந்தித்த ஒரு நியூசிலாந்துத் தம்பதியினர் சொல்ல, இவ்வளவு தூரம் வந்துவிட்டதன் பின் என் கனவு நிறைவேறாதோ என்ற கலக்கமும் வந்தது. அதிஷ்டவசமாக நான் செல்வதற்கு நினைத்த நாளில் மச்சு பிச்சுவிற்கான வாசல்கள் மீண்டும் திறந்துவிட்டிருந்தன.
 

குஸ்கோவிலிருந்து முதலில் ரெயினில் மச்சு பிச்சுவிற்குப் போகலாம் அல்லது இன்காக்களின் இன்னொரு நகரான ஒலாண்டேதம்பேயில் இருந்தும் ரெயின் எடுத்தும் மச்சு பிச்சுப் போகலாம். நான் ஒலாண்டேதம்பே சென்று அங்கிருந்து ரெயின் எடுத்து மச்சு பிச்சுவை அடைந்தேன்.

ஒலாண்டேதம்பேயும் ஒரு பிரசித்தி பெற்ற இன்காக்களின் நகர். இன்னும் இன்காக்களின் கட்டட அமைப்புக்களின் எச்சங்களைப் பார்க்கலாம். எங்கு பார்க்கினும் மலைகள் சூழ்ந்த நகரில் அந்த நகரில் மூன்று நாட்கள் நின்றதும், அந்தவேளை நகரில் நிகழ்ந்த முக்கிய கலாசார விழாவினைக் கண்டு களிக்க முடிந்ததும் மச்சுபிச்சுவிற்கான என் பயணங்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

ஒலாண்டேதம்பேயிலிருந்து உள்ளூர் மக்களுக்கென தனிப்பட்ட ரெயினும், பிற நாட்டிலிருந்து வருபவர்க்கென இன்னொரு ரெயினும் புறப்படுகின்றது. உள்ளூர் மக்களுடன் அவர்களின் ரெயினில் போகவே எனக்கு விருப்பம் இருந்தபோதும் அதில் செல்ல அந்நியர்களுக்கு அனுமதியில்லை. பெரு ரெயில் அல்லது இன்கா ரெயில் என்கின்ற சேவைகளில் ஒன்றில் பிறநாட்டவர்கள் போகலாம். கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலம் எடுக்கும் ரெயின் சிறு கிராமங்களையும் மலைகளையும் காடுகளையும் ஆறுகளையும் ஊடறுத்துச் செல்கின்றன. முன்னே தெரியும் மலைகள் பச்சையாய்த் தெரிய, பின்னாலிருக்கும் மலைகளை முகில்களும் பனியும் மூடியிருக்கும் காட்சிகளைப் பார்ப்பது அற்புதமானது. நதியொன்றும் விடாது எங்களோடு தொடர்ந்து மச்சு பிச்சுவரை வந்துகொண்டிருந்தது.

ரெயின் மச்சுபிச்சு அடிவாரத்திற்கு அப்பால் நகர்வதில்லை. பின்னர் பஸ்செடுத்து -30 நிமிடங்கள்- மச்சுபிச்சு அமைந்திருக்கும் மலைக்குச் செல்லவேண்டும். மலையேறியும் போகலாம். ஆனால் நிறைய நேரமெடுக்கும். மச்சுபிச்சுவின் நுழைவாயிலை அடைந்ததும் நிறைய வழிகாட்டிகள் நிற்பார்கள். விருப்பமெனில் அவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களைக் கூட்டிச் செல்லலாம்.

மச்சு பிச்சுவின் முக்கிய பகுதிகளைப் போய்ப் பார்க்க முன்னர், மலையில் ஏறுவதற்குத் தயாராகினேன். எனெனில் குறிப்பிட்ட நேரத்திற்குள் மலையில் ஏறவேண்டும். இல்லாவிட்டால் அனுமதியிருக்காது. ஹயானா பிச்சுவிற்கு அனுமதிச் சீட்டு வாங்க முடியாது போனததால் மொன்ரானா மலையினுள் ஏறததொடங்கினேன்.

2.jpg

அடிக்கடி மலையேற்றம் செய்யாவிட்டால் ஏறுவதற்கு கடினமான மலை இது. சிறுபாதைகள்/ செங்குத்தான சரிவுகள் உடைய சற்று ஆபத்தான பாதையும் கூட. மூச்சு இழுத்து கஷ்டப்பட்டு ஏறியபோதும் வழிநெடுகிலும் காட்சிகள் அழகாயிருந்தது. சிலர் இடைநடுவிலேயே இயலாதென திரும்பி விட்டிருந்தனர். நான் உச்சிக்குப்போனபோது 360 பார்வைக்கோணம் உள்ள இடத்தை நேரம் சென்றுவிட்டதென்று மூடிவிட்டிருந்தனர். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு ஏறி வந்திருக்கின்றோம், 10 நிமிடங்கள்தானே பிந்திவந்தோம் என என்னைப் போன்ற நான்கைந்து பேர் 'அனுமதிக்க மாட்டீர்களா?' எனக்கேட்டபோதும் அவர்கள் அந்தப் பார்வைக் கோணத்தை எமக்காகத் திறந்துவிடவில்லை. உடனே திரும்பி நடக்கவும் சொல்லிவிட்டார்கள். எனெனில் நாங்கள் கீழே இறங்கியவுடன் பாதையை முற்றுமுழுதாக மூடி விடவும் வேண்டும். இவ்வளவு உயரம் ஏறிவந்துவிட்டு உடனே திரும்பி இறங்க முடியாது என அங்கேயே அமர்ந்து 'உள்ளே அனுமதிக்கும் போராட்டத்தை' நாங்கள் எல்லோரும் நடத்தினோம். இறுதியில் வழமைபோல அவர்களிடம் தோற்று இறங்கி நடக்கத்தொடங்கினோம். கூடவே ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த குடும்பம் ஒன்று பேச்சுத் துணைக்கு வந்தததால் இறங்கி வருவது அவ்வளவு களைப்பாய்த் தெரியவில்லை.

 

 


 

மச்சு பிச்சுவை அன்றைய காலத்தில் இன்காக்கள் எப்படிப் போய்ச் சேர்ந்திருப்பார்கள் என்பதை அனுபவிக்க வேண்டுமானால் இன்கா வழித்தடங்கள் (Inca Trails) ஊடாக நான்கைந்து நாட்கள் நடந்து போய்ப் பார்க்கலாம். ஆனால் தனியே போக அனுமதியில்லை. குழுக்களாய்த்தான் சேர்ந்தே போகவேண்டும். இன்கா வழித்தடங்களினூடாகப் போவதென்றால் பல மாதங்களுக்கு முன்னரே பதிவு செய்யாவேண்டும், இல்லாவிட்டால் இடம் கிடைப்பது அரிது. இரவுகளில் கூடாரங்கள் அடித்து தங்கவேண்டும். மிகுந்த சுவாரசியமான பயணம் அதுவென மச்சுபிச்சுவில் சந்தித்த ஒரு பிரேசிலிய இணை கூறினார்கள். வழியெங்கும் இயற்கையின் அதிசயங்களையும், பல்வேறு விலங்குகள்/நகர்வனபனவற்றையும் பார்த்து வந்ததை அவர்கள் விபரித்தபோது நல்லதொரு சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டேன் என்ற உணர்வே வந்தது.



5.jpg


மச்சுபிச்சு, 1450 ஆண்டளவில் இன்கா அரசனொருவனால் நிர்மாணிக்கப்பட்டதாய் நம்பப்படுகின்றது. பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பானியர்கள் வந்து இன்காவினரையும் அவர்களின் கலாசாரங்களையும் கொடூரமாய் அழித்தபோதும் மச்சுபிச்சு அதிலிருந்து தப்பியதென்பது ஓர் அதிசயமென்றே சொல்லவேண்டும். ஸ்பானியர்களின் கண்களுக்கு மட்டுமின்றி, இன்காவினரின் செழிப்புமிக்க வாய்மொழிப் பாடல்களில் கூட மச்சு பிச்சு பல நூற்றாண்டுகளாய் இல்லாதிருந்தது ஏனென்பதும் இன்னமும் மர்மாகவே இருக்கின்றது. பதினாறாம் நூற்றாண்டில் நடந்த ஸ்பானியர்களின் படையெடுப்புடன் வரலாற்றின் தடங்களில் இருந்து இல்லாமற்போன மச்சுபிச்சு மீண்டும் 1911ல் கண்டுபிடிக்கப்படுகின்றது.

இன்றும் கூட மச்சுபிச்சு எதற்காய் அமைக்கப்பட்டதென்று மர்மமாகவே இருக்கின்றது. புனிதமான வழிபாட்டுக்காய் அமைக்கப்பட்டிருக்கலாமென்று ஒருசாராரும், விவசாயத்தின் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கலாமென்று இன்னொரு சாராரும் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். இன்றும் கூட மலைகளாலும் பெருங்காடுகளாலும் சூழப்பட்டு இருக்கும் ஓரிடத்தில் இவ்வளவு நுட்பமான ஒரு நகரை அமைத்திருப்பது என்பது அதிசயமாய்த்தானிருக்கிறது. மச்சுபிச்சுயின் உள்கட்டுமானம், இரண்டு பகுதிகளாகத் தெளிவாய்ப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒருபகுதி வசிப்பதற்கெனவும், இன்னொரு பகுதி விவசாயம் செய்வதற்குமென வகுக்கப்பட்டிருக்கின்றது. விவசாயத்திற்கென நீர் வழங்கல் முறை நவீன தொழில்நுட்பத்திற்கு சவால் விடும் முறையில் அவ்வளவு கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கின்றது.

மச்சு பிச்சுவில் உயர் வர்க்கம் வாழ்வதற்கென வசதியான வீடுகளும், சாதாரணர்கள் வாழ்வதற்கு எளிய வீடுகளும் அமைக்கப்பட்டிருப்பதை இப்போதும் காணமுடியும். அதேபோன்று சூரிய வழிபாடுகள் நடந்தற்குரிய தடங்களையும் தெளிவாய்க் காணமுடியும். சில இடங்களில் விலங்குகள்/மனிதர்கள் பலிகொடுக்கப்பட்டிருக்கலாமெனவும் நம்பப்படுகின்றது.

நான் மச்சுபிச்சு சென்றதற்கு முதல்நாள் மழை தொடர்ந்து பொழிந்துகொண்டிருந்ததாகவும், இடங்களை நிதானமாகப் பார்க்கவோ, மலையில் ஏறமுடியவோ இல்லையெனச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நல்லவேளையாக நான் போனபோது மச்சுபிச்சுவில் நன்றாக வெயில் காய்ந்துகொண்டிருந்தது. மலையேறல் கூட மிகுந்த தாகத்துடனேயே நிகழ்ந்தது. எனினும் மாலையானபோது மழை எங்கிருந்து ஒளிந்து வந்ததென அறியமுடியாது பெரும்பாட்டமாய் பொழியத்தொடங்கியது. ஒரேநாளில் வெவ்வேறான இரண்டு காலநிலைகளை மச்சுபிச்சுவில் அனுபவிப்பது என்பது கூட ஒருவகையான ஆசிர்வாதமெனத்தான் சொல்லவேண்டும்.


3.jpg

இப்போதிருக்கும் மச்சுபிச்சுவும் அதன் அழகிய சுற்றுப்புறங்களும் இப்படியே தொடர்ந்து இருக்குமெனவும் சொல்லமுடியாது. ஒவ்வொரு வருடமும் இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தனியார் நிறுவனங்களும் இவ்வாறான சுற்றுலாப் பயணிகளுக்குச் சொகுசான வசதிகளைச் செய்வதற்கென மச்சுபிச்சுவை அண்மித்து கட்டங்களையும் அமைக்கவும், காடுகளை அழிக்கவும் தொடங்கி விட்டிருக்கின்றனர். காலம் என்பதும் இன்னொரு பெரும் விடயமாக மச்சுபிச்சுவின் மீது கவிழ்ந்து அதன் அழகை மெல்ல மெல்ல அழிக்கத் தொடங்கி இருக்கின்றது. இவ்வாறுதான் உலகின் புதிய அதிசயங்களில் ஒன்றாக மச்சுபிச்சுவைப் போல மெக்ஸிக்கோவில் இருக்கும் ஸெசென் இட்ஸாவிற்கு (Chetzen Itza)போனபோதும் நிகழ்ந்தது. சில காலங்களுக்கு முன்வரை அந்த பிரமிட்டில் ஏறிப்பார்ப்பது எல்லோருக்கும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது அது அழிவை நோக்கிச் செல்வதால் எவருக்கும் ஏறிச்செல்வதற்கு அனுமதியில்லை. வெளியில் நின்றே அதைச் சுற்றிப் பார்க்க முடியும்.



 

மச்சு பிச்சுவே ஒரு மலையிலிருக்கின்றதென்றால், குஸ்கோ நகரம் அதைவிட இன்னும் கடல்மட்டத்திலிருந்து 3400 மீற்றர் உயரத்திலிருக்கின்றது. ஆகவே நிறையப்பேருக்கு உயரங்காரணமாய் தலையிடி, தலைப்பாரம் போன்றவை சாதாரணமாகவே வந்துவிடும். குஸ்கோ நகரே ஸ்பானியர்களால் கடைசியாகக் கைப்பற்றப்பட்ட நகரம். இங்கேதான் இன்கா மக்கள் மிகுந்த வலிமையுடனும் பெரும் எண்ணிகையுடனும் இருந்தவர்கள். கிட்டத்தட்ட 50-60 வருடங்களாய் ஸ்பானியர்களுடன் பல்வேறு வழிகளில் அவர்கள் சண்டைபிடித்திருக்கின்றனர்.

இப்போது சுற்றுலாப் பயணிகளால் நிறைந்துவழியும் சதுக்கத்திலேயே (Plaza De Armas) இன்காவினது இறுதி அரசன் ஸ்பானியர்களால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார். மியூசியம் ஒன்றிரண்டை கிடைத்த சந்தர்ப்பத்தில் பார்த்தபோது, ஸ்பானியர்கள் இன்கா மக்களைப் பிடித்து சித்திரவதை செய்த முறைகள் நாம் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாதவை. ஒரு சித்திரத்தில் ஒருவரை கை, கால் என நான்கு பக்கங்களும் கயிற்றால் கட்டி ஒவ்வொரு திசையிலிருந்து குதிரையால் இழுத்துத் தண்டணை கொடுத்திருப்பதாய்க் காட்சிப்படுத்தியிருப்பார்கள். வெற்றி மிகுந்த சரித்திரம் எனச் சொல்லப்பட்ட அனைத்தின் பின்னாலும் எஞ்சியிருப்பவை கண்ணீரும் குருதியும் தானல்லவா?




4.jpg

ஏற்கனவே உயரத்தில் அமைந்திருக்கும் நகரில் இன்னும் உயரமான ஒரு மலையில் இந்த வெள்ளை இயேசு காட்சியளிக்கின்றார். 26 அடி உயரமான சிலை எனச் சொல்லப்படுகின்றது. இந்த இயேசு பிரேசிலிருக்கும் பிரபல்யமான ' Christ the Redeemer' சிலையை மாடலாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உயரமான வெள்ளை யேசு அமைக்கப்பட்ட வரலாறுதான் சுவாரசியமானது. இது இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது, அடைக்கலந்தேடி வந்த பாலஸ்தீனியர்களால், தமக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு நன்றிக்கடனாய் அவர்கள் பெரு மக்களுக்காய் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர்.

பயணங்களில் நாம் பார்க்கும் இடங்களை விட சந்திக்கும் அனுபவங்களே பிறகு ஆறுதலாக இருந்து அசைபோடும்போது முக்கியமானதாக ஆகிவிடுகின்றன. மேலும் மச்சு பிச்சு போன்ற மிகப் பிரசித்திபெற்ற இடத்தை புகைப்படங்களாலும், காணொளிகளாலும் பார்த்தபிறகு நேரில் பார்க்கும்போது அவ்வளவு பெரிய மனவெழுச்சியைத் தராமல் கூடப்போகலாம். எனினும் மச்சு பிச்சுவிற்குச் செல்லும்போது ஒவ்வொருவரின் அனுபவங்களும் தனித்துவமாக இருக்கவே செய்யும். அவ்வாறான தனித்த அனுபவங்களும், இன்காக்களின் பெரும் சரித்திரத்தின் சிதைவுகளை எங்கும் காணக்கூடிய குஸ்கோ, ஒலியாண்டேதம்பே போன்ற நகரங்களில் நின்று தரிசித்த காட்சிகளுமே நீண்ட காலத்திற்கு மனதிற்குள் சேகரமாய்த் தங்கும் போலத் தோன்றுகின்றது.

(‘அம்ருதா’ மாசி இதழிலும், சுருங்கிய வடிவம் இந்தவார (மாசி, 17) ‘தீபம்’ பத்திரிகையிலும் வெளிவந்தது)

http://djthamilan.blogspot.co.uk/2016/04/blog-post_49.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி...கிருபன்!

எனது மகள் இந்த வருஷ ஆரம்பத்தில் போய் வந்தாள்!

மச்சு பிச்சுவைப் பற்றி நிறைய அறிய முடிந்தது!

மனிதப் பலிபீடங்கள் சிலவற்றைக் கண்டதாக அவள் கூறிய ஞாபகம்!

ஏதாவது புத்தகம் வாங்கி விபரமாக வாசிக்க ஆசை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. புங்கை அண்ணா. உங்கள் மகளுக்கு கொடுத்து வைத்திருக்கின்றது!

நான் புதிய தொழில்நுட்பக் கருவி  VR gadget ஐப் பாவித்து இப்படியான இடங்களைப் பார்க்கலாம் என்றுள்ளேன் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Temple of the Sun or Torreon

800px-Machupicchu_intihuatana.JPG

 

Inti Watana is believed to have been designed as an astronomic clock or calendar by the Incas

800px-Intihuatana_Solar_Clock.jpg

Interior of an Inca building, featuring trapezoidal windows

1024px-124_-_Machu_Picchu_-_Juin_2009.jp

Funerary Stone in upper cemetery

1024px-Funerary_Stone_in_Machu_Picchu.jp

1920px-104_-_Machu_Picchu_-_Juin_2009.jp

1920px-95_-_Machu_Picchu_-_Juin_2009.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்கா வம்ச 7 ஆவது மனனால் கட்டபட்டது தான் இந்த மாச்சு பிச்சு.

இந்த மாச்சு பிச்சு இன்காக்களின் கோடைக்கால வாசஸ்தலமாக இருந்தது.

15ம் நூறாண்டில், ஸ்பானிய பிரான்சிஸ்கோ பிசாறியோ இன்னோர் கடலோடி அமாருவுடன் சேர்ந்து புதிய உலகைக் காண, தங்கம் தோண்ட கிளம்பினார். தென் அமரிக்கா போய்ச் சேர்ந்தார்.

அப்போது இன்கா வம்சத்தினுள் ஒரு வாரிசு சண்டை காரணமாக தமக்குள் சண்டை இட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கிருத்து தப்பி வந்த 3 இன்கா இளஞர்கள் பிசாறியோவை சந்தித்தார்கள்.

அவர்கள் மூலம் இன்கா ஆட்சியாளர்களிடம் பெரும் தங்கம் உள்ளது எனபதனையும், அந்த ஆட்சியாளர்கள் தமது கடவுள், வெள்ளையாக, வெள்ளை தாடியுடன், வெள்ளைக் குதிரையில் வரக்  கூடியவர் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் என்று அறிந்து கொண்டனர்.

வெறும் 19 பேருடன் பிசாறியோ வெள்ளை தாடியுடன், வெள்ளைக் குதிரையில் வந்து, பெரும் பலம் கொண்டிருந்த அரசரை மடக்கி, அறை நிறைந்த தங்கத்தினைப் இறை காணிக்கையாக பெற்று, அரசன் மூலமாக, வஞ்சகமாக அரசாட்சியையும், அருள் பொழியும் அந்த இறைவனுக்கு கொடுக்க வைத்து, அரசனானதும் அந்த அரசனை, கழுத்தினை நெரித்து கொலை செய்யவும் உத்தரவு பிறப்பித்தான்.

விரைவாக, அவனுக்கும், அமரோவுக்கும் பிரச்னை வர, அமாரோ கொல்லப்பட்டான்.

ஸ்பெயினில் வறிய குடும்பத்தில் இருந்து வந்த பிசாறியோ போலன்றி, அமாரோ வசதியான குடுப்பதில் இருந்து வந்தவர். அமாரோ, பிசாறியோவினால் கொல்லப் பட்டதனை, மானப் பிரச்சனையாக எடுத்த, அவனது குடும்பம், இரகசியமாக ஆக்களை அனுப்பி, பிசாறியோவை போட்டுத் தள்ளியது.

ஆக கடவுள் என்ற பெயரில் செய்த பெரும் நம்பிக்கை துரோகத்தினால் கிடைத்த சாபத்தினாலே, இருவரும் அழிந்தார்கள் என்று சொல்லலப் படுகின்றது.

பிசாறியோ ஒரு போதுமே மச்சுப் பிச்சு போக வில்லை.

1902ம் ஆண்டு ஒரு அமெரிகரினாலேயே இந்த மச்சுப் பிச்சு கண்டு பிடிக்கப் பட்டது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தலைப்பைப் பார்த்து விட்டு யாரோ எழுதிய புத்தகம் என்று நினைத்து விட்டேன்.இணைப்பிற்கு நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.