Jump to content

அரசியற் கைதிகள் விவகாரத்தின் பின்னால் அரசின் பெரும் சூழ்ச்சி இருக்கிறது! - குணா கவியழகன் நேர்காணல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியற் கைதிகள் விவகாரத்தின் பின்னால் அரசின் பெரும் சூழ்ச்சி இருக்கிறது! - குணா கவியழகன் நேர்காணல்

அரசியற் கைதிகள் விவகாரத்தின் பின்னால் அரசின் பெரும் சூழ்ச்சி இருக்கிறது!
 

 

இனப்படுகொலை விவகாரத்தை இராணுவ அத்துமீறலாகச் சுருக்கும் முனைப்புடன் அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பான விவகாரம் சிறிலங்கா அரசாங்கத்தினால் கையாளப்படுவதாக எழுத்தாளர் குணா கவியழகன் பொங்குதமிழுக்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த சனியன்று தனது 'விடமேறிய கனவு' நாவல் அறிமுக அரங்கில் பங்கேற்பதற்காக குணா கவியழகன் நோர்வேக்கு வருகை தந்திருந்த போது அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக அவருடன் நேர்காணல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம்.

அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய வாக்குறுதிகள் சில மாதம் முன்னரே வழங்கப்பட்டிருந்தன. ஆட்சிமாற்றத்தின் பின் இலகுவில் நடந்துவிடுமென நம்பப்பட்ட இச்சிறு விடயம், இப்பொழுது சர்ச்சைக்குரியதாகவும் இலங்கை அரசியலின் மைய விவகாரமாக்கப்பட்டுள்ளதன் பின்னணி தொடர்பாகவும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

பொங்குதமிழுக்காக நேர்கண்டவர் ரூபன் சிவராஜா

***

அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய வாக்குறுதிகள் சில மாதம் முன்னரே வழங்கப்பட்டிருந்தன. ஆட்சிமாற்றத்தின் பின் இலகுவில் நடந்துவிடுமென நம்பப்பட்ட இச்சிறு விடயம், இப்பொழுது சர்ச்சைக்குரிய விவகாரமாக்கப்பட்டுள்ளதன் பின்னணி என்ன?

சரி தான், அது இன்றைய அரசியலின் மைய விவகாரமாகிவிட்டது. முன்னர் வாக்குறுதி வழங்கப்பட்டதென்பது, இணக்க அரசியலின் வெளித்தெரியாத இயல்பான நடவடிக்கை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்தவர்கள் அல்லது அவர்கள் ஆட்சிக்கு வருவதற்குத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தன் மக்களைத் திருப்பியதால் அந்த மக்களுக்கு நன்மையாகக் காட்டக்கூடிய ஒன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை கூட்டமைப்பிற்கு உண்டு.

ஓர் இணக்க அரசியல் வழிமுறையில் மூடிய அறையில் நடக்கக்கூடிய இருதரப்பு உரையாடலில், இருதரப்பு நலன்கள் பற்றியே பேசப்படும். கூட்டமைப்பு தன் மக்களுக்கு வெற்றியாகக் காட்டக்கூடிய எதனை நல்க முடியுமென்று விவாதிக்கப்படும். இந்த உரையாடலில் அரசதரப்பு உடன்படக்கூடிய விவகாரமாக, அரசியல் கைதிகள் விவகாரம் உடனடிக்கு இருந்திருக்கும். மூடிய அறைக்குள் இந்த உடன்பாடு எட்டப்பட்ட பின்னரே, கூட்டமைப்பு பகிரங்கமாக அரச தரப்பை நோக்கி இந்தக் கோரிக்கையை முன்வைக்கும்.

தாங்கள் கோரிக்கை வைத்ததன் மூலம்தான் இந்தக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்பதாகக் காட்சிப்படுத்துவதே இங்கு நோக்கம். அரசு அப்படிச் செய்யாவிட்டால், ஒரு போராட்டத்தை நடாத்தப்போவதாக திட்டமிட்டு ஒரு அறிவிப்பும் விடுத்திருந்தது கூட்டமைப்பு. தங்களுடைய பெரும் பிரயத்தனத்தின் மூலமே, அரசியல் கைதிகளை மீட்டெடுத்தோம் என்பதுதான் இங்கு காட்ட விரும்பும் அரசியல் வெளிப்பாடு. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இவர்களை இப்படித் தூண்டி விட்டு, தனது அடுத்து கட்ட நலனுக்குச் சென்றுவிட்டது.

அடுத்த கட்ட நலன் என்று எதனைக் கருதுகிறீர்கள்? ஒரு கைதி விடுவிப்பு விவகாரத்தில் என்ன வகையான அரசியல் நலன்கள் இருக்க முடியும்? அல்லது இதற்குப் பின்னால் ஓர் அரசியல் சூழ்ச்சி இருக்கக்கூடுமா?

கண்டிப்பாக. முள்ளிவாய்க்காலோடு எல்லாம் முடிந்துவிட்டதாகத் தமிழர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சிங்கள அரசாங்கம் அவ்வாறு நினைக்கவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான நிகழ்ச்சித்திட்டம் என்றும் ஒன்று உண்டு. கைதிகள் விவகாரத்தைக் 'கைதி அரசியல்' என்றும் சொல்லலாம் போலிருக்கிறது. இதனை இன்றைய இலங்கை மைய அரசியல் விவகாரத்தோடு சிறிலங்கா அரசாங்கம் இணைத்து விடப்போவதுதான் இதிலுள்ள பெரும் சூழ்ச்சி.

தமிழர்களிடமிருந்து ஓர் அரசியல் போராட்டத்தினை அல்லது அரசியல் பிரயத்தனத்தினை அரசாங்கமே தூண்டுகிறது. அத்தகைய பெரும் பிரயத்தனத்தின் பின்பு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதில்தான் அரசாங்கத்திற்கு இலாபமுண்டு. துரதிஸ்ரவசமாக இது கூட்டமைப்பிற்கும் இலாபகரமாக அமைந்துவிடப் போகிறது. ஒரு எதிர்ப்பரசியலின் மூலம் தம்மால் வென்றெடுக்கப்பட்ட கேடயமாக கைதிகள் விவகாரத்தைக் கூட்டமைப்பு கொண்டுவரப்போகிறது. தம்மைப் போராட்ட நாயகர்களாகக் காட்டப்போகிறது.

ஏற்கனவே இனப்படுகொலை என்பது, போர்க்குற்றமாகத் திசைமாற்றப்;பட்டுவிட்டது. போர்க்குற்றம் என்பதுகூட சரியான வரையறையற்ற வழுக்கலான சொல்லுத்தான். இப்போது புதிய அரசாங்கம் பதவியைப் பிடித்ததும், போர்க்குற்றம் என்பதை இராணுவ அத்துமீறல் என்பதாகத் தாழ்த்தி வியாக்கியானப்படுத்தியுள்ளது. விசாரணைப் பொறிமுறை அதற்கு ஏற்றாற்போலவே அமைவதாகத் தெரிகிறது.

இராணுவ அத்துமீறல், போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை விளக்கத்திற்கும் அரசியல் கைதிகள் விவகாரத்திற்கும் இடையில் என்ன தொடர்பிருக்கிறது?

இனப்படுகொலை என்றால் அதன் பொறுப்பாளி அரசாங்கம். குற்றம் அரசினது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும். அதுவே நீதியின் பொறிமுறை.

ஆனால் இராணுவ அத்துமீறல் என்பது தனிமனித ஒழுக்கமீறல் பிரச்சினை. நாட்டின் சட்டத்தை ஒரு தனிமனிதன் மீறிவிட்டான் என்றளவில்தான் அதன் அர்த்தம். எனவே அந்த இழைக்கப்பட்ட குற்றத்திற்கான பொறுப்பாளி தனிமனிதனான சிப்பாய்தான். அரசு அல்ல என்றாக்கப்பட்டுவிடும். இங்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்கான நீதி என்பது தனிமனிதனைத் தண்டிப்பதுதான். அரசியல் தீர்வு அல்ல.

இந்த அரசியல் கைதிகளை நீதித்துறை நடவடிக்கையின் ஊடாக விடுதலை செய்ய முடியாதவர்களாகக் காட்டுவதன் மூலம், இலங்கையின் நீதித்துறை பூரண சுதந்திரமானது என்று காட்டப்படுகிறது. இந்தச் சுதந்திரமான நீதித்துறை, பின்னர் போரில் இடம்பெற்ற 'இராணுவ அத்துமீறல்களை' விசாரித்து வழங்கும் தீர்ப்பும் சரியானதென்று ஆகிவிடும். இப்போது அரசியல் கைதிகள் நீதித்துறைக்கு வெளியே ஓர் அரசியல் தீர்மானத்தின் மூலம் விடுவிக்கப்படுவர். அப்படியென்றால் போரின் போது அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படப்போகும் இராணுவத்தினருக்கும் ஒரு அரசியல் தீர்மானத்தின் மூலம் பொதுமன்னிப்பு வழங்கப்படுவது சரியென்றாகிவிடும்.

அரசே தமிழ்த்தரப்பைத் போராடத் தூண்டி, அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்ட பின்னர், சிங்கள இனவாதத்தரப்பையும் குற்றம் சாட்டப்படும் இராணுவத்தினருக்கு ஆதரவாகப் போராடத் தூண்டி அவர்களை விடுவித்துவிடலாம்.

அவ்வாறாயின் போர்க்குற்ற விசாரணை தொடர்பான சர்வதேசத் தலையீடு என்பது இந்த விவகாரத்தில் என்னவாகிப் போகும்?

இப்போதுள்ள சர்வதேசத் தலையீடு என்பது ஒரு மாயை. பல நாட்டு நீதிபதிகள் பங்குபற்றுவதனால் அது சர்வதேசத் தலையீடு ஆகாது. அது அதிகாரமற்ற அங்கீகாரமற்ற கோறைப் பொறிமுறை. இதுவும்கூட உலக ஊடகங்களின் கண்களிலிருந்து மெல்லென மறைக்கப்பட்டுவிடும். விசாரணை காலவரையறையின்றி நீளும். தீர்ப்புகள் கிடப்பில் போடப்படும். உலக ஊடகங்களும் திட்டமிட்டு இதனை மறக்கடித்துவிடும்.

சில இராணுவத்தினர் இறுதியிலும் இறுதியாக குற்றவாளிகளாகக் காணப்பட்டாலும், அவர்கள் சத்தம் சந்தடியின்றி, ஒருவேளை உள்ளூர் ஊடகங்களின் கவனத்தினைக்கூடப் பெறாமல் விடுவிக்கப்படக்கூடும்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஒரு நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் கூறியிருந்தீர்கள். அது என்னவகையான நிகழ்ச்சி நிரல்?

போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழர்களை இறுதியிலும் இறுதியாக அவர்களின் அரசியல் போராட்டத்திலும் தோற்கடிக்க வேண்டும். தமிழர்களின் அரசியல் போராட்டம் ஆயுதப்போராட்டத்திற்கு முன்பும் இருந்தது. எனவே ஆயுதப்போராட்டத்தின் பின்பும் இருக்கும். அதனை எப்படி முறியடிப்பது என்பதற்கு ஒரு திட்டம் உண்டு. அது தமிழ் இன அடையாள அரசியலை இல்லாமல் செய்வது தான் அதன் இறுதியிலும் இறுதியான குறிக்கோள்.

அதற்கான நிகழ்ச்சி நிரலின் செயற்திட்டங்கள் சிங்களத்தரப்பினைப் பொறுத்தவரையில் செம்மையாக நகர்கின்றன.

தமிழ் அரசியலின் இன்றைய நிலையும் எதிர்காலமும் எப்படியிருக்கும்?

கருவியாகிக் கருவியாகிக் கெட்டழியும் ஒரு தற்கொலை அரசியல் தான். மேற்கு இறுதியாகக் கூட்டமைப்பினைக் கருவியாக்கி, புதிய அரசாங்கத்தினைக் கொண்டு வந்தது. புதிய அரசாங்கத்தின் கருவியாகி, தவிர்க்க முடியாது உலக முக்கியத்துவம் பெற்ற இனப்படுகொலை விவகாரத்தை இராணுவ அத்துமீறலாகவும் ஒரு தனிமனித ஒழுக்கமீறல் பிரச்சினையாகவும் குறுக்கியுள்ளார்கள். இந்தக் கருவி நிலையே நாளை அவர்கள் காணாமல் போகவும் வழிவகுத்துவிடும்.

சிங்கள அரசாங்கம் தான் போரில் வென்ற தமிழர்களைப் போராட்டத்திலும் வெற்றி கொள்வதற்கான அணுகுமுறையைக் கொண்டிருக்கின்றது. அப்படியென்றால் போரில் தோற்ற தமிழர்கள் போராட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வற்கான ஒரு நிகழ்ச்சி நிரலை வகுக்க வேண்டும்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=3&contentid=31f521fa-76f4-492c-bf77-e715c7c35435

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.