Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

டயேன் ஃபாசி

 

 
forest_3118423f.jpg
 
 
 

அமெரிக்க வனவிலங்கு ஆய்வாளர்

கொரில்லாக்கள் குறித்த ஆய்வுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த அமெரிக்க வனவிலங்கு ஆய்வாளர் டயேன் ஃபாசி (Diane Fossey) பிறந்த தினம் இன்று (ஜனவரி 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் (1932) பிறந்தார். பெற்றோர் பிரிந்ததால், தாயிடம் வளர்ந்தார். அறிவுக்கூர்மை மிக்க மாணவியாகத் திகழ்ந்தார். 6 வயதில் குதிரை ஏற்றம் கற்றார். விலங்குகளிடம் மிகுந்த பற்று கொண்டிருந்தார்.

* பள்ளிக்கல்விக்குப் பிறகு மாரின் ஜூனியர் கல்லூரியில் பயின்றார். கால்நடை அறிவியலில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விலங்கியலில் முனைவர் பட்டமும் பெற்றார். ஆகுபேஷனல் தெரபி பயின்று, பல மருத்துவமனைகளில் பயிற்சி மேற்கொண்டார்.

* மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவமனையின் இயக்குநராகப் பணியாற்றினார். அப்போது, பண்ணை முதலாளிகளின் வேண்டுகோளால், அவர்களது விலங்குகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். உலகில் உள்ள எண்ணற்ற வன விலங்குகள் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உண்டானது.

* ஆப்பிரிக்கா சென்றார். டாக்டர் லூயிஸ் லீக்கி வழிகாட்டுதலின்படி, மலை கொரில்லாக்கள் குறித்த நீண்டகால களஆய்வுப் பணியைத் தொடங்கினார். காங்கோ ஆராய்ச்சித் திட்டத்துக்காக ‘நேஷனல் ஜியாகிரபிக் சொசைட்டி’, ‘வில்கி பிரதர்ஸ் பவுண்டேஷன்’ ஆகியவற்றின் நிதியுதவியுடன் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். பின்னர், அதில் இருந்து விலகி ருவாண்டா சென்றார்.

* அங்குள்ள விருங்கா மலைப் பகுதியில் ஆய்வு மையம் நிறுவினார். சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ள மலைப் பகுதிகளில் பல ஆண்டுகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு பல சவால்களை எதிர்த்துப் போராடினார். மலைப் பிரதேச கொரில்லாக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இவர் மேற்கொண்ட பணிகளை உலகமே வியந்து பாராட்டியது.

* ‘பீனட்ஸ்’ என்று பெயரிட்டு அழைத்துவந்த ஒரு கொரில்லா தயக்கமின்றி இவரது கையைத் தொட்டது. கொரில்லா - மனித தொடர்புகளிலேயே அமைதியாக நடந்த முதல் ஸ்பரிசமாக இது பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பல கொரில்லாக்களும் இவருடன் நெருங்கிப் பழகின.

* இவரது ஆராய்ச்சிகளால், கொரில்லா குறித்த ஏராளமான பல புதிய தகவல்கள் கிடைத்தன. ‘டிஜிட்’ என்று இவர் பெயரிட்டு அழைத்த சிறு கொரில்லா கொலை செய்யப்பட்டதால், விரக்தி அடைந்தார். பின்னர், கொரில்லாக்களின் பாதுகாப்புக்கு நிதியுதவி செய்ய ‘டிஜிட் ஃபண்ட்’ என்ற அமைப்பை தொடங்கினார்.

* கொரில்லாக்களுடன் நெருங்கிப் பழகி ஏராளமான ஆய்வுகள் மேற்கொண்டார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார். அவை நேஷனல் ஜியாகிரஃபிக் இதழில் வெளியாகின. வனவிலங்கு, குறிப்பாக மலைப்பகுதி கொரில்லாக்களின் பாதுகாப்புக்காக 20 ஆண்டுகளுக்கு மேல் பாடுபட்டார்.

* ‘கொரில்லாஸ் இன் தி மிஸ்ட்’ என்ற நூலை வெளியிட்டார். இது உலக அளவில் விற்பனையில் சாதனை படைத்தது. இப்புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமும் வெற்றி பெற்று, இவருக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்தது.

* கொரில்லாக்கள் குறித்த ஆய்வுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த டயேன் ஃபாசி 1985-ல் 53 வயதில் கொலை செய்யப்பட்டார். இறந்துபோகிற, கொல்லப்படுகிற கொரில்லாக்களுக்காக ருவாண்டாவில் இவர் கட்டிய நினைவிடத்தில், ‘டிஜிட்’ கொரில்லாவின் சமாதிக்கு அருகிலேயே இவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

tamil.thehindu

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

ஸ்ட்ரீட் கிரிக்கெட் அட்ராசிட்டி!

 

26p1.jpg

சிறு வயதில் நாம் அனைவரும் கிரிக்கெட் விளையாடி இருப்போம். ஏரியா கிரிக்கெட்டில் ஐ.சி.சி விதிமுறைகளை மிஞ்சும் அளவுக்கு எக்கச் சக்க விதிமுறைகளைப் போட்டு கலாட்டா செய்திருப்போம். அங்கு நடக்கும் அட்ராசிட்டிகளைச் சொல்லவா?
26p3.jpg
காமன்மேன் : ஒரு அணிக்கு 11 பேர் என்ற `ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்' எல்லாம் `ஸ்ட்ரீட் கிரிக்கெட் ரூல்ஸ்'-ல் இல்லை. ஏரியாவில் விளையாடும்போது மொத்தம் எத்தனைப் பேர் வருவார்கள் என்று சொல்ல முடியாது. விளையாட வருபவர்களைச் சரி பாதியாகப் பிரித்து விளையாடுவதுதான் வழக்கம். இரண்டு பக்கமும் ஆள் எடுத்ததுக்குப் பிறகும் ஒரு நபர் மட்டும் கூடுதலாக இருந்தால், அவனை காமன்மேனாக விளையாட வைக்கும் கலாசாரத்தை நாம்தான் தொடங்கிவைத்தோம். காமன்மேனா இருக்கிறதுல என்ன பிரச்னைன்னா... அவனுக்கு பேட்டிங் மட்டும்தான் கிடைக்கும். பெளலிங் போட பந்தைத் தொடவே முடியாது. மற்றவர்கள் இரக்கப்பட்டால் விக்கெட் கீப்பராகி, பந்தைத் தொடும் பாக்கியம் கிடைக்கும். காமன்மேன் கடைசியாகத்தான் பேட்டிங் பிடிக்க வேண்டுமென்பது எழுதப்படாத `விதி' பாஸ். #ஆனால், நான் ரெண்டு டீம்லயும் ஓப்பனிங் பேட்ஸ்மேனா நின்னு போங்கு பண்ணி இருக்கேனே!

அம்பயர் : விளையாடவே ஆள் வராதபோது, அம்பயருக்கு எங்கே போறது? பேட்டிங் பிடிக்கும் டீமிலிருந்து யாராவது ஒரு ஆள் அம்பயராக நிற்க வேண்டும். அதற்கும் நம்ம பசங்க ஒரு ட்விஸ்ட் வெச்சாங்க. ஓப்பனிங் பேட்ஸ்மேன்ஸ் யாராவது அவுட்டானால் அடுத்து பேட்டிங் பிடிக்கப்போகும் நபர்தான் அம்பயராக நிற்க வேண்டும். பேட்டிங் பிடிக்க வேண்டுமென்ற நப்பாசையில், அம்பயராக நிற்கும் நம்ம டீம் ஆளே சீக்கிரம் விக்கெட் விழ வேண்டுமென்று எல்லாக் கடவுள்களிடமும் வேண்டிக்கொண்டிருப்பான். #நான்லாம் எல்.பி.டபிள்யூலாம் கொடுப்பேனே!26p5.jpg

பேட்டிங் பிடிக்கும் நபர் பௌலிங் போடக்கூடாது: ஒருவன் பேட்டிங்கிலும், பெளலிங்கிலும் சகலகலா வல்லவனாக இருப்பான். அப்படி இருப்பவன் நிலைமை ரொம்பப் பாவம். ஏன்னா... ஓப்பனிங் பேட்ஸ்மேனா கெத்து காட்டிட்டு, பெளலிங் போடவந்தா பெரிய கலவரமே வெடிக்கும். `பேட்டிங் புடிச்சான்ல... ஓப்பனிங் பெளலிங் போடக்கூடாது' என்று நம்ம டீமிலிருந்தே சண்டைக்கு ஆள் கிளம்பி வருவார்கள். #நான்லாம்  ஓவருக்கு 7 பால் போட்டிருக்கேனே!

அம்மா சத்தியம் : டி.வி-யில் கிரிக்கெட் மேட்ச் நடந்தால், ரீ-ப்ளே போட்டுப்பார்த்து அதை அவுட்டா, இல்லையா என்று முடிவுக்கு வருவார்கள். ஆனால் இதெல்லாம் தெருவில் விளையாடும்போது சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக ரீ-ப்ளேவை விட மிகக் கொடூரமான `மெத்தட்' ஒன்று இருக்கிறது. அதுதான் `அம்மா சத்தியம்'. பொதுவாக இந்த மாதிரியான க்ளைம், ரன் அவுட்டுகளின் போதுதான் அதிகம் நடக்கும். அது அவுட்டா இல்லையான்னு பேட்ஸ்மேனுக்கு மட்டும்தான் தெரியும். பேட்ஸ்மேன்கிட்டேயே `டேய் அம்மா சத்தியம் பண்ணு, இது அவுட் தானே?' எனக் கேட்டு முடிவை அறிவிக்கும் சாமர்த்தியம் உலகத்துலயே கிடையாது. #நான்லாம் அழுதுடுவேனே!

26p2.jpg

ஒன் பிட்ச் கேட்ச் : கிரிக்கெட்டை கிடைக்கும் சந்து பொந்தில் எல்லாம் விளையாடுவோம். அப்படி இடப்பற்றாக்குறையான இடத்தில் விளையாடும்போது `ஒன் பிட்ச் கேட்ச்' என்ற முத்தான ரூல்ஸைக் கொண்டு வருவோம். அதாவது பேட்ஸ்மேன் அடித்துப் பின்னர் அந்தப் பந்தை ஒருமுறை தரையில் குத்தவிட்டுப் பிடித்தாலும் பேட்ஸ்மேன் பெவிலியன் திரும்ப வேண்டும். #தூக்கி அடிச்சி அவுட் ஆவேனே!

சுவரில் ஸ்டம்ப் : ஸ்டம்பை வைத்து விளையாடுவதில் சிக்கல் இருக்கிறது. அதனால் சுவரில் கரியால் மூன்று கோட்டை வரைந்து ஸ்டம்ப் உருவாக்கி, விளையாடிக்கொண்டிருப்போம். போல்டாகி விக்கெட் விழுந்தால், `இதோ பார்... பந்துல கரியோட அச்சு இருக்கு. இது அவுட்தான்' என்ற வாக்குவாதங்களெல்லாம் செம ஜாலியாக நடக்கும். #நான் எச்சி தொட்டு அழிச்சிடுவேனே!

பந்தை அடித்தவன்தான் எடுத்து வரணும் : விளையாடும் இடத்தைச் சுற்றிலும் வீடுகளாகத்தான் இருக்கும். விளையாடும் சமயத்தில் யாராவது பந்தை வீட்டுக்குள் அடித்துவிட்டால், அவனேதான் அந்த வீட்டில் இருப்பவர்களிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடி பந்தை வாங்கி வர வேண்டும். அப்படி இல்லையென்றால், பேட்ஸ்மேன்தான் புது பந்து வாங்கித் தர வேண்டும். எதற்கும் சரிவரவில்லையென்றால் பந்தை அடிச்சவனை அடுத்த மேட்ச்ல ஊரைவிட்டு ஒதுக்கி வெச்சிருவாங்க. #பல்பை உடைச்சிருக்கேனே!26p4.jpg

லாஸ்ட் பால் சிங்கிள்ஸ் : இந்த அட்ராசிட்டியானது மிக அதிக அளவில் நடக்கும். ஒரு ஓவர் முழுக்க தானே ஆட வேண்டும் என்ற `நல்லெண்ணம்' கொண்ட ஆள், ஐந்து பந்தையும் ஆடி முடித்துவிட்டு கடைசி பந்தில் சிங்கிள்ஸ் அடித்து ஸ்ட்ரைக்கை மாற்றிவிட ஓடி வருவான். ஆனால் நம்ம பசங்கதான் தெளிவாச்சே! `சிங்கிள் வேணாம் மச்சான்'னு சொல்லி நின்றுவிடுவான். அது ஆட்டத்தின் எவ்வளவு முக்கியமான ரன்னாக இருந்தாலும் சரி. நம்ம பய ஒரு இன்ச் நகர மாட்டான். #பலவாட்டி பண்ணி இருக்கேனே!

இன் ஆர் அவுட் : டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்பது வழக்கம். ஆனால், அப்போது ஒருவரிடமும் ஒரு ரூபாய்கூட இருக்காது. அப்படியே இருந்தாலும் எங்கே டாஸ் போடும்போது ஆட்டையைப் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் வெளியில் எடுக்காமல் கள்ள மெளனம் சாதிப்பார்கள் சிலர். அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இந்த முறை பயன்படுத்தப்படும். கட்டை விரலுக்கும் கைக்கும் நடுவில் ஒரு சிறிய கல்லை வைத்து இன் ஆர் அவுட் என்று கேட்பதும், சிறிய கல்லில் எச்சில் துப்பி டாஸ் போடுவது தமிழ்நாட்டு கலாசாரம். #ஆட்டையப் போட்டிருக்கேனே!

ஜெயிக்கிறவன் ஃபர்ஸ்ட் : காலையில் ஆரம்பிக்கும் ஆட்டம் மாலையானால்தான் ஓயும். அப்படித் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில், குறைந்தது மூன்றுக்கும் மேற்பட்ட ஆட்டங்களாவது நடக்கும். அதனால் யார் முதலில் பேட்டிங் பிடிப்பது என்ற கேள்வி வரும். அதைச் சரி செய்யும் வகையில்தான் இந்த ரூல். ஒரு மேட்ச் மட்டும் டாஸ் போட்டு முடிவு செய்துவிட்டு, அதற்குப் பின்வரும் ஆட்டத்தில் முந்தைய மேட்சில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள்தான் அடுத்த மேட்சில் முதலில் பேட்டிங் பிடிக்கத் தகுதியானவர்கள். இதற்காகவே ஜெயித்தாக வேண்டுமென்று உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள். #ஆடி இருக்கேனே!

Link to comment
Share on other sites

இமயமலையின் குழந்தை துறவியர் (புகைப்படத் தொகுப்பு)

 
 
15 ஆம் நூற்றாண்டு திக்செ மடாலத்தில் குழந்தை துறவியர்
 

இமயமலையின் உயரமான இடத்தில், உயர் மலைத்தொடர்கள் என்று அறியப்படும் லடாக்கில் லேக்கு அருகிலுள்ள 15 ஆம் நூற்றாண்டு திக்செ மடாலத்தில் மெரூன் நிறத்தில் ஆடைகள் அணிந்த இளம் புகுமுக துறவியர் பாடங்களை கற்று கொள்கின்றனர். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய எல்லையில், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதி இதுவாகும்.

    15 ஆம் நூற்றாண்டு திக்செ மடாலத்தில் குழந்தை துறவியர்

பாறையில் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள வெள்ளை அடிக்கப்பட்ட பாதுகாப்பு அரண் கொண்ட, மலைத்தொடர்களுக்கு அப்பால்,சிந்து வெளி பள்ளத்தாக்கு முழுவதையும் பார்க்க்க்கூடிய நெஞ்சை அள்ளும் காட்சிகளோடு அமைந்துள்ள திக்செ, திபெத்திய பௌத்த மதத்தின் "மஞ்சள் தொப்பி" அல்லது கெலுக்பா பிரிவோடு இணைந்திருக்கும் ஒரு மடாலய சமூகத்தின் தாயகமாகும்.

15 ஆம் நூற்றாண்டு திக்செ மடாலத்தில் குழந்தை துறவியர் 

திபெத்திய பௌத்தம் என்பது தாயகத்தில் இருந்து நாடு கடந்த நிலையில் கடைபிடிக்கப்படும் மதமாகும். திபெத் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவு இதுவாகும். தங்களுடைய கலாசாரம், மொழி மற்றும் மதம் பற்றி கற்றுகொள்ள இந்தியாவில் வாழும் திபெத்திய குடும்பங்கள் தங்களின் குழந்தைகளில் ஒன்றையாவது இந்த மடாலயத்திற்கு அனுப்பி வருகின்றன.

15 ஆம் நூற்றாண்டு திக்செ மடாலத்தில் குழந்தை துறவியர்

15 ஆம் நூற்றாண்டு திக்செ மடாலத்தில் குழந்தை துறவியர்

15 ஆம் நூற்றாண்டு திக்செ மடாலத்தில் குழந்தை துறவியர்

 

திபெத்திய பௌத்த மதத்தை புரிந்து கொள்ளுவதற்கு காட்சி உதவிக் கருவிகள் மிகவும் பிரபலம். படங்கள், பல்வேறு வித அமைப்புக்கள், பொது பிரார்த்தனை சக்கரங்கள், கொடிகள் ஆகியவை உலகில் ஆன்மீக சக்தி எப்போதும் இருப்பதை நினைவூட்டுகின்றன.

    15 ஆம் நூற்றாண்டு திக்செ மடாலத்தில் குழந்தை துறவியர்

தனிப்பட்ட ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கும் பாரம்பரியத்தை கொண்டது பௌத்தம். கடவுள்கள் அல்லது தேவதைகளை பௌத்தவர்கள் வணங்காமல், வாழ்க்கையின் உண்மையான இயல்பில் ஆழமான உள்ளுணர்வு பெறுவதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

15 ஆம் நூற்றாண்டு திக்செ மடாலத்தில் குழந்தை துறவியர்  15 ஆம் நூற்றாண்டு திக்செ மடாலத்தில் குழந்தை துறவியர்    http://www.bbc.com

 

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று...

ஜனவரி - 17

 

1377 : பாப்பரசர்; பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை ரோமுக்கு மாற்றினார்.

 

1524 : இத்தாலிய நாடுகாண் பயணி ஜியோவன்னி டா வெரசானோ சீனாவுக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார்.

 

1595 : பிரான்ஸின் நான்காம் ஹென்றி ஸ்பெயினுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தார்.

 

1648 : இங்கிலாந்தின் லோங் நாடாளுமன்றம் முதலாம் சார்ள்ஸுடனான தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தின் உள்நாட்டுப் போர் இரண்டாம் கட்டத்தை அடைந்தது.

 

1773 : கெப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியரானார்.

 

886varalru-17-01-2017a.gif1819 : சைமன் பொலிவர் கொலம்பியக் குடியரசை அறிவித்தார்.

 

1852 :  தென் ஆபிரிக்காவின் டிரான்ஸ்வால் போவர் குடியேற்றங்களை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.

 

1893 : ஹவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் அரசி லிலியோகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.

 

1899 : பசிபிக் பெருங்கடல் பகுதியில் வேக் தீவை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது.

 

1917 : வேர்ஜின் ஐலன்ட் எனும் தீவுகளுக்காக 25 மில்லியன் டொலர்களை  டென்மார்க்குக்கு ஐக்கிய அமெரிக்கா கொடுத்தது.

 

1928 : போல்ஸ்விக் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.

 

1945 : இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வோர்சா நகரைக் கைப்பற்றின.

 

1945 : சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து ஜேர்மனிய நாசிகள் வெளியேற ஆரம்பித்தன.

 

1946 : ஐ.நா. பாதுகாப்பு சபை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.

 

1951 : சீன மற்றும் வட கொரியப் படையினர் தென்கொரியாவின் சியோல் நகரைக் கைப்பற்றினர்.

 

1961 : கொங்கோ ஜனநாயகக் குடியரசின் பிரதமர் பாட்ரிஸ் லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

1991 : முதலாவது வளைகுடா போரில் ஈராக்குக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் பாலைவனப் புயல் எனும்  தரைவழித் தாக்குதல் ஆரம்பமாகியது.

 

1995 : ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிச்டர் பூகம்பத்தில் 6,434 பேர் கொல்லப்பட்டனர்.

 

1998 : அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் வெள்ளை மாளிகை ஊழியரான மோனிகா லுவின்ஸ்கிக்கும் இடையிலான பாலியல் விவகாரம் இணையத்தளம் ஒன்றின் மூலம் அம்பலமாகியது.

 

2001 : கொங்கோவில் எரிமலையொன்று வெடித்ததால் சுமார் 4 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.

 

2008 : பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானமொன்று லண்டனில் தரையிறங்கும்போது பாரிய சேதமடைந்தது. இதனால் 47 பேர் காயமடைந்தனர். போயிங் 777 விமானமொன்று பாவனைக்கு உதவாத வகையில் சேதமடைந்தமை இதுவே முதல் தடவையாகும்.

 

2010 : நைஜீரியாவில் மத ரீதியான வன்முறைகள் மூண்டன. இதனால் சுமார் 200 பேர் உயிரிழந்தனர்.

metronews.lk
Link to comment
Share on other sites

அன்னப்பறவையினால் 3.2 கி.மீ தூரம் மெதுவாக நகர்ந்த ரயில் (வீடியோ இணைப்பு)
 

அன்­னப்­ப­றவை ஒன்­றினால் ரயி­லொன்றின் பயணம் தாம­த­மான சம்­பவம் பிரிட்­டனில் இடம்­பெற்­றுள்­ளது.  

 

21838swann.gif

 

சௌத் வெஸ்ட் ட்ரெய்ன் நிறு­வ­னத்தின் ரயி­லொன்று டெடிங்டன் நக­ரி­லி­ருந்து லண்­டனை நகரை நோக்கி புறப்­பட்­டது. 

 

இந்த ரயில் பய­ணித்த தண்­ட­வா­ளத்தில் அன்­னப்­ப­ற­வை­யொன்று நடந்து சென்­றது. அப்­ப­ற­வையின் மீது மோது­வதை தவிர்ப்­ப­தற்­காக ரயிலை சாரதி மெது­வாக இயக்­கினார்.

 

இதனால்  மணித்­தி­யா­லத்­துக்கு சுமார் 3.2 கிலோ­மீற்றர் (2 மைல்) வேகத்தில் சுமார் 3 கிலோ­மீற்றர் தூரம் ரயில் ஊர்ந்து சென்­றது. 

 

லண்டன் கிங்ஸ்டன் ரயில் நிலை­யத்தை இந்த ரயில் அடைந்­த­போது ரயி­லுக்கு முன்னால் ஒரு  மீற்றர் தூரத்தில் அன்­னப்­ப­றவை நடந்து கொண்­டி­ருந்­ததை சிலர் படம்­பி­டித்­துள்­ளனர். 

 

23 வய­தான டேன் பில்­லிங்ஷர்ஸ்ட் என்­பவர் இது தொடர்­பாக கூறு­கையில்,  ரயில் பய­ணிகள் பலர் லண்­ட­னுக்கு வேலைக்குச் சென்­று­கொண்­டி­ருந்­தனர். ரயில் மெது­வாக சென்­றதால் அவர்­களில் பலர் பெரும் விச­ன­ம­டைந்­தனர் எனத் தெரி­வித்தார்.

 

இந்த ரயிலில் பயணம் செய்த 20 வய­தான யுவதி ஒருவர் இது குறித்து கூறு­கையில், ரயில் மெது­வாக நகர்­வது குறித்து பய­ணிகள் பலரும்  எரிச்­ச­ல­டைந்­தனர்.

 

ஆனால், இதற்­கான கார­ணத்தை அறிந்­த­வுடன் ஒருவருக்கொருவர் இது குறித்து பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

 

வீடியோ :

 
 
.metronews.lk
Link to comment
Share on other sites

ஒரு காலைப் பொழுதை எப்படித் தொடங்கலாம்? #PositiveThoughts

 

ப்போதுதான் புத்தாண்டு வந்த மாதிரி இருக்கிறது. அதற்குள், கிட்டத்தட்ட ஒரு மாதத்தின் மத்தியில் வந்து நிற்கிறோம். என்ன செய்தோம்... என்ன செய்துகொண்டிருகிறோம் என நிதானமாக யோசிக்கக்கூட அவகாசம் தராமல், தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கின்றன நாட்கள். காலையில் கண்விழிப்பது மொபைல்போனில்... இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக கண்ணாடி பார்ப்பதுபோல் நாம் பார்த்துவிட்டு வைப்பதும் அதே மொபைல்போனைத்தான். இந்த டிஜிட்டல் யுக, அவசர வாழ்க்கைக்கு இடையில் ஒரு காலை பொழுதை எப்படி புரொடக்டிவ்வாகவும் ஆரோக்கியமாகவும் திட்டமிடுவது? சில யோசனைகள்...

காலை

* காலையில் எழுந்ததும் புன்னகையோடு எழுந்திருங்கள். `இன்று நமக்கான நாள். சிறப்பான, நல்ல விஷயங்கள் பல எனக்கு நடக்க போகின்றன்' என்ற எண்ணத்துடன் எழுந்திருங்கள். காலைச் சூரியனுக்கு, `குட் மார்னிங்’ வைக்கலாம். இதனால், கண்களுக்கும் நல்லது. வைட்டமின் டி சத்தும் கிடைக்கும். சீக்கிரம் எழுவதால், வேலைகளைச் சரியான நேரத்தில் செய்ய முடியும்.

 

* மிதமான இளஞ்சூடான நீரை அருந்துங்கள்; நீண்ட நேரம் தூங்கி எழுந்ததும் குடலுக்கு லேசான அசைவைக் கொடுத்து, மலம் கழிக்க உதவியாக இருப்பது இந்த இளஞ்சூடான நீர்தான்.

 

* எழுந்ததும் வேலைதான் செய்ய வேண்டும் என்றில்லை, பிடித்த விஷயத்தைக்கூடச் செய்யலாம். அருமையான இசையைக் கேட்கலாம். அற்புதமான ஒரு கவிதையை எழுதலாம். எது உற்சாகத்தை தருமோ, அந்த விஷயத்தைச் செய்யுங்கள்.

 

* காலையில் வீசும் இளங்காற்றை ஐந்து நிமிடங்களாவது மொட்டை மாடியிலோ அல்லது வெளி இடங்களுக்குச் சென்றோ சுவாசிக்கலாம். அருகில் உள்ள பார்க்கில், அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது நல்லது.

 

* வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய ஃபிரெஷ் ஜூஸ், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது. இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். உடலுக்கு எனர்ஜியைத் தரும்.

 

* பத்து நிமிடங்களாவது தியானம், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். அல்லது கண்களை மூடி வெறும் சுவாசத்தை மட்டும்கூட கவனிக்கலாம்.

 

* கோடை காலத்தில் குளிர்ந்த நீரிலும், மழை மற்றும் பனிக்காலத்தில் வெந்நீரிலும் குளிப்பது நல்லது. இதனால் உடல் ஃபிரெஷ்ஷாக, சுறுசுறுப்பாக இருக்கும்.

 

* ஒரு காகிதத்தில் அல்லது நோட்பேடில் இன்று நாம் செய்யவேண்டியவை என்னென்ன, நாளை நாம் செய்யவேண்டியவை என்னென்ன என்பதற்கான முன்னேற்பாடுகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நேற்று நாம் முடிக்காத வேலைகள் என்னென்ன என்பதையும் சரிபார்த்து முடித்துவிடுங்கள்.

 

* வேலைக்குச் செல்பவரோ, கல்லூரிக்குச் செல்பவரோ... உங்கள் கையில் ஒரு தன்னம்பிக்கைப் புத்தகம் இருக்கட்டும். நீங்கள் சோர்ந்துபோகும்போது உங்களை உற்சாகப்படுத்தி, தட்டி எழுப்புகிற புத்தகமாக இருந்தால் வெற்றி உங்களுக்குத்தான்.

 

* தவறாமல் காலை உணவைச் சாப்பிட வேண்டும். அதுவும் காலை உணவு விருந்துபோல இருக்க வேண்டும். இதனுடன் மிட் மார்னிங் ஸ்நாக்ஸை உடன் எடுத்துச் செல்லுங்கள்.

 

* அன்றைய வேலையைத் தொடங்கும்போது 'இன்று நான் சிறப்பாகச் செயல்படுவேன்' என்ற உத்வேகத்தோடு தொடங்குங்கள். வேலையில் சீரான வேகம் இருக்கட்டும். காலையில் விரைவாக வேலையைத் தொடங்கி, மதியத்தில் சோம்பலாக மாறிவிடாமல் இருப்பதும் முக்கியம்.

 

* வேலையின்போது இரண்டு பிரேக் வரை எடுக்கலாம். பசிக்கும்போது மதிய உணவை உண்ணலாம். போர் அடிக்கும்போது, காஸிப் செய்வதற்கு எனத் தனித் தனியாக பிரேக் டைமை உருவாக்கிகொள்வதால் வேலையை சிறப்பாகச் செய்ய முடியாது. வேலையைச் சரியாக செய்துவிட்டு, அதனால் ஏற்பட்ட அனுபவத்தை மனதில் தாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடுங்கள். டென்ஷன், அழுத்தம் போன்றவற்றை அலுவலுகத்தில் இறக்கிவைத்துவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள்.

 

* மாலைப்பொழுது உங்களுக்கான நேரம். அதாவது, நீங்கள் குடும்பத்துடன் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். டி.வி-யில் நாடகம் பார்ப்பதற்கான நேரம் இது கிடையாது. மாலை நேரப் பொழுதை உறவுகளுடன் அமைத்துக்கொள்ளத் திட்டமிடுங்கள்.

 

* இரவு உணவை 8-9 மணிக்குள் முடித்துவிட முயற்சி செய்யுங்கள். இரவு உணவு முடிந்த பிறகு, ஒரு மணி நேரத்தை உங்களுக்கான நேரமாக மாற்றிக்கொள்ளுங்கள். டைரி எழுதுவது, புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது என உங்களை எதிலாவது ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள்.

 

* தூங்கச் செல்வதற்கு முன்னர் இளஞ்சூடான பாலை அருந்திய பிறகு தூங்கச் செல்லலாம். `நிறைவான தூக்கம் வர வேண்டும்; காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தை விதைக்கலாம். `இன்றைய நாள் திருப்திகரமாக இருந்தது’ என மன நிறைவோடு தூங்கச் செல்லுங்கள். அப்படி இல்லையென்றாலும், உங்கள் மனதில் அப்படி நடந்தது எனக் கற்பனை செய்துகொண்டாவது தூங்கச் செல்லலாம். ஏனெனில், நேர்மறை எண்ணங்களின் சக்தி, நினைத்தவற்றை நிறைவேற்ற உதவும்.

vikatan

Link to comment
Share on other sites

“தோல்வியடைய பயப்படாதீர்கள்!” மிஷெல் ஒபாமா பிறந்தநாள் பகிர்வு #HBDMichelleObama

மிஷெல்

ர் ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண், அமெரிக்காவின் முதல் குடிமகள் ஆன சரித்திரத்தை எழுதிய மிஷெல் ஒபாமா பிறந்தநாள் வாழ்த்துகள்.

அடிமை வரலாறு கொண்ட குடும்பத்தில் பிறந்த மிஷெல், வழக்குரைஞர், சிகாகோ நகர  நிர்வாகி, சமூக தளத்தில் இயங்குபவர், அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் மனைவி என தன் வாழ்க்கையை தன்னம்பிக்கையின் கரம் பற்றி கம்பீரமாகக் கடந்துவந்திருக்கிறார். தன் இரண்டு பெண் குழந்தைகளான மலியா, சாஷாவுக்கு அம்மாவாக, 53 வயதாகும் மிஷெல் இன்னும் அழகு.

மிஷெல், மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். அமெரிக்காவின் முதல் குடிமகளாக இருந்த இந்த எட்டு வருடங்களில், குழந்தை வளர்ப்பு, பெண்களின் முன்னேற்றம், தன்னம்பிக்கை, குடிமக்கள், உறவுகள் என அவர் பகிர்ந்த வலிமையான வார்த்தைகள் பல, உலகம் குறித்துக்கொள்ள வேண்டிய முக்கியக் குறிப்புகள் ஆகின. அவற்றின் ஹைலைட் தொகுப்பு இங்கே...

* ''ஓர் இனக்குழுவாக, சௌகர்யமான ஒரு வாழ்க்கை என்பது எப்போதும் உங்களுக்கு கிடைக்காமலேயே போயிருக்கலாம். உலகின் பிரச்னைகளை எல்லாம் ஓர் இரவில் உங்களால் தீர்க்க முடியாமல் போகலாம். ஆனாலும், இந்த உலகில் உங்களின் இருப்புக்கு உள்ள முக்கியத்துவத்தை எப்போதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஏனெனில், தைரியம் எந்தளவுக்கு ஓர் ஆரோக்கிய தொற்று என்பதை வரலாறு நமக்கு பலமுறை காட்டிருக்கிறது. நம்பிக்கை தன்னைத் தானே ஜனித்துக்கொள்ளும்."

obama_13266.jpg

* ''கறுப்பின அடிமைகளால் கட்டப்பட்ட இந்த வீட்டில் நான் தினமும் கண் விழிக்கிறேன். என் மகள்களைப் பார்க்கிறேன். இரண்டு அழகான, அறிவான, கறுப்பின இளம் பெண்கள், இந்த வெள்ளை மாளிகையின் புல்வெளியில் தங்கள் நாய்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்."

* ''யாரேனும் உங்களிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்டால், நீங்களும் அதைத் திருப்பிச் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் கீழிறங்கும்போது, நாம் ஒரு படி மேலே செல்கிறோம்.''

* ''ஒவ்வொரு நாளும், சிறப்பான சரித்திரத்தை தேர்வு செய்யும் அதிகாரம் உங்கள் கைகளில் இருக்கிறது. உங்கள் மனதுக்கு, மூளைக்கு எது சரியெனப்படுகிறதோ, அதற்காகப் பேசுங்கள்.''

* ''பல பிரச்னைகளில் தியாகங்கள் இன்னும் தேவையாக இருக்கின்றன. பல வரலாறுகள் நிகழ்த்தப்பட வேண்டி இருக்கின்றன.''

* ''நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும், நம் ஒவ்வொரு செயல்பாட்டிலும், நம் குழந்தைகளால் நாம் கவனிக்கப்படுகிறோம் என்பதை நாம் அறிவோம். பெற்றோராக, நாம்தான் நம் குழந்தைகளுக்கு மிக முக்கிய ரோல் மாடல் என்பதை எந்தத் தருணத்திலும் மறக்காமல் இருப்போம்!"

* ''உலகத்தில் எந்த விஷயத்தையும்விடவும், நான் என் மகள்களைதான் அதிகமாக நேசிக்கிறேன் - என் வாழ்க்கையைவிடவும் கூட. சிலருக்கு, ஒரு வழக்குரைஞரிடம் இருந்து, அமெரிக்காவின் முதல் குடிமகளிடம் இருந்து, அம்மா என்ற பொறுப்பை அவர் தன் முதன்மையாகச் சொல்வதைக் கேட்க விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு, அம்மாவாக இருப்பதுதான் இப்போதும், எப்போதும் என் முதல் அடையாளம்!"

* ''வாஷிங்டன்னுக்கு வருவதற்கு முன்னான எங்கள் வாழ்க்கை, சின்னச் சின்ன சந்தோஷங்களால் நிறைந்தது. சனிக்கிழமைகள் விளையாட்டுப் பொழுதுகளில், ஞாயிறுகள் பாட்டி வீட்டில் என. நாள் முழுவதுமான வேலைகளில் எனர்ஜி தீர்ந்துகிடக்கும் அம்மாவான என்னை, இரவு நேரங்களில் பராக் அழைத்துச் செல்லும் டின்னர்களும் திரைப்படங்களும் ஆசுவாசப்படுத்தும்.''

* ''தினமும் காலை நான் உடற்பயிற்சி செய்யும்போது, அது எனக்கானது மட்டுமல்லாமல், என் மகள்களுக்கானதாகவும் இருக்கும். காரணம், தங்களை மிகவும் நேசிக்கும் தங்கள் அம்மா, தங்களை விழுந்து விழுந்து கவனித்துக்கொள்ளும் தங்கள் அம்மா, அவளின் உடல்நலத்தையும் பார்த்துக்கொள்கிறாள் என்பதை அவர்களை உணரவைக்க நான் விரும்புகிறேன். பிற்காலத்தில் அவர்கள் பொறுப்புகள் சூழ்ந்த பெண்களாக வளர்ந்திருக்கும்போது, முக்கியமானவையாக அவர்கள் கொள்ளவிருக்கும் பட்டியலில், தங்களையும், தங்களின் உடல் நலனையும் அவர்கள் நிச்சயம் இணைத்துக்கொள்ள வேண்டும்."

* ''நான் வொர்க்கிங் மாம் ஆக இருந்த நாட்கள், நினைவில் இருந்து மிக தொலைவில் இல்லை. எனக்குத் தெரியும், பலர் அதை ஒப்புக்கொள்ள விரும்பமாட்டீர்கள்... வீட்டு வேலைகளைச் செய்யவோ, அல்லது ஓய்வெடுக்கவோ, சில நேரங்களில் குழந்தைகளை தொலைக்காட்சி முன் சில மணி நேரங்கள் நாமே அமரவைத்துவிடுகிறோம்.''

* ''ஒவ்வொரு அம்மாவும் கடின உழைப்பாளி. ஒவ்வொரு பெண்ணும் மரியாதைக்கு உரியவர்.''

* ''பெண்களின் திறன்களை பயன்படுத்திக்கொள்ளத் தெரியாத, பயன்படுத்த முன்வராத, தன் சரிபாதி குடிமக்களான பெண்களின் பங்களிப்பில் தேக்கநிலையையே தக்கவைத்திருக்கும் எந்த ஒரு நாடும் உண்மையான முன்னேற்றம் காணாது.''

* ''இளம் பெண்களே... உங்களின் திறமைகளை புகழாத ஒரு முட்டாள் பையனோடு நேரத்தை செலவழிக்கத் தேவையில்லை. உங்களின் இணையற்ற படிப்பை விலையாகக் கொடுக்கும் அளவுக்கு அழகான, சுவாரஸ்யமான பையன் ஒருவன் இந்த உலகில் இல்லை. இளம் பெண்கள் பெறும் கல்வி, அவர்களின் நாட்டை இன்னும் பலமுள்ளதாகவும் வளமுள்ளதாகவும் ஆக்க வல்லது."

DEM2016Conventionvelu_13527.jpg

* ''வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே, தங்களைச் சுற்றியுள்ளவர்களால் அன்பாலும் அக்கறையாலும் வளர்த்தெடுக்கப்படும் பெண் குழந்தைகளுக்கு எந்தளவுக்கு முன்னேற்றம் சாத்தியம் என்பதற்கு, நான் உதாரணம்!"

* ''தன் பலத்தால் ஒரு பெண்ணை அடக்க நினைக்கும் ஆண், ஒரு கோழை. அவன் தன் குடும்பத்தின் வளர்ச்சியை மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியையும் பின்னோக்கி இழுக்கிறான்.''

* ''ஒழுக்கப் பழக்கங்களில் சரிவில் பயணித்துக்கொண்டிருக்கும் சமூகத்துக்கும், வளர்ச்சி நிலையில் இருக்கும் சமூகத்துக்குமான இடைவெளி, பெண்களுக்கு அவர்கள் தரும் முக்கியத்துவத்தில் இருக்கிறது."

* ''தோல்வி என்பது உங்கள் வாழ்கையின் தவிர்க்க முடியாத  நிலை. பின்னடைவில் இருந்து மீளும் முன்னேற்றத்தில், தவிர்க்க முடியாத ஓர் அங்கம். தோல்வியடைய பயப்படாதீர்கள்!''

* ''உங்கள் நேரத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் நீங்கள் கடிவாளம் கொண்டிருக்கவில்லை எனில், அவை இரண்டையும் மற்றவர்கள் விழுங்கிவிடுவார்கள். உங்கள் சுயத்துக்கான அக்கறையை நீங்கள் கொடுக்கவில்லை எனில், கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடம் நீங்களே முக்கியத்துவம் இழப்பீர்கள்."

* ''பயத்தின் பிடியில் எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். நம்பிக்கை, சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் முடிவெடுங்கள். எது நடக்க வேண்டும், எது நடக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் முடிவுகள் எடுங்கள்."

* ''உங்களுக்குச் சொந்தமானது என்று நீங்கள் நினைக்கும்போது மட்டுமே, அந்த வெற்றி அர்த்தமுள்ளதாகவும் கொண்டாடக் கூடியதாகவும் இருக்கும்.''

* ''என்னைப் பொறுத்தவரை, ஸ்மார்ட் ஆக இருப்பதைவிட கூலான விஷயம் உலகில் வேறில்லை.''

vikatan

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: Sonnenbrille und Text

எம்.ஜி.ஆர் 100 : கருணாநிதி நட்பு, கிரிக்கெட் ஆர்வம், படப்பிடிப்புதளப் பண்பு... 100 சுவாரஸ்ய தகவல்கள்!

எம்.ஜி.ஆர்

1. எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது 'நாடோடிமன்னன்' திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது. அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார். பின்னாளில், 'நாடோடிமன்னன்' வெற்றிபெற்று திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. பிரித்துப்பார்த்தால் முந்தைய பதிவுத்தபால் அனுப்பியவரின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தது. அதில், 'நாடோடிமன்னன்' கதை என்னுடையது. அதை, உங்களுக்கு பல மாதங்களுக்கு முன் அனுப்பிவைத்தேன். ஆனால், படத்தில் என்பெயர் இல்லை. அதனால் அதற்கு எனக்குரிய நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும் என்றிருந்தது. அதிர்ந்துபோனார் எம்.ஜி.ஆர். பிறகு, அதற்கு தம் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிவிட்டாலும், “இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்" என ஆச்சர்யமாகி அதன்பின் சந்தேகம்படும்படியான பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறுவதைத் தவிர்த்துக்கொண்டார்.

2. எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் 'சின்னவர்' என்ற பெயர். அதென்ன சின்னவர்? எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைப் பொறுப்பெடுத்து நடத்திவந்த அவரது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, நாடக உலகில் பெரியவர் என அழைக்கப்பட்டதால்... எம்.ஜி.ஆரை, 'சின்னவர்' என்பார்கள்.

3. லாயிட்ஸ் ரோட்டில்  உள்ள தாய்வீட்டில் தம் அண்ணனுடன் கூட்டுக்குடித்தனமாக இருந்த எம்.ஜி.ஆர்., தன் முதல் மனைவி சதானந்தவதி இறந்த துக்கத்தால் பின் சில மாதங்களில் ராமாவரம் தோட்டத்துக்கு வரநேர்ந்தது. அங்கும் மினி தியேட்டர், பெரிய நீச்சல்குளம் எனப் பல வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தார்.

4. எம்.ஜி.ஆரை யாரும் கணிக்கமுடியாது. அப்படி இருப்பதையே அவர் விரும்பினார். முதல்வராக இருந்தபோது ஒருமுறை  அப்போதைய கவர்னர் தடுக்கிவிழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அவரைப் பார்க்க கிளம்பியவர் என்ன நினைத்தாரோ அவருக்கு நெருக்கமான ஓர் இயக்குநரின் படத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

5. எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.

6. எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை  புகைப்படம் எடுத்துவிட முடியாது.

7. தனக்கு யாரும் மாலை அணிவித்து புகைப்படம் எடுக்கும்போது ஜாக்கிரதையாக தன் முகம் வரும்படியும், அதேசமயம் மாலை போடுபவர் பரபரப்பில் தன் தொப்பியை கழற்றிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடனும் மாலை போடுபவரின் கையை அழுந்த பிடித்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்தபின்புதான் அவருடைய கையை விடுவிப்பார். இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கை முத்தண்ணா அவர்.

8. பொதுவாக பத்திரிகைகளுக்கு பிரத்யேக பேட்டிக்கு ஒப்புக்கொள்ளும்போது அவர்களிடம் ஒரு நிபந்தனை விதிப்பார். பிரசுரமாவதற்கு முன் எழுதப்பட்ட பேட்டியை தனக்கு ஒருமுறை காட்டியாகவேண்டும் என்று. அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பேட்டி. பிரசுரமானபின் கட்டுரையாளர் கருத்தால் தேவையற்ற சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை அது. ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தன் இமேஜை அந்தளவுக்கு  ஜாக்கிரதையாகக் கையாண்டார் எம்.ஜி.ஆர்.

9. சுமார் அரைநூற்றாண்டு காலம் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த எம்.ஜி.ஆர் வார்த்தையின் முழுவிவரம்... மருதுார் கோபாலமேனன் ராமசந்திரன்.

10. திரையுலகில் தான் பங்கேற்ற அத்தனை துறைகளிலும் சாதனை புரிந்த எம்.ஜி.ஆருக்கு தம் இறுதிக்காலம் வரை ஒரு குறை இருந்தது. அது, கல்கி எழுதிய பொன்னியின்செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது. கிட்டத்தட்ட 3 முறை அதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடக்கி அது ஆரம்பநிலையிலேயே நின்றுபோனது. படம் எடுத்தால், அதில் தான் வல்லத்தரசனாகவும், கதாநாயகியாக குந்தவி கேரக்டரில் பிரபல டைரக்டர் சுப்ரமணியத்தின் மகளும்  நாட்டியக்கலைஞருமான பத்மா சுப்ரமணியத்தை நடிக்கவைக்கவும் திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். இறுதிவரை அது நிறைவேறவில்லை.

எம்.ஜி.ஆர்

11. முன்னணி நடிகராக  எம்.ஜி.ஆர்  இருந்தாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அதிக எண்ணிக்கையில் நடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தி. ஜெமினிக்கு, 'ஒளிவிளக்கு'; ஏ.வி.எம்முக்கு, 'அன்பே வா'; விஜயா வாஹினிக்கு, 'எங்க வீட்டுப்பிள்ளை' என தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். மற்றவை எல்லாம் சிறு தயாரிப்பாளர்கள் மூலம் வெளிவந்தவை. திரைத்துறையில் ஓரிரு நிறுவனங்களே ஏதேச்சதிகாரம் செய்யாமல் பலரும் இந்தத் துறைக்குள் நுழையவேண்டும் என்பதே அவரின் இந்த முடிவுக்குக் காரணம்.

12. எம்.ஜி.ஆரின் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் ஜெயலலிதா, சரோஜாதேவி.

13. எம்.ஜி.ஆர்., காபி, டீ அருந்துவதில்லை. மீன் வகையான உணவுகளுக்கு அவர் தீவிர ரசிகர். படப்பிடிப்பின் இடைவேளையில் ஜீரக தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.

14. எம்.ஜி.ஆருக்கு தன் தாய் மீது அளவற்ற அன்பு உண்டு என்பது உ லகறிந்த விஷயம். தான் சார்ந்த தொடர்பான முக்கிய முடிவுகளை தன் தாயின் படத்துக்கு முன் நின்று சொல்லியே முடிவெடுப்பார். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஏதேனும் அசம்பாவிதமாக நடந்தால் மட்டுமே எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கிவிடுவார்.

15. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கடும்மோதலில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் இந்த இருகட்சிகளும் இணைய முயற்சி  செய்யப்பட்டது.  எம்.ஜி.ஆர் அப்போது முதல்வர் என்பது கூடுதல் செய்தி. ஒடிசா முதல்வர் பிஜீ பட்நாயக் இந்த இணைப்பு முயற்சியை மேற்கொண்டார். முயற்சி வெற்றிபெற்றால் கட்சியின்  தலைவராக கருணாநிதியும் முதல்வராக எம்.ஜி.ஆரும் தொடர்வதாக நிபந்தனை விதிக்கப்பட்டது. காலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்து வீட்டுக்குச் சென்ற எம்.ஜி.ஆர் மாலையில் இந்த முயற்சியை கைவிட்டுவிட்டார். யாராலும் கணிக்க முடியாத தலைவர் எம்.ஜி.ஆர்.

16. எம்.ஜி.ஆரின் அரிய வெள்ளை நிறத்துக்குக் காரணம் அவர் தங்கபஷ்பம் சாப்பிடுவதே என்ற வதந்தி உலவி வந்தது. சென்னையில் நடந்த ஆணழகன் போட்டி ஒன்றில் இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர், “தங்க பஷ்பத்தை குண்டுமுனையில் தொட்டு அதை பாலிலோ, நெய்யிலோ கலந்து சாப்பிடுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அப்படி குண்டூசி முனையைவிடக் கூடுதலாகச் சாப்பிட்டுவிட்டால் மரணம் நேர்ந்துவிடும். இந்த விஷப் பரீட்சையில் யாராவது இறங்குவார்களா'' என்றார்.

17. எம்.ஜி.ஆர் இறுதிவரை தொடர்ந்த பழக்கம் உடற்பயிற்சி. படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவு எத்தனை மணிநேரத்துக்கு வீடு திரும்பினாலும் விடியற்காலை 5 மணிக்கு எழுந்துவிடுவார். தொடர்ந்து ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தபின்னரே அடுத்த வேலையைத் தொடங்குவார். படப்பிடிப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது பெரும்பாலும் போதிய உடற்பயிற்சிக் கருவிகளை தன்னுடன் எடுத்துச்செல்வார். உடற்பயிற்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்தவர் அவர்.

18. தமிழின் முதல் ஈஸ்ட்மென் கலர் படம், எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்.'

19. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்... காங்கிரஸ் அரசு, மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு தனக்களித்த பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்தார் எம்.ஜி.ஆர்.

20. எம்.ஜி.ஆருக்கு பிடித்த தேசியத்தலைவர் சுபாஷ் சந்திரபோஸ். தான் அரசியலுக்கு வரக்காரணமான தலைவர் சுபாஷ் என்று  குறிப்பிட்டிருந்தார் ஒருபேட்டியில்.

கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர்

21. எம்.ஜி.ஆருக்கு நினைவுத்திறன் அதிகம். ஒரே ஒருமுறை அறிமுகமானாலும் அவரைப்பற்றி பல ஆண்டுகள் ஆனப்பின்னரும் சரியாக நினைவில் வைத்திருப்பார்.

22. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அண்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. சில காரணங்களால் நடிக்க மனம்ஒப்பாத எம்.ஜி.ஆர்., கணேசன் என்ற நாடக நடிகரை அதில் நடிக்கவைக்க பரிந்துரைத்தார். நாடகம் வெற்றிபெற்றது. கணேசன் என்ற அந்த நாடக நடிகர் சிவாஜி கணேசன் என்ற பெரும் நடிகரானார்.

23. சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தபோதும் தொடர்ந்து தனது எம்.ஜி.ஆர்  நாடக மன்றம் மூலம் நாடகங்களை நடத்திவந்தார் எம்.ஜி.ஆர்.  அவருடைய  'இடிந்தகோயில்', 'இன்பக்கனவு' நாடகங்கள் தமிழகத்தில் நடக்காத ஊர்கள் இல்லை.

24. தொலைக்காட்சி தமிழகத்தில் வராத காலகட்டத்திலேயே ''தொலைக்காட்சி என்ற ஒன்று விரைவில் வரும். இது சினிமாவின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்'' என்று 1972-லிலேயே பேசிய தீர்க்கதரசி எம்.ஜி.ஆர்.

25. எம்.ஜி.ஆரை, பலருக்கும் வெறும் சினிமா நடிகர் என்ற அளவில்தான் தெரியும். ஆனால் சினிமாவின் அத்தனை  தொழில்நுட்பங்களையும் கரைத்துக் குடித்தவர் அவர். எத்தனை குழப்பமான காட்சிகளையும் சில நிமிடங்களில் கோர்வையாக எடிட் செய்துவிடுவதில் சாமர்த்தியக்காரர்.

26. எம்.ஜி.ஆருக்கு பிடித்த இயக்குநர் ராஜா சாண்டோ.

27. 1960-களில் எம்.ஜி.ஆர்  மக்களுக்காக தன் சொந்த செலவில் இலவச மருத்துவமனையை நடத்தியிருக்கிறார். ஆனால் நடைமுறை சிக்கல்களால் அதை தொடரமுடியாமல் போனது.

28. எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர் என்பது பலரும் அறியாத தகவல். 'சமநீதி' என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்து பல ஆண்டுகள் அதை நடத்தினார்.

29. மறைந்து 30 ஆண்டுகள் ஆன பின்னாலும் இன்னும் தொடர்ந்து பத்திரிகைகள் வருவது எம்.ஜி.ஆர் ஒருவருக்கே.

30. ''வயதானபின்னும் கதாநாயகனாக நடிக்கிறீர்களே'' என பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுந்தபோது, ''20 வயதுள்ள ஒருவர் 50 வயதுக்காரராக நடிப்பதை கைதட்டி வரவேற்கிறீர்கள் அல்லவா...அதேபோல் 50-ஐக் கடந்த நான் 20 வயது இளைஞனாக நடிப்பதை ஏன் வரவேற்கக்கூடாது. அதுதானே நடிப்பு..நீங்கள் திரையில் பார்க்கும்போது இளைஞனா தோன்றுகிறேனா... இல்லையா என்பதுதான் என் கேள்வி“ என்றார் பொட்டிலடித்தாற்போல்.

பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர்

31. தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து கட்சி தொடங்கியபின் 1972 அக்டோபர் 29-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் முதன்முறையாக, ''எம்.ஜி.ஆர் இனி புரட்சி நடிகர் அல்ல, புரட்சித்தலைவர்'' என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி.

32. கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்தபின் எத்தனை மாச்சர்யங்களுக்கிடையிலும் சட்டமன்றம் நடைபெறும் நாட்களில் கருணாநிதியை நலம் விசாரிப்பார் எம்.ஜி.ஆர்.

33. பெரும்பாலும் தன் எதிரில் சீனியர்களைத் தவிர மற்றவர்களை கருணாநிதி என்று பெயர் சொல்லிக் குறிப்பிடுவதை விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர்.

34. எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காத ஒரு விஷயம் குதிரையேற்றமும் விமானப்பயணமும். தவிர்க்கமுடியாமல்தான் சில படங்களில் அவ்வாறு நடித்திருப்பார். விமானப்பயணமும் அப்படியே.

35. தம் இறுதிக்காலத்தில் தம் பால்ய கால சினிமா நண்பர்களை வரவழைத்துச் சந்தித்துப்பேசினார் எம்.ஜி.ஆர்.

36. எம்.ஜி.ஆருக்கு  உடலுறுதியைப்போலவே மனஉறுதி அதிகம்.  அமெரிக்காவில் அவருக்கு  சிகிச்சையளித்த டாக்டர் கானுக்கு பாராட்டுவிழா நடந்தது. அதில் பேசிய கானு, “எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாராவது இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால் மீண்டிருக்க வாய்ப்பு இல்லை. அத்தனை மன உறுதியுடன் அவர் போராடி மீண்டார்” என்றார்.

37. 'திருடாதே', 'தாய் சொல்லை தட்டாதே' என தனது படங்களின் தலைப்புகள்கூட பாசிட்டிவ் ஆக மக்களுக்கு ஒரு கருத்தைச் சொல்வதுபோல் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் எம்.ஜி.ஆர்.

38. எம்.ஜி.ஆருக்கு ராசி எண் 7. பிறந்தது 1917. கதாநாயகனாக நடித்த முதல் படம் வெளியான ஆண்டு 1947. முதல்முறை எம்.எல்.ஏ-வானது 1967. ஆட்சியைப் பிடித்தது 1977. மரணமடைந்தது 1987. அவருடைய காரின் எண் 4777.

39. பொதுவாக தன் உடல்நிலை குறித்த தகவல்களை ரசகியமாக வைத்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். தேவைப்பட்டாலொழிய மருத்துவமனைக்குச் செல்லமாட்டார் அவர். பெரும்பாலும் மருத்துவ  உபகரணங்களை வீட்டுக்கே வரவழைத்து சிகிச்சை பெற்றுக்கொள்வார்.

40. 'அடிமைப்பெண்' படத்துக்காக ஜெய்ப்பூர் சென்றபோது விளையாட்டாக வித்தியாசமான தொப்பி ஒன்றை அணிந்து நண்பர்களிடம் காட்டினார்.  தொப்பியில் அவரது தோற்றம் இளமையாக தெரிவதாக நெருக்கமான சிலர் கூறவே அதை வழக்கமாக்கிக்கொண்டார்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா

41. எம்.ஜி.ஆரின் புரட் சி அரசியல் பயணம் தொடங்கிய இடம் திருக்கழுக்குன்றம். அங்குதான் முதன்முதலாக கட்சியின் தலைவர்களிடம் கணக்குக்கேட்டு வெளிப்படையாகப் பேசினார்.  இந்த விவகாரம்தான்  எம்.ஜி.ஆர் - கருணாநிதி இடையே முரண் பெரிதாகி... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் அளவுக்குக் காரணமானது.

42. ஒருமுறை சிவகாசிக்குச் சென்று சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரது காரை அடையாளங்கண்டுகொண்டு பெண்கள் சூழந்தனர். அவர்களுடைய பலரது கைகளில் கைக்குழந்தைகள். ''காலையில் சாப்பிட்டீர்களா'' என்றார். “இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. அதுதான் மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம்” என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது.

43. எம்.ஜி.ஆர் முப்பிறவி கண்டார் என்பார்கள். சீர்காழியில் நாடகம் ஒன்று நடந்தபோது 150 பவுண்டுக்கும் அதிகமான எடைகொண்ட குண்டுமணி தவறுதலாக அவர் மீது விழுந்து கால் உடைந்தது முதற்பிறவி. 1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தன் வீட்டில் வைத்து நடிகர் எம்.ஆர்.ராதாவினால் சுடப்பட்டது இரண்டாவது பிறவி. 1984-ல் மூளையில் கட்டி ஏற்பட்டு பக்கவாதம் வரை சென்று உயிர் மீண்டது மூன்றாவது பிறவி.

44. எம்.ஜி.ஆர் புகழின் உச்சியில் இருந்துபோது வெளியான, 'பாசம்' படத்தில் இறந்துவிடுவதுபோல் காட்சி வந்தது. அதைக் காண முடியாமல் பலர் அந்தப் படத்தைப் பார்க்கவி்ல்லை. படம் தோல்வியைத் தழுவியது.

45. எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்கள் செல்லமாக வைத்த பெயர் 'வாத்தியார்.'

46. நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு அளப்பரியது. சங்கம் தொடங்கியபோது அதன் துணைத்தலைவராக இருந்த அவர்,  3 முறை அதன் செயலாளராகவும், ஒருமுறை பொதுச்செயலாளராகவும், இருமுறை தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

47. 'நாடோடி மன்னன்' பட வெற்றிக்குப்பின், அதன் அடுத்த பாகமாக 'நாடோடியின் மகன்' என்ற பெயரில் படம் ஒன்று தொடங்கப்பட்டது. பின்னர் ஏனோ அது நின்றுவிட்டது.

48. 'சதி லீலாவதி' முதல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்கள் 136. இதுதவிர  சில படங்கள் நிறைவுபெறாமல் கைவிடப்பட்டன. இவற்றில் 'அவசர போலீஸ் 100', 'நல்லதை நாடு கேட்கும்' போன்ற படங்கள் பின்னாளில் வெளியாகின.

49. எம்.ஜி.ஆரின் படங்களில் பெண்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த ஒரே படம் 'இதயக்கனி'.

50. ஜனாதிபதி விருது பெற்ற தமிழின் முதல்படம் எம்.ஜி.ஆர் நடித்த 'மலைக்கள்ளன்'.

எம் ஜி ஆர்

51. எம்.ஜி.ஆர் படங்களில் மிகக் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் 'தேர்த்திருவிழா'. 16 நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது.

52. எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர் மற்றும் நண்பர் சாண்டோ சின்னப்பா. எம்.ஜி.ஆர் - ஜானகி திருமணத்துக்குச் சாட்சிக் கையெழுத்திட்டது இவர்தான்.

53. எம்.ஜி.ஆர்  தனக்கு நெருக்கமானவர்களை 'முதலாளி' என்றுதான் அழைப்பார்.

54. எம்.ஜி.ஆருக்குப் பிடித்த விளையாட்டு சீட்டு. நெருக்கமானவர்களுடன் விளையாடும்போது தோற்பவர்கள் தங்கள் முகத்தை தலையணையால் கொஞ்ச நேரம்  பொத்திக்கொள்ள வேண்டும். இதுதான் அவரது பந்தயம்.

55. பொங்கல் மற்றும் நல்ல நாட்களில் தன்னிடம் வேலை பார்ப்பவர்கள், நண்பர்களை வரவழைத்துத் தன் கையில் இருப்பதை வாரி வழங்குவார் எம்.ஜி.ஆர்.

56. தமிழின் வெளிநாட்டு தொழில்நுட்பமான ஸ்டிக்கர் போஸ்டரை அறிமுகப்படுத்தியது எம்.ஜி.ஆர்தான். 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து வெளியேறியிருந்தார். இதனால் உசுவா பட போஸ்டர்கள் எங்கு ஒட்டினாலும் கிழிக்கப்படும் என்ற  தகவல் பரவியது. ஆளும் கட்சியினரின் இந்தச் சதியை முறியடிக்க நடிகர் பாண்டுவை வெளிநாட்டுக்கு அனுப்பி சாதாரணமாகக் கிழித்துவிட முடியாத வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர் தொழில்நுட்பத்தைப் பயிலச்செய்து அந்த இயந்திரத்தையும் தருவித்தார். ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை கிழிக்கமுடியாமல் ஆளும் கட்சியினர் திணறினர். 'உலகம் சுற்றும் வாலிபன்' சக்கை போடு போட்டது.

57. தொப்பி, கண்ணாடி, முழங்கை அளவு சட்டை என்று வெளியில் தோன்றினாலும் தன்னை வீட்டில் சந்திப்பவர்கள் முன் கைலி, முண்டா பனியனுடன்தான் காட்சியளிப்பார் எம்.ஜி.ஆர்.

58. தன்னிடம் வேலை செய்பவர்கள் தவறு செய்தால் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டார். அவர்களுக்கு உடனடியாக சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். ஆனால் சம்பளம் தவறாமல் அவர்களுக்குச் சென்றுவிடும். இது தவறு செய்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி அடுத்தமுறை தவறு நேராமல் பார்த்துக்கொள்வர்.

59. எம்.ஜி.ஆர்  தன் வாழ்க்கை வரலாற்றை வெவ்வெறு காலகட்டங்களில் இரண்டு பத்திரிகைகளில் எழுதினார். ('ஆனந்த விகடன்', 'சமநீதி') தவிர்க்கவியாத காரணங்களால் எதுவும் முற்றுப்பெறவில்லை.

60. தனது இரண்டாவது மனைவி சதானந்தவதியின் நினைவுநாள் அன்று எம்.ஜி.ஆர்  விரதம் மேற்கொள்வார்.

எம்.ஜி.ஆர்

61. எம்.ஜி.ஆர் ஒரு தீவிர படிப்பாளி என்பது பலருக்கும் தெரியாத தகவல். தன் வீட்டின் கீழறையில் எம்.ஜி.ஆர் பெரிய நுாலகத்தை நிறுவியிருந்தார். அதில் உலகத்தலைவர்கள் மற்றும் அனைத்து அரியவகை புத்தகங்களையும் சேமித்துவைத்திருந்தார்.

62. எம்.ஜி.ஆரின் முதல் நாடக குரு காளி என்.ரத்தினம். பின்னர் நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி.

63. எம்.ஜி.ஆர் நாடகத்தில் போட்ட முதல்வேஷம், 'லவகுசா' என்னும் நாடகத்தில் போட்ட குஷன் வேஷம். அப்போது அவருக்கு வயது 6.

64.  எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதற்நாடகம் 'மனோகரா'... மனோகரன் வேடம்.

65. அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., தி.மு.க-வில் சேர்ந்த ஆண்டு 1952 . அவரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியவர் நடிகமணி டி.வி.நாராயணசாமி.

66. வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டால் எம்.ஜி.ஆர் தன் தாயாரை வணங்கிவிட்டுத்தான் செல்வார். அவர் மறைவுக்குப்பின், அவருக்கு தன் வீட்டிலேயே கோயில் ஒன்றை எழுப்பினார். 

67. நடிகர் சங்கம் மூலம் ஒரு நடிப்புப் பயிற்சிக் கல்லுாரியைத் தொடங்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆருக்கு இறுதிக்காலம் வரை மனிதில் இருந்த ஓர் ஆசை... அது இறுதிவரை நிறைவேறாதது துரதிர்ஷ்டம்.

68. தான் நடித்த படங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகப் பிடித்த படம், 'பெற்றால்தான் பிள்ளையா'.. வழக்கமான பாணியிலிருந்து விலகி தான் நடித்த இந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்தபடம் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

69. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தன் வழக்கமான அடையாளங்கள் எதுவும் தெரியாதபடி தன் பிளைமவுத் காரை தானே ஓட்டியபடி கடற்கரைச் சாலையில் பயணிப்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

69. நடிகராக இருந்தபோது தான் வசித்த ராமாவரம் வீட்டிலேயே முதல்வரானபின்னும் தொடர்ந்து வசித்தார் எம்.ஜி.ஆர். சம்பிரதாயத்துக்குக்கூட அந்த வீட்டை மெருகேற்றாமல் எளிமையாக அப்படியே வைத்துக்கொண்டார்.

70. முதல்வரானபின் ஒருசமயம் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்தது எம்.ஜி.ஆருக்கு. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களாலும், மத்திய அரசிடமிருந்து வந்த நெருக்கடியினாலும் அந்த ஆர்வத்தைக் கைவிட்டார். அவர் கைவிட்ட அந்தப் படம், 'உன்னைவிடமாட்டேன்'. அதன் இசையமைப்பாளர் இளையராஜா.

எம்.ஜி.ஆர்

71. தன் கலையுலக வாரிசு என்று எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கபட்ட நடிகர் பாக்யராஜ்.

72. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை 'அம்மு' என்றே அழைப்பார்.

73. எம்.ஜி.ஆர் அறிமுகமான, 'சதிலீலாவதி' படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன்.

74. தனது திருமண நாளில் எந்த வெளிநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிடுவார். அன்றைய தினம்  மனைவி ஜானகி மற்றும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை மட்டுமே சந்திப்பார். அன்று ஒருநாள் மட்டுமே கைகள் மற்றும் கழுத்தில் நகை அணிந்து காணப்படுவார்.

75. எம்.ஜி.ஆர் வரலாற்று அறிவு நிரம்பியவர். முதல்வராக இருந்த ஒருசமயம், தஞ்சை அரண்மனையைப் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் ''இங்கு சுரங்கப்பாதை ஏதேனும் இருக்கிறதா'' என விசாரித்தார். அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் விடாப்பியடியாக தர்பார் ஹால் அருகே ஓர் இடத்தைக் காட்டித் தோண்டச்செய்தார். ஆச்சர்யம் அங்கு சுரங்கப்பாதை  இருந்தது. எம்.ஜி.ஆரின் ஞானத்தை அறிந்து விக்கித்தனர் அதிகாரிகள்.

76. எம்.ஜி.ஆர் தீவிரமான ஒரு கிரிக்கெட் ஆர்வலர் என்பது பலரும் அறியாத தகவல். முக்கியப் போட்டிகள் நடக்கும் சமயம் படப்பிடிப்புக்கு மறக்காமல் டிரான்சிஸ்டர் ஒன்றை எடுத்துச்செல்வார். ஓய்வின்போது அதை காதில் வைத்து ரன்னிங் கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருப்பார்.

77. படப்பிடிப்புக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது கடைசி நாளன்று அனைவருக்கும் அங்கு பர்சேஸ் செய்ய தன்சொந்த பணத்தைத் தருவார்.

78. படப்பிடிப்பின்போது உணவுவகைகள் தனக்குக் கொடுக்கப்பட்டதுபோலவே யூனிட்டின் கடைநிலை ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்துவார்.

79. சட்டமன்றத்தில் ஒருமுறை துரைமுருகன் எம்.ஜி.ஆரை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டேபோக ஒரு கட்டத்தில், மயக்கமாகி விழப்போனார். எம்.ஜி.ஆர் ஓடோடிச்சென்று அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார். சங்கடப்பட்டுப்போனார் துரைமுருகன்.

80. படிக்கும் காலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்ப்பு மகன்போல உடனிருந்தார் துரைமுருகன். அவருடைய படிப்புச்செலவு உள்ளிட்ட செலவுகளை அப்போது கவனித்தவர்  எம்.ஜி.ஆர். கல்லூரியின் பாதுகாவலர் என்ற முறையில் எம்.ஜி.ஆரே பலமுறை துரைமுருகனுக்கு கையெழுத்திட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா

81. கோவை மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்கச்சென்றபோதுதான் கருணாநிதியுடன் அறிமுகம் ஏற்பட்டது எம்.ஜி.ஆருக்கு.

82. 'எங்கள் தங்கம்' படத்தில் 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற பாடலில் அடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞருக்கு, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என அடுத்த வரியை எடுத்துக்கொடுத்தவர் கருணாநிதி. அதே படத்தில் 'நான் செத்துப்பிழைச்சவன்டா'  பாடலில் கருணாநிதியின்  கல்லக்குடி போராட்டம் இடம்பெறும்வகையில்,
“ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது“ என்ற கலைஞரின் புகழ்பாடும் வரிகளை இடம்பெறச்செய்தார் எம்.ஜி.ஆர்.

83. எம்.ஜி.ஆருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததை சட்டமன்றத்தில் விவாதப்பொருளாக்கிக் கடுமையாக எதிர்த்துப்பேசினார் தி.மு.க உறுப்பினர் துரைமுருகன். தேநீர் இடைவேளையில் அவரை அழைத்த கருணாநிதி, “எம்.ஜி.ஆரை ஆயிரம் விஷயங்களுக்காக நான் எதிரக்கலாம். விமர்சிக்கலாம். ஆனால் நீ அதைச் செய்வது ஏற்புடையதல்ல. நன்றி மறக்காதே“ என கடிந்துகொண்டார். கூடவே “எம்.ஜி.ஆர் மீது நமக்கு ஆயிரம் மாச்சர்யங்கள் இருந்தாலும் அவரது வள்ளல் குணத்தினை நாம் குறைசொல்ல முடியாது. அந்த ஒரு விஷயத்துக்காக அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை ஏற்கலாம்” என்று அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

85. நாத்திக கட்சியான தி.மு.க-வில், அண்ணாவின் காலத்திலேயே எம்.ஜி.ஆர் தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொண்டதில்லை. அதற்காக தீவிர ஆத்திகர் என்று சொல்லிவிட முடியாது. தனக்கு மேலே ஒரு சக்தி ஒன்று உண்டு என்பதில் அவர் திடமாக இருந்தார்.

86. திருப்பதிக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கும் 2 முறை சென்றிருக்கிறார். மதுரையில், 'நாடோடி மன்னன்' படத்துக்காக தனக்கு அளிக்கப்பட்ட தங்க வாளை பின்னாளில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார். எம்.ஜி.ஆரின் படுக்கை அறையில் எப்போதும் ஒரு இயேசு சிலை இருந்தது.

87. மதுரையில் எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில், ''எதிர்க்கட்சிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள அ.தி.மு.க-வினர் எல்லோரும் கையில் கத்தி வைத்துக்கொள்ளவேண்டும்'' என்று அவர் பேசிய பேச்சு அரசியலை பரபரப்பாக்கியது அப்போது.

88. தமிழ்ப்பட உலகின் சாதனை என்னவென்று ஒருமுறை கேள்வி எழுப்பபட்டபோது, “தமிழ் நடிகர்களைக் கொண்டு இந்தியில் 'சந்திரலேகா' என்ற படத்தை எடுத்து உலக மக்கள் அனைவரின் உதடுகளிலும் உள்ளங்களிலும் இடம்பெறச்செய்த எஸ்.எஸ்.வாசனின் செயல்'' என்று குறிப்பிட்டார்.

89. அரசியலில் தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு பெரும்பாலும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர். ''எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்'' என்பார்.

90. சினிமாவின் ஆரம்பகாலங்கில் எம்.ஜி.ஆர்  இயற்கையாகவே அழுது நடித்தார். ஆனால், பிற்காலத்தில் லைட்டிங் அதிகம் பயன்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்பட்ட வெப்பத்தால் கண்ணீர் காய்ந்துவிடுவதால் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தார்.

91. ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த நடிகர் என்.டி.ராமாராவ், 'தன் குரு... வழிகாட்டி' என்று எம்.ஜி.ஆரைத்தான் குறிப்பிட்டார்.

92. கட்சியைவிட்டு சிலர் வெளியேறிய சமயம், ''கட்சியினர் அனைவரும் அ.தி.மு.க கொடியை பச்சைக்குத்திக்கொள்ள வேண்டும்'' என்று கருத்துத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். முதல் ஆளாக தானும் குத்திக்கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்த அதை கைவிட்டார் எம்.ஜி.ஆர்.

93. எம்.ஜி.ஆர் - சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படம் 'கூண்டுக்கிளி'. படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களிடையே எழுந்த எதிர்ப்பால் அதன்பிறகு சேர்ந்து நடிப்பதை இருவருமே தவிர்த்தனர்.

94. எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது.

95.  தன் இறப்புக்குப் பின் தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தை காதுகேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதிவைத்தார் எம்.ஜி.ஆர்.

96.  அண்ணாவின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி', 'நல்லவன் வாழ்வான்' ஆகியவை.

97. எம்.ஜி.ஆர் தன் வீட்டில் கரடிக்குட்டி ஒன்றையும் பெரிய சிங்கம் ஒன்றையும் வளர்த்தார். வீட்டில் சிகிச்சையின்போது கரடி எதிர்பாராதவிதமாக இறந்தது. பின்னாளில்  வனவிலங்கு ஆர்வலர்கள் பிரச்னை எழுப்பியதால் சிங்கத்தையும் வனவிலங்கு சரணாலயத்துக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், அங்கு இறந்தபின் அதைத் திரும்பப்பெற்று தன் வீட்டில் அறிவியல்முறையில் பாதுகாத்துவைத்திருந்தார். இன்றும் அது தி.நகர் நினைவு இல்லத்தில் பாடம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.

98. எம்.ஜி.ஆரின் 100-வது படம் 'ஒளிவிளக்கு'. அதை தயாரித்தது ஜெமினி எஸ்.எஸ்.வாசன். 

 

99.  படப்பிடிப்புத் தளங்களில் அந்நாளில் தன்னுடன் பணிபுரிந்த கலைஞர்கள் யாரையாவது கண்டால் ஓடிப்போய் நலம் விசாரிப்பார். மேலும் அவருடைய குறைகளைக் கேட்டறிவார்.

100. படப்பிடிப்பின்போது தனக்கு நொறுக்குத்தீனி சாப்பிட விர

Link to comment
Share on other sites

தென்னிந்திய சினிமாவின் புதுவரவுப் பைங்கிளிகள் இவர்கள்...

99p1.jpg

டோலிவுட் - ஸ்மிதிகா ஆச்சார்யா

இன்ஜினீயரிங் படித்த இந்த ரூர்கேலா பீட்ரூட்டுக்கு நடிப்பில் திரும்பியது கவனம். படிக்கும்போதே மாடலிங்கில் குதித்தவர் இப்போது ‘யே ரோஜாய்த்தே சூசானோ’ படத்தின் நாயகி. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸரிலேயே கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார் ஸ்மிதிகா.  நடிப்பிலும் தூள் கிளப்பும் இவர் தெலுங்கில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கிறார்கள் டோலிவுட்டினர். இந்தி, ஒரியா, பெங்காலி என அம்மணிக்கு நான்கைந்து மொழிகள் அத்துப்படி. # சொல்லி அடிக்கலாம்!


99p2.jpg

மல்லுவுட் - நவமிகாயக்

மலையாள தேசத்தின் வயநாட்டு வெள்ளரிப்பிஞ்சு. எர்ணாகுளம் நடிப்புப் பள்ளியில் நடிப்பு கற்றுத் திரைக்குள் நுழைந்தவர். கடந்த வருடம் ‘ஞான் நின்னோடு கூடியுண்டு’ படத்தில் கிராமத்துப் பெண்ணாகப் பட்டையைக் கிளப்ப, அடுத்ததாக நக்ஸலைட்டுகளின் 1980-களின் வாழ்க்கையைச் சொல்லும் படமான ‘யானம் மஹாயனம்’ நடிக்க வாய்ப்புப் பெற்றார். வித்தியாசமான கதைகளாக கமிட்டாக,  மல்லுவுட்டில் குவிகிறது பாராட்டுகள்.  நவமியின் செல்லப்பெயர் குக்குவாம். # குக்கு கூவுமா..?


99p3.jpg

சாண்டல்வுட் - ராஷ்மிகா

சைக்காலஜி படித்துக்கொண்டிருக்கும் பொண்ணுக்கு சினிமாவோடு கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆக வெள்ளித்திரைக்குள் குதித்தார். இப்போது வசூலில் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கும் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் ஹீரோயின் இந்தக் குடகு மாவட்ட குலாப் ஜாமூன்தான்.

2014-ல் ‘க்ளீன் & க்ளீயர்’ ஃப்ரெஷ் ஃபேஸ் பட்டம் வென்று அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்ட ராஷ்மிகாவின் சினிமா ரூட் இப்போது ஆல் க்ளியர். முதல் பட அறிமுகமே கெத்தாக அமைந்ததில் ‘நான் ரொம்ப லக்கி’ என மகிழ்ச்சியில் திளைக்கிறது இந்தப் பால் பப்பாளி. இதழியல் இவருக்குப் பிடித்த துறையாம். # எங்களுக்கும் பிடிக்கும்!

Link to comment
Share on other sites

ஜாவேத் அக்தர்

 

 
படம்: கே. முரளி குமார்
படம்: கே. முரளி குமார்
 
 

திரைப்பட பாடலாசிரியர், உருது படைப்பாளி

சிறந்த உருது படைப்பாளியும் 5 முறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளையும் வென்றுள்ள ஜாவேத் அக்தர் (Javed Akhtar) பிறந்த தினம் இன்று (ஜனவரி 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* குவாலியரில் பிறந்தவர் (1945). தந்தை பிரபல உருது கவிஞர், தாய் பிரபல எழுத்தாளர்; ஆசிரியர். இவர் பிறந்த சிறிது காலத்திலேயே குடும்பம் லக்னோவில் குடியேறியது.

* இவரது 7வது வயதில் அம்மா இறந்ததால், தாயின் பெற்றோர் வீட்டில் சில காலம் வசித்துவந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர், அலிகரில் அத்தை வீட்டில் வளர்ந்த இவர், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை அங்கே பெற்றார். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மெட்ரிக் தேர்வில் வெற்றிபெற்றார்.

* பின்னர் போபாலில் சாஃபியா கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். கவிதைகள், பாடல்கள் எழுதுவதில் ஆர்வமும் திறனும் கொண்டிருந்த இவர், திரைப்படங்களில் பாடலாசிரியராக வேண்டும் என்ற தனது கனவை நிஜமாக்கிக்கொள்ள 1964-ல் பம்பாய் சென்றார்.

* 100 ரூபாய் சம்பளத்தில் திரைப்படங்களுக்கு வசனம் எழுதிக் கொடுக்கும் வேலையில் சேர்ந்தார். அந்தப் படங்கள் வெற்றி பெறவில்லை. பின்னர் வசனகர்த்தா சலீம் கானைச் சந்தித்தார். இருவரும் இணைந்து திரைக்கதை - வசனம் எழுதத் தொடங்கினார்கள்.

* 1970-ல் இருவரும் இணைந்து பணியாற்றிய ‘அந்தாஜ்’ திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. ‘அதிகார்’, ‘ஹாத்தி மேரா சாத்தி’, ‘சீதா அவுர் கீதா’, ‘ஜன்ஜீர்’, ‘யாரோங் கீ பாராத்’, ‘தீவார்’, ‘ஷோலே’ உள்ளிட்ட பல தொடர் வெற்றிகள் கைகூடின.

* 1980 வரை சலீம் கானுடன் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர் தனியாக இயங்கத் தொடங்கி பாலிவுட்டில் தலைசிறந்த திரைக்கதையாசிரியராகத் தனி முத்திரை பதித்தார். அதோடு பாடல்கள் எழுதிவதிலும் கவனம் செலுத்தி வந்த இவர், அதில் பெற்ற மகத்தான வெற்றிகளுக்குப் பிறகு முழு மூச்சாக இதிலேயே இறங்கிவிட்டார்.

* ‘ஏக் லடகீ கோ தேகா தோ’, ‘பாப்பா கஹதே ஹை’, ‘கர் சே நிகல்தே ஹீ’, ‘ராதா கைஸே நா ஜலே’, ‘சந்தேஷே ஆத்தே ஹை’ உள்ளிட்ட இவரது பாடல்கள் பிரபலமடைந்தன. உருது மொழியிலும் பாடல்கள், கவிதைகள் எழுதினார். 1995-ல் இவரது முதல் உருது கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.

* நல்ல பேச்சாளர். ஹாவர்ட், மேரிலான்ட் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி அமைப்புகளில் கவிதைகள், சமூக நல்லிணக்கம், சமூக நீதி, இந்திய சினிமா உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் உரையாற்றியுள்ளார்.

* 2010-ல் மாநிலங்களவையின் கவுரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். 2013-ல் உருது மொழிக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றார். தேசிய ஒருங்கிணைப்பு விருது, ஆவாஜ் ரத்தன் விருது, பத்ம, பத்ம பூஷண், விருதுகள் தவிர, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை 5 முறை வென்றுள்ளார்.

* சிறந்த திரைக்கதையாசிரியர் மற்றும் சிறந்த பாடலாசிரியருக்காக 14 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், ஃபிலிம்ஃபேரின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வென்றுள்ளார். இன்று 73 வயதில் அடியெடுத்து வைக்கும் இவர், இப்போதும் திரையுலகிலும், சமூக செயல்பாடுகள், அரசியலிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

tamil.thehindu

Link to comment
Share on other sites

7-ம் எண்ணும்... எம்.ஜி.ஆரும்! ஆச்சர்யத் தகவல்கள்

எம்.ஜி.ஆர்\

மிழக அரசியலில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு பெண்களை மையப்படுத்தி உருவாகிய அணிகள் மீண்டும் காட்சியாகியுள்ளன. 

 

ஜானகி-ஜெ, சசிகலா-தீபா

தமிழகத்தில் முதல்வராக ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் உடல் நலக் குறைவால் 1987-ம் ஆண்டு இறந்துவிட, கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாதான் கட்சிக்கு வரவேண்டும் என்று பலரும், எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகிதான் முதல்வராக வரவேண்டும் என்று சிலரும் தோள் கொடுத்தனர். வி.என்.ஜானகி பக்கம் இருந்த பெரும்பான்மை ஆதரவால் அவர் முதல்வரானார். ஆனாலும், அது 27 நாட்களே நீடித்தது. 28-வது நாள் கட்சி இரண்டாக உடைந்தது. பெரும்பான்மை பலத்தைக் காட்டுகிறவர்களுக்கே கட்சியும் சின்னமும் என்ற நிலை வரவே, வி.என்.ஜானகி, ‘இரட்டைப் புறா’ சின்னத்தோடு தேர்தலைச் சந்தித்தார். சேவல் சின்னத்தோடு... ஜானகியை, ஜெயலலிதா எதிர்கொண்டார். வாக்குகள், ஜெயலலிதாவுக்குச் சாதகமாக... கட்சியும் இரட்டை இலை சின்னமும் அவர் வசமானது.
                                                        

                    ஜெயலலிதா 

ஏழாம் எண்ணும்... எம்.ஜி.ஆரும்!

இன்று, அதே ஜெயலலிதா உயிரோடு இல்லாத நிலை... அதே காட்சி, அதேபோல் அந்தக் கட்சியைக் கைப்பற்ற இரண்டு பெண்கள். ஒருவர், அன்றைய வி.என்.ஜானகியைப்போல் இருக்கும் வி.கே.சசிகலா. இன்னொருவர் ஜெயலலிதாபோல இருக்கும் தீபா (ஜெ-வின் அண்ணன் மகள்). கட்சியின் நிறுவனர் மறைவால் அ.தி.மு.க   சோதனையைச் சந்தித்தது 1987-ம் ஆண்டு. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே கட்சியில் தலைமைப் பொறுப்பின் தலை சாயவே, மீண்டும் 2017-ம் ஆண்டில் இன்னொரு சோதனை. எம்.ஜி.ஆருக்கு எப்படி எல்லாக் காலத்திலும் ஏழாம் எண் பொருந்தி வருமோ... அதுபோல அ.தி.மு.க-வுக்கும் இப்போது ஏழாம் எண் பொருந்திச் செல்கிறது.
 

இன்றைய இலங்கையின் கண்டியிலுள்ள நாவலப்பிட்டியில்தான் எம்.ஜி.ஆர் 17.1.1917-ம் ஆண்டில் பிறந்தார். எம்.ஜி.ஆர் தன்னுடைய 7-வது வயதில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் குடும்பத்தோடு கால்வைத்தார். அதே வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகக்குழுவில் சேர்ந்தார். எம்.ஜி.ஆர்., முதன்முதலாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட்ட ஆண்டு 1937. அவர் கதாநாயகனாகத் தோன்றிய படம் ‘ராஜகுமாரி’. அந்தப் படத்தில் நடித்த ஆண்டு 1947. நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து... அதைவிட சக்திவாய்ந்த பொதுச் செயலாளர் பதவியை எம்.ஜி.ஆர் கைப்பற்றிய ஆண்டு 1957. நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட சண்டையில் எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட ஆண்டு 1967. அதே ஆண்டில்தான் ‘காவல்காரன்’ படத்துக்காக மாநில அரசின் விருது பெற்றார். தி.மு.க-விலிருந்து அதிகாரப்பூர்வமாக எம்.ஜி.ஆர் வெளியேறி அ.தி.மு.க-வை ஆரம்பித்த ஆண்டு 1974. ஆனாலும் அவர், ஆட்சியைப் பிடித்தது 1977-ம் ஆண்டு. 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் 1987-ம் ஆண்டில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதுதவிர, எம்.ஜி.ஆர் பயன்படுத்திய காரின் எண் 4777. எம்.ஜி.ஆரின் படங்களுக்கு தஞ்சை ராமையாதாஸ் தொடங்கி பஞ்சு அருணாசலம் வரை பாடல் எழுதிய பாடலாசிரியர்களின் எண்ணிக்கை 25 (கூட்டுத்தொகை - 7). எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 135 என்றாலும்... அதில், 115 (கூட்டுத்தொகை - 7) படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்தார். எம்.ஜி.ஆருக்கும் அ.தி.மு.க-வுக்கும் இருந்துவரும் இந்த 7-ம் எண்ணின் தொடர்பு பல ஏற்ற இறக்கங்களைக் கொடுத்திருந்தாலும்... அந்த எண், அ.தி.மு.க-வை இப்போதும் துரத்திக்கொண்டே இருக்கிறது என்பதுதான் நிஜம்.
 
முதலமைச்சர், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிகளில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து அதேபோல் இருந்த ஜெயலலிதா 30 ஆண்டுகள் கழித்து மறைய... மீண்டும் கட்சிக்குச் சோதனையாக 2017-ம் ஆண்டு உருவாக்கியுள்ளது.              ‘இந்த ஆண்டின் 7-ம் எண் பயணம் எப்படி இருக்கும்’ என்று தி.நகர் சிவஞானம் தெருவிலும், போயஸ் கார்டனிலும் சோழிகள் உருட்டப்படுவதாக அ.தி.மு.க தரப்பினர் கிசுகிசுக்கின்றனர்.

vikatan

Link to comment
Share on other sites

ஒட்டகங்களின் மல்யுத்தப் போட்டிகள்
 

ஒட்டகங்களுக்கு இடையிலான மல்யுத்த விளையாட்டு விழா துருக்கியின் இஸ்மிர் நகருக்கு அருகிலுள்ள ஏஜியன் நகரில் கட்ந்த சனிக்கிழமை நடை பெற்றது.

 

1782017-01-14T162020Z_586937849_RC17A579

 

1782017-01-14T163344Z_1685145643_RC141E0

 

1782017-01-15T182805Z_760496836_RC1B5ACE

 

ஒட்டகங்களுக்கான அழகுப் போட்டியும் இப் பாரம்பரிய விளையாட்டு விழா வில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

1782017-01-15T185045Z_957837154_RC12E01B

 

1782017-01-15T185048Z_433616719_RC192233

 

.metronews.lk
Link to comment
Share on other sites

கைகள் பத்திரம்... கேட்ஜெட்ஸ் அலெர்ட்!

ஹெல்த்கே.சித்தரஞ்சன், எலும்பு மூட்டு நிபுணர்

 

43p1.jpg

காலை எழுந்ததும் நியூஸ் பேப்பர் படிக்கும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. பலரும் கண் விழிப்பதே செல்போனில்தான். ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும், ட்விட்டரிலும் ஒரு வலம்வந்தால் நாட்டு நடப்புகள் விரல்நுனிக்கு வந்துவிடுகின்றன. கிளம்பி அலுவலகத்துக்கு வந்து கணிப்பொறி முன் அமர்ந்தால், மாலை வரை கம்ப்யூட்டர்தான் கதி.  இடையிடையே அவ்வப்போது கிடைக்கும் நேரத்திலும் மொபைலை எடுத்து விரலால் வருடிக்கொண்டிருப்பதுதான் ரிலாக்சேஷன். இப்படி, சதா சர்வகாலமும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களோடு புழங்குவது கண்களுக்கு மட்டும் அல்ல... கைகளுக்கும் ஆபத்தானது. இதனால் செல்ஃபி எல்போ மற்றும் டென்னிஸ் எல்போ பிரச்னைகள் வரலாம். மருத்துவமொழியில் சொன்னால் லேட்டரல் எபிகாண்டிலிடிஸ் (Lateral epicondylitis). இதைத் தவிர கழுத்துவலி, முதுகுவலி, இடுப்புவலியும் சிலருக்கு ஏற்படுகின்றன. இந்த வலிகள் எவ்வாறு ஏற்படுகின்றன... இதற்கு என்ன தீர்வு என்று பார்ப்போம்!

லேட்டரல் எபிகாண்டிலிடிஸ்
43p3.jpg
இதை, `டென்னிஸ் எல்போ’ என்றும் சொல்வார்கள். டென்னிஸ், பாட்மிண்டன் விளையாட்டு வீரர்களுக்கும், தச்சர்கள், பிளம்பர்கள், பெயின்டர்கள் மற்றும் கனமான பொருட்களைத் தூக்கும், நகர்த்தும் பணியில் இருப்பவர்களுக்கும் அதிகமாக கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் பயன்படுத்துபவர்களுக்கும்  இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

பொதுவாக, போதுமான ஓய்வும் ஸ்ட்ரெச்சிங் போன்ற தசையை நெகிழ்த்தும் பயிற்சிகளும் இன்றி, தொடர்ந்து கைகளுக்கு வேலை தருவதால், கையில் உள்ள தசைகள் பாதிப்படைகின்றன. சிலருக்கு, இந்த வலி முழங்கையில் இருந்து மணிக்கட்டு வரை பரவும். பெருவிரல், விரல்நுனிகள், மணிக்கட்டு, முழங்கை போன்ற இடங்களிலும் சிலருக்கு வலி இருக்கும்.

அதிகமாக விரல்களின் பயன்பாடு இருக்கும்போது அல்லது பெருவிரலைப் பயன் படுத்தும்போது விரல்களை நிமிர்த்துவதற்கான தசையில் (Extensor tendon) ஏற்படும் அழுத்தத்தினால் வலி ஏற்படுகிறது.

கழுத்துவலி, இடுப்புவலி, முதுகுவலி

* பயணங்களில் செல்போன் பயன்படுத்தும் போது இருக்கை நிலைகள் தவறாக இருந்தாலும், கழுத்து மற்றும் முதுகுவலி ஏற்படும். அதிர்வுகள் அதிகமாக இருக்கும்போது, வலிகள் எளிதில் ஏற்படும்.

* சிலருக்கு லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்தும்போது, கை, கழுத்து, முதுகுத்தண்டு போன்ற பகுதிகளில் வலி ஏற்படும்.

* அதிக நேரம் கம்ப்யூட்டரில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு மற்றும் கீழ் முதுகில் வலி ஏற்படும். நீண்ட நேரம் ஏ.சி-யில் அமர்ந்து இருப்பதும் வலி ஏற்படுவதற்கு ஒரு காரணமாகும்.

* தொடர்ந்து ஒரே மாதிரியான நிலைகளில் இருப்பவர்களுக்கு, இது போன்ற வலிகள் ஏற்படுகின்றன.

பாதிப்புகள்

தசைத் தளர்வு, தசைப் பிடிப்பு, சீரற்ற ரத்த ஓட்டம், முழங்கை மற்றும் கைகளில் வலி, கழுத்து வலி, முதுகுவலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

43p2.jpg

எப்படிச் சரிசெய்வது?

* ஐஸ் பேக் அல்லது ஹாட் பேக்கை வலி ஏற்படும் இடங்களில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

* கை வலியைச் சரிசெய்ய சில மசாஜ்களை நமக்கு நாமே செய்யலாம். கை விரல்களில் வலி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, மற்றொரு கையின் ஆள்காட்டி விரலை வலி உள்ள இடத்தில் வைத்து சற்று அழுத்தித் தேய்க்க வேண்டும். இதேபோல், பெருவிரல் கொண்டும் செய்ய வேண்டும். 

* மணிக்கட்டை மற்றொரு கையின் ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலால் சுற்றிப் பிடித்து சற்று அழுத்தி, தேய்த்துக் கொடுக்க வேண்டும். மேலும் வலி உள்ள இடத்தில் பெருவிரலால் அழுத்தி கையை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும்.

* முழங்கையில் ஏற்படும் வலியை நீக்க, கைகளை நேராக நீட்டி மணிக்கட்டை மேலும் கீழும் அசைக்க வேண்டும். இதுபோன்று, முழங்கையை மடக்கி நீட்ட வேண்டும். இதேபோல் 20-25 விநாடிகள் செய்ய வேண்டும்.

* கைகளை நேராக நீட்டி மணிக்கட்டை கீழ் நோக்கி இருக்குமாறு சில விநாடிகள் வைக்க வேண்டும். பின்பு, உள்ளங்கையை மடக்கி நேராக நீட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து, முழங்கையை மடக்கி, மீண்டும் பழையநிலைக்கு வர வேண்டும். இதேபோல், இரண்டு கைகளுக்கும் செய்ய வேண்டும்.

* ஐஎஃப்டி பிசியோதெரப்பி மற்றும் அல்ட்ராசோனிக் (Ultrasonic) எனப்படும் ஹீட்டிங் தெரப்பி மூலம் வலியைச் சரிசெய்யலாம். மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரைகள் மூலமாகவும் சரிசெய்யலாம். தொடர்ந்து வலி இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. சிலருக்கு பிரச்னை பெரிதாக இருந்தால், அறுவைசிகிச்சைக்கூட செய்ய வேண்டியது இருக்கலாம்.

தடுக்கும் வழிமுறைகள்

* எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை அதிகம் பயன்படுத்த நேரும்போது அடிக்கடி இடைவெளிவிட்டு பயன்படுத்த வேண்டும்.

* தினசரி உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

விரல்களில் நகங்கள் அதிக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* சரியான இடத்தில் அமர்ந்து, சரியான நிலைகளில் கணிப்பொறி, செல்போனைப் பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை தொடர் பயன்பாடுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

* குளிர்ச்சியைத் தவிர்த்து, கைகளை எப்போதும் வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இதற்கு மருத்துவர் பரிந்துரையுடன் கை உறைகளைப் பயன் படுத்தலாம்.

* கீபோர்டுகளை அல்லது தொடுதிரையைப் பயன்படுத்தும்போது, அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்காமல் இருக்க வேண்டும். பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கும் கீபோர்டு களைப் பயன்படுத்த வேண்டும்.

* உடல் அதிர்வாக, இயக்க நிலையில் இருக்கும் போதும் பயணங்களின்போதும், கேட்ஜெட் களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் ஏ.சி யில் அதிக நேரம் இருக்கவேண்டியது இருந்தால், உடலில் நீர் வறட்சி ஏற்படும். அதைச் சரிசெய்ய அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி மூன்று லிட்டர் நீர் பருக வேண்டும். நீரானது தசைப் பிடிப்பையும், உடல் வறட்சியையும் சரிசெய்கிறது.

vikatan

Link to comment
Share on other sites

எல்லா நிகழ்வுகளுக்கும் காரண காரியங்கள் உண்டு
 
 

article_1484653242-index.jpgஇயற்கை அனர்த்தங்கள் என்றாலே மக்கள் ஆண்டவன் மீதுதான் தங்கள் கோபத்தைக் காட்டுவதுண்டு. ஆனால், எல்லா நிகழ்வுகளுக்கும் காரண காரியங்கள் உண்டு. மனிதர்களின் அடாத செயல்களையும் நாங்கள் ஏற்கத்தான் வேண்டும்.  

ஆனால், புயல் ஏன் வருகிறது என்பதை விடுத்து, அதனால் இந்தப் பூமிக்குக் கிடைக்கும் அனுகூலங்கள் பற்றித் தெரியவேண்டாமா? 

பூமிப்பந்து வெப்பதட்பங்களால் சூடேறியிருக்கிறது. என்னதான் கடல், ஆறு, ஏரிகள் இருந்தாலும் கூட, வெப்பத்தைச் சீராக்கும் கைங்கரியத்தைப் புயல் செய்கின்றது. 

அதிவேகமான புயல், பரந்த பரப்பளவைக் காற்றினால் சீராக்கி விடுகின்றது. இதனை மனிதரால் செய்யமுடியாது. புயல் அசுர சக்தியல்லவா? 

இயற்கையின் மாற்றங்களால் மக்களுக்கு ஏற்படும் நலன்களைப் பற்றி நாம் உணர்வதுமில்லை. கருணையே இறைகுணம்! உணர்க தோழர்களே!

Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் கலக்கும் சிறுமி

Alanganallur Jallikattu protest

அலங்காநல்லூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுமியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிறுமி கோஷம் எழுப்பும் வீடியோ காட்சியும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக்கில் பலர் இச்சிறுமியின் புகைப்படத்தை ப்ரொஃபைல் படமாக வைத்துள்ளனர்.  

 

vikatan

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 18

 

1535 : பெருவின் லீமா நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.

 

670 : ஹென்றி மோர்கன் பனாமாவைக் கைப்பற்றினான்.

 

887German_Empire_---varalaru.gif1701 : பிரஷ்யாவின் (தற்போதைய ஜேர்மனியின் ஒரு பிராந்தியம்) மன்னனாக முதலாம் பிரெடெரிக் முடி சூடினார்.

 

1778 : ஹவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியரான கெப்டன் ஜேம்ஸ் குக். இத்தீவுகளுக்கு சான்ட்விச் தீவுகள் எனப் பெயரிட்டார்.

 

1788 : இங்கிலாந்தில் இருந்து குடியேற்றவாசிகளான 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி அவுஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது.

 

1824 : இலங்கையின் ஆளுநராக சேர். எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.

 

1871 : வடக்கு ஜேர்மனியக் கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜேர்மனிய மாநிலங்கள் ஆகியன ஜேர்மனியப் பேரரசு என்ற பெயரில் இணைந்தன. முதலாம் வில்ஹெல்ம் அதன் முதலாவது மன்னரானார்.

 

1896 : எக்ஸ்றே இயந்திரம் முதற் தட வையாகக் காட்சிப் படுத்தப்பட்டது.

 

1911 : யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யூ.எஸ்.எஸ். பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானம் இதுவாகும்.

 

1919 : முதலாம் உலகப் போர் தொடர்பான பாரிஸ் சமாதான உச்சி மாநாடு பிரான்சில் வேர்சாயி நகரில் ஆரம்பமானது.

 

1929 : சோவியத் ஒன்றியத்தில் இருந்து லியோன் ட்ரொட்ஸ்கி   வெளியேற்றப்பட்டார்.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்டுகளாக நாசிகளால் முற்றுகையிடப்ப ட்டிருந்த லெனின்கிராட் நகரை சோவியத் படைகள் மீட்டெடுத்தன.

 

1960 : கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது.

 

1977 : அவுஸ்திரேலியாவின் சிட்னியின் புறநகர்ப் பகுதியான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததையடுத்து, அதன் மேல் சென்று கொண்டிருந்த ரயில் கீழே வீழ்ந்ததால் 83 பேர் கொல்லப்பட்டனர்.

 

1995 : 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்டன.

 

1997 : போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.

 

2002 : சியோரோ லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

 

2003 : அவுஸ்திரேலியா வின் கென்பராவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.

 

2007 : மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய சூறாவளியினால் 44 பேர் கொல்லப்பட்டனர்.

 

2009 : இஸ்ரேலின் யுத்த நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு ஹமாஸ் இயக்கம் தாக்குதலை நிறுத்தியது.

 

2016 : களனிவெளி ரயில் பாதையில் முதல் தடவையாக கொஸ்கம, மஹரகமவுக்கு இடையில் ரயில் பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

.metronews.lk
Link to comment
Share on other sites

உலகின் அதிசய ரயில் பாதை!

 
 
 
track_3119551f.jpg
 
 
 

உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாதை எது? சீனாவின் குங்ஹாய் நகரிலிருந்து திபெத்தின் லாசா நகரம் வரை உள்ள பனிமலை ரயில்வே பாதையே உலகின் மிக உயரமான ரயில்வே பாதை. 1,956 கி.மீ. தூரம் நீண்டு செல்கிறது இந்த ரயில்வே பாதை. இந்தப் பாதையில் ‘தங்குலா கணவாய்’ என்ற பகுதி வருகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரத்து 72 அடி உயரத்தில் உள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் ரயில்வே ஸ்டேஷன் இருப்பது இங்கேதான்.

இந்தப் பகுதி அதிகக் குளிர் நிலவும் பகுதி. உருகும் பகுதியும்கூட. குளிர்காலத்தில் இறுகும் நிலம், கோடையில் உருகிப் பல அடிகள் கீழே இறங்கிவிடும். கடுமையான பனிப்புயலுக்கு மத்தியில் இந்த ரயில்வே பாதை அமைக்கும் பணி தொடங்கியது. 1980களில் தொடங்கிய ரயில்வே பணி, 2006-ம் ஆண்டில் முடிவடைந்து. இப்போது ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

track_2_3119552a.jpg

பனி நிலத்தின் மேல் ரயில் பாதை போடுவது ரொம்பப் பெரிய விஷயம். இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. ரயில் செல்லும் பல இடங்களில் ஆக்ஸிஜன் குழாய் அணிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தக் கட்டுப்பாடு. அப்படி அணியாவிட்டால் சீராக மூச்சு விட முடியாது. இந்தப் பாதை வழியாகப் பயணத்தை எல்லோராலும் மேற்கொள்ள முடியாது. அதற்கான உடல் வலிமை இருப்பதை ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டால்தான் டிக்கெட் கிடைக்கும்.பெய்ஜிங்கிலிருந்து இந்த ரயில் திபெத் போக 3 நாட்கள் ஆகும்.

tamil.thehindu.

Link to comment
Share on other sites

மதுரையில் ஜல்லிக்கட்டு
 

இந்தியாவில் ஜல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) விளையாட்டுக்கு இந்திய உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், தமிழகத்தில் சில இடங்களில் ஜல்லிக்கட்டு விளையாடப்பட்டது.

 

177795949-01-02.jpg

 

177795945-01-02.jpg

 

177795948-01-02.jpg

 

மதுரையில் நேற்றுமுன்தினம் ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளையை அடக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டிருப்பதை படங்களில் காணலாம்.

 

177795951-01-02.jpg

 

177795955-01-02.jpg

metronews.lk
Link to comment
Share on other sites

குளிர்காலத்தில் யானைகளுக்கு ஆடை கொடுத்த புதுமை!

 

 

குளிர்காலத்தில் பாதுகாப்பாக தூங்குவதற்காக, யானைகளுக்கு குளிரை தாங்கும் ஆடைகளை தயாரித்து அணிவித்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. 3C2B253200000578-0-image-a-20_1484688902
3C2B259200000578-4129842-Here_Suzy_Phoolஇந்தியாவின் மதுரா நகரத்தில் அமைந்துள்ள வனஜீவராசிகளுக்கான அமைப்பான எஸ்ஓஎஸ் யானைகள் பாதுகாப்பு மையத்தில், குளிர்காலத்தில் யானைகளை இதமாக வைப்பதற்கு தேவையான மிகப்பெரிய ஆடைகளை அருகிலுள்ள கிராமத்து பெண்கள் தயாரித்து கொடுத்துள்ளனர்.3C2B232300000578-0-image-a-16_1484688893
3C2B23C500000578-0-image-a-22_14846889043C2B23BA00000578-0-image-a-27_1484688912முதல் கட்டமாக 20 யானைகளுக்கு தேவையான குளிர் தாங்கும் ஆடைகளை தயாரிப்பதற்கு ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலங்கள் செலவாகியுள்ளது.
3C2B240F00000578-0-image-a-25_14846889073C2B253600000578-0-image-a-49_1484689148இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு மைய நிறுவுனர் கார்த்திக் சத்தியநாராயணன்  குறிப்பிட்டுள்ளதாவது யானைகளுக்கு தேவையான பாதுகாப்பை நாம் உருவாக்கியுள்ளோம். அதுபோல குளிரை தாங்கும் ஆடைகளையும் வழங்கி அவற்றின் நலனில் புது வழிகளை பின்பற்ற தொடங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.3C2B25A800000578-0-image-a-42_14846889463C2B256600000578-0-image-a-36_1484688929
மேலும் தற்போது 20 யானைகளுக்கு மட்டுமே ஆடைகள் அணிவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் குளிர்காலத்திற்கு முதல் சுமார் 50 யானைகளுக்கு தேவையான ஆடைகளை தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

நெருப்பு சுவாலையினுள் குதிரையுடன் பாயும் வீரர்கள் : அதிரவைக்கும் படங்கள்    

 

 

பாரம்பரிய விழாவில் குதிரைகளை மிரட்டும் ஸ்பானியர்கள். ஸ்பெயினின் சென் பார்தலாமே டீ பின்ரெஸ் எனும் கிராமத்தில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய விழாவில் குதிரைகளை நெருப்பு சுவாலை மீது பாயவிடும் வினோத திருவிழா பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

3C32200500000578-4127336-image-a-45_1484

303EED3000000578-4127336-image-a-50_1484

சுமார் 500 வருடங்கள் பழமையான லாஸ் லுமினாரியாஸ் எனும் வெளிச்ச திருவிழாவில், பெட்ரோலால் எரியூட்டப்பட்ட  நெருப்பு சுவாலை மீது குதிரைகளையும், கழுதைகளையும் பாயவிடும் சம்பவம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 

3C31572B00000578-4127336-image-m-48_1484

3C31028E00000578-4127336-image-a-72_1484

சுற்றி அடைக்கப்பட்ட நிலையில் எரியும் நெருப்பை பாய்ந்து கடப்பதற்கு குதிரை மீதுள்ள வீரர்கள், அதை பலவந்தப்படுத்தி நெருப்பு சுவாலையை கடக்கச்செய்கின்றனர். இதனால் கிராமத்திற்கும், விலங்குகளுக்கும் தீய சக்தியிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதை நம்பிக்கையாக கொண்டுள்ளார்களாம்.    

3C31569F00000578-4127336-image-m-68_1484

3C3116F700000578-4127336-image-a-53_1484

3C30270E00000578-4127336-image-m-78_1484

குறித்த திருவிழா தலைநகர் மேட்ரிட்லிருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள கிராமத்தில், சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக ரோமன் கத்தோலிக்க மதம் சார்ந்த குளிர்கால பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

3C31882400000578-4127336-image-m-61_14843C31865800000578-4127336-image-a-62_14843C3156A300000578-4127336-image-m-65_1484

இருப்பினும் குறித்த திருவிழாவில் விலங்கு வதை இடம்பெறுவதாக கூறி, பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது விமர்சனத்தையும்,எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3C317EA800000578-4127336-image-m-71_1484

3C2FAD3D00000578-4127336-image-a-52_1484

3C2F9A2600000578-4127336-image-a-83_1484

virakesari.lk/

Link to comment
Share on other sites

ஒரு நாள் நூலகராக பணியாற்றிய 4 வயது சிறுமி!

சிறுமி

லகிலேயே மிகப்பெரிய நூலகத்திற்கு ஒருநாள் நூலகராக பணியாற்றிய நான்குவயது சிறுமி, சோஷியல் மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அமெரிக்கவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள கேயின்ஸ்வில்லே பகுதியைச் சேர்ந்த டாலியா அரானா என்ற நான்கு வயது சிறுமி 1000 புத்தகங்களுக்கு மேல் படித்ததன் மூலம் குறைந்த வயதிலேயே நூலகரான சிறுமி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அமெரிக்கா வாழ் ஆப்பிரிக்கர் ஆன டாலியாவுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம். டாலியாவுக்கு 18 மாதங்கள் ஆனபோது அவருடைய தாய் ஹலீமா கதைகளை வாசித்து காண்பிப்பாராம். அதைக் கேட்ட டாலியாவும், அம்மா சொல்கின்றவற்றை சத்தமாக சொல்ல ஆரம்பித்திருக்கிறாள். டாலியாவுக்கு மூன்று வயதான போது, தானாக புத்தகங்களை படிக்க துவங்கியிருக்கிறாள். இதைப் பார்த்த ஹலீமா, டாலியாவை தொடர்ந்து நூலகங்களுக்கு கூட்டி சென்றிருக்கிறார்.

library4_18272.jpg

அதனைத் தொடர்ந்து டாலியா, நான்கு வயதிலேயே 1,000 புத்தகங்களைப் படித்து முடித்து பலரையும் வாவ் சொல்ல வைத்திருக்கிறாள்.
''முதலில் நான் சொல்ல சொல்ல கதைகளை கேட்டு வந்த டாலியா, ஒரு கட்டத்தில் தானாகவே படிக்க ஆரம்பித்துவிட்டார். எங்கள் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் சிறந்த புத்தக வாசிப்பாளாராக வரவேண்டும் என்பது டாலியா மூலமாக நிறைவேறியுள்ளது. அவளுடைய ஆசைகளை, வளர்ச்சியை பார்த்த பிறகு நூலகக் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதி என் மகளை கெளரவிக்க வேண்டுகோள் வைத்தேன்" என்பவரின் ஆசை நிறைவேறியிருக்கிறது.
 அமெரிக்காவில் உள்ள 'லைப்ரரி ஆப் காங்கிரஸ்' என்ற நூலகம் உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக கருதப்படுகிறது. இந்த நூலகத்திற்கு டாலியா அழைத்து வரப்பட்டு, நூலகர் இருக்கையில் அமர வைத்து கௌரவிக்கப்பட்டார். இதன் மூலம் உலகிலேயே மிக குறைந்த வயதில் நூலகரான சிறுமி என்ற பெருமையும் இவளுக்கு கிடைத்துள்ளது.

 

ஒருநாள் நூலகராக நியமித்ததும் அங்குள்ள நூலகப்பணியாளர்களுடன் பேசிய டாலியா, குழந்தைகள் எழுதப்பழக வெள்ளை நிறத்தில் சுவர் பலகை வைக்கவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார். ''நான் பெரியவளாகி நூலகராக ஆகவேண்டும் என்பதே என்னுடைய கனவு'' என்று யூடியூபில் தெரிவித்துள்ளார் டாலியா. ''இவளைப் பார்த்து மற்ற பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே புத்தக வாசிப்பு பழக்கத்தை உருவாக்கவேண்டும் என்ற எண்ண தோன்றும்'' என்று நம்பிக்கை வார்த்தைகளில் சொல்கிறார் டாலியாவின் தாய் ஹலீமா.

vikatan

Link to comment
Share on other sites

ஆண் துணை இல்லாமலே முட்டையிட்டு வியக்க வைத்திருக்கும் ‘லியோனி’!

 

 

ஆண் துணையின்றியே முட்டைகள் இட்ட சுறா மீன் ஒன்று ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

5_Shark_Leonie.jpg

அவுஸ்திரேலியாவின் பண்ணையொன்றில் வாழ்ந்துவரும் ‘ஸீப்ரா ஷார்க்’ எனப்படும் சுறா வகையைச் சார்ந்த பெண் சுறாவே கலவியில் ஈடுபடாமலேயே முட்டை இட்டுள்ளது.

‘லியோனி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பெண் சுறா, ஆரம்பத்தில் மற்றொரு ஆண் சுறா ஒன்றுடனேயே வளர்க்கப்பட்டு வந்தது. அப்போது இவை இரண்டும் கலவியில் ஈடுபட்டு இனப்பெருக்கம் செய்து வந்தன.

ஆனால், மூன்று வருடங்களுக்கு முன்பு இவை இரண்டும் பிரிக்கப்பட்டன. அன்று முதல் இந்தப் பெண் சுறா தனித்தே வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்தச் சுறா தற்போது முட்டைகளை இட்டிருக்கிறது.

ஏற்கனவே லியோனி ஈன்ற குஞ்சுகளில் பெண் குஞ்சு ஒன்றும் லியோனியுடன் சேர்த்து வளர்க்கப்பட்டு வந்தது. இதுவும் தனது தாயைப் போலவே கலவியின்றி முட்டைகளை ஈன்றுள்ளது. ஆரம்பம் முதலே தனிமைப்படுத்தப்படும் சில வகை உயிரினங்கள் கலவியில் ஈடுபடாமலேயே முட்டையிடுவது உண்டு. என்றாலும், அது இயற்கையின் விதியாகவே அமைந்திருந்தது. 

ஆனால் ஏற்கனவே தன் இனத்தைச் சார்ந்த மற்றொரு இணையுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்த பின், மூன்று வருடங்கள் தனித்திருந்துவிட்டு மீண்டும் இனப்பெருக்கம் செய்திருப்பது இதுவே முதன்முறை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

virakesari.lk

Link to comment
Share on other sites

எக்ஸ்ரே கருவி முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட்ட நாள்: 18-1-1896

 

மனித உடலை ஊடுருவிப் பார்க்கவும், பெட்டியை திறக்காமலேயே சோதனையிடவும் உதவுகிற எக்ஸ்ரே கருவியை 1896-ஆம் ஆண்டு இதே தேதியில் முதற்தடவையாக காட்சிப்படுத்தினர்.

 
எக்ஸ்ரே கருவி முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட்ட நாள்: 18-1-1896
 
மனித உடலை ஊடுருவிப் பார்க்கவும், பெட்டியை திறக்காமலேயே சோதனையிடவும் உதவுகிற எக்ஸ்ரே கருவியை 1896-ஆம் ஆண்டு இதே தேதியில் முதற்தடவையாக காட்சிப்படுத்தினர்.

வில்லெம் இராண்ட்ஜன் என்பவர் 1985-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஊர்சுபெர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, குறூக்சு குழாயுடன் வளியில் மின்னிறக்கம் நிகழ்வதை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அருகில் இருந்த பேரியம் பிளாட்டினோ சயனைட் பூச்சுடைய ஒரு அட்டை ஒளிர்வதை கண்டார். மின்னிறக்கம் நிகழும்போது ஒளிர்வதும், இல்லாதபோது ஒளிராமலும் இருப்பதை கண்டார். இதற்கு குழாய்களின் சுவர்களிலிருந்து வெளிப்படும் புதிரான ஒருவகை கதிர்களே காரணம் என கருதினார். இக்கதிர்களை அவர் எக்ஸ் கதிர்கள் என அழைத்தார்.

இக்கதிர்கள் மிக அதிக ஆற்றல் வாய்ந்தவை. இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இக்கதிர்கள் காந்த மின்புலங்களால் பாதிப்பு அடையாது. எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரு மாதங்களில் அது பயன்பாட்டுக்கு வந்தது. ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்பு முறிவு ஒன்றை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கண்டுபிடிப்புக்காக ராண்ட்ஜன் அவர்களுக்கு 1901-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

சாப்பிடலாம்... சிலிர்க்கலாம்!

 

ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்கள்னாலே டைனிங் டேபிள் இருக்கும், மெனுகார்ட் இருக்கும்... வேற என்ன புதுசா இருக்கப்போகுதுனு யோசிச்சிருக்கீங்களா..? அப்படி நம்மளை மாதிரியே யோசிச்ச யாரோதான் இப்படிப்பட்ட வித்தியாசமான ரெஸ்ட்டாரன்ட்களையும் வடிவமைச்சுருக்கணும். உலகம் முழுவதிலும் இருக்கும் வித்தியாசமான ஹோட்டல்களைப் பார்ப்போம் வாங்க...

30p1.jpg

Ristorante Grotta Palazzese

இத்தாலியில் அமைந்திருக்கும் இந்த ரெஸ்டாரென்ட், நம்ம ஊர் குடைவரைக்கோயில் போலக் கற்பாறைகளுக்கு நடுவே குடைந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கடலுக்கு அருகே இருக்கும் பாறைகளின் வழியாகக் குனிந்து உள்ளே சென்றால், நீண்ட குகைப்பாதையின் முடிவில் பெரிய ஹோட்டல் வரவேற்கிறது. உள்ளே அமர்ந்து விதவிதமான உணவுகளைச் சுவைத்தபடி, மறுபக்கம் கடலின் அழகை ரசிக்கலாம். #அழகிய கடலே...

30p2.jpg

Aiguille Du Midi Restaurant

ஃபிரான்ஸ் நாட்டின் சாமொனிக்ஸ் நகரத்தில் பனிமலைகளின் முகட்டில் இருக்கிறது இந்த ரெஸ்டாரென்ட். மேலிருந்து கீழே பார்த்தாலே ஈரக்குலை நடுங்கும் 3,842 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. வெளியிலிருந்து பார்க்கும்போது ஏற்படும் பயமின்றிச் சாப்பிட அமர்ந்தால், பனிமலைகளின் அழகு கண்முன்னே தெரியும்படி சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. #சாப்பாடு பாதி, பயம் மீதி!

30p3.jpg

Giraffe Manor

கென்யா நாட்டின் லங்காடா பகுதியில் இருக்கும் இந்த ஹோட்டல் இன்னும் வித்தியாசமானது. காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஹோட்டலில் ஒட்டகச்சிவிங்கிகளோடு சேர்ந்து உங்கள் உணவைப் பரிமாறிக்கொள்ளலாம். ஒட்டகச்சிவிங்கிகள் நீண்ட கழுத்தை ஹோட்டலுக்கு உள்ளே நுழைத்து உங்கள் தட்டிலிருக்கும் சாப்பாட்டைக் கவ்விக்கொள்ளும் அளவுக்கு ஜன்னலை அமைத்திருக்கிறார்கள். # சொந்தக் காசுல சூனியம்!

30p4.jpg

Ithaa undersea Restaurant

மாலத்தீவில் கடலுக்கு அடியில் ஐந்து மீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கிறது இந்த கடலடி ரெஸ்டாரென்ட். கண்ணாடிக் கூண்டு போன்ற அமைப்பில் பெரிதாக இருக்கும். உள்ளே போய் அண்ணாந்து பார்த்தால், தலைக்கு மேலே மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும். கடலுக்குள்ளேயே அமர்ந்து கடல் உணவுகளை ஒரு கை பார்க்கலாம். கடல் பிரியர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றது இந்த ஹோட்டல். #சுறாப்புட்டு சாப்பிட்டா, சுறா வருமா பாஸ்? 

30p5.jpg

The Green Dragon Pub

நியூசிலாந்தின் `ஹாபிடன்' எனும் இடத்தில் இருக்கும் இந்த ஹோட்டல் குடிமகன்களுக்காகப் பிரத்யேகமாகக் கட்டப்பட்டது. பழைய வீடுகளின் அமைப்பைப் போல இருக்கும் இந்த பார்ட்டி ஹோட்டலில் சரக்குகள் பெரிய பேரலில் நிரப்பி வைக்கப்பட்டிருக்குமாம். குழாயைத் திறந்தால் இங்கே சரக்கு வரும். கட்டணம் கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும் அடர்ந்தக் காட்டுக்கு நடுவே குடிப்பதை அநேகம் பேர் விரும்புகிறார்களாம். #கார்ப்பரேஷன் குழாயில் காத்துதான் வரும்!

30p6.jpg

Ali Barbour’s Cave Restaurant

கென்யாவில் அமைந்திருக்கும் இந்த ரெஸ்டாரென்ட்டை அடைய குகைக்குள் நடந்து செல்ல வேண்டும். இருட்டறையாக இருக்கும் இந்தப் பகுதி முழுவதும் மெழுகுவத்திகளால் சூழப்பட்டு இரவு நேரங்களில் தங்கமாகத் தகதகவென ஜொலிக்கிறது. #அலிபாபான்னு பேர் வெச்சா, `திறந்திடு சீசேம்' சொல்லணுமோ..?

30p7.jpg

Labassin Waterfall Restaurant

பிலிப்பைன்ஸ் நாட்டின் லெப்பாசின் நீர்வீழ்ச்சியில், உச்சிப்பாறைகளில் இருந்து தண்ணீர் தெறித்துவிழும் இடத்தில் நட்டநடுவே அமைந்திருக்கிறது இந்த ஹோட்டல். தடுக்கி விழுந்தால் தண்ணீரில்தான் கால்வைக்க வேண்டும். நீர் ஓடிக்கொண்டிருப்பதற்கு மேலேயே டேபிளைப் போட்டு ரெஸ்டாரென்டாக்கி இருக்கிறார்கள். இந்த ஐடியாவுக்கே வாடிக்கையாளர்கள் குவிகிறார்களாம். #நீங்கள்லாம் எங்கிருந்துய்யா வர்றீங்க..?

30p8.jpg

Hot Air Balloon Restaurant

நெதர்லாந்தில் இருக்கிறது (ஸாரி... பறக்கிறது) இந்த ஹோட்டல். பறக்கும் பாராசூட் பலூனிலேயே இரண்டு குடும்பங்கள் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது இந்த ஹோட்டல். பறந்துகொண்டே சாப்பாட்டைப் பறக்கவிடாமல் பதறியபடி சாப்பிடலாமாம். உயிர் போற பயத்துல சாப்பாடு எப்படி உள்ளே இறங்கும்? #என்னத்த சொல்ல..!

30p9.jpg

The SnowCastle of kemi

முழுக்க முழுக்கப் பனிப் பாறைகளாலும், பனிக்கட்டிகளாலும் சூழ்ந்திருக்கிறது இந்த ஹோட்டல். உட்காருவதற்கு மட்டும் இருக்கையில் கொஞ்சம் கம்பளி போட்டிருக்கிறார்கள். இங்கே ஐஸ்க்ரீம் முதல் க்ரில் வெரைட்டிகள் வரை எல்லாமே கிடைக்குமாம். குளிரில் நடுங்கினால் கிச்சனுக்குத்தான் ஓட வேண்டும். #என்ன்ன்னா குளிரு..?

30p10.jpg

Dinner in the sky

தொங்கும் தோட்டம் போல, இது அந்தரத்தில் தொங்கும் ஹோட்டல். இங்கே சீட் பெல்ட் அணிந்தபடிதான் சாப்பிட விடுவார்களாம். கிரேன் இயந்திரத்தின் உதவியோடு தொங்கவிடப்பட்டிருக்கும் இந்த மிதக்கும் ஹோட்டலில், விபத்து நிகழாதவாறு நிறையப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதாம். #இதெல்லாம் தேவையா முருகேசா..!

vikatan

Link to comment
Share on other sites

அறியாமல் விட்டுவிட்டால் கஷ்டப்படுவது யார்?
 

article_1484799376-yhfkjk.jpgபோனால் போகட்டும் எனச் சிலர் வெகு சுலபமாகச் இழப்புப் பற்றிச் சொல்லுவார்கள். தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு யார் காரணம்? எதற்காக நடந்தது? என்பது பற்றிச் சிந்திக்காமல் இப்படிச் சொல்லலாமா?  

எதனையும் செய்யும்போது, அது பற்றித் தெரிந்து, ஆராய்ந்து செய்ய வேண்டும். நட்டங்களுக்கான காரணத்தை அறியாமல் விட்டுவிட்டால் கஷ்டப்படுவது யார்? 

பாடுபட்டு உழைத்தவர்கள் கூட தங்களது அறியாமையினால் ஈட்டிய பொருளைப் போக்கடித்துவிட்டு, வாட்டத்துடன் வாழுகின்றனர்.  

உழைப்பதைவிட, அதன் மூலம் சேர்த்த பொருளைக் காப்பாற்றுவதே பலருக்கும் சிரமமாக இருக்கிறது.  

நிதானம், எச்சரிக்கை, முன் அனுபவம், இவையே அத்தொழிக்கு வாய்ப்பாக அமையும். உணர்க! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.