Jump to content

கடைசி வரை சென்ற கமெரா- ஐ.நா மன்றில் அமரதாஸ் உரையாற்றினார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரை சென்ற கமெரா- ஐ.நா மன்றில் அமரதாஸ் உரையாற்றினார்.

October 4, 2015

79ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் மன்ற அமர்வுகளின் தொடர்ச்சியாக, ஐ.நா பக்க அரங்கில் சுயாதீன ஊடகவியலாளரும் கலை இலக்கிய செயற்பாட்டாளருமான அமரதாஸ், தன் வசமுள்ள தமிழினப் படுகொலை சார்ந்த ஆதாரங்களை முன்வைத்து 2015.10.01 அன்று, உரையாற்றினார்.

போர்க்காலத்தில், தமிழின அழிப்புக் களத்தில், அவர் பதிவு செய்த ஒளிப்படங்கள் பலவற்றைக் காட்சிப்படுத்தி தமிழில் உரையாற்றும் போது ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டது. அமரதாஸ், யுத்த நெருக்கடிகளால் சூழப்பட்ட வன்னிப்பகுதிக்குள்ளிருந்து ஒரு கவிதைத் தொகுதியும், ஒரு ஒளிப்படத் தொகுதியும் வெளியிட்டிருக்கிறார். தனிநபர் ஒளிப்படக் காட்சியினையும் செய்திருக்கிறார். சினிமாத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், இறுதி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்கால் கடைசி வரை சென்று பல்வேறு நிலைமைகளையும் படங்களாகப் பதிவு செய்து, பல்வேறு வழிகளில் வெளிக்கொண்டு வந்தவர். அவரது உரையின் முக்கிய பகுதிகளும் வீடியோ இணைப்பும், அவரது சில ஒளிப்படங்களும் கீழே இணைக்கப்படுகின்றன.

 

 

” ஈழத்தில் கலை, இலக்கிய, சமூகச் செயற்பாடுகளில் அதிகமதிகம் ஈடுபட்டுக்கொண்டிருந்தவன் நான். ஒரு கவிதைத் தொகுதியும், போர்க்கால வாழ்வியல் உள்ளிட்ட ஈழத்தமிழர்களின் வாழ்வியலையும் நிலவியலையும் பிரதிபலிக்கும் வகையிலான ஒளிப்படங்களின் தொகுதியும் வெளியிட்டிருக்கிறேன். ஈழத்தின் போர்க்கால வாழ்வியல், என்னை சுயாதீன ஊடகவியலாளனாகவும் விரிவுரையாளனாகவும் ஆக்கியிருந்தது.

நீண்டகாலமாகத் தொடரும் சிங்கள-தமிழ் இன முரண்பாடுகளுக்கு மத்தியில் பிறந்து, போர்க்காலத்தில் அதன் கொடிய நெருக்கடிகளுக்குள்ளும் பற்றாக்குறைகளுக்குள்ளும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவன் நான்.

சிங்களப் பேரினவாத அரசுகளால், தமிழினமானது காலத்துக்குக் காலம் ஒடுக்குமுறைகளுக்கும் பல்வேறு வகையிலான படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்படுவதை நேரடியாகவே அறிந்தவன்.

முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்த இறுதிப் போர்க்காலகட்டத்தில் ஈழத்தமிழினம் இன அழிப்பிற்குள்ளானதை நேரடியாகக் கண்டவன் நான். இன அழிப்பு நடவடிக்கைகளை இயன்றவரையில் பெருமளவில் ஒளிப்படங்களாகப் பதிவு செய்திருக்கிறேன்.

உக்கிரமான இறுதிப் போர்க்காலத்தில் மக்களோடும் வலிகளோடும் எனது மூன்றாவது கண்ணாக, மெய்யான சாட்சியாக, முள்ளிவாய்க்கால் கடைசி வரை சென்ற கமெரா என்னுடையது.

ஒடுக்குமுறைகளுக்கும் இன அழிப்பிற்கும் உள்ளான ஈழத்தமிழினத்தின் பிரதிநிதியாக, அற நிலைப்பட்ட ஊடகவியலாளனாக, உண்மையின் குரலைப் பதிவு செய்ய இந்த ஐ.நா மன்றம் வரை வந்திருக்கிறேன்.

இதுவரையில் சந்தித்த நெருக்கடிகளும் அவலங்களும் துயர்களும் ஆபத்துக்களும் ஏராளம். இனியும் அவை தொடரும் என்று தான் தோன்றுகிறது.

இந்த ஐ.நா மன்றத்தில் என் கதையோ பெருமையோ பேசுவது என் நோக்கமில்லை. காலத் தேவை கருதி என் இனத்தின் அவலத்தை, இயன்றவரை சுருக்கமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

தீவிரமாகப் போர் நடைபெற்ற மிக நெருக்கடியான காலப்பகுதியில் மக்களோடு இடம்பெயர்ந்து அலைந்துகொண்டே , மக்களோடு சேர்ந்து எல்லா அவலங்களையும் எதிர்கொண்டபடியே எல்லவற்றையும் பதிவு செய்தேன்.

எந்த வகையிலும் போர் நெருக்கடிகள், அழிவுகள், இழப்புக்கள் போன்றவற்றிலிருந்து விடுபடவோ, அவற்றை நிறுத்தவோ முடியாதிருந்தபோது, எல்லாவற்றையும் தீவிரமாகப் பதிவு செய்தேன். எப்போதாவது இது என் இனத்தின் கதையை, உண்மைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுபோகும் என்றும், என் இனத்தை ஏதோ ஒரு வகையில் காக்கும் என்றும் நினைத்துக்கொண்டுதான் தீவிரமாக இயங்கினேன்.

ஒரு கட்டத்தில் ஒரு முதிய பெண், நான் படமெடுத்துக்கொண்டிருந்தபோது ‘இதனால் இப்போது என்ன பயன்’ என்று மிகவும் ஆக்ரோசமாகவும் வேதனையோடும் அழுதபடி கேட்டார். அப்போது அவருக்கு ஏதும் சொல்லமுடியவில்லை. இப்போதும் அந்தப் பெண்னின் குரல் என்னுள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

என் பதிவுகளில் பலவற்றை, காலத்தின் தேவை கருதி பல்வேறு வழிகளில், ஊடகங்களில், என் அடையாளங்கள் எதுவும் தெரியாதபடி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். பல்வேறு ஊடகங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் அநாமதேயமாகப் பயன்படுத்தப்படுகின்ற இனப்படுகொலை சார்ந்த படங்களில் பெரும்பாலானவை நான் பதிவு செய்தவை.

தமிழினத்தின் மீது சிங்களப்பேரினவாத சக்திகள், பல சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையோடு நிகழ்த்தி முடித்த, இனப்படுகொலை நடவடிக்கைகளின் உண்மையான ஆதாரங்களோடு கூடிய உயிருள்ள சாட்சியாக இந்த ஐ.நா அவையில் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்.

எனது படங்களின் துணையோடு, அவற்றின் பின்னணிக் கதைகளோடு பல மணி நேரங்கள் பேசமுடியுமாயினும், குறிப்பிட்ட நேரத்திற்குள் எனது வெளிப்பாட்டை முடிக்கவேண்டியிருப்பதால் , வகைமாதிரிக்கு சில படங்களைக் காட்சிப்படுத்தி, அவற்றையொட்டி சில விசயங்களை மட்டும் பதிவு செய்ய முயல்கிறேன்.

படுகொலை செய்யப்பட்ட, சிதைக்கப்பட்ட வெறும் சடலங்களை மட்டும் நான் பதிவு செய்யவில்லை. உண்மையில் அவற்றையெல்லாம் பதிவு செய்யும் விருப்பம் எனக்கு இருக்கவில்லை. அதையும் நானே செய்யவேண்டியிருப்பதை உணர்ந்து அதைச் செய்யவேண்டியிருந்தது. ஒருவகை விடுபட்ட மனநிலையிலிருந்தே அதைச் செய்திருப்பதாக உணர்கிறேன்.

எல்லோரும் பாதுகாப்புத் தேடி ஓட , பதுங்கு குழிகளுக்குள் முடங்க, நானோ உயிராபத்துகள் நிறைந்த , தடைசெய்யப்பட்ட கனரக இரசாயன ஆயுதப் பிரயோகங்களும் , விமானக் குண்டுவீச்சுக்களும் , சரமாரியான எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்ட நிலப்பரப்புக்களில் ஒளிப்படங்களைப் பதிவு செய்வதற்காகத் திரிய வேண்டியிருந்தது.

கண்டவற்றையெல்லாம் பதிவு செய்யவும் முடியவில்லை. பதிவு செய்தவற்றையெல்லாம் காப்பாற்றிக் கரை சேர்க்கவும் முடியவில்லை. இழந்தவை போக என்னிடம் எஞ்சியிருப்பவையே ஏராளம்.

வெறும் சடலங்களை மட்டும் நான் இங்கே காட்டப்போவதில்லை. அதில் எனக்கு முழு விருப்பமுமில்லை. சடலங்களின் படங்கள் ஏற்கெனவே நிறைய வெளிவந்துவிட்டன. இப்போது அதிகமும் இனப்படுகொலைக்குள்ளான இனத்தின் முகங்களையும், வலிகளையும், உணர்வுகளையும் காட்டப்போகிறேன்.

என் இனத்திற்கு இப்படியொரு அவலம் நிகழ்ந்து, அதை நான் பதிவு செய்து, இப்படியொரு சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்த வேண்டியிருக்கிற அவல நிலையை எண்ணி மிகவும் வருந்துகிறேன்.

படமெடுக்கும் போது உயிரோடிருந்த பலர் இறந்து போனதைப் பார்த்திருக்கிறேன். அநீதியான முறையில், அநியாயமாக, வலிந்து இறந்துகொண்டிருக்கும் போது, அந்த இறப்பை எந்த வகையிலும் நிறுத்த முடியாமல், பார்த்துக்கொண்டு மட்டுமே படமெடுத்துக்கொண்டு மட்டுமே இருக்கவேண்டிய நிர்ப்பந்தமான, அவலமான நிலைமை உலகில் யாருக்கும் வரக்கூடாது.

முதலில் எனது படங்கள் வெளியான பிரசுரங்கள் சிலவற்றை வகைமாதிரிக்கு அறிமுகப்படுத்திவிட்டு, தொடர்ந்து சில படங்களைக் காட்சிப்படுத்தப் போகிறேன்.

எல்லாப் படங்களுக்குமான விளக்கத்தை இந்த இடத்தில் எனக்குச் சொல்லமுடியாமலிருக்கும். படங்கள் பற்றி நான் அதிகம் பேசவேண்டுமென்றில்லை. படங்களே பேசக்கூடிய தன்மையில் இருக்கும். ஆனாலும், சில படங்களுக்கான சில பின்னணித்தகவல்கள் சொல்லவேண்டியிருப்பதால் மட்டும், நான் குறுக்கிட்டுச் சில விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன். படக்காட்சி முடிந்ததும் சில விடயங்களைக் கதைக்க விரும்புகிறேன்.

151.peoples tribunal on sri lanka

இங்கு நீங்கள் பார்க்கின்ற இந்த முதிய பெண்னின் முகத்தைக் கொண்ட கடைசிப் படமானது, தமிழினப் படுகொலையை உறுதிப்படுத்தி ஜேர்மனில் 2013 இறுதியில் நிகழ்த்தப்பட்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் சாராம்சமாகத் தொகுத்து வெளியிடப்பட்ட நூலின் அட்டைப்படமாக வந்தது. இந்தப் படத்தின் பின்னே ஒரு நெகிழ்ச்சி மிக்க அவலமான கதையும் ஒரு வேண்டுதலும் இருக்கிறது. இந்தப் பெண் இப்போது உயிரோடு இருக்கிறாரோ தெரியவில்லை. என் படங்களில் பதிவாகிய பலர் இப்போது எங்கே, எப்படியிருப்பார்களோ தெரியவில்லை. அவர்கள் உயிரோடிருந்தால் அவர்களைச் சந்தித்து பரிமாறிக் கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன. இந்தப் பெண்ணின் படத்தின் பின்னணியை இப்போது நான் பகிரப்போவதில்லை. அவசியமுமில்லை. இப் படம் , இப்போது இனப்படுகொலைக்குள்ளான, இப்போதும் நுட்பமான இன அழிப்பிற்குள்ளாகிற, சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி நிற்கிற, ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்தின் குறியீடாகத் தெரிகிறது.

இலங்கைக்குள் நீண்டகாலமாக நிலவிவருவது இனப்பிரச்சினை தான். தமிழினம் வெளிப்படையாக அழிக்கப்படும் போது தடுத்து நிறுத்த முன்வராத, அரசியல் மற்றும் பொருளாதார நலன்களையும் சுயநல உள்நோக்கங்களையும் கொண்ட வல்லாதிக்க சக்திகள் மலிந்த சர்வதேச சமூகம், தமிழினத்துக்கு சுயநல நோக்கின்றி பொருத்தமான, சரியான தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமென்று நம்புவது கடினம் தான்.

ஆயினும், இந்த ஐ.நா மன்றத்தில் உண்மைகளோடும் காட்சி ரீதியான ஆதாரங்களோடும் ஒரு உயிருள்ள சாட்சியாக, எல்லா விதமான அநீதிகளுக்கும் எதிரான அறத்தின் குரலை அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்.

சுயநிர்ணய உரிமை என்பது தேசிய இனங்களின் அடிப்படை உரிமை என்று ஐ.நா நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைக் கூறுகளாக ஐ.நா வரையறுக்கின்ற அத்தனைக் கூறுகளையும் கொண்டது தமிழினம். அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு.

இனப்படுகொலைக்கான நீதியான பரிகாரமே, இலங்கை இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வுக்கு வழிவகுக்க முடியும்.

நடந்திருப்பது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல. இனப்படுகொலை என்று நிரூபிக்கக்கூடிய வகையில் கண்மூடித்தனமான மோசமான குற்றச் செயல்களும் நடந்திருக்கின்றன.

போர்க்குற்றங்கள் எனப்படுபவை வேறு, இனப்படுகொலைக் குற்றங்கள் எனப்படுபவை வேறு. இரண்டுக்குமான விளக்கங்களை நான் இதில் சொல்ல விரும்பவில்லை. போர்க்குற்றங்களுக்கான நிறைய ஆதாரங்கள் ஏற்கெனவே வெளிவந்து விட்டன. அவை நிரூபிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன . இனப்படுகொலைக்கான முற்று முழுதான ஆதாரங்களை என்னால் வழங்க முடியும். ஏனெனில் நான் இனப்படுகொலை நடந்த களத்திற்கு உள்ளே இருந்தவன்.

இலங்கையில் நடந்தவை போர்க்குற்றங்கள் மட்டுமல்ல, தமிழின அழிப்பும் தான் என்பது சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் போதுதான், தமிழினம் சுயநிர்ணய உரிமை கொண்ட தனியான இனமென்பதும், இன விடுதலைக்கான நீண்ட கால விடுதலைப் போராட்ட நியாயங்களும், தியாகங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக அமைய முடியும்.

இந்த ஐ.நா மன்றம் என்பது, வெறுமனே கற்களாலும் சடப்பொருட்களாலும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறதா அல்லது உண்மையான மனிதாபிமானமும் அறமும் நீதி பரிபாலனமும் கலந்து கட்டியெழுப்பப்பட்டிருக்கிறதா என்பதை இந்த ஐ.நா மன்றமே உறுதி செய்துகொள்ளட்டும்.

இதுவரை எனது வெளிப்பாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த, கேட்டுக்கொண்டிருந்த, அவதானித்துக்கொண்டிருந்த எல்லோருக்கும் நன்றி.”

 

 

 

 

 

 

2542465579839399101107119120128

 

 

 

http://irruppu.com/?p=86584

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.