Jump to content

முன்னத்தி ஏர் 1 - சத்தியமங்கலத்தில் ஓர் ‘இயற்கை வேளாண் பள்ளி'


Recommended Posts

sundar_jpg1_2553311g.jpg

இயற்கை வேளாண்மை என்ற கரு, உருக்கொண்ட காலகட்டத்தில் பல உழவர்கள் இதில் முன்னோடிகளாக - முன்னத்தி ஏர்களாகக் களம் இறங்கினர். பிழை திருத்தச் சுழற்சியில் அவர்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தனர். பொருள் இழப்பு, கால இழப்பு, அண்டை அயலாரின் ஏச்சுப் பேச்சு என்று மிகுந்த அழுத்தங்களுக்கு ஆளாகினர். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு அரசு எந்தவித ஆதரவோ, உதவியோ செய்யவில்லை என்பது வருத்தத்துக்கு உரிய செய்தி.

இப்படித் தங்களை இழந்து இயற்கைவழி வோளண்மையை முன்னனெடுத்தவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், வேளாண் மையில் நீண்ட நெடிய அனுபவமும், அதை மற்றவர்களுக்குக் கற்றுத்தரும் திறனும் கொண்டவருமான சத்தியமங்கலம் சுந்தரராமன்.

பயிற்சிக் கழகம்

தமிழகத்தில் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் உள்ள இயற்கை வேளாண் உழவர்களுக்கு நன்கு அறிமுகமானர் இவர். இவருடைய பண்ணை பதிவு செய்யப்படாத ஒரு இயற்கைவழி வேளாண் கல்லூரியாகவே திகழ்கிறது. தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகத்தின் தலைவரான இவர், பல்வேறு இயற்கைவழி வேளாண்மையாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிவருகிறார்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்துக்கு அருகில் உள்ள கோம்புப் பள்ளத்தில் இவருடைய 13 ஏக்கர் பண்ணை உள்ளது. மண்புழு உரப்படுகை, மட்கு உரப்படுகை, வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் பூச்சி விரட்டிகளுக்கு உரிய ஊறல் கரைசல்கள் என்று உயிர்ம வேளாண்மைக்கு உரிய பல்வேறு உதவிகளுடன் ஒரு விளக்கப் பண்ணையாகவே உள்ளது. நாள்தோறும் பல பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். பல்கலைக்கழகத்தில் படித்தவர் முதல் பாமரர்கள்வரை பலருக்கும் இது ஒரு பயிற்சிப் பண்ணையாக உள்ளதை மறுக்க முடியாது.

கூடுதல் ஊதியம்

எழுபது வயதைத் தாண்டிவிட்ட இவர் வேதி வேளாண்மையில் மட்டுமே 35 ஆண்டுகள் பட்டறிவு கொண்டவர். ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபட்டுவருகிறார்.

இடுபொருள் இல்லாத இயற்கை வேளாண்மையை மேற்கொண்டாலும், கட்டுப்படியான விலை கிடைக் காதவரை உழவர் சமூகத்தைக் காப்பாற்ற முடியாது என்பது இவருடைய தீர்மானமான கருத்து. தனது பண்ணையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மற்றவர்களைவிட, சற்றுக் கூடுதலாகவே ஊதியம் கொடுக்கிறார். தொழிலாளர்களைக் கண்ணியமாக நடத்துகிறார், மற்றவர்களும் அவ்வாறு நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார். நிலவுடைமையாளர்களும் உழைப் பாளிகளும் வேளாண்மையில் பிரிக்க முடியாத உறுப்புகள் என்று கூறும் இவர், வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், நெல்லுடன் வணிகப் பயிர்களான கரும்பு, மக்காச்சோளம், மஞ்சள் போன்றவற்றையும் சாகுபடி செய்கிறார்.

ஊனமுற்ற நிலம்

அதேநேரம், பசுமைப் புரட்சியால் ஏற்பட்ட கோளாறுகளைப் பட்டியலிடத் தவறுவதில்லை. ‘பசுமைப் புரட்சியில்' ஈடுபட்டு இவர் தன்னுடைய நிலத்தில் கொட்டிய உப்புஉரங்களும், பூச்சிக்கொல்லிகளும் கிணற்று நீரை மிகக் கடுமையாகப் பாதித்து விட்டன. இவருடைய கிணற்று நீர், கடின நீராக மாறியதோடு உவர்ப்புத்தன்மை கொண்டதாகவும் மாறிவிட்டது.

இதனால் இவர் மற்ற இயற்கைவழி வேளாண்மையாளர்களைவிட, மண்ணில் கூடுதலாக மட்கு உரம் சேர்க்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதை இவர் மொழியிலேயே கூறுவதானால் “நான் ஊனமுற்றவனாக மாற்றப்பட்டுள்ளேன். இதனுடன்தான் நான் நடந்தாக வேண்டும்' என்று இவர் கூறும்போது, நம் மனது வேதனைப்படுகிறது.

ஏமாந்துவிட்டோம்

பூச்சிகளைப் பற்றிய இவருடைய அறிவு விரிவானது. பூச்சிக் கொல்லிகளைப் பற்றிய அறிவோ அதைவிட அகலமானது. “ஏன் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாது' என்று டார்வின், லமார் போன்ற அறிஞர்களைக் குறிப்பிட்டு விளக்குகிறார். இவருக்கு இயற்கை வேளாண்மை பற்றிய புரிதல் வருவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர் சத்தியமங்கலம் நாகராசன் என்னும் மார்க்சிய அறிஞர். அவரை தனது குரு என்று கூறும் சுந்தரராமன் ‘பசுமைப் புரட்சியின் தொடக்கக் காலத்திலேயே, அதை எதிர்த்தவர் எஸ்.என்., அதைப் புரிந்துகொள்ளாமல் நாம் ஏமாந்துவிட்டோம்' என்கிறார்.

பொதுவாக வேளாண்மையில் இருப்பவர்கள் தங்களுடைய அடுத்த தலைமுறையை வேளாண்மையை விட்டு வேறு துறைகளுக்கு அனுப்பவே விருப்புகிறார்கள். இவர் அதற்கு மாறாக, முதுகலைப் பட்டம் பெற்ற தன்னுடைய மகனை அவருடைய விருப்பத்துடனேயே வேளாண்மைக்குள் இறக்கியுள்ளார். இயற்கைவழி வேளாண்மைப் பரப்புரைக் கூட்டங்களுக்கு இவர் போய்விடுவதால் இவருடைய துணைவியும், மகனுமே பண்ணையை மேலாண்மை செய்கிறார்கள்.

(அடுத்த வாரம்: சுந்தரராமனின் இயற்கை முறை மஞ்சள் சாகுபடி)

விவசாயி சுந்தரராமன் தொடர்புக்கு: 9842724778

sundar_2553312g.jpg

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-1-சத்தியமங்கலத்தில்-ஓர்-இயற்கை-வேளாண்-பள்ளி/article7668026.ece

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 2- நஷ்டமில்லாத இயற்கை வேளாண் சாகுபடி

இயற்கை வேளாண் பயிற்சியில்
இயற்கை வேளாண் பயிற்சியில்

ஒரு பண்ணையாளர் தனது உழைப்புக்கான ஊதியத்தை வரவு செலவில் பெரும்பாலும் குறிப்பிடுவதே இல்லை. ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் மேலாளருக்கு என்ன ஊதியம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவுக்காவது கணக்கிடப்பட வேண்டும் என்கிறார் சத்தியமங்கலம் சுந்தரராமன். ஏனெனில், ஒரு பண்ணை உரிமையாளர் இயற்கையின் சாதகப் பாதகங்கள், விலை ஏற்ற இறக்கங்கள், பூச்சித் தாக்குதல்கள் போன்ற கணித்தறிய முடியாத சவால்களை ஏற்றுக்கொண்டுதான், தனது பண்ணையை நடத்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவளிக்கிறார். இதை எந்தக் கொள்கை வகுப்பாளர்களும் கண்டுகொள்ளவில்லை என்பது இவருடைய ஆதங்கம்.

இயற்கை விளைச்சல்

இவர் 2,200 கிலோ மஞ்சள் விளைச்சலையும் சில முறை எடுத்துள்ளார். இயற்கை சாதகமாக இருக்கும் நேரங்களில் இது சாத்தியம். வேதிமுறை வேளாண்மையில் 1,000 கிலோவுக்கும் குறைவாகவே விளைச்சல் எடுத்துள்ளார். ஆனால், இயற்கைமுறைக்கு மாறிய பின்னர் 1,500 கிலோவுக்கும் குறைவாக விளைச்சல் எடுக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இயற்கை வழி வேளாண்மை என்பது பாதகமான சூழலிலும்கூட நஷ்டத்தைக் கொடுக்காத முறை என்பது இவருடைய ஆணித்தரமான கருத்து.

மஞ்சள் சாகுபடி கணக்கு

இவருடைய மஞ்சள் சாகுபடி வரவுக் கணக்குகளைப் பார்ப்போம்:

ஒரு ஏக்கர் சாகுபடிச் செலவு: (மஞ்சள் நடவு செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்பு பல பயிர் சாகுபடி செய்ய வேண்டும். அவை பசுந்தாள் உரமாகப் பயன்படும்)

2 முறை உழவு, 4 ஏருழவு ரூ. 400, மண்புழு உரம் 6 டன் (சொந்தம்) செலவில்லை, பல பயிர் விதைகள் (25 கிலோ) ரூ. 500, பார் அமைக்க உழவு ரூ. 1,000, பார் கோதுதல் ரூ. 400, நுண்ணுயிர் கலவை உரம் (சொந்தம்) செலவில்லை, நுண்ணுர் வித்துகள் ரூ. 90, வளர்ச்சி ஊக்கிகள் (சொந்தம்) செலவில்லை, பலபயிர் மடக்கி உழுதல் ரூ. 1,000, மஞ்சள் நடவு பார் ஓட்ட ரூ. 100, பார் கோதுதல் ரூ. 600, விதை மஞ்சள் (சொந்தம்) செலவில்லை, மஞ்சள் நடவு ரூ. 360, சுரண்டு களை (12-ம் நாள்) ரூ. 600, கொத்து களை (22-ம் நாள்) ரூ. 600, சுரண்டு களை (35-ம் நாள்) ரூ. 800, இடைவெளியில் பலபயிர் விதைப்பு ரூ. 160, களை எடுப்பு (55-ம் நாள்)ரூ. 600, பலபயிர் பிடுங்கி மூடாக்கு ரூ. 600, மூடாக்கு மண் அணைப்பு ரூ. 800, களை எடுப்பு (120-ம் நாள்) ரூ. 600, 10 முறை வளர்ச்சி ஊக்கிகள் - பூச்சிவிரட்டிகள் தெளிப்பு செலவுரூ. 1,250, நுண்ணுயிர் வித்து ரூ. 1,200, திறமி ரூ. 120, பாசனம் 25 முறை ரூ. 2,500, அறுவடைச் செலவு ரூ. 5000, மஞ்சள் வேகவைத்தல் மற்றும் பிற அறுவடை பிந்தைய செலவுகள் ரூ. 7,000

ஆக மொத்தம் ரூ. 26,280 (தனது மேலாண்மைக்கான ஊதியத்தை இவர் இதில் குறிப்பிடவில்லை)

வரவு

இவர் 15 குவிண்டால் முதல் 22 குவிண்டால்வரை எடுத்துள்ளார். எனவே, வருமானத்தைப் பின்வருமாறு கணிக்கலாம்:

man_2561883a.jpg

இவர் 2,200 கிலோ மஞ்சள் விளைச்சலையும் சில முறை எடுத்துள்ளார். இயற்கை சாதகமாக இருக்கும் நேரங்களில் இது சாத்தியம். வேதிமுறை வேளாண்மையில் 1,000 கிலோவுக்கும் குறைவாகவே விளைச்சல் எடுத்துள்ளார். ஆனால், இயற்கைமுறைக்கு மாறிய பின்னர் 1,500 கிலோவுக்கும் குறைவாக விளைச்சல் எடுக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இயற்கை வழி வேளாண்மை என்பது பாதகமான சூழலிலும்கூட நஷ்டத்தைக் கொடுக்காத முறை என்பது இவருடைய ஆணித்தரமான கருத்து.

புதிய முறைகள்

இவருடைய பண்ணையில் அறுவடையான மஞ்சளைப் பாதுகாக்கச் சாண எரிவாயுவைப் பயன்படுத்திப் புகைமூட்டம் போடும் புதிய தொழில்நுட்பம் ஒன்றைப் புகுத்தியுள்ளார். மரப்பயிர்களை அதிக அளவில் நட்டு வளர்த்து, தனது பண்ணையை ஒரு சோலையாகவும் உருவாக்கியுள்ளார்.

இவருடைய மண்ணில் இப்போது மட்கும் தன்மை அதிகரித்துள்ளது. இவருடைய கிணற்று நீர், உப்புத்தன்மை நீங்கி நல்ல நீராக மாறியுள்ளது. கிணற்றில் நீர்மட்டம் நன்கு உயர்ந்துள்ளது. நீர் உயர்வுக்குக் காரணம் தனது நிலத்தில் ஏராளமாகக் காணப்படும் மண்புழுக்கள் என்று குறிப்பிடுகிறார். இங்கு பெய்யும் மழையின் பெரும்பான்மையான நீர், இவருடைய நிலத்தைவிட்டு வெளியேறுவது கிடையாது. காரணம் இங்குக் காணப்படும் மண்புழுக்கள் உருவாக்கியுள்ள துளைகள். இந்த நுண்துளைகள் வழியாக நீர் உள்ளிறங்கி விடுகிறது. எனவே நீர்மட்டமும் உயர்கிறது.

(அடுத்த முறை: தண்ணீர் சேகரிப்பில் சாதிக்கும் விவசாயி) சுந்தரராமன், தொடர்புக்கு: 98427 24778

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-2-நஷ்டமில்லாத-இயற்கை-வேளாண்-சாகுபடி/article7692147.ece

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 3: சில ஆயிரம் செலவில், லட்சம் லிட்டர் தண்ணீர்

water_jpg1_2570458f.jpg
 

உலகுக்கு உணவு தரும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே நெருக்கடியாக இருக்கக்கூடிய இயற்கை வளம் தண்ணீர். குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது நமக்குத் தெரியும். கோடையில் தென்னையைக் காப்பாற்ற தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பாசனம் செய்யும் உழவர்கள் நம்மூரில் இருப்பது அதைவிடக் கொடுமை. இப்படி நீரின் தேவையும் அழுத்தமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.

அனைத்துப் பொருட்களைவிடவும் நீர் விலைமதிப்பற்றது. ஏனென்றால், நீரை விளைவிக்க முடியாது. அதனால்தான் நமது முன்னோர் `நீரின்றி அமையாது உலகு’ என்று கூறிவைத்தார்கள். அளவற்ற அன்பை செலுத்துவதுபோல, தனது பிள்ளைகளாகிய உயிரினங்களுக்கு நீரை இயற்கை அள்ளிக் கொடுத்துள்ளது. உலகில் மனித குலம் மட்டுமே, தண்ணீரை மாசுபடுத்தி அழிக்கும் பணியைச் செய்கிறது. குறிப்பாக, பேராசை பிடித்தாட்டும் மனிதர்களால்தான் அது நடக்கிறது. காட்டில் வாழும் பழங்குடிகளும், கடலருகே மீன் பிடித்து வாழும் மீனவர்களும், ஏழை உழவர்களும் இந்தக் கொடுமையைச் செய்வதில்லை.

குறைந்த செலவு

இந்தப் பின்னணியில் மழையால் கிடைக்கும் நீரை, முறையாகச் சேமித்தாலே நமது தேவையில் பெரும் பகுதியை நிறைவு செய்துகொள்ளலாம். அந்த முயற்சியில் மிகக் குறைந்த செலவில், மழைநீர் அறுவடை செய்யும் பணியை செய்துவருகிறார் உடுமலைப்பேட்டை சிவக்குமார்.

தன்னுடைய பண்ணையில் இவர் இதைச் செய்துள்ளதோடு மற்ற உழவர்களுக்கும் இந்த ஏற்பாட்டை செய்துகொடுத்துவருகிறார். இவர் ஓர் இயற்கைவழி உழவர்.

இவருடைய ஒருங்கிணைந்த பண்ணையில் தென்னை, பட்டுப்புழு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகியவற்றுடன் காய்கறிச் சாகுபடியும் நடக்கிறது. இவரது கோழி வளர்ப்பு மாதிரியும் அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமே. மிகக் குறைந்த செலவில் கோழி வளர்க்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளார்.

நீர் சேமிப்பைப் பொறுத்தவரையில் ஏறத்தாழ ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் செலவில், நீர் சேமிப்பு அமைப்பை இவர் உருவாக்கிவிடுகிறார். இந்த முறையின் அடிப்படை அம்சம் ஆழ்துளைக் கிணறுகளிலும், சாதாரண திறந்தவெளிக் கிணறுகளிலும் நேரடியாக நீரைச் செலுத்துவதுதான்.

எப்படிச் செய்வது?

மழைக் காலத்தில் நம் வயலுக்கு அருகில் உள்ள ஓடை அல்லது குளங்களில் தண்ணீர் வந்து சேரும். அப்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் நீர் அங்கு நிற்காமல், பயன்படாமல் வெளியேறிவிடும். அந்த நீரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இவருடைய கோட்பாடு. அந்த அடிப்படையில் ஒரு குளத்தில் இருந்தோ, ஓடையில் இருந்தோ அல்லது புதிதாக ஒரு பண்ணைக் குட்டையை அமைத்தோ, நீர் வந்து சேரும் இடத்தை இவர் தேர்வு செய்கிறார். அந்த இடத்திலிருந்து ஏறத்தாழ ஐந்து அடி ஆழத்துக்கு வாய்க்கால் அமைக்கிறார். அந்த வாய்க்கால் ஆழ்துளைக் கிணற்றை நோக்கி அமைக்கப்படுகிறது.

அதன் பின்னர் வாய்க்கால் வரும் வழியில் வடிகட்டும் அமைப்பு ஒன்று உருவாக்கப்படுகிறது. இது மிகவும் இன்றியமையாத ஒரு செயல்பாடு. இதற்கும் செலவு குறைவான முறையையே இவர் கையாளுகிறார். இந்த வடிகட்டும் அமைப்பைப் பலரும் மிக அதிக செலவு செய்து உருவாக்குகின்றனர், அது தேவையற்றது.

வடிகட்டும் அமைப்பை உருவாக்க பிளாஸ்டிக் பீப்பாய் பயன்படுத்தப்படுகிறது. இருநூறு லிட்டர் கொள்ளளவு உள்ள பீப்பாய் பரவலாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது, அது போதும். இந்தக் கலனில் ஆறு மில்லி மீட்டர் அளவுகொண்ட, நெருக்கமான துளைகள் இடப்படுகின்றன. அதன் பின்னர் அந்தப் பீப்பாயின் நடுவில் ஆறு விரற்கடை (இஞ்ச்) விட்டமுள்ள பி.வி.சி. குழாய் பொருத்தப்படுகிறது. அந்தக் குழாயில் மிகக் சிறிய துளைகள் இடப்படும்.

நடுவில் பொருத்தப்படும் குழாயைச் சுற்றி, ஒரு சல்லடைத் துணி நன்கு கட்டப்படுகிறது. அதேபோல பீப்பாயின் உட்பகுதியில், அதாவது, சுவற்றுப் பகுதியிலும் சல்லடைத் துணி பொருத்தப்படுகிறது. இதன் இடைவெளியில் கசடு, கழிவு அகற்றப்பட்ட குறுமணல் நிரப்பப்படுகிறது. இது மணல் வடிகட்டியாகச் செயல்படும்.

இந்த அமைப்பை ஒழுங்கு செய்த பின்னர், குளத்திலிருந்து ஐந்தடி ஆழத்தில் உள்ள வாய்க்கால் வழியாகக் கொண்டுவரப்படும் பி.வி.சி. குழாயுடன் இணைக்கப்படும். இப்படியாகக் குளத்திலிருந்து நேரடியாக வடிகட்டும் அமைப்புக்கு நீர் வந்துவிடுகிறது.

புவியீர்ப்பு விசை

இதன் பின்னர் வடிகட்டியில் இருந்து நீர், கிணற்றுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்காக பீப்பாயின் நடுவில் உள்ள குழாயுடன் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதாவது, மணல் வடிகட்டியில் நீர் தூய்மைப்படுத்தப்பட்டு, குழாய் வழியாக இறங்கி, கிணற்றுக்கு வந்து சேர்கிறது. இதனால் எந்தவித கசடும், மண்ணும் தண்ணீரில் கலந்திருப்பதில்லை. இந்த வடிகட்டி அமைப்பு பல ஆண்டுகளுக்கு வேலை செய்கிறது. இந்த முறையில் எந்த வகையிலும் மின்சாரமோ, ஆற்றலோ தேவையில்லை. நீரை ஏற்றவோ, தள்ள வேண்டிய தேவையோ கிடையாது. முற்றிலும் புவியீர்ப்பு விசையை அடிப்படையாகக் கொண்டு இது செயல்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர்

இந்த அமைப்பின் மூலம் முதல் பருவ மழையிலேயே ஆழ்துளைக் கிணறுகள் போதிய அளவு நீரைப் பெற்றுவிடுகின்றன. அதுமட்டுமல்ல, நீர் வறண்டு உயிர்விட்ட கிணறுகள்கூட, இந்த அமைப்பு மூலம் உயிர்ப்பிக்கப்பட்டு நீர் மட்டம் உயர்கிறது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட கிணறுகளுக்கு அருகிலுள்ள மற்ற கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்கிறது. இப்படியாக மிகக் குறைந்த செலவில் ஓராண்டிலேயே சில லட்சம் லிட்டர் நீரைப் பெறும் உத்தியை, இவர் உருவாக்கி இருக்கிறார். தேவைப்படுபவர்களுக்கு இந்த ஏற்பாட்டை அவர் செய்தும் கொடுக்கிறார்.

(அடுத்த வாரம்: புதுமை படைக்கும் பெண் விவசாயி)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

விவசாயி சிவக்குமார் தொடர்புக்கு: 7598378583

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-3-சில-ஆயிரம்-செலவில்-லட்சம்-லிட்டர்-தண்ணீர்/article7718849.ece?homepage=true

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 4 - மானாவாரியில் சாதித்த பெண் விவசாயி

கோப்புப் படம்

 

மானாவாரி எனப்படும் வானவாரி வேளாண்மை மிகவும் கடினமானது மட்டுமல்ல, நிச்சயமற்றதும்கூட.எதிர்பார்ப்புக்கு மாறாக மழைப்பொழிவு குறைந்துவிட்டால், விளைச்சல் கிடைக்காது. இதைச் சமாளிக்க நமது முன்னோர் நாட்டுரக விதைகளை, அதாவது வறட்சியைத் தாங்கும்தன்மை கொண்ட விதைகளைப் பயன்படுத்தினர். ஆனால், பசுமைப் புரட்சிக்குப் பின்னர் வீரிய விதைகள் என்ற பெயர் கொண்ட தாக்குப்பிடிக்காத விதைகள், அதாவது வறட்சியைத் தாங்க முடியாத விதைகள் வந்தன. விளைவு போதிய மழை பெய்யாதபோது, பயிர்கள் கருகிப் போயின.

வேளாண்மைக்கு அரசின் ஆதரவு பொதுவாகவே குறைவு, அதுவும் மானாவாரி வேளாண்மைக்கு மிக மிகக் குறைவு. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில், நமது உணவில் புரதச்சத்துத் தேவையை மானாவாரி நிலங்களே 55 சதவீதம் இன்னும் பூர்த்தி செய்துவருகின்றன. இப்படிப்பட்ட மானாவாரியில், இயற்கை வேளாண்மையில் சாதித்துவருகிறார் ஒரு பெண் விவசாயி.

வசதியின்றியும் சாதிக்கலாம்

உலகுக்கு வேளாண்மையை அறிமுகம் செய்தவர்கள் பெண்கள் என்கின்றன வரலாற்று ஆய்வுகள். அது மட்டுமல்ல இன்றும்கூட வேளாண்மைப் பணியில் பெண்களின் பங்களிப்பே அதிகம். இயற்கைவழி வேளாண்மையிலும் பல பெண்கள் முன்னோடியாக உள்ளனர். அவர்களில் நாகஜோதியும் ஒருவர். `பணக்காரப் பண்ணையாளர்கள் மட்டும்தான் இயற்கை வேளாண்மை செய்ய முடியும்’ என்ற கருத்தைத் துணிச்சலாக முறியடித்தவர் இவர். மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டி அருகில் உள்ள சுப்புலாபுரம் என்ற சிற்றூரைச் சேர்ந்த இவர், தன்னுடைய நிலத்துக்குப் பாசன வசதி ஏதும் இல்லாத நிலையில் இதைச் சாதித்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக வேளாண்மையில் இவர் ஈடுபட்டு வருகிறார். பத்தாம் வகுப்புவரை படித்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் படித்து வருகின்றனர். இவருடைய குடும்பத்துக்கு எட்டரை ஏக்கர் மானாவாரி நிலம் சொந்தமாக உள்ளது. இவரும் இவருடைய கணவரும் தொடர்ந்து அதில் விவசாயம் செய்துவருகின்றனர்.

இரண்டு ஏக்கர் பரிசோதனை

பசுமைப் புரட்சியின் தாக்கம் இவர்களையும் விட்டுவைக்கவில்லை. அதிக விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேதி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளார் நாகஜோதி. முதலில் விளைச்சல் கூடியதுபோல் தென்பட்டாலும், பிறகு தொடர்ந்து படிப்படியாகக் குறையத் தொடங்கியது. நிலம் கடினத்தன்மை அடைந்தது.

உரம், பூச்சிக்கொல்லி வாங்குவதற்கு அதிகப் பணம் செலவானது. விவசாயம் கட்டுப்படியாகாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதுதான் தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகம் போன்ற அமைப்புகளின் மூலம் இயற்கைவழி வேளாண் உத்திகளை அறிந்துகொண்டு, நாகஜோதி பயன்படுத்தத் தொடங்கினார்.

ஆனால், இவருடைய கணவர் அதற்கு உடன்படவில்லை. இயற்கைவழி வேளாண்மை செய்தால் நல்லது, செலவு குறையும், மண்வளம் பாதுகாக்கப்படும் என்பதை எடுத்துக் கூறியபோதும், கணவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். இவருடைய விடாமுயற்சியால் முதலில் இரண்டு ஏக்கர் நிலத்தில் மட்டும் இயற்கைவழி வேளாண்மை செய்ய இவருடைய கணவர் ஒப்புக்கொண்டார்.

வியந்துபோன விவசாயிகள்

முதலில் இரண்டு ஏக்கர் நிலத்தில் தொழு உரம், மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம் போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தினார். உளுந்து, பாசிப்பயறு, பருத்தி பயிர் செய்தார். இவரே பூச்சிவிரட்டிகளை தயாரித்து, கைத்தெளிப்பான் மூலம் பயிர்களில் தெளித்தார். இதன் விளைவுகளை அந்த ஆண்டே பார்க்க முடிந்தது. நிலத்தில் களை அதிகம் இல்லை, இடுபொருள் செலவு குறைந்தது, விளைந்த பயறுகள் எல்லாம் திரட்சியாக இருந்தன.

அந்த ஆண்டு பயிர்களைப் பூச்சிகள் தாக்கவில்லை. இவருடைய அண்டை அயலார் இதைப் பார்த்து வியந்தனர். அவர்களால் நம்பமுடியவில்லை. வெளியூரில் இருந்தெல்லாம் பார்க்க வந்திருக் கிறார்கள். இரண்டாம் ஆண்டிலேயே ரசாயன வேளாண்மையைவிட, இயற்கை வேளாண் முறையில் அதிக விளைச்சலை எடுத்துவிட்டார். ஒருவழியாக இவருடைய கணவருக்கும் இயற்கைவழி வேளாண்மையில் நம்பிக்கை ஏற்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக இயற்கைவழி வேளாண்மையையே இருவரும் செய்துவருகின்றனர்.

பருத்தி அதில் ஊடுபயிராகக் குதிரைவாலி, துவரை என்று பலவிதமான மானாவாரிப் பயிர்களை இவர்கள் பயிரிட்டுவருகின்றனர். வேளாண்மை பணி இல்லாத காலங்களில், தனது விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டி, முறுக்கு போன்ற பண்டங்களாக மாற்றி விற்பனை செய்கிறார். வேதி வேளாண்மை, இயற்கை வேளாண்மை இரண்டுக்கும் இடையிலான வரவு - செலவு கணக்கை இவர் வைத்துள்ளார். அதிலிருந்து இயற்கை வேளாண்மை எப்படி லாபம் ஈட்டுவதாக உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்

ஆனால், இத்தனையும் இருந்தும் இவருடைய கடின முயற்சிக்கு அரசின் ஆதரவு இதுவரை கிடைக்கவில்லை.

எதில் செலவு குறைவு?

நாகஜோதி தனது பண்ணையத்தின் வரவு செலவு மதிப்பைக் கணக்கிட்டுள்ளார். இரண்டு ஏக்கர் நிலத்தில் இயற்கை வழி வேளாண்மை விவரம் (2010-ம் ஆண்டு கணக்கு):

செலவு

மண்புழு உரம் (500 கிலோ x ரூ. 4)- ரூ. 2000, அசோஸ்பைரில்லம் (82 பாக்கெட் x தோராயமாக ஒரு பாக்கெட் விலை ரூ. 6) - ரூ. 510,தொழுவுரம் (2 டிராக்டர் வாடகை ரூ. 250)- ரூ. 250 (குப்பை இவரிடமே இருந்ததால் குப்பைக்குப் பண மதிப்பு இல்லை), களை எடுப்பு - ரூ. 600, அறுவடைச் செலவு - ரூ. 250, சொந்த உழைப்பு ( 2 ஏக்கர்) - ரூ. 500, உழவுச் செலவு - ரூ. 1000

மொத்தச் செலவு - ரூ. 5110

வரவு

பாசிப்பயறு (300 கிலோ x ரூ.30) - ரூ. 9000,உளுந்து (200 கிலோ x ரூ.28) - ரூ. 5600,பருத்தி (300 கிலோ x ரூ. 20) - ரூ. 6000

மொத்த வரவு - ரூ. 20600

செலவு போக நிகர வருமானம் ரூ. 15,490

மீதமுள்ள 6 ஏக்கர் நிலத்தில் வேதி வேளாண்மையில் கிடைத்த வருமானம் பற்றியும் இவர் கணக்கிட்டுள்ளார்.

செலவு

உழவுச் செலவு - ரூ. 3000, டி.ஏ.பி. உரம் (7 மூடை x ரூ. 510) - ரூ. 3570, மேல் உரம் - ரூ. 300, பூச்சிக்கொல்லி - ரூ. 5000, களை எடுப்பு - ரூ. 10000, அறுவடை செலவு - ரூ. 2100, டிராக்டர் வாடகை - ரூ. 750, 3 முறை வண்டி ஏற்று கூலி, இறக்கு கூலி - ரூ. 150, சொந்த உழைப்பு ( 6 ஏக்கர்)- ரூ. 1500

மொத்தச் செலவு ரூ. 26,370

வரவு

உளுந்து (300 கிலோ x ரூ.30) - ரூ. 9000, பருத்தி (1000 கிலோ x ரூ.20) - ரூ. 20000, மொச்சை (200 கிலோ x ரூ.20) - ரூ. 4000

மொத்த வரவு ரூ. 33000

நிகர லாபம் ரூ. 6630

இயற்கை வழி வேளாண்மையில் ஏக்கர் ஒன்றுக்குச் சராசரியாக இவர் எடுத்த வருமானம் ரூ. 7745. வேதிமுறை வேளாண்மையில் ஏக்கருக்குச் சராசரியாக ரூ. 1105. எனவே, இயற்கை முறையில் ஏறத்தாழ 7 மடங்கு லாபம் கிடைப்பது தெரிகிறது. அத்துடன் மண் வளமும் அதிகரிக்கிறது.

nagajothi_2579338a.jpg

நாகஜோதி

விவசாயி நாகஜோதியைத் தொடர்புகொள்ள: 81100 84453

(அடுத்த வாரம்: கால்நடை களஞ்சியம்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் 
மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-4-மானாவாரியில்-சாதித்த-பெண்-விவசாயி/article7746736.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முன்னத்தி ஏர் 5: கால்நடைக் களஞ்சியம் கணேசன்

kaalnadai_2588198f.jpg
 

வேளாண்மையில் கால்நடைகளின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் இயற்கைவழி வேளாண்மைக்குக் கால்நடைகள் மிக மிக இன்றியமையாதவை. உழவர்களுக்கு உடனடியானதும் உறுதியானதுமான வருமானம் கால்நடைகளின் மூலமே கிடைக்கும். எனவே, வருமானம் என்று பார்த்தாலும் ஒரு பண்ணைக்குக் கால்நடைகள் அவசியமானவைதான். அதிலும் பண்ணைக் கழிவுகளை வளமான மக்குகளாக மாற்றுவதற்கான சாணம், மோள் (மாட்டுச் சிறுநீர்) போன்றவை கால்நடைகள் மூலம் கிடைக்கும். இதனால் வெளியில் இருந்து பண்ணைக்கான உரங்களை வாங்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.

ரசாயனங்களைத் தவிர்க்க மிகவும் உதவியாக இருப்பவை கால்நடைகள். அதிலும் மாடுகள் வேளாண்மைக்கு மிகவும் பொருத்த மானவை. பொதுவாகச் சிறு, குறு உழவர்கள் ஒன்றிரண்டு மாடுகளை வைத்துக்கொள்ளலாம். அதிலும் நமது உள்நாட்டு மாடுகள் மண்ணுக்கு ஏற்றவையாக இருக்கும். இன்றைக்குப் பல கலப்பின மாடுகள் நம்முடைய மண்ணுக்குப் பொருந்தியதாக மாறிவிட்டன. அவற்றைப் பயன் படுத்தலாம் என்றாலும், அவற்றுக்கான பராமரிப்புச் செலவு அதிகம். நாட்டு மாடுகளுக்கான பராமரிப்புச் செலவு குறைவு.

புதிய சர்ச்சை

அத்துடன் திமில் உள்ள மாடுகளுக்கும் திமில் இல்லாத மாடுகளுக்குமான வேறுபாடுகள் பற்றி பல்வேறு சர்ச்சைகள் வரத் தொடங்கிவிட்டன. குறிப்பாக 2000-ம் ஆண்டு ஏ1-பால், ஏ2- பால் என்ற பிரிவு வெளியாகி, அதற்கு ஒரு நியூசிலாந்து நிறுவனம் காப்புரிமையும் பெற்றுக்கொண்டது. இதனால் ஏ2 பால் (திமில் உள்ள மாடுகள் தருவது) பற்றிய கருத்துகள் வெளியாகின. இதற்கான ஆதரவும் எதிர்ப்பும் உருவானது. ஏ2 பால் சிறந்தது என்றும் ஏ1 பால் (திமில் இல்லாத மாடுகள் தருவது) உடலுக்குத் தீமை விளைவிக்கும் பீட்டா காசின் (beta-casein) என்ற புரதத்தைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் திடீர் மாற்றத்துக்கு (mutation) உட்பட்டதால் ஏ1 வகைப் பாலைத் தருவதாக மாறிவிட்டதாக அறிவியல் அறிஞர்கள் நம்புகின்றனர். இதை நிறுவுவதற்கான சான்றுகள் உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் திமில் இல்லாத மாடுகளின் மீது தேவையின்றிக் கடுமையான தாக்குதல்கள் பெருகின. அதனால் திமில் உள்ள மாடுகளுக்கு மிகப் பெரிய சந்தை திறந்துவிடப் பட்டது.

திடீர் கிராக்கி

இந்தியாவிலும் அந்தப் பரப்புரை ஒருவகையான சார்புடன் புறப்பட்டது. இயற்கை வேளாண் அரங்குகளிலும் நாட்டு மாடுகள் என்ற நல்ல கருத்துக்கு “இந்தியத் தேசியம்' என்ற சாயம் பூசப்பட்டது. அதன் பின்னர் ஏ 2 (திமில் உள்ள மாடுகள்) சிறந்தவை என்ற சாயமும் ஏற்றப்பட்டது. எப்படியோ நாட்டு மாடுகள் அல்லது திமில் உள்ள மாடுகள் அல்லது ஏ 2 பால் மாடுகளுக்கான ‘கிராக்கி' அதிகமாகிவிட்டது.

தமிழ்நாட்டு உழவர்கள் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம் என்று வட மாநிலங்களுக்குப் படையெடுத்து ஏராளமான பணம் செலவு செய்து வட இந்திய மாடுகளை வாங்கத் தொடங்கினர். இதில் மாட்டின் விலையைவிட போக்குவரத்துச் செலவு அதிகமானது. ரூ. 30 ஆயிரம் மாட்டுக்கு, ரூ. 40 ஆயிரம் போக்குவரத்துச் செலவு ஆனது. இதை மாற்றி உள்ளூரிலேயே குறைந்த விலைக்கு இந்த வகை மாடுகளை உருவாக்கித் தரவேண்டும் என்ற கொள்கையுடன் இயங்கி வருபவர்தான் கரூர் கணேசன்.

ஆன்மாவின் தொழில்

தொடக்கத்தில் ஆடை உற்பத்தித் தொழிலில் இருந்தவர் என்றாலும், தனது ஆன்மாவின் தொழிலான வேளாண்மையை விடாமல் செய்துவந்தவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக முழுநேர உழவராக, அதிலும் இயற்கைவழி உழவராக மாறிவிட்டார். அதன் தொடர்ச்சியாகக் கால்நடை வளர்ப்பிலும், அது பற்றி அறிவைப் பெருக்குவதிலும் முனைப்பாக உள்ளார்.

தமிழ்நாட்டின் சிறப்பு அடையாளங் களில் ஒன்றான காங்கேயம் மாடுகளை மேம்படுத்துவதிலும், குறைவான பால் தரும் தமிழ் மாட்டினங்களை கூடுதல் பால் தரும் இனங்களாகப் பெருக்கும் ஆய்விலும் இவர் ஈடுபட்டுள்ளார். பாரம்பரியக் கால்நடைகள் மட்டுமல்லாமல் புதிய வகைக் கால்நடைகள் எது வந்தாலும், அதைப் பற்றிய முழு விளக்கங்களையும் திரட்டி வைத்திருக்கும் தேர்ந்த பண்ணையாளர் இவர்.

கரூர் நகரத்தில் குடியிருக்கும் சி.கணேசன், தன்னுடைய பெரும் பொழுதைப் பண்ணையில்தான் கழிக்கிறார். இவர் ஒரு அறிவியல் பட்டதாரி. நெல், மஞ்சள், தென்னை என்று நுட்பமான பயிர்களைச் செய்துவந்தவர். இப்போது முழு நேரமாகக் கால்நடை ஆய்வில் இறங்கிவிட்டார்.

கால்நடைகளைப் பற்றி இவரிடம் கேட்டுக்கொண்டிருந்தால் மணிக் கணக்கில் பேசுவார். எப்படி ஒரு கால்நடையைத் தேர்வு செய்வது, என்ன மாதிரியான சிறப்புக் கூறுகள் ஒரு மாட்டிடம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு தேர்ந்த பேராசிரியரைப் போல விளக்குகிறார்.

(அடுத்த வாரம்: திப்புவைக் கவர்ந்த காங்கேயம் காளை)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com 
கணேசனைத் தொடர்புகொள்ள: 98652 09217

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-5-கால்நடைக்-களஞ்சியம்-கணேசன்/article7773304.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 6: ஜெர்சி பசுக்கள் நமக்கெதற்கு?

காங்கேயம் காளை
காங்கேயம் காளை

இப்போது வேளாண்மையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சிக்கலான வேலைக்குத் தேவையான ஆட்களின் பற்றாக்குறை பற்றி, கால்நடை களஞ்சியம் சி. கணேசன் பெரிதும் கவலைப்படுகிறார்.

இப்படியே சென்றால் வேளாண்மை முற்றிலும் அழிந்துவிடும் என்பது இவருடைய ஆதங்கம். இன்றைய இளைஞர்களிடம் உடல் உழைப்பு குறித்து இழிவான எண்ணம் உள்ளதாகக் கூறும் இவர், மிக அதிகச் சம்பளம் கொடுத்தாலும் புதிய தலைமுறையினர் வேளாண்மை துறைக்குள் வருவது பெரிதும் குறைந்துவிட்டது. அரசின் அக்கறையற்ற போக்குதான் இதற்கான முதன்மைக் காரணம் என்று இவர் குற்றஞ்சாட்டுகிறார்.

எப்படித் தப்பிப்பது?

வேளாண் பொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என்பதால், இயற்கைவழியில் விளைவிக்கிறார்கள். அதற்கும் விலை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்பது இவருடைய கேள்வி. தொடர்ந்து மற்ற துறைகளுக்கு அரசு தந்துவரும் ஊக்கம் வேளாண்மைக்கு இல்லை, ஆண்டுக்கு ஆண்டு சாகுபடி செய்யும் பரப்பு குறைந்துகொண்டு வருகிறது. உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்வதற்குப் பதில், பணப் பயிர்களுக்கு ஊக்கம் கொடுப்பதும், அதற்கு உழவர்கள் மாறிவருவதும் கவலை தருவதாகக் கூறுகிறார்.

ஏற்கெனவே சிறு, குறு உழவர்கள் நிலத்தைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் சற்று வசதி படைத்த உழவர்களும் வேளாண்மையில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள் என்கிறார். எனவே, உழவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டால், வேளாண்மை பறிபோவதிலிருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம் என்பது இவருடைய வலியுறுத்தல்.

சோதா மாடுகள்

‘அறிவியல் அறிஞர்'களும் அரசும் பசுமைப் புரட்சியைப் போன்றே வெண்மைப் புரட்சியையும் அறிமுகம் செய்தனர். பசுமைப் புரட்சியின் பின்னணியில் இது நடந்தேறியது. பாலை மட்டும் குறி வைத்து, வெளிநாட்டு மாடுகள் கொண்டு வரப்பட்டன. அவற்றின் மூலம் கலப்பின மாடுகள் உருவாக்கப்பட்டன. நமது நாட்டு மாடுகள் பாலுக்காக மட்டுமல்லாமல், உழவுக்காகவும் பயன்படுத்தப்பட்டன. அது அதற்குத் தனித்த மாட்டினங்கள் இருந்தன. பால் தருவதற்கென்று தனித்த சில வகை இருந்தன.

எப்படி நெல்லில் அதிக விளைச்சல், குறைந்த விளைச்சல் என்று நாட்டு இனங்கள் விதவிதமாக இருந்தனவோ, அதேபோலக் கால்நடைகளிலும் இருந்தன. ஆனால், அந்தப் பாரம்பரிய அறிவை முறியடிக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து பாலை மட்டுமே குறியாகக் கொண்ட மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டன. சூழலுக்கு அவை பொருத்தமற்று இருந்ததால், நோய் போன்ற பல்வேறு சிக்கல்களும் வந்தன.

காங்கேயம் மாடு

இப்படியாக உள்நாட்டு மாடுகள் மறைந்துவந்தன. அதில் ஒன்று காங்கேயம் மாட்டினம். இது திப்பு சுல்தானால் பெருமைப்படுத்தப்பட்ட ஒரு சிறந்த இழுவை மாடு. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் வள்ளுவர் கூறும் ‘பகடு' என்ற சொல்லால், இம்மாட்டைக் குறிக்கலாம். அவ்வளவு சிறப்பு மிகுந்த மாடு. போர்க்களங்களில் பண்டைய பீரங்கிகளை இழுத்துச் செல்லத் திப்பு இதைப் பயன்படுத்தியதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ‘இந்த மாடுகள் எங்களிடம் இருந்திருந்தால், நெப்போலியனை நாங்கள் எப்போதோ வீழ்த்தியிருப்போம்' என்று ஆங்கிலேயர்கள் கூறியதாகக் கதை உண்டு.

காங்கேயம் காளைகளை அவற்றின் தனித்தன்மை குறையாமல் கணேசன் பாதுகாத்துவருகிறார்; கேட்பவர்களுக்கும் கொடுத்து வருகிறார். அத்துடன் பல்வேறு வகையான ஆடுகளையும் அவர் பெருக்கி வருகிறார். தலைச்சேரி ஆடுகளை வளர்த்து பல்வேறு உழவர்களுக்குக் கொடுத்துவருகிறார். நல்ல ஆர்வமான உழவராக இருந்தால் பணத்தைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல் மலிவான விலைக்கே கொடுத்துவிடுவார். யார் சென்றாலும் கால்நடை குறித்த செய்திகளைச் சலிக்காமல் விளக்கிக் கூறுகிறார்.

15 லிட்டர் பால்

காங்கேயம் தவிரத் தர்பார்கர், கிர், சாகிவால் போன்ற மாட்டினங்களையும் பராமரித்துவரும் இவர், நாட்டு மாட்டிலிருந்து 15 லிட்டர் பால் கிடைக்கும் வகையில் அண்மையில் ஓர் இனத்தைப் பெருக்கியுள்ளார். எனவே, நமது நாட்டு மாடுகளை உழவுக்காகவும் உருவாக்க முடியும், பாலுக்காகவும் தனியாக உருவாக்க முடியும். பிறகு ஏன் வெளிநாடுகளிடம் கை ஏந்த வேண்டும் என்பது இவருடைய கருத்து.

கால்நடை வளர்ச்சிக்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்பதையும் விலாவாரியாக விளக்குகிறார். இவரைப் போன்ற முன்னத்தி ஏர்களை நமது அரசும், கொள்கை வகுக்கும் அதிகாரிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம் நேரடி அந்நிய முதலீடு போன்ற அபத்தங்களில் சிக்காமல், உள்ளூர்ப் பொருளாதாரத்தையும் ஊரகப் பொருளாதாரத்தையும் மேம்படுத்தலாம். சுருக்கமாக, தமிழகத்தின் கால்நடைக் களஞ்சியம் கரூர் கணேசன் என்று சொன்னால், அது மிகையான கூற்றல்ல.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com 
கணேசனைத் தொடர்புகொள்ள: 98652 09217 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-6-ஜெர்சி-பசுக்கள்-நமக்கெதற்கு/article7799822.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 7: தமிழ் தந்த சொத்து ‘அரிசி'

crops_2604229f.jpg
 

உலகில் அரிசி உண்ணும் மிகவும் பழமையான இனங்களில் தமிழினமும் ஒன்று. அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்புவரை, அரிசியைப் பற்றி ஐரோப்பியர்களுக்குத் தெரியாது. அலெக்சாண்டருடன் வந்த அரிஸ்டாட்டில் அன்றைய சிந்து ஆற்றின் (Indus river) தென்புறமுள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் பெரியதொரு குழுவினருடன் வந்து திரட்டிச் சென்றுள்ளார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அதில் அரிசியும் ஒன்று என்பது சுவையான செய்தி.

பல மேல்திசை, கீழ்த்திசை நாடுகளுக்கெல்லாம் அரேபிய வணிகர்களால் அரிசி கொண்டு செல்லப்பட்டது. கி.மு. 300-களில் எகிப்து, எத்தியோப்பியா, பாரசீகம் (இன்றைய ஈரான்) உள்ளிட்ட ஆப்பிரிக்கக் கடலோர நாடுகளுக்கு அரிசி கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர்த் தோன்றிய ரோமப் பேரரசின் (இன்றைய இத்தாலி) கீழ் இருந்த சிசிலி வழியாக, ஸ்பெயின் நாட்டுக்கு அரிசி சென்றது. வாவிலோவ் என்ற ரஷ்ய அறிஞர் உலகில் உள்ள பயிரினங்களின் தோன்றிய இடங்களைக் கண்டறிந்து கூறியவர். இந்தியாவில் இருந்து அரிசி தோன்றியதாக அவர் குறிப்பிடுகிறார். சீனாவிலிருந்து உலகம் முழுவதும் அரிசி பரவியதாக மற்றொரு கருத்தும் உண்டு.

எப்படிப் போனது அரிசி?

பொதுவாக அரிசி எனப்படுவது நெல்லிலிருந்து பிரித்து எடுக்கப்படும் பொருள். நெல் என்பதற்கும் அரிசி என்பதற்கும் வேறுபாடு உண்டு. நெல்லுக்கு paddy என்று ஆங்கிலத்தில் சொல் உள்ளது. ஆனால், அச்சொல் கி.பி. 17-ம் நூற்றாண்டில்தான் ஆங்கில அகராதிக்குள் வருவதாக, ஆங்கில வேர்ச்சொல் அகராதிகள் குறிப்பிடுகின்றன. அதற்கு முந்தைய சொல்லான நெல் என்பதை rice என்றே அகராதிகள் குறிப்பிடுகின்றன.

இதன் மூலச் சொல் எங்கிருத்து வந்தது என்றால் பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆங்கில அகராதிக்குள் வருகிறது. அதன்மூலம் எங்கு என்று தேடினால், அது இத்தாலி மொழியில் rizo என்ற சொல்லில் இருந்து வந்ததாகக் குறிக்கின்றனர். அந்தச் சொல்லோ orisa என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து வந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன. லத்தீன் மொழி பேசிய பகுதிகள் கிரேக்க, ரோமப் பேரரசுப் பகுதிகள். அங்கு நெல் விளைவதே கிடையாது. கி.பி. 1475-க்குப் பிறகுதான் நெல் சாகுபடி இத்தாலிக்கு வருகிறது. அதற்கு முன்பு அவர்கள் அரிசியை ஒரு மருத்துவப் பொருளாகவே இறக்குமதி செய்துள்ளார்கள் என்று ஆலன் டேவிட்சன் என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

தமிழே வேர்

ஆக, நெல்லே விளையாத நிலத்திலிருந்து ஒரு சொல் எப்படி உருவாகும்? ஆகவே, இந்த அரிசி என்று புரிந்துகொள்ளப்பட்ட நெல் என்ற சொல்லின் மூல வேர் தமிழிலேதான் உள்ளது. ஏனென்றால் அரிதல், அரித்தல் என்ற சொற்கள் நெல்லில் உள்ள உமியை நீக்குகின்ற செயலைக் குறிப்பிடுகின்றன. அவ்வாறு ‘அகற்றுதல்' என்ற பொருளில் அரிசி என்ற சொல் உருவாகியுள்ளது. இது பல மொழிகளுக்குப் பயணம் செய்து, இன்றைக்குச் சமைக்கப்பட்ட சோற்றையே நாம் rice என்று குறிப்பிடும் அளவுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வாறு நெல்லின் வரலாற்றை இழந்த தமிழினம், பசுமைப் புரட்சிக்குப் பின்னர் மரபுச் செல்வமான நெல் இனத்தையும் இழந்தது. பல நூறு வகையான நெல் இனங்கள் இருந்த மண்ணில், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மணிலாவிலிருந்து வந்த வீரிய ரகம் என்று சொல்லப்பட்ட சோதா நெல் ரகங்கள் வந்தேறிவிட்டன.

நெல் காப்பாளர்

இதன் விளைவு… நோயும் நீர்ப் பற்றாக்குறையும் வந்தன. இந்தச் சூழலில், இருக்கின்ற மரபு நெல் இனங்களைக் கண்டறிந்து அவற்றைப் பெருக்கும் முயற்சியில் தமிழகத்தில் முதலில் களமிறங்கியவர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள வளையாம்பட்டு என்னும் ஊரைச் சேர்ந்த இயற்கைவழி வேளாண்மை மூத்த முன்னோடிகளில் ஒருவரான வெங்கடாசலம். வயது எண்பதைத் தாண்டிவிட்டாலும், உழைப்பில் இளைஞருக்கும் மேலான வேகம் கொண்டவர். அடிப்படையில் பொறியாளரான இவர், தனது வாழ்நாள் கடமையாக மரபு நெல் விதைகளைப் பாதுகாத்துவருகிறார். இவருடைய பகுதியில் உள்ள 19 வகையான பாரம்பரிய நெல் வகைகளைத் தனது நண்பர்களுடன் இணைந்து பாதுகாத்துள்ளார்.

தூயமல்லி, குள்ளக் கார், கிச்சிலிச் சம்பா, வாடன் சம்பா போன்ற அரிய வகை நெல் இனங்கள் இவரிடம் உள்ளன. இவருடைய நண்பர் ப.தி. இராஜேந்திரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் இவருக்கு உறுதுணையாக உள்ளனர். இப்போது களர்ப்பாலை என்ற நெல்லைக் கண்டறிந்து பரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார் வெங்கடாசலம்.

மற்ற மொழிகளில் அரிசி என்ற தமிழ்ச் சொல்லின் மருவல்

அரபி மொழியில் - அல்ருஸ் (al-ruz)

ஸ்பானிய மொழியில் - அராஸ் (arroz)

லத்தீன் மொழியில் - ஒரைசா (oryza)

இத்தாலியில் - ரைசே (riso)

பிரெஞ்சு மொழியில் - ரிஸ் (riz)

ஜெர்மனியில் - ரெய்ஸ் (reis)

ஆங்கிலத்தில் - ரைஸ் (rice)

nammazhvar_2604228a.jpg

நம்மாழ்வாருடன் வெங்கடாசலம்

(அடுத்த வாரம்: ஊட்டம் தரும் இயற்கை)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com 
செங்கம் வெங்கடாசலம் தொடர்புக்கு: 98943 63307

 

 http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-7-தமிழ்-தந்த-சொத்து-அரிசி/article7826578.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 1 month later...

முன்னத்தி ஏர் 8: ‘நெல்லின் செல்வர்'

farmer_2612819f.jpg
 

திருவண்ணாமலை பகுதியில் பாரம்பரிய நெல் விதைகள் எங்குக் கிடைத்தாலும், உடனே அங்குச் சென்று சேமிக்கும் முயற்சியில் இறங்கிவிடுபவர் செங்கம் வெங்கடாசலம். அது மட்டுமல்லாமல், இந்த விதைகளைக் கேட்கும் உழவர்களுக்குக் கொடுத்தும் உதவுகிறார்.

ஒரு பக்கம் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வரும் அதேநேரம், இயற்கைவழி வேளாண்மையில் பல்வேறு பயிர்களையும் சாகுபடி செய்துவருகிறார். இவருடைய பண்ணையின் பரப்பு 10 ஏக்கர். செய்யாறு ஆற்றின் பாசனப் பகுதியில் இவருடைய பண்ணை அமைந்துள்ளது. முற்றிலும் இயற்கைவழி வேளாண்மையே செய்கிறார்.

மொத்தமுள்ள 10 ஏக்கரில், ஐந்து ஏக்கர் பாசன வழியுள்ள நன்செய், எஞ்சிய ஐந்து ஏக்கர் மழையை நம்பியுள்ள வானவாரி நிலப்பகுதி. இப்பகுதியை ஒரு மரத்தைப் போன்று இவர் வடிவமைத்துள்ளார். மரத்தின் வேர்ப் பகுதி என்றும் தண்டுப் பகுதி, இலைக்குடையான கவிகைப் பகுதி என்று மூன்றாகப் பிரித்து, அதற்கேற்ற வகையில் மரங்களை நடவு செய்துள்ளார். இந்தப் புன்செய் நிலத்தில் ஏராளமான மர வகைகளை வளர்த்துள்ளார். இம்மரங்களில் இருந்து வேளாண்மைக்குத் தேவைப்படும் தழைகள் கிடைக்கின்றன.

ஊட்டம் தரும் இயற்கை

இந்த வயதிலும் நேரடியாக வயலுக்குச் சென்று அன்றாட பணிகளைக் கவனிக்கிறார். நெல் தவிர எள், துவரை, உளுந்து போன்ற பல்வகை பயிர்களையும் சாகுபடி செய்கிறார்.

இவரிடம் இரண்டு மாடுகளும், இரண்டு ஆடுகளும் உள்ளன. இவற்றின் கழிவுகளைக் கொண்டே எருவைத் தயாரிக்கிறார். தேவைப்படும்போது அருகில் உள்ளவர்களிடம் தொழுவுரத்தை வாங்கிக் கொள்கிறார்.

மண்புழு உரம் தயாரித்துப் பயன்படுத்துகிறார். கிடைக்கும் சாணம் மற்றும் பண்ணைக் கழிவுகளை மரத்தடியில் மட்க வைத்துப் பின்பு மண்புழு உரம் தயாரிக்கிறார். இத்துடன் வளர்ச்சி ஊக்கியான அமுதக்கரைசலை மட்டும் பயன்படுத்துகிறார். இவையே போதிய பயனைத் தருகின்றன.

இலைவழி ஊட்டமாகத் தெளிப்பானைக் கொண்டு அமுதக்கரைசலை தெளிக்கிறார். அத்துடன் பாசன நீரில் கலந்தும் வயலில் விடுகிறார். இயற்கை வேளாண்மையில் மற்றொரு உத்தியான மூடாக்கு முறையைப் பின்பற்றுகிறார். தனது நிலத்தைச் சுற்றிப் பூவரசு, கிளிசிடியா, அகத்தி போன்ற உரம் தரும் மரங்களை வளர்த்துள்ளார். இவற்றில் இருந்து தேவையான பசுந்தழைகளை வெட்டி பயன்படுத்துகிறார்.

செலவு மிகக் குறைவு

இவருடைய பகுதியில் போதிய நீர் கிடைத்தாலும், பாசனத்துக்கான நீரைச் சேமிப்பதில் இவர் பெரும் கவனம் செலுத்துகிறார். ஒரு பார் விட்டு ஒரு பார், நீர் பாய்ச்சுகிறார். நெல்லுக்குக் காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சுகிறார்.

இவர், பாரம்பரிய விதைகளைத் தேர்வு செய்து பயன்படுத்துவதால் நோய் தாக்குதல் மிகவும் குறைவு. அத்துடன் வறட்சியைத் தாங்கி வளரும் திறனையும் கொண்டுள்ளன. இயற்கை முறையைப் பின்பற்றுவதால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகம். இதனால் தீமை செய்யும் பூச்சி தாக்குதலும் குறைகிறது. இவருடைய பண்ணையில் மரங்கள் நிறைய இருப்பதால் பறவைகள் அதிகமாக வருகின்றன. அவையும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. இயற்கை வழி வேளாண்மையைப் பின்பற்றுவதால், செலவு பெருமளவு குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.

சங்க நடைப்பயணம்

நெல்லை உமி நீக்கும் மரத் திரிகைகள், உரல்கள் என்று பல கருவிகளை வெங்கடாசலம் வடிவமைத்துள்ளார். தமிழர்களின் திணையியல் கோட்பாட்டை (Ecological concept) முன்னிறுத்தி நடைப்பயணங்களை ஏற்பாடு செய்கிறார். குறிப்பாகத் திருவண்ணாமலை முதல் மரக்காணம்வரை உள்ள பகுதிகளை இணைத்துச் சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில் பதிவுபெற்றுள்ள இடங்களை விளக்கும் திணையியல் (Ecological rally) பயணத்தை நடத்தி, இளைஞர்களிடம் சூழலியல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார்.

1997-ம் ஆண்டில் தமிழகம் தழுவிய விதைக் காப்புப் பயணத்தை மேற்கொண்டு வெங்கடாசலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இத்துடன் தமிழ்க் கணிதம் பற்றிய ஆய்விலும், அகழ்வாய்வுப் பணியிலும் ஈடுபட்டுவருகிறார். அஸ்கா பார்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்களிடம் நெருக்கம் கொண்டுள்ள இவர் செங்கம் - திருவண்ணாமலை சாலையில் உள்ள பெருங்கற்காலக் குடியிருப்பு ஒன்றைக் கண்டறிந்துள்ளார். 600-க்கும் அதிகமான சிதிலமடைந்த வீடுகளைக் கொண்ட இந்தப் பகுதியை ஆய்வு செய்தால் தமிழர்களின் பண்டைய வரலாற்று பக்கங்களை மாற்றி எழுதக்கூடிய நிலை ஏற்படலாம். இது இன்னும் அகழ்வாய்வு செய்யப்படாமலேயே உள்ளது.

இப்படிப் பாரம்பரிய நெல் பாதுகாப்பு முதற்கொண்டு, அகழ்வாய்வு ஆராய்ச்சிவரை பங்களித்துவரும் செங்கம் வெங்கடாசலம் தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு மாபெரும் சொத்து.

(அடுத்த வாரம்: நெல்லை மாவட்டத்தை உயர்த்திப்பிடித்த முன்னோடி) 
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com 
செங்கம் வெங்கடாசலம் தொடர்புக்கு: 98943 63307

 

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D

 

முன்னத்தி ஏர் 9: எல்லாம் இயற்கை பார்த்துக் கொள்ளும்

அந்தோணிசாமி
அந்தோணிசாமி

இயற்கைவழி வேளாண் வரலாற்றில் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடிக்கு முதன்மையான பங்கு உண்டு. ‘புளியங்குடி இரட்டையர்கள்' என்று அழைக்கப்படும் கோமதிநாயகம், அந்தோணிசாமி ஆகிய இருவரும் இயற்கைவழி வேளாண்மையில் மூத்தவர்கள், முன்னோடிகள்.

சாதனை விளைச்சல்

இயற்கைவழி வேளாண்மை என்பது சிறிய பண்ணைகளில்தான் வெற்றிகரமாக சாத்தியப்படும் என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், பெரிய அளவு நிலப்பரப்பிலும் இயற்கைவழி வேளாண்மையை வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்று மெய்ப்பித்தவர் அந்தோணிசாமி.

நெல், எலுமிச்சை, கரும்பு, காய்கறி என்று பல்வேறு பயிர்களிலும் ரசாயன உரத்தைப் பயன்படுத்தாமலேயே சாதனை விளைச்சல்களை இவர் பெற்றுள்ளார். பொதுவாக வேதி உப்பு உரங்களைப் பயன்படுத்தி விளைச்சல் எடுக்கும் உழவர்களைக் காட்டிலும், இவர் சற்றுக் கூடுதலாக விளைச்சல் எடுப்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது.

பசுந்தாள் உரம்

நெல்லில் எவ்வித வெளி இடுபொருள் செலவுமின்றி, விளைச்சல் வீழ்ச்சியின்றி ஆண்டுதோறும் தொடர்ச்சியாக மகசூல் எடுத்துவருகிறார். நாட்டு ரக விதைகளைப் பயன்படுத்துகிறார். இவரது அடிப்படையான நுட்பம் பசுந்தாள் உரங்களைத் தொடர்ந்து மண்ணில் சேர்ப்பதுதான். மண்ணை வளப்படுத்தும் உத்தியான பசுந்தாள் உரச்செடிகளை முதலில் விதைத்து மடக்கி உழுகிறார்.

அத்துடன் ‘தொழியை' நன்றாக ஊற விடுகிறார். நல்ல ‘தொழி' மணம் வரும்வரை காத்திருக்கிறார். இதுதான் அடிப்படை என்பது, இவருடைய அனுபவப் பாடம். இதனால் ஏராளமாக நுண்ணுயிர்ப் பெருக்கம் ஏற்படுகிறது. நன்மை செய்யும் குச்சிலங்கள் (பாக்டீரியாக்கள்) பெருகுவதால் காற்றில் உள்ள தழைச்சத்து மண்ணுக்குள் சேர்க்கப்படுகிறது.

காய்ச்சல், பாய்ச்சல்

அதன் பிறகு நடவு செய்கிறார். நட்ட பதினைந்தாம் நாள் ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீருடன் பத்து மடங்கு நீர் சேர்த்துத் தெளிப்பு கொடுக்கிறார். களைகளைக் கட்டுப்படுத்த நடவு வயலில் ஆறு நாட்களுக்கு நீரை நிறுத்துகிறார். அதன் பின்னர் காய்ச்சலும் பாய்ச்சலுமாகவே நீர் கொடுக்கிறார், தொடர்ந்து நீர் கட்டுவது இல்லை.

நட்டு இருபத்தைந்தாம் நாள் ஒரு லிட்டர் மீன்பாகுக் கரைசலுடன், 100 லிட்டர் நீர் சேர்த்துத் தெளிக்கிறார். ஒரு ஏக்கருக்கு இது போதுமானதாக உள்ளது. நட்ட ஐம்பதாவது நாள் ஒரு லிட்டர் மூலிகை பூச்சிவிரட்டியுடன் 10 லிட்டர் நீர் சேர்த்துத் தெளிக்கிறார். அதன் பின்னர் ஏழு நாள் கழித்து ஆவூட்டம் 250 மில்லியுடன், 10 லிட்டர் நீர் சேர்த்துத் தெளிக்கிறார்.

தொடர்ச்சியாகக் காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சிவருகிறார். பயிர் சோர்வாக இருந்தால் மீண்டும் ஒரு முறை மீன்பாகு தெளிக்கிறார். கதிர் நாவாய்ப் பூச்சி, பூஞ்சாளத் தாக்குதல் ஏதும் இருப்பதாகத் தெரிந்தால், நன்கு விளைந்த - ஒடித்தால் மஞ்சள் நிறச் சாறு வரும் தன்மையாக உள்ள சோற்றுக் கற்றாழை மடல் ஒரு கிலோ எடுத்துக்கொண்டு, அத்துடன் அரைக் கிலோ சிறு பற்கள் கொண்ட வெள்ளை பூண்டு, 1 கிலோ நயம் துளசி இலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு ஆட்டி எடுத்துக்கொள்கிறார். இந்தக் கரைசல் 1 கிலோவுடன் 10 லிட்டர் நீரைச் சேர்த்துத் தெளித்துவிடுகிறார். இது நல்ல பூச்சிவிரட்டி, பூஞ்சாளக் கொல்லியாக வேலை செய்கிறது.

செலவில்லா விவசாயம்

‘எனது வயலில் இயற்கை வழி வேளாண்மையைக் கைக்கொண்ட பின்னர் ஒரு சதுர மீட்டரில் 4 வகையான தட்டான்கள் பறந்துகொண்டிருக்கின்றன. இன்னும் குழவிகள் போன்ற பூச்சிக் கட்டுப்பாட்டு உதவியாளர்கள் இருக்கின்றனர். இப்போது சொல்லுங்கள் வேதி வேளாண்மையைவிட எனக்கு என்ன கூடுதலாகச் செலவு ஆகிவிட்டது' என்று நெஞ்சை உயர்த்திப் பெருமிதமாகத் தனது பட்டறிவைப் பகிர்ந்துகொள்கிறார்.

இதையெல்லாம் சொல்லிவிட்டு, மற்றொரு இன்ப அதிர்ச்சியையும் கொடுக்கிறார். ‘இந்த வேலைகளெல்லாம் முதல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குத்தான், பின்னர் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. இயற்கை தானாகவே தன்னைச் சரிசெய்துகொள்ளும். நான் இப்போது எதுவும் கொடுப்பதில்லை. வண்டிக்கு டீசலும் மோட்டாருக்கு மின்சாரமும் மட்டுமே நான் வெளியிலிருந்து வாங்குகிறேன்' என்று அதிரடியாகச் சொல்கிறார் அந்தோணிசாமி.

(அடுத்த வாரம்: நீரும் உரமும் இல்லாத கரும்பு சாகுபடி) 
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com 
அந்தோணிசாமி தொடர்புக்கு: 9942979141

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B

 

Link to comment
Share on other sites

  • 3 months later...

முன்னத்தி ஏர் 10: புளியங்குடியின் பெருமை அந்தோணிசாமி

agri_2403622h.jpg

இயற்கை உழவர் புளியங்குடி அந்தோணிசாமியின் சாதனை கரும்பு சாகுபடியிலும் தொடர்கிறது. கரும்பு சாகுபடி என்பது உழவர் களுக்குப் பெருத்த நட்டத்தைத் தரும் பயிர் என்பதை யாரும் உணர்வதில்லை. ஏனென்றால், அதில் கணக்கு வழக்கின்றி நீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் பாய்ச்சும் அளவை பற்றி யாரும் கணக்கு போடுவதும் இல்லை. இவ்வளவு செய்தாலும், கரும்புக்குக் கிடைக்கும் விலையோ மிகக் குறைவு. இருந்தபோதும், வங்கிக் கடனைப் பெறுவதற்காக நிறைய உழவர்கள் கரும்பு சாகுபடிக்குள் நுழைகின்றனர்.

இப்படி மோசமான பொருளாதார, சூழலியல் சேதாரத்தை ஏற்படுத்தும் கரும்பைப் பொருளாதார ரீதியில் லாபமாகவும், சொட்டு நீர் பாசன முறையில் குறைந்த தண்ணீர் செலவுடனும் இயற்கை முறையில் சாகுபடி செய்கிறார் அந்தோணிசாமி.

இயற்கை உர உற்பத்தி

இவர் கரும்பு நடவுக்கு முன்பு உழுது பார் அமைக்கிறார். இரண்டரையடி பாரும் ஏழரை அடிப் பாருமாகக் கொண்ட வகையில் நிலத்தை வடிவமைக்கிறார். முதலில் இரண்ட ரையடி பார், அதற்கு அடுத்து ஏழரை அடி இடைவெளி, அதற்கடுத்து இரண்டரையடி பார், ஏழரை அடி இடைவெளி. இப்படியாக மாற்றி மாற்றி அமைக்கிறார். ஏழரை அடி இடைவெளிப் பாரில் பயறு வகைப் பயிர்களை வளர்க்கிறார். அடுத்த இரண்டரையடி பாரில் கரும்பை நடுகிறார்.

இரண்டு வரிசையாகக் கரும்பை நடுகிறார். கரும்புக்கு இடையில் பயறு வகைப் பயிர்களைப் பிடுங்கி, மூடாக்காக வைக்கிறார். இதற்கு வேறு எந்த உரமும் தேவையில்லை. இதன்பின்னர் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஏதாவது ஒரு பயறு வகைப் பயிரை ஊன்றிவிடுகிறார். அது வளர்ந்து அடுத்த மூடாக்குக்குப் பயன் படுகிறது. குறிப்பாக 45 நாட்கள் மூடாக்குப் பயிர்களை வளரவிட்டு, பின்பு பிடுங்கி மூடாக்காக மாற்றுகிறார். பின்னர் 90-ம் நாள் அடுத்த மூடாக்கு செய்கிறார்.

நீர் சிக்கனம்

இரண்டாம் மூடாக்கு செய்தபிறகு பயிர் ஊக்கியான ஒரு லிட்டர் மீன்பாகுக் கரைசலை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கிறார். 120-ம் நாள் ஆவூட்டக் கரைசலைத் தெளிக்கிறார். அதுவும்கூடக் கட்டாயமில்லை என்கிறார். 160-ம் நாள் முதல் சோகை உரிக்கிறார். சோகையை உரித்துக் கரும்புக்கு அடியில் வைத்து, மண்ணால் மூடிவிடுகிறார். உடனே மீன்பாகுக் கரைசலை, முன்னர்ச் சொன்னதுபோலத் தெளிக்கிறார்.

200-ம் நாள் இரண்டாவது முறை சோகை உரிக்கிறார். முன்னர் சொன்னதுபோலவே இதையும் மூடாக்கு செய்கிறார். 240-ம் நாள் கடைசி சோகை உரிப்பு செய்கிறார். அதை அருகில் உள்ள ஐந்தடி பாரில் போட்டு மண்ணால் மூடிவிடுகிறார். அது பயறு வகைப் பயிருக்கான உரமாக மாறுகிறது. கரும்புக்குச் சொட்டுநீர்ப் பாசனத்தையே இவர் பயன்படுத்துகிறார். நீர் சிக்கனம் மிகவும் சிறப்பாக உள்ளது.

அதிரடி விளைச்சல்

“தமிழகத்தின் சராசரி கரும்பு விளைச்சல் ஏக்கருக்கு 30 டன். இது இந்திய சராசரியைவிட அதிகம். ஆனால், நானோ வெளி இடுபொருள் ஏதுமின்றி ஏக்கருக்குச் சராசரியாக 60 டன் விளைச்சல் எடுக்கிறேன். கழிவை மறுசுழற்சி செய்வதன் மூலம் இது சாத்தியமாகிறது. எனது கரும்புத் தோட்டத்துக்குள் வந்தால் வெளிப்புறத்தைவிட ஏறத்தாழ 4 டிகிரி வெப்பம் குறைவாக உள்ளது. எங்கு பார்த்தாலும் மண்புழுக்கள் ஊர்வதையும் பார்க்க முடியும்” என்கிறார் அந்தோணிசாமி உற்சாகம் குறையாமல்.

இவர் தன்னுடைய தோட்டத்துக் கரும்பைத் தனது பண்ணையிலேயே சர்க்கரையாக மாற்றி, ஒரு கிலோ அளவில் பொதிவு செய்து சந்தைக்கு அனுப்புகிறார். இவரது சர்க்கரையில் இனிப்பின் அளவும் நன்மை செய்யும் காரணிகளின் அளவும், மற்ற சர்க்கரையைக் காட்டிலும் அதிகமாக உள்ளதை விளக்குகிறார். அதை முறையாக ஆய்வு நிறுவனங்களிடம் கொடுத்து, சான்றுகளையும் பெற்றுள்ளார்.

விழுந்து எழுந்த கதை

அந்தோணிசாமி 1957-ம் ஆண்டிலிருந்து வேளாண்மை செய்துவருகிறார். ‘அப்போது வேதி உரங்கள் பெரிதாகக் கிடையாது. ஒரு ஏக்கருக்கு 3 பக்கா (5 கிலோ) அமோனியம் சல்பேட் மட்டும் பயன்படுத்தக் கொடுத்தார்கள். இரண்டாவது உலகப் போர் நடந்து முடிந்தபோது, மாட்டுவண்டிப் பட்டைக்குக் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. இரும்பு கிடைக்கவில்லை. அதைப் பயன்படுத்தி ரசாயன உரத்தைக் கொடுத்தார்கள். அதாவது இரண்டு வண்டிப்பட்டைகள் வாங்கினால் ஒரு மூட்டை உரம் இலவசமாகக் கொடுத்தார்கள். அதைக் கொண்டுவந்து வயலில் வீசினோம். அப்போது மண்ணில் நிறைய மட்கு இருந்ததால், பயிர் ‘குபீர்' என்று வந்தது.

அப்படி வளர்ந்த பயிரின் கரும்பச்சை நிறம் என்னை ஈர்த்தது. என்னைப் போலவே எல்லோரும் மயங்கினார்கள். இதனால் பெருமளவில் ரசாயன வேளாண்மைக்கு மாறினோம். 1960 - 62-களில் பருத்தி ஏக்கருக்குப் பத்துக் குவிண்டால் கிடைத்தது. 1967-ல் தீவிரமாக ரசாயனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்து, ஏக்கருக்கு 150 கிலோ டைஅமோனியம் பாஸ்பேட் பயன்படுத்தினேன். அதன் பின்னர் 200 கிலோ கொடுத்தேன். ஏக்கருக்கு 60 மூட்டை கிடைத்தது. அதன் பின்னர் விளைச்சல் அதிகரிக்கவில்லை, சரிய ஆரம்பித்தது.

தலைகீழ் விகிதம்

மண்ணில் இருந்த மட்குப் பொருள் அருகிப் போனது. நுண்ணுயிர்கள் செத்துப் போய்விட்டன. அறுபது மூட்டை விளைந்த ஐ.ஆர். - 8 நெல் ரகம் மூன்றாண்டுகளில் முப்பது மூட்டையாகச் சுருங்கிப் போய்விட்டது. பின்னர் அந்த ரக நெல்லும் மறைந்து போனது. கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போனது.

அன்றைய நிதியமைச்சர் மன்மோகன்சிங் கொண்டுவந்த அடுக்குமுறை வட்டிக் கொள்கையின் கைங்கரியத்தால், எனது வட்டிச்சுமை மென்மேலும் ஏறியது. அதாவது ரூ. ஐந்து லட்சம் வாங்கினால் ஒரு வட்டி, ரூ. 10 லட்சம் வாங்கினால் அதற்கு மேலும் வட்டி என்று அடுக்கடுக்காக வட்டியின் தொகை உயரும். இப்படியாக நான் தற்கொலை செய்துகொள்ளாதது மட்டும்தான் பாக்கி' என்று வேதி வேளாண்மையால்தான் பட்ட துன்பங்களைப் பகிர்ந்து கொள்கிறார் அந்தோணிசாமி.

அதற்கு மாற்றாக இன்றைக்கு வெற்றிபெற்ற மனிதராக உலாவரும் அந்தோணிசாமி ‘புதிய கண்டு பிடிப்பாளர்' விருதையும் பெற்றுள்ளார். தனது கடன் சுமைகளை முற்றிலும் இறக்கி வைத்துவிட்டு, மற்றவர் களுக்கு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்கிறார்.

அந்தோணிசாமி தொடர்புக்கு: 9942979141

(அடுத்த வாரம்: மண்புழு மகத்துவம்)

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AE%E0

 

Link to comment
Share on other sites

  • 4 months later...

முன்னத்தி ஏர் 11 : வேளாண்மை வருமானம் தர...

இயற்கைவழி வேளாண்மையாக இருந்தாலும்கூட ஓரினச் சாகுபடி என்பது என்றைக்குமே உழவர்களுக்குப் பயன்தருவது கிடையாது. ஓரினச் சாகுபடி என்பது பண்ணை முழுவதும் ஒரே வகையான பயிரை வளர்ப்பது. கரும்பையோ, வாழையையோ அல்லது நெல்லையோ மட்டுமே ஒற்றை பயிராகச் சாகுபடி செய்வதை ஓரினச் சாகுபடி என்கிறோம்.

ஓரினச் சாகுபடியின் பிரச்சினை

இந்த முறையால் உழவருக்கு லாபம் கிடைப்பதில்லை, வாங்கி விற்கும் தரகர்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கிறது. எப்போதெல்லாம் விளைச்சல் அதிகமாக இருக்குமோ, அப்போதெல்லாம் விளைச்சலுக்கான விலை குறைவாகவே இருக்கிறது.

எப்போதெல்லாம் சந்தை விலை அதிகமாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் உழவருக்கு விளைச்சல் குறைவாகவே இருக்கிறது. எனவே, விளைச்சலை எவ்வளவு நுட்பமாக அதிகப்படுத்தினாலும், உழவர்களுக்கு எந்த வகையிலும் லாபம் கிடைப்பதில்லை. இந்தச் சந்தை சூ(ழ்)த்திரத்தை அறியாமல், உற்பத்தியைப் பெருக்க உழவர்கள் தமது உயிரைக் கொடுத்துப் போராடுகிறார்கள்.

அரசும் எவ்வாறு விளைச்சலைப் பெருக்கலாம் என்பதற்கே ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறது. சந்தையைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஒரு நியாயமான சந்தையை உருவாக்கவோ அரசு முனையவில்லை.

எனவே, இயற்கைவழி வேளாண்மையிலும் ஓரினச் சாகுபடியைத் தவிர்த்துப் பன்மயச் சாகுபடி முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது, உழவர்களின் தேவையாக உள்ளது. அப்போதுதான் உழவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும். பெரும் பணம் ஈட்ட முடியாவிட்டாலும், நஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி பன்மயச் சாகுபடி மட்டுமே.

அளவோடு பயிரிடுவோம்

ஒரு பண்ணையாளர் தனது பண்ணையில் உள்ள நிலத்தில் பத்து விழுக்காட்டுக்கு மேல் காய்கறி சாகுபடியில் இறங்கக் கூடாது. அதேபோல, தானியங்கள் என்றாலும், எண்ணெய்ப் பயிர்கள் என்றாலும் இந்த அளவை அதிகப்படுத்தக் கூடாது.

சந்தைக்காக நமது சாகுபடிப் பரப்பை மாற்றினால், சந்தை சிக்கலுக்குள் நாம் மாட்டிக்கொள்வோம். நமது குடும்பத்துக்கான பணத்தேவை என்ன என்பதைச் சிந்தித்து, அதை மட்டுமே சந்தையில் இருந்து வருமாறு ஆக்கிக்கொள்ள வேண்டும். அதன்படி பணப்பயிர்கள் அல்லது சந்தைக்கான பயிர்களை அளவோடு பயிரிட வேண்டும்.

ஆனால், நமது உழவர் பெருமக்கள் பத்து ஏக்கர் வைத்திருந்தால், அந்தப் பத்து ஏக்கரிலும் கரும்பைச் சாகுபடி செய்கின்றனர். அதற்கு அரசும் வங்கிகள் வழியாக உடனடி கடனை ஏற்பாடு செய்து தருகிறது. கரும்பை வாங்குவதற்கு ஆலைகள் உறுதியளித்துவிடுகின்றன. (அவர்கள் சரியான நேரத்தில் வெட்டி எடுப்பதில்லை என்பது வேறு கதை). ஆக, இப்படி உத்தரவாதமான கரும்பைச் சாகுபடி செய்த உழவர்களே, பின்னர்ப் பெரும் சிக்கலுக்கு ஆளாகிறார்கள்.

இதற்காக இவர்கள் பயன்படுத்தும் நீரைக் கணக்கிட்டால் கண்ணீர்தான் மிஞ்சும். அவ்வளவு நீரையும் ரசாயனங்களைக் கொட்டிப் பூச்சிக்கொல்லிகளை வீசி, கடைசியில் மிகக் குறைவான விலைக்கு ஆலைக்குத் தள்ளுகின்றனர்.

மற்றப் பயிர்களைக் கணக்கிட்டால் எந்த வழியிலும் தப்ப முடியாதபடி உழவர்கள் நெருக்கப்பட்டுள்ளனர். ஆகவே தேவைக்கான சாகுபடி, அதன் பின்னரே சந்தைக்கான சாகுபடி என்ற கோட்பாட்டை முதலில் வகுத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல தொழில் தேடி

இப்போது அனைவருக்கும் ஒரு கேள்வி வரும். அப்படியானால் குழந்தைகளின் கல்வி, உடை, மருத்துவம், மற்றத் தேவைகளுக்குப் பணம் வேண்டாமா என்ற கேள்வியே அது. கட்டாயம் தேவை, அதற்காக மட்டுமே நாம் சந்தையை நோக்கி உற்பத்தி செய்ய வேண்டும். அந்தச் சந்தையைக்கூட, முடிந்தவரை நமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் இப்போது பெரும்பாலான நிலம் உடையவர்கள், மற்றத் துறைகளில் இருந்துகொண்டு லாப நோக்கில் வேளாண்மையை ஒரு வணிகமாகச் செய்துவிடலாம் என்று கருதி இறங்குகின்றனர். இவர்கள் ஒரு நியாயமான தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள். மற்றத் துறைகளில் உள்ள சீர்கெட்ட தன்மைகளைக் கண்டு மனம் வெதும்பி, வேளாண்மைக்குள் வருபவர்கள். அவர்கள் உண்மையில் மனச்சான்றுடன் வாழ விரும்பும் கண்ணியமானவர்கள்.

குறிப்பாகப் பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்து வெறுப்புற்று வெளியேறுபவர்கள், தொழில்துறையில் தாம் செய்த சூழலியல் அழிவுகளுக்குக் கழுவாய் தேட விரும்புபவர்கள், அல்லது இயற்கைவழி வேளாண்மையின் புதிய வளர்ச்சியைக் கண்டு ஈர்க்கப்பட்ட இளைஞர்கள்தான் அவர்கள். இவர்கள் யாராக இருந்தாலும்,

நமது நாட்டின் சந்தை சூதாட்டத்தை நுட்பமாகப் புரிந்துகொள்ளாதவர்கள். உலகமயச் சந்தை என்பது சிறிதும் ஈவு இரக்கமற்ற எந்திரத்தனமானது என்பதும், அதை இயக்குபவர்கள், லாபம் ஒன்றை மட்டுமே குறிவைத்து இயங்குபவர்கள் என்பதையும் புரிந்துகொள்ளாதவர்கள். அல்லது புரிந்துகொண்டு வென்றுவிட முடியும் என்று நம்புகிறவர்கள். ஆனால், உண்மை அப்படி இல்லை.

பல பயிர் சாகுபடி

வேளாண்மையில் பொய்யும் புனைசுருட்டும் எடுபடாது. பயிர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு விளைச்சலைக் கூடுதலாகத் தந்துவிடாது. ஊழல் செய்து பூச்சிகளை வேலை செய்யாமல் நிறுத்த முடியாது. அடிதடி நடத்திப் பொக்குகளையும் பதர்களையும் நன்மணிகளாகக் காட்ட முடியாது. எனவே, இன்றுள்ள அநியாயச் சந்தையில் வேளாண்மை என்னும் நியாயத் தொழில் நிற்கவே முடியாது. இதற்கு வேறு வகையான அடிப்படை மாற்றம் தேவை.

நமது சங்க இலக்கியமான பட்டினப்பாலை குறிப்பிடுவதுபோல,

‘கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது'

அதாவது வாங்கிக்கொள்ளும் நுகர்வோர் கொடுக்கும் காசுக்குக் கூடுதலாக வாங்காமல் இருப்பதும், விலை வைத்து விற்பவர்கள் பொருளின் தரத்தைக் குறைக்காமல் சரியாகக் கொடுப்பதும் நடக்கும்போது விளைவிக்கும் உழவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

ஆனால், இன்றைய நிலைமை அப்படியல்ல. எனவே சந்தையைப் புரிந்துகொள்ள வேண்டியது உழவர்களின் கடமை. எனவே, ஓரினப் பயிர் சாகுபடி என்பது நாமே வலியப் போய் சந்தையில் மாட்டிக்கொள்ளும் ஆபத்தான செயல். எனவே, பல பயிர் சாகுபடி என்பதே இன்றைக்கு ஏற்றது.

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-11-வேளாண்மை-வருமானம்-தர/article7952565.ece?ref=relatedNews

முன்னத்தி ஏர் 12: சத்தியமங்கலத்தில் ஒரு ஃபுகோகா பண்ணை

ni_2654659g.jpg

 

ni11_2654657g.jpg

சூழலியல்கோட்பாடுகளில், உயிரியல் பன்மயம் (Biological diversity) என்றொரு கோட்பாடு உள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெவ்வேறு வகையான பயிர்களை அல்லது உயிரினங்களை வளர்ப்பது அல்லது வளரவிடுவதே இதன் அடிப்படை. வெவ்வேறு வகையான உயிரினங்கள் ஓரிடத்தில் எவ்வளவு அதிகமாக உள்ளனவோ, அந்த இடத்தை உயிர்பன்மயம் (Biodiversity) மிக்க இடம் என்று குறிப்பிடலாம். இவ்வாறு உயிரினங்களைப் பெருக வைக்கும் செயல்பாட்டைப் பல்லுயிர் பெருக்கம் (Multi lifeform breeding) என்று கூறலாம்.

பன்மயமிக்க ஒரு பண்ணை நாளும் ஒரு வருமானம், மாதம் ஒரு வருமானம், ஆண்டுக்கு ஒரு வருமானம், பல்லாண்டு கழித்து மொத்தமாக ஒரு வருமானம் என்று நீடித்த வருமானத்தைத் தரவல்லதாக இருக்கும். இப்படிப்பட்ட பண்ணை ஒன்றை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள உப்புப்பள்ளத்தைச் சேர்ந்த ரவி உருவாக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ரசாயன வேளாண்மையில் ஈடுபட்டுப் பெரும் கடன்களைச் சந்தித்து, தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூட நினைத்து வருந்தியவர்.

பன்மய சாகுபடி

பின்னர் இயற்கைவழி வேளாண்மைக்குள் வந்தபோதும் பன்மயப் பண்ணையை உருவாக்குவதற்கு முன்பு, இயற்கை முறையில் கரும்பு மட்டும் சாகுபடி செய்து வந்தார். மிக உச்சகட்ட விளைச்சலையும் எடுத்தார், ஆனாலும் இவருடைய உழைப்பு முற்றிலும் கரும்பாலைக்குப் பயன்பட்டதுடன் வங்கிக் கடன் கட்ட மட்டுமே பயன்பட்டது. இவருக்கு எந்த வருமானமும் வரவில்லை.

தனது பண்ணையைப் பன்மயப் பண்ணையாக மாற்றிய பின்னர், இன்றைக்குப் புகழ்பெற்ற பண்ணையாளராக இவர் மாறிவிட்டார். தன்னுடைய நான்கு ஏக்கர் பண்ணையில் பல்வேறு வகையான பயிரினங்களை வளர்த்துள்ளார். இவருடைய தோட்டத்தில் கால்நடைத் தீவனம் முதல் கட்டை தரும் தேக்கு மரம்வரை உள்ளன. இவர் எட்டு அடி இடைவெளியில் வாழைக் கன்றுகளை நட்டுள்ளார். நாற்பது அடி இடைவெளியில் தென்னை நடவு செய்துள்ளார். இதற்கிடையில் மாதுளை, சப்போட்டா, நெல்லி என்று பழ மரங்களை நட்டுள்ளார். இடையிடையே தீவனப் பயிர்களையும் வைத்துள்ளார். எல்லாமே இப்போது பயன்தரத் தொடங்கிவிட்டன. கால்நடைகளாகத் தலைச்சேரி ஆடுகள், எருமை மாடுகள் ஆகியவற்றை வளர்க்கிறார். இவற்றின் கழிவு பண்ணையில் உரமாக மாற்றப்படுகிறது.

தற்சார்புப் பண்ணை

இவருடைய பண்ணை, உழவு செய்யாத பண்ணை. ஏராளமான பண்ணைக் கழிவு மூடாக்காக இடப்பட்டுள்ளது. தொடர்ந்து மூடாக்கு செய்துள்ளதால் மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகரித்துள்ளது. மண்ணின் வளம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

பாசனத்துக்குச் சொட்டு நீர்ப்பாசன முறையைப் பின்பற்றுகிறார். இதனால் மிகவும் சிக்கனமான முறையில் தண்ணீர் செலவாகிறது. வேலை ஆட்களின் தேவையும் குறைந்துவிட்டது. இப்படிப் படிப்படியாக, முழுமையும் தற்சார்பு கொண்டதாகப் பண்ணை மாறிவிட்டது. வெளியிலிருந்து எவ்வித வெளியிடு பொருட்களும் தேவைப்படாத பண்ணையாக இது மாறியுள்ளது.

வேறுபட்ட வருமானம்

இப்படி உருவாக்கப்பட்டுள்ள இவருடைய பண்ணையிலிருந்து வாழைப்பழத் தார்களின் மூலம் மாதத்துக்கு ரூ. 2,000; தேங்காயில் மாதத்துக்கு ரூ. 2,000; தேவைக்கேற்ப ஆடுகளை விற்பதன் மூலம் மாதத்துக்கு சராசரியாக ரூ.2,000; எருமை மாடுகள் மூலம் மாதத்துக்கு ரூ. 2,000 வரை கிடைக்கிறது. சப்போட்டாவும் நெல்லியும் இப்போது காய்ப்பு நிலைக்கு வந்துவிட்டன. இவை விரைவில் பயன்கொடுக்கும். இவை தவிரக் குமிழ், தேக்கு, பதிமுகம் என்று பலவகையான மரங்களும் பண்ணையில் வளர்ந்துவருகின்றன.

கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்கள், இவருடைய பண்ணையிலேயே கிடைக்கின்றன. வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும் விளைவித்துக்கொள்கிறார். உணவுக்காக நாட்டுக் கோழிகள் வளர்கின்றன. சில நேரம் இவையும் பணம் தருகின்றன. தன்னுடைய பண்ணையில் கிடைக்கும் தேங்காயிலிருந்து எண்ணெய் எடுத்து நேரடியாக விற்பனை செய்கிறார்.

இவருடைய பண்ணையில் பூச்சித் தாக்குதல் இல்லை. ஏனென்றால், நன்மை செய்யும் பூச்சிகள் நிறையவே உள்ளன. கதம்ப வண்டுகள் எனப்படும் குளவி இனம் மிகப் பெரிய கூட்டைக் கட்டியுள்ளது. இது இவருடைய பண்ணையின் காவலாளியாகவும் செயல்படுகிறது. இவ்வளவுக்கும் இவர் வளர்ச்சி ஊக்கிகளைக்கூடப் பயன்படுத்துவது கிடையாது.

(அடுத்த வாரம்: மண்புழுவே உண்மையான உழவன்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

உப்புப்பள்ளம் ரவி தொடர்புக்கு: 9443724779

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-12-சத்தியமங்கலத்தில்-ஒரு-புகோகா-பண்ணை/article7980400.ece?ref=relatedNews

 

முன்னத்தி ஏர் 13: மண்புழுவே உண்மையான உழவன்

 

 

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 14: ஏன் வீழ்ந்தன நம் தானியங்கள்?

dhaniyam_2671870f.jpg

கருங்கால்

வரகே இருங்கதிர்த்தினையே

சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு

இந்நான்கல்லது உணவும் இல்லை'

- என்று மாங்குடிக் கிழாரால் (புறநானூறு: 335) உயர்த்திக் கூறப்படும் வரகு, தினை போன்ற தவசங்கள் (தானியங்கள்), தமிழகத்தின் வானவாரி (மானம்பாரி) நிலத்தில் விளைந்து மிகுந்த பயனைத் தந்தவை. இன்றைய காலகட்டத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட இவை, பல பன்னாட்டு நிறுவனங்களால் ஊட்ட மாவுக்காகவும், ஊட்டக் குடிநீராகவும் (Health Drinks) விரும்பி வாங்கப்படுகின்றன.

தானியங்களைப் பொறுத்த அளவில் நஞ்சை (நன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் புஞ்சை (புன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் பொதுவாகப் பிரிக்கப்படுகின்றன. ஆறுகள், குளங்களின் வழியே நீரைப் பெற்று உறுதியான பாசன வசதியைக் கொண்ட நிலங்களை, நஞ்சை நிலங்கள் எனலாம். இங்கு விளையும் தானியங்கள் மிகுந்த நீரை எடுத்துக்கொண்டு அதிக அளவு விளைச்சலைக் கொடுக்கும். நெல், கோதுமை, மொக்கைச் சோளம் எனப்படும் மக்காச் சோளம் ஆகியன நன்செய்க்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுப் பன்னெடுங்காலமாக விளைவிக்கப்படுகின்றன.

பாதிக்கு மேற்பட்ட உணவு

வீரிய விதைகள் எனப்படும் ஒட்டு விதை ஆராய்ச்சியும் இந்தப் பயிரினங்களில்தான் நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுமைக்கும் பெருமளவு உணவை வழங்குவது என்னவோ, மானாவாரி வேளாண்மைப் பயிர்களே. குறிப்பாக, இந்தியாவில் பாதிக்கு மேற்பட்ட உணவு, மானாவாரி நிலப்பரப்பில் இருந்தே கிடைக்கிறது. அதாவது இந்தியாவில் மொத்த உணவு தானிய விளைச்சல் பரப்பான 14 கோடி ஹெக்டேர் பரப்பளவில் 8.5 கோடி ஹெக்டேர், அதாவது 65 விழுக்காடு நிலத்தில் உணவு தானியங்களே விளைகின்றன.

மானாவாரி நிலங்களுக்கே உரிய புஞ்சைத் தானியங்களான சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி போன்றவை மிகக் குறைந்த மழைநீரில் வளர்ந்து விளைச்சல் தருபவை. இவற்றில்கூட வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி ஆகிய ஐந்தும் சிறுபுஞ்சைத் தானியங்கள் (minor millets) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை அருந்தானியங்கள் என்றும் அழைக்கலாம். ஏனெனில் அவை அரியவையாகவும், அருமையானவையாகவும் இருப்பதுதான்.

குறைந்த நீரே போதும்

உண்மையில் இவை சிறுதானியங்களன்று, பெருமைக்குரிய தானியங்கள். ஏனெனில் இவற்றில் இருக்கும் ஊட்டங்கள் மிகச் சிறப்பானவை. மிகக் குறைந்த நீர், மிக எளிய தொழில்நுட்பம், மிகக் குறைந்த இடுபொருள் செலவு, மிக அதிக ஊட்டம் என்று எல்லா வகையான சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கும் இந்தத் தானியங்களை நமது வேளாண் அறிவியலாளர்களும், அரசுத் துறைகளும் புறக்கணித்துள்ளன.

குறிப்பாக ஒரு கிலோ நெல் விளைவிக்கத் தேவைப்படும் நீர் 1,550 லிட்டர், அதேபோல ஒரு கிலோ கோதுமை விளைவிக்க 750 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், புஞ்சைத் தானியங் களுக்கு இதில் 10-ல் ஒரு பங்கு நீர்கூடத் தேவையில்லை. பெரிய அணைகள் தேவையில்லை. காடுகளும் பழங்குடிகளும் அழிய வேண்டியதில்லை. ஆழ்துளைக் கிணறு மட்டுமல்ல திறந்த கிணறும் கூடத் தேவையில்லை. ஒரு கிலோ தினை சாகுபடி செய்ய, எவ்வளவு நீர் தேவைப்படும் என்ற ஆய்வுகூட நடத்தப்படவில்லை என்பதுதான் வேடிக்கை. இந்தத் தானியங்கள் மழை நீரை நம்பியே விளைகின்றன.

திட்டமிட்ட புறக்கணிப்பு

பசுமைப் புரட்சியால் பெரிதும் பாதிக்கப் பட்டவை இந்தப் புஞ்சைப் பயிர்கள்தான். பசுமைப் புரட்சியில் நெல்லையும் கோதுமை யையும் குறிவைத்தே ஆராய்ச்சிகள் நடந்தேறின. அத்துடன் அரிசிச் சோறு உண்பதே உயர்ந்த பண்பாடு என்ற பரப்புரையும் விரிவாக்கப்பட்டது. குறிப்பிட்ட மேட்டுக்குடி மக்களின் உணவாக இருந்த அரிசி, யாவருக்குமான உணவாக மாற்றப் பட்டது. பள்ளி உணவுத் திட்டம், பொது வழங்கல் திட்டம் என்று யாவற்றிலும் அரிசியும் கோதுமையுமே கொடுக்கப்பட்டன. ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள், சாகுபடிக்கான ஒதுக்கீடுகள் என்று அளவற்ற பணம் இதில் முதலீடு செய்யப்பட்டது. இதன் விளைவாக மக்களின் பயன்பாட்டில் இருந்து புஞ்சைத் தானியங்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டன.

பழங்குடி மக்கள், ‘நாகரிகம்' தொடாத பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் மட்டுமே தானியங்களின் பயன்பாடு எஞ்சியிருந்தது. தமிழகத்தில் நாமக்கல், தருமபுரி, மதுரை போன்ற மிக அரிதான இடங்களில் மட்டுமே சாமை, குதிரைவாலி, தினை போன்றவை பயிரிடப்படுகின்றன. இன்றைக்கு மதுரைப் பகுதி மக்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை விற்றுவிட்டு, நியாய விலைக் கடைகளில் ‘விலையில்லா' அரிசியை வாங்கிச் சமைக்கின்றனர்.

இப்படிப் புறக்கணிக்கப்பட்ட தானியங்களால் ஏற்பட்ட சூழலியல், திணையியல், பொருளியல், பண்பாட்டியல் கேடுகளை இதுவரை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது.

(அடுத்த வாரம்: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெரும் ஊட்டம்) கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-14-ஏன்-வீழ்ந்தன-நம்-தானியங்கள்/article8031532.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெரும் ஊட்டம்

munnathi_2680423f.jpg
 

புஞ்சைத் தானியங்கள் எனப்படும் அருந்தானியங்கள் புறக்கணிக்கப் பட்டதால் நீரின் பயன்பாடு அதிகமானது. காரணம், அந்த இடத்தில் வீரிய விதைகள் (உண்மையில் வறட்சி, பூச்சி தாக்குதல் இவற்றுக்கு ஈடு கொடுக்க முடியாத சோதா விதைகளே அவை) வந்து அமர்ந்தன. இவை அதிக ரசாயன உரம், அதிக நீர் தேவையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அது மட்டுமல்லாமல் மண்ணின் வளம் பல்வகைப் பயிர்ச் சாகுபடியால் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதாவது தினை, வரகு போன்றவற்றைத் தனியாகச் சாகுபடி செய்யமாட்டார்கள். அத்துடன் பல பயறு வகைகள், காய்கறிகள் என்று கலப்புப் பயிர் சாகுபடியைச் செய்வார்கள்.

இதனால் பயறு வகைப் பயிர்கள் மண்ணில் வெடியம் (நைட்ரஜன்) என்ற தழை ஊட்டத்தைச் சேமிக்கும். இதன் விளைவாக மண் வளம் காக்கப்படும். ஆனால் பசுமைப் புரட்சி முன்வைத்த ஓரினச் சாகுபடி (monoculture) என்பது முற்றிலும் வேதி உப்புகளை அடிப்படையாகக் கொண்டது, வெளி இடுபொருட்களுக்கு வழிகோலியது. எனவே, மண் வளம் தொடர்ந்து குறைந்துகொண்டே போகும். அது மட்டுமல்லாமல் அருந்தானியங்களுக்கு எவ்விதமான பாசன வசதியும் தேவையில்லை. பெய்யும் மழையே போதுமானது.

பன்மயப் பாதுகாப்பு

காடைக்கண்ணி (common millet) என்றொரு தானியம், இன்றைய தலைமுறையினர் இதைப் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். இது அறுபது முதல் எண்பது நாட்களில் அறுவடையாகிறது. ஒன்று அல்லது இரண்டு மழை போதும். மிகவும் சிறப்பான ஊட்டங்களைக் கொண்டது. மண்ணின் வளத்தைப் பெருக்குவதில், அடுத்ததாகத் திணையவியல் (சூழலியல்) நோக்கில் பார்த்தால் புஞ்சைத் தானியங்கள் பெருமளவு வைக்கோல்களைக் கொடுப்பவை. அதன்மூலம் கால்நடைகளுக்கான உணவு உறுதி செய்யப்பட்டுவிடுகிறது. எண்ணற்ற பறவையினங்கள் இந்தத் தானியங்களை உண்டு வாழ்வதோடு, அந்த வயல்களுக்கு வரும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று பூச்சிக் கட்டுப்பாட்டுக்கும் உதவுகின்றன.

ஆனால் மக்காச்சோளச் சாகுபடியிலோ, சீமைக் கருவேல மரத்திலோ பறவைகளுக்கான உணவு கிடைப்பதில்லை. ஒரு நிலத்தில் பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படும் உயிரியல் பன்மயம் (Biodiversity), இப்போது மறைந்துவிட்டது. இதன்மூலம் மாறுபட்ட சூழலைத் தாங்கி வளரும் பயிரினங்கள், நுண்ணுயிர்கள் போன்றவை மறைந்துவிட்டன. வெப்பமண்டல வானவாரி நிலத்தில் உயிர்மக் கூளத்தை (Bio-mass) அதிகரிக்கச் செய்வதன் மூலம் பெருமளவு கரியை மண்ணில் நிலைநிறுத்த முடியும். இந்தக் கரிம அகப்படுத்தல் (Carbon sequestration) காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளில் ஒன்றாக முன்வைக்கப்படுகிறது.

ஊட்டம் நிறைந்த தானியங்கள்

புஞ்சைத் தானியங்கள் உள்ளூர் பொருளியலில் மிக முதன்மையான பங்கை வகிக்கின்றன. இதனால் உணவுக்கான பணமும் உழைப்பும் உள்ளூரிலேயே சுழன்று வருகிறது. வெளிச்சந்தைக்கு அவை போவதில்லை. இந்தப் பயிர்களுக்கு வெளி இடுபொருட்களான உப்பு உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லாததால் பணம் வெளியேறுவதில்லை.

அது மட்டுமல்ல புஞ்சைத் தானியங்கள் மிகச் சிறந்த ஊட்டங்களைக் கொண்டவை. குறிப்பாக, குதிரைவாலி எனப்படும் தானியம் நார் ஊட்டத்தைப் பொறுத்தளவில் கோதுமையைவிட 6.8 மடங்கு கூடுதல் ஊட்டத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் அரிசியைவிட 13 மடங்கு கூடுதல் ஊட்டம் கொண்டுள்ளது. தினை என்ற தவசம் அரிசியைவிடக் கூடுதல் புரதத்தைக் கொண்டுள்ளது. குதிரைவாலியில் கோதுமையைவிட 5.3 மடங்கு கூடுதலாக இரும்பு ஊட்டம் உள்ளது, அரிசியைவிட 10 மடங்கு கூடுதலாக உள்ளது. இதேபோலப் பல ஊட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நமது மருத்துவர்களின் பரிந்துரை வரகரிசிச் சோறுதான்!

நெல் கவர்ச்சி

இந்திய/தமிழக சமூக வரலாற்றில் மக்களின் சிந்தனைப் போக்கிலும் பண்பாட்டு வெளியிலும் பெரிய மாற்றம் நிகழ்த்தப்பட்டது. இது வெறும் வேளாண்மையோடு மட்டும் தொடர்புடையது அல்ல. மொழி, நிறம், சாதி என்று பல தளங்களிலும் பெரும்பான்மை அடித்தட்டு மக்களுக்குப் புறம்பான, சில மேட்டுக்குடிகளின் பண்பாட்டை நிலைநிறுத்துவதாக அமைந்தது.

'கருங்கால் வரகு அல்லது பிற உணவே இல்லை' என்று கூறிய பண்டை மரபுக்கு மாறாக 'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு' என்று ஏங்க வைக்கும் சூழல் ஏற்பட்டது. கருப்பாக இருக்கும் பனைவெல்லமான கருப்பட்டி இழிவாக மாறி, வெள்ளை நிறத்து 'சீனி' உயரிய பொருளாக மக்களால் அணுக வைக்கப்பட்டது. பொருள் வளம், ஊடக வலு, சிந்தனைத் திறம் என்ற எல்லா வசதிகளையும் கையில் வைத்துக்கொண்டு ஒரு பெரும் பண்பாட்டு மாற்றம் நிகழ்த்தப்பட்டது. அதில் ஒன்றுதான் நெல்லரிசியின் மீதான கவர்ச்சி.

(அடுத்த வாரம்: நம் உணவை நாம் தீர்மானிக்கிறோமா?) 
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-15-சிறுதானியங்களில்-பொதிந்துள்ள-பெரும்-ஊட்டம்/article8058124.ece?ref=relatedNews

முன்னத்தி ஏர் 16: நம் உணவை நாம் தீர்மானிக்கிறோமா?

wheat_2707588f.jpg
 

அருந்தானியங்களின் மகத்துவத்தைப் பற்றி பேசும்போது நெல்லின் மீது வெறுப்போ, அருவருப்போ கொள்ளத் தேவையில்லை. நெல் என்பது தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று. அதைப் போற்றுவதும் புரப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையும்கூட. ஆனால், ஒவ்வொரு வேளாண் காலநிலை மண்டலத்துக்கு (Agro-climatic Zone) ஏற்ற உணவுப் பொருட்கள், அங்குள்ள மக்களுக்கு உணவாகின்றன. தமிழகத்தின் இன்றைய பிரிப்பின்படி, ஏழு வேளாண்மைக் காலநிலை மண்டலங்கள் உள்ளன.

இவை காவிரி வடிநிலம் முதல் கல்லுப்பட்டி, விருதுநகர், கோவில்பட்டி கரிசல் நிலம்வரை பல கூறுகளாக அமைந்துள்ளன. இவற்றில் விளையும் உணவுப் பொருட்கள், அவற்றுக்கே உரிய தனித்தன்மையைக் கொண்டவை. ஆற்று வடிமுகப் பகுதியில் வாழ்ந்த மக்கள் பெரிதும் நெல்லை உண்டு வாழ்ந்தனர். இவர்களது உணவையே மற்ற அனைவருக்குமான உணவாக மாற்றும் பொழுதுதான் சிக்கல் தோன்றியது. இதன் நிறை, குறை பற்றிய ஆய்வேதும் இல்லாமல், இந்தப் பரப்புதல் நடந்தேறியது. நெல்லையும் தினையையும் பரிமாறிக்கொண்ட நிலை மாறி, நெல் மட்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.

அரிசியை முந்திய கோதுமை

இந்தப் பின்புலத்தில்தான் நெல்லரிசிச் சோற்றின் மீது நமக்கு ஏற்பட்ட ஈர்ப்பை உற்று நோக்க வேண்டும். நெல்லை அரைத்து அரிசியாக்கச் சாதாரண ஆலை முதல் நவீன (modern) ஆலைகள்வரை வந்துவிட்டன. புஞ்சைத் தானியங்களை இன்றும் குத்திப் பிரிக்க வேண்டிய நிலை உள்ளது. மிகக் குறைவாகவே, இவற்றுக்கான அரவை ஆலைகள் உள்ளன. அரிசியையும் முந்தி கோதுமை இப்போது முதலிடத்துக்கு வந்துவிட்டது.

தமிழகத்தில் மிக அரிதாகவே விளையும் கோதுமை, இன்றைக்குத் தமிழ்த் தேசிய உணவாக மாறிவருவதை யாரும் மறுக்க முடியாது. கோதுமைக்கு அரசு கொடுக்கும் உதவித்தொகையைவிட, நெல்லுக்குக் கொடுப்பது குறைவு, அதைவிட புஞ்சைத் தானியங்களுக்கு இன்னும் குறைவு. கோதுமையை உணவாக மாற்றும் உணவுப் பண்ட ஆராய்ச்சிகள், மிக அதிக அளவில் நடைபெறுகின்றன. தொலைக்காட்சி வழியே வரும் உணவு தயாரிப்பு நிகழ்ச்சிகளில் பலவும், கோதுமையை முதன்மைப்படுத்தியே வருகின்றன.

உணவு இறையாண்மை

நாட்டின் இறையாண்மை பற்றிப் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். ஆனால் உணவு இறையாண்மை பற்றி, நாம் யாரும் கவலைப்படுவதில்லை. உணவு உறுதிப்பாடு (Food security) என்பது வேறு, உணவு இறையாண்மை (Food Sovereignty) என்பது வேறு. உணவு உறுதிப்பாட்டைப் பொறுத்த அளவில், ஏதாவது ஓர் உணவைப் பெறுவதற்கான உறுதிப்பாடு என்பதுடன் முடிந்துவிடுகிறது. இதற்கு வெளிநாட்டில் இருந்தும்கூட உணவை இறக்குமதி செய்து கொடுத்துவிட முடியும். ஆனால், உணவு இறையாண்மை என்பது உணவை விளைவிக்கும் நிலத்துக்கான உறுதிப்பாடு, அதற்கான நீருக்கான உறுதிப்பாடு, விதை போன்ற மரபை ஈனும் வளத்துக்கான உறுதிப்பாடு, அத்துடன் உணவுக் கொள்கைகளில் உழவர்களின் பங்கேற்புக்கான உறுதிப்பாடு ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடக் கூடாது.

என்ன உணவை நாம் உண்ண வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நிலை இப்போது இல்லை. யாரோ சிலர் நமக்கான உணவை முடிவு செய்து அனுப்புகின்றனர். தஞ்சையில் விளையும் நெல், நடுவண் அரசின் பொதுத் தொகுப்புக்கான கிடங்குக்கு மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்குப் பயணிக்கிறது. பின்னர் அங்கிருந்து நியாயவிலைக் கடைக்காக மறுபடி தஞ்சையில் உள்ள சிற்றூருக்கு வந்து சேர்கிறது. இதற்குள் சீர்கெட்டுப் போகும் அது, ஏழை மக்களின் தலையில் கட்டப்படுகிறது. இதேபோலத்தான் கோதுமையும்.

நம் உணவு எங்கே?

நம் ஊருக்கு அருகில் விளையும் ஊட்டம்மிக்க வரகையும், குதிரைவாலியையும் நாம் உண்பதைத் தடுக்கும் இந்த மறைமுகச் சூதாட்டத்தை என்னவென்பது? எனது நிலத்தில் எதை விளைவிக்க வேண்டும் என்பதையும் எந்த வகையான உணவை நான் உண்ண வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் ஆற்றல் ஒருவருக்கு இருக்குமேயானால், அதுதான் உணவு இறையாண்மை.

தமிழகத்தைப் பொதுவான ஓர் உணவு மண்டலமாக மாற்றி, அதன் பிறகு வேளாண்மை திணை மண்டலங்களுக்கு ஏற்ற உணவு மண்டலங்களைப் பிரித்து உணவு விளைவித்தலும், பகிர்வும் இருக்குமானால் பெருமளவு உணவு சிக்கல்களைக் களைய முடியும்.

உணவு இறையாண்மை என்ற கருத்து வலுப்படும்போது சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் (SEZ) கேள்விக்கு உள்ளாகும். உணவு இறையாண்மையை நாம் இழந்துவிட்ட காரணத்தால், மக்களின் உணவாகப் பல நூறு பயிர்கள் இருந்த நிலை மாறி, இன்றைக்கு அரிசி, கோதுமை என்ற இரண்டு மட்டுமே நமது உணவின் 90 விழுக்காட்டை நிறைவு செய்கின்றன. ஆக, நமது உணவுப் பன்மயமும் குலைந்துவிட்டது.

(அடுத்த வாரம்: கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி)


கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-16-நம்-உணவை-நாம்-தீர்மானிக்கிறோமா/article8144496.ece?ref=relatedNews

முன்னத்தி ஏர் 17: கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி

விவசாயி பாண்டி
விவசாயி பாண்டி

புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை அரிசியே காரணம் என்பதும் நவீன மருத்துவ உலகம் கூறும் முடிவுகள். இதற்கு மாற்றாக இருப்பவை தினை, சாமை, வரகு போன்ற புஞ்சைத் தானியங்கள். எனவே, நகர்ப்புற மேட்டுக்குடி மக்களுக்கான உணவாக இது மெல்ல மெல்ல மாறி வருகிறது.

ஒரு காலத்தில் உடல் உழைப்பாளிகளின் உணவாக இருந்து மேட்டுக்குடிகளால் புறக்கணிக்கப்பட்ட இவை, இன்றைக்கு உடல் உழைப்பாளிகளால் மறக்கப்பட்டு, மேட்டுக்குடிகளின் 'ரெசிபி'யாக மாறிவருவது, ஒரு வரலாற்று முரண்! எளிய மக்களுக்கும் கிடைக்கும் உணவாக இவற்றை மாற்றினால், உண்மையான பயன் கிடைக்கும்.

வறட்சி வந்தது

இந்த முயற்சியில் இறங்கிய முன்னத்தி ஏர்களில் ஒருவர், எளிமையான உழவரான பாண்டி. மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகில் உள்ள வன்னிவேலம்பட்டி என்ற சிற்றூரில் இயற்கைமுறை வேளாண்மையில் ஈடுபட்டு வருபவர் இவர். வழக்கம்போல இயற்கை வேளாண்மைக்குள் வருபவர்களை எள்ளி நகையாடும் நிகழ்வுகள், இவருடைய வாழ்விலும் நடந்தன.

மழையை மட்டுமே நம்பிய தனது இரண்டரை ஏக்கர் வானவாரி நிலத்தில் குதிரைவாலி சாகுபடி செய்திருந்தார். சென்ற ஆண்டு கடுமையான வறட்சி, அவருடைய ஊரில் பெரும்பாலோர் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர். இவருடைய குதிரைவாலியும் வறட்சிக்கு இலக்கானது. மக்காச்சோளமோ முற்றிலும் கருகியே போய்விட்டது. அனைவருக்கும் பெருத்த நட்டம். எல்லாரும் நிலத்தை மீண்டும் உழுது போட்டு, அடுத்த பயிர் வைக்கத் தயாராகிவந்தனர்.

துளிர்த்த குதிரைவாலி

ஆனால், குதிரைவாலியின் மீது பாண்டி நம்பிக்கை வைத்திருந்தார். நிலத்தை உழுதுவிடச் சொல்லி மற்றவர்கள் இவரிடம் வற்புறுத்தினர். ஆனால் முற்றிலும் கருகிவிட்ட அந்தப் பயிர், 40 நாட்கள் கழித்துப் பெய்த மழையில் துளிர்விட்டது. பின்னர்ப் பெய்த இரண்டே இரண்டு மழையில் விளைச்சல் தந்தது. நெய்க்கரிசல் நிலத்தின் நீர்ப்பிடிப்புத் தன்மை, பெய்த மழையைச் சொட்டுக்கூட வீணாக்காமல் பயிர்களுக்குக் கொடுத்து விளைச்சலை வழங்கியது. ஏக்கருக்குச் சராசரி 650 கிலோ குதிரைவாலியும் 100 கிலோ துவரம் பயிறும் கிடைத்தன. மக்காச்சோள உழவர்களோ எதையும் அறுவடை செய்யாமல் நிலத்தை உழுது போட்டதுதான் மிச்சம்.

பாண்டி தன்னுடைய மற்றொரு நிலப் பகுதியில், பாசன வசதியுள்ள நிலத்தை வைத்துள்ளார். அதில் நிறைய மரங்களை வளர்க்கிறார். அதில் வரும் தழைகளைக் கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்துகிறார். ஊடே காய்கறி, வீட்டுக்குத் தேவையான நெல் போன்றவற்றையும் சாகுபடி செய்துகொள்கிறார்.

இளகிய நிலம்

இவருடைய குடும்பத்தில் அனைவரும் உழைப்பில் ஈடுபடுகின்றனர். இவருடைய வீட்டில் உள்ள நாற்காலி, கட்டில் முதலிய வீட்டுப் பயன்பாட்டு பொருட்களைக்கூட இவரது நிலத்தில் விளைந்த மரங்களைக் கொண்டே செய்துள்ளார். தற்சார்புள்ள ஒரு எளிமையான உழவர் இவர். மிகச் சிறந்த பாடகர், கவிஞர். இவரே பாடல் புனைவார், இசையமைத்தும் பாடுவார். இயற்கை வேளாண்மை அரங்குகளில் இவருடைய வெங்கலக் குரல் முழங்கும்.

நீண்ட காலமாக இயற்கை வேளாண்மைக்குள் இறங்கி, தொடக்கத்தில் பல சிக்கல்களைச் சந்தித்து இப்போது வெற்றியாளராக மாறியுள்ளார். பிறருக்குக் கற்றும் தருகிறார். இவருடைய நிலம், இயற்கை வேளாண்மைக்குள் வரும் முன்னர் டிராக்டரால் உழுவதற்குக்கூடக் கடினமாக இருந்தது. இப்போது மாட்டைக்கொண்டு உழும் அளவுக்குப் பொலபொலவென மாறிவிட்டது என்று பாண்டி கூறுகிறார்.

பற்றாக்குறை காலப் பயிர்

குதிரைவாலி பயிரிட ஒரு ஏக்கருக்கு மூன்று முதல் நான்கு கிலோ விதை போதும். கோடையில் நிலத்தை நன்கு உழுது பக்குவப்படுத்தி, தொழுவுரமோ அல்லது ஆட்டுக்கிடையோ போட்டு நிலத்தை ஊட்டமேற்றி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு மழை பெய்தவுடன் சரியான ஈரத்தில் உழும்போதே, விதைத்துவிட வேண்டும். தேவைப்பட்டால் களை எடுத்துக்கொள்ளலாம். பலர் களைகூட எடுப்பது கிடையாது. களையை மீறி வளரும் திறன் கொண்டது குதிரைவாலி.

ஈரம் இருந்தால் ஒருமுறை அமுதக் கரைசல் என்ற ஊட்டக் கரைசலைத் தெளிக்கலாம். மழை குறைவாக இருந்தால் விளைச்சல் 500 கிலோவும், போதிய அளவு இருந்தால் 700 கிலோவும் கிடைக்கும். இப்போது இதன் சந்தை விலை கிலோ ரூ. 15 முதல் 20 வரை; மக்காச்சோளத்தைவிட அதிகம். செலவோ மிக மிகக் குறைவு. சந்தை வாய்ப்பு இப்போது நன்றாக உள்ளது.

காவிரி வடிகால் உழவர்கள் நெல்லுக்குப் பின்னர் ஒரு முறை தண்ணீர்ப் பற்றாக்குறை வரும் காலத்தில், குதிரைவாலி போன்ற அருந்தானியங்களை பயிர் செய்தால் நிச்சயம் அவர்களுக்கு நன்மை கிடைக்கும்.

- கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com 
தொடர்புக்கு: 8940013296

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-17-கேலியை-மீறிச்-சாதித்த-குதிரைவாலி/article8171499.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 19: வருமானம் குன்றாத அடிசில் சோலை

adisil_2735715f.jpg
 

திணையியல் என்ற இன்றைய சூழலியல் அறிவியல், காடுகளைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கிறது. வெப்பமண்டலக் காடுகளை (tropical forests), மழைக் காடுகள் (rain forests), பருவக் காடுகள் (monsoon forest) முட்காடுகள் (thorn forest) என்று பல வகைகளில் பிரிக்கின்றனர். இத்தகைய பிரிவுகள் காடுகளின் அமைவிடத்தைப் பொறுத்து அழைக்கப்படுகின்றன.

பருவக் காடுகள் கோடையில் இலைகளை உதிர்த்துவிட்டு மழைக்காலத்தில் துளிர்க்கின்றன. இதனால் மண்ணில் வளம் பெருகுகிறது. இத்தகைய தன்மை கொண்ட காடுகளை இலையுதிர்க் காடுகள் என்று கூறுவார்கள். ஆனால், இந்தப் பெயர் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள காடுகளையே குறிக்கும். தென் அரைக்கோளப் பகுதியிலுள்ள காடுகளை மழைக் காடுகள் என்றோ, ஈரக் காடுகள் என்றோதான் அறிவியலாளர்கள் குறிக்கின்றனர். இந்தப் பெயரை முதலில் வழங்கியவர் ஏ.எஃப்.டபிள்யு. சிம்பர் என்ற ஜெர்மானிய அறிஞர்.

சோலைக் காடுகள்

வெப்பமண்டல மழைக் காடுகளின் ஒரு பிரிவைச் சோலைக் காடுகள் என்று குறிக்கின்றனர். தமிழகத்தின் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளைச் சோலைக் காடுகள் (shola forest) என்று அறிவியலாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இந்தச் சோலைக் காடுகள் தமக்கெனத் தனியான சிறப்புத்தன்மைகளைக் கொண்டு விளங்குகின்றன. இவை அடுக்கு முறையில் அமைந்துள்ளன. கலித்தொகையில் கபிலர் இதைப் பதிவு செய்துள்ளதைப் பார்த்தோம்.

அடுக்குமுறைச் சாகுபடியின் மற்றொரு சிறப்பு இதன் மண்வளப் பாதுகாப்பு. இங்கு எப்போதும் தரை மூடப்பட்டிருக்கும், வெயிலும் நேரடியாக மண்ணைத் தாக்காது. இதனால் எண்ணற்ற நுண்ணுயிர்கள் மண்ணில் பெருகி வளரும். இதனால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு நீர்ப்பிடிப்பு அதிகரிக்கும். இதனால் ஒரு வலிமையான உணவு தொடரி (food chain) உருவாகும்.

அணிநிழற்காடு

‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்' என்று திருக்குறள் குறிக்கிறது.

சோலைக் காடுகளைத்தான் திருவள்ளுவர் அணிநிழற்காடு என்கிறார். ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக அடுக்குமுறையில் அணியாக அமைந்து, ஒன்றின் நிழல் மற்றொன்றின் மீது விழும் வகையில் இக்காடுகள் அமைந்திருக்கின்றன. இவ்வாறு பகுதி நிழலில் வாழும் மரவடைகளை (flora), காடுகளில் இயற்கை தானாகவே தேர்வு செய்கிறது.

பொதுவாக மழை பெய்யும்போது செம்மண் நிலமெனில் நீர் சிவப்பாகவும், கரிசல் நிலமெனில் பால்போன்ற நிறத்திலும் ஓடும். நிலத்திலுள்ள மேல்மண் கரைந்து செல்வதே இதற்குக் காரணம். இதை மண்ணரிமானம் (soil erosion) என்று அறிவியல் கூறுகிறது. இந்த மேல்மண்தான் அனைத்துப் பயிரினங்களும் வாழ்வதற்கான ஆதாரமாகத் திகழ்கிறது. வளமான மேல்மண் உருவாக நான்கு கோடி ஆண்டுகளுக்கு மேலாகும் என்கின்றனர். இந்த மண் அழிந்துபோவது நல்லதன்று. இதைப் பாதுகாப்பதே, சூழலியல் பாதுகாப்பின் முதன்மைச் செயல்பாடாக இருக்க வேண்டும்.

மண் அரிமானம் இல்லாத இடத்தில் விழும் நீர் நிறமற்று இருக்கும். இதைத்தான் திருவள்ளுவர் 'மணி நீர்' என்கிறார். மணி நீர் உருவாவதற்கு வேண்டியது, அணிநிழற்காடு என்ற சோலைக் காடாகும். அணிநிழற்காடு உள்ள இடத்தில் மழைத்துளி மண்ணைத் துளைக்காது, வெயில் தரையைத் தொடாது. அங்கே வளமான மண்ணும், செழிப்பான மலையும், மாசற்ற மணியான நீரும் உறுதியாக இருக்கும். இதுவே ஒரு நாட்டின் அரணாக இருக்கும்.

தொடர் வருமானம்

சீவகசிந்தாமணியில் ஏமாங்கத நாட்டின் வளத்தைக் குறிக்க வரும்போது தமிழக அணிநிழற்காடுதான் திருத்தக்கத் தேவருக்கு நினைவில் ஓடியுள்ளது.

“காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப்

பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து

தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்

ஏமாங்கதம் என்று இசையில் திசை போயதுண்டே''

என்று தென்னை (தெங்கு), பாக்கு (கமுகு), பலா (வருக்கை), மா, வாழை என்ற ஒருவகையான அடுக்குமுறையை விளக்குகிறது இப்பாடல்.

ராபர்ட் ஃகார்ட் என்ற இங்கிலாந்து நாட்டு அறிஞர், இந்தத் தொழில்நுட்பத்தை மிக முன்னேறிய தொழில்நுட்பமாகப் பதிவு செய்கிறார். இத்தகைய முறையில் ஒரு பண்ணையை உருவாக்கும்போது நாளும் ஒரு வருமானம், கிழமைக்கு ஒரு வருமானம், மாதம் ஒரு வருமானம், ஆண்டுக்கு ஒரு வருமானம் என்று தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும். பண்ணையாளனின் உழைப்பு குறைந்துகொண்டே வரும். இப்படி யாக உணவு தரும் ஒரு காட்டை ‘அடிசில் சோலை’ என்கிறோம்.

(அடுத்த வாரம்: ஃபுகோகாவிடம் பயிற்சி பெற்ற தமிழர்)

- கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-19-வருமானம்-குன்றாத-அடிசில்-சோலை/article8232274.ece?ref=relatedNews

முன்னத்தி ஏர் 20: ஃபுகோகாவிடம் பயிற்சி பெற்ற தமிழர்

ஃபுகோகாவுடன் மதுராமகிருஷ்ணன்
ஃபுகோகாவுடன் மதுராமகிருஷ்ணன்

இயற்கைவழி வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களுக்கு ஜப்பான் நாட்டின் மிகச் சிறந்த இயற்கை வேளாண் வல்லுநரான மசானபு ஃபுகோகாவைப் பற்றித் தெரியாமல் இருக்க முடியாது. உலகம் போற்றும் பெரும் வேளாண் அறிஞரான அவரிடம் பயிற்சி பெற்ற ஒரு தமிழர் நம்மிடையே இருப்பது பலருக்கும் தெரியாது. பொள்ளாச்சி அருகேயுள்ள மலையாண்டிப்பட்டணம் என்ற ஊரில் வாழும் அந்த இயற்கை வேளாண் முன்னோடி மது ராமகிருஷ்ணன். வேளாண்மையைச் சுலபமாகச் செய்யும் முறையைப் பற்றி இவர் எழுதியும் பயிற்சியளித்தும் வருகிறார்.

ஐம்பது ஏக்கர் மரங்கள்

பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் இவர். இவருடைய ‘சந்தோஷ் பண்ணை’ கோயம்புத்தூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனைமலை என்ற அழகிய சூழல் சிறப்புமிக்க இடத்தில் தனது பண்ணையை அவர் அமைத்துள்ளார். ஐம்பது ஏக்கர் பரப்பளவுள்ள இவருடைய பண்ணையில் பெரிதும் மரங்களே வளர்க்கப்பட்டுள்ளன. மலைவேம்பு, வாகை, தேக்கு, செம்மரம், சவுக்கு, குமிழ் போன்ற கட்டை மரங்களும், தென்னை மரங்கள், பாக்கு போன்ற கொட்டை மரங்களும், கோகோ, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை போன்ற பழ மரங்களும் இவரது பண்ணையில் பரவிக் கிடக்கின்றன.

அடுக்குமுறை சாகுபடி

அடுக்குமுறை சாகுபடியாகத் தனது பண்ணையை இவர் மாற்றியுள்ளார். அதாவது ஒரு மரத்துக்கு இடையில், மற்றொரு மரப்பயிரை ஊடுபயிராக நடவு செய்துள்ளார். தென்னைக்கு இடையில் தேக்கு, அதற்கு இடையில் எலுமிச்சை என ஒன்றை ஒன்று சார்ந்து வளரும் வகையில் இவருடைய பண்ணை அமைந்துள்ளது. இதன் மூலம் ஏக்கர் ஒன்றுக்கான வருமானம் அதிகரிக்கிறது. நீரின் தேவை குறைந்துகொண்டுவருகிறது. உயர்ந்த மரங்களிலிருந்து விழும் இலைகள் மற்றப் பயிர்களுக்கு மூடாக்காகப் பயன்படும். இதன் மூலம் மண் வளம் அதிகரிக்கிறது; நுண் பருவநிலை உருவாக்கப்படுகிறது; அதன் மூலம் நல்ல குளிர்ந்த சூழல் உருவாகிறது.

உயிரிப் பன்மயம் அதிகமாவதால் பூச்சித் தொல்லைகள், நோய் தாக்குதல் குறைகின்றன; மண் அரிப்பு குறைகிறது; விளைச்சல் திறனும் பெருகுகிறது. அடுக்குமுறை சாகுபடி இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது.

உழவில்லா வேளாண்மை

ஜப்பானிய அறிஞர் மசானபு ஃபுகோகாவின் நுட்பங்கள், தமிழக உழவர்களின் இயற்கை வேளாண் உத்திகள் ஆகியவற்றை இணைத்து ‘சுலப வேளாண்மை’ என்ற ஒரு முறையை இவர் பரப்பி வருகிறார். வேளாண்மை மேற்கொள்வதற்குச் சுலபமாக இருக்க வேண்டும் என்பது இவருடைய கருத்து. இவருடைய பண்ணையில் பல பகுதிகள் உழவு செய்யாமல் விடப்பட்டுள்ளன. மண்ணை உழவு செய்யாமல் இருக்கும்போது, அதன் வளம் அதிகமாகும் என்ற ஃபுகோகாவின் கருத்தை இவர் பின்பற்றிவருகிறார்.

இத்துடன் வேறு பல இயற்கைவழி வேளாண் நுட்பங்களையும் இவர் பின்பற்றுகிறார். அமுதக் கரைசல், பஞ்சகவ்யம் போன்ற ஊட்டக் கரைசல்களையும், மூலிகை பூச்சிவிரட்டிகளையும் தயாரித்துப் பயன்படுத்துகிறார். மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறார்.

இவர் தனது பண்ணையில் விளைந்த தேங்காயில் இருந்து எண்ணெய் எடுத்து, அதிலிருந்து சோப்பு தயாரித்துச் சந்தைப்படுத்துகிறார். தூய தேங்காய் எண்ணெய் சோப்பாக இருப்பதால், இது தரமுள்ளதாக விளங்குகிறது.

இயற்கை மாறுவதில்லை

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல இயற்கைவழி வேளாண் பணிகளையும் ஆற்றியுள்ளார். பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.

பல்கலைக்கழகச் சிண்டிகேட் குழுவில் ஆறு ஆண்டுகள் பங்கேற்றவர். அகில இந்திய வானொலியில் ஊரக ஆலோசகராகப் பணியாற்றியவர்.

இவரும் இவருடைய நட்பு வட்டத்தினரும் இணைந்து ‘கோவை மரம் வளர்ப்போர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, மாதந்தோறும் கூட்டங்களை நடத்திவருகின்றனர்.

“மழை, மண்ணிலிருந்தோ விண்ணிலிருந்தோ உண்டாவதில்லை. அது மரங்களிலிருந்து உண்டாகிறது என்றும், இயற்கை வேளாண்மை உலகின் எப்பகுதிக்கும் பொருந்தும் என்றும், இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை; அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்துக்குக் காலம் மாறுகிறது” என்றும் கவிதையாய்ப் பேசுகிறார் மது ராமகிருஷ்ணன்.

இயற்கைக்குத் திரும்புங்கள்

“சுற்றுச்சூழல் கெடுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கையின் ஒரு பகுதியான மனிதனின் மனமும் மாசுபடுகிறது. அதனால், மன இறுக்கம் மற்றும் தீமை பயக்கும் எண்ணங்கள் தோன்றுகின்றன” என்று உடல்நலம் பற்றியும் பேசுகிறார். இவரது பண்ணையில் பல இடங்களில் இதைப் பொறித்தும் வைத்துள்ளார்.

உண்மையான சந்தோஷமான வாழ்க்கையை ஒருவன் இயற்கையோடு இணைந்துதான் அனுபவிக்க முடியும். `இயற்கைக்குத் திரும்புங்கள் அல்லது திருப்பப்படுவீர்கள்’ என்று முத்தாய்ப்பாகச் சொல்கிறார் இவர்.

இயற்கை வேளாண்மைக்குள் நுழைந்தபோது பல்வேறு சோதனைகளை இவர் சந்தித்தார். அந்தச் சோதனைகளைத் தாங்கி ஒரு முன்னத்தி ஏராக நின்று, இன்று பலருக்கும் வழிகாட்டியாக விளங்கி வருகிறார்.

அடுத்த வாரம்: (பருத்திச் செடியும் பாரதக் கொடியும்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com 
மது ராமகிருஷ்ணன் தொடர்புக்கு: 94424 16543

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-20-புகோகாவிடம்-பயிற்சி-பெற்ற-தமிழர்/article8261074.ece?ref=relatedNews

முன்னத்தி ஏர் 21: புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும்

maram_2763375f.jpg
 

அடுக்குமுறை சாகுபடியில் மது ராமகிருஷ்ணன் பின்பற்றும் வழிமுறைகளைப் பார்த்தோம். அடுக்குமுறைச் சாகுபடிக்கு நல்லதொரு இன்னொரு எடுத்துக்காட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டத்தில் உள்ள ‘பூர்வ பூமி' என்ற பண்ணை. இதன் உரிமையாளர் செந்தில்நாதன், அமெரிக்காவில் பணிபுரிந்தவர். வேளாண்மையின் மீதான ஆர்வத்தில் முற்றிலும் முந்திரிக்காடாக இருந்த இடத்தை மாற்றி, இன்றைக்குப் பல அடுக்குச் சாகுபடிக்கு மாற்றியுள்ளார்.

முதலில் பாம்ரோசா என்ற மணக்கும் எண்ணெயைச் சாகுபடி செய்து, அதை எண்ணெயாகக் காய்ச்சி வடிக்கும் ஆலை முதலியவற்றை வைத்து மிக நுட்பமாகச் செயலாற்றிவந்தார். ஆனால், போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை. பின்னர் தென்னை மர சாகுபடிக்கு மாறினார். ஓரினச் சாகுபடியாகத் தென்னையை மட்டுமே வளர்த்து வந்ததால், அவருக்கு ஆண்டுக்கு ஆண்டு செலவு மட்டும் அதிகமாகிக்கொண்டே சென்றது. எவ்வளவுதான் காய் காய்த்தாலும், செலவு என்னவோ கூடிக்கொண்டே போனது.

வறட்சி மாவட்டத்தில் சாதனை

அதன் பின்னர்தான் பசுமை வெங்கடாசலம் என்ற இயற்கை வேளாண் வல்லுநரை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அவருடைய வழிகாட்டுதலில் தனது பண்ணையை மாற்றியமைத்தார். அந்தப் பண்ணை மிகச் சிறந்த அடுக்குமுறைச் சாகுபடிக்கான பண்ணையாக இப்போது விளங்குகிறது. வேதி உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ இல்லாத இயற்கை வழிப் பண்ணையாக இது விளங்குகிறது.

ஓர் அடுக்கு தென்னை, அதற்கு ஊடாகக் கோகோ, அதற்கு இடையில் மலைவேம்பு, தேக்கு, சப்போட்டா என்று பன்மயத் தன்மை கொண்ட பண்ணையைச் செந்தில்நாதன் உருவாக்கியுள்ளார். ஆப்பிள் மரம்கூட இவருடைய பண்ணையில் வளர்கிறது. இஞ்சி அறுவடையாகும் நிலையில் உள்ளது. மூடாக்குப் பயிராக அன்னாசிப் பழத்தை நட்டு வைத்துள்ளார். கடுமையான வறட்சிமிக்க மாவட்டமான புதுக்கோட்டையில், இதை ஒரு பெரும் சாதனை என்றே சொல்ல வேண்டும்.

புது வகை உரம்

இயற்கை வேளாண்மைதான் என்றாலும், இவருடைய பண்ணையில் தொழு உரத்தைக்கூடப் பயன்படுத்துவதில்லை. பொதுவாக இயற்கை வேளாண் பண்ணைக்கு மாடு அத்தியாவசியம் என்று கூறப்படும். ஆனால், இவர் மாடுகளை வளர்க்கவில்லை. இயற்கை உரத்துக்காக இவர் வேறொரு புதிய உத்தியைக் கையாளுகிறார். அதாவது ‘காடி மாவு' எனப்படும் பச்சரிக் கஞ்சி ஊறலைப் பயன்படுத்துகிறார்.

இதற்குப் பச்சரியை சோறுபோல வேக வைக்கிறார். அதை ஒரு பானையில் இட்டு ஏழு நாட்களுக்கு ஊற வைக்கிறார். அதில் குறிப்பிட்ட அளவு நுண்ணுயிர்கள் பெருகுகின்றன. அதன் பின்னர் அத்துடன் நாட்டுச் சர்க்கரையைச் சமஅளவு கலந்து, மீண்டும் ஏழு நாட்கள் ஊற வைக்கிறார். இதன் மூலமாக நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் ஏராளமாகப் பெருகிவிடுகின்றன. அதை எடுத்து அத்துடன் நீர் சேர்த்து, சொட்டு நீர்ப்பாசனம் வழியாகத் தாவரங்களுக்குச் செலுத்துகிறார். இத்துடன் கூடுதலாக உமிச் சாம்பலை ஆங்காங்கே தூவிவிடுகிறார். உரத்துக்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் இவ்வளவுதான்.

இதன் மூலமாக மண்ணுக்கு வேண்டிய சத்துகளை நிறைவு செய்துகொள்கிறார். இப்படிச் செய்வதால், இவருடைய பண்ணைக்கு வெளியிடு பொருள் செலவு என்பது பெரிதும் குறைந்துவிட்டது.

(அடுத்த வாரம்: கந்தர்வக்கோட்டை உணவுக் காடு) 
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com 
இவருடைய பண்ணையை அமைத்த பசுமை வெங்கடாசலத்தை தொடர்புகொள்ள: 9443545862

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-21-புதுக்கோட்டை-ஆப்பிளும்-புதுமையான-உரமும்/article8317625.ece?ref=relatedNews

முன்னத்தி ஏர் 22: கந்தர்வக்கோட்டை உணவுக் காடு

செந்தில்நாதன்
செந்தில்நாதன்

கந்தர்வக்கோட்டையில் உள்ள செந்தில்நாதனின் பண்ணையில் பல பயிர்களிலிருந்து வருமானம் கிடைக்கிறது. இவர் பின்பற்றும் முறைகளால் தென்னையில் காயின் அளவு அதிகரித்துள்ளது. தென்னை கொடுக்கும் நீர் மற்ற பயிர்களுக்கும் கிடைக்கிறது. இப்படி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கிறார். பாதை ஓரங்களில் கரும்பை நட்டு, அதையும் அறுவடை செய்துகொள்கிறார்.

அவருடைய 107 ஏக்கர் அளவுள்ள பெரிய பண்ணையை மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நிர்வாகம் செய்கிறார். மழை அளவை ஆண்டுதோறும் செப்பமாகக் கணக்கிட்டு வைத்துள்ளார். தான் சேகரித்து வைத்திருக்கும் தரவுகளிலிருந்தே ‘பருவநிலை மாற்றம் உண்மை' என்பதை மெய்ப்பிக்க முடியும் என்று கூறுகிறார். ஒவ்வோர் ஆண்டும் இவருடைய பண்ணையில் மழைப்பொழிவு குறைந்துதான் வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நல்ல மழை கிடைக்கிறது என்று கூறுகிறார். ஆனால், இவருடைய பண்ணையில் நிலமே தெரியாத அளவுக்குப் பயிர்கள் மூடப்பட்டுள்ளதால் நீர் ஆவியாவது குறைந்துள்ளது.

நிழல், விளைச்சலைப் பாதிக்குமா?

வெயிலைச் சிறப்பாக அறுவடை செய்யும்போதுதான் நமக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பது இயற்கை வேளாண்மையின் அடிப்படை விதிகளில் ஒன்று. அதை செந்தில்நாதன் சிறப்பாகக் கடைப்பிடிக்கிறார். எந்த ஒரு இடத்தையும் சும்மா விட்டு வைப்பதில்லை. மரங்களையோ, செடிகளையோ, காய்கறிகளையோ நட்டுக்கொண்டே இருக்கிறார். நிழல் இருந்தால் விளைச்சல் குறையும் என்று கூறும் உழவர்கள், ஒரு முறை இவருடைய பண்ணையைச் சென்று பார்த்தால் தங்களுடைய கருத்தை மாற்றிக்கொள்வார்கள்.

ஒரு குறிப்பிட்ட பயிரில் குறிப்பிட்ட வருமானம் என்பதல்ல இவருடைய கணக்கு. ஒட்டுமொத்தமாகப் பண்ணையில் வரும் வருமானம் என்ன என்பதற்கே கவனம் கொடுக்கப்படுகிறது. அப்படிப் பார்க்கும்போது தென்னையில் தேங்காய் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது, வாழையில் தார் அதிகம் கிடைக்கிறது. வாழையில் குறைந்தால் வேறொரு பயிர் அதை ஈடுகட்டுகிறது. இது இயற்கையின் மர்மம். இந்த உண்மையை உழவர்கள் புரிந்துகொண்டாலே, பாதி சிக்கலைத் தீர்த்துவிட முடியும்.

இடைத்தரகர் ஒழிப்பு

செந்தில்நாதன் சந்தித்த அடுத்த சிக்கல் சந்தை. இவர் ஏராளமான தேங்காய்களை உற்பத்தி செய்தாலும், விற்கும்போது விலை குறைந்துவிடுகிறது. அது தவிர இடையில் ஏராளமான இடைத்தரகர்களால் விலையேற்றப்பட்ட பின், நுகர்வோரைச் சென்றடையும்போது விலை கடுமையாக அதிகரித்துவிடுகிறது. அதற்கு மாற்றாக வெளியில் உள்ள மொத்தச் சந்தை விலையைவிட 10 சதவீதம்வரை குறைத்து, தன்னுடைய பண்ணையிலேயே பொருட்களை விற்கிறார். எந்த ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தாத இயற்கைவழி விளைபொருள் இவருடைய பண்ணையிலேயே சந்தை விலையைவிட குறைவாகக் கிடைக்கிறது. இதை வாங்கி விற்பவர்கள் எளிதாக 10 சதவீத லாபத்தைப் பெறுகின்றனர். ஆக, அனைவருக்கும் லாபம் தரும் ஒரு முறையை அவர் கையாளுகிறார்.

அவருடைய பண்ணையில் விளையும் காய்கறிகளைப் பண்ணையில் வேலை செய்யும் பணியாளர்களே பெருமளவு வாங்கிக்கொள்கின்றனர். அதற்கான விலையையும் அவர்களே நிர்ணயம் செய்கின்றனர். இதன் மூலம் பணியாளர்களுக்கும் பயன் கிடைக்கிறது. மொத்தத்தில் மிகச் சிறந்த ஒரு மாதிரிப் பண்ணையாக இவரது 'உணவுக் காடு' விளங்குகிறது.

(அடுத்த வாரம்: நெல்லும் நீரும்) 
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com 
இவருடைய பண்ணையை அமைத்த பசுமை வெங்கடாசலத்தை தொடர்புகொள்ள: 94435 45862

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-22-கந்தர்வக்கோட்டை-உணவுக்-காடு/article8345897.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 23: திருப்புமுனை இயற்கை வேளாண்மை மாநாடு

உழவர் சேதுராமன்
உழவர் சேதுராமன்

இயற்கை உழவர்கள் மாவட்டம்தோறும் பரவலாக உருவாகிவருகிறார்கள். இப்படி அவர்கள் உருவாகக் காரணமான பல முன்னோடிகள் பட்ட இன்னல்கள், சந்தித்த இளக்காரப் பேச்சுகள், எதிர்கொண்ட எதிர்ப்புகள் மிக அதிகம். இயற்கை வேளாண்மை நுட்பங்களில் இன்றைக்குத் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டியுள்ளதற்குக் காரணம், அவர்கள் செய்த தியாகங்கள்தாம் என்றால் அது மிகையில்லை. இந்த வகையில் அரசின் முன்னெடுப்பு மிக மிகக் குறைவு.

உருமாறிய நீர்

நாகை மாவட்டம் காவிரியின் வடிகால் நிலங்களில் ஒன்று, மழை பெய்தால் அதிக நீர் நிற்கும், இல்லையென்றால் கடும் வறட்சி நிலவும். தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் காவிரி சிக்கல் தலைதூக்கிய பின்னர் இப்பகுதிக்கான நீர்வரத்தும், நீர் வரும் கால ஒழுங்கும் அதிகம் பாதிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து உழவர்கள் ஆழ்துளைக் கிணறுகளை உருவாக்கி, அதன் மூலம் சாகுபடி செய்யத் தொடங்கினார்கள்.

தொடர்ச்சியாக நிலத்தடி நீரை உறிஞ்சியதன் விளைவாக நீரின் தன்மை மாறியது. குறிப்பாக மயிலாடுதுறைப் பகுதி நிலத்தடிநீரில் சோடியம் பை கார்பனேட் என்ற வேதிப் பொருள் அதிகமானது. இதனால் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில் நாகை மாவட்டத்தில் இயற்கைவழி வேளாண்மையை முனைப்பாக முன்னெடுத்தவர்களில் ஒருவர்தான் கிடாத்தலைமேடு சேதுராமன்.

பசுமைப் புரட்சியின் நீர் வேட்கை

பொதுவாகக் கீழத்தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடியே அதிகம். அந்த நில அமைப்பு அதற்கு ஏற்றதாக உள்ளது. ‘சோழநாடு சோறுடைத்து' என்ற சொற்றொடரும் அதனால்தான் ஏற்பட்டது.

நெல் என்பது தேக்கப்பட்ட நீரிலும் வளரும் தாவரம் என்ற உண்மையைக் கண்டுகொண்ட நமது முன்னோர்கள் நீர் கட்டி நெல் வேளாண்மை செய்தனர். அதற்கேற்ற நெல் வகையினங்களைக் கண்டனர். பின்னர் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் பயனாகக் குட்டை ரக நெல்லுக்கு மாறினார்கள், அது நீர் வேட்கை கொண்ட பயிராக இருந்ததாலும், ரசாயன உரங்களின் தேவை அதிகமாக ஏற்பட்டதாலும், அவர்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

திருப்புமுனை மாநாடு

இந்த நெருக்கடி சேதுராமனுக்கும் ஏற்பட்டது. இதன் விளைவாகவே இப்பகுதியில் இயற்கை வேளாண் நெல் சாகுபடி முறையை முன்னெடுக்கச் சேதுராமன் பெரும் பாடுபட்டார். தான் மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியுள்ள உழவர்களும் பயனடைய வேண்டும் என்று முயன்றார். அதற்காக மயிலாடுதுறையில் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரையும் தமிழக இயற்கை வேளாண் முன்னோடிகள் பலரையும் 2002-ம் ஆண்டில் அழைத்து ஒரு மாநாட்டை நடத்தினார்.

தமிழக இயற்கை வேளாண்மை வரலாற்றில் அந்த மாநாடு மிக முக்கியமான மைல் கல். சேதுராமன் மிகத் தீர்மானமான சிந்தனையாளர், மிகவும் எளிமையானவர். தான் செய்வது சமூகக் கடமைதானே தவிர, இதில் தனக்கு எந்தப் பெருமையும் தேவையில்லை என்ற மனநிலையைக் கொண்டவர்.

அவருடைய வாழ்க்கைத் துணைவியும் இயற்கை வேளாண்மையில் தீவிர ஈடுபாடு கொண்டவர். தங்களுடைய குழந்தைகளை நகரத்துக்கு அழைத்தும் செல்ல மறுத்து, தற்சார்பை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தவர்கள். சேதுராமனின் மோட்டார் சைக்கிளைக் கழித்துவிட்டுப் பார்த்தால், ஏதோ சோழர் காலத்துக்குச் சென்றுவிட்டோமோ என்ற எண்ணமே தோன்றும்.

கடன் இல்லாத இயற்கை வேளாண்மை

சேதுராமன், தன்னுடைய விடா முயற்சியால் நெல் சாகுபடியில் முழுமையான இயற்கை வேளாண்வழியை நிலையை எட்டினார். அவருடைய குடும்பம் வேளாண்மைப் பின்னணி கொண்டது. வழக்கம்போலப் படித்த பின்னர் அரசு வேலைக்கு முயன்றார். மின்சார வாரியத்தில் கணக்கராகப் பணியிலும் சேர்ந்தார். ஆனால் வேளாண்மையின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், அவரை ஒரு நவீன உழவராக மாற்றியது. 1970-களில் முழுமையாக வேளாண்மையில் இறங்கினார்.

கிடுகிடு வளர்ச்சியும் வீழ்ச்சியும்

அன்றைய நவீன வேதியுரங்கள், பூச்சிக்கொல்லிகள் என்ற எல்லாவித ‘நவீனங்களையும்' செய்து பார்த்தார். உச்சகட்ட விளைச்சலையும் எடுத்தார். அதாவது சாதனை அளவாக ஏக்கருக்கு 60 மூட்டை (60X60 கிலோ / 3600 கிலோ) அளவை எட்டினார். ஆனால், அது எவ்வளவு மோசமான பின்விளைவை ஏற்படுத்தியது என்பதை 10 ஆண்டுகளில் உணர முடிந்ததாகக் கூறுகிறார். விளைச்சலின் அளவு, அடுத்தடுத்த ஆண்டுகளில் வீழ்ச்சியடையத் தொடங்கியது. 1990-களில் மிக மோசமான விளைச்சலே கிடைத்தது. அதாவது 20 மூட்டை என்ற நிலைக்கு வீழ்ந்தது.

முதலில் மண்ணில் இருந்த கரிமச் சத்தை எடுத்துக்கொண்டு விளைச்சலைத் தர உதவிய யூரியா போன்ற ரசாயனங்கள், பிற்காலத்தில் தங்களுடைய வேலையைக் காட்டத் தொடங்கின. கரிமச் சத்தை முற்றிலுமாகக் கொள்ளையடித்துச் சென்றன. ‘இது பற்றி படிப்பறிவுள்ள எனக்கே பின்னர்தான் பிடிபட்டது, சாதாரண உழவர்கள் என்ன செய்வார்கள்?' என்று கேட்கிறார் சேதுராமன்.

உரம் தின்ற நிலம்

‘மண்ணின் கெட்டித்தன்மை அதிகமாகிக் கொண்டே வந்தது. இத்தனைக்கும் எப்போதும் போதிய அளவு தொழுவுரங்களை வயலில் கொட்டிக்கொண்டே இருந்ததாகச் சொல்கிறார் அவர். ஆனால், உரங்களின் பயன்பாடு மட்டும் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஒரு மூட்டை உரம் போட்ட பயிருக்கு, இரண்டு மூட்டை உரம் போட வேண்டியதாயிற்று. அதன் பின்னர் ரசாயனங்களைத் தின்ற பயிர்களின் நிறத்துக்கும் சுவைக்கும் எண்ணற்ற பூச்சிகள் நாடி வந்தன. அவற்றைக் கொல்ல ஏராளமான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று.

விளைவு ஒவ்வொரு ஆண்டும் கடன் சுமை அதிகரித்தது. விளைச்சல் ஏறியதோ இல்லையோ, கடன் மட்டும் ஏறிக்கொண்டே போனது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உரக் கடைக்காரர்கள் வீட்டுக்கு வந்து, கொடுத்த கடனைத் திரும்பக் கேட்கும் நிலை ஏற்பட்டது. நிம்மதியாகத் தூங்க முடியவில்லை' என்கிறார் சேதுராமன்.

இயற்கை வேளாண்மை தரும் நிம்மதி

‘இயற்கை வேளாண்மை செய்ய ஆரம்பித்த பிறகு கடன் இல்லாமல் நிம்மதியாகத் தூங்குகிறேன்' என்கிறார் சேதுராமன்.

எனவே, கடுமையான கடன் சுமையே, இயற்கை வேளாண்மையின் பக்கம் அவரை தள்ளியுள்ளது. நான் சந்தித்த பல இயற்கை வேளாண் முன்னோடிகள் இதே கருத்தையே முன்வைக்கின்றனர். அது மட்டுமல்ல அவர்கள் யாரும் சாதாரண விவசாயிகள் அல்ல, ரசாயன வேளாண்மையில் கரைகண்டு உச்சகட்ட விளைச்சலை எடுத்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வேதி வேளாண்மையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியால் அவருடைய தேடல் அதிகமானதால், தன்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு ஏற்கெனவே இயற்கை வேளாண்மையில் தீவிரம் காட்டிய முன்னோடிப் பண்ணைகளைப் பார்க்கச் சென்றார். இயற்கை வேளாண்மை பற்றிய புத்தகங்களை வாங்கிப் படித்தார். 2001 முதல் இயற்கை வேளாண்மையில் முழுமையாக இறங்கிவிட்டார்.

(அடுத்த வாரம்: இரு பயிர் சாகுபடியால் தப்பிக்கலாம்) 
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-23-திருப்புமுனை-இயற்கை-வேளாண்மை-மாநாடு/article8374338.ece?ref=relatedNews

முன்னத்தி ஏர் 24: இரு பயிர் சாகுபடியால் தப்பிக்கலாம்

சேதுராமன்
சேதுராமன்

இன்றைக்குக் கிடாத்தலைமேடு சேதுராமனுக்கு இயற்கை வேளாண்மை மூலம் தொடர்ச்சியாக ஏக்கருக்கு 30 மூட்டை நெல் கிடைக்கிறது. அது மட்டுமல்ல வேதி விவசாயத்தில் ஆண்டுக்கு ஆண்டு விளைச்சல் குறைந்ததுபோல, இதில் வீழ்ச்சியடையவில்லை.

அதேநேரம், 'இயற்கை வேளாண்மையில் இடுபொருள் செலவு பெரிதாகக் குறையவில்லை. ஆனால், நான் செலவு செய்யும் பணம் எனது அண்டையில் உள்ள தொழிலாளர்களுக்குத்தான் போகிறதே தவிர, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அல்ல. அது உள்ளூர்ப் பொருளாதாரத்தை உயர்த்துகிறது' என்கிறார் சேதுராமன்.

எளிய வேளாண் நுட்பங்கள்

தன்னுடைய வயலில் முன்னேறிய இயற்கை வேளாண்மை நுட்பங்களைக்கூட அவர் பயன்படுத்துவது இல்லை. மிக எளிமையான பல பயிர் பசுந்தாள் சாகுபடி, அமுதக் கரைசல், ஆவூட்டம் எனப்படும் பஞ்சகவ்யம் போன்ற மிகப் பழமையான இயற்கை வேளாண் நுட்பங்களையே பயன்படுத்துகிறார். அப்படி இருந்தும் விளைச்சல் குறையாமல் உள்ளது.

அவருடைய மருமகனும் அவரால் ஈர்க்கப்பட்டு மிகச் சிறப்பானதொரு இயற்கை உழவராக மாறியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கருக்கு மட்டுமே சேதுராமன் நெல் சாகுபடி செய்துவந்தார். ஆனால், அவருடைய மருமகனோ 25 ஏக்கர் நெல் சாகுபடி செய்கிறார்.

தானியம் பயிரிட்டால் தப்பிக்கலாம்

சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, ஆந்திரா பொன்னி போன்ற நெல் வகைகளை சேதுராமன் பயிரிடுகிறார். குறைந்த அளவில் அரிசியாக மாற்றி விற்பனையும் செய்கிறார். ஆனால், இதில் அவர் முழுமையாக ஈடுபடுவதில்லை. ‘நான் மெனக்கெடல் இல்லாமல் செய்கிறேன், கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட்டால், நல்ல லாபம் கிடைக்கும்' என்கிறார். அவருடைய அரிசிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

சேதுராமனின் அடிப்படையான கவலை நெல்லுக்குப் பயன்படுத்தும் நீரின் அளவு கட்டு மீறி அதிகமாகிவிட்டது, அதைக் குறைக்க வேண்டும் என்பதே. ஒரு பயிராக நெல்லும் மறு பயிராகச் சிறுதானியங்களும் சாகுபடி செய்தால் மட்டுமே உழவர்கள் தப்பிக்கலாம் என்கிறார். அரசின் கொள்கைகள் மீதும் திட்டங்கள் மீதும் பல முன்னோடி உழவர்களுக்கு இருக்கும் வருத்தமும் சினமும் அவருக்கும் உண்டு.

விடையில்லாக் கேள்விகள்

விளைபொருளுக்கு உரிய விலையும், மண்ணைக் கெடுக்காத தொழில்நுட்பங்களும் உழவர்களுக்குக் கிடைத்தால் வேறு எதுவுமே தேவையில்லை. உழவர்களே தங்களைப் பார்த்துக்கொள்வார்கள் என்பது அவருடைய கருத்து. ஆனால், ஊருக்குப் பத்து டிராக்டரைக் கொடுத்து, பின்னர் முதலுக்கு மேல் வட்டியையும் பெற்றுக்கொண்டு, தவணைப் பாக்கிக்காகக் காவல்துறை மற்றும் குண்டர்களைக் கொண்டு உழவனை அடிக்கிற கொடுமை ஒருபக்கம், சில ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கிக் கொண்டு உல்லாச வாழ்வு நடத்துபவர்களைக் காப்பாற்றும் அவலம் மறுபுறம். இதுதான் நமது நாட்டின் பொருளியல் கொள்கை.

ஊருக்கு ஒன்றிரண்டு டிராக்டர் போதுமே, ஏன் வீட்டுக்கு வீடு டிராக்டர்? அதற்கு எதற்குக் கடன் என்று வேளாண்மைத் துறை வலியுறுத்துவதில்லை. நிலத்தடி நீர் மிகவும் குறைந்த கறுப்பு ஒன்றியங்களில் தண்ணீரை உறிஞ்சும் கரும்பு சாகுபடி நடக்கிறதே, அது ஏன் என்ற கேள்வியையும் கேட்பதில்லை. ஆண்டுக்கு ஆண்டு விலைவாசி ஏறும்போது அரசு ஊழியர் போன்ற அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், உணவை உற்பத்தி செய்யும் உழவனின் விளைபொருளின் விலை மட்டும் ஏறுவதே இல்லையே ஏன் என்ற கேள்வியை அரசியல் கட்சிகளும் எழுப்புவதில்லை.

வேதி விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்கிறார்களே, இயற்கை விவசாயி ஒருவர்கூடத் தற்கொலை செய்துகொள்ளாமல் தாக்குப்பிடித்து வாழ முடிவது ஏன் என்ற கேள்வியை நமது கொள்கை வகுப்பாளர்கள் யாரும் கேட்பதில்லை. இப்படிப் பல அடிப்படைக் கேள்விகள் கேட்கப்படாமலேயே உள்ளன. இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்பொழுதுதான், சேதுராமன் போன்றோரின் மனக்குமுறல்கள் நிம்மதிப் பெருமூச்சாக மாறும்.

 

சேதுராமனைத் தொடர்புகொள்ள: 9952844467

அடுத்த வாரம்: (விடாமுயற்சி வெற்றி தரும்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-24-இரு-பயிர்-சாகுபடியால்-தப்பிக்கலாம்/article8399144.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 25: எதிர்ப்பை மீறி சாதனை - நெல் சாகுபடியில் புதிய முறை

 

farm_2798518f.jpg
 

பலருடைய எதிர்ப்பை மீறி இயற்கைவழி வேளாண்மையில் புதிய வழிமுறையைப் பின்பற்றி நெல் பயிரிட்ட முன்னோடி பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன்.

பழைய கோவை மாவட்டத்தில் இருந்து பிரிந்த திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதி உடுமலைப்பேட்டை வட்டாரம். பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்ப்பாசனத் திட்டம் மூலம் பயன்பெறும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்தப் பகுதியில் உள்ள பாப்பான்குளம் என்ற ஊரில் பெரும்பாலும் நெல் சாகுபடி நடைபெறுகிறது. குறிப்பாகக் கால்வாய் நீர் பெறும் இடங்களில் நெல் சாகுபடி நடக்கும்.

பசுமைப் புரட்சியின் பெரும் வீச்சுக்குப் பின்னர் வேதி உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் இங்கே மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவாக வேளாண்மை கட்டுப்படியாகாத சூழல் ஏற்பட்டது. அந்த அனுபவத்தின் அடிப்படையில் இயற்கைவழி வேளாண்மைக்கு மாறிய முன்னோடிகளில் ஒருவர், பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன். அவர் தன்னுடைய 10 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்துவருகிறார்.

களம் கண்டார்

முதலில் அவருடைய முயற்சியை உறவினர்களே எதிர்த்தார்கள். வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. நஞ்சான பூச்சிக்கொல்லியைக்கூடத் தெளிக்கத் தயாராக இருந்த அவர்கள், சாணத்தையும் கோமயத்தையும் தொட வெட்கப்பட்டனர்.

ராதாகிருஷ்ணனே நேரடியாகக் களத்தில் இறங்கினார். சத்தியமங்கலம் சுந்தரராமன் அவருக்கு வழிகாட்டினார். சுந்தரராமனுடைய மகன் ராமகிருஷ்ணன் அவருடன் கூடவே இருந்து, இயற்கை ஊட்டக் கரைசல்கள் தயாரிப்பதற்குக் கற்றுக்கொடுத்தார்.

இயற்கை ஊட்டக் கரைசல்

முதலில் இரண்டு ஏக்கரில் மட்டும் இயற்கைமுறை நெல் சாகுபடிக்கு அவர் மாறினார். நிலத்தைத் தயாரித்த பின்னர் ஆறு டன் தொழுவுரம் கொடுத்தார். அதில் 30 கிலோ சணப்பை எனப்படும் பசுந்தாள் உரப்பயிரை விதைத்து வளர்த்தார். சரியாக 45 நாட்கள் கழித்து, அதை நன்கு உழவு செய்து தொழி தயாரித்தார். அதற்கு முன்பாக நாற்றங்கால் தயாரிக்கும் பணியைச் செய்துகொண்டார். அதற்காக ஒரு வண்டி தொழுவுரம் கொடுத்தார். அதன் பின்னர் அமுதக்கரைசல், பஞ்சகவ்யம் ஆகிய கரைசல்களை இரண்டு முறை தெளித்தார். சரியாக 27-ம் நாள் நாற்றைப் பிடுங்கி ஒற்றை நாற்று நடவு முறையில் நடவு செய்தார்.

சீரான பரவல்

நீர் பாய்ச்சும்போது அதில் அமுதக் கரைசலைச் சேர்த்துக் கொடுத்தார். அதாவது நெல் அறுவடை முடியும்வரையில் மூன்று முறை 200 லிட்டர் என்ற அளவில் அமுதக் கரைசலைக் கொடுத்துவந்தார். தொல்லுயிரி எனப்படும் கரைசலையும், பஞ்சகவ்யத்தையும் இரண்டு முறை கொடுத்தார்.

கரைசலைச் சேர்ப்பதற்காக இரண்டு பீப்பாய்களில் சிறு குழாய் அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் வாய்க்காலில் பாயும் நீருடன் செலுத்திவிடுகிறார். இதனால் செலவு குறைகிறது. சத்துகளும் வயல் முழுவதும் சீராகப் பரவுகின்றன.

ஆராய்ச்சித் திடல்

இவர்களுடைய பயிர்கள் இளம்பச்சை நிறத்துடன் காணப்படுகின்றன. பூச்சிகளின் தாக்குதல் அதிகம் இல்லை. இந்த முறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக இயற்கை வேளாண்மையைச் செய்வதோடு, மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறார். நெல்லை அரிசியாக்கியும் விற்பனை செய்கிறார். அவரது வயல், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் திடலாகவும் உள்ளது.

இயற்கை வேளாண்மைக்கான இடுபொருள்களைச் சுஸ்லான் பவுண்டேஷன் என்ற அமைப்புடன் சேர்ந்து உற்பத்தி செய்து, உழவர்களுக்குக் கொடுத்துவருகிறார். அவருடைய நண்பர்களுடன் இணைந்து ‘அமராவதி உழவர் கூட்டமைப்பு’ என்ற அமைப்பையும் நடத்திவருகிறார்.

ராதாகிருஷ்ணன் தொடர்புக்கு: 99659 72332

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-25-எதிர்ப்பை-மீறி-சாதனை-நெல்-சாகுபடியில்-புதிய-முறை/article8426214.ece?ref=relatedNews

 

முன்னத்தி ஏர் 26: நெல்லுக்கு ஊட்டம் தரும் இயற்கைக் கரைசல்கள்

karaisal_2807539f.jpg
 

இயற்கைவழி வேளாண்மையில் நெல் பயிரிடுவதற்கு பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன் பின்பற்றிய புதிய முறை இயற்கை ஊட்டக் கரைசல்களை அடிப்படையாகக் கொண்டது. இயற்கை ஊட்டக் கரைசல்களைத் தயாரிக்கும் அந்த மூன்று முறைகளையும் பார்ப்போம்.

அமுதக் கரைசல்

இக்கரைசல் ஓர் உடனடி வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. 24 மணி நேரத்தில் நமக்கு ஒரு வளர்ச்சி ஊக்கிக் கிடைக்கும். இதற்குச் செய்யவேண்டியது மிகச் சிறிய அளவு வேலைதான்.

முதலில் ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ மாட்டுச் சாணம், இத்துடன் 250 கிராம் பனைவெல்லம் (கருப்பட்டி அல்லது நாட்டு வெல்லம்) இவற்றை எடுத்து 10 லிட்டர் நீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

செய்முறை:

முதலில் நீரை எடுத்துக்கொண்டு அதில் மாட்டுச் சாணத்தைக் கரைக்க வேண்டும். பின்பு மாட்டுச் சிறுநீரை ஊற்றிக் கலக்க வேண்டும். பின்பு பொடி செய்த பனங்கருப்பட்டியைப் போட்டு நன்கு கலக்கிவிட வேண்டும்.

கரைசல்கள் கட்டியில்லாமல் கரைந்துவிட்டனவா என்று பார்த்துவிட்டு மூடிவைத்துவிட வேண்டும். ஒரு நாளில் கரைசல் உருவாகிவிடும். இக்கரைசலை எடுத்து ஒரு லிட்டருக்கு, 10 லிட்டர் என்ற அளவில் (1:10 அல்லது 10 %) நீர் சேர்த்துச் செடிகளுக்கு அடிக்க வேண்டும்.

அடர் கரைசலை அப்படியே அடிக்கக் கூடாது. நீர்த்த கரைசலைத்தான் அடிக்க வேண்டும். அடர் கரைசல் இலைகளைக் கருக்கிவிடும். கைத்தெளிப்பான் அல்லது விசை தெளிப்பான் பயன்படுத்தலாம். இந்தக் கரைசல் உடனடியாகத் தழை ஊட்டத்தை இலை வழியாகச் செடிகளுக்குக் கிடைக்கச் செய்கிறது. பூச்சிகளையும் விரட்டுகிறது.

பஞ்சகவ்யம்

பசுவின் ஐந்து பொருட்களான பால், தயிர், நெய், சாணம், சிறுநீர் ஆகியவற்றைச் சேர்த்து ஊற வைத்துச் செய்யும் கலவை இது.

பசுமாட்டு சாணம் ஐந்து கிலோ, மாட்டுச் சிறுநீர் ஐந்து லிட்டர், 15 நாட்கள் புளிக்க வைத்த தயிர் இரண்டு லிட்டர், பால் இரண்டு லிட்டர், நெய் 500 மி.லி. இவற்றுடன் பனங்கருப்பட்டி ஒரு கிலோ, அரசம் பழம் ஒரு கிலோ ஆகியவை தேவை.

செய்முறை:

சாணத்தையும் உருக்கி ஆறிய நெய்யையும் நன்கு பிசைந்து நான்கு நாட்கள் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். தினமும் இதைப் பிசைந்து கொடுத்து வரவும். பின்னர் இக்கலவையுடன் மாட்டுச் சிறு நீரையும் தேவையான அளவு நீரையும் சேர்த்து மண்பானையில் ஊற விட்டுவிடவேண்டும். 15 நாட்களுக்கு, நாள்தோறும் 3 முறை கலக்கி வர வேண்டும். 16-ம் நாள், 15 நாள் (தனியாக) புளித்த தயிரையும் பாலையும் இத்துடன் பனங்கருப்பட்டியையும் கலந்து பாத்திரத்தில் கரைத்துவிட வேண்டும். மேலும் ஏழு நாட்கள் ஊறவிட வேண்டும். நாள்தோறும் மூன்று முறை கலக்கிவர வேண்டும்.

இருபத்திரண்டு நாட்களில் ஆவூட்டம் மிகச் சிறந்த மணத்துடன் கிடைக்கும். இதை ஒரு லிட்டர் எடுத்து, 35 முதல் 50 லிட்டர் நீரில் கலந்து (2% முதல் 3%)தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். நீர் பாய்ச்சும்போது வாய்க்கால்களில் கலந்துவிடலாம். இது நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்குகிறது, வளர்ச்சியைத் தூண்டிவிடுகிறது. பூச்சிகளை விரட்டியடிக்கிறது. பயிரில் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது. கோயில்களில் தரப்படும் பஞ்சகவ்யா என்ற பொருள் ஊற வைக்கப்படுவதில்லை. அத்துடன் ஐந்து பொருட்கள் மட்டுமே பயன்படும், அளவும் மாறுபடும். பசுவின் ஐந்து பொருட்கள் மட்டுமல்லாது எருமை, ஆடு போன்ற கால்நடைகளின் பொருட்களில் இருந்தும் இந்த நொதிப்புச் சாற்றை உருவாக்கலாம்.

(அடுத்த வாரம்: தொல்லுயிரி தயாரிப்பது எப்படி?)

ராதாகிருஷ்ணன் தொடர்புக்கு: 99659 72332

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-26-நெல்லுக்கு-ஊட்டம்-தரும்-இயற்கைக்-கரைசல்கள்/article8454970.ece?ref=relatedNews

முன்னத்தி ஏர் 27: முதல் உயிரின உரம்

munnathi_2816542f.jpg
 

இயற்கைவழி வேளாண்மையில் நெல் பயிரிடுவதற்கு பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய இயற்கை ஊட்டக் கரைசல்களில் மூன்றாவது முறை, தொல்லுயிரியைத் தயாரிக்கும் முறை:

ஒரே இடத்தில் சாணத்தையும் குப்பையையும் கொட்டி வைத்தால் செடி எடுத்துக் கொள்ளாது. அதை முறைப்படி செடிகள் எடுத்துக்கொள்ளும் ஊட்டமாகத் தர வேண்டும். அவ்வாறு செய்வதற்காகவே நுண்ணுயிர்கள் இருக்கின்றன. இவற்றில் சிறந்து விளங்குபவை தொல்லுயிரிகள். காற்றில்லாத இடத்தில் வாழும் ஒரு வகை நுண்ணுயிரிகள், தொல்லுயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன. இதுதான் உலகின் முதல் உயிரினம் என்று கருதப்படுகிறது.

இவற்றை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் நல்ல விளைச்சலை எடுக்க முடியும். இவற்றைச் சிறப்பாகக் கையாண்டால் செயற்கை உரங்கள் தேவைப்படாது. எளிய அமைப்பு ஒன்றின் மூலம் இதை உருவாக்கலாம். 200 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு கலனை (பீப்பாய் அல்லது தொட்டி எதுவாகவும் இருக்கலாம்) எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுள் கரைசலை ஊற்றுவதற்கான இரு குழாய் அமைப்பை உருவாக்க வேண்டும்.

தொல்லுயிரியை வடித்து எடுப்பதற்கான குழாய் ஒன்றை அமைக்க வேண்டும். இது தவிரக் கலத்தை எப்பொழுதாவது தூய்மை செய்ய வேண்டுமெனில், அதற்காக ஒரு வெளியேற்றக் குழாய் அமைக்க வேண்டும். கலனைக் காற்றுப் புகாத வண்ணம் அமைக்க வேண்டும். இதற்காக இடுகுழாயை, கழிவறையில் பயன்படுத்தும் நீர் அடைப்பு முறைக் குழாயைப் போன்று பயன்படுத்த வேண்டும். கலத்தின் மேல்புறம் ஒரு காற்றுப் போக்கி இருக்க வேண்டும்.

சாணவளிகலன் கழிவு 75 லிட்டர், நீர் 75 லிட்டர், அன்னபேதி 100 கிராம் இவற்றைச் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும் அல்லது 50 கிலோ சாணம், 100 லிட்டர் நீர், 100 கிராம் அன்னபேதி ஆகியவற்றைக் கலக்கிக்கொள்ள வேண்டும். இதில் ஏதாவது ஒரு கலவையை இடுகுழாய் வழியாக ஊற்ற வேண்டும். பின்னர் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட மற்றொரு கலனில் நீர் - 20 லிட்டர், ஈஸ்ட் (தயிர்) 100 கிராம், பனங்கருப்பட்டி அல்லது நாட்டுவெல்லம் மூன்று கிலோ, விளக்கெண்ணெய் - 250 மி.லி. ஆகியவற்றைக் கலந்து மூன்று மணி நேரம் ஊறவிட வேண்டும். பின்னர் 15 நிமிட இடைவெளிவிட்டு, இதைக் கலனில் இட வேண்டும். மூன்று மணி நேரத்தில் விளக்கெண்ணெய் நன்றாகக் கரைந்துவிடும். பின்னர் 200 லிட்டர் கலனில் இந்தக் கலவையை ஊற்ற வேண்டும்.

இருநூறு லிட்டர் கலன் முழுவதும் நிரம்பாவிட்டால், மேலும் கூடுதல் தண்ணீர் சேர்த்துக் கலனை நிரப்ப வேண்டும். காற்றுப் புகாதவாறு நீர் நிரம்பியிருக்க வேண்டும். இவ்வாறு முழுவதும் ஊற்றிய பிறகு ஏழு நாட்கள் செரிக்கவிட வேண்டும். நன்கு செரித்த பின்பு தொல்லுயிரிகள் பெரிதும் பெருகி இருக்கும். இதன் பின்னர் நாள்தோறும் கரைசலை எடுத்துக்கொண்டே இருக்கலாம்.

இரண்டு லிட்டர் கரைசல் ஊற்றினால் இரண்டு லிட்டர் தொல்லுயிரிக் கலவை கிடைக்கும். இது நீர்போல் தெளிவாக இருக்கும். நாம் ஊற்றும் கரைசல் கட்டியாக இருக்கும். இவ்வாறு பெற்ற கலவையை ஒரு லிட்டருக்கு நான்கு லிட்டர் என்ற அளவில் நீருடன் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். அல்லது தண்ணீர் பாயும் வாய்க்கால்களில் ஊற்றிவிடலாம். இதனால் செடிகள் நன்கு வளர்ச்சியடையும். தொல்லுயிரியானது தானும் செடிக்கு உணவாக மாறுகிறது. பல நுண்ணுயிரிகளுக்கும் உணவாகிறது.

நீலப்பச்சைப் பாசியைப் போன்ற நுண்ணுயிர்களை வளர்க்கவும் தொல்லுயிரியை பயன்படுத்தலாம். நம்மாழ்வாரின் அண்ணன் இயற்கை வேளாண் அறிஞர் கோ.பாலகிருட்டிணன், இது தொடர்பான தன்னுடைய ஆய்வில் சாதாரண மருதோன்றி இலை ஆறு மடங்கு பெரிதாகியதைப் பதிவு செய்துள்ளார். இவ்வாறாக இலைப்பரப்பு பெரிதாவதால் ஒளிச்சேர்க்கை அதிகப் பரப்பில் நடக்கிறது. இதனால் விளைச்சல் பெருகுகிறது. ஏக்கர் ஒன்றுக்குத் தொல்லுயிரி 200 முதல் 300 லிட்டர் மற்றும் அமுதக் கரைசல் 30 முதல் 50 லிட்டர் ஆகியவற்றைத் தண்ணீர் பாய்ச்சும்போது கலந்துவிடலாம்.

ராதாகிருஷ்ணன் தொடர்புக்கு: 99659 72332

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-27-முதல்-உயிரின-உரம்/article8483063.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 28: பஞ்சாலையைத் துறந்து காய்கறி சாகுபடிக்கு...

mani_2825647f.jpg
 

பஞ்சாலைகளுக்கும் நூற்பாலைகளுக்கும் பெயர் பெற்ற ஊர் ராஜபாளையம். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இந்தச் சிறு நகரம் இருந்தாலும், இன்றைக்கு வெயில் வாட்டி வதைக்கும் நகராகி மாறிவிட்டது. ஒரு சிறு தொழில்நகரான இவ்வூரில் இருந்துகொண்டு, அதுவும் பஞ்சுத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஓர் இளைஞர் இயற்கை வேளாண்மையின் மீது ஆர்வங்கொண்டு கடந்த எட்டு ஆண்டுகளாகப் பல சிரமங்களைச் சந்தித்து வெற்றிகரமாக விளைச்சலை எடுத்துவருகிறார். அவர்தான் மணி.

பலரும் வேளாண்மையில் இருந்து தொழிற்சாலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் இக்காலத்தில் தொழில்துறையில் இருந்து வேளாண்மைக்கு இவர் மாறியுள்ளார். இன்றைய கொள்கை வகுப்பாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஆளுமை இவர் என்றால் மிகையில்லை.

எல்லாம் இயற்கை

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மணி பஞ்சாலைத் தொழிலில் நுழைந்தார். அதில் ஆறு ஆண்டுகள்வரை மாத ஊதியத்தில் பணிபுரிந்துவிட்டு, பின்னர்ச் சொந்தமாகப் பஞ்சாலை ஒன்றைத் தொடங்கி நடத்திவந்தார். அதன் பின்னரே வேளாண்மைக்குள் நுழைந்தார். நண்பர் தமிழ்மணி என்பவர் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாமுக்கு மணியை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ச்சியாக மணி வெற்றிகரமான காய்கறி சாகுபடியாளராக மாறிவிட்டார்.

அவருக்குச் சொந்தமாக இருப்பது அரை ஏக்கர் நிலம் மட்டுமே. ஆனால் கூடுதலாக ஐந்து ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் காய்கறி, பழங்கள் என்று வணிகரீதியான பண்ணையை இவர் நடத்தி வருகிறார். உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை என்று அனைத்தையும் ரசாயன வேளாண்மைக்கு இணையாக இயற்கை முறையில் செய்துவருகிறார்.

கடினமான காய்கறி சாகுபடி

இவரது சிறப்பான சாகுபடி முறை என்று காய்கறிச் சாகுபடியைக் கூறலாம். காய்கறி, பழங்களை இயற்கை முறையில் விளைவிப்பது சற்றுக் கடினமான பணி. ஏராளமான பூச்சிகளும் நோய்களும் தாக்கும். மரப் பயிர்கள், தானியப் பயிர்கள் ஓரளவு தாங்குதிறன் கொண்டவை. ஆனால், காய்கறிகளை உடனடியாகக் கவனிக்காவிட்டால் பெரும் இழப்பை உண்டாக்கிவிடக்கூடியவை.

ஆனால், இவ்வளவு சிரமங்களைத் தாண்டி உடனடி வருவாய் தரும் பயிர் என்று பார்த்தால், அது காய்கறிப் பயிர்தான். எனவே எளிய உழவர்கள், பெரும் முதலீடு செய்ய இயலாதவர்கள் செய்ய வேண்டிய சாகுபடி முறை காய்கறி சாகுபடிதான். கீரை என்றால் 20 நாட்களில் எடுத்துவிட முடியும். வெண்டை போன்ற பயிர்கள் 45 நாட்களில் வருமானம் தரும்.

நோய்த் தொற்று தவிர்ப்பு

இப்படி உடனடியாக வருமானம் தரும் காய்கறி சாகுபடியில் மிகவும் முதன்மையானதும், மிகவும் சிக்கலானதுமான ஒரு பயிர் உள்ளது. அது கத்தரி. நமது நாட்டின் மிகப் பழமையான பயிர்களில் கத்தரியும் ஒன்று. மரபு விதைகள் அதாவது கலப்பினப்படுத்தப்படாத, பொறுக்கு விதைகள் பெரும்பாலும் நோய் தாக்குதலுக்கு ஆளாவதில்லை. ஆனால் கலப்பின விதைகள் வந்த பின்னர், நோயும் பூச்சியும் அதிகம் தாக்குகின்றன. ஆனாலும் மரபு விதை நாற்றுகள் இப்பகுதி உழவர்களால் உற்பத்தி செய்யப்பட்டுப் பிற உழவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த முறையில் கத்தரிச் சாகுபடியை ஒரு புதிய அறைகூவலாக ஏற்றுக்கொண்டு, இயற்கைமுறையில் செய்யத் தொடங்கினார் மணி. அருகில் உள்ள ஒரு நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை இவர் வாங்கிக்கொள்கிறார். முதலில் அந்த நாற்றுகளின் வேர்களை ஓரளவு நறுக்கி எடுத்துவிடுகிறார். பின்னர் அவற்றை அமுதக் கரைசல், பூச்சிவிரட்டிக் கரைசலில் நன்கு மூழ்க வைத்து நேர்த்தி செய்துகொள்கிறார். இதன்மூலம் வெளியில் இருந்து வரும் நோய்த் தொற்றுகள் தவிர்க்கப்படுகின்றன.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

மணி தொடர்புக்கு: 98421 21562

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-28-பஞ்சாலையைத்-துறந்து-காய்கறி-சாகுபடிக்கு/article8513371.ece?ref=relatedNews

முன்னத்தி ஏர் 29: சொத்தை குறைவு, லாபம் அதிகம்

brinjal_2834813f.jpg
 

ராஜபாளையம் இயற்கை உழவர் மணியின் முறைப்படி கத்தரி நாற்றுகளில் முதலில் நோய்த்தொற்று நீக்கப்படுகிறது. அதற்குப் பிறகு, ஏற்கெனவே நன்கு தயாரிக்கப்பட்ட நிலத்தில் பாத்திகள் அமைக்கப்பட்டு அவற்றில் நாற்றுகள் நடப்படுகின்றன.

அடியுரமாகத் தொழுவுரம், வேப்பம் புண்ணாக்கு, சாம்பல் ஆகிய கலவை உரத்தை மணி இடுகிறார். இத்தனைக்கும் இவர் அசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்கள், உயிர்மப் பூச்சிக்கொல்லிகள், நோய்த்தடுப்பான்கள் எதையும் பயன்படுத்தவில்லை. ஆனால், தனது பண்ணையிலேயே பலவிதமான கரைசல்களைத் தயாரித்துப் பயன்படுத்திக்கொள்கிறார்.

புதிய பரிசோதனைகள்

இருபத்தைந்து நாட்கள் கழித்து விளக்குப் பொறிகள் மூலம் தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்து அடித்துவிடுகிறார். வெள்ளை ஈ, அசுவினிப் பூச்சிகள், காய்ப்புழுக்கள், தண்டுத்துளைப்பான்கள், வேர்ப்புழுக்கள் என்று கத்தரியைத் தாக்கும் பூச்சிகள் நிறைய உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கரைசல்களை மாற்றிமாற்றிப் பயன்படுத்துகிறார்.

குறிப்பாக, மீன்பாகு என்ற திரவ ஊட்டத்தை அனைத்துக் கரைசல்களோடும் சேர்த்துத் தெளிக்கிறார். முக்கூட்டு எண்ணெய் என்ற ஒரு முறையைப் பின்பற்றிப் புழுக்களைக் கட்டுப்படுத்துகிறார். ஏதாவது புதிய தொழில்நுட்பம் பற்றி தெரியவந்தால், உடனடியாக அதைப் பரிசோதனை செய்து பார்த்துவிடுகிறார். இவரது பார்வை அந்தத் தொழில்நுட்பம் தற்சார்புடையதாக இருக்கிறதா? இயற்கையோடு இயைந்ததாக உள்ளதா என்பது மட்டுமே.

ரசாயனத்தில் பாதி சொத்தை

இவரது கத்தரி நான்கு மாதங்கள்வரை தொடர்ச்சியாகக் காய்க்கிறது. ரசாயன வேளாண்மை செய்யும் பக்கத்துத் தோட்ட உழவர்கள், மூன்று மாதங்கள் மட்டுமே கத்தரி அறுவடை செய்கின்றனர். அத்துடன் காய்களில் ‘சொத்தை' எனப்படும் புழு தாக்கப்பட்ட காய்கள் இவரது பண்ணையில் 10 முதல் இருபது விழுக்காடு மட்டுமே வருகிறது. ஆனால், ரசாயன முறையில் 50 விழுக்காடு அளவில், அதாவது பாதிக்குப் பாதி சொத்தை வருகிறது.

“ரசாயன முறையில் விளைச்சல் கூடுதலாக உள்ளது உண்மைதான். ஆனால், இயற்கை முறையில் நான் இன்னும் சரியான உர மேலாண்மை செய்தால் ரசாயன விளைச்சலை விஞ்ச முடியும்” என்கிறார் மணி.

brinjal1_2834814a.jpg

எதில் லாபம் அதிகம்?

இவரது கணக்குப்படி வாரத்தில் இரண்டு முறை அறுவடை நடக்கிறது. அரை ஏக்கரில் ஒரு முறைக்கு 200 கிலோ வருகிறது. அதில் 50 கிலோ (சொத்தை) கழிவு. ஆக, 150 கிலோ விற்பனைக்குக் கிடைக்கிறது. நான்கு மாதங்கள்வரை அறுவடை தொடர்கிறது.

எது அதிக லாபம் தருகிறது என்பதை அறிய இயற்கை கத்தரி வேளாண்மை, ரசாயனக் கத்தரி வேளாண்மை வரவு செலவை ஒப்பிட்டால் தெரிந்துவிடும். (பார்க்க: பெட்டிச் செய்தி)

இவரது கத்தரியின் சுவையையும் தரத்தையும் அறிந்தவர்கள் விரும்பி வாங்குகின்றனர். இவருடைய இயற்கை முறைக் கத்தரிக்காய் கூடுதல் விலைக்கு விற்கவில்லை. பொதுச் சந்தையில்தான் மணி விற்கிறார். விலையும்கூட ரசாயன வேளாண்மைக்கான விலையே கிடைக்கிறது. ஆனால், இவரது காய் சந்தைக்கு வந்தவுடன் விற்றுத் தீர்ந்துவிடுகிறது. சில நண்பர்கள் இவரது பண்ணையில் வந்தே வாங்கியும் செல்கின்றனர்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

மணி தொடர்புக்கு: 98421 21562

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-29-சொத்தை-குறைவு-லாபம்-அதிகம்/article8541031.ece?ref=relatedNews

முன்னத்தி ஏர் 30: கண் முன்னே பெருகும் வளம்

e2_2843925f.jpg
 

என்னுடைய நிலத்தின் மண்ணில் வளம் பெருகுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மண்ணின் ஈரம் காக்கும் தன்மை அதிகரிப்பதையும் காண முடிகிறது,” என்கிறார் மணி.

இத்தனை சிறப்புகள் இருந்தும், இவருடைய வயலுக்கு வேலையாட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. அதுவும் திறன்மிக்க வேலையாட்கள் கிடைப்பது மிகமிக அரிதாகிவிட்டது. அது மட்டுமில்லாமல், இயற்கை முறைக் காய்கறிகளுக்குப் போதிய அளவில் சந்தை வாய்ப்புகள் இல்லை. வாங்கி விற்பவர்களும் உழவர்களுக்கு உரிய விலையைத் தருவதில்லை. அதேநேரம் நஞ்சில்லாத உணவு வேண்டும் என்று விரும்பும் நுகர்வோரும், பருவத்துக்குப் பருவம் வரும் காய்கறிகளை உண்ண விரும்புவதில்லை. எல்லாக் காலங் களிலும் கேரட்டும் முட்டைக்கோசும் கேட்கின்றனர். இதன் விளைவாக ரசாயனம் கலந்த காய்கறிகளே எளிதில் கிடைக்கின்றன என்பது இவரது ஆதங்கம்

கூட்டு சந்தைப்படுத்துதல்

கத்தரி தவிரப் புடலை, பாகல், முள்ளங்கி போன்ற காய்கறிகளையும், பப்பாளி, வாழை போன்ற பழங்களையும் இவர் சாகுபடி செய்கிறார். கீரை பயிரிடுவதற்காக அடுத்த நிலம் தயாரிப்பில் இருக்கிறது. பப்பாளியும் வாழையும் காய்ப்பில் உள்ளன. சொட்டுநீர்ப் பாசனமுறையையும் பயன்படுத்துகிறார்.

தனது பஞ்சாலைத் தொழிலை முற்றிலும் துறந்துவிட்டு முழுநேர இயற்கை வேளாண் பண்ணையாளராக மாறியுள்ள மணி, மற்ற உழவர்களுக்கு ஒரு முன்னத்தி ஏராக வழிகாட்டுகிறார். இவருடன் இணைந்து காந்தி ராஜா என்ற ஆர்வலரும் இயற்கை வேளாண்மையைப் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் கூட்டாகச் சாகுபடி செய்து காய்கறிகளைச் சந்தைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். அருகில் உள்ள இயற்கை வேளாண்மை அங்காடிகள் இவர்களுடன் இணைந்து செயல்படலாம்.

மீன்பாகு திரவ ஊட்டம், முக்கூட்டு எண்ணெய் தயாரிப்பு முறைகள்:

முக்கூட்டு எண்ணெய்

தேவையான பொருட்கள்:

மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் டப்பா - ஒன்று

மீன் - 1 கிலோ

வெல்லம் - 1 கிலோ

தயாரிப்பு முறை

மீனைச் சிறு துண்டுகளாக வெட்டி டப்பாவில் போடவும். கழிவு மீன்களாக இருந்தாலும் குற்றமில்லை. நன்கு பொடி செய்த வெல்லத்தை இத்துடன் சீராக, அடுக்கடுக்காகக் கலக்க வேண்டும். அதாவது ஒரு அடுக்கு மீன், அடுத்த அடுக்கு வெல்லம். கடையடுக்கில் வெல்லத்தைப் போட்டு நிறைவு செய்து டப்பாவை நன்கு காற்று புகாமல் மூட வேண்டும். 30 நாட்கள் கழித்து நன்கு நொதித்து அந்த மீன் துண்டுகள் கரைந்து தேன் போன்ற நிலையை அடையும். கவுச்சி நாற்றம்கூட இருக்காது. கிட்டத்தட்டப் பேரீச்சம் பழ நாற்றம் கிடைக்கும். இதை எடுத்து 10 லிட்டருக்கு 50 முதல் 100 மில்லி என்ற அளவில் நீர் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.

மீன் பாகு (மீன் அமினோ அமிலம்)

தேவையான பொருட்கள்:

வேப்ப எண்ணெய் - 100 மி.லி.

புங்கன் எண்ணெய் - 100 மி.லி.

இலுப்பை எண்ணெய் - 100 மி.லி.

மண்ணெண்ணெய் - 10 மி.லி.

தயாரிப்பு முறை:

இந்த மூன்றையும் சேர்த்துக் கலக்க வேண்டும்.

பின்னர் 5 லிட்டர் நீருடன் சிறிது காதி சோப் அல்லது குளியல் சோப்பைச் சேர்த்துக் கரைக்க வேண்டும். இந்தக் கரைசலை எண்ணெய்க் கரைசலுடன் சேர்த்து நன்கு கலக்கினால் பால் போன்ற திரவம் கிடைக்கும். இதை 10 லிட்டர் நீருக்கு 100 மி.லி. என்ற அளவில் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும்இயற்கை வேளாண் வல்லுநர். தொடர்புக்கு: adisilmail@gmail.com

மணி தொடர்புக்கு: 98421 21562

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-30-கண்-முன்னே-பெருகும்-வளம்/article8569402.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 31- கால்நடைகளைப் போற்றும் இயற்கை வேளாண்மை

9_2852911f.jpg
 

இயற்கை வேளாண்மை இயக்கத்துக்குள் வரும் பல உழவர்களை நேரில் சந்திக்கும்போது, விடுதலைப் போராட்டக் காலத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் லட்சியம் ஒன்றே குறி என்ற அடிப்படையில் குதித்தவர்களின் வரலாற்றைப் போல உள்ளதைக் காண முடிகிறது. அதிலும் பிச்சைமுருகன் போன்ற உழவர்களின் ஈடுபாடு வியப்படைய வைக்கிறது.

குடும்பத்தோடு உழவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ள மிகச் சிறிய கிராமம் அச்சங்குளம். இங்கு வேளாண்மையே அடிப்படையான தொழில். பெரிய ஆற்றுப் பாசனம் ஏதும் இல்லை. மழையையும் கிணறுகளையும் நம்பியே வேளாண்மை நடைபெறுகிறது.

இந்த ஊரைச் சேர்ந்த பிச்சைமுருகன் வணிகவியல் பட்டம் பெற்றவர். இவரது துணைவி பொறியியல் பட்டம் பெற்றவர். இருவரும் தங்களுடைய ஒன்பதாவது படிக்கும் ஒரே மகளுடன் கொளுத்தும் வெயிலில் மாடுகளுக்குத் தண்ணீர் வைத்துக்கொண்டும், ஆடுகளை மேய்த்துக்கொண்டும் இருப்பதைக் காண முடிகிறது.

ஊருக்கு இழுத்த வேளாண்மை

வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த பிச்சைமுருகனுக்கு, இயல்பாகவே வேளாண்மைப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் குடும்பச் சூழல் ஒத்துழைக்கவில்லை. அதன் பின்னரே வணிகம் படித்தார். எல்லோரது வீட்டிலும் கூறுவதைப்போலப் படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றே அவரும் விரும்பினர். வேளாண்மையை இன்னும் யாரும் வேலையாக நினைக்க ஆரம்பிக்கவில்லையே.

சென்னை சென்று மூலிகை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார். ஆனால், வேளாண்மையின் மீதான ஆர்வம் மட்டும் அவருக்குக் குறையவே இல்லை. இந்தச் சூழலில் இயற்கை வேளாண்மையைப் பற்றி செய்தித்தாள்களில் படித்துவிட்டு, அதை பற்றிய தேடலுடன் மீண்டும் ஊர் திரும்பி வந்து பருத்திச் சாகுபடியில் நுழைந்துள்ளார்.

10_2852913a.jpg - பிச்சை முருகன்

 

முன்னோடிகள் காட்டிய வழி

அப்போது முன்னோடி இயற்கை உழவர் புளியங்குடி கோமதி நாயகத்தின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. அவரது வழிகாட்டுதலில் இயற்கை வேளாண்மையை முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். அவருடன், தன்னை மிகவும் ஊக்கப்படுத்தியவர்கள் தஞ்சை கோ. சித்தரும், மதுரை கார்த்திகேயன் ஆகிய இருவரும்தான் என்பதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். பொருளாதார ரீதியில் இவர் நெருக்கடிக்கு உள்ளானபோதும், விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கொடுத்து ஆதரித்ததுடன், தனது வெற்றிக்கு ஆதாரமாகவும் அவர்கள் இருந்ததாகக் கூறுகிறார் பிச்சைமுருகன்.

இவரது 26 ஏக்கர் பண்ணையில் நெல், பருத்தி, மிளகாய், மரவள்ளிக் கிழங்கு, வெங்காயம், தீவனப் பயிர்கள் என்று ஒரு முழுமையான பண்ணைக்குரிய சாகுபடி நடைபெறுகிறது. 15 மாடுகள், 20 ஆடுகள், 150 கோழிகள் என்று கால்நடைகளையும் வைத்துள்ளார். இவரது மாடுகளுக்கு அமைத்துள்ள கொட்டகையைவிட, இவரது குடும்பம் வாழும் வீடு வசதி குறைவாகவே உள்ளது.

கொடுத்து வாங்குவது

மாடுகளுக்கான தீவனத் தொட்டியை மிகச் சிறப்பாக அமைத்துள்ளார். பழைய பிளாஸ்டிக் பீப்பாய்களை இரண்டாக அறுத்து, அதைக் கொண்டு மாட்டுக் காடிகளாக அமைத்துள்ளார். தீவனப் புற்களை வெட்டுவதற்குத் தழை வெட்டி (bush cutter) என்ற இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார். அதிலும் சிறிய மாற்றம் செய்து, மிக எளிதாகப் புல் அறுக்கும் வேலையைச் செய்துகொள்கிறார். இதன்மூலம் நெல் அறுப்பதையும் செய்து காட்டுகிறார்.

ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தேவையான புல் மற்றும் மற்ற தீவனங்களைத் தனது பண்ணையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சமாளித்துக்கொள்கிறார். கூடியவரை வெளியிலிருந்து பொருட்களை வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். சாணம், மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றைக் கொண்டு நிலத்துக்கு வளமூட்டும் அமுதக் கரைசல், பூச்சி விரட்டி ஆகியவற்றைத் தயாரித்துக்கொள்கிறார். இப்படிக் கொள்வதும் கொடுப்பதுமாக இவருடைய சாகுபடி முறை அமைந்துள்ளது.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com 
விவசாயி பிச்சைமுருகன் - தொடர்புக்கு: 93627 94206

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-31-கால்நடைகளைப்-போற்றும்-இயற்கை-வேளாண்மை/article8599494.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 32 - வெங்காயச் சாகுபடியில் தனி முத்திரை

11_2862868h.jpg

 

அச்சங்குளம் பிச்சைமுருகனின் முதன்மைப் பயிர்களில் ஒன்று நெல். முதன்முதலாக இவர் நெல் சாகுபடியை இயற்கை முறையில் தொடங்கியபோது, ஐந்து ஏக்கரில் 84 மூட்டை மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது. பின்னர் இயற்கைவழி வேளாண்மை நுட்பங்கள் கைவந்த பின்னர், சராசரி முப்பது மூட்டைக்குக் குறைவில்லாமல் எடுக்கிறார். அது மட்டுமல்ல மற்ற எல்லாப் பயிர்களிலும் ரசாயன வேளாண்மைக்கு இணையான விளைச்சலை இயற்கை முறையில் தன்னால் எடுத்துவிட முடியும் என்று அடித்துச் சொல்கிறார்.

18 கிலோ வாழைத்தார்

தான் முதன்முதலில் குறைவான விளைச்சல் எடுத்தபோதும் தஞ்சை சித்தர், கோமதிநாயகம் இருவரும் நல்ல விலை கொடுத்து வாங்கித் தன்னைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றினார்கள் என்று நெகிழ்ந்து கூறும் இவர், இயற்கை வேளாண்மையை அரசு கண்டுகொள்வதில்லை என்பதையும் கூறி வருத்தப்படுகிறார்.

வாழைச் சாகுபடியில் இவர் சாதனை விளைச்சலை எட்டியுள்ளார். ஒரு தார் 18 கிலோ எடைக்கு விளைந்தபோதும், தண்ணீர்த் தேவை என்பது மிகவும் அடிப்படையானது. பருவக் காலங்களில் மழை பெய்யாதபோது வாழைச் சாகுபடிக்குள் இறங்குவது மிகவும் ஆபத்து என்பது இவரது அனுபவம்.

கோடையில் வெங்காயம்

இவரது மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை, கோடையில் வெங்காயச் சாகுபடி. கடும் வெயில் காலத்தில் வெங்காயத்தை வளர்த்தெடுப்பது கடினமான காரியம். இவரது பண்ணையில் கடும் வெயிலில் வெங்காயம் வளர்ந்துள்ளது. ஆங்காங்கே நுனி கருகி இருந்தாலும் பயிர் திடமாகவே உள்ளது. இதற்குக் காரணம், இவர் கொடுக்கும் ஊட்டக் கரைசல்கள். குறிப்பாக அமுதக் கரைசல், பஞ்சகவ்யம் ஆகியவற்றைத் தொடர்ச்சியாகக் கொடுக்கிறார்.

சரியான வடிகால் வசதியுடன் தனது நிலத்தை வைத்துள்ளார் பிச்சை முருகன். கோடைக் காலம் வெங்காயத்துக்குக் கடுமையான சவாலாகும் என்பது இவரது கருத்து. எனவே, பலரும் இதைத் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், இவரோ துணிந்து வெங்காயச் சாகுபடி செய்துள்ளார்.

இயற்கை ஊட்டக் கரைசல்கள்

வெங்காயத்துக்கு நிலத்தை நன்கு உழுது பாத்திகள் அமைத்துள்ளார். அதனுள் மிளகாய் சாகுபடி செய்தாலும், அவை வெயிலில் கருகியுள்ளன. ஆனால், வெங்காயம் மட்டும் வளர்ந்துவருகிறது.

தொழுவுரமாகத் தனது மாடு, ஆடுகளிடமிருந்து கிடைக்கும் கழிவைப் பயன்படுத்துகிறார். இதனால் அடிஉரத் தேவை எளிதில் பூர்த்தியாகிவிடுகிறது. அடுத்ததாக மேலுரத்துக்குப் பல்வேறு கரைசல்களைத் தயாரித்துப் பயன்படுத்துகிறார். ரசாயன வேளாண்மையில் கொடுக்கப்படும் உரங்களுக்கு இணையாக, இவரது கரைசல்கள் அமைந்துள்ளன. பார்க்கும் இடம் எங்கும் பீப்பாய்களில் கரைசல்கள் ஊறிக்கொண்டு இருக்கின்றன.

சாதனை சாகுபடி

12_2862872a.jpg - பிச்சைமுருகன்

விதைகளை நான்கு விரற்கடை அல்லது ஓர் அங்குல இடைவெளியில் நடவு செய்துள்ளார். இது சற்று முன்பின் ஆனாலும் தவறில்லை. பெரும்பாலும் காய்ச்சலும் பாய்ச்சலுமாகவே நீரைக் கொடுக்கிறார். இதனால் வேர்கள் நன்கு மூச்சு விட்டு வளருகின்றன. அது மட்டுமல்லாது இவர் தரும் இயற்கை எருக்கள் நீரை நன்கு பிடித்து வைத்துக்கொள்வதால், மண்ணில் வெப்பநிலை அதிகமாக உயர்வதில்லை. மண் பஞ்சுபோலச் செயல்படுகிறது.

களை எடுப்பதற்கு ஆட்களையே நம்பியுள்ளார். பொதுவாகக் கைக் களை எடுப்பதன் மூலம் களைகளைக் கட்டுப்படுத்துகிறார். பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தினாலும், இவரது பண்ணையில் பூச்சிகளின் தாக்குதல் மிகக் குறைவு. இயற்கை முறைக்கு மாறிவிட்டதால் பல நன்மை செய்யும் பூச்சிகள், பறவைகள் பெருகியுள்ளன.

ஏக்கருக்கு 6,000 கிலோ வெங்காய அறுவடை செய்துள்ளார். வெங்காயச் சாகுபடியைத் தனது சிறப்பான முத்திரை பயிராகக் கருதுகிறார். இந்த வெற்றியின் ரகசியம் தொடர்ச்சியாக ஊட்டக் கரைசல்களைத் தெளிப்பதுதான் என்கிறார்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com 
விவசாயி பிச்சைமுருகன் தொடர்புக்கு: 93627 94206

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-32-வெங்காயச்-சாகுபடியில்-தனி-முத்திரை/article8629617.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 33: அருகிவரும் உழவுத் தொழிலாளர்

உள்படம்: பிச்சைமுருகன்
உள்படம்: பிச்சைமுருகன்

மாடுகளுக்குப் புல் வெட்டுவதற்குத் தழைவெட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார். அதன்மூலம் ஒரு மணி நேரத்தில், அரை ஏக்கர்வரை வெட்டிவிட முடியும் என்கிறார். இந்தக் கருவி மூலமாக நெல் அறுவடையும் செய்ய முடியும் என்கிறார். நம் நாட்டில் இந்த மாதிரியான சிறு உழவர்களுக்கு ஏற்ற கருவிகள் செய்யப்படுவதில்லை. நூறு ஏக்கர், இருநூறு ஏக்கர் பரப்புள்ள இடங்களைக் கொண்டுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்ட டிராக்டர் போன்ற பெரிய இயந்திரங்கள்தான், இங்கே ‘காப்பியடிக்கப்பட்டு' உருவாக்கப்படுகின்றன.

ஆள் பற்றாக்குறை

நம் நாட்டில் சராசரி நிலவுடைமை 1970-ம் ஆண்டளவில் 5.63 ஏக்கராக இருந்தது. 2010-ம் ஆண்டளவில் 2.86 ஏக்கராகக் குறைந்துள்ளது. அதற்கு ஏற்றாற்போலக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். ஐ.ஐ.டி. போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் சிறு, குறு உழவர்களை மனதில் வைத்து இயந்திரங்கள், கருவிகளை உருவாக்கவில்லை என்பதுதான் சோகம்.

வேலை ஆட்கள் பற்றாக்குறைதான் அச்சங்குளம் பிச்சைமுருகன் சந்திக்கும் மிகப் பெரிய சவால். அத்துடன் திறன்மிக்க வேலையாட்களும் மிக மிகக் குறைவு. முதியவர்களே பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலாளர்களாக உள்ளனர். இளைஞர்கள் இந்தத் துறையை எட்டிப் பார்ப்பதே இல்லை. இதனால் இவர் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

ஒரு புறம் வேலை இல்லாத் திண்டாட்டம் கடுமையாக இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. மறுபுறம் இந்தியாவின் மிக இன்றியமையாத தொழிலான வேளாண்மைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதை, யாரும் கணக்கில் கொள்வதே இல்லை. இந்த முரண்பட்ட தொழிற்கொள்கை பற்றி நம் சமூகத்தில் பெரிய கவலையும் இல்லை.

இரண்டு பக்கமும் லாபம்

பல லட்சம் கோடி வெளிநாட்டு மூலதனங்களை வாங்கி நமது நாட்டை அவர்களுக்கு அடகு வைக்க முனையும் அரசியல்வாதிகளும் கொள்கை வகுப்பாளர்களும், அந்த நிறுவனங்கள் தரும் வேலைவாய்ப்பு எவ்வளவு குறைவானது என்பதைக் கவனிக்காமல் கண்களை மூடி கொள்கிறார்கள். அதிக முதலீடு, நவீன இயந்திரம், குறைந்த வேலைவாய்ப்பு என்பதற்கு மாற்றாக, குறைந்த முதலீடு, அதிக வேலைவாய்ப்பு, அதிக மனித உழைப்பு என்கிற உற்பத்திக் கொள்கையை எந்த அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கைகளில்கூட வலியுறுத்துவதில்லை.

ஒரு பண்ணையாளர் 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் குறைந்தது இரண்டு ஆட்களுக்கு வேலை தர முடியும். நான்கு பால் மாடுகளைப் பராமரிக்க இரண்டு ஆட்களை மிகச் சிறந்த கண்ணியமான வசதிகளோடு வைத்துக்கொள்ள முடியும். அவர்களும் இப்படி உழைப்பதன் மூலம் சிறப்பான அடிப்படை வசதிகளோடு வாழ முடியும்.

அவர்களது உற்பத்திப் பொருட்களை நுகர்வோரிடம் செப்பமாகக் கொண்டுசேர்த்தால், இன்று வாங்கும் விலையைவிட குறைவான விலைக்கு நுகர்வோர் பொருட்களைப் பெற முடியும். ஆக, விலைவாசி உயர்வும் குறையும். மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். பரவல்மயமான பொருளாதாரம் பெருகும்.

இவ்வாறு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பணமும் வேலைவாய்ப்பு பெருக்கமும், இயற்கைவளக் கொள்ளைத் தடுப்பும் வேறு எந்தத் துறையிலும் கிடைக்காது. ஒருசிலர் மட்டும் சில லட்சங்களைச் சம்பளமாக வாங்குவதற்கு மட்டுமே பிற துறைகள் உதவும்.

தீர்வில்லாத பயணம்

இந்தியா போன்ற மக்கள்தொகை நிறைந்த நாட்டுக்கு உடலுழைப்பை அடிப்படையாகக் கொண்ட (labour intensive) தொழிற்கொள்கை வேண்டுமே அன்றி, மூலதனத்தையும் இயந்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட (capital, machinery intensive) தொழிற்கொள்கை தீர்வைத் தர முடியாது.

ஆனாலும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழிற்கொள்கையே பின்பற்றப்படுவதால் பிச்சைமுருகன் போன்ற உழவர்கள் இன்று ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com 
விவசாயி பிச்சைமுருகன் தொடர்புக்கு: 93627 94206

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-33-அருகிவரும்-உழவுத்-தொழிலாளர்/article8659487.ece?ref=relatedNews

முன்னத்தி ஏர் 34: எளிய உழவுக்கு ஓர் முன்னோடி

அருள்மொழி
அருள்மொழி

பரம்பு மலையின் (பிரான் மலை) இனக்குழுத் தலைவன் பாரியின் கெழுதகை நண்பரும் இயற்கையைப் பாடிய பெரும்புலவருமாகிய செந்தமிழ் அந்தணாளர் கபிலர் வடக்கிருந்து உயிர்துறந்த இடம் திருக்கோவலூர். இப்போது திருக்கோவிலூர் என்று அழைக்கப்பெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணையாற்றின் அருகே அமைந்துள்ள சிறு நகரம். ஓரளவு நீர் வளம் உள்ள பகுதி. இங்கு நெல்லும் கரும்பும் சாகுபடி செய்து வெற்றி பெற்றுவருகிறார் இயற்கை உழவர் அருள்மொழி. இப்பகுதியில் இவர் ஒரு முன்னத்தி ஏர். பலருக்கும் நுட்பங்களைக் கற்றுத் தந்துவருகிறார்.

உரத் தேவை நிறைவு

முப்பது ஏக்கர் நிலம் இவரது தந்தை வழியாக வந்தது. இதில் 15 ஏக்கரில் கரும்பும், 14 ஏக்கரில் நெல்லும் விளைவிக்கிறார். சிறிதளவு தீவனப் புற்களும் வளர்த்துத் தனது மாடுகளுக்குப் பயன்படுத்துகிறார். ஏறத்தாழ 50 மாடுகள் வைத்துள்ளார். இவை பாலுக்கான மாடுகள் அல்ல. சாணத்துக்காகவும் மோளுக்காகவும் (மூத்திரம்) வைத்துள்ளார். இவற்றுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தக் கவனமும் கொடுப்பதில்லை. அருகே உள்ள மேய்ச்சல் பகுதிக்குச் சென்று வந்த பின்னர், அவற்றுக்குச் சிறிது தீவனப் புற்களைக் கொடுக்கிறார். இவரது முப்பது ஏக்கர் பண்ணையத்துக்கான பெரும்பான்மை உரங்களை இவைதான் கொடுக்கின்றன.

அடுத்ததாக மண்ணை வளப்படுத்தும் நடவடிக்கையாக உரக் கரைசல்கள் பலவற்றைப் பயன்படுத்துகிறார். அவற்றை எளிமையாகக் கொண்டு சேர்க்க ஊறல் தொட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் உரநீர் செல்கிறது. அதில் பல்வேறு வகையான ஊட்டங்கள் போடப்படுகின்றன. சாணம், மோள், வெல்லம், பழங்கள், புண்ணாக்கு என்று அனைத்து வகையான ஊட்டப் பொருட்களையும் சேர்க்கிறார். இவை நன்கு ஊறிச் சத்துள்ள கரைசலாக மாறுகின்றன. அதை பாசன நீர் வழியாகக் கொண்டு செல்கிறார். இதன்மூலம் வேலையாட்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்கிறார். இது தவிரச் சில ஊக்கக் கரைசல்களைத் தெளிப்புகளாகக் கொடுக்கிறார். திறமி எனப்படும் திறனுயிர்க் கரைசலைத் தெளிப்பு மூலமாகக் கொடுக்கிறார்.

இயற்கை பூச்சிவிரட்டி

தனது நெல், கரும்பு பயிர்களுக்கு ஆடு, மாடு தின்னாத இலை தழைகளைக் கொண்டு பூச்சிவிரட்டி தயாரித்துப் பயன்படுத்துகிறார் விவசாயி அருள்மொழி. அதன்மூலம் பூச்சி தாக்குதலைக் குறைக்கிறார்.

பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை:

பின்வரும் பண்புள்ள இலை தழைகள் பூச்சிகளை விரட்டப் பயன்படும்.

1. ஆடு, மாடுகள் உண்ணாத இலை, தழைகள்

2. ஒடித்தால் பால் வரும் இலை, தழைகள்

3. கசப்பு சுவைமிக்க இலை, தழைகள்

மேற்குறிப்பிட்ட மூன்று வகைகளிலும், வகைக்கு ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வீதம் இலைகளையும் தழைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக,

1. ஆடுதொடாத் தழை (ஆடு மாடு தின்னாதது)

4. சோற்றுக்கற்றாழை (கசப்பு சுவை கொண்டது)

3. எருக்கிலை (ஒடித்தால் பால் வருவது)

மேற்படி மூன்று இலைகளையும் எடுத்துச் சிறு துண்டுகளாக நறுக்கி, பின்னர் இடித்து ஒரு டிரம்மில் இடவும். அத்துடன் மஞ்சள் தூள் 50 முதல்

100 கிராம் சேர்த்து, மாட்டு மோள் 15 லிட்டர், சாணம் ஒரு கிலோ ஆகிய அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கி கரைசல் தயாரித்து டிரம்மில் உள்ள இடித்த இலைகள் மீது ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பின்னர் ஒரு வாரம் ஊறவிட வேண்டும். இது நன்கு ஊறிய பிறகு, அதன் சாற்றை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

அனைத்து வகைப் பயிர்களுக்கும் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வடிகட்டிய சாறு என்ற அளவில் கலந்து மாலை நேரம் தெளித்தால் பூச்சிகள் கட்டுப்படும்.

மற்றொரு முறை:

மேலே கூறிய அதே அளவு இலைகளை எடுத்துச் சாணம், மோள் சேர்க்காமல் மூழ்கும் அளவு நீர் விட்டு அரைத்து, அத்துடன் மஞ்சள் தூளை மேலே கூறிய அளவில் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் இந்த வேகல் கரைசலுடன் பத்து லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

அருள்மொழி, தொடர்புக்கு: 94873 81043

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-34-எளிய-உழவுக்கு-ஓர்-முன்னோடி/article8690367.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 35: இயற்கை கரைசல்களால் ஊட்டம் பெறும் நெல்

7_2899363f.jpg
 

இயற்கை உழவர் அருள்மொழியின் பண்ணை முறை மிக எளிமையானதாக உள்ளது. மிகுந்த முனைப்புடன் ஏதும் செய்வதில்லை. கிடைக்கிற வேலையாட்களின் திறன்களை அடிப்படையாகக்கொண்டு தனது பண்ணையை இயக்குகிறார். ஓராண்டில் ஒரு முறை மட்டுமே நெல் சாகுபடி செய்கிறார். அதுவும் பெண்ணையாற்றில் கிடைக்கும் நீரால் அருகில் உள்ள ஏரி நிரம்புகிறது. அந்த ஏரியில் இருந்து கால்வாய் வழியாக வரும் நீரால் நெல் சாகுபடி செய்துகொள்கிறார்.

நெல் சாகுபடிக்கு வயலைத் தயார்படுத்தும் முகமாக முதலில் சணப்புத் தக்கை பூண்டு ஆகியவற்றுடன் பல பயிர்களை இணைத்து விதைக்கிறார். இதற்கு ஏக்கருக்கு 20 பூண்டு விதைகள் என்ற அளவில் பயன்படுத்துகிறார். இதனால் நல்ல பசுந்தாள் உரம் கிடைக்கிறது. அடி உரத் தேவையை இவ்வாறு நிறைவு செய்கிறார். யூரியா, டி.ஏ.பி. என்ற ரசாயன உரங்கள் தேவைப்படுவதில்லை.

நாற்றங்கால் தயார் செய்து அதில் நாற்றுகளை 14 முதல் 15 நாட்களே வளர்க்கிறார். அவற்றை இளம் நாற்றுகளாகப் பிடுங்கி நடவு செய்கிறார். ஒற்றை நாற்று முறையைப் பின்பற்றாவிட்டாலும் அதிலுள்ள அடிப்படை நுணுக்கமான இடைவெளி விட்டு நடும் முறையைப் பின்பற்றி, அரையடி இடைவெளியில் நாற்றுகளை நடுகிறார். தொடர்ச்சியாக அமுதக் கரைசல் எனப்படும் ஊட்டக் கரைசலைக் கொடுக்கிறார்.

தேவையான பொருட்கள்:

1. 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம் - 1

2. சாணம் - 1 கிலோ

3. மாட்டுச் சிறுநீர் - 1 லிட்டர்

4. வெல்லம் - 100 கிராம்

5. பழக் கூழ் - 1 லிட்டர்

6. தண்ணீர் - 10 லிட்டர்

தயாரிப்பு முறை

முதலில் நீரை எடுத்து அதில் மாட்டுச் சாணத்தைக் கரைக்கவும். பின்பு மாட்டுச் சிறுநீரை ஊற்றிக் கலக்கவும். பின்பு பொடி செய்த வெல்லத்தைப் போட்டு நன்கு கலக்கவும். பின்பு பழக் கூழையும் ஊற்றி நன்கு கலக்கவும். பின்னர் மூடி வைக்கவும். ஐந்து நாட்கள் நொதிக்க விடவும். அமுதக் கரைசல் பயன்படுத்தத் தயாராகிவிடும்.

பயன்படுத்தும் முறை

அனைத்து வகைப் பயிர்களுக்கும் மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை தெளிக்கலாம்.

அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் அமுதக் கரைசலில், 10 லிட்டர்வரை நீர் சேர்த்துத் தெளிக்கலாம்.

கரைசல் தரும் பயன்கள்

1. யூரியா, டி.ஏ.பி போன்ற ரசாயன உரங்களை நீரில் கலந்து பயிர்களுக்குத் தெளித்தால் மிக விரைவாக வளர்ச்சி கூடுவதுபோல அமுதக் கரைசலும் மிக விரைவாகப் பயிர் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

2. சாணம், மாட்டுச் சிறுநீர் கலவையாக இருப்பதால் பயிரைச் சேதம் செய்யும் புழு பூச்சிகளை விரட்டுகிறது. பயிரைப் பூச்சிகள் உண்ணவிடாமல் தடுக்கிறது. ஆக, பூச்சிவிரட்டியாகவும் இது செயல்படுகிறது.

இதன் பின்னர் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பு மூலம் பூச்சி விரட்டி, ஊட்டக் கரைசல் என்று ஏதாவது ஒரு கரைசலைக் கொடுத்துக்கொண்டே வருகிறார். பயிரின் தன்மை, வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு எதைக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார். இது பட்டறிவின் மூலம் கற்றுக்கொள்ளலாம். தேவையான நேரத்தில் பயிர் திரட்டி வேண்டும்போது கடலைப் புண்ணாக்கு, ஆமணக்குப் புண்ணாக்கு ஆகியவற்றையும் கொடுக்கிறார்.

இவர் பயன்படுத்தும் நெல் வகை வெள்ளைப் பொன்னி, சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா. இவர் பொன்னியில் ஏக்கருக்கு 30 மூட்டை வரையிலும், சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா ஆகியவற்றில் 25 மூட்டை வரையிலும் விளைச்சல் எடுக்கிறார்.

தொடர்புக்கு: adisilmail@gmail.com

அருள்மொழி, கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் தொடர்புக்கு: 94873 81043

(அடுத்த வாரம்: முதலீடோ குறைவு, லாபமோ அதிகம்)

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-35-இயற்கை-கரைசல்களால்-ஊட்டம்-பெறும்-நெல்/article8744608.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 36: முதலீடோ குறைவு, லாபமோ அதிகம்

30_2908608f.jpg
 

நெல் சாகுபடிக்கு ஆற்று நீரை நம்பியிருந்தாலும் கரும்பு சாகுபடிக்கு இயற்கை உழவர் அருள்மொழி பெரிதும் நம்பி இருப்பது கிணற்றை மட்டுமே. ஏனென்றால், கரும்பு நீண்டகாலப் பயிர். அரசாலும் தனியார் ஆலைகளாலும் ஊக்குவிக்கப்படும் வணிகப் பயிர். உடனடியாக வங்கிக் கடன் கிடைக்கும். பயிர் பணமாக மாறும் வாய்ப்பும் அதிகம். அதிலும் இப்போது செலவு கூடிவருகிறது. அதனால் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அவர் இறங்கியுள்ளார்.

ஒரு முறை நட்டுவிட்டு மீண்டும் மீண்டும் மறுதாம்பு (ratoon) முறையில் வளர்க்கும் வழியைப் பின்பற்றுகிறார். இப்போது மூன்றாம் முறை மறுதாம்புக்குச் சென்றுள்ளார். தொடர்ச்சியாகப் பத்து முறை தாண்டி விடுவேன் என்று உறுதிபடக் கூறுகிறார்.

இந்த விலை போதும்

இவருடைய நெல் சந்தைப்படுத்தும் முறை முற்றிலும் மாறுபட்டது. நெல்லை அரிசியாக மாற்றி கொடுக்கிறார். அப்படிச் செய்யும்போது இவரது அரிசியை வாங்கத் தயாராக 20 முதல் 30 குடும்பங்கள் உள்ளன. ஆண்டுதோறும் அவர்களுக்கு அரிசியைக் கொடுத்துவருகிறார். பொன்னியைக் கிலோவுக்கு ரூ. 55 என்ற அளவிலும், சீரகச் சம்பாவைக் கிலோவுக்கு ரூ. 80 என்ற அளவிலும் விற்பனை செய்கிறார்.

இவரிடம் அரிசி வாங்குபவர்கள் எப்போதும் விலையைப் பற்றி வருத்தப்படுவதே இல்லை. இப்படியாக நம்பிக்கையான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளார். அரிசி விற்பனையில் இவர் கூறிய மற்றொரு கருத்து வியப்பானது. 'எனக்கு இந்த விலையே போதும், இதற்கு மேல் தேவையில்லை' என்கிறார். 'போதுமென்ற மனத்தை' ஓர் இயற்கைவழி உழவரைத் தவிர வேறு எவரிடம் எதிர்பார்க்க முடியும்?

கொஞ்சம் கணக்கு

இவரது பண்ணை வரவு செலவு கணக்கைப் பார்த்தால் வியப்பாகவும் உள்ளூர் பொருளாதார முன்னேற்றத்துக்கு எவ்வளவு பேருதவியாக உள்ளது என்றும் புரியும். இதை நமது ஆட்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் ஏன் தொடர்ந்து பார்க்க மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

நெல்லுக்காகச் சராசரி செலவு = ஏக்கருக்கு ரூ. 25,000

15 ஏக்கருக்கு = ரூ. 3,75,000.

வரவு = 25 மூட்டை (ஒரு மூட்டையில் 75 கிலோ) = 1875 x 15 ஏக்கர் = 28,125 கிலோ நெல்.

28,125 கிலோ நெல்லுக்குக் கிடைக்கும் அரிசி 16,875 கிலோ.

இந்த அரிசியை ரூ.55 என்ற விலையில் விற்பனை செய்கிறார். ஆக ரூ. 9,28,125 என்ற அளவில் அவருக்கு வருமானம் கிடைக்கிறது. இதன்மூலம் மற்றப் பண்ணைச் செலவுகள், அவரது மேலாண்மைச் சம்பளம் ஆகியவற்றை நிறைவு செய்துகொள்கிறார்.

இது தவிரக் கரும்பில் இடுபொருளை அவர் விரைந்து குறைத்துவருகிறார். அதன்மூலமும் வருமானம் ஈட்ட முடிகிறது.

உழைப்பு மட்டுமே மூலதனம்

இவரது பண்ணை முதலீடு என்றால் 30 ஏக்கருக்குமான நில மதிப்பைக் கழித்துவிடுவோம். ஏனெனில் இது இடத்துக்கு இடம் மாறுபடும். அதுதவிர இவர் ஆண்டுக்குச் செய்யும் வரவு செலவு என்பது ரூ. 2,25,000 வரை ஆகிறது.

இவர் அதிக அளவாக நான்கு மாதங்களில் நெல்லில் இருந்து பெறும் வருமானம் ஏறத்தாழ ரூ. 10 லட்சம். ஆனால், கரும்பில் 10 முதல் 11 மாதங்கள்வரை பாடுபட்டு வரும் வருமானம் ஏறத்தாழ ரூ. 10 லட்சம்தான். இதற்கான நீர் விரயம் தனிச் செலவு. இந்த விளைபொருளின் பயன்பாடும் சமூக வளர்ச்சிக்கு உயர்வைத் தருவதில்லை. பல நேரம் மது உற்பத்திக்குப் பயன்படுகிறது.

மற்றொரு கோணத்தில் பார்த்தால் 20 லட்ச ரூபாய் முதலீட்டில் (நிலமதிப்பைக் கழித்து) 13 பேருக்கு வேலை தருகிறார். அவர்களுக்கு எந்தப் பொறியியல் படிப்போ அதற்கான முதலீடோ தேவையில்லை. சமூகமே உழைப்பைக் கற்றுத் தருகிறது. இவரது பண்ணையில் ஆண்டுதோறும் சராசரியாக 13 ஆட்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் பெறும் ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 250 முதல் ரூ. 300 வரை. இவர்கள் உடலுழைப்பை மட்டுமே நம்பியுள்ளவர்கள்.

முரண்பாடு

நமது ஆட்சியாளர்கள் ரூ. 12 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டு 12 லட்சம் பேருக்கு வேலை தருவதாகச் சொல்கிறார்கள். இதனால் ஏற்படப் போகும் சூழலியல் கேடுகளைப் பற்றி சொல்ல முடியாது. ஆக, ஒரு கோடி ரூபாயில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு. நமது அருள்மொழி மாதிரியில் ஒன்றரை லட்சம் ரூபாயில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு. அதாவது ஏறத்தாழ 100 மடங்கு குறைவான முதலீட்டில் வேலை தரும் இயற்கைவழி வேளாண்மையைப் புறந்தள்ளும் நமது ஆட்சியாளர்களை என்னவென்று சொல்வது?

ஒருபுறம் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்று புலம்புகிறோம். மறுபுறம் வேளாண்மைக்குப் படித்த இளைஞர்கள் வருவது அரிதாக உள்ளது. இந்த முரண்பாடு கூடவா நம்மை ஆள்பவர்களுக்குத் தெரியவில்லை? இதற்கு எதற்கு அந்நிய நேரடி முதலீடு, அருள்மொழி மாதிரி உழவர்கள் போதுமே!

(அடுத்த வாரம்: ஒன்றும் செய்யா வேளாண்மை)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்.

தொடர்புக்கு: adisilmail@gmail.com

அருள்மொழி தொடர்புக்கு: 94873 81043

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-36-முதலீடோ-குறைவு-லாபமோ-அதிகம்/article8772527.ece?ref=relatedNews

முன்னத்தி ஏர் 37: ஒன்றும் செய்யா தென்னை வேளாண்மை

26_2917328f.jpg
 

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள சிறிய ஊர் ஜோத்தம்பட்டி. இங்கு அமராவதி ஆற்றுக் கால்வாய் பாசனம் உள்ளது. இங்கே நெல்லும் தென்னையும் மட்டுமே பெரிதும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கே பத்து ஏக்கர் நிலத்தில் இயற்கை வழி வேளாண்மைக்குள் இறங்கி வெற்றி பெற்றுத் தனக்குத் தெரிந்த தொழில்நுட்பங்களை முடிந்தவரை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்துவருகிறார் விவசாயி மனோகரன்.

தொடக்கக் காலத்தில் மிகத் தீவிரமான ரசாயன விவசாயியாக இருந்தவர். பின்னர்த் தனக்கு ஏற்பட்ட புரிதலால் இயற்கைவழி வேளாண்மைக்கு மாறியவர். சத்தியமங்கலம் சுந்தரராமனின் வழிகாட்டுதலில் ஒரு வெற்றிகரமான இயற்கை வேளாண் பண்ணையாளராக இப்போது மாறியுள்ளார்.

மரப்பயிர் எளிது

இவர் குடும்பத்துடன் நிலத்தில் நேரடியாகப் பாடுபடும் ஓர் உழவர். கரைசல் தயாரிப்பது முதல் களை எடுப்பதுவரை களத்தில் நேரடியாக இறங்கிச் செய்பவர்.

முதலில் தென்னையில்தான் தனது முயற்சியைத் தொடங்கினார். தென்னைச் சாகுபடி இயற்கை வேளாண்மைக்கு ஏற்றது. பொதுவாக மரப்பயிரை இயற்கையாகச் சாகுபடி செய்வது எளிது.

அந்த அடிப்படையில் முதலில் தென்னைக்கு ரசாயன உரங்களைக் கொடுப்பதை மனோகரன் நிறுத்தினார். இதனால் ஏற்படும் சத்துக் குறைபாட்டைப் போக்க, சாணத்தையும் மாட்டு மோள் (கோமயம்) இரண்டையும் சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டார்.

ஒன்றும் செய்யா வேளாண்மை

முதலில் அவர் தயாரித்தது அமுதக் கரைசல் என்ற சாண உரக் கரைசல். சாணம், மாட்டு மோள், சர்க்கரை ஆகிய மூன்றையும், 10:10:1 என்ற விகித அடிப்படையில் கலந்து ஒரு நாள் நன்கு நொதிக்கவிட்டுப் பின்னர்ப் பாசன நீரில் கலந்து கொடுத்தபோது, நல்ல பலன் கிடைத்தது. அதன் பின்னர்க் களைகள் தென்னைக்குள் வளர்ந்தபோது, அவற்றை அகற்றவில்லை. களைகளை அப்படியே மடக்கி உழுது, நிலத்துக்கே கொடுத்தார். பொதுவாக விவசாயிகள் களைகளை அகற்றி வெளியே போட்டுவிடுவார்கள். ஆனால், களைகள் நிலத்தை நன்கு வளப்படுத்தும் காரணிகள் என்பதை மனோகரன் புரிந்துகொண்டார்.

அத்துடன் மரத்தில் இருந்து விழும் தென்னை மட்டைகள் மற்றக் கழிவுகளையும் தென்னந் தோப்புக்குள்ளேயே போட்டு மண்ணில் உயிர்மக் கரிமத்தை (organic carbon) அதிகப்படுத்தும் வேலையைச் செய்துகொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் தென்னைக்கு ஏதும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொண்டார். நிலம் மெல்ல மெல்ல பஞ்சுபோல மாறிவரத் தொடங்கியது. நீர் பாய்ச்சும் அளவும் குறைந்தது. ஆக, தென்னைச் சாகுபடியை ஒன்றும் செய்யாமல் தேங்காய் பெறும் நுட்பமாக மாற்றிக்கொண்டுள்ளார்.

மழை தரும் விளைச்சல்

தென்னை விளைச்சலுக்கும் மழைக்கும் அடிப்படையான தொடர்பு உள்ளது என்பது, இவரது ஆழமான அனுபவப் படிப்பினை. நல்ல மழை கிடைக்கும் ஆண்டுகளில், தென்னை விளைச்சல் சிறப்பாக உள்ளது. அதேநேரம் மழை குறையும் ஆண்டுகளில் தென்னை விளைச்சல் குறைவாக இருக்கும். அந்தக் காலத்தில் எவ்வளவு ஊட்டம் கொடுத்தாலும், விளைச்சல் குறைவாகத்தான் இருக்கும். இதைப் புரிந்துகொண்டால் எந்தச் சிக்கலும் இல்லை என்று விளக்குகிறார்.

அதிக அளவாக ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 130 காய்களும், குறைந்த அளவாக 80 காய்கள்வரையும் மனோகர் எடுக்கிறார். தென்னைக்கு என்று எந்தச் செலவும் செய்வதில்லை. மண் நன்கு வளப்பட்டுவிட்டது. இப்போது கரைசல்களும் கொடுப்பதில்லை. களைகளை மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது தேவைக்கு ஏற்ப இருமுறை மடக்கிக் கொடுக்கிறார். நீர் பாசனம் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

யாருக்கு நன்மை?

களைகளை மற்றொரு முறையில் கட்டுப்படுத்துகிறார். அதற்குத் தன்னிடம் உள்ள மாடுகளைத் தென்னந்தோப்பில் கட்டுகிறார், இவை போதுமான களைகளைத் தின்றுவிடுகின்றன. எனவே கால்நடைத் தீவனமாகக் களைகள் பயன்படுவதையும் விளக்குகிறார். இப்படியாகத் தென்னையில் ஒன்றும் செய்யாத (Do nothing) வேளாண்மைக்கு தான் மாறிவிட்டதாக மனோகரன் தெரிவிக்கிறார். இந்த முறையை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம்.

தற்போது ஆதிக்கம் செலுத்தும் சூதாட்டச் சந்தையுடன் போட்டி போடுவது, அதற்காகத் தேவையற்ற ரசாயனங்களை வாங்கிக் கொட்டுவது முட்டாள்தனம் என்பது இவரது கருத்து. இப்படி இடுபொருள்களைக் கூட்டிக்கொண்டே போவதால் உர வியாபாரிகளுக்கு மட்டுமே நன்மையன்றி, உழவர்களுக்கு அல்ல” என்னும் இவர், “தான் இயற்கை வேளாண்மைக்குள் வந்த பின்னர், மருத்துவமனைக்கே சென்றதில்லை” என்கிறார்.

(அடுத்த வாரம்: நெல்லுக்குத் தெளிப்புக் கரைசல் - தேவை கூடுதல் கவனம்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

மனோகரன் தொடர்புக்கு: 90038 21430

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-37-ஒன்றும்-செய்யா-தென்னை-வேளாண்மை/article8800592.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முன்னத்தி ஏர் 38: நெல்லுக்குத் தெளிப்புக் கரைசல்- தேவை கூடுதல் கவனம்

uzhavan_2926281f.jpg
 

ஜோத்தம்பட்டி மனோகரனிடம் மாடுகள், கோழிகள், வாத்து, வான்கோழி போன்ற கால்நடைகள் உள்ளன. கோழிகள் இவரது வீட்டின் புரதத் தேவையைப் பெருமளவு நிறைவு செய்துவிடுகின்றன. இதன் மூலம் முட்டைகள், இறைச்சிக்கான பெருமளவு செலவு தடுக்கப்படுகிறது. இதற்கென்று தனியாகக் கணக்குப்போட்டுப் பார்த்தால் பெரிய தொகை வரும். நகரவாசிகள் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் அவர்களுக்குக் கட்டுப்படியாகாமல் போக, இப்படிப்பட்ட செலவுகளே காரணமாகின்றன. எளிமையான, இன்பமான வாழ்க்கையை இப்படிச் சிக்கலான, துன்பமான வாழ்க்கையாக மாற்றிக்கொண்டது நாம்தான்” என்கிறார் மனோகரன்.

நச்சு வளையம்

அடுத்ததாக இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்து, அதை நேரடியாகச் சந்தைப்படுத்தவும் செய்கிறார். ஐந்து ஏக்கர் பரப்பில், நெல் சாகுபடி செய்கிறார். ரசாயன வேளாண்மை செய்த காலத்தில் ஏக்கருக்கு ஏறத்தாழ முப்பதாயிரம் ரூபாய்வரை பணமாகச் செலவு இருந்தது. இப்போது பதினெட்டாயிரம் ரூபாயாக அது குறைந்திருக்கிறது. அதாவது குடும்பத்தாருடன் இவர் செய்யும் வேலைகள் மூலம் பெருமளவு செலவு குறைந்துள்ளது. முன்பு எல்லா இடுபொருள்களையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது. அதற்குத் தேவையான பணத்துக்குக் கடன் வாங்க வேண்டியதாயிற்று, கடனை அடைக்கச் சந்தையில் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டியதாயிற்று. இப்படியான ஒரு நச்சு வளையத்துக்குள் உழவர்கள் தேவையின்றி மாட்டிக்கொள்ள வேண்டியுள்ளது.

தெளிப்புக் கரைசல்கள்

இப்போது பெருமளவு சொந்த உழைப்பாலேயே இடுபொருட்கள் தயாரிக்கப்படுவதால், பணம் தேவைப்படுவதில்லை. மற்றக் குடும்பத் தேவைகளுக்குத்தான் பணம் தேவைப்படுகிறது. இப்படியாக, உழவர்கள் தாக்குப்பிடிக்கும் நிலையை எட்டிவிட முடியும். இவர் நீண்ட நாட்களாக இயற்கைமுறை நெல் சாகுபடி செய்துவருவதால் பெரிய சிரமம் இல்லாமல் விளைச்சலை எடுக்கிறார்.

முதலில் பல பயிர் விதைத்து அறுபது நாள் வளர்த்து, அதை மடக்கி உழவு செய்துகொள்ள வேண்டும். அதற்குத் தோதாக நாற்றங்காலைத் தயார்செய்துகொள்ள வேண்டும். ஒற்றை நெல் சாகுபடியும் செய்யலாம், சூழலுக்கு ஏற்ப அடர் நடவும் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு முறை பாசனத்தின் போதும், அமுதக் கரைசல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இவரிடம் தெளிப்புக் கரைசல்கள் எப்போதும் தயாராக இருக்கும். குறிப்பாகப் பஞ்சகவ்யம், திறமி, மீன்பாகு போன்றவற்றை வைத்திருப்பார். தன்னுடைய அனுபவ அடிப்படையில் நெல்லின் வளர்ச்சி முறையைப் பார்த்துத் திறமிக் கரைசல் அல்லது மீன்பாகு அல்லது பஞ்சகவ்யம் போன்றவற்றைத் தேவைக்கு ஏற்பத் தெளிப்பு செய்கிறார்.

முதலில் நெல் சாகுபடிக்கு வருபவர்கள் மேலே சொன்ன கரைசல்களை வாரம் ஒருமுறை மாற்றி மாற்றி தெளிப்பு செய்தால், சிறப்பாக இருக்கும் என்பது இவரது கருத்து. அதேநேரம், பஞ்சகவ்யம் போன்ற மாட்டுச் சிறுநீரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கரைசல்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், நெல் மணிகள் பெருத்து, சன்ன ரக அரிசியானது பெருவெட்டு அரிசியாக மாறிவிடும்.

விநோத அரிசி விலை

இவர் நெல்லை அறுவடை செய்து குறிப்பிட்ட காலம் வைத்திருந்து அரிசியாக்குகிறார். அப்போதுதான் அரிசி சுவையாக இருக்கும். அடுத்ததாக அரிசிக்கு இவர் விலை நிர்ணயிக்கும் முறை வியப்பானது. செலவுகளின் அடிப்படையில் விலையை உறுதிசெய்கிறார். உழுவது முதல் இடுபொருள்வரை சாகுபடிச் செலவுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார், இத்துடன் மாதத்துக்கு ஒரு விழுக்காடு (ஆண்டுக்கு 12%) என்று வட்டியைச் சேர்த்துக்கொள்கிறார். அத்துடன் தனக்கும் தனது மனைவிக்கும் இரண்டு ஆள் சம்பளமாக ஐந்து மாதங்கள் சேர்த்துக்கொள்கிறார். தன்னுடன் உழைக்கும் சக தொழிலாளி சம்பளத்தையே தனது சம்பளமாக எடுத்துக்கொள்கிறார்.

அத்துடன் அரிசியாக மாற்றுவதற்குரிய ஆலைக் கட்டணம், போக்குவரத்துச் செலவு ஆகியவற்றைச் சேர்த்து, அதிலிருந்து ஒரு கிலோ அரிசிக்கான விலையை உறுதி செய்கிறார். பல நேரம் இவரது அரிசி விலை சந்தையைவிட குறைவாகவும் இருக்கும். சில நேரங்களில் கூடுதலாகவும் இருக்கும்.

உழவர் கூட்டமைப்பு

உழவர்கள் குறிப்பாகக் கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில், எந்தப் பகுதிக்கு எந்த நிலத்துக்கு எந்த வகையான நெல் நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்பதைக் கண்டறிந்து சாகுபடி செய்தால், பெரும்பாலும் சிக்கல் வருவதே இல்லை. புதிய நெல் வகையைச் சாகுபடி செய்யும்போது பல தொல்லைகள் வருகின்றன என்கிறார் மனோகரன்.

இவருடன் சேர்ந்து சில உழவர்கள் கூட்டாக ‘அமராவதி உழவர் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி விளைச்சலைச் சந்தைப்படுத்துகின்றனர். இதன்மூலம் சந்தை தாக்குதலிலிருந்து இவர்கள் ஓரளவு தப்பித்துவருகின்றனர். அத்துடன், இப்பகுதியைச் சேர்ந்த பல உழவர்களுக்குப் பயிற்சியும் ஆலோசனையும் வழங்கிவருகிறார் முன்னத்தி ஏரான மனோகரன்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com மனோகரன் தொடர்புக்கு: 90038 21430

(அடுத்த வாரம்: மண்ணை வளமாக்கும் மந்திரம்)

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-38-நெல்லுக்குத்-தெளிப்புக்-கரைசல்-தேவை-கூடுதல்-கவனம்/article8828312.ece?ref=relatedNews

முன்னத்தி ஏர் 39: மண்ணை வளமாக்கும் மந்திரம்

munnathi_ear_2934853f.jpg
 

சுட்டெரிக்கும் வெயில், மிகக் குறைவான மழை. மதுரை மாவட்டத்தின் தெற்குப் பகுதி மழை மறைவுப் பகுதி. இந்தப் பகுதியில் பெரும் துணிச்சலுடன் இயற்கை வேளாண்மையில் போராடி வருபவர், லட்சுமணன். இயற்கையின் எல்லாக் கூறுகளும் இங்குள்ள உழவர்களுக்குப் பாதகமாகவே உள்ளன.

அதிலும் குறிப்பாக இவர் தேர்வு செய்துள்ள நிலம் மிகவும் களர்தன்மை கொண்டது. களராகிப்போன பொட்டல் நிலத்தை, வளமான விளைச்சல் மண்ணாக மாற்றுவது மிகவும் கடினம். ஆனால், அந்தச் சாதனையை ஓசையின்றிச் செய்திருக்கிறார் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள புதுப்பட்டி லட்சுமணன்.

களர்நிலத்தில் உழவு

முற்றிலும் வளமிழந்துபோன நிலத்தை, போராடி இவர் மீட்டுள்ளார். வளமிழந்த மண்ணை மீட்க முயலும் பலருக்கும் இவரது பண்ணை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

நிலத்தில் தாவரக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் தொடர்ச்சியாக இவர் சேர்த்துக்கொண்டே வந்தார். அதாவது சாணம், மாட்டுமோள் (கோமயம்), தழை, குலைகள், அறுவடைக் கழிவுகள், தென்னை நார்க் கழிவு, பஞ்சாலைக் கழிவுகள், உமிச் சாம்பல் போன்றவற்றை இட்டார்.

இவரது தொடர் முயற்சியின் விளைவாக மண் மாறியது. முன்னர் இவருடைய நிலத்தில் டிராக்டரைக் கொண்டு உழுவதுகூடக் கடினமாக இருந்தது. இன்று மண் பொலபொலவென மாறியுள்ளது. மண்ணில் மட்கின் அளவும் அதிகமாகியிருக்கிறது. அதனால் நிலத்தில் நடக்கும்போதே மண், பஞ்சுபோல இருப்பதை உணர முடிகிறது.

உயிர் தரும் கழிவு

பொதுவாக மண்ணில் உயிர்மக் கரிமம் (organic carbon) அதிகமாகும் போதுதான், மண் வளம் அதிகரிக்கும். வேதி உப்பு உரங்களைத் தொடர்ந்து நிலத்தில் கொட்டும்போது, மண்ணில் உள்ள உயிர்மக் கரிமம் குறைந்துகொண்டே வரும். அதனால் மண்ணில் நீர்ப்பிடிப்புத் தன்மை குறைந்து, நீர் தேங்கத் தொடங்கும். நீர் தேங்குவதன் மூலம் மண்ணில் உப்பின் அளவு அதிகரிக்கும். உப்பைச் சரிசெய்து பயிரை வளர்க்க மேலும் வேதி உரங்களை இட வேண்டும். மீண்டும் உப்பு கூடிக்கொண்டே போகும். இது ஒரு வகை நச்சு வளையம். இதிலிருந்து விடுபடுவது கடினம். விடுபட வேண்டுமானால், வேதி உரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். படிப்படியாகக் குறைக்கலாம் என்று நினைப்பது, நடைமுறைக்கு சரியாக வராது.

மண்ணில் சேர்க்கப்படும் தாவரக் கழிவுகளால் மண்ணில் நுண்ணுயிர் செயல்பாடு அதிகரிக்கும். நுண்ணுயிர் பெருகுவதால் மண்ணின் கெட்டித்தன்மை குறைந்து, பொலபொலவென மாறும். ஏனென்றால் மண்ணில் உள்ள உயிர்கள் மண்ணைத் துளைத்துக்கொண்டே இருக்கும். ஆக, எந்த வகையில் மண்ணை வளப்படுத்த வேண்டுமானாலும், நிலத்தில் கழிவுகளைச் சேர்ப்பதுதான் தீர்வு.

நீர் தேங்கினால் ஆபத்து

இத்துடன் லட்சுமணன் மேற்கொண்டுள்ள மற்றொரு முக்கியமான செயல்பாடு, நிலத்தில் உரிய இடத்தில் அமைத்துள்ள வரப்புகளும் வாய்க்கால் வடிகால் அமைப்பும்.

பொதுவாக வாய்க்கால், வடிகால் இல்லாத நிலத்தில் சிக்கல் அதிகமாகிவிடும். பெரும்பாலான உழவர்கள் வாய்க்கால் அமைப்பதோடு நிறுத்தி கொள்வார்கள். பலரும் முறையான வடிகால்களை அமைப்பதில்லை. அதனால் நிலத்தில் மழைநீர் தேங்குவதற்கான சாத்தியம் அதிகரிக்கும். நீர் தேங்கும்போது முன்னர்க் கூறியபடியே உப்பின் அளவும் அதிகமாகும். தேவைக்கு அதிகமாக நீரைத் தேங்க வைக்கக் கூடாது, நிலத்துக்குள் அனுப்ப வேண்டும். அல்லது பண்ணைக் குட்டைகளில் தேக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

களர் நிலத்தில் நீர் தேங்கினால் சிக்கல் மேலும் அதிகரிக்கும். அதைச் சரிசெய்ய இயற்கையானது, களைத் தாவரங்களை உருவாக்கும். அங்குப் பறவைகள் மர விதைகளைக் கொண்டுசேர்க்கும். அதன் பின்னர்க் காடு உருவாகும். இதற்கான கால அளவு அதிகமாகும். இயற்கையின் இந்த ரகசியத்தை அறிந்துகொண்டு, அதை விரைவுபடுத்தும் செயலை நாம் செய்ய வேண்டும்.

மண்ணே முதன்மை வளம்

வடிகால்களும் முறையான வரப்புகளும் அமைக்காவிட்டால் மண் அரிப்பும் ஏற்படும். வளமான மேல்மண் அடித்துச் செல்லப்பட்டால், நமது வளம் முற்றிலும் குறைந்துவிடும். எனவே, வளமான மேல்மண்ணைப் பாதுகாக்கும் வேலை பண்ணையத்தில் மிக முதன்மையானது. நல்ல மேல் மண் இயற்கையாக உருவாக நான்கு லட்சம் ஆண்டுகள்கூட ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லட்சுமணனின் நிலத்தில் மண்ணின் தன்மை மெல்ல மெல்ல மாறி, இப்போது நீரை நன்கு பிடித்து வைக்கும் தன்மை கொண்டதாக, பஞ்சுபோல நிலம் மாறியுள்ளது. எங்கெல்லாம் கழிவை அவர் சேர்க்கவில்லையோ, அந்த இடங்கள் இன்னும் கடினமாகவே உள்ளன என்பது அவருடைய நுட்பத்தைத் தெளிவாகவே உணர்த்துகிறது.

(அடுத்த வாரம்: கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

__________2934854a.jpg

லட்சுமணன் தொடர்புக்கு: 98421 94848

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-39-மண்ணை-வளமாக்கும்-மந்திரம்/article8859021.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முன்னத்தி ஏர் 40: கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது

pannai_2943662f.jpg
 

இயற்கைவழி வேளாண்மை தொடர்பான எந்த ஒரு புது நுட்பத்தையும் குழந்தைபோலக் கேட்டுக்கொண்டு, அதை உடனே செய்து பார்த்துச் சொல்லிவிடும் தன்மை மதுரை மாவட்டம் புதுப்பட்டி லட்சுமணனுக்கு உண்டு. இவரது பண்ணையில் உள்ள பீப்பாய்களில் இயற்கை வேளாண்மைக்கான இடுபொருள் கரைசல்கள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

இவர் மேட்டுப் பாத்தி முறையில் காய்கறி சாகுபடியும் மலர் சாகுபடியும் செய்துள்ளார். இவரது விளைச்சலை மயில்கள் முற்றிலும் அறுவடை செய்துவிடுகின்றன! இதனால் இவருக்குப் பெருத்த பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

தூய்மையான தொழுவம்

இதுதவிர ஆடு, மாடு, கோழி எனக் கால்நடைகளையும் வளர்த்துவருகிறார். மாடுகளில் திமில் உள்ள வெப்பமண்டல மாடுகளை (நாட்டு மாடுகள்) வைத்துள்ளார். சண்டிகர், சாகிவால் போன்ற இன மாடுகளும் இவரிடம் உள்ளன. அதற்காகச் சிறப்பான கொட்டகை அமைப்பை உருவாக்கியுள்ளார். மாடு கட்டும் இடம் மிகவும் தூய்மையாக உள்ளது. மற்ற பண்ணையாளர்கள் இவரிடமிருந்து இதைக் கற்றுக்கொள்ள வேண்டிய அளவுக்கு இது சிறப்பாக உள்ளது.

கால்நடைகளுக்கான தீவனத்தைப் பெரும்பாலும் வெட்டியே கொடுக்கிறார். இதனால் தீவனம் வீணாவது குறையும் என்கிறார். ஆனால் இதற்குச் செலவு சற்று அதிகம். வெட்டிக் கொடுப்பதா, வேண்டாமா என்பதை அவரவரே முடிவு செய்ய வேண்டும்.

பால் குடித்து வளரும் கன்றுகள்

முதலில் நண்பர்கள், உறவினர்களுக்குப் பாலை விற்றுவந்தார். ஆனால், அது அவருக்குப் பெரும் வேலைப்பளுவாக மாறிய காரணத்தால், இப்போது பால் விற்பனையை நிறுத்திவிட்டார். வீட்டுத் தேவைக்குப் போக உள்ள பாலையும் கன்றுகள் குடிப்பதற்கு விட்டுவிடுகிறார். இதனால் கன்றுகள் திடமாக வளர்ந்துள்ளன. அவை மிக விரைவாகப் பெரிதாகிவிடுகின்றன. இதனால் கன்றுக்கு விலை அதிகமாகக் கிடைக்கிறது. அது பால் விலையைவிட நிச்சயம் அதிகமாகவே இருக்கும் என்பது இவருடைய கருத்து.

ஆடுகளைப் பொறுத்தவரையில் பரண் முறையில் ஆடுகள் வளர்க்கிறார். ஆடுகளை வெளியே மேய்ச்சலுக்கு அனுப்புவதில்லை. வேண்டிய தீவனங்களை ஆடுகளுக்கு வெட்டிப்போடுகிறார். ஆடுகளுக்கான தீவன மரங்களையும் போதிய அளவு புல்லையும் வளர்த்துள்ளார். சுபாபுல், அகத்தி, வேம்பு, பூவரசைப் போன்று அதிகம் தழை தரும் மரங்களை வளர்த்துள்ளார். எந்த இடத்தையும் வீணாக்காமல் பசுந்தாள்களை வளர்த்துள்ளார்.

கோழிகளுக்குத் தனியறை

ஆடுகளைப் பொறுத்தவரையில் தலைச்சேரி ஆடுகளோடு, எட்டையபுரம் போன்ற உள்ளூர் வகை ஆடுகளையும் வைத்துள்ளார். இவற்றைக் கவனித்துக்கொள்வதற்கு வசதியாக, மருத்துவர் ஒருவரை ஆலோசனைக்கும் உதவிக்கும் வைத்துள்ளார். தேவையான நேரத்தில் அவருடைய உதவியைப் பெற்றுக்கொள்கிறார்.

இவரது கோழி வளர்ப்பு முறையும் மிகவும் கச்சிதமாக உள்ளது. கோழிகளுக்கான சிறிய சிறிய அறைகள், முட்டை இடுவதற்குத் தனியாக, குஞ்சுகள் வளர்வதற்குத் தனியாக, பெரிய கோழிகள் அடைவதற்குத் தனியாக என்று எல்லாம் தனித்தனியாக அமைந்துள்ளன. இதனால் கோழிகள் சண்டையிடுவது தவிர்க்கப்படுகிறது.

அவை திறந்த வெளியில் திரிகின்றன. அருகம் புல்லை நிறைய தின்கின்றன. இதனால் நல்ல உடல்திறத்துடன் உள்ளன. பெயருக்குச் சிறிதளவு தீவனமும் கொடுக்கிறார். பிற பறவைகளிடமிருந்து குஞ்சுகளைக் காப்பாற்ற நூலைக் கொண்டு வலைபோன்று கட்டி வைத்துள்ளார். ஆனாலும் அவ்வப்போது இழப்பு ஏற்படவே செய்கிறது. இவர் வளர்ப்பது முற்றிலும் உள்ளூர் இனக் கோழிகள்; இவற்றின் மூக்கு வெட்டப்படுவதில்லை.

திட்டமிட்ட வடிவமைப்பு

இதுதவிர, இயற்கை வேளாண்மை இடுபொருட்களையும் இவர் தயாரித்துக் கொடுக்கிறார். குறிப்பாகப் பஞ்சகவ்யம் எனப்படும் ஆவூட்டம் இவரது சிறப்புத் தயாரிப்பு. இவருடைய பண்ணை மிகவும் தூய்மையாக இருப்பதால், தீமை செய்யும் பாக்டீரியா தொல்லை எதுவும் இல்லை. கேட்பவர்களுக்கு அமுதக்கரைசல் போன்ற இயற்கை ஊட்டப் பொருட்களையும் தயாரித்துக் கொடுக்கிறார். சாண எரிவாயுக் கலன் அமைத்து, அதிலிருந்து வரும் சாணச் சேற்றை எடுத்து மட்கும் உரம் தயாரிக்கிறார். மட்கு உரம் இயற்கை வேளாண்மையின் முக்கியப் பொருள் என்பது இவருடைய நம்பிக்கை.

pannai_2943662a.jpg

இவரது பண்ணையின் வடிவமைப்பு, மற்றவர்கள் பின்பற்றும் அளவுக்கு முன்னுதாரணமாக உள்ளது. எந்த இடத்தில் எதை வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வைத்துள்ளார். தீவனங்களை அதிக உழைப்பின்றி அருகிலேயே வளர்க்க வேண்டும் என்ற தாளாண்மை பண்ணையத்தின் விதிமுறைகளைச் சரியாகக் கையாண்டுவருகிறார். தன்னால் இயன்ற அளவுக்கு மற்றவர்களுக்குக் கற்றும் தருகிறார்.

“நான் ஒன்றும் பெரிதாகச் சாதித்து விடவில்லை…” என்று அடக்கமாகக் கூறும் புதுப்பட்டி லட்சுமணனிடம், உழவர்கள் மட்டுமல்ல அரசும்கூட மண்ணை மாற்றும் உத்திகளைக் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

(அடுத்த வாரம்: அடுக்குமுறை வேளாண் பண்ணை)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் தொடர்புக்கு: adisilmail@gmail.com

லட்சுமணன் தொடர்புக்கு: 98421 94848

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-40-கற்றுக்கொள்ள-நிறைய-இருக்கிறது/article8889969.ece?ref=relatedNews

முன்னத்தி ஏர் 41: ஒன்றின் கழிவு, மற்றொன்றின் உணவு

pasu_2952540f.jpg
 

பொங்கிப் பெருகும் நீரோடைகள், வழிந்தோடும் வாய்க்கால்கள் என்று நீர்வளம் மிகுந்த பகுதியாகக் கரூர் விளங்குவதற்குக் காரணம் காவிரியின் கொடை. அந்த நீர் குடிப்பதற்குப் பயனற்றுப்போனதற்குக் காரணம் தொழிற்புரட்சி தந்த கொடை. நிலவளமும் நீர்வளமும் மிகுந்த பகுதியான கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகில் உள்ள சிற்றூர் நடையனூர். அழகிய இந்த ஊர், சாயத் தொழிற்சாலைகளாலும் காகித ஆலைக் கழிவுகளாலும் மாசுபட்டுக் காணப்படுகிறது. நீர்வளம் கெட்டதுடன் நிலவளமும் குறைந்துவருகிறது. கூடுதலாக வேதி உரங்களும், வேதிப்பூச்சிக்கொல்லிகளும் மிக வேகமாக நிலத்தடி நீரைக் கெடுத்துவருகின்றன. பொதுவாக நீர்வளம் மிக்க பகுதிகளில் பயன்படுத்தப்படும் வேதி உரங்கள் நிலத்தடி நீரில் ஊடுருவி மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்தப் பகுதியில் ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை உருவாக்கி மற்றவர்களுக்கு வழிகாட்டி வருபவர்கள் நடையனூர் மதியழகன், செங்குட்டுவன் இணையர். இவர்கள் இருவரும் உடன்பிறப்புகள் என்பதுடன் கூட்டுக் குடும்பமாகவும் வாழ்கின்றனர்.

இவர்களது பண்ணை சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அடுக்குமுறை வேளாண் பண்ணை வளர்ந்துள்ளது. ஓரடுக்குத் தென்னை, அடுத்தது தேக்கு, அடுத்து வாழை, அடுத்து கோகோ, அடுத்துக் காய்கறிகள், மூலிகைகள், அடுத்துக் கிழங்குகள் என்று பல அடுக்குகளாகப் பண்ணை உருவாகியுள்ளது. இது தவிரக் கோழி, மாடு, மீன் என்று கால்நடைகளையும் பண்ணையில் இணைத்துள்ளனர்.

எது கழிவு? எது உணவு?

தாளாண்மை பண்ணையத்தின் அடிப்படை விதியான ‘ஒன்றன் கழிவு ஒன்றன் உணவு' என்ற அடிப்படையில் இப்பண்ணையில் பெரும்பாலான கழிவுகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. குறிப்பாகக் கோழிகளின் கழிவு, மண்புழு உரமாக மாற்றப்படுகிறது. அத்துடன் அது பூப்புழுக்களாகவும் (maggot) மாற்றப்படுகிறது. இந்தப் புழுக்கள் மீன்களுக்கு உணவாக மாற்றப்படுகின்றன. மீன்கள் வளரும் நீரில் அமினோஅமிலங்கள் அதிகமாக இருக்கும். அந்த நீர் பயிர்களுக்கு மிகவும் சிறந்தது. அதன் காரணமாக, மீன் தொட்டியில் உள்ள நீரைப் பயிர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

இந்தச் சத்து நீரை எடுத்துக்கொண்டு மரங்களும் பயிர்களும் செழித்து வளர்கின்றன. முதலில் உழவு செய்து மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. இப்போது, உழவில்லா வேளாண்மைக்குப் பண்ணை மாறிவிட்டது.

உழவில்லா வேளாண்மை

தென்னையிலிருந்து விழும் தேங்காய்களை மட்டும் பொறுக்கி எடுத்துக்கொள்கின்றனர். மீன் தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு வளரும் தீவனப் பயிர்கள், மாடுகளுக்கு உணவாகின்றன. மாட்டுச் சாணம் பல இயற்கை வேளாண் இடுபொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அமுதக் கரைசலும் ஆவூட்டமும் (பஞ்சகவ்யம்) தயாராகின்றன.

இவர் தயாரிக்கும் ஆவூட்டம், கோழிகளின் உணவிலும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளின் செரிமானச் சக்தி அதிகரிப்பதுடன் முட்டையின் தரமும் சிறப்பாக உள்ளது என்கிறார் மதியழகன். பல இடங்களில் பண்ணைக் குட்டைகளை அமைத்து நீர்சேகரிப்பு பின்பற்றப்படுகிறது. இப்பகுதி நீர்வளம் மிக்கதாக இருந்தபோதும், நீர் சேகரிப்பில் இவர்கள் கூடுதல் அக்கறை செலுத்துகிறார்கள்.

இப்படித் தாம் பெற்ற அறிவைத் தங்களது சுற்றத்துக்கும் நட்பு வட்டத்துக்கும் எந்தவிதத் தடையும் இன்றி இவர்கள் வழங்கி வருகிறார்கள். இங்குள்ள உழவர்களை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்பை மதியழகன் நடத்திவருகிறார். இதில் இயற்கைவழி உழவர்களும் உள்ளனர். ரசாயனச் சாகுபடி உழவர்களும் உள்ளனர். அவர்களிடம் இயற்கைவழிக்கு மாறும்படி மதியழகன் தொடர்ந்து பேசிவருகிறார். இந்த அமைப்பு உழவர்களுக்கான இடுபொருள்களை மலிவு விலையில் கொடுக்கிறது. அத்துடன் நல்லெண்ணெய் போன்ற பொருட்களைத் தயாரித்து இவர்கள் விற்பனை செய்தும் வருகின்றனர். கரூர் பகுதியில் முன்னத்தி ஏராக மதியழகனும் செங்குட்டுவனும் திகழ்கிறார்கள்.

mathi_2952517a.png

மதியழகன், செங்குட்டுவன்

(அடுத்த வாரம்: கோழிகளுக்கும் கொடுக்கலாம் பஞ்சகவ்யம்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

மதியழகன்- செங்குட்டுவனைத் தொடர்புகொள்ள: 9442577431

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-41-ஒன்றின்-கழிவு-மற்றொன்றின்-உணவு/article8921077.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முன்னத்தி ஏர் 42: கோழிகளுக்கும் கொடுக்கலாம் பஞ்சகவ்யம்

hen1_2961525f.jpg
 

இணையரின் முதன்மைத் தொழில் முட்டைக்கோழி வளர்ப்பு. முட்டைக்கோழி வளர்ப்பில் அடிப்படையானது அதன் தீவனம். பெரும் பகுதி செலவு, தீவனத்துக்கே சென்றுவிடும். எனவே, எவ்வளவுக்கு எவ்வளவு தீவனச் செலவைக் குறைத்து மாற்று உணவைக் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு ஒருவருக்கு லாபம் கிடைக்கும். அடுத்த சிக்கல் நோய். பெரிய அளவிலான பண்ணைக் கோழிகள் எதிர்கொள்ளும் நோய்களால் இறப்பு சதவீதம் மிக அதிகமாக இருக்கும். இதனால் பண்ணை பெரிய அழிவை நோக்கிச் சென்றுவிடும். எனவே, உணவிலும் நோயிலும் கோழிப் பண்ணையாளர் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

இதிலும் நாம் கவனிக்க வேண்டிய செய்தி, உணவு தவறானால் நோய் வரும், உணவு சரியாக இருந்தால் அதுவே மருந்தாக மாறும். இந்த நுட்பத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டாக வேண்டும். பொதுவாக வெளியிலிருந்து வாங்கும் வேதிப்பொருட்களால் செறிவூட்டப்பட்ட உணவு, கோழிகளின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைந்து இறப்பு எண்ணிக்கையை அதிகமாக்கிவிடும். எனவே, நோய் எதிர்ப்பு கொண்ட உணவைக் கொடுக்கும்போது கோழிகள் நல்ல உடல்நலத்துடனும், திடமாகவும் காணப்படும். நோய் தாக்குதல் குறைவாகவும் இருக்கும்.

ஊட்டமான கோழிகள் ஊட்டமான முட்டை

மதியழகன், தனது கோழிப் பண்ணைக்கான தீவனத்தை அவரே தயாரித்துக்கொள்கிறார். அதற்கென்று தனியாக ஒரு அரரை எந்திரத்தை அமைத்துள்ளார். அவரே நேரடியாகக் கொள்முதல் செய்யும் தானியங்களுடன், பலவிதமான மூலிகைகளை அந்த எந்திரத்தில் சேர்த்து அரைக்கிறார். அந்த உணவே கோழிகளுக்குக் கொடுக்கப் படுகிறது. அத்துடன் மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், சிறுநீர், பால், தயிர், நெய் ஆகியவற்றுடன் சர்க்கரை, இளநீர் போன்ற இனிப்புகளைச் சேர்த்து நொதிப்புச் சாற்றை (பஞ்சகவ்யம்) தயாரித்துக்கொள்கிறார். அந்தச் சாறு கோழிகளின் செரிமான ஆற்றலைக் கூட்டி, அதிக அளவு தீவனத்தை உட்கொள்ள உதவுகிறது.

fish1_2961527a.png

இவரது பண்ணையில் கோழிகளின் தீவனச் செரிமாற்ற விழுக்காடு (feed conversion ratio) அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார். அதாவது கொடுக்கப்படும் தீவனம் எந்த அளவுக்கு முட்டையாக அல்லது கறியாகக் கோழியால் மாற்றப்படுகிறதோ, அந்த அளவுக்குப் பயன் கிடைக்கும். இந்த அளவை, நொதிப்புச் சாறு அதிகரிப்பது எப்படி என்பதை அவர் விளக்குகிறார். இவரது முட்டை தரமாக இருப்பதால் சந்தையில் நல்ல விலைக்குப் போகிறது.

final_2961522a.png

மதியழகன், செங்குட்டுவன்

உண்மையான மதிப்புக்கூட்டல் எது?

கோழிகளின் கழிவை, அதாவது சாணத்தைக் கொண்டு புழுக்களை உருவாக்குகிறார். கழிவை மிக விரைவாகப் புரதமாக மாற்றும் இயற்கை ஆற்றல் புழுக்களிடமே உள்ளது. அதாவது, பூச்சியினத்தைச் சேர்ந்த ஈக்கள் தங்களுடைய முட்டைகளைச் சாணம் போன்ற கழிவுகளில் இடுகின்றன. இந்தக் கழிவுகளை உண்ணக்கூடிய புரதமாக மாற்றும் திறன் புழுக்களுக்கே உள்ளது. குறிப்பாக, ஈக்களின் புழுக்கள் கோடிக்கணக்கில் பல்கிப் பெருகிக் கழிவைத் தின்று தீர்க்கின்றன.

இந்தப் புழுக்கள் அடுத்த கட்டமாக வேறு உயிரினத்துக்கு உணவாக மாற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் அது மேலும் மதிப்பு கூட்டப்படும். இதுவே உண்மையான மதிப்புக் கூட்டல். அவ்வாறு புழுக்கள் மீன்களுக்கோ கோழிகளுக்கோ அல்லது புழு உண்ணும் வேறொரு உயிரினத்துக்குக் கொடுக்கப்பட்டால், அதை மனிதர்களோ மற்ற உயிரினமோ அடுத்த கட்டத்தில் உண்ண முடியும். எடுத்துக்காட்டாகச் சாணக்கழிவு புழுக்களாக மாறிய பின்னர், அவை மீன்களின் உணவாகும், பின்னர் மீன்கள் மனிதர்களின் உணவாகும்.

இந்த மாதிரியான அடுக்குமுறை மதிப்புக் கூட்டல், மிகப் பெரிய பொருளியல் உயர்வைக் கொண்டுவரும்.

(அடுத்த வாரம்: தொடர் வருமானம் தரும் பண்ணைமுறை)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

மதியழகன்-செங்குட்டுவனைத் தொடர்புகொள்ள: 9442577431

 

http://tamil.thehindu.com/general/environment/முன்னத்தி-ஏர்-42-கோழிகளுக்கும்-கொடுக்கலாம்-பஞ்சகவ்யம்/article8952188.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.