Jump to content

தலையில் பாய்ந்த குண்டு! (நடுக்கடல்...நடுங்கும் உயிர்கள்


Recommended Posts

தலையில் பாய்ந்த குண்டு! (நடுக்கடல்...நடுங்கும் உயிர்கள் - தொடர் 1)

 

fisher%20man%201%20logo%281%29.jpg

‘‘அப்போது எனக்கு 22 வயது. எனக்கு விவரம் தெரிய தொடங்கியதில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று திரும்பும் மீனவர்கள் ‘இன்னைக்கு இலங்கை கடற்படை வந்துச்சு. எங்கள அடிச்சாங்க, எங்க வலைகளை அறுத்து விட்டுட்டு நாங்க பிடிச்சு வச்சிருந்த மீன்களை அள்ளிட்டு போய்ட்டாங்க. இன்னைக்கு எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துனாங்க’ன்னு சொல்றத கேட்டிருக்கேன். அன்னைக்குதான் நான் அந்த வேதனையை அனுபவிச்சேன்.  2006-ம் ஆண்டு அக்டோபர் மாசம் 26  ஆம் தேதி நான், எங்க அண்ணன், அப்பா மூணு பேரும் மீன்பிடிக்கிறதுக்கான டோக்கன் வாங்கிட்டு எங்க விசைப்படகில் மீன்பிடிக்க போனோம்.

அன்னைக்கு மதியம் 3 மணியப் போல மல்லிப்பட்டிணம் பகுதியில், நம்ம நாட்டு கடல் எல்லைக்குள்ள மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தோம். என்னோட அண்ணன் படகை ஓட்டினார். நான் படகின் தென் பகுதியில் நின்னுக்கிட்டு இருந்தேன். அப்போ கடலில் ஒரு மாற்றம் தெரிஞ்சது. அது இலங்கை கடற்படையினர் வருவதற்கான அறிகுறி என்பதை அறிந்து கொண்ட எங்க அண்ணன்,  படகை கரையை நோக்கி திருப்பினான்.

fisher%20man%201%20leftt.jpgஅந்த நேரத்தில எங்களை நோக்கி இலங்கை கடற்படையினரின் கப்பல் வேகமாக வந்துச்சு. எந்த எச்சரிக்கையும் கொடுக்காமலே, சுமார் 100 அடி தூரத்தில இருந்து அவங்க எங்கள நோக்கி துப்பாக்கியால சுட்டாங்க. முதல் குண்டு என்னோட வலது நெற்றியில பாய்ந்தது. அந்த குண்டின் சிதறல்கள் என்னோட தலையின் வலது பக்கம், பின்புற தலையின் இடது பக்கம், மூக்கு, முதுகு பகுதி, வலது தோள்பட்டை, வலது காலின் தொடை என பல இடங்களில் பாய்ந்தது. எனது பற்களும் உடைந்து சிதறின.

கண் இமைக்கும் நேரத்தில் எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய அவர்கள், உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டனர். அவர்கள் சென்றபின், அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்ற மீனவர்களின் உதவியுடன், மாலை 7 மணிக்கு கரைக்கு திரும்பினோம்.

மணல்மேல்குடி அரசு மருத்துவமனையில முதலுதவி சிகிச்சைக க்கு பின் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தாங்க. பின்னர் தனியார் மருத்துவமனையில் எனது உடலில் பாய்ந்திருந்த துப்பாக்கி குண்டு சிதறல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள்.

தலையில் பாய்ந்த குண்டு மூளைப்பகுதியில் உள்ளது. அதனை எடுத்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் இப்போதும் துப்பாக்கி குண்டுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை விட வதை பட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை. இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி குண்டுகளின் தாக்கத்தால் எனக்கு காது சரிவர கேட்காது. இடது கை, கால் செயல்படவில்லை.

மூக்கு பகுதி பாதிக்கப்பட்டதால் வாயால்தான் சுவாசிக்கும் நிலை. கை, கால் இயங்காத நிலையில் அடுத்தவர்களின் துணையில்லாமல், என்னால் எந்த வேலையும் செய்ய இயலாத நிலையில், உயிருள்ள ஒரு ஜடப் பொருளாகவே மாறிவிட்டேன்’’ - காரைக்கால் மாவட்டம் மண்டபக்தூர் கிராமத்தை சேர்ந்த மீனவர் சௌந்தர்ராஜனுக்கு, இலங்கை கடற்படையினரால் நேர்ந்த துயரத்தின்  பதிவுதான் இது.

fisherman%201%20550%202.jpg

நாட்டின் எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு இளைஞனுக்கு நடந்த கொடுமை அல்ல இது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக கடலோர மாவட்டங்களில், வயிற்றுப் பசிக்காக வாழ்க்கை போராட்டம் நடத்தி வரும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் அழுகுரல். வானிலை நிலவரம், தங்கம் விலை நிலவரம், அணைகளின் நீர்மட்டம் போன்ற அன்றாட செய்திகளின் வரிசையில், நாள் தவறாமல் இடம் பிடிப்பது தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலும் ஒன்றாக உள்ளது.

இந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் போன்ற கடலோர மாநிலங்களில் உள்ள மீனவர்கள் சந்திக்காத பிரச்னைகளை ஒட்டு மொத்த தமிழக மீனவர்களும் நாள்தோறும் சந்தித்து வருகின்றனர் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்களின் மீன்பிடி தொழில் மீள முடியாத பிரச்னைகளுடன் இருந்து வருகிறது.

fisherman%201%20550%201.jpg

அண்டை நாடு என இந்திய அரசால் சொல்லப்படும் இலங்கை கடற்படையினரின் கண்மூடிதனமான நடவடிக்கைகளே இந்த பிரச்னைகளுக்கு காரணம். 1983 ஆம் ஆண்டு, ராமேஸ்வரத்தை சேர்ந்த மீன் பிடி கூலி தொழிலாளியான முனியசாமியை தங்களது துப்பாக்கி குண்டுகளுக்கு முதல் பலியாக்கிய இலங்கை கடற்படையினர், இன்றுவரை சுமார் 300-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஊனப்படுத்தப்பட்டுள்ளனர்.

30-க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். இத்தனைக்கு பின்னரும் தங்களது தாக்குதல்களை இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதலை சகித்துக் கொண்டு, நமது மீனவர்கள் கடலுக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

fisherman%203.jpg

உயிரை பணயம் வைத்து ஏன் இந்த தொழிலில் ஈடுபட வேண்டும். வேறு தொழில் தெரியாதா அல்லது வேறு கடல் பகுதிதான் இல்லையா? நமக்கு தோன்றும் இந்த கேள்விகளை மீனவர்கள் முன்வைத்தால் அவர்களின் பதில் என்ன?

அலைகள் ஆர்ப்பரிக்கும்...

http://www.vikatan.com/news/article.php?aid=51795

Link to comment
Share on other sites

நடுக்கடல்...நடுங்கும் உயிர்கள்! (தொடர்- 2)

 

fisherman%202%20logo.jpg

மிழக கடல் பகுதியானது சென்னை முதல் குமரி வரையில் 41,412 சதுர கி.மீ.பகுதியை கொண்டது. சென்னை, கடலூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்கள் இதில் அடங்கியுள்ளன. 608 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 9.24 லட்சம் பேர் மக்கள் தொகை எண்ணிக்கையாக உள்ளனர்.

5253 விசைப்படகுகளும், 30 ஆயிரத்து 436 நாட்டுப் படகுகளும் அரசால் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாத சில நூறு படகுகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவற்றின் மூலம் பிடிக்கப்படும் மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், ஆண்டு ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி அந்நிய செலவாணியை (இந்தியா முழுமைக்கும் 23,000 கோடி) நம் நாட்டிற்கு மீனவர்கள் ஈட்டித் தருகின்றனர்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் பாண்டிசேரியின் காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட கடல் பகுதி மன்னார் வளைகுடா எனவும், பாக் நீரிணை எனவும் இரு பிரிவாக அழைக்கப்படுகிறது.

fisherman%202%20550%201%20.jpg

பாக் நீரிணை பகுதியானது தனுஷ்கோடியில் துவங்கி, தஞ்சை மாவட்டம் வேதாரண்யம் வரை நீடிக்கிறது. ஆழம் குறைவான, குறைந்த உப்புத் தன்மை கொண்ட மீன்கள் வாழ ஏதுவான கடலும், சதுப்பு நிலங்களையும் (லகூன்) கொண்டதாகும். மன்னார் வளைகுடா பகுதி, தனுஷ்கோடியில் இருந்து வடகிழக்கு - தென்மேற்கு திசையில் கன்னியாகுமரி வரை சுமார் 140 கி.மீ. தொலைவிற்கு பரந்துவிரிந்துள்ள கடல் பகுதியாகும்.

இந்த கடல் பகுதியின் ஊடாக 21 தீவுகள் அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் கரையோர பகுதியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தீவுகளில் செறிந்து கிடக்கும் உயிரின வளத்தாலும், உயிரின பன்மயத்தாலும் இவை ‘‘உயிரியலாளர்களின் சொர்க்கம்’’ என குறிப்பிடப்படுகிறது. எனவேதான் 1989-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி யுனெஸ்கோ அமைப்பு, மன்னார் வளைகுடாவை ‘உயிர்கோள காப்பக’மாக அங்கீகரித்தது.

தென்கிழக்கு ஆசியாவின் முதல் உயிர்கோள காப்பகமாக இது விளங்கி வருகிறது. இவை தவிர நதிமுகத்துவாரங்கள், கடற்கரைகள், கடற்கரையோர காடுகள், பவளப் பாறைகள், உப்பு சதுப்புகள், கடற்புற்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் அலையாத்தி காடுகள் என பலவகை சூழல் அமைப்புகளை கொண்டுள்ளது. இந்த மன்னார் வளைகுடா பகுதியில் சுமார் 3600 க்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கு சிற்றினங்கள் உள்ளது.

fisherman%202%20550%202.jpg

இதன் பயனாகவே இங்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே முத்து குளிக்கும் தொழில் சிறப்பாக நடந்திருக்கிறது. மறுச்சுகட்டி, வைப்பாறு, வேம்பாறு உள்ளிட்ட ஆறுகள் கலக்கும் முகத்துவாரங்களின் பயனாக கோடிக்கணக்கான மிதவை நுண்ணுயிர்கள் உருவாகியுள்ளன. இவற்றை உணவாக உட்கொள்ள வரும் மீன்கள், தங்களின் இனப்பெருக்க பகுதியாகவும் மன்னார் வளைகுடாவை பயன்படுத்திக் கொண்டன. இதன் அடிப்படையில்தான் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் மீனவர்கள் இப்பகுதியில் குடியேறினர்.

 ஏற்கனவே இங்கு வசித்து வந்த பாரம்பரிய மீனவர்கள், பாக் நீரிணை பகுதியில் கட்டுமரங்கள் மூலமும், மன்னார் வளைகுடாவில் இயந்திரம் இல்லா சிறிய நாட்டுப்படகு மூலம் மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். இவை தவிர வீச்சுவலை, விடுவலை, இழுவலை, குத்துவலை போன்றவற்றின் மூலமும் மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் பகுதி மீனவர்கள் கட்டுமரங்களின் மூலம், இழுவை மடி மூலமும் பின்னர் வல்லம், தங்கு தூண்டி, ஆயிரங்கால் தூண்டி போன்றவற்றின் மூலமும் மீன்பிடிப்பு செய்து வந்தனர். அதனைத் தொடர்ந்து 1947-ல் அறிமுகமான நூல்வலை மூலம் வாளை, சீலா மீன்களை பிடித்தனர்.

1957- ல் நைலான் வலை அறிமுகமானது. இந்த வலையை பயன்படுத்திய மீனவர்கள், கட்டுமர மீன்பிடிப்பு முறையில் இருந்து வல்லம் என சொல்லப்படும் பெரிய வகை நாட்டு படகுகள் மூலம் மீன்பிடிக்கும் முறைக்கு மாறுகின்றனர். இவ்வாறு மீன்பிடிக்க செல்பவர்கள், வாரத்தில் 6 நாட்கள் கடலிலேயே தங்கியிருந்து ஒரு நாள் மட்டும் கரைக்கு திரும்புவார்கள். ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் துவங்கி, ஜூலை மாதம் வரை நடந்த இந்த தொழிலால் பிடிபட்ட மீன்களும், கருவாடுகளும் ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

fisherman%202%20550%2022.jpg

இதன் மூலம் மீனவர்களின் பொருளாதார நிலை உயர்ந்தது. இந்த நிலையில்தான் இந்தோ- நார்வே திட்டம் இந்திய அரசால் மீனவர்கள் மத்தியில் அமல்படுத்தப்பட்டது.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது கடலில் வைக்கப்பட்ட கண்ணி வெடிகளை மீட்டெடுக்க, டிராலர் எனப்படும் இழுவலை முறை பயன்பட்டது. பின்னர் நார்வே நாடு இதனை மீன்பிடி வலையாக மாற்றியது. டிராலர் முறையிலான மீன்பிடித்தலை நார்வே நாடு இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியது. சென்னை மற்றும் கடலூர் பகுதி மீனவர்களில் குறிப்பிட்ட சில பேருக்கு இழுவை மடி பயன்படுத்தக் கூடிய விசைப் படகுகள் அரசால் வழங்கப்பட்டது.

அப்படி வழங்கப்பட்ட படகுகளை வைத்து மீன்பிடிக்க முடியாதவர்களிடம் இருந்த படகுகளை ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் வாங்கி வந்து, டிராலர் முறையிலான மீன்பிடிப்புக்கு மாறி, சில்வர் பில்லி எனப்படும் காரல் மீன்களை பிடிக்க துவங்கினர்.

fisherman%202%20550%203.jpg

இழுவை படகுகள் இப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் வர துவங்கிய நிலையில், அதற்கான வேலை ஆட்களும் அதிகம் தேவைப்பட்டனர். இதனால் மீனவ சமுதாயத்தினை சாராத வெளியாட்களும் மீன்பிடித் தொழிலுக்கு வர துவங்கினர். இந்திய கடல் பகுதி மட்டுமல்லாது இலங்கையின் மன்னார், யாழ்ப்பாணம், வடமராச்சி கடல் பகுதிகளுக்கும் சென்று மீன் பிடித்து வந்தனர் தமிழக மீனவர்கள்.

அப்போது எல்லை பிரச்னை ஏதும் இல்லாததால், இருநாட்டு மீனவர்களும் இருநாடு கடல் பகுதிகளுக்கு மட்டுமல்லாது கரைப் பகுதிக்கு  சென்று தங்கி வருவதையும், உறவு முறை ஏற்படுத்திக் கொள்வதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த உறவு முறைக்கு வந்த சோதனை என்ன?

அலைகள் ஆர்ப்பரிக்கும்.. 

http://www.vikatan.com/news/article.php?aid=52086

Link to comment
Share on other sites

நடுக்கடல்...நடுங்கும் உயிர்கள்; தொடர்-3

 

fishermen%203%20logo.jpg

ந்திய-இலங்கை மீனவர்களின் உறவு முறைக்கு அங்கீகரிக்கப்பட்ட தளமாக உதவி வந்தது கச்சத்தீவு. ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 12 மைல் தொலைவில் அமைந்துள்ள தீவு கச்சதீவு. கிழக்கு மேற்காக 1 மைல் நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் தூரமும் கொண்ட இந்த தீவின் மொத்த பரப்பளவு 280 ஏக்கர். அங்கு தண்ணீர் வசதி கிடையாது. இதனால் அது ஆளில்லா தீவாகவே இருந்து வந்தது.

ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமாக இருந்து வந்த இந்த தீவை சங்கு எடுக்கும் தொழிலுக்காக குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. சங்கு எடுக்கும் தொழிலாளர்களும், மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் தாங்கள் ஓய்வு எடுக்கும் இடமாக கச்சத்தீவினை பயன்படுத்தி வந்தனர்.

 சங்கு எடுக்கும் தொழிலாளி சீனிகுப்பன் படையாச்சி என்பவரால் இங்கு அந்தோணியார் கோயில் ஒன்று சிறிய அளவில் உருவாக்கப்பட்டது. கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்த அந்தோணியாரை வழிபட தொடங்கினர். நாளடைவில் இந்த கோயிலில் ஆண்டு தோறும் விழா நடக்க துவங்கியது. இதற்கான பணிகளை பாம்பன் கிறிஸ்தவ பங்கை சேர்ந்த பாதிரியார்கள் செய்து வந்தனர்.

fishermen%203%20550%201.jpg

இந்த விழாவில் பங்கேற்க இரு நாட்டை சேர்ந்த கிருஸ்துவர்கள் மட்டுமல்லாது மீன்பிடி மற்றும் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த இந்துக்களும் சென்று வந்தனர். ஒரு வார காலம் நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க செல்லும் இந்தியர்கள் இங்கிருந்து புளி, மிளகாய், பருப்பு வகைகள், கடலை, கைலி, பீடி, உள்ளிட்ட பொருட்களையும், இலங்கையில் இருந்து வருபவர்கள் தேயிலை, தேங்காய் எண்ணை, சோப்பு மற்றும் டார்ச் லைட் போன்றவற்றையும் எடுத்து வந்து பண்ட மாற்று முறையில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த வியாபாரத் தொடர்பு நாளடைவில் குடும்ப ரீதியான தொடர்புகளாகவும் விரிவடைந்தது.

இந்த நிலையில் கச்சதீவு தங்களுக்கு சொந்தமானது என இலங்கை சொல்லி வந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இலங்கை இதனை வலியுறுத்தி வந்தது. இதனால் கச்சதீவு யாருக்கு சொந்தம் என தீர்மானமான முடிவு எட்டப்படும் வரை கச்சதீவை இருநாடுகளும் சொந்தம் கொள்ள கூடாது என ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது.

fishermen%203%20550%205.jpg

இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு கச்சத்தீவு சொந்தம் என்பது தொடர்பான ஆதாரங்களை மத்திய அரசு சேகரித்து வந்த நிலையில் 1974-ம் ஆண்டு இலங்கை பிரதமர் சிறிமாவோ ப்ண்டாரநாயகா டெல்லி வந்திருந்து பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கச்சதீவு பிரச்னையில் உடன்பாடு காண்பது என தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கச்சதீவை இலங்கைக்கு தானம் கொடுப்பதாக பிரதமர் இந்திராகாந்தி அறிவித்தார்.

இந்திராவின் இந்த முடிவிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இந்திராவை நேரில் சந்தித்து தமிழகத்தின் எதிர்ப்பை தெரிவித்தார்.

இதை ஏற்காத இந்திரா கச்சத்தீவை இலங்கைக்கு தானம் கொடுக்க முடிவெடுத்தார். இதற்கான ஒப்பந்தம் 1974- ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி போடப்பட்டது. இலங்கையின் வெளிநாட்டு இலாகா காரியதரிசி ஜெயசிங்கே இந்தியாவிற்கும், டெல்லியில் இருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி  கேவல்சிங் இலங்கைக்கும் கச்சத்தீவு ஒப்பந்தங்களை கொண்டு சென்றனர்.

இந்த ஒப்பந்தங்களில் இருநாட்டு பிரதமர்களும் ஒரே நேரத்தில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்றாலும் இந்திய மக்கள் கச்சத்தீவுக்கு செல்ல பாஸ்போர்ட் வாங்க வேண்டியதில்லை எனவும், கச்சத்தீவு அமைந்துள்ள கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் முன்பு போல் மீன்பிடிக்கலாம் எனவும், எந்த தடையும் இல்லாமல் வழக்கம் போல் அங்கு சென்று வரலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

fishermen%203%20550%202.jpg

இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பாராளுமன்றத்திலும், தமிழகத்திலும் பலத்த கண்டனம் எழுந்தது. ஆனாலும் பலன் ஏதும் ஏற்படவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழக ஜனசங்க தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை கச்சதீவை மீட்க கோரும் வழக்குகள் தொடரப்பட்டு கொண்டே இருக்கிறது.

இதனிடையே இந்திய-இலங்கை அதிகாரிகள் மட்டத்தில் 1976-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது அந்த ஒப்பந்தத்தின் படி கச்சதீவு பகுதியில் இந்திய மீனவர்களுக்கு இருந்து வந்த மீன்பிடி உரிமை ரகசியமாக பறிக்கப்பட்டது. இதனால் இந்திய மீனவர்களின் கடல் எல்லை பகுதி குறுகி போனது. ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 12 கடல் மைல் தொலைவில் உள்ள கச்சதீவு, 24 கடல் மைல் தொலைவில் உள்ள நெடுந்தீவு, 32 கடல் மைல் தொலைவிலுள்ள கக்கட தீவு 38 கடல் மைல் தொலைவில் உள்ள இரண தீவு என கச்சத்தீவை தாண்டி சென்று வருவது வழக்கம்.

புதுப்பிக்கப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தின் விளைவாக நமது மீனவர்களின் மீன்பிடி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதன் பின்னர்தான் இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தடுப்பு நடவடிக்கைகள் துவங்கின. இலங்கை கடற்படையினரின் தடுப்பு நடவடிக்கை காலப்போக்கில் தாக்குதல் நடவடிக்கையாகவும் மாற தொடங்கியது.

fisherman%202%20550%203.jpg

இந்த காலகட்டத்தில் இலங்கையில் பிரபாகரன் தலைமையிலான  புதிய தமிழ்ப்புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் என உருவாகியது. இலங்கை அரசுக்கு எதிராக தனிநாடு கேட்டு புரட்சி நடத்திய விடுதலை புலிகளால் இலங்கை ராணுவம் வெகுவாக பாதிக்கப்பட்டது. விடுதலை புலிகளுக்கு தேவையான ஆயுதங்கள், எரிபொருட்கள் ஆகியன கடல் வழியாக கிடைப்பதாக இலங்கை ராணுவம் கருதியது. இதனால் இந்திய கடல் பகுதிகளில் இருந்து வரும் மீனவர்களுக்கு தொல்லை கொடுக்க துவங்கியது இலங்கை ராணுவம்.

இலங்கை ராணுவத்தின் மீதான புலிகளின் தாக்குதல் அதிகரிக்க அதிகரிக்க இந்திய மீனவர்களின் மீதான அடக்குமுறைகளை இலங்கை ராணுவம் அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த அடக்கு முறை 1983- ம் ஆண்டில் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் அளவிற்கு வளர்ந்தது.

prabakaran%20200a.jpgஇது மீனவர்களின் தொழிலுக்கு மட்டுமல்ல; காலம் காலமாக நடந்து வந்த கச்சதீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழாவிற்கும் வேட்டு வைத்தது. 1983-ம் ஆண்டு ஜுலை 25-ம் தேதி  பிற்பகலில் போராளி இயக்கத்தின் முன்னோடிகள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டிருந்த வெலிகடை சிறையில் சிங்கள கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் சிறைக்கு வெளியில் இருந்த சிங்களர்களும் ஆயுதங்களுடன் புகுந்தனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 37 தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனால் சிங்கள அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் எழத் தொடங்கின. இதனை தனககு சாதகமாக்கி கொண்ட இலங்கை அரசு கச்சத்தீவு திருவிழாவை ரத்து செய்தது.

மேலும் மீன்பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களின் மீதான தாக்குதலையும் அதிகரித்தது. இதன் மூலம் மீன்பிடி தொழிலையே நம்பியிருந்த லட்சகணககாண மீனவர்கள் பாதிககப்பட்டனர்.  இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்களுக்கு ஏற்பட்ட வேதனைகள் என்ன?
 
அலைகள் ஆர்ப்பரிக்கும்...

http://www.vikatan.com/news/article.php?aid=52435

Link to comment
Share on other sites

நடுக்கடல்...நடுங்கும் உயிர்கள்! ( தொடர்-4 )

 

fishermen%204%20logo%20.jpg

1983- ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ல் இலங்கை கடற்படையினரின் இனவெறி துவேஷம் எல்லை மீறி இந்திய எல்லை பகுதிக்குள் முதன் முதலாக அரங்கேற துவங்கியது. அன்றைய தினம், இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பகுதியில் நமது மீனவர்கள் மீன் பிடிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் படகில் மீன்பிடித்து கொண்டிருந்த 5 பேர் காயமடைந்தனர்.

தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி, ஐ.பி.337 என்ற எண்ணை கொண்ட மீன்பிடி படகில் மீன்பிடித்து கொண்டிருந்த முனியசாமி என்ற மீனவரை சுட்டுக் கொன்றனர்.

fishermen%204%20350%201.jpgஇதன் மூலம் துவங்கிய இலங்கை கடற்படையினரின் கொலைப் பட்டியலில் இன்று வரை 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள், தங்கள் உயிரை பறி கொடுத்திருக்கிறார்கள்.

 மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதன் மூலம் அப்பாவி மீன்வர்கள் உயிரிழந்த நிலையில், தங்கள் கைகளில் சிக்கிய மீனவர்களை சிறை பிடித்து செல்லும் நடவடிக்கையையும் இலங்கை கடற்படையினர் தொடங்கினர். 1996-ம் ஆண்டு ஜூன் 13-ல் இரு மீனவர்கள், நவம்பர் 13-ல் 5 பேர் என கடந்த 19 ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை பிடித்து சென்று சிறையில் அடைத்துள்ளனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் சிக்கி ஊனப்பட்டிருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சிறைபிடித்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கபட்டுள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை கடற்படையினரால் கடலில் மூழ்கடிக்கப்பட்டும், பராமரிப்பு இல்லாத நிலையில் பாழாகி போனதும் உண்டு.

இதனால் இந்த படகுகளை நம்பி வாழ்க்கை நடத்தி கொண்டிருந்த மீனவர்கள் முற்றிலும் முடங்கி போயினர். ஒர் விசைப்படகினை பொறுத்த மட்டில் அதன் உரிமையாளர், 5 மீனவ தொழிலாளிகள், விசைப்படகினை சார்ந்து தொழில் செய்பவர்கள் 15 பேர் என ஒரு படகினை நம்பி 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 19 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். இந்த தாக்குதலின்போது விலைமதிக்க முடியாத உயிர்கள் பல நூறு பறிக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், மீனவர்களின் வாழ்வாதாரங்களும் பறிபோய் உள்ளன.

பல லட்சம் மதிப்புடைய விசைப்படகுகள், மீன்பிடி வலைகள், போட் பலகைகள், வழிகாட்டு கருவிகள், செல் போன்கள், கைவிளக்குகள் மட்டுமல்லாது மீனவர்கள் பிடித்து வைத்திருந்த பல ஆயிரம் மதிப்புள்ள மீன்களை கூட இலங்கை கடற்படையினர் அபகரித்து செல்வது வழக்கமாக இருந்துவருகிறது.

fishermen%204%20550%201.jpg

இன்று வரை இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருள் இழப்பின் மதிப்பு மட்டும் 2 ஆயிரம் கோடியை தாண்டும். இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் சிக்கும் ஒரு படகின் உரிமையாளர் மட்டுமல்லாது, அதனை நம்பியிருக்கும் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் முற்றிலும் முடங்கி போகின்றன.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளான சுமார் 36 மீனவர்கள் காணாமல் போய் உள்ளனர். இவர்களில் ஒருவரது நிலை கூட இன்று வரை தெரியவில்லை. இதனால் இவர்களது குடும்பத்தினரின் நிலை மற்ற மீனவ குடும்பங்களின் நிலையை விட பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளது.

காணாமல் போன மீனவர் உயிரோடு இருக்கிறாரா என தெரியாத நிலையில், அவரது உடலும் கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் நிவாரண உதவியும் 7 ஆண்டுகளுக்கு பின்னரே கிடைக்கும். இடைப்பட்ட காலத்தில் அந்த குடும்பதின் நிலை அதலபாதாளத்திற்கு சென்று விடும் சூழலையும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் உருவாக்கி வருகின்றன.

fishermen%204%20550%203%20pg.jpg

இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை பிடித்து சென்று நேரடியாக நீதிமன்றத்தில் ஒப்படைப்பதில்லை. தாங்கள் வைத்திருக்கும் கொடுமையான ஆயுதங்களான உருட்டு கம்பிகள், உருட்டு கட்டைகள், ரப்பர் குழாய்கள், நைலான் கயிறுகள் மூலம் கடுமையாக தாக்கி ஊனப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அதுமட்டும் இல்லை. பிடிபடும் மீனவர்களின் உளவியலை பாதிக்கும் வகையில் நிர்வாணபடுத்துவது. தந்தையின் கண் முன்னே மகனை  நிறுத்தி  அவனது ஆடைகளை களைய செய்து, ஒருவர் மற்றொருவரின் ஆண் உறுப்பை பிடிக்க சொல்வது என இன்னும் வார்த்தைகளில் எழுத முடியாத செயல்களை செய்ய சொல்வது என கேவலமான செயல்களில் ஈடுபட்டு, அதனை சுற்றி நின்று கைகொட்டி சிரிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபடுவது வழக்கம்.

இது போன்ற அருவருக்கதக்க செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட மீனவர்கள், கடற்படையினரிடம் இருந்து விடுவிக்கபட்ட பின்பு கூட இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் உளவியலாக பாதிக்கப்பட்டு உள்ளது உச்சக்கட்ட கொடுமையாகும்.

பகை நாடுகளாக இருந்து வரும் இந்தியாவும் பாகிஸ்தானும் கூட  ஒரு நாட்டு மீனவர் எல்லை தாண்டி மற்றொரு நாட்டுக்குள் சென்று விட்டால் துப்பாக்கி சூடு நடத்துவதோ, இலங்கை கடற்படையினரைப் போன்று அறுவெறுக்கத்தக்க  செயல்களிலோ ஈடுபடுவதிலலை. உலகில் தைவான் மீனவர்கள் எல்லை தாண்டி இந்திய கடல் பகுதியிலும், வடகொரிய, தென் கொரிய மீனவர்கள் பரஸ்பரம் இருநாட்டு எல்லைகளுக்கும் சென்றும் மீன்பிடிக்கிறார்கள்.

fishermen%204%20550%2011.jpg

இதேபோல் கென்யா மீனவர்களும், உகாண்டா மீனவர்களும் ஒருவர் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் சென்று மீன்பிடிக்கின்றனர். ஆனால் அங்கெல்லாம் எல்லை தாண்டும் மீனவர்களை அந்த நாட்டு கடற்படையினர் சுடுவதில்லை. தாக்குவதில்லை. உளவியல் ரீதியான நெருக்கடிகளை கொடுப்பதில்லை. இலங்கை கடற்படை மட்டுமே அத்தகைய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இலங்கை கடற்படையினரின் இந்த செயல்களால், இத்தனை காலங்களாக அன்னிய செலவாணியை அதிக அளவில் நாட்டுக்கு ஈட்டி தந்த மீன்பிடி பொருளாதார மண்டலங்களாக விளங்கி வந்த ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், காரைக்கால் மாவட்டங்களின் நிலைமை இன்று தலைகீழாக மாறியிருக்கிறது. இந்த மாவட்டங்களை சேர்ந்த ஆயிரகணக்கானோர் தங்களின் பாரம்பரிய தொழிலான மீன்பிடி தொழிலை கைவிட்டு விட்டு, பிழைப்பு தேடி பிற மாவட்டங்களுக்கு சென்ற நிலையும் இதன் மூலம் ஏற்பட்டிருக்கிறது.

fishermen%204%20550%205.jpg

இலங்கை கடற்படையினரால் ஏற்பட்ட இழப்புகளை தாங்க முடியாத பல மீனவர்களின் குடும்பங்கள், உருக்குலைந்துபோன அவலங்களும் நிகழ்ந்திருக்கின்றன. மீன்பிடி தொழிலுக்காக வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நூற்றுகணக்கான மீனவர்களின் தங்க நகைகள் மீட்கப்படாமலே பறி போயிருக்கின்றன. இலங்கை கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்ட படகுகளின் உரிமையாளர்களில் ஒரு சிலர், தற்கொலை செய்து கொண்ட துயரங்களும் அரங்கேறியிருக்கின்றன.
 
 உயிர், உடல், உடமைகள், உளவியல் என பல்வேறு வகையான இழப்புகளையும் நம் மீனவர்களுக்கு  ஏற்படுத்தும் இலங்கை கடற்படையினர் தங்களின் ஈவு இரக்கமற்ற செயல்களுக்கு சொல்லும் காரணங்கள் என்ன?

அலைகள் ஆர்ப்பரிக்கும்...

http://www.vikatan.com/news/article.php?aid=52710

Link to comment
Share on other sites

நடுக்கடல்...நடுங்கும் உயிர்கள்! (தொடர்-5)

 

fishermen%205%20logo%281%29.jpg

1984-ம் ஆண்டில் இலங்கை தமிழ்ப் போராளிகள் சுமார் 40 குழுக்களாக பிரிந்து இயங்கி வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப் புரட்சி அமைப்பு ஆகியன அவற்றில் முக்கிய அமைப்புகளாக இருந்து வந்தது. இலங்கை ராணுவத்தினரை விட  தமிழீழ விடுதலை குழுக்களை சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை இரு மடங்காக இருந்து வந்தது. இந்த இயக்கத்தினருடன் நேரடி மோதலில் ஈடுபட முடியாத இலங்கை ராணுவம், அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது.

1985- ம் ஆண்டு முதல் 3 மாதங்களில் சுமார் 10 ஆயிரம் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக 106 ராணுவ வீரர்களை போராளிகள் கொன்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வந்த நிலையில், பேரிழப்பு என்பது இலங்கை ராணுவத்தினருக்கே ஏற்பட்டு வந்தது. இதனால் இலங்கை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர் பகுதிகள் பல புலிகளின் கட்டுப்பாட்டிற்கு போனது. அந்த அளவிற்கு போராளி குழுக்கள் வலிமையுடன் இயங்கி வந்தன. அதிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் எல்லாவற்றிலும் முதல் இயக்கமாக இயங்கியது. உலக நாடுகளில் உள்ள ராணுவத்தில் பல பிரிவுகள் இருப்பது போல் தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளும் கொண்ட பிரிவாக புலிகள் இயக்கம் உருவெடுத்தது.

fishermen%205%20550%204.jpg

மேலும் கடற்புலிகள் என்ற தற்கொலை படையும் இயங்கி வந்தது. இத்தகைய வலுவுடன் போராளி குழுக்கள் இயங்க, அவர்களுக்கு கடல் வழியாக கிடைத்து வரும் ஆயுதங்களே காரணம் என கருதியது இலங்கை அரசு. இதனால் இலங்கை கடல் பகுதியை தனது கடற்படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவெடுத்தது. இதனால் கூடுதல் கப்பல்களுடன் ஆயிரக்கணக்கான கடற்படையினர் கடற்பாதுகாப்பில் ஈடுபட்டனர்

எந்த வகையிலான கண்காணிப்பையும் ஊடுருவி செல்லும் வலிமையை புலிகள் இயக்கம் பெற்றிருந்தது. இதனால் புலிகளுக்கு ஆயுதங்கள், எரிபொருட்கள் வருவது தடைபடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படையினர், புலிகள் இயக்கத்தினர் மீது நேரடி தாக்குதல் நடத்தமுடியாத நிலையில் பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற இந்திய மீனவர்களை தாக்க துவங்கினர்.

இலங்கை, இந்திய கடல் பகுதிகளில் தங்கள் கண்ணில்படும் படகு எல்லாமே போராளிகளின் படகுதான் என இலங்கை கடற்படையினர் பீதியுடன் ரோந்து சுற்றி வந்தனர். தங்களை காத்து கொள்வதற்காக கடலில், கண்ணில் படும் எல்லா படகுகளை நோக்கியும் துப்பாக்கி குண்டுகளை வெடித்தனர். இவ்வாறுதான்  இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் 1983- ம் ஆண்டு துவங்கி, இன்று வரை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ஆரம்பக் காலங்களில் புலிகளின் படகு என நினைத்து தவறுதலாக சுட்டு விட்டோம் என காரணம் சொன்னது இலங்கை கடற்படை. பின்னர் புலிகளுக்கு ஆயுதம் ஏற்றி வந்தார்கள். அதனால்தான் சுட்டோம் என சொன்னது.

fishermen%205%20550%202.jpg

அதன் பின் எரிபொருள், போதை பொருள் கடத்தி வந்து புலிகளுக்கு கொடுத்ததாக சொல்லி இந்திய மீனவர்களை தாக்கினார்கள்.  பின்னர் எல்லை தாண்டி வந்தார்கள் என சொல்லி தாக்கினார்கள். புலிகள் இயக்கத்திற்கு உதவியதால்தான்,  இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சொன்ன இலங்கை ராணுவம், இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையிலான போர் நிறுத்தம் அமலில் இருந்த போது கூட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானதன் காரணம் குறித்து எந்த பதிலும் சொல்லவில்லை.

2002 முதல் 2005 வரையிலான காலக்கட்டத்தில் போர் நிறுத்தம் நடைமுறைபடுத்தப்பட்டிருந்த காலத்திலும், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை.  இந்திய மீனவர்களையும், கடல் வளங்களையும் காப்பதற்காக பாக்.நீரிணை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக சொல்லும் இந்திய கடற்படையோ, கடலோர காவல் படையோ ஒரு முறை கூடை இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து இந்திய மீனவர்களை காக்கவில்லை.

fishermen%205%20550%201.jpg

2004-ம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று மாலை, இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் அருகே உள்ள கடற்கரை கிராமமான ஓலைக்குடா வரை கடலில் வந்து தாக்குதல் நடத்தி திரும்பி சென்றனர். அதனையும் இந்திய கடற்படையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள் என்பதுதான் தாங்க முடியாத வேதனை.

இறுதிக்கட்ட போரின் போது ஒண்ணரை லட்சம் அப்பாவி தமிழ் மக்களுக்கு மத்தியில் இருந்த சிலநூறு புலிகளை, விமானம் மற்றும் கனரக பீரங்கி மூலம் குண்டு வீசி அழித்தது இலங்கை ராணுவம். இதனால்  இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பரந்து விரிந்து இருந்த புலிகளின் அமைப்பு, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கூட்டு தாக்குதலினால் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்குள் சுருங்கிப் போனது.

Rajapakse%20-%20sarath%20fonseha.jpgஇலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் மட்டுமே புலிகள் இருந்தனர்.  இந்த நிலையில் 2009-ம் ஆண்டு பிப்ரவரியில் துவங்கிய இறுதிக்கட்ட போர், மே 17-ல் முடிவுக்கு வந்தது. இந்த போரினால் இலங்கை ராணுவத்தால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்டிருந்த பகுதியில் கூட கடும் தாக்குதல்கள் நடந்தன. மே 17 அன்று நந்திக்கடல் பகுதியில் தப்பிச் செல்ல முயன்ற புலிகளின் 6 படகுகளை தகர்த்ததன்  மூலம், புலிகளின் வசம் இருந்த கடைசிப் பகுதியையும் ராணுவம் கைப்பற்றியது.

அன்றைய தினம் ஜோர்டான் நாட்டிலிருந்து இலங்கை திரும்பிய அதிபர் ராஜபக்சே, விமானத்திலிருந்து இறங்கி கொழும்பு விமான நிலைய தரையை தொட்டு வணங்கியதுடன் ‘இறுதி கட்டப் போரில் விடுதலை புலிகள் தோற்கடிப்பட்டு விட்டார்கள்’‘ என அறிவித்தார்.

தனிநாடு கேட்டு 30 ஆண்டுகள் போராடிய போராளிகள் இயக்கத்தின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் போராளிகளுக்கு உதவியதாக காரணம் சொல்லப்பட்டு கடும் தாக்குதல்களுக்கு உள்ளான இந்திய மீனவர்களின் மீதான தாக்குதல் மட்டும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அது ஏன்?

அலைகள் ஆர்ப்பரிக்கும்...

http://www.vikatan.com/news/article.php?aid=53028

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நடுக்கடல்...நடுங்கும் உயிர்கள்; தொடர்-6

 

fishermen%206%20logo.jpg

போராளி குழுக்கள் உடனான போர் முடிவுக்கு வந்து விட்டது. போராளிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டனர் என சொன்ன இலங்கை அரசு, இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலை மட்டும் நிறுத்தி கொள்ளவில்லை.

இதற்கு காரணம் இந்திய அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும்தான். இலங்கையில் இறுதிக் கட்ட போர் நடந்த போது, ராணுவத்தின் கொடூர தாக்குதல்களில் சிக்கியிருந்த இலங்கை தமிழர்களை மீட்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்தன. மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு, இந்த விவகாரத்தில் பாராமுகம் காட்டியது. இந்த எழுச்சியை ஒடுக்க நினைத்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, திடீரென விடியற்காலையில் அண்ணா சமாதிக்கு சென்று உண்ணாவிரதம் தொடங்கினார்.

fishermen%206%20550%204.jpg

உண்ணாவிரதம் துவங்கி அரை நாள் கூட முடியவில்லை. ‘‘இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன்’’ என தனது போராட்டத்தை திடீரென முடித்துக் கொண்டார் முதல்வர் கருணாநிதி. ஆனால் அதன் பிறகுதான் பாதுகாப்பு வலையங்களில் இருந்த தமிழர்கள் மீது கொத்து குண்டுகள் வீசப்பட்ட கொடூரம் அரங்கேறின.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளை முற்றிலுமாக முடக்கிய இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவுக்கு இந்தியா சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. போரினால் ஏற்பட்ட பாவங்களை போக்கி கொள்ள இந்தியாவில் உள்ள கோயில் தலங்களுக்கு ராஜபக்க்ஷே வருகை தந்தார். இது மட்டுமல்ல, இந்தியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், கிரிக்கெட் உலக கோப்பைக்கான இறுதி ஆட்டம் என எல்லாவற்றையும் நேரில் காண ராஜபக்க்ஷே இந்தியா வந்திருந்தார்.

fishermen%206%20550%201.jpg

2011 ஏப்ரல் 2-ம் தேதி அன்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா வென்றது. போட்டியை நேரில் காண ராஜபக்க்ஷேவுக்கு பாசத்தோடு அழைப்பு விடுத்திருந்தது இந்திய அரசு. ஆனால் ராஜபக்க்ஷேவின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படையோ அன்று இரவே இந்திய மீனவர்களின் மீது தனது பாச கயிற்றினை வீசியது.

உலக கோப்பை 2011 இறுதி போட்டி நாளில் தங்கச்சிமடத்தை சேர்ந்த விக்டஸ், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகியோர் படகு ஒன்றில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். நடுக்கடலில் இவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் நால்வரையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர்.  கடலுக்கு மீன்பிடிக்க சென்று, மறுநாள் கரை திரும்ப வேண்டிய மீனவர்களை எதிர்பார்த்து அவர்களது குடும்பத்தினர் காத்திருந்த நிலையில்தான் அந்த கொடும் செய்தி அவர்களை எட்டியது.

உலக கோப்பை இறுதி போட்டியில் இலங்கையை இந்தியா தோற்கடித்ததால் எழுந்த ஆத்திரத்தில், மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் அடித்து கொன்றுள்ளனர் என்பதுதான் அந்த செய்தி. இந்த செய்தியை அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் குதிக்க, ராமேஸ்வரம் தீவு முழுக்க பதட்டம் நிலவியது. இந்நிலையில் மீனவர் விக்டஸின் உடல் இலங்கையிலும், அந்தோணிராஜின் உடலும், கை துண்டிக்கபட்ட நிலையில் ஜான்பாலின் உடலும், தலை இல்லாத முண்டமாக மாரிமுத்துவின் உடலும் அடுத்தடுத்த நாட்களில் தொண்டி கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கின.

fishermen%206%20550%202.jpg

உலக கோப்பையின் இழப்பை தாங்கி கொள்ள முடியாத இலங்கை கடற்படையினர், அப்பாவி மீனவர்கள் 4 பேரை அரக்கத்தனமாக கொலை செய்து கடலில் வீசியுள்ளனர்.

இதில் மீனவர் விக்டஸ் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பலியான போது அவரது மகளின் வயது 3. மீனவர் ஜான்பாலுக்கு 4 குழந்தைகள். அந்த 4 குழந்தைகளுமே அவர் இறந்த போது 5 வயதை தாண்டாதவர்கள். இதையெல்லாம் விட கொடுமை, உயிரிழந்த மீனவர் அந்தோணிராஜின் மனைவி சாலியோவின் வயது வெறும் 19 தான். 19 வயதில் தனது கணவனை இலங்கை கடற்படையினரின் விளையாட்டு வெறிக்கு பழி கொடுத்துவிட்டு தனது 2 வயது மகளுடன் இனி எப்படி வாழ்வது என தெளிவு இல்லாத நிலையில் சுருண்டு கிடந்தார் இந்த இளம்விதவை.

இலங்கை கடற்படையினரின் வெறி தாக்குதலுக்கு பலியாகிய மீனவர்களின் குடும்பங்கள் சோகத்தில் சுருண்டு கிடக்க தமிழக அரசியல்வாதிகள், சட்டமன்ற தேர்தலுக்காக சூறாவளி சுற்று பயணங்களில் பரபரப்பாக இருந்தனர். இதில் விதிவிலக்கு வைகோ மட்டுமே. பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன அவர், தனது கட்சியின் சார்பில் சிறு தொகையினை ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரண உதவியாக வழங்கினார்.

fishermen%206%20550%206.jpg

அந்தோணிராஜின் மனைவி சாலியோ, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்தார். ஒரு கட்சியின் தலைவரான வைகோ தன்னாலான உதவிகளை உடனடியாக செய்து கொடுத்த அதே நேரத்தில் எல்லா உதவிகளையும் உடனே செய்ய வேண்டிய தமிழக அரசோ, இந்திய அரசோ அதில் அக்கறை காட்டவில்லை. மீனவர்கள் விக்டஸ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்று வரை அவர்கள் இருவருக்குமான இறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை.

வட்டம், மாவட்டம், மந்திரிகள், முதலமைச்சர் என ஆளும் வர்க்கத்திடம் முறையிட்டும் இன்றுவரை இறப்பு சான்றிதழ் கிடைப்பதற்கான வழிவகை தெரியாத நிலை நீடிக்கிறது. இறப்பு சான்றுகள் கிடைககாததால் அரசால் வழங்கப்பட கூடிய எந்த சலுகைகளும் இப்போது வரை அந்த குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல அந்த மீனவர்கள் இருவரது குடும்பத்தை சேர்ந்தவர்களும் எந்த சான்றுகளையோ, அரசு உதவிகளையோ பெற முடியாத நிலை தொடர்கிறது.

இலங்கை அண்டை நாடு, நட்பு நாடு என இந்திய ஆட்சியாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் சொல்லி கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள சிங்கள ராணுவமோ இந்திய மீனவர்களை இன்று வரை எதிரிகளாகத்தான் பார்த்து கொண்டிருக்கின்றனர். போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இந்த ஆறு ஆண்டுகளில்தான் அதிகப் படியான மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் இதே நிலைதான் தொடர்கிறது.

fishermen%206%20550%208.jpg

தற்போது கூட இலங்கை சிறைகளில் தமிழகத்தை சேர்ந்த 35 மீனவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாக இந்திய மீனவர்கள் மீது குற்றம் சுமத்திய இலங்கை கடற்படையினர் தற்போது புலிகளே இல்லாத போது ஏன் நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும், சிறை பிடித்து செல்ல வேண்டும். கடலில் எல்லை என்பது வரையறை செய்ய முடியாத நிலையில், காற்றின் வேகத்தாலோ, மீன்களின் ஓட்டத்தாலோ அதனை பிடிக்க செல்லும் மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்புவதுதான் முறை. ஆனால் ஒரு முறை கூட இலங்கை கடற்படை அதனை செய்தது இல்லை.

நீண்டுகொண்டே இருக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வுதான் என்ன?

அலைகள் ஆர்ப்பரிக்கும்...

http://www.vikatan.com/news/article.php?aid=53322

Link to comment
Share on other sites

தங்கம் விலையும், மீனவர் கொலையும்! (நடுக்கடல்... நடுங்கும் உயிர்கள்- தொடர்-7)

 

fishermen%207%20logo.jpg

தினசரி தங்கம் விலை நிலவரம் போல் மீனவர்கள் மீதான தாக்குதல் பற்றிய செய்திகளும், இலங்கை கடற்படையினரின் மீனவர் சிறை பிடிப்பு நடவடிக்கைகள் பற்றிய செய்திகளும் தினமும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்,  இதற்கான நிரந்தர தீர்வு குறித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டியு) மாநில பொதுச்செயலாளர் சி.ஆர். செந்தில்வேல் முன் வைக்கும் யோசனைகளை காண்போம்.

‘‘கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்த புதிய பிரதமர் ரணில்விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்தார். இதன் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ‘மீனவர் பிரச்னை குறித்து பேசியதாகவும், அதற்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்திடவும் முடிவு செய்துள்ளதாகவும், மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என வலியுறுத்தியதாகவும்’ பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் இலங்கையிலோ இதற்கு நேர்மாறான நிலை உருவாகியுள்ளது.

boat%20400.jpgஇலங்கை வடக்கு மாகாண மீனவ சங்கங்களின் கூட்டுக் கூட்டத்தில் ‘தமிழக மீனவர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும்  இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. 2010-ம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. பேச்சுவார்த்தை என்ற பெயரில் இந்திய மீனவர்கள் காலம் கடத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

எனவே இந்திய மீனவர்களுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம்’ என தீர்மானம் இயற்றிய துடன், இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வலியுறுத்தி, யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இலங்கை மீனவர்களின் இந்த நம்பிக்கை இழப்புக்கு காரணம் இரு நாட்டு அரசுகளின் அரசியல் நடவடிக்கைகளே.

ஆழம் குறைவான கடல்பகுதி, தட்பவெட்பம், நீரோட்டம் போன்றவை மீன் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் உள்ளதால் வருடம் முழுவதும் மீன் உற்பத்தி உள்ள பகுதி பாக்ஜலசந்தி கடல் பகுதியாகும். அதே நேரத்தில் இருநாட்டு மீனவர்களுக்கும் பிரச்னைகளை உருவாக்கும் பகுதியும் இதுதான். இலங்கையின் உள்நாட்டு போருக்கு முன்பு வரை உள்நாட்டு மீன்பிடிப்பில் 40%  மீன்கள் பாக்ஜலசந்தி பகுதியில் பிடித்ததாகும்.

போரின் காரணமாக இலங்கை தமிழர்களின் மீன்பிடி தொழில் குறைந்த நிலையில், தமிழக மீனவர்களின் மீன்பிடி அதிகரித்தது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி பாக்.ஜலசந்தி கடல்பகுதியில் 3780 விசைப் படகுகள், 15 ஆயிரம் மரவல்லங்கள், 20 ஆயிரம் சிறிய ஃபைபர் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதே போல் இலங்கை தரப்பில் 2500 கண்ணாடி இழை படகுகளும், 2200 மரவல்லங்களும், 160 மீன்பிடி கலன்களும் 43 இழுவை படகுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மீன்பிடி உற்பத்தி உயர்ந்தது போல் மீன்பிடி முறைகளும் மாற்றத்துக்கு உள்ளானது. சிறிய படகுகள் அதிக இழுவை சக்தி கொண்ட விசைப் படகுகளாக மாற்றப்பட்டன. சிறிய இழுவலைகள் ராட்சச வலைகளாக மாறின. அரசால் தடை செய்யப்பட்ட கொல்லிமடி, சுருக்குமடி போன்றவற்றின் மூலம் மீன்பிடிப்பதும் தொடர்ந்தது. இவற்றால் நெருக்கடிக்குள்ளானது பாக்ஜலசந்தியின் கடல்வளம்.

fishermen%207%20550%2011%281%29.jpg

இதனை தடுக்க 2010- ம் ஆண்டு இந்திய-இலங்கை அரசுகளின் அனுமதியுடன் இருநாட்டு மீனவர்களிடை யேயான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 3-கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் மாநில மீன்துறை அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதன்படி தமிழக விசைப்படகுகள் ஆண்டுக்கு 72 நாட்கள் மட்டுமே மீன்பிடிப்பது, இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது, இலங்கையின் கரை பகுதியில் இருந்து 5 கடல் மைல் தொலைவுக்குள் இந்திய இழுவை படகுகள் வரக்கூடாது, 5 ஆண்டுகளுக்குள் இழுவை படகுகளின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்தி கொள்வது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடி உரிமை கேட்டுவந்த தமிழக மீனவர்களுக்கு, இலங்கை கடல் பகுதிக்குள்ளேயே சென்று மீன்பிடிக்கும் உரிமையை தரக் கூடிய இந்த ஒப்பந்தத்தை இந்திய அரசோ,  இலங்கை அரசோ சட்டரீதியாக அங்கீகரிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தை அமலாக்குவது குறித்தோ, கண்காணிப்பது குறித்தோ எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. மேலும் இருநாட்டு அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையை ஏதோ நாட்டுப்புற பஞ்சாயத்து போல இருநாட்டு அரசுகளும் கருதியது.

இதனால் கைக்கு எட்டிய தீர்வு கரைக்கு வராமலே போனது. அடுத்ததாக இலங்கை மீனவர்களுக்கும், இந்திய நாட்டுப்படகு மீனவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய கொல்லிமடி, சுருக்குமடி மீன்பிடித்தலை தடுக்கவேண்டிய தமிழக மீன்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதனால் எளியவர்களின் தொழிலாக இருந்த மீன்பிடி இன்று வசதி படைத்தோரின் தொழிலாக மாறி கிடக்கிறது.

fishermen%207%20550%201.jpg

இந்நிலையில் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மீண்டும் இருநாட்டு மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் இலங்கை மீன்வர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் வளத்தை அதிகரிக்கும் வகையிலும் பாக்ஜலசந்தி பகுதிக்கென தனியான மீன்பிடி நெறிமுறை சட்டத்தை வகுக்க வேண்டும்.

இந்த சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்ட வலைகளின் மூலம் மீன்பிடிப்பதை முழுமையாக தடுப்பது. விசைப்படகுகளின் அளவு மற்றும் இழுவைத் திறன் இயந்திரங்களின் அளவு, வலைகன்னிகள் அளவு ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். இரு நாட்டு மீனவர்களிடையே உள்ள நடுநிலையாளர்களை கொண்டு குழுவின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கவும், அதனை அமல்படுத்தவும் கண்காணிக்கவும் சட்ட ரீதியான ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

fishermen%207%20550%202.jpg

இலங்கை மீனவர்களின் முக்கிய கோரிக்கையான இழுவலை படகுகளை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள ஏதுவாக, இந்திய மீனவர்களிடம் உள்ள இழுவலை படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும். மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பை அதிகரிக்கும் வகையில், புதிய மீன்பிடி கலன்களை மீனவர்களுக்கு மானியத்துடன் வழங்க போதுமான நிதி ஒதுக்க வேண்டும். இதற்கான திட்டத்தை பெயரளவில் செயல்படுத்தாமல் மீனவர்களின் மாற்றுவாழ்வாதார திட்டமாக இதனை செயல்படுத்த வேண்டும்.

இந்த திட்டம் செயலுக்கு வரும் வரையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்காமலும், சிறைபிடித்து செல்லாமலும் இருக்க ராஜ்ஜிய ரீதியிலான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதுடன் சிறிய விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிக்கும் மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்கவும், வலைகளை உலர்த்தி ஓய்வு எடுக்கவும் பாரம்பரியமாக இருந்து வந்த உரிமைகளையும் இந்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும். இதன் மூலம் பாக்ஜலசந்தி பகுதியில் அமைதியான மீன்பிடி தொழிலுக்கு வழி பிறக்கும்’’ என்றார்.

அலைகள் ஆர்ப்பரிக்கும்....

http://www.vikatan.com/news/article.php?aid=53649

Link to comment
Share on other sites

வலைவீசும் தமிழக அரசு...வழுக்கிச் செல்லும் மத்திய அரசு! (நடுக்கடல்...நடுங்கும் உயிர்கள்: தொடர்-8)

 

fishermen%208%20logo.jpg

"இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு அங்கு சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், மீனவர்களின் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதிக் கொண்டே இருக்கிறார்.

ஆனால் பிரதமர் இந்த கடிதத்தை படிக்கிறாரா என்ற சந்தேகம் மீனவர்கள் மத்தியில் எழுந்து உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 4 முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும், இலங்கை கடற்படையினர் தங்களது அட்டூழியத்தை நிறுத்தி கொள்ளவில்லை என்பதே இந்த சந்தேகத்திற்கான காரணமாக உள்ளது.

rameswram%20new.jpgமீனவர்களின் இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் உள்ளது இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிளா சமரவீராவின் சமீபத்திய பேச்சு. ‘‘இலங்கை கடல் பகுதிக்குள் வரும் மீனவர்களை தொடர்ந்து சிறை பிடிப்போம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்’’ என கடந்த வாரத்தில் அவர் கூறியுள்ளார். இலங்கை அமைச்சரின் இந்த பேச்சு மீனவர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நீண்ட காலமாக நீடித்து கொண்டிருக்கும் இந்த மீனவர் பிரச்சனைக்கான தீர்வு குறித்து இந்திய - இலங்கை நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பின் தமிழக பிரதிநிதி யு.அருளானந்தம் முன் வைக்கும் கருத்துக்கள் குறித்து காண்போம்.

‘‘விடுதலைப் புலிகளை காரணம் காட்டி இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்த இலங்கை கடற்படையினர், விடுதலைப்புலிகளின் அழிவுக்கு பின்னரும் கடந்த 5 ஆண்டுகளாக நம் மீனவர்கள் மீது தாக்குதலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றனர். இந்திய, தமிழக அரசியல் சூழலுக்கு ஏற்ப இந்த தாக்குதல்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ நடந்து வருகிறதே தவிர முற்றிலும் நின்று விடவில்லை.

இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் குரல் உயரும்போதெல்லாம் நம் மீனவர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் இலங்கை கடற்படையினர் தங்களது கடல் பகுதியை, வளத்தினை காப்பதற்காக நம் மீனவர்களை சிறைபிடிக்கின்றனர், தாக்குகின்றனர் என சொல்வதை ஏற்க முடியவில்லை. அப்படி தாக்குதலுக்குள்ளாகும் நம் மீனவர்களை ஒரு முறை கூட நமது கடற்படையினர் காப்பாற்றியது இல்லை.

fishermen%208%20600%203.jpg

இலங்கை ராணுவத்தை கண்டித்ததும் இல்லை. அதன் தொடர்ச்சிதான் இலங்கை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், கடற்படை அதிகாரிகள் என அனைவரும் நம் மீனவர்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த கருத்துகளை இந்திய அரசு ஏனோ பொருட்படுத்துவதும் இல்லை.

இந்நிலையில் இலங்கை கடற்படையினர் தங்கள் கப்பல்களை கொண்டு நம் மீனவர்களின் படகுகளின் மீது மோதுவது, வலைகளை வெட்டி எறிவது, உடைமைகளை சேதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் நமது மீனவர்களை பொருளாதார ரீதியாக முடக்க இலங்கை அரசு முயல்கிறது. மீனவர்களை பரிதாபகரமான சூழலுக்கு கொண்டு செல்லும் இது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு திட்டமிட்டு செய்து வருவதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

fishermen%208%20600%201.jpg

மீன்பிடிக்க செல்லும் ஒரு விசை படகினை நேரிடையாக நம்பி 7 குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றன.  10- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மறைமுகமாக நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளால் இந்த குடும்பங்கள் மட்டுமல்ல மீனவர்களை நம்பி தொழில் செய்து வரும் தென்மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் கூட பொருளாதார இழப்புக்கு ஆளாகி உள்ளன. இதனால் மூழ்கிக் கொண்டிருக்கும் மீனவர்களின் வாழ்வாதரத்தை மீட்டு எடுக்கவும், இந்திய பொருளாதாரத்தை காக்கவும் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாக்நீரினை பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்களின் வாழ்க்கையை மாற்ற, மத்திய அரசு மாற்று திட்டங்களை செயல்படுத்த முன்வருவதுடன் அதற்கான நிதியையும் ஒதுக்க வேண்டும். தொடர்ந்து மீன்பிடிப்பில் ஈடுபட விரும்புபவர்களை ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட வைக்க வேண்டும். அதற்கு ஏதுவாக அவர்களது படகுகளை மாற்றி கொள்ள அரசு நிதியுதவி செய்ய வேண்டும்.
 

fishermen%208%20250.jpgஅடுத்ததாக மீன்பிடிப்பில் ஈடுபட விரும்பாத, மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாத நலிவடைந்த  மீனவர்களின் படகுகளை அரசாங்கமே எடுத்து கொண்டு அந்த படகுக்கான இழப்பீட்டு தொகையினை வழங்க வேண்டும்.

அதே போல் மாற்றுத் தொழிலில் ஈடுபட விரும்பும் மீனவர்களுக்கு தேவையான நிதியுதவியை அரசு அளிக்க வேண்டும். இவை எல்லாம் போக பாக்.நீரினை பகுதியில் தொடர்ந்து மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களின் நலனுக்காக அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

முறையற்ற வகையில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது. மீன்வளத்தை அழிக்கும் வகையிலான மீன்பிடித்தலை முற்றிலும் தடுத்து நிறுவுவது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக இதனை கண்டு கொள்ளாமல் இருந்து வருவதை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவற்றையெல்லாம் விட முக்கியமாக இரு நாட்டு மீனவர்களும் சுமூகமான முறையில் மீன்பிடிப்புக்கு வழி செய்யும் வகையில் இரு நாட்டு மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு விரைவாக ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கை மீனவர்களின் முக்கிய கோரிக்கையான இழுவலை மீன்பிடிப்பை நிறுத்துவதற்கு ஏதுவாக குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் காலக் கெடு அளிக்க வேண்டும். இந்த 2 ஆண்டு காலத்தில் நம் மீனவர்கள் பாரம்பரிய பகுதிகளில் சென்று பிரச்னை ஏதும் இன்றி மீன்பிடித்து வர உரிய உத்தரவாதத்தை இலங்கை அரசிடம் இருந்து பெற்று தரவேண்டும்.

இவற்றை எல்லாம் விரைந்து செய்வதன் மூலம் நீடித்துக் கொண்டிருக்கும் நீண்ட கால பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அரசின் முயற்சிகளுக்கு நமது மீனவர்களும் ஒத்துழைக்கும் வகையில் தங்களுக்குள் சுய கட்டுப்பாட்டுகளையும் கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் வளம் மிக்க வங்க கடலை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வும் வளம் பெறும்’’ என்றார்.

jaya%20modi.jpg

சில ஆண்டுகளுக்கு முன் மீனவர்களை ‘‘பேராசைக்காரர்கள்’’ என்றார் கருணாநிதி. யாரோ சில மீனவர் களின் முறையற்ற தொழிலால் ஒட்டு மொத்த மீனவர்களும் பாதிக்கப்படுவதையும், இலங்கை அரசின் பொருளாதார தாக்குதல்களால் முடங்கிக் கிடக்கும் அப்பாவி மீனவர்களின் கண்ணீர் வாழ்க்கையையும் கண்டும் காணாமல் இருந்தது போதும்; இனியாவது விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் ஆட்சியாளர்கள். அதன் மூலம் நடுக்கடலில் நடக்கும் பயங்கரத்திலிருந்து நடுங்கும் மீனவ உயிர்களை காக்க வேண்டும்.

தொடர் நிறைவடைந்தது....மீனவர்களின் பிரச்னையும் முடிவுக்கு வரவேண்டும் என்பதே தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பு ஆகும்!

http://www.vikatan.com/news/article.php?aid=54002

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
    • தெரியும் ஆனால் இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................
    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.