
1964ஆம் ஆண்டு வெளியாகி, மெகா வெற்றி பெற்ற ‘கர்ணன்’ தமிழ்ப் படம் கடந்த வெள்ளியன்று மீண்டும் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அன்று ஈஸ்ட்மென் கலரில் வெளியான படத்தை இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம் புது மெருகேற்றி ரிலீஸ் செய்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்துவிட்டு, ஆனந்தக் கண்ணீர் விட்டுப் பாராட்டினார் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். பத்மா சுப்ரமணியம், “இதே போல சிவாஜியுடைய ‘திருவிளையாடல்’ படத்தையும் டிஜிட்டலில் கொண்டுவர வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டாராம். ஒய்.ஜி.மகேந்திரன், “‘சரஸ்வதி சபதம்’ படத்தையும் இதே மாதிரி பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு,” என்றாராம்.
“தமிழ்நாடெங்கும், மொத்தம் 70 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி, சிவாஜி ரசிகர்களை மட்டுமின்றி, இன்றைய இளைய தலை முறையினரையும் கவர்ந்துள்ளது கர்ணன்,” என்கிறார் படத்தை வெளியிட்டிருக்கும் வினியோகஸ்தரான சாந்தி சொக்கலிங்கம்.
தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவரை வைத்துப் பல படங்களை எடுத்தவர் பி.ஆர்.பந்துலு. இவர், ‘வீரபாண்டிய கட்ட பொம்மன்’, ‘கர்ணன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ரகசிய போலீஸ்’ என்று பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இவர் இயக்கிய படம் ‘கர்ணன்’. பிரம்மாண்டமான முறையில் ஜெய்ப்பூர் அரண்மனையில் படப்பிடிப்பு செய்யப்பட்டது. மகாபாரத போர்க் காட்சிகள் குருட்ஷேத்திரத்தில் எடுக்கப்பட்டன. இப்படி வட இந்திய லொகேஷன்களில் படம் பிடிக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் ‘கர்ணன்’தான். போர்க்களக் காட்சிக்குத் தேவைப்பட்ட அனைத்து ரதங்களையும் சென்னையில் வடிவமைத்து, குருட்ஷேத்திரத்தில் லொக்கேஷனுக்கு எடுத்துக்கொண்டு போய் படப்பிடிப்பு நடத்தினார்கள். இந்திய அரசாங்கத்தின் அனுமதி பெற்று, இந்திய ராணுவத்தின் படை வீரர்கள் முக்கிய போர்க்களக் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டார்கள்.
படத்தில் மொத்தம் 16 பாடல்கள். அத்தனையும் சூப்பர் ஹிட்ஸ். ஆயிரம் கரங்கள் நீட்டி என்ற பாடலை டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ், திருச்சி லோகநாதன் என்று அந்தக் காலத்தில் நான்கு பிரபல பாடகர்களையும் ஒரே நேரத்தில் ஸ்டூடியோவுக்கு வர வழைத்துப் பாடச்செய்து, ரெகார்டிங் பண்ணினார் எம்.எஸ்.வி. அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார்.

64ஆம் வருடம் பொங்கலுக்கு ரிலீஸான கர்ணன் படத்தை இப்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடும் எண்ணம் எப்படி வந்தது?
“பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களை ரிலீசுக்கு வாங்கி, தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்வது வழக்கம். அதுபோல ‘கர்ணன்’ படத்தை, இப்போதுள்ள லேட்டஸ்ட் டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மெருகூட்டி ரிலீஸ் பண்ணினால் என்ன? என்ற எண்ணம் எழுந்தது. விசாரித்துப் பார்த்தபோது, படத்தின் நெகடிவ் உரிமை ராஜ் டி.வி. நிர்வாகத்தினரிடம் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் எனது ஆசையைச் சொன்னபோது, மகிழ்ச்சியோடு சம்மதித்து, எல்லாவிதமான ஒத்துழைப்பும் தர முன் வந்தார்கள். ஜெமினி லேபுக்குச் சென்று படத்தின் நெகட்டிவைப் பார்த்தபோது, சவுண்டு டிராக் முற்றிலுமாக அழிந்து போயிருப்பதும், படத்தின் தரமும் மோசமாக இருப்பதாகவும் தெரிய வந்தது.
அதன் பிறகு மும்பை, ஹைதராபாத் என்று அலைந்து தக்க தொழில்நுட்ப வல்லுனர்களைக் கலந்தாலோசனை செய்தோம். பிரிண்டை ஓட்டிப் பார்த்து, பின்னணி இசைக்கான குறிப்புகளை எழுதிக்கொண்டு, மறுபடியும் ஏராளமான இசைக் கலைஞர்களைத் திரட்டி, அந்த நோட்ஸ்களின்படியே பின்னணி இசை வாசிக்கச் செய்து, பின்னணி இசையைச் சேர்த்தோம். அதே போல உயர் டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஃபிலிமையும் டிஜிட்டல் பிரிண்ட் ஆக்கினோம். எல்லாமாகச் சேர்ந்து ஐம்பது லட்சம் ரூபாய் வரை செலவானது. எல்லாம் முடிந்து பிரிண்டைப் பார்த்தபோது, நாலு வருஷ காலம் முயற்சி செய்து, நாம் உழைத்ததும், செலவழித்த பணமும் துளியும் வீண்போகவில்லை என்றே தோன்றியது,” என்கிறார் சாந்தி சொக்கலிங்கம்.
நன்றி கல்கி















