Jump to content

எம்முள் வாழ்ந்த பெரியார்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை

யாழ் தென்மராட்சியின் மட்டுவில் கிராமத்தில் 1899 ஆம் ஆண்டு ஆணிமாதம் 27ம் திகதி சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளுக்கு மகனாகப்பிறந்தார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள். தயாரின் தனங்கிளப்பு ஊரிலுள்ள காரைத்தூவிநாயகர் குலதெய்வமான படியால் இவருக்கு கணபதிப்பிள்ளை என்று பெயர் சூட்டப்பெற்றது.

மட்டுவில் அமெரிக்கமிசன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். அதன் பின்னர் தனது 17ஆவது வயதில் நம்பிக்கை, தெய்வமயம் இலக்கிய, இலக்கண அறிவு நிரம்பப் பெற்ற மட்டுவில் க.வேற்பிள்ளையிடம் பாடம் கற்று வந்த பொழுது நாவலர் காவியப் பாடசாலையைப் பற்றி கேள்விப்பட்டு அங்கு சென்று கல்விபயின்றார். வண்ணார்பண்ணை காவியப்பாடசாலை பெரிதும் அவரை விருப்பத்தோடு கல்வி கற்க வைத்தது. சுண்ணாகம் அ.குமாரசுவாமிபுலவர்,

த.கைலாசப்பிள்ளை, வித்துவான் ந.சுப்பையாபிள்ளை, ஆகியோரிடம் இலக்கண, இலங்கியங்களை குருசீட முறையில் கற்றார். பழமையில் பற்று வைக்கும் பணிகளை இவர் காவியப் பாடசாலையில் கற்றுக் கொண்டார். மதுரைச் தமிழ்ச் சங்க பண்டிதர் பரீட்சையில் சித்தி பெற்றார்.

தனது 3 ஆவது வயதில் தாயை இழந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் சிறந்த கல்வி மானாக வளர வேண்டும் என்பதில் பண்டிதமனியின் தந்தை சின்னத்தம்பி ஆர்வமுடன் செயற்பட்டார்.

திருநெல்வேலி சிவன் கோயிலுக்கு அருகில் கல்வியில் துறைபோன பலரும் ஒன்று கூடி நாட்டு நடப்புகள் பற்றி அலசுவார்கள் ஆங்கிய இலக்கியம், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் தங்கள் கருத்துக்களை எடுத்துக்கூறி விவாதிப்பார்கள். அந்த கலந்துரையாடல்களில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையும் கலந்து கொள்வார். இதனால் பண்டித மணிக்கு ஆங்கில இலங்கியங்களில் நாட்டம் ஏற்பட்டது.

யாழ்.மத்திய கல்லூரி ஆசிரியராக விளங்கிய கலைப்புலவர் நவரட்ணம் என்பவர் 1931 ஆண்டு திருநெல்வேலியில் கலா நிலையம் ஒன்றினை ஆரம்பித்து வைத்தார். அதில் உறுப்பினராகவும் பண்டிதமணி அவர்கள் இருந்தார். பண்டிதமணி ஆசிரிய கலாசாலையில் பயிற்சியை முடித்துக் கொண்டு திருநெல்வேலியில் சைவ ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் 1929ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராக இருந்ததனால் கலா நிலையத்திற்கு அடிக்கடி வந்து பல தொண்டுகள் புரியத்தொடங்கினார். மக்களின் பார்வைக்காக இலக்கண, இலக்கிய புத்தகங்களையும் தருவித்தார். எந்நேரமும் கலாநிலையம் மக்களால் சூழப்பட்ட ஒரு இடமாகத் திகழ வைத்தார்.

நகைச்சுவை ததும்ப உரையாற்றும் அவர் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். இந்தியாவில் இருந்து அறிஞர்களை வரவழைத்து சமய சொற் பொழிவுகள் நிகழத்தினார்.

பண்டிதமணி அவர்கள் ஆசிரிய கலாசாலையில் கற்பிக்கும் முறை வித்தியாசமானது. மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் கல்வி புகட்டுவார். இதனால் மாணவர்கள் மத்தியில் விருப்புடையவராக விளங்கினார். இவரின் பாடத்தை மாணவர்கள் வாஞ்சையுடன் கற்றனர்.

இவரது நவபாரதம் என்ற உருவக்கத்தை 1938ஆம் ஆண்டு மலரில் வெளிவந்துள்ளதை அறிந்த பலரும் தேடித் தேடி படித்தார்கள். இவ்வாறு 30 வருடங்கள் சைவாசிரியப் பணியை தொடர்ந்து செய்தார் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள். இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பெரும் புலவர்களாக விளங்கியதுடன் சிலர் சமய பண்பாட்டினை பரப்புவர்களாகவும் இருந்துள்ளார்கள்.

பணிவும் அடக்கமும் மிகுந்த பண்டிதமணி அவர்கள் சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவரது படைப்புகள், மாணவர்களின் உயர்தர வகுப்பு பாடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. 'கம்பன் ஒரு வம்பன்' 'அவையடக்கம்' போன்றவை க.பொ.த சாதாரண தரம் மாணவர்களுக்கென பாடநூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இவர் எழுதிய கந்தபுராண தக்ஷண காண்ட உரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் யானைமேல் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்ற சிறப்பும் பெற்றது. சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல், தமிழர் பண்பாடு ஆகிய துறைகளில் இவர் ஆற்றிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 23 நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

1978 ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழகம் பண்டிதமணிக்கு 'இலக்கிய கலாநிதி' பட்டத்தை வழங்கி கௌரவித்தது. யாழ்ப்பாணத்து மக்களை மனிதர்களாக வாழச் செய்வது புராண படனமாகும் கந்த புராண கலாச்சாரம் தான். அந்திய நாட்டவரின் ஆசை வார்த்தையில் மயங்காது மக்களை காத்து வந்தது. தமிழ், சைவம் இரண்டையும் இரு கண்களாக போற்றிய பண்டிதமணி அவர்கள் 86 ஆண்டுகள் நைட்டிக பிரமச்சரியாக வாழ்ந்து 1986 ஆண்டு பங்குனி மாதம் 13 திகதி இறைவனடி சேர்ந்தார். அவரது பூதவுடல் திருநெல்வேலி கலா நிலையத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் நூற்றாண்டு விழா 1999 ஆம் ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

-சூரியன் இணையம்-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.