தமிழ்நாட்டில் தேடப்படுகிற கொலைகார டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவில் அனுமதிக்க கூடாது: மன்மோகனிடம் வைகோ வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மறுமலர்ச்சி பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
மன்மோகன் சிங்கை இன்று புதன்கிழமை காலை புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தார். சுமார் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து பிரதமரிடம் வைகோ விரிவாக எடுத்துச் சொன்னார்.
மன்மோகனிடம் அவர் அளித்த கோரிக்கை மனுவில், இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரேடார்களை வழங்கி இருப்பதை சுட்டிக்காட்டி அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அப்பாவித் தமிழர்கள் மீது தொடர்ந்து ராணுவத் தாக்குதல் நடத்திவரும் இலங்கைக்கு இந்தியா எந்தவித ராணுவ உதவியையும் செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கைக்கு ராணுவ உதவியையோ ராணுவ தளவாட விற்பனையையோ செய்வதில்லை என்று 1999ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை இந்திய அரசு உறுதியாகவும் உண்மையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
நளினி - முருகன் தம்பதியினரின் மகள் அரித்ரா தமிழகத்திற்கு வந்து கல்வி பயில விசா வழங்கவேண்டும் என்று பிரதமரிடம் நேரில் பேசிய போது வைகோ கேட்டுக் கொண்டார்.
சிறிலங்காவின் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தா சென்னை சூளைமேடு கொலை வழக்கில் தேடப்படுகிற நபர். அவர் இந்தியாவுக்கு வந்து இந்தியப் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து அறிக்கைகள் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்குரியது என்று மன்மோகனிடம் சுட்டிக்காட்டிய வைகோ, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
கொலையாளி டக்ள்ஸ் தேவானாந்தா குறித்து சென்னையிலிருந்து பழ. நெடுமாறன் வெளியிட்டு வரும் தென் செய்தி இதழில் இடம்பெற்றுள்ள செய்தி விவரம்:
தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவரை படுகொலை செய்த குற்றவாளியும், ஆட்களைக் கடத்தி மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுக்கு ஆளானவரும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவருமான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்து 15-04-06 நாளிட்ட தென்செய்தியில் விரிவானச் செய்தி வெளி யிட்டிருந்தது.
இவர் மீதுள்ள வழக்குகள் இன்னமும் தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
தேடப்படும் குற்றவாளியாக இவர் சென்னை நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அடிக்கடி இவர் தமிழ்நாட்டுக்கு வந்து செய்தியாளர் கூட்டங்களில் பேசுவதும் அரசியல் தலைவர்களைச் சந்திப்பதும் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி இவரைப் பொறுத்தவரையில் சட்டம் செத்துவிட்டதா? ஏன் இவர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை? தமிழகக் காவல்துறை தூங்குகிறதா? என்பது போன்ற கேள்விகளைக் எழுப்பியிருந்தோம்.
.
13-07-06 அன்று தினமணியில் டக்ளஸ் தேவானந்தாவின் சிறப்புப் பேட்டி வெளியிடப்பட்டுள்ளது.
புதுடில்லியில் வெளியுறவுத் துறைச் செயலாளர் சியாம் சரண் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்;.கே. நாராயணன் உள்ளிட்ட பல அதிகாரிகளையும் தலைவர்களையும் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துப் பேசினார்.
தினமணிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில்
'இலங்கையின் தற்போதைய சூழ்நிலை அங்குள்ள தமிழர்களின் நிலைக் குறித்து இந்திய அதிகாரிகள் மற்றும் தலைவர்களிடம் எடுத்துரைத்தேன்.
இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடைமுறைச் சாத்தியமான மூன்று அம்சத் திட்டங்களை இந்திய அரசிடம் அளித்துள்ளேன்.
இலங்கை அரசின் சார்பில் நான் அளித்தத் திட்டம் குறித்து தீவிரமாக ஆலோசிப்பதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'
மேலே கண்டச் செய்தி ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
தேடப்படும் குற்றவாளியாக சென்னை செசன்சு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா 1986ம் ஆண்டிலிருந்து இதுவரை 20 ஆண்டுகாலமாக கைதுசெய்யப்படவில்லை.
அவரை தேடும் முயற்சியிலும் தமிழகக் காவல்துறை ஈடுபடவில்லை. அப்படியானால் இந்த நாட்டுச் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவராக அவர் விளங்குகிறார் என்பது அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாட்டுக் காவல்துறை அவரை கைதுசெய்ய முடியாதபடி டில்லி தடுக்கிறது என்பதும் தெரிகிறது.
தேடப்படும் கொலைக் குற்றவாளி ஒருவர் பகிரங்கமாக டில்லிக்கு வந்து பிரதமரின் ஆலோசகர் மற்றும் வெளியுறவுத் துறைச் செயலாளர் உட்பட உயரதிகாரிகளை சந்திக்கக்கூடிய நிலைமையில் இருக்கிறார் என்று சொன்னால் இதைவிடக் கேலிக் கூத்து எதுவும் இல்லை.
தமிழ்நாட்டுத் தமிழன் படுகொலையானாலும் கவலையில்லை. டக்ளஸ் தேவானந்தாவைப் பாதுகாக்க வேண்டும் என்று டில்லி நினைக்கிறது.
தமிழ்நாட்டு மீனவர்களைத் தொடர்ந்து இலங்கைக் கடற்படை சுட்டுத் தள்ளியபோதும் பதில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், குறைந்தபட்சம் இலங்கை கடற்படைக்கு எச்சரிக்கை கூடவிடுக்காமல் டில்லி மௌனம் சாதிக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் டில்லியின் உண்மை உருவத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று தென்செய்தி இதழின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி-புதினம்
Page 1 of 1

Sign In
Register
Help


MultiQuote