சுவிஸில் 26 மாநிலங்களும் சுயமாக அதிகாரங்களைக் கொண்டு தாமே நிர்வகிக்கும் சமஷ்டி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. அதேபோன்று இலங்கையிலும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அவை தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் சமஷ்டி ஆட்சி முறையை நடைமுறைக்கு கொண்டு வருவதே பொருத்தமானது. இத்தகைய ஆட்சி முறையை கொண்டுவர சகல இனங்களும் பேச்சு நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதையே இந்த நாட்டுக்கு நாம் தெரிவித்து வருகின்றோம்.சுவிஸ் நாட்டின் அரசியல் விவகார அமைச்சைச் சேர்ந்த பொருளாதார அபிவிருத்தி அதிகாரி தமினானோ சுடே தமாத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார். காணாமல் போனோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு சுவிஸ் தலைநகர் பேர்னில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் போருக்குப் பின்னர் மீள் குடியமர்வு, அபிவிருத்தி என்பன முன்னெடுக்கப்படுகின்றன. சுவிஸ் அபிவிருத்தி நிறுவனம் அதற்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றது. தற்சமயம் அங்குள்ள நிலைமை முன்னேற்றகரமாக இருப்பதாக எமது தூதரகம் ஊடாக நாம் அறிந்துள்ளோம்.
அந்த நாட்டின் ஸ்திரத் தன்மைக்கு உடன் இரண்டு விடயங்கள் பூர்த்தியாக வேண்டும்.
ஒன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்தி அந்த நாட்டில் நல்லிணக்கத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டும். அதற்கு சகல இனங்களும் ஒன்றுபட்டு பேச்சு நடத்த வேண்டும்.
அரசுக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுக்களில் ஏற்பட்ட தேக்கநிலை நீக்கப்பட்டு விரைவாக பேச்சு நடத்த வேண்டும். இந்தப் பேச்சுக்களில் சகல இனங்களும் பங்குபெற வேண்டும்.
இரண்டாவது, மனித உரிமை நிலைமை மேம்பட வேண்டும். மனித உரிமை நிலைமையை மேம்படுத்த நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்த சிபார்சுகள் விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழுவால் சிபார்சுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவால் கொண்டு வரப்பட்ட விசாரணைக்கு சுவிஸ் ஆதரவு வழங்கியது. அதன் மூலம் சுவிஸின் நிலைப்பாட்டை இலங்கைக்கு தெரிவித்தோம்.
எமது தூதரகம் மூலமும் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு மூலமும் எமது நிலைப்பாட்டை இலங்கைக்கு தெரியப்படுத்தி வருகிறோம். இலங்கை விரைந்து செயற்பட்டு நல்லிணக்கத்தை கொண்டு வரவேண்டும் என்பதே எமது விருப்பம்.
இலங்கை நிலவரங்களை மதிப்பீடு செய்ய ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். அந்தக் குழு அங்கு செல்ல அனுமதியை இலங்கை மறுத்து வந்தது. இப்போது அந்தக் குழு அங்கு செல்ல இலங்கை அனுமதி வழங்கியதை நாம் வரவேற்கிறோம்.என்றார்.
சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகாரத்துக்கான ஆணைக்குழு உறுப்பினருமான மார்ரின்நப் பேசுகையில்:
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. தொடர்ந்து பேச்சுக்கள் இடம்பெறுவதன் மூலமே அது சாத்தியமாகும். கீழ் மட்டத்திலிருந்து பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டு மேல்மட்டம் வரை இடம்பெற்று தீர்வு காணப்பட வேண்டும். பேச்சுக்களில் சகல இனங்களும் உள்வாங்கப்பட வேண்டும்என்றார்.
http://tamilleader.com/prathanaalias/6140-2012-09-15-03-54-35.html















