உன் தந்தை எழுதுவது,
இது நீண்ட கடிதம்தான்
ஆனால்,
இதுவே இறுதியாகலாம்.
ஏனெனில்
உன் நினைவுகள் நெஞ்சடைக்க
இருமுறை சுவாசம் இழந்துவிட்டேன்.
உனக்கு நேரமில்லை
எனக்குத் தெரியும்.
முடியும்போது முடிந்தால் படி.
இந்த நிலவினைப் பார்க்கும் போதெல்லாம்
உன் ஞாபகம்தான்.
மேலே தெரியும் உத்தரத்து வெண்ணிலவும்,
கயிற்றுக் கட்டிலும்,
நான் சொன்ன
நட்சத்திரக் கதைகளும்,
உனக்கு நினைவிருக்குமோ என்னவோ...
ஆனால்
உன் நினைவுகளோடு மட்டும்தான்
என் நிமிடங்கள் நகர்கிறது.
இதோ பரண் மீதிருந்த
உன் விளையாட்டு பொம்மையெல்லாம்
தரைமீது ஆடிக்கொண்டு,
அவை மட்டுமே இன்று என் ஆறுதல்களாய்...
அமரக்கூட முடியாதவளாய்
உன் அம்மா படுக்கையில்.
உனக்காகவே
ஓடி ஆடியவள் அல்லவா!
ஆனால்,
இன்றும் நீ வந்தால்
அவள் இருபது வயது குறைந்து
எழுந்து ஓடி வருவாள்
எனக்குத் தெரியும்.
தரைமீது நடக்கவே
எங்கும் என் விரல் தேடியவன்
அன்று,
விண்மீது பறந்தபோது
வியப்பாகத்தான் இருந்தது.
தனிமையில் எம் வாழ்க்கை மட்டுமல்ல
வலிகளும் நியாயமானது.
அயல் நாட்டில்
உன் வாழ்க்கையைப் பார்க்கும்போது.
ஒற்றை நிலத்தில்
உயிர் இளைத்து,
உடல் கருத்த
ஏழை விவசாயி நான்.
உன் குரல் கேட்டு கண்ணீர் சிந்த
தொலைபேசி வசதியில்லை.
50 பைசாவிற்கு
நான் எழுதி அனுப்பும்
என் கடிதம்
உனைச் சேர முடிவதில்லை.
இக்கடிதம்கூட
நெடுநாளைய சேமிப்பு.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்
தன் மகனைச் சான்றோன்
எனக்கேட்ட தாய்.
சான்றோன் எனப் பலர் கூறக் கேட்டோம்.
ஆனால்,
அச்சான்றோனின் குரல் கேட்கத் தவிக்கின்றோம்.
http://tamilnanbargal.com/node/39862
Edited by akootha, 30 August 2012 - 11:55 AM.


















