
http://puradsi.com/wp-content/uploads/2012/08/Sivanthan030812-UK_004.jpg
சொந்த மண் சிவந்தபோது சிதறிப்போனோம்!
மண்விட்டு முதலடி வைத்தபோதே அகதியானோம்!
அவதிப்பட்ட அகதிகளாய்...
அநியாயமாய் விரட்டப்பட்டோம்!
வாழ்மனை முற்றம் சுற்றம்
சொந்தமண் எல்லாமே தூரவிட்டு,
அல்லாடும் வாழ்வோடு
தூரதேசங்களில் அடைக்கலமான...
அவதிதேசத்தின் அகதிகள் நாம்!
சொந்தமண்ணோடு எம்மூர் நினைவுகளும்,
ஊர்த்தெருவின் புழுதிமண் வாசனையும்
பெய்தமழையில் எம் கண்ணீரில் கரைந்துபோக...
பழைய நினைவுகளாய் அடங்கிப் போகிறது!
மீண்டும் மீண்டும் துளிர்க்கும் நினைவுகள்
ஊர் ஞாபகங்களை மீள மீள உயிர்ப்பித்தாலும்,
இன்றைய செய்தித்தாளின் சேதிகளும் ஊர்க்கதைகளும்,
எஞ்சிநிற்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கைகளையும்
இல்லாமற் செய்துவிடுகின்றன!
நடந்தது நடக்கின்றது அனைத்தும் போக,
நடக்கப்போகும் எதிர்காலத்தில்...
என் ஒரே ஆசை,
என் ஊரில்தான் என்னுயிர் போக வேண்டும்!















