Published on Saturday, 21 July 2012 12:59

லண்டனில் மாமியாரை சப்பாத்திக் கட்டையால் 20 முறை அடித்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து 121 கி.மீ. தூரத்தில் உள்ளது சவுத்தாம்டன். இங்கு வசிப்பவர் இக்பால் சிங். இவருடைய தாய் பல்ஜித் கவுர் பட்டார் (56), மனைவி ராஜ்வீந்தர் சிங் (36). 2010 ஆகஸ்ட் மாதம் சவுத்தாம்டன் வந்தார் பல்ஜித். மகன், மகளுடன் 6 மாதம் தங்கி செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால், வீட்டுக்கு வந்ததில் இருந்து மாமியாருக்கும் மருமகளுக்கும் தினமும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. 2011 பிப்ரவரி 27 அன்று இந்தியா திரும்ப இருந்தார் பல்ஜித். ஆனால், 25 ஆம் தேதி வீட்டில் இருந்து ஜான் பைக் என்ற டாக்டருக்கு போன் செய்த ராஜ்வீந்தர், மாமியாருக்கு நெஞ்சு வலி, உடனே வாருங்கள் என்று அழைத்தார். அதன்படி வீட்டுக்கு சென்ற போது குளியல் அறையில் பல்ஜித் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது மண்டை உடைந்திருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மருமகளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, குளியல் அறையில் வழுக்கி தலையில் அடிப்பட்டு இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்த போது மாமியாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார் ராஜ்வீந்தர். வீட்டுக்கு வந்ததில் இருந்து என்னை கேவலமாக திட்டிக் கொண்டே இருந்தார். நான் ஷவரில் குளிக்க சென்ற போது, என்னை வெளியில் இழுத்து போட்டு துடைப்பத்தால் அடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்து சப்பாத்தி கட்டையால் தலையில் 20 முறை பலமாக அடித்தேன் என்று ராஜ்வீந்தர் வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்த வழக்கு வின்செஸ்டர் கிரவுன் கவுன்டி கோர்ட்டில் நடந்தது.
வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி பர்னெட், கொலை செய்தது மட்டுமல்லாமல் தடயங்களை மறைத்துள்ளார் ராஜ்வீந்தர். எனவே அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன். பரோலில் வெளிவர குறைந்தபட்சம் 11 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
நன்றி - srilankamirror.
http://www.srilankamirror.com/tamil/features-home/485-2012-07-21-07-29-32


















