
பெண் எனப்படுபவள் பூவினைப்போன்றவள், மென்மையானவள், ஆண்களின் சேவைக்காகவே பிறந்தவள் என்ற எங்கள் எரித்துப்போடவேண்டிய கொள்கைளும், சில இலக்கியங்களும், பாடல்களும், இன்றும் பெண்மை பேதலித்துப்போய் ஓரிடத்தில் உற்காரவைக்கப்படுவதற்கு காரணங்களாக அமைந்துள்ளன போலும்.
ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தால் அந்த குடும்பத்திற்கு அது தேவதையின் பரிசாகவும், தங்கள் குடும்ப குல விளக்காகவுமே பெற்றவர்களும், உறவினர்களும் அந்த பெண்ணை கண்ணும் கருத்துமாக வளர்த்துவருகின்றனர்.
தாய், தந்தை, பெரியதந்தை, சிறிய தந்தை, மாமன், என்ற உறவுகள் அவளின் வளர்ச்சியிலும், அவளின் பாதுகாப்பிலும் பங்குகொண்டு அவளை சீரிய குணங்கள் உடைய ஒரு நற்குணவதியாக சமுகத்திற்கு தர தம்மாலான அத்தனையினையும் அவளுக்கு தந்து அவளை சமுகத்தில் உயர்ந்தவளாக்குகின்றனர்.
முன்பொரு காலத்தில், பாரதி கண்ட புதுமைப்பெண் என்ன? அதைவிட மேலே சென்று புதிய வரலாறுகள் பலவற்றையும் இந்த எம்மினப்பெண்கள் படைத்த வரலாறுகளை நாம் அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட்டோமா என்ன?
சில வருடங்களுக்கு முன்னர்கூட நட்டநிசி மட்டுமல்ல நள்ளிரவு தாண்டியும், எம்மினப்பெண்கள் தங்கள் அண்ணன்மார்கள் உள்ளனர் எம் பாதுகாப்புக்கு என்று எங்குமில்லா பெண் விடுதலை கண்டுநின்ற சரித்தரங்களும் அவ்வளவு சீக்கிரமாக மறைந்துபோகினவோ?
ஒரு நாடு முன்னேறுகின்றது என்றால் அந்த நாட்டில் பெண்களின் கல்வித்தரம், பணியிடங்களில் அவர்களின் தலைமைத்துவம், பல்துறைகளிலும் பெண்களின் முன்னேற்றம் என்பனவே பிரதான காரணிகளாக இருக்கும்.
ஆனால் இன்று எம்போன்ற நாடுகளில் இத்தனையினையும் எட்டிப்பிடிக்க பெண்கள் அனுபவிக்கும் வக்கிரகங்கள், கொடுமைகள் எத்தனை! எத்தனை!!
முன்னேறத்துடிக்கும் பெண்களுக்கு பெரும் சவாலாக இன்று இருப்பது காமவெறி, சதைப்பசி கொண்ட சில ஓநாய்களின் பாலியல் ரீதியான அதிகார துஸ்பிரயோகமே என்று கூறலாம்.
அன்றாடம் இது பற்றி பல தகவல்கள் வெளிவரும்போது, நெஞ்சம் திடுக்கிடுகின்றது. சமுகத்தில் தம்மை உயர்ந்தவர்களாகவும், வல்லவர்களாகவும் காட்டிக்கொள்ளும் சிலர் கேவலமான தமது காம இச்சைகளுக்காக கீழ்த்தரமாக நடந்துகொள்வது சமுகத்தின்மேல் அக்கறைகொண்டுள்ளவர்களின் நெஞ்சங்களில் பெரும் இடியாகவே விழுகின்றது எனலாம்.
இந்த அதிகாரம், அபிமானங்களை வைத்து கரட்டி ஓணான் பாணியில் பெண்களை வெருட்டி அல்லது ராச்சர் கொடுத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நடவடிக்கைகள் இன்று பரவலாக எல்லா இடங்களிலும் அதிகரித்து சென்றுகொண்டிருக்கின்றது.
கல்விநிலையங்களில் இருந்து பல்கலைக்கழகம் வரையும், சிறிய வியாபாரநிறுவனங்களில் இருந்து பெரிய பெரிய நிறுவனங்கள், திணைக்களங்களிலும் ஒரு சில அதிகாரிகளால் இந்த பெண்கள்மீதான பாலியல் ரீதியான அதிகார துஸ்பிரயோகங்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.
பெரும்பாலும் இப்படியான காட்சிகளை திரைப்படங்கள், நாடகங்களிலே காணும்போதுகூட மென்மையான மனம் படைத்தவர்களால் அதையே தாங்கமுடியாது உள்ளது. இந்த நிலையில் அந்த நிழல்கள் எம் சமுகத்தில் நிஜமாகவே நடக்கும்போது அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை.
எம் சமுகத்தில் இன்று தொழில்புரியும், உயர்கல்வி கற்கும் பெண்களின் ஒரு சில தற்கொலை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஆனால் அவை பற்றிய தீரமான விசாரணைகள் முழுமையாக நடத்தப்படுவதில்லை. அந்த தற்கொலைகளின் பின்னால் இது போன்ற சில அதிகாரத்தைப்பயன்படுத்தி பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கப்பட்ட தகவல்கள் கூடத்தொழில் புரிபவர்கள், அல்லது கூட கல்வி கற்பவர்களால் கதை வழியாக காதுகளை எட்டுகின்றன.
ஆனால் அவற்றுக்கு காரணமானவர்கள் சர்வ சாதாரணமாக வழமைபோலவே பகட்டாக சமுகத்திற்கு தங்கள் அப்பாவி முகத்தை காட்டிக்கொண்டுதான் உள்ளனர்.
இதிலும் பெரும் கேவலாமான விடயம் என்னவென்றால் இப்படி அதிகார ரீதியில் தமது பாலியல் வக்கிரத்தை திணிப்பவர்கள் 45 வயதினை தாண்டியவர்களாக இருப்பதே. அவர்களுக்குகூட பருவமடைந்த பெண் பிள்ளைகள் இருப்பார்கள்.
இந்து சமய முறைப்படி இல்லறம் தாண்டி வனப்பிரஸ்தத்திற்கு செல்லும் வயதில் இவர்களுக்கு இளமை திரும்பி, பாலியல் வக்கரிப்பு ஏற்படுவது ஆச்சரியமாகவும், வேதனையாகவுமே இருக்கின்றன.
இதிலும் ஒரு சில நிறுவனங்கள், வங்கிகளின் மேதிகாரிகளின் நடவடிக்கைகளை பாராட்டியே ஆகவேண்டும், சில நிறுவனங்கள், வங்கிகளில் இப்படியான சில பெண்கள் மீதான அதிகார ரீதியான பாலியல் தொல்லைகள் மேலிடங்களுக்கு அறிவிக்கப்பட்டு குறிப்பிடப்பட்டவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான தண்டனைகள் ஒரு முன்னுதாரணமாக இருப்பதுடன், இப்படியாக பாலியல் ரீதியில் அதிகார துஸ்பிரயோகம் செய்பவர்களை மற்றய நிறுவனங்கள், கல்வி நிலையங்களும் கடுமையான தண்டனைகள் வழங்கவேண்டும் என்பதுடன், அவர்கள் சட்டத்தின் முன்னாலும் நிறுத்தப்படவேண்டும்.
இப்படியான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட பெண்கள் தம்மை ஒருபோதும் பலவீனர்களாக காட்டிக்கொள்ளக்கூடாது, துணிந்து நின்று எதிர்க்கவேண்டும், முதல்கட்டமாக சக அலுவர்களிடமோ, அல்லது கூட கல்வி கற்பவர்களிடமோ இது பற்றி கூறிவிடுவது அவர்களின் பாதுகாப்புக்கு முதற்கட்ட அஸ்திவாரமாக இருக்கும்.
அதேபோல குறிப்பிட்ட அதிகாரியின் (அங்கிளின்) பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகரித்தால், அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதை ஆதாரபூர்வமானதாக்கி கொள்ளவேண்டும், (தொலைபேசி அழைப்புக்கள், எஸ்.எம்.எஸ்கள், மின்-அஞ்சல்கள்) தற்போது மின் - அஞ்சல், தொலைபேசி வசதிகள் அனைத்து இடத்திலும் உள்ளபடியால் அந்த அங்கிளின் (மேலதிகாரியின்) லொள்ளு அதிகரித்து செல்லும் சந்தர்ப்பத்தில் தலைமை அலுவலகத்திடமோ, டிரக்டரிடமோ, முறைப்பாடாக செய்துவிடலாம்.
இன்றைய நிலையில் நான் அறிந்த மட்டில் புத்திசாலித்தனமாக சில பெண்கள் இவ்வாறான நடவடிக்கைகளை சாதுரியமாக செய்தே இந்த கேவலர்களுக்கான தண்டனைகளை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
இதேபோல இப்படியான அதிகாரரீதியான பாலியல் தொந்தரவுக்கு ஒரு பெண் ஆளாகின்றமையினை அவதானித்தால் சக ஊழியர்கள், சுற்றியுள்ள சமுகத்தினர்கள் என்பவர்கள் அவளுக்கு பக்கபலாமாக இருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு தக்கபாடத்தை படிப்பித்தால் நாளை மற்றவர்கள் இதுபோன்ற கேவலமான விடயங்களில் இறங்க பயப்படுவார்கள்.
தமது அதிகாரத்தையும், அபிமானத்தையும் இப்படியான கேவலமான நோக்கத்திற்கு பயன்படுத்த எத்தனிப்பது ஒரு வகையான மனோவியாதி என்று உளவியல் சொல்கின்றது. ஆனால் இப்படியான செயல்களில் ஈடுபடுபவர்கள் சமுகத்தின் முன்னால் துயிலுரியப்படுவதே இந்த மனோவியாதிக்கு சிறந்த தெரப்பியாக இருக்கும் என்பதே என் எண்ணம்.
http://janavin.blogs...og-post_04.html(
















