"அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்" என்று அதிபர் ஒபாமா கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலாராடோ மாகாணத்தில் அரோரா என்ற இடத்தில் உள்ள தியேட்டரில் 'பேட்மேன்' படம் திரையிடப்பட்டிருந்தது. இந்த தியேட்டருக்கு வந்த ஜேம்ஸ் ஹோம்ஸ் என்ற வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 14 பேர் உயிர் இழந்தனர். மேலும் 60 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது மட்டுமின்றி அமெரிக்காவில் பள்ளிக்கூடம், கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி பலர் உயிர் இழப்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் துப்பாக்கி சூடு சம்பவங்கள் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், துப்பாக்கி சூடு நடந்த அரோராவில் உள்ள தியேட்டருக்கு சென்ற அதிபர் ஒபாமா, பின்னர் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஒபாமா, அமெரிக்காவில் உள்ள நகரங்களில் ஆங்காங்கே நடைபெறுவதை தடுத்தாக வேண்டும். இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும். எனவே துப்பாக்கி உரிமை வைத்திருப்பது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வருவது அவசியம் ஆகிறது. இந்த துப்பாக்கி வன்முறை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். இதற்காக நான் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து கருத்து ஒற்றுமை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி செய்வேன்.
ஏ.கே.47 துப்பாக்கி என்பது போர்முனையில் இருக்க வேண்டியதே தவிர நகரங்களின் தெருமுனைக்கு வரக்கூடாது. ஆகவே அது இராணுவத்தினர் கைகளில் இருக்க வேண்டும். கிரிமினல்கள் கையில் சிக்கக் கூடாது. என்னுடைய இந்த கருத்தை அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன் என்றார் ஒபாமா.
http://www.seithy.co...&language=tamil















