4. சீனா, புதிய காலனிய சக்தி?
சீனா ஆப்பிரிக்காவில் பெரும் ஈடுபாடு காட்டுவதை மேற்கத்தியப் பத்திரிகைகள் தவறாகச் சித்திரிக்கின்றன. சீனா எக்காலத்திலும் மேற்கத்திய நாடுகளைப் போல காலனிய சக்தியாக இருக்காது. அது, அதன் ரத்தத்தில் இல்லாத ஒன்று. தன் நாட்டு எல்லைகளை விரிவாக்கவேண்டும் என்று அது விரும்பவில்லை. ஹாங் காங், தைவான் போன்றவை வரலாற்றுரீதியாக அதனுடைய ஆளுகைக்கு உட்பட்டவை. அதுதவிர, பிற இடங்களுக்குச் சென்று அந்த இடங்களைக் கட்டுப்படுத்த சீனா விரும்பாது.
18-ம் நூற்றாண்டுவரையில் இந்தோசீனப் பகுதி (இன்றைய கொரியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பகுதி) சீன அரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அப்போதுகூட, சீனா அங்கெல்லாம் தன் ஆட்சியைப் பரப்ப விரும்பவில்லை. அந்நாடுகளுடனான வர்த்தக உறவை மட்டுமே கொண்டிருந்தது. அந்நாட்டு அரசர்கள் தன் ஆளுகைக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று மட்டுமே வைத்திருந்தது.
19-ம் நூற்றாண்டில் பிரெஞ்சு, பிரிட்டிஷ், ஜப்பானிய காலனிய சக்திகள் சீனாவுக்குள் நுழையும்வரை இந்நிலை நீடித்தது.
கொலம்பஸ் போன்றோர் சிறு கப்பல்களில் உலகத்தைச் சுற்றுவதற்கு முன்பாகவே பெரும் சீனக் கப்பல்கள் பல இடங்களுக்குச் சென்றுவந்துள்ளன. ஆனால் சீனா எக்காலத்திலும் ஒரு பெரும் கப்பற்படையைக் கொண்டு உலகை ஆட்சி செய்ய யோசித்ததில்லை. அதேபோல, இனியும் அப்படிச் சிந்திக்காது.
5. வர்த்தகம்
இன்று இந்தியா தவிர்த்த பிற ஆசிய நாடுகள் செய்யும் மொத்த வர்த்தகத்தில் 25% சீனாவுடன். உலகின் பெருவாரியான நாடுகள் - வளர்ந்த, வளரும் நாடுகள் - சீனாவுடன்தான் மிக அதிகமான வர்த்தகத்தைச் செய்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பிரேசில், ஜப்பான், தென் கொரியா போன்ற பல நாடுகளின் முதன்மை வர்த்தகப் பங்காளி சீனாதான். இது மேலும் மேலும் அதிகரிக்கத்தான் போகிறது. உலகின் முதன்மை நாணயமாற்று கரன்சியாக ரென்மின்பி ஆகப்போகிறது.
6. தென் சீனக் கடல்
தென் சீனக் கடல் பகுதி முழுமையும் தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்று சீனா நினைக்கிறது. அப்பகுதியில் பிறர் யாரும் தலையிடுவதை சீனா விரும்பவில்லை. (பார்க்க: வியட்நாம்-இந்தியா -எதிர்- சீனா பிரச்னை.)
7. இனமும் கலாசாரமும்
சீனாவில் பெருவாரியான மக்கள் (சுமார் 90%) ஹான் சீனர்கள். பிற பெரும் நாடுகளைப் போலன்றி (அமெரிக்கா, இந்தியா) பெரும்பான்மை சீனர்கள் தங்களை ஒரே இனத்தினராகக் கருதுகிறார்கள்.
ஆனால் ஒரு சிக்கல். ஹான் சீனர்கள் தம் கலாசாரத்தை மட்டுமே உயர்ந்ததாகக் கருதுபவர்கள். அத்துடன் பிற கலாசாரங்களைத் தாழ்ந்தவையாகவும் கருதுகிறவர்கள். எனவே பிற இனங்களைக் கேவலமாகப் பார்க்கிறவர்கள். கலாசாரம் பன்மை என்பது சிறந்தது என்று கருதுபவர்கள் இல்லை. ஒற்றைக் கலாசாரத்தையே விரும்புபவர்கள்.
8. அரசு
ஒரு அரசின் ஆட்சி அதிகாரமும் சட்ட அதிகாரமும் வாக்குரிமை கொண்ட மக்களாட்சியிலிருந்தே பெறப்படுகிறது என்பது மேற்கு நாடுகளின் நம்பிக்கை. ஆனால் இது உண்மையல்ல. இத்தாலி போன்ற நாட்டில் வாக்குரிமையுள்ள மக்களாட்சி நடைமுறையில் இருந்தாலும் அந்நாட்டின் பல இடங்களில் வசிக்கும் மக்கள் அரசை சட்டபூர்வமானதாகக் கருதுவதில்லை. [இந்தியாவில்கூடச் சில இடங்களை இப்படிக் கருத இடமுண்டு - பத்ரி.] ஆனால் சீனா இதிலிருந்து மாறுபட்டது. அங்கே வாக்குரிமை கொண்ட பல கட்சிகள் கொண்ட மக்களாட்சி முறை கிடையாது. ஆனாலும் அங்குள்ள மக்கள் தம் அரசை சட்டபூர்வமானதாகவே கருதுகிறார்கள். அத்துடன் பெரும்பான்மை மக்களுக்கு தம் அரசின்மீது திருப்தியே நிலவுகிறது. உள்ளூர் அரசுகள்மீது குறைந்த திருப்தியும் மத்திய அரசின்மீது அதிகபட்ச திருப்தியும் கொண்டிருப்பதாக ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
உலகிலேயே செயல்திறன் மிகுதியான அரசு என்றால் அது சீன அரசுதான். இன்று மேற்குலகம் முழுதும் அரசுகள் தோல்வியுற்றுக்கொண்டிருக்கும் நிலையில், உலகம், சீன அரசின் மாதிரியைப் படிக்கவேண்டிய அவசியம் வந்துள்ளது.
9. சீனாவின் வளர்ச்சி
2009 உலகப் பொருளாதார வீழ்ச்சிக்குமுன், சீனா எத்தனை ஆண்டுகளில் அமெரிக்காவை எட்டிப் பிடிக்கும் என்றெல்லாம் ஆரூடம் சொல்லினர். ஆனால் 2008-க்குப்பின், இந்த ஆருடங்களை மாற்றி எழுதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இந்த எட்டிப்பிடிப்பு இன்னும் வேகமாக நிகழும். இந்த 4 வருடங்களில் மேற்கத்திய நாடுகள் பலவற்றின் ரியல் ஜிடிபி குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் சீனாவின் வளர்ச்சி 30% அதிகரித்துள்ளது.
எனவே 2008-ம் ஆண்டை சீனாவின் ஆண்டு என்றே சொல்லலாம். சீனா உலகின் பொருளாதார வல்லரசாக இந்தப் பத்தாண்டின் இறுதிக்குள்ளாகவே (2018) ஆகிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ப்ரிக் வங்கி (சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா) என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டால், அது உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும்.