கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச் சொட்டு...

-கன்னங்களை வெம்மையாய் வருடிச்செல்லும் கண்ணீர்த்துளிகள்-
சிங்கள இனவாதத்தின் இரக்கமற்ற போரின் சுவடுகளாக எஞ்சி நிற்க்கும் தமிழர்களின் துயரங்களை புலம்பெயர் ஈழத்துப்படைப்பாளிகளின் பேனாக்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்பின் தீவிரமாக வெளிப்படுத்திவருகின்றன..அவற்றின் நீட்சியாக திருமதி சாந்தி றமேஸ் அவர்கள் எழுதிய "கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச் சொட்டு" என்னும் கவிதை நூல் வடலி பதிப்பகத்தின் வெளியீடாக சிட்டுவின் 15ம் ஆண்டு நினைவு நாள் (ஆவணி 1) அன்று சிட்டுவுக்கு சமர்ப்பணமாக வெளிவருகிறது...இழப்புகளின் பெருந்துயரும்,தோல்வியின் மீளமுடியா வேதனைகளும்,எஞ்சியிருக்கும் சந்ததியின் தவிப்பும்,படைப்பனுபவத்தின் கணமும் ஒன்று சேர்ந்து இந்தக்கவிஞ்ஞரின் பேனாவினூடு பெரும் வலி அனுபவமாக கவிதைகளில் வெளிப்பட்டு நிற்கின்றன..தமிழினத்திற்கு காலம் தந்த தழும்புகளை,நேருக்கு நேர் நின்று எம்முகத்தில் ஊழ் துப்பிய எச்சிலை,எம்மனங்கள் என்றும் சுமந்துகொண்டிருக்கும் ஆறாவடுக்களை கவிதைப்படிமங்களாக காட்சிப்படுத்தியுள்ளார் இத்தொகுப்பினூடு கவிஞ்ஞர்..
வாழவிடுங்கள் என்று கேட்ட எம்மீது வலி அள்ளித்திணித்திருக்கிறது சிங்களம்..அடிமைகளாய் சாகவா நாம் பிறந்தோம் இல்லை என்று அந்த வாழ்வுடைக்க சமாராடிய செல்வங்களை கூட்டுடன் தொலைத்துவிட்டு உலகத்தின் எல்லா மூலைகளிலும் ஈரம்கசியும் கண்களுடன் பெரும்துயரில் இருக்கும் தமிழர்களின் காற்றுடன் கரைந்துபோகும் அழுகைகளில் சிலதுளிகளை கவிதைகளில் சிறைப்பிடித்து எழுத்துக்களில் பதிந்துவைக்கிறார் இந்தக்கவிதைத்தொகுப்பினூடு சாந்தி அவர்கள்..எஞ்சியிருக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழனது மனதினுள்ளும் அவர்களுக்கு தெரிந்த பல போராளிகளினதும்,மக்களினதும் நினைவுகள் உறங்கிக்கிடக்கின்றன..வருவோம் என்று சொல்லிவிட்டுப்போனவர்கள் வரலாறாய்ப்போன துயரங்களில் மூழ்கி சோகம் அப்பிக்கிடக்கின்றது தமிழர்களின் மனங்களில்..
இந்ததொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கும்போது மூச்சுக்காற்றினூடு நினைவுகளின் வெம்மைகள் மெல்லப்பரவுவதை உணர்கிறேன்...என்ன ஆனார்கள் என்றே தெரியாத போராளிகள் பலரின் நினைவுகள் மெதுவாக உடல்முழுவதும் பரவி ஆன்மாவை அதிரச்செய்கின்றன..விடைதெரியாத பல கேள்விகள் மனதில் பரவி உடல்முழுவதும் துயர்ச்சுழலை வீசிவிட்டுச்செல்கின்றன..எம் சுதந்திரத்தின் எதிர்காலம் என்ற பெரும் கேள்வி விடைதெரியா வினாவாக தொக்கி நின்றாலும் எம்மக்களின் எதிர்காலத்திற்க்கு நாம் என்ன செய்யவேண்டும் இப்பொழுது என்பதற்கு இந்தத்தொகுப்பில் உள்ள கவிதைகளே இறந்துபோன போராளிகளின் ஆன்மாக்களாக பேசுகின்றன..
"எல்லா இனிமைகளையும் அள்ளிக்கொண்டு
தோற்றேன் நான்
உன்னை விட்டு தொலைந்து போன பின்னே
விதையாய் நீ வீழ்ந்தாயென்ற
சேதிமட்டுமே விடையாய்
ஞாபகம் தந்த உனது கையெழுத்துக்கள்
உனக்காய் நானெழுதிய கவிதைகள்
சொல்லாமல் கொள்ளாமல்
எல்லாவற்றையும் அழித்துக்கொண்டுபோன காலம்
இன்னும் இறந்துபோகாமல் உன்னை
என்னோடு சுமந்து நிக்கிறது.."
என்றவரிகளிலில் விக்கித்து நிற்கின்ற வேதனைகளை,பெருவாளாய் இதயத்தை அறுக்கும் போராளித்தோழனின் நினைவுகளை கவிஞ்ஞரின் பேனா உச்சமாய் எழுதித்தீர்த்துவிட துடித்து நிற்பதை உணர்கிறேன்..காலம் பெரும் கண்ணீர் நினைவுகளைத்தந்து தமிழர்களை தண்டித்துவிட்டிருக்கிறது...நினைவுகளிற்க்கு சொந்தக்காறர்கள் இனிவரவேமாட்டார்கள் என்பதை மனம் உணரும்போது உடலெங்கும் பரவும் பெரும்வலியை,மனதின் வெளிக்கேளா பேரோலத்தை "எல்லாவற்றையும் அழித்துக்கொண்டுபோன காலம்இன்னும் இறந்துபோகாமல் உன்னைஎன்னோடு சுமந்து நிக்கிறது.."என்கிற நான்குவரிகளில் படிப்பவர்களின் காதுகளுக்கு பல்லாயிரம் அதிர்வுகளுடன் கொண்டுசேர்க்கிறது..
இரத்தம் செறிந்த புழுதியில் நீயும்
புழுதியாய் கலக்கையில்
யாரை நினைத்து நீ
துகள்களாய் உதிர்ந்தாயோ..?"
என்கிற வரிகளில் இருந்து வடிகிற இரத்தத்தில் போராளிகளின் வாழ்வின் இறுதிக்கணங்கள் கண்முன் வந்துபோகிறது...மரணத்தை தன் இனத்திற்காய் விரும்பி ஏற்ற மாவீரர்களின் மனங்களுக்குள்ளும் ஒரு மூலையில் பாசிபிடித்திருக்கக்கூடிய பசுமை நினைவுகள் கண்முன் விரிகின்றன..எங்களைப்போன்ற மனிதர்கள்தானே அவர்களும்...அவர்களின் மனதினுள்ளும் ஒரு இரட்டை ஜடை அல்லது அரும்புமீசை குறும்புச்சிரிப்பு நினைவுகள் ஒட்டி இருந்திருக்கும்..சொல்லாத அந்த பாசிபிடித்த காதல் நினைவுகள் கந்தகத்துகளினூடு காற்றோடு கலந்து கரைந்துபோயிருக்கும்...அவனை/அவளைத்தவிர யாராலும் மீட்டமுடியாத அந்த நினைவுகளை நினைத்து கண்களின் ஓரங்களில் எட்டிப்பார்க்கிறது கண்ணீர்த்துளிகள்...
"இன்னொருவன் போராட
இன்னொருத்தி இறந்துபோக
மிடுக்கோடு கவி எழுதிய கைகளில் அவர்கள்
விட்டுச்சென்ற துயரம் வழிகிறது.."
எம்மிடம் எஞ்சி இருக்கும் ஒரு பெரும் துயரை,குற்ற உணர்ச்சியை இந்த நான்கு வரிகளைப்போல் மிக நெருக்கமாகபோய் இன்னொருமுறை எழுதிவிடலாமோ என்று தெரியவில்லை..ஆயிரமாயிரமாய் அவர்கள் களமாடி மடிய ஆயிரம் ஆயிரமாய் காசை எறிந்து களவாக ஓடிவந்த எங்கள் கயமைகளை எந்தப்பேனாவைக்கொண்டு கவி எழுதியும் நியாயப்படுத்திவிடமுடியாது..இந்தக் கவிஞ்ஞரைப்போல் ஒரு சில மனச்சாட்ச்சி உள்ள புலம்பெயர்படைப்பாளிகளே உண்மைகளை வெளிப்படையாக எழுதுகிறார்கள்..சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இன்று ஈழத்தில் அகப்பட்டிருக்கும் போராளிகள் பலருக்கு துரோகிப்பட்டம் கொடுக்கும் நாம் அதே சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எவ்வளவு பெரியதுரோகிகள் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை..எப்பொழுதும் நாம் எங்களை நியாயப்படுத்திக்கொண்டே புனிதர்களாக வலம்வருகிறோம்..
"எல்லாம போயிற்று
எல்லார் உயிரும் என்னைப்போல
இன்னும் வாழ்வதில் எத்தனை பிரியமுடன்
வாழாது போயினர்..?
வரலாறு எழுதிய கதைகளில் அவர்கள்
பெயரிட்ட பிள்ளைகளும்
துணைவந்த துணைவிகளும்
தனித்துப்போயினர்..."
சபிக்கப்பட்ட எம்மினத்தின் சாபங்களாக்கப்பட்டு காலத்தால்மட்டுமல்ல காவல்தெய்வங்கள் என்று போற்றியவர்களாலும் கைவிடப்பட்ட மாவீரர்களின் குடும்பங்களினது துயரொழுகும் இந்தவரிகளின் பின்னால் கவனமாக மறைத்துவைத்திருக்கும் தப்பி ஓடிவந்த எங்களின் சுயநலம்கள் துகிலுரியப்படுகின்றன..
இப்படி எழுதுவதற்கு இன்னும் இன்னும் ஆயிரம் ஈழத்து சிலுவைகளின் இரத்தம் வடியும் கதைகளை பேசிநிற்கின்றன இந்ததொகுப்பில் உள்ளகவிதைகள்..முட்சிலுவைகளை சுமந்தபடி தள்ளாடித்தள்ளாடி தான் அறையப்படும் இடம்வரை நடந்த இயேசுநாதரின் நினைவே ஒவ்வொரு போராளியினது நினைவுகளையும் படித்துமுடிக்கும்போது மனமெங்கும் எழுகிறது..வலி நிறைந்த வரிகள் உயிரைப் பிழிந்தெடுக்கின்றன..இவற்றினூடுதான் எம் வாழ்தலின் நீட்சி தொடர்ந்தாகவேண்டும்...எம் இழப்புகளுக்கு நீதி கிடைக்கப்போராடும் அதேவேளை ஈழத்தில் எஞ்சிய எம் இனத்தின் இருத்தலுக்கு போராடும் பெரும்கடன் எம்முன் விரிந்துகிடக்கிறது..சுயநலவாதிகள் எங்களின் சுதந்திரத்திற்காக போராடிய தன்னலமற்றவர்களின் கரங்களை காலம் எடுத்து எம் கைகளில் தந்துவிட்டு சென்றிருக்கிறது...ஓலமிடுவதும்,ஒப்பாரிவைப்பதும் ஒருபக்கத்தில் இருக்க வாழவளிதேடும் வரலாற்றை எழுதிய நாயகர்களின் காலடியில் ஒரு சிறு ஒளிவட்டத்தையாவது காட்டவேண்டிய பெருங்கடன் எமக்கிருக்கிறது..திருமதி றமேஸ் அவர்கள் இப்பணியை சற்றும் சோர்ந்துவிடாமல் நேசக்கரம் அமைப்பின்மூலம் தொடர்ந்துகொண்டிருக்கிறார்..வரலாற்று நாயகர்களுக்காக கைகளில் விளக்கேந்திச்செல்லும் இதயமுள்ளவர்களில் ஒருவராக அவரும் இருந்துவருகிறார்...இந்தக்கவிதை நூலை விற்றுக்கிடைக்கும் பணம்முழுவதையும் அதற்க்காகவே அவர் ஒதுக்கி உள்ளார்....மடிந்துபோன எம்மாவீரர்களின் நினைவுடன் எழுதுவோம் இனி ஒரு விதி ஈழத்தில் எம் குழந்தைகள் ஏழைகள் இல்லை என்று...
Edited by சுபேஸ், 12 July 2012 - 08:27 PM.
















