1928 ஜூன் 14 , ரொசாரியோ, சாண்டா பே பிராந்தியம், அர்ஜென்டினா – எர்னஸ்டோ குவேரா லின்ச் மற்றும் செலியா தெல செர்னா என்ற உயர் நடுத்தர குடும்பத்தை சார்ந்த தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தது… தங்கள் இருவர் பெயரையும் இனைத்து எர்னஸ்டோ குவேரா தெல செர்னா என பெயரிட்ட பெற்றோர், தன் மகனை சிறந்த மருத்துவனாக்க முடிவு செய்து அப்படியே செய்தனர்.
ஆனால் வரலாறு அவனுக்கு வேறொரு பெயருடன் வேறொரு வேலையை தீர்மானித்து வைத்திருந்தது.
“சே” – உலகின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர்…. உலகை விட்டு சென்று 45 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் இவன் படத்தை கண்டு ஒடுக்குமுறையாளர்களும், சுரண்டல்வாதிகளும், பெரு முதலாளிகளும் நடுங்கத்தான் செய்கின்றனர்.
விடுதலைக்கான முழக்கம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் இவனும் இருப்பான் என்றும்....
சே குவேராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பேசியது :
இந்த கொரில்லாப் போராளியை கொன்று விட்டதாக அவர்கள் எக்காளமிடுகிறார்கள். ஆனால் ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தெரியாது அல்லது தெரியாதது போல நடிக்கிறார்கள். அப்போராளியின் பல முகங்களின் ஒன்று தான் அந்த செயல்வீரனின் முகம் ஆனால் அந்த செயல்திறனுள்ள மனிதனை இழந்து விட்டதால் மட்டும் துயரம் கொள்ளவில்லை. உயர் நடத்தைக் கொண்ட ஒரு மனிதனை நாம் இழந்து நிற்கிறோம். இறக்கும்போது அவருக்கு 39 வயதுதான் என்கிற நினைப்பால் துயரம் கொள்கிறோம். இன்னும் அவரிடம் இருந்து நாம் நிறைய பெற்றிருக்க முடியுமே என்ற ஏக்கத்தால் துயரம் கொள்கிறோம்.
துளிகூட வெட்கமில்லாதவர்கள் என்பதை அவர்கள் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது. மோதலின்போது படுகாயம் அடைந்த பின்பு அவரைக் கொலை செய்துள்ளதை அவர்கள் வெட்கமின்றி ஒப்புக் கொண்டுள்ளனர். கடுமையாக காயமடைந்திருக்கும் ஒரு புரட்சிக் கைதியை சுட்டுக் கொல்ல ஒரு கூலிப் பட்டாளத்திற்கு பொறுக்கிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது. சேவின் வழக்கு உலகையே உலுக்கி விடும் என்பதையும் அவரை சிறைக்குள் அடைப்பது இயலாத காரியம் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர். அவரது இறந்த உடலைக் கூட அவர்கள் விட்டு அடக்கம் செய்து விட்டதாக தெரிவிக்கின்றனர். உயிரை அழிப்பதன் மூலம் அவரது கொள்கைகள் அழித்து விட முடியாது என்கிற பயம் அவர்களுக்கு இருந்திருக்கிறது.
சே வேறு எதற்காகவும் இறக்கவில்லை. இந்த கண்டத்தில் உள்ள நசுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களுக்காக இறந்து விட்டார். இப்பூவுலகில் குடியுரிமை இல்லாதவர்களுக்காவும் ஏழைகளுக்காகவும் இறந்துவிட்டார் என்பதை அவரது எதிரிகளே ஒப்புக் கொள்வார்கள் இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்ட மனிதர்கள் வரலாற்றில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகிறார்கள். மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்து கொண்டே இருக்கிறார்கள். அவரது மரணம் என்னும் விதையிலிருந்து ஏராளமான மனிதர்கள் தோன்றி அவரது வழியை பின்பற்றுவார்கள். இந்தக் கண்டத்தின் புரட்சிகர நடவடிக்கை இந்த பின்னடைவிலிருந்து மீண்டு எழும்.
அவரது புதிய எழுத்துக்களை நாம் மீண்டும் பார்க்க முடியாதுதான். அவரது குரலை நாம் மீண்டும் கேட்க முடியாதுதான். ஆனால் அவர் இந்த உலகத்திற்கு மாபெரும் செல்வத்தை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர சிந்தனைகளை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர குணங்களை விட்டுச் சென்றுள்ளார். அவரையே ஒரு உதாரணமாக விட்டுச் சென்றுள்ளார்.
நாம் நமது போராளிகள், நமது மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் தயக்கமின்றி சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது எதிர்காலத் தலைமுறையினர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் அவர்கள் சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது குழந்தைகள் எப்படிப்பட்ட கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் சேவின் ஆன்மாவைப் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது காலத்தை சார்ந்திருக்கிற மனிதனின் முன்மாதிரி வேண்டுமென்றால் வருங்காலத்தைச் சார்ந்து மனிதனின் முன் மாதிரி வேண்டுமென்றால் நான் அப்பழுக்கற்ற அம்மனிதனின் சே என்று என் இதயத்தின் ஆழத்தில் இருந்து சொல்வேன். என்று சே குவேராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பேசியது ஒரு போராளி என்பவன் புதைக்கப்படுவதில்லை மாறாக விதைக்கப்படுகிறான் என்கிற கூற்று சே குவேராவின் வாழ்வில் உண்மையான ஒன்றாகும் அதற்குச் சான்று இக்கூற்றேயாகும்.
மரணம் என்பது சிலருக்கு தன் வரலாற்றை தன் கொள்கையினை பிறருக்கு உணர்த்தும் கருவியாக அமையும். இவர் கீதோபதேசங்களையோ, கடவுளின் செய்திகளையே மக்களுக்காக கூறியரல்ல. மாறாக தன் வாழ்க்கையையே மக்களுக்கு செய்தியாக விட்டுச் சென்றவர். எங்கேயெல்லாம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம் தேவைப்படுகிறதோ அங்கேயெல்லாம் சே குவேராவின் வாழ்க்கை புரட்டிப் பார்க்கப்பட வேண்டிய அவசியமாகிறது.
அடிமைத்தனத்திலிருந்து போராடி மேனிலையாக்கம் பெற்றுச் சிம்மாசனத்திற்குச் சென்றவர்கள் மீண்டும் கீழ்நிலைக்காக குரல் கொடுத்தும் கொடுக்காமலும் இருந்த வரலாற்றினை அறிந்தவகையில் கீழ்நிலைமையின் தேவைக்காக மீண்டும் சிம்மாசனத்திலிருந்து கீழ்நிலைக்கு வந்த வரலாறென்பது சே குவேராவின் வரலாறு மட்டுமேயாகும். தனது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டததை நாடு, மொழி, இனம் என்று குறுகிய வட்டங்களுக்குள் சிறைப்படுத்திக் கொள்ளாதவர்.
39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவராய் இருந்தாலும் உலக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு பெருந்தலைவருக்கும் சளைத்தவரல்ல. அப்பேர்ப்பட்ட உலகத் தலைவர் மீதும், அவரது போராட்டத்தின் மீதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஏவல் படை (சி.ஐ.ஏ) மூலம் சேற்றை வாரி வீச நினைக்கிறது.
இந்த உதாரண புருஷன் இறந்த பின்னும் அவர் மீதும் ஆதிக்க சக்திகளுக்கு இருக்கும் பயம் மட்டும் இன்னும் விலகவில்லை. அந்த பயத்தின் காரணமாகவே வரலாற்றைத் திருத்தும் வேலையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இனியும் இது போன்ற ஒருவர் தோன்றக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளது. அதற்கான பணிகளில் அது எப்போதும் சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டு இருக்கிறது. மாதவராஜின் மொழியில் சொன்னால் மனித குல விரோதிகள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார்கள்
சே குவேராவின் உடலை சல்லடையாக துளைத்த பின்னரும், அவரது தோற்றம் விசுவரூபம் எடுத்து உலகை வியாபித்து விடுமோ என்ற பயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிம்மதி குலைக்கும் கொடுங்கனவென பரந்து கிடக்கிறது. அந்தப் பயத்தின் விளைவாகவே அவரது சரித்திரத் தோற்றத்தையும் சிதைக்க முயல்கிறது.
சி.ஐ.ஏ சற்று சாதுர்யமாகவே இதைச் செய்கிறது வெறுமனே சே குவேரா தோற்றுப் போனார் என்று கூறாமல், அவரது கோட்பாடு தோற்றது அவரது வழிமுறைகள் தவறு என்று கூறுவதன் மூலம் பின்வரும் சந்ததியினர் யாரும் சே குவேராவின் வழியைப் பின்பற்ற விடாமல் செய்யப் பார்க்கிறது.
துளியும் களங்கமற்று இருந்த பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா நட்பு மீதும் அமெரிக்க நிச்சயமாக கறை ஏற்படுத்த முயல்கிறது. தனது ஏகாதிபத்தியத்திற்கு அடங்கி நடக்கும் பொலிவிய அரசின் துணையோடு சே குவேராவை அமெரிக்கா சுட்டுக் கொல்கிறது. கொன்ற பின்பு சே குவேராவின் உடல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நினைவுச் சின்னமாக மாறி விடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. பின்பு அவரது உடலை யாரும் காணாமல் ஒரு மறைவிடத்தில் புதைக்கிறது. இந்த சம்பவங்கள் எல்லாம் அமெரிக்கா உளவுத் துறையின் ரகசியக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சி.ஐ.ஏ. கட்டமைக்க விரும்பும் பொய் பிம்பம் அதற்கடுத்ததாக உண்மை நிலையை எடுத்துரைக்கும் வரலாற்று ஆதாரங்களை அடுக்கடுக்காக விவரித்துப் போகையில் சி.ஐ.ஏ.வின் உலகளாவிய கபடத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
சி.ஐ.ஏ எந்த வேலையில் இறங்கியதோ அதற்கு நேர்மாறான விளைவே இப்போது மக்களிடம் படிந்து வருகிறது. ஆம் சே குவேரா புதைக்கப்பட்ட இடத்தின் அருகே எழுதப்பட்டிருந்ததைப் போலவே அவர்கள் நினைத்தது போலில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் '"சே"....சொல்லப்போனால் இன்னும் பிரகாசமாக...
இந்த உன்னத போராளியின் பிறந்த நாளில் இன்னுமின்னும் ஓர்மமாக உரைப்போம் இறுதி மூச்சு உள்ளவரை எங்கள் சுதந்திரக்காற்றை தேடி நாங்கள் எப்பொழுதும் ஓய்ந்துபோய்விடாமல் பயணித்துக்கொண்டே இருப்போம் என்று...



Edited by சுபேஸ், 13 June 2012 - 11:56 PM.

















