Jump to content


Tamil Star News
Photo

தலைவனின் சிந்தனையை நோக்கி


  • Please log in to reply
No replies to this topic

#1 துன்னையூரான்

துன்னையூரான்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 148 posts
  • Gender:Male

Posted 05 June 2012 - 08:18 AM

அறவழியில் முகிழ்த்து, ஆயுத எதிர்ப்பியக்கமாகப் பரிணமித்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம், நீர்த்துப் போகும் நிலையை நோக்கிச் செல்கின்றதோ என்று எண்ணத் தோன்றும் வகையிலான நிகழ்வுகள் இன்று தமிழீழத் தாயகத்திலும், புகலிட தேசங்களிலும் அரங்கேறி வருகின்றன. முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் உருவகம் பெற்ற ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற மாயமானிலிருந்தே இந்த தேக்க நிலை உருவெடுத்தது என்ற மெய்யுண்மையை நாம் புறந்தள்ளிவிட முடியாதவாறு தமிழீழ தேசிய அரசியற் களத்தில் இன்று கடுகதியில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் அமைகின்றன.

அதீத கற்பனைகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற இந்த மாயமான் ஈழத்தமிழினத்தின் அரசியல் பிரக்ஞையை மழுங்கடிக்கும் பாதையில் செல்வது இன்று நிதர்சனமாகி வருகின்றது. மே 18இற்குப் பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியல் பிரக்ஞையில் கட்டியெழுப்பப்பட்ட இந்த மாயமான் சாராம்சத்தில் பின்வரும் கருத்துவங்களை உள்ளடக்கியிருந்தது: ‘ஆயுதப் போராட்டத்தை உலகம் ஒருபொழுதும் அங்கீகரிக்காது.

ஆனால் சனநாயக வழியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு எப்பொழுதும் உலகின் ஆதரவு உண்டு. எமது போராட்ட அரசியலை நாம் சனநாயக மயப்படுத்துவதன் மூலம் உலகின் ஆதரவைப் பெறமுடியும். அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் தோல்வி கண்ட நிலையில் இனி இராசதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பதன் ஊடாகவே நாம் வெற்றியீட்ட முடியும்’. இவ்வாறு வடிவமைக்கப்பட்ட மாயமானுக்கு உயிரூட்டும் நயவஞ்சக நோக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளையும், தமிழீழ தேசியத் தலைவரையும் நோக்கிக் குற்றப் பத்திரிகைகள் வாசிக்கப்பட்டன: ‘பிரபாகரனுக்கு உலக அரசியல் புரியவில்லை.

அவரைச் சுற்றியிருந்த புலிகளின் ஏனைய தலைவர்களுக்கும் இராசதந்திரம் செய்யத் தெரிய
வில்லை. இதுவரை 10 வீத அரசியல் வேலைகளில்தான் புலிகள் ஈடுபட்டார்கள். அவர்கள் செய்யத் தவறிய மிகுதி 90 விழுக்காடு அரசியல் வேலைகளை இனி நாங்கள் பொறுப்பேற்றுச் செய்யப் போகிறோம். பிரபாகரனும், புலிகளும் செய்யத் தவறியதை நாம் சாதிக்கப் போகிறோம்.’ இவ்வாறு தலைவர் பிரபாகரன் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் குற்றப்பத்திரிகை வாசித்தவர்கள் வேறு யாரும் அல்ல. மே 18 வரை புலித்தோல் போர்த்து நடமாடிய ‘பெருமக்களே’ இக்குற்றப்பத்திரிகைகளை வாசித்தார்கள்.

மே 18இற்குப் பின்னர் இவர்கள் அணிந்திருந்த புலித்தோல் கழன்று விழுந்து சாயம்வெளுத்த நரிகளாக இவர்கள் காட்சியளித்தார்கள். ஆனாலும் அதனையிட்டு இவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. முதலில் தமிழீழம் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மதியுரை கூறினார்கள். பின்னர் தமிழீழ தேசியக் கொடியாக விளங்கும் பாயும் புலிக்கொடியை ஏந்தக்கூடாது என்று புத்தி புகட்டினார்கள்.

விளைவு, தமிழீழ தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகியன காற்றில் பறக்கவிடப்பட்டன. போர்க்குற்றம் என்ற சுலோகம் கையிலெடுக்கப்பட்டு மேற்குலக நலன்களுக்கு சாமரம் வீசும் பணி தொடங்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் தமிழ் உயிர்கள் காவுகொள்ளப்பட்ட பொழுது அமைதி காத்த மேற்குலகம் திடீரென மகிந்தரை நோக்கி போர்க்குற்றக் கணைகளை ஏவத் தொடங்கிய பொழுது தமது ‘இராசதந்திரப் போர்’ வீச்சுப் பெறத் தொடங்கியிருப்பதாக ஆராவாரித்தார்கள்.

மகிந்தரை ஒக்ஸ்போர்ட்டில் உரையாற்ற அழைத்துப் பின்னர் பாதுகாப்புப் பிரச்சினைகளைக் காரணம்காட்டி அவரை வெறும் கையுடன் பிரித்தானியா திருப்பியனுப்பிய பொழுது வீரமுழக்கமிட்டார்கள். இன்று எல்லாம் தலைகீழாகத் தொடங்கி விட்டது. மகிந்தர் மீது ஐ.நா. மன்றம் குற்றப்பத்திரிகை வாசிக்கப் போவதாக பரபரப்பாக பேசப்பட்ட அறிக்கை கொலையாளியையே குற்றத்தை விசாரிக்க விட்ட கதையாக முடிந்து போனது.

மகிந்தருக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரப் போவதாக ஆரவாரிக்கப்பட்ட தீர்மானம் ஈற்றில் வெற்றுக் காகிதமாக நீர்த்துப் போனது. இப்பொழுது மகிந்தர் இலண்டனுக்கு செல்கின்றார். மகாராணியின் வைரவிழா கொண்டாட்டத்தில் கலந்து விருந்துண்ணப் போகின்றார். ஒக்ஸ்போர்ட்டிற்கு மகிந்தரை அழைத்து வெறுங்கையுடன் திருப்பியனுப்பிய பிரித்தானியா இப்பொழுது அவருக்குச் செங்கம்பளம் விரித்துக் காத்துள்ளது. மறுபக்கம் வோக்ஷிங்டனுக்கு ஓடோடிச் சென்ற மகிந்தரின் வெளியுறவுத்துறை அமைச்சர் காமினி லக்ஸ்மன் பீரிஸ் அவர்களோ அமெரிக்கர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கின்றார்.

கிலாரியை பீரிஸ் சந்தித்து உரையாடிய ஓரிரு நாட்களுக்குள் பொன்சேகா சிறையில் இருந்து வெளிப்படுகின்றார். இன்னொரு பக்கத்தில் பன்னாட்டு நாணயம் நிதியம் விதித்த நிபந்தனைகளை ஏற்று ரூபாய் நாணயத்தின் பெறுமதியை சிங்களத்தின் மத்திய வங்கி காற்றில் பறக்கவிடுகின்றது.
ஒட்டுமொத்தத்தில் மேற்குலகிடம் சிங்களம் மண்டியிடத் தொடங்கி விட்டது. ‘மேற்குலக நவஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய மாட்டோம்’ என்று மகிந்தரும் அவரது மந்திரி வீரவன்சரும் முழங்கிக் கொண்டிருந்தாலும், மேற்குலகின் திசையில் நாள்தோறும் இவர்கள் இருவரும் தொழுகை செய்வது இப்பொழுது பரகசியமாகவே வெளிப்பட்டு வருகின்றது.

சனநாயகம், போர்க்குற்றம் என்ற சுலோகங்களைத் தாங்கி ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற மாயமானின் வழித்தடம் சென்ற ஈழத்தமிழினத்தின் கதி மண்குதிரையில் ஏறிய முடவனின் நிலையாகி வருகின்றது. இதே நிலை தொடர்ந்தும் நீடித்தால் ‘அதிகாரப் பரவலாக்கம், நல்லிணக்கம்’ என்ற சுலோகங்களை ஏந்தி அடித்தொண்டு அரசியலுக்குள் ஈழத்தமிழினம் இட்டுச்செல்லப்படும் துர்ப்பாக்கிய சூழலே உருவெடுக்கும்.

இச்சந்தர்ப்பத்தில் ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது மேற்குலகின் நலன்களும், எமது நலன்களும் நேர்கோட்டில் சந்திக்கும் பொழுது நாம் எதிர்ப்பார்க்கும் வெற்றிகள் நிகழ்ந்தேறுவதுண்டு. 2001ஆம் ஆண்டு கட்டுநாயக்காவை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கிய பொழுது மேற்குலகின் நலன்களும், ஈழத்தமிழர்களின் நலன்களும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தன.

கட்டுநாயக்காவில் இலங்கையில் பொருளாதாரத்திற்கு வீழ்ந்த அடி, மூலதன நலன்களை பாதுகாப்பதில் சந்திரிகாவின் கையாலாகாத்தனத்தைப் பட்டவர்த்தனமாக்கியது. விளைவு சந்திரிகாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஆறு மாதங்களுக்குள் ஈழத்தமிழினம் எதிர்பார்த்த போர்நிறுத்தத்தை மேற்குலகம் கொண்டுவந்தது. 2009 மே 18இற்குப் பின்னர் மேற்குலகுடன் மகிந்தர் முரண்டுபிடிக்கத் தொடங்கிய பொழுது, மீண்டும் மேற்குலகின் நலன்களும், ஈழத்தமிழர்களின் நலன்களும் நேர்கோட்டில் சந்திக்கத் தொடங்கின.

விளைவு முள்ளிவாய்க்கால் போரில் கண்மூடி அமைதி காத்த பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி துடிக்கத் துடிக்கத் தமிழ் இளைஞர்களை சிங்களப் படைகள் கொன்றுகுவித்த காட்சிகளை ஒளிபரப்பியது. ஒக்ஸ்போர்ட்டில் உரையாற்ற வந்த மகிந்தர் வெறும்கையுடன் திரும்பிச் சென்றார். மகிந்தரின் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் ‘கொலைக்களங்கள்’ உலக ஊடகங்களில் அடுத்தடுத்து வெளிவந்தன.

இன்று மேற்குலகிடம் மகிந்தர் மண்டியிடத் தொடங்கிவிட்டார். முள்ளிவாய்க்கால் போரின் இறுதி மாதங்களில் போர்நிறுத்தம் கோரி நாம் எழுப்பிய அவலக்குரல் எவ்வாறு செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியதோ, அதே நிலை இன்று மெல்ல மெல்ல உருவெடுக்கின்றது. இது ஈழத்தமிழினத்திற்கு ஒரேயரு தெரிவையே விட்டுவைக்கின்றது: தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து, சொந்தக் காலில் நின்று விடுதலையை வென்றெடுத்து மாவீரர்களின் கனவை நனவாக்குவதுதான் அந்தத் தெரிவு.

எல்லாத் தெரிவுகளையும் விட இது மிகவும் கடினமானது: கரடு முரடான பாதைகளைக் கொண்டது. அதியுச்ச அர்ப்பணிப்பும், இலட்சிய உறுதியுமே இத்தெரிவின் அர்த்தபரிமாணமாகும். இத்தெரிவையே தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தேர்ந்தெடுத்தார். இதனையே அவரது வழிநின்று களமாடிய மாவீரர்களும் தேர்ந்தெடுத்தார்கள்.

1980களில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு இந்தியாவின் உதவியை நாடிய பொழுது, ஒரு கட்டத்தில் இந்தியாவிற்கு எதிராகப் போராட வேண்டிய நிலை தோன்றும் என்பதை தலைவர் பிரபாகரன் அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார். அன்று தலைவர் தீர்க்கதரிசனமாக உணர்ந்தது 1987ஆம் ஆண்டில் நிதர்சனமாகியது.

இதேநிலைதான் 2002ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது. நோர்வேயின் அனுசரணையுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட பொழுது, ஒரு கட்டத்தில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக உலக நாடுகள் திரும்பும் என்பதை தலைவர் அவர்கள் உணர்ந்திருந்தார். உலகிடமிருந்து எழப்போகும் சவால்களை எதிர்கொண்டே தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் இலட்சியத்தை ஈட்ட வேண்டும் என்பதில் தலைவருக்கு எவ்வித ஐயமும் இருக்கவில்லை.

2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வன்னிக்கு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வருகை தந்திருந்த பொழுது புதுக்குடியிருப்பில் இயக்கத்தின் பொறுப்பாளர்கள், தளபதிகள், மூத்த உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று தேசியத் தலைவரின் தலைமையில் நடைபெற்றது. அதில் உரையாற்றும் பொழுது பின்வருமாறு தேசியத் தலைவர் அவர்கள் கூறினார்: ‘இதுவரை நாம் சந்தித்தது போர்க்களம். இப்பொழுது பேச்சுவார்த்தை என்ற இன்னொரு களத்தில் நாம் இறங்கியுள்ளோம். இதில் உலகை எதிர்த்து நாம் அரசியல்ப் போர் செய்யப்போகிறோம். இந்தப் போரில் பாலா அண்ணை கொமாண்டராக இருப்பார்.

ஆனால் பேச்சுவார்த்தைக் களத்தோடு போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது. மீண்டும் நாம் போர்க்களம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.’ அன்று தேசியத் தலைவர் அவர்கள் தீர்க்கதரிசனமாகக் கூறியது 2002ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து படிப்படியாக நிதர்சனமாகத் தொடங்கியது. படைவலுச்சமநிலையின் அடிப்படையில் புலிகள் இயக்கத்தை பேச்சுவார்த்தைக் களத்திற்கு அழைத்துச் சென்ற மேற்குலகம் ஆயுதக் களைவு, அரசியல் தீர்வு என்ற வரையறைக்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்தி நீர்த்துப்போகச் செய்ய முற்பட்டது.

ஆனால் புலிகள் மண்டியிடவில்லை: கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று பேச்சுவார்த்தைக் களத்தில் போராடினார்கள். இடையில் பேச்சுவார்த்தைகளின் தளபதியாக நின்ற பாலா அண்ணையை இயற்கை காவு கொள்ள, மீண்டும் கொடூரப் போரைப் புலிகள் எதிர்கொண்டார்கள். இன்றும் அதேநிலைதான். முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் உலக அரசியல் களத்தில் இடம்பெறும் ஈழத்தமிழர்களின் போராட்டம் இன்று மீண்டும் ஓர் பெரும் சவாலை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது இந்நெருக்கடியிலிருந்து ஈழத்தமிழினம் மீண்டெழுவதற்கான வழிமுறை தேசியத் தலைவரின் சிந்தனைகளிலேயெ பொதிந்து கிடக்கின்றது
உலகின் எங்கோ
ஒரு மூலையில் நடக்கும்
அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே...... -சேகுவேரா

Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]