
மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் யாரால் எப்போது வழங்கப்பட்டது என்பதை அறிய ஆறாவது படிக்கும் மாணவி கேட்ட கேள்விக்கு சரியான தகவல் இல்லை என்ற பதிலை மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பரஷ்ஹார் என்ற 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் வழக்கப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இந்தியாவின் தேசத்தந்தை என மகாத்மா காந்திக்கு வழங்கப்பட்டது எப்போது, அதற்குரிய ஆவணங்கள் உள்ளனவா? என விவரம் தருமாறு கோரியிருந்தார்.
இந்த மனு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் உள்துறை அமைச்சகத்திடம் போதிய ஆதாரம் கிடைக்காததால், மனு இந்திய தேசிய ஆவண காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தேசிய ஆவண காப்பகத்திலும் காந்திக்கு தேசத்தந்தை பட்டம் வழங்கப்பட்ட தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
அதனால், இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் துணை இயக்குனர் ஜெயப்பிரபா ரவீந்திரன், மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் எங்கு எப்போது வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்து, மனு செய்த மாணவிக்கு பதில் அனுப்பியுள்ளார்.
மேலும், மாணவி விரும்பினால், காந்தி குறித்த தகவலை பெற இந்திய அரசின் ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படும் என்று ஜெயப்பிரபா ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
விக்கிப்பீடியா தகவல் களஞ்சியத்தில் உள்ள தகவல் படி, காந்திக்கு மாகாத்மா என்ற பட்டம் எப்படி வந்தது என்றால், 1944-ல் சிங்கப்பூரில் சுபாஷ் சந்திர போஸ், காந்தி குறித்து வானொலியில் பேசும் போது, மகாத்மா காந்தி என்று குறிப்பிட்டிருந்தார். பின்னாளில் அது இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
காந்தி படுகொலை செய்யப்படும்போது, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வானொலியில் பேசும் போது, “தேச தந்தை நம்மோடு இல்லை... “ என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.webdunia.com/newsworld/news/national/1204/04/1120404029_1.htm















