Jump to content

தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் பலி 170 ஆக அதிகரிப்பு


Recommended Posts

xgaza_2000445h.jpg.pagespeed.ic.WA3Wd0NQ
7-வது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல். | படம்: ஏ.பி.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வழித் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.

ஏழாவது நாளை எட்டியுள்ள வான்வழித் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள சேதம் குறித்து காஸா சுகாதாரத் துறை செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "தெற்கு காஸா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் தந்தை, மகன் உள்பட 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ரஃபான், கான் யூனிஸ் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியப் படைகள் காஸா மீது வான்வழி தாக்குதல் நடத்தத் துவங்கியதில் இருந்து இதுவரை 170 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 80 பேர் அப்பாவி பொதுமக்கள். இவர்களில் 36 பேர் குழந்தைகள், 32 பேர் பெண்கள் ஆவர். 1,154 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 350 பேர் குழந்தைகள், 460 பேர் பெண்கள்" என்றார்.

இதற்கிடையில், இஸ்ரேலின் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு ஹமாஸ் ஆதரவு பெற்ற அல் கசாம் படையினர் பொறுப்பேற்றுள்ளனர். காஸா பகுதியில் இருந்து 700 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதே போல், கடந்த 7 நாட்களில் இஸ்ரேல் 1000 முறை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது. ஞாயிறன்று கூடிய இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் காஸா பகுதியில் தாக்குதலை தொடர முடிவு எட்டப்பட்டுள்ளது.

தாக்குதலை நிறுத்த ஐ.நா. கோரிக்கை:

இந்நிலையில், காஸா பகுதியில் நிலவும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருமாறு இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'இரு தரப்பின் நலனையும் கருத்தில் கொண்டு, தற்போது நிலவும் அபாயகரமான சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடி தீர்வு காணப்பட வேண்டும். தாக்குதல்களால், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளில் அப்பாவி பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிராந்திய அமைதிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்' என சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரேல் தாக்குதலில் பொதுமக்களே பெருமளவில் உயிரிழந்துள்ளதற்கு பான் கி மூன் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "காஸா மீதான தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம். இது தொடர்பாக சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டாலும் அதற்கு அடிபணிய மாட்டோம்" என்று அறிவித்திருந்தார்.

தரை வழி தாக்குதல்?

கடந்த 7 நாள்களாக காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் வழி தாக்குதல் மட்டுமே நடத்தி வருகிறது. அடுத்ததாக தரை வழியாக பாலஸ்தீனத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலஸ்தீனத்துக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் புரொடக்டிவ் எட்ஜ்' (Operation Protective Edge) என இஸ்ரேல் பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-170-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6209325.ece?homepage=true

 

இருதரப்புக்கும் இருண்ட எதிர்காலம்தான்!

 

xgaza_2000037h.jpg.pagespeed.ic.Mwkri2sN

காஸா பகுதியில் பாலஸ்தீன குடியிருப்புகள் மீது தங்கள் நாட்டு ராணுவம் நடத்தும் வான்வழித் தாக்குதல்களைக் கண்டு ரசிக்கும் இஸ்ரேலிய மக்கள். படம்: ஏ.எஃப்.பி.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் திடீரென மூண்டுள்ள இந்த மோதல் எப்போது, எப்படி முடிவுக்குவரும் என்று இரு தரப்பு ஆதரவாளர்களையும் கேட்டுப்பாருங்கள், விடை ஒன்றாகத்தான் இருக்கும். “காஸா பகுதி எங்கள் வசம் வந்துள்ளது. இனி, அவர்களுக்குப் பின்னடைவு” என்று ஹமாஸ் சொல்லும். “ஹமாஸ் மேற்கொண்டு நுழைய முடியாமல் வழியை அடைத்துவிட்டோம், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்று இஸ்ரேல் சொல்லும்.

இப்போதைய சூழலில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. முதலில், இருதரப்பும் இனி அரசியல், ராணுவ, மதரீதியாக மோதல்களைத் தீவிரப்படுத்தும். இஸ்ரேலுடன் சுமுக உறவு வைத்திருந்த பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் சமரச முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதால், இஸ்ரேலின் அடாவடித்தனத்தை அவராலும் நிறுத்த முடியவில்லை.

வலதுசாரிகளின் நோக்கம்

பாலஸ்தீனர்களை மோசமாகத் திட்டுவது முதல் அவர்களை உயிருடன் எரிப்பது போன்ற செயல்களில் தேர்ந்தவர்கள், காஸாவில் குடியேறியுள்ள இஸ்ரேலியர்கள். (பாலஸ்தீன இளைஞர் முகம்மது அபு காதிர் கடத்தப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவம் இதற்கு ஓர் உதாரணம்.) பாலஸ்தீனப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி, பாலஸ்தீனர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல் தலைவர்கள் சிலரின் நோக்கம். காஸா பகுதியில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் தொடர்கிறது. பலி எண்ணிக்கை மூன்று இலக்க எண்ணைத் தொட்டுவிட்ட நிலையில், வான்வழித் தாக்குதலைக் கைவிட்டுத் தரைவழித் தாக்குதலில் ஈடுபட வேண்டும் என்று இஸ்ரேல் அரசியல் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். இஸ்ரேல் ராணுவமோ எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

சமரசத்தின் வெற்றிடம்

கவலை தரும் மற்றொரு விஷயம், இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டுவர, திறமையான சமரச நாடுகள் இல்லாததுதான். 2008-ல் இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டை தொடர்ந்து 22 நாட்களாக நீடித்த தற்கும், சமரச நாடுகள் இல்லாததுதான் காரணமாக இருந்தது. 2012-ல் ‘பாதுகாப்பின் தூண்கள்' என்ற பெயரில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதலின்போது, அமெரிக்காவும் எகிப்தும் இணைந்து எடுத்த துரித நடவடிக்கைகள் சண்டை நிறுத்தம் ஏற்பட வழிவகுத்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போதைய எகிப்து அதிபர் முகமது மோர்ஸிக்கு ஹமாஸ் அமைப்புடன் நல்ல உறவு இருந்தது. எகிப்தின் உயர் அதிகாரிகளும், அரபு நாடுகளின் தலைவர்களும் காஸாவுக்குச் சென்று நடத்திய சமாதான நடவடிக்கைகளால் பிரச்சினையின் தீவிரம் தணிக்கப்பட்டது. தற்போது ஹமாஸுக்கும் எகிப்துத் தலைமைக்கும் இடையே சுமுக உறவில்லை. அரபு நாடுகளுக்கு இடையே உள்ள குழப்பங்களைச் சொல்லத் தேவையில்லை. இந்தக் காரணங்களால் இஸ்ரேல் முன்பைவிட அதிகத் தீவிரம் காட்டிவருகிறது.

நெதன்யாஹுவின் பலவீனம்!

மூன்றாவதாக, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. 2009-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இஸ்ரேலிய வலதுசாரி அரசியல் தலைவர்களின் சவால்களை அவர் சந்தித்து வருகிறார். ஈரான் மற்றும் பாலஸ்தீனத்தின் ராணுவரீதியான மிரட்டல்களைக் கண்டும் காணாதவர்போல, கடந்த எட்டு ஆண்டுகளாகச் செயல்படாத தலைவராக அவர் இருப்பதாக வலதுசாரித் தலைவர்கள் கூறிவருவதால், இந்த முறை பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களில் அதிகத் தீவிரம் காட்டுகிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது.

கடந்த ஒன்பது மாதங்களாக அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. பாலஸ்தீனப் பகுதிகளில் தனது ஆக்கிரமிப்புக் குடியிருப்புகளை விலக்கிக்கொள்ள இஸ்ரேல் மறுத்துவிட்டது. ஒருபுறம், வரம்பற்ற வன்முறை; மறுபுறம், சமாதானப் பேச்சுவார்த்தை. இந்த இரண்டும் தேவையில்லையென்றால், சர்வதேசச் சட்டப்படி, பாலஸ்தீனத்தின் இடத்தை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை சர்வதேசச் சமூகம் கடைப்பிடிக்கலாம். இதைச் செய்ய யாரும் தயாராக இல்லாததால், சண்டையும் சமாதான முயற்சிகளும் மாறிமாறித் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

- © தி கார்டியன், 

தமிழில்: வெ. சந்திரமோகன்

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article6206981.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.