Jump to content

காணாமல் போனது யார்? - பரமார்த்த குரு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனது யார்?

கதையாசிரியர்: பரமார்த்த குரு

பொழுது விடியாத பின்னிரவு நேரத்தில் பரமார்த்த குரு பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஆறு ஒன்று குறுக்கிட்டது. ஆறு வேகமாக சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

ஆற்றில் சல சல இரைச்சல் இருப்பதால் அது விழித்துக் கொண்டிருக்கிறது என்று குரு கருதினார். அதனால், இந்த வேளையில் ஆற்றைக் கடப்பது ஆபத்து எனப் பயந்தார். எனவே, ஆறு தூங்கும் வேளையில் கடப்பது நல்லது என்று முடிவு செய்தார்.

ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரத்தடியில் தனது சீடர்களுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, குரு தனது சீடர்களில் ஒருவனான மட்டியை அழைத்தார். அவன் கையில் ஒரு கொள்ளிக் கட்டையைக் கொடுத்து, ஆற்றின் அருகில் சென்று, அது இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறதா? தூங்கத் துவங்கிவிட்டதா? என்று பார்த்து வருமாறு அனுப்பினார்.

மட்டி, தன் குருவின் கட்டளையை ஏற்று கொள்ளிக் கட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு, ஆற்றை நெருங்கினான்.

ஆற்று நீர் தன் மேல் பட்டுவிடாத படி, எட்டி நின்று கொண்டு, கொள்ளிக்கட்டையை நீரில் அமிழ்த்தினான். அது சுரீரென்று ஒலியுடன் அணைந்து விட்டது.

அந்த ஒலியைக் கேட்டதும் மட்டி பதறிப் போனான். வேகமாகக் குருவை நோக்கி ஓடி வந்தான்.

குருவே ஆறு விழித்துக் கொண்டிருக்கிறது. கொள்ளிக் கட்டையால் அதைக் தொட்டவுடன் சீறி விட்டது. நல்ல வேளை தப்பியோடி வந்து விட்டேன் என்று பயந்து கொண்டே கூறினான்.

அதனைக் கேட்ட குரு, “நீ போய்ச் சோதித்துப் பார்த்துவிட்டு வந்தது நல்லதாய்ப் போயிற்று. ஆறு விழித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் ஆற்றைக் கடந்தால் ஆற்றின் பொல்லாத கோபத்துக்குள்ளாகியிருப்போம். அது நன்றாகத் தூங்கும் வரை பொறுத்திருந்து, அதன்பின் பயணத்தைத் தொடர்வோம்” என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

சீடர்கள், அவரவர்களுக்குத் தெரிந்த கதைகளைக் கூறிப் பொழுதைப் போக்கிக்

கொண்டிருந்தனர். பொழுது வெளுக்க ஆரம்பித்தது. அயர்ந்து தூங்கிய குரு திடுக்கிட்டு எழுந்தார். மடையனை அழைத்தார். “மடையா! பொழுது, புலர ஆரம்பித்துவிட்டது. இப்போதாவது ஆறு தூங்குகிறதா, விழித்துக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வா” என்று கூறினார்.

உடனே மடையன், மட்டி கொண்டு வந்த போட்ட அணைந்து போன கொள்ளிக் கட்டையை எடுத்துக் கொண்டு ஆற்றை நெருங்கினான். கட்டையை நீருக்குள் விட்டான். எந்தவித ஒலியும் ஏற்படவில்லை. அவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வேகமாக ஓடி வந்தான்.

“குரு! இப்போது ஆறு நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறது” என்று கூறினான்.

“அப்படியா, இதுதான் சரியான வேளை யாரும் எந்த ஒலியும் எழுப்பாமல் மிகவுவம் அமைதியாக வாருங்கள். சப்தம் போட்டால் ஆறு விழித்துக் கொள்ளும்” என்று தன் சீடர்களை எச்சரித்து விட்டு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து குரு ஆற்றை நோக்கி நடக்க, சீடர்களும் பின் தொடாந்தனர். பயந்து கொண்டே ஆற்றைக் கடந்து, ஒரு வழியாக அக்கரை வந்து சேர்ந்தனர்.

தன்னுடைய சீடர்கள் அனைவரும் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டார்களா என்று சரிபார்க்க குரு எண்ணினார். தனது சீடர்களில் ஒருவனை அழைத்து, “சீடனே! என்னையும் சேர்த்து நாம் ஆறு பேர். நாம் அனைவரும் பத்திரமாக இருக்கிறோமா? நம்மில் யாரையாவது அந்தப் பொல்லாத ஆறு விழுங்கிவிட்டதா? எனச் சரிபார்த்து எண்ணிக்கூறு?” என்று கூறினார்.

அபிஷ்டு தன் முன்னால் நிற்பவர்களை ஒன்று இரண்டு என்று எண்ண ஆரம்பித்தான். தன்னை மட்டும் சேர்க்காமல் மற்றவர்களை மட்டும் எண்ணி, “குருவே, ஐந்து பேர்தான் உள்ளோம்” என்ற கூறினான்.

ஆறு பேரில் ஒருவரைக் காணோம் என்று குரு திடுக்கிட்டுப் போனார். தங்களில் ஒருவரை ஆறு விழுங்கிவிட்டது என்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதனால், குரு மீண்டும் எண்ணிப் பார்க்குமாறு மற்றொரு சீடனிடம் கூறினார். அவனும் தன்னை விட்டுவிட்டு மற்றவர்களை மட்டும் எண்ணி விட்டு, “குருவே, மோசம் போனோம். அபிஷ்டு எண்ணியது சரியே! நம்மில் ஒருவரைக் காணோம். ஐவர்தான் உள்ளோம் என்று அலறினான்.

இப்படியே மற்ற சீடர்களும், குருவும் தங்களைச் சேர்க்காமலேயே எண்ணி ஐவர்தான் என்று முடிவு செய்தனர். தங்களில் ஒருவரை இழந்துவிட்ட சோகத்தில் அழுதுகொண்டிருந்தனர்.

குருவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. தன் சீடர்களில் ஒருவரை அபகரித்துக் கொண்ட ஆற்றின் மீது கடுங் கோபம் கொண்டார். அதனைப் பலவாறு பழித்துக் கூறி சாபமிட்டார்.

குருவும் சீடர்களும் துயரம் தாங்காமல் அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஆற்றோடு போனவன் தங்களில் யார் என்று அறிந்து கொள்ளாமலேயே துக்கம் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

அந்த நேரத்தில் வழிப்போக்கன் ஒருவன் குருவும், சீடர்களும் இருந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவர்கள் துயரத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு அனுதாபம் கொண்டான். காரணம் என்ன என்று அவர்களிடம் விசாரித்தான். சீடர்கள் நடந்ததைக் கூறி மேலும் அழுதனர். வழிப் போக்கன் அவர்களை எண்ணிப் பார்த்தான். அவர்களின் மடமையை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

“அன்பர்களே! நடந்தது நடந்ததாக இருக்கட்டும். போனவர்களை மீட்கும் மந்திர சக்தி என்னிடம் உண்டு. உங்களில் ஆறு விழுங்கிய நபரை மீட்டுத் தருகிறேன். அதற்கு என்ன சன்மானம் கொடுப்பீர்கள்?” என்று வழிப்போக்கன் கேட்டான். “ஐயா, எங்களில் காணாமல் போனவரைத் தாங்கள் மீட்டுக் கொடுத்தால் எங்களிடம் உள்ள பணம் முழுவதையும் தந்து விடுகிறோம். தங்களுக்கு நாங்கள் என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்போம்” என்று, குரு நெகிழ்ந்து கூறினார்.

வழிப்போக்கன் தன் கையில் ஒரு குறுந்தடி வைத்திருந்தான். அதனை எடுத்தவாறு, “இந்தக் கோலில்தான் மந்திர சக்தி இருக்கிறது. நீங்கள் வரிசையாக நில்லுங்கள். நான் இந்தத் தடியால் முதலில் நிற்பவர் முதுகில் தட்டுவேன். அவர் ‘ஒன்று’ என்று கூறிவிட்டுத் தன் பெயரைக் கூறவேண்டும்” என்று கூறினான்.

வழிப்போக்கன் கூறியவாறே, குரு வரிசையில் முதலிலும் அதனையடுத்து சீடர்களும் வரிசையாக நின்றனர். முதலில் குருவின் முதுகில் கம்பால் தட்டினான். அவர், “ஒன்று. என் பெயர் பரமார்த்த குரு” என்று கூறினார். அடுத்தவனைத் தட்டியதும் ‘இரண்டு’ என்று கூறித் தன் பெயரையும் சொன்னான். இவ்வாறே மற்றவர்களும் முதுகில் தட்டியதும் தங்கள் பெயருடன் எண்ணிக்கையையும் கூறினர். கடைசியாக நின்றவன் “ஆறு, என் பெயர் மூடம்” என்ற கூறியதும் அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. காணாமல் போனவன் கிடைத்து விட்டான், இப்போது ஆறு பேர் உள்ளோம் என்று கூறி ஆனந்தக் கூத்தாடினர்.

தங்களில் ஒருவனை மீட்டுத் தந்த வழிபோக்கனின் அதிசய ஆற்றலை எண்ணி வியந்தனர். அவனைப் போற்றிப் புகழ்ந்து, தங்களிடமிருந்த பணம் முழுவதையும் தந்தனர்.

அதிருஷ்டத்தை நினைத்துக் கடவுளுக்கு நன்றி கூறினான் வழிப்போக்கன்.

http://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.