Jump to content

டூரிஸ்ட் புரோக்கர் ஷாருக்கானின் காஷ்மீர் காதல்!


Recommended Posts

டூரிஸ்ட் புரோக்கர் ஷாருக்கானின் காஷ்மீர் காதல்!

“நான் இதய பூர்வமாய் சொல்கிறேன், என் இதயத்தில் காஷ்மீருக்கு எப்பொழுதுமே தனியான ஒரு இடம் இருக்கும்” என்று காஷ்மீர் மக்களை பார்த்து சொல்லியிருக்கிறார் இந்தி நடிகர் ஷாருக்கான். யாஷ் சோப்ரா இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றது. அதன் முடிவில் கோடைக் காலத்தில் உருகும் காஷ்மீரின் பனி மலைகளை போல உருகி விட்டிருக்கிறார் ஷாரூக்கான்.

படிக்கவும்

“லண்டனிலோ ஸ்விட்சர்லாந்திலோ ஒரு படம் எடுக்கப்பட்டால் படத்தைப் பார்க்கும் மக்கள் அந்த இடங்களுக்கு போய் வர ஆசைப்படுவார்கள். அதே போல இந்தப் படம் காஷ்மீரில் பெருமளவு எடுக்கப்பட்டதால் பார்க்கும் மக்கள் இங்கு வர விரும்புவார்கள்” என்ற தனது நம்பிக்கையை அவர் வெளியிட்டார்.

பனி படர்ந்த மலைகள், சில்லென்ற குளிர் “புது வெள்ளை மழை பொழியும்” சூழலில் காதல் பாட்டு. இப்படி அழகாய் போய்க் கொண்டிருக்கும் இளம் காதலர் வாழ்க்கையில் ரோஜா மலரை சுற்றிய முட்கள் போன்ற முஸ்லீம் தீவிரவாதிகள் காதலனை கடத்தி சென்று விடுவார்கள். படம் பார்க்கும் நடுத்தர வர்க்க இந்தியர்கள் ‘இப்படிப்பட்ட அழகான ஊரில் தீவிரவாதமா?’ என்று தேசபக்தியில் கொதிப்பார்கள். 1990களில் காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ரோஜா படம் மூலம் இப்படிக் காட்டி பணம் சம்பாதித்ததோடு தேசபக்த மதிப்பெண்களையும் பெற்றுக் கொண்டார் மணிரத்தினம்.

அந்த கால கட்டத்தில் ‘காஷ்மீர் என்றாலே முஸ்லிம் தீவிரவாதம், காஷ்மீரிகள் நாட்டுக்கு எதிரானவர்கள்’ என்று ஆளும் வர்க்கம் மக்களிடையே உருவாக்க முனைந்த படிமத்துக்கேற்ப ஊடகச் செய்திகளும் ‘கலைப் படைப்புகளும்’ வெளி வந்தன.

போலீசும் ராணுவமும் இன்னமும் காஷ்மீரி மக்களின் குரல்வளையில் கால் பதித்து நிற்கின்றன. இந்திய ஆதிக்கத்துக்கு எதிராக சிறுவர்களும் பெண்களும் கூட தெருவில் இறங்கி போராடுகிறார்கள். காஷ்மீர் மக்களின் விடுதலைக்கான போராட்டத்துக்கு எந்த ஒரு தீர்வோ முடிவோ ஏற்பட்டு விடவில்லை.

இருந்தாலும் இப்போது காட்சிகள் மாற வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒளிரும் இந்தியாவின் முதலாளிகளுக்கு காஷ்மீரில் சுற்றுலா வளர்ச்சி தேவைப்படுகிறது, அது தொடர்பான ரியல் எஸ்டேட் வாய்ப்புகள் தேவைப்படுகின்றன, மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்திற்க்கு தேன் நிலவு செல்ல ‘பூலோக சொர்க்கம்’ ஒன்று இந்தியாவுக்குள்ளேயே தேவைப்படுகிறது.

கூடங்குளம் போன்ற பகுதிகளில் இந்திய மக்கள் அனுபவிப்பது போன்ற ஜனநாயகம் காஷ்மீரிலும் தளைத்து விட்டது. ‘அங்கு அமைதியும், அழகும், மகிழ்ச்சியும் பொங்குகின்றன’. அதை முன் வைக்க வேண்டிய இன்றைய தேவையின் வெளிப்பாடுதான் யாஷ் சோப்ராவின் திரைப்படமும் திரைப்படத்தை முன் நிறுத்தி அதன் மூலம் காஷ்மீரை உலகுக்கு விற்பதற்காக வெளிப்பட்டிருக்கும் ஷாருக் கான் என்ற தேவ தூதனும்.

அந்த திரைப்படத்தில் ஷாரூக் கான் ஒரு ராணுவ அதிகாரியாக வருகிறாராம். ஒரு இந்திய ராணுவ அதிகாரி தான் அடக்கி ஆளும் காஷ்மீரை எப்படி நேசிக்க முடியும்! தம்மை ஆயுதப் பிடிக்குள் வைத்திருக்கும் இந்திய ராணுவத்தின் ஒரு அதிகாரியை காஷ்மீர் மக்கள் எப்படி நேசிக்க முடியும்!

கொஞ்சம் யோசித்து பாருங்கள்! நாளையே ‘அணு விஞ்ஞானி’ அப்துல் கலாமும், ‘நாற வாய்’ நாராயணசாமியும் கூடங்குளத்தை தங்களுக்குப் பிடித்தமான இடம் என்று பிரகடனப்படுத்தலாம். கூடங்குளத்தின் பெயரில் (குறைந்த பட்சம் 300 கிலோமீட்டர் தொலைவில்) ஒரு IPL மேட்ச் நடத்த ஏற்பாடு செய்யலாம், ஏன் ஷங்கர் எடுக்கும் படத்தில் கூடங்குளம் ஒரு வசனமாக கூட இடம் பெறலாம்!

ஒரு கொலைகாரன் தனது கொலையை சிலாகிக்கலாம். கொல்லப்படுபவர்களால் அப்படி முடியுமா?

_______________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

Tags: அடக்குமுறை, இராணுவம், காஷ்மீர், சுற்றுலா, தீவிரவாதம், போராட்டம், யாஷ் சோப்ரா, விளம்பரம், ஷாருக் கான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.