Jump to content

அஞ்சலி: வாலி - காலத்தை வென்றவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாலி - காலத்தை வென்றவன்

எஸ். கோபாலகிருஷ்ணன்

திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதை வசனகர்த்தா, எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், ஓவியர் எனப் பன்முகங்கள் கொண்ட வாலி அண்மையில் இறந்துவிட்டார். அவரது உடலுக்கு வயது 82 ஆகியிருந்தது. ஆனால் மனதளவில் அவர் என்றும் மார்க்கண்டேயன்தான். அவரது திறமைகளையும் அவற்றின் மூலம் அவர் நிகழ்த்திய சாதனைகளையும் எழுதிக்கொண்டே இருக்கலாம். சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு பாடலாசிரியராக புரட்சி, பாசம், காதல், காமம், இழப்பு, வலி, துக்கம் என அனைத்து உணர்ச்சிகளையும் பாடல் வரிகளில் கொண்டுவந்திருக்கிறார். அவரது பாடல்வரிகள் இலக்கிய ரசிகர்களுக்கும் விருந்தளித்திருக்கின்றன. பாடல் வரிகளில் நவீனத்தையும் ஆங்கிலக் கலப்பையும் புகுத்தி தற்காலிக கிளர்ச்சி விரும்பிகளையும் ஈர்க்கத் தவறியதில்லை. இரண்டு வகையான பாடல்களிலும் அவரது மொழி ஆளுமை மேலோங்கி நிற்கும்.

பாடல்களில் மட்டுமல்ல, பத்தி எழுத்திலும் மேடைப் பேச்சிலும்கூடத் தன் மொழி ஆளுமையைப் பயன்படுத்தி எதுகை மோனையில் அவர் கொளுத்திப் போடும் சரவெடிகளுக்கு கைதட்டல்கள் அடங்க பல நொடிகள் பிடிக்கும். இது தவிர தீவிர ஆன்மீகப் பற்றுக் கொண்டிருந்தவர். முருகன் மீது பல பக்திப் பாடல்களை எழுதியிருக்கிறார். ராமாயணத்தை அவதார புருஷன் என்றும் மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்றும் கவிதை நடையில் எளிய தமிழில் எழுதி அந்த இருபெரும் இதிகாசங்கள் எளிய வாசகர்களைச் சென்றடைய வித்திட்டவர். பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளைப் பாராட்டியும் கவிதைத் தொகுப்புகளை எழுதி இருக்கிறார்.

இவை எல்லாம் அவர் திறமை மற்றும் உழைப்பு சார்ந்தவை. அவரது வார்த்தைகளில் சொல்வதானால், கலைக் கடவுள் சரஸ்வதி தேவி அவருக்கு அளித்த கொடை. அரசன் முதல் ஆண்டி வரை அனைவரையும் சமமாகப் பாவித்து தன்னை யாருக்கும் உயர்வானவராகவும் கருதாமல் அதே நேரத்தில் தன் தன்மானத்தையும் விட்டுக்கொடுக்காமல் கடைசிவரை வாழ்ந்து சென்ற குணாதிசயம்தான் வாலியின் தனிப்பண்பு. இதைப் பறைசாற்றும் எண்ணற்ற நிகழ்வுகளில் சிலவற்றை நினைவுகூரலாம்.

வாலி திரையுலகில் காலூன்றக் களம் அமைத்துக் கொடுத்தவர் அன்றைய நட்சத்திர நாயகர் எம்.ஜி. ராமச்சந்திரன். வாலியை சந்திப்பதற்கு முன்பே தமிழக அரசியலிலும் முக்கிய அந்தஸ்தைப் பெற்று செல்வாக்கு நிறைந்த மனிதராகத் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். இவர்கள் இருவருக்குள்ளும் பரஸ்பர அன்பும் மரியாதையும் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரிடம்கூட தன் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க வாலி தயங்கியதில்லை. தன் மனைவியின் பிரசவ நேரத்தில் எம்.ஜி.ஆர் படத்துக்குப் பாட்டெழுத உடனடியாக வருமாறு அழைப்பு வருகிறது. தன் நிலைமையைச் சொன்ன வாலியை அழைத்துப்போக வந்தவர் நக்கலாக ஏதோ சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆரின் சார்பில் வந்த அழைப்பு என்பதைப் பொருட்படுத்தாமல் கோபத்தில் கொதித்துவிட்டார் வாலி. தன் சார்பில் அழைத்தவர் அப்படிப் பேசியதற்காக எம்.ஜி.ஆரே தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாக பின்நாட்களில் ஒரு வார இதழுக்கு எழுதிய பத்தியில் வாலி பகிர்ந்துகொண்டார்.

அடுத்து வந்த முதல்வர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரோடும் மட்டற்ற நட்பு பாராட்டியவர்தான் என்றாலும் தனக்குத் தவறென்று பட்டால் அவர்களையும் விமர்சிக்கத் தவறியதில்லை.

திரையுலகிலும் இதே கதைதான். எப்பேர்ப்பட்ட ஜாம்பவனானாலும் வாலியிடம் வாலைச் சுருட்டிக்கொள்ள வேண்டும். அவர்களின் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவார் வாலி. இதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம்.

90களின் தொடக்கத்தில் அப்போது நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்துவிட்ட நடிகர் ஒருவரின் படம். அந்த நடிகர் பாடல் பதிவின்போது உடனமர்கிறார். பாடலுக்கான சூழல் வாலியிடம் விளக்கப்படுகிறது. வாலியும் ஒரு பல்லவியைத் தருகிறார். 'இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கலாமே' என்று நடிகர் தயக்கத்துடன் கூற விருட்டென்று எழுந்து சென்றுவிடுகிறார் வாலி. நடிகர் சொன்ன வாக்கியத்தில் இன்னும் என்ற வார்த்தை வாலியின் காதில் விழாததுதான் காரணம். பிறகு நடிகர் மன்னிப்புக் கேட்டு வாலியைப் பாட்டெழுத அழைத்துவருகிறார். அந்த நடிகர் கமல்ஹாசன், படம் அபூர்வ சகோதரர்கள். பாடல், உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்.

90களின் தொடக்கத்தில் அறிமுகமான இசையமைப்பாளர். முதல் படத்தின் பாடல்கள் தேசிய விருதுகளைப் பெறுகின்றன. அவருடன் இணைந்து பணியாற்ற மூத்தோர் முதல் இளையோர் வரை அனைவரும் காத்திருந்தார்கள். அப்படிப்பட்ட சூழலில் தன் இரண்டாவது படத்துக்குப் பாடல்களை எழுத வாலியை அணுகுகிறார் இசையமைப்பாளர். ஆனால் புதியவர்களுக்கு எழுதுவதில்லை, நான்கைந்து படங்களுக்குப் பிறகு பார்க்கலாம் என்று கூறுகிறார் வாலி. பிறகு தான் சேகரின் மகன் என்று சொன்னதும் தன் கொள்கையைத் தளர்த்திக்கொண்டு பாடல் எழுத ஒப்புக்கொள்கிறார் வாலி. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், படம் ஜெண்டில்மேன், பாடல் சிக்கு புக்கு ரயிலே.

90களில் அறிமுகமாகித் தொடர் வெற்றிகளால் நட்சத்திர இயக்குநராக உயர்ந்துவிட்ட இயக்குநர், வாலியை ஒரு நாள் காலை அழைக்கிறார். அப்போது அவரது படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அந்தப் படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்கு வழங்கப்படவில்லை. இயக்குநர் அழைப்பை எடுத்ததும் வாலி, 'என்னைய்யா, நீதான் எந்திரன்லயே எந்திறன் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியே. இப்ப ஏன் கூப்பிட்ற?' என்கிறார். அந்த இயக்குநர் ஷங்கர்.

வாலியின் தன்மான உணர்வை அறியாதவர்கள் இல்லை. அதை மீறி தெரிந்தோ தெரியாமலோ அவரது தன்மானத்துக்கு இழுக்கு நேரும் வகையில் நடந்துகொள்பவர்கள் வாலியின் அறச்சீற்றத்துக்கும் தப்பியதில்லை. பொதுவாக இதுபோல் மனதில்பட்டதைப் பட்டென்று உடைத்துப் பேசுபவர்களுக்கு அதிக நண்பர்களோ நலன்விரும்பிகளோ இருக்க மாட்டார்கள். ஆனால் வாலி, எம்.ஜி.ஆர் முதல் நேற்று அறிமுகமான நடிகர்கள் வரை அனைவரின் அன்புக்குரியவராகவே விளங்கினார். எம்.ஜி.ஆரின் பாசத்துக்குரியவர். சிவாஜியின் அன்புக்கும் பாத்திரமானவர். நடிகர் நாகேஷின் 'வாடா போடா' நண்பர். நடிகர் வி. கோபாலகிருஷ்ணன் தன் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கை பல இடங்களில் நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார் வாலி. எம்.எஸ். விஸ்வநாதனின் அன்புத் தம்பி. இளையராஜா, ரஜினிகாந்த், கமலஹாசன், ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களால் 'அண்ணா' என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.

கண்ணதாசனுடன் ஏற்பட்ட பிணக்கால் அவரை தவிர்த்துவிட்டு வாலியை வளர்த்துவிட்டார் எம்.ஜி.ஆர் என்று சொல்வார்கள். இதனால் வாலி, கண்ணதாசன் இருவருக்குமிடையில் உரசல் இல்லாமல் இல்லை. ஆனால் இருவருக்கும் பரஸ்பர அன்பும் மரியாதையும் இல்லாமல் இருந்ததில்லை. கண்ணதாசன் வயதில் மட்டுமல்லாமல் கவிபாடும் திறமை, மொழி ஆளுமை என அனைத்து வகையிலும் தன்னைவிட உயர்ந்தவர் என்ற மரியாதை வாலிக்கு எப்போதுமே இருந்ததுண்டு. தன்னை வாழ்த்தி எழுதப்பட்ட பாடலொன்றில் கண்ணதாசனை தான் முந்திவிட்டதாக வந்த வரியை நீக்கச் சொல்லி அடம்பிடித்து, அதை நீக்கிய பின்தான் பாடலை வெளியிட அனுமதித்தார் வாலி என்று அந்தப் பாடலை எழுதியவரும் வாலியின் உற்ற நண்பருமான கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். கண்ணதாசனை யாராலுமே தோற்கடிக்க முடியாது. அவருக்கு நிகர் அவர் மட்டும்தான் என்ற கருத்தை ஆழமாகத் தன் நெஞ்சத்தில் பதித்திருந்தார் வாலி என்பதற்கு இதுவே சான்று. இதே போல் கண்ணதாசனும் பல நேரங்களில் தான் எழுதிய பாடல்களுக்கும் வாலி எழுதிய பாடல்களுக்கும் வித்தியாசமே தெரிவதில்லை என்று சொல்லியிருப்பதாகக் கூறுவார்கள். இந்தக் குழப்பம் கண்ணதாசனுக்கு மட்டுமில்லை. ரசிகர்களுக்கும் உண்டு. வாலியால் எழுதப்பட்ட பல பாடல்கள் கண்ணதாசனால் எழுதப்பட்டவை என்ற கருத்து பரவிவிடும்.

தன் அடுத்த போட்டியாளரான வைரமுத்துவிடம் தொழில் ரீதியாகப் போட்டி உணர்வு இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டத் தவறியதில்லை வாலி. வைரமுத்துவும் அந்த அன்புக்கு ஏற்றவாறு நடந்துகொண்டிருக்கிறார். பொதுவாக வைரமுத்து அளவுக்குக் கவிதைத் தரத்துடன் எழுத வாலி மெனக்கெடுவதில்லை என்று இருவருக்குள்ளும் பகை ஏற்படுத்திக் குளிர்காய நினைத்தவர்கள் சொன்னதை அவர்கள் இருவரும் விவாத அளவிலேயே விட்டுவிட்டனர்.

வைரமுத்துவுக்கு அடுத்து வந்த அனைத்துக் கவிஞர்களுமே வாலியின் சீடர்களாகவே தங்களை அறிவித்துக்கொண்டார்கள். பழனி பாரதி வாலியின் அன்புக்குப் பாத்திரமானவர். தினமும் சந்திக்கும் நண்பர். பா.விஜய், கபிலன், நா. முத்துகுமார், ஸ்நேகன், தாமரை ஆகியோரும் வாலியை அன்பு மழையில் நனையவைக்கத் தவறியதில்லை. இவர்களில் பெரும்பாலானோர் வைரமுத்துவிடம் நெருங்கியதில்லை. அவரைப் பற்றிப் பொதுவெளியில் பேசியதுகூட இல்லை. வைரமுத்துவைவிட மூத்தவரான வாலி பழகுவதற்கு இனியவராகவும் எளியவராகவும் இருப்பதாக அடுத்த தலைமுறைக் கவிஞர்கள் உணர்ந்திருக்கலாம்.

தீவிர ஆத்திகராக இருந்துகொண்டே நாத்திகர்களிடம், குறிப்பாக திராவிடக் கட்சித் தலைவர்களிடம் நட்பு பாராட்டியதும் வாலியின் தனித்தன்மைகளில் ஒன்று. தன் மதம் சாதி சார்ந்த அடையாளங்களை ஒருபோதும் மறைக்கவோ மறுக்கவோ விரும்பாத வாலி, மு.கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோரின் நண்பராக இருந்திருக்கிறார். இவர்களின் கடுமையான விமர்சகர்களான துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமாசாமியின் நண்பராகவும் இருந்திருக்கிறார். கருணாநிதியின் எதிர் முகாமைச் சேர்ந்த ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததற்கு வாழ்த்துப்பா படிக்கும் அளவுக்கு ஜெயலலிதா மீது அன்புகொண்டிருந்தார்.

ஈழத்துயர் குறித்தும் வாலி அவ்வப்போது தன் கவிதைகளால் கண்ணீர் வடித்ததுண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயார் பார்வதி அம்மாளின் மறைவின்போதும் அவ்வாறே அவரது பேனா அழுதது. 'பார்வதி அம்மாளுக்கு தங்க இடம்தராத எங்கள் தமிழ்மண் நிரந்தரமாய் பழிதேடிக்கொண்டது' என அவர் கவிதை நிறைவுபெற்றிருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மீதும் கவிஞர் வாலி பெருமதிப்பும் விருப்பும் கொண்டிருந்தார் என்பதற்கு அவரது கவிதைகளே சாட்சியாய் நிற்கின்றன.

வாலி யார் மீதும் அன்பும் நட்பும் பாராட்டத் தயங்கியதில்லை. ஆனால் எப்பேர்ப்பட்ட நண்பராயினும் அவருக்காகத் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததில்லை.

எல்லா மனிதர்களைப் போல் வாலியின் மீதும் சில குறைகள் உண்டு. பாராட்ட நினைத்தால் மனதாரப் பாராட்டிவிடுவது ஒரு நற்பண்புதான். ஆனால் சில நேரங்களில் சம்பந்தப்பட்டவரே கூச்சபப்டும் அளவுக்குப் பாராட்டுவிடுவது வாலியின் வழக்கம். குறிப்பாக கருணாநிதியை விமர்சனமின்றிப் பாராட்டிக்கொண்டே இருந்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் தவறுகளையோ, மக்கள் விரோத நடவடிக்கைகளையோ ஒரு முறைகூட விமர்சித்ததில்லை. திரையுலகைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு செய்வதற்குப் பெயர்போனவர்கள் அல்ல என்றாலும் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர் என்று அறியப்பட்ட வாலியும் அவர்களை விமர்சிக்கத் தயங்கியது சற்று ஏமாற்றம் அளிக்கும் விஷயமே.

வாலி மீது வைக்கப்படும் மற்றொரு விமர்சனம், அவர் இசையமைப்பாளரின் மெட்டுக்காகவும் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்புக்காகவும் மொழியை தன் இஷ்டத்துக்கு வளைத்தார் என்பது. இவரது பாடல்களில் அதிகமாகப் பிறமொழிக் கலப்பு இருந்ததாகவும் குற்றச்சாட்டு உண்டு. 'என்னைத் தேடி வரும் இலக்கிய ரசிகர்களுக்கு நான் பாலூட்டும் தாய், பணம் தரும் தயாரிப்பாளருக்கு வாலாட்டும் நாய்' என்று சுயவிமர்சன பாணியில் வாலியே இதை ஒப்புக்கொண்டாலும் ஒரு கட்டத்துக்கு மேல் இதுபோன்ற சமரசங்களைத் தவிர்க்கும் நிலையை அடைந்த பின்னும், அவர் அதற்கு முயற்சிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

மூன்றாவது அவரது கவிதைத் திறமை பற்றியது. பாடல் எழுதுவது என்பது வேறு, கவிதை என்பது வேறு. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுபவர்கள் அனைவரும் கவிஞர் என்று அழைக்கப்பட்டாலும் அவர்களும் சில கவிதை முயற்சிகளைச் செய்திருந்தாலும் கவிதைகளைத் தீவிரமான கலையாகக் காண்பவர்கள் இவர்களைக் கவிஞர்களாக ஏற்றுக்கொண்டதில்லை. அதற்காக இவர்களுக்கு கவித்திறனே இல்லை என்று சொல்லிவிட முடியாது. கண்ணதாசன், வாலி, வைரமுத்து ஆகியோரின் பாடல்களில் கவிதை நயம் மிளிர்கிறது. கவிதையை எட்டுவதற்கான முயற்சி தென்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பாடல்களை கவிதைகள் என்று கவிதை வாசகர்கள் கொண்டாடத் தக்கவையாக இருந்ததில்லை. வாலி திரைப்படத் தேவை எதுவும் இல்லாமல் வெளியே எழுதிய கவிதைகளிலும் எதுகை மோனை ஜாலங்களைத் தவிர அத்தனை சிறப்பாக வேறெதுவும் இருந்ததில்லை என்றே தேர்ந்த கவிதை வாசகர்கள் மதிப்பிடுகிறார்கள்.

கறாரான மதிப்பீடுகள் இப்படி இருந்தாலும் உன்னை நான் சந்தித்தேன், அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்பன போன்ற இலக்கியத் தரமான பாடல்கள், சிக்கு புக்கு போன்ற இளமைத் துள்ளலான பாடல்கள், நேத்து ராத்திரி போன்ற காம ரசம் சொட்டும் பாடல்கள், கற்பனை என்றாலும்.. என்பன போன்ற பக்திப் பாடல்கள் எனப் பல்வேறு வகைமைகளிலும் சிறந்து விளங்கினார் என்பதில் சந்தேகமில்லை. பல்வகை உணர்ச்சிகளையும் பாத்திரங்களையும் வாழ்நிலைகளையும் பிரதிபலிக்கும் சினிமாவுக்கு ஏற்ற முழுமையான படைப்பாளியாக அவர் விளங்கினார் என்றும் சொல்லலாம்.

கால மாற்றத்தால் காலாவதியாகிவிடாத உயிர்ப்பும் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் திறமும் இயல்பான சொல்லாட்சிகளும் அந்தஸ்தையும் வயதையும் பொருட்படுத்தாமல் அவர் வாரி வழங்கிய அன்பும் வாலியின் முத்திரைகளாகத் தமிழர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=5&contentid=c1a186e5-dd68-4fa5-9f53-7bbaa956ba66

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.