Jump to content

வழிகாட்டும் மனிதர்கள், முன்னுதாரண மானிடர்.


Recommended Posts

நான் கடவுள் இல்லை - நீதிபதி சந்துரு

 

நான் கடவுள் இல்லை அப்புறம் எதற்கு மாலை போடுகிறீர்கள்.

எனக்கு குளிரவில்லை அப்புறம் எதற்கு சால்வை போற்றுகிறீர்கள்.
எனக்கு பசியில்லை அப்புறம் எதற்கு பழங்கள் கொண்டுவருகிறீர்கள்.
இப்படி இந்த நாட்டில் இன்றைய தினம் ஒருவரால் "தில்'லாக பேசமுடியும் என்றால் அது முன்னாள் ஐகோர்ட் நீதிபதி சந்துரு ஓருவரால்தான் முடியும்.
அவரை பேட்டிக்காக சந்திக்க சென்றபோது அசந்துவிட்டேன், காரணம் பலரது வீட்டிற்குள் நூலகம் இருக்கும், ஆனால் அவரது வீடே நூலகத்திற்குள்தான் இருந்தது, அந்த அளவிற்கு வீட்டில் திரும்பிய திசைகளில் எல்லாம் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்தான். அந்த புத்தகங்களில் பெரும்பாலானவை சட்டம் சம்பந்தபட்ட புத்தகங்களே.
எத்தனையோ நீதிபதிகள் ஓய்வு பெறுகிறார்கள் ஆனால் இப்படி ஒரு நீதிபதி ஓய்வு பெறப்போகிறாரே என்ற ஆத்மார்த்தமான கவலையுடன் ஒருவரது ஓய்வு நாளை ஊடகங்கள் பெரிதாக படம்பிடித்தன என்றால் அது இவர் ஒருவரது ஓய்வு நாளாகத்தான் இருக்கும்.
ஓய்வு பெறும் நாளன்றும் வேலை பார்த்தார், வழியனுப்பு விழா என்ற சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அன்று மாலையே அரசாங்கம் தனக்கு வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரயிலேறி வீட்டிற்கு வந்தவர். முன்கூட்டியே தனது சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தார்.
எளிமையும், நேர்மையும் பலரிடம் இருக்கும் இத்துடன் திறமையும் இவர் ஒருவரிடம்தான் கொட்டிக்கிடக்கிறது, அத்துடன் யாரிடமும், எதையும் எதிர்பார்க்காத தன்மை கொண்டவர்.
இவர் வழங்கிய தீர்ப்புகள்தான் இனி வருங்காலத்தின் சட்ட மேற்கோளாக காட்டப்பட இருக்கின்றது, அந்த அளவு ஆழமான சட்ட அறிவுடனும், சமூக சிந்தனையுடனும், அற்புதமான மேற்கோள்களுடனும் கூறப்பட்டவையாகும்.
பெண் கடவுளாக இருக்கும்போது ஒரு பெண் பூசாரியாக இருக்கக்கூடாதா? எந்த ஆகம விதிகளிலும், புத்தகத்திலும் அப்படி பெண் பூசாரி கூடாது என்று கூறப்படவில்லை என்பதை ஆதாரமாக பூர்வமாக சொல்லி பெண் பூசாரிகள் நியமனத்திற்கு வழிகண்டவர்.
தலித் பெண் சமைத்து சாப்பிடுவதா என்று அவரை வேலையைவிட்டு ஒரு பள்ளி நிர்வாகம் தூக்கியது. சம்பந்தபட்ட பெண்ணின் வழக்கு இவரிடம் வந்தது. பல்வேறு உதாரணங்களுடன் இவருக்கு வேலை வழங்கவேண்டும் என்று இவர் வழங்கிய தீர்ப்பு காரணமாக அவசர அரசாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இவரால் தமிழகத்தில் இன்று 22 ஆயிரம் தலித் பெண்கள் சமையல் வேலை பார்த்து வருகின்றனர்.
கதர் உடை அணிந்து வந்ததற்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட விமானநிலைய பெண் அதிகாரியின் வழக்கில் இவர் சொன்ன தீர்ப்பு காரணமாக இழந்த வேலை கிடைத்ததுடன் கதர் குறித்த பார்வையே மாற்றி அமைத்தது.
தனி சுடுகாடு வேண்டும் என்று கேட்டு வந்த வழக்கில் இவர் தீர்ப்பு அளிக்கும்போது சொன்ன மேற்கொள்களால் தமிழக சுடுகாடுகளில் இப்போது சமரசம் உலாவுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லி வேலையை விட்டு நீக்கப்பட்ட ஒருவருக்கான வழக்கில் தீர்ப்பு சொல்லும் பொறுப்பில் இருந்தபோது அவர் மனநலம் சரியாக இருக்கிறது என்பதை அழகாக நிரூபித்தது மட்டுமின்றி அரசாங்க வேலை பார்ப்போருக்கு உரிய பணிப் பாதுகாப்பு குறித்தும் ஒரு வரையறை செய்தவர்.
எதைப்பற்றி பேசினாலும் அதற்கான ஆதாரத்தை எடுத்துகாட்டுகிறார். நான் போனபோது அவருக்கு என்று எந்த உதவியாளரும் இல்லை, அவரே ஒவ்வொரு அறையாக போய் அதற்கான புத்தகங்கள், கோப்புகளை எடுத்துவந்து புள்ளிவிவரங்களை தந்தார். இடையிடையே பிளாஸ்கில் கொண்டு வந்திருக்கும் காபி மற்றும் சுண்டல் போன்றவைகளை சாப்பிடுகிறார் மறக்காமல் நமக்கும் கொடுக்கிறார்.
சட்டத்தின்படியான ஆட்சி நடக்கும் நம்நாட்டில் சட்ட அறிவு என்பது மக்களிடம் குறைவாக இருப்பது வருத்தத்தை தருகிறது, ஒன்று தெரியுமா எனக்கு சட்டம் தெரியாது என்று சொல்லி எந்த குற்றத்தில் இருந்தும் தப்பமுடியாது, சட்டத்தில் இருந்து விலக்கும் பெறமுடியாது என்கிறார்.
ஆயுள் தண்டனை பற்றிய கேள்விக்கு அது பதினான்கு ஆண்டுகளுக்கான தண்டனை என்று இங்கும், மேற்குவங்கத்தில் அது இருபது ஆண்டுகள் என்றும் வைத்திருக்கிறார்கள் உண்மையில் ஆயுள் தண்டனை என்றால் அது ஆயுளுக்குமான தண்டனைதான். கைதியின் நன்னடத்தை அரசாங்க விதி, சலுகை, கொள்கை என்று சொல்லி முன்கூட்டியே விடுவிப்பது வேறுவிஷயம்.
பொதுவாக வழக்குகள் தாமதப்படுகிறது என்ற கேள்விக்கு அழுத பிள்ளைக்குதான் பால் என்ற கதை கோர்ட்களிலும் இருப்பது வேதனைதான் வரக்கூடிய நெருக்கடிகளின் அடிப்படையில்தான் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன இந்த நிலைமாறிட வேண்டும்தான் என்றார்.
இப்போது சினிமா பார்த்துவிட்டு என்கவுன்டரில் குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்துகிறார்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் மூலமாகவே தண்டிக்கப்பட வேண்டும்.
ஹெல்மெட்டை அணியாமல் வாகனம் ஓட்டுவது, சில ஊர்களில் குற்றம் என்கிறார்கள் சில ஊர்களில் குற்றம் இல்லை என்கிறார்கள் என்ற கேள்விக்கு அது குற்றமா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் உங்கள் மனதின் பக்கத்தில் நின்று அது பாதுகாப்பானாதா இல்லையா என்று பதில் தேடுங்கள் விடைகிடைக்கும் என்கிறார்.
இப்படி பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள் குறித்து ஆழஅகலத்துடன் விவரித்து எந்த கேள்விக்கும் சட்டத்தின் வாயிலாக அவர் சொன்னவிதம் பல நாட்களுக்கு மனதில் நிற்கும். இங்கே சுருக்கமாக சொல்லியிருக்கிறோம் மற்றபடி ஒவ்வொரு தீர்ப்பு மற்றும் அதன் பின்னணியை வைத்து ஒரு புத்தகமே போடலாம்.
விடைபெறும்போது வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்த விதம் அவரது உயரத்தை இன்னும் கூட்டியது.


gallerye_080538194_818564.jpg

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=818564

 

 

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply

மனிதரில் தெய்வம் உண்டு... நாகராஜ் என்ற பெயர் கொண்டு...

 

Tamil_News_large_962003.jpg
 
வேலுார் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் பக்கத்தில் உள்ளது ஹோட்டல் ஏலகரி. காலை ஏழு மணியில் இருந்து வயதானவர்கள், பெண்கள், மனநிலை சரியில்லாதவர்கள் என்று ஒரு பாவப்பட்ட கூட்டமே வந்து தங்களுக்கு பிடித்த இட்லி, பூரி, தோசை, புரோட்டா போன்றவைகளை வாங்கி உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு பின், கல்லாவில் உட்கார்ந்திருக்கும் கடை உரிமையாளர் நாகராஜிடம் 'காசுக்கு' பதிலாக வணக்கம் மட்டும் தெரிவித்துவிட்டு செல்கின்றனர்.
இது போக நகரசுத்தி தொழிலாளர்கள், கை வண்டி இழுப்பவர்கள் போன்ற எளிய தொழிலாளிகள் மற்றும் மாணவர்களுக்கு உணவு பண்டங்கள் பாதி விலைதான்.
மேலும் நாள் முழுவதும் கைக்குழந்தையுடன் பால் கேட்டு வருபவர்கள் கையில் காசு இருந்தால் கொடுக்கலாம் இல்லை என்றால் பாலை மட்டும் வாங்கிக் கொண்டு செல்லலாம்.
இந்த ஆச்சர்யத்தை நிகழ்த்திக் கொண்டு இருப்பவர் நாகராஜ். இதுதான் வாழ்க்கை என்று வாழும் இவரைப்பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக பார்க்கலாம்.
ஏலகிரியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான நாகராஜுக்கு ஏழாம் வகுப்பிற்கு மேல் படிப்பு வரவில்லை, குடும்பத்திற்கு பாரமாக இருக்கவேண்டாமே என்று எண்ணி ஓட்டல் தொழிலாளியாகப் போனார்.
நீண்ட காலம் ஓட்டல் தொழிலாளியாக இருந்ததினால் இந்த தொழில் அத்துப்படியாக, தனியாக ஓட்டல் துவங்கினார்.
ஹோட்டல் ஏலகிரியில் இட்லி, தோசை, பூரி, புரோட்டா, குஸ்கா என்ற எல்லாமும் ருசியாக கிடைக்கும். நாகராஜ் தானே கடைக்கு தேவையான தரமான உணவு பொருளை தேடி வாங்குவதாலும், அதனை தரமான முறையில் தயாரிப்பதாலும், நியாயமான விலையில் விற்பதாலும் நல்ல வியாபாரம் நடக்கும்.
வருடத்தில் 365 நாளும் இவரது கடை திறந்திருக்கும், இரவில் ஐந்து மணி நேரம் துாங்கும் நேரம் போக மீதம் இருக்கும் நேரம் முழுவதையும் கடையில்தான் செலவழிப்பார்.
இப்படியான சூழ்நிலையில்தான் ஒரு சம்பவம் இவரது கடைமுன் நடைபெற்றது.
ரயில் பயணிகள் ஜன்னல் வழியாக காலி குடிநீர் பாட்டிலை துாக்கி எறிவதை போல ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அவ்வப்போது சிலரை துாக்கி எறியாத குறையாக ரயில்களில் இருந்து இறக்கிவிட்டு செல்வர்.
இப்படி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவும், அந்த பெண்களில் பெரும்பாலோனார் மனநிலை சரியில்லாதவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களை இப்படி கல்நெஞ்சத்துடன் இங்கே இறக்கிவிட்டவர்கள் ஊருக்கு போனதும் காணாமல் போனாதாக உறவுகளிடம் சொல்லி பொய்யாக தேடிக்கொண்டே இருப்பார்கள்.
இப்படி இறக்கிவிடப்படும் மன நோயாளிகளின் கதி என்ன?
மன நோயாளிகள் ஒரு பாங்கையோ, நகைக்கடையையோ, ஜவுளிக்கடையையோ தாண்டி போகும்போது அவர்களிடம் எந்தவித சலனமும் ஏற்படாது, அதே நேரம் உணவு பண்டங்கள் விற்கும் ஓட்டலையோ அல்லது டீகடையையோ தாண்டிப்போகும்போது உடலும் உள்ளமும் பசி என்ற சலனத்தை ஏற்படுத்த கண்ணில் ஓர் ஏக்கத்துடன் அங்கேயே நின்றுவிடுவார்கள்.
என்னதான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றாலும் பசி உணர்வு இருக்கத்தான் செய்யும், ஆனால் பசிக்குது என்று கேட்கத்தெரியாது.இப்படிப்பட்ட ஜீவன்கள் தனது கடையை ஏக்கத்துடன் பார்ப்பதை அறிந்ததும் பதறிப்போன நாகராஜ், அவர்களை அன்புடன் அழைத்து விருப்பப்பட்டதை சாப்பிடக் கொடுத்தார்.
நாகராஜ் கையால் நன்றாக சாப்பிட்டுவிட்டு கிடைத்த இடத்தில் துாங்கியவர்கள் மறுநாள் காலையிலும் வந்தனர். இந்த முறை வந்த போது தங்களுடன் மேலும் சிலரை கூட்டிக்கொண்டு வந்தனர். சந்தோஷத்துடன் எதிர்கொண்ட நாகராஜ் அனைவருக்கும் அன்புடன் உணவு வழங்கினார்.
இவர்களைப் பார்த்து சில முதியோர்களும் உடல் ஊனமுற்றவர்களும் கடைக்கு வர இப்படியாக கிட்டத்தட்ட தினமும் நுாறு நுாற்றைம்பது பேர் காலை உணவு சாப்பிட வாடிக்கையாக ஹோட்டல் ஏலகிரிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
அவர்கள் பாட்டிற்கு வருவார்கள் குட்மார்னிங் போல நாகராஜ்க்கு ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு வேண்டியதை சாப்பிட்டுவிட்டு திரும்ப போகும்போது ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு போய்விடுவார்கள்.
இதே போல துப்புரவு தொழிலாளர்கள் போன்ற ஏழைத்தொழிலாளர்கள் மற்றும் சீருடையுடன் வரும் ஏழை மாணவர்களுக்கு பாதி விலையில் உணவு இதனால் இரண்டு இட்லி சாப்பிடுபவர்கள் நாலு இட்லி சாப்பிட்டு இன்னும் தெம்பாக, ஆரோக்யமாக இருப்பார்கள் என்பது நாகராஜின் நம்பிக்கை.
எப்படி இதெல்லாம் முடிகிறது என்ற போது எனக்கு பசியோட அருமை தெரியும் ஆகவே என்னால முடிந்த அளவு இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உணவு வழங்குகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக எனது இந்த காரியத்திற்கு பெரிதும் துணையாக இருப்பவர் என் துணைவியார் சுஜாதாதான் என்கிறார் பெருமையாக.
அன்றாடம் எங்கள் வீட்டு அடிப்படை செலவிற்கு தேவைப்படும் பணத்தை தவிர மற்ற பணம் அனைத்தையும் இதற்கே செலவழித்து விடுகிறார். விசேஷ நாளில் வியாபாரம் நன்கு நடந்து கூடுதலாக லாபம் கிடைத்தால் அந்த லாப பணத்தில் பேனா, பென்சில் என்று வாங்கிக்கொண்டு போய் அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிவிட்டு வந்துவிடுவார்.
பணத்திற்காக வாழக்கூடாது என்ற கொள்கையில் இருவரும் உறுதியாக இருக்கிறோம், இன்னும் வருமானம் கூடுதலாக கிடைத்தால் மதிய உணவும், இரவு உணவும் கூட வழங்க எணணியுள்ளோம், கடையும், குடியிருக்கும் வீடும் வாடகைதான், பாங்க் இருப்பு எதுவும் கிடையாது, கால்பவுன் தோடும் மூன்று பிள்ளைகளும்தான் எங்கள் சொத்து. எங்கள் பிள்ளைகளையும் மற்றவர்களுக்கு உதவும் வாழ்க்கைதான் வாழவேண்டும், ஒருக்காலத்திலும் பணத்தின் மீது ஆசை வைக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோம்.
சுஜாதா ஒரு வேலைக்கு தயராகிக்கொண்டு இருக்கிறார், வேலை கிடைத்ததும் அந்த சம்பளத்தில் நமது குடும்பத்தை நடத்திக்கொள்வோம், கடை வருமானம் முழுவதையும் ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குவதிலேயே செலவழிப்போம் என்றும் சொல்லியுள்ளார்.
நாங்கள் செய்யும் இந்த காரியத்தை சேவை தொண்டு என்றெல்லாம் சொல்லி எங்களை பெருமைப்படுத்தி கொள்ள விரும்பவில்லை, பசிக்கும் சக மனிதர்களுக்கு செய்யும் சிறு உதவி அவ்வளவுதான் என்கின்றனர்.
கடையில் வேலை பார்ப்பவர்கள் பசியோடு வருபவர்களை அலட்சியப்படுத்தி விடக்கூடாது, அவமானம் ஏற்படும்படி பேசிவிடக்கூடாது என்பதற்காக எங்கு இருந்தாலும் காலையில் நாகராஜ் கடைக்கு வந்துவிடுவார். தானே அவர்களை வரவேற்று உணவு வழங்குவார். இதற்காக இவர் வெளியூருக்கும் தற்போது போவது கிடையாது, உறவு விசேஷம் என்பதைக்கூட இந்த நேரம் தாண்டிதான் வைத்துக்கொள்கிறார்.
உங்களோடு சேர்ந்து நாங்களும் சேவை செய்கிறோம் என்றும், ட்ரஸ்ட் ஆரம்பித்து முறைப்படுத்தி செய்யுங்கள் என்றும், எவ்வளவு பணம் வேண்டும் உங்களுக்கு மாதாமாதம் அனுப்புகிறோம் என்றும், நிறைய பேர் சொல்லி வருகிறார்கள் அதை அன்போடு மறுத்து விடுகிறோம். காரணம் நாங்கள் எங்கள் போக்கில் எங்கள் மனதிருப்திற்கு ஏதோ செய்கிறோம், பாராட்டு கிடைக்கும், பணம் கிடைக்கும்,உதவி கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்து செய்யவில்லை. ஆகவே எங்களுக்கு நல்ல ஆரோாக்கியமும், இதே போல நியாயமான வருமானமும் வந்தால் போதும் அதை தாண்டி மக்களோட ஆசீர்வாதம் மட்டும் போதும் என்று சொல்லும் இந்த நாகராஜ்- சுஜாதா தம்பதிகளை வாழ்த்த விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9944565814.
- எல்.முருகராஜ்
 
gallerye_172507285_962003.jpggallerye_172513514_962003.jpg
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் ஒரு சிலர் இருப்பதால்தான் உலகம் இன்னும் மனித தன்மையுடன் இருக்கிறது

Link to comment
Share on other sites

பணம் தேவையில்லை; மனம் தான் தேவை!

 

ஈரநெஞ்சம் மகேந்திரன்.

 

 

eeranenjam06.jpg?w=274&h=274

 

 

முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு மூதாட்டியுடன் ஈரநெஞ்சம் மகேந்திரன்.

மதுரையைச் சேர்ந்தவர் முத்துகுமார் (28). வீட்டில் ஏதோ பிரச்னை; கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இவருக்கு மறதிநோயும் உண்டு. வீடு திரும்பத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். கண்கள் மிரள, சவரம் செய்யப்படாத பல மாதத் தாடியுடன், கந்தல் உடையுடன் தெருக்களில் பைத்தியமாக அலைந்துகொண்டிருந்தார்…
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (80); ரயிலில் பழவியாபாரம் செய்து வந்தவரை மடக்கிய சிலர் அவரது நகைகளைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டனர். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜம்மாள் மனம் போன போக்கில் அலைந்து கோவை வந்தார்; நகரத் தெருக்களில் பிச்சைக்காரியாகத் திரிந்துகொண்டிருந்தார்…
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அசோகன் (42); 18 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பிறழ்ந்து வீட்டைவிட்டுப் போனவர். இறந்துவிட்டதாக குடும்பத்தினரே மறந்திருந்த வேளை. கோவையில் பரிதாபமான தோற்றத்தில் பேருந்து நிறுத்தத்தில் கிடந்தார்…
கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் நிர்மலா (29), மனநிலை பாதிக்கப்பட்டவர்; யாரிடமும் பேசமாட்டார். 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியவரை குடும்பத்தினர் தேடி அலுத்துவிட்டனர். அலங்கோலமான ஆடைகளுடன் பூங்கா அருகே படுத்துக் கிடந்தார்…
- நீங்களும் இத்தகைய பரிதாபத்திற்குரிய மனிதர்களை தெருவில் சந்தித்திருக்கலாம். பார்த்தவுடன் ஒரு நிமிடம் மனம் துணுக்குறலாம். அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டு, அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். கொஞ்சம் இரக்கம் உள்ளவராக இருந்தால் சில்லறைக் காசுகளைப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுவோம். அவரவர் வேலையே அவரவருக்கு பெரும் சுமை.  இது ஒரு பொதுவான மனநிலை.
eeranenjam08.jpg?w=294&h=220
ஆனால், கோவை, காந்திபுரத்தில் குடியிருக்கும் மகேந்திரனுக்கு இத்தகைய மனிதர்களை மீட்பதே வாழ்க்கை லட்சியம். தெருவில் திரியும் ஆதரவற்ற, மனநிலை பிறழ்ந்த மனிதர்களை மீட்டு, முடி வெட்டி, அவர்களைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, அருகிலுள்ள காப்பகங்களில் சேர்ப்பதை தனது கடமையாகவே செய்து வருகிறார்.
.
அதுமட்டுமல்ல, கோவையிலுள்ள 15 ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் அவ்வப்போது சென்று அங்குள்ள ஆதரவற்றோருடன் கனிவுடன் உரையாடி, நகம் வெட்டி, உணவு வழங்கி, தோழமை காட்டுவதும் இவரது பணி.
.
இவருடன் ஒரு இளைஞர் பட்டாளமே பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கும் கூடுதல் தகவல்.அவ்வாறு நட்புடன் பழகி, அவர்கள் அளிக்கும் தகவல்களை முகநூலிலும் வலைப்பூக்களிலும் படத்துடன் வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பலரை அவர்களது குடும்பத்துடன் சேர்த்துவைத்திருக்கிறார்கள். முத்துகுமார், ராஜம்மாள், அசோகன், நிர்மலா ஆகியோர், அவ்வாறு பிரிந்த குடும்பத்தில் சேர்த்து வைக்கப்பட்டவர்கள் தான்.
 
eeranenjam07.jpg?w=294&h=294
கோவையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களிலும் காவல் நிலையங்களிலும் ‘ஈரநெஞ்சம் மகி’ என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. சுமார் ஐந்தாண்டுகளாக இந்த சேவைப்பணியில் மகேந்திரன் ஈடுபட்டிருக்கிறார். இதற்கென, ஒத்த கருத்துள்ள பரிமளா வாகீசன், சுரேஷ் கணபதி, தபசுராஜ், குமார் கணேஷ் ஆகியோருடன் இணைந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் துவக்கி இருக்கிறார். ‘ஈகை விலக்கேல்’ என்பது இவர்களது அமைப்பின் முத்திரை வாக்கியம்.
இவர்களது சேவையால் இதுவரை கோவை தெருக்களில் திரிந்த நூற்றுக்கு மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்; காப்பகங்களில் இருந்து 25க்கு மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணையவும் ஈரநெஞ்சம் உதவி இருக்கிறது. அதுமட்டுமல்ல, தெருக்களில் திரியும் நோயாளிகளை அரசு மருத்துவமனையில் சேர்ப்பதும், அநாதையாக இறப்போரின் சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதும் இவர்களின் அற்புதமான பணிகளில் சில.
eeranenjam09.jpg?w=294&h=244
இத்தனைக்கும் மகேந்திரன் (35) வசதியானவர் அல்ல; ஆட்டோ உதிரி பாகங்களைத் தயாரிக்கும் குறுந்தொழிலதிபர் மட்டுமே. மனைவி, மகள் என்று சிறு குடும்பம். வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சேவைக்கெனவே ஒதுக்கிவிடுகிறார். குடும்பமும் அவருக்கு ஒத்துழைக்கிறது. அவரது தொழில் தொடர்புள்ள நிறுவனங்களும் மனமுவந்து ஆதரவளிக்கின்றன. நல்லது செய்ய முன்வருவோருக்கு உதவ நல்ல உள்ளங்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இவ்வாறு சேவை செய்யும் ஆர்வம் எப்படி வந்தது? சொந்தக் குழந்தை மலஜலம் கழித்தால் கூட மனைவியைக் கூப்பிடும் கணவர்கள் மிகுந்த உலகத்தில், முகமறியாத பலருக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி சேவை செய்யும் மனம் எங்கிருந்து வந்தது?
eeranenjam05.jpg?w=265&h=236
இதோ மகேந்திரனே பேசுகிறார்…
நானும் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். மனநிலை பாதிப்பின் கொடுமை எனக்கு அனுபவப்பூர்வமாகவே தெரியும். எனது சகோதரியின் மனநிலைப் பிறழ்வால் அவர் அடைந்த கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அப்போதே, இதுபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.
தெருவில் திரியும் பைத்தியகாரர்களைக் கண்டு நாம் பொதுவாக மிரள்கிறோம். ஆனால், அவர்கள் தான் நம்மைக் கண்டு அஞ்சுகிறார்கள். தெருக்களில் பலவாறாக அலைக்கழிக்கப்பட்ட அவர்களின் துயரக் கதைகளைக் கேட்டால் நெஞ்சம் வெடித்துவிடும்.
மனநிலைப் பிறழ்வுக்கு காரணங்கள் பல இருக்கலாம். அவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பி வந்தவர்களல்ல. அவர்களின் விதி அப்படி ஆக்கியிருக்கிறது. நம்மால் முடிந்தால் அந்த விதியில் சிறிது மாற்றம் செய்ய முடியும்.
காப்பகங்களில் எங்கோ வெறித்தபடி வாழ்க்கையே சுமையாக இருக்கும் மனிதர்களுக்கு நம்மாலான சிறு உதவி ஆறுதலான பணிவிடைகள் தான். இதற்கு பெரிய அளவில் பணம் தேவையில்லை; மனம் தான் தேவை. எங்களைப் பொருத்த வரை, நாங்கள் ஆதரவற்றோருக்கு உதவ முற்படும்போது, சம்பந்தமில்லாத பலர் எங்களுடன் கைகோர்த்துப் பணிபுரிவதைக் கண்டிருக்கிறேன். சமுதாயத்தில் ஈரநெஞ்சம் இல்லாமல் போய்விடவில்லை.
நமது குழந்தை அழுதுகொண்டிருக்கும்போது நம்மால் நிம்மதியாகச் சாப்பிட முடியுமா? மனநிலை பாதிக்கப்பட்ட இவர்கள் இறைவனின் குழந்தைகள். இவர்களுக்கு நாங்கள் செய்வது சேவையல்ல; கடமை. ஓர் உயிரை, ஒரு மனிதரின் வாழ்க்கையைக் காப்பதைவிட திருப்தி அளிக்கும் பணி வேறென்ன?
இந்த வேலையில் இறங்குவதால் சுயதொழிலில் சாதனை படைக்க முடியாமல் போகலாம். இன்று எங்களுக்குக் கிடைப்பது குறைவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு கிடைக்கும் மனநிம்மதி அளவற்றது…
- சொல்லிக்கொண்டே போகிறார் ஈரநெஞ்சம் மகேந்திரன்.
eeranenjam03.jpg?w=294&h=246
வீட்டைவிட்டு வெளியேறி பைத்தியமான நிர்மலா யாரிடமும் பேசாமல் இருந்தவர், மகேந்திரனின் முயற்சியால் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டபோது கண்ட உருக்கமான காட்சி மகத்தானது. 4 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த நிர்மலா குடும்பத்தாருடன் சேர்ந்த ஆனந்த அதிர்ச்சியில் பேசத் துவங்கிவிட்டார்; இப்போது நலமாக இருக்கிறார்.
ஒரு நிர்மலா காப்பாற்றப்பட்டுவிட்டார். இன்னும் பல நிர்மலமான ஜீவன்கள் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். உங்களிடமும் இருக்கிறதா இந்த ஈரநெஞ்சமும் துடிப்பும்?
 
 
 

 

Link to comment
Share on other sites

நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள்...

 

Tamil_News_large_809104.jpg

 

திருப்பூர் சின்னக்கரையில் உள்ள பார்க்ஸ் கல்லூரியின் அரங்கம் மாணவ, மாணவியரால் நிரம்பியிருந்தது. அமர்ந்திருந்த மாணவ, மாணவியர் ஒரு அற்புதமான பெண்மணியின் பேச்சைக் கேட்கப் போகும் ஆர்வத்துடனும், அமைதியுடனும் இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அந்த பெண் பேச்சாளரும் மேடைக்கு வந்தார். பதினைந்து நிமிடம் பேச நினைத்து வந்தவர் மாணவர்களின் ஆர்வத்தையும்,அமைதியையும் பார்த்துவிட்டு 45 நிமிடங்கள் பேசினார்.
 
எதுகை, மோனையுடனோ, இலக்கிய இலக்கணத்துடனோ, சவால் விடும் சரித்திர சான்றுகளுடனோ அவர் பேசவில்லை. சாதாரணமாக , ஆணித்தரமாக, மென்மையாக ஆனால் அழுத்தமாக சகோதர, சகோதரிகளிடம் பேசுவது போல பரிவுடன், பாசத்துடன் பேசினார்.
 
அவர் பேசினார் என்பதை விட கொஞ்சம், கொஞ்சமாய் கேட்பவர் மனதில் தன்னம்பிக்கை எனும் விதையை ஆழமாக விதைத்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். அவர் பேசப்பேச யார் இவர்? என்றறியும் ஆர்வம் இப்போது அரங்கில் இருந்த ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டது.
 
யார் இவர்?
 
காம்கேர் கே.புவனேஸ்வரி, எந்தவித பெரிய பின்னணியும் இல்லாமல் சுயம்புவாக முளைத்தவர், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் உரமாக்கி வளர்ந்தவர், தான் சார்ந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எப்போதும் எண்ணுபவர், இந்த எண்ணத்தினால் தனித்துவம் பெற்றவர்.
சென்னையில் உள்ள காம்கேர் சாப்ட் வேர் நிறுவனத்தின் சிஇஒ மற்றும் நிர்வாக இயக்குனர்.
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்தியா தொடர்பான திட்டங்களை மட்டுமே தன் நிறுவனத்தின் வாயிலாக தயாரித்து வெளியிட்டு வருபவர்.
சாப்ட்வேர் துறை வல்லுநர், கல்வியாளர், தொழில் ஆலோசகர், கிரியேடிவ் டைரக்டர், டாக்குமெண்டரி பிலிம் தயாரிப்பாளர், பதிப்பாளர், எழுத்தாளர் என்று இவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இருபதிலேயே அறுபதின் சாதனையை தொட்டவர்.
தன் நிறுவனத்தின் மூலமாகவும், தனது வாடிக்கையாள நிறுவனங்களின் மூலமாகவும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியவர்.
 
நம் நாட்டில் கம்ப்யூட்டர் பிரபலமாவதற்கு முன்பே தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாப்ட்வேர் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான புத்தகங்கள் எழுதியவர். தமிழ் ஆர்வாலரான இவர் யாரும் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக கம்ப்யூட்டர் தொடர்பான பல புத்தகங்களை எழுதியவர், எழுதிக்கொண்டிருப்பவர்.
இவர் எழுதிய பல புத்தகங்கள் பல பல்கலைகழகங்களில் பாடபுத்தகங்களாக உள்ளன. கம்ப்யூட்டர் தொடர்பாக எழுபதற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இது தவிர பக்தி, இலக்கியம், சமூகம், கல்வி, குழந்தை இலக்கியம் ஆகிய தலைப்புகளிலும் எழுதி வருபவர்.
 
இவரது நிறுவனத்தின் மல்டி மீடியா தயாரிப்புகள் மற்றும் ஆவணபடங்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர் இவரே. அனிமேஷனில் உருவாக்கிய கந்தர் சஷ்டியும், அனைத்து பதிகங்களையும் கொண்ட திருவாசக மல்டி மீடியா சி.டி.,யும் மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டவையாகும்.
தனது பெற்றோர் பெயரிலான பத்ம கிருஷ் அறக்கட்டளை மூலமாக தொண்டு செய்து வருபவர். , தனது கொண்டாட்டங்கள் அனைத்தையும் ஆதரவில்லாத குழந்தைகளுடனும், மாற்றுத் திறனாளிகளுடனும் பகிர்ந்து கொள்பவர். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் போதாது என்று இருக்கக் கூடியவர், வளரும் சமுதாயம் இனிதாக மாறவேண்டும் என்ற அக்கறையுடன் கல்லூரிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்று பேசிவருபவர்.
 
இவரைப்பற்றிய அறிமுகம்தான் இதுதான். அன்று அவர் பேசியதில் இருந்து சுருக்கமாய் சில குறிப்புகள். இந்த குறிப்புகள் அவர் மீது இன்னும் நேசம் கொள்ளச் செய்யும்.
திறமை என்பது பாட்டுப் பாடுவதும், படம் வரைவதும் மட்டுமல்ல எப்பொழுதும் சிரித்த முகத்தைக் கொண்டிருப்பது, தைரியமாக வாழ்வது, கடமை தவறாமல் இருப்பது , நட்பாய் பழகுவது, எந்த வேலையையும் நேசித்து செய்வது... இவை எல்லாம் கூட திறமைகள்தான். திறமை இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் கிடையாது, நம்மிடம் உள்ள திறமைகளை நம் அனுபவத்தில் வெளிக்கொண்டு வருவதில்தான் வெற்றி இருக்கிறது. படிப்பு என்பது வேலைக்காகவும், பணம் சம்பாதிக்கவும் மட்டுமே என்கின்ற எண்ணத்தை மாற்றுங்கள், பெற்றோர்களே.. உங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதை முதலீடாக நினைக்காதீர்கள், ஐடி பீல்டு மட்டுமே வாழ்க்கையில்லை.
 
உங்கள் திறமையால் இந்த உலகை ஆள ஆயிரம் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன, உங்கள் கோபம், சிடுசிடுப்பு,ஆவேசம், படபடப்பு போன்ற குணங்களை தூக்கிஎறிந்து பாருங்கள் பெரிய மாற்றம் ஏற்படும். டி.வி.,சீரியல்களில் பொழுதைக் கழிக்காமல் உண்மையான உலகத்தைக் காணவும், அனுபவம் பெறவும் வீட்டைத் தாண்டி வெளியே வாருங்கள். வெறும் படிப்பு மட்டும் போதாது உங்களைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் உலகம் வசப்படும். கனவு, கற்பனை, உழைப்போடு உங்கள் தொழிலை, வேலையை, படிப்பை நேசித்து செய்யுங்கள் வெற்றி நிச்சயம் இது என் ஆசிமட்டுமல்ல அனுபவ பூர்வமான உண்மையும் கூட. மேற்கண்டவாறு காம்கேர் கே.புவனேஸ்வரி பேசி முடித்த போது மீண்டும் அரங்கம் நிறைந்தது- இந்த முறை கைதட்டலால்.
காம்கேர் கே.புவனேஸ்வரியுடன் தொடர்பு கொள்ள எண்: 98842 80265.
 

 

Link to comment
Share on other sites

தினசரி 400 ஏழைகளுக்கு 3 வேளை உணவளிக்கும் நாராயணன் கிருஷ்ணன்

 

 

 

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் , வாடினேன்" என்று பாடினார் வள்ளலார். பயிர்கள் வாடுவதையே தாங்கமுடியாத மனம்..உயிர்கள் வாடுவதை தாங்கமுடியுமா ? இப்படிப்பட்ட மனம் நடைமுறையில் சாத்தியமா? இதற்கு விடை தெரிந்துக்கொள்ள கீழே படிக்கவும்....

 

இந்தகாலத்திலும் வள்ளலார் மனம் கொண்ட ஒருவர் நம்மிடையே இருக்கிறார்.
அவர் மதுரை N.கிருஷ்ணன். CNN-IBN மற்றும் Reliance நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சமூகத்தில் 'நிஜ கதாநாயகர்களை' அடையாளம் கண்டு வருடந்தோறும் விருது வழங்கிவருகிறது. அந்த விருதை தனது தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக இந்த வருடம் பெற்று இருக்கிறார் திரு.கிருஷ்ணன்.

05extor2.jpg

அப்படி என்ன செய்கிறார் கிருஷ்ணன்?
”நான் பிச்சைக்காரர்களுக்கு உண்வு கொடுப்பதில்லை. அவர்களை அவர்களே கவனித்துக்குக் கொள்வார்கள்.மனநிலை குன்றியவர்கள் தான் யாரிடமும் உணவோ, காசோ கேட்க தெரியாது. அவர்களுக்கு உதவுகிறேன்” என்கிறார் கிருஷ்ணன்.

யார் இந்த கிருஷ்ணன்?

மதுரை மாநகர தெருக்களில், மனநிலை குன்றிய 400 பேருக்கு வருடம் 365 நாட்களும், நாளுக்கு மூணு வேளையுமாக உணவு வழங்கிக் கொண்டு இருக்கும் இவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை. வெறும் 28 தான். கடந்த ஏழு வருடங்களாக, அக்‌ஷ்யா டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் மூலமாக இதை செய்து வருகிறார்.

பெங்களூருவின் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், சமையலை தொழிலாக(
செஃபாக) செய்து வந்த அனுபவம் கைகொடுத்து இருக்க வேண்டும். சுத்ததிலும், பாத்திரங்கள் பளபளவென்று அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நேர்த்தியிலும , அரிசி பருப்பு, காய் கறி, மசாலா சாமான்களின் தரத்திலும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சமையலறையை ஒத்திருக்கிறது கிருஷ்ணனின் சமையலறை.
05extor1.jpg
”தினமும் மெனுவை மாற்றி விடுவேன்.ஒரெ உணவை சாப்பிட்டால் அவஙகளுக்கு சலித்து போயிடுமில்ல?” உற்சாகமான அவருடைய புன்னகை நம்மை எளிதில் தொற்றிக்கொள்கிறது.

இரண்டு சமையல்காரர்களின் உதவியோடு, தினமும் மூன்று வேளையும் சமைத்து, தன் வளர்ப்பு மக்களை தேடி தெருத்தெருவாக தானே எடுத்து செல்கிறார்.மனநிலை குன்றியவர்கள அடிக்கடி இடம் பெயர்வதில்லையாம், தினமும் அதே இடத்தில் தான் சந்திக்கிறாராம்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர் சாதமும், சிறியது ஒன்றில் ஊறுகாயுமாக, ஒரு மாருதி வேனில் கிளம்புகிறார். வேன்? மதுரையின் ஒரு தயாளர் தானமாக கொடுத்தது. பத்து நிமிட பயணம். வேன், ஒரு சுவரின் அருகில் படுத்து இருக்கும் மனிதரின் அருகில் நிற்கிறது,கிருஷ்ணன் தயிர்சாதத்தை அவர் அருகில் வைக்க, அவர் அதை சீண்டக்கூட இல்லை. தண்ணீர் பாட்டிலை வாங்கி மட மட என்று குடிக்கிறார்.”பாவம் ரொம்ப தாகம். கொஞ்சம் கழித்து சாப்பிடுவார்” இது கிருஷ்ணன் சொன்னது.

வேனின் அடுத்த நிறுத்தம். தானே இலையில் சாதம் போட்டு, கொஞ்சம் எடுத்து ஒரு மனிதருக்கு ஊட்டியும் விடுகிறார். இரண்டு கவளத்துக்கு பிறகு அவர் தன்னாலேயே சாப்பிட ஆரம்பிக்கவும், கிளம்பி, அடுத்து ஒரு ட்ராஃபிக் சிக்னல். அழுக்கும், கிழிசலும், தாடியுமாக அந்த கூட்டத்தில் தனியாக தெரிந்த நாலு பேர், வேனை நோக்கி வருகிறார்கள். அவர்களிடம் எந்த் பரபரப்பும் இல்லை, “இந்த வேன் வந்தால் சாப்பாடு, கிருஷ்ணன் அவர்களுக்கு காத்திருப்பார்” என்பதை அவர்களுடைய மனது அறிந்தே இருக்கிறது.
”அவர்களுக்கு தனக்கு தானே தண்ணீர் கூட எடுத்துக் கொள்ள தெரியாது” ஒரு மரத்தடியில் அவர்களுக்கு சாப்பாடு பரிமாறி, தண்ணீரும் தந்து கொண்டே சொல்கிறார்.

அக்‌ஷய பாத்திரம் காலி ஆகும் வரை நகர்வலம் வருகிறது கிருஷ்ணனின் மாருதி வேன். மீண்டும் இரவு உணவுக்கு பாத்திரம் நிறையும். பயணம் துவங்கும்.

இத்தனைக்கும் சாப்பிட்ட ஒருவர் கூட கிருஷ்ணனுக்கு நன்றி சொல்வதில்லை. நன்றி என்ன நன்றி? ஒரு புன்னகை? ஒரு தலையசைப்பு? ஒன்றும் கிடையாது. அவரவர் வேலைகளை செய்வதற்கே நாமெல்லாம் நன்றியை எதிர்பார்க்கும் இந்த காலத்தில்,கிருஷ்ணன் பாட்டுக்கு அவர் பணியை தொடர்கிறார்.

ஒரு நாளைக்கு 12000 ரூபாய் செலவு ஆகிறதாம். “மாதத்தில் 22 நாட்களுக்கு ”Donars” இருக்கிறார்கள். மீதி நாட்களை நானே சமாளிக்கிறேன்” அயராமல் சொல்வதோடு, “மீதி நாட்களுக்கும் கூடிய விரைவில் கிடைத்து விடுவார்கள்” என்னும் குரலில் ஏராளமான நம்பிக்கை.அக்கவுண்டுகளை வெகு சிரத்தையாக கையாள்கிறாராம். அக்‌ஷயா ஆரம்பித்த பிறகு, முதன்முதலாக,பலசரக்கு வாங்கிய ரசீதை செண்டிமெண்டாக வைத்து இருக்கிறார்.பொருளாதார வீழ்ச்சி இவரையும் விட்டு வைக்க வில்லை, 25 ஆக இருந்த Donars, 22 ஆக குறைந்து போய் இருக்கிறார்க்ள்.

இன்ஃபோஸிஸ், டிவிஎஸ் நிறுவனங்கள் இவருடைய சேவைக்காக 3 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க, அதில் ஒரு காப்பகம் அமைக்க திட்டம் இட்டு, முதலில் 80 பேர் தங்கும் அளவில் ஒரு பெண்கள் பகுதிக்கு அடித்தளம் மாத்திரம் கட்டிய நிலையில், நிதி தட்டுப்பாட்டினால், அப்படியே கிடப்பில் இருக்கிறது.

கிருஷ்ணனின் எல்லை உணவு கொடுப்பதோடு முடிந்து விடவில்லை.இன்னும் பரந்து இருக்கிறது. கேட்பாரற்று இருக்கும் அனாதை பிணங்களுக்கு இறுதி சடங்கு செய்யும் பணியையும் செய்து வருகிறார் கிருஷ்ணன்.பிணத்தை claim செய்து, குளிப்பாட்டி, உரிய முறையில் நல்லடக்கம் தருவதுமாக இருக்கும் இவரை, மதுரை முனிசிபாலிடியில் இருந்தும், பொது மருத்துவமனையில் இருந்தும், இறுதி சடங்கு செய்ய சொல்லி அழைக்கிறார்கள்.

05extor4.jpg
நம் தேசபிதா காந்தியை கதராடை கட்டவைத்து 'மகாத்மா' ஆக காரணமாக இருந்த மதுரையே இவரது மாற்றத்திற்கும் காரணம். இப்படி இப்பட்செய்ய தூண்டியது ? என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு நினைவு கூர்கிறார் "பெங்களூருவில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்த நான், வெளிநாடு செல்வதற்கு முன் சொந்த ஊர் மதுரைக்கு வந்தேன். டாக்ஸியில் ஏர்போர்ட் செல்லும் போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் தன் மலத்தை தானே உண்ணும் அவலத்தை பார்த்து பதறி அடித்து அருகில் இருந்த ஹோட்டலுக்கு ஓடி, அவருக்கு பத்து இட்லி வாங்கி கொடுத்தேன். அரக்க பரக்க சாப்பிட்டு முடித்த அவர் என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பு தான் என்னை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டியது, அதன்பின், இத்தகையவர்களுக்கு உணவிடுவதே தன் தொழில் என முடிவு செய்துவிட்டேன்".

இவ்ருக்கு இன்னும் திருமணமாக வில்லை. "நாள் முழுக்க மற்றவர்களுக்கு சமைத்து கொண்டு இருக்கும் என்னை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?" என்று கேட்கிறார்.தன்னை திருமணம் செய்து கொள்பவர்,அவருடைய இந்த வாழ்க்கை முறைக்கு ஒத்து வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.ஆரம்பத்தில் அதிர்ச்சியான இவருடைய பெற்றோர்கள் கூட இப்போது இவருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்.


ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு, மனனலம் குன்றியவர்களுக்கு சமையலும், அனாதை பிணங்களுக்கு காரியமும் செய்கிறீர்க்ளே? என்று ஆதங்கப்படுபவர்களுக்கு இவரது பதில், “எனக்கு இது பிடித்து இருக்கிறது”.

இவர் மதுரையில் நடத்திவரும் அக்க்ஷயா ட்ரஸ்ட்சேவைமையத்திற்கு ஏழு வயதாகிறது.

தன் வயிறுபசித்தால் பாலுக்குகூட அழதெரியாத மனநலம் குன்றிய 
குழந்தைகளுக்கு தேடிபோய், தானே சமைத்து உணவிடும்
'தாயுமான' கிருஷ்ணனுக்கு, உதவி செய்துவரும் பல கரங்களோடு, 
இந்த நன்னாளில் நம் கரங்களையும் இணைப்போம்.
எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்.


நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஓருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை - ஔவையார்



தகவல்/படங்கள் உதவி:
http://news.rediff.com/slide-show/2009/aug/12/slide-show-1-he-gave-up-a-5-star-job-to-feed-the-mentally-ill.htm
http://www.akshayatrust.org/

பிகு: இந்த கட்டுரையை எழுத தூண்டிய குரு பிரசாத்துக்கும், இதை தமிழில் எழுத உதவிய இரண்டு நண்பர்களுக்கும் என் நன்றி.

 
 
Link to comment
Share on other sites

இவரைப் போல் நாமும் செய்யலாமே...

 

இளங்கோவன் அரவணைப்பில் 5917 குழந்தைகள்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136216

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எழுத என்று ஏதும் இல்லை.
கண்ணாடியில் தெரியும் எனது விம்பத்தையே நான் இந்த உலகில் அதிகம் வெறுக்கிறேன்.
நல்லதொரு திரி .... தொடர்ந்து இணையுங்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான மனித தெய்வங்கள் சில உலகின் எல்லாப்பகுதியிலும், வாழ்ந்து கொண்டேயிருக்கின்றன!

 

அரசுகள் செய்ய வேண்டிய வேலையை, இவர்கள் தங்கள் தலை மேல் சுமந்து செய்வது, மிகவும் பாராட்டுதலுக்குரியது!

 

தொடர்ந்து பகிருங்கள்! நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் எல்லோரும் வாசிக்க வேண்டிய...  நல்லதொரு, அருமையான.... பதிவு.
சுயநலமாக வாழும் மனிதர், மத்தியில்... இப்படியானவர்களும் இருக்கின்றார்கள் என்பதை, 
வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள், ஆத‌வ‌ன்.
 

Link to comment
Share on other sites

வரிசையில் நிற்காமல் ஓட்டளிக்க வந்த சிரஞ்சீவி: இளைஞர் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு.

 

ஐதராபாத்: ஆந்திராவில், ஓட்டுச் சாவடியில் வரிசையில் நிற்காமல், ஓட்டளிக்க வந்த சிரஞ்சீவியை, இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

 
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்; மத்திய சுற்றுலா அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். ஆந்திராவில், தெலுங்கானாவுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தலும் நடந்தது.
 
'பைபாஸ்' செய்தார்:
 
இதையொட்டி, ஐதராபாத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடியில், நடிகர் சிரஞ்சீவி, தன் மனைவி, மகள், நடிகரும், மகனுமான ராம்சரண் தேஜா ஆகியோருடன் வந்தார். அப்போது, ஓட்டுச் சாவடி யில் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். சிரஞ்சீவியும், அவரின் குடும்பத்தினரும், வரிசையில் நிற்காமல், நேராக ஓட்டுச் சாவடிக்குள் சென்று, ஓட்டளிக்க முயற்சித்தனர். அப்போது, வரிசையில் நின்றிருந்த, ராஜா கார்த்திக் என்ற இளைஞர், சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தினார். ''நீங்கள், எவ்வளவு பெரிய வி.ஐ.பி.,யாக வேண்டுமானாலும் இருக்கலாம்; மத்திய அமைச்சராக கூட இருக்கலாம். ஆனால், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நீங்கள், மூத்த குடிமகனோ, மாற்றுத் திறனாளியோ இல்லை. எனவே, வரிசையில் நின்று, ஓட்டளியுங்கள்,'' என்றார். இதனால், சிரஞ்சீவி, கடும் அதிருப்தி அடைந்தார். இதைத் தொடர்ந்து, வரிசையில் நின்றிருந்த மற்ற வாக்காளர்களும், சிரஞ்சீவிக்கு எதிராக, கோஷமிட்டனர். வேறு வழியில்லாமல், சிரஞ்சீவி, வரிசையில் நின்று, ஓட்டளித்தார்.
 
'அனுமதிக்க முடியாது':
 
சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தி, தைரியமாக கேள்வி கேட்ட இளைஞரை, அங்கு நின்றிருந்த வாக்காளர்கள், கை கொடுத்து, பாராட்டினர். இளைஞர் ராஜா கார்த்திக் கூறுகையில், ''நான், லண்டனில் வசிக்கும் இந்தியன். ஓட்டு போடுவதற்காக, ஐதராபாத்துக்கு வந்துள்ளேன். சிரஞ்சீவியை நான் மதிக்கிறேன். ஆனால், அவர், விதிமுறைகளை மீறுவதை, அனுமதிக்க முடியாது,'' என்றார்.
 
 
no_queue.jpg
 
1538801_764259716937867_1170091588877006
 
Link to comment
Share on other sites

லண்டனில் இருந்து வந்திருப்பதால் தைரியமாகப் பேசிவிட்டார்.. இல்லாவிட்டால் சிரஞ்சீவி குடுத்திருக்கும் பளாரில் :o ஒட்டுமொத்த சனமும் கலங்கிப் போயிருக்கும்.. slap1.gif

Link to comment
Share on other sites

'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி!

 

564xNxyouth_1873871g.jpg.pagespeed.ic.aI

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் விவசாய நிலங்களுக்கு மருந்து தெளிக்கும் இயந்திரம் மூலம் மிக்ஸியை இயக்கி பழச்சாறு தயாரிப்பு பணியில் ஈடுபடும் இளம் விவசாயி ராஜகோபால். | படம்: கி.பார்த்திபன்
 

நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் செய்தி சேகரிப்புக்காக சென்றுகொண்டிருந்தேன். தகிக்கும் கோடை வெயிலை சமாளிக்க சாலையோரத்தில் ஆங்காங்கே கரும்புச்சாறு கடை, பழரசக் கடை, தர்பூசணி, வெள்ளரிப் பிஞ்சு விற்பனை மற்றும் மோர், கம்பங் கூல் என குறிப்பிட்ட இடைவெளியில் சாலையோரத்தில் உள்ள புளியன் மரத்தடியில் (பெரும்பாலான இடங்களில் சாலை அகலப்படுத்தும் நோக்கில் மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. யார் செய்த புண்ணியமோ இன்றளவும் நாமக்கல் - திருச்செங்கோடு மாநில நெடுஞ்சாலையில் சாலையோர மரங்கள் உள்ளன.) சிலர் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தபோதும் அவற்றை சாப்பிட மனதில் விருப்பமில்லை. பயணம் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் எனும் இடத்தில் புளியன் மரத்தடியில் இளைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் முலாம்பழம் பழச்சாறு போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். முந்தைய பத்தியில் குறிப்பிட்டிருந்த கடைகள் அனைத்தும் குடியிருப்புகள் அருகிலும் ஜனநடமாட்டம் உள்ள பகுதியிலும் இருந்தது. ஆனால், இளவயது நபர் வைத்திருந்த தள்ளுவண்டி கடை அருகே குடியிருப்புகள் உள்ளிட்ட எதுவும் இல்லை.

இதை யோசனை செய்தபடியே கடை அருகே எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, முலாம்பழச்சாறு சாப்பிடும் நோக்கில், அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். "குடியிருப்புகள் இல்லை கண்ணுக்கு எட்டின தூரம் வரை வணிக கடைகளும் இல்லை. அப்படியிருக்க, இங்கு பழச்சாறு கடை வைத்திருக்கிறீர்கள். வியாபாரம் நடக்கிறதா?" என்றேன். அதற்கு, "நன்றாக நடக்கிறது" என பேசியபடியே அவர் கூறியது:

"ராசிபுரம் அருகே வையப்பமலை எனது சொந்த ஊர். எனது பெயர் ராஜகோபால். 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். விவசாயம் செய்கிறேன். பகல் வேளையில் கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக்க முடிவு செய்து, பழச்சாறு கடை வைத்துள்ளேன். தள்ளுவண்டி கடை வைத்துள்ள இடத்தில் இருந்து சில அடி துாரத்தில் சாலையின் நடுவே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் வருவோர் வேகத்தடையை கடக்க வாகனங்களை மெதுவாக ஓட்டுவர். அப்போது எனது கடை கண்ணில் படும். கோடை வெயிலும் அதிகமாக இருப்பதால் வாகனங்களை நிறுத்தி பழரசம் சாப்பிடுகின்றனர்.

நாளொன்றுக்கு ஆயிரம் முலாம்பழ பழரசம் விற்பனை செய்கிறேன். கடைகளில் விற்பனை செய்யும் அதே நேரத்தில், ரூ.15 என்ற மலிவு விலையில் விற்பனை செய்கிறேன். முலாம்பழ பழரசம் மிக்ஸி மூலம் தயார் செய்யப்படுகிறது. அதற்கான மின்சாரத்திற்கு பேட்டரி பயன்படுத்தவில்லை. காரணம், அதிக செலவு பிடிக்கும். அதேவேளையில் விவசாய நிலத்திற்கு மருந்து அடிக்க பயன்படும் இயந்திரத்தின் மோட்டாரை எடுத்து கிரைண்டர் பெட்டியில் பொருத்தியுள்ளேன். இவற்றை இயக்க பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. ரூ. 150-க்கு பெட்ரோல் நிரப்பினால் ஆயிரம் பழரசம் தயார் செய்ய முடியும்" என்று அவர் கூறியதை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்.

படித்து பட்டம் பெற்ற பலர் சரியான வேலை கிடைக்கவில்லை. சுய தொழில் ஆரம்பித்து நஷ்டம் என புலம்புவோர் மத்தியில் தனது சமயோகித அறிவால், ஆள் அரவமற்ற இடத்தில் பழச்சாறு கடை அமைத்து லாபம் ஈட்டும் ராஜகோபால் பாராட்டுகுரியவர் என்றால் மாற்றுக் கருத்தில்லை.

 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/article5969867.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடியிருப்புகள் இல்லாத பகுதியில்... வீதியின் வேகத்தடை அருகே கடை வைத்த,
ராஜகோபாலின்... யோசனை அருமையானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முலாம்பழம் என்டால் என்ன?

Link to comment
Share on other sites

முலாம்பழம் என்டால் என்ன?

 

முலாம் பழம் என்றால் மெலோன் பழம்

 

https://www.google.ca/search?q=melon&newwindow=1&client=firefox-a&hs=sue&rls=org.mozilla:en-US:official&channel=sb&source=lnms&tbm=isch&sa=X&ei=5uhjU8eYCIKgyASZtYDABQ&ved=0CAgQ_AUoAQ&biw=1600&bih=738

Link to comment
Share on other sites

குப்பையில்லா பேரூராட்சி!

 

Tamil_News_large_966710.jpg

 

குப்பையை உரமாக மாற்றியதால், சாலைகள் குப்பையின்றி அழகாக காட்சியளிப்பதுடன், நோய்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக கூறும், வெங்கடேசன்: நான், தஞ்சாவூர் அருகில் உள்ள, வல்லம் பேரூராட்சியில், சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றுகிறேன். எங்கள் பேரூராட்சியில் நிறைய கல்லுாரிகள், தொழில் நிறுவனங்கள் உள்ளதால், அதிக அளவில் குப்பை சேர்ந்தபடி இருக்கும்.இது எங்களுடைய சுகாதாரத்திற்கு, பெரும் தலைவலியாக இருந்தது. மேலும், இக்குப்பையை சேகரித்து வேறு இடங்களில் கொட்டினாலும், அது மக்காமல், கொசுக்கள் உருவாவதற்கு புகலிடமாக மாறியது.கொசுவும், குப்பையும் பல நோய்களுக்கு மூலக்காரணம் என்பதால், எங்கள் பேரூராட்சியின் ஒவ்வொரு இடத்திலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என, இரண்டு குப்பை தொட்டிகளை வைக்க ஆரம்பித்தோம்.இத்திட்டத்திற்கு பொதுமக்களும் ஒத்துழைத்து, குப்பையை இரண்டாக பிரித்து கொட்ட ஆரம்பித்தனர். இனி, குப்பையை ஏதேனும் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்த முடியுமா என, சிந்தித்தோம். அப்படி தான், இந்த மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கு கட்டினோம்.பேரூராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பையை, மண்புழு தயாரிக்கும் கிடங்கில் கொட்டி, தண்ணீர் மற்றும் சாணத்தை தெளித்து, மொழுகிவிட்டு, அதில் கொஞ்சம் மண்புழுவையும் விடுவோம். அவை ஒரு மாதத்தில் பல்கிப் பெருகி, அந்த குப்பையை மக்கச் செய்து, தரமான உரமாக மாற்றியது. இவ்வாறு உற்பத்தி செய்த உரத்தை வைத்து, எங்கள் பேரூராட்சியில் தரிசாக கிடந்த இடங்களில், காய்கறிகளை விளைவித்தோம். மீதமுள்ள, 500 கிலோ உரத்தை, பொதுமக்களுக்கு விற்பனை செய்வதால், வல்லம் பேரூராட்சிக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.மக்காத பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, அவற்றை இயந்திரம் மூலம் துாளாக்கி, பிளாஸ்டிக் சாலைகள் அமைத்தோம். இதனால், பேரூராட்சியால் அமைக்கப்படும் சாலைகள், தரமாக இருப்பதுடன் சுற்றுச்சூழல் மாசுபாடுவதும் தவிர்க்கப்படுகிறது.இவ்வாறு குப்பையை பிரித்து, பயனுள்ள வகையில் மறுசுழற்சி செய்வதால், எங்கள் பேரூராட்சி முழுவதும் சுகாதாரமாக மாறி, சாலைகள் குப்பைகளின்றி அழகாக காட்சியளிப்பதுடன், நோய்களும் பெருமளவில் குறைந்துள்ளன.தற்போது, பேரூராட்சி முழுவதும் உள்ள நீர்நிலைகளை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். முதல்கட்டமாக, பழங்காலத்து குளங்களை துார்வார ஆரம்பித்துள்ளோம். எங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கு தமிழக அரசும், எங்கள் பேரூராட்சியில் உள்ள கல்லுாரிகளும், முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை  வாசித்தபோது

உண்மையில் வெட்கமாக இருந்தது  

 

ஆனாலும் சிலருடன் சேர்ந்து ஏதோ என்னால் முடிந்ததுக்கும் மேலாக செய்கின்றேன்

தொடர்ந்து செய்வேன்

மற்றவர்களும் இதை ஒரு உதாரணமாக எடுத்து

அதை செயலிலும் காட்டணும்

Link to comment
Share on other sites

"பரமசிவம்' பார்த்துக்கொள்வார்..."
Tamil_News_large_920070.jpg
 
கோவை டவுன்ஹால் வீதியில் உள்ள அந்த சின்னஞ்சிறு வீட்டின் முன் விதவைகளும், வயதானவர்களும், எளிய தொழிலாளர்களுமாக ஒரு சிறு கூட்டம் அவர் எப்போது வருவார் என்று கண்களில் கடைசி நம்பிக்கையை வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.
 
வரப்போவது யார் மருத்துவரா, கவுன்சிலரா, அதிகாரியா என்றால் அப்படி எல்லாம் கிடையாது. அவர் சாதாரண பேருந்து ஒட்டுனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானத்தில மனைவி, குழந்தைகளுடன் வாழும் சராசரி எளிய இந்தியன்.
 
ஆனால் அந்த இந்தியனுக்குள் அடுத்தவருக்கு உதவுவது ஒன்றே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று எரியும் ஜோதிதான் அவரைப்பற்றிய இந்த கட்டுரை.
 
பெயர் பரமசிவம், வயது 47 ஆகிறது. கோவையில் ஏஜேகே கல்லூரியின் பேருந்து ஒட்டுனராக உள்ளார்.
 
பத்து வருடங்களுக்கு முன் சில ஆவணங்கள் வாங்குவதற்காக அரசு அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கவேண்டிய நிலை .அப்போது அவருக்கு ஏற்பட்ட அலைச்சலும், மன உளைச்சலும்தான் அவரை புதிய பாதைக்கு திருப்பியது.
 
நம்மைப் போலவே அன்றாடம் இதே வேலையாக அலையும் பலருக்கு நமது அனுபவத்தை வைத்து உதவினால் என்ன என்று சிந்தித்தார்.அதன்படி விதவைகள் பென்ஷன், வயதானவர்கள் ஒய்வூதியம் போன்றவைகளை வாங்கிக் கொடுத்தார். வாங்கியவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை பார்த்தார் அதன்பிறகு இதுவே தனது வாழ்க்கை என்பதாகக் கொண்டுவிட்டார்.
 
உதவியதை எல்லாம் நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் கடந்த பத்து ஆண்டுகளில் இதுவரை பதினைந்தாயிரம் பேர்களுக்கு உதவியிருப்பேன்.
 
கல்லூரியில் வாகனம் ஒட்டும் வேலை காலை 8 மணியில் இருந்து 10 மணிவரையிலும்,மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரையிலும்தான்.இந்த நேரம் போக இடைப்பட்ட நேரங்களில் மக்களுக்கு உதவுவது என்று முடிவு செய்தார். இந்த முடிவை கல்லூரி நிர்வாகத்திடமும் சொல்லி அனுமதியும், ஆசியும் வாங்கிக் கொண்டார்.
 
பத்து மணிக்கு தனது வீட்டிற்கு வந்ததும் காத்திருக்கும் மக்களிடம் பேசுகிறார். மனுதாரர்கள் பேச்சிலும், தரும் தகவல்களிலும்,வழங்கப்படும் சான்றுகளிலும் பொய்யோ, வில்லங்கமோ இல்லாத மனுக்களை மட்டும் எடுத்துக் கொள்கிறார். அவர்களது பிரச்னைகளை அறிந்து கொள்கிறார்அ வர்களுக்கான மனுக்களை தயார் செய்கிறார். பிறகு அது தொடர்பான அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை பார்த்து அவர்களுக்கான காரியங்களை செய்து கொடுக்கிறார்.
 
இதற்காக பத்து பைசா கூட வாங்கியதும் கிடையாது, வாழ்நாள் முழுவதும் வாங்கப்போவதும் கிடையாது. மனிதனாகப் பிறந்தால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். எனக்கு இப்படி ஏழை எளியவர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாகவே கருதுகிறேன். இதனால் என் மனசு நிறைந்து இருக்கிறது. திருப்தியும் சந்தோஷமும் உண்டாகிறது. இன்னும், இன்னும் இவர்களுக்காக உழைக்கத் தோன்றுகிறது.
 
என்னோட நேர்மை மற்றும் அணுகுமுறை பற்றி அனைவருக்கும் தெரியும் என்பதாலும், நான் நியாயமான காரியமாகத்தான் வருவேன் என்பதாலும் அதிகாரிகளும் எனக்கு உதவுகிறார்கள்.
 
தன் பிள்ளைகளுக்கு கடந்த 12 வருடமாக சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் அலைந்த ஒருவருக்கு ஒரே நாளில் சாதி சான்றிதழ் வாங்கிக் கொடுத்தபோது " என் பிள்ளைகள் வாழ வழி காட்டியதற்கு எப்படி நன்றி சொல்வேன்' என்று கைகூப்பி சொன்ன ஒரு பெரியவரின் வாழ்த்தையும், ஆட்டோ ஓட்டிய பிள்ளை இறந்த துக்கத்தில் இருந்த ஒரு குடும்பத்திற்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக ஒரு லட்சம் பணம் பெற்றுக் கொடுத்ததும் " இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றிவைத்த நீ நாங்க பெறாத புள்ளைப்பா நல்லாயிரு' என்று சொல்லப்பட்ட வார்த்தைகளையும் விட பெரிய வாழ்த்தும், வாழ்க்கையும் வேறு என்ன இருக்கப்போகிறது என்று சொல்லும் பரமசிவம் இப்போது இந்த அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தை மக்களிடம் பிரபலப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்.
 
மக்களுக்கான அரசின் சலுகைகள் நிறையவே இருக்கிறது, அதே போல அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்திடமும் நிறைய திட்டங்கள் இருக்கிறது கொஞ்சம் முயற்சித்தால் நியாயமான எதையும் பெற முடியும். நீங்கள் என்னிடம் வாருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் பரமசிவம் , விதவை பென்ஷன் கேட்டு விண்ணப்பம் எழுத வந்த ஒரு பெண்ணிடம் ஒண்ணும் கவலைப்படாதம்மா ,நிச்சயம் கிடைச்சுடும் என்று ஆறுதலாகவும், அன்பாகவும் நம்பிக்கை வார்த்தைகளை விதைக்கிறார்.
 
சுயநலமே பிரதானமாக போய்விட்ட இன்றைய உலகில் பொதுநலமே தனது வாழ்க்கையின் பிரதானம் என்று வாழும் பரமசிவம் நீடுழி வாழ வாழ்த்துவோம். இவரை நமக்கு அறிமுகம் செய்துவைத்த ஈரநெஞ்சம் மகேந்தினுக்கு நன்றிகள் பல.
 
பரமசிவத்துடன் தொடர்பு கொள்ள: 9629105471.
 
Link to comment
Share on other sites

மெரீனாவில், 50 பைசா வருமானத்தில், தள்ளுவண்டி கடை நடத்தி, இன்றுபல, 'ரெஸ்டாரன்ட்'டுகளை நடத்தி வரும், பெட்ரிஷியா நாராயணன்.

Tamil_News_large_971130.jpg

இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!

மெரீனாவில், 50 பைசா வருமானத்தில், தள்ளுவண்டி கடை நடத்தி, இன்றுபல, 'ரெஸ்டாரன்ட்'டுகளை நடத்தி வரும், பெட்ரிஷியா நாராயணன்: நான், சென்னையில் தான் பிறந்து வளர்ந்தேன். 17 வயதில் திருமணம் நடந்தது. கணவன் குடிகாரன் என்பதால், என் திருமண வாழ்க்கை தோற்றுப் போனது. இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற பின் தான், எதற்கு இனி கலங்க வேண்டும் என்ற மனநிலையோடு, என்னுடைய வாழ்க்கையை, அம்மா வீட்டில் ஆரம்பித்தேன்.ஆனாலும், நம்மையும், நம் குழந்தைகளையும் நாமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்தை விடவில்லை. அதனால், வீட்டில் இருந்தபடியே ஜாம், ஸ்குவாஷ், ஊறுகாய் போன்றவற்றை தயாரித்து, அக்கம்பக்கத்தில் விற்க ஆரம்பித்து, சிறிது பணம் சேர்த்தேன்.நான், மெரீனா பீச்சுக்கு அருகில் வசித்தவள் என்பதால், 'ஸ்லம் போர்ட்'டில் முறைப்படி அனுமதி பெற்று, அண்ணா சதுக்கத்தின் அருகில் தள்ளுவண்டி மூலம் கட்லெட், சமோசா, காபி, டீ, ஜூஸ் போன்றவற்றை விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.முதல் நாள், என்னுடைய கடையின் வருமானம், வெறும், 50௦ பைசா தான். ஒரே ஒரு டீ மட்டுமே விற்பனை ஆனதால், மிகவும் நொறுங்கி போனேன். அன்று இரவு, என் அம்மாவின் மடியில் படுத்து, ஓவென்று கண்ணீர் விட்டுக் கதறி அழுதேன்.'ஒன்றுமே விற்காமல் போனால் தான் கவலைப்பட வேண்டும். ஒரே ஒரு டீ விற்றது கூட, 'பாசிடிவ்'வான விஷயம் தானே...' என, அம்மா கேட்டார். எனக்கும் சரி என, தோன்றியது.அம்மாவின் உற்சாக வார்த்தையால், மறுநாள் நம்பிக்கையோடு வியாபாரத்திற்கு சென்றேன். அன்று மட்டுமே, 600 ரூபாய்க்கு வியாபாரம் ஆனது. அந்த நிகழ்வு தான், என் வாழ்க்கையை மாற்றி போட்டது. தொடர்ந்து, 20 ஆண்டுகள் மெரீனா பீச்சிலேயே தள்ளுவண்டி கடை நடத்தினேன். எனக்கு நன்கு தெரிந்த சமையல் தொழிலை கையில் எடுத்து, உண்மையாக உழைத்தேன். இப்படி நிறைய வாய்ப்புகளை தேடிப் பிடித்ததால், 'கான்ட்ராக்ட்' மூலம், கேன்டின்களில் உணவு சமைக்கும் வாய்ப்புகள் பல கிடைத்தன.இந்த அனுபவத்தால், சென்னையில் ஒரேயொரு இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட, 'சந்தீபா ரெஸ்டாரன்ட்ஸ்' இன்று, 'சந்தீபா செயின் ஆப் ரெஸ்டாரன்ட்ஸ்' ஆக, சென்னையின் பல இடங்களில் இயங்கி வருகின்றன.வெறும், .50 பைசா வருமானத்தில், தள்ளுவண்டியில் ஆரம்பிக்கப்பட்ட என் உணவு தொழில், இன்று, நாள் ஒன்றுக்கு சராசரியாக, 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன். 2010ல், சிறந்த பெண் தொழிலதிபருக்கான விருதை, 'இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ்'சிலிருந்து பெற்றேன்.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

 

Link to comment
Share on other sites

தாயுமானவன்!
ஞா.சுதாகர், படங்கள்: தி.விஜய்
 

மெரிக்காவின் புகழ்பெற்ற 'டைம்ஸ்’ இதழ், உலகின் செல்வாக்கு மிகுந்த 100 மனிதர்களை ஒவ்வொரு வருடமும் பட்டியலிடும். அந்த வகையில், இந்த வருடம் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 மனிதர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் நான்கு பேர் இந்தியர்கள். மோடி, கெஜ்ரிவால், அருந்ததி ராய்க்கு அடுத்தபடியாக வருபவர் ஒரு தமிழர். பெயர் முருகானந்தம். இந்தியாவில், பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் பயன்பாட்டில் வெளியே தெரியாத பெரும் புரட்சி செய்திருப்பவர். ஏற்கெனவே விகடன் வாசகர்களுக்கு அறிமுகமானவரைப் பற்றி ரீ - இன்ட்ரோ இங்கே...

 

வறுமையில் வாடும் முருகானந்தத்தின் மனைவி, நாப்கின்களுக்குப் பதிலாகக் கந்தல் துணியைப் பயன்படுத்துகிறார். நாப்கினின் விலை, எளிய மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருப்பதைத் தெரிந்துகொள்ளும் முருகானந்தம், எளிமையான, விலை குறைவான நாப்கின்களை உருவாக்க முயற்சி எடுக்கிறார். விலை குறைவான நாப்கின்கள் தயாரிக்க இவர் தந்த விலை அதிகம். ஒவ்வொரு முறையும் நாப்கின்கள் பற்றியே பேசிக்கொண்டிருப்பதால் வீட்டில் பல பிரச்னைகள் உருவெடுக்கின்றன. தான் தயாரிக்கும் நாப்கின்களை மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் கொடுத்து பரிசோதிக்கிறார்.

 

p36a.jpg

 

ஒரு கட்டத்தில் இவரது மனைவியே இவரைவிட்டுப் பிரிந்து செல்கிறார். சோதனைக்காகப் பெண்கள் பயன்படுத்திய நாப்கின்களை முருகானந்தம் வீட்டுக்கு எடுத்துவர, பெண் பித்தன், பைத்தியக்காரன் என்று சுற்றுப்புறம் பட்டம் கொடுத்துக் கட்டம் கட்டுகிறது. அத்தனையையும் இழந்து இறுதியில் விலை மலிவான நாப்கின்களை வடிவமைக்கும் அந்த இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறார். அதன் மூலம் பல பெண்களைத் தொழில்முனைவோ ராகவும் மாற்றியிருக்கிறார். இந்த நிலையில் அவரின் அத்தனை வலிகளுக்கும் ஒத்தடம் கொடுப்பது போல் 'சுகாதாரப் போராளி’ என்று வர்ணித்து, இந்த வருட பட்டியலில் இடம் கொடுத்திருக்கிறது 'டைம்ஸ்’ பத்திரிகை. அமெரிக்காவில் ஒபாமா, பில்கேட்ஸ் முன்னிலையில் கருத்தரங்கத்தில் பேசிவிட்டு வந்திருக்கும் முருகானந்தத்திடம் பேசினோம்.

 

 

''ரொம்ப ரொம்பச் சந்தோஷம்ங்க. பல வருஷமாப் போராடி 2004-ம் வருஷம்தான் மலிவு விலை நாப்கினை டிசைன் பண்ணினேன். முதன்முதலாக, பயப்படாமல் என் நோக்கத்தைப் புரிந்துகொண்டு ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி அதைப் பயன்படுத்த முன் வந்தார். 'ரொம்ப நல்ல முயற்சி. கம்ஃபோர்ட்டா இருக்குண்ணே... உங்க முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்’னு சொன்னாங்க. அதுதான் நான் பெற்ற முதல் விருது... அங்கீகாரம். அந்தச் சகோதரிக்கு நன்றி!''

 

 

''உலக அளவுல ஃபேமஸ் ஆகிட்டீங்க. நிறையப் பேர் பிசினஸ் பேசியிருப்பாங்களே?''

 

'' 'நாங்க இத்தனை புரஃபஷனல்கள், இயந்திரங்கள், டெக்னாலஜி வைச்சு பண்றதை, அதே குவாலிட்டியில் எப்படிக் கம்மியான விலையில் தயார் பண்றீங்க?’னு கேட்டாங்க. நான் அவங்ககிட்ட, 'உங்களுக்கு இது பிசினஸ்; எனக்கு லட்சியம்’னு பதில் சொன்னேன். பிசினஸ்னு யோசிக்க ஆரம்பிச்சா, கொசு மாதிரி மாறி யார் ரத்தத்தை உறிஞ்சலாம்னு அலைஞ்சுகிட்டு இருப்போம். லட்சியம்னு இருந்ததால பட்டாம் பூச்சி மாதிரி மாறி, மகரந்த சேர்க்கைக்குப் பயன்படுகிறேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழுற விளைநிலங்களை அழிச்சு, தொழிற்சாலைகளைக் கட்டி அங்கே சில நூறு பேருக்கு வேலை தர்றதுக்குப் பேர்தான் பிசினஸ். எனக்கு அது பிடிக்காது. என் கண்டுபிடிப்பு, மக்களுக்காக இருக்கணும்; மக்களோடு இருக்கணும்.. அவ்வளவுதான்!''

 

''உங்கள் கண்டுபிடிப்பு இவ்வளவு தூரம் பேசப்படும்னு நினைச்சீங்களா?''

 

''இல்லைங்க. முதல்ல என் மனைவி, தங்கைனு என் சொந்தங்களின் வலியைப் போக்கத்தான் நினைச்சேன். அப்புறம்தான் இந்தியாவில் 95 சதவிகித பெண்கள், நாப்கின் பயன்படுத்தறதே இல்லைனு தெரிஞ்சுகிட்டேன். வங்க தேசத்தில் வறுமையில் வாடும் பெண்கள், மாதவிடாய் காலத்தில் காய்ந்த இலை, மரத்தூள், காகிதம், சாம்பலைப் பயன்படுத்துறாங்கனு தெரிஞ்சப்ப, அதிர்ச்சி ஆகிட்டேன். அப்போதுதான் எந்தப் பிரச்னை வந்தாலும் இதை நிறுத்தவே கூடாதுனு முடிவு செஞ்சேன்.

 

இந்த புராஜெக்ட் பத்தி முதன்முதலில் ஐ.ஐ.டி கல்லூரியில் பேசினப்ப, என்னைப் பார்த்துச் சிரிச்சாங்க. 'இந்தச் சின்ன மெஷின் என்ன செஞ்சிடப்போகுது?’னு அலட்சியமா கேட்டாங்க. அந்த ஓர் இயந்திரம் இன்னைக்கு 1,300 இயந்திரமா பெருகியிருக்கு. பல பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் ஆரோக்கியத்தையும் கொடுத்திருக்கு. இன்னைக்கு இந்த இயந்திரம் 11 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆப்பிரிக்கா போன்ற பின்தங்கிய நாடுகளில் இதன் தேவைகளைப் பற்றியும், வளர்ந்த நாடுகளில் இதன் சிறப்பம்சம் பற்றியும் விளக்கியும் பெண்களுக்கு விழிப்பு உணர்வு கொடுக்கணும். குளிர் நாடுகளில்கூடப் பல பெண்கள் இந்தப் பிரச்னைக்கு ஆளாகி இருக்காங்க. அவங்க பிரச்னையைத் தீர்க்க முயற்சி எடுத்துட்டு இருக்கேன். ஒண்ணே ஒண்ணுதான். நல்லது நினைச்சா நல்லதே நடக்கும்!''

 

p36.jpg

 

''எதிர்கால லட்சியம் என்ன?''

இந்தியாவை ஆரோக்கியமான நாடாக மாத்தணும். இது ஒரு விதைதான். முழுத் தீர்வுக்கு இன்னும் நிறையப் பயணிக்கணும். அதுக்காக இளைஞர்களின் பங்களிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கேன். இந்தியாவில் மட்டுமே 10 லட்சம் பெண்களைத் தொழில்முனைவராக மாத்தணும். அவங்க மூலமா உலகம் முழுக்க இருக்குற சகோதரிகள் முகத்தில் சிரிப்பை வரவைக்கணும்!''

 

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=94765

Link to comment
Share on other sites

வறுமையை வென்று சாதித்துக்காட்டிய மாணவன்

 

 
weilding_1886926h.jpg
வெல்டிங் பட்டறையில் பணிபுரியும் ஈ.மணிமாறன். (படம்: ஆர்.அசோக்.)
 
8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி வேலைக்குச் சென்ற மாணவன் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளி சென்று பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்திருக்கிறார்.
 
தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி வசப்படும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஏழை மாணவன் மணிமாறன். குடும்ப வறுமையினால் 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வெல்டிங் பட்டறையில் வேலைக்குச் சென்ற மணிமாறன், 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளி சென்று படித்து பிளஸ் 2 தேர்வில் 1129 மதிப்பெண் எடுத்து, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 184, ஆங்கிலம்- 172, கணிதம்- 193, இயற்பியல்- 188, வேதியியல்- 197, கணினி அறிவியல்- 195.
 
இது எப்படி சாத்தியமாயிற்று என்பதை மணிமாறனே விளக்குகிறார்.
 
‘தந்தை இசக்கிமுத்து ஊர் ஊராய் மிட்டாய் விற்பனை செய்கிறார். மேல அனுப்பானடியில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். தந்தையின் வருமானம் வாடகைக்கும், சாப்பாட்டுச் செலவுக்குமே சரியாக இருக்கும். வறுமை நிலவியதால், 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பினர்.
 
பள்ளிக்குத்தான் செல்வேன் என அடம்பிடித்தேன். ஆனால் பெற்றோர், சாப்பாட்டுக்கே வழியில்லை. அதனால் வேலைக்கு செல்’ என்றனர். வேறு வழியின்றி வெல்டிங் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆர்க் வெல்டிங் கற்றுக் கொண்டு சம்பாதிக்க ஆரம்பித்தேன். எப்படியாவது படித்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற வெறி எனக்குள் ஏற்பட்டது. பிளஸ் 1 சேர்வதற்காக மதுரையிலுள்ள பல தனியார் பள்ளிகளுக்குச் சென்றோம். ஆனால் 3 ஆண்டு இடை நின்றல் இருந்ததாலும், தனி தேர்வராக 10ம் வகுப்பு படித்ததாலும் ஒரு பள்ளியில்கூட என்னை சேர்க்கவில்லை. கடைசியாக பாரதிதாசனார் மாநகராட்சி பள்ளிக்குச் சென்றோம்.
 
அங்கு எந்த மறுப்பும் கூறாமல் என்னை சேர்த்துக் கொண்டனர். 2 ஆண்டுகளாக வாரத்தின் 5 நாள் பள்ளியிலும், 2 நாள் வெல்டிங் பட்டறையிலும் என காலத்தை கழித்தேன். ஆனாலும் வகுப்பு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றதால் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர்.
 
பி.இ கம்யூட்டர் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என ஆசை. வார விடுமுறை நாளில் வெல்டிங் தொழில் மூலம் நாளொன்றுக்கு ரூ.300 சம்பாதித்து, அதைக்கொண்டு தொடர்ந்து படித்துவிடுவேன். குடும்பத்தின் வறுமையை ஒழித்து குடும்பத்தினர் மகிழும் வகையில் வாழ வேண்டும் என்பதே என் ஆசை..’ என்கிறார்.
 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/article5996006.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

5 ரூபாயிலிருந்து ஆரம்பித்து 5 லட்சத்திற்கு வளர்ந்த சேவை- வியக்கவைக்கும் விவேகானந்தா டிரஸ்ட் இளைஞர்கள்

 

periya_1905871h.jpg
பெரியசாமி
 
“ஓராயிரம் வெற்று வார்த்தைகளை விட ஒரு துளி அளவுள்ள செயல் சிறந்தது’’ என்று சொன்னார் விவேகானந்தர். அவரது பெயரில் சேவை அமைப்பு நடத்தும் பெரியசாமியும் அவரது நண்பர்களும் இதை மெய்யென நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
பழனியை அடுத்துள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியசாமி ஒரு பத்திரிகை முகவர். 7 வருடங்களுக்கு முன்பு இவரும் இவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ‘விவேகானந்தர் சேவா டிரஸ்ட்’டை தொடங்கினார்கள். இப்போது இதில் மெக்கானிக், கொத்தனார் என 30 பேர் உறுப்பினர்கள். 5 ரூபாய்க்கு மரக் கன்றுகளை வாங்கி நடுவதில் தொடங்கிய இவர்களின் சேவை இப்போது 5 லட்சம் ரூபாய் பங்களிப்பில் பொதுக்குளத்தை தூர்வாரும் பணியில் வந்து நிற்கிறது. இந்த இலக்கை எப்படி எட்டிப் பிடித்தார்கள் இந்த இளைஞர்கள்?
 
அதுகுறித்து பெரியசாமி பேசுகிறார். “பழனியில் பொது சேவை எதுவாக இருந்தாலும் அதில் எங்களையும் வலியப் போய் இணைத்துக் கொள்வோம். 30 பேரும் மாதம் 100 ரூபாய் சந்தா சேர்ப்போம். அத்துடன், நல்லவர்களிடம் இன்னும் கொஞ்சம் நிதி திரட்டி பள்ளிக் கூட பிள்ளைகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்போம். பழனியில் திரியும் பரதேசிகளுக்கு எப்படியாவது உணவு கிடைத்துவிடும். ஆனால், மனநிலை சரியில்லாமல் ரோட்டோரம் முடங்கிக் கிடக்கும் ஜீவன்களுக்கு அது சாத்தியமில்லை. தினமும் அவர்களில் பத்துப் பேருக்கு எங்கள் டிரஸ்ட் மூலமாக ஒருவேளை சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறோம். எங்களிடம் உள்ள இருப்புக்கு இவ்வளவுதான் செய்யமுடியும்.
 
கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்கள் சுற்றுப்புறச் சூழல் கெடுவதைப் பற்றி கவலைப்படாமல், பாலித்தீன் பொருட்களையும் காலி மதுபாட்டில்களையும் கொடைக் கானல் மலைச் சாலையில் கண்டபடி வீசிவிட்டுப் போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா சீசன் முடிந்ததும் என்.சி.சி. மாணவர்கள் துணையோடு அந்த நச்சுக் கழிவுகளை எல்லாம் சேகரித்து நகராட்சி குப்பைக் கிடங்கில் சேர்ப்பது எங்கள் வேலை. 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தப் பணியை மேற்கொள்வோம்.
 
மலர் கண்காட்சி சமயத்தில் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களை நிறுத்தி அவர்கள் எடுத்துச் செல்லும் பாலித்தீன் பைகளை வாங்கிக் கொண்டு துணிப் பைகளை கொடுப்போம். அத்துடன் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாமல் இருப்பது எப்படி என விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் கொடுப்போம்.பழனி அரசு மருத்துவமனையில் உள்ள ஆண்கள் வார்டை ரெண்டு வருஷமா நாங்கள் தத்தெடுத்திருக்கிறோம். அந்த வார்டுக்கு வெள்ளையடித்து, மின் விசிறிகள் மாட்டி, ஜன்னல்களில் கொசு வலை அடித்து படுக்கை விரிப்புகள் வாங்கிக் கொடுத்து, பூந்தொட்டிகள் வைத்து சுகாதாரமான முறையில் பராமரித்து வருகிறோம். அடிக்கடி நாங்களே அங்கு சென்று பினாயில் தெளித்து சுத்தம் செய்கிறோம்.
 
அடுத்த கட்டமா பழனியில் உள்ள வையாபுரி குளத்தை தூர்வாரும் பணியில் பொதுநல அமைப்புகளுடன் கைகோத்து இறங்கி இருக்கிறோம். இதற்கு 10 லட்சம் தேவை. இதில் பாதித் தொகையை செலுத்திவிட்டால் நமக்கு நாமே திட்டத்தில் மீதித் தொகையை பெற்று பணிகளை முடித்துவிடலாம்.
 
இந்தத் திட்டத்துடன் இதுவரை ரெண்டரை லட்சம் நிதி திரட்டி இருக்கிறோம். எஞ்சிய தொகையையும் திரட்டி வையாபுரி குளத்தை அழகுறவைப்போம்’’ என்று நம்பிக்கை மிளிரச் சொன்னார் பெரியசாமி.
 
“நூறு இளைஞர்களை என்னிடத்தில் தாருங்கள்.. இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்’’ என்று தெரியாமலா சொன்னார் விவேகானந்தர்!
 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/5-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6030746.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.