Jump to content

ஈராக் மதவாதத்தின் எழுச்சியால் குர்திஸ் (குர்திஸ்தான்) இனம் விடுதலை பெறுமா ?


Recommended Posts

ஈராக் மதவாதத்தின் எழுச்சியால் குர்திஸ் (குர்திஸ்தான்) இனம் விடுதலை பெறுமா ?

துருக்கிய எல்லையில் மதவாதத்தை அடிப்படையாக கொள்ளாத நாடு ஒன்று உருவாகுவது தமக்கு பாதுகாப்பானது என பார்க்கிறது. உள்நாட்டு குர்திஸ் மக்களை சாந்தப்படுத்தவும் தீர்மானித்துள்ளது. துருக்கிய பிரதமர் முதன் முறையாக “குர்திஸ்தான்” என்ற சொல்லை உச்சரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலை நாடுகளிலே தமிழீழ விடுதலை ஆர்வலர்களுக்கும் குர்திஸ் இனவிடுதலை ஆர்வலர்களுக்கும் இடையில் மிக அன்னியோன்னியமான உறவு ஒன்று உள்ளது. ஆனால் மிக விரைவில் தமிழின விடுதலை ஆர்வலர்கள் குர்திஸ் இனத்தவர்களுக்கு அவர்களின் விடுதலை வெற்றிக்கான வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட உள்ளது.

இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதும், பிராந்திய அரசுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்ட மாற்றமும், ஈராக்கிய மதவாதிகளின் எழுச்சியும் புதிய தொரு அரசை உருவாக்க குர்திஸ் இன மக்களுக்கு எவ்வாறு வாய்ப்பளித்துள்ளது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

குர்திஸ் இனம் பல மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைகளால் பிளவுக்கு உள்ளாக்கப்பட்ட ஓர் இனமாகும். இந்த இனம் மிகப்பழைய நாடோடி வாழ்கை முறையை கொண்டிருந்தாலும் தமக்கென ஒரு கலாச்சாரம், பாரம்பரிய நிலம், பாரம்பரிய மொழி ஆகியவற்றை தம்மகத்தே கொண்ட தனித்துவமான இனமாக பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

Kurdishthanபல அரசுகள் மத்தியில் பிளவு பட்டு கிடப்பதால் அவ்வப்போது ஏற்பட்ட உலக ஒழுங்குகளுக்குள் சிக்குண்டு குர்திஸ் இனம் ஆண்டாண்டு காலமாக சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகி வந்திருந்தனர். பல்வேறு அரசியல் சதி திட்டங்களுக்குள் சிக்குண்டு பிளவுபட்டனர். உள்ளுர் குழுக்களாலும் வெளிநாட்டு தலையீடுகளாலும் தமது விடுதலை நோக்கிய பாதையில் பெரும் இடையூறுகளை கண்டனர்.

அரசியல் தலைவர்களின் தன்நலசூழ்ச்சிகளுக்கும் பதவிஆசை பண ஆசைகளுக்கும் அப்பால் தமது தாயக மண்மீதான பற்று பாமர மக்களால் என்றும் பேணப்பட்டு வந்ததன் விளைவாக தற்போதய தலைமைத்துவம் மக்களின் தேவைக்கு ஏற்ப சில நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குர்திஸ் இன மக்கள் முற்று முழுதாக உலக அரசுகளால் மறந்து விடப்பட்டவர்கள் என்ற நிலை ஒருகாலத்தில் இருந்தது. இந்நிலை மாறி இன்று தேசிய சுயநிர்ணய உரிமை மீதான மக்களின் மனோநிலையை அறிந்து கொள்ளும் விதமாக பொது வாக்கெடுப்பு நடாத்த பல உலக நாடுகள் இணங்கி உள்ளன.

இந்த நிலை எவ்வாறு ஏற்பட்டது என்பது முக்கியமாகும். ஈராக்கில் சதாம் குசையின் அரசுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் இறங்கியதை தொடர்ந்து சதாம் குசையின் அரசு கவுழ்க்கப்பட்டு முற்று முழுதாக புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு புதிய ஈராக்கிய தேசிய கொடியுடன் புதிய ஈராக்கிய இராணுவமும் கடைமையில் இறக்கப்பட்டது.

புதிய அரசு பெரும்பாலான சியா இஸ்லாமிய சமூகத்தை சார்ந்ததாக அமைந்ததை அடுத்து சுண்ணத்து இஸ்லாமிய சமூகம் கிளர்ச்சிகளை ஆரம்பித்தது. அவ்வப்போது சியா இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளுக்குள் வெடிகுண்டுகள் வெடிக்கலாயிற்று. அதேபோல சுண்ணத்து இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளுக்குள்ளும் பல்வேறு குண்டு தாக்குதல்கள் இடம் பெறலாயிற்று. புதிய ஈராக்கிய அரசாங்கத்திற்கு ஆதரவாக நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதே அமெரிக்க நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக அமைந்து விட்டது.

தமது பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு அமெரிக்கா சிறிது சிறிதாக விலகி கொண்டது. இந்த வருடம் ஜீன்மாத ஆரம்பத்திலிருந்து சுண்ணத்து இஸ்லாமிய குழுகளின் பலம் மேலேங்கியதன் விளைவாக மத அடிப்படைவாதத்தின் ஒருபகுதி ஆதிக்கம் அதிகரிக்க ஈராக்கின் வடபகுதியில் மேலை நாடுகளால் நிர்மாணிக்கப்பட்ட ஈராக்கிய புதிய அரசாங்கம் தனது சட்டம் ஒழுங்கு கட்டுமானங்களை இழந்தது.

இந்த நிகழ்வு ஈராக்கில் ஒர் அதிகார இடைவெளியை ஏற்படுத்தியது. அரசியல் பிராந்திய ஒருமைப்பாடு சீர்குலைவுக்குள் உள்ளாகியது. இந்த சந்தர்பத்தில் ஈராக்கிய நாடாளுமன்றத்திலிருந்து குர்திஸ் இனத்தவரை பிரதிநித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறினர்.

அதேவேளை குர்திஸ் இனத்தவர்களின் பாரம்பரிய நகரமான திர்குக் நகரை விட்டு பாக்தாத்தை தலைநகராக கொண்டு இயங்கிய ஈராக்கிய இராணுவம் வெளியேறியது. இந்த நிலை குர்திஸ் இன மக்களுக்கு தாம் முன்பு விட்ட தவறுகளை சீரமைத்து கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறது. நீண்ட கால கனவாகிய தமது சொந்த இனத்திற்கு என்று ஒரு சுதந்திரதேசத்தை அமைத்து கொள்ளும் சந்தர்ப்பத்தை அது வழங்கி இருக்கிறது.

ஏற்கனவே சதாம் குசைன் வீழ்ச்சிக்கு பின்னர் தமக்கென ஒரு மாநில அரசை அமைத்திருந்த குர்திஸ் மக்கள் தமக்கென பாதுகாப்பு படைகளையம் கொண்டுள்ளனர். ஈராக்கிய ஒருமைப்பாட்டை பாதுகாக்க வென இந்த படைகள் அமைக்கப்பட்டிருந்தாலும். தனித்துவமான படைகளாக இயங்கி வந்தனர். தமது படைகளை ‘பெஸ்மெர்கா – Peshmerga’ எனவே அழைத்து வந்தனர்.

திர்குக் நகர் குர்திஸ் இன மக்களுக்கு மட்டு மல்லாது ஒட்டு மொத்த ஈராக்கிற்கே எண்ணை வளம் பொருந்திய முக்கிய பிரதேசமாகும். வரலாற்று ரீதியாக குர்திஸ் மக்களே வாழ்ந்து வந்த போதும், இந்நகர் சதாம் குசையின் காலத்தில் பெரும் இனஅழிப்பை எதிர் கொண்டது. சதாம் குசைனின் படைகளால் இரசாயன ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டனர். பலலட்சகணக்கான மக்கள அகதிகளாக வெளியேறினர். ஆனால் தற்போது இந்த நகரை கைப்பற்றும் சந்தர்ப்பம் பெஸ்மெர்காகளுக்கு வாய்த்துள்ளது.

ஏற்கனவே சுண்ணத்து மதவாத கிளர்ச்சிகாரர்களால் கடும் தாக்குதலை எதிர் கொண்டு ஈராக்கிய படைகள் பின்னடைவை சந்தித்துள்ளன. மதவாதிகளின் படைகளோ தகுந்த பின்புல ஆதரவற்று சண்டைகளில் ஈடுபட்டு வருவதும் ஏற்கனவே உறுதியான மாநில அரசை கொண்டிருக்கும் பெஸ்மெர்கா களுக்கு சார்பாக அமைந்துள்ளது.

ஓட்டு மொத்த குர்திஸ் சனத்தெகையும் துருக்கியின் தென்கிழக்க பகுதி, சிரியாவின் வடகிழக்கு பகுதி, ஈரானின் வட மேற்கு பகுதி, ஈராக்கின்; வட மேல் பகுதி என ஒரே இணைந்த நிலப்பரப்பில் வாழ்ந்து வருகின்றனர். ஐரோப்பாவுடன் இணையும் நோக்குடன் உள்ள மிதவாத இஸ்லாமிய நாடாக கொள்ளப்படும் துருக்கி குர்திஸ் சனத்தொகையின் 50சதவிகிதத்தை கொண்டுள்ளது. அத்துடன் துருக்கியின் பிரதானமான சிறுபான்மை இனமாகவும் உள்ளது.

கடந்த காலத்தில் துருக்கியில் குர்திஸ் இனத்தவர்களுகு எதிராக பல்வேறு ஒடுக்கு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. குர்திஸ் இனத்தவர்கள் தமக்கான தனித்தேசம் கேட்டு அமைதியான அரசியல் முறையிலும் ஈராணுவ முறையிலும் போராடினர். தாயகம் கோரும் போராட்டத்திற்கு எதிராக இடப்பெயர்வையும் இனக்கலப்பையும் ஊக்கவிக்கும் அரச திட்டங்கள்பல கொண்டு வரப்பட்டன. இனத்தின் உள்ளேயே மோதல்கள் உருவாக்கப்பட்டது.

குர்திஸ் போராட்ட அமைப்பான PKK பயங்கரவாதிகள் பட்டியலில் இடப்பட்டது. இனஅழிப்பின் இந்த வரிசையில் சுமார் மூவாயிரம் குர்திஸ் கிராமங்கள் தென்கிழக்கு துருக்கிய வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டது. குர்திஸ் கலாச்சாரம், மொழி, பண்பாடு என அனைத்தும் இனஅழிப்பின் பலிக்குள்ளாகின.

அதேவேளை சிரியாவில் குர்திஸ் இனத்தவர்கள் தமது தேசியவாதம் குறித்து போராடி வந்தாலும் தொண்ணூறுகளுக்கு முன்பு சிரியா அரபு நாடுகளின் மத்தியில் ஒரு கம்யூனிச நாடாக கருதப்பட்டதால், போராடும் இனமான குர்திஸ் இனத்தவரும் சோவியத் ரஸ்யாவுடன் தொடர்புகளை கொண்டிருந்த காரணத்தால் சிரிய அரசியலில் இணைந்து செயலாற்றும் நிலை ஏற்பட்டதால் சிரிய அரசு குர்திஸ் இனத்தவரை கடுமையான சவாலுக்குரியவர்களாக கணிக்கவில்லை.

ஆனால் சோவியத் வீழ்சியின் பின்னர் சிரிய தலைவர் அல் – அசாத்தின் பொருளாதார மாற்றுக்கொள்கையின் போக்கினால் சிரிய, துருக்கி அரசுகளுக்கிடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டால் சிரியாவும் PKKயை தடைசெய்தது. இதனால் PKK ன் தலைமைத்துவம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நிலை ஏற்பட்டது.

ஈரானிலும் குர்திஸ் இனத்தவாகள் அரச அடக்குமுறைகளை பல்வேறு வகைகளிலும் எதிர்த்து போராடி வருகின்றனர். அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை வழங்கப்படுவது சாதாரணமானதாக பார்க்கப்படுகிறது. ஈரானில் குர்திஸ் இனத்தவர்கள் கடும் மிரட்டல்களின் மத்தியில் வாழ்ந்து வருவதாக மேலைத்தேய மனிதஉரிமை அமைப்புகளின் அறிக்கைகள் கூறுகின்றன.

இவ்வாறு சிரியா, துருக்கி, ஈரான், ஈராக் என குர்திஸ் இனம் பல்வேறு அரசுகளினதும் எல்லைகளால் பிளவு பட்டு கிடந்தாலும் ஒரு நிலப்பரப்பை கொண்ட ஓர் இனமாக திகழ்கிறது முக்கிய அமசமாகும். தற்போதய பிராந்திய அரசியல் சூழலுக்கு ஏற்ப ஈராக்கிய குர்திஸ் மக்கள் தம்மை ஒரு தனி தேசமாக அறிவித்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இங்கே தற்போதய அரசியல் சூழலில் குர்திஸ் இனம் எவ்வாறு தனிதேசத்தை அடைய கூடியநிலை ஏற்பட்டது என்பதும் அரசுகளின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த வியூகப்பார்வையும் முக்கியமானவைகளாகும்.

இன்று மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் பல சனநாயக இலை துளிர் காலத்தில் ஆரம்பித்து மதவாத பிரிவுகளால் மிரட்டப்பட்டு மேலைதேய வல்லரசுகளால் கையாளப்படும் நிலையில் உள்ளன.

துருக்கி மிதவாத இஸ்லாமியத்தையும் பொருளாதார வளர்ச்சியில் முழ கவனமும் கொண்டுள்ளது. இதனால் அடிப்படைவாத இஸ்லாமியம் நாட்டின் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல என்ற பார்வையை கொண்டுள்ளது.

துருக்கிய எல்லையில் மதவாதத்தை அடிப்படையாக கொள்ளாத நாடு ஒன்று உருவாகுவது தமக்கு பாதுகாப்பானது என பார்க்கிறது. உள்நாட்டு குர்திஸ் மக்களை சாந்தப்படுத்தவும் தீர்மானித்துள்ளது. துருக்கிய பிரதமர் முதன் முறையாக “குர்திஸ்தான்” என்ற சொல்லை உச்சரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இது துருக்கி குர்திஸ் இன மக்களுக்கு என ஒரு தேசம் அமைவதை ஏற்று கொள்வதாக கொள்ளப்படுகிறது. அத்துடன் குர்திஸ் இனத்தவர்கள் புதிய சிந்தனையாளர்களின் அமைப்புகளை உருவாக்கி துருக்கியில் குர்திஸ் இனத்தவர்கள் வேண்டுவது சம உரிமையே என்பதை கூறிவருகின்றனர்.

குர்திஸ் இனத்தில் பெரும்பாலானவர்கள் சுண்ணத்து இஸ்லாமியத்தை தழுவுவபவர்களாக உள்ளனர். இவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்லர். எதிர்காலத்தில் அமைக்கப்பட கூடிய ஈராக்கிய பாக்தாத் அரசிற்கு நீண்ட கால சவாலாக இருக்க கூடியவர்களாக குர்திஸ் இனத்தவர்கள் பார்க்கப்படுகின்றனர்.

அமெரிக்க நிலையை பொறுத்தவரை தற்போதய குர்திஸ் மாநில தலைவராக இருக்கும் மர்சாவுட் பர்சானி அவர்களுடன் அமெரிக்க அரச செயலர் ஜோன் கெரி கடந்த வாரம் நிகழ்திய பேச்சகளின் போது ஈராக் பிளவுபட்டு போவதை அமெரிக்கா விரும்பவில்லை என கூறியதுடன் மத அடிப்படை வாதத்திற்கு எதிராக பாக்தாத் தலைமையுடன் குர்திஸ் மாநிலம் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

ஆனால் குர்திஸ் மாநில தலைவர் பர்சானி அவர்களோ பதிய மாற்றங்கள் புதிய உண்மை நிலைகளையும் புதிய ஈராக்கையும் உருவாக்க இருக்கிறது என தெரிவித்தார். அதேவேளை அமெரிக்க செனட் பெரும்பான்மை அங்கத்தவர்களின் தலைவர் ஹரி றீட் அவர்கள் குர்திஸ் இனத்தவர்கள் பொதுவாக்கெடுப்பு மூலம் தமது விருப்பை நிறைவேற்றுவதை அங்கிகரிகும் துருக்கிய தலைவர்களின் போக்கை வரவேற்றார்.

இதற்கம் மேலாக இஸ்ரேலும் புதிய குர்திஸ் தேசத்தின் வரவை வரவேற்று உள்ளது. ஈராக்கிய குர்திஸ் இனத்திற்கான இந்த விடுதலை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய தொரு அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கப்போகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

மத்திய கிழக்கு பிராந்திய நலன்களின் அடிப்படையாக கொண்டு பார்த்தால் மேலைத்தேய நாடுகளின் நகர்வுகள் மிகவும் துரிதமாக முன்னேறிவருவதை காணலாம்.

மேற்குலகம் சியா இஸ்லாமியருக்கு எதிராக மீண்டும் ஒரு கர்பாலாவை உருவாக்க முனைகிறதா என்ற கருதுகோளின் அடிப்படையில் நின்று பார்க்கப்படுமானால். ஈராக்கில் சதாம் குசைன் ஆட்சிக்குப்பின்னர் மீண்டும் சுண்ணத்து இஸ்லாமியரின் கை மேலோங்கி வருகிறது.

ஆனால் ஈரானும் தனது நல்லெண்ணத்தை காட்டும் பாணியில் புதிய குர்திஸ் அரசை அங்கீகரிக்கும் நிலை ஏற்படலாம் என்றும் மேலைத்தேய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஈராக்கில் அரச நிலையை குர்திஸ் இனத்தவர்கள் அடையும் போது உலகில் எங்கு தமது இனத்தவர்கள் மனித உரிமை மீறல்களை சந்திக்கும் போதும் அதற்கெதிராக குரல் கொடுக்கவல்ல நிலையை பெற்றுள்ளனர். குறிப்பாக ஈரானில் உள்ள குர்திஸ் இனத்தவர்கள் மனோநிலையில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

அத்துடன் புதிய குர்திஸ்தானூடாக, புதிய தாங்கு தளத்தை பெற்றுள்ள மேலைத்தேய சக்திகள் குர்திஸ்தானை தமது நகர்வுகளுக்கு ஏற்ற வாறே உபயோகிக்கலாம். ஏனெனில் PKK ன் ஒட்டுமொத்த குர்திஸ் தேச கோரிக்கை குறித்து குர்திஸ் இனத்தை சிறுபான்மையாக கொண்ட அனைத்து நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

உலக நாடுகளின் உறவுகள் முறிவதற்கும், நல்லுறவு நிலவுவதற்கும் மக்களினதும் மூலப்பொருட்களினதும் நகர்வு முக்கிய காரணிகளாக இருக்கிறன. இதில் மக்கள் அகதிகளாகவோ அல்லது உல்லாச பயணிகளாகவோ மூலப்பொருட்கள் வியாபாரமாகவோ சுரண்டலாகவோ நகரும் பொழுது யுத்தமும் சமாதானமும் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால் மத்திய கிழக்கைப் பொறுத்தவரை பொருளை முதன்மையாக கொண்டு இயங்கும் முதலாளிதத்துவம் மதம் மற்றும் கருத்து முதன்மை விவாதங்களை தனது கருவிகளாக கொண்டு செயற்படுவதை காணலாம்.

நன்றி - நம்தேசம்

10516644_334512923378391_184529973232275

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.