Jump to content

நிலத்திலும் புலத்திலும் ஈழத்தமிழர்களின உரிமைக்கான தொடர்போராட்டம்..!


Recommended Posts

எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது.

சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்களை தனது அனுசரணையாளர்களாக மாற்றியது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் எம் போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு முகம் கொடுத்தும் உறுதி தளராமல் தடம் பிரலாமல் இன்றுவரை தொடர்கின்றது .

2009 ஆண்டு மே மாத நடுப்பகுதியில் எமது விடுதலை வீரர்களையும் மற்றும் 3 லெட்சத்திற்கும் மேலான எமது உறவுகளையும் குறிகிய நிலப்பரப்பில் அடைக்கப்பட்டு , உயிரா அல்லது விடுதலையா என்று சிங்களத்தாலும் அத்தோடு உலகத்தாலும் கேக்கப்பட்ட பொழுது தமது விடுதலை தான் வேணும் என்று தமது உயிர்களை கொடுத்தார்கள் எமது மாவீரர்களும் மக்களும். நிலத்தில் போராட்டம் மௌனித்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் மக்கள தொடர்ந்து ஏந்தி செல்கிறார்கள் .

முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத புலம்பெயர் தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்பு விரதங்களும், வீதிமறிப்பு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் உலகம் பூராகவும் செய்யப்பட்டது. எம் உறவுகள் தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் தம்மை தாமே தீயிலிட்டு அர்ப்பணித்த நிமிடங்களை மறக்க முடியுமா ?

இன்று இரண்டரை ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு மீதான இனப்படுகொலைக்கு எவ்வித நீதியும் எவ்வித அரசியல் தீர்வும் வழங்காத போதிலும் எமது தொடர் போராட்டம் முள்ளிவாய்க்கால் காலத்திலும் விட அதிவேகத்தோடு முன்னெடுக்கப்படவேண்டும்.

உண்மைகள் அழிவதில்லை என்பது போல தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு செய்த போர்குற்ற ஆவணங்கள் வெளிவரும் தருணத்தில் நாம் எமது தொடர்போராட்டத்தை மிக வலுவோடு முன்னெடுக்கவேண்டும் .

நாம் தற்போது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இது மக்கள் சக்தியாக உருமாறி சர்வதேசத்தின் கதவுகளை தட்டி மெல்லத் திறந்துள்ளோம். . இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுட்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதை உலகம் மெல்ல உணர்கின்றது. ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு தொடர்ந்து போராட வேண்டும் . ஒரு தனிமனிதனால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் குறிகிய காலத்தில் தேசிய மக்கள் போராட்டமாக மாறியது. அதே போல் இன்றைய காலத்திலும் பல்வேறு காரணத்தால் மக்கள் பங்களிப்பு அதிகமாக இல்லை என்றாலும் எமது போராட்டம் விரிவடைந்து மிக விரைவில் மக்கள் போராட்டமாக வலுவாகும் காலம் விரைவாகும்.

நிலத்தில் எம் சிவில் சமூக உறவுகள் மற்றும் உயர்கல்வி மாணவர்களும் மக்களும் சிங்கள இனவெறியர்களுக்கும் அவர் தம் கூலிகளுக்கும் எவ்வித அச்சமும் அல்லாமல் நீதியை நிலை நாட்ட முயற்சிப்பது , மானத் தமிழர்கள் மடியவில்லை அடிபணியவில்லை என்று உறுதிப்படுத்துகின்றது .

புலத்தில் பிரித்தானியாவில் இருந்து சிவந்தன் தொடக்கம் சுடர்விட்டு எரியத் தொடங்கிய நீதியின் நடைப்பயணம் ஜெகன் அங்கிள் தொடர்ந்து, டென்மார்க் உணர்வாளர்களிடம் விரிந்து, தமிழக உறவுகளிடம் பரந்து, ஜேர்மன் இளையோர்களின் ஈருருளிப் பயணத்தை அடுத்து மீண்டும் டென்மார்க் உணர்வாளர்களிடம் ஈருருளிப் பயணமாக மாறி தொடர்ந்து சென்ற ஆண்டு யூலை மாதத்தில் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து ஆறு தேசிய உணர்வாளர்கள் மூலம் பாரீஸ் நகரத்தை நோக்கி பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொடர்ந்தது .

இன்று எம் இனத்தின் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துப்பட்டிருக்கும் இனப்படுகொலையிலிருந்து எம்மக்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட அரசியல் போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த வகையில் எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையகத்திற்கு எமது மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் படுகொலை தொடர்பாக தீர ஆராய்ந்து அனைத்துலக நீதி மன்றில் விசாரணை நடாத்தி எம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில்(05 .02 .2012 ) இருந்து ஐ. நா (05.03 .2012 ) வரைக்கும் நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இறுதி நாள் அன்று மாபெரும் மக்கள் எழுட்சி நிகழ்வும் நடைபெறும் . அதே நேரத்தில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடர் விடையமாக கடந்த பல வாரங்களாக நாடுகள் வாரியான அரசியல் வேலைத்திட்டங்கள் , மற்றும் அரசியல் சந்திப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .

நாங்கள் சிந்தும் துளிகள் இன்று கண்ணீராக இருந்தாலும் நாளை மலரப் போகும் தமிழீழத்துக்கு தண்ணீராக மாறும். தமிழீழம் மீட்கும் வரை எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது எம் போராட்டம்.

நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள். (தேசியத் தலைவரின் சிந்தனைகளில் இருந்து )

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் .

நன்றி

ஈழத்தமிழர் மக்கள் அவை- யேர்மனி

01-04.JPG

05.02.2012 - 05.03.2012 நீதிக்கான நடைப் பயணம்.

ஐரோப்பிய பாராளுமன்றத்திலிருந்து ஐ.நா. வரைக்கும்.

nadai%20payanam3.jpg

nadai%20payanam2.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.