Jump to content

எனது அப்பா எனும் மிருகம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும் போது எனக்கும் இப்படியொரு அப்பா இருந்திருக்கக் கூடாதா என்று இப்போதும் ஏங்குகிறேன். ஆனால் அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. 

 

என்னைப் போல இன்னும் பலர் இருக்கலாம். அவர்களுக்கு நடந்தவை எனக்கு நடந்திருக்கலாம்.

 

இந்த அப்பாக்கள் பற்றியும் எல்லொரும் அறிய வேன்டுமென்பதற்காக இதை எழுதுகிறேன்.

 

எனது வாழ்க்கை பற்றி பலர் இதன் மூலம் அறியக் கூடும், ஆனால் அது முக்கியமல்ல எனக்கு. இவ்வாறான மனிதர்களின் அரக்கக் 

 குணம் வெளிக்கொணரப்பட வேனண்டும் என்பதன் காரணத்தினால் எழுதுகிறேன்.

 

இது எனது வாழ்க்கையில் நடந்த, இன்றுவரை மறக்க முடியாத அப்பாவுடனான அனுபவங்களின் ஒரு சிறு தொகுப்பு..............

 

எனது அப்பாவை ஒரு கொடுமைக்காரராகத்தான் நினைவில் வைத்திருக்கிறேன். எதற்கெடுத்தாலும் கேட்டுக் கேள்வியில்லாமல் வயர்களாலும், கை கால்களும் அடித்தும் உதைத்தும் என்னைக் கொடுமைப்படுத்திய ஒரு கொடுமைக்காரனைத்தான் எனக்கு அப்பாவென்று நினைவில் வைத்திருக்கிறேன்.

 

எனக்கு நினவிருக்கும் நாள் தொடக்கம், எனது அம்மாவை அவர் நேசித்தது கிடையாது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதும், அடிப்பதும் உதைப்பதுமாகத்தான் அம்மாவின் வாழ்க்கை போனது. ஆனால் அப்பா என்னதான் செய்தாலும், அம்மா பூனைக்குட்டிபோல அவரின் காலைச் சுற்றியே வலம் வருவா. எங்களுக்கெல்லாம் அம்மாவின் மேல் கடும் கோபம். என்ன இவ, அந்த ஆள் நாயென்றும் மதிக்குதில்லை, ஆனால் இவ மட்டும் அந்தாளுக்கு மரியாதைக் குடுத்துக்கொண்டு என்று நானும் அக்காவும் எங்களுக்குள் பேசிக்கொள்வோம்

 

அம்மா இந்தியாவில் படித்த ஒரு பட்டதாரி. யாழ்ப்பாணம் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் இணைப்பாளராகக் கடமையாற்றினா. அப்பா பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு கிளெரிக்கலில் சேர்ந்து போஸ்ட் மாஸ்ட்டராக வேலை பார்த்தவர். தன்னைவிடவும் அம்மா படித்தவர் என்பது அப்பாவுக்கு ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம்

 

82 ஆம் ஆண்டுடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்றோம். கோண்டாவிலில் டிப்போவுக்கு அருகாமையில் அம்மா வாங்கிய காணியில் எங்கள் குடும்ப வீடு கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லாக அம்மா பார்த்து வாங்கிக் கட்டிய வீடு அது. அல்லும் பகலும் அம்மா தனது ஆஸ்த்த்மா வருத்ததுடனும் கூட, எங்கள் மூவரையும் (அக்கா, தம்பி, நான்) கவனித்துக்கொண்டு வீட்டையும் கட்டிக்கொண்டு வந்தா. ஆனால் அப்பா எங்களுடன் இருக்கவில்லை. மாறி, மாறி ஒவ்வொரு இடமாக வேலை பார்த்து வந்தார். வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வரும் அப்பா எங்களுக்கு விட்டுச் சென்றதெல்லாம், அடியும், உதையும், திட்டுதல்களும் மட்டும்தான். அதனால், அவர் லீவில் வருகிறார் என்றாலேயே எங்களுக்குக் காய்ச்சல் வந்துவிடும்.

 

ஒருவாறு அம்மா வீட்டைக் கட்டி முடித்தவுடன், அப்பாவும் யாழ்ப்பாணத்துக்கு மாற்றலாகி வந்து சேர்ந்தார். எங்களின் வாழ்க்கை நரகமாகியது. 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 13 ஆம் நாள் அம்மா படுத்தபடுக்கையாகி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு எங்கள் மூவரையும் ஒரு கொடுமைக்காரனிடம் விட்டு விட்டு போய்ச் சேர்ந்துவிட்டா. எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அக்காவிற்கு அப்போது 14 வயது (பெரியவளாகி ஒருவருடம் கூட இல்லை). எனக்கு 12 வயது. தம்பிக்கு 8 வயது

 

செத்த வீட்டில் வைத்தே எங்கள் மூவரையும் பார்த்து அப்பா பின்வருமாறு சொன்னர், "உங்கள் ஆத்தை உங்கள் மூவரையும் என்னுடன் விட்டு விட்டு போய்ச் சேர்ந்திட்டாள். நீங்களும் அவளுடனேயே செத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்". செத்த வீட்டிற்கு வந்தவர்கள் சிலரும் இதைக் கேட்டார்கள்.

 

அக்காவை எனது அம்மவின் தங்கை மட்டக்களபிற்கு தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டா. அவள் அங்கே ஒரு கொன்வென்ற்றில் அநாதைச் சிறுவர்களுக்கு வெளிநாடொன்றில் இருந்து அனுப்பப்படும் பணத்தில் படித்தாள். நானும் தம்பியும் நிரந்தரமாகவே இந்தக் கொடுமைக்காரனிடம் அகப்பட்டுப் போனோம். என்னை ஒரு போதுமே அவர் பெயர் சொல்லி அழைத்தது கிடையாது. எனக்கு அவர் வைத்த பெயர், "பயங்கரவாதி" , காரணம் நானும் தம்பியும் புலிகளைப் பற்றி வீட்டில் பேசி வந்ததால். என்னைக் கூப்பிடும்போதெல்லாம் ஒன்றில் "பயங்கரவாதி" அல்லது "மொக்கா" என்றுதான் கூப்பிடுவார்

 

அம்மா இறந்து ஒரு சில மாதங்களில் தனது நண்பர்களூடாக தனக்கு இன்னொரு பெண்ணைத் தேடத் தொடங்கிவிட்டார்


பெண்ணெல்லாம் பார்த்து முற்றாகிவிட்டதும், ஒரு நாள் தம்பியையும் என்னையும் கூப்பிட்டு, உங்களுக்கு ஒரு புதிய அம்மாவைப் பார்த்திருக்கிறேன். உங்கட பழைய அம்மாவுடன் நடந்துகொண்டதுமாதிரி இவவுடன் நடந்துகொண்டால் துலைச்சுப்போடுவன் என்று சொல்லிவிட்டுப் போனார். சரியாக அம்மா இறந்து 9 மாதங்களில் அவர்களது கலியாணம் நடந்தது. அவருக்கு அப்போது 50 வயது. மணமகளுக்கு 44 வயது.அம்மாவின் முதலாம் வருட நினைவு நாளில் எமது சிற்றன்னை வீட்டிலிருந்தார்.

 

அம்மாவை ஒரு அடிமை போல நடத்திய அப்பா தனது புதுமனைவியிடம் அடங்கிப்போனார். அவவுடம் கெஞ்சுவதும், குலாவுவதுமாக அவர் செய்த சேட்டைகள் எமக்கே அருவருப்பாக இருந்தன

 

சிற்றன்னை சரியான தந்திரசாலி. அப்பாவை வளைத்துப் போட்டிருந்தார். அவரில்லாத வேளையில் நாங்கள் பேசுபவை செய்பவை எல்லாவற்றையும் அப்படியே அவர் வந்தவுடன் போட்டுக் கொடுத்து விடுவார். அவரும் கேட்டுக் கேள்வியில்லாமல் அடி, உதை. வீடு கட்டப்படும் காலத்தில் வயறிங் வேலைகளுக்கென்று வாங்கி மிஞ்சியிருந்த வயரின் கம்பிகளை அப்பா வீட்டில் எடுத்து வைத்திருந்தார். அவற்றை இரண்டு பட்டாக முறுக்கி, ஒரு சாட்டை போல செய்து வைத்திருப்பார். எதுக்கெடுத்தாலும் அதனால்த்தான் எனக்கும் தம்பிக்கும் அடிவிழும். உடம்பில் பட்டால் வலி அதிகம் என்று கைய்யை நீட்டுவோம். அடுத்தநாள் காலை கை முழுவதும் வயர் தழும்புகள்

இப்படியே எங்கள் காலம் கடந்தது. ஒருநாள் நான் செய்யாத தவறு ஒன்றுக்காக என்னை போட்டு அடித்துக்கொண்டிருந்தார். வயர், கதியாள், கை கால் என்று என்ன நடக்குதென்று தெரியாமல் அடியும் உதையும். காலில் விழுந்து கெஞ்சிப் பார்த்தேன், கைகூப்பி கும்பிட்டுப் பார்த்தேன். அவர் இரக்கப்படவில்லை. உதைந்த உதையில் தென்னம் பாத்திக்குள் விழுந்து உடம்பெல்லாம் சேறாகி விட்டது. இனித் தாங்க முடியாதென்று நினைத்துக்கொண்டே, அவரைப் பார்த்து, "இனிமேல் கைவைத்தால் நடக்கிறதே வேற " என்று ஆத்திரத்துடன் சொன்னேன். "என்னடா செய்வாய்" என்று கேட்டுக்கொண்டே நெருங்கி வந்தார், "வைத்துப்பாருமன் தெரியும்" என்று சொல்லவும், அவரது புதுமனைவி "நீங்கள் இஞ்சால வாங்கோ , அடிப்பான் போல கிடக்கு" என்று அவரைக் கூட்டிக் கொண்டு போய்விட்டார்

அதன்பிறகு என்மேல் கைவைக்கும்போது வயருடம் மட்டும் நிறுத்திக்கொள்வார். அதுவரை அவர் அடிக்கும்போதெல்லாம் கும்பிட்டு அழும் நான், அதன் பிறகு அவர் அடிக்கும்போது முகத்தைப் பார்த்துக்கொண்டு முறைப்பேன். சில அடிகளுடன், திட்டிவிட்டுப் போய்விடுவார்


ஒருநாள் எனது மைத்துனன்(அப்பாவின் தங்கையின் மகன், போலியாவால் சிறுவயது முதல் அவதிப்பட்டவன். என்னிலும் இரண்டு வயது அதிகம். கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அவர்கள் இருக்கும்போது புலிகளின் மாணவர் அமைப்பான சோல்ட்டில் இணைந்திருந்தவன். இது அப்பாவுக்குத் தெரியும். அவருக்குப் புலிகள் என்றாலேயே பாவற்காய் கசப்பு. முடிந்த கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பார். புலிகள் பற்றி நாங்கள் வீட்டில் கதைப்பது அவரது வெறியை இரட்டிப்பாக்கியது. இதுதான் அவர் என்னைப் பயங்கரவாதி என்றழைக்கக் காரணம்) யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். அது ஆண்கள் வார்ட் என்பதால், மாமி என்னை ஒருநாள் அவனுடன் சென்று தங்கும்படி கேட்டு வீட்டிற்கு வந்திருந்தார். அப்பா நல்ல நித்திரை, ஆகவே சிற்றன்னையிடம் சொல்லிவிட்டு நாங்கள் வைத்தியசாலைக்குச் சென்று விட்டோம். மறுநாள் காலை, மைத்துனனுக்குத் தேவையானதைச் செய்துகொடுத்துவிட்டு, களைத்துப்போய் வீடு வந்தேன். வீட்டின் கேட் பூட்டுப் போட்டு உட்பக்கத்தால் பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டிப் பார்த்தும், யாரும் திறக்கவில்லை. சிறிது நேரத்தில் கைய்யில் கொட்டனுடன், அப்பா வெளியே வந்தார். "எங்கயடா வந்தாய் பயங்கரவாதியே, உனக்கு இந்த வீட்டில் இனி இடமில்லை, எங்கேயாவது தொலைஞ்சுபோ அல்லது செத்துப்போ" என்று கர்ஜித்தார். எனக்கு நான் செய்த குற்றம் என்னவென்று தெரியவில்லை. "என்ன பிழை செய்தேன்" என்று கேட்கவும், உள்ளுக்கை வந்தால் உன்னை அடிச்சே கொல்லுவேன் என்று மறுபடியும் கத்திவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே போய்விட்டர். குறைந்தது ஒரு மணி நேரமாவது வீட்டுப் படலையில் குந்தி இருந்தேன், எவருமே வந்து திறக்கவில்லை. ஒழுங்கையால் சென்ற பக்கத்துவீட்டு ஐய்யாவும், மாமாவும், ஏன் இதில குந்திக்கொன்டிருக்கிறாய், வா, எங்கட வீட்டுக்குப் போவம், உன்ர கொப்பற்ற குணம் உனக்குத் தெரியும்தானே என்று ஆறுதலாகப் பேசினார்கள். ஆனால் நான் போகவில்லை. என்ன பிழை செய்தேன் என்று என்னை நானே கேட்டுக்கொன்டிருந்தேன். மனம் இறுகியது, இனி இந்த ஆளுடன் இருக்கப் போவதில்லை. ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டே எழுந்து நடக்கத் தொடங்கினே. ஆனால் எங்கே போவதுஅப்பம்மா வீட்டுக்குப் போகலாம். ஆனால் அதுவோ தெல்லிப்பளை. கைய்யில் காசும் இல்லை, பசி ஒருபக்கம், இரவு முழுக்க ஆஸ்ப்பத்திரியில் இருந்துவந்த உடுப்பு, ஊத்தையும், மணமும், பல்லுக்கூட இன்னும் மினுக்கவில்லை, தலையெல்லாம் பாணிபோல ஒட்டிக்கொண்டிருக்க ஆத்திரத்துடன் தெல்லிப்பளை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

மருதனார் மடத்துக்குக் கிட்டப் போகும்போது, தலை சுற்றிக்கொண்டு வந்துவிட்டது. கண்கள் இருட்டாக, அண்ணா பாமுக்கு முன்னால் ரோட்டில் இருந்துவிட்டேன். ஒரே மயக்கம் மயக்கமாக வந்துகொனண்டிருந்தது. இனி நடக்க முடியாது, யாரிடமாவது காசுகேட்போம், பஸ்ஸில் போகலாம் என்று நினைத்துக்கொண்டு யாராவது வருகிறார்களா என்று ரோட்டின் இரு பக்கமும் அங்கலாய்ப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். தூரத்தில் ஒருவர் சைக்கிளில் வருவதைப் பார்த்ததும், இருந்தபடியே கைய்யை நீட்ட ஆயத்தமானேன். அவர் அருகில் வந்ததும், கைய்யை நீட்டி "ஐய்யா, பஸ்ஸுக்குக் காசில்லை, இருந்தால் ஒரு இரண்டு ரூபாய் தாங்கோ" என்று பிச்சைக்காரன்போலக் கைய்யை நீட்டினே. சைக்கிள் நின்றதும் அவர் பேசத் தொடங்கினார். "தம்பி, நீர் அன்னரானியின்ர மகனல்லோ? என்ன செய்துகொண்டிருக்கிறீர் இங்கே?" என்று கேட்கவும், அவரது முகத்தை அப்போதுதான் கவனித்தேன். அவர் எனது அம்மா வேலைசெய்த சீ. டீ. பீ யில பஸ் ஓட்டுனராக வேலை பார்த்தவர். வெட்கமும் அழுகையும் சேர்ந்து வரவே அழுதுவிட்டேன். "வாரும், உம்மை வீட்டில இறக்கி விடுகிறேன்" என்று அவர் சொல்லவும், "இல்லை, நான் வீட்டுக்குப் போக மாட்டேன், எனக்கு ஒரு இரண்டு ரூபாய் தங்கோ" என்று திருப்பிக் கேட்டேன். " சரி, எங்கேதான் போகிறீர் " என்று கேட்கவும், தெல்லிப்பளைக்கு போகிறேன்" என்று நான் சொன்னேன். "சரி, வாரும் உம்மை மருதனார் மடச் சந்தியில் இறக்கிவிடுகிறேன்" என்று சைக்கிளில் ஏற்றி என்னை பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றார். அம்மாவின் நினைவு மீண்டும் வந்து அழுகையாகியது. "நீ இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா என்று அம்மவை மனதில் வைதுகொண்டு, அப்படி என்னதான் அவசரம் உனக்கு, எங்களை இந்த மிருகத்திடம் விட்டு விட்டுச் சென்றுவிட்டாயே" என்று கேட்டுக்கொண்டேன். பஸ்பயணம் முழுவதும் அம்மாவினது நினைவுகளும், காலையில் நடந்த சம்பவமும் மாறி மாறி மனதில் வந்துகொண்டிருந்தன.

 ஒருவாறு தெல்லிப்பளையிலுள்ள அப்பம்மாவின் வீட்டுக்குச் சென்று நடந்தவற்றைக் கூறவும், அவர்களுக்கு அப்பாமீது சரியான ஆத்திரம். வா, இன்றைக்குப் போய் என்னவென்று கேட்டுவிட்டு வருவோம், பிள்ளைகளைப் பெத்து ரோட்டில விடுகிறானோ? என்று சிற்றப்பா கோபத்துடன் கிளம்பினார். ஆனால் நானோ வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து அங்கேயே தங்கி விட்டேன். இரு வாரங்கள் போனது. அவர் வந்து பார்க்கவுமில்லை, இருக்கிறேனா இல்லையா என்று தேடவுமில்லை

 

பள்ளி விடுமுறைக்கு வந்திருந்த அக்கா எனது நிலமையை எனது அம்மாவின் தங்கைக்குக் கூறவும், அவர் இன்னொரு அநாதைகள் விடுதியில் மட்டக்களப்பில் சேர்ப்பதற்கு என்னையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

 

 

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனது, அப்பாவால்.... பாதிக்கப் பட்டவன் நான்.
அதனை... நினைத்தால்..... வயிறு, பத்தி எரியும்.
ரகு, உங்கள் பதிவை, தொடருங்கள்.......

Link to comment
Share on other sites

வாசிக்க மிகவும் கஷ்டமாக இருக்கு ரகுநாதன் .இலங்கையில் இப்படி ஒரு சம்பவம் நான் கேள்விப்படுவது இததான் முதல் தடவை .

 

நன்றாக படித்து இன்று ஆசியில் நன்றாக  வாழ்வதை நினைத்து பெருமைப்படுகின்றேன் .

 

கெட்ட கனவாக பழையவைகளை மறந்து சந்தோசமாக வாழ்கையை அனுபவியுங்கள் . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் எனது வாழ்க்கை இன்னும் 40 அநாதைச் சிறுவர்களுடன் ஆரம்பமாகியது. விடுதி பொறுப்பாளர் மிகவும் கடுமையானவர். சிறு குளப்படியென்றாலே பிரம்பு பறக்கும். 

 

தெரியாத மனிதர்கள், புதிய இடம், எனது பாஷைக்காகவே கேலி செய்யப்பட்ட நான்...இப்படி ஆரம்ப நாட்கள் நரகமாகிப் போனது. ஆனாலும் அப்பாவின் கொடுமை இருக்கவில்லையென்பதால் சிறு ஆறுதல். 

 

ஒரே பாடசாலை உடை, அதைத் துவைத்து துவைத்துப் போடுவேன். சப்பாத்துக்கள் வாங்குவதற்குக் கைய்யில் பணம் இருப்பதில்லை. நோர்வேயிலிருந்து யாரோ புண்ணியவான் அனுப்பும் பணம் எனது பெயரில் விடுதிக்கு வந்து சேரும். சாப்பாட்டுக்குப் போக மீதி பெரிதாக இருப்பதில்லை போலும். விடுதி நடத்துனர் ஒருபோதுமே எனக்குக் கணக்குக் காட்டுவதில்லை. நானும் கேட்பதில்லை.

 

ஆரம்பத்தில் கேலிசெய்தவர்களும், மிரட்டியவர்களும் நண்பர்களாகிப் போனார்கள். விடுதி பொறுப்பாளருக்கு நான் வலது கையாகிப் போனேன். ஒருவருடத்தில் விடுதியின் மொனிட்டர் ஆகிப் போனேன்.  அதன் பிறகு எனக்கு வாழ்க்கை பிடித்துப் போனது. 

Link to comment
Share on other sites

ரகு மிகவும் மனதை கனக்க செய்யும் விடயம்..உங்கள் விடயம்...ஆனால் நீங்கள் தற்போது ஒரு நல்ல நிலையில் இருப்பீர்கள் என்று அன்ம்புகிறேன்...குடும்பத்தை கவனிக்காத தகப்பன்மார்களை பார்த்திருக்கிறேன்...ஆனால் உங்கள் விடயம் மிகவும் பாரதூரமானது...உங்களது பிள்ளைகள் ஒரு நல்ல தகப்பனை பெற்றிருப்பர்கள்..அது அவர்கள் செய்த நற்பயன்...

உங்களது அக்காவுக்கும் தம்பிக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கும் என்றும் நம்புகிறேன் (அதுவே நடந்திருக்கவும் வேண்டுகிறேன்...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு மிகவும் மனதை கனக்க செய்யும் விடயம்..உங்கள் விடயம்...ஆனால் நீங்கள் தற்போது ஒரு நல்ல நிலையில் இருப்பீர்கள் என்று அன்ம்புகிறேன்...குடும்பத்தை கவனிக்காத தகப்பன்மார்களை பார்த்திருக்கிறேன்...ஆனால் உங்கள் விடயம் மிகவும் பாரதூரமானது...உங்களது பிள்ளைகள் ஒரு நல்ல தகப்பனை பெற்றிருப்பர்கள்..அது அவர்கள் செய்த நற்பயன்...

உங்களது அக்காவுக்கும் தம்பிக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கும் என்றும் நம்புகிறேன் (அதுவே நடந்திருக்கவும் வேண்டுகிறேன்...)

 

 

இல்லை அன்பரே,

 

அதுதான் இன்னும் சோகம்.

 

அக்கா தனக்கு விரும்பிய ஒருவரை முடித்திருந்தாள். அந்த ஆள் சரியான மன்மதன். அக்காவுடன் இருக்கும்போதே இன்னொரு மணமுடித்தவளுடன் தொடர்பிருந்து, அக்காவை விவாகரத்துச் செய்யுமளவிற்குப் போய், பலர் தலையிட்டு இன்றைக்கு மத்திய கிழக்கில் வேலை செய்கிறார். அப்படி இப்படித்தான் பணம் அனுப்புகிறார். அக்காவிற்கு இரண்டு பிள்ளைகள். 

 

தம்பி, ஆனையிறவு மீட்புச் சமர் 2000 இல் ஒக்டோஅர் மாதம் 31 ஆம் தேதி இறந்துபோனான். அப்போது நான் கொழும்பிலிருந்தேன். போகக் கிடைக்கவில்லை. ஒருமுறை நாங்கள் கொழும்பில் அம்மாவின் தங்கையுடன் இருக்குபோது பார்க்க வந்திருந்தான். அப்பாவின் கொடுமையைச் சொல்லி எங்களுடன் தானும் தங்க விரும்புவதாகக் கேட்டான். அப்போது நாங்களே வெளிநாட்டில் இருந்து மாசம் மாசம் வரும் சொற்பக் காசில் வாழ்ந்து வந்ததால், அம்மாவின் தங்கை அவனும் கூடவிருப்பதை விரும்பவில்லை. அவன் திரும்பிச் சென்றுவிட்டான். சிறிதுகாலத்திலேயே அவனை வீட்டை விட்டுத் துரத்த திட்டம் போட்ட அப்பா தனது புதிய மனைவிமீது எனது தம்பி கண்வைத்திருப்பதாகப் புரளி கிளப்பி அவனை அடித்திருக்கிறார். அவனும் கிடந்த கதிரையொன்றை எடுத்து அவரை அடித்துவிட்டு இயக்கத்தில் போய் சேர்ந்துவிட்டான். இது நடந்தது 1995 இல்.

5 வருடங்கள் இயக்கத்தில் இருந்துவிட்டு ஆனையிறவில் சப்ளை வாகனம் ஒன்றை ஓட்டிச் செல்லும்போது விமானத்திலிருந்து குண்டு போட்டு அவனைக் கொன்றுவிட்டார்கள்.

 

2002 இல் யாழ்ப்பாணம் சென்றபோது அவன் இறந்த இடத்தில் கடந்துபோனபோது அவனுக்க மனதில் அழுததுடன் அண்ணன் என்கிற கடமையை நான் முடித்துவிட்டேன்.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிப்போம்.

 

விடுதியில் எனக்கு வாழ்க்கை பிடித்துப் போனது. 

 

காலையில் அரை இறாத்தல் பாணும் சொதியும். மதியம் சோறும் ஒரு குளம்பு ஒரு சொதி, ஒரு மரக்கறி. இரவில் அதே பாணும் சொதியும். ஆனால் வாழ்க்கை கசக்கவில்லை. என்னைப் போலவே இன்னும் 40 சிறுவர்கள். நான் வாழ்ந்த வாழ்க்கையை என்னுடன் சேர்ந்தே அனுபவித்த தோழர்கள். எனக்கு வலிக்கும்போது, துவண்டு விழும்போது உண்மையாகவே அழுத நண்பர்கள். வேளைகளில் அறிவுரையும் தேறுதலும் ஊட்டிய அண்ணன்கள். கரிசனைப்பட உரிமையுடன் கோபித்துக்கொள்ள அண்ணா அண்ணா என்று என்னை வலம் வந்த தம்பிகள். வாழ்க்கை முழுமையாகிப் போனதாக உணர்தேன் அம்மா இறந்த பிறகு முதன் முதலாக.

 

விடுதி கத்தோலிக்க குருமாரினால் நடத்தப்பட்டதால், தினமும் ஆலயம், மரைக்கல்வி வகுப்பென்று போய்வந்தேன். அங்கேதான் எனது முதலாவது காதல். இன்றுவரை மறக்க முடியாமல், கனவுகளில் வந்து  என்னை அலைக்கழிக்கும் காதல். அதுபற்றிப் பேசப்போவதில்லை.

 

சாதாரன தர பரீட்சையில் நான் எதிர்பார்த்தை விடவும் சிறந்த மதிப்பெண்கள். பாடசாலையில் எனது பெறுபேறுகள் 5 ஆவதமிடம். விடுதியில் நானே முதலாவது. கத்தோலிக்கப் பள்ளியிலும் நானே முதலாவது. 

 

இந்தக் காலத்திலேயே பிரேமதாசாவுடன் புலிகள் மோதினார்கள். எனது பாடசாலைக்கு அருகிலிருந்த மட்டக்களப்பு போலீஸ் நிலையத் தாக்குதலுடன் அந்த ஈழப்போர் ஆரம்பமாகியது. சில மாத காலத்திலேயே இராணுவம் மட்டக்களப்பை முழுவதுமகப் பிடித்தது. இரவு நேரங்களில் விடுதியின் பின்னாலிருந்த வாவிக்கருகில் டயரில் எரியும் மனிதர்களை யன்னலூடாகக் கண்டிருக்கிறோம். இரவிரவாக வெடிச் சத்தங்களும், அலறல்களும். காலையில் தெருவோரத்தில் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டிருந்த மனிதர்கள். 

 

பாடசாலை எதுவும் இயங்கவில்லை. அவ்வப்போது சுற்றி வளைப்புகள், கைதுகள், காணாமல்ப் போதல்கள். ராணூவமும் முஸ்லீம் ஊர்காவல்ப் படையும் சேர்ந்து நடத்திய நரவேட்டை. என் வயதை ஒத்த பலர் (என்னுடன் படித்தவர்கள்) பலர் காணாமல்ப் போனார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். வசந்தசுதன் எனும் எனது நண்பன் ஆரையம்பதியிலிருந்து கல்முனைக்குப் போய்க்கொண்டிருக்கும்போது கடத்தப்படுக் கொல்லப்பட்டான். அவனைப் போன்றே இன்னும் பலர். 

 

இனி மட்டக்களப்பிலிருப்பது பாதுகாப்பில்லை என்று எண்ணிய எனது அம்மாவின் தங்கை எங்களை கொழும்பிற்குக் கூட்டிவந்தார். அங்கே இரு சிறிய அறையில் இன்னொரு வயது முதிர்ந்த பெண்மணியுடன் வாழத் தொடங்கினோம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன், உங்களுக்கு நான் பச்சைப் புள்ளி போட்ட காரணம், உங்கள் சோகக்கதைக்காக என்று நினைத்துவிடாதீர்கள்!

 

உங்கள் கதையைத் தைரியமாக எம்முடன் பகிர்ந்து கொண்டதற்காகவே அதைப் போட்டேன்!

 

எவ்வளவு சோகம் நிறைந்த ஒரு குழந்தைப்பருவம் உங்களது...! அர்ஜுனைப் போலவே, நானும் கதையை வாசித்து, மிகவும் ஆத்திரமடைந்தேன் !

 

அந்த அனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்கள், உங்களை நிச்சயம் ஒரு 'நல்ல' தந்தையாக மாற்றியிருக்கும்!

 

ஏசுநாதர் கூட, வளர்ந்த பின்னர் தான் 'சிலுவை' சுமந்தார்?

 

நீங்கள் சிறு வயதிலேயே 'முள்முடி' அணிந்திருக்கின்றீர்கள் !

 

தொடருங்கள்.... இப்படியான அப்பாக்களைப் பற்றி 'உலகம்' நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் ஒவொரு இடமாக மாறி மாறி இருந்தேன். ஆரம்பத்தில் அக்காவுடன் தங்கியிருந்துவிட்டு, பின்னர் நண்பர்களுடன் தங்கினேன். மூன்று மாததிற்கு ஒருமுறை சிட்னியிலிருந்து மாமா அனுப்பும் பணத்தில் வாழ்க்கை ஓடியது. வாடகைக்கும் உணவிற்கும் போனது போக மீதமிருப்பதில் தான் மற்றச் செலவெல்லம். சிலமுறை வெள்ளவத்தை ஸ்டேஷன் வீதியில் அமைந்திருந்த முருகன் சாப்பாட்டுக் கடையில் ஒரு பாசலை எடுத்து நானும் அக்கவும் பகிர்வதுண்டு. 

 

அப்போது உயர்தரக் காலம். பள்ளியில் மணவர் எல்லாம் எந்த வாத்தி நல்லம் என்று தேடித் தேடிப் போனார்கள். எனக்கு அந்தப் பிரச்சினையே இருக்கவில்லை. பணமிருந்தால்த்தானே டியூஷன் பற்றி யோசிப்பதற்கு. அதற்காக நான் ஒன்றும் பாடசாலையில் விளங்கப்படுத்துவதை அப்படியே விளங்கிகொண்டவனும் அல்ல. சிலவேளைகளில் என்ன படிப்பிக்கிறார் என்றே தெரியாது. பிசிக்ஸோ அல்லது அப்லயிட் மத்ஸோ என்று புரியாமல் விளித்ததுமுண்டு. 

 

சிலவருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மம்மாவும் எங்களுடன் வந்து தங்கிவிட்டார். கிருலப்பனையில் ஒரு வீட்டின் மேல்மடியில் நாங்கள் நால்வரும் (நான், அக்கா, சித்தி, அம்மம்மா) தங்கியிருந்தோம். ஒருநாள் அப்பா யாழ்ப்பாணத்திலிருந்து தனது கண்சிகிச்சைக்காக வந்திருந்தார். கைய்யில் பணம் எதுவுமில்லை. அப்போது நான் கொழும்பில் ஒரு தனியார் கம்பெனியில் வெறும் 3000 ரூபாய்க்கு வேலை செய்துகொண்டிருந்தேன். உயர்தரப் பரீட்சை எழுதுவிட்டு பெறுபேற்றிற்காக காத்திருந்த காலம். நான் வேலை பார்ப்பதாக யாரோ சொல்லியிருக்கிறார்கள். ஆகவே தனது வைத்தியச் செலவை நான் ஏற்கவேண்டும் என்று வந்து சொன்னர். என்னிடம் அவ்வளவு பணமில்லை. கைய்யில் இருந்ததைக் கொடுத்து அவருக்கு கண்சிகிச்சை செய்தோம். சுகமடைந்தவுடன் யாழ்ப்பாணம் கிளம்பிவிட்டார். இவ்வளவிற்கு அவருக்கு பென்ஷன் வந்துகொண்டிருந்தது, அதைச் செலவழிக்க அவருக்கு விருப்பமில்லை. 

 

ஒருவருடத்தில் அக்கா விரும்பும் ஆளையே கட்டிக் கொடுப்பதென்று முடிவெடுத்தோம். ஆரம்பத்தில் காதல் என்று வந்தவர், தாய் தமக்கை அழுத்தத்தால் சீதனம் வேண்டுமென்று கேட்டார். எங்களிடம் பணமில்லை. பண்முள்ள ஒரே ஆள், அப்பா. அவருக்குக் கிடைத்த ரொக்கப்பணமான ஒன்றரை லட்சம் அவரிடம் இருந்தது. ஆனால் அதைச் சீதனமாக தனது மகளுக்குக் கொடுக்க மறுத்துவிட்டார். நான் எவ்வளவோ கெஞ்சியபின்னர் நிபந்தனையுடன் ஒத்துக்கொண்டார். முதலாவது நிபந்தனை, அக்கா தனது புதுமனைவியை கணம் பண்ண வேண்டும். இரண்டாவது நான் வேலை செய்யத் தொடங்கியவுடன் முழுப்பணத்தையும் திருப்பித் தர வேண்டும். வேறு வழியில்லாமல் நாங்கள் ஒத்துக்கொண்டோம், அக்காளின் திருமணமும் நடந்தது. 

 

அன்றிலிருந்து சாகும்வரை எனக்குக் கடிதம் எழுதிக்கொண்டேயிருந்தார். கடிதம் முழுக்க தனது பணத்தை (அக்காவுக்குச் சீதனமாகக் கொடுத்த பணத்தை)எப்போது திருப்பித் தருவாய் என்றே கேட்டிருப்பார். நானும் பொறுங்கள் பல்கலைக் கழகம் முடிந்தவுடன் தருகிறேன் என்று எழுதிவந்தேன். 

 

பல்கலைக் கழகக் காலத்தில் எனதும் மனைவியைச் சந்தித்தேன். காதலித்தோம். திருமணம் முடிக்க முடிவு செய்தோம். உடனேயே எனது மனைவியின் பெற்றோருக்குக் கடிதம் எழுதத் தொடங்கினார். என்னைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் எழுதி, என்னை மணமகனாக ஏற்கவேண்டாம் என்று சொல்லிப் பார்த்தார். அவர்கள் இவரின் கடிதங்களை என்னிடம் காட்டிவிட்டு அப்படியே விட்டு விட்டனர். பின்னர் அவர்களைத் திட்டியும் கடிதம் எழுதினார். அந்தப் பணத்த அவர்களைத் தரும்படி வற்புறுத்தினார். நான் அவர்களிடம் அவருடனான கடிதப் போக்குவரத்துக்கள் அனைத்தையும் நிறுத்தச் சொன்னேன். எனக்கு வந்த , ஒரு தகப்பன் தனது மகனுக்குக் எழுதக் கூடாத, கூச்சப்படுகிற அசிங்கத்தனமான கடிதங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை. அவரின் ஆத்திரம் அதிகமானது. நான் ஒரு புலியென்று போலிஸுக்கு அறிவிக்கப் போவதாக வெருட்டினார், நான் அதற்கும் பதில் போடவில்லை. 

 

இப்படியே வருடங்கள் உருண்டோடின. 2002, நான் அவுஸ்த்திரேலியா வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர், இறுதியாக ஊரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று மனைவியுடன் போனேன்.  அம்மம்மாவின் வீட்டில் தங்கியிருந்து கொண்டு, அவரைப் பார்க்க கோண்டாவிலுக்குப் போனோம். நான் அதிகம் பேசவில்லை. அவரும் அதிகம் பேசவில்லை. அப்போதுதான் தனது ஆமி நண்பனைப் பற்றிச் சொன்னார். ஆனையிறவில் புலிகள் தாக்கியபோது தனது நண்பனும் இறந்துவிட்டான் என்று தான் கேள்விப்பட்டதும், "இறைவா அவனுக்கு எதுவும் நடந்திருக்கக் கூடாதே" என்று தான் வேண்டியதாகச் சொன்னார். அவன் ஒருநாள் அவர் முன் வந்து நின்றபோது, கடவுள் இருக்கிறார் என்று தான் நம்பியதாகச் சொன்னார். நான் அவரிடம், "அதே சண்டையில்த்தானே தம்பியும் இறந்தான், அது கவலை இல்லையா உங்களுக்கு ? " என்று கேட்டேன்.. "அவன் ஒரு பயங்கரவாதி, அவன் சாகத்தானே வேண்டும்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டார். ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது எனக்கு. "அக்காவையும் என்னையும் அம்மா இறந்த முதல் வருடத்திலேயே திரத்திவிட்டீர்கள். கடைசியாக தம்பியையும் துரத்திவிட்டு, சாகக் கொடுத்த்தீர்கள், இப்ப திருப்தியா உங்களுக்கு ?" என்று கேட்டு விட்டு, அந்தக் கணமே அங்கிருந்து சென்றுவிட்டோம். அதுவே நான் அவரைப் பார்த்த கடைசிச் சந்தர்ப்பம். 

 

நான் கொழும்பு திரும்பியதும், மீண்டும் அவரது மிரட்டல் கடிதங்கள் வந்தன. நான் பதில் போடவில்லை. 2002 நவம்பரில் சிட்னி வந்து சேர்ந்தோம்.

 

 6 அல்லது 7 மாதங்கள் இருக்கலாம். சரியாக நினைவில் இல்லை. ஒரு மாலைநேரம், அவர் இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. கவலை சிறிதுமில்லை எனக்கு. அம்மாவின் மரணத்துடன் அவரது மரணத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன். எவ்வளவு வித்தியாசம். உலகமே இருண்டுவிட்டதாக அன்று நான் நினைத்தேன். சோகம் தாளமுடியவில்லை அன்று. ஆனால் இன்றோ ஏதுவுமே எனக்கு கவலையைத் தரவில்லை. அது ஒரு செய்தியாக மட்டுமே இருந்தது. சில சொந்தங்கள்  செய்திகேட்டு வீட்டிற்கு வந்தார்கள், இன்னும் சிலர் தொலைபேசியில் ஆறுதல் சொன்னார்கள். எனக்குத்தான் கவலையே இல்லையே, பிறகு எதற்கு இந்தச் சம்பிரதாயங்கள் எல்லாம் என்று அவர்களைக் கேட்டேன். ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள். அவர்களுக்கு அது புரியாது. 

 

இறுதியாக, செத்தவீட்டிற்கு செலவுக்குப் பணமில்லை அனுப்பினால்த்தான் செலவு செய்யமுடியும் என்று சிற்றனையின் தங்கையும் கணவரும் தொலைபேசியில் பணம் கேட்டார்கள். செலவைச் செய்து தொகையைச் சொல்லுங்கள், நான் அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன். சிறு மெழுகுதிரி முதற்கொண்டு அனைத்துச் செலவுகளுக்குமான ரசீது வந்து சேர்ந்தது. ரசீதுக்கும் மேலகப் பணம் அனுப்பிவிட்டு அவர்களின் தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன்.

 

எங்களையெல்லாம் கொடுமைப்ப்டுத்திய அந்த அப்பா என்கிற மிருகம், எந்தவித சிரமும் இல்லாமல் ஒரு மாலைப் பொழுதில் வீட்டின் கொல்லையில். தென்னைமர நிழலில் பத்திரிக்கை படித்துக்கொண்டிருக்கும்போது மாரடைப்பால் இறந்ததாகப் பின்னர் கேள்விப்பட்டேன். 

 

மற்றவனுக்காக பாடுபட்டவனெல்லாம் இறுதியில் வருத்தம் வந்து, கஷ்ட்டப்பட்டுச் சாக, எவருக்கும் உதவாத, சொந்தப் பிள்ளைகளையே கொடுமமைப் படுத்திய ஒருவர் இவ்வளவு இலகுவாகச் செத்தது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 

 

முற்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்... அவருக்குள் இருந்த உளவியல் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டு தீர்த்திருந்தால்.. இன்று அவரும் நல்ல அப்பாவா இருந்திருக்கக் கூடும்.

 

இதில் படித்தும்.. செயலற்றுப் போய் இருந்த.. உங்கள் அம்மா மீது தான் கோபம் வருகிறது.

 

ஒரு மனிதனை கெட்டவன் ஆக்குவது வெகு சுலபம். அவனையே நல்லவனாக்க நாம் நிறையச் செய்ய வேண்டும். அதில் எதுவுமே இங்கு நடக்கல்ல. இது யார் தவறு..????????????! :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

என்னால் லைக் போட முடியவில்லை ரகுநாதன். மனசை கலங்க வைக்கும் உங்கள் சொந்த கதை.

ரகுநாதன் இப்போது நீங்கள் நன்றாக முன்னேறி வாழ்கிறீர்கள் என்பது மகிழ்வை தருகிறது. எல்லா மனிதர்களுக்கு பினாலும் ஒரு சோகம் துரத்தி கொண்டு தான் இருக்கிறது.

என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான்.

இவ்வளவு நாட்களுக்கு பிறகு உங்களை இப்போ இந்த கதையை/நிஜத்தை எழுத தூண்டிய காரணி எது.

நீங்கள் மீண்டும் பழசை நினைத்து வருந்துகிறீர்களா..??

அதை விடுத்து வாழ்வில் முன்னேற்றகரமான இன்னொரு பாதைக்கு அடி எடுத்து வைக்குமுன் பழசை கொட்டி தீர்க்ககிறீர்களா என்று அறியும் ஆவல்.

உங்கள் மன உறுதியும் தன்னம்பிக்கையும் மட்டும் போதும் ரகுநாதன், இழந்தவை எல்லாம் மீண்டும் கிடைத்துவிடும் என்று சொல்ல மாட்டேன் ஆனால் நீங்கள் இன்னொரு சமுதாயத்துக்கு வழிகாட்டியாக உயந்துவிடுவீர்கள்.

உங்கள் உயர்வையும் மகிழ்வையும் நேசிக்கும் ஒரு யாழ்கள உறவு,

பகலவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகுபகிர்விற்கு. மனதை மிகவும் கனக்க செய்தது.

நானும் உங்களை போல்தான், அப்பா இருந்தும் எவ்வித பிரயோசனமும் இல்லை. வேலைக்கு போகவே மாட்டார். குடி, சூது, மாது இவற்றில் தான் ஆர்வம். குடித்துவிட்டு வந்து அம்மாவை தினமும் அடிப்பதே அவருடைய வேலை. நானும் இரு தங்கைகளும் மிகவும் கஷ்டப்பட்டோம். அம்மம்மா வீட்டில்தான் வளர்ந்தோம். அம்மா இடியாப்பம், இட்லி போன்ற உணவுகள் செய்து விற்று எங்கள் மூவரையும் படிக்கவைத்தார்.

கொடிது, கொடிது இளமையில் வறுமை!!!!

நான் ஐந்து வயாதாக இருக்கும் போது அம்மா ஒருமுறை என் கண் முன் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது 37 வருடங்கள் கழித்தும் இன்னும் மறக்க முடியாமல் இருக்கின்றது.

இதனாலோ தெரியவில்லை நான் சில தாழ்வு மனப்பான்மையையும் என்னுள் இன்னும் வைத்துள்ளேன்.

அப்பா இன்னும் உயிரோடு (70 வயது) இருக்கின்றார், அவர் மீது எனக்கு அன்பில்லை. ஆனாலும் வெறுக்கவில்லை. 5 வயது மகளுக்கு நல்ல ஒரு தந்தையாக இருக்கிறேன். எனக்கு கிடைக்காத சந்தோஷங்கள் என் மகளாவது அனுபவிக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாலும் இதுக்கு லைக் போடமுடியவில்லை ரகு......இதற்கு என்ன பதில் எழுதுவது என்றும் தெரியவில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் லைக் போட முடியவில்லை ரகுநாதன். மனசை கலங்க வைக்கும் உங்கள் சொந்த கதை.

ரகுநாதன் இப்போது நீங்கள் நன்றாக முன்னேறி வாழ்கிறீர்கள் என்பது மகிழ்வை தருகிறது. எல்லா மனிதர்களுக்கு பினாலும் ஒரு சோகம் துரத்தி கொண்டு தான் இருக்கிறது.

என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான்.

இவ்வளவு நாட்களுக்கு பிறகு உங்களை இப்போ இந்த கதையை/நிஜத்தை எழுத தூண்டிய காரணி எது.

நீங்கள் மீண்டும் பழசை நினைத்து வருந்துகிறீர்களா..??

அதை விடுத்து வாழ்வில் முன்னேற்றகரமான இன்னொரு பாதைக்கு அடி எடுத்து வைக்குமுன் பழசை கொட்டி தீர்க்ககிறீர்களா என்று அறியும் ஆவல்.

உங்கள் மன உறுதியும் தன்னம்பிக்கையும் மட்டும் போதும் ரகுநாதன், இழந்தவை எல்லாம் மீண்டும் கிடைத்துவிடும் என்று சொல்ல மாட்டேன் ஆனால் நீங்கள் இன்னொரு சமுதாயத்துக்கு வழிகாட்டியாக உயந்துவிடுவீர்கள்.

உங்கள் உயர்வையும் மகிழ்வையும் நேசிக்கும் ஒரு யாழ்கள உறவு,

பகலவன்

 

 

பகலவன்,

 

நான் எவற்றையுமே இன்னும் மறக்கவில்லை. அவற்றை மறக்கவும் முடியாது. சிலவேளைகளில் கனவில்கூட நான் அப்பாவிடம் நீதி கேட்பதாகவும் அவரை அடிப்பதாகவும் கண்டிருக்கிறேன். இது சிலவேளை எனக்குள் அடங்கியிருந்த ஆத்திரங்களின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். ஆனாலும் அந்தக் கனவிலும் ஒரு திருப்தி.

 

நான் பழசை நினைத்து வருந்தியதில்லை. ஒரே வருத்தம் தான் செய்த தவறுகளையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமலேயே அந்த மனிதன் இறந்துவிட்டார் என்பதுதான்.

 

என்னுடன் நெருங்கிப் பழகும் எவருடனும் எனது உள்ளக்கிடக்கையை பகிர்ந்துகொள்ள நான் பின்னின்றதில்லை. நேற்று அஞ்சரன் எழுதிய அப்பாக்கள் தினக் கவிதையில் எனது கண்ணோட்டத்தையும் எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டு ஒரு யாழ்க்கள உறவு தனது கதையையும் ஒப்பிட்டு எழுதி என்னை எழுதும்படி ஊக்குவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், எனது அனுபவத்தை யாழில் எழுதலாமா என்று பல நாட்களாக யோசித்து வந்தேன். நேற்றைய நிகழ்வு என்னை எழுதத் தூண்டியது. 

 

இது சிலரைப் பாதித்திருக்கலாம். அதற்காக வருந்துகிறேன்.

நன்றி ரகுபகிர்விற்கு. மனதை மிகவும் கனக்க செய்தது.

நானும் உங்களை போல்தான், அப்பா இருந்தும் எவ்வித பிரயோசனமும் இல்லை. வேலைக்கு போகவே மாட்டார். குடி, சூது, மாது இவற்றில் தான் ஆர்வம். குடித்துவிட்டு வந்து அம்மாவை தினமும் அடிப்பதே அவருடைய வேலை. நானும் இரு தங்கைகளும் மிகவும் கஷ்டப்பட்டோம். அம்மம்மா வீட்டில்தான் வளர்ந்தோம். அம்மா இடியாப்பம், இட்லி போன்ற உணவுகள் செய்து விற்று எங்கள் மூவரையும் படிக்கவைத்தார்.

கொடிது, கொடிது இளமையில் வறுமை!!!!

நான் ஐந்து வயாதாக இருக்கும் போது அம்மா ஒருமுறை என் கண் முன் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது 37 வருடங்கள் கழித்தும் இன்னும் மறக்க முடியாமல் இருக்கின்றது.

இதனாலோ தெரியவில்லை நான் சில தாழ்வு மனப்பான்மையையும் என்னுள் இன்னும் வைத்துள்ளேன்.

அப்பா இன்னும் உயிரோடு (70 வயது) இருக்கின்றார், அவர் மீது எனக்கு அன்பில்லை. ஆனாலும் வெறுக்கவில்லை. 5 வயது மகளுக்கு நல்ல ஒரு தந்தையாக இருக்கிறேன். எனக்கு கிடைக்காத சந்தோஷங்கள் என் மகளாவது அனுபவிக்கட்டும்.

 

நன்றி கொழும்பான்,

 

உங்கள் கதையும் வருத்தமாக இருக்கிறது. இப்போது எப்படி ? மகிழ்ச்சியாக இருப்பீர்கள், இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். வேறு எதைச் சொல்லமுடியும் என்னால் ? உங்கள் அம்மா நலமா?? உங்களின் நண்பன் ஒருவன் கேட்டதாகக் கூறுங்கள்.

 

மீண்டும் உங்கள் கருத்திற்கு நன்றி !

என்னாலும் இதுக்கு லைக் போடமுடியவில்லை ரகு......இதற்கு என்ன பதில் எழுதுவது என்றும் தெரியவில்லை....

 

 

விடுங்கள் அண்ணா,

 

நான் கவலைப்படுவதில்லை. நீங்கள் வருத்தப்படவேண்டாம்.

 

இப்படியெல்லாம் நடந்ததே நண்மைக்குத்தான் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் இந்த அனுபவங்கள் எல்லாம் எனக்குக் கிடத்திருக்குமா? நிச்சயமாக இல்லை. 

 

ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம், ஒரு தகப்பனாக நான் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதை எனது அப்பா சொல்லிவிட்டுச் சென்றிருப்பதாகத்தான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

ஒரு தந்தை தனது சொந்த இரத்தத்தை இவ்வாறு நடத்துவாரா என்று சிந்திக்க வைத்தது. ஆண் விலங்குகளே தமது சொந்த குட்டிகளில் வாய் வைக்காது என்று ஒரு ஆவணப்படத்தில் காண்பித்தார்கள். உங்கள் தந்தைக்கு ஏதாவது மனவியல் பிரச்சினை இருந்திருக்கலாம்.

எது எப்படியாகினும், எல்லாவற்றிலும் இருந்து நீங்கள் மீண்டு வந்தது மன ஆறுதலைத் தந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி கொழும்பான்,

 

உங்கள் கதையும் வருத்தமாக இருக்கிறது. இப்போது எப்படி ? மகிழ்ச்சியாக இருப்பீர்கள், இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். வேறு எதைச் சொல்லமுடியும் என்னால் ? உங்கள் அம்மா நலமா?? உங்களின் நண்பன் ஒருவன் கேட்டதாகக் கூறுங்கள்.

 

மீண்டும் உங்கள் கருத்திற்கு நன்றி !

 

 

அம்மா இறந்து 12 வருடங்கள் ஆகி விட்டது. இரத்த அழுத்த நோயினால் மேலும் அதிக உதிரப்போக்கினால் 49 வயதில் இறந்து விட்டார்கள் (2002 இல்).

எனக்கும் இப்பொழுது பளட் ப்ரஷர்,தினமும் குளிசை எடுக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி கொழும்பான்,

 

உங்கள் கதையும் வருத்தமாக இருக்கிறது. இப்போது எப்படி ? மகிழ்ச்சியாக இருப்பீர்கள், இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். வேறு எதைச் சொல்லமுடியும் என்னால் ? உங்கள் அம்மா நலமா?? உங்களின் நண்பன் ஒருவன் கேட்டதாகக் கூறுங்கள்.

 

மீண்டும் உங்கள் கருத்திற்கு நன்றி !

 

 

அம்மா இறந்து 12 வருடங்கள் ஆகி விட்டது. இரத்த அழுத்த நோயினால் மேலும் அதிக உதிரப்போக்கினால் 49 வயதில் இறந்து விட்டார்கள் (2002 இல்).

எனக்கும் இப்பொழுது பளட் ப்ரஷர்,தினமும் குளிசை எடுக்கிறேன்

 

 

எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாழ்வை  எம்முடன் பகிர்ந்ததற்கு  நன்றி  ரகு

இப்படியொரு வாழ்வை  நான் வாசிப்பது

கேள்விப்படுவது இதுவே முதல்முறை

எனது கண்ணீரை  கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை

 

எனது தகப்பனாரும் ஒரு பெரும்   குடிகாரர்தான்

அம்மாவை  அடிப்பவர் தான்

ஆனால் விடிய  எழும்பும் போதும்

வெறி முறிந்தபின்பும்

அப்படி ஒரு அப்பனையோ

அப்படி  ஒரு கணவனையோ  வேறு எங்கும் பார்க்கமுடியாது

அந்தளவுக்கு பாசமாக இருப்பார்

தான் அடித்த அடிகளுக்கு பின்னேரம்  தானே எண்ணெய்   பூசுவார் அம்மாவுக்கு..

இப்பொழுது கூட நான் பகிடியாக சொல்வதுண்டு  அம்மாவிடம்

உனக்கு என்ர அப்பர் தான் சரி

இருந்தா அடி

நின்றா அடி என

அதற்கு அம்மா சொல்வார்

அவர் சும்மா தடவியதை

இவர்கள் அடித்ததென்று கதை கட்டுகிறார்கள் என்று.

அம்மாவை அப்பர் அடிப்பதை

நான் எனது 16 வயதில் நிறுத்தினேன்

அது பற்றி  பின்னர் ஒருமுறை  எழுதலாம்..

 

உங்களது மனதிலுள்ள  பாரங்கள்

கொடுமையான நினைவுகள் அழிந்து

நிம்மதியாக வாழ இறைவனை  வேண்டுகின்றேன்

வாழ்க  வளமுடன்...

 

 

எங்களையெல்லாம் கொடுமைப்ப்டுத்திய அந்த அப்பா என்கிற மிருகம், எந்தவித சிரமும் இல்லாமல் ஒரு மாலைப் பொழுதில் வீட்டின் கொல்லையில். தென்னைமர நிழலில் பத்திரிக்கை படித்துக்கொண்டிருக்கும்போது மாரடைப்பால் இறந்ததாகப் பின்னர் கேள்விப்பட்டேன். 

 

மற்றவனுக்காக பாடுபட்டவனெல்லாம் இறுதியில் வருத்தம் வந்து, கஷ்ட்டப்பட்டுச் சாக, எவருக்கும் உதவாத, சொந்தப் பிள்ளைகளையே கொடுமமைப் படுத்திய ஒருவர் இவ்வளவு இலகுவாகச் செத்தது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 

 

 

அழுந்திச்செத்திருக்கணும்............ :( 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  உறவுகளை ..உங்கள் நட்பு களாக   கருதி ..சோகத்தை பகிர்ந்துகொண்ட உங்களுக்கு என் நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப் படாதீர்கள்  நன்பரே !அந்தத் துன்பமெல்லாம் தாண்டி  ஒரு நிலைமைக்கு வந்து விட்டீர்கள் .

 

நோயிற் தொடராமல், நொந்துமனம் வாடாமல், பாயிற் கிடவாமல்... ஒரு மனிதன் இறக்க வேண்டும் என்றால் அதற்கு நிறையப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அது உங்கள் அப்பாவிடம் இருந்துள்ளது. இப்ப அது ஒரு ஆத்மா. நீங்கள் மனம் நோக வேண்டாம். அனேகமாய் இறக்கும் அந்தத் தருணங்களில் உங்களுக்குத் தந்த அந்த வேதனைகளை நினைத்து மனம் வருந்தியிருக்கலாம்....!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பக்கம் வந்தேன் என்பதற்கு அடையாளமாக பச்சை குத்தி உள்ளேன்.என்னைப் பொறுத்த மட்டில் இப்படியான மனிதர்கள் தேடுவார் இல்லாமல் கிடந்து சாகனும்...எல்லாமனிர்களுக்கும் ஒவ்வொரு விதத்தில் பிரச்சனைகள் வருவதும்,தொடர்வதும் இயல்பு..ஆரம்பத்திலயே அவரது நோய்க்கு மருந்து கொடுத்து அடிச்சு கலைச்சு இருக்கனும்.வேலைக்கு போகும் பெண் தன் பிள்ளைகளை தானே காப்பாற்றி இருக்கலாம்.அதற்கு உரிய சாத்தியக் கூறுகள் இருந்தும் அதனை தவற விடுபவர்களை என்னவென்று சொல்வது..  உண்மையாக சொல்கிறன் வீடு வாசலில் இருக்க இருப்புக் கொள்ளாதவர்களை,வெறுப்புக்களை கொட்டி தீர்ப்பவர்களை எனக்கு அறவே பிடிப்பதில்லை.

 

Link to comment
Share on other sites

உங்களைப் போலவே என்னுடைய‌ இரண்டு நன்பர்களின் கதையும் உள்ளது. ஒருவனின் தாய் தலைவரின் மனைவியின் நெருங்கிய உறவினர்.
 
நீங்கள் ஏற்கனவே சொல்லியது போல் ஒரு நல்ல தகப்பனாக இருப்பதற்கான படிப்பினையே இது. உங்கள் மகள் கொடுத்து வைத்தவள்.
 
 
முடிந்த வற்றை படிப்பினையாக‌ எடுப்போம் ரகுநாதன். அப்பாவிடம் பெற முடியாத‌ அன்பை பிள்ளைகளிடம் பெறுங்கள்.
Link to comment
Share on other sites

முதலில் உங்கள் அனுபவத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் ரகு அண்ணா.

நான் இப்படியான விடயங்கள் படத்தில் தான் பார்த்துள்ளேன் ....அப்போது இயக்குனர்களை நொந்தும் உள்ளேன்.

இப்படியெல்லாம் நடைமுறையில் நடக்கமுடியுமா? எதற்காக இப்படி மற்றவர்களின் மனதை கஸ்டப்படுத்தும் விதமாக படம் எடுக்கின்றார்கள் என்று. ஆனால் ..................

முதல் முறையாக இப்படி ஒரு கொடுமை உண்மையிலேயே நடந்ததை அறிந்த போது மனம் மிகவும் வலித்தது :( . இப்படியும் ஒரு அப்பா இருப்பாரா? தன் பிள்ளைகள் என்றும் பார்க்காமல் இப்படி நடாத்துவாரா? ஏற்றுக்கொள்ளவே கஸ்டமாக இருந்தது.  மனதால் பாதிக்கப்பட்டு இருப்பாராக இருந்திருந்தால் வேலைக்கு ஒழுங்காக போய் வந்திருக்கமாட்டார்....எனவே அப்படி முற்று முழுதாக மனத்தாக்கத்தால் தான் இப்படி இருந்திருப்பார் என்று சமாதானமாகவும் முடியல.

இப்படியானவருக்கு கஸ்டமில்லாத இறப்பு வேறு :wub:

இவ்வளவு கஸ்டங்களுக்குள்ளும் நீங்கள் படிப்பை தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறியது உண்மையிலேயே பெருமைக்குரியவிடயம். தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறி சிறப்பாக உங்கள் குடும்பத்துடன் நலமே வாழ வாழ்த்துக்கள் அண்ணா!!

 

Link to comment
Share on other sites

சினிமாக்களிலும் கதைகளிலும் இப்படியான அப்பாக்களை காட்டும் போது அவை யதார்த்ததுக்கு முரணான வகையில் காட்டப்படுகின்றன என்று சொல்லி வெறுப்புடன் விமர்சித்து இருக்கின்றேன்.

 

ஆனால் நண்பா,  உனக்கு அப்படியொரு அப்பா  கிடைத்து இருக்கின்றார் என அறியும் போது மிகவும் வேதனையாக இருக்கு. முதலாம் பதிவை நேற்று இரவு வாசித்து விட்டு மனம் அதிர என்னத்தை எழுதுவது என்று புரியாமல் படுக்கப் போய் விட்டேன். இன்று மிகுதியையையும் வாசிக்க மிகவும் கவலையாக இருக்கின்றது

 

அதே நேரத்தில் இப்படி ஒரு சிறு வயது வாழ்க்கையையும் தாண்டி இன்று நீங்கள் சிறப்பாக இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு. உங்கள் பிள்ளைகள் ஒரு நல்ல அப்பாவைப் பெற நீங்கள் பலவற்றை இழந்து இருக்கின்றீர்கள்.

 

இந்த பதிவை எழுதி முடித்த பின் உங்கள் மனம் மிகவும் இலேசாக ஆகியிருக்கும் என்று நம்புகின்றேன். அநேகமாக இனி அப்பா கனவில் வரமாட்டார் என்று நினைக்கின்றேன்.

 

இதை முழுமையாக வாசித்தவுடன் ஓடிப்போய் என் பிள்ளைகளை கட்டிப் பிடிக்க வேண்டும் போல இருக்கு. இன்று எப்ப வேலை முடிந்து வீட்டுக்கு செல்வேன் என்று இருக்கு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாக்களிலும் கதைகளிலும் இப்படியான அப்பாக்களை காட்டும் போது அவை யதார்த்ததுக்கு முரணான வகையில் காட்டப்படுகின்றன என்று சொல்லி வெறுப்புடன் விமர்சித்து இருக்கின்றேன்.

 

ஆனால் நண்பா,  உனக்கு அப்படியொரு அப்பா  கிடைத்து இருக்கின்றார் என அறியும் போது மிகவும் வேதனையாக இருக்கு. முதலாம் பதிவை நேற்று இரவு வாசித்து விட்டு மனம் அதிர என்னத்தை எழுதுவது என்று புரியாமல் படுக்கப் போய் விட்டேன். இன்று மிகுதியையையும் வாசிக்க மிகவும் கவலையாக இருக்கின்றது

 

அதே நேரத்தில் இப்படி ஒரு சிறு வயது வாழ்க்கையையும் தாண்டி இன்று நீங்கள் சிறப்பாக இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு. உங்கள் பிள்ளைகள் ஒரு நல்ல அப்பாவைப் பெற நீங்கள் பலவற்றை இழந்து இருக்கின்றீர்கள்.

 

இந்த பதிவை எழுதி முடித்த பின் உங்கள் மனம் மிகவும் இலேசாக ஆகியிருக்கும் என்று நம்புகின்றேன். அநேகமாக இனி அப்பா கனவில் வரமாட்டார் என்று நினைக்கின்றேன்.

 

இதை முழுமையாக வாசித்தவுடன் ஓடிப்போய் என் பிள்ளைகளை கட்டிப் பிடிக்க வேண்டும் போல இருக்கு. இன்று எப்ப வேலை முடிந்து வீட்டுக்கு செல்வேன் என்று இருக்கு.

 

 

உண்மைதான் நிழலி,

 

மனது இலேசாக இப்போது இருக்கிறது. நான் இதை எழுதுவேன் என்று நினைத்திருக்கவில்லை. ஆனால் ஏதோவொன்று என்னை நேற்று எழுதத் தூண்டியது. 

 

என்னுடன் மிக நெருக்கமானவர்களுக்கு நான் இதைச் சொல்லியிருக்கிறேன். மற்றும்படி வேறு எவர்க்கும் தெரியாது. இப்போது உங்களுக்கு. 

 

எனது பிள்ளைகள் இரண்டையும் நேற்றிலிருந்து வித்தியாசமாகப் பார்ப்பதாக உணர்கிறேன். அவர்கள்மேலான அன்பு எப்போதும் மாறப்போவதில்லை. ஆனால், அவர்களிடத்தில் என்னை வைத்துப் பார்ப்பது புதியதாக இருந்தது எனக்கு. நான் செய்யும் ஒவ்வொரு செயலும் எந்த விதத்திலும் எனது அப்பாவை மாதிரி இருக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறேன்.

 

உங்களின் கரிசனைக்கு எனது நன்றிகள்.

முதலில் உங்கள் அனுபவத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் ரகு அண்ணா.

நான் இப்படியான விடயங்கள் படத்தில் தான் பார்த்துள்ளேன் ....அப்போது இயக்குனர்களை நொந்தும் உள்ளேன்.

இப்படியெல்லாம் நடைமுறையில் நடக்கமுடியுமா? எதற்காக இப்படி மற்றவர்களின் மனதை கஸ்டப்படுத்தும் விதமாக படம் எடுக்கின்றார்கள் என்று. ஆனால் ..................

முதல் முறையாக இப்படி ஒரு கொடுமை உண்மையிலேயே நடந்ததை அறிந்த போது மனம் மிகவும் வலித்தது :( . இப்படியும் ஒரு அப்பா இருப்பாரா? தன் பிள்ளைகள் என்றும் பார்க்காமல் இப்படி நடாத்துவாரா? ஏற்றுக்கொள்ளவே கஸ்டமாக இருந்தது.  மனதால் பாதிக்கப்பட்டு இருப்பாராக இருந்திருந்தால் வேலைக்கு ஒழுங்காக போய் வந்திருக்கமாட்டார்....எனவே அப்படி முற்று முழுதாக மனத்தாக்கத்தால் தான் இப்படி இருந்திருப்பார் என்று சமாதானமாகவும் முடியல.

இப்படியானவருக்கு கஸ்டமில்லாத இறப்பு வேறு :wub:

இவ்வளவு கஸ்டங்களுக்குள்ளும் நீங்கள் படிப்பை தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறியது உண்மையிலேயே பெருமைக்குரியவிடயம். தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறி சிறப்பாக உங்கள் குடும்பத்துடன் நலமே வாழ வாழ்த்துக்கள் அண்ணா!!

 

 

 

நன்றி தமிழினி,

 

ஆகா ஓகோ என்றில்லாவிட்டாலும், குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்கிறேன். பிள்ளைகளின் மகிழ்ச்சியே எனக்கு முக்கியமானதாக இருக்கிறது. எனது பிள்ளைகளிடத்தில் எனது சிறுபராயம் பற்றிச் சொல்லியிருக்கிறேன். மூத்தவளுக்கு எனது சோகம் தெரியும். இளையவளுக்கு புரியும் வயது இன்னும் வரவில்லை.

 

உங்களைப் போலவே என்னுடைய‌ இரண்டு நன்பர்களின் கதையும் உள்ளது. ஒருவனின் தாய் தலைவரின் மனைவியின் நெருங்கிய உறவினர்.
 
நீங்கள் ஏற்கனவே சொல்லியது போல் ஒரு நல்ல தகப்பனாக இருப்பதற்கான படிப்பினையே இது. உங்கள் மகள் கொடுத்து வைத்தவள்.
 
 
முடிந்த வற்றை படிப்பினையாக‌ எடுப்போம் ரகுநாதன். அப்பாவிடம் பெற முடியாத‌ அன்பை பிள்ளைகளிடம் பெறுங்கள்.

 

 

 

நிச்சயமாக ஈசன்,

 

எங்களிருவருக்கும் பிள்ளைகள் தான் எல்லாம். அவர்களின் மகிழ்ச்சியே எங்களுக்கு முக்கியமானது.

இந்தப் பக்கம் வந்தேன் என்பதற்கு அடையாளமாக பச்சை குத்தி உள்ளேன்.என்னைப் பொறுத்த மட்டில் இப்படியான மனிதர்கள் தேடுவார் இல்லாமல் கிடந்து சாகனும்...எல்லாமனிர்களுக்கும் ஒவ்வொரு விதத்தில் பிரச்சனைகள் வருவதும்,தொடர்வதும் இயல்பு..ஆரம்பத்திலயே அவரது நோய்க்கு மருந்து கொடுத்து அடிச்சு கலைச்சு இருக்கனும்.வேலைக்கு போகும் பெண் தன் பிள்ளைகளை தானே காப்பாற்றி இருக்கலாம்.அதற்கு உரிய சாத்தியக் கூறுகள் இருந்தும் அதனை தவற விடுபவர்களை என்னவென்று சொல்வது..  உண்மையாக சொல்கிறன் வீடு வாசலில் இருக்க இருப்புக் கொள்ளாதவர்களை,வெறுப்புக்களை கொட்டி தீர்ப்பவர்களை எனக்கு அறவே பிடிப்பதில்லை.

 

 

இப்படிப் பலர் இருக்கிறார்கள் யாயினி. சொந்தப் பிள்ளைகளை பிள்ளைகள் போல் நடத்துவது அவ்வளவு கஷ்ட்டமா மனிதருக்கு ? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.