Jump to content

ஈழத்துச் சித்தர்கள் பகுதி 09 ( சடைவரத சுவாமிகள் )


Recommended Posts

சுவாமிகள் அச்சுவேலியைப் பிறப்பிடாகக் கொண்டவர்கள். அச்சுவேலியிலே சலவைத்தொழிலாளர் வம்சத்திலே சுப்பையா என்றொரு உத்தமர் இருந்தார். நல்ல கடவுட் பக்தர். அடியார் பக்தியிலும் சிறந்து விளங்கியவர். இவருக்கு ஒரு உத்தம புத்திரன், சரவணை எனப்பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தார். சரவணை இளமையிலேயே வசீகரமான தோற்றம் உடையவர்.

சரவணையின் வசீகரத்தோற்றம் நீராவியடியைச்சேர்ந்த வேளான் வகுப்பு அம்மையார் ஒருவருடைய மனதைக்கவர்ந்தது. சரவணைக் குழந்தையை வளர்க்க ஆசை கொண்டார். சுப்பையாவிடம் தன் கருத்தை அம்மையார் தெரிவித்தார். தனது மகன் ஒரு செல்வந்தர் வீட்டில் வாழ்வதை சுப்பையாவும் விரும்பினார். அதனால் சரவணைக்கு எக்குறையும் தெரியாது வாழும் வாழ்க்கை வசதி இறையருளால் கிட்டியது. இந்தச் சரவணைக் குழந்தை வளர்ந்து வரும் வீட்டிற்கு அயலிலேதான் கடையிற் சாமியாரின் சிஷ்யர் ஒருவருடைய வீடு இருந்தது. ஒருமுறை கடையிற் சுவாமிகள் அவ்வீட்டிற்கு வந்தபோது ஒன்பது தினங்கள் சுகவீனமாகப் படுக்கையிலே இருக்க நேர்ந்தது. அப்போ சரவணை எட்டுவயதுப் பாலகனாக இருந்தார். கடையிற் சுவாமியார் மீது அவ்வூர்க் குழந்தைகளுக்கெல்லாம் ஒரு தனிப்பிரியம். சுவாமிகளுக்கும் குழந்தைகள் மீது ஒரு அலாதியான வேட்கை. சுவாமிகள் சுகவீனமாக படுத்திருக்கின்றார் என்பதைக்கேள்வியுற்ற குழந்தைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சுவாமிகளைத் தரிசிக்க சென்றார்கள். அக்கூட்டத்திலே சரவணையும் சென்றார். சுகவீனமாகப் படுத்திருந்த சுவாமிகளை நெருங்கக் குழந்தைகள் அஞ்சினார்கள். ஆனால் சரவணை மட்டும் மலர்ந்த முகத்தோடு சுவாமிகளை அணுகி தொட்டுப்பார்த்தார். உடனே சுவாமிகள் படுக்கையை விட்டு எழுந்து அனந்தக் கூத்தாடி அவரைத் தனியாக அழைத்துச்சென்று கட்டிப்பிடித்துக் கொஞ்சித் தமது தலையிற் கிடந்த தொப்பியொன்றைக் கழற்றி சரவiணியன் தலையில் சூட்டி மகிழ்ந்தார்கள்.

வேளான் அம்மையாருக்கு குழந்தைமேல் அன்பிருந்தாலும் சாதி அபிமானம் முற்றாக அவரைவிட்டு நீங்கியதாகத் தெரியவில்லை. இது பழக்கதோஷம். அவ்வம்மையார் தான் திண்ணையிலும் சரவணையை வீட்டு நடையிலும் படுக்க விடுவது வழக்கம். ஒருநாள் அம்மையார் ஒரு கனவு கண்டார். ஒரு சந்நியாசியார் வந்து, நீ இச்சரவணையை யாரென்று நினைத்தாய்? இவன் எனது அடியவனல்லவா? இவன் பண்டாரப்பிள்ளை எனச் சொல்லி மறைந்தார். அன்று தொடக்கம் அம்மையார் சரவணையை தனக்குப் பக்கத்தில் திண்ணையில் படுக்க விடுவது வழக்கம். அன்று தொடக்கம் சரவணக் குழந்தை அம்மையாருக்கு சோதிசொரூபமாகவே காட்சி தந்தார்.

தீவுப்பகுதியை சேர்ந்தவர் முருகேசுச்சாமியார். அவர் நீண்டகாலம் கொடிகாமத்தை இருப்பிடமாக கொண்டவர். இவருக்கு ஒரு சிஷ்யை இருந்தார். அவரின் பெயர் பொன்னம்மாள் என்பது. இச்சரவணையும் பிற்காலத்தில் முருகேசு சுவாமியுடனேயே வெகுகாலம் இருந்து அவரிடம் உபதேசம் பெற்றவர். எல்லோருக்கும் குரு ஒருவர் அத்தியாவசியமானவர். குருவின் கருணையில்லாவிட்டால் யாருக்கும் முக்தியில்லை.

முருகேசு சாமியிடம் சரவணை உபதேசம் பெற்றதும், சடைவரதர் என்ற தீட்சாநாமம் சரவணைக்கு கிடைத்ததது. ஊரிலுள்ளவர்கள் சரவணை சாமி என்று அழைத்தார்களே தவிர சடைவரதர் என்ற பெயர் அவர்களுடைய வாயினுள்ளே நுழையவில்லை.

சுவாமிகள் யுவவருடம் ஆடிமாசத்து உத்தர நட்சத்திரத்திலே மகாசமாதி அடைந்தார். ‘எல்லாந் திருவருட் செயல்’ என்ற கொள்கையே எக்காலமும் எக்காரியத்திலும் எப்பொழுதும் எல்லோரும் கடைப்பிடித்தொழுகி அருளால் அனைத்தையும் பார்க்கும் அனுபவத்தை அடைந்துய்ய வேண்டும் என்பதே சுவாமிகளுடைய முக்கிய குறிக்கோளாகும். அகத்துறவையும், தன்னையறிந்து தலைவன்மேல் பற்றுதலையுமே அவர் பெரிதும் போற்றி புகட்டினார்.

அந்தக் காலத்திலே பல கோயில்களில் ஆடு கோழிகளை பலியிடுதல் ஒரு மரபாக இருந்து வந்தது. அவற்றுள் கச்சேரியடியில் இருந்த கோயிலும் ஒன்றாகும். சுவாமிகளுடைய பெருமுயற்சியினால் அக்கோயிலில் பலிநிறுத்தம் ஏற்பட்டதோடு வேறும் பல கோயில்களின் பலிநிறுத்தத்திற்கும் இச்செய்தி காரணமாக இருந்தது.

பூமாரி என்ற பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். அவர் சுவாமிகளை பற்றியும் அவர்களின் சீடர்களை பற்றியும் சடைவரத சுவாமிகளின் திருவடியார் திருநாமாவளி என்ற தலையங்கத்துடன் ‘அம்பலத்தரசே’ என்ற மெட்டில் பாடல் ஒன்று எழுதியிருந்தார்.

http://www.thejaffna.com/jaffna/eminence/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.