Jump to content

பேருந்தில் ஒரு மிருகம்! வேடிக்கைப் பார்த்த மௌனம்!!


Recommended Posts

%E0%AE%88%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.jpg

பேருந்தில் ஒரு மிருகம்! வேடிக்கைப் பார்த்த மௌனம்!!

சென்னையிலதான் வாழணும்னு ஆனதக்கு பிறகு நிறையவே என்ன மாத்திக்கிட்டேன். ஆரம்பத்துல எங்க பாத்தாலும் அலமோதுர கூட்டத்தப் பாத்து கொஞ்சம் பயமா இருக்கும். ஷேர் ஆட்டோவுல, பஸ்ஸூல, கடையிலன்னு கூட்டம் இல்லாத இடமே இல்ல. ரோட்டுல ஓய்வில்லாம ஓடும் வண்டிங்கள பாத்தும் நிறைய பயந்திருக்கிறேன்.

என்னோட கிராமத்துல நூறடி நடத்தாக் கூட பத்துப்பதினைஞ்சு பேர் விசாரிப்பாங்க, தனியா இருக்கோம்கிற உணர்வே அங்க இல்லை. ஆனா இவ்வளவு கூட்டத்தோட இருந்தும் அது என்னமோ எப்பவும் தனியாக இருக்கிற மாதிரியே தோணுது. ஒரு பெண்ணா இருக்கிறதால இந்த பயம், அதுவே சென்னைங்கிறதுனாலே இன்னும் அதிகமா இருக்கு.

அன்னைக்கு பாத்து கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்துச்சு. அதுல மறைக்கிறதுக்கு என்ன இருக்கு. அந்த சரியில்லாமங்கிறதை பீரியட்ஸ்ன்னு வெளிப்படையா சொல்லுறேன். ஊருல இருக்கும்போது இந்த நாட்கள்ள எங்கேயும் வெளியே போகமாட்டோம். சென்னைக்கு வந்ததும் அதெல்லாம் மாறிப்போச்சு. அவசரமா ஒரு உறவினர் வீட்டுக்குப் போக வேண்டியிருந்துச்சு. சரின்னு கிளம்பினேன்.

கூட்டம் இருக்காதுன்னு நினைச்சு நடுப்பகல்ல பேருந்து ஏறுனேன். ஆனாலும் இப்பல்லாம் சென்னையில்ல கூட்டம் இல்லாத நேரம், இடம்ணு எதுவுமில்ல. பஸ்ஸூல பெண்கள் சைடுல உட்கார இடம் கிடைக்கல. வயிறு வேற வலிச்சிது. அப்ப ஆண்கள் பக்கம் ஒரு சீட்டு காலியாச்சு. என்னோட நிலையை புரிஞ்ச மாதிரி ஒரு தங்கச்சி “வாங்கக்கா அங்க உக்காருங்க”ன்னு அழைச்சாள். அதுக்குள்ள அந்த இடத்துல உக்கார ஒருத்தரு வந்தாரு. நாங்க வரதைப் பாத்த ஒரு பெரியவர் அவரை நிறுத்தி எங்களை உட்கார வைச்சார்.

நன்றியோட அவரைப் பாத்தேன். அவருக்கு ஒரு அறுபது வயசு இருக்கும். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்டு கையில் ஒரு பையுடன் அமைதியா இருந்தார். ஆளும் நல்ல செவப்பா இருந்தார். அவர் மட்டும் கொஞ்சம் கருப்பா இருந்தா எங்க பெரியப்பா மாதிரிதான்னும் சொல்லலாம். ஊரில் பெரியப்பாதான் என்னை தூக்கி வளத்து சீராட்டுனவர். அவரோட நினைவுகள்ள மூழ்க ஆரம்பிச்சேன். வயித்து வலியும் கொஞ்சம் கொறைஞ்ச மாதிரி தோணிச்சி.

உச்சி வெயில்ல பேருந்து கொஞ்சம் வேகமாக போன மாதிரி இருந்துச்சு. வெக்கை காரணமா உள்ளே ரொம்பவே அமைதியா இருந்துச்சு. தீடீர்னு என்னோட நினைவை நிறுத்தர மாதிரி உக்காந்திருந்த தோள் பக்கம் என்னமோ உரசிச்சு. அது அந்த பெரியவரோட கைன்னு நினைச்சுட்டு மறந்திட்டேன். பிறகு அந்த உரசல் அதிகமாவும், கொஞ்சம் மூர்க்கமாவும் இருந்துச்சு. தீடீர்னு திரும்பி தோள்பக்கம் பார்த்தேன்.

பக்கத்துல நின்னுகிட்டு இருந்த அந்த பெரியவர் வேட்டியை விலக்கிவிட்டு ஆண்குறியோட உரசுறதைப் பாத்தேன். ஜட்டி கூட போடாமல் அவ்வளவாக கூட்டமில்லாத இடத்தில் கூட இப்படி ஒரு கொடுமையான்னு உடைஞ்சு போனேன். ஆத்திரம், அருவெறுப்பு, கோபம் எல்லாம் கலந்து என்னை நிலைகுலைய வைச்சுது.

நான் ஒரு கிராமத்து பெண்ணா மட்டும் இருந்திருந்தா இதை எப்படி எதிர் கொண்டிருப்பேன்னு சொல்லத் தெரியல. ஆனா நானும் இப்ப ஒரு தோழர். இதே பேருந்துகள்ள புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் எல்லாம் பேசி வித்திருக்கேன். அப்பயும் சில பொறுக்கிகள் பார்வையாலும், நக்கலாலும் சீண்டுவாங்க. ஆரம்பத்தில பயம் இருந்துச்சு, பின்னாடி நானே அவங்களை எதிர்த்து சண்டை போடுவேன். ஆனா அது ரொம்பக் கம்மிதான். பொதுவா பேருந்து விற்பனையில மக்கள் நம்மள ரொம்ப மரியாதையாத்தான் நடத்துவாங்க. அந்த வேலையே எனக்கு ரொம்ப தன்னம்பிக்கையை கொடுத்துச்சுன்னு சொல்லலாம்.

அந்த அனுவபத்தாலோ என்னமோ நானும் எழுந்து அந்தக் கிழட்டு மிருகத்தை திட்டியவாறு சண்டை போட்டேன். “கம்னாட்டி நாயே, என்னடா பண்ணுற, அப்பா மாதிரி இருந்துட்டு பொறுக்கித்தனம் பண்ணுற, செருப்பால அடிப்பேன்டா நாயே” என்றவாறு ஆத்திரம் தீரும் மட்டும் பேசுனேன்.

அவனோ ஏதும் பேசாம வேட்டியை சரி செஞ்சுட்டு வாசல் பக்கமா போயிட்டான். கூடியிருந்த மக்கள் கிட்ட நியாயத்த கேட்டேன். கூட இருந்த அந்த தங்கச்சி மட்டும் விடுங்கக்கான்னு சமாதானப்படுத்தினாள். ஆனா வேறுயாரும் இதை கண்டுக்கவே இல்ல. நடத்துநர், ஆண்கள், ஏன் பெண்களும் கூட ஏதோ ஒரு சகிப்புத் தன்மையில அமைதியாவே இருந்தாங்க!

இதுக்குள்ள அடுத்த ஸ்டாப்புல அந்த பொறுக்கி இறங்கி போயிட்டான். அதற்கடுத்த ஸ்டாப்புல நானும் இறங்கினேன். அன்றைய பொழுது இப்படி முடிஞ்சிது.

தோழருங்ககிட்ட இத சொன்ன போது சண்டை போட்டதுக்கு வாழ்த்து தெரிவிச்சவங்க, அந்த பொறுக்கியை ஏன் அடிக்கலைன்னு கேட்டாங்க? அவன் வயசும், அதிலயும் என் பெரியப்பா மாதிரி இருந்ததினாலோ என்னவோ எனக்கு கை நீளவில்லை. கூடவே கொஞ்சம் பயமும் இருந்துச்சுங்கிறதும் உண்மைதான்.

தோழருங்க இத எழுதி அனுப்பச் சொன்னபோதும் ஒரு தயக்கம் இருந்துச்சு. எல்லா ஆம்பளங்களும் பொறுக்கி இல்லேன்னாலும், எல்லா பொம்பளங்களும் எதோ ஒரு விதத்துல இந்த பொறுக்கித்தனத்த அனுபவிச்சவங்களாவே இருப்பாங்க. நானே என் வாழ்க்கையில இத வேறு வேறு சந்தர்ப்பங்களில பாத்திருக்கேன். ஆரம்பத்தில இருந்த அதிர்ச்சி பிறகு இதெல்லாம் அவ்வப்போது எதிர் கொள்ளணும்னு உள்ளுக்குள்ள பழகிப் போச்சு. ஆனா இதுக்கு முன்னாடி எப்போதும் நான் சண்டை போட்டதில்ல.

அந்த மிருகம் அப்படி நடந்திச்சுங்கிறதை விட கூடி இருந்த மக்கள் யாரும் எனக்கு ஆதரவா ஏன் வரலைங்கிறதுதான் ஆத்திரமா இருந்துச்சு. பெண்கள் மேல இருக்குற பாலியல் வன்முறைகளை, போகப் போக இதெல்லாம் சகஜம்கிற மனநிலைக்கு சமூகம் வந்திருச்சோ? ஆம்பளங்கள விடுங்க, அந்த பஸ்ஸூல இருந்த ஒரு பொண்ணும் எனக்காக பேசலேங்கிறதுதான் ரொம்ப வருத்தமா இருந்துச்சு!

இனிமே மிருகங்களோட சண்டை போடுறதோட அத வேடிக்கை பாத்து ஒதுங்க நினைக்கிறவங்களோடும் சண்டை போடணும்னு நினைச்சுக்கிட்டேன். சண்டை போட்டதாலயும், அதப்பத்தி நானே பரிசீலிச்சு பாத்ததாலயும், இப்ப உங்க கூட பகிர்ந்துகிட்டதாலயும் அந்தக் கொடுமையை நான் கடந்து வந்துட்டேன். இல்லேன்னா ரொம்ப நாளைக்கு அந்த ஆண்குறி என்னோட கனவுல வந்து அச்சுறுத்திக் கிட்டே இருக்கும்!

என்னோட நிலைமையே இப்புடின்னா சிதம்பரம் பத்மினியெல்லாம் எப்படி கஷ்டப்பட்டு போராடியிருப்பாங்கன்னு நினைச்சு பாக்கிறேன். அப்படி பாத்தா அந்த பஸ்ஸூல அமைதியா இருந்த பெண்கள் கிட்டதான் ரொம்ப சண்டை போட்டிருக்கணும்னு தோணுது!

__________________________________________________

- வேணி.

__________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசயத்தில் என்று இல்லை பொதுவாக எந்த விசயத்திலும் மக்களுக்கு தட்டிக் கேட்க வேண்டும் என்று தோன்றுவதில்லை...என்ன நடந்தாலும் தங்களுக்கு என்ன என்று போற கூட்டம் தான் அதிகம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.