Jump to content

தொன்மச் சோழர்கள்


Recommended Posts

தொன்மச் சோழர்கள்
 
சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர். சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு, வேள்மண்டலம், வேள்தேசம், நாகமண்டலம், பொன்னிமண்டலம், காவிரி நாடு, கிள்ளிமண்டலம், வளவன்மண்டலம் என பல பெயர்களுண்டு. சந்திர மரபினர் ஆண்ட பூமிக்கு பாண்டியர் நாடு, பாண்டிமண்டலம், வையைநாடு என பெயர்களுண்டு. அக்கினி மரபினர் ஆண்ட பூமிக்கு சேரமண்டலம், மலை நாடு, சேரன் நாடு என பெயர்களுண்டு. சோழர் நாடுகளின் ஊர் பெயர்கள் கோட்டை என்றும், பாண்டியர் நாடுகளின் ஊர் பெயர்கள் பட்டி என்றும், சேரன் நாடுகளின் ஊர் பெயர்கள் பாளையம் என்று முடிவடைவதையும் காணலாம். மேலும் சோழமண்டலம் தஞ்சை, கச்சி என்ற கூறையுடையது. பாண்டிமண்டலம் கொற்கை, கூடல் எனும் கூறையும், சேரமண்டலம் கொங்கு, கேரளம் எனும் கூறையும் உடையன.

சந்திர மரபினர் பெயர்கள். 

உசிதன், கவுரியன், கூடற்கோமான், கொற்கைவேந்தன், செழியன், தென்னவன், பஞ்சவன், பாண்டியன், மாறன், மீனவன், வழுதி, வையைத்துறைவன் என்பன.

அக்கினி மரபினர் பெயர்கள். 

உதியன், குடகன், குடக்கோன், கேரளன், கொங்கன், சேரலன், சேரலாதன், மலையமான், முத்தரையன், வஞ்சிவேந்தன், வானவரம்பன், வானவன், வில்லவன், பூலியன், பனந்தாரகன், பொறையன், கொல்லிவெற்பன், குட்டுவன் என்பன

சூரிய மரபினர் பெயர்கள். 

மனு, இக்குவாகு, நல்லுத்தரன், புறஞ்சயன், மாந்தாதா, நாகன், மறையன், இராயன், முசுகுந்தன், வாளமரன், விசலன், நன்னி, ஓரி, காரி, கண்டியன், அம்பன், கள்ளியன், சோழன், மறவசோழன், வில்லியன், நன்னி என்பன 

சூரிய மரபினர்களே பெரும்பான்மையும் சக்கரவர்த்திகளாக இருந்தனர் என்று சுந்தரபாண்டியன், திருக்களர், பத்தூர் முதலாய கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

மனுச்சோழன் (சக்ரவர்த்தி)

சூரிய குலத்தில் தோன்றி ஆரூர் எனும் தேவாரத் திருத்தலத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். நீதி,நேர்மை,நியாயம் தவறாது ஆட்சி செய்தவன். எண்ணிறந்த யாகங்களைச் செய்தவன். பசுவின் கன்றின் மேல் தேரைச் செலுத்திக் கொன்ற தன் மகன் இக்குவாகுவைத் தேர்க்காலிட்டு அரைத்துக் கொன்றவன். சூரிய குலத்தில் தோன்றியமையால் மால்,சூரியன் எனும் பட்டங்களும் மனுகுலம் என்னும் குலப்பெயரும் வழங்கலாயிற்று. (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது) 

வேளிர்.

மனுச்குச் சக்ரவர்த்திக்குப் பின்னும் சோழன் என்னும் அரசனுக்கு முன்னும், மனு மரபில் தோன்றி பெருவேளூர் எனும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்ட வேள் என்னும் அரச மரபினர் வேளிர் எனப்பட்டனர். 

நாகர். 

வேள் மரபில் தோன்றி நாகபட்டினம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்ட நாகன் என்னும் அரச மரபினர் நாகர் எனப்பட்டனர்.

செம்பியன்.

நாகர் பரம்பரையில் தோன்றி புகார்ப்பட்டினம் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன் முசுகுந்தன்.முசுகுந்த அரச மரபில் தோன்றி செம்பியபுரம் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன் சிபி சக்ரவர்த்தி, செம்பியன் என்ற பட்டம் பெற்றான். 

மழவன்.

செம்பியன் மரபில் தோன்றி மழவன்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன் மழவன் என்ற பட்டம் பெற்றான். 

வாணர்.

மழவன் மரபில் தோன்றி வாணாதரையன்பட்டினம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன் வாணன் என்னும் அரசன். இவன் பரம்பரையினர் வாணர் எனப்பட்டனர்.

சோழர் குலம்.

கள்ளர் குலம் உலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஏகாதிபதியாய் பல்லாயிரம் நகரங்களையும், எண்ணிறந்த கோயில்களையும் அளவற்ற ஆறுகளையும் கணக்கற்ற ஊர்களையும் உண்டுபண்ணி வாழையடி வாழை போல் ஆண்டு வந்த ஒரு பூர்வீக குடிகளென்பது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெங்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கலிங்கத்துப்பரணி, பன்னிருதிருமுறை, திருமொழிப்பிரபந்தம் மூலம் அறிய முடிகிறது. ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் கள்ளர். இப் பட்டங்கள் அரசன்,தலைவன்,வீரம், நாடு, நகரம், ஆறு, ஊர், கோயில், குளம், ஏரி முதலியவற்றுடன் சம்பந்தபட்டவை என்பதனை நன்குணரலாம்

சோழ மரபினர்.

சோழ மரபினர் சூரிய குலத்தினர் என்பது சங்கத்துச் சான்றோர் கருத்தாகும். செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் இதையே அறிவிக்கின்றன. இவர்களுடைய கொடியும் இலச்சினையும் புலியுருவம் பொறிக்கப் பெற்றவையாகும். ஆத்தி மாலை சோழ குலத்தின் அடையாள மாலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. சோழ அரசர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய பேருபெற்ற திருவுடைய நகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், பழையறை நகர் என்பன. இவற்றுள் உறையூரும், காவிரிப்பூம்பட்டினமும் சங்ககாலச் சோழருக்கும், தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும் பிற்காலச் சோழருக்கும் தலைநகரங்களாக விளங்கியவை. பழையறை நகர் சோழ அரசர்கள் பல்லவ அரசர்களுக்கு சிற்றரசராயிருந்த காலப்பகுதியில் வாழ்ந்த இடமாகும்.

சோழர்களின் கொடி புலிக்கொடி . சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம்

அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில்

கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் ஆத்தி . 

ஆத்தி. 

ஆத்தி ஒரு சிறிய மரம். சற்று குணக்கும் கோணலுமாக வளரும். இலைகள் இரண்டு சிற்றீலைகள் சேர்ந்த கூட்டிலைகள். 1 - 2 அங்குல நீளமிருக்கும்.இச்சிற்றிலைகள் நீளத்தில் பாதிக்குமேல் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும். நரம்புகள் கைவடிவமாக ஓடும். பூ சற்று ஒரு தளச்சமமானது. புறவிதழ்கள்5 ஒன்றாகக்கூடி மடல் போல இருக்கும். நுனியில் 5 பற்கள் இருக்கும். அகவிதழ்கள் 5 சற்றுச் சமமின்றியிருக்கும். வெளுப்பான மஞ்சள் நிறமுள்ளவை, தழுவு அடுக்குள்ளவை. விரைவில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. மேற்பக்கத்து இதழ் எல்லவற்றிற்கும் உள்ளே அமைந்திருக்கும்

கேசரங்கள் 10. சூலகத்திற்குச் சிறுகாம்பு உண்டு, பல சூல்கள் இருக்கும். கனி ஒரு சிம்பு. 6 - 12 அங்குல நீளமும் 3/4 - 1 அங்குல அகலமும் இருக்கும். மரம், பட்டை, வேர், இலை, பூ, கனி முதலியன மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை. பட்டை சொரசொரப்பாகவும் கருமை நிறமுடையதாகவும் நார் எடுத்து முரடாண பலம் வய்ந்த க்யிறு திரிப்பதற்கும் உதவும், மரம் பழுப்பு நிறமுடய கடினமான விறகாகும். ஆத்திக்கு ஆர் என்ற பெயரும் உண்டு. இது ஒரு வித மந்தாரையாகும். ஆங்கிலத்தில் பௌஹினியா ராசிமோசா என்ற பெயர் உண்டு.

சோழர் ஆட்சியின் வரைவிலக்கணம் என்ன?

நடுநிலை தவறாத ஆட்சி.

விழுப்புண்படாத நாளெல்லாம் வாழ்ந்தும் வீணான நாட்கள் என்ற படை மறவர்கள்

அறம் உரைக்கும் புலவர் பெருங்குடி மக்கள்

சான்றோர் நிறைந்த சமூகம்

அறநெறி பிறழாத குடிமக்கள்

நடுநின்ற நன்நெஞ்சு படைத்த வணிகர்கள்.

தொன்மச் சோழர்

06. சோழன் நல் உருத்திரன்

07. முல்லைக்கலி சோழன்

08. நல்லுத்தரன்

09. குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்

10. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்

11. நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி

12. வேற்பறடக்கைப் பெருவிறற்கிள்ளி

13. அத்திரிசோழன்

14. அரியசந்திரசோழன்

15. அண்டசோழன்

16. அடைவளைசோழன்

17. அன்னசோழன்

18. அன்பசோழன்

19. ஆந்தைசோழன்

20. ஆதனழிசிசோழன்

21. ஆலங்கிள்ளிசோழன் (ஆலசோழன்)

22. ஆதிராசேந்திரசோழன்

23. ஆனைச்சேவகசோழன்

24. அபயகுலசேகரசோழன்

25. கலிக்காமசோழன்

26. கடம்பசோழன்

27. கடையசோழன்

28. கண்டர்கிள்ளிசோழன்

29. காங்கமசோழன்(காந்தமசோழன்)

30. கிள்ளிசோழன்

31. கொள்ளிசோழன்

32. குடசோழன்

33. குருசோழன்

34. குமாரமகீதரசோழன்

35. கூரசோழன்

36. கொள்ளிசோழன்

37. கோப்பெருஞ்சோழன்

38. பஞ்சநதசோழன்

39. பாண்டுசோழன்

40. பாலையசோழன்

41. பாதிரிசோழன்

42. பாம்பசோழன்

43. புத்திகழிசோழன்

44. பசுபோகசோழன்

45. புகழ்ச்சோழன்

46. புலவசோழன்

47. பூதசோழன்

48. பெருந்திருமாவளவசோழன்

49. பெரும்பற்றசோழன்

50. பைஞ்ஞீலசோழன்

51. பொன்னசோழன்

52. பெரியசோழன்

53. பேரெயில்சோழன் (பேர்சோழன்)

54. மண்ணிசோழன்

55. மயில்சோழன் (மயிலாடுசோழன்)

56. மறவசோழன்

57. மஞ்சசோழன்

58. மதுராந்தகசோழன் (சோழவல்லபன்)

59. மாந்தைசோழன்

60. முள்ளிசோழன்

61. வடமசோழன்

62. வாஞ்சிசோழன்

63. வாலிசோழன்

64. வீரவாதித்தசோழன்

65. வெட்டுவசோழன்

66. வெண்டசோழன்

67. வெண்ணிசோழன் 

68. சந்திரசோழன்

69. சங்கரசோழன்

70. சாளுவசோழன்

71. சித்தசோழன்

72. சிரசோழன்

73. சுந்தரசோழன்

74. செங்கமலசோழன்

75. சென்னிசோழன்

76. சேந்தசோழன்

77. நல்லுருத்திரசோழன்

78. நீவசோழன்

79. ஓடம்போகிசோழன்

80. ஐவசோழன்

81. உலகநாதசோழன்

82. ஈச்சோழன்

83. தக்கோலசோழன்

84. திருமலைசோழன்

தொன்மச் சோழர்.

மூவருலாவில் அடங்கியுள்ள விக்கிரம சோழன் உலா நூலில் அந்த நூலின் ஆசிரியர் ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழனுக்கு முன்னர் ஆண்டதாகச் சோழர் பரம்பரை ஒன்றைக் குறிப்பிடுகிறார். அவர்களில் பழங்கதைகளாகத் தெரியவரும் சோழர்களைத் தொன்மச் சோழர் எனக் குறிப்பிடுகிறோம். இவர்களில் வரலாற்றுச் சோழர்களாத் தெரியவரும் சோழர்களும் உள்ளனர்.

வரிசை பாடலில் காட்டப்பட்டுள்ள முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சோழ அரசர்கள்.

  • பிரமன், உலகம் படைத்தவன்
  • காசிபன், பிரமன் மகன்
  • மரீசி, மேதக்க மையறு காட்சியன்
  • சூரியன், எல்லாளன், ஒற்றைச் சக்கரத் தேரில் வருவோன்
  • மனுச்சோழன், பசுவுக்கு நீதி வழங்கியவன்
  • ஆடுதுறை அறனாளன், புலியும் மானும் ஒரே துறையில் நீருண்ணச் செய்தவன்
  • வானூர்தி அரசன்
  • தேவருலகைக் காத்தவன்
  • வேள்வியில் பெற்ற மந்திரத்தைக் கூற்றுவனுக்குச் சொல்லிக்கொடுத்தவன்,
  • முதுமக்கள்-தாழி செய்தளித்து எமனை வென்றவன்
  • தூங்கும் எயில் எறிந்த சோழன்
  • மேலைக்கடல் நீரைக் கீழைக்கடலில் பாயச்செய்தவன்
  • நாக-கன்னியை மணந்தவன், குகை வழியே நாகலோகம் சென்றவன்
  • சிபிச் சக்கரவர்த்தி, தான் வளர்த்த புறாவுக்காகத் தன்னையே தராசில் நிறுத்துப் பருந்துக்கு இரையாக அளித்தவன்
  • காவிரி தந்தவன், குடகு மலையைப் பிளந்து காவிரியாற்றைச் சோழநாட்டில் பாயச் செய்தவன்
  • இமயத்தில் தன் ஆண்-புலிச-சின்னத்தைப் பொறித்தவன்
  • காவிரியாற்றுக்குக் கரை கட்டியவன்
  • களவழி நாற்பது பாடலைக் கேட்டுக் கணைக்காலிரும்பொறையின் கால் விலங்கை நீக்கியவன்
  • தொண்ணூற்றாறு விழுப்புண் கொண்ட சோழன்
  • தில்லைக்குப் பொன் வேய்ந்தவன்.
  • ஒரே பகலில் 18 பாலைநிலங்களையும், மலைநாட்டையும் (சேரநாட்டையும்) வென்றவன்
  • கங்கையையும், கடாரத்தையும் தன் படையை அனுப்பி வென்றவன்
  • வங்கநாட்டுக் கல்யாணபுரத்தை மூன்று முறை தாக்கி அழித்தவன்
  • கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன்.
  • திருவரங்கப் பெருமானுக்கு மணிகளாலான பாம்புப்படுக்கை அமைத்துக் கொடுத்தவன்
  • கூடல் சங்கமப் போரில் 1000 யானைகளை வெட்டி வீழ்த்திப் பரணி நூல் கொண்டவன்

சங்ககாலச் சோழர்கள்

மனுநீதிச் சோழன் மனுநீதிச் சோழன் அல்லது மனுநீதி கண்ட சோழன் என்பவன் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன் எனக்கருதப்படுபவன். வரலாற்றில் இவ்வாறான மன்னன் ஒருவன் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும், தொன்மம் என்று கருதத்தக்க மனுநீதிச் சோழன் கதை பெரும்பாலான தமிழ் மக்களுக்குத் தெரிந்த கதையாகும். இக்கதை பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றிருப்பதைக் காணமுடியும்.

இலக்கியக் குறிப்புக்கள்

சோழ நாட்டின் நீதிமுறைக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச் சோழன் பற்றிக்  கண்ணகி  குறிப்பிடுவதாகச் சிலப்பதிகாரத்தில் வருகிறது. இக்காப்பியத்தில் வேறு சில இடங்களிலும் இக்கதை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூலான பழமொழி நானூறு என்னும் நூலிலும் இக்கதை எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. சோழர் காலத்து நூலான சேக்கிழாரின் பெரியபுராணத்திலேயே மனுநீதிச் சோழன் கதை விரிவாகக் காணப்படுகிறது. இவை தவிரச் சோழ மன்னர் பெருமை கூற எழுந்த இராசராசசோழன் உலா, விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா என்பவற்றிலும் இக்கதை வருகிறது.

முன்னர், சோழர் பெருமை கூறுவதற்காக மட்டும் பயன்பட்டுவந்த இக் கதை தற்காலத்தில் முழுத் தமிழ் இனத்தினதும் நீதி முறைசார்ந்த பெருமைக்கு அடையாளமாகப் பயன்பட்டுவருகிறது. சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதிச் சோழன் சிலை இருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

கதை

மனுநீதிச் சோழனது மகன், தேரேறி ஊர் சுற்றக் கிளம்பினான். அவனையே அறியாது அவன் சக்கரங்கள் ஏறி ஒரு ஆ கன்று இறந்து விட்டது. இதைக் கண்ட தாய்ப் பசு மன்னன் அவை சென்று ஆராய்ச்சி மணியை முட்டி அடித்தது. பசுவின் துயர் அறிந்த மன்னவன் தானும் தன் மகனை இழத்தலே தகும் என்று மந்திரியிடம் இளவரசனை தேரேற்றிக் கொல்ல பணித்தான். மந்திரியோ மன்னர் குலத்துக்கு ஒரு தீங்கும் செய்யேன் என்று கூற, மன்னனே தன் மகனை தேரேற்றிக் கொன்றான்.

மகாவம்சம்

கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும், இலங்கையின் வரலாறு கூறும் பாளிநூலான மகாவம்சம் கிமு 2 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் இருந்து வந்து 44 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளன் மீது இக்கதையை ஏற்றிச் சொல்கிறது.

சிபிச் சக்கரவர்த்தி 

சிபிச் சக்கரவர்த்தி என்று பெயரிட்டு நாம் வழங்கும் சோழப் பெரு வேந்தன் வரலாற்றைப் பண்டைய நூல்கள் பறைசாற்றுகின்றன.

'சிபி' என்னும் சொல்லே தமிழுக்குப் புதிது. 'சக்கரவர்த்தி' என்னும் சொல்லைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. வரலாறு உள்ளது. வரலாற்றுத் தலைவனுக்கு நாம் இவ்வாறு பெயர் சூட்டிக்கொண்டுள்ளோம். 

புறநானூறு

புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டுருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக்கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டது. (சிபி புறாவை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் பறக்கவிடப் பார்த்தான். புறாவுக்காகப் பருந்து வட்டமிடுவதையும் பார்த்தான். புறாவையும் காப்பாற்ற வேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும். எண்ணிப் பார்த்தான்.) புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன்னையும் நிறுத்துக் காட்டித் தன்னைப் பருந்துக்கு அளித்தான்.

சிலப்பதிகாரம்

தன் கணவன் கோவலனைக் கொன்ற பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்ற கண்ணகி, தன்னைப் பற்றியும், தன் சோழன் அருளாட்சி பற்றியும் எடுத்துரைக்கும்போது சிபி மன்னன் வரலாற்றை எடுத்துரைக்கிறாள்.

கொடைமடம்

பாரி முல்லைக்குத் தேர் தந்தது போலவும், பேகன் மயிலுக்குப் போர்வை தந்தது போலவும், குமணன் தன் தலையை எடுத்துக்கொள்ளும்படிபெருஞ்சித்திரனாருக்கு வாள் தந்தது போலவும் சிபி தன்னைத் தந்ததும் கொடைமடம்

சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி.  

இளஞ்சேட்சென்னி என்னும் பெயருடன் விளங்கும் சோழ மன்னர்கள் ஐவருள் சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி என்பவன் ஒருவன்.

பாமுள்ளூர் என்பது சேர அரசன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஊர். இவ்வூர்க் கோட்டையை வென்றழித்த காரணத்தால் இவன் இந்த அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறான்.

புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இவனைக் கண்டு பாடி, சில அறிவுரைகளும் கூறி, பரிசில் வழங்குமாறு வேண்டுகிறார். 

  • மாற்றார் மதில்களைக் கைப்பற்றுமுன்பே இரவலர்களுக்கு அதனைப் பரிசாக வழங்கும் பண்புள்ளவனாம்.
  • முன்பே பரிசில் பெற்றுச்சென்றார் என எண்ணிப் பார்க்காமல் வழங்க வேண்டுமாம்.
·

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி. 

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். இவனைப் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் நான்கு உள்ளன. இராசசூயம் என்பது நாட்டை விரிவுபடுத்த அரசன் செய்யும் வேள்வி.

  • பகைநாட்டை இவன் பட்டப்பகலில் தீயிட்டுக் கொளுத்தியது ‘சுடுதீ விளக்கம்’  இவனது யானைகள் வள்ளை, ஆம்பல் பகன்றை, பாகல், கரும்பு நிறைந்த பகை நாட்டு வயல்களைப் பாழாக்கினவாம்.
  • இவனுக்கும், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, மலையமான் திருமுடிக்காரி சோழனுக்கு உதவியாக நின்று போரிட்டுச் சோழனுக்கு வெற்றி உண்டாக்கியிருக்கிறான்.
  • சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய இருவரும் இவனது நண்பர்கள். இவர்கள் பார்பனர் வளர்க்கும் முத்தீப் போல ஓரிடத்தில் கூடியிருந்தனர்.
  • மணியும், முத்தும், பொன்னும் இரவலர்களுக்குக் கனவா நனவா என மருளும்படி வாரி வழங்கியவன்.

சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. 

சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் இவன் பெற்ற வெற்றியைப் புகழ்ந்து பாடியுள்ளார்.  இவனது இறுதிக் காலம்  இலவந்திகைப் பள்ளி என்னுமிடத்தில் நிறைவுற்றது.

  • இவன் வேல் தாங்கித் தேரேறிப் போருக்குச் செல்வது வழக்கம். 
  • இவனைத் தாக்கியவர் வாழக் கண்டதும், அடி தொழுதவர் வருந்தக் கண்டதும் இல்லையாம்.
  • நெல்வயலில் களையெடுக்கும் உழத்தியர் சிறந்த ஆம்பல், நெய்தல் பூக்களைக் களைந்து எறிவார்களாம்.
  • உழவர் விலாப் புடைக்க புதுநெல் சோறு தின்றுவிட்டு நெல்கட்டுகளைச் சுமந்து செல்லும்போது நடை தடுமாறுவார்களாம்.
  • உழவரின் சிறுவர்கள் வைக்கோல் போரில் ஏறி இளநீரையும், நுங்கையும் பறித்து விளையாடுவார்களாம்.

சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி.

சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன்.

  • இவன் குதிலை பூட்டிய தேரில் ஏறிப் போரிட்டது, கடலில் தோன்றும் ஞாயிறு போன்று இருந்ததாம். இவனது வாள் குருதிக்கறை பட்டுச் செவ்வானம் போலவும், தாள் கொல்லேற்றின் தந்தம் போலவும், தோல் என்னும் மார்புக் கவசம் அம்புத் துளை பட்டு விண்மீன்கள் போலவும், குதிரைப்படை பாயும் புலி போலவும், களிறு கோட்டைக் கதவுகளைக் குத்தி கூர் மழுங்கிய திலையிலும் காணப்பட்டவாம்.
  • ’வயமான் சென்னி’ எனப் பாராட்டித் தன் வறுமையைப் போக்குமாறு புலவர் வேண்டுகிறார்.   
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்.

சங்க காலச் சோழ அரசர்களில் இருவர் குராப்பள்ளி என்னும் ஊரில் இருக்கும்போது காலமானார்கள். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்போர் அவர்கள்.

கோவூர் கிழார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனின் வெற்றிகளைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

பிட்டை சேர வேந்தர்களில் ஒருவன்.

கொங்குநாட்டுக் கருவூரை இந்தக் கிள்ளிவளவன் வீழ்த்தியபோது அதன் அரசன் பிட்டை உடல் காயத்தாலும், உள்ள உளைச்சலாலும் பெரிதும் வருந்தினான். இந்தப் போர்  வஞ்சி முற்றம் என்னுமிடத்தில் நடந்தது. இவன் தன் நண்பர்களுக்கு எல்லா நலன்களும் உதவும் பண்பினன்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். 

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சங்ககாலச் சோழமன்னர்களில் ஒருவன்.

இவனைப் பாடிய புலவர்கள்:

  1. ஆடுதுறை மாசாத்தனார்
  2. ஆலத்தூர் கிழார்
  3. ஆவூர் மூலங்கிழார்
  4. இடைக்காடனார்
  5. ஐயூர் முடவனார்
  6. கோவூர் கிழார்
  7. தாயங்கண்ணனார்
  8. நல்லிறையனார்
  9. மாறோக்கத்து நப்பசலையார்
  10. வெள்ளைக்குடி நாகனார்
ஆகியோர். 

இவனைப் பற்றிய செய்திகள்

புறநானூற்றில் இவனைப் போற்றிப் பாடிய பாடல்கள் 18 உள்ளன. மேலும் இவன் புலவனாக விளங்கிப் பாடிய இவனது பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.

தோற்றம்

  • பசும்பொன் ஆரமும் கழுத்துமாக இவன் விளங்கியிருக்கிறான். ’பசும்பூண் வளவன்’  ‘பொலம்பூண் வளவன்’  என்றெல்லாம் இவன் போற்றப்படுவது இதனால்தான்.
முன்னோர்
  • புறாவுக்காகத் தன்னைத் துலாக்கோலில் நிறுத்துத் தந்தவன். தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஆகியோர் இவனது முன்னோர். 
வள்ளல் 

கொடையாளி

  • இவனது அரண்மனையில் அடுதீ அல்லது சுடுதீ இல்லையாம். உணவு சமைப்பதும் வழங்குவதும் நிகழ்ந்துகொண்டே இருக்குமாம்.
  • பாணர்க்கு நிலையான செல்வம் வழங்கினான். வடகிழக்குப் பருவ மழையால் சோழநாட்டில் பெய்யும் மழைத்துளிகளைக் காட்டிலும் பல நாள் இந்த வளவன் வாழவேண்டும். 
  • பாணர்களுக்குப் பொன்னால் செய்த தாமரைகளைப் பரிசாக வழங்கினான்.
  • இவன் சுடச்சுட அளித்த விருந்து உண்ட வியர்வை அல்லது புலவர்க்கு வேறு வியர்வை இல்லையாம்.
  • புலவரின் சுற்றத்தார் அனைவருக்கும் நல்லுணவு, நயவுடை தந்து பேணினானாம். [8]
  • வைகறைப் பொழுதில் வழங்கியிருக்கிறான்.
கொடையாளியைப் போற்றிய புலவன்
  • சிறுகுடியில் வாழ்ந்த வள்ளல் பண்ணனை தனது வாழ்நாளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வாழவேண்டும் என வாழ்த்துகிறான். 
ஆட்சி

போரும், புலவர் அறிவுரையும்

  • உடையோர் ஈவதும், இல்லோர் இரத்தலும் கடவது அன்று என்றாலும் வேறு வழியில்லை என்று இவனிடம் புலவர் கூறுகிறார். 
  • காலம் பார்க்காமல் போர் தொடுப்பவன். 
  • இவன் கருவூரை முற்றுகையிட்டுச் சேரனின் காவல் மரங்களை வெட்டினான். அதன் ஓசையைக் கேட்டுக்கொண்டு, சோழனுக்குப் பயந்து சேரன் கோட்டைக் கதவை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான். இத்தகைய பயந்தாங்கொள்ளியோடு போரிடுவது இழுக்கு என்று வளவனுக்கு எடுத்துரைத்தார். 
  • ’செம்பியன் மருகன்’ என இவன் போற்றப்படுகிறான். வேந்தன் (சேரன்) உள்ளே இருக்கும்போதே கோட்டையைச் சிதைத்தவன். 
  • பகைவர் (சேரன்) முடியால் தனக்கு வீரக்கழல் செய்துகொண்ட இவன் இனிய சொல்லும், எளிய காட்சியும் தருபவனாக விளங்க வேண்டும். [15]
  • புலவரெல்லாம் இவனை நோக்கும்போது இவன் மாற்றார் மண்ணையே நோக்குவானாம். 
  • மலையமான் மக்களை இவன் யானைக் காலடியில் இடும்போது, குழந்தைகள் அழுகை மறந்து வேடிக்கை பார்ப்பதைச் சொல்லிக் காட்டி, வளவனின் கொடுமையைத் தடுத்து நிறுத்தினார். 
உழவரின் வரிக்கடனைத் தள்ளுபடி செய்தவன்
  • அரசனின் வெண்கொற்றக் குடை அவனுக்கு நிழல் தருவதற்காக அன்று, குடிக்களின் துன்பம் போக்கி அவர்களுக்கு நிழல் தருவதற்காக எனவும், அரசன் வெறும் வெற்றிகள் அவனது படையால் விளைந்தவை அன்று, உழவர் உழும் படைச்சாலில் விளைந்தவை என்றும் அறிவுறுத்திப் பாடி, வறுமை காரணமாக அரசனுக்குத் தான் செலுத்த முடியாமல் நிலுவையில் இருந்த நிலவரிச் சுமையிலிருந்து விடுதலை பெற்றார். 
ஆட்சிப் பரப்புஇவன் காவிரிப் படுகையை ஆண்டவன் எனக் குறிப்பிடப்படுவதாலும், கொங்கு நாட்டை வென்றான் எனத் தெரிவதாலும் இன்றைய தமிழ்நாட்டின் காவிரிப்படுகை நிலப்பரப்பு முழுமையும் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்ததை அறியமுடிகிறது.

இறுதிக்காலம்.

  • இவனை யாராலும் கொல்ல முடியாது. இவன் கொடையாளி ஆகையால் எமன் (குளமுற்றம் என்னும் ஊரிலிருந்தபோது) இவனிடம் இரந்து இவனது உயிரைப் பெற்றான் போலும் என்கிறார் புலவர். 
  • பகைவர் பலரது உயிர்களைக் கொன்று எமன் பசிக்கு உனவூட்டிக்கொண்டிருக்கும் இவனை எமன் உண்டு உனவில்லாமல் ஏமாந்துவிட்டதாம்.
  • இவன் இறந்தபோது இவனை அண்டி வாழ்ந்த பலர் இவனோடு சேர்ந்து உயிர் துறந்திருக்கிறார்கள். 

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி.  

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவன் சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். இவன் செய்த போர் பற்றியும். இவனது இயல்புகள் பற்றியும் ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் பாடிய பாடல்கள் இரண்டு புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

இளஞ்சேட்சென்னி என்னும் பெயருடன் ஐந்து சோழ மன்னர்கள் உள்ளனர்.

போர்க்களம் 

  • இந்தச் சென்னி உழவர் மாடுகளை நடத்தி வைக்கோலைப் போரடிப்பது போல, யானைகளை நடத்தி பிணங்கல் மேல் போரடித்துக்கொண்டிருந்தான். புலவர் ஊன்பொதி பசுங்குடையார் அந்தப் போர்களத்துக்குச் சென்று யானைகளைப் பரிசாகக் கேட்டுப் பெற்றிருக்கிறார்.
வெற்றியும் கொடையும் 
  • தென்பால் பரதவரின் வலிமையை ஒடுக்கினான். தென்பரதவர் மிடல்சாய
  • வடபால் வடுகர் தாக்குதலை வாள் போரால் முறியடித்தான். வடவடுகர் வாளோட்டிய
  • தன் வெற்றியைப் பாடிய புலவர்க்கு பல அணிகலன்களை இவன் வழங்கினான். அவற்றை எங்கே அணிந்துகொள்வது என்றுகூட அவர்களுக்குத் தெரியாத அளவுக்கு வழங்கினான். 
அடிக்குறிப்பு
  1. புறநானூறு 370
  2. புறநானூறு 378
  3. இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது இராமனுக்கு வழிகாட்டும் அடையாளமாகச் சீதை ஆங்காங்கே ஒவ்வொன்றாகப் போட்டுச் சென்ற அணிகலன்களைப் பார்த்த குரங்குகள் அவற்றை விரலிலும் - காதிலும், கழுத்திலும் – இடுப்பிலும் மாற்றி அணிந்துகொண்டது போல புலவரின் சுற்றம் இந்தச் சோழன் தந்த அணிகலன்களை அணிந்துகொண்டார்களாம்.

சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.  

சோழன் நலங்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னன். இவன் தம்பி மாவளத்தான். தாமப்பல் கண்ணனார் நலங்கிள்ளியின் அவைக்களப் புலவர். இவர் பார்ப்பார். புலவரும் மாவளத்தானும் வட்டு விளையாடினர். புலவர் விளையாட்டுக் காயைக் கையில் மறைத்து மாவளத்தானை ஏமாற்றினார். இதனைக் கண்டுகொண்ட மாவளத்தான் புலவரை வட்டுக்காயால் அடித்தான். புலவர் தன் பாடலில் இந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறார். மாவளத்தான் அண்ணனை இவர் ‘தேர்வண் கிள்ளி’ எனக் குறிப்பிடுகிறார். பருந்துக்குப் பயந்து தன் மடியில் விழுந்த புறாவைக் காப்பாற்றவேண்டி, தன்னையே புறாவின் எடைக்கு எடையாகத் துலாக்கோலில் நிறுத்துக் கழுகுக்கு இரையாக வழங்கிய முன்னோனின் 

(சிபிச் சக்கரவர்த்தி) வழியில் வந்தவர்கள் இவர்கள் ஆதலால் பார்ப்பார் நோவன செய்யார் என்று குறிப்பிட்டார். அது கேட்ட மாவளத்தான் தான் வட்டாலடித்த செயலுக்காக நாணினான். பிழை செய்ததற்காக நாண வேண்டியது தானாக இருக்கையில், அடித்ததற்காக நாணும் மாவளத்தானின் மாண்பை வியந்து பாராட்டுகிறார். 

அடிக்குறிப்பு

  1. புறநானூறு 43

சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி.

சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன்.  தித்தன் என்னும் மன்னன் உறையூரைத்தலைநகராகக் கொண்டு நாடாண்டபோது  போர்வை என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்தவன்.

தித்தன் மகள் ஐயை. தித்தன் இவளை இந்தக் கிள்ளிக்கு மணம் செய்து தர ஒப்பவில்லை எனத் தெரிகிறது. இந்தக் கிள்ளி ஆமூர் மல்லன்என்பனோடு மற்போர் புரிந்து வென்றதைத் தித்தன் காணவும் மறுத்திருக்கிறான். ‘பெருங்கோழி’ (கோழியூர்) என்பது  உறையூருக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்று. ‘நாய்கன்’ என்னும் சொல் நீர்வணிகனைக் குறிக்கும். மாநாய்கன் மகள் சிலப்பதிகாரக் காலக் கண்ணகி. உறையூர்க் காவிரியாற்றுப் படகுத்துறை வணிகனாக விளங்கியவன் ‘பெருங்கோழி நாய்கன்’. இவன் மகள் நக்கண்ணையார். சாத்தன் என்னும் சொல் நில வணிகனைக் குறிக்கும். மாசாத்துவான் மகன் சிலப்பதிகாரக்  கோவலன். உறையூரில் வாழ்ந்த சாத்தனின் தந்தை ‘சாத்தந்தையார்’. இந்தச் சாத்தந்தையாரும், நக்கண்ணையாரும் இந்தக் கிள்ளியைப் பாடியுள்ளனர்.

  • சாத்தந்தையார் போர்வை என்னுமிடத்தில் ஆமூர் மல்லன் தாக்கியபோது நடந்த போரைப் பாடுகிறார்.
  1. இந்தக் கிள்ளி ஒருகாலை மண்டியிட்டுக்கொண்டு ஆமூர் மல்லனோடு போரிடுவதைத் தித்தன் காணவேண்டும்.
  2. கிள்ளியின் போர்யானைக்கு இன்று பலியாகப்போகும் அளியர் (இரங்கத்தக்கவர்) யார் யாரோ! 
  3. போர் நடந்த இடம் போர்வை. ஊரில் திருவிழா. மனைவிக்கு மகப்பேறு. மழை பொழிகிறது. இந்தக் கால நெருக்கடியில் மனைவிக்குக் கட்டில் பின்னுபவன் கை போல, கிள்ளியின் கைகள் விரைந்து சுழன்று போரிட்டன. 
  • பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், கிள்ளி, ஆமூர் மல்லன் ஊருக்கே துரத்திச் சென்று போரிட்டதைப் பாடுகிறார்.
  1. இந்தப் பெண்புலவரின் காதலன் இந்தக் கிள்ளி. இவன் பிரிவை எண்ணியதால் இவளது வளையல்கள் கழன்றன.
  2. உமணர் ஆற்றுத்துறையைக் கடக்க நேரும்போது அஞ்சுவது போல, பகைவர் கிள்ளியோடு போரிட அஞ்சுவர்.
  3. என் கிள்ளிக்கு நாடு இது அன்று. ஊர் இது அன்று. எனவே அங்குள்ள மக்களில் சிலர் கிள்ளி பெற்றது வெற்றி என்கின்றனர். சிலர் வெற்றி அன்று என்கின்றனர். ஆனால் எனக்குத் தெரியும், கிள்ளி வெற்றி பெற்றான் என்று.
அடிக்குறிப்பு
  1. புறநானூறு 80
  2. புறநானூறு 81
  3. புறநானூறு 82 பாடல் ஆமூர் மல்லனை “”ஊர் கொள வந்த பொருநன்” எனக் குறிப்பிடுகிறது.
  4. புறநானூறு 83
  5. புறநானூறு 84
  6. புறநானூறு 85

சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.

சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். இவனது தலைநகர் உறையூர். இவன் காலத்தில்கருவூரில் இருந்துகொண்டு சேரநாட்டை ஆண்ட மன்னன் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை சோழன் சேரனைக் காணக் கருவூர் வந்தான். சேரனின் வேல் வீரர்கள் நட்புக்காக வந்துள்ளமை அறியாது தாக்கினர். சோழன் மார்பில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை அம்புகள் சிதைத்தன. சோழனின் பட்டத்து யானை படைக்கடலின் நடுவே நாவாய்க்கப்பல் போலவும், வான மீன்கூட்டத்துக்கு இடையே நிலா போலவும், வந்துகொண்டிருந்தது. நாவாயைத் தாக்கும் சுறாமீன் கூட்டம் போல வாள்வீரர்கள் யானையைச் சூழ்ந்து மொய்த்தனர். அதனால் சோழனின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்துவிட்டது. யானைமீதிருந்த சோழனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்தக் கோலத்தைக் கருவூர் வேள்மாடத்து இருந்த சேரனும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும்கண்டனர். சோழன் துன்பம் இல்லாமல் திரும்ப வேண்டும் எனப் புலவர் வாழ்த்தினார். பாடல் புறநானூறு 13 (இந்த வாழ்த்துதலின் உட்பொருளைச் சேரன் உணர்துகொண்டான். தானே மதயானை முன் சென்று அதனை அடக்கிச் சோழனைக் காப்பாற்றினான்.)

சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி.  

சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி சங்ககாலச் சோழமன்னர்களில் ஒருவன். இவன் சோழன் வேல்பஃறடக்கை பெருநற்கிள்ளி எனவும் வழங்கப்பட்டுள்ளான்.

இவனுக்கும் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனுக்கும் இடையே திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் இருவரும் தம் படைகளைப் போரிடவேண்டாம் என்று நிறுத்திவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இவ்வாறு கோரிடும் முறைக்கு ‘அறத்தின் மண்டுதல்’ என்று பெயர். இந்தப் போரில் இருவரும் போர்க்களத்திலேயே மாண்டனர்.

குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர்க்களத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கிடந்தபோது புலவர் கழாத்தலையார் அவனது கழுத்திலிருந்த மணியாரம் என்னும் அணிகலனைக் கொடையாகக் கேட்டுப் பெற்றார்.

அடிக்குறிப்பு

  1. கழாத்தலையார் புறநானூறு 62,
  2. பரணர் புறநானூறு 63
  3. கழாத்தலையார் புறநானூறு 368

தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன். 

தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஒரு சோழ மன்னன். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோன். இவன் தூங்கெயில் கோட்டையை அழித்தான்.

அடிப்படைச் சான்று

  • நத்தத்தனார் பாடல் சிறுபாணாற்றுப்படை அடி 79 முதல்
ஒன்னார்

ஓங்கு எயில் கதவம் உருமுச் சுவல் சொறியும்

தூங்கெயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை

நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்

ஓடாப் பூட்கை உறந்தை

  • நப்பசலையார் பாடல் புறநானூறு 39
சார்தல்

ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந்திறல்

தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர்

தித்தன். 

தித்தன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு  சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த  சோழமன்னன்.

தித்தன் சிறந்த குதிரை வீரன். இவனது உறந்தைக் கோட்டைக்கு வெளியே கற்பாறைகள் நிறைந்த காவல்காடு இருந்தது. (இக்காலத்தில் திருச்சியில் உள்ள  மலைக்கோட்டை,  பொன்மலை முதலானவை அந்தக் ‘கல்முதிர் புறங்காடு’கள் எனலாம்) 

காவிரியில் நீர் விளையாட்டு

தித்தன் ஆட்சிக் காலத்தில் உறையூர்க் காவிரியாற்றுத் துறையில் நீராட்டுவிழா சீரும் சிறப்புமாக நடைபெறும். தித்தன் மகன் தித்தன் வெளியன். 

இவன் மகன் வெளியன். இக்காலத்தில் தந்தை பெயரை முதலில் வைத்து நாம் நம் பயர்களைக் குறிப்பிடுவது போல இவன் பெயரும் தித்தன் வெளியன் எனக் குறிப்பிடப்படுகிறது. தித்தன் உறையூரில் இருந்துகொண்டு ஆட்சிபுரிந்த காலத்தில் அவன் மகன் தித்தன் வெளியன் கானலம் பெருந்துறை எனப்படும் புகார் நகரத்தில் இருந்துகொண்டு மரக்கல ஏற்றுமதி இறக்குமதிப் பணிகளைக் கவனித்துவந்தான். 

தித்தன் மகள்

தித்தனின் மகள் ஐயை.

தித்தன் மகன் போர்வைக்கோ

போர்வைக் கோப்பெருநற் கிள்ளியையும் தித்தனின் மகன் என அறிஞர்கள் காண்கின்றனர். போர்வைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர் மல்லனோடு போரிடுவதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தித்தன் காண்பானாக எனப் புலவர் சாத்தந்தையார் குறிப்பிடுகிறார். போர் எனப்பட்ட இக்காலப் பேட்டைவாத்தலையில் இருந்துகொண்டு ஆண்ட இவனைத் தித்தன் விரும்பவில்லை என அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.

கட்டி ஓடியது

தந்தை தித்தனுக்குப் பின்னர் அவன் மகன் தித்தன் வெளியன் ஆட்சிக்காலத்தில்  கட்டி என்பவன் உறையூரைத் தாக்கப் படையுடன் வந்திருந்து ஊருக்கு வெளியே திருட்டுத்தனமாகத் தங்கியிருந்தான். அப்போது வழக்கம்போல் காலையில் உறையூர் நாளவையில் முரசு முழங்கிற்று. அதனைக் கேட்ட கட்டி தித்தன் தான் வந்திருப்பதைத் தெரிந்துகொண்டு போர்முரசு கொட்டுகிறான் என்று எண்ணிப் பயந்து போரிடாமலேயே ஒடிவிட்டான்.

வீரைவேண்மான் வெளியன் தித்தன்.

வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்பவன் வீரை என்னும் ஊரையாண்ட  வேளிர்  குலத்தவனாவான். முதுகூத்தனார் என்னும் புலவர் இவன் மாலையில் முரசில் விளக்கேற்றி வைத்ததைக் குறிப்பிடுகிறார்.

முற்காலச் சோழர்கள்

முற்காலச் சோழர்களின் காலம் (300கிமு - 200கிமு), அதாவது முந்தைய மற்றும் பிந்தைய சங்க காலங்கள் ஆகும். பண்டைய தமிழ்நாட்டை ஆண்ட மூன்று முக்கிய பேரரசுகளில் ஒன்றாக சோழர் குலம் இருந்துள்ளது. இவர்கள் உறையூர் மற்றும் காவேரிப்பட்டிணத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். சங்க இலக்கியம் மற்றும் பிற்கால நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நாம் இவர்களைப் பற்றி அறிந்தாலும், அவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. கிரேக்கத்தில் பெப்பிலஸ் மரிஸ் எரித்ரை என்று கூறப்படும் பயணக் கட்டுரையிலும், வரைபடங்களிலும் [1] முற்காலச் சோழர்களின் நாடு மற்றும் அதன் நகரங்கள், துறைமுகங்கள், வாணிபம் போன்றவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

முற்காலம் என்பது சங்ககாலத்தையும் அதற்கும் முந்திய தொன்ம காலத்தையும் குறிக்கும். 

செம்பியன்.

செம்பியன் என்பவன் சோழர் குலத்தின் முன்னோனாக கருதப்படுகிறான். இந்திர விழாவை இவனே ஆரம்பித்தான். புறாவிற்காக சதையை அறுத்துக்கொடுத்தவன் என்று கூறப்பெறுகிறான். இவனின் கதை வடபாரத சிபி மன்னனோடு ஒத்துப்போவதால் இருவரும் ஒருவரே என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எல்லாளன்.

எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச்  இலங்கை  வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில்இருந்து படையெடுத்து வந்த  சோழ  நாட்டைச் சேர்ந்தவர். இவர் "பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்" சேர்ந்தவர் என்று மகாவம்சம் கூறுகிறது.

ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவர் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் என்பர். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர்  மகாவம்சத்தில்   அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக் கூறியுள்ளார். எனினும் இது குறித்துத் தெளிவான முடிவு எடுப்பதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

வரலாறு

கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை  ஈழசேனனுக்குமுரியவை.  ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற சோழ மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கையின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.

சேனனும் குத்திகனும்

கி.மு 177 ஆம் ஆண்டு சேனன், குத்திகன் ஆகிய தமிழ் மன்னர்களால் அனுராதபுர அரியணை சூரத்தீசன் எனப்படும் சிங்கள மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அரியணையை இழந்த சூரத்தீசன் தப்பி ஓடினான். அரியணையை கைப்பற்றிய சேனனும் குத்திகனும் நீதியான ஆட்சி நடத்தியதாக மகாவம்சம் கூறுகிறது. பெளத்த பிக்குகளும் அவனை ஆதரித்திருந்தனர். 22 வருடங்களின் முடிவில் கி.மு 155 ஆம் ஆண்டு சிங்கள இளவல் அசேலனின் சேனை அனுராதபுரத்தினை கைப்பற்றிக்கொண்டது. அசேலன் என்பவன் சூரத்தீசனின் தமையனான மகாசிவனின் ஒன்பதாவது மகன் ஆவான்.

எல்லாளன் பற்றி மகாவம்சம்

எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவர் தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின் நிற்கவில்லை. இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை எனமகாவம்சம் கூறுகிறது. எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் மகாவம்சம், அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின்  கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. எல்லாளனின் படுக்கை அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும்  கோட்டைவாசலில்  தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.

  • எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவார். ஒருநாள் ஒரு தேரில் திசாவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.
  • பாம்பொன்றுக்கு இரையான குஞ்சையிழந்த தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் அந்தப்பாம்பினைப்பிடித்து வரச்செய்து, அதன் வயிறு கீறப்பட்டுக் குஞ்சு வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு மரத்தில் தொங்கவிடப்பட்டது.
  • ஒரு வயோதிப மாது வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்த போது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்டபோது, அவன் வருணனிடம் வாரத்திற்கொருதடவை இரவில் மட்டும் மழை பொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வருணிக்கிறது.
மகாவம்சம் கூறுகின்ற ஒரு கதை எல்லாளன் பெளத்த மதத்தை ஆதரவளித்து போற்றிப் பாதுகாத்தான் என்பதையும் நிரூபிக்கின்றது. தன் தாய் மரணித்ததை அறிந்த எல்லாளன் தேரிலேறி சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேரின் அச்சு தாது கோபமொன்றில் பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவிவிடுமாறு, அமைச்சர்களிடம் கூறினான். 'தெரியாமல் நிகழ்ந்தது அமைதியடைக. தூபத்தைத் திருத்தி விடுவோம்' என்றனர் அமைச்சர்கள். பதினைந்து கற்களே சிதைவடைந்திருந்தன. அப்படியிருந்தும் அந்தத் தாதுகோபத்தை புனரமைக்க எல்லாளன் பதினையாயிரம் கஹாப் பணங்களைச் செலவிட்டதுடன் தன் தாயின் இறுதிக்கிரியைக்குச் செல்லாமல்  தாதுகோபம்  புனரமைக்கும்  வரை அங்கேயே தங்கியிருந்தான்.

எனினும் இதே விடயம் இனவெறியை தூண்டுவதற்காக  விகாரைமகாதேவியால்  பயன் படுத்தப்படுவதையும் மகாவம்சம் நியாயப்படுத்தி கூறுகின்றது. அதில்  விகாரைமகாதேவி  தன் மகன் துட்டகாமினியிடம் 'எல்லாளன் அங்கு (அநுராதபுரத்தில்) பெளத்தவிகாரைகளை தேரால் இடித்து தரைமட்டமாக்கிறான்' என கூறுவதாக கூறப்பட்டுள்ளது.

விகாரைமகாதேவியும் எல்லாளனும்

கல்யாணி இராசதானியின் மன்னன் களனிதீசனின் மகளே மகாதேவியாவாள். பின்னாளில் இவள் விகாரைமகாதேவி என அழைக்கப்பட்டாள். விகாரைமகாதேவியின் தாயாரான களனிதீசனின் மனைவி சித்ததேவி களனிதீசனின் தம்பியாருடன் கள்ள உறவு கொண்டிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. பின்னாளில் எல்லாளனின் தோல்விக்கு விகாரைமகாதேவியே மிக முக்கிய காரணமாகிறாள். எல்லாளனின் வலுவான கோட்டைகளாய் நிலவிய மகேல நகரக் கோட்டையின் தளபதியான மகேலனையும், அம்பதித்தகக் கோட்டையின் தளபதியான தித்தம்பனையும் தன் அழகையும் மணம் செய்வதற்காக ஆசையும் காட்டி சூழ்ச்சியால் கைப்பற்றிக் கொள்கிறாள். இதை  மகாவம்சம் போர்த்தந்திரோபாயம் என வர்ணிக்கிறது.

உருகுணையின் மன்னனான காக்கவண்ணதீசன் ஆட்சி பீடம் ஏறுவதற்காக உருகுணையின் தமிழ் இளவரசி அயிஸ்வரியாவை மணந்திருந்தான். பின்னர் பெளத்த இளவரசனே ஆட்சிக்கு வரவேண்டுமென்ற தன் ஆசையினால் விகாரைமகாதேவியினை மணந்தான். திருமணத்தின் பின் துட்டகாமினியைக் கருவில் கொண்டிருந்த போது தன் கணவனிடம் மூன்று ஆசைகளை வெளிப்படுத்தியிருந்ததாகமகாவம்சம் கூறுகின்றது.

  • பிக்குகளுக்கு வழங்கித்தானும் பருகக்கூடிய பெரிய தேன் அடை
  • எல்லாளனின் படைத்தளபதி ஒருவனின் தலையைச்சீவிய இரத்தம் தோய்ந்த வாளினைக்கழுவிய நீரை அருந்த வேண்டும்
  • அநுராதபுரத்தின் வாடாத தாமரைகளால் மாலை கட்டி அணிய வேண்டும்
இந்த மசக்கை ஆசைகள் நிறைவேற்றப்பட்டன.

துட்டகைமுணுவும் எல்லாளனின் மரணமும் 

காக்கவண்ணதீசனினதும் விகாரைமகாதேவியினதும் மூத்தமகன் காமினி அபயன் ஆவான். இவன் தந்தையின் சொல்கேளாது இருந்தமையால் பிற்காலத்தில் துட்டகாமினி என அழைக்கப்பட்டான். துட்டகாமினி கருவிலிருந்தே தமிழருக்கெதிராக   உருவாக்கப்பட்டவன். துட்டகாமினி ஒருமுறை கட்டிலில் கால்களை முடக்கிப்படுத்திருந்த போது தாய் ஏன் என வினாவினாள், அதற்கு 'வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும் நெருக்கும்போது எப்படியம்மா கால்களை நீட்டி படுக்கமுடியும்' என்றான்.

இவ்வாறு கருவிலிருந்தே இனவெறியூட்டப்பட்டு வளர்த்த துட்டகாமினி தன் தந்தையின் மறைவிற்குப்பின் பெரும்சேனயுடன் எல்லாளனின் மீது படையெடுத்தான். இப்படையெடுப்பை பற்றிய போதிய ஆதாரங்கள் மஹாவம்சத்தில் காணப்படுகின்றது. இறுதி யுத்தமானது விஜிதபுரவில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. எவ்வளவு முயன்றும், துட்டகைமுனுவால் எல்லாளனின் போர்த்தந்திரமையை வெற்றிகொள்ள முடியவில்லை. அவனது படையிலே இறப்புக்கள் அதிகமாக காணப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன. அதனால் எல்லாளனை தனிச்சமருக்கு அழைத்தான். துட்டகைமுணு சதியினாலே எல்லாளனை கொன்றதாக சில சரித்திர ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Parker, Henry (1909). Ancient Ceylon. London: Luzac and Co..
  2. Parker.H, Ancient Ceylon. London : 1909
  3. Geiger,W., The Mahawamsa - Introduction, Colombo 1950. Page XXXVII
  4. புஸ்பரட்ணம், ப., இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி - ஒரு நோக்கு. நா.கிருஸ்ணனந்தன் நினைவுமலர், பொருளிதழ் 3, பக்கம் - 5.
  5. சிற்றம்பலம் சி.க.ஈழத்தமிழர் வரலாறு : 1 சாவகச்சேரி - 1994. பக்கம் 20
  6. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 34, பக்கம் : 145.
  7. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 15 - 18
  8. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 19 - 20
  9. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 27 - 33
  10. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 21 - 26
  11. குணராசா, க. (2003). மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம். யாழ்ப்பாணம்: கமலா பதிப்பகம். pp. 86.
  12. மகாவம்சம் 25: 48 - 49
  13. மகாவம்சம் 25: 8 - 9
  14. http://mahavamsa.org/mahavamsa/original-version/25-victory-duttha-gamani/#footnote_9_1768
  15. 15.0 15.1 History grade 10 by Kumudini Dias

இளஞ்சேட்சென்னி.

இளஞ்சேட்சென்னி, பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய  நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது  பெருங்குன்றூர் கிழார் என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.

கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது[3]. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது.

இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இருங்கோவேள் என்பவனால் கொல்லப்பட்டான்.

இவன்காலத்துப் பிற மன்னர்கள்

வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் இளஞ்சேட் சென்னியின் சமகாலத்தவர்களாகக் கருதப்படுகிறான்.

கரிகால் சோழன்

கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர்இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும்  பெருவளத்தான்  என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.

கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான். அதாவது, காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு வந்து சிறைக்காவலரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையும் அடைந்தான்.

வெண்ணிப் போர்.

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன்  பெருஞ்சேரலாதன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக் குயத்தியார் என்னும் புறநானுற்றுப் புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்க்காமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப் பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழ்ந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தியைக் கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர்  நச்சினார்க்கினியர் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

புராணக் கதைகள்.

பழங்காலந்தொட்டே கரிகாலனைப் பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பாடோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக் கட்டினான் என்பதை ஏழாம், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.

நெடுங்கிள்ளி.

நெடுங்கிள்ளி, முதலாம் கரிகால் சோழனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த சோழ அரசனாவான். இவன் கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபீடமேறி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நெடுங்கிள்ளி முற்காலச் சோழர் வரிசையில் ஒருவன். இவன் ஆட்சிபீடம் ஏறியபோது சோழ நாடு நல்ல நிலையிலேயே இருந்ததெனினும், நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வருகின்றது.

கோவூர் கிழார் என்னும் புலவர் பாடிய 44 ஆம், 45 ஆம் புறநானூற்றுப் பாடல்கள், இவ்விரு சோழர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மற்றும் அதனால் மக்களும், விலங்குகளும்  கூடப் படும் துன்பங்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது. அது மட்டுமன்றி இரு சோழர்களுக்கும் இடித்துரைத்து ஆலோசனை கூறும் தொனியையும் இப் பாடல்களிலே காண முடிகின்றது. 

நலங்கிள்ளி.  ·

நலங்கிள்ளி முற்காலச் சோழர்களுள் ஒருவன். இன்னொரு முற்காலச் சோழ மன்னனான  நெடுங்கிள்ளி என்பவனுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தொடர்பாகவே இவனுடைய பெயர் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.

புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார்,  கரிகாலனைப் போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார்.

அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடைபோட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்கவல்லவை, உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளினுடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப்படை, கீழைக்கடற்கரையில் புறப்பட்டால் மேலைக்கடற்கரைவரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண்துயிலாது இருக்கின்றனர். (புறம்.)

தன் மன்னனைப் பலவாறு புகழந்து பாடிய புலவர் இச்சகம் பாடுபவர் அல்லர். மேற்சொன்ன பாடலுக்கு முரணாகக் கீழ்க்காணும் பாடலில, நெடுங்கிள்ளியைத் தோற்கடிக்கும் பொருட்டு,உறையூரை முற்றுகையிட்ட நலங்கிள்ளியிடம் சமாதானத்தை நிலை நாட்டக் கோரி வற்புறுத்திக் கூறுவதைக் காணுகிறோம்.

பெரிய பனையினது வெளியத் தோட்டைச் சூடினோனல்லன், கரிய தோட்டினையுடைய வேம்பினது தாரையுடையவனும் அல்லன், உன்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக்கட்டப்பட்டது, ஆதலால் உங்கள் ஒருவர் தோற்பினும், தோற்பது உங்கள் குடியன்றோ? இருவரும் வெல்லுதல் இயல்புமன்று ஆதலால் உனது செய்கை உன் குடிக்கு தக்கதொன்றின்று, ஆதலால் இதை(போரை)த்தவிர்த்தலே உமக்கு நல்லது (புறம். 45)

இப்புலவரது அறிவார்ந்த அறிவுரையை நலங்கிள்ளி, செவிமடுக்கவில்லை என்பது தெரிகிறது. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற பட்டப்பெயரிலிருந்து, இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட போர், நெடுங்கிள்ளி இறந்த பிறகே முடிவிற்கு வந்திருக்க வேண்டும். என்பதை அறிகிறோம்.

இவனது காலத்தில் வாழந்த பல மன்னர்களைப் போன்று நலங்கிள்ளியும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவன் இயற்றிய பாடல்களில் இரண்டு புதுமையான உறுதிமொழி பற்றிக் கூறுகிறான்.

நட்பால் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டால் நான் என்னுடைய ஆட்சியைக்கேட்டாலும் கொடுத்துவிடுவேன். பழமையும் தொன்மையும் உடையதே என்று பார்க்காமல் என்நாட்டை மகிழ்ச்சியுடன் இரப்பவனிடம் ஓப்புவத்துவிடுவேன், கெஞ்சிக் கேட்பவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் என் ஆற்றல் இன்னது என்று தெரியாமல் என்னுடன் போரிட வருவார்களாயின், தூங்குகிற புலியை எழுப்புவது போல் ஆகிவிடும். என் போர்ப்படை எதிரிகளை அழிக்கும். அப்படி அழிக்காவிட்டால் கற்பில்லாப் பெண்டிரோடு என் மார்பகம் கிடந்து முயங்குவதாக. (புறம். 73) 

கிள்ளிவளவன்.

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான். கோவூர்கிழாரின் ஒரேவொரு பாடலில், பாடப்பட்டுள்ள மற்றொரு கிள்ளிவளவன், குராப்பள்ளியில் இறந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்விரு மன்னர்களுமே ஒருவரே என்று கூறப்படுகிறது. இது எவ்வாறாயினும் கோவூர்கிழாரின் பாடல், கிள்ளிவளவன் கருவூரைக் கைப்பற்றிய பிறகே இயற்றப்பட்டதாகும். ஆலத்துர் கிழார் தம் பாடலில், கருவூரைக் கைப்பற்றுவதற்கு முன் நிகழ்ந்த ஒரு முற்றுகையைப்பற்றி கூறுகிறார். கிள்ளிவளவனின் புகழைப்பற்றி பத்து புலவர்கள் பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளனர். சிறுகுடி என்னும் பகுதியின் தலைவனான பண்ணன், என்ற இவனது நண்பனைப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல் இவன் (கிள்ளிவளவனே) இயற்றியதே. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான்.

இம்மன்னன் வீரமும் பெருந்தன்மையும் பலவகைத்திறமையும் வாய்ந்தவன். ஆனால், செருக்குமிக்கவன். இதனால் பல புலவர்கள் இவனுக்கு அறிவுரை வழங்கி, இவனை நல்ல முறையில் திருத்தியுள்ளனர். வெள்ளைக்குடி நாயனார் என்னும் புலவர் தம் ஊரின் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியைத் தள்ளுபடி செய்யுமாறு கீழ்வரும் செய்யுமாறு கீழ்வரும் பாட்டினை அவர் பாடியுள்ளார்.

சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின் அதைக் கைப்பற்றியதே கிள்ளிவளவனின் மிகச்சிறந்த போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியைக்குறித்து பல நாட்கள் சிறப்பாகப் பேசுகின்றன. தனக்கு பொருத்தமில்லாத பகைவனுடன் போரிடுவது தகாது, பொருந்தாது, நியாயமாகாது என்று கிள்ளிவளவனுக்கு எடுத்துரைக்கும் வகையில் கரூரை அழிவின்றி காக்க, முயன்றவர் ஆலத்தூர் கிழார் என்னும் புலவர். ஆனால் இப்புலவரது முயற்சி வெற்றி பெறவில்லை, அழகிய நகர் வீழந்தது. இதைப்பற்றி மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் புலம்புகின்றார்.

இதே போல் கபிலரும், மாறோகத்து நப்பசலையாரும், புறநானுற்றுப் பாடல்கள் பலவற்றில் புலவர்களிடம் இவன் காட்டிய கொடைத்திறனை வியந்து பாடியுள்ளனர். வெற்றிபெற்ற சோழமன்னன் மலையமானின் குழந்தைகளுக்கு அளித்த மரணதண்டனையிலிருந்து அவர்கள் தப்பி விடுதலை பெறச்செய்து இவர்களைப்போன்ற ஒரு புலவர் எழுதிய ஒரு பாடலே.

இம்மன்னன் இறந்தபொழுது பாடப்பட்ட இரு இரங்கற்பாக்கள், இவன் இறந்த இடமாகிய குளமுற்றம் எங்குள்ளது என்றோ, இவன் இறந்ததற்கு காரணம் என்ன என்றோ கூறாவிடினும் இவனது அகந்தையை எடுத்துக்காட்டுகின்றன.

கோப்பெருஞ்சோழன்.

உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னர் கோப்பெருஞ்சோழன். அவர் அக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த சோழ மன்னன் ஆவான். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தான். · 

கோச்செங்கணான்.

கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.  புறநானூற்று  பாடலொன்றும்  பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்றிய தொன்மையான சான்றுகளாகும்.  திருஞானசம்மந்தரும்  திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப்பற்றிக் கூறிப்பிட்டுள்ளது.

களவழி.

நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது 'ஏரோர் களவழி'. பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது 'தேரோர் களவழி'  தேரோர் களவழியைப் பாடும் நூல் களவழி நாற்பது. இந்தக் களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில் கரூருக்கு அருகே இருந்திருக்கலாம் எனக் கற்பனை செய்யப்படும் கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் தருகிறது. சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டான் என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது.

செங்கணான், கணைக்கால் இரும்பொறை போர்க்களமும் போர் முடிவும்

  • போர் 'திருப்போர்ப்புறம்' என்னுமிடத்தில் நடைபெற்றதாகப் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது. [2]
  • களவழி நாற்பதுக்கு உரை எழுதியோர் கழுமலம் என்னும் என்னும் ஊரில் நடைபெற்றதாகக் குறிப்பிடுகின்றனர்.
  • புறநானூற்றுக் கணைக்கால் இரும்பொறை சிறைச்சாலையில் உயிர் துறந்தான்.
  • களவழி நாற்பது நூலின் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்து மீட்கப்பட்டான்

சமயச் செங்கணான் திருமால் வழிபாடு

திருநாறையூரைப்பற்றத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாடல்களில் ஒன்று கோச்செங்கணானின் சாதனைகளைக் கூறுவதுடன், இவன் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டதையும் குறிப்பிடுகிறது. போர்க்களத்தில் பெரும்வீரனாகவும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் திருநாறையிலுள்ள வைணவ ஆலயத்திலும் வழிபட்டான் என்று இவ்வாழ்வார் கூறும்பொழுது சோழமன்னன் என்று கோச்செங்கணானையே குறிப்பிடுகிறார் என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றி உணரலாம்.போர் வெற்றிகள்

செங்கணானின் பகைவனுடைய யானைப்படையைப் பற்றியும் செங்கணானின் குதிரைப்படை ஆற்றிய அரும் பெரும் பணியைப் பற்றியும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். இவ்வாறே களவழியிலும் சேரமன்னனனுடைய யானைப்படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப்படையும், காலாட்படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது. செங்கணானது ஆட்சி சோழ நாட்டிற்கு அப்பாலும் பரவியிருந்ததென்றும் அழுந்தை, வெண்ணி என்ற இடங்களில் இவன் போர் பரிந்தானென்றும் விளந்தை வேள் என்ற குருநில மன்னனைப்போரில் கொன்றான் என்றும், திருமங்கையாழ்வார் கூறுகிறார்.சிவாலயங்கள்

ஆம்பூர், வைகல், நன்னிலம் ஆகிய இடங்களிலுள்ள சிவாலயங்கள், செங்கணானாலேயே கட்டப்பட்டவை என்று திருஞானசம்மந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.அன்பில் செப்பேடு

நாடுமுழுவதும் கௌரீசனுக்கு செங்கணானால் கோயில்கள் கட்டப்பட்டன, என்று சுந்தர சோழனுடைய அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன.சேக்கிழார் குறிப்பிடும், செங்கணான் என்ற இவனது பெயரும், இவன் சோழ குடும்பத்தில் பிறந்தவன் என்பதும்  ஜம்புகேஸ்வரம்  உள்ளிட்ட பல இடங்களில் சிவபெருமானுக்கு இவன் கோயில்கள் எடுத்த விவரங்களும் இம்மன்னனைப்பற்றி பாடியுள்ள நாயனார் யாரென்று முடிவுகட்ட உதவுகின்றன.

வரலாறு

  1. சங்ககாலச் சோழன் செங்கணான் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் நடந்த போரில் சேரமான் கணைக்காலிரும்பொறையைக் கைதுசெய்து கொண்டுவந்து உறையூர்க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் வைத்தான். சிறைக் காவலர் காலம் தாழ்த்தித் தந்த தண்ணீரைப் பருகாமல் கணைக்காலிரும்பொறை தன்மானத்தை விளக்கும் பாடல் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிர் துறந்தான். சங்ககாலச் சோழரின் கடைசி அரசன் சோழன் செங்கணான். சங்ககாலச் சேரரின் கடைசி அரசன் கணைக்கால் இரும்பொறை. இவர்கள் காலம் கி.பி. 125-150
  2. கழுமலப் போரில் பிடிபட்ட கணைக்காலிரும்பொறையைப் புலவர் பொய்கையார் களவழி நாற்பது பாடிச் செங்கணானிடமிருந்து விடுவித்துக்கொண்டார். காலம் கி.பி. 400-க்குச் சற்று முன்பின். (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை தோன்றிய காலம்)
  3. சிவாலயங்கள் கட்டிய கோச்செங்கணான். காலம் கி.பி. 500-க்குச் சற்று முன்பின். (தேவாரம் தோன்றிய காலத்துக்குச் சற்று முன்)

பெருநற்கிள்ளி.

சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம்.

தேவலோகம் போன்ற இந்த நாடு உன்னால் ஆளப்பட்டாலும் சரி, உன் பகைவரிடம் சென்றாலும் சரி, உண்மையில் அது துறவிகளுக்கு உரிமையானது. பிராமணர்களக்கு நீ தண்ணீரும் பூவும் பொன்னும் தருவாயாக, மிளiரும் நகைகளை அணிந்த வேலைக்காரப்பெண்கள் தங்ககுவளைகளில் தரும் மதுவை அருந்தி மகிழ்வாயாக அந்த மகிழ்ச்சியில் தேவைப்பட்டவர்களுக்கு எளியவர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்குவாயாக. அறச்செயல்கள் தாமே இறுதி நாளில் உன்னைத் துணை நிற்கும் வெண்கொற்றக் குடைகளும் வீரத்தேர்களும் உடைய அரசர்களே நீவர் நீடு வாழ்க. 

(புறம். 367)

பெருங்கிள்ளிக்கும், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த போரில், தேர் வண்மலையன் என்ற தலைவன் சோழ மன்னனுக்கு ஆதரவாக போரிட்டதாக கொளு கூறுகிறது. சோழ மன்னனின் நண்பனையோ இல்லை பகைவனையோ யார் என்று அறுதியிட்டு கூறமுடியவில்லை.

கி.மு. 3ம் நூற்றாண்டிற்கு முற்பட்டசோழர்

1. சிபி சோழச் சக்கரவர்த்தி

சிபி சக்கரவர்த்தி எல்லாச் சங்கப் புலவராலும், பிற்பட்ட கால புலவராலும், சோழ மரபின் முன்னோரைப்பற்றிய இடங்களில் எல்லாம் குறிக்கப்படுள்ளான். இவனது வரலாறு மகா பாரதம், இராமாயணம் முதலிய காப்பியங்களிலும் வர்ணிக்கப்பட்டுள்ளது. பருந்திற்கு அஞ்சி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவினை காக்க தன் சதையை கொடுத்த பெருமை படைத்தவன். இவன் புகழ் குறிக்கும் தமிழ் நூல்கள்

புறநானூறு

சிலப்பதிகாரம்

கலிங்கத்துப்பரணி

மூவருலா

பெரியபுராணம்

2. முசுகுந்த சோழன்

கருவூரை தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழ மன்னன். சிறந்த சிவ பக்தன். இந்திரன் என்னும் பேரரசனுக்கு போரில் உதவி செய்து இந்திரன் பூசித்து வந்த ஏழு சிவலிங்களை பெற்று அவற்றைத் திருவாரூர் (வீதிவிடங்கத்தியார்), திருநாகைக் காரோணம் (சுந்தரவிடங்கத்தியார்), திருக்காறாயில்(ஆதிவிடங்கத்தியார்), திருக்கோளிலி(அவனிவிடங்கத்தியார்), திருமறைக்காடு (புவனிவிடங்கத்தியார்), திருநள்ளாறு (நகவிடங்கத்தியார்), திருவாய்மூர் (நீலவிடங்கத்தியார்) ஆகிய ஏழு திருப்பதிகளிளும் எழுந்தருளச் செய்தான். வெள்ளிடைமன்றம்(திருட்டு வெளியாக்கும்), இலைஞ்சிமன்றம் (கூன், குறள், ஊமை, செவிடு, பெருவியாதி போக்கும்), நெடுங்கல்மன்றம் 

(நஞ்சருந்தல், பாம்பு கடித்தல், பேய் பிடித்தல் நீக்கும்), பூதசதுக்கம் (பொய்த்தவஞ் செய்வோர், பிறர் மனை நயப்போர், பொய்யுரைப்போர், புறங்கூறுவோர், தண்டனை அடையவும்), பாவைமன்றம் (அரசன் நீதிதவறினாலும், அரசனுக்கு தீங்குநேரிடுவதாயிருந்தாலும் பாவை நின்றலும்) என்னும் ஐவகை மன்றங்களையும் புகார் பட்டினத்தில் தாபித்தவன். முசுரி என்னும் ஊரையும் உருவாக்கி பூம்புகார் பட்டினத்தை நன்னிலை படுத்தி காவிரிப்பூம் பட்டினம் மேனாடுகளுடன் வாணிபம் சிறக்க உதவினான். இவன் புகழ் குறிக்கும் தமிழ் நூல்கள்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

கலிங்கத்துப்பரணி 

கந்தபுராணம்

ஒரு துறை கோவை

3. காந்தன்

காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து அரசாண்ட சோழ மன்னன். அகத்திய முனிவரிடம் பேரன்புடையவன். அவர் அருளால் காவிரி தன் நாடு நோக்கி வருமாறு பாதை அமைத்தான். (காந்தன் காவிரி கொணர்ந்தான்) என்று மணிமேகலையில் ஒரு குறிப்புண்டு.

4. தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்

இம் மன்னன் ஒரு சிறந்த வீரன். அகத்திய முனிவரது கோரிக்கையை ஏற்று காவிரிப்பூம் பட்டினத்தில் முதன் முதலில் இந்திரனுக்கு 28 நாட்கள் விழா எடுத்து சிறப்பித்தவன்.இவன் அழித்த அரண்கள் மூன்று என சிலப்பதிகாரம் செப்புகிறது. பகைவரது மதிலை அழித்த வீரவாளை அணிந்த தோளையுடையவன் என்பதால் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் என பெயர் பெற்றான். இவனது சிறப்புக்களை புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிறுபாண் ஆற்றுப்படை, பழமொழி, கலிங்கத்துப் பரணி, மூவர் உலா முதலிய நூல்கள் கூறுகின்றன. 

கி.மு. 3ம் நூற்றாண்டுச் சோழன்

செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி சோழன் - கி.மு. 290 - 270

இளநகரை தலைநகராகக்கொண்டவன். பகைவருடைய வீரக்கழலையும், யானையின் துதிக்கையையும் எறிந்த காரணத்தினாலும் காவல் மிகுந்த வடுகரின் போர்ப்படை தங்கியிருந்த பாழி என்ற நகரை மீட்டதினாலும், கோசர், வடுகர், மற்றும் மோரியர் ஒன்று சேர்ந்த பெரும் போர்ப்படைகளை வென்றதனாலும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என பெயர் பெற்றான். ஊன் பொதி பசுங்குடையார் என்னும் புலவர் இவனை பற்றி புறநானூற்றில் குறிப்பிடுள்ளார். (பாடல் 370 மற்றும் 378)

கி.மு. 2ம் நூற்றாண்டுச் சோழர்

1. மநுநீதிச் சோழன்

மனு சக்ரவர்தி எனும் மனு நீதிச்சோழன்.

ஆரூர் என்னும் நகரத்தை யுண்டுபண்ணி இரரசதானியாகக் கொண்டவன்.பல யாகங்களை செய்து நீதி, நேர்மை, கடமை போன்ற நற்செயல்களுக்கு பெயர் பெற்றவன். பசுவின் கன்றின்மேல் தேரைச் செலுத்தி கொன்ற தன் மகனாகிய இக்குவகுவைத் தேர்க்காலில் வைத்து அரைத்துக் கொன்றவன். சூரியன் மரபில் வந்தமையால் மால், சூரியன் என்னும் பட்டங்களையும் சுமந்தவன். இவனது குலம் சூரியகுலம், மனுகுலம் என்றும் வழங்கலாயிற்று. இலங்கையின் வரலாறு பற்றி கூறும் மகாவம்சம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இலங்கை அரசனான அசேலனை சோழ மன்னன் எழ்ளாளன் (ஏழரரன்) என்பான் போரில் வென்று 45 வருடங்கள் ஆட்சி செய்ததாகவும் பின்னர் இலங்கை அரசன் துட்டகாமினியிடம் அரசை பறிகொடுத்ததாகவும் கூறுகிறது. மேலும் மகாவம்சம் மகனை தேர் ஏற்றி கொன்ற உத்தமன் சோழமன்னன் ஏழரரன் என்றும் பெளத்த துறவிகளிடம் பேரன்பு காட்டி வந்தான் என்றும் கூறுகிறது. இவன் ஆண்ட பகுதி இலங்கையின் வட பகுதி என்றும், துட்டகாமினிக்கும் எழ்ளாளனுக்கும் போர் நடந்த இடம் அநுராதபுரம் என்றும் எழ்ளாளன் போரில் இறந்த பின்னர் அவனுக்குரிய இறுதிக்கடன்களை செய்து அவன் இறந்த இடத்தில் நினைவுத் தூபி அமைத்து வழிபாடு நடை பெறச் செய்தான் என்ற பல தகவல்கள் மகாவம்சத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இச்செய்திகள் சிலப்பதிகாரம், மணிமேகளை போன்ற பழைய நூல்களில் இடம்பெறவில்லை. மகனை தேர் ஏற்றி கொன்ற ஒரே அரசன் மனுச்சோழன் என்பதால் மனுச்சோழனின் மறு பெயர் ஏழாரன் என்று இருக்கக்கூடும்.

2. முதற் கரிகாலன்

முதற் கரிகாலன் கி.மு 120 - கி.மு. 90

இவன் சென்னி மரபைச் சேர்ந்தவன். அழுந்தூரை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவன். பின்னர் குடவாயிலையும் தன் கோநகரமாகக் கொண்டான். இவன் பதினொரு வேளிரையும் அவருடன் வந்து மலைந்த வேந்தர்களையும் வெண்ணி வாயில் என்ற இடத்தில் வென்றான். பின் ஒரு கால கட்டத்தில் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் ஒன்பது அரசர்களை வென்று புறங்காட்டி ஓட வைத்தான். திதியன் என்பான் இவனது படைத்தலைவனாவான். சேரன் பெருஞ்சேரலாதன் இவனுடன் வெண்ணிப் பறந்தலையிற் போர் செய்து, கரிகாலன் எய்த அம்பில் மார்பில் துளையிட்டு ஊடுருவி முதுகினின்றும் வெளியேறியது. முதுகில் காயம் பட்டமையால் வெட்கம் தாங்கமல் சேரன் பெருஞ்சேரலாதன் கையில் பிடித்த வாளுடன் வடக்கிருந்து பட்டினி கிடந்து உயிர் துறந்தான்.

தோற்றமும் வரலாறும்

சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், பரணர்கழாத்தலையார் ஆகிய புலவர்களால் பாடப்பட்ட வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி என்பவனாவான். இன்னொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்.

Statue of Karikal Cholan

கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழன்

இரண்டாம் கரிகாலன் (இமயம் வரை சென்றவன்)

இவன் திருமாவளவன், கரிகாற் பெருவளத்தான் எனும் பெயர்களையும் பெற்றவன். இளஞ்செட்சென்னிக்கும் அழுந்தூர்வேள் பெருமாட்டிக்கும் பிறந்த மகனாவான். இளஞ்செட்சென்னி முடிபுனைந்து அரசாண்டவன் இல்லை. அரசனுக்கு இளையவன். கரிகாற் பெருவளத்தான் பல கலைகளையும் கற்று சிறந்த வீரனாக இருந்தான். இவனது பெரிய தந்தையாகிய அரசனும், இவன் தந்தையும் அடுத்தடுத்து இறக்கவே நாட்டில் குழப்பம் ஏற்பட்டு திருமாவளவன் உறையூரினின்று வெளியேறி பல இடங்களில் அலைந்து திரிந்தான். அக்கால மரபுப் படி பட்டத்து யானை பல இடங்களிலும் அலைந்து திரிந்து கருவூரில் இருந்த திருமாவளவனை தேர்வு செய்து தன் மீது ஏற்றிக்கொண்டு உறையூரை அடைந்தது. திருமாவளவன் அரசனாக முடி சூடிக்கொண்டான். கயவர்கள் சிலர் இவன் மீது புகார் கூறி சிறையில் அடைத்து சிறைக்கு தீயும் இட்டனர். சிறையில் இருந்து தப்பி தன் தாய் மாமன் உதவியுடன் பகைவரை வென்று மீண்டும் அரியணை அமர்ந்தான்.

இவனே  இரண்டாம் கரிகால் சோழனின் தந்தையாவான். புறநானூற்றில் இவனைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே, கரிகாலன், தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான். முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் 

இவனே. கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். கரிகாலனுடைய அம்பு சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று தகவல் தருகிறது. பாண்டிய மன்னர்களையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.

இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். முற்காலச் சோழர்களில் பிற்காலத்தவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில், நல்லுருத்திரன், கோச்செங்கண்ணன் ஆகிய மன்னர்களின் பெயர்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

 
கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு அருகில் உள்ளது.

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

 

 
கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலைபொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.

 
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

இறந்தோன் அவனே!

பாடியவர்: கருங்குழல் ஆதனார்.

பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.

திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்;

துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி,

இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;

அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து,

முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த

பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு,

பருதி உருவின் பல்படைப் புரிசை,

எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண்,

வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்;

அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்;

இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்

அருவி மாறி, அஞ்சுவரக் கருகிப்,

பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்,

பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்,

பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்

கொய்துகட்டு அழித்த வேங்கையின்,

மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே.

 
 

 
 
Territory Controlled By Karikal Cholan 9671530.png
 
 
The Chola Dynasty
சோழ மன்னர்களின் பட்டியல் 

முற்காலச் சோழர்கள் 

கி.பி. 1 முதல் கி.பி 150 வரை ஆண்ட சோழர்கள்

1. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான்

2. கிள்ளிவளவன்

3. பெருநற்கிள்ளி

4. கோப் பெருஞ்சோழன்

கி.பி. 150 முதல் கி.பி 300 வரை ஆண்ட சோழர்கள்

1. நெடுமுடிக்கிள்ளி

2. இளங்கிள்ளி முதலியோர். 

வேறு முற்கால சோழ அரசர்கள் சிலர்.

(இவ்வரசர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் கூறப்பட்டிருந்தாலும் மிகுதியான வரலாற்று செய்திகள் அறிவதற்கு ஏதும்இல்லை)

01. இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

02. போர்வைக் கோப் பெருநற்கிள்ளி

03. வேல்பல் தடகைப் பெருநற்கிள்ளி

04. முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி

05. தித்தன்

தித்தன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த சோழமன்னன்

தித்தன் சிறந்த குதிரை வீரன். இவனது உறந்தைக் கோட்டைக்கு வெளியே கற்பாறைகள் நிறைந்த காவல்காடு இருந்தது. (இக்காலத்தில் திருச்சியில் உள்ள  மலைக்கோட்டை, பொன்மலை முதலானவை அந்தக் ‘கல்முதிர் புறங்காடு’கள் எனலாம்)

காவிரியில் நீர் விளையாட்டு

தித்தன் ஆட்சிக் காலத்தில் உறையூர்க் காவிரியாற்றுத் துறையில் நீராட்டுவிழா சீரும் சிறப்புமாக நடைபெறும். 

தித்தன் மகன் தித்தன் வெளியன்

இவன் மகன் வெளியன். இக்காலத்தில் தந்தை பெயரை முதலில் வைத்து நாம் நம் பெயர்களைக் குறிப்பிடுவது போல இவன் பெயரும் தித்தன் வெளியன் எனக் குறிப்பிடப்படுகிறது. தித்தன் உறையூரில் இருந்துகொண்டு ஆட்சிபுரிந்த காலத்தில் அவன் மகன் தித்தன் வெளியன் கானலம் பெருந்துறை எனப்படும் புகார் நகரத்தில் இருந்துகொண்டு மரக்கல ஏற்றுமதி இறக்குமதிப் பணிகளைக் கவனித்துவந்தான். 

தித்தன் மகள்

தித்தனின் மகள் ஐயை. தித்தன் மகன் போர்வைக்கோ.

போர்வைக் கோப்பெருநற்கிள்ளியையும் தித்தனின் மகன் என அறிஞர்கள் காண்கின்றனர். போர்வைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர் மல்லனோடு போரிடுவதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தித்தன் காண்பானாக எனப் புலவர் சாத்தந்தையார் குறிப்பிடுகிறார்.போர் எனப்பட்ட இக்காலப் பேட்டைவாத்தலையில் இருந்துகொண்டு ஆண்ட இவனைத் தித்தன் விரும்பவில்லை என அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.கட்டி ஓடியது

தந்தை தித்தனுக்குப் பின்னர் அவன் மகன் தித்தன் வெளியன் ஆட்சிக்காலத்தில் கட்டி என்பவன் உறையூரைத் தாக்கப் படையுடன் வந்திருந்து ஊருக்கு வெளியே திருட்டுத்தனமாகத் தங்கியிருந்தான். அப்போது வழக்கம்போல் காலையில் உறையூர் நாளவையில் முரசு முழங்கிற்று. அதனைக் கேட்ட கட்டி தித்தன் தான் வந்திருப்பதைத் தெரிந்துகொண்டு போர்முரசு கொட்டுகிறான் என்று எண்ணிப் பயந்து போரிடாமலேயே ஒடிவிட்டான்.

நொச்சி

தமிழர் போர் மரபிலும் நொச்சிக்கு இடமுண்டு. சங்கக் காலத்தில் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த தித்தன் என்கிற சோழமன்னன் தன்னுடைய நாட்டு எல்லைக்கு நொச்சிவேலி அமைத்ததாக வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. சங்க இலக்கியத்தில் நொச்சித்திணை என்று ஒரு திணையே உண்டு. நொச்சித்திணை வீரர்கள் நொச்சிப்பூ மாலை சூடி எதிரிகளின் முற்றுகையை ஊடறுப்பார்கள் என்று பாடல்கள் குறிப்பிடுகின்றன. நொச்சிப்பூக்கள் மயில்நீல நிறம் கொண்டவை. 

இளஞ்சேட்சென்னி 

கரிகால் சோழன் 

நெடுங்கிள்ளி நலங்கிள்ளி 

கிள்ளிவளவன் 

கோப்பெருஞ்சோழன் 

கோச்செங்கண்ணன் 

பெருநற்கிள்ளி 

மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848 

இடைக்காலச் சோழர்கள் 

விசயாலயச் சோழன்          கி.பி. 848-871

ஆதித்தச் சோழன்               கி.பி. 871-907 

பராந்தகச் சோழன் I            கி.பி. 907-950 

கண்டராதித்தர்                    கி.பி. 949-957 

அரிஞ்சயச் சோழன்            கி.பி. 956-957 

சுந்தர சோழன்                     கி.பி. 956-973 

ஆதித்தக் கரிகாலன்           கி.பி. 957-969 

உத்தம சோழன்                  கி.பி. 970-985 

இராசராசச் சோழன் I          கி.பி. 985-1014 

இராசேந்திரச் சோழன்         கி.பி. 1012-1044 

இராசாதிராசச் சோழன்        கி.பி. 1018-1054 

இராசேந்திரச் சோழன் II      கி.பி. 1051-1063 

வீரராசேந்திரச் சோழன்        கி.பி. 1063-1070 

அதிராசேந்திரச் சோழன்      கி.பி. 1067-1070 

சாளுக்கிய சோழர்கள் 

குலோத்துங்கச் சோழன் I     கி.பி. 1070-1120 

விக்கிரமச் சோழன்               கி.பி. 1118-1135 

குலோத்துங்கச் சோழன் II    கி.பி. 1133-1150 

இராசராசச் சோழன் II           கி.பி. 1146-1163 

இராசாதிராசச் சோழன் II      கி.பி. 1163-1178 

குலோத்துங்கச் சோழன் III   கி.பி. 1178-1218 

இராசராசச் சோழன் III          கி.பி. 1216-1256 

இராசேந்திரச் சோழன் III       கி.பி. 1246-1279 

சோழர் சமூகம் 

சோழ அரசாங்கம் 

சோழ இராணுவம் 

சோழர் கலை 

சோழர் இலக்கியம் 

பூம்புகார் 

உறையூர் 

கங்கைகொண்டச் சோழபுரம் 

தஞ்சாவூர்

இளஞ்சேட்சென்னி.

பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார் என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.

கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது.

இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் தாய் வயிற்றில் இருக்கும்போதே இளஞ்சேட் சென்னி இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புகள்

  1.  புறநானூறு நான்காம் பாடல்
  2.  புறநானூறு 266 ஆம் பாடல்
  3.  அகநானூறு 375 ஆவது பாடல்: .....எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார் செம்புஉறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்.....
உசாத்துணை நூல்கள்

  • அகநானூறு, மதுரைத் திட்ட மின்பதிப்பு
  • புறநானூறு, புலியூர்க் கேசிகன் தெளிவுரை, பாரி நிலையம், சென்னை, 1958, மறுபதிப்பு 2004.
  • கனகசபை வி., 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம், அப்பாத்துரையார் கா. (தமிழாக்கம்), வசந்தா அதிப்பகம், சென்னை, 2001.
  • செல்லம் வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1995, மறுபதிப்பு 2002.

கரிகால் சோழன் 

இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர்இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான்என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.

கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமானவெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப்புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக்கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்

நெடுங்கிள்ளி.

முதலாம் கரிகால் சோழனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த சோழ அரசனாவான். இவன் கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபீடமேறி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நெடுங்கிள்ளி முற்காலச் சோழர் வரிசையில் ஒருவன். இவன் ஆட்சிபீடம் ஏறியபோது சோழ நாடு நல்ல நிலையிலேயே இருந்ததெனினும், நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வருகின்றது.

கோவூர்க் கிழார் என்னும் புலவர் பாடிய 44 ஆம், 45 ஆம் புறநானூற்றுப் பாடல்கள், இவ்விரு சோழர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மற்றும் அதனால் மக்களும், விலங்குகளும்கூடப் படும் துன்பங்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது. அது மட்டுமன்றி இரு சோழர்களுக்கும் இடித்துரைத்து ஆலோசனை கூறும் தொனியையும் இப் பாடல்களிலே காண முடிகின்றது.

நலங்கிள்ளி 

முற்காலச் சோழர்களுள் ஒருவன். இன்னொரு முற்காலச் சோழ மன்னனான நெடுங்கிள்ளி என்பவனுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தொடர்பாகவே இவனுடைய பெயர் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.

புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார்,கரிகாலனைப்போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார்.

அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடைபோட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்கவல்லவை, உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளினுடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப்படை, கீழைக்கடற்கரையில் புறப்பட்டால் மேலைக்கடற்கரைவரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண்துயிலாது இருக்கின்றனர். (புறம்.)

தன் மன்னனைப் பலவாறு புகழந்து பாடிய புலவர் இச்சகம் பாடுபவர் அல்லர். மேற்சொன்ன பாடலுக்கு முரணாகக் கீழ்க்காணும் பாடலில, நெடுங்கிள்ளியைத் தோற்கடிக்கும் பொருட்டு, உறையூரை முற்றுகையிட்ட நலங்கிள்ளியிடம் சமாதானத்தை நிலை நாட்டக் கோரி வற்புறுத்திக் கூறுவதைக் காணுகிறோம்.

பெரிய பனையினதுவெளியத் தோட்டைச் சூடினோனல்லன், கரிய தோட்டினையுடைய வேம்பினது தாரையுடையவனும் அல்லன், உன்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக்கட்டப்பட்டது, ஆதலால் உங்கள் ஒருவர் தோற்பினும், தோற்பது உங்கள் குடியன்றோ? இருவரும் வெல்லுதல் இயல்புமன்று ஆதலால் உனது செய்கை உன் குடிக்கு தக்கதொன்றின்று, ஆதலால் இதை(போரை)த்தவிர்த்தலே உமக்கு நல்லது (புறம். 45)

இப்புலவரது அறிவார்ந்த அறிவுரையை நலங்கிள்ளி, செவிமடுக்கவில்லை என்பது தெரிகிறது. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற பட்டப்பெயரிலிருந்து, இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட போர், நெடுங்கிள்ளி இறந்த பிறகே முடிவிற்கு வந்திருக்க வேண்டும். என்பதை அறிகிறோம்.

இவனது காலத்தில் வாழந்த பல மன்னர்களைப் போன்று நலங்கிள்ளியும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவன் இயற்றிய பாடல்களில் இரண்டு புதுமையான உறுதிமொழி பற்றிக் கூறுகிறான்.

நட்பால் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டால் நான் என்னுடைய ஆட்சியைக்கேட்டாலும் கொடுத்துவிடுவேன். பழமையும் தொன்மையும் உடையதே என்று பார்க்காமல் என்நாட்டை மகிழ்ச்சியுடன் இரப்பவனிடம் ஓப்புவத்துவிடுவேன், கெஞ்சிக் கேட்பவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் என் ஆற்றல் இன்னது என்று தெரியாமல் என்னுடன் போரிட வருவார்களாயின், தூங்குகிற புலியைஎழுப்புவது போல் ஆகிவிடும். என் போர்ப்படை எதிரிகளை அழிக்கும். அப்படி அழிக்காவிட்டால் கற்பில்லாப் பெண்டிரோடு என் மார்பகம் கிடந்து முயங்குவதாக

கிள்ளிவளவன் 

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான். கோவூர்கிழாரின் ஒரேவொரு பாடலில், பாடப்பட்டுள்ள மற்றொரு கிள்ளிவளவன், குராப்பள்ளியில் இறந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்விரு மன்னர்களுமே ஒருவரே என்று கூறப்படுகிறது. இது எவ்வாறாயினும் கோவூர்கிழாரின் பாடல், கிள்ளிவளவன் கருவூரைக் கைப்பற்றிய பிறகே இயற்றப்பட்டதாகும். ஆலத்துர் கிழார் தம் பாடலில், கருவூரைக் கைப்பற்றுவதற்கு முன் நிகழ்ந்த ஒரு முற்றுகையைப்பற்றி கூறுகிறார். கிள்ளிவளவனின் புகழைப்பற்றி பத்து புலவர்கள் பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளனர். சிறுகுடி என்னும் பகுதியின் தலைவனான பண்ணன், என்ற இவனது நண்பனைப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல் இவன் (கிள்ளிவளவனே) இயற்றியதே. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான்.

இம்மன்னன் வீரமும் பெருந்தன்மையும் பலவகைத்திறமையும் வாய்ந்தவன். ஆனால், செருக்குமிக்கவன். இதனால் பல புலவர்கள் இவனுக்கு அறிவுரை வழங்கி, இவனை நல்ல முறையில் திருத்தியுள்ளனர். வெள்ளைக்குடி நாயனார் என்னும் புலவர் தம் ஊரின் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியைத் தள்ளுபடி செய்யுமாறு கீழ்வரும் செய்யுமாறு கீழ்வரும் பாட்டினை அவர் பாடியுள்ளார்.

சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின் அதைக் கைப்பற்றியதே கிள்ளிவளவனின் மிகச்சிறந்த போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியைக்குறித்து பல நாட்கள் சிறப்பாகப் பேசுகின்றன. தனக்கு பொருத்தமில்லாத பகைவனுடன் போரிடுவது தகாது, பொருந்தாது, நியாயமாகாது என்று கிள்ளிவளவனுக்கு எடுத்துரைக்கும் வகையில் கரூரை அழிவின்றி காக்க, முயன்றவர் ஆலத்தூர் கிழார் என்னும் புலவர். ஆனால் இப்புலவரது முயற்சி வெற்றி பெறவில்லை, அழகிய நகர் வீழந்தது. இதைப்பற்றி மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் புலம்புகின்றார்.

இதே போல் கபிலரும், மாறோகத்து நப்பசலையாரும், புறநானுற்றுப் பாடல்கள் பலவற்றில் புலவர்களிடம் இவன் காட்டிய கொடைத்திறனை வியந்து பாடியுள்ளனர். வெற்றிபெற்ற சோழமன்னன் மலையமானின் குழந்தைகளுக்கு அளித்த மரணதண்டனையிலிருந்து அவர்கள் தப்பி விடுதலை பெறச்செய்து இவர்களைப்போன்ற ஒரு புலவர் எழுதிய ஒரு பாடலே.

இம்மன்னன் இறந்தபொழுது பாடப்பட்ட இரு இரங்கற்பாக்கள், இவன் இறந்த இடமாகிய கழுமுற்றம் எங்குள்ளது என்றோ, இவன் இறந்ததற்கு காரணம் என்ன என்றோ கூறாவிடினும் இவனது அகந்தையை எடுத்துக்காட்டுகின்றன.

கோப்பெருஞ்சோழன்.

உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னர் கோப்பெருஞ்சோழன். அவர் அக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த சோழ மன்னன் ஆவான். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தான்.

கோச்செங்கணான்.

கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. புறநானூற்று பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்றிய தொன்மையான சான்றுகளாகும். திருஞானசம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப்பற்றிக் கூறிப்பிட்டுள்ளது.

நடுத்தர அளவிலான களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில் கரூருக்கு அருகேயுள்ள கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் தருகிறது. சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று அவனை செங்கணான் சிறைப்பிடித்தான்.

திருநாறையூரைப்பற்றத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாடல்களில் ஒன்று கோச்செங்கணானின் சாதனைகளைக் கூறுவதுடன், இவன் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டதையும் குறிப்பிடுகிறது. போர்க்களத்தில் பெரும்வீரனாகவும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் திருநாறையிலுள்ள வைணவ ஆலயத்திலும் வழிபட்டான் என்று இவ்வாழ்வார் கூறும்பொழுது சோழமன்னன் என்று கோச்செங்கணானையே குறிப்பிடுகிறார் என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றி உணரலாம். செங்கணானின் பகைவனுடைய யானைப்படையைப் பற்றியும் செங்கணானின் குதிரைப்படை ஆற்றிய அரும் பெரும் பணியைப் பற்றியும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். இவ்வாறே களவழியிலும் சேரமன்னனனுடைய யானைப்படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப்படையும், காலாட்படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.

செங்கணானது ஆட்சி சோழ நாட்டிற்கு அப்பாலும் பரவியிருந்ததென்றும் அழுந்த, வெண்ணி என்ற இடங்களில் இவன் போர் பரிந்தானென்றும் விளந்தை வேள் என்ற குருநில மன்னனைப்போரில் கொன்றான் என்றும், திருமங்கையாழ்வார் கூறுகிறார். ஆம்பூர், வைகல், நன்னிலம் ஆகிய இடங்களிலுள்ள சிவாலயங்கள், செங்கணானாலேயே கட்டப்பட்டவை என்று திருஞானசம்மந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். நாடுமுழுவதும் கௌரீசனுக்கு செங்கணானால் கோயில்கள் கட்டப்பட்டன, என்று சுந்தர சோழனுடைய அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன.

சேக்கிழார் குறிப்பிடும், செங்கணான் என்ற இவனது பெயரும், இவன் சோழ குடும்பத்தில் பிறந்தவன் என்பதும் ஜம்புகேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் சிவபெருமானுக்கு இவன் கோயில்கள் எடுத்த விவரங்களும் இம்மன்னனைப்பற்றி பாடியுள்ள நாயனார் யாரென்று முடிவுகட்ட உதவுகின்றன.

மாடக்கோவில்கள்

தமிழகத்தில் உள்ள கோவில்களை கூடக்கோவில், கொடிக்கோவில், மாடக்கோவில் என மூன்று வகையாக கூறலாம்.இவற்றில் மாடக்கோவில்களின் அமைப்பு விதியாசமாக இருக்கும். மற்ற கோவில்களில் சுவாமி சன்னதி நுழைவு வாயில்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும்.ஆனால் மாடக்கோவில்களின் நுழைவு வாயில்கள் குறுகலாக இருக்கும். யானைகள் நுழைந்து விடக்கூடாது என்பது இதன் காரணம்.

புவியாண்ட மாமன்னன் கோச்செங்கசோழன் தான் மாடக்கோவில்களை கட்டிய முதல் மன்னன். இவன் யானைகள் நுழையாதபடி 70 சிவாலயங்களையும் மற்றும் 3 திருமால் கோவில்களையும் கட்டிய பெருமை பெற்றவன்.மேலும் அதிக சிவன் கோவில்களை கட்டிய மன்னன் என்ற பெருமை பெற்ற இம் மன்னனின் பிறப்பு மிகவும் வியக்கத்தக்கது.

இவனது தாய் சோழ அரசி கமலாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்ட போது அரச ஜோதிடர்கள் இந்ந பிறக்கும் குழந்தை இன்னும் சிறிது தாமதமாக பிறந்தால் உலகம் போற்றும் மாபெறும் மன்னனாக இருப்பான் என்றனர். இதனை அறிந்த அரசி அந்த நல்ல நேரம் வரும்வரை தன்னை தலைகீழாகக் கட்டி தொங்க விட ஆனையிட்டாள். நல்ல நேரம் வந்ததும் அவிழ்த்து விடப்பட்ட அரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டதனால்

பிறந்த குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன ஆனால் அரசி இறந்துவிட்டார்.சிவந்திருந்த கண்கள் பெற்ற குழந்தைக்கு கோச்செங்கண் என்ற பெயர் சூடினர்.

காவிரிக் கரையில் திருவானைக்காவல் என்னும் சிவதளத்தில் கோச்செங்கண் கட்டிய முதல் மாடக்கோவில் இன்றும் நம்மை வியக்கவைக்கிறது.

சிவாலயங்களில் மாமன்னன் கோச்செங்கசோழனுக்கு மாசி மாத சதய நட்சத்திரத்தில் விழாக்களும் சிற்ப்பு பூஜைகளும் ஆரதனைகளும் நடத்தப்படுகிறது.மாடக்கோவில்கள் என்ற கலைச்சிற்பங்களை எமக்களித்த வான் புகழ் கோச்செங்கசோழன் என்ற கள்ளர் குல மா மன்னனை நாம் நினைவு கொண்டு கள்ளர் இன மக்களாகிய நாம் பெருமை அடைவோம்

பெருங்கிள்ளி

சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம்.

தேவலோகம் போன்ற இந்த நாடு உன்னால் ஆளப்பட்டாலும் சரி, உன் பகைவரிடம் சென்றாலும் சரி, உண்மையில் அது துறவிகளுக்கு உரிமையானது. பிராமணர்களக்கு நீ தண்ணீரும் பூவும் பொன்னும் தருவாயாக, மிளiரும் நகைகளை அணிந்த வேலைக்காரப்பெண்கள் தங்ககுவளைகளில் தரும் மதுவை அருந்தி மகிழ்வாயாக அந்த மகிழ்ச்சியில் தேவைப்பட்டவர்களுக்கு எளியவர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்குவாயாக. அறச்செயல்கள் தாமே இறுதி நாளில் உன்னைத் துணை நிற்கும் வெண்கொற்றக் குடைகளும் வீரத்தேர்களும் உடைய அரசர்களே நீவர் நீடு வாழ்க. 

பெருங்கிள்ளிக்கும், சேரமன்னன் மாஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த போரில், தேர் வண்மலையான் என்ற தலைவன் சோழ மன்னனுக்கு ஆதரவாக போரிட்டதாக கொளு கூறுகிறது. சோழ மன்னனின் நண்பனையோ இல்லை பகைவனையோ யார் என்று அறுதியிட்டு கூறமுடியவில்லை.

  8781202.jpg
சங்க கால சோழர் நாணயம்
சங்க கால சோழர் நாணயம். 

முன்பக்கம் யானையும் பின்பக்கம் புலியும் காணப்படுகிறது.

அமராவதி ஆற்றுப்படுகையில், சங்ககாலச் சோழர்காசு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. காசின் முன்பக்கத்தில் காளை உருவம் நின்ற நிலையிலும் பின்பக்கத்தில் புலி உருவம் கோடுகளினால் வரையப்பட்டும் இருக்கிறது. இந்நீள்சதுர வடிவச் செப்புக் காசில் காளையின் கீழே நந்திப் பாதச் சின்னங்கள் காணப்படுகின்றன. காசில் உள்ள காளை, அச்சுக் குத்திய வெள்ளி முத்திரைக் காசுகளில் உள்ள காளையைப் போலவே உள்ளதால் இக்காசு வார்ப்பு முறையும், முத்திரை முறையும் கலந்து செய்யப்பட்டுளது. இந்தக் காசின் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என ஆறுமுக சீதாராமன் போன்ற தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, கி.மு. 3-ஆம் நூற்றாண்டளவில் வார்ப்பு முறையில் காசைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழர்கள் அறிந்திருக்கின்றனர். இது அவர்களின் மேம்பட்ட வாழ்விற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது

 

திருத்தணி - வேலஞ்சேரி செப்பேடுகளின் சுருக்கம்.

பராந்தகசோழனினின் 25 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட இச்செப்பேடு ஆங்கில ஆண்டு கி.பி. 932 ஆகும். 

விஷ்ணு,பிரம்மா, மரிச்சி,காஸ்யபா, சூரியா,உஷினாரா போன்றோர் இவன் குலத்தில் தோன்றினார்கள் என்றும், கர்காலன்,சிபி, கோச்செங்கணான் போன்ற சோழ முன்னோர்களின் செய்திகளும் காணப்படுகின்றன. இச்செப்புப்பட்டயத்தின் சமஸ்கிருதப் பகுதி சோழ மன்னர்களின் பட்டியலையும் தருகிறது. அதில் கோச்செங்கணான் என்று ஒருவன் குறிப்பிடப்படுகிறான், அவன் மகன் ஒன்றியூரான் என்றும், அவன் மகன் சிறந்த போர் வீரன் என்றும், அவன் மகன் ஆதித்யன் என்றும் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்யன் தந்தையான விஜயாலயனுக்கு ஒன்றியூரான் தந்தை என்றும், ஒன்றியூரானின் தந்தையான கோச்செங்கணான் என்பவன் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளான் என்றும் அறிய முடிகிறது. இலக்கியங்களில் காணப்படும் பெருஞ்சேரல் இரும்போறையோடு போரிட்டு வெற்றி கண்ட கோச்செங்கணான் இவனா என்பது ஆய்வுக்குரியதாகும். மேலும் கரிகாலன் காலத்திய மூன்று நிகழ்ச்சிகள் பற்றி இச்செப்பேடு கூறுகிறது.

1. கரிகாலன் சோழர்களின் புகழை இமயம் வரை பரப்பினான்

2. காவேரியாற்றின் இரு கரைகளிலும் அணைகள் கட்டி வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தினான்.

3. காஞ்சியில் பல அரண்மனைகள் கட்டினான்.

விஜயாலயனின் தந்தை பெயர் ஒற்றியூரான் என்றும் ஆதித்த சோழனின் மகனாகிய முதலாம் பராந்தகன் இராமேஸ்வரம், திருவரங்கம், கன்னியாகுமரி கோயில்களுக்கு துலாபாரம் அளித்துள்ளான் என்ற புதிய செய்தியையும் முதலாம் பராந்தகசோழனினின் வேலஞ்சேரி செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

திருத்தணி. தமிழ்நாடு அரசு தொள்ளியல் துறை பதிப்பு 2010 பக்கம் 85

  na.png
 
 
   
 

மேற்கோள்கள்

  1. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பாகம் ஒன்று பக்கம் 211.
  2. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி - பாகம் ஒன்று. பக்கம் 221.
  3. ஆதித்த கரிகாலன் ISI.ii, பக்460-ம் N.2-ம்

உத்தம சோழன், கி.பி 950 முதல் கி.பி 957

உத்தம சோழன், கி.பி 950 முதல் கி.பி 957 வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழனின் மகனாவான். கண்டராதித்தன் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய இவன் பதவிக்கு வரவில்லை, பதிலாக இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தர சோழன் பதவிக்கு வந்தான். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவன் 12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தான். இவன் சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. இவனைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் இராஜராஜ சோழன் அரியணை ஏறினான்.

சோழ மன்னர்களின் மண உறவுகள்

01. விசயாலய சோழன் மனைவி வலங்கைமான் ஆவூருக்கு அருகில் உள்ள ஊத்துக்காடு 

       என்னும் ஊரில் மழவராயர் குடும்பத்தில் பிறந்தவர்

02. விசயாலய சோழன் மகன் முதலாம் ஆதித்தசோழன் வல்லவராயர் குடும்பத்தில் பிறந்த

       இளங்கோப்பிச்சியை மணந்தான்

03. முதலாம் ஆதித்தசோழன் மகன் கன்னரதேவன் கொடும்புரார் புதல்வி பூதிமாதேவி 

       அடிகளை மணந்தான்

04. முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையர் மகளை மணம் புரிந்தான்

05. கண்டராதித்த சோழன் மழவராயர் குடும்பத்தில் பிறந்த செம்பியன் மாதேவி என்பவரை

       மணந்தான்.

கல்வெட்டு திருக்கோடிக்கா திருக்கோடிக்காவுடையார் கோயில். கும்பகோணம். கி.பி 982 உத்தமசோழ்ன் 11ம் ஆட்சி ஆண்டு.

ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்ம(ர்க்)கு யாண்டுயக 

ஆவது வடகரை நல்லாற்றூர் நாட்டு திருக்கோடிக்காவில்

மஹாதேவர்க்கு ஸ்ரீ உத்தம சோழதேவரை திருவயிறு

வாய்த்த மழவரையர் மகளார்

பராந்தக மாதேவ (டிகளார்) ராந செம்பியன் ம(ர)ஹ(ர) தேவியார்

06. அரிஞ்சய சோழன் வைதும்பராயர் என்னும் பட்டமுடைய கல்யாணி என்பவளையும், 

       கொடும்புரார் புதல்வி பூதி ஆதித்த பிடாரி என்பவளையும் மணந்தான். 

07. இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் மலையமான் ( சேதிராயர்) வம்ச 

       வானவன்மாதேவியை மணம் புரிந்தான்

08. உத்தம சோழன் மழபாடியார் (மழுவாடியார்) வம்ச மழபாடித் தென்னவன் 

      மாதேவியையும், இருங்களார் குடும்பத்தில் பிறந்த இருங்கோளர் மகள் வானவன் 

      மாதேவியையும், விழுப்பரையர் குடும்பத்தில் பிறந்த கிழானடிகள் என்பவளையும் 

      மணந்திருந்தான்

09. இராசராசசோழனின் தாய் திருக்கோவிலூர் மன்னன் மலையமான்(சேதிராயர்) மகளான 

       செம்பியன் மாதேவியாவார்

10. மாமன்னன் முதல் இராசராச சோழன் பழுவேட்டரையர் மகள் பஞ்சவன் மாதேவியை மணந்தான்

11. மாமன்னன் முதல் இராசராச சோழனின் தமக்கை முதலாம் குந்தவை வல்லவரையன் 

      வந்தியதேவனை மணந்தாள்

 

முதலாம் இராஜராஜ சோழன் 5884999.jpg
 
இராசராச சோழன். 

சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

தொல்லியல் புலவன் டாக்டர் இரா. நாகசாமியின் தொல்சீர் பார்வையில் மாமன்னன் இராச ராசன்.

சீர்மிகு சுந்தரச் சோழரின் செல்வ!

செந்திரு மடந்தை வானவன் தேவி

எழில்மான் பயந்த புலியின் ஏறே!

கரிகால் வளவன் பின்வரு காவல!

ஐப்பசித் திங்கள் சதய நாள் பிறந்தோய்!

அக்கன் குந்தவை அன்பினில் வளர்ந்தோய்!

அருமொழி என்னும் இயற்பெயர் கொண்டோய்!

இராசர் தம்ராசன் எனும்பெயர் ஏற்றோய்!

காந்தளூர் சாலை கலமறுத் துகந்தோய்!

வேங்கை நாடும் கங்க பாடியும்

தடிகை பாடியும் நுளம்ப பாடியும்

குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்

எண்டிசை புகழ்தர ஈழமண் டலமும்

இரட்டபாடி ஏழரை இலக்கமும்

முந்நீர் பழந்தீவு பன்னி ராயிரமும்

திந்திறல் வென்றி தண்டார் கொண்ட

ராஜகே சரிக் கோவே உந்தன்

வாளொளி படரா நாடும் உளதோ?

வேட்புலம் முதலாய் வென்றியாற் கொண்ட

காடும் நாடும் கல்லும் தெற்றியும்

திணைத் திளியளவே ஆயினும் தவிரா

தூர்தொறும் ஊர்தொறும் ஊன்றியே அளந்து

விளைநிலமிது; விளையா நிலமிது@

இறைதரு நிலமிது; இறைஇலி இதுவென

வளமையின் வகையால் தரம்தரம் பிரித்து

வளநா டுடனே பல்புரம் அமைத்து

பழம்பெயர் தவிர்த்து தன்பெயர் நிறீஇ

மண்டலம் கூற்றம் வளநா டூரென

மண்ணுவ கறியா ஆண்புடன் வகுத்து

வரியி லிடுவோர், வகைபல செய்வோர்

கணக்கர், ஓலை, கண்காண் புரிவோர்

பண்டா ரத்தின் பொத்தக முடையோர்,

பட்டோ வையிடு பூட்சிப் பாட்டம்,

திணைக்க ளத்துடனே, திருவாய்க் கேழ்வி,

நடுவு இருக்கை, நல்லறம் பகர்வோர்,

பெருத்தரம், சிறுகரம், வேளைக் காரர்,

அதிகார கரெனப் பாங்குட நமர்த்தி

ஊர்தொறும் குடவோ லைமுறை நிறுவிய

உலகளந்த சோழ! உன்சீர் இந்த

உலகெலாம் பரவி புலவர்தம் நாவில்

இன்றும் உளதெனில் பிறிதும் உண்டோ

புகழ்தனைப் பெறவே!

தென்னா டுடைய தேவினை நாளும்

தேந்தமிழ் இசையால் பாடிய மூவர்

தேவரங்கள் காணா தொழிய

திருநா ரையூர் நம்பியின் துணையால்

தில்லைப் பதியில் பொல்லாப் பிள்ளை

திருக்கர நீட்ட அறைதனை தெரிந்து

மன்றுள் ஆடும் தௌ¤ தேனுக்கும்

மன்னி அருளும் மலர்க் கொடிதனக்கும்

பதிகம் பாடிய மூவர் தமக்கும்

அன்புடன் திருவிழா அமைவுற எடுத்து

திருந்திய கதவம் திறனுடன் திறந்து

மறைந்த பாக்களை புற்றினில் கண்டு

மறையோர் புகழ இமையோர் வியக்க

இவ்வுல கெங்கும் இசைப்பா தந்த

திருமுறை கண்ட பெரும் புகழ்ச் சோழ!

நின்பெயர்

தமிழ் உளவரியும் திகழ்ந்திடும் அன்றோ!

தஞ்சைமா நகர்தனிலே தரணியெலாம் போற்றவே

தக்கின மாமேருவெனப் பெருங்கோயில் படைத்தனையே

பெருங்கோயில் அதுதனையும் கருங்கல்லால் எடுத்தனயே

கல்எல்லாம் அரும்பணியால் கலைப் பொருளாய் மாற்றினையே!

கலைமிளிர கண்வியக்கும் சிலைவடிவாய் நிறுத்தினையே

சிலைகளையே செகம்புகழ செம்பாலும் வடித்தனையே

கண்கவரும் ஓவியமும் வெண்சுதையில் விளைத்தனையே

எண்ணிலா அணிகலன்கள் எண்ணியே அளித்தனையே

பண்செய்த பயிர்நிலங்கள் நெல்அளக்க விடுத்தனையே

நொந்தாமல் விளக்கெரிய நற்பசுக்கள் கொடுத்தனையே

பதிகங்கள் பாடிடவும் பரதங்கள் ஆடிடவும்

பரிகலன்கள் எடுத்திடவும் பல்கணக்கு எழுதிடவும்

மெய்காத்து நின்றிடவும் பல்லோரை அமர்த்தினையே

உயிர்அனைய தமக்கையுடன் உயர்காதல் தேவியரும்

உந்தானைத் தலைவருடன் உவந்தளித்தோர் கொடைகளையே

கல்லிலே வெட்டிவைத்துப் புதுச்சரிதம் படைத்தோய்நீ!

பரதவள நாடுமே பார்த்திப் புரவலன்நீ!

சொற்கோயில் எடுப்போரும் புனைந்தறியா புகழ்கோயில்

கற்கோயில் என்போமோ! கலைக்கோயில் என்போமோ!

புதியரில் புதியன் நீ! பழையரில் பழையன் நீ!

பண்பன் நீ! அன்பன் நீ! பக்தன் நீ! சித்தன் நீ!

சிவனடி மறவாச் செம்மால்! சிவபாதசேகர!

முத்தமிழ் பெருமை மூவுலகேற்றிய மும்முடிச்சோழ!

இத்தரை எங்கும் நின்புகழ் நிலைக்கும்

ஆயிரம் ஆயிரம் அயீரம் ஆண்டே!

தஞ்சை தந்த இராஜ ராஜ!

தரணியில் நிலைப்பாய்!

ஆயிரம் ஆயிரம் ஆயிர மாண்டே!

தொல்லியல் புலவன்

டாக்டர் இரா.நாகசாமி

மா மன்னன் இராசராச சோழன் குறிப்புகள் (ஆய்வுக்குரியவை)

இயற்பெயர் - அருண்மொழித்தேவன் (அருண்மொழிவர்மன்)?

பிறந்தநாள் 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் (கி.பி. 943 என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது. (உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடு)

இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

சிறப்புப் பெயர்கள் - 42 

  1. இராசகண்டியன்

  2. இராசசர்வக்ஞன்

  3. இராசராசன்

  4. இராசகேசரிவர்மன்

  5. இராசாச்ரயன்

  6. இராசமார்த்தாண்டன்

  7. இராசேந்திரசிம்மன்

  8. இராசவிநோதன்

  9. இரணமுகபீமன்

10. இரவிகுலமாணிக்கன்

11. இரவிவம்சசிகாமணி

12. அபயகுலசேகரன்

13. அருள்மோழி

14. அரிதுர்க்கலங்கன்

15. பெரியபெருமாள்

16. அழகியசோழன்

17. மும்முடிச்சோழன்

18. பண்டிதசோழன்

19. நிகரிலிசோழன்

20. திருமுறைகண்டசோழன்

21. செயங்கொண்டசோழன்

22. உத்தமசோழன்

23. மூர்த்தவிக்கரமாபரணன் 

24. உத்துங்கதுங்கன்

25. உய்யக்கொண்டான்

26. உலகளந்தான்

27. தெலிங்ககுலகாலன்

28. கேரளாந்தகன்

29. மூர்த்தவிக்கரமாபரணன்

30. சோழேந்திரசிம்மன்

31. சோழநாராயணன்

32. சோழகுலசுந்தரன்

33. சோழமார்த்தாண்டன்

34. பாண்டியகுலாசனி

35. சிவபாதசேகரன்

36. சிங்களாந்தகன்

37. சத்துருபுஜங்கன்

38. சண்டபராக்ரமன்

39. ஜனநாதன்

40. சத்திரியசிகாமணி

41. கீர்த்திபராக்கிரமன்

42. தைலகுலகாலன்

தாய் தந்தையர் - வானவன் மாதேவி சுந்தரசோழன்

உடன் பிறந்தோர் - ஆதித்த கரிகாலன் (அண்ணன்) குந்தவை (அக்கை)

மனைவியர் 15

1. உலக மகாதேவி - (தந்திசக்தி விடங்கி) பட்டத்தரசி

2. சோழ மகாதேவி

3. அபிமானவல்லி மகாதேவி

4. திரைலோக்கிய மகாதேவி

5. பஞ்சவன்மகாதேவி

6. பிருத்திவிமகாதேவி

7. இலாடமகாதேவி

8. மீனவன் மகாதேவி - பாண்டிய நாட்டு இளவரசி

9. வானவன் மகாதேவி  (திருபுவன மாதேவி. வானதி) - இராசேந்திர சோழனின் தாய்

10. வில்லவன் மகாதேவி- சேர நாட்டு இளவரசி

11. வீரநாராயனி

12. நக்கந்தில்லை அழகியார்

13. காடன் தொங்கியார்

14. இளங்கோன் பிச்சியார்

15. தைலாமாதேவி

மக்கள் - இராசேந்திர சோழன், எறிவலி கங்கைகொ ண்ட சோழன் என்னும் இரு ஆண்மக்களும், மாதேவடிகள், அருமொழி சந்திர மல்லியரான கங்கமாதேவியார், இரண்டாம் குந்தவைஎன்னும் மூன்று பெண்மக்களும் இருந்தனர். 

(30 கல்வெட்டுகள். வை.சுந்தரேச வாண்டையார். பக்கம் 29)

அரியனை அமர்ந்தநாள் - ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985

ஆட்சி ஏற்ற வயது - 42ம் வயது

தஞ்சை பெரியகோயில் கட்டியது - ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை

கும்பாபிசேசம் செய்த நாள் - 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்)

இறந்த நாள் - 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)

முதல் திவசம் செய்தது - 6/01/1015 (1015 மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)

வாழ்ந்த கால வயது - 71 ஆண்டுகள்

ஆட்சிச் காலம் - 28 ஆண்டுகள் 8 மாதங்கள் 29 நாட்கள்

சோழ கல்வெட்டு செய்திகள்

தமிழகத்தில் சோழர் காலத்தில் தான் ஆயிரகணக்கான கல்வெட்டுகள் கோயிற்சுவர்களில் பொறிக்கப்பட்டன

கல்வெட்டுகளின் அமைப்பு

கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகளைப் பெரும்பாலும் ஐந்து பெரும் பகுதிகளாக பிரித்தனர்

1. கல்வெட்டின் தொடக்கம் அல்லது மங்கலவாசகம்

2. கல்வெட்டு எழுதப்பட்ட காலம்

3. கல்வெட்டுச்செய்தி

4. கையெழுத்து

5. முடிவுரை அல்லது ஓம்படைக்கிளவி

சோழர் கால தொல் சீர் தமிழ் மொழி

சோழராட்சியில் நிர்வாக முறைகளை கோயில் நிருவாகம், ஊரவை நிருவாகம், அரசு நிருவாகம் என் மூன்றாகப் படுத்தினர்.

கோயிலை வழிப்பாட்டிற்குரிய தலமாக மட்டும் கருதாமல், ஊரவை நிருவாகத்தின் செயலகமாகவும் கருதினர்.

கோயிலுள் இருக்கும் மண்டபத்தை திருலோக்கம் எனவும், கோயிலுள் இருக்கும் சபையை மன்று அல்லது அம்பலம் என்றும், அரண்மனையில் உள்ள இராசசபையை உள்ளாலை என்றும், கோயிலிலமைந்த மருத்துவ மனையை ஆதுலர் சாலை என்றும் அழைத்தனர்.

கோயிலில் ஆடுபவர்கள், மற்றும் பாடுபவர்கள் - பதியிலார்

பூசை வழி படைக்கும் பண்டங்கள் - அமுது படி

உணவு - அடிசில்

அரசசபையில் அடங்கிய பெருந்தரத்து அதிகாரிகள் - மன்றாடிகள்

சேனைத் தலைமை ஏற்று நடதிய அதிகாரிகள் - படைமுதலி

காலாட்படையினர் - கைகோளப் பெரும் படை

அமைச்சர்களுக்கு ஒத்த அதிகாரம் படைத்தவர்கள் - உடங்கூட்டம்

மன்னர்களுக்கு நெருங்கிய தொண்டாற்றிய ஆடவர் மற்றும் பெண்டிர் - அணுக்கமார்மற்றும் அணுக்கியர் என்றும் அழைக்கப்பட்டனர்.

இராசராசசோழன் காலத்து தஞ்சாவூர் நகர எல்லைகள்

1. கிழக்கு எல்லை - புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்

2. மேற்கு எல்லை - வல்லம் களிமேடு

3. வடக்கு எல்லை - விண்ணாறு (வெண்ணாறு)

4. தெற்கு எல்லை - நாஞ்சிக்கோட்டை தெரு

தஞ்சாவூர் அரண்மனை

தஞ்சாவூர் அரண்மனை முதன் முதலில் மாமன்னன் இராசராசசோழனால் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு, பின்னர் நாயக்க மன்னர்களாலும் மாரட்டிய மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. இப்போது அரண்மனை 534 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே உள்ளது. அரண்மனையில் அரசவை, அந்தப்புரம், மணிமண்டபம், ஆயுதகோபுரம், தர்பார் மண்டபம், சரசுவதிமகால் நூல்நிலையம். சங்கீதமகால், கந்தக கோபுரம்,ஏழடுக்கு மாளிகை, குதிரை, யானை லாயங்கள், சுதை உருவங்களுடன் கூடிய இருட்டறைப் பகுதிகளும் கானப்படுகின்றன

இராசராச சோழன் காலத்தில் சோழ நாடு.1014 C.E. 2544843.png
 
புகழ் பெற்ற இளவரசன் 

முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன.

இரண்டாம் ஆதித்தன் கொலை இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு மூலம், இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது தெரியவருகிறது. இக்கல்வெட்டு 'பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து, விற்கும் பணியினை மன்னனின் கட்டளைப்படி சதுர் வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக தெரிவிக்கிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5-ம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராஜராஜ சோழனுடையது என்பது தெளிவாகிறது. உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.

குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தர சோழன் தன் இறுதி நாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். மகனை இழந்த சுந்தர சோழன், தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்து இறந்தான்.[1]

உத்தம சோழனுக்கு இக்கொலையில் சம்மந்தம் இல்லையென்று சொல்லவதற்கில்லை, உத்தம சோழனுக்கு அரியணை ஏறவேண்டும் என்ற ஆசையிருந்தது. மன்னர் பதிவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை. அரச குடும்பத்தின் மூத்த கிளையினன் என்ற காரணத்தால் அரியணை தனக்கே என்று அவன் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத் திரட்டி, இரண்டாம் ஆதித்தனைக் கொன்று, தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு சம்மதிதான் என்றும் திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்குடிக் கல்வெட்டிலும் உள்ள குறிப்புகளை இணைத்துப் பார்க்கும் பொழுது புலனாகிறது.[2]

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்

விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்.

இதை, அருண்மொழியில் அடக்கத்தால், உத்தம சோழனின் பேராசை வெற்றிகண்டது. அருண்மொழியை, கோழை, அரசியல் திறமை இல்லாதவன், சட்டப்படி உரிமை இல்லாதவன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, அவன் உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக் கொடுத்து, அவன் காலத்திற்குப் பிறகு, தான் பட்டத்திற்கு வருவதற்காக பொறுமையுடன் இசைந்தான் என்று கொள்ளலாம். மேலும்,

அருண்மொழியின் உடலில் காணப்பட்ட சில அடையாளங்களைப் பார்த்த பொழுது, மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூஉலகுக்கு வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை ஆளும் பொறுப்பைத் தானே மேற்கொண்டான் என்றும் தெரிவிக்கின்றன.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் 8892504.jpg
 
"பெரிய கோயில்' என்ற அடைமொழியைப் பெற்றது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். 

இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால், இதற்கென ஆர்டர் கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடி உயரமுடைய அம்மன் பெரியநாயகி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள். 

இங்கு தல விநாயகர் கன்னி விநாயகர் ஆவார். மூலவர் பிரகதீஸ்வரரை, ராஜராஜ சோழன் தன் காலத்தில் ராஜராஜீஸ்வரமுடையார் என்ற திருநாமத்தில் வணங்கியுள்ளான். 

உலகிலேயே இங்கு தான் சண்டிகேஸ்வரருக்கு மிகப்பெரிய தனி சன்னதி உள்ளது. இங்கு நவக்கிரக சன்னதி இல்லை. சிவனே நவக்கிரக நாயகனாக விளங்குவதால், நவக்கிரகங்களுக்கு பதில் நவ லிங்கங்கள் உள்ளன. 

தோஷ பரிகாரங்கள் இந்த லிங்கங்களுக்கே செய் யப்படுகிறது. கோபுரம் பிரமிடு அமைப் பில் இருப்பதாலும், ராஜராஜன் ஆத்மார்த்தமாக கட்டிய கோயில் என்பதாலும், வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மூலஸ்தானத்தில் சந்திரகாந்தக்கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் உஷ்ணமாக இருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. 

மிகப்பெரிய லிங்கம் இருந்தாலும் இங்கு பீடம் இல்லை. முதலில் உள்ள மராட்டிய நுழைவு வாயில் கோபுரம் 1803ல் கட்டப்பட்டது. இதை அடுத்துள்ள கேரளாந்தகன் நுழைவு வாயில் கோபுரத்தில், 5 நிலை 7 கலசங்கள் உள்ளன. 

மூன்றாவது உள்ள ராஜராஜன் நுழைவு வாயில் கோபுரத்தில் 3 நிலை, 5 கலசங்கள் உள்ளன. இது கி.பி. 988ல் கட்டப்பட்டது. கருவூர் சித்தர் சன்னதி பின்புறம் உள்ள மரத்தில் மரப்பல்லியை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

ராஜராஜ சோழன்- வானவன் மாதேவியின் மகன் ராஜேந்திர சோழன். இவன் தன் தந்தை கட்டிய பெரிய கோயிலைப் போலவே, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கோயிலை கட்டியுள்ளான். ராஜராஜனும் மற்றவர்களும் இக்கோயிலுக்கு 183 கிலோ தங்க பாத்திரங்கள், 22 கிலோ தங்க வைர நகைகள், 222 கிலோ வெள்ளி பாத்திரங்கள், பூஜைப்பொருள் மற்றும் நைவேத்தியத்திற்காக 40 கிராமங்கள், 10 ஆயிரம் பசுக்கள் தந்துள்ளனர். 

16.5 அடி உயரமும், 7.5 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய துவார பாலகர்கள் இங்குள்ளனர். இக்கோயிலின் கோபுர கலசம் 340 கிலோ எடையுள்ள செம்புத்தகடால் ஆனது. இதற்கு 12.5 கிலோ தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இக்கோயிலை கட்டுவதற்கு ஒன்றரை லட்சம் டன் எடையுள்ள கற்கள் தேவைப்பட்டது. 

இவை திருச்சி அருகே உள்ள மம்மலையில் இருந்து எடுத்து வரப்பட்டது. யுனெஸ்கோவின் உலக பாரம் பரிய நினைவுச்சின்னங்கள் பட்டியலில் இக்கோயில் இடம் பெற்றுள்ளது. 

உலக அளவில் இதன் கட்டிடக் கலை சிறப்பை வியக்காத வல்லுனர்களே கிடையாது. இராஜராஜ சோழன் சிவபெருமானுக்கு ஆத்மார்த்தமாக கட்டிய (கி.பி.985 - 1012)அரும்பெரும் ஆலயம் இது.  இங்குள்ள மூலவர் பிரம்மாண்டமானவர். 13 அடி உயரம் உடையவர். ஆவுடை மட்டும் 54 அடி சுற்றளவு உடையது. மேல் பாணத்தின் சுற்றளவு மட்டும் 23 அடி . இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை.  அம்பாள் 9 அடி உயரம் உள்ளவர். இங்குள்ள நந்தியைப்போல் வேறு எங்கும் கிடையாது. அத்தனை பிரமாண்டமாக இருக்கும். இது 12 அடிஉயரம் உடையது. 

அகலம்(குறுக்களவு) 6 அடி ஆகும். உட்கார்ந்துள்ள நீளம் 9 அடி. இது திருச்சிக்கருகில் உள்ள பச்சைமலையிலிருந்து கல் எடுத்து வந்து இதை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.  கோபுரத்தின் உச்சி நிழல் தரையில் விழாத வகையில் கட்டப்பட்டுள்ளது அதியசம். இங்குள்ள முருகன் சந்நிதி நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது.500 வருடம் பழமையானது.  விநாயகர் சந்நிதி மகாராஷ்டிர சரபோஜி மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. கோபுரத்தின் அடித்தளத்தில் சோழ மன்னரின் மானியங்கள் திருப்பணிகள், தானங்கள் குறித்த செய்திகள் கல்வெட்டுக்களாக செதுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

சோழர்களின் மெய்க் கீர்த்திகள் பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவ்வறச் செயல்களை, தரும சாத்திரங்களைத் தழுவி செப்பேடுகளில் பொறித்து உரியவர்க்கு அளித்து வந்தனர். இச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்தனர். தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை இனிய தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை உண்டாக்கியவன் இராஜராஜ சோழனே.

இவனுக்குப் பிறகு இவன் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். இவன் மகன் முதலாம் இராஜேந்திரனின் ஆட்சித் தொடக்கத்தில் குறைந்த அளவிளான மெய்க்கீர்த்தி, நாளடைவில் விரிந்து அவ்வப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் தன்னுள் சேர்த்துக் கொண்டது. சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் இத்தகைய வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன.

இராஜராஜனின் மெய்க் கீர்த்திகள்.

சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க் கீர்த்திகளை உடையவராக இருந்தனர். முதலாம் இராஜராஜன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.

கீழ்வருவது இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.

ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்.

இரண்டாம் வகையான மெய்க் கீர்த்தியிலும் காந்தளூர்ச்சாலை வெற்றிக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவனது 20ம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் வகை மெய்க்கீர்த்தியில் இராஜராஜன் மதுரையை அழித்தான் என்றும். கொல்லம், கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டான் என்றும் கடல் கடந்த பகுதிகளின் மன்னர்கள் அவனுடைய பரிவாரமாகப் பணிபுரிந்தனர் என்றூம் கூறுகிறது.

போர்கள் 

கேரளப் போர் இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராஜராஜனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும், பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.

இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமரபுஜங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, 'சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. பாண்டிய, கேரள சிங்கள நாடுகளை தென்னாட்டு அரசுகள் மூன்றும் இணைந்திருந்து. இராஜராஜன் ஆட்சியிலும் இக்கூட்டணி செயல்பட்டது. இம்மன்னனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி(கிபி 978 - 1036). இம்மன்னனின் கல்வெட்டுகள் திருவாங்கூரின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

மலைநாடு கி.பி 1008ம் ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.

இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் கலிங்கத்துப் பரணி உதகையைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும் இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும் மேலும் இது இராஜராஜ சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும் கூறுகிறார்.

ஈழப் போர். 

ஈழம் இராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் கி.பி. 993ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது', 'தஞ்சையில் இராஜராஜ சோழன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், கி.பி 981ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராஜராஜனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு(கி.பி 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னட வீரார்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

ஈழப் படையெடுப்பின் விளைவுகள் சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்க பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.

பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விஜயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான்.

திருக்கோணேஸ்வரம் கோயில் - இலங்கை 4431324.jpg
 
ஈழத்தில் சோழக் கோயில்கள் இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராஜராஜன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது கி.பி 10 மூதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே(தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.

பிற வெற்றிகள் மைசூர் நாட்டைச் சேர்ந்த கங்கபாடியும், நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராஜராஜனின் காந்தளூர்ச் சாலை வெற்றியைத் தொடர்ந்து, கீழைச் சாளுக்கியரை எதிர்த்து வேங்கி நாட்டிற்குள் படையெடுப்பதற்கு முன்னர் மைசூர் நாடு கைப்பற்றப்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படும் மெய்க்கீர்த்தியில் இருந்து அறிய முடிகிறது. பின்னர் கொங்கு நாட்டிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து தடிகைபாடியும் தலைக்காட்டையும் முதலில் தாக்கிய பொழுது சோழருக்கு பெரும் வெற்றி கிட்டியது. மேலும் அடுத்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக கங்க நாட்டின் மீதான ஆதிக்கமும் சோழருக்குக் கிடைத்தது.

மேலைச் சாளுக்கியர் மேலைச் சாளுக்கியர் இராஜராஜன் தலைமையில் ஏற்பட்ட சோழப்படையெடுப்பை உதாசீனம் செய்யவில்லை. கி.பி 922ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் இரண்டாம் தைலப்பன் சோழ மன்னனுக்கு எதிராக ஒரு வெற்றி பெற்றதாகவும் அவனிடமிருந்து 150 யானைகளைக் கைப்பற்றியதாகவும் கூறுகிறான்.(சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுபடி கி.பி 922ல் இந்தப் போர் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது ஆனால் இதை உண்மையென்று நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை. இராஜராஜ சோழனின் கல்வெட்டுக்களின் படி சாளுக்கியர் மீதான படையெடுப்புக்கள் எதுவும் கி.பி.994 ஆண்டிற்கு முன் எதுவும் நடக்கவில்லை என்று தெரியவருகிறது.)

சத்யாசிரயனுடன் போர் 922ம் ஆண்டிற்குப் பிறகு சில ஆண்டுகளில் இரண்டாம் தைலப்பன் இறந்தான். அதன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராஜராஜன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாளவ நாட்டு பாரமாரர் இதே சமயம் சாளுக்கியர்களை வடக்கிலிருந்து தாக்கினர். மேலைச் சாளுக்கியர் இருபெரும் பகைவரை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போரிட்டுச் சமாளிக்க முடியாமல் திணறினர். ஏறக்குறைய கி.பி 1003ம் ஆண்டைச் சேர்ந்த இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் இச்சோழமன்னன் 'இரட்டப்பாடி' ஏழரை இலட்சம் என்ற நாட்டைப் படையெடுத்து அதைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றன.

ஆனால் இக்கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும். சத்தியாசிரயன் இராஜராஜனது கடல் போன்ற பெரும்படையக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்வது நம்பக்கூடியதாயுள்ளது. 

இராஜேந்திரன் தலைமை தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் கி.பி 1007ம் ஆண்டைச் சேர்ந்த(929) சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராஜராஜ நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு, தமிழரைக் கொன்று (திருள-மாரி) சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் வஸ்து-வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது.

பகைவனின் கல்வெட்டுகளில் காணப்படும் நாச வேலைகளையும் பாலியல் வல்லுறவுக்களையும் சோழ இளவரசன் செய்திருக்கக்கூடுமா என்ற வினா எழுந்தாலும் இராஜேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது.

சாளுக்கியப் போரின் விளைவுகள் சோழர்களின் வடமேற்குப் படையெடுப்பின் மூலம் மைசூரில் கங்கர்களும் நுளம்பர்களும் ஆண்ட பகுதிகளோடு ஏறக்குறைய இப்போதையை பெல்லாரி மாவட்டம் முழுவதும் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. இராஜராஜனின் கல்வெட்டோ அல்லது இக்காலச் சாளுக்கிய மன்னரது கல்வெட்டுக்களோ பெல்லாரியில் இதுவரை அகப்படவில்லை. ஆனால் பொதுவாக, சோழ நாட்டின் தூரப் பகுதிகளில் அவர்களுடைய கல்வெட்டுகள் பெரிதும் காணப்படுவதில்லை. கங்கை, வேங்கி மண்டலங்களுக்கென்றே ஒரு மாதண்ட நாயகனை இராஜராஜன் தன் ஆட்சியின் இறுதியில் அமர்த்தியிருந்தான் என்பதே இவ்விரு மண்டலங்களும் ஒன்றோடொன்று இணைந்திருந்ததோடு சோழநாட்டுடன் சேர்ந்திருந்தன என்பதற்கும் போதுமான சான்றாகும்.

வேங்கி இராஜராஜ சோழன் ஆட்சியின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியலின் தொடர்ச்சியாக, அவன் வேங்கி விவகாரங்களில் தலையிட வேண்டியதாயிற்று, கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் இத்தலையீடு இருந்தது. சோழ ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே இராஜராஜனும் அவனுடைய சந்ததியினரூம் தங்கள் வலிமையைத் துங்கபத்திரை ஆற்ற்றின் கிழக்குக் கரையோரத்தில் பரவச் செய்ய முடிந்ததே தவிர, அவ்வாற்றின் மறுபக்கத்தில் தம் வலிமையைப் பரவ செய்ய முடியவில்லை. கீழைச் சாளுக்கியர், மேலைச் சாளுக்கியருக்கிடையேயான வேறுபட்ட நிலைகளே இதற்குக் காரணமாகும்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வேங்கியை ஆட்சி செய்த காலத்தில், கீழைச் சாளுக்கியர்கள் மேலைத் தக்காண இராஷ்டிரகூடர்களுடன் தொடர்ந்து போரிட்டதன் விளைவாக வலியிழந்து, சோர்வுற்றதோடு உள்நாட்டுக் குழப்பத்திற்கும் பலியாயினர். சோழரின் வரவினால் கீழைச் சாளுக்கிய மன்னர் குடும்பம் உற்சாகம் பெற்று அடுத்து நூறு ஆண்டுகள் சோழரது அதிகாரத்திற்குற்பட்ட நண்பர்களாய்த் திகழ்ந்து, அதன் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனது சந்ததியினரான சோழ சாளுக்கியர் என்றழைக்கப்பட்டவரின் காலத்திலூம் சோழநாடும் மேம்படும் வகையில் உதவிபுரிந்து தங்கள் நன்றிக் கடனைத் தீர்த்தனர்.

மேலைச் சாளுக்கியரோ பல நூற்றாண்டுகளாக இராஷ்டிரகூடர்களின் அடிமைகளாக இருந்து அப்போது தான் இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாகா உருவெடுத்து மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சத்தியாசிரயனின் செப்ரோலு கல்வெட்டு கூறுவது போல, கீழைச் சாளுக்கியரின் வலிமையையும் தம்முடன் இணையச் செய்யும் முயற்சியையும் இவர்கள் மேற்கொண்டனர். ஆனால் வடக்கில் பாராமாரர்களாலும் தெற்கே சோழர்களும் இவர்களை ஒரே வேளையில் தாக்கியதால் தம் முன்னோரது ஆட்சியில் இருந்த இரட்டப்பாடி ஏழரை இலட்சம் பகுதியை இழக்காமல் பாதுகாப்பதைத் தவிர வேறு முயற்சிகளில் இவர்களால் ஈடுபடமுடியவில்லை. வேறு நாடுகளைத் தம் கீழ்க் கொண்டுவரும் முயற்சிக்கு இவர்களுக்கு நேரம் கிடைக்காததோடு, உற்சாகமும் இல்லாமல் போயிற்று. இந்நிலைக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் கூறமுடியாது என்றாலும் பொதுவாக எந்த அரச வமிசத்திலும் முதல் மன்னர்களே சிறந்த ஆட்சியாளர்களாயும் விளங்கினாலும் இத்தகைய அரச வமிசங்கள் தொடர்ந்து சில தலைமுறைகள் சிறந்து விளங்குகின்றன.

வடக்கில் சோழர் ஆட்சி பரவுதல் முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே நெல்லூர் வரையில் பரவியிருந்தது. இராஷ்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. இவர்கள் காலத்தில் சென்னைக்கு அருகேயுள்ள திருவொற்றியூர் உட்பட்டிருந்த வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான்.

வேங்கிப் போர் கீழைச் சாளுக்கியரின் இன்னல்கள் கி.பி 945 - 70ல் ஆட்சி செய்த இரண்டாம் அம்மன் காலத்தில் தொடங்கின இவ்வின்னல்களுக்குப் பேராசை கொண்ண்ட இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனுக்கும் கீழைச் சாளுக்கியரின் இளைய குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்களே காரணம்.

கி.பி 945ம் ஆண்டில் தன் ஒன்றுவிட்ட அண்ணனைப் புறக்கணித்துவிட்டு, இரண்டாம் அம்மன் அரியணையைப் பெற்றான். இளையவன் வழிவந்தவர்களான பாடபனும் இரண்டாம் தாழனும் ஆட்சியைக் கைப்பற்ற தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். முதலாம் பராந்தகச் சோழனை வென்ற இராஷ்டிரகூட மன்னம் மூன்றாம் கிருஷ்ணன், வேங்கி நாட்டின் மீதும் தன் கவனத்தைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய இளவரசர்களுக்கிடையே உண்டான உட்பகைகள் இம்மன்னனுக்குச் சாதகம் ஆயின. இரண்டாம் அம்மன் பேடகல்லு மன்னனான ஜடாசோட வீமனின் சகோதரியை மணந்தான். இக்காலத்தில் புகழ்பெற்று நிலவிய வீமன் தன் மைத்துனனுக்குப் பெரிதும் உதவிபுரிந்தான்.

இரண்டாம் அம்மனின் ஆட்சி இருபத்தைந்து ஆண்டுகள் அதாவது 970 வரை நிலவினாலும், இது நிலையற்றதாகவே இருந்தது. இம்மன்னன் அரியணை ஏறிய பொழுது இரண்டாம் யுத்தமல்லன் என்பவனோடு போரிட்டு வெற்றியடைந்தான். ஆனால் யுத்தமல்லனின் தோல்வி, அவனது புதல்வர்களான பாடபனாலும் இராண்டாம் தாழனாலும் பழிவாங்கப்பட்டது. வேங்கி நாட்டிலிருந்த சிலர், மற்றும் இராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ணன் உதவியுடன் இரண்டாம் அம்மனை நாட்டை விட்டே விரட்டி, அவனது அரியணையையும் கைப்பற்றினர்.

பாடபன், தாழன் ஆகியோரது செப்புப் பட்டயங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணனின் உதவி, இவர்களுக்கு இச்சமயங்களில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்திற்கு ஓடிவிட்ட அம்மன், கொலனு நாட்டுத் தலைவனான நிருபகாமாவின் உதவியுடன் நாடு திரும்பி 955க்கு முன்னர் தாழனது ஆட்சியை முடித்தான். கொலனுத் தலைவனின் மகளை மணந்த அம்மன், தாழனுடன் செய்த போரில் தாழனைக் கொன்றான். இது அம்மன் தன் தாயாதியான ஒரு மன்னனை விண்ணுலகத்திற்கு அனுப்பினான் என்று சக்திவர்மனுடைய படிப்பற்று பட்டயம் கூறுவதிலிருந்து புலனாகிறது.

ஆனால் விரைவிலேயே மூன்றாம் கிருஷ்ணன் வேங்கி நாட்டின் மீது மீண்டும் படையெடுக்க, அம்மன் இரண்டாம் முறையாக கலிங்கத்திற்குத் தப்பீ ஓடவேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சி அம்மனுடைய பதினோராம் ஆண்டிற்குப் பிறகே நடைபெற்றது என்று மாங்கல்லுப் பட்டயங்கள் கூறுகின்றன. வேங்கி நாட்டில் அம்மனுக்கு விரோதமான ஒரு கூட்டத்தின் ஆதரவைப் பெற்ற தானார்ண்ணவனிடம் ஆட்சிப் பொறுப்பை கிருஷ்ணன் அளித்தான். ஆனால் இராஷ்டிரகூடர் வேங்கியை விட்டு அகன்றவுடன், மீண்டும் அம்மன் தன் நாட்டை அடைந்து தானார்ணவனுடன் சமாதானம் செய்துகொண்டு, சிலகாலம் அந்நாட்டை ஆட்சி செய்தான். முடிவில் தானார்ணவன் மீண்டும் அம்மனுக்கு எதிராகக் கிளம்பீ அம்மன்னனைப் போரில் கொன்று தானே அரியணையைப் பற்றினான்.

வீமன், மூன்றாம் கிருஷ்ணனின் அதிகாரத்திற்குட்பட்டவனாயிருந்து, இம்மன்னன் வேங்கி நாட்டைக் கைப்பற்ற உதவியிருக்கக்கூடும். ஆனால், கிருஷ்ணனின் மரணத்திற்குப் பிறகு தனியுரிமையைப் பெற்று, அம்மன் மீது வெற்றிகொண்ட தானார்ணவனை எதிர்த்து, பொட்டாடி என்ற பகுதியைத் தாக்கி கைப்பற்றினான். இச்சண்டையில் வீமன், தானார்ணவனைக் கொன்று, அவனது குழந்தைகளை விரட்டியதோடு, வேங்கி நாட்டை முழுவதையும் கைப்பற்றினான். தானார்ணவனின் மரணத்திற்கும், இவன் மகன் முதலாம் சக்திவர்மனின் ஆட்சி தொடங்கியதற்கும் இடையேயான 25 ஆண்டுகள்(973 - 999) ஓரு இடையீட்டுக் காலம் என்றும் ஊழ்வினையால் ஏற்பட்ட தீயுழிக்காலம் என்றும் கீழைச் சாளுக்கியர் தம் சாசனங்களில் குறிப்பிடுகின்றனர்.

இராஜராஜ சோழன் அரியணையேறிய பொழுது, இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் எழுச்சியுற்றனர். தானர்ணவனின் மக்கள் சோழநாட்டில் தங்கியிருந்ததே மேலைச் சாளுக்கியருக்கு எதிராக கடைபிடிக்க வேண்டிய கொள்கையை உருவாக்க இராஜராஜனுக்கு பெரிதும் உதவியது. இவர்களையே கருவியாகக் கொண்டு, வேங்கிநாட்டின் விவகாரங்களில் தலையிட இராஜராஜ சோழன் துணிந்தான். அதே வேளையில் ஜடோசோட வீமனும் மேலைச் சாளுக்கியரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்.

கி.பி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது. இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். 

சோழமண்டலம்

தொன்மைக் காலத்திலிருந்தே சோழநாடு என்றிருந்த பெயர் இராசராசன் காலத்தில்தான் முதன் முதலில் சோழமண்டலம் என்று அழைக்கப்பட்டது.

சோழமண்டலம் எனும் பெயர் கி.பி. 1009 முதல் அழைக்கப்பட்டது என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.  

தஞ்சைப் பெரியகோயில் கட்டிட கலைஞர்கள்

  1. இராசராசசோழன்

  2. வீரசோழன் குஞ்சரமல்லன் ( ராசராசப் பெருந்தச்சன் என்ற கட்டிட கலைஞன் )

  3. மதுராந்தகன் நித்தவினோதப் பெருந்தச்சன் ( இரண்டாம் நிலை கட்டிட கலைஞன் )

  4. இராசராசசோழனின் தமக்கை குந்தவை பிராட்டியார்

  5. இலத்தி சடையனான் ( கண்டராதித்த பெருந்தச்சன் - இரண்டாம் நிலை கட்டிட 

      கலைஞன் )

  6. ஈசான சிவபண்டிதர் எனும் ராசகுரு

  7. இராசராசசோழனின் மகன் இராசேந்திரசோழன்

  8. இராசராசசோழனின் ராசகுரு சர்வசிவபண்டிதர்

  9. சேனாதிபதி கிருட்டிணன் இராமன் ( மும்முடிச்சோழன் பிரமமாராயன் )

10.தென்னவன் மூவேந்த வேளன் எனும் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனார் 

     ( கோயில் நிர்வாக அதிகாரி)

11. பவனபிடாரன் ( சைவ ஆச்சாரியார் தலைமைக் குரு )

கிபி 1003'ல் துவங்கி ஆறே ஆண்டுகளில் கட்டிமுடித்த ஆச்சரியம் தஞ்சை பெரிய கோயில். இந்த கோயிலுக்கு ராஜராஜன் வைத்த பேர் ராஜராஜேஸ்வரம். பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. பிறகு மாராத்தியர்கள் ஆண்ட போது அது பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பேர் பெற்றது. ( பிரகதீஸ்வரர் என்பது சமிஸ்கிருதப் பெயர் ). இன்று அதை நாம் தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கிறோம். 

கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதே! இவ்வளவு பெரிய கோயிலுக்கு நந்தி சற்றுச் சிறியதாக இருக்கிறதே! என்று கருதிய நாயக்க மன்னர்கள், ராஜராஜசோழன் வைத்த நந்தியை அப்புறப்படுத்திப் புதிய நந்தியை வைத்தார்கள். முந்தைய நந்தி, பிராகாரத் துக்குள் தெற்குப் பக்கம் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருப்பதை இன்றும் நாம் காண முடியும். 

பெரியகோயிலின் கோபுரத்தில் முதல் மாடியில் நாலாபுறமும் நாட்டிய சாஸ்திரத்தில் பரதமுனி குறிப்பிட்ட பரதநாட்டிய முத்திரைகளை சிவபெருமான்  ஆடிக் காண்பிப்பது போன்ற சிற்பங்கள் ராஜராஜசோழன் காலத்தில் செதுக்கப் பட்டன. மொத்தம் 108 சிற்பங்கள். அவற்றில் 81 சிற்பங்களை மட்டுமே சிற்பிகள் முடித்து, மிச்சத்தை அப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். ஏன்? காரனம் தெரியவில்லை 

மழைநீர்சேகரிப்புத் திட்டத்துக்கும் ராஜராஜ சோழனுக்கு சம்பந்தம் உண்டு என்றால் ஆச்சரியப் படுவீர்கள். மழைநீர் சேகரிப்பை முதன் முதலில் செயல்படுத்திய மன்னர் ராஜராஜசோழன்தான்! பெரியகோயிலில் விழும் மழைநீரை துளியும் வீணாக்காமல் அப்படியே கோயிலுக்கு அருகிலுள்ள சிவகங்கை குளத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்காகத் தரைக்கடியில் பெரிய குழாய்கள் போடப் பட்டன (இன்றும் அவற்றை நாம் காணலாம்). தவிர, தஞ்சாவூரிலுள்ள சேவப் பன்னவாரி என்னும் ஏரி மழைக்காலத்தில் நிரம்பிய பிறகு, அந்த நீர் வீணாகாமல் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத்துக்கு வாய்க்கால் மூலம் கொண்டுசெல்லப் பட்டு, வடிகட்டப்பட்ட பிறகு, அங்கிருந்து எல்லாத் தெருக்களுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.  

பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதற்கு நிர்வாக அலுவலராக இருந்த ஆதித்தன் தென்னவன் மூவேந்த வேளாளன் என்பவர் ராஜராஜ சோழனுக்கும் அவரது மனைவி லோகமாதேவிக்கும் செம்பில் உருவச் சிலைகள் செய்தார். ராஜராஜ சோழன் உயிருடன் இருக்கும் போட்தே செய்யப்பட்ட இச்சிலைகள் இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கெளதம் சாராபாய் தனியார் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ராஜராஜசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் ராஜேந்திர சோழர். 

பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் இந்தச் சிலையும் தற்போது வடக்கே சாராபாய் மியூஸியத்தில் இருக்கிறது. இச் சிலைகளை மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசு மீண்டும் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து, தஞ்சை கோயிலில் வைக்கவேண்டும் 

இராசராசன் இறந்த தினம்.

17/01/1014. தனது ஆட்சியாண்டு 29ல் மார்கழி பூர்வ பட்சத்தில் சதுர்த்தசி திதியில் இயற்கை எய்தினார்

முதல் திவசத்தை 6/01/1015ல் பிண்டமளித்து, பின் எட்டு பொற்பூக்களை கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி முதலாம் ராசேந்திரன் வழிபாடு செய்த இடம் திருவலஞ்சுழி அருகில் உள்ளது. இதற்குரிய கல்வெட்டும் அங்குள்ளது. இராசராச சோழனின் திருவுருவமும், கோப்பெருந்ட்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர்க் கோவிலில் இருக்கின்றன.

கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, கோணலாகப் புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்!  

ராஜராஜ சோழன் இறந்த பின் புதைக்கப் பட்ட இடத்தில் தற்போது எந்த அளவுக்குத் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தை ஒரு வல்லரசாக உருவாக்கிய அந்த மாமன்னர் புதைக்கப்பட்ட இடம் கேட்பாரற்று ஒரு மணல்மேடாகக் கிடப்பது வருத்தமான விஷயம். குறைந்தபட்சம் அங்கே புலிச் சின்னத்தோடு கூடிய ஒரு நினைவகம் கட்ட வேண்டும. 

இராஜராஜ சோழனின் சுவர் ஓவியம் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் கிடைத்தது
 

999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்க்க வீமன் அனுப்பிய ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராஜராஜன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்று முடிவாக ஜடாசோடன் என்னும் பேரூம் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் அதாவது வீமனையும் தோல்வியுறச் செய்தான் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது.

1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இதிலிருந்து சக்திவர்மன் கி.பி 999ல் அரியணையில் அமர்ந்தான் என்றும் அதே ஆண்டில் 'இடையீட்டுக் காலம்' முடிவுற்றது என்பதும் தெளிவாகிறது.

வீமனின் வீழ்ச்சியையும் வேங்கி நாடு இராஜராஜனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.

மாலத் தீவுகளைக் கைப்பற்றல் இராஜராஜனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும் இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பது தெளிவு.

 
இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது.
 
இராஜேந்திரன் இளவரசுப் பட்டம் பெறுதல்

இராஜராஜ சோழன் தன் ஆட்சி முடிவில் தன் மகன் இராஜேந்திரனை அரசாங்க அலுவல்களில் தன்னுடன் கலந்து கொள்ளச் செய்தான். இராஜராஜனின் நான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் இராஜேந்திரனை இளம் அரசகுமாரன் என்று குறிப்பிடுவதால், இளவரசுப் பட்டம் பெற்ற பொழுது இவன் குறைந்தது இருபத்தைந்து வயதினனாக இருந்திருக்க வேண்டும். இராஜராஜ சோழனின் 29-ம் ஆண்டுக் கல்வெட்டுகள் தஞ்சையில் ஏராளமாகக் கிடைப்பதால், இம்மன்னனின் சிறந்த ஆட்சி கி.பி 1014ல் முடிவுற்றது என்று தெரியவருகிறது. 

சமயக் கொள்கை

ஆழ்ந்த சிவபக்தனான இராஜராஜன் இந்தியாவின் பெரும் இராஜதந்திரிகளைப் போன்று, எல்லா சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை ஆதரித்து வந்தான். தஞ்சைப் பெருங் கோயிற் சுவர்களில் காணப்படும் அழகிய சிற்பங்களிலிருந்து இம்மன்னைன் கல்வெட்டுகளில் இவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் விஷ்ணு ஆலங்களிலிருந்தும் இராஜராஜன் தனது சமயக் கொள்கைகளில் தாராள மானப்பான்மை உடையவனாகவே இருந்தான் என்று தெரியவருகிறது. நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜயம், கடாரம் ஆகியவற்றின் அரசன் சைலேந்திர மன்னன் திருமாற விசயோதுங்க வர்மனால் சூடாமணி விகாரம் கட்டப்பட்டபொழுது அம்மன்னனை பெருதும் ஊக்குவித்தான் என்று புகழ் வாய்ந்த லெய்ட்டன் பட்டயங்கள் கூறுகிறது.

 
நிர்வாகம்

நிலவரியை நிர்ணயிக்க வேண்டி நாடெங்கும் நிலங்களை அளந்து, நிலத்திற்கேற்ப வரி விதித்து, இப்போதைய நிர்வாகத்தில் உள்ளது போல் செயலாளர்களைக் கொண்ட மத்திய அரசை இராஜராஜ சோழன் நன்கு அமைத்தான். மேலும் நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை ஆங்காங்கு மேற்பார்வைக்காக அமர்த்தி, கிராம சபைகளையும் மற்றப் பொதுக்குழுக்களையும் பொதுக் குழுக்களையும் தணிக்கையின் மூலம் கட்டுப் படுத்தினான். அதனால் நிறைந்த நிலைப்படையை உருவாக்கி, இராஜேந்திரனின் கீழ் மேலும் பல வெற்றிகளை அடைந்த பெரும் கப்பற்படையை நிறுவி, தென் இந்தியாவின் வரலாற்றிலேயே இராச்சியங்களை நிர்மாணிப்பதில் ஒப்பற்றவனாகத் திகழந்தான்.

பட்டங்கள்

இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன. இப்பெயர்களுடன் சோழேந்திர சிம்மன், சிவபாத சேகரன், க்ஷத்திரிய சிகாமணி, சனநாதன், நிகரிலிச் சோழன், இராஜேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராஜாசிரயன், இராஜ மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம் தெலிங்க குல காலன் போன்ற பல பட்டங்கள் பெற்றிருந்தான்.

குடும்பம்

இராஜராஜன் பல மனைவியருடன் வாழ்ந்தாலும், குறைந்த அளவிலான மக்களைப் பெற்றிருந்தான். பல கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவனது மனைவிமார்களின் ஏறக்குறைய பதினைந்து ஆயினும் உலக மகாதேவி என்று அழைக்கப்பட்ட தந்திசக்தி விடங்கி என்பவளே பட்டத்தரசியாக விளங்கியவள். இராஜராஜ சோழனின் ஆட்சியின் 29ம் ஆண்டில் திருவிசலூரில் இம்மன்னனுடன் இருந்தாள், திருவிசலூர்க் கோயிலில் இம்மன்னன் துலாபாராம் புகுந்த பொழுது தந்திசக்தியும் இரணிய கர்ப்பம் புகுந்தாள். இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். 

  

மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள்

1. அருண்மொழித் தேவ வளநாடு

2. உய்யக்கொண்டான் வளநாடு

3. இராசராச வளநாடு

4. நித்திவிநோத வளநாடு

5. இராசேந்திர சிங்க வளநாடு

6. இராசாசிரய வளநாடு

7. கேரளாந்தக வளநாடு

8. சத்திரிய சிகாமணி வளநாடு

9. பாண்டிகுலாசனி வளநாடு

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு

இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.

1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்

2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்)

3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்)

4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்)

5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி)

6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்)

7. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி)

8. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி)

9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு)

மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தன் மனைவியர்கட்கு தஞ்சை அரண்மனையில் அமைத்துக் கொடுத்த மாளிகைகளின் பட்டியல்.

1. உய்யக்கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளம்

2. அபிமான பூஷணத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்

3. ராசராசத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்

4. பஞ்சவன் மாதேவி வேளம்

5. உத்தம சீலியார் வேளம்

6. அருண்மொழித் தெரிந்த பரிகலத்தார் வேளம்

7. புழலக்கன் பெண்டாட்டி அவினிசிகாமணி கீழவேளம்

8. தஞ்சாவூர் பழைய வேளம்

9. பண்டி வேளம்

மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தஞ்சை மாநகரில் அமைந்திருந்த அங்காடிகள்

1. திருபுவன மாதேவி பேரங்காடி

2. வானவன் மாதேவி பேரங்காடி

3. கொங்காள்வார் அங்காடி

4. இராசராச பிரும்ம மகாராசப் மாதேவி பேரங்காடி

இராசராசன் தனது கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ள தஞ்சை மாநகர தெருக்கள் பட்டியல்

01. வடக்குத் தனிச்சேரி

02. தெற்குத் தனிச்சேரி

03. கொங்காள்வார் அங்காடி

04. ரெளத்ர மாகாளத்து மடவளாகத்தெரு

05. பிரமகுட்டத்து தெரு

06. ஜய பீமதளித் தெரு

07. ஆனைக்காடுவார் தெரு

08. பன்மையார் தெரு

09. வீர சோழப் பெருந்தெரு

10. இராசராச வித்யாதரப் பெருந்தெரு

11. வில்லிகள் தெரு

12. மடைப்பள்ளித் தெரு

13. சயங்கொண்ட சோழப் பெருந்தெரு

14. சூர சிகாமணிப் பெருந்தெரு

15. மும்முடிச் சோழப் பெருந்தெரு

16. சாலியத் தெரு

17. நித்தவிநோதப் பெருந்தெரு

18. வானவன்மாதேவிப் பெருந்தெரு

19. வீரசிகாமணிப் பெருந்தெரு

20. கேரள வீதி

21.

22.

23.

24.

இராசராச சோழன் போர் வெற்றி கண்ட நாடுகள்

01. காந்தளூர் ( திருவனந்தபுரம்)

02. விழிஞம்

03. பாண்டிய நாடு

04. கொல்லம்

05. கொடுங்கோளூர்

06. குடமலை நாடு (குடகு)

07. கங்கபாடி (கங்கநாடு)

08. நுளம்பபாடி

09. தடிகைபாடி (மைசூர்)

10. ஈழநாடு (இலங்கை)

11. மேலைச்சாளுக்கிய நாடு

12. வேங்கை நாடு 

13. சீட்புலி நாடு

14. பாகி நாடு

15. கலிங்க நாடு

16. பழந்தீவு பன்னீராயிரம் ( மாலைத்தீவுகள்)

சோழ நாட்டில் கோட்டை என முடியும் ஊர்களில் சில:

அத்திக்கோட்டை

அருப்புக்கோட்டை

ஆத்திக்கோட்டை

ஆவணக்கோட்டை

ஆதனக்கோட்டை 

ஆய்க்கோட்டை

இடைங்கான்கோட்டை

ஈச்சங்கோட்டை

உள்ளிக்கோட்டை

உச்சக்கோட்டை

எயிலுவான் கோட்டை

ஒளிக்கோட்டை

பட்டுக்கோட்டை

பரமக்கோட்டை

பரக்கலகோட்டை

பரவாக்கோட்டை

பஞ்சநதிக்கோட்டை

பருதிக்கோட்டை

பத்தாளன்கோட்டை

பாச்சிற்கோட்டை

பனையக்கோட்டை

பரங்கிலிகோட்டை

பழங்கொண்டான் கோட்டை

பாலபத்திரன் கோட்டை

பாத்தாளன் கோட்டை

பாதிரங்கோட்டை

பாளைங்கோட்டை

பராக்கோட்டை

பிங்கலக்கோட்டை

புத்திகழிச்சான்கோட்டை

புதுக்கோட்டை

பெரியக்கோட்டை

பொய்கையாண்டார் கோட்டை

பொன்னவராயன்கோட்டை

கள்ளிக்கோட்டை

கண்டர் கோட்டை

கந்தர்வக்கோட்டை

கல்லாக்கோட்டை

கக்கரக்கோட்டை

கரம்பயன்கோட்டை

கருக்காக்கோட்டை

கரும்பூரான்கோட்டை

கரைமீண்டார் கோட்டை

காரைக்கோட்டை

காரிகோட்டை

காசாங் கோட்டை

கிள்ளிக் கோட்டை

கிள்ளுக்கோட்டை

கீழைக்கோட்டை

கீழாநிலைக்கோட்டை

குன்னங் கோட்டை

கூராட்சிகோட்டை

நடுவிக்கோட்டை

நள்ளிக்கோட்டை

நம்பன்கோட்டை 

நாஞ்சிக்கோட்டை

நாயக்கர் கோட்டை

நாட்டரையர் கோட்டை

நெடுவாக்கோட்டை

நெல்லிக்கோட்டை

மல்லாக்கோட்டை

மலைக்கோட்டை

மண்டலகோட்டை

மயிலாடு கோட்டை

மயிலாளிகோட்டை (மயில்கோட்டை)

மருதக்கோட்டை

மகிழங்கோட்டை

மழவன்கோட்டை (மகழன்கோட்டை)

மண்டலகோட்டை

மானரராயன் புதுக்கோட்டை

மாங்கோட்டை

மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை)

மூவரையர் கோட்டை

மேலைக்கோட்டை

தம்பிக்கோட்டை

தளிக்கோட்டை

தர்மக்கோட்டை

தாமரங்கோட்டை

தாமிரன்கோட்டை

திருமங்கலக்கோட்டை

திருமலைக்கோட்டை

திருமக்கோட்டை

துரையண்டார்க் கோட்டை

துறையாண்டார் கோட்டை

தெற்குக் கோட்டை

சத்துருசங்காரக் கோட்டை

சாக்கோட்டை

சாய்க்கோட்டை

சிறுகோட்டை

சுந்தரகோட்டை

சூரக்கோட்டை

செங்கோட்டை

செஞ்சிக்கோட்டை

சோணாகோட்டை

சேண்டாகோட்டை

வாட்டாட்சிகோட்டை (வாவாசிகோட்டை)

வத்தானக்கோட்டை

வாகோட்டை

வாளமரங் கோட்டை

வாழவந்தான் கோட்டை

வீரயன்கோட்டை (வீரியன்கோட்டை)

வெண்டாக்கோட்டை

வெட்டுவாகோட்டை

இராஜராஜனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராஜராஜன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது, தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான்.

இராஜராஜன் மூன்று புதல்விகளைப் பெற்றிருத்தல் வேண்டும், ஏனெனில் திருவலஞ்சுழியிலுள்ள ஒரு கல்வெட்டு சாளுக்கிய விமலாத்தினை மணந்த இளைய குந்தவையைத் தவிர, மாதேவடிகள் என்பாளை நடு மகளாகக் குறிப்பிட்டுள்ளது.

அதிகாரிகளும் திறை செலுத்திய குறுநில மன்னர்களும்

இராஜராஜ சோழனுடைய அதிகாரம் கங்க, வேங்கி மண்டலங்களிலும் கங்க நாட்டு மன்னனுக்குத் திறை செலுத்திய குறுநில மன்னர்கள் மீதும் பரவியிருந்தது. மும்முடிச் சோழன் என்றழைக்கப்பட்ட பரமன் மழபாடியார் என்னும் படைத்தலைவன் சீத்புலி, பாகி ஆகிய நாடுகளை வென்றவன். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், பழுவூரைச் சுற்றியுள்ள சிறுபகுதி ஒன்றின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தவர் பழுவேட்டரையர் என்பவர்களாவார். இவர்கள் சோழ குடும்பத்திற்கு நெருங்கிய உறவினராக இருந்தனர். முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையரின் இளவரசியை மணந்திருந்தான். இராஜராஜனுக்குத் திறை செலுத்திய பழுவூர்க் குறுநில மன்னனான அடிகள் பழுவேட்டரையன் கண்டன்மறவன் என்பவன் குறுநில மன்னர்களுக்கு உரிய சிறப்புக்களையும் பெற்று ஆட்சி செய்து வந்தான்.

மதுராந்தகன் கண்டராதித்தன் உத்தம சோழனின் மகன் ஆவான், இராஜராஜன் ஆட்சியில் இவன் கோயில்களைக் கண்காணித்து, அவற்றில் தவறிழைத்தவர்களை விசாரித்து, தண்டித்து, எதிர்காலத்தில் தவறிழைக்காதபடி நல்ல நிலையில் பாதுக்காகும் ஏற்பாடுகளைச் செய்தான்.

வைதும்பர்களைப் போன்று, முதலாம் பராந்தகனிடம் தோல்வியுற்ற வாணர்களும், சோழர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களது நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகளாகப் பங்கேற்றனர். மாறவன் நரசிம்மவர்மன் என்ற வாண மன்னன் தென் ஆற்காடு மாவட்டத்தில் ஜம்பையை அடுத்த பகுதிகளை இராஜராஜனது இறுதிக் காலத்தில் ஆட்சி செய்தான்.

பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்

1. உத்திர மந்திரி

2. பெருந்தர அதிகாரிகள்

3. திருமந்திர ஓலை

4. திருமந்திர ஓலை நாயகம்

5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி

6. வரியிலிடு

7. காடுவெட்டி

8. உடன் கூட்டத்து அதிகாரி

9. அனுக்கத் தொண்டன்

10. நடுவிருக்கை

11. விடையில் அதிகாரி

12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி

13. புரவரித் திணைக்களம்

14. புரவரி திணைக்களத்து நாயகம்

15. வரிப் பொத்தகம்

16. முகவெட்டி

17. வரிப்பொத்தகக் கணக்கு

18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்

19. கடமை எழுதுவோன்

20. பட்டோலை

21. ராகாரிய ஆராய்ச்சி

22. விதிசெய்

பெண் அதிகாரிகள்

அரசியின் ஆணையை நிரவேற்றிய பெண் அதிகாரி ”அதிகாரிச்சி” என்று அழைக்கப் பட்டாள்

சபைக்குரிய அலுவலர்கள்

பிணக்கறுப்பான் (அ) நடுநிலையாளன்

கிராமசபை நடைபெறும்போது உதவி செய்வதோடு அங்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நடுநிலையாக இருந்து தீர்ப்பவனாவான்.

கணக்கன்

சபைக்குரிய கணக்கை எழுதுபவன் ஆவான். சபை விரும்பும்போது கணக்கை அவ்வப்போது காட்டுவதோடு ஆண்டு இறுதியில் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கீழ்க்கணக்கன். கணக்கனுக்கு உதவி செய்பவன்.

பாடி காப்பான்

கலகம், திருட்டு முதலான குற்றங்கள் ஊரில் நிகழாவண்ணம் காப்பவன்.

தண்டுவான்

கிராம மக்கள் அரசிற்கும், ஊர்ச்சபைக்கும் கொடுக்க வேண்டிய வரிகளை வலிப்பவனாவான்.

அடிக்கீழ் நிற்பான்

ஊர்ச் சபையாருக்குக் குற்றவேல் புரிபவன்.

சோழர் காலத்தில் மக்களுக்கு இடப்பட்ட வரிகள்

மக்களின் தேவைகள் மகேசனின் தேவைகள், அதை நிறைவேற்ற அரசுக்கு பொருள் வேண்டாமா? 

இதோ அரசின் வருவாய்க்காண வரிகள்.

1. அங்காடிப் பட்டம்

2. இடப்பாட்டம்

3. இலைக் கூலம்

4. இரவுவரி

5. இறை

6. ஈழம்

7. உல்கு

8. ஊரிடுவரி

9. எச்சோறு

10. ஏரிப்பாட்டம்

11. ஓடக்கூலி

12. கண்ணாலக்காணம்

13. காவேரிக்கரை வினியோகம்

14. குசக்காணம்

15. குடிமை

16. சபாவினியோகம்

17. சித்தாயம்

18. சில்லிறை

19. சில்வரி

20. செக்கிறை

21. தட்டார்ப் பாட்டம்

22. தரகு

23. தறியிறை

24. நாடுகாவல்

25. நீர்க்கூலி

26. பாடிகாவல்

27. பூட்சி

28. போர்வரி

29. மரமஞ்சாடி

30. மரவிறை

31. மனை இறை

32. மீன் பாட்டம்

33. வண்ணாரப்பாறை 

சோழர்கால கப்பல்கள்.

கடல் கடந்து வாணிகத்திலும், ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும் கப்பலின் பெயர்கள்.

1. வங்கம்

2. பாடை

3. தோணி

4. யானம்

5. தங்கு

6. மதலை

7. திமில்

8. பாறு

9. அம்பி

10. பாரி

11. சதா

12. பாரதி

13. நௌ

14. போதன்

15. தொள்ளை

16. நாவாய்

சோழர் கால கல்வெட்டுக்களில் மாதங்கள்

மேச ஞாயிறு - சித்திரை மாதம்

ரிசிப ஞாயிறு - வைகாசி மாதம்

மிதுன ஞாயிறு - ஆனி மாதம்

கடக ஞாயிறு - ஆடி மாதம்

சிம்ம ஞாயிறு - ஆவணி மாதம்

கன்னி ஞாயிறு - புரட்டாசி மாதம்

துலா ஞாயிறு - ஐப்பசி மாதம்

விருச்சிக ஞாயிறு - கார்த்திகை

தனுர் ஞாயிறு - மார்கழி மாதம்

மகர ஞாயிறு - தை மாதம்

கும்ப ஞாயிறு - மாசி மாதம்

மீன ஞாயிறு- பங்குனி மாதம்

சோழர் கால இலக்கண நூல்கள்

தண்டியலங்காரம்

நன்னூல்

நேமிநாதம்

புறப்பொருள் வெண்பாமாலை

யாப்பெருங்கலம்

வீரசோழியம்

வெண்பாப் பாட்டியல்

சோழர் கால நிகண்டு

பிங்கலந்தை

சோழர் கால ஏரிகள்

செம்பியன் மாட்தேவிப் பேரேரி - கண்டராதித்தம்

மதுராந்தகம் ஏரி- மதுராந்தகம்

பொன்னேரி - ஜெயங்கொண்டம்

வீரநாராயண பேரேரி- வீராணம்

திரிபுவனப் பேரேரி - திரிபுவனம் (பாண்டிச்சேரி)

வீரசிகாமணிப் பேரேரி- அல்லூர்

திரிபுவன மாதேவப் பேரேரி - புத்தூர்

கவீர ஏரி ( கவிநாடு ஏரி) - புதுக்கோட்டை

சோழர் கால துறைமுகப்பட்டினங்கள்

பழவேற்காடு.

சென்னப்பட்டினம்

மாமல்லை.

சதுரங்க்கப்பட்டினம்

வசவ சமுத்திரம்

மரக்கானம்

கடலூர்

பரங்கிப்பேட்டை

காவேரிப்பூம்பட்டினம்

தரங்கம்பாடி

நாகப்பட்டினம்

முத்துப்பேட்டை

தொண்டி

தேவிப்பட்டினம்

அழகங்குளம் (மருங்கூர்ப்பட்டினம்)

இராமேசுவரம்

பெரிய பட்டினம்

குலசேகரப்பட்டினம்

தூத்துக்குடி

கொற்கை

காயல்பட்டினம்

குமரி.

உலகளந்தான் கோல்

சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறைச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.

எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.

உலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்

24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு

25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்

26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி

27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்

28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்

29 விரல் கொண்ட முழம் - வைதேகம்

30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்

31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்

33” ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.

பிரகதீஸ்வரர் கோவிலில் இராஜராஜ சோழனின் சிலை 4058110.png
 

இராஜராஜன் பற்றிய புனைவு ஆக்கங்கள்

  1. இராஜராஜ சோழன் - கலைமாமணி ஆர்.ராமநாதன் என்பவரால் எழுதப்பட்ட நாடக பிரதி.இந் மேடை நாடகபிரதியே பின்னர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.இந்நாடகப்பிரதி நூல்வடிவாக பிரேமா பிரசுரம் சென்னை-24 ஆல் வெளியிடப்பட்டுள்ளது.தென்னிந்திய பல்கழைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட Study Material ஆகவும் இந்நூல் காணப்படுகின்றது.
  2. பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட வரலாற்று நாவல் இதில் அருண்மொழிவர்மன் எனும் இயற்பெயருடன் இராஜ இராஜனின் இளமைப்பருவம் பற்றிய தகவல்களுடன் நாவல் எழுதப்பட்டுள்ளது.
  3. உடையார் - பாலகுமாரனால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் பேரரசனான பின்னர் நடந்த நிகழ்வுகளைப்பற்றி குறிப்பிடுகின்றது.
  4. காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதாவால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் காலத்தில் காந்தளூர் சாலையில் இடம்பெற்ற போர் பற்றிய நிகழ்வுகளை குறிக்கின்றது.
மேற்கோள்கள்

  1. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 212.
  2. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 212.
  3. varalaaru.com.
  4. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 239.
  5. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 240.
இராசேந்திர சோழன் 9353136.jpg
 
Esalam : Built by Rajendra Cholan I (1012)lord sri Ramanatha Eswarar. The legend found in Sanskrit language and in grantha character. Written on the periphery of the seal is as follows, Rajad-Rajanya Makuta sreni-ratnesu sasanam Etad Rajendra Cholasya parakesari varmanah.
கங்கைகொண்ட சோழபுரம் 2198383.jpg
 
இராசேந்திர சோழன் 

சோழர்களின்புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

கங்கைகொண்ட சோழபுரம் 8927269.jpg
 
தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.

தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் "கங்கை கொண்ட சோழபுரம்' ஆனது.

கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோயிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்.

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்திலிருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள். கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். பெரிய நாயகி அம்மன் பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறாள். இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள லிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய லிங்கம் ஆகும். இவருக்கு உடுத்துவதற்கு தனியாக வேட்டி, துண்டு நெய்யப்படும். இங்குள்ள சண்டிகேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

சோழப் படைத்தலைவன் இராஜேந்திரன் இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்கு தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவன். தொடர்ந்து வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். 'பஞ்சவன் மாராயன்' என்ற பட்டமும் இவனுக்குக் கொடுக்கப்பட்டது. 'மும்முடிச் சோழனின் களிறு' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இராஜேந்திரன், கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்து, தெலுங்கரையும் இராட்டிகரையும் வென்றான்.

இணை அரசனாக நிர்வகித்தல் இராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாக பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் படைகளுக்கு பொறுப்பேற்று வெற்றி பெற்றான்.

முடி சூடுவதும் தொடக்ககால ஆட்சியும் இராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.

இராஜேந்திர சோழன் காலத்தில் சோழநாடு கி.பி. 1030 4485626.jpg
 
நாட்டின் பரப்பும் அமைப்பும் தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும் ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இராஜராஜன், இராஜேந்திரனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன், பெரு நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற் குழுக்கள் ஆகியோரது உரிமைகளைப் பாதுகாக்கவும், அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமும் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புகளை அழிக்கவும், வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவிபுரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றியபின் அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறும் செய்ய இராஜேந்திரன் ஒரு சிறந்த கடற்படையையும் வைத்திருந்தான்.

இக்கடற்படையின் உதவியுடன் கிழக்கிந்தியத் தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வாணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி ஆட்சி செய்த 33-ம் ஆண்டுகளில் இராஜேந்திரன் தன் நாட்டை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும், மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக் கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப் பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான். ஆட்சியின் முற்பகுதிகளில், இராஜேந்திரன் மேற்கொண்ட எண்ணற்ற போர்களைப் பற்றியும் கைப்பற்றிய நாடுகளைப் பற்றியும் தன் தந்தை போன்றே இராஜேந்திரனும் எண்ணற்ற கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளதால் அறிய முடிகிறது. இராஜேந்திரனுடைய இராணுவ சாதனைகள், வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகள் ஆகியவை பற்றித் திருவாலங்காடு, கரந்தை(தஞ்சை)ச் செப்பேடுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கிறது.

படையெடுப்பு தொடக்க காலம் சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.

ஈழத்தின் மீதான படையெடுப்பு முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.

கங்கைகொண்ட சோழபுரம் 625777.jpg
 
பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு ஈழப்படையெடுப்பைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018ல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களை கவர்ந்தான் என்றும் தொடர்ச்சியாக கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களை படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.

இராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்த சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாக குறிப்பிடப்பட இல்லை.

சாளுக்கிய படையெடுப்பு இராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்கு கி.பி. 1015ல் சத்யாச்சிரயனுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய ஜெயசிம்மன் II பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும் பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் II இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.

இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் விஜயாதித்தனை VII ஆதரித்து குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதி சண்டையில் இராஜேந்திரன் இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் - இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.

இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரா ஆற்றின் நதிக்கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022ல் மணம்முடித்து சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் ஜெயசிம்மன் கி.பி. 1031ல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனை கீழைச் சாளுக்கிய மன்னராக்கினான் இதன் காரணாம மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்து கி.பி.1035ல் விஜயாதித்தனையும் அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரசிம்மனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.

கங்கையை நோக்கிய படையெடுப்பு மேலை கீழைச் சாளுக்கிய தேசங்களிளும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரி கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்து புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும் அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும். தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியை சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

இராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளை சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம். 

கடல்கடந்த படையெடுப்புக்கள்.

கடாரம் படையெடுப்பு இராஜராஜனின் ஆட்சியின் 14வது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.

"அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினேன்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜ்யோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்; பரந்துவிரிந்திருந்த இந்த நகரத்தின் "போர் வாயில்" அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான். நகைகள் பதித்த சிறுவாயிலை உடைய ஸ்ரீவிஜயன் பெரிய நகைகள் கொண்ட வாயிலையும் அழகுபடுத்தி அலங்கரித்துக் கொண்டான். பண்ணையில் தீர்த்தக் கட்டங்களில் நீர் நிறைந்திருந்தது. பழமையான மலையூர், வலிமையான மலைக்கோட்டையாகவும் திகழ்ந்தது. மாயிருடிங்கம், ஆழ்கடலால் அழகாகச் சூழப்பட்டு பாதுகாப்படுகிறது. எத்தகையபோரிலும் அஞ்சா நெஞ்சனாக விளங்கிய இலங்காசோகன்(லங்காசோக), மாபப்பாளம், ஆழமான தண்ணீரைப் பாதுகாப்பாகக் கொண்டிருந்தது. மே விளிம்பங்கம், அழகிய சுவர்களை பாதுகாப்பு அரணாகக் கொண்டிருக்கிறது. " வலைப்பந்தூரு" என்பதுதான் வளைப்பந்தூரு போலும்; தலைத்தக்கோலம், அறிவியல் புலமை உடயோரால் செய்யுள்களில் புகழப்பட்டிருக்கிறது. பெரிய போர்களிலும் அதுவும் கடுமையான போர்களில் தன் நிலைகுலையாத மாடமாலிங்கம்; போரால் தன் வலிமையான ஆற்றல் மேலும் உயர்ந்த பெருமையுடைய இலாமுரித்தேசம்; தேன்கூடுகள் நிறைந்த மானக்கவாரம்; மற்றூம் ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்டதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான கடாரம்"

கி.பி. 1025ல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயதுங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும். சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்டக் கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது

மலையூர் கோயில் 7714858.jpg
 
பண்ணை இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தீல் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள் பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது லேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.

இலாமுரி தேசம் இலாமுரி தேசம் என்பது சுமத்திராவின் வடபகுதியிலுள்ள நாடாகும்.இதனை அரேபியர்கள் லாமுரி என்றும், மார்க்கோபோலோ லம்பரி என்றும் அழைத்தனர். சௌஜுகுவா இதனை லான்வூரி என்றார். மாநக்கவரம் என்பது நிக்கோபார் தீவுகளாகும். இந்த இடங்களைக் காணும் பொழுது, சுமத்திராவிலுள்ள ஸ்ரீவிஜய இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே, இராஜேந்திரன் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது.

இராஜேந்திரன் ஆட்சியின் இறுதி ஆண்டுகள் கடாரம் படையெடுப்பிற்குப் பின் இராஜேந்திரன் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். போர் முதலியன நடவாத அமைதிக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் இக்காலப் பகுதியை சிறப்பித்துள்ளனர். ஆனால் இராஜேந்திரனின் மக்களின் கல்வெட்டுகள் இதனை மறுக்கின்றன. இவற்றின் மூலம் நாட்டில் பல பகுதிகளில் இவர்கள் போரிட வேண்டியிருந்தது எனத் தெரியவருகிறது. தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே திக் விஜயம் செய்த இராஜேந்திரன், இதன் பின்னர் ஏற்பட்ட போர்களில் தானே கலந்து கொள்ளாமல் தன் மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்ததான். இதன் மூலம் அவர்கள் வெற்றி பெற்றுப் புகழடையச் செய்தான்.

எனினும் இராஜாதிராஜனின் கல்வெட்டுகள் அனைத்தும் இராஜேந்திரனின் ஆட்சிகாலத்திற்குட்பட்டனவாக உள்ளதால், இவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களும் முக்கியமாகின்றன.

தெற்கில் குழப்பம் பாண்டிய, கேரள நாடுகளில் குழப்பங்கள் ஏற்பட்டதை ஒடுக்க வேண்டியிருந்தது. எனவே இராஜாதிராஜன் ஒரு நீண்ட படையெடுப்பை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி உண்டாயிற்று. ஆனால் பாண்டிய, கேரள நாடுகளின் மீதான படையெடுப்பு எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. இக்காலத்திய பாண்டிய கல்வெட்டுக்கள் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. வெற்றிகொண்ட சோழர்களின் கல்வெட்டுகள் மூலமே இதனை நாம் அறிகிறோம். நடுநிலைச் சான்றுகள் கிடைக்கவில்லை, எண்ணற்ற சோழ பாண்டிய கல்வெட்டுகளும் இதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சுந்தரபாண்டியனே இக்கலகத்தை நடத்திய இயக்கத்தின் தலைவனாயிருக்கவேண்டும்.

'திங்களேர்' என்று தொடங்கும் இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தியின் ஒரு கூற்று, மூன்று [[பாண்டியர்|பாண்டியர்களுடன்] இம்மன்னன் செய்த போரை விவரிக்கும் பொழுது, தன் தந்தையை எதிர்த்த('தாதை முன்வந்த')விக்கிரம நாராயணனுடன் போரிட்டு அவனை வென்றதாகக் கூறுகிறது. பத்துநாள் நடைபெற்ற போரின் முடிவில் இராஜாதிராஜன் பூபேந்திரச் சோழன் என்ற பட்டத்தைச் சூடிக் கொண்டான். விக்கிரம நாராயணன் ஒரு தென்னாட்டு மன்னனாகவே இருத்தல் வேண்டும். ஆனால், இந்த மெய்க்கீர்த்தியிலேயே பின்பகுதியில் கூறப்படும் சாளுக்கியருடனான இரண்டாம் போரில், இவனே சக்கரவர்த்தி விக்கிரம நாராயணன் என்று குறிப்பிடப்படுவதால், இவன், சாளுக்கிய படைத்தலைவனாகயிருக்க வேண்டும்.

பாண்டிய நாட்டுப் படையெடுப்பைத் தொடர்ந்து இராஜாதிராஜன் காந்தளூருக்குச் செல்லும் வழியில் வேணாடு மன்னனை 'விண்ணுலகத்திற்கு அனுப்பினான்'. பின்னர் தென் திருவாங்கூரைச் சேர்ந்த கூபகர்களின் தலைவனைப் பலம் இழக்கச் செய்தான் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

சோழப்பேரரசின் கருணை சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், கேரள நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதும், சோழப் பிரதிநிதிகள் அந்நாடுகளில் இருந்தும்கூட, இவர்கள் சோழ மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் என்பதும், சோழர் ஆட்சி இந்நாடுகளில் எதேச்சாதிகாரமற்றிருந்தது என்பது விளங்குகிறது.

இராஜேந்திரனின் கடைசி ஆண்டுகள் இராஜேந்திரன் ஆட்சியின் கடைசி ஆண்டுகள்ள், விஜயாலயச் சோழ வமிசத்தின் வரலாற்றின் பொற்காலமாக அமைந்தன. சோழ நாடு மிகப் பரந்து விரிந்தது; சோழருடைய பெரும் படையின் வல்லமையும் கடற்போரின் விளைவால் உண்டான மதிப்பும் வானோங்கி நின்றன. புதிதாய்ச் சேர்க்கப்பட்ட நாடுகளில் ஆங்காங்கு ஏற்பட்ட குழப்பங்களை அடக்க வேண்டியிருந்தது. திறமை படைத்த புதல்வர்கள் அப்பணியைச் செவ்வனே செய்தனர்.

சுந்தர பாண்டியனையும், அவனுடைய நண்பர்களையும் பாண்டியரோடு நடைபெற்ற போரில் தோற்கடித்தும் ஆகவமல்லனுக்கு எதிராக சாளுக்கியப் போரில் ஈடுபட்டும் சோழர்கள் தொடர்ச்சியாக அப்பகுதிகளை கைவசப்படுத்தியிருந்தார்கள். இவ்விரு போர்களிலும் பட்டத்து இளவரசனான இராஜராஜன் தலைமை ஏற்றான். மைசூரிலும் நம்பிஹல்லி என்ற பகுதியிலும் சோரியருடன் ஏற்பட்ட சிறு பூசல்களைச் சமாளிக்க, குறுநில மன்னர்கள் பலர் சோழருக்கு உதவினர்.

விருதுகள் 

இராஜராஜ சோழனைப் போன்றே இராஜேந்திரனும் சிறந்த விருதுகள் பலவற்றைப் பெற்றான். இவற்றில் குறிப்பிடத்தக்கவை, முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என்பன. இவன் ஒருமுறை வீர ராஜேந்திரன் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான்.

இவற்றையெல்லாம் விட, இம்மன்னனே விரும்பி சிறந்த விருதாகக் கருதி ஏற்றது, 'கங்கை கொண்ட சோழன்' என்பதாகும். இவ்விருது இம்மன்னன் புதிதாக நிறுவிய தலைநகரின் பெயரைக் கொண்டது.

இராஜேந்திரசோழனின் சிறப்புப்பட்டங்கள்.

01. மதுராந்தகன்

02. உத்தமசோழன்

03. சோழேந்திரசிம்மன்

04. விக்ரமசோழன்

05. முடிகொண்டசோழன்

06. பண்டிதசோழன்

07. கடாரம்கொண்டசோழன்

08. கங்கைகொண்டசோழன்

09. வீரராஜேந்திரன்

10. பூர்வதேசமும் கங்கையும் கடாரமும்கொண்ட ஐயன்

11. அதிசயசோழன்

12. ஜயசிம்மசரபன்

13. மலைநாடுகொண்டான்

14. மன்னைகொண்டசோழன்

15. மகிபாலகுலகாலன்

16. வீரசோழன்

17. ராஜ ராஜேந்திரன்

18. இரட்டை படைகொண்டசோழன்

19. நிருபதிவாரகன்

20. மனுகுலசோழன்

21. ராஜ வித்யாதரன்

22. உத்தரவிடாங்கன்

23. தாணவிணோதரன்

24. பராக்கிரமசோழன்

பட்டத்தரசிகள் 

திருப்புவன அல்லது வானவன் மாதேவியார், 

முக்கோலான், பஞ்சவன் மாதேவியார், 

வீரமாதேவி என்போர் இராஜேந்திரனின் மனைவியர் ஆவர். 

வீரமாதேவி என்பாள், இம்மன்னனுடன் உடன்கட்டை ஏறி உயிர்துறந்தாள். இவன் புதல்வர்களில் மூவர் இராஜாதிராஜன், இராஜேந்திரன், வீர இராஜேந்திரன் ஆகியோர் இவனுக்கு அடுத்தடுத்துச் சோழ அரியணையில் அமர்ந்தனர். இம்மூவரில் யார் சோழபாண்டிய பிரதிநிதியான ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்று கூற இயலாது. இம்மூவரைத் தவிர வேறு புதல்வர்களும் இருந்தனர். இராஜேந்திரனின் மகள் அருண்மொழி நங்கையார் என்ற பிரானார், தன் சகோதரன் இராஜாதிராஜனின் ஆட்சியின் தொடக்கத்தில் திருமழவாடிக் கோயிலுக்கு விலையுயர்ந்த முத்துக்குடை அன்பளித்தாள். இம்மன்னனின் மற்றோரு மகள் புகழ் மிக்க அம்மங்காதேவி ஆவாள். இவள் கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் இராஜராஜனின் மனைவியும், முதலாம் சாளுக்கிய மன்னர்களில், குலோத்துங்கனின் தாயும் ஆவாள். இராஜேந்திரனின் கல்வெட்டுகளில் காணப்படும் இவனுடைய ஆட்சி ஆண்டுகளில் 33-ம் ஆண்டே கடைசியானது. இராஜாதிராஜனின் 6-ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று, இராஜேந்திரன் இறந்ததைக் கூறுகிறது. ஆகையால் இராஜேந்திரன் கி.பி 1044ல் காலமாயிருக்க வேண்டும்.

இராசாதிராசச் சோழன்

இராசேந்திரச் சோழன்

வீரராசேந்திரச் சோழன்

அதிராசேந்திரச் சோழன்

தாய்லாந்தில் பாழடைந்து கிடக்கும் சோழர்களால்

கட்டப்பட்ட

பழங்கால இந்து ஆலயம்
na.png
 
 
  3629180.jpg
 
 
மாயவரம் திருக்கோயில் 360199.jpg
 
பாடல் பெற்ற ஸ்தலங்கள் 276. அவற்றில் 38-வது தலமாக இந்த திருமயிலாடுதுறை தலம் விளங்குகிறது.

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது. பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தான் என்று புராண வரலாறு கூருகிறது. அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவஸ்தலமான திருமயிலை ஆகும். சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்து விடுகிறார். காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் பார்வதியை சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்தாள். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது. சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு நலன் பெற்றனர்.

கோவில் அமைப்பு: 

இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது. நான்கு பக்கமும் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கமும் மொட்டை கோபுரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. வீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன. கிழக்கிலுள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடனும், அழகான சிற்பங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. உட்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. இராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் திருக்குளமும், வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகமும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்திற்கு அருகில், ஜுரதேவர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி இருக்கிறார். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் இருக்கின்றனர். துர்க்கையின் இந்த வடிவத்தை காண்பது அரிது. இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார்.

இத்தலத்திலுள்ள முருகன் சந்நிதி ( குமரக்கட்டளை) மட்டும் தருமையாதீனத்திற்குரியது. பிராகாரத்தில் இடதுபுறம் குமரக்கட்டளைக்குரிய (தருமையாதீனத்திற்குரிய) ஆஸ்தான மண்டபம் உள்ளது. மயூரநாதர் சந்நிதியின் வடபுறம் குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமியின் திருக்கோவில் உள்ளது. இந்த முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குமரக்கட்டளை மண்டபத்தில் தென்புறம் பெரியவிநாயகரும், வடபுறத்தில் ஆறுமுகனும் எழுந்தருளியுள்ளனர். வெளிப் பிரகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக் உள்ள கோவிலில் ஆதி மாயூரநாதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் உள்ள அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.

அம்பிகை மயில் உருவத்தில் பூஜை செய்த தலங்கள் இரண்டு. ஒன்று திருமயிலாப்பூர். மற்றொன்று பல்வேறு பெருமைகளையுடைய திருமயிலாடுதுறை. இந்த மயிலாடுதுறைத் தலம் காசிக்கு நிகரான தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. கங்கையே இங்கு வந்து காவிரியில் மூழ்கி தன் பாவங்களைப் போக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இத்தலத்து மாயூரநாதரை கௌரி, இந்திரன், பிரம்மன், ப்ரஹஸ்பதி, அகத்தியர், நாதசர்மா-அனவித்தை, திலீபன், சப்த மாதாக்கள், திக்குபாலகர்கள் மற்றும் பலவகையான விலங்குகளும், தேவர்களும் வழிபாடு செய்துள்ளனர்.

இத்தலத்தின் பெருமைகளை பல சான்றோர்கள் போற்றிப் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், வள்ளலார், மகாவித்வான், ஆதியப்ப நாவலர், வேதநாயகம் பிள்ளை, உ.வே.சா., மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத்தாண்டவராயர், அருணாசலகவிராயர், முத்துசாமி தீட்சிதர், மகாகவி காளமேகப் புலவர், கோபாலகிருஷ்ண பாரதி, புலவர் இராமையர், துரைசாமி பிள்ளை, கிருஷ்ணசாமி ஐயர், சிதம்பர ஸ்வாமிகள் ஆகியோரால் போற்றப்பட்டத் தலம்.

பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், பார்த்திபன் கனவு போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நூல்களிலும், தனது கல்கி பத்திரிக்கையிலும் இவ்வூரின் சிறப்புகளைப் பற்றிக் கூறியுள்ளார் திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இவர் இவ்வூரில் வாழ்ந்த பெருமை கொண்டவர்.

மயிலாடுதுறை பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு பெயர்களால் விளிக்கப் பட்டுள்ளது. திருமயிலாடுதுறை, மாயூரம், கௌரிமாயூரம், தென்மயிலை, பிரமவனம், சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம் என பல பெயர்கள் உண்டு மயிலாடுதுறைக்கு. வடமொழியில் உள்ள ஸ்காந்தம், சிவரகசிய மகாஇதிகாசம், துலா காவிரி மகாத்மியம், சிதம்பர புராணம், சிவ புராணங்கள் 10, பிரம்மாண்ட புராணம், ஆக்கினேய புராணம் போன்றவற்றிலும், கந்தபுராணத்திலும், இத்தலப் பெருமை சிறப்பாக எடுத்தியம்பப்பட்டுள்ளது.

திருத்தலம் அமைவிடம்:

இந்த அருள்மிகு அபயாம்பிகை சமேத மயூரநாதர் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறையில் உள்ளது. இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 42 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த சிறப்பு மிகு மயிலாடுதுறையில் இருந்து, நவகிரஹ ஸ்தலங்கள் சென்று வருவது சுலபம்.

ஆதி மயூரநாதர் திருக்கோயில்:

சுமார் 5000 வருடப் பழமையானது இந்த ஆதி மயூரநாதர் திருக்கோயிலில், சுவாமி சுயம்பு வடிவிலும், அன்னை மயில் வடிவிலும் காட்சி தருகின்றனர். பெருமானையும், அம்பாளையும் மயில் உருவமாக ஒன்றாகக் கண்டு ரசிப்பது இக்கோயிலில் மட்டுமே சாத்தியம். இத்திருக்கோயில் 3 பிரகாரங்களைக் கொண்ட அழகிய திருக்கோயில். இரண்டாவது பிரகாரம், மூன்றாவது பிரகாரம் ஆகியவற்றின் வெளிப் புறத்தில் 16 அடி உயரத்தில் செங்கல்லால் ஆன சுற்றுச் சுவர் உள்ளது. இக்கோயிலின் ஆதி மயூரநாதர் முன் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தேவாரப் பாடல்களை, பெருமான் நேரடியாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆதிமயூரநாதர் ஆலயத்தை திருக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக வந்தால் காணலாம்.

இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் 164 அடி உயரம் கொண்டது. ஒன்பது நிலைகளைகளுடனும் ஒன்பது கலசங்களுடனும் மிக அழகாக காட்சி தருகிறது ராஜகோபுரம். இக்கோபுரம் கட்டப்பட்ட காலம் கிபி. 1513, 1514, 1515-ம் ஆண்டுகளில் என்பது போன்ற விவரங்கள் இக்கோயில் கல்வெட்டுக்கள் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. தற்காலத்தில் இக்கோயில் சுவாமி கோயில், அம்பாள் கோயில் என்ற இரண்டு பகுதியாக காணப்படுகிறது. இத்தகைய பழக்கம் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அழகிய ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளம் பிரம்மனால் உருவாக்கப்பட்ட குளம். குளத்தின் நடுவே நீராழி மண்டபம் உள்ளது. மார்கழி மாத திருவாதிரை நாளிலும், சித்திராப் பௌர்ணமியிலும், வைகாசி விசாக தினத்திலும், அருள்மிகு மயூரநாதர், அபயாம்பிகை முன்னிலையில் இத்திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இத்தீர்த்த குளத்தில் வைகாசி வசந்த உற்சவம் 10 நாட்கள் நடந்தபின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

கோபுரத்தை அடுத்து கோயிலின் உள்ளே அழகிய 16 கால் மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சுவாமியின் திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை இங்கேதான் நடைபெறும். கோயிலின் உள்ளே முதல் தரிசனம் முக்குறுணி விநாயகர் என்றழைக்கப்படும் பெரிய விநாயகர் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளார். வடகிழக்கு மூலையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் தரிசனம்.

கி.பி 1070 - 1118-ம் வருடங்களில் கட்டப்பட்ட செங்கல் கற்றளி மண்டபங்களாக இருந்த சுவாமி, அம்பாள் திருக்கோயில் இடிக்கப் பட்டு இப்போது உள்ள கருங்கல் கற்றளி 1928-ம் ஆண்டு எழுப்பப் பட்டுள்ளது. இங்கே அழகிய சித்திர வேலைப்பாடுகள் கொண்ட கற்ப கிரகத்தினுள் மயூரநாதர் எழுந்தருளியுள்ளார்.

கோயிலின் உள் பிரகாரத்தில் உற்சவர்களின் சன்னதி, நடராஜர் சன்னதி, விநாயகர், வித்யாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், சேக்கிழார், நால்வர், சப்த மாதாக்கள், அறுபத்து மூவர் போன்றோரது சன்னதிகளும் உள்ளன. இவற்றோடு அல்லாமல் சகஸ்ரலிங்கம், சட்டைநாதர் பலிபீடம், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இதை அடுத்து மகா விஷ்ணு , வாயுலிங்கம், வருணலிங்கம், மகாலெட்சுமி, பிரம்மலிங்கம் நந்தியுடன் காட்சி தருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி அன்று இங்கே எழுந்தருளியுள்ள 21 விநாயகர் திருவுருவங்களுக்கு மோதக நிவேதனம் செய்து சிறப்பு பூஜை நடைபெறும். இத்திருத்தல மயூரநாதரை திலீபன், திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், கண்ணுவர், கவுண்டில்யன், சுசன்மன், நாதசர்மா, தருமன், லெட்சுமி, விசாலன், காமன், ஆகியோரும், அஃறிணை உயிர்களான, கழுகு, கிளி, காகம், குதிரை, நரி, யானை, வானரம், பூனை, கழுதை, போன்றவைகளும் வழிபடும் பேறு பெற்றனர். தெற்குப் பகுதியில் அகத்திய விநாயகர், நடராஜர், ஜுரதேவர், ஆலிங்கனசந்திர சேகரர் எழுந்தருளியுள்ளனர். இங்கே தனிச் சன்னதியில் சின்முத்திரையுடன் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு மேற்புறமாக குதம்பைச் சித்தர் ஸ்வாமிகள் ஜீவ சமாதி உள்ளது. இக்கோயிலில் நடக்கும் அர்த்தஜாமபூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தது. திருமணமாகாதவர்கள் திருமணம் வேண்டி நேர்ந்துகொண்டு, இந்த அர்த்த ஜாம பூஜையில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

இத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதி தனிச் சன்னதியாக காணப்படுகிறது. அம்பாள் 5 அடி உயரத்தில் 4 திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் எழுந்தருளி உள்ளார். அம்பாளுக்கு வலப்புறம் நாத சர்மாவின் மனைவி அநவித்யாம்பிகை இறைவன் காட்டிய இடத்தில் ஐக்கியமாகி லிங்க வடிவத்தில் காட்சி தருகிறார். இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிறத்திலேயே புடவை சாத்தப்படுகிறது. இந்தத் தலத்தில் மட்டுமே லிங்க உருவமாக உள்ள அம்மைக்கு புடவை சாத்தி வழிபடப் படுகிறது.அம்பாள் கோயிலின் முன் மண்டப வாசலில் இத்தலத்தின் பதிகப் பாடல்களும், உள்ப்ரகாரத்தில் அவயாம்பிகை சதகப் பாடல்களும், அகவல் பாடல்களும் கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளன.

தல வரலாறு:

தட்சன் மகளான தாட்சாயணி தன் தந்தையின் மேல் கொண்ட கோபத்தைப் போக்கிக் கொள்ள நினைத்து மயில் வடிவம் கொண்டு பூஜித்து வழிபட்ட தலமே மயிலாடுதுறைத் தலம். அன்னைக்கு பெருமான் ஆண் மயிலாக வந்து ஆடி காட்சி கொடுத்து பின்னர் தாண்டவமாடி அருள் புரிந்தமையால் கௌரி மயூரநாதர் என்றும், கௌரி தண்டவரேசர் என்றும் மயூரநாதர் அழைக்கப்பட்டார். இந்த சபைக்கு ஆதி சபை என்றும், இத்தாண்டவத்திற்கு கௌரி தாண்டவம் என்றும் பெயர் வந்தது. இதற்குப் பின் இறைவன் அம்பாளைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நிகழ்ந்த தினம் ஐப்பசி மாதம் 27-ம் நாள். கௌரி தாண்டவம் ஆடிய நாள் ஐப்பசி மாதம் 25-ம் நாள். அம்பாள் மயில் உருவில் எழுந்தருளி மாலையில் நான்கு பிரகாரங்களிலும் மயிலாக ஆடி அம்பாளாக எழுந்தருளும் காட்சியும், இறைவனோடு சேர்ந்தும் காட்சி தருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.

அனைவரும் தாம் செய்த பாவங்களை கங்கையில் நீராடி போக்கிக் கொண்டனர். இதனால் அப்பாவங்கள் அனைத்து ஒன்று சேர்ந்து கங்கையின் உருவையே மாற்றிவிட்டன. கங்கை தன் நிலையை இறைவனிடம் தெரிவிக்க, கங்கை தனது பழைய உருவம் கிடைக்க வேண்டுமென்றால் ஐப்பசி மாதம் கடைசி நாள் காவிரி விருஷப தீர்த்தத்தில் மூழ்கி எழவேண்டும் எனக் கூறினார். கங்கை காசியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்தது. கங்கையைத் தேடி காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, துண்டி விநாயகர், காலபைரவர் ஆகியோரும் திருமயிலாடுதுரைக்கே வந்துவிட்டனர். அந்த நாள் ஐப்பசி மாதம் 30-ம் நாள். அன்று வந்தவர்கள் மயிலாடுதுறையிலேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். திருவையாறில் இருந்து ஐயாறப்பரும் இங்கு வந்து அருள் பாலிக்கிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் மயிலாடுதுறையின் புனிதச் சிறப்பு அனைவருக்கும் புரியும்.

ஐப்பசி மாதம் முப்பது நாட்களும், கார்த்திகை மாதம் முதல் தேதி வரையிலும் இத்திருத்தலம் விழாக் கோலம் பூண்டிருக்கும். ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறை, வள்ளலார்கோயில், காவிரி வடகரை காசிவிஸ்வநாதர், தென்கரை காசி விஸ்வநாதர், ஐயாறப்பர், போன்ற 5 திருக்கோயில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் ஐப்பசி முதல் நாள், ஐப்பசி அமாவாசை, ஐப்பசி கடைசி நாள்களில் தீர்த்தம் கொடுத்து அருள்வர். இவற்றுள் கடைமுழுக்குத் தீர்த்தமே மிக விசேஷமானது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து கடை முழுக்கு தீர்த்தத்தில் நீராடி இறைவனின் அருளைப் பெறுவர்.

திருத்தலக் குறிப்பு:

தல மூர்த்தி : மயூரநாதர் (கௌரி மயூரநாதர், கௌரி தாண்டவரேசர்)

தல இறைவி : அபயாம்பிகை (மயிலம்மை, அஞ்சலைநாயகி, அஞ்சலை)

தல விருட்சம் : மாமரம்

தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்

கலைகளாய வல்லான் கயிலாய நன்

மலையன் மாமயிலாடுதுறையன் நம்

தலையின் மேலும் மனத்துள்ளும் தங்கவே

திருநாவுக்கரசர்

திருஞானசம்பந்தர் பெருமானால் இத்தலத்தில் பாடப்பட்ட தேவாரப் பாடல்

கரவுஇன் றிநன்மா மலர்கொண்டு

இரவும் பகலும் தொழுவார்கள்

சிரம்ஒன் றியசெஞ் சடையான் வாழ்

வரவா மயிலாடு துறையே !!

உரவெங் கரியின் னுரிபோர்த்த

பரமன் னுறையும் பதிஎன்பர்

குரவம் சுரபுன் னையும்வன்னி

மருவும் மயிலாடு துறையே !!

ஊனத்து இருள்நீங் கிடவேண்டில்

ஞானப் பொருள்கொண்டு அடிபேணும்

தேன்ஒத்து இனியான் அமரும்சேர்

வானம் மயிலாடு துறையே !!

அஞ்சுஒண் புலனும் மவைசெற்ற

மஞ்சன் மயிலா டுதுறையை

நெஞ்சுஒன் றிநினைத்து எழுவார்மேல்

துஞ்சும் பிணிஆ யினதானே !!

தணியார் மதிசெஞ் சடையான்றன்

அணிஆர்ந் தவருக்கு அருள்என்றும்

பிணியா யினதீர்த்து அருள்செய்யும்

மணியான் மயிலாடு துறையே !!

தொண்டர் இசைபா டியும்கூடிக்

கண்டு துதிசெய் பவன்ஊராம்

பண்டும் பலவே தியர்ஓத

வந்தார் மயிலாடு துறையே !!

அணங்கோடு ஒருபா கம்அமர்ந்து

இணங்கி அருள்செய் தவன்ஊராம்

நுணங்கும் புரிநூ லர்கள்கூடி

வணங்கும் மயிலாடு துறையே !!

சிரம்கை யினில் ஏந் திஇரந்த

பரம்கொள் பரமேட் டிவரையால்

அரங்கஅவ் அரக்கன் வலிசெற்ற

வரங்கொள் மயிலாடு துறையே !!

ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்

கோலத்து அயனும் மறியாத

சீலத்தவனூர் சிலர் கூடி

மாலைத் தீர்மயி லாடுதுறையே !!

நின்றுஉண் சமணும் நெடுந்தேரர்

ஒன்றும் மறியா மைஉயர்ந்த

வென்றி அருளான் அவன்ஊரான்

மன்றல் மயிலாடு துறையே !!

நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்

மயல்தீர் மயிலா டுதுறைமேல்

செயலால் உரைசெய் தனபத்தும்

உயர்வாம் இவைஉற்று உணர்வார்க்கே !!

இவ்வூரைச் சுற்றியுள்ள சப்ததான தலங்கள்:

1. அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில், மயிலாடுதுறை

2. அருள்மிகு புனுகீஸ்வரர் திருக்கோயில், கூறைநாடு, மயிலாடுதுறை

3. சித்தவனம் என்ற சித்தர்காடு, மயிலாடுதுறை

4. அருள்மிகு மார்க்கசகாய சுவாமி திருக்கோயில், மூவலூர்

5. புருஷாமிருகம் பூஜித்த அருள்மிகு அழகநாதர் திருக்கோயில், சோழன்பேட்டை

6. அருள்மிகு வதானேஸ்வரர் திருக்கோயில், சேந்தங்குடி

7. அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், துலாக்கட்டம் தென்புறம், மயிலாடுதுறை 

    பெரியகடைவீதி

 

 
 

 
 

 
 

 
 

 
 

 
 
சோழ மன்னர்களின் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
காவிரி நதியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம் 

1. நடராஜர் சிதம்பரம் 

2. பசுபதீஸ்வரர் திருவேட்களம் 

3. உச்சிநாதேசுவரர் திருநெல்வாயல் 

4. பால்வண்ண நாதர் திருக்கழிப்பாலை 

5. சிவலோக தியாகேசர் திருநல்லுர் பெருமணம் 

6. திருமேனிஅழகர் திருமயேந்திரப்பள்ளி 

7. முல்லைவன நாதர் தென்திருமுல்லைவாசல் 

8. சுந்தரேஸ்வரர் திருக்கலிக்காமூர் 

9. சாயாவனேஸ்வரர் திருசாய்க்காடு (சாயாவனம்) 

10. பல்லவனேஸ்வரர் திருபல்லவனீச்சுரம் 

11. சுவேதஆரன்யேஸ்வரர் திருவெண்காடு 

12. ஆரண்ய சுந்தரேஸ்வரர் கீழை திருக்காட்டுப்பள்ளி 

13. வெள்ளடையீசுவரர் திருக்குருகாவூர் வெள்ளடை 

14. பிரம்மபுரீசர் சீர்காழி 

15. சத்தபுரீசுவரர் திருகோலக்கா 

16. வைத்தியநாதர் திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) 

17. கண்ணாயிரநாதர் திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி ) 

18. கடைமுடிநாதர் திருக்கடைமுடி 

19. மஹாலக்ஷ்மி நாதர் திருநின்றியூர் 

20. சிவலோகநாதர் திருபுன்கூர் 

21. அருட்சோம நாதேஸ்வரர் நீடூர் 

22. ஆபத்சகாயேஸ்வரர் திருஅன்னியூர் 

23. கல்யாணசுந்தரர் திருவேள்விக்குடி 

24. ஐராவதேஸ்வரர் திருஎதிர்கொள்பாடி 

25. அருள்வள்ள நாதர் திருமணஞ்சேரி 

26. வீரட்டேஸ்வரர் திருக்குருக்கை 

27. குற்றம் பொருத்த நாதர் திருக்கருப்பறியலூர் 

28. கோந்தல நாதர் திருக்குரக்குக்கா 

29. மாணிக்கவண்ணர் திருவாளொளிப்புத்தூர் 

30. நீலகண்டேசர் திருமண்ணிப்படிக்கரை 

31. துயரந்தீர்த்தநாதர் திருஓமாம்புலியூர் 

32. பதஞ்சலி நாதர் திருக்கானாட்டுமுல்லூர் 

33. சௌந்தரேசுவரர் திருநாரையூர் 

34. அமிர்தகடேசர் திருக்கடம்பூர் 

35. பசுபதி நாதர் திருபந்தனைநல்லூர் 

36. அக்னீஸ்வரர் திருகஞ்சனூர் 

37. திருக்கோடீஸ்வரர் திருகோடிக்கா 

38. பிராண நாதேஸ்வரர் திருமங்கலக்குடி 

39. செஞ்சடையப்பர் திருப்பனந்தாள் 

40. பாலுகந்த ஈஸ்வரர் திருஆப்பாடி 

41. சத்யகிரீஸ்வரர் திருசேய்ஞலூர் 

42. கற்கடேஸ்வரர் திருந்துதேவன்குடி ( நண்டாங்கோவில் ) 

43. வில்வஆரன்யேஸ்வரர் திருவியலூர் 

44. கோடீஸ்வரர் திருக்கொட்டையூர் 

45. எழுத்தறிநாதர் திருஇன்னாம்பர் 

46. சாட்சி நாதேஸ்வரர் திருப்புறம்பியம் 

47. விஜயநாதர் திருவிசயமங்கை 

48. வில்வவனநாதர் திருவைகாவூர் 

49. குலைவணங்குநாதர் வடகுரங்காடுதுறை 

50. ஆபத்சகாயநாதர் திருப்பழனம் 

51. ஐயாரப்பர் திருவையாறு 

52. நெய்யாடியப்பர் திருநெய்த்தானம் 

53. வியாக்ர புரீசர் திருப்பெரும்புலியூர் 

54. வஜ்ரதம்ப நாதர் திருமழபாடி 

55. வடமூலநாதர் திருப்பழுவூர் 

56. செம்மேனி நாதர் திருக்கானூர் 

57. சத்யவாகீஸ்வரர் திருஅன்பில் ஆலாந்துறை 

58. ஆம்பிரவன நாதர் திருமாந்துறை 

59. திருமூலநாதர் திருபாற்றுறை 

60. ஜம்புகேஸ்வரர் திருவானைக்கா 

61. ஞீலிவனேஸ்வரர் திருபைஞ்ஜிலி 

62. மாற்றுறை வரதீஸ்வரர் திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) 

63. மரகதேஸ்வரர் திருஈங்கோய்மலை 

காவிரி நதியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம் 

1. ரத்னகிரிநாதர் திருவாட்போக்கி 

2. கடம்பவன நாதேஸ்வரர் திருகடம்பந்துறை 

3. பராய்த்துறை நாதர் திருப்பராய்த்துறை 

4. உஜ்ஜீவ நாதர் திருகற்குடி 

5. பஞ்சவர்னேஸ்வரர் திருமூக்கீச்சரம் (உறையூர், திருச்சி) 

6. தாயுமானவர் திருச்சிராப்பள்ளி 

7. எறும்பீசர் திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) 

8. நித்திய சுந்தரர் திருநெடுங்களம் 

9. தீயாடியப்பர் மேலை திருக்காட்டுப்பள்ளி 

10. ஆத்மநாதேஸ்வரர் திருவாலம்பொழில் 

11. புஷ்பவன நாதர் திருபூந்துருத்தி 

12. பிரம்மசிரகண்டீசர் திருக்கண்டியூர் 

13. தொலையாச்செல்வர் திருசோற்றுத்துறை 

14. வேதபுரீசர் திருவேதிகுடி 

15. வசிஷ்டேஸ்வரர் திருதென்குடித்திட்டை 

16. ஆலந்துறை நாதர் திருபுள்ளமங்கை 

17. சக்ரவாகேஸ்வரர் திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை) 

18. முல்லைவன நாதர் திருக்கருகாவூர் 

19. பாலைவன நாதர் திருப்பாலைத்துறை 

20. கல்யாண சுந்தரேஸ்வரர் திருநல்லூர் 

21. பசுபதீஸ்வரர் ஆவூர் பசுபதீச்சரம் 

22. சிவகொழுந்தீசர் திருசத்திமுற்றம் 

23. தேனுபுரீஸ்வரர் திருபட்டீச்சரம் 

24. சோமேஸ்வரர் பழையாறை வடதளி 

25. கற்பகநாதர் திருவலஞ்சுழி 

26. கும்பேஸ்வரர் திருக்குடமூக்கு (கும்பகோனம்) 

27. நாகேஸ்வரசுவாமி திருக்குடந்தை கீழ்கோட்டம் 

28. காசி விஸ்வநாதர் திருக்குடந்தைக் காரோணம் 

29. சண்பக ஆரண்யேஸ்வரர் திருநாகேஸ்வரம் 

30. மஹாலிங்கேஸ்வரர் திருவிடைமருதூர் 

31. ஆபத்சகாயநாதர் தென்குரங்காடுதுறை 

32. நீலகண்டேஸ்வரர் திருநீலக்குடி 

33. வைகன் நாதர் திருவைகல் மாடக்கோவில் 

34. உமாமஹேஸ்வரர் திருநல்லம் 

35. கோகிலேஸ்வரர் திருக்கோழம்பம் 

36. மாசிலாமனி ஈஸ்வரர் திருவாவடுதுறை 

37. உக்தவேதீஸ்வரர் திருத்துருத்தி (குத்தாலம்) 

38. வேதபுரீஸ்வரர் திருவழுந்தூர் 

39. மயூரநாதர் மயிலாடுதுறை 

40. துறைகாட்டும் வள்ளலார் திருவிளநகர் 

41. வீரட்டேஸ்வரர் திருப்பறியலூர் (பரசலூர்) 

42. சுவர்ணபுரீசர் திருசெம்பொன்பள்ளி 

43. நற்றுணையப்பர் திருநனிபள்ளி (புஞ்ஜை) 

44. வலம்புரநாதர் திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்) 

45. சங்கருனாதேஸ்வரர் திருதலைச்சங்காடு 

46. தான்தோன்றியப்பர் திருஆக்கூர் 

47. அமிர்தகடேஸ்வரர் திருக்கடவூர் 

48. பிரம்மபுரீஸ்வரர் திருக்கடவூர் மயானம் 

49. திருமேனிஅழகர் திருவேட்டக்குடி 

50. பார்வதீஸ்வரர் திருதெளிச்சேரி (கோயில்பத்து) 

51. யாழ்மூரிநாதர் திருதர்மபுரம் 

52. தர்பாரண்யேஸ்வரர் திருநள்ளாறு 

53. ஐராவதேஸ்வரர் திருக்கோட்டாறு 

54. பிரம்மபுரீசர் அம்பர் பெருந்திருக்கோவில் 

55. மாகாளநாதர் அம்பர் மாகாளம் 

56. முயற்சிநாதேஸ்வரர் திருமீயச்சூர் 

57. சகலபுவனேஸ்வரர் திருமீயச்சூர் இளங்கோவில் 

58. மதிமுத்தீஸ்வரர் திருதிலதைப்பதி 

59. பாம்பு புரேஸ்வரர் திருப்பாம்புரம் 

60. மங்களநாதர் சிறுகுடி 

61. நேத்ரார்பனேஸ்வரர் திருவீழிமிழிலை 

62. அக்னீஸ்வரர் திருவன்னியூர் 

63. சற்குனநாதேஸ்வரர் திருக்கருவிலிக்கொட்டிட்டை 

64. சிவானந்தேஸ்வரர் திருபேணுபெருந்துறை 

65. சித்தி நாதேஸ்வரர் திருநறையூர் 

66. படிக்காசு அளித்த நாதர் அரிசிற்கரைப்புத்தூர் 

67. சிவபுரநாதர் சிவபுரம் 

68. அமிர்தகலேஸ்வரர் திருகலயநல்லூர் 

69. சற்குனலிங்கேஸ்வரர் திருக்கருக்குடி 

70. வாஞ்சிநாதர் திருவாஞ்சியம் 

71. மதுவனேஸ்வரர் நன்னிலம் 

72. பசுபதீஸ்வரர் திருகொண்டீச்சரம் 

73. சௌந்தர்யநாதர் திருப்பனையூர் 

74. வீரட்டானேஸ்வரர் திருவிற்குடி 

75. அக்னீஸ்வரர் திருப்புகலூர் 

76. வர்த்தமானேஸ்வரர் திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் 

77. இராமணதேஸ்வரர் இராமனதீச்சுரம் 

78. திருபயற்றுநாதர் திருபயற்றூர் 

79. உத்தராபதீஸ்வரர் திருசெங்கட்டாங்குடி 

80. இரத்தினகிரீஸ்வரர் திருமருகல் 

81. அயவந்தீஸ்வரர் திருச்சாத்தமங்கை 

82. காயாரோகனேஸ்வரர் நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்) 

83. வெண்ணைலிங்கேஸ்வரர் சிக்கல் 

84. கேடிலியப்பர் திருக்கீழ்வேளூர் 

85. தேவபுரீஸ்வரர் தேவூர் 

86. முக்கோண நாதேஸ்வரர் பள்ளியின் முக்கூடல் 

87. வன்மீகி நாதர் திருவாரூர் 

88. அறனெறியப்பர் திருவாரூர் அரநெறி 

89. தூவாய் நாயனார் ஆரூர் பறவையுன்மண்டளி 

90. பதஞ்சலி மனோஹரர் திருவிளமர் 

91. கரவீரநாதர் திருக்கரவீரம் 

92. பிரியாதநாதர் திருப்பெருவேளுர் 

93. ஆடவல்லீஸ்வரர் திருதலையாலங்காடு 

94. கோனேஸ்வரர் திருக்குடவாயில் 

95. செந்நெறியப்பர் திருச்சேறை 

96. பாலசவனநாதர் திருநாலூர் மயானம் 

97. சொர்ணபுரீசுவரர் திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் 

98. ஆபத்சகாயேஸ்வரர் திருஇரும்பூளை (ஆலங்குடி) 

99. பாதாளேஸ்வரர் திருஅரதைப் பெரும்பாழி (ஹரிதுவார மங்கலம்) 

100. சாட்சி நாநர் திருஅவளிவநல்லூர் 

101. பரிதியப்பர் திருப்பரிதிநியமம் 

102. வெண்ணிக்கரும்பர் திருவெண்ணியூர் 

103. புஷ்பவனநாதர் திருப்பூவனூர் 

104. சர்ப்ப புரீஸ்வரர் திருப்பாதாளீச்சரம் 

105. களர்முலைநாதேஸ்வரர் திருக்களர் 

106. பொன்வைத்த நாதேஸ்வரர் திருசிற்றேமம் 

107. மந்திர புரீஸ்வரர் திருவுசத்தானம் 

108. சற்குனநாதேஸ்வரர் திருஇடும்பாவனம் 

109. கற்பகநாதர் திருக்கடிக்குளம் 

110. நீணெறிநாதர் திருத்தண்டலை நீணெறி 

111. கொழுந்தீசர் திருக்கோட்டூர் 

112. வெண்டுறைநாதர் திருவெண்டுறை 

113. வில்வவனேஸ்வரர் திருக்கொள்ளம்புதூர் 

114. ஜகதீஸ்வரர் திருப்பேரெயில் 

115. அக்னீஸ்வரர் திருக்கொள்ளிக்காடு 

116. வெள்ளிமலைநாதர் திருதெங்கூர் 

117. நெல்லிவனநாதேஸ்வரர் திருநெல்லிக்கா 

118. மாணிக்கவண்ணர் திருநாட்டியாத்தான்குடி 

119. கண்ணாயிரநாதர் திருக்காறாயில் 

120. நடுதறியப்பர் திருகன்றாப்பூர் 

121. மனத்துனைநாதர் திருவலிவலம் 

122. கைசின நாதேஸ்வரர் திருகைச்சினம் 

123. கோளிலிநாதர் திருக்கோளிலி 

124. வாய்மூர்நாதர் திருவாய்மூர் 

125. மறைக்காட்டு மணாளர் திருமறைக்காடு (வேதாரண்யம்) 

126. அகஸ்தீஸ்வரர் அகத்தியான்பள்ளி 

127. அமிர்தகடேஸ்வரர் கோடியக்கரை

கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம் 

1. சங்கமேஸ்வரர் திருநணா (பவானி) 

2. அர்த்தநாரீஸ்வரர் திருச்செங்கோடு 

3. பசுபதிநாதர் கருவூர் (கரூர்) 

4. திருமுருகநாதசுவாமி திருமுருகப்பூண்டி 

5. கொடுமுடிநாதர் திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) 

6. அவிநாசியப்பர் திருப்புக்கொளியூர் (அவிநாசி) 

7. விகிர்தநாதேஸ்வரர் வெஞ்சமாக்கூடல்

நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள 

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம் 

1. அரத்துறை நாதர் திருநெல்வாயில் அரத்துறை 

2. சுடர்கொழுந்தீசர் தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) 

3. நெறிகாட்டுநாயகர் திருக்கூடலையாற்றுர் 

4. திருநீலகண்டர் திருஎருக்கத்தம்புலியூர் 

5. சிவக்கொழுந்தீசர் திருத்திணை நகர் 

6. சோபுரநாதர் திருச்சோபுரம் 

7. அதிகை வீரட்டநாதர் திருவதிகை 

8. திருநாவலேஸ்வரர் திருநாவலூர் 

9. பழமலைநாதர் திருமுதுகுன்றம் 

10. வெண்ணையப்பர் திருநெல்வெண்ணை 

11. வீரட்டேஸ்வரர் திருக்கோவிலூர் 

12. அறையணிநாதர் திருஅறையணிநல்லூர் 

13. இடையாற்று நாதர் திருவிடையாறு 

14. தடுத்து ஆட்கொண்டநாதர் திருவெண்ணைநல்லுர் 

15. சிஷ்டகுருநாதர் திருத்துறையூர் 

16. வடுகூர்நாதர் வடுகூர் 

17. வாமனபுரீஸ்வரர் திருமாணிகுழி 

18. பாடலீஸ்வரர் திருப்பாதிரிப்புலியூர் 

19. சிவலோக நாதர் திருமுண்டீச்சரம் 

20. பனங்காட்டீசர் புறவர் பனங்காட்டூர் 

21. அழகிய நாதர் திரு ஆமாத்தூர் 

22. அருணாசலேஸ்வரர் திருவண்ணாமலை

தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம் 

1. ஏகாம்பரேஸ்வரர் கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்) 

2. திருமேற்றளிநாதர் திருக்கச்சி மேற்றளி 

3. ஓணகாந்தேஸ்வரர் திருஓணகாந்தான்தளி 

4. அநேகதங்கா பதேஸ்வரர் கச்சி அநேகதங்காபதம் 

5. காரை திருநாதேஸ்வரர் கச்சிநெறிக் காரைக்காடு 

6. வாலீஸ்வரர் திருகுரங்கணில் முட்டம் 

7. அடைக்கலம்காத்த நாதர் திருமாகறல் 

8. வேதபுரீஸ்வரர் திருவோத்தூர் 

9. பனங்காட்டீஸ்வரர் திருப்பனங்காட்டூர் 

10. வில்வநாதேஸ்வரர் திருவல்லம் 

11. மணிகண்டேஸ்வரர் திருமாற்பேறு 

12. ஜலநாதேஸ்வரர் திருஊறல் (தக்கோலம்) 

13. தெய்வநாதேஸ்வரர் இலம்பையங்கோட்டூர் 

14. திரிபுரநாதர் திருவிற்கோலம் 

15. வடாரண்யேஸ்வரர் திருவாலங்காடு 

16. வாசீஸ்வரர் திருப்பாசூர் 

17. ஊண்றீஸ்வரர் திருவெண்பாக்கம் 

18. சிவானந்தேஸ்வரர் திருக்கள்ளில் 

19. ஆதிபுரீசர், படம்பக்கநாதர் திருவொற்றியூர் (சென்னை) 

20. வலிதாய நாதர் திருவலிதாயம் 

21. மாசிலாமனி ஈஸ்வரர் திருமுல்லைவாயில் 

22. வேதபுரீசர் திருவேற்காடு 

23. கபாலீஸ்வரர் திருமயிலை (சென்னை) 

24. மருந்தீஸ்வரர் திருவான்மியூர் (சென்னை) 

25. விருந்திட்ட ஈஸ்வரர் திருக்கச்சூர் ஆலக்கோவில் 

26. ஞானபுரீஸ்வரர்  திருஇடைச்சுரம் 

27. வேதகிரீஸ்வரர்  திருக்கழுகுன்றம் 

28. ஆட்சீஸ்வரர் அச்சிறுபாக்கம் 

29. சந்திரசேகர்  திருவக்கரை 

30. அரசிலிநாதர் திருஅரசிலி 

31. மாகாளேஸ்வரர் இரும்பை மாகாளம்

பாவங்களைப் போக்கி , செல்வம் கொழிக்க வைக்கும் அபூர்வ ஆலயங்கள் 

மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்

இழந்த செல்வம் மீட்டு தரும் ” தென்குரங்காடுதுறை “ 

சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் ” ஆபத்சகாயேஸ்வரர் ” இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் ” தென்குரங்காடுதுறை ” என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம்  செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் “திருவாடுதுறை” 

கும்பகோணம் – மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் “திருவாடுதுறை”. ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

செல்வ வளம் பெருக  சம்பந்தர் அருளிய பதிகம் 

இடரினும் தளரினும் எனதுறுநோய்

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே!

இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்

அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே!

 

கடன், சங்கடங்கள் போக்கும் ” திருபுவனம் சரபேஸ்வரர் “

தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற, கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள “திருபுவனம் ” சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் “சரபேஸ்வரரை” வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.

வறுமை நீக்கும் கடன் நிவர்த்தி தலமாம் “திருச்சேறை”

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள ” ரிண விமோஷன லிங்கேஸ்வரர் “. கும்பகோணம் – திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.

பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர “ஸ்ரீவாஞ்சியய்ம்”

மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள “ஸ்ரீவாஞ்சியம்”. காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

பிதுர் தோஷம் நீக்கும் ” ஆவூர் பஞ்ச பைரவர்கள் “

கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. ( ஆ என்றால் பசு ).

இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது. இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த “பிதுர் தோஷ நிவர்த்தியாகும்”.

சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் “பிதுர் தோஷமே “. பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.

மரண கண்டம் நீக்கும் ” திருநீலக்குடி “

ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக் கோயில், கும்பகோணம் – காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் “திருநீலக்குடியாகும்”. மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும். ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத் தலத்தில் தானம் செய்ய வேண்டும். எம, மரண பயங்கள் நீங்க இத் தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

மாங்கல்ய தோஷம் நீக்கும் ” பஞ்சமங்கள ஷேத்திரம் திருமங்கலக்குடி”

நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள “திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்”. இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.

இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.

மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் ” மங்களாம்பிகை” எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் “பிராண வரதேஸ்வரர் ” எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் ” பஞ்ச மங்கள ஷேத்திரம் ” எனப்படுகிறது.

கிரக தோஷங்கள் விலக்கும் ” சக்கரபாணி “ 

ஆயுதமேந்திய எட்டு திருக்கரங்களுடன், சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுகோண யந்திரத்தில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் ” சக்ககரபாணி ” வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும். நவக்கிரக நாயகனான சூரிய தேவனே வழிபட்டு தன் தோஷம் நீக்கியதால், இத் தலம் கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை கேது புத்தி போன்ற நவக்கிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள் இத் தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குவதால், வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் சிறப்பே.

பெண் பாவம் தீர்க்கும் ” திருவிசநல்லூர் “ 

திருவியலூர் எனப்படும் ” திருவிசநல்லூரில் “சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும். பெண்களின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் ” மரண  பயம் ” நீக்கும் திருத் தலமாகும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாவம்சம்

கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும், இலங்கையின் வரலாறு கூறும் பாளிநூலான மகாவம்சம் கிமு 2 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் இருந்து வந்து 44 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளன் மீது இக்கதையை ஏற்றிச் சொல்கிறது.
 

 

 

மிகப் பெரீரீரீரீரீரீரீரீரீரீரீரீரீரீரீய கட்டுரை...

எள்ளாளன் சோழ நாட்டிலிருந்து சென்றவனா..? :o:huh:

சந்தேகமாயிருக்கிறது. :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.