Jump to content

பெரியாரா?இராமசாமியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரா?இராமசாமியா?

வா. மணிகண்டன்

இன்று பெரியாரையும் அண்ணாவையும் ஆளாளுக்கு விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை விமர்சனம் என்று கூடச் சொல்ல முடியாது. வசை. பெரியாரின் ஏதாவது ஒரு வரியை எடுத்துக் கொண்டு ‘அப்படிச் சொன்னவன்தானே ராமசாமி?’ என்று எழுதுகிறார்கள். ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும். பெரியாரும் சரி; காந்தியும் சரி அல்லது அம்பேத்கரும் சரி- தங்களது செயல்பாட்டின் வழியாக தனிப்பட்ட வாழ்வில் எந்தப் பலனையும் அனுபவிக்காதவர்கள். பிற்காலத்தில் ஆட்சியாளர்கள் ஆகவில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை. குடும்பத்துக்குச் சொத்துச் சேர்க்கவில்லை. வாரிசுகளை முன்னெடுக்கவில்லை. அவர்கள் வாழ்ந்த காலத்தில் எவையெல்லாம் தவறு என்று பட்டதோ அதையெல்லாம் எதிர்த்தார்கள். அதையெல்லாம் விமர்சித்தார்கள். அவ்வளவுதான்.

இந்த ஒரு நினைப்பை மனதில் வைத்துக் கொண்டு அவர்களை விமர்சிக்கலாம். அதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் பெரியாரையும் காந்தியையும் இன்றைய அரசியல்வாதிகளைப் போல கருதிக் கொண்டு- பிழைப்புக்காக களமிறங்கினார்கள், அதிகாரத்தைக் கைப்பற்ற கொடி தூக்கினார்கள் என்ற நினைப்பில் குருட்டுவாக்கில் விமர்சித்தால் அது விமர்சனமாக இருக்காது வெறும் வசையாகத்தான் இருக்கும். அப்படித்தான் பெரும்பாலானவர்கள் இவர்களையெல்லாம் பெருமொத்தமாக நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமூகத்திலும் நம் பண்பாட்டிலும் காலங்காலமாக புரையோடிக் கிடந்த விஷயங்களின் மீது தங்களின் சிந்தனைகளாலும் பேச்சினாலும் எழுத்தினாலும் ஆழமான கீறலைப் போட்டுவிட்டுச் சென்றவர்களை அவ்வளவு சீக்கிரம் நிராகரிக்க வேண்டியதில்லை. நம்மால் நிராகரித்து விட முடியுமா என்ன? அது ஒன்றும் அவ்வளவு எளிதில்லை.

இன்னமும் நூறாண்டு ஆனாலும் இவர்களின் தாக்கம் ஏதாவதொருவிதத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். மதுவிலக்கு பற்றி அறிவார்ந்த விவாதத்தை ஆரம்பிக்கும் போது நமக்கு காந்தி தேவைப்படுவார். விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் பற்றி சிந்திக்கும் போது அம்பேத்கரை நினைத்துக் கொள்வோம். சாதி ஒழிப்பு பற்றியும் சமூக சீர்திருத்தம் பற்றியும் பேசுவதற்கு பெரியாரை முன் வைக்க வேண்டியிருக்கும். இதுதான் நிதர்சனம். அதை விட்டுவிட்டு ஒன்றரை வரி ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் இத்தகையை ஆளுமைகளை நாறடிப்பதாக நினைத்தால் அது சாணத்தை வாரி நமக்கு நாமே அடித்துக் கொள்வது போலத்தான்.

என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும், பெரியார் இல்லாமலிருந்தால் தமிழகத்தில் நஞ்சப்பனும் கருப்பணனும் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்தில் எத்தனை சதவீதத்தை அடைந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இன்றைக்கு சாதியை பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ள கூசும் தலைமுறை உருவாகியிருப்பதில் பெரியாரின் தாக்கம் மிக முக்கியமானது. இன்னமும் சாதி நம்மிடையே புரையோடித்தான் கிடக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் எழுபதுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டாயிரம் வரையில் சாதியை பெருமைக்காக பயன்படுத்துவதை ஒரு தலைமுறையே தவிர்த்து வந்திருக்கிறது. அதில் பெரியாரின் பங்களிப்பு இல்லை என்று ஒதுக்கிவிட முடியுமா என்ன?

ஒரு மனிதன் மீதான தனிப்பட்ட விமர்சனங்களையும் தனது கொள்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் எதிரான கருத்துக்களை எழுதிச் சென்றவன் என்ற எரிச்சலையும் மனதில் வைத்துக் கொண்டு ‘எடுடா அருவாளை போடுடா பெரியாரை’ என்றெல்லாம் உளறிக் கொட்டிக் கிளறி மூடுவது அபத்தம். பெரியாரின் கடவுள் மறுப்பு மீது விமர்சனம் இருக்கலாம். தனிப்பட்ட முறையில் எனக்கும் விமர்சனம் உண்டு. ஆனால் அந்த விமர்சனத்தை ஏன் அவர் தூக்கிப் பிடித்தார்? அவரது காலத்தின் சூழல் என்ன என்றெல்லாம் பார்க்க வேண்டும். பெரியாருக்கும் விநாயகனுக்கும் என்ன பங்காளித் தகராறா? முருகனுக்கு ஈவேராவுக்கு என்ன வாய்க்கால் தகராறா? அப்புறம் ஏன் எதிர்த்தார் என்ற ரீதியில் விவாதிக்க வேண்டும்.

அண்ணாவின் நினைவுக்கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசியது போல பெரியார், அண்ணாவை பின்பற்றி ஒரு பெரும் கும்பல் உருவாகியது. இந்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்தக் கும்பல் எந்தப் புரிந்துணர்வுமே இல்லாமல் கண்ணில் படுவதை எல்லாம் எதிர்க்கத் துவங்கியது. கம்பராமாயணத்தை எதிர்த்தார்கள். அற்புதமான சமயப்பாடல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. பாடத்திட்டங்களில் பொக்கையான இலக்கியம் முன்னெடுக்கப்பட்டது. ரமலானில் இப்தார் விருந்துண்பதும் கிறித்துவத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் மத நிகழ்வு இல்லை ஆனால் தீபாவளியும் விநாயகர் சதுர்த்தியும் மதச்சார்புடையது என்ற போலியான பிம்பங்கள் உருவாக்கப்பட்டன. இப்படி நிறையச் சொல்லலாம். ஆனால் இதை எல்லாம் எப்படி பெரியாரின் குறை என்று சொல்ல முடியும்?

பெரியாரைக் கடவுளாக்கியது அவரைப் பின் தொடர்ந்து வந்த அரசியல்வாதிகள்தான். பெரியாரின் காலத்திலேயே அவரது கருத்துக்களை முன்னிறுத்தி விவாதத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் தடுத்தார்கள். வாக்குப்பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு பெரியார், அண்ணா என்ற புனித பிம்பங்கள் தேவைப்பட்டன. ஒரு பீடத்தைக் கட்டி அதன் மீது அவர்களை நிறுத்தி வைத்துவிட்டார்கள். யாராவது எதிர்மறையாக பேசத் துவங்கினால் கற்களால் அடிக்கத் துவங்கினார்கள். பெரியாரின் கருத்துக்கள் முழுமையாக விவாதிக்கபடவில்லை. அதை விவாதித்திருந்தால் இன்றைய சூழலுக்கு ஏற்ப அவை உருமாறியிருக்கக் கூடும். அதை அந்தக் கும்பல்தான் தடுத்தது. பார்வையாளர்களிடம் கைதட்டு வாங்கவும் அவர்களை மொன்னைகளாக்குவதற்காகவும் திரும்பத் திரும்ப அடுக்கு மொழியில் பெரியாரின் கருத்துக்களை தங்கள் குரலில் பேசி அதோடு நிறுத்திக் கொண்டார்கள். அதன் மீது கேள்விகள் அனுமதிக்கப்படவில்லை. உரையாடல் நிகழ்த்தப்படவில்லை. அப்படியே உறைந்து போய்க் கிடக்கின்றன அந்தக் கருத்துக்கள்.

பெரியாரின் சிந்தனைகள் காலத்திற்கு ஏற்ப வடிவத்தை எடுத்துக் கொள்ளாததற்கு காரணம் பெரியார் இல்லை. அவரை வைத்து அரசியல் செய்கிறார்கள் அல்லவா? அந்த கயவாணிகள்தான். ‘நாங்கள் பெரியாரின் தொண்டர்கள்’ என்று சொல்லிக் கொண்டே ஒரு குழு பெரியாரை நெருங்க விடாமல் செய்கிறது என்றால் இன்னொரு குழு ‘பெரியார் சொன்னது அத்தனையுமே தவறு’ கத்திக் கொண்டு திரிகிறது. இந்த இரண்டு குழுவுக்குமே பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்பது முழுமையாகத் தெரியாது என்பதுதான் அவலம்.

பெரியாரின் கருத்துகளை மட்டுமில்லை நம் முன்னோர்கள் யாருடைய கருத்தையுமே நம்மால் நூறு சதவீதம் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் அந்தக் கருத்துக்களை விவாதங்களின் வழியாக காலந்தோறும் உருமாற அனுமதிக்கலாம். அதுதான் அறிவார்ந்த சமூகத்திற்கு அழகு. ஆனால் நாம் அதைச் செய்யவில்லை. செய்யவும் மாட்டோம். ஒவ்வொரு வருடமும் பிறந்தநாளின் போது ஒரு கும்பல் மாலை அணிவிக்கும். இன்னொரு கும்பல் ‘பெரியார் ஒரு கயவாணி’ என்று எழுதும். நடுவில் சில சில்லுண்டிகளுக்கு இதைப் போன்றதொரு கட்டுரை எழுத ஒரு வாய்ப்பு கிடைக்கும். அவ்வளவுதான்.

http://www.nisaptham.com/2014/09/blog-post_4.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.