Jump to content

பால் வீதி நட்புக்கள் ..


Recommended Posts

அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் வீடுதான் எங்கள் வீட்டுக்கு அயலில் இருந்த, வீடுக்கு முன்னால சின்ன ஒரு வேளாங்கன்னி மாத சுருவம் சுவரில வைச்சு, அதுக்கு செவ்வாக்கிழமை மெழுகுதிரி கொளுத்தி, " சர்வேசுவர மாதவே,கன்னி மரியாயே, பாவிகளான எங்கள்......" எண்டு மாஸ்டரின் ஒரே மகன் ஜேசுதாசனும், ஒரே மகள் மேரியும் செபம் சொல்ல , மாஸ்டரின் மனைவி ஜோசப்பின் அக்கா அந்த செப முடிவில் " கர்த்தரின் கிருபை மாம்சத்தின் ஜீவனை ,,,, " எண்டு  பைபிளின் வாசகம் வாசிக்க, எங்கள் "குளத்தடிக் குழப்படி குருப் " நண்பர்கள், அதை விடுப்புப்  பார்க்கவும், கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மேரியை மெழுகுதிரி வெளிச்சத்தில் சாட்டோட சாட்டா கிட்டத்தில விபரமாகக் கவனிக்கவும் வாய்ப்புக் கிடைத்த ஒரே ஒரு வேதக்கார வீடு.
 
                              இனி நான் சொல்லப்போற கதை கர்த்தர் மேல் ஆணையாக, ஆங்கில ஆசிரியராக அரசாங்க உத்தியோகம்  பார்த்த அன்டனி மாஸ்டர், பெரியாஸ்பத்திரியில் நேர்ஸ் ஆகவேலை செய்த  ஜோசப்பின் அக்கா, செமினரியில் பாதருக்கு படிக்கப்போறதா சொல்லிக் கொண்டு இருந்த ஜேசுதாசன் பற்றியது அதிகம் இல்லை. பதிலாக " வானம்பாடிக்"  கவிஞ்சர்களின் புதுக்கவிதைகள்  விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்த, மேரி பிலோமினா அமலோற்பவ ரதி என்ற மேரி, வானம் பாடிப் பாதை மாறிப் போன சம்பவம்  நிறையவே உள்ள கதை . 
 
                                    பைபிள் படி வாழ வேண்டும் எண்டு வாழ்ந்த அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் பற்றி அதிகம் சொல்ல ஒண்டுமில்லை, அவரின் அந்த சமய நம்பிக்கைகளை நடைமுறையில் செய்து காட்டிக்கொண்டு இருந்த  ஜோசப்பின்  அக்கா எங்களைப் பொறுத்தவரை உள்ளூர் மதர் தெரேசா. அவா பற்றி சொல்ல கொஞ்சம் இருக்கு, 
 
                                ஜோசப்பின் எங்கள் வீட்டுக்கு வருவா,ஆனால் எங்களோடு பைபிள் கதைக்க மாட்டா. சிரிச்சு சிரிச்சு எப்பவும் எல்லாப் பெண்கள் கதைப்பது போல குடும்ப சந்தோஷ,துக்க  விசியங்கள் கதைப்பா, எங்கள் வீட்டில எப்பவும் நாங்கள் கையைக் காலை ஒழுங்கா வைச்சுக்கொண்டு இருக்காமல் விழுந்து,உருண்டு,பிரண்டு உடைப்பதால், நாவல்க் கலர்ல இருக்கும் கொண்டிஸ் என்ற பொட்டாசியம் பெர்மங்கனட் என்ற புண் வந்தா போட்டுக் கழுவுற  மருந்து ,சவரின் பார் சவுக்காரம் போல பூசுற களிம்பு எப்பவும் ஆசுப்பத்திரியில இருந்து எடுத்துக்கொண்டு கொண்டு வந்து தருவா. சில நேரம் அவாவே போட்டு உரஞ்சி கழுவி மருந்து போட்டு விடுவா.
 
                               அம்மச்சியா குளக் கரையில தனிய இருந்து அலைஞ்ச தாடி பாலாவுக்கே காலில சிரங்கு வந்த நேரம் அவதான் கொண்டிஸ் போட்டு கழுவி விடுவா. தாடிபால அவா உரஞ்சிற உரஞ்சலில் " எண்ட அம்மாளாச்சி என்னைக் காப்பாற்று " எண்டு கத்துவார், ஜோசப்பின் அக்கா இப்படி ஒவ்வொருநாளும் அவாவிண்ட வேலையில் பார்க்கிறதால் ஒண்டும் சொல்லாமல் " நான் தான் அம்மாளாச்சி,உன்னைக் காப்பாற்ற வந்து இருக்கிறேன், உயிர் போற மாதிரி இப்ப என்னத்துக்கு கிடந்தது குளறுறாய்  " எண்டு சொல்லி உரஞ்சி உரஞ்சி மருந்து போட்டே தாடி பாலாவை காப்பற்றினா. 
 
                                          அம்மாவே ஒருநாள் " என்ன ஜோசப்பின்,உனக்கு வேற வேலை இல்லையே, பால பாஸ்கரன் காலில சிரங்குக்கு மருந்து போடிறியாம்.அவன் விசரன் , ஜோசிச்சு ஜோசிச்சு சொறிச்ச சொறிய சிரங்கு வரும்தானே,உனக்கேன் இந்த நாய் வாலை நிமித்துற வேலை " எண்டு சொல்ல, 
 
                                 ஜோசப்பின் அக்கா, " அப்படி சொல்லாதயுங்கோ மனோன்மணி அக்கா, எங்கட பைபிளில் ஜேசுநாதர்,குஸ்டரோகி ஒருவரின் காலைக் கழுவி விட்டவர், அவர் தேவ மைந்தன் அவரே செய்து இருக்குறார், இம்மையில் நான் செய்யுறது மறுமையில் எங்களுக்கு கிடைக்கும் அக்கோய், " எண்டு சொன்னா. அவா அப்படிதான் தேவை அதிகம் இல்லாத இடத்திலையும் அவாவின்  சேவை அதிகம் இருக்கும்,,,   
 
                                  செமினரிக்கு போய்ப் பாதருக்குப்  படிக்கப் போறேன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்த ஜேசுதாசன் என்ற ஜேசுதான் எங்கள் குளதடிக் குழப்படிக் குரூப்பில் குழப்படி செய்யாத ஒரே ஒரு மெம்பர். அவளவு உலகம் தெரியாத வெள்ளாந்தியான அப்பாவி.  வெள்ளைச் சொண்டன் வீட்டில் கள்ள மாங்காய் பிடுங்க போகப் பிளான் பண்ணினாலோ,பண்ணை வளவில கள்ள இளனி இறக்க திட்டம் போட்டாலோ ஆரம்பத்திலேயே அதை " சத்துருக்களுடன் ஜீவிதம் செய்வோர் பாவிகள்.... " எண்டும் பைபிள்ப் படி இதெல்லாம் பிழை எண்டு சொல்லுவான். புளியமர இருட்டில பித்துக்குளி என்ற எங்கள்  வயசிலேயே வெம்ப்பிப் பழுத்த அறிவுஜீவி தலைமையில் நடக்கும் பெண்களின் அந்தரங்க உறுப்புக்கள் பற்றிய பின் இரவு " மிட்நைட் மசாலா " ஆராய்ச்சி உரையாடல்களில் பங்கு பெறவே மாட்டான். குளத்தடிக் குரூப் சட்ட திட்டத்தில் முக்கியமா அதில உள்ள மெம்பர்கள் மற்ற மெம்பர் வீடுகளுக்குள்ள கேட்டுக் கேள்வி இல்லாமல் திறந்த வீட்டுக்குள்ள நாய் போன மாதிரி போகலாம், வரலாம் எண்டுதான் உறுதி மொழி எடுத்து இணைந்து இருந்தோம். ஆனால் ஜேசு மட்டும் எங்களில் என்னைத் தவிர மற்ற ஒருவரையும் , ஒரே ஒரு நாள்த் தவிர அவன் வீட்டுக்கு உள்ள கூப்பிடமாட்டன், வாசலோடு வைச்சுக் கதைச்சு சலாப்பி அனுப்புவான். இவன் எங்க வாழ்கையில் முன்னேறப் போறான் எண்டு நாங்களும் அவனை ஒண்டிலையும் வற்புறுத்தி இழுத்து வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை. 
 
                                            நான் அடிக்கடி அவன் வீட்டுக்கு ஏதாவது ஒரு சாட்டில எட்டிப் பார்க்கப் போனாலும், ஜேசு டிசம்பர் மாதம் வரும் கிறிஸ்மஸ் கொண்டாட்டதுக்கு மட்டும் எங்கள் குரூப் மெம்பர்கள் எல்லாரையும்  அவன் வீட்டின் ஹோலில ஒரு மூலையில் சவுக்கு மரம் வைச்சு, அதுக்கு கீழ ஜேசுநாதர் மாட்டு தொழுவத்தில் பாலனாகப் பிறந்து உள்ள சம்பவத்தை, சின்ன சின்ன பிளாஸ்டர் பரிஸ் சிலைகளில் அலங்கரித்து, அதுக்கு மின்னி மின்னி மறையும் சின்ன சின்ன பல்ப் போட்டு, " பைபிளின் பழைய ஏட்பாட்டில் ஜோசுவா தீர்க்கதரிசி சொன்ன மாதிரி கர்த்தர் பாலனாய் ஜெருசலாமில் பிறக்க,வெள்ளிப் போளங்களுடன் பரிசேயர் வர, அந்தக் குழந்தையைக் கொலை செய்ய ரோம வீரர்கள் வீடு வீடாக தேடி வர, ஜோர்டான் ஆற்றம் கரையில் வால் வெள்ளி தோன்றியது...  " எண்டு கண்ணை உருட்டி உருட்டி விளக்கம் வேறு சொல்லி எங்களுக்கு அந்த சோடிணையைக் காட்டுவான். நாங்கள் அதை ஆர்வமாகப் பார்க்காமல்,கதவில அரைவாசியை மறைஞ்சு அதிகாலை விடி வெள்ளி போல மின்னும் அவனோட தங்கச்சி மேரியைக்  கண்ணை நல்லா விரிச்சு வைச்சு ஆர்வமாகப் பார்ப்போம். அதுதான் நான் முன்னமே சொன்னேனே ஜேசுதாசன் எவளவு வாழ்கையில் முன்னேறத் தெரியாத உலகம் தெரியாத அப்பாவி எண்டு.
 
                            மேரி எல்லா இளம் பெண்கள் போலதான் அம்சமா அடக்கமா வத்தகப் பழம் போல சிவப்பாக இருப்பாள்., தேவமாத போல நெற்றியில் சுருள் முடி விழ , சுண்டங்காய் போல சின்ன மூக்கு அமுங்கிப்போய் இருக்க வெள்ளரிக் கன்னத்தில் குறும்பு எப்பவும் ஒரு சின்னக் குழி விழித்திக்கொண்டு இருக்க  ,முக்கியமாப் பேசும் போது காற்றுக்கே அதிராமல் மென்மையாகப் பேசுவாள்.கழுத்தில ஒரு மெல்லிய சிங்கப்பூர் செயின் போட்டு அதில ஜேசுநாதரை அறைந்த சிலுவை பென்டன் போட்டு அதோட ஒரு சிகப்பு குண்டுமனியும் சேர்த்தே தொங்கவிட்டு இருப்பாள். அவள் நந்தியா வெட்டைக் கண்கள் அன்புக்கு இலக்கணம் எழுத, நீரோடைப்  பார்வை கருணைக்குப் பாயிரம் எழுத ,மொத்தமாக அவள் முகத்தில் பாசத்துக்கு ஏங்கும் இதயத்தின் வாசம் இருந்தது அந்த சின்ன வயசிலேயே.  டவுனில இருந்த கன்னிகாஸ்திரிகளின் கொன்வென்ட்  பள்ளிக் கூடத்தில படித்த அவள் படிப்பில புலி ,ஆனால் அந்த வீடிலேயே எல்லாருக்கும் ஓடின மாதிரி அதிகம் கிறிஸ்தவ சிந்தனையில் அவள் மனம் ஓடவில்லை. வேற என்னதில ஓடினது எண்டு நீங்க கட்டாயம் கேட்பிங்க, காரணம் இந்தக் கதையே மேரியின் கதை அதால சொல்லுறேன். 
 
                                          மேரி அந்த சின்ன வயசிலேயே அதிகம் வாசிப்பது கவிதைகள், அது எப்படி  வெளிய தெரியும் என்றால் கவிஞ்சர் கந்தப்பு எங்கள் ஊர் வாசிக்க சாலையில் நடத்திய " கை எழுது " என்ற சின்ன மாட்டுத்தாள் பேப்பர்  கையெழுத்துப்  பத்திரிகையில் அவள் அதிகம் எழுதுவாள். வானம்பாடிக் கவிஞ்சர்களின் காதல் நனைந்த கவிதை போல இல்லாமல், அதிகம் நா. பிச்சமூர்தி,ஆத்மாநாம் போறவர்களின் பாதிப்பில் அவர்கள் போலவே  கொஞ்சம் எளிமையா எழுதுவாள் என்று கவிஞ்சர் கந்தப்புவே ஒரு முறை இலக்கிய சந்திப்பு கூட்டத்தில அவளைப் பற்றி சொன்னார். உண்மையா எண்டு அதை உறுதிப்படுத்தும் அளவுக்கு எங்களுக்கு அப்ப அறிவு இருந்ததில்லை. ஜேசுதாசன் சில நேரம் அந்தப் பேப்பர் கொண்டு வந்து காட்டுவான். ஜேசு ஒத்துக்கொண்டது போலவே எங்களுக்கும்  அதிகம் அதன் அர்த்தம் விளங்காது.ஆனாலும் ஜேசு
 
                       " நான்  பாதருக்கு படிச்சு பங்குத்  தந்தை ஆகினாலும் அவள் கட்டாயம் இலக்கிய உலகத்தில் ஒரு நாள் பிரகாசிப்பாள் "  
 
                                 எண்டு சொல்லுவான். எங்களுக்கு அந்த நேரம் தெரியாமலே போன ,விதி திரை போட்டு மறைச்சு வைச்ச மிகப்பெரிய சோகம், பல  நிகழ்வுகள்  எதிர்காலத்தில் நடக்காமலே போகப் போறது தெரியாமல் நாங்கள் ஒவ்வொரு நாளும் வளர்ந்தது ... 
 
                        ஒரு நாள்......
 
                                        என்னோட அம்மா ,சுப்பிரமணியம் கடையில, ஆனைக்கோட்டை நல்லெண்ணெய் போத்தல் வேண்டிக்கொண்டு வந்து ,கொஞ்சம் முட்டைகளையும் ஒரு கடுதாசி பையில போட்டுக்கொண்டு
 
        " ஜோசப்பின் வீட்டை போட்டு வாறன் "
 
                      எண்டு சொல்லிப்போட்டு போனா. போய் சில மணித்தியாலங்களில் திரும்பி வந்து வீட்டு வெளி வாசலில் நிண்டு கொண்டு,  
 
                     "  தீட்டுத் துடக்கு வீட்டுக்குப்  போட்டு வாறன்,பின்னால வா, வந்து கிணத்தில மூன்று வாளித் தண்ணி அள்ளி தலையில ஊத்தடா "  
 
             எண்டு சொன்னா,நான் போய் ஒண்டுமே விடுப்பு கேட்காமல் அள்ளி ஊத்திப் போட்டு வந்து வீட்டுக் ஹோலில இருந்தேன். அம்மா தலையில ஒரு துவாயைச் சுற்றிக்கொண்டு வந்து,முதல் வேலையா என்னட்ட வந்து,
 
               " இனி ஜேசுதாசன் வீட்டுக்கு தேவை இல்லாமல் நத்தார் பாப்பா பார்க்கப் போறேன்,அது இது எண்டு சொல்லிக்கொண்டு போனி எண்டால் முழங்காலை அடிச்சு முறிப்பேன் "
 
                              என்றா,நான் என்னோட முழங்காலைத் தடவிப் பார்த்தேன்,அது பிற்காலத்தில் எனக்கு எவளவு முக்கியம் எண்டு நினைச்சுப் போட்டு ஒண்டுமே சொல்லாமல் பேசாமல் இருந்தேன். அம்மா  
 
                 " ஜோசப்பின் ஆட்கள் வேதக்காரர் அவயல் எங்களைப்போல பால் அறுகு, மஞ்சள் வைச்சு தலைக்கு தண்ணி ஊத்த மாட்டுதுகள், என்றாலும் என்னோட கடமைக்கு நான் வேண்டிக் குடுக்கிறதைக் குடுத்திட்டேன் "
 
                எண்டு எனக்கும் கொஞ்சம் நடக்கிற சம்பவங்களின் விபரம் சொல்ல வேண்டும் போல சொல்லிக்கொண்டு இருந்தா.  
 
                                                        அதுக்கு பிறகு நான் ஜேசுதாசன் வீட்டை போறது இல்லை, மேரியும் அதிகம் வெளிய வாறது இல்லை,பள்ளிக் கூடம் போறது தெரியாமல்ப் போவாள் ,வாறது தெரியாமல் வருவாள்.கவிஞ்சர்  கந்தப்புவின் மாட்டுத்தாள் பேப்பரிலும் அவளின் கவிதைகள் அதன் பின் வரவில்லை. அவள் படிச்சுக்கொண்டு இருந்த பின்னேர  டுயுஷன் இக்கு போறதை நிற்பாட்டிப்  போட்டு அவர்கள் வீட்டுக்கே ஒரு மாஸ்டர் வந்து சொல்லி கொடுத்தார் எண்டு தான் குளத்தடியில் நியூஸ் அடிக்கடி கசிந்து கொண்டு இருந்தது. ஆனால் ஜேசு  எங்கட வீட்டை வந்து
 
                     " வீட்டை வாட , அப்பா ஒரு எக்கோடியன் வாங்கி வைச்சு இருக்கிறார்,வா வந்து பார்,மேரியும் கொஞ்சம் கொஞ்சம் அதை இப்ப வாசிக்க பழகிறாள் ,வாட வாட "
 
                          எண்டு இழுப்பான், எக்கோடியன் வாத்தியம் எப்படி இருக்கும் எண்டதை விட மேரி இப்ப எப்படி இருப்பாள் எண்டு பார்க்க ஆவலா இருந்தது. ஒரே ஒரு நாள் அவளை வீராளி அம்மன் கோவில் தேர் முட்டியடியில் என்னோட பெரிய மாமாவின் கடைசி மகள் ஜெயந்தியோட சும்மா கதைச்சுக்கொண்டு நிண்ட நேரம்,மேரி சைக்கிளில் ஓடிக்கொண்டு எங்களைத் திரும்பி திரும்பி வடிவாப் பார்த்துக்கொண்டு போனாள்.ஜெயந்தி மேரியோட  டூஷனில் ஒன்றா படித்தவள். நான் அவளைப் பார்க்காத மாதிரி வடிவாக் கவனித்தேன்.....
 
                       சொல்லி வைச்ச மாதிரி அந்த வருடமும்  கிறிஸ்மஸ் அமளி துமளியா வந்தது.......
 
                                                    அம்மாவே வந்து " இந்த முறையும் ஜோசப்பின்  வீட்டை நத்தார் இக்கு போகப்போறியா, போறது எண்டாப் போ,ஒழுங்கா போய்ப் பேசாமல் கேக்கை திண்டு போட்டு ஒழுங்கா திரும்பி வாறது எண்டா போயிட்டு வா " ,எண்டு எனக்கே ஆச்சரியமா சொன்னா,நான் என்னோட முழங்காலைப் பார்த்த்துக் கொண்டு இருந்தேன். " பரவாயில்லை ஜேசுதாசன் வந்து வரச் சொன்னால் போட்டு வா " எண்டு மறுபடியும் சொன்னா, ஜேசு முதலே எனக்கு மட்டும் சொல்லி இருந்தான் வர சொல்லி அதைப் பயத்தில நான் சொல்லவில்லை. மற்ற குளத்தடி குரூப் மெம்பர்களுக்கு இந்த வருடம் சொல்லவில்லை எண்டும் சொல்லி இருந்தான். ஆனால் நான் மற்ற பிரெண்ட்ஸ் உம் வந்தால் தான் வருவேன் இல்லாட்டி வரமாட்டேன்,என்று ஜனநாயக வழி முறையில் அவனுக்கு சொன்னேன்,அவனும் ஜோசித்துப் போட்டு ஓகே எண்டு சொல்லி இருந்தான்.
 
                                  கிறிஸ்மஸ் இரவு நாங்கள் ஜேசுதாசன் வீட்டுக்குப் போன நேரம், ஏறக்குறைய ஜேசு பாலன் பிறக்கும் சின்ன சோடினையில் லைட் சுற்றி சுற்றி சோம்பலா ஓடிக்கொண்டு இருக்க, டேப் ரெகொர்டரில் ஜிம் ரிவிஸ் பாடின " ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்... " பாடல் அதிகம் சத்தம் இல்லாமல்ப் பாடிக்கொண்டு இருக்க , மாஸ்டரின்,ஜோசப்பின் அக்காவின் அவர்களின் உறவினர் பலர் வந்து இருந்தார்கள்,ஜோசப்பின் அக்கா ஓடி ஓடி எல்லாருக்கும் கேக் குடுத்துக்கொண்டு இருக்க,ஜேசு நல்ல வடிவா உடித்திக்கொண்டு எப்பவும் போல அவன் சவுக்கு மரத்துக்கு கீழே சோடினை செய்த அலங்காரங்களை  எங்களுக்கு காட்டி எங்களை வியக்க வைத்துக்கொண்டு இருக்க,அன்டனிப் பிள்ளை மாஸ்டர் பைபிளை எடுத்துக்கொண்டு வந்து " இண்டைக்கு பொடியள் உங்களுக்கு ஒரு கதை சொல்லுறேன்... "எண்டு சொல்ல தொடங்க, இதென்ன இம்சை இந்தாள் இந்த நேரம் அறுக்கப் போகுதே எண்டு நாங்க மண்டையச் சொறிய , நெஞ்சில பாலை வார்த்த மாதிரி ,பிரில் வைச்ச வெள்ளை நீண்ட கவுன் போட்டுக் கொண்டு  மேரி மெல்ல மெல்ல தேவதை போல மிதந்து வெளிய அவர்களின் ஹோல் இல நாங்க இருந்த இடத்துக்கு வந்தாள், வந்து எங்கள் எல்லாரையும் பார்த்து மின்னல் எறிஞ்சு  பொதுவாக சிரிச்சுப் போட்டு, ஜேசுக்கு பக்கத்தில போய் இருந்தாள். அந்த இருட்டு நிறைந்த இடத்திலையும்  நிறைய வித்தியாசமா இருந்தது அவளின் திடீர் வளர்ச்சி.முகத்தில ஒரு ஜென்மத்துக்குப் போதுமான ஏக்கம் இருந்தது.சரியா சொல்ல முடியவில்லை அது எந்த வகை ஏக்கம் எண்டு.   
 
                           மாஸ்டர் ஜோசப் என்ற பழைய ஏட்பாட்டு கால பைபிள் கதையான , " ஜோசப்பும்  அவனோட கடவுள் நம்பிக்கையும்   " என்ற  கதையைச்  சொன்னார், அதில ஜோசப்பின் உடன் பிறந்த சகோதரர்கள் அவனை எபிரேய வியாபாரிகளுக்கு அற்ப விலைக்கு அடிமையாக விற்க,ஜோசப்பை அந்த வியாபாரிகள்  பண்டி வளர்க்கும் கொட்டகையில் அடைத்து, குதிரைக்கு வைக்கும் கொள்ளைத் தின்னக் கொடுத்து கொடுமை எல்லாம் செய்தும், அரண்மனை எடுபிடி  வேலைக்காரனாகச் சேர்ந்த ஜோசப் கடைசியில் அந்த நாட்டுக்கே அரசன் ஆக,அவனை விற்ற பின் நாட்களில் குடித்துக் கும்மாளம் போட்டு ஏழைகள் ஆகிப்போன  அவனோட உடன் பிறப்புக்கள் ஜோசப் அரசன் ஆனது கேள்விப்பட்டு வந்து பார்க்க,அவன் அவர்களை மனமுவந்து மன்னித்து, தன்னோட வயதான தகப்பனையும்  அழைத்து சாகும்வரை அவரை அன்பாக வைத்துப் பார்க்க,சாகும் போது அவனோட அப்பா  கடைசி வாக்கு மூலம் போல இறை நம்பிக்கையின் சாட்சியாக,   
 
               " தேவனோட வாழும் பிள்ளைகள் தேவப் பிள்ளைகள்,அவர்கள் நீர் அண்டையில் நடப்பட்ட மரங்கள்,அவை எப்போதும் செழித்து கிளை பரப்பி வளரும்...."  
 
                                   எண்டு சொல்லிப்போட்டு செத்துப்போனாராம் எண்டு மாஸ்டர் சொல்லி முடிய,நாங்கள் மவுனமாக இருந்தோம்,ஜேசுதாசன்  தலையை குனிந்து கொண்டு கையை இறுக்கி பிடித்துக்கொண்டு ஜபம் சொல்லிக்கொண்டு இருந்தான்,மேரி " இதெல்லாம் உண்மையா,அல்லது பொய்யா " எண்டது போல ஒண்டும் அதிகம் உணர்ச்சி காட்டாமல் இருந்தாள்.
 
                                 ஜேசுதாசன் எக்கோடியன் வாத்தியத்தை தூக்க முடியாமல்த் தூக்கிக் கொண்டு வந்து அதை நெஞ்சில கொழுவ வளம் தடுமாறிக்  கொழுவிப்போட்டு, பிங் குரோஸ்பி பாடினா " வட் எ வொண்டர்புல் நைட்.. " பாட்டு வாசிக்கவா எண்டு கேட்டான், மேரி அதைக் கேட்டு சிரிக்க தொடங்கினாள், மற்ற நண்பர்கள் எல்லாரும் கும்பலா அவனோட சேர்ந்து அந்த அக்கொடியனை ஒவ்வொரு பக்கத்தால அதன் கட்டைகளை அமுக்க, ஜேசுதாசன் அவன்கள் எல்லாரையும் இழுத்துக்கொண்டு முன்னுக்கு வெளி விறாந்தைக்கு போக,மேரி மட்டும் எனக்கு முன்னால இருந்தாள், மேசையில் கனக்க புத்தகங்கள் கிடந்தது, ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கிறது போல நடிச்சுக் கொண்டு 
 
                  " எப்படி சுகம், ஏன் எங்கள் வீட்டுக்கு இப்ப அடிக்கடி வாறதே இல்லையே,என்ன நடந்தது " எண்டு மெதுவா கேட்டாள்,
 
                          நான் பதில் சொல்லாமல் இருந்தேன், கையில வைச்சு இருந்த புத்தகத்தை காட்டி "  இது என்ன புத்தகம் தெரியுமா " எண்டு கேட்டாள், 
 
              " எனக்கு எப்படி தெரியும் ,நீயே சொல்லு " என்றேன், 
 
               " பால் வீதி,அப்துல் ரகுமான் எழுதியது " எண்டு சொன்னாள் சொல்லிப்போட்டு ,
 
                  " வேலிக்கு மேலாக வளரும் கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே ,,என் கால்களில் வேலிக்கு  கீழே ஓடும் வேர்களை என்ன செய்வாய் .....என்ற கவிதையை வாசித்தாள்.. வாசிச்சுப் போட்டு அதைப் படார் எண்டு மேசையில் வைச்சுப் போட்டு...
 
                    " தேர்முட்டியடியில் ஜெயந்தியோட என்ன கதை வசனம் அண்டைக்கு ஓடினது " எண்டு கேட்டாள். 
 
                      நான் " எண்டைக்கு,....எந்த ஜெயந்தி..... " எண்டு கேட்டேன்,,  
 
                    " ஹஹஹா , ஹ்ம்ம், அவள் தான்  உங்க மச்சாள், ரெட்டைச் சிலுப்பி,வெத்திலை போட்ட கிளவியால் போல மஞ்சள் காவி பிடிச்ச பல்லால ஈஈஈஈ எண்டு இழிப்பாலே அவள்தான்..." என்றாள்,
 
                   " ஜெயந்தி கொமர்ஸ் பாடத்தில ஐந்தொகை பலன்ஸ் செய்யுறது எப்படி எண்டு டவுட் கேட்டாள் சொன்னேன்..." என்றேன், அதுக்கு அவள்.
 
               " ஹஹஹஹாஹ் ,அடிடா சக்கை எண்டானாம்,டவுட் என்னத்துக்கு தேர்முட்டியில் பதுங்கி நிண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்,எனக்கும் தான் ஐந்தொகை பலன்ஸ் செய்ய வருதில்லை,,,,சொல்லி தரலாமே, அதென்ன ஜெயந்திக்கு மட்டும் பதுங்கி பதுங்கி ஸ்பெஷல் டவுட் கிளியரன்ஸ் நடக்குதே,,"  என்றாள் 
 
                 நான்,, " மேரி ,நீ கேட்கவில்லை அதால சொல்லவில்லை, அதைவிட அம்மா உங்க வீட்டுக்கு போக வேண்டாம் எண்டு சொல்லி இருக்கிறா அதால இங்கே வாரதில்லை, " எண்டு சொன்னேன்.
 
ஜோசித்துப் பார்த்தா எல்லா இளம் பிள்ளைகளின் இளம் வாழ்கையில் உள்ளது போல  இதில தெளிவான காதல் இல்லை, கவர்ச்சியான கனவுகள் ஹோர்மோன் குளறுபடியால எகிறினாலும் வெறும் பரஸ்பர நட்புதான் அடித்தளமா இயங்க வைக்குது போல இருந்தது  , அதிலும் வயசுக் கோளாறு கொஞ்சம் அதிகமா இருக்கு போல தான் உணர்ச்சி வசப்படாமல் ஜோசிக்கும் போது இருந்தது.. ...
 
                      ஜேசுதாசன்  "  வட் எ வொண்டர்புல் நைட்..வட் எ வொண்டர்புல் நைட்.. " எண்டு பாடிக்கொண்டு உள்ளுக்க வந்தான்,மேரி நெற்றியில் கையை வைச்சு தேச்சுப் போட்டு, " தலை இடிக்குது...."  எண்டு சொல்லிக்கொண்டு எழும்பிப் போயிடாள்,ஜேசு கிட்ட வந்து ,
 
                               " என்னடா ஒரு மாதிரி இருகிறாய்,மேரி ஏதும் சொன்னவளா ,அவள் அப்படிதான் எப்பவும் குழம்பிக்கொண்டு இருக்கிறாள்,வா வெளிய வா நொள்ளைக்கண்ணன் குரலை மாற்றி கண்டசாலா போல காவியமா ஓவியமா ...பாட்டுப்  பாடுராண்டா, ஒரே கலாட்டாவா இருக்கு வெளிய,நீ இங்க தனிய மேரியோட அறுவையைக் கேட்டுக்கொண்டு இருகிறாயே.,,," எண்டு சொல்லி வெளிய இழுத்துக்கொண்டு போனான்...அதுதான் அன்டனிப் பிள்ளை மாஸ்டர் வீட்டுக்கு நான் போன கடைசி கிறிஸ்மஸ் நாள் எண்டு நினைக்கிறன். 
 
                               அதுக்குப் பிறகு சில வருடங்களில் நிறைய விசியங்கள் வீட்டிலையும், நாட்டிலையும் நடக்க,குளத்தடிக் குரூப் மெம்பர்களே ஒவ்வொருவர் ஒவ்வொரு பக்கமா பிரிந்து போய்விட்டோம்.அதில முக்கியமா நடந்த சம்பவம் ஜேசுதாசன் வீட்டில தான் நடந்தது எண்டு பின் நாட்களில்த் தெரிய வந்தது,பாதருக்கு படிக்கப் போறேன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்த ஜேசுதாசன் அது படிக்கப் போகவில்லை,பதிலாக " அங்கொடை " எண்டு நாங்க சொல்லும் புவனேஸ்வரியை ஒரு நாள் மாஸ்டருக்கும் ,ஜோசப்பின் அக்காவுக்கும் கொண்டு வந்து தன் காதலி அவளைத் தான் கலியாணம் கட்டப்போறேன் எண்டு சொல்ல,மாஸ்டர்
 
                          " ....இனி உனக்கும் எங்களுக்கும் ஒரு உறவும் இல்லை, ....சேர்ச் பக்கமே இனிப் போக முடியாதே , ....இப்பிடி சொந்தம், உறவுகள் முகத்தில முழிக்க முடியாமல் செய்து போட்டியே, ...வீட்டு வாசல்ப் படி இனி மிதிக்காத வெளிய போடா,....உன்னை வளர்ததுக்கு ரெண்டு தென்னம் பிள்ளையை தண்ணி ஊற்றி வளர்த்து இருக்கலாம்,கடைசிக் காலத்தில தேங்காயாவது பிடுங்கி இருக்கலாம், ....உன்னோட கூ ட்டாளிமாரோட குளத்தடியில் இழுபடும் போதே தெரியும்,நீ இப்படி என்னவும் ஒரு நாள் செயப்போறாய் எண்டு....,    "
 
                                   எண்டு சொல்லி அவனை அடிக்கப் போக,ஜேசுதாசன் அவளைக் அன்றே கூட்டிக்கொண்டு மன்னார் மடு மாதா கோவிலுக்கு கிட்டத்தில இருந்த ஒரு இடத்துக்கு கூ ட்டிக்கொண்டு போனானாம்...ஜோசப்பின் அக்கா மாஸ்டருக்கு தெரியாமல் மன்னார் போய்த் தேடிய போதும் அவனைக் காண முடியவில்லை எண்டும் சொன்னார்கள்.....அவளவுதான் அதுக்கு பிறகு ஒரு தகவலும் இல்லை..
 
                              வீட்டில இந்த அவலம் நடந்த கொஞ்ச நாளில் ,மேரி படிக்கிறதை நிட்பாட்டிப்போட்டு ,கண்டியில் உள்ள சிஸ்டர்மாரின் செமினரிக்கு கன்னிகாஸ்திரியாகப்  போயிட்டாளாம். 
 
நாவுக் அரசன் 
ஒஸ்லோ 
 

10639588_10204436741779811_8577424265893

 
நன்றி
நாவுக் அரசன் 
முகநூலிலிருந்து
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.