Jump to content

நீர் | நிலம் | வனம்!


Recommended Posts

 

நீராலானது உலகு!

 

x10_1989107h.jpg.pagespeed.ic.On2I4xrDO0

 

கன்னியாகுமரியில் என்னவோ இருக்கிறது. முக்கடல் சங்கமத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள். ஒரே ஆரவாரமும் கொண்டாட்டமும். அலைகள் பாறைகளில் மோதுவதும் பாறைகளைத் தழுவுவதும் பாறைகளைத் தாண்டுவதுமாக இருக்கின்றன. பார்வை நீள்கிறது. தூரத்தில் இரு படகுகள். தவிர, நீலம், நீலம், எங்கும் நீலம்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் வண்டி வந்துவிடும் என்றார் நண்பர். நீரோடிக்குப் போக வேண்டும். தமிழகக் கடற்கரையின் எல்லை நீரோடி. கன்னியாகுமரி, அடுத்து மணக்குடி, சொத்த விளை, பள்ளம், புத்தன்துறை, பொழிக்கரை, பெரியகாடு, முட்டம், கடியபட்டினம், மண்டைக்காடுபுதூார், குளச்சல், குறும் பனை, இணையம், தேங்காய்ப்பட்டினம், இறையுமண் துறை, பூத்துறை, தூத்தூர் தாண்டினால் நீரோடி. கடலையே பார்த்துக் கொண்டிருந்தேன். கடல் பார்த்தல் பெரும் சுகம். அநேகமாக, பார்த்தலின் பேரின்பம்!

முதன்முதலில் கடலைப் பார்த்த ஞாபகம் உங்களுக்கு இருக் கிறதா? அந்த நாளை இன்றைக்கு நினைவுகூர முடியுமா?

எனக்கு ஞாபகம் இருக்கிறது. வேளாங்கண்ணியில் பார்த்தேன். வேளாங்கண்ணி கோயிலுக்குப் போய்விட்டு, முல்லையம் மாள் ஆத்தா மடியில் உட்கார்ந்து வேண்டுதல் மொட்டை போட்டுக்கொண்டு, சந்தனத் தலையோடு, ஒரு கையில் ஆத்தா கை விரலையும் இன்னொரு கையில் வாளியுமாகக் கடற்கரையில் இரு பக்கக் கடைகளையும் பராக்குப் பார்த்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தவன், திடீரென கண் முன்னே விரிந்த அந்தப் பெரும் பிரம்மாண்டத்தைப் பார்த்து ஓவென அழுதது ஞாபகத்தில் இருக்கிறது. ஆத்தாவின் பிடியைப் பிய்த்துக் கொண்டு ஓட முயற்சிக்க, ஆத்தா இரும்புப் பிடியாகப் பிடித்துக் கடலில் குளிப்பாட்டியது ஞாபகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு அலை வரும்போதும் ஆத்தா காலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கண்ணை மூடிக் கத்தியது ஞாபகத்தில் இருக்கிறது. குளிப்பாட்டி முடித்து, தூக்கிக்கொண்டு கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்ததும், ஆத்தா தோளைக் கட்டிக்கொண்டு தயங்கித் தயங்கி, கடலைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கண்களை இறுக மூடிக்கொண்டது ஞாபகத்தில் இருக்கிறது.

அதன் பின்னே கொஞ்சம் கொஞ்சமாய் அலைகளை நோக்கி அடி எடுத்துவைத்தபோதும், அலைகளைத் துரத்தி விளை யாடியபோதும், மணல் கோயில்கள் கட்டி, சேகரித்த சிப்பிகளை அவற்றில் சேமித்து வைத்தபோதும் கடல் ஒரு நல்ல நண்பன் என்றே நினைத்திருந்தேன். வெகு நாட்களுக்குப் பின்னர் - புலவர் கதிரேசன் திருக்குறள் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தபோதுதான் புரிந்தது கடல்தான் நம் தாய் மடி என்று.

நீரின்றி அமையாது உலகு. எத்தனை சத்தியமான வார்த்தைகள்!

இந்தப் புவிப் பரப்பின் மொத்தப் பகுதியில் 71% தண்ணீர். அதில் 97.2% கடல். அதாவது புவிப் பரப்பில் 70% கடல். உலக நாடுகளின் மொத்தக் கடற்கரையோரத்தின் நீளத்தைக் கூட்டினால் மொத்தம் 3,12,000 மைல்கள். உலகின் பெரிய கடலான பசிபிக் பெருங்கடலை எடுத்துக்கொண்டால், உலகின் மொத்தப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டது (16.92 கோடி சதுர கி.மீ.). பசிபிக் கடலில் உள்ள தீவுகளின் எண்ணிக்கை மட்டும் 25,000. உலகிலேயே சின்னப் பெருங்கடலான ஆர்க்டிக் பெருங்கடலை எடுத்துக்கொண்டால், புவியின் கடல் நீரில் வெறும் 1% மட்டுமே அதில் இருக்கிறது. ஆனாலும், உலகில் உள்ள ஆறுகள், நன்னீர் ஏரிகள் அனைத்திலும் உள்ள நீரின் அளவைவிட 25 மடங்கு அதிகம்.

தாவரங்களுக்கு அப்பாற்பட்டு, மனித இனத்துக்கு உணவை யும் புரதத்தையும் வாரித்தருவது கடல்தான். ஒவ்வோர் ஆண்டும் 750 லட்சம் டன்கள் வரையிலான மீன்களை, மனித இனத்துக்குக் கடல் தருகிறது. உலகம் முழுக்க வளர்க்கப்படும் ஆடு, மாடு, பன்றி, கோழி, வாத்து என அத்தனையையும் கூட்டினாலும் மீனளத்தின் பக்கத்தில்கூட அதன் கூட்டுத்தொகை வராது.

“நெலத்துல இருக்குற உலகம்தான் மனுசன் கண்ணுக்குத் தெரியுது. நெலத்துல உள்ள உலகத்தைப் போலப் பல உலகம் கடலுக்குள்ள இருக்கு” என்கிறார் பயணத்தில் கைகோத்திருந்த மீனவ நண்பர். உண்மைதான். கடலில் இருக்கும் பெருமலைகளின் நீளத்தைக் கூட்டினாலே நாற்பதினாயிரம் மைல்களைத் தாண்டும். ஹவாயில் உள்ள மௌனா கீ மலையைக் கடல் மட்டத்தில் நின்று பார்த்தால், 13,680 அடி உயரத்துக்குத் தெரியும். கடலடித் தரையிலிருந்து அதன் உயரமோ 33,474 அடி. உலகில் உள்ள எரிமலைகளின் வெடிப்புகளில் 90% கடல்களில்தான் நடக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். தெற்கு பசிபிக்கில் மட்டும் சுமார் 1,133 எரிமலைகள் நெருக்கமாக உயிர்ப்புடன் இருக்கின்றன.

கடலுக்குள் ஒவ்வொரு கணமும் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. ஒருபுறம் பசிபிக் கடல் சுருங்கிக்கொண்டிருக்கிறது; மறுபுறம் அட்லாண்டிக் கடல் விரிந்துகொண்டிருக்கிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல் நீர்மட்டம் இப்போது இருக்கும் நீர்மட்டத்தைவிட 330 அடி கீழே இருந்ததாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் கடல் நீர்மட்டம் 10 முதல் 25 செ.மீ. வரை உயர்ந்திருக்கிறது; இது மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள். உலகின் இரு துருவங்கள் உட்பட எல்லாப் பகுதிகளிலும் பனி உருகினால் கடல் பொங்கி, நீர்மட்டம் இப்போதிருப்பதைவிட மேலும் 200 அடி உயரும் என்கிறார்கள். விஞ்ஞானிகளின் கண்கள் விரிந்துகொண்டேயிருக்கின்றன. வண்டி வந்துவிட்டது. நீரோடியை நோக்கிப் புறப்பட்டோம்!

(அலை பரவும்)

 

நீரோடியிலிருந்து...

 

tamil+sea.jpg

 

x784_1991031h.jpg.pagespeed.ic.cakCmvjCx

 

ஊர்ப்புராணம் பாடும்போது, “எங்கள் ஊர்போல எந்த ஊரும் வராது” என்கிற பல்லவி நம்மூரில் சகஜமான ஒன்று. குமரிக்காரர்கள் அப்படிச் சொன்னால், அது சுயதம்பட்டம் அல்ல. ஐந்திணைகளில் வளம் மிக்க நான்கு திணைகளைத் தன்னகத்தே உள்ளடக்கிய மாவட்டம் குமரி மாவட்டம். குமரியிலிருந்து நீரோடி நோக்கிச் செல்லும் பாதையில் ஒரு தூறல் நாளில் பயணம் அமைந்தது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். மலைப் பயணத்துக்கு இணையான அனுபவம். வண்டிக்கு வெளியே காணும் இடமெங்கும் பச்சை. இடையிடையே கடற்கரையோரக் கிராமங்கள்...

நீரோடி ஒரு சின்ன கிராமம். தமிழகத்தின் கடல் எல்லை முடியும் கிராமம் என்பதைத் தாண்டி நீரோடிக்கு இன்னொரு முக்கிய மான சிறப்பு இருக்கிறது. தூத்தூர் தீவின் ஒரு பகுதி இது. தாமிரபரணி, அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய், நெய்யாறு, கடல் என்று நாற்புறமும் சூழப்பட்டிருக்கும் 10 கிராமங் களைத் தூத்தூர் தீவு என்று அழைக்கிறார்கள் உள்ளூர் மக்கள். நாற்புறமும் இப்படி நன்னீரும் கடல் நீரும் சேர்ந்த ஒரு பகுதியின் செழிப்பையும் வனப்பையும் விவரிக்கவும் வேண்டுமா என்ன? கையில் தூக்கும் உருவமாக இருந்தால் வாரி அணைத்து நாளெல் லாம் முத்தமிடலாம். அத்தனை அழகு!

 

இன்னும் ஜொலிக்கும் எம்ஜிஆர்

இறையுமண்துறை கிராமத்தில் தொடங்கி பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன் துறை, நீரோடி, பருத்தியூர், பொழியூர் வரையிலான இந்த தூத்தூர் தீவுக்குள் பருத்தியூரும் பொழியூரும் மட்டும் கேரள எல்லைக்குள் சென்றுவிட்டன. மலையாள வாடை தமிழ் பேசுகிறார்கள். கேரள அரசு வலிய இவர்களுடைய தமிழ் அடையாளங்களை அழித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், கல்யாண வீடுகளில் எம்ஜிஆர் பாட்டுகளும் விஜய் பாட்டுகளும்தான் ஓடுகின்றன. மீனவச் சமூகத்தின் மத்தியில் இன்னமும் எம்ஜிஆர் மறையவில்லை. கடல்புறத்தில் விஜய் நுழைந்ததன் பின்னணியிலும்கூட சமூக உளவியல் இருக்கிறது. காலங்காலமாக எல்லோராலும் புறக்கணிப்படும் வலியிலிருந்தும், தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக வெளிப்படுத்தும் நன்றி உணர்விலிருந்தும் வெளிப்படும் நேசம் இது.

 

ஆழ்கடல் சூரர்கள்

தூத்தூர் தீவுக்காரர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் அசகாய சூரர்கள். உள்ளூர் அளவில் அல்ல; இந்திய அளவிலும். கடல் தொழிலின் மிகப் பெரும் சாகசமான சுறா வேட்டையில் கில்லாடிகள். சுறா வேட்டைக்கு இவர்கள் பயன்படுத்தும் நெடுந்தூண்டில் (உள்ளூரில் இதை மட்டு என்கிறார்கள்) தமிழக மீனவர் அறிவின் உன்னதங்களில் ஒன்று. கடலோரக் கிராமங்களில் தூத்தூர் தீவுக்காரர்களின் சாகசங்கள் ஆயிரமாயிரம் கதைகளாக உலவுகின்றன.

இந்த தூத்தூர் தீவின் நீரோடியிலிருந்து தொடங்கும் தமிழகத்தின் கடல் எல்லை திருவள்ளூர், பழவேற்காட்டில் முடிகிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுகை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலுார், விழுப்புரம், காஞ்சி, சென்னை, திருவள்ளூர் ஆகிய 13 மாவட்டங்கள் கடலோரத்தில் இருக்கின்றன. இங்குள்ள 591 பாரம்பரிய மீனவ கிராமங்களில் இருக்கும் சுமார் 10 லட்சம் மீனவ மக்களைத்தான் நாம் ‘மீனவர்கள்' என்று அழைக்கிறோம்.

 

புரிதல் கோளாறு

 

கடல் பழங்குடிகளான மீனவ மக்களின் துயரங்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கை மீதான புறக்கணிப்புக்குமான முக்கிய மான காரணங்களில் ஒன்று, புரிதல் கோளாறு. உண்மையில் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் ஒரு மீனவர் கரையில் குறைந்தது 16 குடும்பங்களுக்கு வாழ்வளிக்கிறார். ஒரு மீனவர் செல்லும் மீன்பிடிப் படகு, வலை உள்ளிட்ட உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்தச் சங்கிலியின் தொடக்கக் கண்ணிகள் என்று வைத்துக்கொள்வோம். படகில் எடுத்துச்செல்லப்படும் ஐஸ் கட்டிகள், படகுக்கான டீசல், அவற்றைக் கடற்கரைக்குக் கொண்டுவந்து சேர்க்கும் லாரிகள் உள்ளிட்டவையெல்லாம் மையக் கண்ணிகள். கடலிலிருந்து மீனவர் கொண்டுவந்து சேர்க்கும் மீன்களுக்கு ஏலம் நடத்தும் தரகர்கள், ஏலம் எடுக்கும் மொத்த வியாபாரிகள் என்று பல கை மாறி நம் வீட்டுத் தட்டில் விழுந்து, நம் வாய்க்குள் போவதற்குள் குறைந்தது 16 குடும்பங்களுக்குச் சோறு போட்டுவிடுகிறது அந்த மீன்.

 

விரியும் கடல் தொழில்

 

இந்தியா உலக அளவில் மீன் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பஞ்சத்தாலும் வறட்சியாலும் அடிபட்டுக் கிடந்த நாட்டைத் தூக்கி நிறுத்த சுதந்திரத்துக்குப் பின் வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்த அரசு, வெறும் நெல்லாலும் கோதுமையாலும் மட்டும் மக்கள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திவிட முடியாது என்பதை உணர்ந்தபோது, கடலைப் பார்த்தது. 1950-ல் 7.52 லட்சம் டன்னாக இருந்த இந்தியாவின் மீன் உற்பத்தி 1990-ல் 38.36 லட்சம் டன்னாக உயர்ந்தது. தாராளமய மாக்கலுக்குப் பின் இந்த உற்பத்தி வேகம் மேலும் அதிகரித்தது. 1990-2010-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் இந்தியாவின் மீன் உற்பத்தி இரு மடங்கு அதிகரித்தது. 2012-ல் 90 லட்சம் டன்னாக இருந்த உற்பத்தி, கோடி டன் இலக்கை நோக்கி நகர்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஒரு சதவீதத்தைப் பங்களிக்கும் மீனளத் துறை, ஏற்றுமதித் துறைக்கான பங்களிப்பிலும் முன்னணி வகிக்கிறது (ஆண்டுக்கு ரூ. 21,000 கோடி).

இந்தியாவின் முன்னணி மீன் உற்பத்தி மாநிலங்களில் தமிழகமும் ஒன்று - குஜராத், கேரளம், மகாராஷ்டிரத்துக்கு அடுத்து நான்காவது இடத்தில் இருக்கிறது. நாட்டின் மொத்தக் கடற்கரையில் 13%-ஐப் பெற்றிருக்கும் தமிழகம் நாட்டின் மீன் உற்பத்தியிலும் அதற்கு இணையான பங்களிப்பைத் தருகிறது. ஆனால், நகரத்தில் ஒரு தெரு நாய்க்கு உள்ள பாதுகாப்புகூட கடலில் மீனவர்களுக்கு இல்லை; தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடித்துத் துரத்தப் படுவதும் சுடப்படுவதும், அவர்தம் உடைமைகள் சூறையாடப்படு வதும், படகுகள் கொள்ளையடிக்கப்படுவதும் சர்வ சாதாரணம். காரணம் என்ன?

(அலைகள் தழுவும்…)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6192717.ece

 

 

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

அப்பா எங்கேம்மா?

 

july113_1992885g.jpg

 

நான் நீரோடிக்குச் சென்ற நாளில்தான் அந்தச் சம்பவம் நடந்திருந்தது. பள்ளம் கிராமத்திலிருந்து வழக்கம்போல், தங்கள் கட்டுமரத்தில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர் அருள் ஜோஸ் (31), ஜேசுதாஸ் (27) சகோதரர்கள். இன்னும் முழுக்க விடிந்திராத அதிகாலை. கடலில் ஒரு வள்ளம் கட்டுமரத்தின் மீது மோதியது. தூக்கி வீசப்பட்டார்கள் இருவரும். ரொம்ப நேரம் கழித்து, அந்த வழியே சென்ற மீனவர்கள் தூரத்தில் ஒரு உயிர் தத்தளிப்பதைப் பார்த்தார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காயங்களோடு கை நீட்டினார் ஜேசுதாஸ். அருள் ஜோஸைக் காணவில்லை.

கடல் தேடல்

பரபரவெனப் பற்றிக்கொண்டது பள்ளம். மீனவர்கள் அத்தனை பேரும் கடலில் ஜோஸைத் தேட ஆரம்பித்தார்கள். முதல் நாள் காலையில் தொடங்கிய இந்தத் தேடுதல் பணி, மறுநாள் இரவு வரை நீடித்தது. பொதுவாக, இப்படி மீனவர்கள் கடலில் சிக்கிக்கொள்ளும்போது முதல் இரு நாள் வரை ஊர்க்காரர்கள் எல்லோரும் தேடுதல் பணியில் ஈடுபடுவார்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர் கள் ஒரு வாரம் வரைகூடத் தேடுவது உண்டு. ஒரு வாரம் கடந்தும் ஆள் கிடைக்கவில்லை என்றால், அப்புறம் விதி விட்ட வழி என்று அர்த்தம்.

கடலோரக் காவல் படையினர் களம் இறக்கப்பட்ட பின்னர், மீனவர்கள் காணாமல்போனதும் அவர் களுக்கு உடனடியாகத் தகவல் தரப்படுவது உண்டு. அவர்களும் களம் இறங்குவார்கள். ஆனால், பெரும் பாலான சமயங்களில் அது வெறும் சம்பிரதாய நடவடிக்கை. அருள் ஜோஸ் விவகாரத்திலும் அதுதான் நடந்தது. கடலோரக் காவல் படையினர் தேடுதல் பணியில் அலட்சியம் காட்டினார்கள் என்று சாலையில் திரண்டார்கள் பள்ளம் மீனவர்கள். இதற்கிடையே அருள் ஜோஸ் கட்டுமரத்தின் மீது மோதிய வள்ளம் குளச்சல் கிராமத்தைச் சேர்ந்த மீனவருக்குச் சொந்தமானது என்ற தகவல் பரவவும் பள்ளத்துக்கும் குளச்சலுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு ஊர்களிலும் எப்போது வேண்டுமானாலும் வன்முறை தீப்பிடிக்கலாம் என்ற நிலை. காவல் துறையினர் வண்டி வண்டியாக இறங்குகிறார்கள். குமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், இரு கிராமங்களுக்கும் மாறி மாறிப் போய்க்கொண்டிருக்கிறார். குளச்சல் பிரதான சாலையைக் கடக்கவே பல நிமிடங்கள் ஆகின்றன. எங்கும் பதற்றம்.

மோளே... மோளே...

அருள் ஜோஸைக் காணவில்லை. அதற்குப் பின் 20 நாட்கள் ஓடிவிட்டன. இன்னமும் கிடைக்க வில்லை. 31 வயது இளைஞன். திருமணம் ஆகி நான்கு வருடங்கள்தான் ஆகின்றன. மூன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. வீட்டில் மனைவி சுபாஷினி சித்தப்பிரமை பிடித்தவர்போல உட்கார்ந்திருக்கிறார். பேசத் திராணி இல்லை. இரு வார்த்தைகள் பேசு வதற்குள் கண்கள் உடைந்து கண்ணீர் தாரை தாரையாக வடிகிறது. குழந்தை சமிஹா ஜோ அம்மாவையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். என்ன நினைத்தாளோ ஓடிவந்து சுபாஷினியின் மடியில் உட்கார்ந்துகொண்டு, கண்களைத் துடைத்துவிடுகிறாள். அப்புறம் அவளும் சேர்ந்து அழுகிறாள். மகள் அழுவதைக் காணச் சகிக்காமல் தன் அழுகையை நிறுத்திக்கொள்ளும் சுபாஷினி, மகளின் கண்களைத் துடைத்துவிடுகிறார்.

நாளைக்கு நூறு தடவை ‘மோளே... மோளே...' என்று அழைக்கும் தன்னுடைய அப்பா இனி எப்போது வருவார் என்று சமிஹா ஜோவுக்குத் தெரியாது. ஆனால், சுபாஷினிக்குத் தெரிந்துவிட்டது... இனி, தன் ஆருயிர் கணவர் வருவதற்கான சாத்தியங்கள் மிகமிக அரிதானவை என்று. அவரும் முட்டத்தில், ஒரு கடலோடிக் குடும்பத்தில் பிறந்தவர். கடலுக்குப் போய் கலம் உடைந்து, அடிபட்டு, ஏதோ ஒரு பிடி கட்டையைப் பிடித்துக்கொண்டு, கடல் நீரையே குடித்து, பாசியைத் தின்று, நாள் கணக்கில் உயிரைப் பிடித்துவைத்துத் திரும்பியவர்களும் உண்டுதான். ஆனால், அந்த அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

எத்தனை நாளைக்கு “அப்பா வந்துடும், அப்பா வந்துடும்” என்று சொல்லி பிள்ளையை ஏமாற்ற முடியும்? நேற்றைக்கு முன்தினம் சமிஹா பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பையன் சொல்லி விட்டான்:

“ஹே... உங்கப்பா இனி வர மாட்டார். அவர் கடலோடு போய்ட்டார். செத்துட்டார்.”

சமிஹாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. நேரே அம்மாவிடம் ஓடி வந்தாள்.

“அம்மா... நம்ம அப்பா வராதா? செத்துட்டா? விஜிண்ணன் சொல்றான்...”

சுபாஷினிக்குச் சொல்ல ஒரு வார்த்தையும் வரவில்லை. பிள்ளையைக் கட்டிக்கொண்டு கேவிக் கேவி அழுதார். சமிஹாவும் அழுதாள். அழுது அழுது எப்போது தூங்கினோம் என்பதே தெரியாமல் இருவரும் அப்படியே தூங்கிப்போனார்கள்.

காலையில் சுபாஷினி எழுந்தபோது பக்கத்தில் பிள்ளையைக் காணவில்லை. சுற்றும்முற்றும் எங்கும் காணவில்லை. பதறிப்போய் வெளியே ஓடினால், கடற்கரையில் நின்று கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் சமிஹா. மூன்றரை வயதுக் குழந்தை.

குமரியில் மட்டும் எண்ணிக்கை 148

அருள் ஜோஸைப் போல, குமரி மாவட்டத்தில் மட்டும் இப்படி 148 மீனவர்கள் ‘மாயம்' ஆகியிருக் கிறார்கள்.

அருள் ஜோஸ்களின் கதை நம் யாருக்கும் தெரியாமல் நடப்பது அல்ல. நாம் எல்லோருமே அந்தச் செய்திகளைப் படித்திருப்போம். பத்திரிகைகளில், ‘மீனவர் மாயம்' என்று ஒரு மூலையில், ஒரு பத்தியில் செய்தி வெளியாகும். ஒரு அமைச்சரின் எருமை மாடுகள் காணாமல் போனதற்காக பஸ்ஸியாபுராவில் மூன்று போலீஸார் பணி மாற்றம் செய்யப்பட்டதை நாம் படித்திருக்கிறோம். எருமை மாடுகளைத் தேடி ராம்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தி, கண்டுபிடித்ததைப் படித்திருக்கிறோம். “என்னுடைய எருமைகள் விக்டோரியா ராணியைவிடப் பிரபலமானவை” என்று அந்த அமைச்சர் ஆசம் கான் பேட்டி கொடுத்ததைப் பார்த்திருக்கிறோம். இந்த நாட்டில், ஒரு அமைச்சரின் வீட்டில், ‘மாயம்' ஆகும் எருமை மாடுகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும் கவனமும்கூட, குறைந்தது 16 குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் ஒரு மீனவ உயிருக்கு ஏன் கிடைப் பதில்லை? கடல்புறத்தில் என்ன நடந்தாலும் ஏன் நமக்குத் தெரிவதில்லை அல்லது தெரிந்து கொள்வதில் ஏன் நமக்கு ஆர்வம் இல்லை?

​(அலைகள் தழுவும்...)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/article6194178.ece

Link to comment
Share on other sites

கடவுளுக்கும் காலனுக்கும் நடுவில்...

 

kadavul_1995160h.jpg

 

தமிழகக் கடலோடிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் சாகாவரம் பெற்ற ‘ஆழி சூழ் உலகு' நாவலின் நதிமூலத்தை ஜோ டி குரூஸ் தொடங்கும் வரிகள் இவை:

“எனக்கு அப்போது வயது பன்னிரண்டு. ஆறாவது படித்தேன். பங்குக் கோயிலின் அடக்க பூசை ஒன்றில் குருவோடு பீடபரிசாரகனாக நான். ஊரே திரண்டு கோயிலில் கூடியிருந்தது. கோயிலுக்குள் வந்த மையப் பெட்டி வைக்கப்பட்ட மேசை மீது ‘இன்று நான் நாளை நீ' என்று பொறித்திருந்தது.

மலைஉருட்டியாரின் கண்களை மீன்கள் கொத்திவிட்டன. தலைவிரி கோலமாய் அவர் மனைவி. நிர்க்கதியாய் ஏழு குழந்தைகள். என்னைக் கதிகலங்க வைத்தது அந்தக் கடல்சாவு. மரணத்தின் தன்மையை அவதானிக்க ஆரம்பித்தேன்; பயத்துடன், ஆர்வத்துடன். பிறப்பொக்கும் அனைத்துயிர்க்கும் ஜனன வழி ஒன்றாயிருக்க, மரண வழிகள்தான் எத்தனையெத்தனை? ஒருபோதும் வெல்ல முடியாத அந்த மகா வல்லமை நமக்கு உணர்த்துவது என்ன?

என் அனுபவங்களின் விளைவாய் எழும் எண்ணமெல்லாம் எப்போதும் ஓர் எளிய கேள்வியையே சென்று சேரும். மரணத்தின் முன் வாழ்க்கையின் பெறுமதி என்ன?”

 

கண்ணாமூச்சி ஆட்டம்

மரண பயம் எல்லோருக்கும் பொது. ஆனால், ஒவ்வொரு நாளும் அதை எதிர்கொள்வதுதான் வாழ்க்கை என்றால், அந்த வாழ்க்கையை என்னவென்று சொல்வது?

ஆழி என்கிற வார்த்தையை நாம் கடலைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். கடலோடிகள் மத்தியில் ஆழிக்கு இன்னொரு அர்த்தம் உண்டு. கடலில் அலை பொங்குமிடம். கரைக்கடலில், அதாவது கரையிலிருந்து ஓரிரு கி.மீ. தொலைவுக்குள் பாறைகளில் அலை அடித்துப் பொங்கும் பகுதி. ஆழ்கடலுக்குக்கூட அஞ்சாதவர்கள் ஆழிக்கு அஞ்சுவார்கள். ஆழியைக் கடந்து, கரையிலிருந்து கடலுக்குள் செல்லும்போதும் சரி; கடலிலிருந்து கரை நோக்கித் திரும்பும்போதும் சரி... ஆழியைக் கடப்பது மரணத்தைக் கடப்பதற்குச் சமம்.

“ஒரு சிலும்பலும் இல்லாம வத்தக்குளம்போலக் கடல் கிடக்குறப்போகூட நெஞ்சுல கைவெச்சுக்கிட்டேதான் ஆழியைக் கடப்போம். ஆழிகிட்ட நெருங்கும்போதே மனசுக்குள்ள ஆத்தா வந்திருவா. ‘ஆத்தா… குமரி ஆத்தா… காப்பாத்து தாயே’னு வாய் தானா முணுமுணுக்கும். மாசா (அலை) வந்துச்சு, ரெண்டு பனை, மூணு பனை உசரம் தூக்கும். அப்படியே கட்டுமரத்தைத் தூக்கி வீசி நேரே நட்ட குத்தும். ஆழிகிட்ட மாசா வந்துட்டா கடல்ல குதிச்சுடுவோம். மரத்துல இருந்தா ஒரே அடிதான். அந்த எடத்துலயே சாவுதான்...”

- கடலோடிகள் ஒவ்வொரு நாளும் ஆழியைத் தாண்டும் கதை இது.

கடலோடிகள் ஒவ்வொரு நாளும் நிச்சயமற்றதன்மையோடுதான் கடலுக்குள் செல்கிறார்கள்; சாவுக்குத் துணிந்துதான் கடலுக்குள் செல்கிறார் கள் என்றாலும், கடல் சாவுகள் கடல்புறத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகள் சாதாரணமானவை அல்ல. கடலுக்கு இரு முகங்கள் உண்டு. ஒரு முகம் கடலம்மா. இன்னொரு முகம் காலன். இந்த இரு முகங்களுக்கும் எப்போதும் முகம்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் ஒரு கடலோடி.

 

தெளிவு நல்லதல்ல

கடல் நீர் தெளிந்தாற்போல இருப்பதைத் ‘தெளிவு’ என்று குறிப்பிடு வார்கள் கடலோடிகள். அப்படி இருந்தால், குளியர்கள் சங்கு குளிக்கக் கடலில் இறங்க மாட்டார்கள். மீனவர்களும் தெளிவை விரும்ப மாட்டார்கள். ஒரு காரணம், மீன்பாடு அந்தச் சூழலில் கிடைக்காது என்பது. இன்னொரு காரணம், அதைவிடவும் முக்கியமானது. ஆடா திருக்கை, சுறா போன்றவற்றின் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும் என்பது. பெரும் அலைகள் மட்டும்தான் சவால்கள் என்றில்லை. ஒரு கடலோடிக்குக் கடலில் சாவு எப்படி வேண்டுமானாலும் வரலாம். கடல் நாகம் கடித்தால் அந்த இடத்திலேயே ஆள் காலி.

தாச்சிக்கண்ட என்று ஒரு மீன் உண்டு. கரு நிறம் கொண்டது. சுமார் இரண்டு முழம் வரை வளரக்கூடியது. அதன் அருகில் ஒரு கட்டுமரமோ வள்ளமோ வந்தால் குறுக்கே ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நோக்கிப் பாயக்கூடியது. அப்படிப் பாயும்போது அதன் மீதுள்ள தண்ணீர் பட்டாலும் ஆள் சாக வேண்டியதுதான் என்கிறார்கள். ஈட்டி போன்ற மூக்கைக் கொண்ட ஊழி மீனும் இப்படிப் பாயக்கூடியது. பாய்ந்த வேகத்தில் உடலில் செருகிக்கொள்ளும் ஒரு கத்திபோல; உருவினால் சதையையும் சேர்த்துப் பிய்த்துக்கொண்டு வெளியே வரும். கரை தொலைவில் என்றால், சாவு உறுதி.

சுறாவேலாவைவிட அபாயகரமானது ஆடாதிருக்கை. சங்கு குளிப் பவர்கள் பலர் ஆடாதிருக்கை கடிக்கு இரையாகியிருக்கிறார்கள். கடலில் சாவின் முகவர்கள் இப்படி எத்தனையோ வடிவங்களில் வருவது உண்டு.

 

கடல் சாவு எனும் கொடூர சாஸ்வதம்

வாழ்க்கையில் சாவு சாஸ்வதம். எப்போதும். எல்லோருக்கும். எந்த வகையிலானாலும் சாவு கொடூரம்தான். எனினும், கடல் சாவு கொடூரத்தின் உச்சம். ஒரு மனிதன் செத்தபின் உண்டாகும் அழகை சவக்களை என்றெல்லாம் சொல்வோமே... கடல் சாவில் பிணத்துக்கும்கூட நல்ல கதி கிடைக்காது. உடல் விறைத்து, கண்கள், காதுகள் மீன்களுக்கு இரையான நிலையில், கை கால்களெல்லாம் ஊறி, சிதைந்து...

நான் கடலோடி சமூகத்தைச் சார்ந்தவன் அல்ல. ஆனால், கடல் சாவின் குரூர வலியைக் கொஞ்சம் அனுபவித்தவன். என் அப்பாவின் சாவு நடுக்கடலில் நடந்தது; என்னுடைய இள வயதில்; வெளிநாட்டில்; ஒரு கப்பலில். அப்பாவின் சடலத்தைப் பார்த்த அவருடைய சிநேகிதர்கள் சொன்னார்கள், ஊறி நைந்துபோன அந்தப் பிண்டத்தைக் கடிகாரத்தை வைத்துதான் யூகித்தோம் என்று. கடலைப் பார்த்துவிட்டுத் திரும்பும் ஒவ்வொரு முறையும் நான் ஒருபோதும் பார்த்திராத அப்பாவின் சடலம் கண் முன்னே வரும்... உடல் விறைத்து, கண்கள், காதுகள் மீன்களுக்கு இரையான நிலையில், கை கால்களெல்லாம் ஊறி, சிதைந்து...

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 3.88 லட்சம் பேர் நீரில் மூழ்கிச் சாகிறார்கள் என்கிறது உலகச் சுகாதார அமைப்பு. இதிலும், கவனிக்க வேண்டிய அரசியல் உண்டு. அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 4,000 என்றால், இந்தியாவில் 70,000. மக்கள்தொகை கணக்குப்படி அமெரிக் காவைவிட கிட்டத்தட்ட இந்தியா மூன்று மடங்கு பெரியது என்றாலும், இந்தியாவில் இந்த எண்ணிக்கை அமெரிக்காவைக் காட்டிலும் 16.5 மடங்கு அதிகம். இவற்றில் பெரும்பாலானவை கடல் சாவுகள்தான். இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோகிறது. ஏன் நம்மால் தடுக்க முடியவில்லை? ஒவ்வொரு எட்டு நிமிடத்துக்கும் ஓர் உயிர் நீரில் மூழ்குகிறது. ஏன் இதுபற்றி யாருமே பேசாமல் இருக்கிறோம்?

(அலைகள் தழுவும்...)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article6199945.ece

 

Link to comment
Share on other sites

சொற்களில் இருக்கிறது வரலாறு; அறிதலில் இருக்கிறது அரசியல்!

 

564xNxsea_-_Copy_2000031g.jpg.pagespeed.

விசைப் படகு - பெரும் மீன்பிடிப் படகு

 

564xNxsea_2000030g.jpg.pagespeed.ic.mDhQ

கட்டுமரம் - வள்ளம் - இயந்திரப் படகு

 

உலகின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான அந்துவான் து செந்த் எக்சுபரியின் ‘குட்டி இளவரசன்' நாவலில், ஒரு சிறுவனுக்கும் நரிக்கும் இடையே நடக்கும் உரையாடலின் ஒரு பகுதி இது:

“....நான் நண்பர்களைத் தேடுகிறேன். ‘பழக்கப்படுத்துவது' என்றால் என்ன?” என்றான் குட்டி இளவரசன்.

“அது மறந்துபோன ஒன்று. ‘பழக்கப்படுத்துவது என்றால், உறவை ஏற்படுத்திக்கொள்வது என்று பொருள்’’ என்றது நரி.

“உறவை ஏற்படுத்திக்கொள்வதா?”

“ஆமாம். என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் சின்னப் பையன்தான். உன்னைப் போன்ற லட்சக்கணக்கான பையன்களைப் போல. எனக்கு நீ தேவையில்லை. உனக்கும் நான் தேவையில்லை. உன்னைப் பொறுத்தவரை என்னைப் போன்ற லட்சக் கணக்கான நரிகளில் நானும் ஒரு நரி. ஆனால், என்னை நீ பழக்கப்படுத்திக்கொண்டால் நாம் ஒருவருக்கொருவர் தேவைப்படுவோம். உலகத்தில் நான் உனக்கே என்று ஆகிவிடுவேன்… உலகத்தில் நீ எனக்கே என்று ஆகிவிடுவாய்…”

……

“பழக்கப்படுத்திக்கொண்ட பொருட்களைத்தான் தெரிந்து கொள்ள முடியும்... மனிதர்களுக்கு இப்போதெல்லாம் எதையும் தெரிந்துகொள்ள நேரம் இருப்பதில்லை.”

ஏன்… ஏன்… ஏன்?

கடல் பழங்குடிகளான கடலோடிகளிடத்தில் மட்டும் அல்ல; நிலப் பழங்குடிகளான விவசாயிகளிடத்திலும், வனப் பழங்குடிகளான வனவாசிகளிடத்திலும் நடக்கும் எந்த விஷயமும், நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கான காரணத்தை ஒரு வார்த்தைக்குள் உள்ளடக்கிவிடலாம்: அறியாமை.

எப்போதுமே, தெரியாத ஒரு விஷயத்தை யாராலும் நேசிக்க முடியாது. அக்கறை காட்ட முடியாது. ஆகையால், நம்முடைய கடல் பயணத்தை முழுவீச்சில் தொடர்வதற்கு முன், அடிப்படையான சில விஷயங்களை - கடல்புறத்தில் புழங்கும் சில சொற்களை - நாம் தெரிந்துகொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

கடலில் எத்தனை கடல்?

பண்டைய காலத்திலேயே கடலியலின் நுட்பத்தைப் புரிந்துகொண்டு, கப்பல் படை நடத்திய முன்னோடிச் சமூகங்களில் ஒன்று தமிழ்ச் சமூகம். கடலோடிச் சமூகத்தினுள் நுழைந்தால் ஆயிரமாயிரம் சொற்கள் புதிதுபுதிதாக நம்மைச் சூழ்கின்றன. ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னணியில் எத்தனை புதுப்புது விஷயங்கள்? எவ்வளவு பரந்து விரிந்த வரலாறு? இன்றைக்கெல்லாம் நிலத்தைச் சூழ்ந்திருக்கும் நீல நீர்ப்பரப்பு எதுவென்றாலும் கடல் என்கிற ஒரு சொல்லில் உள்ளடக்கிவிடுகிறோம். ஆனால், கடலுக்குள் சென்றால், உள்ளே எத்தனை எத்தனை கடல்கள்?

கடலுக்கு மட்டுமே தமிழில் 200-க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பதாகச் சொல்கிறார் புத்தன்துறையைச் சேர்ந்த தாமஸ். அவற்றில் சில சொற்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்: அரலை, அரி, அலை, அழுவம், அளக்கர், அளம், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை...

இவற்றையெல்லாம்விட முக்கியமானவை சமகாலத்தில் கடலைக் குறிப்பிட அறிவியல் சமூகமும் மீனவச் சமூகமும் குறிப்பிடும் சொற்கள்.

கடல் - பெருங்கடல்

உலக மாக்கடலை ஐந்து பெருங்கடல்களாக வகைப்படுத்துகிறது அறிவியல் சமூகம்.

1. பசிபிக் பெருங்கடல், 2. அட்லாண்டிக் பெருங்கடல், 3. இந்தியப் பெருங்கடல், 4. அண்டார்க்டிக் பெருங்கடல், 5. ஆர்க்டிக் பெருங்கடல். பொதுவாக, தனித்தனிப் பெயர் களில் இவை பார்க்கப்பட்டாலும், ஒன்றோடு ஒன்று தொடர்புடைய, பரிமாற்றமுடைய உலகப் பெருங்கடலின் ஐந்து பகுதிகளே இவை.

கடல்கள் என்பவை பெருங்கடல்களின் பகுதிகள். குட்டிக் கடல்கள். பெருங்கடல்களின் எண்ணிக்கை ஐந்து என்றால், கடல்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேல்.

கரைக்கடல், அண்மைக்கடல், ஆழ்கடல்

மீனவச் சமூகம் கடலை வகைப்படுத்தும் மூன்று சொற்கள் இவை. கரைக்கடல் என்பது கரையை ஒட்டியுள்ள கடல். அண்மைக்கடல் என்பது கரைக்கடலுக்கு அப்பால். ஆழ்கடல் என்பது அண்மைக்கடலுக்கும் அப்பால். உத்தேச

மாக, கரையிலிருந்து முதல் ஆறு நாட்டிக்கல் மைல் தொலைவைக் கரைக்கடல் என்றும், அடுத்த ஆறு நாட்டிக் கல் மைல் தொலைவை அண்மைக்கடல் என்றும், அதற்கு அப்பாற்பட்ட தொலைவை ஆழ்கடல் என்றும் சொல்லலாம்.

நாட்டிக்கல் மைல், பாகம்

கடலிலும் வானிலும் தொலைவை அளக்கப் பயன்படுத்தப் படும் அளவு நாட்டிக்கல் மைல். ஒரு நாட்டிக்கல் மைல் என்பது 1.852 கி.மீ. இதைத் தவிர, நம்முடைய மீனவர்கள் பாகம் என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்கள். ஒரு பாகம் என்பது தோராயமாக ஆறு அடி நீளம்.

மீன்பிடிக் கலங்கள்

கடலில் மீனவர்கள் செல்லும் கலங்கள் எல்லாவற்றையுமே படகுகள் என்று குறிப்பிடுவது நம் இயல்பு. அப்படி அல்ல. எண்ணற்ற கலங்கள் அந்தந்தப் பகுதிக்கேற்ப, பயன்பாட்டில் உள்ளன. தமிழக மீனவர்கள் பயன்படுத்தும் கலங்களைப் பெருவாரியாக ஐந்து வகைகளில் பிரிக்கலாம்: 1. கட்டுமரங்கள், 2. படகுகள் அல்லது வள்ளங்கள் 3. இயந்திரப் படகுகள், 4. விசைப் படகுகள், 5. பெரும் மீன்பிடிப் படகுகள் (ட்ராலர்கள்).

வலைகள்

வலைகளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வலைகள் மீனவர்கள் மத்தியில் புழங்குகின்றன. விரல் நீளம் உள்ள நெத்திலி மீன்களுக்கு ஒரு வலை என்றால், அதைவிடக் கொஞ்சம் பெரிய சாளை மீன்களுக்கு ஒரு வலை; வஞ்சிரம் மீன்களுக்கு ஒரு வலை என்றால், இறால்களுக்கு ஒரு வலை என்று மீன்களுக்கு ஏற்ப, மீன்பிடி முறைகளுக்கு ஏற்ப, படகுகளுக்கு ஏற்ப ஏராளமான வலைகள் உள்ளன.

இந்தச் சொற்களிலெல்லாம் நிறைய சுவாரசியங்கள் உண்டு. உதாரணமாக, கரை வலை என்பது சுமார் இரண்டு கி.மீ. நீளமும் 200 மீட்டர் அகலமும் ஐந்து மீட்டர் உயரமும் கொண்டது. கரையிலிருந்து வெவ்வேறு படகுகளில் புறப்படும் மீனவர்கள், கடலில் சுற்றி நின்று கரை வலையை விரித்து, மீன்களை வலையை நோக்கி விரட்டிப் பிடிக்கப் பயன்படுத்துவது. கிட்டத்தட்ட இது ஒரு பொறி மாதிரி. நண்டு வலை என்பது ஐந்து அடி நீளமும் முப்பது அடி அகலமும் கொண்டது. பல துண்டு வலைகள் இணைக்கப்பட்ட வலை.

கொண்டு வலை என்பது சுமார் ஐந்து அடி முதல் பத்து அடி வரை நீளம் கொண்டது. மீனவச் சிறுவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான வலை. கள்ள வலை என்பது வேறு ஒருவர் வலையில் விழுந்த மீன்களை அள்ளித் தன் வலையில் போட்டுக்கொண்டு தன்னுடைய மீன்கள் என்று உரிமை கொண்டாடுபவர்களின் வலைகளைச் சொல்வது. வலைகளிலேயே இவ்வளவு சுவாரசியம் என்றால், மீன்கள் பற்றிய சுவாரசியங்களைக் கேட்கவா வேண்டும்?

(அலைகள் தழுவும்…)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/article6206980.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

 
செல்லக்குட்டி நெத்திலி, கூத்தாடி சூரையன், மவராசன் இறால்!
 
91_2002006h.jpg
 

கடலுக்கும் மனித இனத்துக்கும் உள்ள இணைப்புப் பாலம் என்று மீன்களைச் சொன்னால், அந்த வர்ணனை மிகையாக இருக்காது என்று நினைக்கிறேன். கடலோடிகளின் உலகில் எவ்வளவு சுவாரசியங்கள் உண்டோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத சுவாரசியம் கொண்டது மீன்கள் உலகம்.

உங்களுக்கு எத்தனை தெரியும்?

உலகில் மொத்தம் 35,000 மீன் இனங்கள் இருப்பதாக அறிவியல் உலகம் சொல்கிறது. இவற்றில் 2,500 இனங்கள் தமிழகக் கடற்கரைப் பகுதியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒருகாலத்தில், தமிழகக் கடற்கரையோரக் கிராமப் பெரியவர்கள் யாரைக் கூப்பிட்டுக் கேட்டாலும், அநாயாசமாக ஐநூறுக்கும் மேற்பட்ட மீன்களின் பெயர்களைப் பட்டியலிடுவார்

களாம். இன்றைக்கெல்லாம் நூறு மீன்களின் பெயர்களைச் சொல்லும் மீனவர்களையே தேட வேண்டி யிருக்கிறது. பாரம்பரிய அறிவை இழத்தல் என்பது நம் சமூகத்தின் எல்லாத் தரப்பிலும் நடந்துகொண்டிருப்பதன் சாட்சியங்களில் ஒன்று இது. நூற்றுக்கும் மேற்பட்ட மீன் இனங்களை நாம் ஒவ்வொருவரும் பார்த்திருந்தாலும், அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய - நம் வாழ்க்கையோடு நெருக்கமான - சில மீன்களின் உலகை மட்டும் இங்கே கொஞ்சம் பார்க்கலாம்.

செல்லக்குட்டி நெத்திலி

அளவில் சின்ன மீனான நெத்திலி உலகின் பெருங் கடல்கள் அத்தனையிலும் காணக் கிடைக்கும் இனம். மீன் உணவு அறிமுகமே இல்லாத சைவப் பிரியர்களைக்கூடச் சுண்டியிழுக்கும் மணமும் ருசியும் கொண்டவை நெத்திலி மீன்கள். நெத்திலிக் கருவாட்டு வருவல் என்றால் இன்னும் விசேஷம்! மீன் ருசியர்களுக்கு மட்டுமல்ல; மீனவர்களுக்கும்கூட நெத்திலிகள் செல்லங்கள். நெத்திலி மீன்பாட்டில் மீனவர்கள் எதிர்கொள்ளும் சங்கடம் என்னவென்றால், அது கூடவே மழையையும் கூட்டிக்கொண்டு வரும் என்பது. கூட்டம்கூட்டமாகப் பிடிபடும் பல்லாயிரக் கணக்கான நெத்திலிகளை உடனே விற்கவும் முடியாது; கருவாடாக்குவதும் சிரமம் என்கிறார்கள்.

பறக்கும் கோலா

கோலா என்றால், கரையில் உள்ளவர்களுக்கு மீன் கோலா உருண்டை ஞாபகத்துக்கு வரலாம். கொஞ்சம் வயதான கடலோடிகளைச் சந்தித்தால், “அது ஒரு வீர விளையாட்டு அல்லா?” என்று சிரிப்பார்கள். இப்போதுபோல, அந்நாட்களில் வலை கொண்டு கோலாவைப் பிடிக்க முடியாதாம். ஆழ்கடல் தங்கலுக்குச் சென்று கோரிதான் பிடிப்பார்களாம். விரதம் இருந்து, வீட்டிலிருந்து வேப்பங்குழை எடுத்துச் சென்று, கயிற்றில் கட்டி கடலில் மிதக்க விட்டு, “ஓ வேலா, வா வேலா, வடிவேலா...” என்று கூப்பிட்டுக் காத்திருந்தால், ஒரு கோலா மீன் வருமாம். அதைப் பிடித்து, மஞ்சள் தடவி வணங்கி, “ஓ வேலா, வா வேலா, கூப்பிட்டு வா வேலா...” என்று நீரில் விட்டால், அது கூட்டத்தையே கூட்டிவருமாம். கோலா மீன்கள் புயல் வேகத்தில் பறக்கக் கூடியவை. அதுவும் கூட்டம்கூட்டமாக. பறக்க ஆரம்பித்தால் ஆயிரம் அம்புகள் படகு நோக்கிப் பாய்வதுபோல இருக்கும்; அதைச் சமாளித்துப் பிடிப்பதுதான் சவால் என்கிறார்கள்.

கூத்தாடி சூரையன்

நமக்குக் கிடைக்கும் மீன்களிலேயே அதிக புரதச் சத்து மிகுந்தது சூரை. மாலத்தீவில் ஏக மவுசுள்ள மாசிக் கருவாடு என்பது சூரைக் கருவாடுதான். சரியான கூத்தாடியான சூரைதான் மீன் இனத்திலேயே அதிக வேகத்தில் நீந்தும் மீன். மஞ்சள் சூரை மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும் என்கிறார்கள். திமிங்கிலங்களுக்கும் சுறாக்களுக்கும் பிடித்தமான உணவு சூரை. ஆனால், ஓங்கல்கள் (டால்பின்கள்) சூரைக் கூட்டத்தோடு உற்சாகக் கூத்தடிக்கும். எப்போதுமே சுறாக்கள், சக திமிங்கிலங்கள் மத்தியில் ஓங்கல்களுக்குக் கொஞ்சம் ‘பயம்' உண்டாம். இதனாலேயே புத்திசாலி சூரைகள் என்ன செய்யுமாம் என்றால், ஓங்கல்களைத் துணைக்கு அழைத்துக்கொள்ளுமாம். ஓங்கல்கள் எங்கே வட்டம் இடுகின்றனவோ அங்கே வலையைப் போட்டால், சூரையன்கள் கூட்டம்கூட்டமாகப் பிடிபடுவான்கள் என்கிறார்கள்.

சாளையோ சாளை

அளவில் சின்னதும் ருசியில் அலாதியானதுமான சாளை மீன்கள் உடலில் நிறைய எண்ணெய்ப் பசை உள்ளவை. இவை, நினைவிழத்தல் உள்ளிட்ட முதுவயது நோய்களைத் தடுக்கும் என்கிற மீனவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன சமீபத்திய அறிவியல் ஆய்வுகள். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் சாளை மீன்களுக்கு உண்டு என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அதிரடித் திருக்கை

உடல் வலிக்கு நல்ல மருந்து என்று திருக்கை மீன்களைச் சொல்வது உண்டு. ஆனால், கடலில் திருக்கைகளை எதிர்கொள்வது உயிர் சவால். கண்கள் மட்டும் வெளியே தெரிய உடல் முழுவதையும் மணலில் புதைத்துக்கொண்டு, மறைந்திருந்து வேட்டையாடும் திருக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இவற்றில் சில வகைகள் மின்சாரம் பாய்ச்சி எதிரிகளைக் கொல்லக் கூடியன. திருக்கையின் மிகப் பெரிய பலம் அதன் வால். திருக்கையின் நீண்ட வாலில் உள்ள நுண்ணிய முட்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும்.

கனவான் கணவா

மீன் அல்ல; மீன் மாதிரி உள்ள மீன் கணவா. எட்டுக் கரங்கள், இரண்டு உணர்கொம்புகள், உறிஞ்சிகள் என வித்தியாசமாகத் தோற்றம் தரும் கணவாவுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி. ஆனால், கூண்டு வைத்து மீன் பிடிப்பவர்களுக்குச் சிம்ம சொப்பனம் கணவா. ‘கடல் பச்சோந்தி’யான கணவா, எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள இடத்தின் நிறத்துக்கேற்பத் தன் தோலின் நிறத்தை மாற்றிக்கொண்டு அசையாமல் கிடக்கும். தனித்துவம் மிக்க இதன் இரு கண்களில் ஒன்று, உணர்கொம்பின் உதவியுடன் முன்புறம் பார்க்க, மற்றொன்று பின்புறம் பார்க்கும். எதிரி நெருங்கிவிட்டதாகக் கணிக்கும்போது, கருப்புத் திரவம் ஒன்றைப் பாய்ச்சும். கூடவே, நரம்புகளுக்கு அதிர்வு கொடுத்து ஸ்தம்பிக்க வைக்கும். மீறி அதைப் பிடித்தால், அதன் ஒவ்வொரு கரங்களையும் வெவ்வேறு இடத்தில் பாய்ச்சி, கீழ்நோக்கி இழுக்கும் என்கிறார்கள்.

இறால் மகராசன்

ஒருகாலத்தில் அதிகம் சீண்டப்படாத இறால்கள்தான் இன்றைக்குத் தமிழக மீனவர்களுக்கு வாரித்தரும் மகராசன்கள். “ஆனி, ஆடி, ஆண்ட புரட்டாசி” என்று மீனவர்களால் வர்ணிக்கப்படும் கச்சான் காலம்தான் இறால் பருவம். கடலடி அதிகம் விழும் காலம் இது. பால்போல ஆழி பொங்கும். ஆனால், இறால் பாடும் இப்போதுதான் அதிகம் இருக்கும். ஆகையால், “கச்சான் காலத்தில் மச்சான் துணையுண்டு” என்று பாடிக்கொண்டே கடலுக்குள் செல்கிறார்கள் மீனவர்கள்.

(அலைகள் தழுவும்)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/article6211798.ece?homepage=true&theme=true

 


மீனவ நண்பன் ஓங்கல்!

 

xdol_2003994h.jpg.pagespeed.ic.bX7IRLJe1

 

எவ்வளவோ மீன்களும் பிற உயிரினங்களும் இருக்கின்றன, ஓங்கல்போல (டால்பின்) ஒரு நண்பன் கடலோடிகளுக்குக் கிடைப்பதில்லை. உலகம் முழுக்கக் கடலோடிகள் சமூகம் ஆராதிக்கும் உயிரினம் ஓங்கல்.

தமிழக மீனவர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு, ஓங்கல்கள் கடந்த காலத்தில் மீனவர்களாகப் பிறந்தவர்கள் என்று. ஏனென்றால், கடலோடிகளிடம் அப்படி ஒரு பாசத்தை வெளிப்படுத்துபவை ஓங்கல்கள். மீனவர்கள் எவரிடமாவது ஓங்கல்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நாளெல்லாம் நாம் கதை கேட்கலாம். மீன்பிடி படகுகளை ஒட்டி ஒட்டி வந்து, மூக்கைத் தேய்த்து அவை அன்பை வெளிப்படுத்தும் கதைகள்... கடலுக்கு மேலே தாவிக் குதித்து உற்சாகத் துள்ளல் போட்டு, மகிழ்ச்சியாட்டம் போடும் கதைகள்... வித்தியாசமான ஒலிகளை எழுப்பி ஏதேதோ செய்திகளைச் சொல்லவரும் கதைகள்.... யாரேனும் கடலடியில் சிக்கி, தத்தளித்துக்கொண்டிருப்பதைக் கண்டால், கூட்டத்தோடு அங்கு சூழ்ந்து, தத்தளிப்பவர்களை மூக்கில் தாங்கி உந்திஉந்தி அவர்களைக் கடற்கரைக்குக் கொண்டுவந்துவிடும் கதைகள்...

திமிங்கில உடன்பிறப்பு

உலகெங்கும் கடலில் காணக் கிடைக்கும் இனங்களில் ஓங்கல்கள் இனமும் ஒன்று. அடிப்படையில் இவை பாலூட்டிகள். திமிங்கிலங்களுக்கு நெருங்கிய சொந்தம் என்கிறார்கள். சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஓங்கல்கள் இனம் தோன்றியிருக்கலாம் என்றும் ஓங்கல்களின் மூதாதை இனம் 5.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தரையிலிருந்து கடலுக்குக் குடிபெயர்ந்திருக்கலாம் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. ஆமாம், ஓங்கல்கள் தரைவாழ் பாலூட்டிகளின் வழித்தோன்றல்கள்.

பல் வெறும் பல் மட்டும் அல்ல

கடல் நீரில் மட்டுமல்லாமல், ஆற்று நீரிலும் வசிக்கக் கூடிய ஓங்கல்கள் சுமார் 4 அடி முதல் 30 அடி நீளம் வரை வளரக்கூடியவை. நன்கு வளர்ந்த ஓங்கல் 10 டன் எடை இருக்கும். கடல் நீரில் மட்டுமல்லாமல் ஆற்று நீரிலும் வசிக்கும் திறன் உண்டு. வேகமாக நீந்துவதற்கேற்ற உடலமைப்பு கொண்ட ஓங்கல்கள் தங்களுடைய தலையின் மேல்புறத்தில் உள்ள ஓட்டை வழியாக சுவாசிக்கின்றன. கடலுக்குள்ளும் சரி; கடலுக்கு வெளியிலும் சரி, ஓங்கல்களின் கண் பார்வைத்திறன் அபாரமானது. அதேபோல, மனிதர்களைவிட ஓங்கல்களுக்குக் செவித் திறன் 10 மடங்கு அதிகம் என்கிறார்கள். ஒலி எந்தத் திசையிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து வருகிறது என்பதை ஓங்கல்கள் பற்கள் மூலமாக அறிந்துகொள்கின்றன என்று சொல்கிறார்கள்.

கருணையுள்ளம் கொண்ட ராசா

சமூகப் பிராணிகளான ஓங்கல்கள் கூட்டமாகவே இருப்பதையே விரும்பும். இரை கிடைக்கும் இடங்களில் ஓங்கல்களின் குழுக்கள் பெரிய கூட்டமாகிவிடும். ஓங்கல்கள் தங்களுடைய இரைகளைப் பிடிப்பதிலும் வித்தியாசமானவை. மீன் கூட்டத்தை அப்படியே கும்பலாக, குறுகிய பகுதிக்கு விரட்டிச்சென்று சுற்றிவளைத்து அப்படியே விழுங்கிச் சாப்பிட ஆரம்பிக்கும். அதேசமயம், ஓங்கல்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வதும் உண்டு. முக்கியமாக, காதல் போட்டி. பெண் ஓங்கல்கள் அன்பைப் பெற ஆண் ஓங்கல்கள் இடையே கடும் சண்டை நடக்குமாம்.

அடிப்படையில், ஓங்கல்கள் கருணை மனம் படைத்தவை. ஏதேனும் ஒரு ஓங்கலுக்கு அடிபட்டுவிட்டாலோ, முடியவில்லை என்றாலோ அந்த ஓங்கலை சக ஓங்கல்கள் அன்பாகக் கவனித்துக்கொள்ளும். மூச்சுவிட சிரமப்படும் ஓங்கல்களை மற்றவை கடலின் நீர்மட்டத்துக்கு மேலே கைத்தாங்கலாக அழைத்துவரும். தங்களுடைய இனத்துக்கு மட்டுமல்லாது திமிங்கிலங்களுக்கும்கூட இவை உதவும். இந்த உதவியின் நீட்சிதான் மனிதர்கள் மீது அவை காட்டும் அன்பும்.

ஓங்கல்கள் பிற ஓங்கல்களுடனும் உரையாடுவதுடன் மனிதர்களிடமும்கூடப் பேச முற்படும் என்கிறார்கள் மீனவர்கள். விசில் ஊதுவதைப் போல ஓசை எழுப்பி எச்சரிக்கும். அதேபோல, சைகைகளையும் தெரிவிக்கும் என்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கிச் சுட்டியபடி ஓங்கல்கள் எதையேனும் தெரிவிக்க முற்பட்டால், அந்தத் திசையிலிருந்து ஆபத்து வரும் என்கிறார்கள் மீனவர்கள்.

எதிரி சுறா

சுறாக்களுக்கும் ஓங்கல்களுக்கும் ஆவதில்லை. கடலில் ஒரு மனிதன் சிக்கிக்கொண்டு தத்தளிப்பதை ஒரு சுறா பார்த்தால், அவனை அப்படியே சாப்பிட்டுவிடத் துடிக்கும்; ஓங்கல்களோ காப்பாற்ற நினைக்கும். மீனவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சுறாக்களுடன் சண்டையிட்டு, கடும் காயங்களைச் சந்தித்த ஓங்கல்களெல்லாம் உண்டு என்கிறார்கள். ஓர் ஆச்சரியம் என்னவென்றால், இப்படி சுறாக்கடியில் சிக்கும் ஓங்கல்கள் வெகுசீக்கிரம் தாமாகவே தேறிவிடும்.

கைரேகைபோலக் குரல் ஒலி

சீட்டி ஒலியைப் போன்று இருக்குமாம் ஓங்கல்களின் குரலோசை. மனிதர்களுக்கு ஒவ்வொருவரின் கைரேகையும் பிரத்யேகமாக இருப்பதைப் போல, ஓங்கல்களுக்குக் குரலோசை பிரத்யேகமாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒவ்வொரு குதிக்கும் ஓர் அர்த்தம்

கடலில் தண்ணீருக்கு வெளியே ஓங்கல்கள் தாவிக் குதிப்பதைக் காணக் கண் கோடி வேண்டும் என்று சொல்லும் மீனவர்கள், அதேசமயம், அவை இப்படிக் குதிப்பதற்குப் பல்வேறு அர்த்தங்கள் உண்டு என்கிறார்கள். உடம்பில் ஏதாவது ஒட்டிக்கொண்டால், அவற்றை உதறுவதற்காகவும்கூட அவை இப்படிக் குதிக்கும் என்கிறார்கள். படகுக்குப் பக்கத்தில் மூக்கை உரசிக்கொண்டு வரும் ஓங்கல்களுக்கு மீன்களைத் தூக்கி உயரே போட்டால், தாவிக் குதித்து மீனை வாயில் கவ்வும் ஓங்கல் நன்றி சொல்லி சப்தம் எழுப்புமாம். கடல் பறவைகளைத் தாவிப் பிடித்து தண்ணீரில் அமிழ்த்துவதும் ஓங்கல்களின் விளையாட்டுகளில் ஒன்றாம். தூங்கும்போதும்கூட எதிரிகள் யாரும் சூழ்கிறார்களா என்கிற விழிப்புடனேயே இருக்கும் ஓங்கல்கள் உலகின் சில பகுதிகளில் வேட்டையாடப்பட்டாலும் நம் மீனவர்கள் அவற்றைப் பிடிப்பதில்லை. தவறி வலையில் சிக்கி, வலையை அறுத்தாலும் கோபப்படுவதில்லை. ஒருவகையில் ஓங்கல்கள் அவர்களுக்கு நண்பர்கள்; இன்னொரு வகையில் கடல் தேவதையின் தூதர்கள்!

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article6215800.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

கடல் ராசா திமிங்கிலம்!

 

x167_2006514h.jpg.pagespeed.ic.3yZRaQurw

 

ஒரு நள்ளிரவில் அந்தச் சத்தம் எனக்குக் கேட்கக் கிடைத்ததை இப்போது நான் பாக்கியம் என்று சொல்லலாம். ஆனால், சத்தியமாக அன்றைக்கு அந்த மனநிலை இல்லை. “ராசா பாட்டு பாடுறார், இப்ப எங்கே இருக்கும்னு நெனைக்கிறீங்க, பல கடல் மைலுக்கு அந்தாண்ட போய்க்கிட்டு இருக்கும்” என்றார் அருகில் இருந்த மீனவ நண்பர். அப்படியும் என்னால், நடுக்கத்தை மறைக்க முடியவில்லை. திமிங்கிலங்களுக்கு அவற்றின் குரல்தான் அவை பெற்றிருக்கும் மிகச் சிறந்த கருவி. சப்தம் எழுப்பி, அது எதிரொலிக்கும் அலைகளை வைத்து, இரை எங்கே இருக்கிறது என்று கண்டறிவதில் தொடங்கி, பல நூறு கடல் மைல் தொலைவில் உள்ள சக திமிங்கிலங்களுக்கு சமிக்ஞைகளை அனுப்புவதற்கு வரை அவை தம் குரலைப் பயன்படுத்துகின்றன. அவர் முகத்திலும் கொஞ்சம் கலக்கம் தெரியத்தான் செய்தது. கடலைக் கூர்ந்து கவனித்தவர், “நீங்க பயப்பட ஒண்ணும் இல்ல தம்பி. புலால்க சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுங்க” என்றார். அப்புறம் கைகூப்பி ஒரு நிமிடம் முணுமுணுவென்றார். அதன் பின்னர் அவர் கண்களில் இதற்கு முன் தெரிந்த கொஞ்சநஞ்ச பயத்தையும் பார்க்க முடியவில்லை. “சத்தியத்துக்கு மரியாதை இருக்குல்ல?” என்றார் சிரித்துக்கொண்டே.

அந்தச் சத்தியம் என்ன?

திமிங்கிலங்களைப் பற்றிக் கடலுக்கு வெளியே கதை கேட்டால், கேட்கும் ஒவ்வொரு விஷயமும் சுவாரசியம். கடலுக்குள் போய்விட்டாலோ சகலமும் திகில். சும்மா, இல்லை. திமிங்கிலத்தின் ஒவ்வொரு அசைவும் அப்படி. ஒரு நீலத்திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரலாம் என்றும், அதன் நாக்கின் எடை மட்டுமே ஒரு யானை எடைக்குச் சமம் என்றும் ஒரு மீனவர் சொன்ன தகவல் போதும், அதன் ஒவ்வொரு பாகத்தின் பிரம்மாண்டத்தையும், ஒட்டுமொத்தத் தோற்றம் தரும் திகைப்பையும் ஊகிக்க. ஆனால், நம்மூர் மீனவர்கள் அதற்கு அஞ்சுவதில்லை. குமரி ஆத்தாவின் முன் எடுத்துக்கொண்ட சத்தியம் அவர்களைக் காப்பதாகச் சொல்கிறார்கள்.

திமிங்கிலங்களையும் பெரிய மீன்களையும் பொதுவாக ‘புலால்' என்று குறிப்பிடுகிறார்கள். “குமரி ஆத்தா, உன் மேல ஆணையா சொல்றோம், புலால்களுக்கு எங்களால எந்த ஆபத்தும் நேராது. அதேபோல, அதுகளால எங்களுக்கும் எந்த ஆபத்தும் நேரக் கூடாது. நீயே துணை” என்பதுதான் அந்தச் சத்தியம். பெரிய மீன்களைக் கண்ட வேகத்தில் கைகூப்பி இப்படி ஒரு பிரார்த்தனை செய்துவிட்டு, ஊம்ம்ம்ம்… என மெல்லமாக அழுவதுபோல் ஓசை தந்தால், பெரிய மீன்கள் தானாகப் போய்விடும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கைதான் தங்களை இன்றளவும் காப்பதாகச் சொல்கிறார்கள். இந்தச் சத்தியத்தை மீறி புலால்களைச் சீண்டியவர்களை அவை கட்டுமரத்தோடு பந்தாடியிருப்பதாகவும் சொல்கிறார்கள். திமிங்கிலம் வாலால் ஒரு அடி அடித்தால், கட்டுமரம் ஒரு கால்பந்து பறப்பதுபோல் பறந்துபோய் பல நூறு அடிகளுக்கு அப்பால் விழுமாம். திமிங்கிலத்தின் தூவியே கடலில் ஒரு பாய்மரம் அளவுக்குத் தெரியும் என்றால், அது வாலால் அடித்தால் என்னவாகும் என்று விவரிக்கத் தேவையில்லை.

திமிங்கிலம் மீனா?

பொதுவாக, மீன்களுக்கும் திமிங்கிலங்களுக்கும் முக்கியமான சில வேறுபாடுகள் உண்டு. மீன்களைப் போல முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்காமல், குட்டி போட்டுப் பால் கொடுத்தே திமிங்கிலங்கள் தம் பிள்ளைகளை வளர்க்கின்றன. அதாவது, திமிங்

கிலங்கள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. மீன்களைப் போல செவுள்களால் அல்லாமல், திமிங்கிலங்கள் நம்மைப் போல நுரையீரல் மூலமே சுவாசிக்கின்றன. உலகின் மிகப் பெரிய பிராணியான நீலத்திமிங்கிலம் உட்பட திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. இவற்றில் ஆகப் பெரும்பாலானவை சாதுக்கள். சில மட்டுமே மூர்க்கர்கள்.

வாழ்வாங்கு வாழ்க்கை

ஒரு நீலத்திமிங்கிலக் குட்டி பிறக்கும்போதே ஒரு யானை எடையோடு, 25 அடி நீளத்தில் பிறக்கும். கொஞ்சம் வளர்ந்ததும் கூனிப்பொடிக் கூட்டத்தைச் சாப்பிடத் தொடங்கும் இவை நன்கு வளர்ந்த நிலையில், சுமார் 40 யானை எடையோடு இருக்கும்போது, ஒரு நாளைக்கு நான்கு டன் அளவுக்குக் கூனிப்பொடிக் கூட்டத்தைக் கபளீகரம் செய்யும். சராசரியாக, 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை திமிங்கிலங்கள். அபாரமாக நீந்தக் கூடியவை. சில வகை திமிங்கிலங்கள் வலசைபோகும். பருவநிலைக்கு ஏற்ப இடம் மாற்றிக்கொண்டு, வலசை செல்லும் திமிங்கிலங்கள் ஆண்டுதோறும் பல்லாயிரம் கடல் மைல்கள் பயணிக்கும். வலசை செல்லும் பாலூட்டிகளில் மிக நீண்ட தொலைவு செல்லக்கூடியவை திமிங்கிலங்கள்தான்.

தம்முடைய தலைப் பகுதியில் உள்ள துளைகள் வழியே திமிங்கிலங்கள் சுவாசிக்கின்றன. கடல் பரப்பில் அவை சுவாசிப்பதைப் பார்த்தால், ஏதோ பெரிய குழாய்களிலிருந்து நீர் பீய்ச்சியடிப்பதுபோல இருக்கும். திமிங்கிலங்களுக்குத் தனித்தன்மை மிக்க சுவாச மண்டலம் உண்டு. கடலின் மேற்பரப்புக்கு வந்து மூச்சை இழுத்துக்கொண்டு, ஒரு முறை உள்ளே போனால், இருபது நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை தண்ணீருக்குள்ளேயே அவற்றால் தாக்குப்பிடிக்க முடியும். இதற்குக் காரணம், சுவாசத்தில் அவை சுவாச வாயுவை எடுத்துக்கொள்ளும் வீதம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். மனிதர்கள் சுவாசிக்கும்போது, அந்தக் காற்றிலிருந்து 15% ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்கிறார்கள் என்றால், திமிங்கிலங்கள் சுவாசிக்கும்போது, 90% ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ளுமாம்.

நீலத்திமிங்கிலத்தின் வாயில் சீப்பு போன்ற தோற்றத்தில் பல நூறு சிறிய இழைகள் போன்ற தகடுகள் உண்டு. கூனிப்பொடி லட்சக் கணக்கில் கூட்டமாக வரும்போது, வாயை அகலமாகத் திறக்கும் நீலத் திமிங்கிலம், தண்ணீரோடு சேர்த்து அந்தக் கூட்டத்தை அப்படியே வாய்க்குள் இழுத்துவிடும். அப்படி இழுக்கும்போது, இன்னொரு நீலத் திமிங்கிலம் அதன் வாய்க்குள் நுழையும் அளவுக்கு அதன் வாய் விரியுமாம். வாய்க்குள் அவை சென்றதும் அந்தச் சீப்பு போன்ற தகடுகளால் கூனிப்பொடிக் கூட்டத்தைச் சலித்து வயிற்றுக்குள் அனுப்பிவிட்டு, தண்ணீரை வெளியேற்றிவிடும்.

திமிங்கிலம் ஏன் கடல் ராசா?

மீனவ நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, இன்னொரு விஷயத்தைச் சொன்னார்கள். ஒவ்வொரு திமிங்கிலமும் செத்த பிறகு பல லட்சம் உயிரினங்களுக்கு உணவாகுமாம். இறப்புக்குப் பின் ஒரு மாமிச மலைபோலக் கடல் அடியில் போய் அடங்கும் திமிங்கிலங்களின் உடலை எண்ணற்ற நுண்ணுயிரிகளும், பெயர் அறியாத உயிரினங்களும் ஆண்டுக் கணக்கில் சாப்பிடுமாம். “உசுரோட இருக்கும்போது அத்தனை கம்பீரமா உலாத்துற புலால்க செத்த பிறவு சின்னச் சின்ன உசுருங்கல்லாம்கூட அது மேல கூட்டம்கூட்டமாக ஏறி நின்னு பங்கு போடும்” என்கிறார் ஒரு நண்பர். “ஆனாலும், ராசா எப்போதும் ராசாதான்” என்கிறார் இன்னொரு நண்பர்.

ராசாவின் பாட்டு இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ராசாவின் வாழ்க்கைதான் என்ன? ராசாவின் சாவுதான் என்ன?

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article6219340.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

வேட்டையன் வரிப்புலியன்

 

678a_2008921h.jpg

 

shark.jpg

 

காட்டில் புலி எப்படி? கடலில் வரிப்புலியன் அப்படி!

சுறா என்றாலே, மிரள வைக்கும் ஓர் உருவம் நம் மனதில் உருவாகியிருந்தாலும் எல்லாச் சுறாக்களும் ஆபத்தானவை அல்ல என்பதே உண்மை. உலகில் உள்ள 470 சுறா இனங்களில், விரல் விட்டு எண்ணக்கூடிய இனங்களே ஆபத்தானவை. அவற்றில் முக்கிய மானது வரிப்புலியன் என்று நம் மீனவர்களால் அழைக்கப்படும் புலி சுறா. வேட்டையன்!

ஐயய்யோ புலியன்

கடலோடிகள் திமிங்கிலத்துக்குக்கூட அஞ்சுவ தில்லை. ஆனால், வரிப்புலியனைக் கண்டால் அரளு வார்கள் (சுறா வேட்டை என்பது தனிக் கலை. எல்லோருக் கும் அது சாத்தியமானது அல்ல). தனி ஒருவர் செல்லக்கூடிய கட்டுமரமான ஒத்தனா மரத்தில் மீன் பிடிக்கச் சென்று வரிப்புலியனிடம் சிக்கிய ஒரு மீனவரின் அனுபவம் இது.

தூண்டில் போட்டு மீன் பிடிப்பவர் அவர். முதல் நாள் காத்திருந்தார். கொண்டுவந்த கஞ்சி கரைந்துபோயிற்று. ஒரு மீனும் சிக்கவில்லை. இரண்டாவது நாள் காத்திருந்தார். கட்டுச் சோறும் கரைந்துபோயாயிற்று. ஒரு மீனும் சிக்கவில்லை. மூன்றாவது நாள் காத்திருந்தார். வெற்றிலை சீவலும் கரைந்து போயிற்று. ஒரு மீனும் சிக்கவில்லை.

மீன்களே இல்லா குளம்போலக் கிடக்கிறது கடல். மூன்று பகல்கள் முழுக்க வெயிலைத் தாங்கியாயிற்று; இரண்டு இரவுகள் குளிரையும் தாங்கியாயிற்று. வயிற்றைத் துவைக்கிறது பசி. இனியும் காத்திருக்க முடியாது. ஆனால், மூன்று நாள் கழித்து எப்படி வெறும் கையோடு வீட்டுக்குப் போவது? திகைத்து நிற்கும் மனிதரின் தூண்டில் சிலும்புகிறது. இழுத்தால் சரசரவென்று வருகிறது. தூண்டில் முள்ளில் இரையைக் காணவில்லை. ஏமாற்றம். ஆனாலும், ஏதோ ஒரு மீன் அருகில் இருக்கிறது என்கிற ஆறுதல். கூடவே கொஞ்சம் கலக்கம். ஏதோ பெரிய மீன். ரொம்ப சாமர்த்தியமாக இரையைக் கவ்வும் மீன். என்ன மீனாக இருக்கும் என்று யோசிக்கும்போதே அது நீருக்கடியிலிருந்து மெல்ல மேல் நோக்கி வருகிறது... வரிப்புலியன்!

அப்படியே உலகமே இருண்டதுபோல ஆகிவிட்டது. வரிப்புலியனிடம் எதிர்த்துப் போராடும் சூழல் அது இல்லை. போராடினாலும் முடிவு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது. உறைந்துபோகிறார். மெல்லக் கட்டுமரத்தின் அணியத்தை (முன்பகுதி) நெருங்கும் அது அந்தப் பகுதியைச் சுற்றுகிறது. கட்டுமரத்தைக் கடித்து, நொறுக்க ஆரம்பிக்கிறது. ஆட்டம் காண்கிறது கட்டுமரம். கடலில் குதிக்கிறார் அவர். நீந்த ஆரம்பிக்கிறார். ஒரு பெரும் அலை அவரைத் தூக்கி வீசுகிறது. கண் மூடும் அவர் மீண்டும் கண் விழித்துப் பார்த்தபோது, சுறா வேட்டைக்கு வந்து, காணாமல்போன மீனவர்களைத் தேடி வந்த ஒரு மீனவக் குழுவால் அவர் காப்பாற்றப்பட்டிருந்தார். அவர்கள் தேடிவந்த இரு மீனவர்களையும் வரிப்புலியன் வேட்டையாடியிருந்தது.

இப்படி ஆயிரமாயிரம் அனுபவங்கள். நான் பார்த்த இன்னொரு மீனவர் தன் நண்பனுடன் கடலுக்குச் சென்றவர். தவறுதலாகத் தூண்டிலில் ஒரு வரிப்புலியன் சிக்கிவிட்டது. தூண்டிலை அது இழுத்தபோது, நண்பரால் சுதாரிக்க முடிய வில்லை. இவர் உதவுவதற்கு முன் இன்னொரு வரிப்புலியன் அவரை மறித்துவிட்டது. கொடூரமான மரணம். கண்ணெதிரே.

உயிர் மோதல்

பொதுவாக, வரிப்புலியன் எதையும் விட்டுவைப்பதில்லை. மீன்கள், நண்டுகள், ஆமைகளில் தொடங்கி, கடல் பாம்புகள், குட்டி சுறாக்கள் வரை எதையும் விட்டுவைப்பதில்லை. அசந்தால், கொஞ்சம் அடிபட்ட, முடியாத திமிங்கிலங்களையும்கூடப் போட்டுப்பார்க்கக்கூடியது. இதன் கடிவேட்கைக்குப் படகுகளும் விதிவிலக்கு அல்ல. ஒரு மீனவர் பார்வையில் வரிப்புலியன் விழுவதும், வரிப்புலியன் பார்வையில் ஒரு மீனவர் விழுவதும், கிட்டத்தட்ட ‘இரண்டில் ஒன்று’ போராட்டம்தான்.

சுறா வரலாறு

சுறாக்கள் இனத்தின் ஆணி வேர் 42 கோடி ஆண்டுகளுக்குப் பின் செல்லும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். இன்றைக்கு நாம் பார்க்கும் தோற்றத்தை அவை பெற்றே 10 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். இனத்துக்கேற்ப சுறாக்களின் அளவு வேறுபடும். உலகின் மிகப் பெரிய மீனான திமிங்கிலச் சுறா (கவனிக்க: திமிங்கிலம் வேறு, திமிங்கிலச் சுறா வேறு. திமிங்கிலம் மீன் அல்ல) 40 அடி வரை வளரக்கூடியது. ஆழ்கடலில் உள்ள சில சுறா இனங்கள் முக்கால் அடிக்கும் குறைவான நீளம் உடையவை. வரிப்புலியன் 18 அடி வரை வளரும்.

அபாரமான மோப்ப சக்தி சுறாக்களுக்கு உண்டு. 10 லட்சம் பங்கு தண்ணீரில் ஒரு பங்கு ரத்தம் கலந்தாலும் மோப்பம்பிடித்து, அந்த இடம் நோக்கி நகரக்கூடியவை. சுறாக்களின் பல் அமைப்பு ஆச்சரியம் தரக் கூடியது. பல அடுக்குகளாக அமைந்த அதன் பற்களில் முன்வரிசைப் பல் ஒன்று விழும்போது, அதன் அடுத்த வரிசைப் பல் அந்த இடத்துக்கு நகர்ந்துவரும். வெகுசீக்கிரம் மாற்றுப்பல்லும் முளைக்கும். சில வகை சுறாக்களுக்கு வெறும் எட்டே நாட்களில் புதுப் பல் முளைத்துவிடும். சில வகை சுறாக்கள் தன் வாழ்நாளில் 30 ஆயிரம் பற்களைக்கூட இழக்கும். அதேசமயம், பார்வையைப் பற்றி அப்படிப் பெரிதாகச் சொல்ல முடியாது என்கிறார்கள். சில வகை சுறாக்கள் நிறக்குருடு (அவற்றின் கண்களுக்கு சில வகை நிறங்கள் தெரியாது).

சுறாக்கள் பொதுவாக 20-30 ஆண்டுகள் வாழக்கூடியவை. சில இனங்கள் - திமிங்கிலச் சுறாக்கள் போன்றவை - நூறாண்டுகள் வாழக்கூடியவை. வரிப்புலியன் 12 ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடியது. இந்தக் கணக்கெல்லாம் கடலுக்குள்தான். கடற்கரைக் கதைகளில் வரிப்புலியன்களுக்கு சாவே இல்லை!

(அலைகள் தழுவும்...)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/article6224062.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

மரணத்தின் அருகே ஏன் வாழ்கிறார்கள்?

1w_2013766g.jpg

 

56_2013765g.jpg

 

87_2013764g.jpg

 

நீங்கள் கடலைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன் கட்டாயம் கடற்கரையை ஒருமுறை பார்க்க வேண்டும். இந்தத் தொடருக்காகப் பலரையும் சந்தித்து, ஆலோசனை கலந்தபோது, மீனவ இனத்தைச் சேர்ந்த பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் எனக்குச் சொன்ன முதல் ஆலோசனை இது.

நான் சிரித்துக்கொண்டே சொன்னேன், “சின்ன வயதிலிருந்து நான் நிறைய முறை கடற்கரைக்குச் சென்றிருக் கிறேன் சார். மேலும், சென்னையில் நான் பணியாற்றும் ‘தி இந்து' அலுவலகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில்தான் மெரினா கடற்கரை இருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும்தானே?”

வறீதையா சிரித்துக்கொண்டே மறுத்தார், “மன்னித்துக் கொள்ளுங்கள். எனக்காக நீங்கள் ஒருமுறை அசல் கடற் கரையைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்குக் கடல் உணர்வு வரும். கடலோடிகள் பிரச்சினையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீங்கள் கடல் உணர்வைப் பெறுவது அவசியம்.”

இது என்னடா வம்பாப் போச்சு என்றாகிவிட்டது எனக்கு. அவருடன் உரையாடுவதற்காக அவர் கொடுத்த நேரமே குறைவாக இருந்தது. அந்த நேரமும் கடற்கரையில் கழிந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை என்னை அரிக்கத் தொடங்கியது. வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. சம்பவம் நடந்துகொண்டிருப்பது குமரி மாவட்டத்தில். தூத்தூரில். அவர் பணியாற்றும் கல்லூரியில்.

“சரி... போவோம்... எங்கே போகலாம்?” என்றேன்.

 

மரண பயம்தான் கடல் உணர்வா?

அவர் அழைத்துச் சென்ற இடம் இறையுமண்துறை. தூத்தூர் தீவின் ஒரு பகுதி. அதாவது, தூத்தூர் தீவின் ஆரம்பம் நீரோடி என்றால், முடிவு இறையுமண்துறை. தூத்தூரிலிருந்து வண்டியில் அழைத்துச் சென்றார். கடைசி யாக, நாங்கள் இரண்டு பக்கமும் வீடுகள் உள்ள ஒரு தெருவில் நுழைந்தபோது, அந்தத் தெருவின் முக்கில், ஒரு பெரும் அலை அடித்ததைக் கவனித்தேன். ஆனாலும், கடலைப் பார்க்கும் உற்சாகத்தில், மண்டையில் எதுவும் உறைக்கவில்லை. தெருக் கடைசியில் பேராசிரியர் வண்டியை நிறுத்தி, நாங்கள் இறங்கியபோது அது நடந்தது. பனை மரம் உயரத்துக்கு ஒரு பெரும் அலை. எங்கள் முன் வந்து விழுந்தது. திடுக்கிட்டுக் கண்களை மூடித் திறந்தால், என்னைச் சுற்றிலும் தண்ணீர்.

அப்போதுதான் கவனித்தேன். அந்த ஊர், அந்தத் தெரு, அந்த மக்கள் எல்லாம் கடலையொட்டி இருக்கிறார்கள். வீட்டுக்குக் கொல்லைப்புறத்தில் கடல். நான் இதுவரை பார்த்திருந்த அமைதியான கடல் அல்ல; ஆவேசமாகப் பொங்கிச் சீறும் கடல். வீட்டுக்கும் கடலுக்கும் இடையே ஒரே பாதுகாப்பு, அரசால் கருங்கற்களால் அமைத் துத் தரப்படும் 'தூண்டில் வளைவு' என்றழைக்கப்படும் தடுப் பரண். அலைகள் தடுப்பரணைத் தாண்டி, வீடுகளைத் தாண்டி தெருவில் வந்து விழுந்துகொண்டிருக்கிறது. அப்படியே சர்வநாடியும் ஒடுங்கிவிடுவதுபோல இருந்தது எனக்கு. வாழ்வில் இப்படிப்பட்ட அலைவீச்சை நான் பார்த்ததே இல்லை.

முதல்முறையாக மரண பயம் என்னைச் சூழ்ந்தது. வறீதையாவை அதிர்ச்சியோடு பார்த்தேன்.

“இந்தத் தூண்டில் வளைவு கட்டியிருக்கிறார்களே அதற்கும் பின்னால், நான்கு தெருக்கள் இருந்தன. கடந்த வருடங்களில் அந்தத் தெருக்கள் மூழ்கிவிட்டன. குமரி மாவட்டக் கடலோரம் முழுக்க இப்படிப் பல ஊர்களில் பல தெருக்கள், பல வீடுகள் ஜலசமாதியாகிவிட்டன. நாளைக்கு இங்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்...” என்கிறார் கடல் அலைகளைப் பார்த்துக்கொண்டே.

எனக்கு வாழ்விலேயே முதல்முறையாகக் கடல் அலைகள் மரண அலைகளாக அப்போது தெரிந்தன. அதற்கு முன் எவ்வளவோ முறை கடலை, கடல் அலைகளைப் பார்த் திருக்கிறேன். நான் இப்படி உணர்ந்ததேயில்லை.

“சென்னையிலும் புதுவையிலும் வேளாங்கண்ணியிலும் கன்னியாகுமரியிலும் ராமேஸ்வரத்திலும் சுற்றுலாப் பயணி களைக் கவர்வதற்காகச் சகல வசதிகளோடும், பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் அரசு பராமரிக்கும் கடற்கரைகள் வேறு; கடலோடிகள் வாழும் கடற்கரைகள் வேறு. இதுதான் கடற்கரையின் உண்மையான முகம். கடற்கரையே இப்படி இருக்கும் என்றால், கடல் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்...”

“மரண பயம்தான் கடல் உணர்வா?” - பேராசிரியரிடம் கேட்டேன்.

“ம்ஹூம்… மரணமே துணையாவதுதான் கடல் உணர்வு...”

- அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என் எதிரே இருக்கும் வீட்டைப் பார்க்கிறேன். கையில் மிக்சருடன் டி.வி. பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறாள் பள்ளிக்கூடம் போய்விட்டு திரும்பிய ஒரு ஐந்து வயதுச் சிறுமி. மூன்று வயது இருக்கலாம். பக்கத்தில் நிற்கும் தம்பி அவள் மடியில் ஏறி உட்கார்ந்துகொள்கிறான். பார்வையை அப்படியே வீட்டுக்குப் பின்னால் கொண்டுபோனால், கருங்கல் சுவரில் வெறிகொண்டு மோதித் தெறித்து, அவள் வீட்டைத் தாண்டி வாசலில் வந்து விழுகிறது அலை. எந்த நம்பிக்கையில் இவர்கள் இங்கு வாழ்கிறார்கள்?

கடல் சீறினால் என்னவாகும் என்பதற்கான முன் அனுபவங்கள் தமிழ் மீனவர்களுக்கு ஆதிகாலம் தொட்டு இருக்கின்றன. கண் முன்னே உள்ள உதாரணங்களே பூம்பூகார் முதல் சுனாமி தாக்குதல் வரை இருக்கின்றன. கோடி ரூபாய் கொடுத்தாலும் நம்மால் அங்கு ஒரு நாள் நிம்மதியாகப் படுத்துத் தூங்க முடியாது. எந்த நம்பிக்கையில் இவர்கள் இங்கு வாழ்கிறார்கள்?

வறீதையாவிடம் கேட்டேன், “இங்கு வாழ்வது பெரிய அபாயம் அல்லவா? ஏன் கடலை விட்டுக் கொஞ்சம் தள்ளி வீட்டை அமைத்துக்கொள்ளக் கூடாதா?”

“கடலோடிகள் சமூகத்துடன் கொஞ்சம்கொஞ்சமாக நெருக்கமாகும்போது, இதற்கான பதிலை நீங்களே கண்டடைவீர்கள்.”

நான் அவரை மலங்கமலங்கப் பார்த்தேன்.

 

விடாமல் துரத்திய கேள்வி

நிலத்தில் எவ்வளவோ இடம் இருக்கும்போது மீனவர்கள் ஏன் கடலையொட்டியே வாழ்கிறார்கள்? மரணம் எந்நேரமும் வாரிச் சுருட்டும் என்று அறிந்தும் ஏன் கடலை விட்டு அகல மறுக்கிறார்கள்? எது கடலையும் மீனவர்களையும் பிரிக்காமல் பிணைத்திருக்கிறது? இந்தக் கேள்விக்கான விடை எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால், கடலோரத்திலேயே திரிய ஆரம்பித்த சூழலில் வெகுசீக்கிரம் கொஞ்சம்கொஞ்சமாகப் புரிபட ஆரம்பித்தது. நீரோடியிலிருந்து என்னை விடாமல் துரத்திய அந்தக் கேள்விக்கான பதில் தனுஷ்கோடியில் எனக்குக் கிடைத்தது.

(அலைகள் தழுவும்...)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6231433.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

'பேய் நகரம்' நோக்கி ஒரு பயணம்!

 

545xNx1_2015495g.jpg.pagespeed.ic.3ESv84

 

564xNx2_2015494g.jpg.pagespeed.ic.3GgnHZ

 

564xNx3_2015493g.jpg.pagespeed.ic.tglFs4

 

ஒரு ஊருக்குப் பயணமாகிறோம். முன்பின் தெரியாத ஊர். ஆனாலும், அந்த ஊரைப் பற்றி அதுவரை கேள்விப்பட்டிருந்த, அதுவரை படங்கள் வழியாகப் பார்த்திருந்த, புத்தகங்கள் வழியாகப் படித்திருந்த விஷயங்கள் நம் மனதுக்குள் ஒரு சித்திரத்தை உருவாக்கும் இல்லையா? தனுஷ்கோடியைப் பற்றி அப்படி எனக்கும் ஒரு சித்திரம் இருந்தது. தனுஷ்கோடி என்றால், நம் எல்லோருக்கும் உடனே என்ன ஞாபகத்துக்கு வரும்? கடலில் சிதிலமடைந்த அந்த தேவாலயமும் அதையொட்டிய கடலும்... என் மனச்சித்திரத்தில் உயிர்பெற்றிருந்த தனுஷ்கோடி அதைத் தாண்டியும் வளர்ந்திருந்தது. இந்திய வரைபடங்களும் வரலாற்றுப் புத்தகங்களும் ஆவணப் புகைப்படங்களும் ஊட்டி வளர்த்த சித்திரம் அது. கடலில் புதையுண்ட ஒரு பண்டைய துறைமுக நகரத்தின் எச்சங்களிலிருந்து உருவான ஊரின் சித்திரம் அது.

இந்தியாவின் 8,118 கி.மீ. நீளக் கடற்கரையில் தனுஷ் கோடிக்கு முக்கியமான இடம் உண்டு. இந்தியாவைக் கடல் வழியே தொட நினைக்கும் ஒரு அந்நிய நாட்டுக்கு, நம்முடைய கடற்கரையில் மிக எளிய நுழைவாயில் தனுஷ்கோடிதான். தனுஷ்கோடியிலிருந்து வெறும் 15.6 கடல் மைல் தொலைவில் இருக்கிறது இலங்கையின் தலைமன்னார். இந்திய - இலங்கை அளவில் மட்டும் அல்ல; சர்வதேச அளவிலும் இரு நாடுகளுக்கு இடையேயான மிக நெருக்கமான கடற்கரையோர எல்லைகளைக் கொண்ட நுழைவாயில்கள் தனுஷ்கோடியும் தலைமன்னாரும்.

தனுஷ்கோடி தீவு உருவான கதை

இன்றைக்கு இந்திய நிலப்பரப்புக்கு வெளியே இருக்கும் ஒரு கடல்சூழ் தீவு தனுஷ்கோடி. அதாவது, நாம் சென்னையிலிருந்து புறப்பட்டால், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் என்று மண்டபத்தோடு முடிந்துபோகிறது நம் நாட்டின் நிலப்பரப்பு. நடுவே, ஒரு ஆறுபோலக் குறுக்கிடுகிறது கடல். அதைப் பாலம் வழியே கடந்தால், பாம்பனில் தொடங்கி ராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடி வரை தீவு.

ஆரம்பக் காலத்தில் இப்படி இல்லை என்கிறார்கள். தனுஷ்கோடி வரை நீண்ட நிலப்பரப்பைப் பெரும் புயல்களே கடலால் பிரித்தன என்கிறார்கள். குறிப்பாக, கி.பி.1480-ல் ஏற்பட்ட புயலுக்குப் பின்னரே நிலத்தை உடைத்துக்கொண்டு கடல் உள்ளே வந்தது என்கிறார்கள்.

இயற்கைச் சீற்றத்தின் நெருக்கம்

தனுஷ்கோடியைப் பற்றி ராமநாதபுரம் மாவட்ட மக்கள் சொல்லும் செவிவழிச் செய்திகள், பல்லாண்டு காலமாக இந்தப் பகுதி இயற்கைச் சீற்றம் மிக்க பகுதியாக இருப்பதைச் சொல்கின்றன. கடந்த 60 ஆண்டுகள் வரலாற்றை எடுத்துக்கொண்டாலே புயல்கள் நடத்திய சூறையாட்டம் அதிரவைக்கிறது. 1955 புயல் தாக்குதலின்போது ஊருக்குள் வெள்ளம் வடிய ஒரு மாதத்துக்கும் மேல் ஆகியிருக்கிறது. 1964 புயல் தாக்குதல் ஊரையே அழித்துவிட்டுச் சென்றிருக்கிறது.

பேய் நகரம்

ஒருகாலத்தில் வாழத் தகுதியற்ற இடம் என்று நம்முடைய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இடம் தனுஷ்கோடி. பேய் நகரம் என்று அரசாலும் ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்ட இடம். ஆனால், காலங்காலமாக அங்கேயே வாழ்ந்துவந்த மீனவ மக்களால் அந்த ஊரை விட்டுவிட முடியவில்லை. கடல் தாக்குதலில் தப்பித்த பெரும்பான்மை தனுஷ்கோடிவாசிகள், அவர்களுடைய தலைமுறைகள் - கிட்டத்தட்ட இரண்டாயிரத்துச் சொச்சம் பேர் - இன்னமும் தனுஷ்கோடியை விட்டு அகலாமல் இருக்கிறார்கள். அந்த ஊரை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். இந்த விஷயங்கள்தான் தனுஷ்கோடி மேல் ஒரு பெரிய ஈர்ப்பை எனக்கு உருவாக்கக் காரணமாக இருந்தன.

இன்னொரு உலகின் முகம்

ராமேஸ்வரம் கடற்கரை பஸ் நிலையத்தில் தனுஷ்கோடி பஸ்ஸில் ஏறியதும் ஜன்னலோர இடம் கிடைத்தது. இருபுறமும் சவுக்குத் தோப்புகள் சூழ்ந்த சாலையில் பஸ் நுழைந்ததும் கொஞ்சம்கொஞ்சமாக விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்த என் மனச்சித்திரம், ஒரு மணி நேரம் கழித்து “தனுஷ்கோடி வந்தாச்சு இறங்குங்கப்பா” என்று நடத்துநர் இறங்கச் சொன்னபோது சுக்குநூறாக உடைந்து சிதறியது.

உண்மையில் பஸ் தனுஷ்கோடிக்குச் செல்லவில்லை. அதற்கு 8 கி.மீ. முன்னதாகவே முகுந்தராயச்சத்திரம் என்ற இடத்தோடு நின்றுவிட்டது. எல்லா பஸ்களும் அந்த இடத்தோடு நிறுத்தப்பட்டுவிடுகின்றன. அங்கிருந்து தனுஷ்கோடிக்குச் செல்ல பஸ்களும் இல்லை; சாலைகளும் இல்லை. இரு பக்கமும் நெருக்கமாக இருக்கிறது கடல். நடுவே, கடல் மண்திட்டு. கொஞ்ச தூரம் மணல் முட்டாக, அதற்கு அப்புறம் சேறும் சகதியுமாக. வேன்களும் ஜீப்புகளும் செல்கின்றன. ஒரு ஆளுக்கு 200 ரூபாய் கேட்கிறார்கள். ஜீப்பில் ஏறி உட்கார்ந்தால், அது செல்லச் செல்ல அங்கே இன்னொரு உலகம் விரிகிறது. சாலையின் இருபுறங்களிலும் தூரத்தில் கடல் தெரிகிறது. கடற்கரையோரங்களில் சீமைக்கருவைப் புதர். நடுவே சேறும்சகதியுமாக விரிந்த பரப்பு. பாதையை எதிர்கொள்ள முடியாமல், ஜீப் திமிறி - திணறி - முக்கி - பெருமூச்சு விட்டு முன்னேறுகிறது. போகிறது… போகிறது… போகிறது...

திடீரென அந்தப் பாதையில் - எந்தக் காலத்திலோ போடப்பட்டதன் எச்சம் - ஒரு சிதிலமடைந்த சாலையின் தடம் குறுக்கிடுகிறது. “தனுஷ்கோடியைத் தொட்டுட்டோம்... இந்த எடம் பேரு பாலம்... பாதி சனம் இங்கே இருக்கு, பாத்துக்குங்க” என்கிறார் ஜீப் ஓட்டுநர் வினோத்.

வெக்கை எரிக்கும் சீமைக் கருவைக் காடுகளின் நடுவே குடிசைகள் தெரிய ஆரம்பிக்கின்றன. அடுத்த சில நிமிடங்களில், “இதான் கம்பிபாடு. மீதி சனம் இங்கே இருக்கு. ஊரழிஞ்சுபோன எடம் வந்தாச்சு... இறங்குங்க” என்று சொன்னவர் வண்டியை நிறுத்தியபோது, சிதைந்துபோன அந்தத் தேவாலயம் முன் நின்றோம்.

பவளப் பாறைகளால் கட்டப்பட்ட கட்டிடம். படங்களில் பார்த்ததைவிடவும் மோசமாகச் சிதைந்து நிற்கிறது. அதற்கு வலதுபுறத்தில் கொஞ்ச தூரத்தில் ரயில் நிலையக் கட்டிடச் சிதைவுகள். இடதுபுறத்தில், அஞ்சல் நிலையக் கட்டிடச் சிதைவுகள். தொடர்ந்து, சின்னதும் பெரியதுமான கட்டிடச் சிதைவுகள். இந்தக் கட்டிடங்களுக்குப் பின்புறத்தில் எதுவுமே தெரியாததுபோல, அலை அடித்துக்கொண்டிருந்தது கடல். “உண்மையில இந்தக் கடலு நல்ல கடலுங்க. முன்பக்கம் தூரத்துல அமைதியா கெடக்கு பாருங்க... அந்தக் கடலுதான் அன்னைக்கு ஊருக்குள்ள நுழைஞ்சு முழுங்கிட்டுப்போயிட்டு. இந்தக் கடலு பதிலுக்குக் கொடுத்த பெருங்காத்துலதான் கொஞ்சநஞ்ச மக்களாச்சும் பொழைச்சுருக்கு. ஏதோ பொழைச்சுக் கெடக்காங்க, அவ்வளவுதான் சார். ரோடு கெடையாது, பஸ்ஸு கிடையாது, கரண்டு கிடையாது, அமயஞ்சமயத்துக்கு ஒரு ஆஸ்பத்திரி கிடையாது... தண்ணீ வசதிகூடக் கிடையாது” - அடுக்கிக்கொண்டே போகிறார் வினோத்.

எதிர்ப்படும் உள்ளூர்க்காரர்கள் முகங்களைப் பார்க்கிறேன். வெள்ளந்தியாய்க் கடக்கிறார்கள். சுற்றிலும் பார்க்கிறேன். தேவாலயத்தை ஒட்டியுள்ள ஐந்தாறு குடிசைக் கடைகள். அப்புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சின்னச் சின்னக் குடிசை வீடுகள்… குடிசை வீடுகள்… குடிசை வீடுகள்... என்னையும் மீறி நான் உடைய ஆரம்பித்தேன். நான் அந்தக் கால தனுஷ்கோடியைப் படங்களில் பார்த்திருக்கிறேன், அதைப் பற்றி புத்தகங்களில் படித்திருக்கிறேன், அந்த நாட்களில் எப்பேர்ப்பட்ட ஊர் இது?

 

564xNx4_2015492g.jpg.pagespeed.ic.g_coyQ

(அலைகள் தழுவும்...)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6236100.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

துடிப்பான தனுஷ்கோடியைத் தெரியுமா?

 

dhanush_2017911g.jpg

 

காலங்காலமாகத் தமிழ்க் கடலோடிகளுக்கு வணிகத்தில் முக்கியமான கேந்திரம் கொழும்பு. தவிர, கலாச்சாரரீதியாகவும் நம் கடலோர மக்களின் வாழ்வில் கொழும்பு பிணைந்திருந்தது. ஒருமுறை எழுத்தாளர் ஜோ டி குரூஸிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களின் நெருக்கத்தை நமக்கு உணர்த்தும்: "அன்றைக்கெல்லாம் ஊரில் ஒரு பிள்ளை நல்ல சட்டை போட்டிருந் தால், அது கொழும்பு சட்டையாக இருக்கும். நல்ல மிட்டாய் சாப்பிட்டால், அது கொழும்பு மிட்டாயாக இருக்கும். கடற்கரையில் அதுவரைக்கும் பார்த்திராத ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தால், அதுவும்கூட கொழும்பு வண்ணத்துப்பூச்சியாக இருக்குமோ என்று பேசிக்கொள்வோம்."

இலங்கையுடனான இந்த உறவில் ஏனைய பகுதியினரை விடவும் கூடுதல் நெருக்கம் தனுஷ்கோடி தீவுக்காரர்களுக்கு இருந்தது. பல ஆண்டுகளாகவே தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே படகுகள் வாயிலாகச் சரக்குப் போக்கு வரத்து நடந்துவந்தது. மலையகத் தொழிலாளர்களும் தமிழ்நாடு வந்துபோக இந்தத் தடத்தைப் பயன்படுத்திவந்தனர்.

தனுஷ்கோடி ஈர்த்த பெரும் கூட்டம்

இந்துக்களிடம் காசிக்கு எப்படி ஒரு மரியாதை உண்டோ, அப்படி ஒரு மரியாதை, அந்தக் காலந்தொட்டு தனுஷ்கோடிக் கும் உண்டு. சீதையை மீட்க இலங்கைக்குக் செல்ல கடலில் வானரங்கள் கட்டியதாகச் சொல்லப்படும் 'ராமர் பாலம்' தொடங்குமிடம் தனுஷ்கோடி. இந்தப் பாலக் கட்டுமானப் பணியை ராமர் தன்னுடைய வில்லால் தொட்டு அடையாளப் படுத்திய முனை என்பதாலேயே தனுஷ்கோடி (வில் - தனுஷ், முனை - கோடி) என்ற பெயர் வந்தது என்றும் கதை உண்டு. எல்லாவற்றுக்கும் மேல் காசியில் நீராடியவர்கள் தனுஷ்கோடியில் நீராடினால்தான் யாத்திரை பூர்த்தி அடையும் என்று நிலவும் நம்பிக்கை பல்லாண்டு காலமாக இங்கு ஆயிரக் கணக்கான யாத்திரிகர்களை ஈர்த்துவருகிறது.

ஆங்கிலேயர்கள் போட்ட திட்டம்

இந்தப் பின்னணியில் 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே சென்னை - தனுஷ்கோடி- தலைமன்னார் - கொழும்பு போக்குவரத்துத் திட்டத்தை யோசித்துக்கொண்டிருந்தார்கள் ஆங்கிலேயர்கள். சர் ஹென்றி கிம்பர் தென் இந்திய ரயில்வே பொறுப்பில் அமர்ந்தபோது, இந்தத் திட்டம் செயலாக்கம் பெற ஆரம்பித்தது. அதாவது, சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை ரயில் பயணம். அங்கிருந்து தலைமன்னாருக்குக் கப்பல் பயணம். அங்கிருந்து கொழும்புக்கு ரயில் பயணம். இதுதான் அந்தப் போக்குவரத்துத் திட்டம்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பாம்பன் பாலம் கட்டப்பட்டது. இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதால், இரு ஊர்கள் நகரங்கள் ஆயின. தனுஷ்கோடியும் தலைமன்னாரும்.

தனுஷ்கோடியின் புது அழகு

இந்தப் பயணத்துக்கெனப் பிரத்யேகமாக 'கர்ஸான்', 'தி எல்ஜின்', 'ஹார்டிஞ்' எனும் மூன்று நீராவிக் கப்பல்கள் கட்டப்பட்டன. 'போட் மெயில்' என்ற ரயில் விடப்பட்டது. 1914 பிப்ரவரி 24-ம் தேதி பயணம் தொடங்கியது. இந்த விரைவு ரயில் தவிர, பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது. மண்டபம் முதல் தனுஷ்கோடி படகுத்துறை வரை.

தனுஷ்கோடியில் இதற்காக உருவாக்கப்பட்ட படகுத்துறை, ரயில் நிலையம், பெரிய அஞ்சல் நிலையம், சுங்கத் துறை அலுவலகம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்ற புதிய கட்டுமானங்கள் அந்த ஊரின் அழகையும் செல்வாக்கையும் இன்னும் மேலே கொண்டுசென்றன.

போட் மெயில் சுவாரசியங்கள்

வெகு சீக்கிரம் சென்னை - தனுஷ்கோடி - தலைமன்னார் - கொழும்பு பயணம் பல்வேறு தரப்பினரையும் ஈர்க்கும் பயணம் ஆகிவிட்டது. காரணம், விசேஷமான சில அனுபவங்கள். சென்னையிலிருந்து ஒரு ரயில் பயணம், அப்புறம் ஒரு கப்பல் பயணம், திரும்பவும் இன்னொரு ரயில் பயணம்… இது மூன்றுக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் எடுத்தால் போதும். 'போட் மெயில்' ரயில் பெட்டிகள் இன்றைக்கு உள்ளதைப் போல அன்றைக்கே உள்ளுக்குள் நடந்து செல்லும் வசதியைப் பெற்றிருந்தன. ரயிலுக்குள்ளேயே ஒரு பெட்டியில் கேன்டீன் இருந்தது. இதேபோல, இந்தப் பயணத்துக்கென வடிவமைக்கப்பட்ட கப்பல்களும் விசேஷ அனுபவங்களைத் தந்தன.

சுமார் 260 அடி நீளமும் 38 அடி அகலமும் கொண்ட இந்த நீராவிக் கப்பல்கள் நல்ல இரும்பால் கட்டப்பட்டவை. கப்பலின் மேற்பகுதியில் மாலுமிகள் பயன்படுத்தும் இடத்தையொட்டி, நடைமேடை. அதில் கூரை வேயப்பட்ட பகுதியில் உட்கார்ந்து பயணிகள் கடலை ரசிக்கலாம். ஐரோப்பியப் பயணிகளுக்கு அவர்கள் கலாச்சாரத்துக்கேற்ற வசதிகளும் இந்தியப் பயணிகளுக்கு நம் கலாச்சாரத்துக்கேற்ற வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மூன்றாவது வகுப்புப் பயணிகளுக்குக்கூடத் திருப்தியான வசதிகள் உண்டு. முக்கியமாக, நம்மாட்கள் ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்ல கப்பலில் தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

என்னே உபசரிப்பு!

இந்த சுவாரசியங்களையெல்லாம் தாண்டி, தனுஷ்கோடி மக்கள் தங்கள் உபசரிப்பால் வெளியூர் மக்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்திருந்தனர். 'ராம விலாஸ்' இட்லி - வக்ரிணி சாம்பாருக்காகவே தனுஷ்கோடி செல்லலாம் என்று சொல்லும் அளவுக்கு அருமையான உணவகங்கள் தனுஷ்கோடியில் தோன்றியிருந்தன.

தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்குச் செல்ல கப்பல் பயணம் ஒன்றே கால் மணி நேரம். ஏற இறங்க எல்லாம் சேர்த்து இரண்டரை மணி நேரம் ஆகும். அதற்குள்ளாகவே பலருக்கு வாந்தி வந்துவிடும். ராம விலாஸ்காரர்கள் என்ன செய்தார்கள் என்றால், வக்ரிணி சாம்பார் என்று ஒரு சாம்பார் வைத்தார்கள். தேங்காய் தவிர்த்த சாம்பார் இது. அதேபோல, இஞ்சி சட்னி. பயணிகளுக்குச் செரிமானத் தொந்தரவு தராத உணவாகத் தர வேண்டும் என்று இப்படிப் பார்த்துப் பார்த்து பக்குவமாகச் செய்த அயிட்டங்களுக்கு ஒரு பெரிய கூட்டமே மயங்கிக்கிடந்தது. ஒருகட்டத்தில் ஐந்தடி அண்டாவில் சாம்பார் வைக்க வேண்டிய சூழல் உருவானதாம். அப்படியும் சாம்பார் போதாமல், அடுத்த அடுப்பில் பருப்பைப் போடுவார்களாம். இதேபோல, அப்போதே பிடித்த மீனைச் சமைத்துத் தந்த அசைவ உணவகங்களும் கொடி கட்டிப் பறந்திருக்கின்றன. அதில் விசேஷம் என்னவென்றால், எண்ணெய் சேர்த்தால், கடல் பயணத்தில் தொந்தரவு வரலாம் என்பதற்காக மீனைப் பொரிக்காமல் சுட்டும் அவித்துப் புட்டுவைத்தும் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் தவிர, சத்திரங்கள் வேறு தனியே வாரி வழங்கியிருக்கின்றன. தஞ்சாவூர் ராஜா சத்திரம் அவற்றில் புகழ்பெற்ற ஒன்று.

ஒரு சாட்சியம்

இப்போது எண்பதுகளில் இருக்கும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளில் ஒருவரான மன்னார்குடி எஸ். ரங்கநாதன், தனுஷ்கோடியின் தீவிர ரசிகர்களில் ஒருவர். சிறுவனாக இருந்த காலத்தில் தொடங்கி போட் மெயிலில் சுற்றியவர். தனுஷ்கோடி பற்றிப் பேச ஆரம்பித்தால், இளமைப் பருவத்தில் சென்னை ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் தன்னுடைய நண்பரும் உறவினருமான எஸ். ரங்கராஜனுடன் கொழும்புக்கு விளையாடச் சென்றபோது அடித்த லூட்டிகளை நினைவுகூர்கிறார். இந்தியா முழுக்கச் சுற்றியிருந்தாலும் தனுஷ்கோடி பயண அனுபவமே தனி என்கிறார். அங்குள்ள மீனவ மக்களின் அன்பு ஒப்பிட முடியாதது என்கிறார். மிகச் சமீபத்தில் தனுஷ்கோடி போய்விட்டு வந்ததாகச் சொல்லும் அவர், அன்றைய நாளுடன் இன்றைய நாளை ஒப்பிட்டுக் கண்ணீர் வடிக்கிறார்.

பொன்விழா ஆண்டில் நடந்த கொடுமை

1964 தனுஷ்கோடி ரயில் நிலையத்துக்கும் படகுத் துறைக்கும் பொன்விழா ஆண்டு. இடைப்பட்ட 50 ஆண்டுகளில் துடிப்பான நகரமாக தனுஷ்கோடியை வளர்த்தெடுத்திருந்தார்கள் அங்குள்ள மீனவ மக்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். பயணிகள் போக்குவரத்தைத் தாண்டி சரக்குப் போக்குவரத்தையும் வளர்த்தெடுத்திருந்தனர் தனுஷ்கோடி கடலோடிகள். இந்திய - இலங்கை உறவுச் சங்கிலி யில் முக்கியமான கண்ணியாக தனுஷ்கோடி உருவெடுத்திருந் தது. இதையெல்லாம் பிப்ரவரியில் நடந்த பொன்விழாவில் விமரிசையாகக் கொண்டாடினார்கள் தனுஷ்கோடிவாசிகள். அடுத்து பத்தே மாதங்கள். அவர்கள் வாழ்வின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் உருக்குலைத்துச் சென்றது கடல்.

சூறையாடிய புயல்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில், 1964 டிசம்பர் 17-ம் தேதி புயல் சின்னம் உருவானது. டிசம்பர் 19-ல் அது புயலாக உருவெடுத்தது. இந்தியக் கடல் பகுதியில் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அப்படியொரு புயல் உருவாவதும் வலுவடைவதும் மிகமிக அபூர்வம் என்கிறார்கள் வானிலையாளர்கள். டிசம்பர் 21 அன்று அப்படியே மேற்காக நகர்ந்த அந்தப் புயல், டிசம்பர் 22 அன்று மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் வவுனியாவைக் கடந்து, அன்றிரவு அப்படியே தனுஷ்கோடிக்குள் புகுந்தது. புயலின் வேகம் அதிகரித்த சூழலில், ஊருக்குள் புகுந்தது கடல். 20 அடி உயரத்துக்கு மேல் அலைகள் எழுந்தன. கன மழை, சூறைக்காற்று, கடல் தாக்குதல். "ஊழித் தாண்டவம்போல இருந்தது" என்று அந்த நாளை நினைவுகூர்கின்றனர் தப்பிப் பிழைத்த தனுஷ்கோடிவாசிகள். ஒட்டுமொத்த ஊரையும் கடல் சூழ்ந்தது. பாதி ஊரைக் கடல் கொண்டுவிட்டது. எச்சங்களும்கூட நிர்மூலமாயின. கடலில் அடித்துச் செல்லப்பட்ட பட்டியலில், அன்றிரவு 11.55 மணிக்கு தனுஷ்கோடி ரயில் நிலையத்தை எட்ட சில நூறு கெஜங்களே மிச்சமிருக்கும்போது புயலில் சிக்கிய பாம்பன் - தனுஷ்கோடி பயணிகள் ரயிலும் அடக்கம்.

உலகுக்குத் தெரியாத மூன்று நாட்கள்

தனுஷ்கோடியில் டிசம்பர் 22 அன்று நடந்த இந்த ஊழித்தாண்டவத்தின் கதை 25-ம் தேதிதான் வெளியுலகுக்குத் தெரியும். மண்டபத்தின் கடல் கண்காணிப்பாளர் அனுப்பிய தகவலில், புயலில் ஊர் சிக்கிக்கொண்டதாகவும் அடித்துச்செல்லப்பட்ட ரயில் இன்ஜினில் ஆறு அங்குலம் மட்டுமே நீருக்கு மேல் தெரிகிறது; அவ்வளவு நீர் சூழ்ந்திருக்கிறது என்றும் தகவல் அனுப்பினார். ராமேஸ்வரம் இந்தப் புயலில் தப்பித்தது என்றாலும், பாம்பன் சிக்கியது. பாம்பன் பாலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அரசுக்குத் தகவல் சென்றதும், கடற்படைக் கப்பல்கள் மீட்புப் பணிக்கு வந்தன. தனுஷ்கோடிக்குள்ளேயே பாலம் அமைந்திருந்த மேட்டுப் பகுதியை நோக்கிச் சென்றவர்கள் மட்டும் உயிரைக் கையில் பிடித்துத் தத்தளித்துக்கொண்டிருந்தனர். ஊரைவிட்டு வெளியேற முயன்றவர்களும் அடித்துச்செல்லப்பட்டிருந்தனர். மிஞ்சியவர்கள் மீட்கப்பட்டு, மண்டபம் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மரணங்கள் எத்தனை?

தனுஷ்கோடி அழிவுகள் தொடர்பாக நம் அரசிடம் சரியான கணக்குகள் கிடையாது. உதாரணமாக, உயிரிழந்த ரயில் பயணிகள் என்று அரசு தரும் எண்ணிக்கை 115. அதாவது, 110 பயணிகள், 5 ஊழியர்கள். அன்றைக்குப் பயணத்தில் டிக்கெட் எடுத்தவர்களின் எண்ணிக்கையை வைத்துச் சொல்லப்படும் எண்ணிக்கை இது. வெளியூர்க்காரர்கள் மட்டுமே இரவு ரயிலில் டிக்கெட் எடுக்கும் வழக்கம் அன்றைக்கு தனுஷ்கோடியில் இருந்திருக்கிறது. உள்ளூர்க்காரர்கள் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் ரயிலில் தினமும் வருவார்கள் என்று சொல்கிறார்கள். உயிரிழந்த உள்ளூர் மக்களின் எண்ணிக்கை என்று அரசு சொல்லும் கணக்கும் இப்படித்தான்.

1961 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தனுஷ் கோடியின் மக்கள்தொகை 3,197. இதைத் தவிர, தனுஷ் கோடியை நம்பிப் பிழைத்த சுற்றுப்புற ஊர் மீனவ மக்கள் உண்டு. நாட்டுப்புறப் பாடல்கள் சொல்லும் தரவுகள்படி, புயலில் சிக்கிய மக்கள் எண்ணிக்கை 'ஐயாயிரம் ஜனத்துக்கு மேல்' இருக்கலாம். பக்தவச்சலம் அரசு மிகச் சொற்ப எண்ணிக்கையோடு தன் கணக்கை முடித்துக்கொண்டது. விரைவில், 'வாழத் தகுதியற்ற ஊர்' என்றும் அறிவித்தது. அரசாலும் ஊடகங்களாலும் வெகுவிரைவில் தனுஷ்கோடி 'பேய் நகரம்' ஆனது. வரலாற்றின் புத்தகங்களிலிருந்து தனுஷ்கோடி எனும் உயிர்ப்பான ஒரு பக்கம் கிழித்து வீசப்பட்டது.

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article6240832.ece?homepage=true&theme=true

07_2017896g.jpg

போட் மெயில் எக்ஸ்பிரஸ்.

 

09_2017894g.jpg

புயலுக்குப் பின் ரயில் இன்ஜினின் எச்சம்.

 

10_2017893g.jpg

புயலின்போது கடும் சேதத்தைச் சந்தித்த பாம்பன் பாலம்.

11_2017892g.jpg

டெல்லி மெட்ரோ புகழ் ஸ்ரீதரன் தலைமையில் அன்றைக்கு மேற்கொள்ளப்பட்ட பால மறுகட்டமைப்புப் பணி.

12_2017891g.jpg

பாம்பன் பால மறுகட்டமைப்புப் பணியைத் தம் வீட்டு வேலைபோல, ரயில்வே ஊழியர்களுடன் பகிர்ந்துகொண்ட பாம்பன் பகுதி மீனவர்கள்.

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6240814.ece?homepage=true&ref=slideshow#im-image-0

Link to comment
Share on other sites

 

'நீர்… நிலம்… வனம்!' தொடரை ஒன்றுக்குப் பத்து தடவை படித்து மகிழ்ந்தேன். சமீப காலத்தில் இவ்வளவு சுவாரசியமான, பயனுள்ள தொடரைப் படித்ததே இல்லை என்று சொல்லலாம். ஒரு புனைகதையைப் படிப்பதுபோல் உள்ளது. நீலத் திமிங்கிலம்பற்றி கட்டுரையாளர் எழுதியிருப்பவை எல்லாமே ஒரு நாவலின் அத்தியாயம்.

சமகாலப் புனைவெழுத்து (தமிழில்) எனக்கு ரசிக்கவே இல்லை; பத்து பக்கத்துக்கு மேல் படிக்கவே முடியவில்லை என்று தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், பத்திரிகைகளில் நண்பர்கள் அதைக் கட்டுரைகளாக எழுதிவிடுகிறார்கள்... இதெல்லாம்தான் இன்றைய சமூகத்தின் கதைகள்.

சாரு நிவேதிதா, எழுத்தாளர், சென்னை.

 

Link to comment
Share on other sites

மக்களின் ஆவணம் வரலாறு இல்லையா?

 

527xNxd2_2021993g.jpg.pagespeed.ic.fPPCD

பொறியாளர் ஸ்ரீதரன் (வலது).

 

Nx400xramachandran_2022322g.jpg.pagespee

பி.ராமச்சந்திரன்

 

 

 

உயிரோட்டமான தனுஷ்கோடி அழிந்த அத்தியாயத்தை வாசித்த ஏராளமான வாசகர்கள் கேட்ட கேள்வி: “இப்படி ஒரு பேரழிவைப் பற்றி நமக்கு ஏன் முழுமையாகத் தெரியவில்லை? இந்தச் செய்திகளெல்லாம் ஏன் நம்முடைய பாடப் புத்தகங்களில் இல்லை?”

நம்முடைய பெரும்பாலான வரலாறுகள் களத்தில் அல்ல; தலைநகரங்களில் சௌகரியமான இடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன என்பது ஒரு காரணம். அரசின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பதிவுகளைத் தொகுப்பவர்கள், மக்களிடம் உள்ள பதிவுகளைச் சீந்துவதே இல்லை என்பது ஒரு காரணம். பதிவுசெய்யப்படாத எவ்வளவு பெரிய உண்மையும் வரலாறு ஆவதில்லை என்பது முக்கியமான காரணம்.

ஓர் உதாரணம்

தனுஷ்கோடியை மூழ்கடித்த புயலின்போது, பாம்பன் பாலமும் உருக்குலைந்தது. ரயில்வே நிர்வாகம் 6 மாதக் கெடு தந்து, பாலத்தைச் சீரமைக்க ஒரு அணியை இறக்கியது. வெறும் 46 நாட்களில் இந்தப் பணிகளை முடித்தார் பொறியாளர் ஸ்ரீதரன். இது வரலாறு. ஸ்ரீதரனின் பணி கொண்டாடப்பட வேண்டியது என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், அந்தப் பணி அவ்வளவு சீக்கிரம் முடிவதற்கு முக்கியப் பங்காற்றியவர்கள் சுற்றுவட்டார மீனவ மக்கள். தங்கள் சொந்த வீட்டு வேலையாகப் பாலத்தின் கட்டுமான வேலையில் பங்கேற்றவர்கள் அவர்கள். இன்றைக்கு அவர்களுடைய பங்களிப்பு, மறக்கப்பட்ட கதை. காரணம் என்ன? முந்தைய பத்தியைப் படியுங்கள்.

நாட்டுப்புறப் பாடல்களில் வரலாறு

தனுஷ்கோடி மீனவ மக்களிடம் ஒரு மரபுண்டு. கரை வலை இழுக்கும்போது பாட்டுப் பாடுவது. அவர்கள் வாழ்வைச் சீரழித்த புயலுக்கு இந்தப் பாடல்களில் முக்கிய இடம் உண்டு. அந்தப் பாடல்கள் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் வாயிலாக நாட்டுப்புறங்களில் ஊர்ஊராகப் பரவியிருக்கிறது. அதன் தாக்கத்தில் வெளியூர்க்காரர்களும் புயல்பாட்டு பாடி யிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று செ. போத்தி ரெட்டியின் ‘தனுக்கோடி நாட்டுப்புறப் புயற்பாடல்கள்' புத்தகத்தில் காணக்கிடைத்தது. கடலோரத்தில் ஊர்ஊராக அலைந்து, மக்களிடம் பேசி நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்திருக்கிறார் போத்தி ரெட்டி.

இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் வேம்பார் பாக்கியம் எனும் பனைத் தொழிலாளி. புயல் அடித்த தேதியில் தொடங்கி, பார்வையிட வந்த எம்ஜிஆர் முதலானவர்களைத் தொட்டு, பாட்டெழுதியவர் பெயர் வரை சொல்லும் இந்தப் பாடல், நம்முடைய நாட்டுப்புறப் பாடல்கள் எந்த அளவுக்குப் புறக்கணிக்க முடியாத மக்கள் ஆவணம் என்பதற்கு ஒரு சான்று.

தனுஸ்கோடி நாட்டுப்புறப் புயல் பாடல்

தனுஸ்கோடி பாம்பன் முதல்

தயங்காத இராமேஸ்வரம்

அநியாயப் புயலடித்து

அழிந்த கொடுமை பாடுகிறேன்

அமைதியாகக் கேளும்

இந்தக் கதையை எந்த நாளும்

*

கண்டோர் நடுநடுங்க

காற்றுமழை புயலடிக்க

மண்டலத்தில் இக்கதையை

மனத்தெளிவாகப் பாடுகிறேன்

மக்களைப் போல நினைத்து

சபை மன்னிக்கணும் பிழைபொறுத்து (தனுஸ்கோடி)

*

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து

அறுபத்து நாலாம் ஆண்டில்

வாய்மையுள்ள டிசம்பர் மாதம்

வளருந்தேதி இருபத்திரெண்டில்

அடித்ததே புயற்காற்று

பாம்பன் தனுஸ்கோடியைப் பாத்து (தனுஸ்கோடி)

*

ஐயாயிரம் ஜனத்துக்குமேல்

ஆணும் பெண்ணும் அவதிப்பட்டார்

பேய்மழையும் காற்றினாலே

பேதலித்து உயிரைவிட்டார்

ஐயோ துயரமாச்சே

சில ஊரழிந்து போச்சே (தனுஸ்கோடி)

*

மாலை எட்டு மணிக்கு மேலே

மதிப்படங்கா சாமத்திலே

வேலை சோலிதான் முடித்து

வீற்றிருக்கும் வேளையிலே

வருகுதையா ரயிலு

வண்டியைப் புரட்டுதையா

வடகடலும் தென்கடலும்

மண் மோதித் தான் கிளம்பி

தொடர்பாகச் சந்தித்துமே

சூறாவளிப் போல் கொதித்து

வண்டியைத் தூக்கி அடிக்க

மக்கள் மருவி மருவித்துடிக்க (தனுஸ்கோடி)

*

ஐந்நூறு ஜனத்துக்கு மேல்

ஆணும் பெண்ணும் ரயிலில் வர

கால்கள்தான் முறிந்து

கடலோடு போகுதய்யா

ஐயோ பரிதாபம்

இது யாருபோட்ட சாபம் (தனுஸ்கோடி)

*

தனுஸ்கோடி ஊர்களெல்லாம்

தலைக்கு மேலே தண்ணீர் வர

துணியுடைகள் இல்லாமலே

தொங்குதய்யா வீட்டின் மேலே

மதில் இடிந்து சாய

மக்கள் தண்ணீரில் குதித்துப்பாய (தனுஸ்கோடி)

*

ஐயையோ மனைவி மக்கள்

அநியாயமாய்ப் போகுதென்று

மெய்சோர்ந்து மன்னவனும்

மெதுவாக இழுக்கும்போது

குடும்பத்தோட புரட்டி வெள்ளம்

கொண்டு போகுதே சுருட்டி (தனுஸ்கோடி)

*

வள்ளங்களும் விலாஞ்சிகளும்

வளைக்கச் சென்ற தோணிகளும்

வெள்ளத்திலே அடியும்பட்டு

பள்ளத்திலே இழுக்குது பார்

ஐயோ மக்கள் அலற

அடிபட்டுக் குடலும் சிதற (தனுஸ்கோடி)

*

வெள்ளரிப்பழம் போல

வெடித்துப்பிணம் மிதக்குதைய்யா

அள்ளிக்கொண்டு புதைப்பதற்கு

ஆளுதவி கிடையாமல்

அலையடித்து ஒதுக்க

நாய்நரி கடித்து இழுக்க (தனுஸ்கோடி)

*

இராமேஸ்வரம் ஊர்களிலே

தெருக்களெல்லாம் தண்ணீர் ஓட

பூமான்கள் கோவிலெல்லாம்

புரட்டித்தூக்கி அடிக்குது பார்

ஐயோ மக்கள் வாட

அடுத்த திட்டில் ஏறி ஓட (தனுஸ்கோடி)

*

சித்தம் புகழ் நடிகரவர்

ஜெமினி கணேசன் சாவித்திரி

அத்த ராத்திரி வேளையிலே

அமைந்தாரே கோவிலுக்குள்

ஆயாசப்பட்டார்

நடிகர் அழுதும் கண்ணீர் விட்டார் (தனுஸ்கோடி)

*

உடுப்பதற்கோ உடையுமில்லை

உண்பதற்கோ உணவுமில்லை

படுப்பதற்கோ பாயுமில்லை

பறக்குதுபார் வெள்ளத்திலே

பார்க்க பார்க்க துக்கம்

பார்த்துப் போனாலுமே ஏக்கம் (தனுஸ்கோடி)

*

கக்கன்ஜி நெடுஞ்செழியன்

காமாராஜர் அண்ணாதுரை

முக்கியமாய் எம்ஜியார்

பாம்பன் செய்தி கேட்டார்

பாங்காகவே புறப்பட்டார் (தனுஸ்கோடி)

*

ஏரோப்பிளேன் மீதேறி

எல்லோருக்குமாய் சோறுகட்டி

வாறார்கள் தனுஸ்கோடி

வந்துபார்த்தார் இராமேஸ்வரம்

சோர்ந்து கண்ணீர் விட்டார்

சோற்றுமூட்டை தூக்கிப்போட்டார் (தனுஸ்கோடி)

சோறு சோறு சோறு என்று

சுழலுதய்யா மக்களெல்லாம்

ஆரு சோறு போட்டாலும்

அரை வயிறு நிறையுதில்லே

நைந்தோடுது சோறு

மண்ணில் புரட்டித் தின்பதைப்பாரு (தனுஸ்கோடி)

*

சண்டாளப் புயலடித்து

தனஉயிரும் வீடும் போச்சே

கண்டு கவர்மெண்டாரும்

கனகோடி நிதி கொடுத்தார்

காமராஜரைத் தேடு

வேம்பார் பாக்கியம் கவிபாடு!

(மக்களின் பாடல் அவர்கள் வார்த்தையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.)

*

“புயல் தெரியலீயே… ரயிலை அனுப்பிட்டேனே!”

தனுஷ்கோடி புயல் மனரீதியாக அடித்துப் போட்டவர்களில் பி. ராமச் சந்திரன் முக்கியமானவர். புயலில் அடித்துச் செல்லப் பட்ட பயணிகள் ரயிலை அனுப்பிவைத்தவர். அப்போதைய, ராமேசுவரம் ரயில் நிலையத்தின் நிலைய அதிகாரி. அங்குள்ள மீனவ மக்களோடு மிக நெருக்கமான உறவைப் பராமரித்த ராமச்சந்திரனை ராமேசுவரத்தைவிட்டு மாற்றக் கூடாது என்று மனு மீது மனு போட்டு 9 ஆண்டுகள் அந்த ஊரிலேயே தக்கவைத்திருக்கின்றனர் உள்ளூர் மக்கள். ராமச்சந்திரனுக்கு இப்போது 93 வயதாகிறது. தனுஷ்கோடி புயலைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும், ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதவர் கண்ணீரின் இடையே பேசினார்.

 

புயல் நாளை நினைவிருக்கிறதா? அதை எப்படி மறக்க முடியும்?

இப்படிப் புயலடிக்கும்னு இந்தப் பாவிக்கு யாரும் சொல்லலீயே… புயல் தெரியலீயே... ரயிலை அனுப்பிட்டேனே… (அழுகிறார்)

 

ஆனால், பாம்பனுக்குத்தானே நீங்கள் ரயிலை அனுப்பினீர்கள்?

ஆமா, பாம்பனுக்கு நான் அனுப்பிச்சேன். அங்கேயிருந்து தனுஷ்கோடிக்கு பாம்பன் ஸ்டேஷன் மாஸ்டர் அனுப்பிச்சார். யாருக்குமே புயல் இப்படிச் சுருட்டும்னு தெரியலையே… (அழுகிறார்)

 

அப்போது சம்பவ இடத்துக்குப் போனீர்களா?

அதிகாரிகளோட படகுல போனேன். எங்கே பார்த்தாலும் மனுச ஒடம்பு மிதக்குது. ஐயோ, கொடுமை, கொடுமை… (மீண்டும் அழுகிறார்)

 

சரி, நாம் அதை விட்டுவிடலாம்... பாம்பன் பால மறுகட்டமைப்பில் மீனவ மக்கள் பங்களிப்பைச் சொல்ல முடியுமா?

(கண்களைத் துடைத்துக்கொண்டு…) அவா ஒத்தாசை இல்லேன்னா நடக்குற கதையா அது! உள்ளூர் மீனவா மட்டும் இல்லை; வெளியூர் மீனவாவும் வந்தா. மாப்ளாஸ் வந்தா. எல்லாருமா ஓடி ஓடி ஒழைச்சுதான் பாலத்தைத் திரும்ப தூக்கி நிறுத்தினா.

 

கடலோர மக்களிடையே நீண்ட நாட்கள் வேலை செய்திருக்கிறீர்கள். அவர்களுடனான உங்கள் உறவைச் சொல்லுங்களேன்…

ரொம்ப நல்ல மனுஷா. நான் தஞ்சாவூர் ஜில்லாக்காரன். ஊரை மறந்துட்டு அவாளோடேயே இருந்துடலாமானு நெனைச்சுருக்கேன். அவ்ளோ நல்ல மனுஷா.

அவாளுக்கு நான் ஸ்டேசன் மாஸ்டர் மட்டும் இல்லை. மனு எழுதிக் கொடுக்குறவன், கடுதாசி படிச்சுக் காட்டறவன், பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துல சேர்க்க யோஜனை சொல்லுறவன்… கூடையோடு மீனைத் தூக்கிட்டு வந்துட்டு, ‘சாமி… உங்களுக்குக் கொடுக்க எங்களுக்கு இங்கே மீனைத் தவிர என்ன இருக்கு? மீன் சாப்பிடாதவராப் போயீட்டீங்களே'ன்னு வருத்தத்தோடு போவா. அவாள விட்டு வந்துட்டேனேயொழிய இன்னும் எம் மனசுல அவா அப்படியே இருக்கா!

 

- சமஸ்

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/article6247891.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

கடலும் உயிரும்!

dhanuscodi+water2.jpg

 

 

dhanushkodi++water+1.jpg

ஒரு கி.மீ. தூரம் நடந்து வந்து ஊற்றில் தண்ணீர் எடுக்கும் தனுஷ்கோடி பெண்கள்.

படம்: எஸ்.முகம்மது ராஃபி.

“ஆடைக்கும் கோடைக்கும் காத்துக்கும் மழைக்கும் இங்கேதான்... இன்னும் எத்தனை புயல் வந்தாலும் சரி; பூகம்பம் வந்தாலும் சரி; செத்தாலும் இங்க கிடந்து சாவோமே தவிர, எங்க கடலை விட்டு விலக மாட்டோம்...”

- தனுஷ்கோடியில் கேட்ட இந்த வார்த்தைகள்தான் ‘நீர், நிலம், வனம்' தொடரின் மிக முக்கியமான வார்த்தைகள் என்று சொல்லலாம். இன்னமும் கடலோடும் வயலோடும் வனத்தோடும் ஒட்டி வாழும் நம்முடைய ஆதி சமூகங்களைப் பற்றி நாம் புரிந்துகொள்வதற்கான அடிப்படையும்கூட இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது என்றும் சொல்லலாம்.

ஒரு வாழ்க்கையை வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பது வேறு. அதற்கு உள்ளிருந்து வாழ்ந்து பார்ப்பது வேறு. இந்த வேறுபாடு தனுஷ்கோடியில் கொஞ்சம் வாழ்ந்து பார்த்த தற்கும் அங்குள்ள கடலோடிகளிடம் பேசிப் பார்த்ததற்கும் பின்புதான் புரிபட ஆரம்பித்தது.

தனுஷ்கோடியில் வாழ்தல்

தனுஷ்கோடி வாழ்க்கைக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் ஒன்று இருக்கிறது. இன்னமும் அழிந்துவிடாத ஒரு பாரம்பரிய மீனவக் கிராம வாழ்க்கைக்கான உதாரணம் அது.

ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்குச் செல்லும் பாதையை ஜீப்புகள் வழியாகத்தான் கடக்க வேண்டியிருக் கின்றன என்று எழுதியிருந்தேன் அல்லவா? இப்படி ஜீப்பு களிலோ, வேன்களிலோ தனுஷ்கோடிக்குச் செல்வதும் கூட வருடத்தில் எட்டு மாதங்களுக்கு மட்டுமே சாத்தியம். புரட்டாசி தொடங்கிவிட்டால், அடுத்த நான்கு மாதங்களுக்கு இப்படி ஜீப்புகளில் செல்லும் பாதையையும் கடல் சூழ்ந்து விடுகிறது. திரும்ப, தைக்குப் பின்தான் கடல் உள்வாங்கி, பாதை தெரிகிறது.

அப்படியென்றால், எப்படி வெளியுலகோடு தொடர்புகொள் கிறார்கள்? ஒரு அமயஞ்சமயம் என்றால், எங்கே செல் கிறார்கள்? எப்படிச் செல்கிறார்கள்?

தொட்டது தொண்ணூறுக்கும் ராமேசுவரமே கதி. கடல் வழியே பயணிக்கிறார்கள். படகுகளில் செல்கிறார்கள். 24 கடல் மைல் தூரத்தை நாட்டுப்படகில் கடக்க ஒன்றரை மணி நேரம் ஆகுமாம். தொழில் சார்ந்து ராமேசுவரத்துக்குப் படகை எடுத்துக்கொண்டு செல்பவர்கள் மற்றவர்களுக்குத் தேவைப்படும் சாமான்களையும் வாங்கிக்கொண்டு வரு கிறார்கள். மற்றபடி, கூடுமானவரை ஊர் சார்ந்த வாழ்க்கை முறை. உதாரணமாக, சமையலில் வெளியூர் சார்ந்த காய்கறி

களின் பயன்பாடு குறைவு. ஒன்று மீன் சாப்பாடு அல்லது உள்ளூரில் கிடைக்கும் கீரைச் சாப்பாடு. சரி, கடலோடிகளுக்கு டீ அவசியம் வேண்டுமே... பாலுக்கு என்ன செய்கிறார்கள்? டீக்கடை இருக்கிறது. அமுல் பால் மாவில் அருமையாக டீ போடுகிறார் முனியசாமி.

வாழ்வு இனிது

தனுஷ்கோடியில் பெரும்பாலான மீனவர்களின் தொழில் கரை வலை போடுவது அல்லது வள்ளங்களில் சென்று கரைக் கடலுக்குள் மீன் பிடிப்பது. அதாவது, கரையையொட்டி நடக்கும் பிழைப்பு. அதிகாலைக்கு மீன் பிடிக்கச் சென்றால், ஐந்தாறு மணி நேரத்தில் வீடு திரும்பிவிடுகிறார்கள். கரை வலை இழுக்கும்போது கைகள் நைந்துபோகும் அளவுக்கு வலி தரும். நூறோ, இருநூறோ வருமானம். ஆனால், அது போதும் என்று நினைக்கிறார்கள். வீடு திரும்பியதும் பழைய கஞ்சி. குடித்துவிட்டுச் சாய்ந்தால், கடல் காற்றில் கொஞ்சம் அசதி தீரும். சாயங்காலமாக முனியசாமி டீக்கடையில் ஒரு டீ. கூடவே, ஊர்நடப்புப் பேச்சு. இருட்ட ஆரம்பித்ததும் வீடு திரும்பினால், காலையில் பிடித்துவந்த மீன்களில் வீட்டுக்காகக் கொஞ்சம் எடுத்துவைத்த கறிமீன் குழம்பும் சுடுசோறும். மனைவி மக்களுடன் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்

கொண்டே சாப்பாடு. இப்படிச் சாப்பிட்டு முடித்த பின் இருட்டில், கடற்கரையில் விளையாடும் பிள்ளைகளைப் பார்த்துக்

கொண்டும், மனைவியோடு பேசிக்கொண்டும் கழியும் நிமிஷங்கள்தான் இந்தக் கடலோடிகளின் வாழ்வின் ஒரே சொர்க்கம். மின்சாரம் இல்லாத ஊரில், கடிகாரத்துக்குத்தான் என்ன பெரிய தேவை? சூரியன் மறைந்த சில மணி நேரங்களில் தனுஷ்கோடியைத் தூக்கம் போர்த்திக்கொள்கிறது.

இதைக்கூட நம்மால் தர முடியாதா?

இவ்வளவு எளிமையாக வாழ்க்கையை அமைத்துக் கொண்ட தனுஷ்கோடி மக்கள் அரசாங்கத்திடம் எதிர் பார்ப்பது ரொம்பக் குறைவு. வெட்கக்கேடு! மாபெரும் இந்திய வல்லரசிடம் ஒரு குடிதண்ணீர்க் குழாயை எதிர்பார்க் கிறார்கள். ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று, ஊற்றுத் தண்ணீரைக் கொஞ்சம்கொஞ்சமாக மொண்டு, குடம் நிரப்பிக் கொண்டுவரும் தண்ணீர் இன்றைய சூழலில், முன்புபோல் சுத்தமாக இல்லை. ஒரேயொரு குடிநீர்க் குழாய் வேண்டும் என்று கேட்கிறார்கள். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணொருவர், ஒன்றரை ஆள் உயரம் இருக்கும் படகில், கயிற்றுச் சுருக்கில் கால்வைத்து ஏறும் காட்சியைச் சகித்துக்கொள்ள முடிகிறதா? ராமேசுவரத்துக்குப் போகும் வழியில் படகிலேயே பல பிரசவங்கள் நடந்திருக்கும் சூழலில், ஆபத்து சமயங்களை எதிர்கொள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்று கேட்கிறார்கள். தனுஷ்கோடியில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. அரசாங்கம் பெயருக்கு நடத்தும் நடுநிலைப் பள்ளி. முன்பு அரிதாக வந்த ஒரு நல்லாசிரியை இந்தப் பள்ளிக்கூடத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். பிள்ளைகள் நன்றாகப் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர் இங்கிருந்து சென்றதும் மீண்டும் பள்ளிக்கூடம் நொண்டியடிக்க ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆசிரியர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. வந்துபோகவே வசதி இல்லை என்றால்? “எங்களுக்கு பஸ் விடாட்டினாலும் பரவாயில்லை; வெளியிலேர்ந்து வாத்திமாருங்க வந்து போகவாவது எதாவது ஒரு ஜீப்பு வசதி பண்ணனும்” என்று கோருகிறார்கள். காலங்காலமாக இதற்காகவெல்லாம் மனு மீது மனு போட்டுக்கொண்டிருக்கிறோம் என்கிறார் ஊர்த் தலைவர் மாரி. இவற்றையெல்லாம் நிறைவேற்றகூட பிரதமர் மோடியோ, முதல்வர் ஜெயலலிதாவோதான் வர வேண்டுமா? ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாராலும், சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ்வாலும் முடியாதா?

தொழில் கற்றால் கல்யாணம்

உள்ளூரில் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவைக்க வழியில்லாததால் பெரும்பாலான பிள்ளைகளைத் தொழிலுக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆண் பிள்ளைகள் என்றால், கடல் தொழில், பெண் பிள்ளைகள் என்றால், கரைத் தொழில். பெரும்பாலான பிள்ளைகளுக்குத் தொழில் கற்றுக்கொண்ட உடனேயே காதல் வந்துவிடுகிறது. “பெத்தவங்களைக் கூப்பிடுவோம். புடிச்சவரைக்கும் சரி, போனவரைக்கும் சரின்னு சொல்லி கோயில்ல வெச்சுப் பேசி, கல்யாணத்தை முடிச்சுடுவோம். எதுவும் கொறையா இல்ல; நல்லாதான் இருக்குதுவோ” என்கிறார்கள்.

மரணத்தின் அருகே ஏன் வாழ்கிறார்கள்?

இறையுமண்துறையில், வீடுகளுக்குப் பின்னே கொந்தளிக்கும் கடலைப் பார்த்தபோது இந்தக் கேள்வி எழுந்தது: எந்த நேரத்திலும் வாரிச் சுருட்டலாம் என்றாலும், கடலோடிகள் ஏன் கடல் அருகிலேயே வாழ்கிறார்கள்?

திரும்பத் திரும்பக் குடைந்தெடுத்த இந்தக் கேள்விக்கான பதில் தனுஷ்கோடியில் கிடைத்தது என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அந்தப் பதில் இதுதான். “ஆடைக்கும் கோடைக் கும் காத்து மழைக்கும் இங்கேதான்... இன்னும் எத்தனை புயல் வந்தாலும் சரி; செத்தாலும் இங்க கிடந்து சாவோமே தவிர, எங்க மண்ணை விட்டு அகல மாட்டோம்... ஏன்னா, நீங்க பாக்குற கடல் வேற. நாங்க பார்க்குற கடல் வேற.''

எனக்கு முதலில் பெரிய அதிர்ச்சியாக இருந்தது, ஒரு மீனவப் பெரியவர் சொன்ன இந்தப் பதில். இறையுமண் துறையிலாவது கடலின் ஆவேசம் ஒரு மிரட்டலைப் போலதான் இருக்கிறது. தனுஷ்கோடியிலோ கடல் சூறையாடிக்

காட்டியிருக்கிறது. ஊருக்குச் செல்ல சாலைகள் இல்லை; பஸ்கள் இல்லை; ஊருக்குள்ளோ குடிநீர்க் குழாய்கள் இல்லை; மின்சாரம் இல்லை... என்ன தந்துகொண்டிருக்கிறது இந்த ஊர்? அதுவும், அரசாங்கம் தந்த மாற்று ஊரை விடவும், இரு பக்கமும் கடல் சூழ்ந்திருக்கும் இந்த ஊரில் அப்படி என்ன இருக்கிறது என்று தோன்றுகிறது.

அந்த மீனவப் பெரியவர் என்னைத் தீர்க்கமாகப் பார்த்த வாறு, விளக்க ஆரம்பித்தார். “ஐயா நான் சில கேள்விகளைக் கேக்குறேன். நீங்க பதில் சொல்லுங்க. நாங்க ஏன் கடலை ஒட்டிக் கெடக்கோம்னு உங்களுக்குப் புரிஞ்சுடும்...”

“சரி கேளுங்க...”

“உங்க ஊர்லேர்ந்து தனுஷ்கோடிக்கு வரும்போது எப்படி வந்தீங்க?”

“ராமேசுவரம் வரைக்கும் ரயில்ல வந்து, அங்கிருந்து முச்சத்திரம் வரைக்கும் பஸ்ஸுல வந்து, அங்கிருந்து ஜீப்புல வந்தேன்...”

“ரயில்ல வரையில நிறைய வயலைப் பார்த்தீங்களா?”

“ஆமா... வழி நெடுகப் பார்த்தேன்...”

“நீங்க ரயிலேர்ந்து பார்த்தப்போ ஒண்ணுபோல அந்த வயலெல்லாம் தெரிஞ்சாலும், அது அத்தனையும் ஒரே வயலு இல்ல. ஒவ்வொண்ணும் ஒரு வகை. ஒவ்வொண்ணும் பலருக்குச் சொந்தம் இல்லையா?”

“ஆமாங்க...”

“அதேபோலத்தான்யா இந்தக் கடலும்... உங்களுக்கு வெளியில நின்னு பார்க்குறப்ப எல்லாம் ஒண்ணா தெரிஞ் சாலும் இதிலேயும் பல வகை இருக்கு. இதுலேயும் பலருக்குப் பங்கு இருக்கு. ஒரு ஊருக்குப் பாத்தியப்பட்ட கடலுல நாம நுழையக் கூடாது. அதே மாதிரி நமக்குப் பாத்தியப்பட்ட கடலு நம்ம சொத்து...”

அவர் தொடர்ந்தார்:

“ஒரு விவசாயிக்கு நெலம் எப்படியோ, அப்படித்தான் கடலோடிக்குக் கடலும். எவ்வளவோ பாம்புக, வெட்டு வாக்கிளிய கெடக்குது நெலத்துல. ஒரு விவசாயியால நெலத்தை விலகி இருக்க முடியுதா? முடியாது. ஏன்னா, அவனோட பொழப்பு அங்கேதான் கிடக்கு. அப்படி ஒரு கடலோடியோடு பொழப்பு கடல்லதானே கெடக்கு? சர்க்கார் ஆபிஸுக்கு மணியடிச்சா போயிட்டுவர்ற மாரி பொழப்பு இல்லீங்க மீன் புடிக்கிறது. காலையிலேர்ந்து வலை போட்டுப் போட்டு பார்ப்போம், ஒரு மச்சம்கூட சிக்காது. ஒடம்பும் மனுசும் அசந்து வீட்டுல வந்து சாய்வோம். ‘கரவலைக்கு மீன் வந்துருக்கு'னு கரையில விளையாண்டுக்கிட்டிருக்குற புள்ளைய ஓடியாந்து சொல்லும்... வலையைத் தூக்கிக்கிட்டு ஓடுவோம். நடுராத்திரி இல்ல; உச்சிப் பகல் இல்ல; குறி தெரிஞ்சா ஓடுவோம். அப்பதான் பொழப்பு. கடலைவுட்டு விலகி எப்படிங்கய்யா ஓடியாற முடியும்?”

பெரியவர் தொடர்ந்தார்:

“இந்தக் கடலுதான் எங்க சொத்து. பாட்டனும் பூட்டனும் வுட்டுட்டுபோன சொத்து. எங்கம்மா. இந்தக் கடலுதான் எங்க சாமி. உசுருய்யா இது...”

கடலோரம் நடந்துகொண்டிருந்த அந்த மீனவக் கிழவர் என் கண்ணுக்கு முன்னாலேயே, அப்படியே கடலடியில் அமர்ந்து அலையை வாரிக்கொண்டார். கடல், அலையாக அல்ல, ஒரு தாயாக அவரைத் தழுவிக்கொண்டதை நான் பார்த்தேன்; சத்தியமாகப் பார்த்தேன்.

(அலைகள் தழுவும்...)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6256331.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல் பற்றிய பகிர்தலுக்கு நன்றி ஆதவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசைத் தாலாட்டும் அலைகள்தான் , எப்பவாவது மரணத்தையும் வள்ளலாய் வழங்கி விடுகின்றது...!

 

தொடருங்கள் ஆதவன்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல் பற்றிய பகிர்தலுக்கு நன்றி

தொடருங்கள் ஆதவன்

Link to comment
Share on other sites

கட்டுமரக்காரர் எனும் சாகசக்காரர்!

 

xnewPic_398_jpg_2028314h.jpg.pagespeed.i

 

 

kattumaram_.jpg

 

 

 
இந்த உலகையே சூழ்ந்திருக்கும் கடலை, ஒரு மரத் துண்டைக் கொண்டு கையாள முடியுமா? முதன்முதலில் கட்டுமரத்தை அத்தனை நெருக்கமாகப் பார்த்தபோதும், அதில் ஏறியபோதும் ஆச்சரியமாக இருந்தது. நான்கு மரத் துண்டுகள் இணைத்துக் கட்டப்பட்ட ஒரு கலம். எவ்வளவு எளிமையான ஒரு கருவி இது. மீனவர்கள் வேகவேகமாகத் தொளுவை (துடுப்பு) போட்டபோதும், கரையிலிருந்து நீரில் தளும்பித் தளும்பி முன்னேறியபோதும்கூட, கட்டுமரத்தை ஒரு மிதவைக் கலனாக மட்டுமே நினைத்திருந்தேன். அலைகள் மீது ஏறி, கொஞ்சம் கொஞ்சமாகக் கடலுக்குள் நுழைந்தபோதுதான் தெரிந்தது, கட்டுமரம் என்பது மிதவைக் கலன் மட்டும் அல்ல; காற்றின் கலன். ஒரு கட்டுமரத்தின் இயக்கம் எளிமையானது மட்டும் அல்ல; நுட்பமானது!
 
மீன் பிடிப்பவர் எல்லோரும் மீனவரா?
 
இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில், கடலில் செல்லும் எல்லா மீன்பிடிக் கலங்களையும் படகு என்ற ஒரு சொல்லால் அழைப்பது எப்படித் தவறு என்பதும் கட்டுமரம், வள்ளம், இயந்திரப் படகு, விசைப்படகு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதும் படங்களுடன் விளக்கப்பட்டிருந்தன. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் எல்லோரையும் மீனவர் என்று அழைப்பதும்கூட அப்படியானதுதான்.
 
ஒரு கட்டுமர மீனவரை ஒருபோதும் வள்ளம், இயந்திரப் படகு, விசைப்படகு ஆகியவற்றில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களோடு ஒப்பிட முடியாது. கடினமான உழைப்பையும் பாரம்பரியத் தொழில் அறிவையும் கோருவது கட்டுமர மீன் தொழில். அடிக்கும் காற்று, நீரோட்டத்தில் தொடங்கி கடல் நீரில் தென்படும் மாற்றங்கள், வானில் தெரியும் நட்சத்திரங்கள் வரை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தங்களை வைத்திருப்பவர்கள் கட்டுமர மீனவர்கள். ஒரு கட்டுமர மீனவர் நடுக்கடல் சென்று திரும்புவது உண்மையில் பெரிய சாகசம். ஆனால், அதை அனாயாசமாகச் செய்பவர்கள் அவர்கள். அதேசமயம், தன்னுடைய தேவைக்கு மேல் ஆசைப்படாதவர்கள். இன்றைக்கு இவர்களுடைய எண்ணிக்கை அருகிக்கொண்டிருக்கிறது என்பதும் இயந்திரப் படகுகளிலோ, விசைப்படகுகளிலோ செல்லும் மீனவர்கள் தங்கள் பாரம்பரியத் தொழில் அறிவை இழந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும்தான் துயரம்.
 
ஒரு கட்டுமரத்தின் கதை
 
நாம் ஒரே வார்த்தையில் கட்டுமரம் என்று அடக்கப் பார்த்தாலும், கட்டுமரங்களில், ஒருவர் செல்லும் மரமான ஒத்தனாமரத்தில் தொடங்கி ஏராளமான வகைகள் உண்டு. ஒத்தனாமரமேகூட சென்னையில் ஒரு மாதிரி இருக்கிறது; கோவளத்தில் ஒரு மாதிரி இருக்கிறது. நெத்திலி மீன்பிடியில் தொடங்கி சுறா வேட்டை வரை எல்லா வகையான மீன்பிடிக்கும் பொருத்தமான துணைவன் என்பதுதான் கட்டுமரத்தின் மிகப் பெரிய சிறப்பம்சம்.
 
ஒரு கட்டுமரத்தின் முன்பகுதியைக் காட்டி, “இதான் அணியம்” என ஆரம்பித்து, அடைப்பலகை, ஆலாத்தி, நடுக்கெட்டி, வாரிக்கல், தலைவடம், தொரம், தாமான், பாய், மறுக்கு, கத்து, பருமல் என்று ஒவ்வொன்றாகச் சொல்லி, “இது பின்தலை” என்று கட்டுமரத்தின் பின்பகுதியைச் சுட்டிக்
 
காட்டினார் மீனவர் அந்தோணி. எனக்குத் தலைசுற்றியது.
 
“நெனப்புல இருக்குமா?” என்று சிரித்தார்.
 
“வாய்ப்பே இல்லை. கட்டுமரத்தோட முன்பகுதிக்குப் பேர் அணியம், பின்பகுதிக்குப் பேர் பின்தலை. அவ்வளவுதான் ஞாபகம் இருக்கு...” என்றேன்.
 
“இந்தப் பேருங்க ஒவ்வொண்ணுக்கும் பின்னாடி ஒவ்வொரு தேவை இருக்கு. கட்டுமரத்தைக் கையாளணும்னா, கடலோடிங்க ஒரே எடத்துல உட்கார்ந்து தொளுவ போட முடியாது. காத்தோட தன்மைக்கும் நீரோட்டத்தோட தன்மைக்கும் ஏத்தமாரிதான் கட்டுமரம் ஓடும். ஒரு கடலோடி எப்பவும் காத்தோடையும் நீரோட்டத்தோடையும் போராடணும். மேல மழை கொட்டினா, அதோடவும் சேர்ந்து போராடணும்... “ என்றவர் தன்னுடைய மரத்தை வாஞ்சையுடன் பார்க்கலானார். “இந்த மரம் எங்க ஐயா போட்டது. எங்க வகையறால எங்க ஐயாதான் மொத மொதல்ல மரம் போட்டாரு. முன்னலாம் ஒரு கட்டுமரம் போடுறது சாதாரணமில்ல. காலங்காலமா கூலிக்கு மத்தவங்க மரத்துக்குப் போய்ட்டிருந்த எங்க மக்கள்ல, ஐயா ரொம்ப சிரமப்பட்டு இந்த மரத்தைப் போட்டார்.”
 
“ஏன் கட்டுமரம் விலை ரொம்ப அதிகமோ?”
 
“அப்படியில்லீங்க. எங்க ஐயா இந்த மரத்தை வாங்கும்போது பத்தாயிரம் ரூவா. ஆனா, பத்துக்கும் இருவதுக்கும் பொழப்பு ஓடிக்கிட்டுருக்கையில, அந்தக் காசு பெரிய காசில்ல? அப்புறம், மரம் போடுற காசு மட்டும் இல்ல. மரத்துல கூட ஓடுற ஆளுகளுக்கும் முன்காசு கொடுக்கணும். ஆபத்துசம்பந்து பார்க்கணும். அந்த வசதியெல்லாம் வேற வேணும். வசதிவாய்ப்பு இல்லாதவங்க அண்ணன் தம்பிய உடன் பொறந்திருந்தாலாவது சமாளிக்கலாம். எங்க ஐயாவுக்கு அந்த வழியும் இல்ல. தனியா ஓடியே ரொம்பக் காலம் சமாளிச்சார்...”
 
“எந்த மரத்துல இதைச் செய்வாங்க?”
 
“அல்பீஸானு ஒரு மரம். கேரளத்துலேர்ந்து வாங்கியாருவம்...”
 
“கட்டுமர முதலாளிக்கு என்ன கிடைக்கும்?”
 
“அய்யோ, கட்டுமரத் தொழில்ல இந்தத் தொழிலாளி - மொதலாளிங்குற வார்த்தையெல்லாம் கிடையாதுங்க. எல்லாமே உறவுக்காரங்க மாரிதான். மூணு பேரு போறோம்னு வைச்சுக்குங்க. கெடைக்குற வருமானத்தை நாலு பங்கா போடுவோம். மூணு பேருக்கும் மூணு சரி பங்கு. கூடுதல் ஒரு பங்கு மரம், வலை வெச்சுருக்குறவருக்கு. அவ்ளோதான். காசு பெரிய விசயம் இல்லீங்க. மரம் இருந்தா மனசுக்குப் பெரிய பலம்.
 
ஐயா சொல்லுவாரு, ‘ஒரு கடலோடிக்கு எது போனாலும் கட்டுமரம் தொணை. வலையே போனாலும் தூண்டில் போட்டுக்கலாம். கட்டுமரத்தை வுட்டுடக் கூடாது'ன்னு. ஒருவகையில இவுங்க நமக்கு அண்ணன் மாதிரி. ஐயா சொல்லுவாரு, ‘உனக்கு முன்னாடி வந்தவருடோய்'னு. அப்ப அண்ணன் மாரிதானே? இன்னைக்கு நாம வள்ளம் வாங்கியாச்சு. ஆனா, ஐயா நெனைப்பா கட்டுமரத்தை அப்படியே வெச்சிருக்கம். வள்ளத்துல போனாக்கூட கடல்ல எறங்கும்போது, ஜெபம் பண்ணா மனசுல வர்றது இந்த மரம்தான். மாதாவே...”
 
அந்தோணியை ஆமோதிப்பதுபோல், அடிக்கும் அலைநீர் அவர்மீது படாமல் அலை மீது ஏறி இறங்கி, தம்பியைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறது அந்த அண்ணன்!.
 
(அலைகள் தழுவும்...)
 
-சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
 
Link to comment
Share on other sites

காற்றில் எத்தனை காற்று?

 

xnewPic_6697_jpg_2029599h.jpg.pagespeed.

 

கோவளம் சென்றிருந்தபோது, ரெமிஜியூஸைச் சந்தித்தேன். ரொம்பவும் வெள்ளந்தியான மனிதர்.

 
கோவளத்தில் அன்றைக்குக் கடலடி அதிகமாக இருந்ததால், யாரும் கடலுக்குப் போகவில்லை. அதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான் கடலடியில் ரெமிஜியூஸின் வள்ளம் சிக்கியிருந்தது. மனிதருக்குக் காலில் பலத்த அடி. ஊமைக்காயம். கடலுக்குப் போகக் கூடாது என்று சொல்லி, வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருந்திருக்கிறார் மருத்துவர். அப்படியும் மனிதருக்குக் கடலைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கடற்கரையை விட்டுக் கொஞ்ச தூரத்தில் இருக்கும் வீட்டிலிருந்து விந்திவிந்தி நடந்து கடற்கரைக்கு வந்துவிட்டார். அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், நெடுநாள் நண்பர்போல ஆகியிருந்தார். ஒருகாலத்தில் தொளுவைப் போட்டியில் முதலிடம் வந்து பரிசு வாங்கியிருக்கிறார். காலில் அடிபட்டது அவர் மனதைப் பெரிய அளவில் உலுக்கியிருந்தது.
 
“சின்ன வயசுலேர்ந்து நல்லா தொளுவப் போடுவன். நமக்குத் தொழில்ல கள்ளத்தனம் வராது. அதனால, தேடிக் கூப்பிட்டுப் போவாங்க. ஓடியோடித்தான் உழைச்சன். ராத்திரி ரெண்டு மணிக்குக் கடலுக்குப் போனோம்னா, காலையில எட்டு மணிக்குள்ள திரும்பிரணும். அப்பதான் சந்தையில மீனைச் சேர்க்க முடியும். அப்படி ஓடி வந்துட்டு, பகலுக்கு மேல திரும்ப ஒரு ஓட்டம் ஓடி, பொழுது சாயுறதுக்குள்ள திரும்புவன். ஒடம்பு களைச்சு செத்துக் கதறும். அப்படியெல்லாம் ஓடியும் ஒண்ணும் பெரிசா சம்பாதிக்க வழியில்ல. நூறுக்கும் இருநூறுக்கும் சந்தோஷப்பட்டுக்கிட்டதுதாம் மிச்சம். வயசு அறுபத்தியஞ்சி தாண்டிடுச்சு. இந்த வயசுலயா அடிபடணும்? கடவுளே... இனி இந்தக் காலைச் சுமந்துகிட்டு, எப்படிப் பொழைப்பேன்னு தெரியலை” என்கிறார். சில நிமிஷங்கள் தன் காலையே பார்த்துக்கொண்டிருந்தவர், “நல்ல மருந்து எதாவது இருந்தா சொல்லுங்க...” என்கிறார் உரிமையாக.
 
ஒரு கடலோடி கடைசிக் காலம் வரை ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் அல்லது வாரிசுகளை நம்பிப் பிழைக்க வேண்டும் என்பது நம் சமூகத்தின் எழுதப்படாத விதிகளில் ஒன்று. வாரிசுகள் வசதியாக இருந்தால் பிரச்சினை இல்லை; அவர்களே தங்கள் பிழைப்புக்குப் போராடிக்கொண்டிருந்தால், என்ன செய்வது?
 
“எந்த ஆஸ்பத்திரியில் காட்டுகிறீர்கள்?” என்றேன்.
 
“தர்மாஸ்பத்திரிதான்... ஊசி போடுறாங்க, அன்னைக்கு மட்டும் வலி தாங்குது, பொழுது சாஞ்சு விடிஞ்சா வலி வந்துடுது. கடலுக்குப் போவலைன்னா, சோத்துக்கே பிரச்சினைதான். இதுல மருந்து வாங்க எங்க போறது?” என்று வானத்தைப் பார்த்தவர், திடீரெனப் பதற்றமாகி, “ஐயா, நல்லா மழை பெய்யுது... வாங்க ஒதுங்கிடலாம்...” என்கிறார்.
 
எனக்குத் திகைப்பாகிப்போனது. மழை பெய்யவில்லை. நான் சுற்றும்முற்றும் பார்த்தேன். மழை இல்லை. “மழை பெய்யலீயே... தவிர இவ்வளவு காத்து அடிக்கும்போது மழை பெய்யுமா என்ன?” என்றேன்.
 
“அய்யே... என்ன இப்படிப் பேசுறீங்க? அந்தோ பாருங்க, என்ன மழை பெய்யுதுன்னு... வாங்க சீக்கிரம் ஒதுங்கிடலாம்” என்று மேற்குத் திசையை நோக்கிக் காட்டிவிட்டு, என் பதிலுக்காக எதிர்பார்க்காமல் என் கையைப் பிடித்து இழுத்தவாறே நடக்க ஆரம்பித்தார். நான் மறுக்க முடியாமல் கரையையொட்டி இருந்த மேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அங்குள்ள ஒரு கட்டிடத்தில் இருவரும் ஒதுங்கினோம். மேட்டிலிருந்து கடலையும் வானத்தையும் பார்த்துக்கொண்டிருந்தோம்.
 
“இப்ப பாருங்க... மழை நல்லாத் தெரியுது” என்றார்.
 
அவர் சுட்டிய திசையைப் பார்த்தேன். “எனக்கு ஒன்றும் தெரியலையே...” என்று சொல்லி முடித்திருக்கவில்லை. அந்த அதிசயத்தை நான் பார்த்தேன். கண்ணுக்கு முன், மேற்கிலிருந்து கொட்டிக்கொண்டே வந்து, எங்களைத் தாண்டி, நிலத்தை நனைத்துக்கொண்டே கடந்தது பெருமழை.
 
“இப்போ தெரியுதா?” என்றார் சிரித்துக்கொண்டே.
 
எனக்கு ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.
 
“எப்படிங்கய்யா, உங்களுக்கு அவ்வளவு தொலைவுல மழை பெஞ்சுக்கிட்டுருந்தது தெரிஞ்சுது?”
 
“ஐயா, என் கண்ணு ரெண்டும் வலுவிழந்த கண்ணுங்க பாருங்க. உங்க அளவுக்கெல்லாம் கண்ணு தெரியாது. ஆனா, காத்து தெரியும். காத்தோட வாடை தெரியும். வானத்தைப் பார்க்க முடியும்” என்றார்.
 
ஒரு கடலோடி பள்ளிக்கூடத்தின் பக்கமே போகாதவராக இருந்தாலும், கொஞ்சம் நீரியல் நுட்பங்களும் கொஞ்சம் வானியல் நுட்பங்களும் அவரை அறியாமலேயே அவருக்குள் வந்துவிடுகின்றன. தொழில், கற்றுக்கொடுத்துவிடுகிறது.
 
“காத்தை எப்பிடிங்கய்யா பிரிப்பீங்க?”
 
“காத்துல பல வகை உண்டு. பெரும் வகை எட்டு. நேர்வாடைக் காத்து, நேர்சோளக் காத்து, நேர்கச்சான் காத்து, நேர்கொண்டல் காத்து, வாடைக்கச்சான் காத்து, வாடைக்கொண்டல் காத்து, சோளக்கச்சான் காத்து, சோளக்கொண்டல் காத்து.”
 
“ஒண்ணும் புரியலீங்களே?”
 
“அதாவது, இப்படி வெச்சுக்குங்க. வடக்குலேர்ந்து தெற்கே அடிக்குறது நேர்வாடை. தெற்குலேர்ந்து வடக்க அடிக்குறது நேர்சோளம். கிழக்குலேர்ந்து மேற்கே அடிக்குறது நேர்கொண்டல். மேற்குலேர்ந்து கிழக்கே அடிக்குறது நேர்கச்சான்.
 
இதேபோல, வடகிழக்குலேர்ந்து தென்மேற்குல அடிக்குறது வாடைக்கொண்டல். தென்மேற்குலேர்ந்து வடகிழக்குக்கு அடிக்குறது சோளக்கொண்டல். வடமேற்குலேர்ந்து தென்கிழக்குக்கு அடிக்குறது வாடைக்கச்சான். தென்கிழக்குலேர்ந்து வடமேற்குக்கு அடிக்குறது சோளக்கச்சான்.
 
இந்த ஒவ்வொரு காத்துக்கும் ஒரு குணம் இருக்கும். காத்துக்கேத்த மாரி நீரோட்டம் மாறும். மீன்பாடும் மாறும்.”
 
கண்கொட்டாமல் அவரைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார்.
 
“இது பொதுக்கணக்கு. இன்னும் அந்தந்த ஊருல, அவங்கவங்களுக்குப் புரியுற மாரி உப்பங்காத்து, ஊளக்காத்து, கோடைக்காத்துன்னுல்லாமும் காத்தைப் பிரிப்பாங்க. காத்தைப் புரிஞ்சுக்காம கடல்ல கால் வெச்சவன், வாக்கரிசியைக் கையிலேயே எடுத்துக்கிட்டுப் போவணும்பாங்க பெரியவங்க” என்கிறவர், வெளியே கவனித்தவராக, “ஐயா மழ நிக்கப்போவுது. நீங்க சீக்கிரம் கெளம்புங்க... இன்னைக்கு இருட்டுல நல்ல மழ இருக்கு” என்கிறார். என்ன மறுத்தும் கேட்காமல், வண்டி வரை வந்து வழியனுப்புபவர் “ஊர்ல நல்ல மருந்தா கேட்டு எழுதியனுப்பணும், கேட்டியலா?” என்கிறார்.
 
குமரி வந்ததுமே வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு வெகு சீக்கிரமாக இருட்டத் தொடங்கியது. ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். சரியான மழை அடிக்கக் தொடங்கியது.
 
(அலைகள் தழுவும்)
 
-சமஸ், 
 
Link to comment
Share on other sites

நீவாடுகளுடன் ஒரு ஆட்டம்!

 

xaattam_2031613h.jpg.pagespeed.ic.bNm5bW

 

கடல் நீரோட்டம் என்பது எவ்வளவு பெரிய சக்தி, அதைப் புரிந்துவைத்திருப்பது எவ்வளவு பெரிய அறிவியல் என்பதை தோமையர் மூலமாக அறிந்துகொண்டேன். குமரியில் கடலில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி நடந்துகொண்டிருந்தபோது, நான் தோமையரைச் சந்தித்தேன். கடலில் மீனவர்கள் இப்படித் தவறும்போது, அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில், நம்முடைய கடலோரப் பாதுகாப்புப் படையினர் முழு அக்கறையோடு ஈடுபடுவதில்லை என்று குற்றம்சாட்டினார் தோமையர்.

“பேரு என்னவோ மீட்புப் பணின்னு பேரு. நடத்துறது என்னவோ நாடகம். குமரியில ஒருத்தன் வுழுந்தா பாகிஸ்தான் கடக்கரை வரைக்கும் தேடணும். அதான் அசலான அக்கறை. நீவாடுன்னா சும்மா இல்ல பாத்தியளா...” என்றார்.

நான் கேட்டேன்: “ஐயா, ஒருத்தரை எங்கே தவற விட்டோமோ, அந்தப் பகுதியைச் சுத்திதானே தேடணும்? தவிர, தமிழ்நாட்டுல தவறின ஒருத்தரை பாகிஸ்தான் கடற்கரையில ஏன் தேடணும்?”

“தம்பி... நெலத்துல ஒருத்தரைத் தவற விட்டோம்னா, அந்தப் பகுதியைச் சுத்தித் தேடறது முறையா இருக்கலாம். இது கடல்லோ? மனுஷன் பொழைச்சுக் கெடந்தா, இங்கேயே சுத்துப்பட்ட எதாவது கரையில ஏறியிருக்கலாம். இல்லேன்னா, சவத்தைக் கடல் கரையில தள்ளியிரும். கடலம்மா தேவையில்லாத எதையும் உள்ளே வெச்சுக்க மாட்டா, பாத்தியளா...

இதுவரைக்கும் நூத்தியம்பது பக்கம் பேரு குமரி மாவட்டக் கடக்கரையில மட்டும் காணாமப்போயிருக்கான். ஊர்க்காரங்க தேடயில, சுத்துப்பட்டு கடலைச் சலிச்சுடுவாங்க. பெறகும், வருஷக் கணக்கா சவம் கூடக் கெடைக்கலையின்னா, என்ன அர்த்தம்? நாம தேடுற மொறை சரியில்லேன்னுதானே அர்த்தம்? நீவாடு தெரியாதவன் மீனவனில்லே. இந்தக் கடல் பாதுகாப்புப் படையில எத்தனை பேருக்கு நீவாடு தெரியும்? நீங்க கடல் பாதுகாப்புப் படையில, ஒவ்வொரு எடத்துலேயும் பாதிக்குப் பாதி மீனவனைப் போடச் சொல்லுங்கங்கிறேன். பெறவு, ஒரு மீனவன் இங்கே காணாமப் போக மாட்டான்.”

“ஐயா, நீங்க எப்படி நீவாடு பார்ப்பீங்க? எனக்குக் கொஞ்சம் காட்டுவீங்களா?”

“இது என்ன பெரிய சாதனை? இருங்க, உங்க கண்ணுக்கு எதுக்க நீவாடைக் காட்டுறேன்” என்றவர், படகை வேகமாகச் செலுத்தலானார். குறிப்பிட்ட ஒரு பகுதியை நெருங்கியதும் படகின் இன்ஜினை அணைத்தார். ஆச்சரியம்! நீரோட்டத்தின் போக்குக்கேற்ப படகு தானே ஓட ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் பேய் பிடித்தாற்போல அது வேகம் எடுத்தபோது, பதறிப் போனேன். தோமையர் இன்ஜினை முடுக்கிவிட்டு, படகின் போக்கை மாற்றலானார்.

“அந்தக் காலத்துலயே நம்மாளு நீவாடை நாலு விதமா பிரிச்சு வெச்சுருக்கான், பாத்தியளா... அரநீவாடு, கரைக்கணைச்ச நீவாடு, சோநீவாடு, வாநீவாடு. அதாவது, கரையிலேர்ந்து ஆழ்கடல் ஓடுற நீவாடு, அரநீவாடு. ஆழ்கடல்லேர்ந்து கரைக்கு ஓடுற நீவாடு, கரைக்கணைச்ச நீவாடு. மேற்குலேர்ந்து கிழக்கே ஓடுற நீவாடு, சோநீவாடு. கிழக்குலேர்ந்து மேற்கே ஓடுற நீழ்வாடு, வாநீவாடு.

ஒரு கடலோடி இந்த நீவாடை வகை பிரிச்சுப் பாக்கத் தெரிஞ்சுவெச்சிருக்கிறது ரொம்ப முக்கியம். அப்பம்தான் எந்த நீவாட்டுக்கு எந்த மீன் அகப்படும்னு தெரியும். எந்த நீவாட்டுல போனா, சீக்கிரம் போய்ச் சேரலாமுனு தெரியும். இந்த வள்ளம்னு இல்லை, எவ்வளவு பெரிய கப்பலாயிட்டு இருந்தாலும் சரி; நீவாட்டுல ஓட்டினா, சுளுவா ஓடும். எரிபொருளும் மிச்சம், நேரமும் மிச்சம். நீவாடோட சேர்த்து, காத்தும் சுழட்டுச்சு, எந்தக் கப்பலையும் சுழட்டிச் சொருகிரும் பார்த்துக்கங்க” என்றார்.

அன்றிரவு விடுதிக்குத் திரும்பியதும் நீரோட்டத்தைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தேன்.

கடலின் உந்துசக்தி

பெரியவர் சொன்னதைப் போல, கடல் நீரோட்டத்தை அறிந்துகொள்வது என்பது எவ்வளவு பெரிய அறிவியல் என்பது அதைப் பற்றித் தேடத் தேடத் தெரிந்தது. கடல் பயணங்களுக்கு மட்டும் அல்ல; கடலின் உயிரியக்கத்துக்கே மிகப் பெரிய உந்துசக்தி நீரோட்டம்!

ஒரு திசையை நோக்கிய தொடர்ச்சியான கடல்நீர் இயக்கத்தையே நீரோட்டம் என்று சொல்கிறோம் (நம் கடலோடிகள் மொழியில் நீவாடு). விஞ்ஞானிகள் நீரோட்டத்தைப் பல வகைகளாகப் பிரிக்கிறார்கள். நம்மவர்கள் நான்கு வகைகளுக்குள் அதை அடக்குகிறார்கள்.

இந்த நீரோட்டங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இயல்பைப் பெற்றிருப்ப தாகச் சொல்கிறார்கள். உதாரணமாக, மேற்கு நோக்கிய கடல் நீரோட்டங்கள் அனைத்தும் விரைவானவை, ஆழமானவை, மிகக் குறுகிய பரப்பிலானவை, ஏராளமான நீரைக் கொண்டுசெல்பவை. இவற்றுக்கு நேர் எதிரானவை கிழக்கு நோக்கிய நீரோட்டங்கள். இவை குளிர்ந்த நீரை பூமியின் மத்தியப் பகுதிக்குக் கொண்டுசேர்ப்பவை. ஆழம் குறைவானவை, அகலமானவை. சில வேளைகளில் இந்த நீரோட்டம் ஆயிரம் கி.மீ. பரப்புக்குக்கூட விரிந்து செல்லுமாம்.

கடலில் நீரோட்டம் உருவாகப் பல காரணங்கள். காற்று, புவியடுக்கில் ஏற்படும் சலனங்கள், பூமியின் சுழற்சியால் ஏற்படும் அசைவுகள், கடல் நீரின் அடர்த்தியிலும் வெப்பநிலையிலும் ஏற்படும் மாறுபாடுகள், சூரியன் - சந்திரன் போன்றவற்றின் ஈர்ப்புசக்தியால் கடல்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை இந்தக் காரணங்களில் முக்கியமானவை.

பல்லாயிரம் மைல் பயணம்

கடலுக்குள் ஆயிரக் கணக்கான மைல்கள் நீண்டு பாய்ந்து செல்லக் கூடியவை இந்த நீரோட்டங்கள். கடலுக்குள் ஒரு ஆறுபோல, ஒரு கன்வேயர் பெல்ட்போலச் சுழன்று கடல்வாழ் தாவரங்களையும் ஏனைய உயிரினங்களையும் கனிம வளங்களையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு சேர்ப்பதில் நீரோட்டங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. சில வகை மீன்கள் பல்லாயிரம் மைல் வலசை செல்கின்றன அல்லவா, அதுவெல்லாம் நீரோட்டத்தின் உதவியாலேயே சாத்தியமாகிறது.

தவிர, ஆழ்கடலில் வாழும் உயிரினங்களையும் சில வகைக் கடல் தாவரங்களையும் இந்த நீரோட்டங்கள்தான் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுசென்று, கடலின் உற்பத்திக் கேந்திரத்தை உயிர்ப்போடு வைக் கின்றன. உலகின் பல இடங்களில் கடலின் தட்பவெப்ப நிலையை மாற்றுவதிலும் நீரோட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்கிறார்கள். கடலின் தட்பவெப்ப நிலையை மாற்றுவதில் மட்டுமல்ல, நிலத்தின் தட்பவெப்ப நிலையை மாற்றுவதிலும் நீரோட்டங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

தோமையர் சொன்ன வார்த்தைகளைக் கடலுக்குள் மீனவர்கள் காணாமல்போகும் சூழலோடு பொருத்திப் பார்த்தேன். “நீவாடோட சேர்த்து, காத்தும் சுழட்டுச்சு, எந்தக் கப்பலையும் சுழட்டிச் சொருகிரும் பாத்துக்கங்க...”

ஒரு பெருங்கப்பலே ஈடுகொடுக்க முடியாத மாபெரும் சக்தியின் முன் சாதாரணமான கட்டுமர மீனவர் எம்மாத்திரம்? ஒரு சாண் வயிற்றை நிரப்பத்தான் எத்தனையெத்தனை சக்திகளுடன் ஒரு கடலோடி போராட வேண்டியிருக்கிறது? எத்தனையெத்தனை வித்தைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது?

(அலைகள் தழுவும்...)

- சமஸ், 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6266418.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

ஆறுனபாட்டன் என் பாட்டன்!

 

kadal_2033893h.jpg

 

வாள்முனிக்கு, இப்படி அவருடைய முழுப் பெயரையும் குறிப்பிட்டு எழுதியிருப்பது தெரிந்துபோனால், என்னைச் சபித்துப்போடுவார். கையில் கிடைத்தால் அடிக்கவும் செய்யலாம். “கும்புடுற சாமி பேரை முழுசா சொல்லுவாகளா? சாமி கோச்சுகிட்டா என்னா செய்யுறதாம்? மனுசம்னா ஒரு பணிவு, மரியாதி இருக்க வேண்டாமா?” என்பார்.

 

முனி முதல் அஜித் வரை

அந்தக் காலத்தில் பெரும்பாலான கடலோடிகளுக்கு அவரவர் வணங்கும் தெய்வங்களின் பெயர்களே பெயர்கள். வாள்முனி, கபாலி, அஞ்சாப்புலி, உமையா, குமரி, மாரியம்மா... இந்தப் பெயர்களை முழுவதுமாகக் குறிப்பிட்டு அழைப்பதைக் கடவுளுக்குச் செய்யும் அவமரியாதையாக நினைக்கிறார்கள். முனீஸ்வரன் என்றால் முனி என்றும், மாரியம்மா என்றால் மாரி என்றும் அழைப்பது மரபு.

கடலோரச் சமூகத்துடன் வாணிபத்துக்கு வந்த அரேபியர்கள் மண உறவு கொண்டபோது, தமிழகக் கடல்புறத்தில் மதமாற்றத்தோடு, இஸ்லாமியப் பெயர்கள் அறிமுகமாயின. எனினும், ஏனைய பகுதிகளைப் போல, கடலோர முஸ்லிம்கள் சமூகம் தங்கள் முழு அடையாளத்தையும் மாற்றிக்கொள்ள வில்லை. தாங்கள் கடலோடிகள் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள பெயர்களிலும் இன அடையாளத்தைக் கலந்தார்கள். உதாரணமாக, கடலோரத்தில் உள்ள முஹம்மதுவுக்குத் திருமணமானால், அவர் பெயர் முஹம்மது மரைக்காயர். அதேபோல், கதீஜாவுக்குத் திருமணமானால், அவர் பெயர் கதீஜா நாச்சியார்.

கடலோரத்தில் கிறிஸ்தவ மதம் வேரூன்றிய பின், கிறிஸ்தவப் பெயர்கள் உலவ ஆரம்பித்தன. அதேசமயம், கடலோர மொழிக்கேற்ப இந்தப் பெயர்கள் மருவின. ஜோசப் சூசையப்பர் ஆனார். பாரடைஸ் பரதேசி ஆனார். ரோஸ்லின் ரோஸம்மா ஆனார்.

எம்ஜிஆர் வருகைக்குப் பின் இந்த எல்லாப் பெயர்களையும் தாண்டி நம்முடைய சினிமாக்காரர்கள் கடல்புறத்தில் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டார்கள். கோதண்டராமர்கோவில் சென்றிருந்தபோது சந்தித்த ஓர் இளைஞரின் பெயர் அஜித் குமார். வயது எத்தனை என்று கேட்டேன். பதினேழு என்றார். அறிமுகமான சில ஆண்டுகளிலேயே அஜித் கடலோர மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.

 

மாறாத நம்பிக்கைகள்

இப்படியெல்லாம் கடவுளர்கள், மதங்கள், கலாச்சாரங்கள் மாறினாலும், தமிழகக் கடலோடிகளிடையே அடிப்படையான சில மரபுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மட்டும் அப்படியே நீடிக்கின்றன. இந்த நம்பிக்கைகளை முழுமையாக நம்பிக்கை என்ற வார்த்தைக்குள் மட்டுமே அடக்கிவிட முடியாது. சில விஷயங்கள் வானியலோடு பிணைந்திருக்கின்றன; சில விஷயங்கள் நீரியலோடு பிணைந்திருக்கின்றன; சில விஷயங்கள் பருவநிலையோடு பிணைந்திருக்கின்றன.

 

கடலில் ஒரு ராத்தங்கல்

கடலில் ஒரு ராத்தங்கலுக்குப் பெரியவர் வாள்முனியுடன் போனபோது, இந்த விஷயங்களையெல்லாம் புட்டுப்புட்டுவைத்தார். வாள்முனி அருமையான ஒரு கதைசொல்லி.

“பத்து வயசுலே எங்கய்யாகூட கடலுக்குப் போனேன். எத்தனை வயசுல போனேன்?”

“பத்து வயசுலே போனீங்க...”

“ஆமா, அப்போ மொத மொத ராத்தங்கலுக்கு அழைச்சுக்கிட்டுப் போனப்போ, பசி வவுத்தைக் கிள்ளுது. ஐயாகிட்டே மெதுவா வாயைக் கொடுக்குறேன். ‘சோத்துப்புட்டியில சோறு இருக்கு. ஆனா, நாழி ஆகலை. சோத்துவெள்ளி கூப்புடும். பொறுமையா இரு’ன்னுட்டார். வெள்ளின்னா என்னன்னு தெரியுமா?”

“தெரியலீங்களே...”

“நீங்க நட்சத்திரம்பீங்களே... அதைத்தான் நாங்க வெள்ளிம்போம். அப்பவெல்லாம் ஏது கடியாரம்? வானம்தான் கடியாரம். சூரியனும் சந்திரனும் வெள்ளியளும்தான் குறிசொல்லிய. எங்க வுட்டேன்? ஆங்... ஐயா அப்புடிச் சொல்லவும் நான் காத்துக்கெடக்கேன் வானத்தைப் பார்த்துக்கிட்டு. எப்போடா வரும் சோத்துவெள்ளின்னுட்டு.

ஏகப்பட்ட வெள்ளிய இருக்குவ. எந்த வெள்ளிடா சோத்துவெள்ளின்னு வானத்த ஆன்னு பாத்துக்கிட்டிருக்கன். ஐயா காமிச்சாரு சோத்துவெள்ளிய. அப்படித்தான் சோத்துவெள்ளியைக் கண்டேன். கடலோடிங்க இருட்டுல சோத்து நேரத்தைக் கணிக்க வெச்சுக்குறது சோத்துவெள்ளி. இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கும் ஒரு கணக்கு உண்டு. ஒரு அடையாளம் உண்டு.”

“இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிப்பீங்க?”

“அரும்வெள்ளிங்கிறது குருசு (சிலுவை) மாரி இருக்கும். ரெட்டவெள்ளிங்கிறது ரெண்டுவெள்ளி சேர்ந்தா மாரி இருக்கும். ஆறாம்வெள்ளிங்கிறது ஆறு புள்ளிக் கூட்டம் மாரி இருக்கும். கப்பவெள்ளிங்கிறது கப்பல் மாரி இருக்கும். கூட்டுவெள்ளிங்கிறது கூட்டமா இருக்கும். விடிவெள்ளிங்கிறது விடியுறதுக்கு முன்னே வரும்.

இந்த வெள்ளிங்களுக்குத் தெசைக் கணக்கும் உண்டு. அருந்ததிவெள்ளி நேர் வடக்குல வரும். நடுக்கடல்ல சிக்கிக்கிட்டா, தெசை தெரிஞ்சிகிட அருந்ததியைத் தேடுவம். ஒரு வெள்ளி வானத்துலேர்ந்து மறைஞ்சு ஓடுனா, அறைஓடல். நல்ல குறி இல்ல அது. அன்னைக்கு மரத்தை உடனே கரைக்குத் திருப்பிடுவம். அண்டளிக்க முடியாத காத்து இருக்குன்னு அர்த்தம்.

சூரியனைச் சுத்தி பகல்ல சூரியவட்டம் விழுந்தாலும் அது நல்ல குறி இல்ல. சூறைக்காத்துக்குக் குறி அது. சாயங்காலத்துல சந்திரனைச் சுத்தி சந்திரவட்டம் தெரிஞ்சா நல்ல மழைக்கு குறி அது. சமயத்துல சூறவேடன் (மீன்), கடல்ல அடியாழத்துலேர்ந்து திடீர்னு மேல வரும். வாயை வாயைப் பொளக்கும். அப்படிப் பொளந்தா புயல் வர்றத்துக்கான குறி அது.”

“நடுக்கடல்ல இருக்கும்போது, அப்படிச் சூறைக்காத்து அடிச்சா என்ன பண்ணுவீங்க?”

“ஐயோ, பெருந்துயரமுல்லா? ஒருபக்கம் காத்து தூக்கும். இன்னொரு பக்கம் மாசா தூக்கும். கையில கடத்தண்ணிய அள்ளி கையெடுத்துக் கும்புடுவம். இந்தக் காத்தெல்லாம் யாருங்கிறீங்க? எல்லாம் நம்ம பாட்டன், முப்பாட்டனுங்க. ‘என்னடா பொடியனுங்களா, கண்டும் காணாமப் போறீங்க, எங்களை மறந்துட்டீங்களா’ன்னு நம்மளை ஒரு உருட்டு உருட்டத்தான் அப்படிச் சீறுவாங்க.

நாம ஒரு புடி தண்ணியைக் கையில மொண்டு, ‘ஆறுனபாட்டன் என் பாட்டன் சீர்பாட்டன்’னு சொன்னா, ‘நம்ம பய மக்க விட்டுடு’னு சொல்லி சாந்தமாயிருவாங்க. இந்த அறிவு, தெளிவெல்லாமே அவுங்க போட்ட பிச்சதானே?” என்றவர், கடலில் வலையை இறக்க ஆரம்பித்தார்.

நேரம் ஓடுகிறது. வலையை இறக்கியதும் ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்தார். நேரம் ஓடுகிறது. வலையை இழுக்க ஆரம்பித்தார். உடம்பில் வியர்வை கொட்டுகிறது. ஐந்தாறு சின்ன மீன்கள் மட்டும் சிக்கியிருந்தன. அவற்றை வலையிலிருந்து எடுத்து எடுத்துக் கடலில் தூக்கிப்போட்டார். திரும்ப வலையை இறக்கினார். மீண்டும் ஒரு பீடியைப் பற்றவைத்தார்.

நேரம் ஓடுகிறது. வலையை இழுத்தார். சின்னதும் பெரியதுமாய்ப் பத்துப் பதினைந்து மீன்கள் சிக்கியிருந்தன. கும்பிட்டு மீன்களை வாரிக் கலத்துக்குள் போட்டார். “இன்னைக்குக் கடலம்மா படி அளந்துட்டா. இருநூறுவா கெடைக்கும்... போரும், போவோமா?” என்றார். கரையை நோக்கி தொளுவை போட ஆரம்பிக்கும்போது வானத்தைச் சுட்டிக்காட்டினார். “தோ, தெரியுது பாத்தீங்களா... அதாம் விடிவெள்ளி!”

(அலைகள் தழுவும்...)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/article6269013.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் சுவாரசியமான  பகிர்வுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

எம்ஜிஆரின் உயிரக்காரர்!

 

mgr1_2038580g.jpg

 

mgr2_2038579g.jpg

 

சென்னை சைதாப்பேட்டை. கலைஞர் கருணாநிதி வளைவை நெருங்கும்போதே மீன் வாடை தூக்குகிறது. அங்கிருந்து நூறடி தூரத்தில் இருக்கிறது திருக்காரணீஸ்வரர் மீன் சந்தை. சந்தைக்குள் கால் எடுத்துவைத்து நுழையும் முன்னரே, காதுக்குள் நுழைந்துவிட்டார் டி.எம்.சௌந்தரராஜன்.

‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ, ஆடும் மனதிலே ஆறுதல் காணீரோ, ஆடும் மனதிலே ஆறுதல் காணீரோ...’

வரிசையாக மீன் கடைகள், எதிர்ப்படும் இட்லி தோசை ஆயாக்கள், டீ பையன்களைத் தாண்டி ‘ஆயிரத்தில் ஒருவ’னை நூல் பிடித்துக்கொண்டே சென்றால், ஒரு சின்னக் கடையில் மீன் வெட்டிக்கொண்டிருக்கிறார் கண்ணாடி போட்ட பெரியவர் சேகர்.

“இங்கே எம்ஜிஆருக்கு மீன் அனுப்பியது...”

வாக்கியத்தை முடிப்பதற்குள், “ஆமா, இங்கதான். அதுக்கு இன்னாபா?” என்கிறார்.

அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன்.

சென்னையில் உள்ள கடற்கரைகள், மீன் சந்தைகள் அத்தனையிலும் இவரைத் தேடிக்கொண்டிருந்தேன். விசேஷம் ஒன்றும் இல்லை. அவரிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அந்தக் கதை நான் தேடிக்

கொண்டிருந்த கேள்விக்கான பதிலைத் தரலாம் என்று சொன்னார் ஒரு நண்பர்.

அப்படி என்ன இருக்கிறது எம்ஜிஆரிடம்?

பொதுவாக, தமிழக அரசியல்வாதிகள் கடற்கரைச் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு மிகச் சொற்பம். இதில் கட்சி பேதம் ஏதும் இல்லை. இன்றளவும் நல்லதோ கெட்டதோ கொஞ்சமேனும் கடற்கரைச் சமூகத்திடம் அக்கறையாக இருந்த தலைவர் என்றால், லூர்து அம்மாள் சைமன் பெயரைத்தான் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால், இந்தப் பயணத்தில் என்னைக் கவனிக்க வைத்த விஷயங்களில் ஒன்று, கடற்கரையில் எம்ஜிஆருக்கு இருக்கும் செல்வாக்கு.

எம்ஜிஆர் இறந்து கால் நூற்றாண்டாகி இருக்கலாம். இன்னமும் கடலோரத்தில் அவரை அடித்துக்கொள்ள ஒரு ஆள் வரவில்லை. அதற்காக எம்ஜிஆர் மீது அவர்களுக்கு விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. சென்னையில் மெரினா கடற்கரையை ‘அழகுபடுத்தும்’ திட்டத்துக்காக மீனவக் குடியிருப்புகள் அகற்றப்பட்டது; மீனவர்கள் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, மண்டைக்காடு கலவரத்தின்போது அரசின் நிலைப்பாடு எதையும் அவர்கள் மறக்கவில்லை. அவை எல்லாவற்றையும் குறிப்பிடுகிறார்கள்; அவற்றையெல்லாம் தாண்டியும் எம்ஜிஆரை நேசிப்பதாகவும் சொல்கிறார்கள்.

சினிமா கவர்ச்சியும் ‘படகோட்டி’, ‘மீனவ நண்பன்’ படங்களும் மட்டுமே இந்த நேசத்தின் தூண்கள் என்று நான் நம்பவில்லை. வேறு என்ன காரணங்கள் என்று தேடியபோது நிறைய கிடைத்தன. தனிப்பட்ட வகையில் கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்த பலருடன் அவருக்கு இருந்த உறவுக் கதைகள் அவற்றில் முக்கியமான ஒன்று. சேகரிடம் இருப்பதாக நான் கேள்விப்பட்ட கதை அப்படிப்பட்டது. அந்தக் கதையின் சுருக்கத்தை மட்டும் நண்பர் எனக்குச் சொல்லியிருந்தார்: “எம்ஜிஆர் வீட்டுக்கு வாடிக்கையாக ஒரு கடையிலிருந்து மீன் போகும். அந்த மீன்காரருடன் எம்ஜிஆருக்கு நெருக்கமான உறவு இருந்தது.”

யார் அந்த மீன்காரர்?

நாமும்தான் மீன் சாப்பிடுகிறோம். மீன்காரர் பெயர்கூட நமக்குத் தெரியாதே? ஒரு மாநிலத்தின் மூன்று முறை முதல்வர். அவர் காலத்தின் முடிசூடா மன்னராக இருந்த ஒரு மனிதருக்கு, ஒரு சாமானிய மீன்காரருடன் உறவு இருந்தது என்றால், அது முக்கியமானதல்லவா? அந்த மீன்காரர் யார், அவருக்கும் எம்ஜிஆருக்குமான உறவுக் கதையின் முழு வடிவம் என்ன என்று தேடிச்சென்றபோதுதான், சேகர் சிக்கினார். எம்ஜிஆர் கதையைக் கேட்டபோது, வெட்டிய மீன்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

“எங்கப்பா பேரு கண்ணன். என்.கே. கண்ணன். தலிவரை எங்கப்பா அண்ணன்னு கூப்புடுவாரு. நாங்கல்லாம் பெரியப்பான்னுதான் கூப்புடுவோம். மொதமொதல்ல ராமாவரம் தோட்டத்துலேர்ந்து ஆளுங்க வந்து மீன் வாங்கினு போய்க்கிறாங்க. நல்லாருக்கவும் அப்பறமேல்ட்டு இங்கியே வாங்க ஆரமிச்சாங்க. ஒருநா ‘மீன் நல்லாருக்கே, யாருகிட்டபா வாங்குறீங்க, அந்தாளை வரச் சொல்லுங்க’னு சொல்லிகிறாரு. அப்பா போய்ப் பாத்துருக்காரு. அப்போலேந்து பழக்கம்.

வாரத்துல ஆறு நா இங்கேருந்து தோட்டத்துக்கு மீன் போவும். செவ்வாக் கெழம மட்டும் போவாது. விரால் மீன்னா தலிவருக்கு உசுரு. அதேமேரி வஞ்சிரக் கருவாடு ரொம்பப் புடிக்கும். அவருக்கு மட்டும் இல்ல; தோட்டத்துல வேல செய்ற எல்லாருக்குமே போவும். ஒவ்வொரு பொங்குலுக்கும் தோட்டத்துக்கு வர் சொல்லுவாரு. எல்லாரையும் விசாரிப்பாரு...’’

“அப்படி அழைக்கிறப்ப, எம்ஜிஆர் ஏதாவது தரும் வழக்கம் இருந்துச்சா? உங்க அப்பா உங்க குடும்பத்துக்காவும், உங்க சமூகத்துக்காவும் எதையாவது கேட்டு செஞ்சிருக்காரா?”

“பொதுவா, எல்லாருக்கும் எதனா கொடுப்பாரு. ஆனா, எங்கப்பா எதையும் வாங்க மாட்டாரு. ‘நீங்க எவ்ளோ பெரிய மனுசன்... உங்களைப் பாக்குறதே பெரிய சந்தோசம்’னு சொல்லிட்டு வந்துடுவாரு. ஆனா, இவுரு எதனா செஞ்சு எடுத்துட்டுப்போவாரு. அதனாலேயே அப்பா மேல பெரிய பாசம் தலிவருக்கு. என் தங்கச்சி பாக்கியம் கல்யாணத்துக்குச் சொல்லப் போனப்ப, அப்பாகிட்ட ‘இந்தக் கலியாணம் முழுக்க என் செலவு... நீ ஒண்ணும் பேசக் கூடாது’ன்னுட்டாரு. அவரே முன்னாடி நின்னு கலியாணத்தை முடிச்சுவெச்சாரு. 1977 தேர்தலப்போ திடீர்னு அப்பாவ ஒரு நா கூப்புட்டாரு. ‘சைதாப்பேட்டைக்கு நீதான் வேட்பாளரு’ன்னுட்டாரு.”

“அப்பா தேர்தல்ல நின்னாரா?”

“நின்னாரு. ஆனா, மூவாயிரத்துச் சொச்ச ஓட்டுல தோத்துட்டாரு. ஆனா, தலிவர் அரசியல்ல எவ்ளோ பெரிய எடத்துக்குப் போனாலும் அப்படியே இருந்தாரு. என்னோட இன்னோரு தங்கச்சிக்கு இதய நோய். கடைசியா அவரு அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகப் போனாருல்ல, அந்தச் சமயத்துல நாங்க பாக்கப் போனப்ப இதைத் தெரிஞ்சுகினு ரொம்ப வருத்தப்பட்டாரு. அமெரிக்காவுக்கு அழைச்சுக்கிட்டுபோய் சிகிச்சை பண்ணுவோம்னு ஆறுதல் சொன்னாரு. நல்ல மனுசன் போய்ச் சேந்துட்டாரு.”

கண்ணனின் மரணத்துக்குப் பின் சரிவைச் சந்தித்திருக்கிறது அவருடைய குடும்பம். சேகரும் அவருடைய திருமணமாகாத தங்கை தனமும் சின்ன அளவில் மீன் வியாபாரம் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு முந்நூறு நானூறு கிடைக்

கும் என்கிறார்கள். “தலிவர் இருந்த எடத்துல தலிவி. இன்னிக்கு நாம எங்கேயோ, அவுங்க எங்கேயோ இருக்கலாம். ஆனா, மனசுல இருக்காங்க” என்கிறார் சேகர், சுவரில் தன் தந்தை - தாயுடன் எம்ஜிஆர் இருக்கும் படத்தையும் தூரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் படத்தையும் காட்டி.

கடலோடிகள் சமூகத்தில் உயிரக்காரர் என்றொரு வார்த்தைப் பிரயோகம் உண்டு. தமக்கு அரிசி, காய்கறிகள், உணவுப் பொருட்களை வழங்கும் விவசாயிகளை உயிரக்காரர் என்று சொல்வார்கள் கடலோடிகள். அதாவது, உணவு கொடுத்தவர் உயிருக்கு இணையானவர் என்று பொருள். கடலோடிகளும் உயிரக்காரர்கள்தான். ஆயிரத்தில் ஒருவர்தான் இதையெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறார்!

(அலைகள் தழுவும்...)

சமஸ்

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/article6277791.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

வாலி எப்படி எழுதினார்?

 

newPic_847_jpg_2040050h.jpg

 

கடலோடிகள் சமூகத்தில் கவிஞர் வாலிக்குத் தனி மரியாதை உண்டு. ‘தரை மேல் பிறக்கவைத்தான்...’ பாடல் பெற்றுத்தந்த மரியாதை அது. பெரியவர் அஞ்சாப்புலியுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்தப் பாடல்பற்றிப் பேச்சு வந்தது. “வாலீ மீன் சாப்புட மாட்டாரு. கடல் பக்கம் வந்தாரான்னுகூடத் தெரியலை. அது எப்புடி அந்த மனுசனுக்கு இந்த உண்மைங்க தெரிஞ்சுதுன்னு ரொம்ப வருசம் எனக்கு மலச்சுப்போவுது. பெறகு ஒருநா புடிச்சுட்டேன். அந்தப் பாட்டுல உள்ள ஒரு வரி எனக்குச் சொல்லிடுச்சு. அது எதுனு நீங்க சொல்லுங்க... பாப்பம்” என்றார்.

நான் வரிசையாக நான்கைந்து வரிகளைச் சொல்ல... மறுத்தவர், கடைசியில் அவரே பாடிக்காட்டினார்:

“ ‘கடல்நீர் நடுவே பயணம் போனால், குடிநீர் தருவது யாரோ... தனியாய் வந்தவர் துணிவைத் தவிர, துணையாய் வருவது யாரோ...'

இந்த வரித்தாம் அது.

ஒரு கடலோடியோட ஒலகம் தெரியணும்னா கடலுக்குள்ள போகணும், மீனு திங்கணும்கிறதெல்லாம் இல்ல. கடலுக்குள்ள போற ஒரு மனுசன் நம்மள மாதிரி தேவைங்களுக்கு என்ன பண்ணுவான்னு யோசிச்சாலே போறும். அவன் ஒலகம் புலப்பட ஆரம்பிச்சுரும். புலவருங்களுக்கு அந்த ஒலகம் அவம் ஞானக்கண்ணுலயே தெரிஞ்சுடுது, சரிதானா கேட்டியளா...” என்றார்.

உண்மைதான். சக மனிதர்களின் உலகத்தை அறிந்துகொள்ள, அவர்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள பல சமயங் களில், நம்மை அவர்கள் இடத்தில் பொருத்தி, சின்னச் சின்ன கேள்விகளைக் கேட்டுக்கொண்டாலே போதுமானதாக இருக்கிறது; பல உலகங்களின் கதவுகள் திறந்துவிடுகின்றன.

சகலமும் கடலுக்குள்தான்!

என்னுடைய எழுத்தாள நண்பர் ஒருவர் ‘நீர்… நிலம்… வனம்' தொடர்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஒரு கேள்வியை அவர் எழுப்பியிருந்தார்: “கடலோடிகளின் ராத்தங்கல்பற்றி எழுதியிருந்தீர்களே... இரவு நேரத்தில் சிறுநீர் வந்தால் எங்கே போவார்கள்? கடலிலேயே போக வேண்டியதுதானா? கடலை மாதா என்று வேறு சொல்வார்களே?”

இன்னொரு வாசக நண்பர் அனுப்பியிருந்த மின்னஞ்சலில், “அதிகாலையில் சென்று மாலைக்குள் திரும்பிவிடுவார்கள் என்று நினைத்திருந்தேன். இரவில் கடலில் தங்கவெல்லாம் செய்வார்களா, சமயத்தில் ஓரிரு நாட்கள் ஆகிவிட்டால் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்?” என்று கேட்டிருந்தார்.

அக்கறையில் எழும் கேள்விகள் இவை.

கடலோடிகள் கடலுக்குச் செல்வதற்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. கடல் சூழல் நன்றாக இருந்தால், அவரவர் தொழில் தேவைக்கேற்பக் கடலுக்குள் இறங்கிவிடுவார்கள். அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்டு, காலை 8 மணிக்குள் மீன்களோடு கரைக்குத் திரும்பிவிடும் கடலோடிகளும் உண்டு. மீன் கிடைக்காமல் இரண்டு மாதங்கள் வரை காத்திருந்து பிடித்து வருபவர்களும் உண்டு. தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்பவர்கள் கரைக்குத் திரும்பும் சராசரிக் காலம் ஒன்றரை மாதம்.

கடலுக்குப் போய்விட்டால், உச்சா மட்டும் இல்லை; கக்காவும் கடலுக்குள்தான். கடலோடிகளுக்குக் கடல் அம்மாதான். அம்மா மடியில் நாம் அடிக்காத முச்சாவா, கக்காவா? தவிர, கடல் எனும் பிரம்மாண்டத்தின் முன் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

ஒரு அடிப்படைப் புரிதலுக்காக இன்றைய தமிழக மீன்பிடிப்பில் உள்ள வகைகள், அவர்களுடைய கடல் பயணங்கள் எப்படி இருக்கும் என்பதுபற்றிய குறிப்புகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

கரைவலைக்காரர்கள்

கரையையொட்டி நடக்கும் மீன்பிடியில் பங்கேற்பவர்கள் கரைவலைக்காரர்கள். கட்டுமரம் அல்லது வள்ளம் உதவியுடன், கரையிலிருந்து ஓரிரு மைல் தொலைவுக்குச் சென்று வலை விரித்துத் திரும்பிவிட்டு, கரையிலிருந்து வலையை இழுக்கும் இந்த மீன்பிடி முறைக்கு உள்ள பெரிய முக்கியத்துவம் பெண்கள் பங்கேற்கும் ஒரே மீன்பிடி முறை இது. பொதுவாக, நள்ளிரவு 2 மணிவாக்கில் தொடங்கி நண்பகல் 12 மணி வரை நீடிக்கும் மீன்பிடி இது. கரையில் மீன்கள் தென்படும் குறி தெரிந்தால் எந்நேரமாக இருந்தாலும் ஓடுவார்கள். வீடு திரும்பினால்தான் உணவு.

கட்டுமரக்காரர்கள், வள்ளத்துக்காரர்கள்

கட்டுமரங்களிலும் வள்ளங்களிலும் செல்பவர்கள் பெரும் பாலானோர் இப்போது கரைக்கடலிலேயே தொழில் நடத்துகிறார்கள். அதாவது, கரையிலிருந்து 6 கடல் மைல் தொலைவுக்குள். விடிவதற்குள் கடலுக்குள் சென்றுவிடும் இவர்கள், பெரும்பாலும் மாலைக்குள் திரும்பிவிடுவார்கள். பெரும்பாலும் பட்டினி சவாரி. ஒரு பாட்டில் தண்ணீர், வெற்றிலைப்பாக்கு தாண்டி அதிகபட்சம் ஒரு வாளி பழைய கஞ்சி கூடப் பயணிக்கும்.

இயந்திரப் படகுக்காரர்கள்

வள்ளங்களில் மோட்டார் பொருத்திச் செல்பவர்கள். பெரும் பாலும், இவர்கள் கரைக்கடல் முதல் அண்மைக்கடல் வரை தொழில் செய்கிறார்கள். அதாவது, 6 கடல் மைல் முதல் 12 கடல் மைல் வரை. இந்தப் படகுகளில் தண்ணீர், கட்டுச்சாதம் முதல் ரொட்டித்துண்டுகள் வரை செல்லும். ஆழ்கடலுக்கு, அதாவது 12 கடல் மைல்களுக்கு மேல், குறுகிய காலத் தங்கலுக்குச் செல்பவர்களும் உண்டு. இப்படித் தங்கலுக்குச் செல்பவர்கள் தங்கும் நாட்களுக்கு ஏற்ப டீத்தூள், பால் மாவு, ரொட்டித்துண்டுகள் முதல் காய்கறிகள், மளிகைச் சாமான்கள் வரை கூடச் செல்லும். கடலிலேயே சமைத்துச் சாப்பிட்டுத் தொழிலைத் தொடர்வார்கள்.

விசைப்படகுக்காரர்கள்

விசைப்படகுகள் சின்ன அளவிலான வீடுகள். அதிகாலையில் சென்று இரவு திரும்புபவர்களும் சரி, மாதம் கடந்து திரும்புபவர்களும் சரி... சமையல், சாப்பாட்டுக்குத் தயார் நிலையிலேயே செல்வார்கள்.

(அலைகள் தழுவும்...)

- சமஸ், 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article6281336.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

சம்மாட்டியார்: ஒரு கடல் கனவு!

 

boat2.JPG

 

xkadal_2043971h.jpg.pagespeed.ic.7K54rQR

 

படம்: எஸ். முகம்மது ராஃபி.

சம்மாட்டியார். கடல்புறத்தில் இந்த வார்த்தை தரும் அங்கீகாரத்துக்கு இணையாக, சந்தோஷத்துக்கு இணையாக, போதைக்கு இணையாக ஒரு வார்த்தை தருமா என்று சொல்லத் தெரியவில்லை. ஒரு மனிதனின் பெயருக்குப் பின் சம்மாட்டியார் என்ற வார்த்தை சேரும்போதுதான் அவன் வாழ்க்கை முழுமை அடைகிறது என்றும்கூடச் சொல்லலாம். சம்பான் என்ற வார்த்தையிலிருந்து பிறந்த வார்த்தை சம்மாட்டியார். சம்பான் என்றால், வள்ளம். சம்மாட்டியார் என்றால், வள்ளத்தின் உரிமையாளர் என்று அர்த்தம்.

 

சொந்தப் படகு எனும் வாழ்நாள் ஆசை

நகர்மயச் சமூகத்தில் பிறந்த நமக்குச் சொந்த வீடு எனும் ஆசை எப்படி வசீகரமானதோ, அப்படி ஒரு வசீகரத்தைக் கடலோடிகளுக்குத் தருவது சொந்த வள்ளம்.

பொதுவாக, கடலோடிகள் சொத்துக் குவிக்கும் கலாச்சாரத்துக்கு எதிரானவர்கள். மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களிடம் பேசினால், “ஒரு கடலோடிக்குச் சொத்து இந்தக் கடலு. இந்தக் கடலுக்கு அவன் பிள்ள. இந்தக் கடலுக்கே இளவரசன். அவன் ஏன் சொத்து சேர்க்கணும்? அம்மாவ வுட்டுப் பிரிஞ்சி, தனிச்சிப் போவவா? அம்மா சகிக்க மாட்டா’’ என்று சொல்வார்கள். அன்றைய வருமானம், அன்றைய செலவு. இதுதான் வாழ்க்கைமுறை. நமக்கும் ஒரு வீடு வாசல் வேண்டும்; நாமும் நாலு காசு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் ரொம்பத் தாமதமாக உருவானது. அந்தக் காலம் தொட்டு, கடலோடிகள் கொஞ்சம் காசு எடுத்துவைக்கிறார்கள், ஏதாவது ஒரு சொத்து வாங்கலாம் என்று கனவு காண்கிறார்கள் என்றால், அது ஒரேயொரு கனவுதான்: சொந்த வள்ளம்.

 

மன்றாடியார் எனும் தகுதி

ஒருவர் சொந்த வள்ளம் வாங்கிவிட்டால், சம்மாட்டியார் ஆகிவிட முடியுமா? முடியாது. பெயருக்கு வேண்டுமானால் நானும் சம்மாட்டியார் என்று சொல்லிக்கொள்ளலாம். யார் மன்றாடியார் தகுதி பெற்றவர்களோ அவர்கள் வள்ளம் வாங்கினால்தான் முழுமையான சம்மாட்டியார் ஆக முடியும்.

மன்றாடியார் என்பவர், ஒரு வள்ளத்தின் சுக்கானைப் பிடிப்பவர். அவர் வெறும் படகோட்டி மட்டும் இல்லை; வள்ளத்தையும் அந்த மீன் பிடியையும் தலைமையேற்று நடத்தும் தலைவரும்கூட. ஒரு வள்ளத்தில் ஏழெட்டுப் பேர் போகலாம். ஆனால், மன்றாடியார் வைத்ததுதான் சட்டம். மன்றாடியாருக்குப் பல கலைகள் தெரிய வேண்டும். காற்றோட்டம், நீரோட்டத்துக்கு ஏற்ப சுக்கான் பிடித்து வள்ளத்தை ஓட்டுவதில் தொடங்கி, மீன் கூட்டம் எங்கே குவியும் என்பதைக் குறிகளை வைத்துக் கணிப்பதுவரை. இப்படிப் பல கலைகளிலும் தேறி, தேர்ந்த ஒரு மன்றாடியாக அறியப்பட்ட ஒருவர் சொந்தமாக ஒரு வள்ளத்தை வாங்கும்போதுதான் அவர் சம்மாட்டியார் ஆகிறார். சம்மாட்டியார் ஆகிவிட்டால், உங்கள் கையில் ஒரு வள்ளம்... எப்போது வேண்டுமானாலும் கடலுக்குள் போகலாம். ஆக, சம்மாட்டியார் கனவு வெறும் பணம், வசதி சம்பந்தப்பட்டது அல்ல. தொழில் தேர்ச்சியின், தொழிலில் இலக்கைத் தொடும் மகிழ்ச்சியின் அடையாளம்.

ஒரு மன்றாடியாரின் வாழ்க்கை எப்படி இருக்கும், ஒரு சம்மாட்டியாரின் வாழ்க்கை எப்படியிருக்கும்? பாம்பனில் சுரேஷ் மன்றாடியாரையும் அருளானந்தம் சம்மாட்டியாரையும் சந்தித்தபோது தெரிந்துகொண்டேன்.

 

மன்றாடியாரின் பொறுப்புகள்

சுரேஷ் மன்றாடியார்: “எங்களோடது,மோட்டார் வள்ளம் (இயந்திரப் படகு). ஏழெட்டுப் பேர் போவோம். அஞ்சு நாள் கடல்ல தங்குவோம். இந்த அஞ்சு நாள் சாப்பாட்டுக்கான அரிசி, மளிகைச் சாமான் செலவு, மீனுக்கு வைக்கிற ஐஸ் செலவு, வள்ளம் போறதுக்கான டீசல் செலவுன்னு ஒரு தடவ கடலுக்குப் போற செலவே பதினஞ்சாயிரம் ஆகிரும். இதுக்கு மேல கிடைக்குற தொகையைத்தான் தொழிலுக்குப் போற எட்டுப் பேரும், வள்ளத்துச் சொந்தக்காரரும் பகிர்ந்துக்கணும். மொத்தம் கெடைக்குற தொகையில, போற செலவைக் கழிச்சுக்கிட்டு, மிச்சம் படுற தொகையில சரி பாதி வள்ளத்துக்காரருக்கு. சரி பாதி ஆளுங்களுக்கு. இப்பம் பத்துப் பேர் போறோம், இருபத்தஞ்சாயிரம் ரூவாய்க்கு மீன்பாடு கெடைக்குதுன்னு வெச்சுக்குங்க. செலவு பதினஞ்சாயிரத்தைக் கழிச்சுடுவோம். மிச்சம் பத்தாயிரத்துல சரிபாதி வள்ளத்துக்காரருக்கு. மிச்சம் அஞ்சாயிரத்தைப் பத்துப் பேரும் பங்கிட்டுக்குவோம். இதுல எல்லாருக்கும் ஒரு பங்குன்னா, மன்னாட்டியான எங்களுக்கு ஒண்ணரைப் பங்கு கொடுப்பாங்க.

கடலுக்குப் போற வள்ளம் மட்டும் இல்ல; கானா கம்பு, வலையிலேர்ந்து வள்ளத்துல இருக்குற ஆளுங்க வரைக்கும் மன்னாட்டியோட பொறுப்பு தான். சம்மாட்டியாருங்க நம்மளை நம்பித்தான் வள்ளத்தை அனுப்புறாங்க. அதனால, வள்ளத்தை எடுத்துக்கிட்டுப் பாதுகாப்பா போய்த் திரும்புனா மட்டும் போறாது. கடல்லேர்ந்து திரும்பும்போது அவங்க செஞ்ச செலவுக்கு மேல சம்பாதிச்சுக்கிட்டும் வரணும்.

கடல்ல எத்தனை கடல் மைல் தொலைவு போறோம், எந்தெந்த ஆழத்துல என்னென்ன மீன் கெடைக்கும், ஒரு எடத்துல கெடைக்காட்டி வேற எங்க போனா, என்ன மீன் கெடைக்கும் இப்புடி எல்லாத்தையும் காத்து, நீவாடு, திசை போக்குக்கேத்த மாரி ஊகிச்சுக்கிட்டே கெடக்கணும் ஒரு மன்னாட்டி.

பொதுவா, கடலோடிங்க யாருக்குமே கடல்ல தூக்கம் கெடைக்காது. ராத்திரில வள்ளத்துல அரைத் தூக்கம்தான் அசந்து எந்திரிப்பாங்க. இதுல மன்னாட்டியான எங்களுக்கு அந்தத் தூக்கமும் கெடைக்காது. ஏன்னா, எல்லாரும் தூங்கும்போது நாங்களும் தூங்கிட்டா, ஒரு மாசா பெருசா வந்து தூக்குனாலும் தெரியாது; காத்து வாக்குல வேற ஒரு வள்ளம் வந்து மோதுனாலும் தெரியாது. ஒரு சாமி சொல்லுவாங்களே... கண்ணை மூடிக் கிடப்பாரு, ஆனா, அப்பவும் உலகத்துல நடக்குற எல்லாம் அவரு கண்ணுக்குள்ள காட்சியா ஓடிக்கிட்டே இருக்கும்னு. அப்படித்தான் போவும் எங்க பொழப்பு.”

 

சம்மாட்டியாரின் கடமைகள்

அருளானந்தம் சம்மாட்டியார்: “வள்ளம் போய் வந்த செலவு போக, மீதி கிடைக்குற மிச்ச பங்குத்தொகைதான் ஒரு சம்மாட்டி போட்ட முதலீட்டுக்கான வருமானம், அந்த வள்ளத்தைப் பராமரிக்குற செலவு, தொழில்ல நடக்குற நல்லது கெட்டதுங்களைச் சமாளிக்கிற தொகை எல்லாத்துக்குமானது.

வள்ளமும் வள்ளத்துல போறவங்க உசுரும் மன்னாட்டியார் பொறுப்புன்னா, கரையில அந்த மன்னாட்டியார் குடும்பத்துல ஆரம்பிச்சு வள்ளத்துல போறவங்க குடும்பத்துல ஒவ்வொருத்தரோட பாதுகாப்பும் சம்மாட்டியார் கடமை. கடல்ல போறவங்க எந்த நம்பிக்கையில போறாங்க? ஒரு ஆத்திரம் அவசரம்னா, நம்ம குடும்பத்தைக் கரையில இருக்கிற சம்மாட்டியார் குடும்பம் பாத்துக்கும்கிற நம்பிக்கையிலதான போறாங்க. அந்த நம்பிக்கையை நாம காப்பாத்தணும். நல்லது கெட்டதுக்கு உதவணும். நாள் கெழமையில நம்ம வள்ளத்துல போறவங்களுக்கு ஒரு புத்தாடை எடுத்துக் குடுத்து, ஐநூறு ஆயிரம் கொடுக்கணும். முக்கியமா, அவங்க, ‘நமக்கு ஆதரவா நம்ம சம்மாட்டி இருக்காரு'னு நெனைக்குற மாரி நடந்துக்கணும்.”

ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டே பேசி முடிக்கும் சுரேஷ் மன்றாடியாரும், அருளானந்தம் சம்மாட்டியாரும் ஒரே குரலில் சொல்கிறார்கள்: “இந்தத் தொழில்ல மொதலாளி - தொழிலாளி கணக்கெல்லாம் கெடையாது சார். நல்லா ஓடுனா, எல்லாரும் ஒரு நா மன்னாட்டி ஆவலாம்; பொறுப்பா நடந்துகிட்டா ஒரு நா சம்மாட்டியும் ஆவலாம்; எல்லாரும் ஒரு நா ஒண்ணுமே இல்லாமயும் போவலாம்!”

 

(அலைகள் தழுவும்...)

 

- சமஸ், 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/article6290203.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.