Jump to content

பண்டைய நாகரிகங்கள் - தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 20

நைல் நதி நாகரிகம்

எஸ்.எல்.வி. மூர்த்தி

Egypt-Africa_Extraordinary-Egyptian-cult

நைல் நதி

எகிப்து நாகரிகமும் நைல் நதியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணந்தவை. எகிப்தை இரண்டாகப் பிரித்தவாறு நைல் நதி ஓடுகிறது. உலகின் மிகப் பெரிய நதியான நைல் நதி மத்திய ஆப்பிரிக்காவில் தொடங்கி, உகண்டா, சூடான், எகிப்து, ஆகிய நாடுகள் வழியாகப் பாய்கிறது, கெய்ரோவுக்கு அருகில் மத்திய தரைக் கடலில் சங்கமமாகிறது. மக்கள் நைல் நதிக் கரைகளில்தான் குடியேறினார்கள். எகிப்து மக்களின் வாழ்க்கை, நாகரிகம், எல்லாமே நைல் நதியைச் சுற்றித்தான் சுழல்கின்றன.

நைல் நதி பாலைவன எகிப்து நாட்டின் ஜீவ நதி. எகிப்தின் பழைய பாடல் ஒன்று சொல்கிறது.

“மண்ணின் ஆனந்த ஊற்றாம் நைல் நதி போற்றி

எகிப்தைச் செழிப்பாக்க வந்தாய் நீ

உணவுகள் தருவது நீ, வாரி வழங்கும் வள்ளல் நீ

நல்லவை எல்லாம் படைப்பது நீ

எகிப்திய இரு நிலப் பாகங்களின் தலைமை நீ

எங்கள் களஞ்சியங்களை நிறைப்பது நீ

ஏழைகளுக்கு வளம் தருவது நீ.”

ஹெரோடோட்டஸ் (Hertodotus) என்கிற கிரேக்கத் தத்துவ மேதை “எகிப்து நைல் நதியின் பரிசு” என்று குறிப்பிட்டார். ஏன் தெரியுமா? எகிப்து மேற்கு மற்றும் கிழக்குப் பாலைவனங்களில் அமைந்திருக்கிறது. இவை மழையைப் பார்க்காத வறண்ட பிரதேசங்கள். நாட்டின் பெரும்பகுதி பாலைவனமாக இருந்தபோதிலும், டெல்ட்டா பகுதிகளில், மழை கொட்டும். வெயில் காலங்களில் எத்தியோப்பிய மலைகளின் பனி உருகி, நைல் நதியில் தண்ணீர் பெருகும். இதனால், நைல் நதியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு வரும். வெள்ளம் வடியும். அப்போது நைல் நதி விட்டுச் செல்லும் மணலும், வண்டலும், களிமண்ணும் வேளாண்மைக்குப் பெரிதும் உரம் ஊட்டுபவை. நதிக்கரைப் பகுதிகளைச் செழிப்பாக்கும். விவசாயம் அமோகமாக நடக்க இயற்கை எகிப்துக்குக் கொடுத்த மாபெரும் வரம் இது.

விவசாயம்

நைல் நதியில் ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அக்டோபர் மாதத்தில் வெள்ளம் வடியும். எனவே, அக்டோபரில் விவசாயம் தொடங்குவார்கள். மார்ச், மே மாதங்களில் அறுவடை நடக்கும், நைல் உபயத்தால், விவசாய காலத்தில் ஒரு ஒழுங்குமுறை இருந்தது. விவசாயம் அமோகமாக நடந்தது. கோதுமை. பார்லி ஆகியவை முக்கியப் பயிர்கள்.

திராட்சை, வெங்காயம், பூண்டு, மாதுளம் பழம், வெள்ளரிக்காய், பீன்ஸ், பட்டாணி, முட்டைக்கோஸ், கீரை வகைகள், ஆகியவையும் பயிரானதாகச் சான்றுகள் சொல்கின்றன. பெரிய தொட்டிகள் கட்டி, திராட்சை ஒயின் தயாரிக்கும் வேலையும் அமோகமாக நடந்தது.

ஃப்ளாக்ஸ் (Flax) என்ற செடிகள் பரவலாக வளர்ந்தன. இந்தச் செடிகளின் தண்டுப் பாகத்தில் இருந்து இழை எடுக்கலாம். இந்த இழை பருத்தி போன்ற நூல். லினன் என்ற பெயர் கொண்டது. பருத்தியைப் போலவே, இந்த நூலையும் பயன்படுத்தி ஆடைகள் நெய்யலாம்.

வெள்ளக்காலத்தில் வரும் உபரி நீரைச் சேமித்தார்கள். இது நீர்ப்பாசனம், குடிநீர் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. தண்ணீர் சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றில் நாடாண்ட மன்னர்களே நேரடிக் கவனம் செலுத்தியதாக ஆதாரங்கள் சொல்கின்றன. பாசன வசதியால், பொதுமக்கள் உபயோகத்துக்கான பூங்காக்களையும் அரசர்கள் நிறுவினார்கள், பராமரிப்பு ஏற்பாடுகள் செய்தார்கள். பூச் சொரியும் மரங்கள், இன்சுவைப் பழ மரங்கள், காய்கறிச் செடிகள், திராட்சைக் கொடிகள் ஆகியவை இந்தப் பூங்காக்களில் இருந்தன.

மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

ஏர், மண்வெட்டி ஆகிய கருவிகளைப் பயன்படுத்தினார்கள். ஆடுகள், மாடுகள், கழுதைகள் போன்ற மிருகங்களின் உழைப்பு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.

உணவு

உலகிலேயே முதன் முதலில் கி. மு. 2600- ல் எகிப்தில் ரொட்டி தயாரிக்கப்பட்டது. கோதுமை ரொட்டியும் பார்லியில் தயாராகும் பீரும் அவர்களுடைய முக்கிய உணவுப் பொருட்களாயின. நைல் நதியில் மீன் பிடித்தார்கள். அன்றாட சாப்பாட்டில் மீன் தனி இடம் பிடித்தது.

திராட்சை ஒயின் தயாரித்தார்கள். பீர் முக்கிய பானம், தண்ணீரைவிட அதிகமாகப் பருகப்பட்ட பானம். பரலோகத்திலும் பீர் அத்தியாவசியத் தேவை என்பது எகிப்தியர் நம்பிக்கை. கல்லறைகளில் உடலோடு, பீர்க் குடுவைகளையும் சேர்த்துப் புதைப்பார்கள். இன்னொரு முக்கிய பானம் ஒயின். பெரிய தொட்டிகள் கட்டி, திராட்சை ஒயின் தயாரித்தார்கள்.

உடை

பருத்தி, லினன் ஆடைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தயாரிக்கப்பட்டன. எகிப்து சமுதாயத்தில், சமூக அந்தஸ்துப்படி ஆடைகள் மாறுபட்டன. சாதாரண மனிதர்கள் நம் ஊர் வேஷ்டி போன்ற ஆடையை இடுப்பில் கட்டுவார்கள். உடலுக்கு மேல் சட்டை போல் ஒரு ஆடை. இது பெல்ட் போல் கச்சையால் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும். அவர்கள் வீட்டுப் பெண்கள் கவுன் போன்ற உடை அணிவார்கள். இது கவுன் போல் லூஸாக இருக்காது. உடலை இறுக்கிப் பிடிக்கும் மேக்ஸி உடை.

பணக்காரர்களும், பிரபுக்களும், முட்டிவரை தொடும் சட்டை போடுவார்கள். அவர்கள் வீட்டுப் பெண்களின் உடை உழைக்கும் வர்க்கப் பெண்களுடையதுபோல்தான் இருக்கும். அரசர்கள் சேலை போன்ற உடலைச் சுற்றும் போர்வை அணிந்தார்கள். அதன்மேல் தோள் பட்டிகள். லினன் நாரால் நெய்யப்பட்ட இந்த உடைகளில் தங்க வேலைப்பாடுகள், கலர் டிசைன்கள் ஆகியவையும் இருக்கும்.

நகைகள்

அரசர்கள், பணக்காரர்கள், பிரபுக்கள் ஆகியோரின் அன்றாட அலங்காரத்தில் நகைகள் அத்தியாவசிய அம்சம். ஆண்கள், பெண்கள் இருபாலரும் நகைகள் அணிவார்கள். மோதிரம், தாயத்து, காதணி, வளையல், நெக்லஸ் போன்றவை பிரபலம். இவை தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. நகைகளில் அமெதிஸ்ட் (Amathyst) என்ற வயலெட் நிற ரத்தினம், லாப்பிஸ் (Lapis) என்கிற வைடூரியம், நீலம், பச்சை, சாம்பல் எனப் பல வண்ணங்களில் ஒளி விடும் டர்க்வா (Turquoise) என்கிற வைர வைடூரியங்களும் பொருத்தப்பட்டன.

எகிப்தியர்களுக்கு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உண்டு. இந்தப் பக்தி, நகைகளின் டிஸைன்களிலும் பிரதிபலித்தது. முழு முதற் கடவுள் ரே, அவர் படைத்த மிருகங்கள், பறவைகள், மீன்கள், தாமரைப் பூ, காகிதம் தயாரிக்கும் பாப்பிரஸ் புல் செடி ஆகியவை பெரும்பாலும் இந்த நகைகளில் காட்சி அளித்தன.

நகைகளுக்கும் அவர்களுக்கும் எவ்வளவு நெருங்கிய தொடர்பு தெரியுமா? மரணம் அடையும்போது அவர்களுக்குப் பிடித்த அத்தனை நகைகளையும் அணிவித்துத்தான் கல்லறைக்குள் அடக்கம் செய்வார்கள்.

ஒப்பனை

ஆண்களும், பெண்களும், வாசனை எண்ணெய்கள், நறுமணப் பொருட்கள், முகப் பெயிண்டுகள் போன்ற அழகுப் பொருட்களை உபயோகித்தார்கள். ஆண்களும், பெண்களும் கண்களுக்கு மை தீட்டினார்கள். புகைக் கரி, ஈயத்தின் தாதுக் கனிமமான கலீனா (Galena) ஆகிய இரண்டையும் கலந்து வீடுகளில் மை செய்தார்கள். இந்த மை கண் பார்வையைக் கூர்மையாக்கும் என்ற ஆழ்ந்த மருத்துவ நம்பிக்கை நிலவியது. முகம் பார்க்கும் கண்ணாடியும் அவர்களிடம் இருந்தது. ஆண்கள் தலைமுடியை அடிக்கடி தண்ணீரால் கழுவுவார்கள். தலையில் வாசனைப் பொருட்கள் தேய்ப்பார்கள். தலைமுடியில் மருதாணி தடவுவார்கள்.

சிகை அலங்காரம்

பண்டைய எகிப்தில் பேன் தொல்லை அதிகமாக இருந்தது. இதிலிருந்து தப்பிக்க, ஆண்கள்,. பெண்கள் அனைவரும் மொட்டை அடித்துக்கொண்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்குத் தலையில் முடி வளரவிடுவதே இல்லை. மத குருக்களுக்கும் மொட்டைத் தலைதான். ஆண்களும், பெண்களும் வகை வகையாக விக் அணிந்தார்கள். மனித முடியால் செய்யப்பட்ட இந்தச் செயற்கை கேசங்கள் இயல்பாகப் புழங்கின.

பொழுதுபோக்குகள்

அடிக்கடி பண்டிகைகள், கொண்டாட்டங்கள் நடந்தன. அந்த சமயங்களில் விருந்து, பாட்டு, இசை, நடனம் என்று உல்லாச மழைதான். புல்லாங்குழல், டிரம்ஃபெட் உள்ளிட்ட ஊதுகுழல்கள், வீணை போன்ற நரம்பிசைக் கருவிகள், முரசுகள் ஆகியவை அவர்களுடைய வாத்தியங்கள்.

செஸ் போன்ற விளையாட்டும் அவர்களுடைய பொழுதுபோக்காக இருந்தது. மற்போர் பிரபலமான விளையாட்டாக இருந்தது. வேட்டையாடுவது பணக்காரர்களின் முக்கிய பொழுதுபோக்கு. முயல், மான், எருது, யானை, சிங்கம், ஆகிய மிருகங்கள் அவர்களின் வேட்டைக் குறிகள். மீன் பிடிப்பதும் அவர்களுக்குப் பிடித்தமான காரியம். மாஜிக் செய்வது குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டு. அவர்கள் பந்துகளை வைத்தும் பல ஆட்டங்கள் விளையாடினார்கள்.

வீட்டு மிருகங்கள்

வீடுகளில் ஆடுகள், மாடுகள், கழுதைகள், பன்றிகள், வாத்துகள், புறாக்கள் ஆகியவை பல வீடுகளில் இருந்தன. ஏராளமான வீடுகளில் தேனீக்கள் வளர்த்தார்கள். தேன் உணவாகவும், மருந்தாகவும் பயன்பட்டது. தேன்கூட்டு மெழுகு மருந்தாகவும், மம்மிகளைப் பதப்படுத்தவும் உபயோகமானது.

போக்குவரத்து வசதிகள்

ஊர் விட்டு ஊர் போக எகிப்தியர்கள் என்ன செய்தார்கள்? நைல் நதியை நம்பியே வாழ்க்கை சுழன்றதால், நீர் வழிப் போக்குவரத்துத்தான் முக்கியத்துவம் பெற்றது. படகுகளும், சிறிய கப்பல்களும் புழக்கத்தில் இருந்தன. இந்தப் படகுகளில், நம் ஊர்த் தெப்பத் திருவிழாபோல் கடவுள் சிலைகள் ஊர்வலம் வருவதும் உண்டு.

சமுதாயத்தில் பெண்கள்

பெண்கள் கூடை பின்னுதல், வாசனைப் பொருட்கள் தயாரித்தல், ஆடைகள் தைத்தல், நகைகள் செய்தல் ஆகிய பணிகளைச் செய்தார்கள். பெண்களுக்குச் சமுதாயத்தில் நிறைய உரிமைகள் இருந்தன. அவர்கள் வேலை பார்க்கலாம், சம்பாதிக்கலாம், சொத்துக்கள் வாங்கலாம். சட்டத்தின் முன்னால் அவர்களுக்கு ஆண்களோடு சம உரிமை இருந்தது.

0

http://www.tamilpaper.net/?p=8427

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 21

வியக்க வைக்கும் பிரமிட்

எஸ்.எல்.வி. மூர்த்தி

The-Mysterious-Pyramids-Great-Sphinx-Giz

கட்டடக் கலை

எகிப்திய நாகரிகம் பல்வேறு துறைகளில் ஜொலித்தது என்றபோதும், அதன் உச்சகட்டத் தனித்துவம் கட்டடக் கலைதான். எகிப்து மக்களுக்குச் செங்கல் தயாரிப்பது கை வந்த கலையாக இருந்தது. நைல் நதியிலிருந்து கிடைத்த களிமண்ணோடு, வைக்கோல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்தார்கள். இந்தக் கலவையைக் கால்களால் மிதித்து, உதைத்து, கலவை தேவையான பதத்துக்கு வந்தவுடன் வார்ப்புகளில் வைத்து, தேவையான வடிவங்கள் ஆக்கினார்கள். இவை வெயிலில் காய வைக்கப்பட்டு செங்கற்கள் ஆயின.

அரண்மனைகள், மாளிகைகள், கோட்டைகள், வீடுகள் ஆகியவை கட்டச் செங்கற்களையும், கோவில்கள், கல்லறைகளுக்குக் கற்களையும் உபயோகப்படுத்துவது வழக்கம். கோவில்களிலும், வீடுகளிலும் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டன, சிற்பங்கள் அழகு கூட்டின.

வீடுகள்

வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடிக் கட்டங்களாக இருந்தன. வீடுகளில் கட்டில்கள், பெட்டிகள், மேசைகள் போன்ற மரச் சாமான்கள் இருந்தன. பல வீடுகளில், வரவேற்பு அறை, வசிக்கும் அறை, படுக்கை அறைகள், குளியல் அறைகள், உணவு பாதுகாக்கும் அறைகள் எனப் பல அறைகள் இருந்தன.

பணக்காரர்கள் வீடுகளில், இன்னும் அதிகம் வசதிகள், சொகுசுகள். பெரிய, பெரிய அறைகள். வீட்டுக்கு நடுவில் பூச்செடிகள் நிறைந்த பூங்கா, பல குளியல் அறைகள், உள் சுவர்களிலும், உட் கூரைகளிலும் அழகிய ஓவியங்கள், கட்டில்கள், மரப் பெட்டிகளிலும் ஓவியங்கள், வேலைப்பாடுகள், கலைநயமான மண் பாண்டங்கள், சலவைக் கல் ஜாடிகள், பாத்திரங்கள்.

அரண்மனைகள் தனி நகரங்கள்போல் வடிவமைக்கப்பட்டிருந்தன. அரண்மனைக்கு உள்ளேயே கோயில்கள் இருந்தன.

பிரமிட்கள்

எகிப்து என்றவுடன் நம் கண்களின் முன்னால் விரிபவை பிரமிட்கள். சாதாரண மக்களை மட்டுமல்ல, பொறியியல் வல்லுநர்களையும் வியக்க வைக்கும் அமைப்புகள். ஒரிஜினல் ஏழு உலக அதிசயங்களில், இன்று நாம் காணக் கிடைக்கும் ஒரே அதிசயம் பிரமிட்கள்தாம்.

பிரமிட் என்றால் கூம்பு வடிவம். அடிப்பகுதி நீண்ட சதுரமாக இருக்கும். நான்கு சரிவான முக்கோணப் பகுதிகள் உச்சியில் ஒன்றாக இணையும். இந்தப் பிரமிட்களுக்குள் ராஜா ராணிகள், விஐபிகள் ஆகியோரின் உடல்கள் அவர்கள் மறைவுக்குப்பின் மம்மிகளாக, உடல் கெடாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன. பிரமிட்களின் கூம்பு வடிவம் இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

பிரமிட்கள் எல்லாமே ஏன் கூம்பு வடிவில் மட்டுமே கட்டப்பட்டுள்ளன? வீடுகளை சாதாரணமாக, சதுர, செவ்வக வடிவங்களில் கட்டியவர்கள், பிரமிட்களை மட்டும் கூம்பு வடிவம் ஆக்கியது ஏன்?

ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகள் செய்த பரிசோதனைகளின் அடிப்படையில் தரும் விளக்கங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

  • பிரமிட் வடிவ அறைக்குள் காய்கறிகள், பழங்களை வைத்தால், மற்ற அறைகளில் வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்களைவிட அதிக நாட்கள் கெடாமல் இருகின்றன.
  • பிரமிட் வடிவக் கட்டங்களில் தூங்குபவர்களுக்கு, சாதாரண அறைகளில் தூங்குபவர்களைவிட, அதிகம் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
  • பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் இறந்த ஒரு பூனையின் உடலை, மரத்தால் செய்த பிரமிட் வடிவப் பெட்டிக்குள் வைத்தார்கள். பல ஆண்டுகள் ஆன பின்னும் இந்த உடல் கெட்டுப் போகவில்லை.
  • பிரமிட் வடிவ அறைக்குள் இருக்கும் இரும்புப் பொருட்கள் எளிதாகத் துருப் பிடிப்பதில்லை.
இப்படி ஆச்சரியமான கண்டுபிடிப்புகள்!

கூம்பு வடிவ அமைப்பு, சுற்றுப்புறத்திலிருந்து ஒரு வித மின்காந்த ஆற்றலை உள் வாங்குகிறது. பிரமிடின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை, பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராகப் பரவ வைக்கிறது. இதுதான் ரகசியம் என்கிறார்கள்.

இது முழுமையான விளக்கமா? சரி என்று ஒத்துக்கொண்டாலும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், எகிப்தியர்களுக்கு இந்த விஞ்ஞான உண்மை எப்படித் தெரிந்தது, புரிந்தது?

பெரிய பிரமிட்

கிஸா (Giza) நகரில் இருக்கும் பெரிய பிரமிட் சுமார் 476 அடி உயரமானது, 13.6 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டது 5,90,712 கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கம்ப்யூட்டர் கணக்கீடுகள் சொல்கின்றன. கற்களின் எடை ஒவ்வொன்றும் இரண்டில் இருந்து முப்பது டன் வரை. இந்தக் கற்களை தூரத்தில் இருக்கும் மலைப் பகுதிகளில் இருந்து எப்படிக் கொண்டு வந்தார்கள்? உச்சியை எட்டும்போது கற்களை 400 அடிகளுக்கு மேல் தூக்கிக் கொண்டு போயிருக்க வேண்டுமே? அவர்களிடம் கிரேன் மாதிரி எந்திரம் இருந்ததா? ஒரு லட்சம் தொழிலாளிகள் இருபது வருடம் பணியாற்றியிருந்தால் மட்டுமே பெரிய பிரமிட் உருவாகியிருக்கும் என்பது கட்டடக் கலை வல்லுநர்கள் கணிப்பு.

கோவில்கள்

பெரிய பிரமிட் பிரம்மாண்டம் என்று நினைக்கிறீர்களா? இதோ வருகிறது நிஜ பிரமாண்டம். கார்நாக் (Karnak) எகிப்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் கிராமம். ஆலயங்கள் நிறைந்த இடம். சிதிலமாகிவிட்ட பல கோவில்கள் நெஞ்சில் துயரம் பொங்க வைக்கின்றன.

இங்கே இருக்கும் ஆமுன் ரே (Amun Re) கோவில் எகிப்தின் மற்ற எல்லாக் கோவில்களையும்விட மிகப் பெரியது. ஆமுன் ரே எகிப்தியரின் முழுமுதற் கடவுள். நாட்டையும், மன்னர்களையும், மக்களையும், எல்லாத் துன்பங்களிலிருந்தும், எப்போதும் காப்பாற்றுபவர் என்பது பொது நம்பிக்கை.

ஆமுன் ரே கோவிலில் இருக்கும், கி.மு. 14 – ம் நூற்றாண்டில், இரண்டாம் ராம்சேஸ் மன்னரால் கட்டப்பட்ட அரங்கம் முக்கிய அம்சம். ஹைப்போ என்னும் வித்தியாசமான கட்டடக் கலைப் பாணியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. தாங்கும் வளைவுகள் இல்லாமல், வரிசையாகத் தூண்களை நிறுவி, அவற்றின்மேல் தட்டையான கூரை அமைக்கும் முறை இது. அரங்கம் எத்தனை பெரியது தெரியுமா? பரப்பளவு 52,000 சதுர அடி. 16 வரிசைகளில், 134 தூண்கள் அரங்கத்தைத் தாங்கி நிற்கின்றன. இவை ஒவ்வொன்றின் சுற்றளவு 10 அடி. 122 தூண்களின் உயரம் 33 அடி: எஞ்சிய 12 தூண்களின் உயரம் 70 அடி. அம்மாடியோவ்!

தொழில்கள் – மீன் பிடித்தல்

விவசாயம்தான் முக்கிய தொழில். பெரும்பாலான மக்கள் மீனை விரும்பி உண்டதால்,

மீன்களுக்கான தேவை அதிகமானது. பலர் மீன் பிடித்தல், மீன் வியாபாரம் ஆகியவற்றை முழு நேர வேலைகளாகச் செய்யத் தொடங்கினார்கள். நாளாவட்டத்தில் மீன் பிடிக்கும் படகுகளையும் பயன்படுத்தினார்கள்.

சிற்பக் கலை

கோவில்களையும், வீடுகளையும் அற்புதச் சிற்பங்கள் அலங்கரித்தன. கடவுள்களுக்கு மட்டுமல்லாமல், அரசர்கள். பிரமுகர்கள் ஆகியோருக்கும் சிலைகள் வடிப்பது பண்டைய எகிப்து வழக்கம். கல் தச்சர்கள், சிற்பிகள் எனப் பல கலைஞர்களை இந்த வழக்கம் ஊக்குவித்தது. கல்லால் சிற்பங்கள் மட்டுமல்ல, அம்மி, ஆட்டுக்கல் போன்ற சமையல் சாமான்களும் தயாரிக்கப்பட்டன.

களிமண் பொருட்கள் தயாரிப்பு

செங்கற்கள் தயாரித்த முறையில், உணவு சமைக்கும் பாத்திரங்கள், தானியம், எண்ணெய், மாவு, தண்ணீர், ஒயின் ஆகியவற்றைச் சேமித்து வைக்கும் பெட்டிகள் ஆகியவையும் தயாரிக்கப்பட்டன.

பெண்களின் தொழில்கள்

பெண்கள் வேலை பார்ப்பதைச் சமுதாயம் அனுமதித்தது. பேரிச்சை மர இலை, கோரம்புல் ஆகியவற்றால் பின்னப்பட்ட கூடைகளும் பல அகழ்வு ஆராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. கூடை பின்னுதல், வாசனைப் பொருட்கள் தயாரித்தல், ஆடைகள் தைத்தல், நகைகள் செய்தல் ஆகிய தொழில்களில் பெரும்பாலும் ஈடுபட்டிருந்தவர்கள் பெண்களே.

தொழிற்சாலைகள்

எகிப்தில் கிரானைட் கற்கள், பல வித மாணிக்கங்கள், தங்கம், ஈயம், இரும்பு சுண்ணாம்புக் கல், ஆகிய தாதுக்கள் ஆகியவை தாராளமாகக் கிடைத்தன. இவற்றின் அடிப்படையில் பல தொழிற்சாலைகள் தொடங்கினார்கள். சிமெண்ட் தயாரித்தார்கள். கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பில் அவர்களுக்கு அபாரத் திறமை. கண்ணாடி ஜாடிகள், சிற்பங்கள், நகைகள் ஆகியவை பரவலாக உபயோகத்தில் இருந்தன.

வணிகம்

வணிகம் தழைத்து வளர்ந்தது. சந்தைகள் இருந்தன. அங்கே கல் எடைகள் பயன்படுத்தப்பட்டன. உணவு தானியங்கள், உற்பத்திப் பொருட்கள், உப்பு, ஆகியவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மரக்கட்டைகள், வாசனைப் பொருட்கள், ஆலிவ் எண்ணெய் ஆகிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தொலைதூர ஆப்கானிஸ்தானிலிருந்து லாப்பிஸ் வைடூரியங்களை இறக்குமதி செய்ததாக ஆதாரங்கள் சொல்கின்றன. பல வியாபாரிகள் இந்த ஏற்றுமதி இறக்குதி வாணிபத்தில் ஈடுபட்டார்கள். உள் நாட்டு வாணிபத்திலும், ஏற்றுமதியிலும் பண்டமாற்று முறைதான் உபயோகத்தில் இருந்தது.

0

http://www.tamilpaper.net/?p=8473

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 22

ஒரு கதை பல செய்திகள்

எஸ்.எல்.வி. மூர்த்தி

rhodopis-cinderella-from-egypt.jpg

மொழி

இத்தனை கலைநயமும் கற்பனையும் கொண்ட மக்கள் நிச்சயம் இலக்கியம் படைத்திருக்க வேண்டுமே, வளர்த்திருக்க வேண்டுமே?

ஆம், அவர்கள் ஹைரோக்ளிஃப் (Hieroglyph) என்கிற சித்திர எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதனர். தமிழில் அகர வரிசை அ, ஆ, இ, ஈ, என்று வரும். எகிப்திய மொழியில் அகர வரிசை இப்படி இருக்காமல், படங்களாக இருக்கும். 500 படங்கள் இருந்தன. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை இடது பக்கத்தில் தொடங்கி வலது பக்கமாக எழுதுகிறோம். உருது மொழி வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக எழுதப்படும். எகிப்து மொழியும் வலமிருந்து இடமாக எழுதப்பட்டது.

இந்த மொழி இப்போது புழக்கத்தில் இல்லை. ஆனால், பழங்காலக் கல்வெட்டுக்கள், மண் பாத்திரங்கள் போன்றவற்றில் இந்தச் சித்திர எழுத்துகளைப் பார்க்கலாம்.

இலக்கியம்

எகிப்தின் பரம்பரைக் கதைகளும் மிகப் பிரசித்தமானவை. இவை எழுதப்பட்ட கதைகளாக இல்லாமல், சொல்லப்பட்ட கதைகளாக இருந்தன. மக்கள் கூட்டமாகக் கூடும்போது ஒருவர் கதைகள் சொல்ல, மற்றவர்கள் அதைக் கேட்பது பொழுதுபோக்காக இருந்தது. அத்தோடு சுருங்கிவிடாமல், நீதிகளைப் போதிக்கும் ஊடகங்களாகவும் பயன்பட்டன.

இந்தக் கதைகள் கற்பனையில் உருவானவை. ஆனால், இவற்றின் மூலம், அந்தக் கால நாகரிகம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை நம்மால் அறிந்துகொள்ளமுடியும். உதாரணத்துக்கு ஓர் கதையைப் பார்க்கலாம்.

பலப் பல ஆண்டுகளுக்கு முன்னால், எகிப்து நாட்டை அமாஸிஸ் என்ற ஃபாரோ மன்னர் ஆண்டு வந்தார். பாரசீக நாட்டு மன்னர்கள் அண்டை நாடுகள் மீது படையெடுத்து அவற்றைக் கைப்பற்றி வந்த காலம்.

பாரசீகர்களிடமிருந்து எகிப்தைப் பாதுகாக்க அமாஸிஸ் ஒரு திட்டம் போட்டார். கிரேக்க நாட்டோடு வாணிபத்தை வளர்த்துக் கொண்டால், அந்த வியாபாரிகளும், கிரேக்க அரசும் தன் ஆட்சி நீடிக்க உதவுவார்கள் என்பது அவர் திட்டம்.

நூற்றுக்கணக்காக கிரேக்க வியாபாரிகள் எகிப்துக்குள் வந்தார்கள். அவர்கள் வாணிபம் அமோகமாக நடந்தது. அவர்களுள் ஒரு பெரிய வியாபாரி சாராக்ஸஸ். நைல் நதிக் கரையில் கானோப்பஸ் என்ற ஊரில் அவர் கடை இருந்தது. அவர் தங்கை ஸாஃபோ புகழ் பெற்ற கவிதாயினி.

ஒரு நாள், சந்தையில் சாராக்ஸஸ் பெரிய கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்தார். அங்கே போனார். மிக அழகான பெண் நின்றுகொண்டிருந்தாள். சுண்டினால் ரத்தம் வரும் நிறம். ரோஜாக் கன்னங்கள். இத்தனை அழகான பெண்ணை இதுவரை சாராக்ஸஸ் பார்த்ததேயில்லை.

அவள் கிரேக்க நாட்டுப் பெண். அவளை ஏலம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் தனக்குத்தான் என்று அவர் முடிவு செய்தார். பெரும் பணக்காரர் சாராக்ஸஸோடு போட்டி போட முடியுமா? மற்றவர்கள் விலகினார்கள். அந்தப் பெண் அவருக்கு சொந்தமானாள்.

அந்தப் பெண்ணைத் தன் மாளிகைக்கு அழைத்து வந்தார். அவள் பெயர் ரோடோப்பிஸ். மிக இனிமையாகப் பழகினாள். சாராக்ஸஸுக்கு அவளை மிகவும் பிடித்தது. அவளுக்குப் பெரிய மாளிகை வாங்கி அங்கே தங்கவைத்தார். வீட்டைச் சுற்றிப் பெரிய பூந்தோட்டம். வீட்டின் பின்புறம் நீச்சல் குளம். ரோடோப்பஸுக்கு சேவை செய்யப் பல அடிமைப் பெண்கள் அவள் மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால், இத்தனை இருந்தும், அவள் மனம் எதற்கோ ஏங்கியது. தன் மனம் எதைக் கேட்கிறது என்று அவளுக்கும் புரியவில்லை.

ஒரு நாள் சாராக்ஸஸோடு போகும்போது, ரோடோப்பிஸ் சந்தையில் சிவப்பு செருப்பைப் பார்த்தாள். அவளுக்கு மிகவும் பிடித்தது. உடனேயே அவர் அதை அவளுக்கு வாங்கிக் கொடுத்தார். ரோடோப்பிஸ் எப்போதும் அதை அணிந்தாள். தூங்கும்போதும் பக்கத்தில் வைத்துக்கொண்டாள்.

ஒரு நாள் நீச்சல் குளத்தில் அடிமைகள் புடை சூழக் குளிக்க வந்தாள். அவளுடைய உடை, நகைகள், சிவப்புச் செருப்புகள் ஆகியவற்றை அடிமைப் பெண்கள் வாங்கி, தங்கள் கைகளில் வைத்துக் கொண்டார்கள். ரோடோப்பிஸ் குளிக்கத் தொடங்கினாள்.

“ஐயோ, ஐயோ….”

அடிமைப் பெண்கள் பயத்தில் அலறினார்கள். என்ன காரணம் என்று ரோடோப்பிஸ்

பார்த்தாள்.

ஒரு பெரிய கழுகு வானத்தில் இருந்து சடாரெனக் கீழே இறங்கி, அவர்கள்மேல் பாய்ந்து கொண்டிருந்தது. அடிமைப் பெண்கள் பயந்து ஓடினார்கள். அவர்கள் கைகளில் இருந்த துணிகள், நகைகள், செருப்பு, அத்தனையும் கீழே விழுந்து சிதறின.

கழுகு என்ன செய்தது? ரோடோப்பிஸின் இரண்டு சிவப்புச் செருப்புகளில் ஒன்றை மட்டும் கவ்வியது. பறந்து மறைந்தது. ரோடோப்பிஸ் வெளியே வந்தாள். அழுதாள். அவளுடைய அருமைச் செருப்பு தொலைந்துபோய் விட்டதே?

சாராக்ஸஸ் தன் வேலைக்காரர்களைச் சந்தைக்கு அனுப்பினார். அதே போல் சிவப்புச் செருப்புகள் வாங்கி வரச் சொன்னார். அந்த ஊரில் கிடைக்கவில்லை. தேடினார்கள், தேடினார்கள். எகிப்தின் ஒரு ஊரிலும் கிடைக்கவில்லை. பக்கத்து நாடுகள் ஒன்றிலும் கிடைக்கவில்லை. ரோடோப்பிஸ் அழுதுகொண்டேயிருந்தாள். அவளை சாராக்ஸஸால் சமாதானப்படுத்தவே முடியவில்லை.

அந்தக் கழுகு சாதாரணக் கழுகு அல்ல. ஹோரஸ் என்கிற கடவுள். நம் ஊர் கருட பகவான்போல் இவருக்குக் கழுகு முகம். இவருடைய ஒரு கண் சூரியன், இன்னொரு கண் சந்திரன் என்பது ஐதீகம். ஹோரஸ்தான் கழுகு உருவத்தில் வந்திருந்தார்.ஹோரஸ் நேராக அமாஸிஸ் மன்னனின் அரண்மனைக்குப் பறந்தார். அந்தச் சிவப்புச் செருப்பை, மன்னர் மடியில் போட்டார். என்ன நடக்கிறது என அவர் உணருமுன் மாயமாய்ப் பறந்து மறைந்தார்.

அமோஸிஸ் செருப்பைக் கையில் எடுத்தார், பார்த்தார். செருப்பின் அழகான வேலைப்பாடு அவரைக் கவர்ந்தது.

“இவ்வளவு அழகான செருப்பை அணியும் பெண் நிச்சயமாக உலகப் பேரழகியாகத்தான் இருக்க வேண்டும். அவளை நான் சந்தித்தேயாக வேண்டும்.”

நாடு முழுக்க டமாரம் அடிக்கச் சொன்னார்.

“இதனால் எல்லோருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஹோரஸ் கடவுள் நம் மன்னரிடம் ஒரு செருப்பைக் கொடுத்திருக்கிறார். அது பெண்கள் அணியும் செருப்பு. அந்தச் செருப்பு ஜோடியின் இன்னொரு செருப்பை யார் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு ஃபாரோ பெரும் பரிசு கொடுப்பார்.”

பரிசுக்கு ஆசைப்பட்டுப் பல பெண்கள் தங்களுடைய சிவப்புச் செருப்புகளோடு வந்தார்கள். அவர்கள் பித்தலாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. துரத்தப்பட்டார்கள். செருப்புச் சொந்தக்காரிக்கான தேடல் தொடர்ந்தது.

சாராக்ஸஸ் அழகான கிரேக்க அடிமையை விலைக்கு வாங்கியிருப்பது அரசரின் உதவியாளர்களுக்குத் தெரிந்தது.

“நாம் தேடும் அழகி இந்தப் பெண்ணாக இருக்கலாமோ?”

அவர்கள் ரோடோப்பிஸ் வீட்டுக்கு வந்தார்கள். பூந்தோட்டத்தில் அழுதவாறு அவள் உட்கார்ந்திருந்தாள். அவள் கையில் ஒரு சிவப்புச் செருப்பு!

மன்னரின் உதவியாளர்களுக்கு மனம் நிறைய மகிழ்ச்சி.

ரோடோப்பிஸ் அருகே போனார்கள்

“நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?”

“என் ஒரு செருப்பைக் கழுகு தூக்கிக் கொண்டு போய்விட்டது.”

“அந்த உன் செருப்பு நம் நாட்டு மன்னரிடம்தான் இருக்கிறது. எங்களோடு அரண்மனைக்கு வா. அதை மன்னர் தருவார்.

அவர்களோடு ரோடோப்பஸ் அரண்மனைக்குப் போனாள். செருப்பின் சொந்தக்காரி அவள்தான் என மன்னர் உணர்ந்தார். அவள் அழகில் மயங்கினார்.

“பேரழகியே, நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன். நீ தான் இனிமேல் எகிப்து ராணி.”

மன்னர் கட்டளையை ரோடோப்பஸ் ஏற்றாள். மன்னர் சொல்லி, சாராக்ஸஸ் மறுக்க முடியுமா? அவரும் ஒத்துக் கொண்டார்.

ரோடோப்பஸ் எகிது ராணியானாள். அவளும், மன்னர் அமாஸஸூம் பல நூறு ஆண்டுகள் ஆனந்தமாக வாழ்ந்தார்கள். (ரோடோப்பஸ் நைல் நதியின் ராணியாக,தெய்வமாகக் கருதப்படுகிறார்.)

இந்தக் கதை சொல்லும் சேதிகள் என்ன?

  • பாரசீகம் தம் மீது படை எடுக்கும் அபாயத்தை எகிப்து அரசர்கள் உணர்ந்திருந்தார்கள். அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தார்கள்.
  • எகிப்துக்கும் கிரேக்கத்துக்கும் நடுவே வலுவான வாணிபத் தொடர்புகள் இருந்தன.
  • எகிப்து கிரேக்கத்தை விடப் பொருளாதாரத்தில் முன்னேறியிருந்தது. இதனால். கிரேக்க ஆண்களும் பெண்களும் வேலைகளுக்காக எகிப்து வந்தார்கள்.
  • அடிமைகளை வேலைக்கு வைப்பதும், அவர்களை விற்பதும், வாங்குவதும் நடைமுறையில் இருந்த பழக்கங்கள்.
  • எகிப்து நாட்டு வீடுகள் பெரியவையாக, பூந்தோட்டம், நீச்சல் குளம், ஆகிய வசதிகளோடு இருந்தன.
  • அரசர் சொல்லை யாரும் தட்டுவதில்லை.
  • எகிப்தியருக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம்.
இத்தனை சின்னக் கதைக்குள் இத்தனை வரலாற்றுச் சேதிகளா?

0

http://www.tamilpaper.net/?p=8490

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 23

காகிதம் முதல் மம்மி வரை

எஸ்.எல்.வி. மூர்த்தி

mummy-in-casket_shutterstock_1533285-300

மொழி, இலக்கியம் ஆகிய நுண்கலைகளில் முன்னணியில் நின்ற எகிப்து, கட்டடக் கலையில் உச்சங்கள் தொட்டதைப் பார்த்தோம். அறிவியலின் பல துறைகளிலும் எகிப்தியர்கள் கொடி கட்டிப் பறந்தார்கள்.

கண்டுபிடிப்புகள்

காகிதம்

கி.பி. கே லுன் என்னும் சீன அறிஞர் சணல், துணி, மீன் பிடிக்கும் வலைகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கூழாக்கி, அவற்றால் மெல்லிய பாளங்களை உருவாக்கினார். இதுதான் காகிதத்தின் தொடக்கம் என்று பார்த்தோம்.

எகிப்தின் ரசிகர்கள் சொல்லும் வரலாற்றுச் செய்தி வித்தியாசமானது. Papyrus என்னும் நாணல் நைல் நதிக் கரைகளில் வளர்கிறது. இதற்குக் காகிதத் தாவரம் என்னும் காரணப் பெயரும் உண்டு. எகிப்தியர்கள் இந்த நாணலால் காகிதம் தயாரித்தாதர்கள். பேப்பர் என்னும் ஆங்கிலப் பெயரே, பேப்பிரஸ் என்னும் எகிப்திய வார்த்தையிலிருந்து வந்ததுதான். ஆகவே, காகிதம் கண்டுபிடித்தவர்கள் எகிப்தியரே என்பது இவர்களுடைய ஆணித்தரமான வாதம்.

கடிகாரங்கள்

கடிகாரத்தைப் பயன்படுத்தியவர்களில் எகிப்தியர்கள் முன்னோடிகள். ஆரம்ப நாட்களில், சூரிய நிழலை அடிப்படையாகக் கொண்ட சூரியக் கடிகாரங்களைப் பயன்படுத்தினார்கள். நான்கு முகத் தூண் இருக்கும். இதன் நிழலை வைத்து, காலை, பகல், மாலை ஆகிய வேளைகளைக் கணக்கிட்டார்கள்.

அடுத்த கட்டமாக நீர்க் கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன. கி.மு. 1400 வாக்கில் இவை புழக்கத்தில் இருந்தன. தலைகீழ்க் கூம்பு வடிவத்தில் கல்லால் செய்யப்பட்ட பாத்திரம் இருக்கும், இதன் அடிப்பாக ஓட்டை வழியாக, தண்ணீர் வெளியேறும். பாத்திரத்தில் 12 அளவுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். பாத்திரத்தில் தண்ணீரின் அளவை வைத்து எகிப்தியர்கள் நேரத்தைக் கணக்கிட்டார்கள்.

நேரம் அளக்கத் தெரிந்துவிட்டது. அடுத்தது என்ன? நாள்காட்டிகள் என்னும் காலெண்டர்களும் எகிப்தியரால் கண்டுபிடிக்கப்பட்டன.

மருத்துவம்

அந்தப் பிராந்தியத்தில் சிறந்த டாக்டர்கள் எகிப்தில்தான் இருந்தார்கள். பக்கத்து நாட்டு நோயாளிகள் சிகிச்சை பெற எகிப்து வருவது வழக்கம். இந்த டாக்டர்கள், நோயாளிகளின் உடலை நன்றாகச் சோதித்த பின், எந்தச் சிகிச்சை அவருக்குச் சரியாகும் என்று சிந்தித்து முடிவெடுத்தார்கள். மூலிகை மருந்துகள், தாயத்துகள் போகப் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.

எகிப்து மருத்துவர்கள் அறுவை சிகிற்சையிலும் நிபுணர்கள். அவர்கள் காயங்களுக்குத் தையல் போட்டார்கள், எலும்புகள் முறிந்தால் கட்டுகள் போட்டார்கள். ஏன், சில சமயங்களில் உறுப்புகளைத் துண்டிக்கும் அறுவை வைத்தியம்கூட செய்திருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சைக்கு அவர்கள் பயன்படுத்திய வகை வகையான கருவிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.

காயங்கள் குணமாக, அவற்றின் மேல் மாமிசம், தேன் ஆகியவற்றை வைத்து அதன்மேல் பாண்டேஜ் கட்டினார்கள். தேன் நல்ல கிருமிநாசினியாம். காயம் அழுகாமல் இருக்க, பரவாமல் இருக்க, தேன் உதவியது. காயங்களால் ஏற்படும் வலியைக் குறைக்க அபின் என்ற போதை மருந்து பயன்பட்டது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்த்தால், ஆரோக்கியம் பெருகும், ஆஸ்த்மா போன்ற நோய்கள் அண்டாது என்பது அவர்கள் கண்டறிந்த உண்மை.

மம்மிகள்

எகிப்தியரின் மருத்துவத் துறை முன்னேற்றத்துக்கு மம்மிகள் அற்புதமான உதாரணங்கள். மம்மி என்றால் புதைப்பதற்காகப் பாதுகாக்கப்பட்ட உடல். உள் உறுப்புகளை எடுத்தல், உப்புத் தொட்டிக்குள் அமிழ்த்தி வைத்தல், மெழுகுகொண்டு பதனிடுதல், பின் லினன் துணிகளால் பாண்டேஜ்போல் சுற்றுதல் ஆகிய முறைகளைப் பயன்படுத்தினார்கள். Mumo என்றால் மெழுகு. அதனால்தான் இந்த மேக்கப் போட்ட உடலுக்கு மம்மி என்று பெயர். மம்மி செய்ய உடற்கூறு, அறுவை சிகிச்சை, மருத்துவம் ஆகிய துறைகளின் அறிவு தேவை. எகிப்தியர்கள் அறிந்திருந்தார்கள்.

இறந்த பின்னும், கடவுள் அவதாரங்களான மன்னர்கள் உயிர் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில், மம்மி வடிவத்தில் அவர்கள் உடல் கெடாதவாறு பாதுகாத்து, அவற்றின் மேல் பிரம்மாண்ட பிரமிட்கள் கட்டினார்கள் . விஐபிக்கள், முக்கியமாக, ராஜா ராணிகளின் மன்னர்களின் உடல்களை “மம்மி”யாக்குவது முக்கிய எகிப்திய வழக்கம். இது சாதாரண வேலையல்ல. உடற்கூறு, அறுவை சிகிச்சை, மருத்துவம் ஆகிய துறைகளை அறிந்த நிபுணர்கள் இதற்குத் தேவை. ஏன் தெரியுமா?

இறந்தவர் உடலின் வயிற்றுப் பாகத்தில் துளை போடுவார்கள். நுரையீரல், குடல் ஆகிய அங்கங்களை லாவகமாக வெளியே எடுப்பார்கள். மருத்துவப் பச்சிலைகளை வயிற்றுக்குள் நிரப்பித் துளை போட்ட இடத்தைத் தைத்து மூடுவார்கள். உடல் கெடாமல், அழுகாமல் இருக்க இந்த மூலிகைகள் உதவும். இதயம்? அது அப்படியே விடப்படும்.

மூளை? மூக்கு வழியாக மூளை உறிஞ்சி எடுக்கப்படும். சில சமயங்களில் கண்கள் அகற்றப்பட்டு செயற்கைக் கண்கள் பொருத்தப்படும். அடுத்ததாக, உடலை உப்புத் தொட்டிக்குள் நாற்பது நாட்களுக்கு வைப்பார்கள். உடலில் உள்ள திரவங்களை வெளியேற்றும் வழி இது. உடல் அழுகுவது உடலின் உள்ளே உள்ள திரவங்களால். உப்பு இந்தத் திரவங்களை உறிஞ்சுவதால், உடல் அழுகுவது தடுக்கப்பட்டு விடுகிறது.

இத்தோடு வேலை முடிந்ததா? இல்லை. உடலை வெளியே எடுத்து அதன்மீது மெழுகு பூசுவார்கள். இதன்மேல் லினன் துணிகளால் பாண்டேஜ் போல் சுற்றுவார்கள். மம்மி, ராஜாவா, ராணியா, குட்டி மன்னரா, மந்திரியா, தளபதியா என்கிற சமூகத் தகுதியின் அடிப்படையில் தங்க, வைர வைடூரிய நகை அலங்காரங்கள் அணிவிப்பார்கள். இப்போது மம்மி தயார். சுமார் 3000 ஆண்டுகள் தாண்டியும், பல் மம்மிகள் இன்று கிடைத்துள்ளன. எகிப்து நாட்டு மம்மி செய்யும் முறை காலத்தை வெல்லும் மருத்துவ முறைதான்!

கணித அறிவு

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அத்தனையும் அவர்களுக்கு அத்துப்படி. முக்கோணங்கள், சதுரங்கள், செவ்வகங்கள், பெட்டிகள், பிரமிட்கள், வட்டங்கள், ஆகியவற்றின் பரப்பளவு, கொள்ளளவு கண்டு பிடிக்கும் சூத்திரங்களையும் அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். பிரமிட் கட்டுவதில் பல கணித சூத்திரங்கள் பயன்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

நாகரிக வீழ்ச்சி

இப்படிப் பாரம்பரியப் பெருமை கொண்ட எகிப்தின் நாகரிகம் முற்றுபெற்றுவிட்டது. கி.மு. 1279 முதல் கி.மு. 1213 வரை ஆண்ட இரண்டாம் ராம்சேஸ் மன்னரின் ஆட்சி எகிப்தியப் பொற்காலம். அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. இயற்கையின் கருணையில் விளைச்சல் செழித்தது, உள்நாட்டு, வெளிநாட்டு வியாபாரங்கள் அமோகமாக நடந்தன. மக்கள் சொர்க்கபோக வாழ்க்கை நடத்தினார்கள்.

எகிப்தின் வளம் அண்டைய நாடுகளின் பொறாமையைத் தூண்டியது. அடிக்கடி அவர்கள் எல்லை மீறி எகிப்துக்குள் நுழைந்தார்கள். இரண்டாம் ராம்சேஸ் மறைவுக்குப் பின்னர் இந்த ஊடுருவல்கள் அதிகரித்தன. குறிப்பாக, இன்றைய வட ஈராக்கில் அசிரியா என்னும் பேரரசு இருந்தது, அசிரியர்கள் எகிப்துமீது தொடர்ந்து படையெடுத்தார்கள். மெள்ள, மெள்ள, ஒவ்வொரு பகுதியாகக் கைவசம் கொண்டுவந்தார்கள். கி. மு. 667 -இல் எகிப்து அசிரியர் ஆட்சியின்கீழ் வந்தது. ஆனால், அவர்களால், எகிப்தைக் கட்டியாள முடியவில்லை. கி.மு. 525 – இல் எகிப்தியக் குறுநில மன்னர்களிடம் நாட்டை விட்டுவிட்டு வெளியேறினார்கள். நாடு சிதறுண்டது. காலம் காலமாகக் கட்டிக் காத்த நாகரிகம் சிதிலத்தில்! வெற்றிடத்தில் பாரசீகம் புகுந்தது. எகிப்தில் பாரசீக ஆட்சி ஆரம்பம்.

சுமார் 200 ஆண்டுகள் ஓடின. கி. மு. 325. எகிப்திய மக்களுக்குப் பாரசீக மன்னர்கள்மேல் அளவுகடந்த வெறுப்பு. தங்களைக் காப்பாற்ற ஒரு தேவதூதனை எதிர்பார்த்தார்கள். அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய், எகிப்துமீது படையெடுத்து வந்தார் மாவீரன் அலெக்சாண்டர். மக்கள் அவரை வரவேற்றார்கள். அதிகம் ரத்தம் சிந்தாமலே, எகிப்து அலெக்சாண்டருக்கு மண்டியிட்டது. எகிப்து கிரேக்க நாட்டின் ஒரு பகுதியானது. எகிப்திய நாகரிகம் முடிவுற்றது.

இப்போது உங்கள் எல்லோர் மனங்களிலும் ஒரு கேள்வி வரும். நம்மில் ஏராளமானவர்களுக்குப் பேரழகி கிளியோபாட்ரா எகிப்தின் முக்கிய அடையாளம். கிளியோபாட்ராவைப் பற்றி ஏன் குறிப்பிடவேயில்லை? கிளியோபாபட்ரா இல்லாத எகிப்திய நாகரிகமா, வரலாறா?

சில அதிர்ச்சியான உண்மைகள்:[/n]

கிளியோபாட்ராவின் எகிப்தியரே அல்ல: அவர் உடலில் ஓடியது கிரேக்க ரத்தம். அலெக்சாண்டரின் மெய்க்காப்பாளர்களாக ஏழு வீரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் முதல் தாலமி. அலெக்சாண்டர் கிரேக்கம் திரும்பும்போது, எகிப்தின் ஆட்சியைத் தாலமியிடம் ஒப்படைத்தார். அலெக்சாண்டர் அகால மரணமடைந்ததால், தாலமி மன்னரானார்: அவர் வம்சம் எகிப்தை ஆண்டனர். இந்த வம்சாவளியில் வந்த கிளியோபாட்ரா கிரேக்கப் பெண்.

கிளியோபாட்ரா வாழ்ந்த காலம் கி.மு. 69 முதல் கி.மு. 30 வரை. அதாவது, அவர் பிறப்பதற்கு 263 ஆண்டுகளுக்கு முன்பாகவே எகிப்திய நாகரிகம் “மம்மி”யாகிவிட்டது.

0

http://www.tamilpaper.net/?p=8499

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 24

சிந்து சமவெளி நாகரிகம்

எஸ்.எல்.வி. மூர்த்தி

310px-Mohenjodaro_Sindh-300x190.jpeg

வெளிச்சத்துக்கு வந்த புதையல்!

சுமேரியன், சீனா, எகிப்து நாகரிகங்களைப் பார்த்துப் பிரமித்துவிட்டோம். ஆனால், சொர்க்கமே என்றாலும், நம்ம ஊரைப் போல் ஆகுமா? இப்போது வருவது சிந்து சமவெளி நாகரிகம்.

ஆரம்பம்

1856. ஜான் பிரன்ட்டன் (John Brunton) , வில்லியம் பிரன்ட்டன் (William Brunton) ஆகிய இருவரும் சகோதரர்கள். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். பொறியியல் வல்லுநர்கள். கிழக்கு இந்தியக் கம்பெனி (இப்போது பாகிஸ்தானில் இருக்கும்) கராச்சிக்கும், முல்த்தான் என்னும் நகரத்துக்குமிடையே ரயில் பாதை போடும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதை மேற்பார்வை செய்வதற்காகச் சகோதரர்களை இந்தியாவுக்கு அழைத்திருந்தது.

கட்டுமான வேலைக்குச் செங்கற்கள் தேவைப்பட்டன. அந்தச் செலவைக் கட்டுப்படுத்த விரும்பிய சகோதரர்கள், அருகில் இருந்த பிரமனாபாத் என்னும் ஊரில் பழைய காலச் செங்கற்கள் இருப்பதை அறிந்தார்கள். அவற்றைக் கொண்டுவந்தார்கள், பயன்படுத்தினார்கள். அடுத்து, ஹரப்பா* என்ற ஊரிலும் பழங்காலச் செங்கற்கள் கிடைத்தன. அவையும் ரயில் பாதை அமைக்கப் பயன்பட்டன. பிரன்ட்டன் சகோதரர்களுக்குத் தெரியாது – அவர்கள் பயன்படுத்தியவை வெறும் செங்கற்கள் அல்ல, மறைந்துவிட்ட ஒரு மாபெரும் நாகரிகத்தின் நினைவுச் சின்னங்கள் என்று. தாங்கள் அறியாமலே, சில புராதனப் பெருமைகளை அவர்கள் அழித்துவிட்டார்கள்.

1921. ராக்கல் தாஸ் பானர்ஜி (Rakhal Das Banerjee) என்னும் ஆராய்ச்சியாளர் இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருந்தார். சிந்து நதிக்கரையில் இருந்த மொஹஞ்சதாரோ * நகரத்தில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த மத ஸ்தூபி பற்றி அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ஸ்தூபியைச் சுற்றியிருந்த இடங்களில் தொழிலாளிகள் நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்தார்கள். அப்போது மண்ணுக்குள் புதைந்துகிடந்த படிக்கட்டுகளைப் பார்த்துத் திகைத்தார்கள். பானர்ஜியை அழைத்தார்கள். அவர் இன்னும் தோண்டச் சொன்னார். தோண்டத் தோண்ட, படிக்கட்டுகள் நீண்டுகொண்டே போயின.

(* பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் சாஹிவால் மாவட்டத்தில் ஹரப்பா இருக்கிறது. இங்கிருந்து 640 கிலோமீட்டர் -தூரத்தில் சிந்து மாநிலத்தின் லர்க்கானா மாவட்டத்தில் மொஹஞ்சதாரோ உள்ளது.)

படிக்கட்டுகளுக்கு அப்பால், சுவர்கள் – அத்தனையும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை; ஒரு மாபெரும் நாகரிகம் அங்கே நிலவியிருக்கிறது என்பதை நிரூபிப்பவை. மொஹஞ்சதாரோ என்றால், சிந்தி மொழியில் “இறந்தவர்கள் மேடு’ என்று அர்த்தம். காரணமாகத்தான் இந்தப் பெயர் வந்தது என்பது பானர்ஜிக்குத் தெரிந்தது.

மொஹஞ்சதாரோ ஆதாரங்கள்

அகழ்வாராய்ச்சியைப் புதிய உத்வேகத்தோடு தொடர்ந்தார் பானர்ஜி. தோண்டத் தோண்ட, சரித்திரச் சுவடுகள் குவிந்தன. தன் மேலதிகாரி சர் ஜான் மார்ஷலிடம் பானர்ஜி விவரங்களைத் தெரிவித்தார். இதே நேரத்தில் சிந்து நதிக்கரையில் இருந்த ஹரப்பாவிலும் இதேபோன்ற இடிபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட மண் சாமான்கள், கட்டடங்களின் சிதிலங்கள் ஆகியவற்றில் ஒற்றுமை இருப்பதை மார்ஷல் உணர்ந்தார்.

மொஹஞ்சதாரோவுக்கும் ஹரப்பாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது. தொடர்ந்துவந்த நாள்கள் பானர்ஜியின் கண்டுபிடிப்புகள் எத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நிரூபித்தன.

பானர்ஜிக்கும், மார்ஷலுக்கும் முன்னதாகவே, பல ஆராய்ச்சியாளர்கள் மொஹஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். 1826 ல் சார்ல்ஸ் மேஸன் என்னும் பிரிட்டீஷ் ராணுவ அதிகாரி, “மொஹஞ்சதாரோ பகுதியில், பூமிக்கடியில் செங்கற்களால் கட்டப்பட்ட கோட்டைகள் இருப்பதாகத் தெரிகிறது “ என்று குறிப்பு எழுதினார். அவர் அகழ்வியல் ஆராய்ச்சியாளரல்ல. எனவே, அவர் கருத்து அதிகக் கவனத்தை ஈர்க்கவில்லை.

அதுவரை, கங்கை சமவெளியில்தான் நாகரிகம் உருவாகி வளர்ந்ததாக நம்பப்பட்டு வந்தது. பானர்ஜியின் அறிக்கைகளின் அடிப்படையில், இந்த நம்பிக்கை தவறு, இந்திய நாகரிகத் தொட்டில் சிந்து சமவெளிதான் என்று நிரூபிக்கும் மாபெரும் வாய்ப்புக் கதவுகளைப் பானர்ஜியின் கண்டுபிடிப்புகள் திறப்பதை மார்ஷல் உணர்ந்தார். இரண்டு பகுதிகளிலும், விரிவான அகழ்வாராய்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்தார்.

தொடங்கின முயற்சிகள். உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதிக்கு வந்து குவிந்தனர். அவர்களது ஆராய்ச்சியில் இன்னும் பல ஊர்கள் தோண்டியெடுக்கப்பட்டன. ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி கி.மு. 2500- 1700-ல் செழிப்பின் உச்சத்தில் இருந்த சிந்து சமவெளி நாகரிகம் வெளிச்சத்துக்கு வந்தது.

நிலப்பரப்பு

சிந்து சமவெளி நாகரிகம் பிரம்மாண்டமான பதின்மூன்று லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பஞ்சாப் மாநிலங்கள், இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளைத் தன்னுள் அடக்கி, பாகிஸ்தான் தாண்டி பலூச்சிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரையும் வியாபித்திருந்தது. சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள்.

கிடைத்த ஆதாரங்கள்

மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கிடைத்த பல்வேறு அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் அனைத்துக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. இவை அத்தனையும் ஒரே நாகரிகத்தின் சின்னங்கள்தாம் என்பதை இந்தப் பொதுத்தன்மை நிரூபிக்கிறது. களிமண் சாமான்களை உருவாக்குதல், செங்கல் தயாரித்துக் கட்டடங்கள் கட்டுதல், நகர நிர்வாகம், குடியிருப்பு அமைப்புகள் போன்ற துறைகளில் அன்றைய சிந்து சமவெளியினர் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதை இந்த ஆதாரங்கள் சந்தேகமே இல்லாமல் நிரூபிக்கின்றன.

விவசாயம்

சிந்து சமவெளிப் பகுதி பல நகரங்களும், ஏராளமான கிராமங்களும் கொண்டது. மொத்த உணவுப் பொருட்களும் கிராம விவசாயிகள் தயாரித்தார்கள். விரிந்து பரந்த நிலங்களில் விவசாயம் செய்தார்கள். மாடுகளால் இழுக்கப்பட்ட ஏர்களை நிலம் உழுவதற்குப் பயன்படுத்தினார்கள். பல கலப்பை பொம்மைகள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. தங்கள் வாழ்வின் ஆதார சுருதியாக, அவர்கள் கலப்பைகளை மதித்ததால், இதன் அடையாளமாகத் தங்கள் குழந்தைகளுக்கு அவற்றை பொம்மைகளாகக் கொடுத்திருக்கலாம்.

மழை காலங்களில் சிந்து நதியில் வெள்ளம் பெருகி ஓடும். வெள்ளம் வடியும்போது, நிலங்களைச் செழுமையாக்கும். அப்போது சிந்து சமவெளிச் சகோதரர்கள் விதை விதைப்பார்கள், விவசாயம் தொடங்குவார்கள். நதியிலிருந்து கால்வாய்கள் வெட்டி, விவசாயத்துக்குப் பயன்படுத்தினார்கள். கிணற்று நீரும் பயன்படுத்தப்பட்டது. கோடை காலங்கள், குளிர் காலங்கள் என்னும் இரு பருவ விவசாயம் நடத்தினார்கள். கோடை காலங்களில் திணை, எள், பருத்தி ஆகியவை பயிரிட்டார்கள். கோதுமை, பார்லி, ஆளி விதை, கடுகு, பட்டாணி ஆகியவை குளிர்காலப் பயிர்கள். சணல் இரண்டு பருவங்களிலும் வளர்க்கப்பட்டது. நெல் விவசாயம் நடந்ததா என்று தெரியவில்லை.

உலகத்திலேயே, சிந்து சமவெளியில்தான் பருத்தி முதன் முதலாகப் பயிரிடப்பட்டது. பருத்திக்குக் கிரேக்க மொழியில் சிந்தோன் என்று பெயர். சிந்து சமவெளியிலிருந்து, கிரேக்கத்துக்குப் பருத்தி ஏற்றுமதி ஆகியிருக்கவேண்டும் என்பதற்கு இது சான்று என்பது வரலாற்றாளர்களின் யூகம்.

அறுவடைக்காக, அரிவாள் போன்ற கருவிகள் பயன்படுத்தினார்கள். இவை பெரும்பாலும் கற்களாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்டிருந்தன. உபரி தானியங்களைப் பாதுகாத்துவைக்கும் களஞ்சியங்களும் இருந்தன.

வீட்டு மிருகங்கள்

அகழ்வாராய்ச்சிகளில், ஏராளமான காளை மாடுகளின் எலும்புகள் கிடைத்துள்ளன. அன்றைய கால முத்திரைகளிலும், ஓவியங்களிலும் காளை மாடுகளின் உருவம் முக்கிய இடம் பெறுகிறது. ஏர் பூட்டி உழுவதற்கும், தானியப் போக்குவரத்துக்கும் பயன்பட்டு, அவர்கள் வாழ்வில் காளை மாடுகள் முக்கிய இடம் வகித்ததற்கு இவை முக்கிய அடையாளங்கள்.

பிற்காலத்தில் பசு வளர்ப்பு தொடங்கியது: பால் அன்றாட வாழ்க்கை உணவானது. ஆடுகள், யானைகள், ஒட்டகங்கள், கழுதைகள், நாய்கள், பூனைகள் ஆகியவை வளர்க்கப்பட்டன. ஆட்டு இறைச்சி உணவானது. அதன் ரோமம் குளிர்கால உடைகளின் மூலப் பொருளானது. வீட்டுக் காவலுக்கு நாய்கள். தானியங்களைச் சூறையாடும் எலிகளை அழிக்கப் பூனைகள். யானைகள், ஒட்டகங்கள், கழுதைகள் போன்றவற்றை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை.

உணவு

கோதுமை, பார்லி, திணை, பால், மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன் ஆகியவை முக்கிய உணவுகள். விவசாயத்தோடு, வேட்டையாடுதல், மீன் பிடித்தல் ஆகியவையும் முக்கியத் தொழில்களாக இருந்தன. எருமையை ஒரு மனிதன் வேட்டையாடும் முத்திரைச் சின்னங்கள் கிடைத்துள்ளன. இன்னும் பல முத்திரைகளில் மீன், படகுகள், வலை ஆகிய உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

உடைகள்

பருத்தி உற்பத்தியில் சிந்து சமவெளி முன்னோடியாக இருந்தபோதும், உயர் மட்டத்தினர் மட்டுமே பருத்தி ஆடைகள் அணிந்தனர். எளிய மக்கள் சணல், கம்பளி ஆடைகளைப் பயன்படுத்தினார்கள்.

0

http://www.tamilpaper.net/?p=8502

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 25

சிந்து சமவெளி நாகரிகம் – II

எஸ்.எல்.வி. மூர்த்தி

ancient-indus-map-210x300.jpg

நகரங்கள், வீடுகள்

சிந்து சமவெளி கால நகரங்கள் அற்புதமாகத் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நகரத்திலும் இரண்டு பகுதிகள்: ஒரு பகுதி தரை மட்டத்தில், இன்னொரு பகுதி செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்றின்மேல். இரு பகுதிகளையும் கோட்டைகள் பிரித்தன. உயரத்தில் இருந்த பகுதி அக்ரோப்போலிஸ் என்று அழைக்கப்பட்டது. இங்கே, பொதுமக்கள் கூடும் அரங்கங்கள், கோயில்கள் , நெற்களஞ்சியங்கள் இருக்கும். மொஹெஞ்சதாரோ நகரத்தில் பொதுக் குளியலறை இருந்தது.

தரைமட்டப் பகுதிதான் மக்கள் வசிக்கும் இடம். இங்கே சாலைகள் 30 மீட்டர் அடி அகலம் கொண்டவை. எல்லாச் சாலைகளும் செங்குத்தாகச் சந்தித்தன. இதனால், சாலைகளுக்கு நடுவே இருந்த பகுதிகள் செவ்வக வடிவம் கொண்டவை. இந்தப் பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டன. கட்டுமானத்துக்கு உலையில் சுடப்பட்ட செங்கற்களைப் பயன்படுத்தினார்கள். இவை 1:2:4 என்னும் விகிதத்தில் உயரம், அகலம், நீளம் என சமச் சீரானவை. ஒரு சில வீடுகள் மிகப் பெரியவை. மாடி வீடுகளும் இருந்தன. பெரிய வீடுகளில் விசாலமான முற்றம் இருந்தது.

பண்டைய நாகரிகங்களில் சிந்து சமவெளியில்தான் மிகச் சிறந்த சுகாதார வசதிகள் இருந்தன. எல்லா வீடுகளிலும், குடிநீர் வசதிகளும், குளியல் அறைகளும், கழிப்பறைகளும் இருந்தன. ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? நகரங்களில் கழிவுநீர் வடிகால் அமைப்பு இருந்தது. எல்லா வீதிகளிலும் மூடிய சாக்கடைகள் இருந்தன. வீடுகளின் அசுத்த நீர் இவற்றில் சென்று சேரக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. 5000 வருடங்களுக்கு முன்னால், இத்தனை கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட நகரங்களும், வீடுகளுமா?

நெற்களஞ்சியங்கள் பிரம்மாண்டமானவை – 150 அடி நீளம், 75 அடி அகலம், 15 அடி உயரம். அதாவது, 1,68.750 அடி கொள்ளளவு. இவற்றுள் 3 வரிசைகள், 27 சேமிப்புக் கிடங்குகள்! இந்து சமவெளியின் விவசாயச் செழிப்புக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இன்னொரு முக்கிய அம்சம், பொதுக் குளிப்பிடங்கள். வட்டச் சுவர்கொண்ட உயரமான கிணறுகள், படிக்கட்டுகளுடன் நீள்சதுரப் பொதுக் குளியல் துறைகள், அதைச்சுற்றிலும் சிறிய குளியல் அறைகள். இவற்றுள் பிரம்மாண்டம், மொஹெஞ்சதாரோவில் இருந்த பெரும் குளியலறை (கிரேட் பாத்) 179 அடி நீளமும், 107 அடி அகலமும் கொண்ட பகுதி இது. மையத்தில் 39 அடி நீளம், 23 அடி அகலம், 8 அடி ஆழம் கொண்ட நீச்சல் குளம். அடியில் தண்ணீர் தேங்கி நிற்பதற்காகச் செங்கற்கள் நெருக்கமாகப் பதிக்கப்பட்டிருந்தன. குளத்தின் உள்ளே ஏறி, இறங்க வசதியாக இரண்டு பக்கங்களிலும் படிக்கட்டுகள் இருந்தன.

குளத்தைச் சுற்றி ஆடைகள் மாற்றுவதற்கான அறைகள் இருந்தன. அவற்றில் கிணறுகள் இருந்தன. கிணறுகளுக்குள் தண்ணீர் இறைத்துக் குளத்துக்குள் பாய்ச்சலாம். குளத்தின் அழுக்கு நீரை வெளியேற்ற வடிகால் குழாய்கள் இருந்தன.

நகரங்களில் இருந்த கட்டடங்கள் வியக்க வைப்பவை. சுட்ட செங்கற்களால் அமைக்கப்பட்ட இவற்றில், சிமெண்ட் போன்ற சுண்ணாம்பும், செம்மண்ணும் சேர்ந்த ஒரு கலவையைப் பயன்படுத்தினார்கள். அருகருகே இரண்டு செங்கற்களை வைத்து, அவற்றின் நடுவே இன்னொரு செங்கல்லைப் பொருத்தி, கலவையைப் பூசினார்கள். உறுதியான கட்டடங்களை உருவாக்கும் இந்தப் பொறியியல் அறிவு நம்மை வியக்கவைக்கிறது.

நகரங்களுக்கு வெளியே, விசாலமான கோட்டைகள் இருந்தன. அவற்றுக்குள்ளும் வீடுகள் – சில மிகப் பெரியவை, பல சிறியவை. வெள்ளம், எதிரிகள் தாக்குதல் ஆகியவை நடந்தால், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, ஆட்சிபீடத்தில் இருந்தவர்கள் இந்தக் கோட்டைவீடுகளைப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஆட்சி முறை

இத்தனை வரைமுறைகளோடும், ஒழுங்காகவும் நகரங்களும், கிரமங்களும் இருந்தமையால், நிச்சயமாகக் கட்டுக்கோப்பான ஒரு தலைமை ஆட்சி செய்திருக்கவேண்டும். அகழ்வில் கிடைத்திருக்கும் முத்திரைகளும் இதை நிரூபிக்கின்றன. வணிகர்களின் விற்பனைப் பொருட்களை மேற்பார்வையிடவும், அரசுக்கான வரிப்பணம் வசூலிக்கப்பட்டுவிட்டதா என்பதை மேற்பார்வை செய்யவும், இந்த முத்திரைகள் அடையாளங்களாக உதவியிருக்கலாம். ஆனால், இவற்றுள் பல முடிவுகளின் அடிப்படை ஆதாரங்கள், பல அனுமானங்கள். விடை இல்லாத பல வினாக்கள் உண்டு:

  • பரந்து விரிந்து கிடந்த சிந்து சமவெளி வட்டாரம் ஒரே பேரரசின் கீழ் இருந்ததா, எனில் பேரரசர் யார்?
  • ஒரே குடும்பம் தொடர்ந்து ஆண்டதா??
  • தலைநகரம் எது??
  • ஒரே மன்னர் ஆண்ட ஆட்சியா அல்லது ஏராளம் குறுநில மன்னர்களோடு பேரரசர் பகிர்ந்துகொண்ட கூட்டாட்சியா??
  • நிர்வாக அமைப்பு எப்படி வடிவமைக்கப்பட்டிருந்தது??
சமூக வாழ்க்கை

சிந்து சமவெளி நாகரிகம் ஆணாதிக்கச் சமுதாயமாக இருந்தது. இதைப் போலவே, சமூகத்தில் இரண்டு வர்க்கங்கள் இருந்தன. ஆட்சியாளர்கள், வியாபாரிகள், பூசாரிகள் ஆகியோரிடம் பணம் / பதவி / அதிகாரம் இருந்தது. இவர்கள் உயர் மட்டத்தினர். இவர்கள் வீடுகளுக்கும், சாமானியர் வீடுகளுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். முதலாவதாக, வீடுகளின் அளவில் வித்தியாசம். பெரிய வீடுகளில் முற்றம், பல குளியலறைகள், ஏராளமான அறைகள் எனப் பல வசதிகள். சிறிய வீடுகளில் அடிப்படை வசதிகள் மட்டுமே.

உடையிலும், சாமானியர் எளிய சணல் ஆடைகளை அணிந்தார்கள். செல்வந்தர்கள் பருத்தி ஆடைகளில் பவனி வந்தார்கள். பெரும் குளியலறைகள் பணம், பதவி படைத்தவர்களின் ஏகபோக உரிமை. பொதுஜனங்கள் பொதுக் கிணறுகளில் குளித்தார்கள்.

வசதி படைத்தவர்கள் தங்கள் வீடுகளிலும் வியாபாரத்திலும் வேலைக்காரர்களையும், அடிமைகளையும் பயன்படுத்தினார்கள். அடிமைகள் எஜமானர்களின் “சொத்துக்கள்.” அவர்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். அடிமைகள் வியாபாரம் அனுமதிக்கப்பட்டிருந்தது. சிந்து சமவெளி அடிமைகள் மெசப்பொட்டேமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது சாதாரண வழக்கம்.

தொழில்கள்

வியாபாரம்

ஏராளமானவர்கள் ஈடுபட்டிருந்த விவசாயம், வியாபாரத்துக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தது. விவசாயிகள் உபரித் தயாரிப்பை நகரங்களுக்கும், அண்டைய நாடுகளுக்கும் விற்பனை செய்தார்கள். தானியங்களை எடைபோட்டு விற்க, எடைக் கற்களைப் பயன்படுத்தினார்கள். இவை கல், களிமண், உலோகம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை.

வியாபாரம் பண்டமாற்று முறையில் நடத்தப்பட்டது. பணம் புழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. கிராமத்து விவசாயிகள் உணவுப் பொருள்களை நகரத்தாரிடம் கொடுத்து, ஆடைகள், நகைகள் ஆகியவற்றைப் பகரமாகப் பெற்றார்கள். காலப்போக்கில், பிற தொழில்களுக்குத் தேவைப்பட்ட மாக்கல், செம்பு, வெண்கலம், தங்கம், வெள்ளி, பீங்கான், பருத்தி, கடல் சங்கு ஆகிய பொருள்களைப் பெறும் வழக்கம் வளர்ந்தது. சாலைச் சரக்குப் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிகள் பயன்படுத்தினார்கள்.

சிந்து நதியின் துணையால், படகுப் போக்குவரத்து எளிமையாக இருந்தது, பிற நாடுகளோடு வியாபாரம் நடத்த வழி வகுத்தது. இதனால், சிந்து சமவெளியினரின் வணிக உறவுகள் தொலைதூர மெசப்பொட்டேமியா வரை நீண்டன. சிந்து சமவெளிப் பொருட்களை விற்பதற்காகவே, ஆப்கனிஸ்தானில் தனிச்சந்தை ஒன்று இருந்தது. மத்திய ஆசியப் பகுதிகளுடன் வியாபாரம் செய்ய இந்தச் சந்தை உதவியது.

குஜராத் மாநிலத்தில் லோதால் நகரம், அகமதாபாத் பவநகர் பாதையில், அகமதாபாதிலிருந்து 85 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஏராளமான மணிமாலைகள், வளையல்கள், நகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், செம்பு உருக்கும் தொழிற்சாலைகள், வெண்கலத் தயாரிப்புத் தொழிற்கூடங்கள் இங்கே இருந்தன. இந்தத் தொழிற்கூடங்கள் 2400 சதுர அடியும், பதினான்கு அறைகளும் கொண்டவையாக இருந்தன. லோதாலின் முக்கிய ஏற்றுமதி மணிமாலைகளும், நகைகளும்: முக்கிய இறக்குமதி அரேபிய நாடுகளிலிருந்து செம்பு வார்ப்புக் கட்டிகள். ஏற்றுமதி, இறக்குமதியால் விறுவிறுப்பாகச் சுழன்ற லோதால் துறைமுகம் சிந்து சமவெளி நாகரிக ஏற்றுமதியின் மையப்புள்ளி.

கை நெசவு

அன்றைய சிந்து சமவெளியினர் சணலிலும், பருத்தியிலும் ஆடைகள் நெய்தார்கள். நூல் நூற்கும் தக்கிளிகள், தறிகள், சாயம் தோய்த்த பருத்தி ஆடைகள் என இதற்குப் பல ஆதாரங்கள்!

களிமண் பொருட்கள்

களிமண், சிந்து சமவெளி முன்னேற்றத்தின் அற்புத வெளிப்பாடு. நகரங்களிலும், கிராமங்களிலும் சூளைகள் இருந்தன. நெருப்பின் சூடு எல்லாப் பாத்திரங்களுக்கும் சமமாகக் கிடைக்கும்படி சூளைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம், எப்படித்தான் செய்தார்களோ என்று நம்மை ஆச்சரியப்படவைக்கிறது.

களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள், சட்டிகள், கலயங்கள், ஜாடிகள், அடுக்களை சாமான்கள் குயவர் சக்கரத்தால் உருவாக்கப்பட்டு, உலைகளில் சுடப்பட்டன. சில பானைகளில் மயில் வடிவ ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.

0

http://www.tamilpaper.net/?p=8517

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 26

சிந்து சமவெளி நாகரிகம் – III

எஸ்.எல்.வி. மூர்த்தி

290x230-indus-valley-civilization.jpg-w6

அறிவியல் அறிவு : உலோகங்கள்

செம்பு, வெள்ளீயம் இரண்டையும் கலந்தால் வெண்கலம் செய்யலாம் என்னும் அறிவியல் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சுட்ட செங்கற்களால் ஆன தொட்டிகளில் செம்பையும், வெள்ளீயத்தையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து காய்ச்சி, வெண்கலம் தயாரித்தார்கள். வெண்கலத்தால் அரிவாள், கோடரி போன்ற கருவிகள் செய்தார்கள். இவை செப்புக் கருவிகளைவிட உறுதியானவை என்று உணர்ந்தார்கள். வெண்கலப் பாத்திரங்களும், அடுக்களையில் மண்சட்டிகளின் இடங்களைப் பிடித்தன. ஒரு பெண்ணுக்குத் தன் அழகைத் தானே ரசிக்கும் ஆசை. கணவனிடம் சொன்னாள். அவன் வெண்கல முகம் பார்க்கும் “கண்ணாடி” கொண்டுவந்தான். விரைவில் இது பல இல்லங்களை அலங்கரிக்கத் தொடங்கியது.

பீங்கான்

பீங்கான் செய்யும் ரகசியம் அவர்கள் கைவசம் இருந்தது. களிமண்ணையும் சில கனிமங்களையும் சேர்த்து பீங்கான் உருவாக்கப்பட்டது. ஆடைகளுக்கான பொத்தான்கள், சிறு கிண்ணங்கள், வளையல்கள், தாயத்துக்கள், சிற்பங்கள் ஆகியவை பீங்கானில் தயாராயின.

சக்கரங்கள்

சக்கரங்கள் மனிதர்களின் முன்னேற்றத்தின் மூலாதாரங்கள், ஒரு நாகரிகம் எத்தனை தூரம் வளர்ந்திருக்கிறது என்பதன் அளவுகோல்கள். குயவர் எப்படி மண்பாண்டங்கள் செய்கிறார்? தன் குயவர் சக்கரத்தைச் சுழற்றுவதால். தொழிற்சாலைகள் எப்படித் தயாரிப்புப் பொருட்களைச் செய்து குவிக்கின்றன? இயந்திரங்களின் சக்கரம் சுழல்வதால். மனிதர்கள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு எப்படிப் போகிறோம்? சைக்கிள்களில், மோட்டார் சைக்கிள்களில், கார்களில், பஸ்களில், ஆட்டோக்களில், ரயில்களில், விமானங்களில் போக்குவரத்து நடைபெறுவதற்கு முக்கியக் காரணம் சக்கரம்.

சக்கரங்கள் இல்லை என்றால், நம் தனிப்பட்ட வாழ்க்கை, போக்குவரத்து, வர்த்தகம் அத்தனையும் நின்றுவிடும். ஆகவே. சக்கரங்கள் பற்றி ஒரு மக்கள் கூட்டத்துக்குத் தெரிந்திருக்கிறது என்றால், அவர்கள் அதைப் பயன்படுத்தினார்கள் என்றால், அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்வானதாக இருந்தது, அவர்கள் நாகரிகம் உச்சத்தில் இருந்தது என்று பொருள்.

சிந்து சமவெளியினர் சக்கரங்கள் பற்றித் தெரிந்துவைத்திருந்தார்கள், அவற்றை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினார்கள். மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் நிறைய வெண்கல பொம்மைகள் கிடைத்திருக்கின்றன. இவற்றுள் ஏராளமானவை வண்டி பொம்மைகள். மூன்று விதமான வண்டிகள் இருந்தன. ஒன்று சாதாரணமான இரண்டு சக்கர வண்டி. இவை பெரும்பாலும் சரக்குகளின் போக்குவரத்துக்காக உபயோகப்படுத்தப்பட்ட வண்டிகளின் நகல்களாக இருக்கலாம். இரண்டாம் வகை வண்டிகள் ஓட்டுபவரின் தலைக்கு மேல் வளைவான கூரையோடு உள்ளன. தனி மனிதர்கள் பயணம் செய்ய இத்தகைய வண்டிகளைப் பயன்படுத்தியிருக்கலாம். மூன்றாம் வகை வண்டிகள் நான்கு, ஐந்து பேர் பிரயாணம் செய்யும் விதத்தில் கூண்டு வகையில் உள்ளன.

மருத்துவ அறிவு

சிந்து சமவெளியினரின் மருத்துவ ஞானம் குறித்த தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பல இடங்களில் கிடைத்த மண்டை ஓடுகளில் தலையில் ஆணியால் அடித்துத் துளையிட்ட அடையாளங்கள் இருக்கின்றன. இவை ஏதாவது மருத்துவ முறையோ, அல்லது பேய், பிசாசுகளைத் துரத்தச் செய்த மாந்திரீகமோ, தெரியவில்லை. பல மண்டை ஓடுகளில் இருக்கும் பற்களில் துளைகள் காணப்படுகின்றன. இவை ஏதோ கூர்மையான கருவிகளால் செய்யப்பட்ட ஒழுங்கான துளைகள். பல் மருத்துவம் அன்று இருந்ததோ என்னும் சந்தேகத்தை இவை எழுப்புகின்றன.

கணித அறிவு

நீளம், எடை, நேரம் ஆகியவற்றை அளக்கச் சிந்து சமவெளிக்காரர்கள் அறிந்திருந்தார்கள். வியாபாரத்தில் கல், களிமண், உலோகம் ஆகியவற்றால் செய்யப்பட்ட எடைகளைப் பயன்படுத்தினார்கள் என்று பார்த்தோம். அவர்களுடைய எடைகள் 5:2:1 என்னும் விகிதத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. இதற்குக் கணித ரீதியிலான காரணம் கட்டாயம் இருக்கவேண்டும். இந்தக் காரணம் என்னவென்று நமக்குத் தெரியவில்லை. எடைகள் 0.05, 0.1, 0.2, 0.5, 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500 என்னும் அளவைகளில் இருந்தன. ஒரு அளவை சுமார் 28 கிராம். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் நூல் இதே அளவைகளைப் பயன்படுத்துவது ஆச்சரியமான விஷயம்!

சிந்து சமவெளியில் நீளங்களை அளக்கும் அளவைகள் (அடி ஸ்கேல்) இருந்தன. இவை வெண்கலம், யானைத் தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்தன. பழங்கால அளவை ஒன்று கிடைத்துள்ளது. இதன் உதவியால் அளக்க முடியும் குறைந்த நீளம் 1.0704 மில்லி மீட்டர். ஆமாம், அத்தனை துல்லியமான அளவைகள்!

கலைகள்

குயவர் சக்கரம் உருவாக்கிய களிமண் பொம்மைகள், சிந்து சமவெளி நாகரிகத்தின் சிறப்பு அம்சங்கள். பசுக்கள், கரடிகள், குரங்குகள், நாய்கள் ஆகிய பொம்மைகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இவை மக்களிடையே பிரபலமாக இருந்திருக்கவேண்டும். பாதி உடல் காளை மாடு, மறுபாதி வரிக்குதிரை என ஏராளமான பொம்மைகள். அப்படிப்பட்ட மிருகங்கள் வாழ்ந்தனவா அல்லது கலைஞர்களின் கற்பனையா? தெரியவில்லை. ஏராளமான பெண் பொம்மைகள். இவை தெய்வங்கள் அல்லது தேவதை வடிவங்களோ? ஒரே மாதிரியான பொம்மைகளை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கத் தோதாக, மர அச்சுக்கள் பயன்பட்டன.

கடலில் மூழ்கிச் சங்கு எடுத்தார்கள். இவற்றால், நகைகள், வளைகள் ஆகியவை செய்து அணிந்தார்கள். இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதற்காகத் தொழிற்கூடங்கள் இருந்தன. இங்கே, யானைத் தந்தத்தால் கைவினைப் பொருட்களும் உருவாக்கப்பட்டன.

களிமண், சங்கு, தந்தம் ஆகியவற்றோடு, தங்கள் கலைத்திறமையை வெளிக்காட்ட அவர்கள் பயன்படுத்திய இன்னொரு முக்கிய ஊடகம் – மாக்கல் (Soap Stone)! அழகு அழகான சிற்பங்கள், செப்புகள், முத்திரைகள் ஆகியவை மாக்கல்லில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டன.

வண்ணக் கற்களால் மணிகள் செய்து, நூலில் கோர்த்து நகைகள் செய்தார்கள். நகைகள் உறுதியாக இருக்க, தங்கத்தை மட்டுமே பயன்படுத்தக்கூடாது, வெள்ளியையும் அத்தோடு சேர்க்கவேண்டும் என்னும் சூட்சுமம் எப்படியோ அவர்களுக்கு அத்துப்படி!

சாதாரணமாகப் பண்டைய நாகரிகங்களில் சிற்பக் கலை செழித்தோங்கி வளர்ந்திருக்கும். அந்த விதத்தில், சிந்து சமவெளி அதிக ஆதாரங்கள் தரவில்லை. ஆனால், மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள இரண்டு சிற்பங்கள் அவர்களின் கலையுணர்வையும், சிற்பத் திறமையையும் வெளிப்படுத்துகின்றன. அவை – பூசாரி மன்னன் (Priest King), நடன மங்கை (Dancing Girl) என்னும் பெயர்களில் அழைக்கப்படும் சிற்பங்கள்.

பூசாரி மன்னரைப் பாருங்கள். மாக்கல் படைப்பு. 17 சென்டிமீட்டர் உயரம். அடிப்பாகம் சிதைந்திருக்கிறது. மார்பளவுச் சிற்பம். பாதி மூடிய கண்கள். தியானத்தில் ஆழ்ந்திருக்கிறாரோ? தாடி. சவரம் செய்யப்பட்ட மீசைப் பாகம். தலைமுடியை இணைத்துக் கட்டிய துணிப்பட்டை, மார்புக்குக் குறுக்கே பூ வேலைப்பாட்டோடு அமைந்த மேலங்கி. காதுகளுக்குக் கீழே இரண்டு துவாரங்கள் – கழுத்தில் நெக்லஸ் போன்ற நகையைச் சிற்பத்துக்கு அணிவித்திருந்திருக்கலாம். அந்தக் காலத்துப் பூசாரிகள் பற்றிய அதிக விவரங்கள் இல்லை. ஆகவே, பூசாரி மன்னர் என்று ஆராய்ச்சியாளர்கள் பெயர் வைத்திருந்தாலும், இவர் நிஜத்தில் அரசராகவோ, வணிகராகவோ இருக்கலாம் என்று பல யூகங்கள் உள்ளன.

கலைநுட்பத்துடன் இருக்கும் நடன மங்கை 10. 8 சென்டிமீட்டர் உயரத்தில் வெண்கலச் சிலையாக நிற்கிறாள். இரண்டு கைகளிலும் வளையல்கள். வலது கை இடுப்பில். இடது கை, சற்றே உயர்த்தி வைத்திருக்கும் இடது காலின்மேல். பிதுக்கிய உதடுகளோடு தருவது ஒய்யார போஸ். பாவம், காலப்போக்கில் அவள் பாதங்கள் உடைந்திருக்கின்றன.

மொழி

சிந்து சமவெளியினரின் எழுத்து, பிற நாகரிகங்களின் எழுத்துக்கள்போலவே, சித்திர எழுத்து. வலமிருந்து இடது பக்கமாகப் படிக்கவேண்டும். பழங்கால இலச்சினைகளில் அறுநூறுக்கும் அதிகமான சித்திர எழுத்துக்கள் கிடைத்துள்ளன. ஆனால், இத்தனை ஆண்டுகள் கடந்தும், அவற்றின் அர்த்தங்களை ஆராய்ச்சியாளர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

http://www.tamilpaper.net/?p=8545

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 27

சிந்து சமவெளி நாகரிகம் – IV

எஸ்.எல்.வி. மூர்த்தி

Shiva_Pashupati-298x300.jpg

மத நம்பிக்கைகள்

புரிந்துகொள்ள முடியாத எழுத்துககள் காரணமாக, சந்து சமவெளியினரின் சமூக வாழ்க்கை, மத நம்பிக்கைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள, நாம் கலைப்பொருட்கள், இலச்சினைகள் ஆகியவற்றைத்தாம் நம்பவேண்டியிருக்கிறது.

ஏராளமான இலச்சினைகளில் இருக்கும் ஓர் உருவம் பசுபதி. இது சிவபெருமானைக் குறிக்கிறது என்கிறார்கள். பசு என்றால், வடமொழியில் ஜீவராசிகள் என்று அர்த்தம்: பதி என்றால் தலைவர். அதாவது, எல்லா ஜீவராசிகளையும் காப்பவர், அவர்களின் தலைவர். படைப்பின் மூலகுரு, ஆண் வடிவம். சிந்து சமவெளியில் கிடைத்த இலச்சினையில் பத்மாசனம் என்னும் யோகா போஸில் உட்கார்ந்திருக்கிறார். மூன்று முகங்கள், தலையில் பெரிய கொம்பு. அவரது வலது பக்கம் ஒரு காண்டாமிருகம், ஒரு எருமை: இடது பக்கம் யானை, புலி: காலடியில் இரண்டு மான்கள். பசுபதியை லிங்க் வடிவமாகவும் வணங்கினார்கள்.

சக்தி வடிவில் தெய்வம்

ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட பல களிமண் சிற்பங்களில் பெண் தெய்வீக உருவங்கள் உள்ளன. சில விக்கிரகங்களில், பெண் உருவத்தின் வயிற்றிலிருந்து செடி ஒன்று வளர்ந்திருக்கிறது. எல்லாப் படைப்புகளுக்கும் ஆதார சுருதியான பெண் சக்தியாக மக்கள் வணங்கிய தெய்வம். உடை அரைகுறையாகச் சித்தரிக்கப்பட்டிருந்தபோதிலும், பல நகைகளும், விசிறி போன்ற தலை அலங்காரமும் அம்மனை அணி செய்கின்றன. ஏராளமான சிலைகளின்மேல் புகை படிந்திருக்கிறது. சாம்பிராணி போன்ற பூசைப்பொருட்களால் வழிபாடு செய்திருக்கலாம் என்று இந்தப் புகைப்படலம் சொல்கிறது.

விநோதக் காளை

பல இலச்சினைகள் காளைகளின் உருவம் தாங்கி இருக்கின்றன. மக்களின் முக்கியத் தொழில்கள் விவசாயமும், அதிலிருந்து எழுந்த வியாபாரமும். இவை இரண்டுக்கும் காளைகள் அவசியத் தேவை – நிலங்களை உழும் ஏர்களில் பூட்டவும், தானியங்களை வண்டிகளில் கொண்டு செல்வதற்கும். ஆகவே, காளைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் புரிகிறது.

ஆனால், ஏராளமான முத்திரைகளில் ஒரு ஒற்றைக் கொம்புக் காளை (Unicorn) ஏன் தோன்றுகிறது என்று தெரியவில்லை. இந்தக் காளையின் உச்சந்தலையில் தொடங்கும் கொம்பு முன்னால் நீண்டு மேல் நோக்கி வளைந்திருக்கிறது. முதுகில் திமில் இல்லை. எல்லா இலச்சினைகளிலும் காளை வலதுபுறமாக மட்டுமே திரும்பியவாறு இருக்கிறது. காளையின் முன்னால் தீவனத் தொட்டி இருக்கிறது. காளைகளைக் கோவில்களுக்கு நேர்ந்துவிடும் வழக்கம் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

அரசமரம்

அரசமரம் தெய்வீகத்தன்மை கொண்டதாகக் கருதப்பட்டது, வணங்கப்பட்டது. அரசமரமும், அதன் இலைகளும் பல முத்திரைகளில் தோன்றுகின்றன. இந்தப் பழக்கம் இன்றும் நம் நாட்டில் தொடர்கிறதே?

பிற தெய்வங்கள்

எருது, காளை, புலி ஆகியவற்றையும் வழிபட்டார்கள். இன்னொரு விசித்திர உருவமும் வணங்கப்பட்டது. உடல் மனித உருவம்: காளைபோல் கொம்பு, குளம்பு, வால். இப்படி மனிதன் – காளை இணந்த கற்பனை உருவம். இவற்றோடு, சூரியன், நெருப்பு, தண்ணீர் ஆகியவையும் தெய்வங்களாக இருந்தன.

(மூட) நம்பிக்கைகள்

ஏராளமான தாயத்துகள் கிடைத்துள்ளன. நோய்கள், விலங்குகளின் தாக்குதல்கள், உடைமைகளுக்கு ஏற்படும் இழப்புகள், இயற்கையின் சீற்றமான வெள்ளப் பெருக்கு, மழை பொய்த்தல், சூறாவளிக் காற்று ஆகியவற்றுக்குத் தீய சக்திகளும், தெய்வ குற்றங்களும் காரணங்கள் என்று நம்பினார்கள். தீய சக்திகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தாயத்துக்கள் கட்டிக்கொண்டார்கள். தெய்வ குற்றங்களுக்குப் பரிகாரமாக விலங்குகளைப் பலியிட்டார்கள். பல் இடங்களில் விலங்குகளைப் பலியிடுவதற்காகவே குழிகள் வெட்டப்பட்டிருந்தன.

இப்படி நம்பிக்கைகளும் வழிபாடுகளும் இருந்தபோதும், கோவில்கள் எழுப்பி, சடங்குகள் நடத்தி பூஜைகள் செய்யும் வழக்கம் இல்லை என்று தோன்றுகிறது.

இறுதிச் சடங்குகள்

நகரங்களுக்கு வெளியே இடுகாடுகள் இருந்தன. இறந்தவர் யாராக இருந்தாலும், இங்கேதான் புதைக்கவேண்டும் என்னும் விதி இருந்தது. இடுகாடுகளில் சவக்குழிகள் வடக்கு தெற்காக வெட்டப்பட்டிருந்தன. அவற்றில், உடல்களை மல்லாக்கப் படுத்த நிலையில் வைத்து, தலைகளை வடக்குப் பக்கமாகத் திருப்பிவைத்துப் புதைத்தார்கள். உடல்களோடு, அவர்கள் அணிந்த நகைகளையும், அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பொருட்களும் மண்ணுக்குள் ஐக்கியமாயின.

சடலங்களை எரிக்கும் வழக்கம் பின்னால் வந்தது. அஸ்தியைக் களிமண் குடுவைகளில் சேகரித்துச் சேமித்தார்கள். மறுபிறவி எடுப்பதில் அவர்கள் நம்பினார்களா இல்லையா என்று தீர்க்கமாகத் தெரியவில்லை.

நாகரிக மறைவு

இத்தனை மாபெரும் சிறப்புக்கள் கொண்ட ஒரு நாகரிகம் விட்டுச் சென்றிருக்கும் அடையாளங்களும் ஆதாரங்களும் மிகக் குறைவு. ஏன்? பிற பண்டைய நாகரிகங்களை நாம் பார்க்கும்போது, நமக்கு என்ன தெரிகிறது? அந்தப் பாடங்கள் சிந்து சமவெளி பற்றிப் புரிந்துகொள்ள நமக்கு உதவுமா? பார்ப்போம்.

சுமேரிய நாகரிகம் சரிந்தது ஏன்? முதல் காரணம், உள்நாட்டுப் போர்கள். இதனால், மாவீரன் அலெக்ஸாண்டர் போர் தொடுத்து வந்தபோது, சுமேரியா அவர் காலடியில் விழுந்தது. நாகரிகத்தைத் தாங்கிப் பிடித்த இயற்கையும் தன் சோதனைகளைத் தொடங்கியது. திடீர்ப் பருவநிலை மாற்றங்கள் வந்தன: வெள்ளப் பெருக்கு, கடும் குளிர், கொடிய வெப்பம் ஆகியவை வந்தன. உயிர்நாடியான விவசாயம் பாதிக்கப்பட்டது. வறட்சி இருநூறு வருடங்களுக்குத் தொடர்ந்தது. இதனால், பிற முன்னேற்றங்களும் சரிந்தன, மறைந்தன.

சீன நாகரிகம் கி.மு. 5000 முதல் இன்றுவரை, 7000 ஆண்டுகளுக்கும் அதிகமாக நீடித்து நிற்கிறது. ஆனால், பாரம்பரியப் பெருமைகள் மெள்ள மெள்ள மறைந்துவருகின்றன. முதலாளித்துவப் பாதையில் நடக்கத் தொடங்கும் முயற்சிகள் பொருளாதார வளர்ச்சி தரும் அதே நேரத்தில், ஏழை, பணக்காரர் என்னும் இரு வர்க்கங்களை உருவாக்கிவருகின்றன. அவர்களுக்கிடையே இடைவெளி விரிவாகிவருகிறது. அமெரிக்கக் கலாசார சுனாமி சீனப் பெருமைகளை விழுங்கிவிடும் அபாயம் தொடர்கிறது.

ஆகவே, புராதன நாகரிகங்கள் திடீரென மறைவதில்லை. முதலில் தேக்க நிலையில் இருக்கின்றன: பிறகு, மெள்ள மெள்ளச் சரிகின்றன.

சிந்து சமவெளியைப் பொறுத்தவரையில், இந்த “மெள்ள மெள்ள” என்னும் இடைநிலை இல்லை. மொஹஞ்சதாரோவில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மண்டை ஓடுகள் குவிந்து கிடந்தன. ஊருக்கு வெளியே இடுகாடுகளை அமைத்து, இறந்தவர்களைச் சீராக அடக்கம் செய்த ஒரு சமுதாயத்தில் இது எப்படி சாத்தியம்? மக்கள் ஒட்டுமொத்தமாக எப்படி மரணம் அடைந்திருப்பார்கள்? மர்மம், மர்மம்.

தடயங்கள் அதிகம் இல்லாமல் அழிவு வந்தது என்றால், எதிர்பாராத முடிவு வந்திருக்கவேண்டும். இந்தத் திடீர் முடிவு எப்படி வந்திருக்கலாம்?

ஆராய்ச்சியாளர்களின் யூகங்கள் பல:

  • கடுமையான நில நடுக்கம் சிந்து சமவெளிப் பகுதியையே அழித்திருக்கலாம்.
  • சிந்து நதியில் பெருவெள்ளம் வந்து நிலப் பிரதேசத்தை மூழ்கடித்திருக்கலாம்.
  • சிந்து, யமுனை, சட்லெஜ் ஆகிய நதிகளின் போக்குகள் மாறி, வறட்சி வந்திருக்கலாம்.
  • அருகில் இருக்கும் ராஜஸ்தான் போன்ற பகுதிகள் பாலைவனங்கள். இயற்கை மாற்றங்களால், சிந்து சமவெளிப் பகுதியும் பாலைவனமாகியிருக்கலாம்.
  • கைபர் கணவாய் வழி வந்த ஆரியர்கள் உள்ளூர் மக்களை ஈவு இரக்கமின்றி ஒழித்துக்கட்டியிருக்கலாம். அகழ்வாராய்ச்சிகளில் வாள், ஈட்டி, கத்தி போன்ற ஆயுதங்கள் ஒன்றுகூடக் கிடைக்கவில்லை. எனவே, நிராயுதபாணிகளான சிந்து சமவெளியினர் ஆரியர்களிடம் தோற்றதும், காணாமலே போனதும், ஆச்சரியமான சமாச்சாரங்கள் அல்ல.
  • பெரும் தொற்று நோய்க்கு மக்கள் பலியாகியிருக்கலாம்.
எதற்கும் திட்டவட்டமான பதில் இல்லை.

0

http://www.tamilpaper.net/?p=8555

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 28

கிரேக்க நாகரிகம் – I

எஸ்.எல்.வி. மூர்த்தி

GreeceMap-300x199.jpg

கிரேக்க நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 323 )

எல்லாப் பண்டைய நாகரிகங்களுக்கும் பல பாரம்பரியப் பரிணாமங்கள் உள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தனித்துவம் மிக்கது கிரேக்க நாகரிகம். சீனாவுக்குப் பெரும் சுவர், எகிப்துக்குப் பிரமிட்கள், மம்மிகள். ரோமாபுரிக்கு வீரம். கிரேக்கத்துக்கு ஒலிம்பிக்ஸ் போட்டிகள், கல்வி, அறிவு, சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ மேதைகள் என்று அள்ள அள்ளக் குறையாமல் பெருமைகள் பொங்குகின்றன.

ஆரம்பம்

2823 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த கிரேக்க நாகரிகத்தில் சில முக்கிய காலகட்டங்கள் உள்ளன. ஆரம்பம் இதிகாசமும், வரலாறும், நிஜமும்,கற்பனையும் இணைந்த கலவை. ஆசியா மைனர் பகுதியின் வடமேற்குத் திசையில் இருக்கும் தீபகற்பம் பெலப்பொனீஸ் (Pelaponnese). இங்கு மைசீனியன்கள் (Mycenaeans), பெலாஸ்ஜியர்கள் (Pelasgians) ஆகியோர் குடியிருந்தார்கள். கி. மு 2000 வாக்கில் கிரேக்கம் என்ற மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட அக்கீனியர்கள் (Achaeans) வடக்குப் பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்து பெலப்பொனீஸில் குடியேறினார்கள். இவர்கள் தமது மொழி, மதம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை, மைசீனியர்களிடமும், பெலாஸ்ஜியர்களிடமும் பரப்பினார்கள். காலப்போக்கில், இந்த மண்ணின் மைந்தர்கள் முழுக்க முழுக்க அக்கினீயர்களின் கலாசாரத்துக்கு மாறிவிட்டார்கள். மூன்று தரப்பினரும் இணைந்த மைசீனிய நாகரிகம் உருவாயிற்று. இதன் ஆதாரச் சுருதி கிரேக்கக் கலாசாரம்தான்.

பெலப்பொனீஸ் ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி. ஏன் தெரியுமா? பெலப்பொனீஸ் என்னும் பெயரே, கிரேக்கப் பாரம்பரியத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட காரணப் பெயர். பெலப்ஸ் என்னும் கடவுளின் பெயர்தான் இந்தத் தீபகற்பத்துக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. யார் இந்த பெலப்ஸ்? இவர் வம்சாவளியைப் பார்ப்போம்.

கிரேக்கர்களின் முழு முதற் கடவுள் ஜீயஸ் (Zeus). இவர் மகன் டான்ட்டலஸ் (Tantalus) கிரேக்கத்தின் ஒரு பகுதியை ஆண்டவர். கடவுள் பரம்பரையில் வந்தாலும், இவருக்குச் சாத்தானின் புத்தி. கடவுள்களின் உணவான அமிர்தத்தைத் திருடிக்கொண்டு வருவார், தன் நண்பர்களுக்குக் கொடுப்பார். ஜீயஸின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக, டான்ட்டலஸ் செய்த அக்கிரமங்களைப் பிற கடவுள்கள் மறந்தார்கள், மன்னித்தார்கள். ஆனால், ஒரு நாள், டான்ட்டலஸின் அநியாயம் எல்லை மீறியது, தன் அப்பா ஜீயஸ், மற்றும் பிற தெய்வங்களைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். அவருடைய மகன் பெல்ப்ஸ் சிறுவன். அவனைக் கொலை செய்தார், சிறு சிறு துண்டுகளாக வெட்டினார், சூப் வைத்தார். நர மாமிசம் சாப்பிட்டதாக தெய்வங்கள்மேல் பழி சுமத்தவேண்டும், கை கொட்டிச் சிரிக்கவேண்டும் என்பது அவர் ஆசை.

சூப் மேசையில் வைக்கப்பட்டது. பூமாதேவிக்கு பயங்கரப் பசி. சூப்பைக் குடித்துவிட்டார். பிற தெய்வங்களுக்கு டான்ட்டலஸின் சூழ்ச்சி புரிந்தது. ஜீயஸ் தன் மகனின் ஈவு இரக்கமற்ற செயல் கண்டு கொதித்தார், டான்ட்டலஸைக் கொன்றார், பெலப்ஸை மரணத்திலிருந்து மறுபடியும் எழுந்துவரச் செய்தார்.

தன் தவறுக்குப் பிராயச்சித்தமாக பூமாதேவி பெலப்ஸுக்கு யானை தந்தத்தால் கைகள் கொடுத்தார்: அஃப்ரோடைட் (Aphrodite) அழகு தந்தார்: ஏரீஸ் (Ares) வீரம் கொடுத்தார். எத்தீனா (Athena) அறிவு அளித்தார். கடல் தெய்வமான பொஸைடான் (Poseidon) மனத்தில் பெல்ப்ஸ்மீது காதலே வந்தது. அவரைத் தன்னுடனேயே தேவலோகத்தில் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார். பெல்ப்ஸுக்கு மந்திர சக்தி கொண்ட ஒரு ரதத்தைப் பரிசளித்தார். ஆனால், அவருக்கு பூவுலகில் பல கடமைகளை ஜீயஸ் நிர்ணயித்திருந்தார். ஆகவே பெல்ப்ஸ் அஃப்ரோடைட்டின் காதலை உதறித் தள்ளிவிட்டு கிரேக்கம் வந்தார்.

இத்தனை மகத்துவம் கொண்ட பெல்ப்ஸின் பெயர் தாங்கிய மண் சாதாரணமானதாக இருக்கமுடியுமா? அற்புத நாகரிகத்தின் விளைநிலமாயிற்று.

கி.மு. 1100. பெலப்போனீஸ்மீது, வடக்கிலிருந்து டோரியர்கள் (Dorians) என்னும் இனத்தார் படையெடுத்து வந்தார்கள். அவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்குமிடையே கடும்போர் நடந்தது. போரில் அக்கினீயர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். போர் முடிந்தது. டோரியர்களுக்கு மாபெரும் வெற்றி. நாட்டைக் கைப்பற்றிய டோரியர்க ள் அக்கினீயர்களைக் கொடுமைகளுக்கு உள்ளாக்கினார்கள். அக்கினீயர்கள் பெலப்போனீஸ் விட்டு வெளியேறினார்கள். மத்தியதரைக் கடல் அருகே கிரீஸ் என்ற இடத்தில் தங்கள் நாட்டை உருவாக்கினார்கள். இங்கே பிறந்து வளர்ந்து செழித்தது கிரேக்க நாகரிகம்.

கி. மு 490 – 480 இடைப்பட்ட காலகட்டத்தில் பாரசீகத்தின் (இப்போதைய இரான்) ஒரு பகுதியினர் கிரீஸ்மீது படையெடுத்தனர். இந்தப் போரில் கிரேக்கர்கள் ஜெயித்தனர். ஆனால், இதற்குப் பிறகு தென்ஸ், ஸ்பார்ட்டா, தேப்ஸ் ஆகிய கிரேக்க நகரங்களுக்குள் உள்நாட்டுப் போர்கள் ஏற்பட்டன. கிரேக்கம் தளர்ச்சியடையத் தொடங்கியது.

கி. மு 338. மாஸிடோனிய பிலிப் மன்னர் கிரீஸ்மேல் படையெடுத்து வந்தார். உள்நாட்டுத் தகராறுகளால் பலவீனமடைந்திருந்த கிரேக்கம் பல முனைகளில் பிலிப்பிடம் தோல்வி கண்டது,. ஆனால், பிலிப் முழு வெற்றி காணவில்லை. அவர் தொடங்கிய பணியை, அவர் மகன் முடித்துவைத்தார், கிரேக்க நாட்டைத் தன் சாம்ராஜ்யத்தின் கீழ்க் கொண்டுவந்தார். அவர், மாவீரன் அலெக்ஸாண்டர். இந்த வெற்றி, கிரேக்க நாகரிகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

நிலப்பரப்பு

நாடு முழுக்க மலைகள் நிறைந்த பகுதி. ஏராளமான மலைகளும் ஒரு சில எரிமலைகளும் இருந்தன. மத்தியதரைக் கடல் அருகாமையில் இருந்ததால், எல்லா ஊர்களும் கடற்கரையிலிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்துக்குள் அமைந்திருந்தன.

கிரேக்கத்தில் நூற்றுக்கணக்கான நதிகள் இருந்தன. அலியக்மோனாஸ் (Aliakmonos), அக்கிலூஸ், (Acheloos), பைனியோஸ் (Pineios), எவ்ரோஸ் (Evros), மெஸ்ட்டா (Mesta) ஆகியவை முக்கிய நதிகள்.

கிரேக்கம் என்பது தனிநாடு அல்ல. பல நாடுகள் ஒன்றாகச் சேர்ந்த கூட்டமைப்பு. பகுதிக்குப் பகுதி, வாழ்க்கை முறையிலும், பழக்க வழக்கங்களிலும் ஏராளமான வித்தியாசங்கள் இருந்தன, ஆனால், நாட்டை இணைக்கும் பொதுவான அம்சமாகக கிரேக்க மொழி இருந்தது.

நகர ராஜ்ஜியங்கள்

சாதாரணமாக நாடுகள் எப்படி இருக்கும்? ஒரு சில பெரிய நகரங்கள், ஏராளமான கிராமங்கள். ஆனால், கிரேக்கத்தில் ஒரு முக்கிய வித்தியாசம் – கிரேக்க நாடு ஏராளமான நகரங்களைக் கொண்டதாக இருந்தது. வாழ்க்கை இந்த நகரங்களைச் சுற்றிச் சுழன்றது. நகர ராஜ்ஜியங்கள் (City States) என்று இந்த அமைப்பை வரலாற்று அறிஞர்கள் அழைக்கிறார்கள். சிறிய குன்றுகள், அவற்றின்மீது கோட்டைகள். கோட்டையைச் சுற்றி மதில் சுவர், அதற்குள் கோவில். குன்றின் அடிவாரத்தில் நகரங்கள், கிராமங்கள் – இதுதான் நகர ராஜ்ஜியம். ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, கோரிந்த், மாஸிடோன், தீப்ஸ் என நூற்றுக்கும் மேற்பட்ட ராஜ்ஜியங்கள் இருந்தன. இவற்றுள் ஏதென்ஸ், ஸ்பார்ட்டா முக்கியமானவை.

விவசாயம்

மழை காலத்தில் நதிகளில் பெரு வெள்ளம் பாய்ந்து வரும். ஏப்ரல் தொடங்கி செப்டெம்பர் வரையிலான ஆறு மாதங்களில் வெயில் கொளுத்தும், நதிகள் வறண்டுவிடும், இரண்டு உச்சங்களும் தொட்ட பருவநிலை விவசாயத்துக்கு ஏற்றதல்ல. ஆலிவ் மட்டுமே வளர்க்கமுடியும், வளர்த்தார்கள். ஆலிவ் எண்ணெய் முக்கிய தயாரிப்புப் பொருளாக இருந்தது. உணவு தானியங்களில் பார்லியும், ஒரு சில இடங்களில் கோதுமையும் பயிரிடப்பட்டன, திராட்சைத் தோட்டங்கள் இருந்ததாகச் சில ஆதாரங்கள் கூறுகின்றன.

பெரும்பாலான வீடுகளில் ஆடுகள் வளர்த்தார்கள். இவற்றிலிருந்து பால், மாமிசம், கம்பளி உடைகளுக்கான ரோமம் ஆகியவற்றைப் பெற்றார்கள். கோழிகள், பன்றிகள் ஆகியவையும் உணவுக்காக வளர்க்கப்பட்டன. பணக்காரர்கள் வீடுகளில் மட்டுமே குதிரைகள் இருந்தன. இவை வாழ்க்கையின் வசதிக்கு அடையாளம்.

தொழில்கள்

குடும்ப நிர்வாகம், குழந்தை வளர்ப்பு எனப் பெண்களின் பணி நான்கு சுவர்களுக்குள் சுழன்றது. ஆண்களில் பெரும்பாலானோர் ராணுவத்தில் பணி புரிந்தார்கள். விவசாயம், ஆடு மேய்த்தல், மீன் பிடித்தல், இரும்புப் பொருட்கள் தயாரித்தல் ஆகியவை பிற முக்கிய தொழில்கள், நாகரிகப் பின்காலத்தில் ஆசிரியர்கள், இசைக் கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோரும் உருவானார்கள்.

பலர் வியாபாரம் செய்தார்கள். நகரங்களின் மையப்பகுதியில் சந்தைகள் இருந்தன. இவற்றுக்கு அகோரா (Agora) என்று பெயர். சாதாரணமாக அகோராக்களில் உள்ளூர் சாமான்கள்தாம் கிடைக்கும். ஆனால், ஏதென்ஸ் அகோராக்களில் எகிப்திய லினன், ஆப்பிரிக்க யானைத் தந்தம், சிரிய வாசனைத் திரவியங்கள், ஆப்கனிஸ்தான் பேரீச்சை ஆகியவை விற்பனையாயின. சந்தைகளில் அடிமைகள் வியாபாரமும் உண்டு.

கி.மு. 600 வரை பண்டமாற்று முறையில்தான் வாணிபம் நடந்தது. இதற்குப் பிறகுதான் ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, கொரிந்தியா போன்ற ஒவ்வொரு பகுதியும் தங்கள் நாணயங்களை அறிமுகம் செய்தார்கள். ஏதென்ஸ் நாணயம்தான் பிரபலமானது. ஒவ்வொரு பகுதியும் தங்கள் நாணயங்களை மட்டுமே பயன்படுத்தினார்கள். ஒவ்வொன்றுக்குமிடையே நாணயப் பரிமாற்று விகிதம் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அகோராக்களில் அரசாங்கத்தின் பல கட்டுப்பாடுகள் இருந்தன. மூன்றுவித அரசாங்கச் அதிகாரிகள் இருந்தார்கள். ஒரு குழு பொருட்களின் தரத்தைச் சோதிக்க, இன்னோரு குழு எடைகள் சரியாக இருக்கின்றனவா என்று சோதனை செய்தது. மூன்றாவது குழு வியாபாரம் நேர்மையாக நடத்தப்படுகிறதா என்று கண்காணித்தது. நேர்மையான தொழில் பரிவர்த்தனைகள் நடைபெற இவை உதவின.

0

http://www.tamilpaper.net/?p=8564

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் அண்ணா அருமையான இணைப்புகளுக்கு தொடர்ச்சியாக வாசிக்கும் பகுதி இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 29

கிரேக்க நாகரிகம் – II

எஸ்.எல்.வி.மூர்த்தி

parthenon-300x186.jpg

சமுதாய அமைப்பு

சமூகத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன.

  • உயர் குடியினர்
  • நடுத்தர வர்க்கத்தினர்
  • அடித்தட்டு மக்கள்
  • அடிமைகள்
உயர் குடியினர் என்பவர்கள், எந்த வேலையும் பார்க்காதவர்கள். ஏராளமான சொத்து சுகம் படைத்தவர்கள். கணக்கற்ற அடிமைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள். எல்லா வேலைகளுக்கும் இவர்களால் அடிமைகளை ஏவ முடியும், ஒவ்வொரு நாளின் 24 மணி நேரத்தையும் தங்கள் விருப்பம்போல் செலவிடும் சுதந்தரம் கொண்டவர்கள். கலைகள், இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை வளர்க்கவும், அரசியல், நிர்வாகம் ஆகிய சமுதாயத் துறைகளில் பணியாற்றவும், வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டுவிட்ட இவர்களால்தான் முடியும் என்று கிரேக்க சமுதாயம் நம்பியது.

நாட்டு சேவைக்கும், வருங்கால சமுதாயத்தை உருவாக்கவும் முக்கியமானவர்கள் என்பதால், இவர்களைச் சமூக ஏணியின் உயர்தட்டில் தூக்கிவைத்து மதித்தார்கள்.

வியாபாரிகள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், கைத்தொழில் விற்பன்னர்கள், போன்றோர் நடுத்தர வர்க்கத்தினர். இவர்கள் பணபலம் படைத்தவர்கள். இவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. இவர்கள் தங்கள் வர்க்கம், அடித்தட்டு மக்கள் ஆகியோரோடு மட்டுமே திருமண உறவு வைத்துக்கொள்ள முடியும். உயர்குடியினரோடு திருமணம் செய்துகொள்வது சமூகத்தாலும், சட்டங்களாலும் தடுக்கப்பட்டிருந்தது.

அடிமைகளாக வாழ்க்கையைத் தொடங்கிய சிலர் கல்வி அறிவு பெற்றார்கள், வியாபாரிகளாக, கலைஞர்களாக, கைத்தொழில் விற்பனர்களாக, தங்கள் எஜமானர்களின் குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக உருவெடுத்தார்கள். இவர்கள் சமுதாய மூன்றாம் படியில், அடித்தட்டு மக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

அடிமைகள் பரிதாபத்துக்குரிய ஆத்மாக்கள். யுத்தக் கைதிகள், அநாதைகள், குற்றவாளிகள், அடிமைக் குடும்ப வாரிசுகள் ஆகியோர் அடிமைகள். ஒரு சில கருணைமிக்க குடும்பங்கள் இவர்களை அன்போடு நடத்தியதும், கல்வி கற்க அனுமதித்ததும் நிஜம் என்றபோதும், பெரும்பாலான குடும்பங்களில் அரை வயிற்றுச் சோறு, தூக்கமே இல்லாமல் இடுப்பு ஒடியும் வேலை, சின்னச் சின்னத் தப்புக்கும் ரத்தம் பீறிவரும் சாட்டை அடி என ஓடியது இவர்கள் வாழ்க்கை.

அன்றாட வாழ்க்கை

வீடுகள்

மலையும், மலை சார்ந்த குறிஞ்சிப் பிரதேசமாக நாடு இருந்ததால், தாராளமாகக் கிடைத்தவை கற்கள்: கண்ணில் எப்போதோ பட்டவை மரங்கள். இதனால்,வீடுகள் பெரும்பாலும் கருங்கல், செங்கல், சுண்ணாம்பு ஆகியவை கலந்து கட்டப்பட்டன. களிமண் செங்கல், சுண்ணாம்பு ஆகியவை. மர சாமான்கள் ஒரு சில வீடுகளில் மட்டுமே இருந்தன. அகன்று விரிந்த முற்றம், அதைச் சுற்றி அறைகள். இதுதான் பொதுவாக வீடுகளின் அமைப்பு.

முற்றம்தான் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடும் இடம், விருந்தோம்பும் இடம்.

வீட்டில் பெரிய அறை ஆன்ட்ரான் (Andron). இது ஆண்கள் மட்டுமே பயன்படுத்தும் அறை. நிறையப் பேருக்கு விசேட நாட்களில் விருந்துகள் நடத்தவும் ஆண்ட்ரானைப் பயன்படுத்தினார்கள், இதேபோல் பெண்களின் உபயோகத்துக்காகவே இருந்த அறை கினைக்கான் (Gynaikon). வீட்டில் விசேஷங்கள் நடக்கும்போது ஆண்கள் கூட்டம் ஆன்ட்ரானில் கூடும்: பெண்கள் கினைக்கானில் சந்திப்பார்கள்.

கிரேக்கர்கள் கலைப் பிரியர்கள். எல்லா வீடுகளிலும் சிற்பங்கள் இருந்தன. பெண்கள் கிண்ணங்கள், கூஜாக்கள், தொட்டிகள், பானைகள் ஆகிய மண்பாண்டங்கள் செய்தார்கள். அவற்றில் அழகான ஓவியங்கள், கதைக் காட்சிகள் ஆகியவற்றைத் தீட்டினார்கள். இவையும், கைவினைக் கலைஞர்களின் படைப்புக்சளும் வீடுகளை அலங்கரித்தன.

வீடுகளில் பூஜை அறைகள் இருந்தன. அங்கு நெருப்பு குண்டங்கள் வைத்திருப்பார்கள். மூதாதையர்கள் அக்னி வடிவில் தங்களைப் பாதுகாப்பதாக அவர்கள் நம்பிக்கை. விசேட நாட்களில் நெருப்பில் சாம்பிராணி போடுவார்கள். விக்கிரகங்களுக்கு ஆலிவ் எண்ணெய் அபிஷேகம் செய்யும் பழக்கமும் உண்டு. வழிபாட்டில் டிதிர்ரம் (Dithyram) என்ற கடவுள் உச்சாடனப் பாடல்கள் பிரபலம்.

உணவு

கோதுமை ரொட்டி முக்கிய உணவாக இருந்தது. காலை, பகல், இரவு என எல்லா வேளைகளிலும் ரொட்டி. சூரியன் உதயமானவுடன் ரொட்டியைத் திராட்சை ரசத்தில் தோய்த்துச் சாப்பிடுவார்கள், மதியம் திராட்சை ரசத்தில் முக்கிய ரொட்டி, ஆலிவ், அத்திப் பழங்கள், பாலாடை, சமைத்த மீன். இரவுச் சாப்பாடு சூரியன் மறையும் வேளையில் நடக்கும்,விலாவாரியாக இருக்கும். சமைத்த காய்கறிகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், மீன், தேன் ஊற்றிய இனிப்புகள் என ஏராளம் ஐட்டங்கள். கிரேக்கர்களுக்குக் கரும்பு, சீனி ஆகியவைபற்றித் தெரியாது. இனிப்புச் சுவைக்குத் தேன் மட்டுமே பயன்பட்டது.

கோவில் திருவிழாக்களில் மாடு, பன்றி ஆகியவை நூற்ற்க்கணக்காகப் பலியிடப்படும். அந்த மாமிசம் சமைக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டது. பணக்காரர்கள் தவிர்த்த மற்றையோர் மாமிசம் உண்டது அப்போது மட்டும்தான்.

ஏழையரும், செல்வந்தரும் எப்போதும் அருந்திய பானம் திராட்சை ரசம். பழ ரசம், புளிக்கவைத்த ஒயின் என இருவகைகளிலும் ரசிக்கப்பட்டது. ஒயினை அப்படியே குடிப்பது நாகரிகமற்ற செயல். தண்ணீர் சேர்த்துத்தான் பருகினார்கள். சாப்பிடக் கரண்டிகள் கிடையாது, கைகள்தாம்.

உடைகள்

கம்பளி, லினன் ஆகியவற்றால் ஆண்களுடையவும், பெண்களுடையவும் உடைகள் செய்யப்பட்டன. ஆடைகளை வீட்டுப் பெண்கள் தைத்தார்கள். செல்வந்தர் வீடுகளில் அடிமைகள் வீட்டுப் பெண்களின் மேற்பார்வையில் தைப்பார்கள். இறுக்கமான உடைகளை அணிவது பண்பற்ற செயல். ஆண், பெண் ஆகிய இருபாலரின் உடைகளும் ட்யூனிக் (கூதணடிஞி) என்று அழைக்கப்பட்டன. பெண்களின் ட்யூனிக் முட்டிவரை நீளம்: ஆண்களின் ட்யூனிக் இன்னும் குட்டையானது.குளிர் காலங்களில் தடிமனான கம்பளிப் போர்வைகள் அணிவார்கள்.

ஆடுகளின் உடலிலிருந்து கம்பளி நூலை எடுப்பார்கள். சுடு தண்ணீரில் ஊறவைத்து எண்ணெய்ப் பசை, அழுக்குகள் ஆகியவற்றை நீக்குவார்கள். பணக்காரர்கள் மட்டுமே கம்பளி நூலைச் சாயங்களில் ஊறவைத்து வண்ண வண்ண ஆடைகள் அணிந்தார்கள். ஓக் மரப் பட்டை, மர வேர்கள், செடிகளின் தண்டுகள், உலர்ந்த இலைகள் ஆகியவை சாயம் பூசும் மூலப் பொருட்கள்.

லினன் ஆடைகள் தயாரிப்பது இன்னும் சிரமான காரியம். செடிகளைப் பிடுங்கிவரவேண்டும், தண்டுப் பகுதியைப் பிரித்து எடுக்கவேண்டும், நாரை எடுக்கவேண்டும், நாரில் ஊடுருவி இருக்கும் வித்துக்களை அகற்றவேண்டும்,

வீடுகளில் தறிகள் உண்டு. கம்பளி, லினன் ஆகியவற்றின் நூலை வீட்டுப் பெண்கள் தறிகளில் ஆடைகளாக நெய்வார்கள்.

ஆண்களும், பெண்களும் காலணி அணியும் பழக்கம் இருந்தது, மிருகங்களின் தோல் இதற்குப் பயன்பட்டது. இறந்த மிருகங்களின் தோலை உரித்து எடுப்பார்கள். அவற்றை வெந்நீர், புறாக்களின் எச்சம் கலந்த சுடுநீர் ஆகியவற்றில் ஊறப் போடுவார்கள். அப்போது உரோமங்கள், தோலில் ஒட்டியிருக்கும் மாமிசத் துண்டுகள் ஆகியவை போய்விடும், இந்தத் தோலில் எண்ணெய் போட்டுத் தேய்த்து மிருதுவாக்குவார்கள். பிறகு, எண்ணெய், மூலிகைகள் ஆகியவற்றில் பல வாரங்களுக்கு ஊறவைப்பார்கள். காலணிகளும், பை போன்ற பொருட்களும் செய்ய இப்போது தோல் தயார்!

ஒப்பனை

சிகை அலங்காரம் காலப்போக்கில் பல மாற்றங்கள் கண்டது. ஆரம்ப காலங்களில் ஆண்கள் நீண்ட தலைமுடியும், தாடியும் வளர்த்தார்கள். பின்னாட்களில், தாடி வளர்ப்போர் எண்ணிக்கை குறைந்துபோனது.

பெண்களுக்கு நீளத் தலைமுடி அழகின் அடையாளம், தலைமுடியைச் சுருட்டையாக்குவது ஆரம்ப காலங்களில் ஃபேஷனாக இருந்தது: பின்னுக்குச் சீவிக் கொண்டை போட்டுக்கொள்வதாக இது மாறியது. அடிமைப் பெண்களின் தலைமுடி எப்போதும் குட்டையாகத்தான் இருக்கவேண்டும். இதற்கு ஏற்றபடி, அவர்கள் கேசம் அடிக்கடி வெட்டப்பட்டது.

கறுப்பு நிறத்துக்கு மவுசு இல்லை. வெண்மைத் தோல் கொண்டவர்கள் மட்டுமே அழகர்கள், அழகிகள். கறுப்பு நிறப் பெண்கள் தங்கள் சருமத்தை வெண்மையாக்க, ஈயத்தால் ஆன களிம்பு தடவிக்கொண்டார்கள் . இது அவர்கள் உடல் நிலையைப் பாதித்தது இன்னொரு சமாச்சாரம். கறுப்பை வெண்மையாக்கிக்கொள்ள பவுடர் போன்ற சுண்ணாம்புப் பொடியையும் பூசிக்கொள்வார்கள். கன்னங்களுக்கு ரோஜா நிறப் பொடி (இது எதனால் செய்யப்பட்டது என்று தெரியவில்லை) பூசும் மேக்கப் கலையும் இருந்தது. வேல்விழிக் கண்களின் கவர்ச்சியை கூட்ட மை தீட்டிக்கொண்டார்கள் .

ஆண்கள் நகைகள் அணிவதில்லை. பெண்கள் வகை வகையான காதணிகள், வளையல்கள், கழுத்துச் செயின்கள் ஆகியவை அணிந்தார்கள். ஏனோ, கி.மு. நான்காம் நூற்றாண்டு வாக்கில் பெண்கள் நகை அணியும் பழக்கமும் மறையத் தொடங்கிவிட்டது.

வாசனைப் பொருட்கள்மேல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனிப் பிரியம் உண்டு. துளசி, லவங்கப் பட்டை, பாதாம், ரோஜா, லில்லி, லாவென்டர் ஆகியவற்றின் சாரம் எடுத்து, எண்ணெய்களோடு சேர்த்துக் காய்ச்சி வீடுகளில் வாசனைப் பொருட்கள் தயாரித்தார்கள்.

0

http://www.tamilpaper.net/?p=8578

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் அருமையான இணைப்புகளுக்கு தொடர்ச்சியாக வாசிக்கும் பகுதி இது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்வத்துடன் வாசிப்பவர்களுக்கு நன்றி. நான் படிக்காமல் இணைப்பதில்லை என்பதால் இடையிடையே தாமதம் ஏற்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 30

கிரேக்க நாகரிகம் – III

எஸ்.எல்.வி.மூர்த்தி

images.jpg

குடும்பங்கள்

கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் என்ற அளவில் நின்றுவிடாது. தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, மாமன், மாமி, பேரன், பேத்தி என்று அத்தனை சொந்தங்களும் சேர்ந்து வசிப்பார்கள்.

கிரேக்கச் சமுதாயத்தில் ஆண்களே முக்கியமானவர்கள். பெண்களுக்குச் சம உரிமை கிடையாது. ஆண்கள் சாப்பிடும் அறையில் பெண்கள் சாப்பிடக்கூடாது. கடைகளுக்கும், தெருவுக்கும் போகக்கூடாது.

பெண்கள் பிறந்த வீட்டில் அம்மாவுக்கு உதவியாக இருக்கவேண்டும். சமைப்பது, ஆடைகள் நெய்வது, வீடைச் சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும். கூடுதலாகப் பாட்டு, நடனம் கற்கவேண்டும். பண்டிகை மற்றும் விழா நாட்களில் உறவினர்கள் முன்னால் திறமைகளை வெளிப்படுத்தவேண்டும்.

புகுந்த வீட்டில் குழந்தைகள் பராமரிப்பும், வீட்டு வேலைகளும் முழுக்க முழுக்கப் பெண்கள் பொறுப்பு. செல்வந்தர் வீடுகளில் பெண்கள் தங்கள் உடல் வருந்த வேலை செய்யவேண்டாம். ஆனால், அடிமைகள் மூலமாக இதை முடிக்கவேண்டியது அவர்கள் பொறுப்பு. வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் ஆண்கள் துரும்பைக்கூடத் தூக்கிப் போடவேண்டாம்.

திருமணங்கள்

பெண்களுக்கு 14 முதல் 18 வயதுக்குள்ளும், ஆண்களுக்கு இருபதுகளிலும் திருமணம் நடக்கும். ஆண்கல் 30 வயதில்கூட மணம் செய்துகொள்வதுண்டு. பெற்றோர்கள்தாம் வரன் தேடுவார்கள், பேசி முடிப்பார்கள். வரதட்சணை கேட்பதும் வாங்குவதும் சாதாரணம், பெற்றோர் தேர்வு செய்த வரனைத்தான் பெண்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டிய கட்டாயம். தங்கள் வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கும் சுதந்திரம் ஆண்களுக்கு இருந்தது.

ஆண்கள் முப்பது வயதுவரை ராணுவ சேவை கட்டாயம் செய்யவேண்டும்,. எனவே, எந்த வயதில் மணம் முடித்துக்கொண்டாலும், இல்லற வாழ்க்கையை முப்பது வயதுக்குப் பிறகுதான் தொடங்கினார்கள்.

திருமணங்களில் சடங்குகள் உண்டு, ஆனால், புரோகிதர்களோ, பூசாரிகளோ கிடையாது. ஆண்களும், பெண்களும் குளித்து, புத்தாடை உடுத்தித் தயாராகவேண்டும். மாப்பிள்ளை ரதம் அல்லது குதிரை வண்டியில் மாமனார் வீட்டுக்குச் சுற்றமும், நண்பர்களும் புடைசூழ ஊர்வலமாகப் போவார். அங்கே விமரிசையாக விருந்து நடக்கும்,

வயிறாரச் சாப்பிட்ட மாப்பிள்ளை, பெண்ணோடு தன் வீட்டுக்கு வருவார். அவரை அவர் குடும்பத்தார் மனமார வரவேற்று உட்காரவைப்பார்கள். பிறகு எல்லோரும் அவர்கள் மேல் பழங்கள், பழக் கொட்டைகள் ஆகியவற்றைச் சொரிவார்கள். இது ஒரு வகையான ஆசீர்வாதம். இது முடிந்தவுடன், கணவனும் மனைவிக்கும் சாந்தி முகூர்த்தம்!

கனவன் மனைவிக்குள் மனக் கசப்பு வந்தால், விவாகரத்து பெறும் உரிமை ஆண்களுக்கு இருந்தது. பெண்களுக்குக் கணவன் சரியாக அமையாவிட்டால், சுமையை வாழ்நாள் முழுக்கத் தாங்கி நடக்கத்தான் வேண்டும். வேறு வழி கிடையாது.

குழந்தைகள்

ஆண் குழந்தைகள்தான் பெற்றோரின் முதல் தேர்வு. குழந்தைகள் பிறந்து பத்து நாட்களுக்குப் பிறகுதான் பெயர் சூட்டினார்கள். ஏனென்றால், பெரும்பாலான குழந்தைகள் அதற்குள்ளாகவே அகால மரணமடைவது சாதாரணமாக இருந்தது. குழந்தைகள் நோஞ்சானாகவோ, உடல் ஊனம் கொண்டவர்களாகவோ இருந்தால், இந்த மரணத்தைக் குழந்தையின் அப்பா முடிவு செய்வார். அடிமைகளின் கைகளில் சிசுவைக் கொடுப்பார். அவர்கள் ஏரி, குளங்களில் வீசி எறிவார்கள். இதில் தப்பிப் பிழைக்கும் குழந்தைகள் கண்டெடுக்கப்படுபவர்களால் அடிமைகளாக்கப்படுவார்கள் .

பணக்கார வீட்டுப் பெண்கள் மட்டுமே பள்ளிகளுக்குப் போனார்கள். மற்றவர்களுக்கு, வீட்டில் அம்மா தரும் பயிற்சிதான். ஆண் குழந்தைகள் இதற்கு நேர் எதிர். ஆறு வயதானதும் கட்டாயம் பள்ளிக்குப் போகவேண்டும். கல்வியோடு, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியும் கட்டாயம். இத்தோடு, ஈட்டி எறிதல், குத்துச் சண்டை ஆகியவையும் பயிற்றுவிக்கப்பட்டன. ஸ்பார்ட்டா நகரத்தில் மட்டும், ஏழு வயதானவுடன் சிறுவர்கள் ராணுவக் கூடாரங்களுக்குப் போயாகவேண்டும். முப்பது வயதுவரை கல்வியும், ராணுவப் பயிற்சியும் அவர்களுக்கு அங்கே அளிக்கப்படும், பிற நகரங்களில், ஏழு முதல் பதினெட்டு வயதுவரை பள்ளிக்கூடம். அதற்குப் பின் முப்பது வயதுவரை ராணுவப் பயிற்சி.

தெய்வ நம்பிக்கை

கிரேக்கர்கள் ஏராளமான கடவுள்களையும், தேவதைகளையும் நம்பினார்கள், வணங்கினார்கள். அவர்களுடைய முழு முதற் கடவுள் ஜீயஸ்.

சூரியக் கடவுள் அப்பல்லோவுக்கும் தெய்வங்கள் வரிசையில் உயர்ந்த பீடம். நோய்கள் வராமல் உடல் நலம் காப்பவர் இவர்தான்.

கிரேக்க நாடுகளுக்குள் பொழுதொரு சச்சரவு, தினமொரு சண்டை. ஆகவே, ஆரெஸ் (Ares) என்னும் யுத்தக் கடவுள் மிக முக்கியமானவர், சின்னத் தகராறுகள்கூட ஆரெஸ் பூசை, படையல் ஆகியவறோடுதான் ஆரம்பிக்கும். ஆயுதம் ஏந்தலாம் என்று ஆரெஸ் முதலில் ஆசீர்வாதம் தரவேண்டும்.

அறிவுத் தேடலும், கல்வியும் அத்தியாவசியமானவை. நம்மூர்க் கலைமகள்போல் கிரேக்கத்தில் அத்தீனா (Athena).

மக்கள் அடிக்கடி வழிபட்ட தெய்வம் டெமெட்டர் (Demeter) என்னும் பூமாதேவி. இதற்குக் காரணங்கள் உண்டு. நாடு மலைப் பிரதேசம். வறண்ட பூமி, வானம் பார்த்த பூமி. சாப்பிட உணவு வேண்டுமே விளைச்சல் கிடைக்கவேண்டுமே? டெமெட்டர் விவசாயிகளின் தேவதையானார். விதை விதைக்கும்போது, விதைத்தவுடன் மழை வேண்டி, மழை பெய்தவுடன், நல்ல விளைச்சலுக்குப் பிரார்த்தித்து, அறுவடைக்குப் பின் என சதா சர்வகாலமும் டெமெட்டர் நினைவுதான், பாராயணம்தான்.

வீரத்துக்கு, அறிவுக்கு, விவசாயத்துக்குத் தனியாகத் தெய்வங்கள் இருக்கும்போது,அழகுக்கு, ஆசைக்கு,காமத்துக்கு, காதலுக்கு வேண்டாமோ? இருந்தார் கவர்ச்சிக் கடவுள் அஃப்ரோடைட் (Aphrodite). வாரிசுகள் பெருக, மக்கள் வழிபடுவது இந்த அம்மனைத்தான்.

இவர்கள் தவிர அக்னி, வாயு,கடல், எமதர்ம ராஜா என்பதுபோன்ற பகவான்கள். இவை போதாதென்று பாம்பு, பசு, பன்றி போன்ற மிருகங்களையும் பய பக்தியோடு கும்பிட்டார்கள்.

வீடுகளில் பூசை அறைகள் இருந்தன. தெரு முனைகளிலும் தேவதைகள் பிரசன்னமாகியிருந்தார்கள். இத்தனை இருந்தபோதும், பிரம்மாண்டக் கோயில்கள் கட்டி அங்கேபோய்க் கும்பிட அவர்களுக்குப் பிடிக்கும். ஒவ்வொரு கடவுளுக்கும் எந்த மாதிரியான பூசைகள் நடத்தவேண்டும், எத்தகைய நைவேத்தியங்களும், படையல்களும் சமர்ப்பிக்கவேண்டும் என்று விலாவாரியான செயல்முறைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. விசேட நாட்களில் ஆண்டவர்கள் வீதி உலா வருவதும், பக்தகோடிகள் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்குவதும் சாதாரண நிகழ்வுகள்.

இத்தனை ஆழமான தெய்வ நம்பிக்கை இருக்கும்போது, பரவலான மூட நம்பிக்கைகள் இருந்தாகவேண்டுமே? ராட்சசன், பேய், பிசாசு, துஷ்ட தெய்வங்கள் ஆகியவை இருக்கின்றனவென்று நினைத்தார்கள், பயந்தார்கள், பரிகாரங்கள் செய்தார்கள். செய்வினை, பில்லி சூன்யம் ஆகிய அடுத்தவரை ஒழித்துக்கட்டும் வேலைகளிலும் சர்வ சாதாரணமாக ஈடுபட்டார்கள்.

ஏழு புனிதமான, அதிர்ஷ்டமான எண். எதையுமே ஏழின் வடிவமாகப் பார்த்தால் ராசி. ஒரு நல்ல காரியத்தைச் செய்யும்போது ஏழு பேர் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் என்பது எல்லோரும் ஒத்துக்கொண்ட கருத்து.

வருங்காலம் பற்றித் தெரிந்துகொள்வதிலும், குறி கேட்பதிலும் எக்கச்சக்க ஈடுபாடு இருந்தது. எல்லா ஊர்களிலும் கோவில்களில் குறி சொல்பவர்கள் இருந்தார்கள். இவர்கள் கடவுள்களின் அவதாரங்களாகக் கருதப்படார்கள். ஆகவே, இவர்கள் கோவில்களில் மட்டுமே வருங்காலதைக் கணிப்பார்கள். மன்னர்களேயானாலும், இவர்களை அரண்மனைக்கு அழைக்க முடியாது. இவர்களிடம்தான் போக வேண்டும்.

நாடி ஜோசியம் என்றாலே, நினைவுக்கு வருவது வைத்தீஸ்வரன் கோவில். இதைப்போல். அந்த நாட்களில் குறி கேட்பது என்றாலே, புகழ் பெற்ற இடம் டெல்ஃபி (Delphi) என்னும் ஊர், அங்கே இருக்கும் அப்பலோ கோவில்.

இறந்தவர் சடங்குகள்

ஒரு வீட்டில் மரணம் நடந்தால், உற்றார், உறவினர், நண்பர்களுக்குச் சேதி அனுப்பப்படும். உடலைக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, மலர் மாலைகளால் அலங்கரிப்பார்கள். அவர் வாயில் நாணயம் ஒன்று வைக்கப்படும். துக்கம் விசாரிக்க வருபவர்கள் கறுப்பு ஆடை அணிந்து வரவேண்டும். இரண்டு நாள்கள் உடல் வீட்டிலேயே, மூலிகைகளால் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். மூன்றாம் நாள் ஊர்வலமாகச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வார்கள், மயானத்தில் எரி மூட்டுவார்கள். மறுநாள் அஸ்தியைப் பானையில் போட்டுக் குழிதோண்டிப் புதைப்பார்கள். வீட்டுக்கு வந்ததும் விருந்து நடக்கும், இதற்குப் பிறகு எந்தச் சடங்கும் கிடையாது.

கோயில்கள்

மலைகளில் கற்கள் எராளமாகக் கிடைத்ததால், வீடுகள் போலவே கோவில்களும் கருங்கல், சுட்ட களிமண் செங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றால் கட்டப்பட்டன. கோவில்களின் கட்டமைப்புக்கு மார்பிளும், சிலைகள், தூண்கள் ஆகியவற்றுக்கு மார்பிள், யானைத் தந்தம் ஆகியவையும் உபயோகப்படுத்தப்பட்டன.

மூன்றுவிதமான கட்டுமானப் பாணிகள் இருந்தன. அவை – டோரிக், அயானிக், கோரிந்தியான். டோரிக் பாணி, மிக எளிமையான பாணி, இத்தகைய கட்டடங்களில் தூண்கள் உருளை வடிவில் இருக்கும். நேர்கோடு தூண்களின் உடல் முழுக்க ஓடும். மேற்பாகம் தட்டையான உருவம் கொண்டது. ஏதென்ஸ் நகரத்தில், அக்ரோப்போலிஸ் என்னும் குன்றின்மேல் இடத்தில் இருக்கும் பார்த்தினான் கோயில் டோரிக் பாணியிலானது. இது அத்தீனா என்னும் கல்வி தெய்வத்தின் கோயில். கி.மு. 5 – ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

கோயிலின் அகன்ற பிரகாரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தால், தந்தம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் செய்யப்பட்ட 40 அடி உயர அத்தீனா சிலை. (அந்தச் சிலை நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், சிலை பற்றிய முழு விவரங்களும், உருவ அமைப்பும் கிடைள்ளன.) போர்வீரன் உடை, கையில் பாம்பு, வெற்றிச்சின்னம். பாரசீகத்தோடு நடந்த போரில் கிடைத்த வெற்றிக்கு நன்றியாக, இந்தக் கோவிலும், சிலையும் அமைக்கப்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

அயானிக் பாணிக் கட்டடங்கள், டோரிக்கைவிட அழகானவை, அதிக உயரமானவை, தூண்களில் வேலைப்பாடுகள் கொண்டவை. பார்த்தினான் கோவிலிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள இரிக்தியம் (Erechtheum) அயானிக் வகைக் கோவில். கி.மு. 421 – 407 காலகட்டத்தில் கட்டப்பட்ட அழகான ஆலயம். அத்தீனா, பொஸைடான் (கடல் தெய்வம்), முன்னாள் மன்னர் இரிக்தியஸ் ஆகியோர் இங்கே வழிபடப்பட்டார்கள்.

கோரிந்தியான், கலைநயத்தில், கை நுணுக்கத்தில் அயானிக் பாணியைவிட உச்சமானது. தூண்களின் உடல் பாகத்தில் பல நேர்க்கோடுகள் ஓடும்: உச்சியில் இலைகளும், பூக்களும் செதுக்கப்பட்டிருக்கும், மெஸ்ஸினியா என்னும் பகுதியில் சூரியக் கடவுள் அப்பல்லோ ஆலயம் இருக்கிறது. இது, டோரிக், கோரிந்தியப் பாணிகள் இரண்டும் சேர்ந்த அழகுக் கலவையின் அற்புதப் படைப்பு.

இப்படி எத்தனையோ கோயில்கள், கிரேக்கக் கட்டடக் கலைத் திறமையின் உச்ச வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன.

0

http://www.tamilpaper.net/?p=8584

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 31

கிரேக்கத்தின் ஒலிம்பிக்ஸ்

எஸ்.எல்.வி.மூர்த்தி

C5A_776-BC-first-Olympic-games-286x300.j

ஆட்சி முறை

கிரேக்கம் ஒரே நாடாக இருந்தபோதிலும், ஆட்சிமுறை நகர ராஜ்ஜியங்களுக்கிடையே மாறுபட்டது. உதாரணமாக, ஸ்பார்ட்டாவில் மன்னராட்சி: ஏதென்ஸில் கி.மு. 1066 வரை மன்னராட்சி இருந்தது. இதற்குப் பிறகு, மாஜிஸ்ட்ரேட் நகர ராஜ்ஜியத் தலைவரானார், மக்களாட்சி மலர்ந்தது. இந்த முறையில், உயர் குடியினர் மட்டுமே வாக்குரிமை பெற்றவர்கள். இவர்களுள், ஓட்டளிக்க இருபது வயது ஆகவேண்டும்.

இரண்டு சபைகள் இருந்தன. போலே (Boule) என்பது மேல்சபை. கீழ்ச்சபையின் பெயர் எக்ளீஸியா (Eclesia).

மேல்சபையின் அங்கத்தினர் எண்ணிக்கை 500. கிரேக்கத்தில் பத்து வகை மரபுக் குடியினர் இருந்தார்கள், ஒவ்வொரு மரபிலிருந்தும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 அங்கத்தினர்கள் குலுக்கல் முறையில் போலே அங்கத்தினர்களாத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களின் பதவிக் காலம் ஒரு வருடம், எக்ளீஷியா விவாதிக்க வேண்டிய முக்கிய பிரச்னைகள் எவை என்று போலே வடிகட்டி முடிவுசெய்யும். இவை மட்டுமே எக்ளீஷியாவின் பரிசீலனைக்கு வரும். மேல்சபை நாட்டு விடுமுறை தவிர்த்த மீதி எல்லா நாள்களிலும் சந்திக்கும்.

எக்ளீஸியாவில் இரண்டு வருட ராணுவ அனுபவம் பெற்ற வாக்குரிமை பெற்ற அனைவரும் உறுப்பினர் ஆகமுடியும். எக்ளீஸியா நாற்பது நாள்களுக்கு ஒரு முறை கூடும். எல்லோரும் பேசலாம். பிரச்னைகளை விவாதித்தபின் கை தூக்கல் மூலம் வாக்கு எடுக்கப்படும். சில சமயங்களில் ரகசிய வாக்கெடுப்பும் நடப்பதுண்டு.

எக்ளீஷியாவில் 40,000 அங்கத்தினர்கள் இருந்தார்கள். குறைந்தபட்சம் 6000 பேர் வந்தால்தான் கூடம் நடத்தலாம். கூட்டம் குறைவாக இருந்தால், 300 அடிமைகள் கைகளில் சிவப்பு நிறத்தில் முக்கிய நீளக் கயிற்றைச் சுழற்றியபடியே நகரின் வீதிகளை வலம் வருவார்கள். யார் மேலெல்லாம் கயிறு பட்டதோ, அவர்கள் உடனே கூட்டத்துக்கு வரவேண்டும், அல்லது அபராதம் கட்டவேண்டும்.

எக்ளேஷியாவுக்கு ஏகப்பட்ட அதிகாரங்கள் இருந்தன. அண்டை நாடுகளோடு சண்டை அல்லது சமாதானத்துக்கான முயற்சிகள், வெளிநாட்டுக் கொள்கை, ஏற்றுமதி இறக்குமதி உறவுகள் ஏற்படுத்துதல், நாட்டின் வரவு செலவுக் கணக்கை நிர்வகித்தல், ராணுவ நிர்வாகம், மக்கள் நலத் திட்டங்கள் வகுத்தல், நிறைவேற்றல், மதம் தொடர்பான செயல்கள், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள் போன்றவை எக்ளேஷியாவின் முக்கியப் பொறுப்புகள்.

எக்ளேஷியா வருடத்துக்கு நாற்பது நாள்கள் கூடும். கூட்டம் திறந்த வெளி மைதானத்தில் நடக்கும். அதிகாலையில் பூசையோடு தொடங்கும், அடுத்து மிருக பலி. கூட்டத்தில் வரி பாக்கி வைத்திருப்பவர்கள், ஒழுக்கமற்றவர்கள், குற்றவாளிகள், பெற்றோரைப் புறக்கணித்தவர்கள், யுத்தங்களில் பங்கேற்காமல் நழுவியவர்கள் ஆகியோர் பேச அனுமதிக்கப்படமாட்டார்கள். பிறர் யார் வேண்டுமானாலும் பங்கேற்று தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம்.

நிர்வாகத்தில் ராணுவம் மிக முக்கியமானது. ஸ்ட்ராட்டகோய் (Strategoi) என்பது ராணுவத் தளபதி பதவி. ஒவ்வொரு மரபுக்கும் ஒருவராகப் பத்துத் தளபதிகள் நியமிக்கப்பட்டார்கள். தேர்தல்மூலம் பதவி பெற்ற இவர்களின் ஆட்சிக் காலம் ஒரு வருடம். ராணுவ நிர்வாகம், வீரர்கள் பயிற்சி, தளவாடங்கள் திட்டமிடுதல், வாங்குதல், ராணுவக் கணக்கு வழக்குகள், பிற நகர ராஜ்ஜியங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துதல் போன்றவை ஸ்டாரட்டகோய்களின் கடமைகள்.

ராணுவத்தில் பல வகையினர் இருந்தார்கள், இவர்களுள் காலாட்படை, குதிரைப்படை, கடற்படையினர் ஆகியோர் செல்வந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வில்லாளிகள், ஈட்டி எறிபவர்கள், வாள் வீச்சாளிகள் ஆகியோர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். போர் முனையில் முன்னணியில் எதிரிகளை எதிர் மோதியவர்கள் இந்த வறுமைக் குல வாரிசுகள்தான்!

நீதி பரிபாலனம் செம்மையாக நடந்தது. போலீஸ் வேலைகளுக்கு அடிமைகள் மட்டுமே அமர்த்தப்பட்டார்கள். வழக்காடு மன்றங்களுக்குக் குலுக்கல் முறையில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், இவர்களின் பதவிக்காலம் ஒரு வருடம், யார் வேண்டுமானாலும், சாட்சிகள் இருந்தால், யார் மீதும் குற்றம் சாட்டி, நீதிபதிகளின் முன்னால் கொண்டுவரலாம். சில்லறை வழக்குகளை விசாரிக்க முப்பதி நீதிபதிகள் அடங்கிய நடமாடும் குழு இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவரே தனக்காக வாதாடலாம். இன்னொரு ஆச்சரியம், விசாரணை முடிந்தபின், குற்றவாளியே தனக்கு என்ன தண்டனை என்பதைத் தீர்மானிக்கலாம். இந்த மரபு நேர்மையோடு கடைப்பிடிக்கப்பட்டது மிக ஆச்சரியம்! அபராதம், வாக்குரிமை பறிக்கப்படுதல், சூடு போடுதல், கசையடி, சொத்துக்கள் பறிமுதல்போன்றவை சாதாரணமாக அளிக்கப்பட்ட தண்டனைகள். கொடூரமான சில குற்றங்களுக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது.

ஒலிம்பிக் பந்தயங்கள்

கிரேக்க ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமைக்கு உச்சகட்ட உதாரணம் ஒலிம்பிக் போட்டிகள். நாட்டின் பல்வேறு நகர ராஜ்ஜியங்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து உணர்வால் இணையப் பாலம் வகுத்ததும் ஒலிம்பிக் பந்தயங்கள்தாம்.

ஒலிம்பிக் பந்தயங்களின் ஆரம்பம் இதிகாசக் கதை. கிரேக்கர்களின் முழு முதற் கடவுளான ஜீயஸ் சின்னக் குழந்தையாக இருந்தார். அவர் அருகே ஹெராக்கிள்ஸ் என்னும் குட்டி தேவதையும் அவருடைய ஐந்து தம்பிகளும் இருந்தார்கள். ஜீயஸ் அழுதார். வேடிக்கை காட்ட என்ன செய்யலாம் என்று ஹெராக்கிள்ஸ் யோசித்தார். தம்பிகளுக்குள் ஓட்டப் பந்தயம் நடத்தினார். ஜெயித்தவனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? அருகில் ஆலிவ் மரம் இருந்தது. அதன் கிளையை வளைத்து வெற்றி மாலையாகச் சூட்டினார். ஜீயஸுக்கு வழிபாடாக, விழாவாக ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டன.

ஒலிம்பிக் பந்தயங்கள் கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்துக்கும் முன் தோன்றி மூத்தவை என்று இதிகாசம்சொன்னாலும், கி.மு. 776 – இல் முதல் ஒலிம்பிக் நடத்தப்பட்டது என்று ஆதாரங்கள் கூறுகின்றன. ஜீயஸுக்கு வணக்கம் செலுத்தும் போட்டி அவர் தொடர்பு கொண்ட இடத்தில் நடப்பதுதானே முறை? அவர் பேரன் பெலப்ஸ் பெயரில் அமைந்த பெலொப்பனீஸ் பகுதியில்

இருக்கும் ஒலிம்பியா நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்த முடிவெடுத்தார்கள். (ஏன், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை? அந்த ஜீயஸைத்தான் கேட்கவேண்டும்)

ஹெராக்கிள்ஸ் நினைவாக, ஓட்டப் பந்தயம்தான் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டது. மாரத்தான் என்னும் நெடுந்தூர ஓட்டம் கி.பி. 1896 – இல் சேர்க்கப்பட்டது. இதற்குச் சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணி உண்டு. கி.மு. 700 காலகட்டத்தில் அண்டை நாட்டுப் பாரசீகர்கள் ஏதென்ஸ்மீது படையெடுத்து வந்தார்கள். எல்லையில் எதிரி. ஏதென்ஸ் நிலைமையை எடை போட்டார்கள். அவர்களிடம் போதிய படைகளும், தளவாடங்களும் இல்லை. 140 மைல் தொலைவில் இருந்த நகரமான ஸ்பார்ட்டாவின் உதவி அவசரமாகத் தேவைப்பட்டது. மின்னலெனச் செய்தி அனுப்பவேண்டும். குதிரை வீரனை அனுப்பலாம். அது ஒரு வேளை பாரசீகக ஒற்றர்களுக்குத் தெரிந்துவிட்டால், காலம் தாழ்த்தாமல் தாக்குதல் தொடங்கிவிடுவார்கள்.

என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஃபெய்டிப்பிடிஸ் (Pheidippides) என்னும் போர்வீரர் உதவிக்கு வந்தார். மனதில் செய்தி, கால்களில் பலம், நெஞ்சில் உரம் – மூன்றையும் தாங்கிக்கொண்டு ஓடத் தொடங்கினார். ஸ்பார்ட்டா அடைந்தபிறகுதான் அவர் கால்கள் நின்றன. ஸ்பார்ட்டா அரசர் தன் ஆதரவை அளித்தார். ஒரே ஒரு நிபந்தனையோடு – அமாவாசை முடிந்தவுடன் ஸ்பார்ட்டா படைகள் புறப்படும். நல்ல நாளில் கிளம்பினால்தான் வெற்றி நிச்சயம் என்று குறிகாரர் சொன்னதுதான் காரணம்.

ஃபெய்டிப்பிடிஸ் ஓட்டம் மறுபடி ஆரம்பம். ஏதென்ஸ் போய்ச் சேருவதுவரை நிற்காத நெடும் ஓட்டம். உதவி வரப்போகிறது என்னும் உத்வேகம் எதென்ஸ் வீரர்களுக்கு எக்கச்சக்க துணிச்சல் கொடுத்தது, பலம் கொடுத்தது. ஸ்பார்ட்ட உதவி வரும் முன்னரே, பாரசீகப் படையினரை ஓட ஓட விரட்டினார்கள்.

வெற்றி! வெற்றி! வெற்றி! தலைநகர் ஏதென்ஸுக்கு இந்தச் சந்தோஷச் சமாச்சாரத்தை உடனேயே சொல்லவேண்டுமே? தகுதியான ஆள் ஃபெய்டிப்பிடிஸ்தான். அவரைத் தளபதி அழைத்தார். “நம் நாட்டு மக்களிடம் இந்த மகிழ்ச்சியான சேதியைச் சொல்லுங்கள்.” வேகப் புயல் ஓடினார். ஏதென்ஸ் நகரின் எக்ளீஷியா கூடும் மன்றத்துக்குப் போனார். “கொண்டாடுங்கள். நாம் ஜெயித்துவிட்டோம்.“

இவைதாம் ஃபெய்டிப்பிடிஸின் இறுதி வார்த்தைகள். ஆமாம், தாய்நாட்டுக் கடமையை முடித்த அவர் சடலமாகச் சாய்ந்தார். மாரத்தான் போட்டி இந்த வீரத் திருமகனுக்கு கிரேக்க சகோதரர்களும், உலகமும் அடிக்கும் நன்றி சல்யூட்.

ஓட்டப் பந்தயத்தில் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகளில் தாண்டுதல், மல்யுத்தம், குத்துச் சண்டை, ஈட்டி எறிதல் போன்ற பந்தயங்கள் அரங்கேறத் தொடங்கின.

ஒலிம்பிக் எல்லா கிரேக்க நகர ராஜ்ஜியங்களும் உற்சாகத்தோடு பங்கேற்கும் விழா. இரு ராஜ்ஜியங்களுக்குமிடையே பகைமை இருந்தாலும், ஏன், போரே நடந்துகொண்டிருந்தாலும், எல்லா மோதல்களையும் நிறுத்திவிட்டு, மறந்துவிட்டு ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள்.கிரேக்க நாடு முழுக்க விழாக்கோலம் பூணும். மக்கள் வெள்ளம் அலை அலையாகத் திரண்டு வரும். இது வெறும் விளையாட்டுப் போட்டியல்ல, எந்த ராஜ்ஜியம் நம்பர் 1 என்று நிரூபிக்கும் உல்லாசமான திறமைப் போர், தேசியத் திருவிழா!

ஒலிம்பிக் ஐந்து நாள்கள் நடைபெறும். முதல் நாளில் தொடக்க விழா. அன்று ஒவ்வொரு ராஜ்ஜிய வீரர்களும் வண்ண வண்ண உடைகள் அணிந்து மைதானத்தில் தேர்களில் ஊர்வலமாக வருவார்கள். அடுத்த நிகழ்ச்சி ஜீயஸுக்குப் பூஜை. ஏராளமான பலிகள். பிறகு ஆட்டம் தொடங்கும். மூன்றாம் நாள், ஜீயஸுக்கு 100 மாடுகளைப் பலி கொடுப்பார்கள். குத்துச் சண்டைகள், மல் யுத்தம், குதிரைப் பந்தயங்கள் ஆகிய போட்டிகள் தொடரும். கடைசி நாள், மயிர்க் கூச்செறிய வைக்கும் ரதப் போட்டி.

ஐந்தாம் நாள் போட்டிகள் எல்லாம் முடிந்தபின் பரிசளிப்பு விழா. வெற்றி பெற்றவரின் பெயர், அவருடைய குடும்ப விவரம், ஆகியவற்றை அறிவிப்பாளர் உரக்கப் படிப்பார். மக்கள் கரவொலி மைதானம் முழுக்க எதிரொலிக்கும், ஆலிவ் மர இலைகளாலான மாலகள்தாம் பரிசுகள். ஆமாம், விளையாட்டு வீரர்களை உந்தித் தள்ளியது பொன்னும், பொருளுமல்ல. ஆலிவ் மாலைகள்தாம்.

ஒலிம்பிக்கில் இரண்டு சோகங்கள் நிகழ்ந்தன.

பண்டைய கிரேக்கத்தில் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கப் பெண்களுக்கு அனுமதி கிடையாது.

ரோமர்கள் கிரேக்கத்தைத் தங்கள் ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தபோது, கி.பி. 394 – இல் ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்திவிட்டார்கள். மறுபடியும் ஒலிம்பிக் தொடங்கியது கி.பி. 1896ல்தான்.

0

http://www.tamilpaper.net/?p=8601

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 32

கிரேக்கம் : கதை, கலை, மனிதர்கள்

எஸ்.எல்.வி. மூர்த்தி

Iliad.jpg

பொழுதுபோக்குகள்

ஒலிம்பிக் தேசியத் திருவிழாவாக, மாபெரும் பொழுதுபோக்காக இருந்தது. விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்கவேண்டும், அரசாங்கம் அயராது ஏற்பாடுகள் செய்யவேண்டும். நான்கு வருடங்களுக்கு ஒரு முறையே வந்தாலும், ஒவ்வொரு நாளும் ஒலிம்பிக் சம்பந்தமான ஏதோ ஒரு முன் ஏற்பாடு கிரேக்கத்தில் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கும், அதற்காக, கற்பனா சக்தி கொண்ட மனிதர்கள் ஒலிம்பிக் என்னும் ஒரே கூட்டுக்குள் தங்களை அடக்கிக்கொண்டுவிட முடியுமா? கிரேக்கர்களின் பொழுதுபோக்குகளுக்குப் பல பரிணாமங்கள் இருந்தன.

நாடோடிக் கதைகள்

ஒலிம்பிக்ஸுக்கு அடுத்து பிரபலமான பொழுதுபோக்கு என்றால், அது கதை சொல்வதுதான், கதை கேட்பதுதான். இதற்கு இரண்டு காரணங்கள் – கிரேக்கர்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் என்ற அளவில் நின்றுவிடாது. தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, மாமன், மாமி, பேரன், பேத்தி என்று அத்தனை சொந்தங்களும் சேர்ந்த குடும்பங்கள், வீட்டுப் பெரிசுகள் எப்படி நேரம் செலவிடுவார்கள்? வீட்டுக் குழந்தைகளுக்குக் கதை சொல்லிகளாகத்தான், இதற்குத் தேவையும் இருந்தது. பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படவில்லை. அவர்களுக்கு எப்படி நீதிகள் போதிப்பது? கதைகள் மூலமாகத்தான்.

பெரியவர்கள் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வார்கள்: ஆண்களும், பெண்களும் கூடும்போது தங்களுக்குள் நாடோடிக் கதைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். தெருப்பாடகர்கள் உண்டு. இவர்கள் கதைகளை ராகம் போட்டுப் பாடுவார்கள். அவற்றில் தங்கள் கற்பனைகளையும் கலப்பார்கள். நாட்டில் ஏராளமான முழு நேரத் தெருப்பாடகர்களும் இருந்தார்கள். நாட்டில் மட்டுமல்ல, யுத்த களங்களுக்கும் போர்வீரர்களுக்கு உற்சாகமூட்டத் தெருப்பாடகர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

பிரபலமாக இருந்த நீதிக் கதைகளுள் இரண்டு இதோ:

மக்கள் எவ்வழி, மன்னர் அவ்வழி

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா. மக்களிடம் அதிக அன்பு கொண்டவர், நல்ல ஆட்சி நடத்தினார். அவருக்குப் புத்திசாலியான ஒரு மந்திரியும், வருங்காலத்தைக் கண்டுபிடிக்கத் தெரிந்த ஒரு ஜோசியரும் உறுதுணையாக இருந்தார்கள்.

ஒரு நாள் ஜோசியர் மன்னரிடம் வந்தார்.

“ராஜா, ராஜா, நாளை முதல் பத்து நாட்களுக்கு விசித்திரமாக மழை பெய்யப்போகிறது.”

“நம் நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதே? இப்போது வரும் மழையில் என்ன விசித்திரம்?”

“ராஜா, இந்த மழைத் தண்ணீரை யார் குடித்தாலும் அவர்கள் முட்டாள்களாகி விடுவார்கள்.”

“நாம் என்ன செய்யலாம் ஜோசியரே?”

“நாடு முழுக்க மக்கள் மழைத் தண்ணீர் குடிப்பதையும், அவர்கள் முட்டாள்கள் ஆவதையும் தடுக்க முடியாது. அரண்மனையில் இப்போதே குளத்திலிருந்து தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளலாம், நீங்கள், ராணி, இளவரசர், மந்திரி, நான் ஆகியோர் குடிக்கலாம். நாம் மட்டும் அப்போது புத்திசாலிகளாக இருப்போம். அப்போதுதான் மக்களுக்குத் தொடர்ந்து நல்லாட்சி தர முடியும்.”

ராஜா சம்மதித்தார்.

அடுத்த பத்து நாட்களுக்கு மழை கொட்டியது. நீரை அருந்திய மக்கள் எல்லோரும் முட்டாள்களாகிவிட்டார்கள். ராஜா, ராணி, இளவரசர், மந்திரி, ஜோசியர் ஆகிய ஐந்து பேர் மட்டுமே அறிவாளிகள். நாட்டு மக்களின் நன்மைக்காகப் பல புதிய திட்டங்கள் தீட்டினார்கள். ஆனால், பொதுமக்களுக்கு இவை புரியவில்லை. திட்டங்களை எதிர்த்தார்கள். நாடு முழுக்க அதிருப்தி.

ராஜாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மந்திரியிடம் ஆலோசனை கேட்டார். அவர் சொன்னார், “ராஜா, ராஜா, மக்களுக்கு நல்லது செய்தால் போதாது. அவர்கள் தங்களுக்கு எவை நன்மை தரும் என்று நினைக்கிறார்களோ, அவற்றை மட்டும்தான் செய்யவேண்டும்.”

ராஜா தன் காவலாளிகளை அழைத்தார். மழைத் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார். அவர், மந்திரி, ஜோசியர், ராணி, இளவரசர் ஆகிய அனைவரும் குடித்தார்கள். இப்போது அவர் கொண்டுவந்தவை “முட்டாள்தனமான திட்டங்கள்.” ஆனால், மக்கள் எல்லோருக்கும் அமோக திருப்தி.

ராஜா, மக்கள் எல்லோரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

அகங்காரம் அழிவு தரும்

காட்டில் ஒரு சிங்கம் வசித்தது. புலி, யானை, மான், முயல், கிளி, குருவி, குயில் போன்ற எல்லா மிருகங்களும், பறவைகளும் அதைக்கண்டு பயந்தன. சிங்கத்துகுக் கர்வம் வந்தது. பிற எல்லா மிருகங்களையும் துச்சமாக நடத்தியது. இரவில் மிருகங்கள் தூங்கும்போது வேண்டுமென்றே உரத்த குரலில் கர்ஜிக்கும். மிருகங்களும், பறவைகளும் திடுக்கிட்டு விழிக்கும். அப்போது சிங்கம் அவற்றைப் பார்த்துக் கேலியாகச் கிரிக்கும்.

ஒரு நாள் குரங்குக் குட்டி மர உச்சியில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது. அங்கே வந்த சிங்கம் சப்தமாக உறுமியது. குட்டி பயந்து விழித்தது. அம்மா குரங்கு கை கூப்பிச் சிங்கத்திடம் வேண்டியது.

“சிங்க ராஜா, சிங்க ராஜா, தயவுசெய்து உரக்க உறுமாதீர்கள். என் குட்டி பயப்படுகிறது.”

“போடா குரங்குப் பயலே. நான் அப்படித்தான் சப்தம் போடுவேன். என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது.”

சிங்கம் தொடர்ந்து சப்தமிட்டது. இரவு முழுக்க குரங்கும் அதன் குட்டியும் தூங்கவேயில்லை.

குரங்குக்குப் பல நண்பர்கள். அதில் ஈ நெருங்கிய நண்பன். குரங்கு தோழனிடம் தன் சோகக் கதையைச் சொன்னது. ஈ மகா புத்திசாலி. கொஞ்ச நேரம் ஆலோசித்தது. அப்போது சொன்னது.

“குரங்கு நண்பா, நான் உன் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன்.”

குரங்குக்குச் சிரிப்பு வந்தது.

“ஈயாரே,ஈயாரே, யானை, புலிகள்கூடச் சிங்கத்தைக் கண்டு பயந்து ஓடுகின்றன. நீங்கள் பொடியன். உங்களால் என்ன செய்யமுடியும்?”

“என்னோடு வாருங்கள். சிங்கத்தின் குகை அருகே போகலாம். நீங்கள் பத்திரமாக மரத்தின்மேல் உட்கார்ந்துகொண்டு நான் நடத்தப்போகும் வேடிக்கையைப் பாருங்கள்.”

ஈ சிங்கத்தின் மூக்குக்குள் நுழைந்தது. அதன் மூக்கைக் குடைந்தது. சிங்கத்துக்கு உபத்திரவம் தாங்க முடியவில்லை. கோபத்தில் கத்தியது.

“யாரது என்னைத் தொந்தரவு செய்வது? மரியாதையாகப் போய்விடு.”

“மாட்டேன்,மாட்டேன்.”

ஈ சிங்கத்தின் மூக்கிலிருந்து வெளியே வந்தது, அதன் முகத்தைச் சுற்றி ரீங்காரமிட்டது, மறுபடியும் மூக்கினுள் புகுந்தது.

“ஈயே, பொடிப்பயல் நீ. மரியாதையாக ஓடிவிடு. இல்ல்லாவிட்டால் உன்னை என்ன செய்வேன் தெரியுமா?”

“என்னை என்ன பண்ணுவீங்க? என்னை என்ன பண்ணுவீங்க?”

ஈ கேலி செய்தது. சிங்கத்துக்கு ஈயின் செய்கை சித்திரவதையாகிவிட்டது. இப்போது ஈயிடம் வேண்டிக்கொண்டது.

“ஈயாரே, ஈயாரே, என்னை விட்டுவிடும்.”

“நீங்கள் இனிமேல் எந்த மிருகத்தையோ, பறவையையோ தொந்தரவு செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள். அப்புறம் நான்தான் காட்டுக்கு ராஜா என்று சப்தமாகச் சொல்லுங்கள்.”

சிங்கம் கத்தியது, “இனிமேல் காட்டுக்கு ராஜா நானில்லை, ஈ தான்.”

குரங்கு ஈக்கு நன்றி சொன்னது. இப்போது ஈக்கு, தான்தான் காட்டுக்கு ராஜா என்ற நினைப்பும் கர்வமும் வந்துவிட்டது. கண்ணை மூடிக்கொண்டு உயரே பறந்தது. அங்கே, ஒரு சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டது. ஈ மகாராஜாவைச் சிலந்தி சாப்பிட்டார், ஏப்பம் விட்டார்.

இப்படி ஏராளமான குட்டிக் கதைகள், அவற்றில் மனங்களில் ஆழப் பதியும் அற்புதமான நீதிக் கருத்துக்கள்.

நாடகக் கலை

கதைகள் பிடிப்பவர்களுக்கு, அத்தோடு இசையும், நடிப்பும் இணந்தால் இன்னும் பிடிக்குமே? எல்லோருக்கும் பிடித்த இன்னொரு பொழுதுபோக்கு நாடகம் பார்த்தல். டையோனிஸஸ் மதுபானம், மகிழ்ச்சி ஆகியவற்றின் கடவுள். இவருக்காக அடிக்கடி கொண்டாட்டங்கள் நடத்தப்படும். அப்போது நாடகங்கள் போடுவார்கள். இவை இசை நிறைந்த நாடகங்கள். 24 இசைக்கலைஞர்கள் பல கருவிகளோடு பாடுவார்கள், நடிப்பார்கள். தாங்கள் ஏற்கும் வேடத்துக்கு ஏற்ற முகமூடிகள் அணிந்து கொள்வார்கள். நாடகங்கள் நடத்துவதற்காக, அரசாங்கம் எல்லா நகரங்களின் மையப்பகுதிகளிலும் அரங்கங்கள் கட்டி வைத்திருந்தார்கள். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கல் இருக்கைகள் கொண்ட மாபெரும் அரங்கங்கள் இவை. ஆச்சரியம் என்னவென்றால், நிகழ்ச்சிகள் நடக்கும்போது இங்கே ரசிகர் கூட்டம் பொங்கி வழியும்.

இரட்டைக் காவியங்கள்

கதைகள் கலாசாரமான நாட்டில் இதிகாசங்கள் இல்லாமலா? கிரேக்க நாட்டின் இலியட், ஒடிஸி ஆகிய இரு இதிகாசங்களும் நம் ராமாயணம், மகாபாரதம் போல் ஒவ்வொரு வீட்டிலும் படிக்கப்பட்டவை. எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. இவை இரண்டையும் படைத்தவர் ஹோமர். பிறவியிலேயே கண்பார்வை அற்றவராக இருந்த ஹோமர் அமர காவியங்களை உருவாக்கியிருப்பது அதிசயிக்கவைக்கும் உண்மை.

சில கிரேக்க மாமனிதர்கள்

அறிவியல் மேதைகள்

கி. மு 580 – 500 வாக்கில் வாழ்ந்த பித்தகோரஸ் கணித மாமேதை. செங்கோண முக்கோணங்கள் குறித்த a2 + b2 = c2 என்கிற சமன்பாட்டை இவர்தான் கண்டுபிடித்தார்.

அனக்ஸகோரஸ் (Anaxagoras) கி. மு. 500 கால கட்டத்தில் பிரபஞ்சக் கொள்கைகள், கிரகணத்துக்கான காரணங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்.

ஹிப்பார்க்கஸ் (Hipparchus) கி. மு. 127 வாக்கில் வாழந்தவர். வானியல், கணிதம், ஆகியவற்றில் தேர்ந்தவர். பிரபஞ்ச மத்தியில் பூமி இருக்கிறது என்று சொன்னவர். அட்ச ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றைக் கண்டுபிடித்ததோடு 850 விண்மீன்களின் பட்டியலையும் உருவாக்கினார்.

கி.மு. 460 காலத்தில் வாழ்ந்த ஹிப்போகிரட்ஸ் (Hippocrates) உயிரியல் மேதை. நோய்கள் கடவுள்களின் கோபத்தால் வருகின்றன என்னும் அன்றைய மூட நம்பிகைகளைத் தகர்த்து எறிந்து, அவை சுற்றுச் சூழல்களால் வருகின்றன என்று எடுத்துச் சொன்னார். இவர் உலக மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

கி.மு, 290 காலகடத்திய ஆர்க்கிமிடீஸ் மாபெரும் கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர். ஆர்க்கிமிடீஸ் தத்துவம், தண்ணீரை உயர் மட்டத்துக்குக் கொண்டுபோகும் ஸ்க்ரூ முறை ஆகியவை இவர் கண்டுபிடிப்புகளுள் அடங்கும்.

தத்துவ மேதைகள்

சாக்ரடீஸ் :

கி. மு 470 வாக்கில் வாழ்ந்தார். துருவிக் கேட்கும் கேள்விகள் மூலம் அவரோடு உரையாடுபவர்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து ஞானம் தேடவேண்டும் என்பது இவரது சித்தாந்தம். சிந்திக்க வைத்து இளைஞர்களைக் கெடுக்கிறார் என்று குற்றம் சாட்டிய அரசு ஹெம்லக் என்னும் நஞ்சு கொடுத்து இவரைக் கொன்றது.

பிளேட்டோ :

கி. மு 428 முதல் 348 வரை வாழ்ந்தவர். 12 ஆண்டு காலம் பல நாடுகளுக்கு பயணம் செய்தார். இவருடைய சிந்தனைகள், தர்க்கம், நுண்பொருள் ஆய்வு, ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தன.

அரிஸ்டாடில் :

கி. மு 384 முதல் 322 வரை வாழ்ந்தார். பிளேட்டோவின் மாணவர், அலெக்ஸாண்டரின் ஆசிரியர். இயற்பியல், வேதியல், உயிரியல், விலங்கியல், உளவியல், அரசியல் கோட்பாடு, நீதி நெறி, தர்க்க சாஸ்திரம், மெய்ஞ்ஞானவியல், இலக்கியம், பேச்சுக் கலை என்று பல துறைகளில் சகலகலாவல்லவர்.

மாவீரன் அலெக்சாண்டர் :

கி.மு. 356 – இல் பிறந்து, வருடங்கள் மட்டுமே வாழ்ந்த இந்த இளைஞர் தன் வீரத்தால், அழிக்க முடியாத தடங்களை வரலாற்றில் பதித்திருக்கிறார். பாரசீகம் முதல் இந்தியாவரை உலகின் பெரும்பகுதியைத் தன் குடைக்கீழ் கொண்டுவந்தார். நாடுகளை வென்றதோடு மட்டுமல்லாமல், கிரேக்க நாகரிக விதைகளைச் சென்ற இடமெல்லாம் தூவினார். இன்று உலகம் முழுக்கக் கிரேக்க நாகரிகத்தின் தாக்கம் இருக்கிறதே, அதற்கு முக்கிய காரணம் அலெக்சாண்டர்!

0

http://www.tamilpaper.net/?p=8607

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 33

கடவுள் ஜெயித்த கதை

எஸ்.எல்.வி. மூர்த்தி

Quetzalcoatl_magliabechiano-300x277.jpg

மாயன் நாகரிகம் உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்று. கி. மு. 2600 ல் தொடங்கி கி. பி. 900 வரை நீடித்த நாகரிகம். இது.

மாயன் நாகரிகம் அமெரிக்க இந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப் பகுதிகள், காலத்தின் போக்கால், அரசியல் மாற்றங்களால், இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை: மெக்ஸிகோ, கவுதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார்.

மாயன் நாகரிகம் எந்தெந்த துறைகளில் எல்லாம் முத்திரை பதித்திருக்கிறது? உலக வரலாற்றுக்கு, மனித முன்னேற்றத்துக்கு, மாயன் நாகரிகத்தின் பங்களிப்பு என்ன?

சாக்லெட், கணிதம், வானியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மாயர்கள் தொட்ட சிகரங்கள், இன்றும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.

மாயன் நாகரிகம் கி. மு. 2600ல் தொடங்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு முன்னால், மாயர்கள் எங்கே இருந்தார்கள்? மாயமாக, கி. மு. 2600- இல் ஒரு நல்ல நாளில் வானத்தில் இருந்து குதித்தார்களா?

கடவுள் படைத்த பூமி

மாய நாகரிகத்தின் இதிகாசங்கள்பற்றி மட்டும் அல்லாமல், அவர்களுடைய மத நம்பிக்கைகள், வாழ்க்கை முறை போன்ற பல அம்சங்களை அறிய போப்பல் வூ (Popol Vuh) என்னும் புத்தகம் உதவுகிறது. இதன் பொருள் சமுதாயத்தின் புத்தகம்.உலகம் எப்படித் தோன்றியது, மக்கள் எப்படி வந்தார்கள் என்பதையெல்லாம் விளக்கும் பல கதைகள் ஆராய்ச்சியாளர்களுக்கு இதிலிருந்து கிடைத்திருக்கின்றன.

பல ஆயிரம், லட்சம், கோடி ஆண்டுகளுக்கு முன்னால், உலகில் மலைகள், நதிகள், செடி கொடிகள், பறவைகள், மீன்கள், மிருகங்கள், மனிதர்கள் என எந்த ஜீவராசிகளும் இல்லாத காலம்.

என்ன இருந்தது? வானமும், கடலும் மட்டுமே. உலகைப் படைத்தவர் கேட்ஸால்கோயோட்டெல் (Quetzalcoatl) . இறக்கைகள் கொண்ட பாம்பு உருவம் இவருடையது.

தன்னை வணங்க, தன் புகழ் பாட யாருமே இல்லையே என்று இவர் நினைத்தார். தன் பக்தகோடிகளைப் படைக்கத் தொடங்கினார்.

“பூமி” என்றார் கேட்கோ. கடலுக்குள்ளிருந்து பூமி எழுந்து வந்தது. மலைகளை அவர் மனதில் நினைத்தார். பூமிப் பரப்பில் மலைகள் உயர்ந்தன. பிறகு ஒவ்வொன்றாக செடிகள், மரங்கள் படைத்தார். தான் படைத்த பொருட்களில் சோளச் செடிகளை அவருக்கு மிகவும் பிடித்தது. இதற்கு என்ன காரணம் என்று அவருக்கே தெரியவில்லை. அப்படி ஒரு பிரியம்!

அடுத்ததாக, மான்கள், புலிகள், பாம்புகள், பறவைகள் என்ற பல ஜீவராசிகளை கேட்கோ படைத்தார். இவை தங்க இடம் வேண்டுமே?

“மான்களே, பிற மிருகங்களே, நதிக்கரைகள் உங்கள் வீடு. பறவைகளே, மரங்கள் உங்கள் உறைவிடம். உங்கள் இனத்தைப் பெருக்குங்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கட்டும்” என்று எல்லா மிருகங்களையும், பறவைகளையும் ஆசீர்வதித்தார்.

கேட்கோவுக்குத் தன் படைப்புகள் பற்றி ஒரே பெருமை. இனி இந்த மிருகங்களும், பறவைகளும் எப்போதும் தன் புகழ் பாடும் என்று நம்பினார்.

“மிருகங்களே, உங்களைப் படைத்த என் புகழ் பாடுங்கள்.”

விலங்குகளுக்குப் பேசத் தெரியாதே? அவை முனகின, கத்தின, ஊளையிட்டன.

பேசவில்லை.

“பறவைகளே, நீங்களாவது என் புகழ் சொல்லுங்கள்.”

பறவைகள் குரல் எழுப்பின. குரல் இனிமையான குரல்! ஆனால் வார்த்தைகள் இல்லை.

கேட்கோவுக்குத் திருப்தி வரவில்லை.

“என்ன செய்யலாம்?” என்று யோசித்தார். பேசும் சக்தி கொண்ட உயிர்வகையை உருவாக்க முடிவு செய்தார்.

பூமியிலிருந்து களிமண்ணையும் மணலையும் எடுத்தார். அவை இரண்டையும் சேர்த்துக் குழைத்தார். தலை, முகம், கண்கள், காது, மூக்கு, கைகள், கால்கள் கொடுத்தார். முதல் மனித உருவம் பிறந்தது.

அந்த முதல் மனிதனைப் பார்த்தார்.

“ஐயோ, இவன் அழகாக இல்லையே?”

கடவுள் கையில் எடுத்தவுடன் அவன் உடைந்து போனான். அவர் யோசித்தார். களிமண்ணும் மணலும் சரியில்லை என்று முடிவு செய்தார். அவனை அழிக்கவேண்டும், இன்னொரு வகை உயிரைப் படைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

இயற்கை நியதிப்படி கடவுளுக்குப் படைப்பது எளிது, அழித்தல் மிகக் கடினம்.

உலகம் இருட்டியது. வெள்ளம், பெரு வெள்ளம் வந்தது. பூமியைச் சூழ்ந்தது. முதல் பிரளயம் வந்தது. மண் மனிதனும், எல்லா ஜீவராசிகளும் மறைந்தார்கள்.

இனி மண் வேண்டாம், மரங்களால் மனித உருவம் செய்யலாம் என்று நினைத்தார். அவர் படைத்த மர மனிதன் அழகாக இருந்தான்.

“மனிதா, நீ பேசு பார்க்கலாம்.”

மனிதன் பேசினான். பேச்சா அது? சுத்த உளறல். அவருக்கே புரியவில்லை.

மர மனிதனிடம் இன்னொரு முக்கிய குறை. அவன் வெறும் மரம்தான். அவனுக்கு உயிர் இல்லை. உயிர் இல்லாத இவன் தன்னைப்போல் மனிதர்களைப் படைக்க முடியாதே? உலகில் மனித இனம் பெருக முடியாதே?

கேட்கோ யோசித்தார். மறுபடி பிரளயம். மர மனிதன் மறைந்தான்.

“நான் படைக்கும் மனிதனுக்கு உயிர் இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் பேசுவான், தன் இனம் பெருக்க அவனால் முடியும். எதை வைத்து அவனைப் படைக்கலாம்?”

“நமக்குப் பிடித்த சோளத்தால் மனிதனைப் படைக்கலாமா?”

மனிதன் உருவானான். அவனைப் பார்த்த அவருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

“மனிதா பேசு.”

சோள மனிதன் பேசினான்.

“வானக் கடவுளே, உங்களுக்கு என் நன்றி.”

“மனிதா, என் புகழ் பாடு.”

பாடினான். தன் முயற்சியில் கடவுள் ஜெயித்து விட்டார். அவர் படைத்த இந்த மனிதனுக்கு உயிர் இருக்கிறது. தன் மனித இன எண்ணிக்கையை அவன் பெருக்குவான். அவனுக்குப் பேசத் தெரியும். அவன் கேட்கோவை நம்புவான், அவர் புகழ் பாடுவான். இதற்குத் தானே அவர் ஆசைப்பட்டார்?

கடவுளுக்கு மனம் நிறைந்த திருப்தி, மகிழ்ச்சி.

“மனிதா, உனக்கு என் மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள் என்னை எப்போதும் நம்பு. பூமியை வாழ வை. நீ மிகச் சிறப்பாக வாழ்வாய்.’

கேட்ஸால்கோயோட்டெல் உலகத்தைப் படைத்தது இப்படித்தான், மனித வாழ்வு தொடங்கியது இப்படித்தான், என்கிறது மாய இதிகாசம்.

0

http://www.tamilpaper.net/?p=8698

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 34

மாய நகரம்

எஸ்.எல்.வி. மூர்த்தி

adivinanzas-mayas_clip_image007.jpg

மாயர்கள் நாகரிக வரளாற்றின் மைல்கற்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் இவைதாம்:

* கி. மு. 11000

மாயப் பகுதிகளில் மக்கள் முதன் முதலாகக் குடியேறத் தொடங்கினார்கள். இவர்கள் அக்கம் பக்க நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை வேட்டையாடி, அவற்றைச் சமைக்காமல், பச்சையாகச் சாப்பிட்டு வாழ்ந்தார்கள்.

* கி. மு. 2000

மாய நாகரிகம் தொடங்குகிறது. மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.

* கி. மு. 700

மாயர்களின் எழுத்துக்கள் தொடங்குகின்றன. இவை சித்திர எழுத்து வகையைச் சேர்ந்தவை. அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல், பட அமைப்புடைய எழுதுதல் முறை.

* கி. மு. 400

கி. மு. 400- ன் கல்வெட்டுகளில் மாயர்கள் கண்டுபிடித்த நாள்காட்டிகள் பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்தக் காலகட்டத்திலோ அல்லது இதற்கு முன்பாகவோ, காலண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்.

* கி. மு. 300

மன்னர்கள், பிரபுக்கள், பூசாரிகள் என ஆட்சிமுறை சீராக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிகளுக்குமான பொறுப்புகள், அதிகாரங்கள் ஆகியவை வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

* கி. மு. 100

டேயோட்டிவாக்கான் (Teotihuacan) என்ற நகரம் மாயர்களால் உருவாக்கப்படுகிறது.

இந்த நகரம் இன்றும் இருக்கிறது. கலை, மதம், வாணிபம் ஆகிய செயல்பாடுகள் இங்கே செழித்து வளர்ந்தன. பிரமிட்டுகள், கோயில்கள், அரண்மனைகள், பொதுச் சதுக்கங்கள் பிரம்மாண்டமாக இருந்த ஊர் இது.

* கி. மு. 50

ஸெர்ரோஸ் (Cerros) என்ற நகரம் உருவாகிறது. கோயில்கள், மண்டபங்கள் ஆகியவை நிறைந்த நகரம் இது.

* கி. பி. 100

பல உள் நாட்டுக் கலவரங்கள் தொடங்குகின்றன. மாய நாகரிகம் சரிவுப் பாதையில் அடியெடுத்து வைக்கிறது.

* கி. பி. 900

மேற்குப் பகுதிகளில் நகரங்கள் மெள்ள மெள்ள மறைகின்றன. அழிவின் ஆரம்பம்!

* கி. பி. 1511

கோன்ஸலோ குரேரோ (Gonzalo Guerrero) என்ற ஸ்பெயின் நாட்டுக்காரரின் கப்பல் புயலில் சிக்கி மாயர் பகுதியில் கரை தட்டுகிறது. அவர் அங்கு வாழும் உள்ளூர்ப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார்.

* கி. பி. 1517

ஸ்பெயின் நாடு மாயர்கள்மேல் போர் தொடுக்கிறது. 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாயர்கள் ஸ்பெயின் வீரர்களால் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, மாயர்களின் கலாசாரமும் மறைகிறது.

கி. மு. 11000 தொடங்கி, கி. பி. 1517- இல் மறைந்த இந்த வரலாற்றில்

கி. மு. 2600 – கி. பி. 900 வரையான காலம் மாயன் நாகரிக காலம் என்று வரையறைக்கப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் இந்தக் காலகட்டங்களை எப்படி முடிவு செய்தார்கள்? அவர்கள் முடிவுகள் எடுக்க எந்த ஆதாரங்கள் உதவின? எங்கிருந்து இவற்றைக் கண்டு பிடித்தார்கள்?

மாய நாகரிகத்தின் பெருமைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் கண்டறியப்பட்டன. கண்டுபிடித்த பெருமை ஃப்ரெடெரிக் காதெர்வுட் (Frederick Catherwood), ஜான் லாய்ட் ஸ்டீஃபென்ஸ் (John Lloyd Stephens) என்ற இருவருக்குமே உரியது.

காதெர்வுட் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓவியர், கட்டடக் கலைஞர். பழங்கால நாகரிகங்களை ஓவியங்களாக வரைவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்து தான் பார்த்த காட்சிகளை, சிதிலமான கட்டடங்களை, பிரமிட்களை வரைந்து தள்ளினார். இவை புத்தகங்களாக வெளியாகின.

ஸ்டீஃபென்ஸ் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். தொழிலால் வழக்கறிஞர். அவருக்கு உடல் நலத்தில் பிரச்னை ஏற்பட்டது. அவருடைய வேலைப் பளுவைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் ஆலோசனை சொன்னார்கள்.

“ஒய்வு வேண்டாம், உலகின் பல பாகங்களுக்கு சுற்றுப் பயணம் போய் வரலாம்” என அவர் முடிவெடுத்தார். இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ரஷ்யா, போலந்து, பிரான்ஸ் ஆகிய பல நாடுகளுக்கு இந்த உலகம் சுற்றும் வாலிபர் போனார். தன் அனுபவங்களைப் புத்தகமாக எழுதினார்.

இங்கிலாந்தில் ஸ்டீஃபென்ஸ், காதெர்வுட் இருவரும் தற்செயலாகச் சந்தித்தார்கள். தம் சுற்றுப் பயண அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். எழுத்துத் திறமை கொண்ட ஸ்டீஃபென்ஸும், ஓவியக் கலைஞர் காதெர்வுட்டும் தகுந்த வாய்ப்பு வரும்போது தங்கள் திறமைகளை ஒருங்கிணைத்து பணியாற்ற முடிவு செய்தார்கள்.

அந்த வாய்ப்பு விரைவில் வந்தது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஸ்டீஃபென்ஸை மத்திய அமெரிக்க நாடுகளுக்குத் தூதுவராக நியமித்தார். ஸ்டீஃபென்ஸ் அந்த நாட்டின் பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். மாய நாகரிகம் பற்றி அப்போது உலகம் அதிகமாக அறிந்திருக்கவில்லை. அப்படி ஒரு நாகரிகம் இருந்தது என்று தெரியுமே தவிர ஆதாரங்களோ, சிதிலமான கட்டங்களோ யார் கண்களிலும் படவில்லை. ஆதாரங்களைத் தேடி அலைந்தார் ஸ்டீஃபென்ஸ்.

மாயன்கள் பல புத்தகங்கள் எழுதினார்கள் என்று அவர் கண்டுபிடித்தார். ஆழமான மத நம்பிக்கை கொண்ட மாயன்களின் புத்தகங்கள் அவர்களுடைய நூற்றுக்கணக்கான கடவுள்களை மையமாக வைத்து எழுதப்பட்டவை என்பது சில குறிப்புகளிலிருந்து அவருக்குத் தெரிந்தது. அந்தப் புத்தகங்கள் கிடைத்தால் தன் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று உணர்ந்தார்.

முயற்சியைத் தொடர்ந்த அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் மாயப் பகுதிகளை ஸ்பெயின் நாடு ஆக்கிரமித்தது. அவர்களுடைய கிறிஸ்தவ மத நம்பிக்கைகளோடு மாய மதக் கதைகள் ஒத்துப் போகவில்லை. சில ஸ்பெயின் மத வெறியர்கள் மாயர்களின் புத்தகங்களைத் தீயிட்டு எரித்தார்கள். எரிந்தவை புத்தகங்கள் மட்டுமில்லை, அளவிட முடியாத மதிப்புக் கொண்ட நாகரிக வரலாற்று ஆதாரங்களும்தான்.

அடுக்கடுக்காகத் தோல்விகளை சந்தித்தபோதும், மனம் தளராமல் ஸ்டீஃபென்ஸ் ஆதாரங்களைத் தேடினார். இந்த உழைப்பும் நம்பிக்கையும் பலன் கொடுத்தன. போப்பல் வூ (Popol Vuh) என்ற பழங்காலக் கதைகளின் தொகுப்புப் புத்தகம் ஸ்டீஃபென்ஸ் கையில் கிடைத்தது.

மாய நாகரிகத்தின் மாஜிக் அவரை மயக்கத் தொடங்கியது. தான் போகும் இடங்களில் எல்லாம் பழங்கால மாய நாகரிக அடையாளைங்களை அவர் தேடத் தொடங்கினார்.

பழைய நாகரிகங்கள் பற்றிய விவரங்கள் கண்டுபிடிக்க அகழ்வு ஆராய்ச்சி பயன்படுகிறது. எந்த இடங்களைத் தோண்டினால்,. பழங்கால நாகரிகம் பற்றிய “புதையல்கள்” கிடைக்கலாம் என்று முதலில் அனுமானம் செய்யவேண்டும். அங்கே ஆழமாக, ஆழமாகத் தோண்ட வேண்டும்.

இது லாட்டரி மாதிரி. பல இடங்களில் தேட வேண்டும், தேடிக் கொண்டேயிருக்க வேண்டும். பழங்காலச் சான்றுகள் கிடைத்தால் உங்கள் முயற்சி வெற்றி. பணம், புகழ், தேடி வரும். சான்றுகள் கிடைக்காவிட்டால் உங்கள் வாழ்க்கையும் செலவிடும் பணமும் வீண்.

எங்கே “புதையல்” கிடைக்கும் என்று அனுமானிப்பதுதான் முயற்சியின் முதல் படி.

எப்படி அனுமானிப்பார்கள்? புத்தகங்கள். ஓவியங்கள் ஆகியவை வழி காட்டும். இவற்றைவிட முக்கியமானவை சிதிலமான கட்டடங்கள், ஓவியங்கள் சிற்பங்கள் ஆகியவை.

இந்தச் சிதிலங்கள் பெரும்பாலான நாகரிகங்களில் தரைக்கு மேல் இருக்கும். அல்லது சிதிலங்களின் அடையாளங்கள் தரைக்கு மேல் தெரியும். மாய நாகரிகத்தின் அகழ்வாராய்ச்சியில் புதிய பிரச்னை வந்தது. மாய நாகரிகம் நிலவிய இடம் மழை அதிகமாகப் பெய்யும் இடம், அடர்த்தியான காடுகள் நிறைந்த இடம். ஸ்பெயின் நாட்டவரின் ஆதிக்கத்தால், மாயன்கள் தங்கள் உறைவிடங்களை விட்டுப் புதிய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த பழைய இடங்களில்தானே நாகரிக அடையாளங்கள் கிடைக்கும்? ஆட்கள் வாழாத அந்த இடங்களை, கட்டடங்களை மரங்கள், காடுகள் மூடின.

மரங்கள் மூடிய இந்தப் புதையல் உலகத்துக்குத் தெரியாமலே போயிருக்கும். காடுகளுக்குள் போகும்போது, சில அடையாளங்களைப் பார்க்கும்போது, இங்கே ஒரு வரலாறு ஒளிந்திருக்கிறது என்று ஸ்டீஃபென்ஸூக்குப் பொறி தட்டியது. தன் கையில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் படித்தார். பொறி ஆர்வ நெருப்பானது.

ஸ்டீஃபென்ஸின் ஆரம்ப ஆராய்ச்சிகள் நாகரிகப் புதையல் கிடக்கும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக ஆரூடம் கூறின. தானும் ஓவியர் காதெர்வுட்டும் சேர்ந்து பணியாற்ற இது நல்ல வாய்ப்பு என்று ஸ்டீஃபென்ஸ் நினைத்தார். காதெர்வுட்டை இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு, தான் வாழும் மத்திய அமெரிக்கப் பகுதிக்கு வரச் சொன்னார்.

1839 – இல் இருவரும் சேர்ந்து தங்கள் அகழ்வாராய்ச்சிகளைத் தொடங்கினார்கள். தோண்டத் தோண்ட வியப்பான கட்டடங்கள், கோயில்கள், கல்லறைகள், பிரமிட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், புத்தகங்கள் ஆகியவை கிடைத்தன.

இருவர் திறமைக்கும் இவை அபாரத் தீனி போட்டன. 1841 ல் தங்கள் கண்டுபிடிப்புகளைப் புத்தகமாக இவர்கள் வெளியிட்டார்கள்.

“கணிதம், வானியல் போன்ற துறைகளில் மாயர்கள் இத்தனை சாதித்திருக்கிறார்களா?” என்று உலகம் வியந்தது.

இந்த வியப்பு உலகின் இன்னும் பல ஆராய்ச்சியாளர்களைத் தூண்டியது. இவர்கள் மத்திய அமெரிக்காவில் பல இடங்களைத் தோண்டினார்கள், விலை மதிப்பற்ற ஆதாரங்களைக்கண்டு பிடித்தார்கள்.

இவர்களுள் மிக முக்கியமானவர்கள் எரிக் தாம்ஸன் (Eric Thompson) ஸில்வானஸ் மோர்லி (Sylvanus Morley) என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். மாய விவசாயம், ஆட்சி முறை போன்ற துறைகள் பற்றிய இவர்களின் கண்டுபிடிப்புகள் மிக முக்கியமானவை.

மாயன் நாகரிகம் 2000 ஆண்டுகள் செழித்து ஓங்கியது. கி. பி. 1517 வரை, அதாவது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் வரை இருந்த நாகரிகம். இன்றும் சுமார் அறுபது லட்சம் மாயன்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெரு நாட்டில் வசிக்கிறார்கள். மற்றவர்கள் மெக்ஸிகொ, கவுதமாலா, பெலிஸே ஆகிய நாடுகளிலும் வசிக்கிறார்கள். இந்த “ஒரிஜினல்” மாயர்கள் அனைவரும் பண்டைய விவசாய, கலை நுணுக்க வேலைப்பாடுகள் ஆகியவற்றை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள்.

இத்தனை சிறப்புகள் கொண்ட மாய நாகரிகம் ஏன் மறைந்தது?

ஆராய்ச்சியாளர்கள் பல காரணங்கள் சொல்கிறார்கள்.

மாயன்கள் தங்கள் இயற்கைச் சூழ்நிலையைக் காப்பாற்றுவதில் அதிக கவனம் காட்டவில்லை. காடுகள் நிறைந்த தங்கள் பகுதிகளின் மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள். மரங்கள் விழுந்தன, மழை குறைந்தது. பஞ்சம், பசி, பட்டினி, நோய்கள் பெருகின. மாய சமுதாயம் இவற்றுக்கு பலியானது.

இன்னொரு முக்கிய காரணம் ஸ்பெயின் நாடு. பதினைந்தாம் நூற்றாண்டில் படையெடுத்த ஸ்பெயின் சுமார் 90% மாயன் மக்களைக் கொன்று குவித்தது. மீதம் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பெரு போன்ற நாடுகளுக்கு ஓடிப் போனார்கள்.

இன்று ஏகதேசம் மறைந்து போனாலும், தங்கள் பொற்காலத்தில் மாயர்கள் செய்த சாதனைகள், தொட்ட சிகரங்கள் மிக மிக முக்கியமானவை. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்,

0

http://www.tamilpaper.net/?p=8722

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 35
சாக்லேட் கதை

எஸ்.எல்.வி. மூர்த்தி

kli10-200x300.jpg


மனித வாழ்க்கை முறையையும் வாழ்க்கைத் தரத்தையும் நிர்ணயிப்பதில், அவர்கள் வாழும் பகுதியின் வெப்ப தட்ப நிலை பெரும் பங்கு வகிக்கிறது. மாயர்கள் வாழ்ந்த பிரதேசத்தின் கீழ்ப்பகுதியைச் சுற்றி ஏராளமான சுண்ணாம்புக் கல் கிடைத்தது. இதனால், அந்த இடம் வெப்பம் அதிகமானதாக இருந்தது. எப்போதாவதுதான் மழை பெய்யும். தண்ணீர்த் தட்டுப்பாடுதான்.

மேற்குப் பகுதி வெப்ப நிலையில் நேர் மாறானதாக இருந்தது. இங்கே ஏராளமான மலைகள், பள்ளத்தாக்குகள். இந்தப் பிரதேசம் மழைக்காடு (rainforest) எனப்படும். அகண்ட இலைகளையுடைய உயரமான மரங்கள் ஈரச் செறிவுள்ள இந்தப் பகுதிகளில் வளரும். இந்த மரங்கள் பசுமை மாறாமலே இருக்கும், அல்லது வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இலைகளை உதிர்க்கும் மர வகைகள்.

இங்கே பலத்த மழை பெய்யும். தரை ஈரப் பதம் கொண்டதாக இருக்கும். ஆனால், பூமி வளமானது அல்ல. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்ற சுமார் எழுபது ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. மாடுகள், குதிரைகள் போன்ற விவசாயத்துக்கு உதவும் மிருகங்களும் இல்லாததால், மனிதர்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே, தங்கள் நிலங்களில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

மாயர்கள் சோளத்தில் இருந்து கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் இதிகாசம் சொல்வதைப் பார்த்தோமே? மாயர்களின் முக்கிய விவசாயம் சோளம்தான். அவர்கள் சோளத்தால் ரொட்டி செய்தார்கள். சோள ரொட்டிதான் அவர்களுடைய முக்கிய உணவு.

மாயர்களின் முக்கியப் பானம் கோகோ. ஆமாம், சாக்லெட்டின் முக்கிய மூலப் பொருளான கோகோதான். இதனால்தான், மாய நாகரிகம் சாக்லெட்டின் தாயகமாகக் கருதப்படுகிறது.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே, அதாவது சுமார் கி. மு. 2000 ல் கோகோ மரங்கள் வளர்க்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கோகோ மரத்தை கேட்ஸால்கோயாட்டெல் கடவுள் சொர்க்கத்தில் இருந்து கொண்டு வந்தார் என்று மாயர்கள் நம்புகிறார்கள். கோகோ கடவுள்களின் உணவு என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் சாக்லெட்டுக்கே எக் சுவாக் என்று ஒரு கடவுளை அவர்கள் உருவாக்கினார்கள்.

மாயர்கள் கோகோ கொட்டைகளை சுடுதண்ணீரில் போட்டு அந்தக் கஷாயத்தைக் குடித்தார்கள். இந்த பானத்துக்கு அவர்கள் ஸோக்கால்டல் (Xocaltl) என்று பெயர் வைத்திருந்தார்கள். ஸோக்கால்டல் என்றால் கசப்பான பானம் என்று அவர்கள் மொழியில் பொருள். இந்த வார்த்தையிலிருந்துதான் சாக்லெட் என்ற பெயரே வந்தது. தங்கக் கோப்பைகளில் மட்டுமே கோகோ குடிப்பார்கள். ஒரு முறை குடித்தவுடன் இந்தக் கோப்பைகளை வீசி எறிந்துவிடுவார்கள். ஆமாம், தங்கக் கோப்பைகளைத்தான். இப்படி, வசதி கொண்டவர்கள் மட்டுமே குடிக்கும் ஆடம்பர பானமாக ஸோக்கால்டல் இருந்தது.

பானங்களில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் கோகோ ராஜா. மாயர்களின் வியாபாரம் பண்டமாற்றுமுறையில் நடந்தது. இதற்கு கோகோ கொட்டை ஒரு பண்டமாற்றுப் பொருளாகப் பயன்பட்டது. நான்கு கொட்டைகளுக்கு ஒரு முயல் அல்லது ஒரு வான்கோழி வாங்கலாம். நூறு கொட்டைகள் கொடுத்தால் வாழ்நாள் முழுக்க வேலைக்காரனாக உழைக்கும் அடிமை கிடைப்பான்.

சாக்லெட் கதை

மாயர்கள் உலகைத் தாண்டி கோகோவின் மகிமையை வெளி உலகத்துக்குத் தெரிய வைத்தவர் கிரிஸ்டோஃபர் கொலம்பஸ். ஒரு பயணத்தின்போது, 1502ம் ஆண்டு அவர் ஒரு படகைப் பார்த்தார். படகு நிறைய கோகோ கொட்டைகள். ஸ்பெயின் நாட்டில் கோகோ கொட்டைகளே கிடையாது. கொலம்பஸும் அவருடைய சகா மாலுமிகளும் முதன் முறையாக இவற்றைப் பார்த்தார்கள். வித்தியாசமான இக்கொட்டைகளைத் தங்கள் மன்னரிடம் கொடுக்க ஒரு பிடி எடுத்துக் கொண்டார்கள். மொழி தெரியாததால், மாய நாட்டுக்காரர்களிடம் பேசி கொக்கோ கொட்டைகளின் மகிமையை அவர்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை. கொலம்பஸ் கோகோ கொட்டைகளை ஸ்பெயினுக்குக் கொண்டு வந்தார். தன் மன்னருக்கு அவற்றைப் பரிசாகக் கொடுத்தார்.

மன்னருக்கு கோகோ சுவை பிடித்தது. ஆனால் கொலம்பஸ் புதிய கண்டமான அமெரிக்கா கண்டுபிடித்தது தலைப்புச் செய்தியாகிவிட்டபடியால் கோகோ மன்னரின் நினைவில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. கொலம்பஸ் கோகோவை ஸ்பெயினுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால், கோகோ வரலாற்றில் சிறப்பு இடம் பெறுபவர் ஹெர்னாண்டோ கோர்ட்டெஸ் (Hernando Cortez) என்ற ஸ்பெயின் நாட்டுக்காரர். புதிய நாடுகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆசையில் பயணங்கள் மேற்கொள்ளும் துணிச்சல்காரர். கோர்ட்டெஸ் பயணம் செய்த கப்பல் மாயர் பகுதியில் கரை தட்டியது. கோகோவின் சுவை கண்ட கோர்ட்டெஸ் கோகோ கொட்டைகளை ஸ்பெயினுக்கு எடுத்துப் போனார்.

மன்னர், பிரபுக்கள், பணக்காரர்கள் அதன் சுவையை விரும்பினார்கள். ஆனால், இப்போதும் கோகோ ஒரு பானமாகத்தான் இருந்தது. ஸ்பெயின் நாட்டு மக்கள் கோகோ பயிரிடத் தொடங்கினார்கள். கொட்டைகளைத் தூளாக்கி அந்தத் தூளால் பானம் தயாரித்தால் கூடுதல் சுவை வரும் என்று அறிந்தார்கள். இந்தத் தூளை, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்ஸர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். ஏற்றுமதி பெருகியது. ஆனால், தூள் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைப் பரம ரகசியமாக வைத்துக்கொண்டார்கள். அந்த நாடுகளும் கோகோ பயிரிட ஆரம்பித்துவிட்டால் ஸ்பெயினின் ஏற்றுமதி வியாபாரம் படுத்துவிடுமே?

ஆனால் இந்த விஷயங்களை எத்தனை நாள்கள் ரகசியமாகக் காப்பாற்ற முடியும்? பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோகோ ரகசியம் ஐரோப்பிய நாடுகளுக்குக் கசிந்தது. குறிப்பாக பெல்ஜியம், இங்கிலாந்து, சுவிட்ஸர்லாந்து நாட்டுக்காரர்கள் கோகோவைப் பிடித்துக்கொண்டார்கள். கசப்பைப் போக்க, அவர்கள் இந்தப் பானத்தில் சர்க்கரை சேர்த்தார்கள். இங்கிலாந்தில் கோகோ கிளப்புகள் தொடங்கப்பட்டன. இங்கே இனிப்பு கோகோ பானம் மட்டுமே கிடைக்கும். இவை மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றன. கோகோவின் சுவை மக்களுக்குப் பிடித்தது.

1674 ல் சாக்லெட் தூளை கேக்களில் சேர்க்கும் வழக்கம் வந்தது. குடிப்பதற்குப் பதில் சாப்பிட முதன் முதலாகக் கோகோ பயன்பட்டது இப்போதுதான். 1828 ல் கொன்ராட் வான் ஹூட்டன் (Conrad Von Houten) கோகோவில் எண்ணெய் எடுக்க ஒரு இயந்திரம் உருவாக்கினார். கோகோவின் எண்ணெய் வெண்ணெய் என்று அழைக்கப்பட்டது. இதற்குப் பிறகு 19 ஆண்டுகள் ஓடின. ஜோஸஃப் ஃப்ரை (Joseph Fry) என்ற ஆங்கிலேயர் சாக்லெட்டின் முதல் வடிவை உருவாக்கினார். கோகோ தூள், சர்க்கரை, கோகோ வெண்ணைய் ஆகிய மூன்றையும் சேர்த்தார். பசைத் தன்மை கொண்ட மாவு கிடைத்தது. இவற்றைப் பல வடிவங்கள் கொண்ட சாப்பிடும் சாக்லேட்டுகளாக மாற்றினார்.

1861- இல் ரிச்சர்ட் காட்பரி (Richard Cadbury) சாக்லெட் கடை தொடங்கினார். இவருடைய உற்பத்தி பெரிய அளவில் இருந்தது. சாப்பிடும் சாக்லெட் அதிக அளவு மக்களைச் சென்றடையத் தொடங்கியது. மில்க் சாக்லெட், ஃபை ஸ்டார், ஜெம்ஸ், எக்லயர்ஸ் போன்ற உங்களுக்குப் பிடித்த சாக்லெட் ரகங்கள் தயாரிக்கும், உலக நாடுகள் பலவற்றிலும் தன் கிளைகளைப் பரப்பியிருக்கும் காட்பரி கம்பெனி பிறந்த கதை இதுதான். இன்னும் பதினைந்து வருடங்களுக்கு சாக்லெட் என்பது கோகோ தூள், சர்க்கரை, கோகோ வெண்ணெய் ஆகிய மூன்றின் கலவைதான். மாற்றம்தானே முன்னேற்றம்?

1879 – இல் டானியல் பீட்டர் (Daniel Peter) என்ற சுவிட்ஸர்லாந்து நாட்டுக்காரர் இந்த மூன்று பொருள்களோடு பால் கலந்தார். சுவை அமிர்தம்! அன்று முதல் இன்றுவரை எல்லோருக்கும் பிடித்த இனிப்பாக இருக்கிறது சாக்லெட்.

சோளம், கோகோ ஆகிய பொருள்களுக்கு ஈடாக மாயர்களின் வாழ்வில் மிக முக்கியமான பொருளாக உப்பு இருந்தது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்ற பழமொழியை மாயர்கள் முழுக்க நம்பினார்கள்.

0

மாயர்கள் வாழ்க்கையில் சாப்பாடு தவிர உப்புக்கு இன்னொரு உபயோகமும் இருந்தது. காய்கறிகள், மாமிசம் ஆகியவற்றை உப்பில் போட்டு வைத்தால், அந்தப் பொருட்களைக் கெட்டுப் போகாமல் காப்பாற்றலாம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

நாம் இன்று உப்பு தயாரிப்பது போலவே மாயர்களும் உப்பு உற்பத்தி செய்தார்கள்.
கடல் நீரை கடற்கரையில் தேக்கி வைப்பார்கள். இந்த உப்பளங்களில் உள்ள தண்ணீர் வெயிலில் உலரும்போது உப்பு கிடைக்கும். கடற்கரைப் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட உப்பு நாட்டின் பல பாகங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது.

மாயர்கள் வாழ்க்கையில் ஆடைகள் மிக முக்கியமானவை. ஒருவர் அணியும் உடைகள் அவர்களுடைய சமூக அந்தஸ்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் என்பது அவர்களின் ஆழமான நம்பிக்கை.

ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித் தனியான வகை உடைகள் இருந்தன. அவற்றை அணிவதுதான் தன்மானமுள்ள, பெருமைக்கு உரிய விஷயம் என்று அவர்கள் நினைத்தார்கள். அடுத்த கிராமத்து ஸ்டைல் ஆடைகளை அணிபவர்கள் கேலி செய்யப்பட்டார்கள்.

ஆண்களின் உடை மிக எளிமையானது. இடுப்புப் பாகத்தை மட்டும் மறைக்கும் அரைத் துணிதான் அவர்கள் ஆடை. மகாத்மா காந்தியை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

பெண்களின் உடைகள் தனிக் கவனத்தோடு வடிவமைக்கப்பட்டன. பெண்கள் இடுப்பில் பாவாடை அணிவார்கள். அதற்கு மேல் Huipil என்ற பிளவுஸ் மாதிரியான மேல் உடை. இந்த உடை பருத்தி, கம்பளி, சணல், கற்றாழை நார் போன்றவற்றால் செய்யப்படும். இது செவ்வக வடிவத்தில் தைக்கப்பட்டிருக்கும். கழுத்தை நுழைப்பதற்காக ஓர் ஓட்டை இருக்கும். பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் தைக்கப்பட்டது. அதன் மேல் பல நிறங்களில் படங்கள், கை வேலைப்பாடுகள் செய்வார்கள். நீலம், சிவப்பு ஆகிய நிறங்கள் பிரபலமானவை. நீல நிறம் செடிகளிலிருந்து தயாரிக்கப்பட்டது. சிவப்பு நிறம் கோச்சினீயல் (Cochineal) என்ற பூச்சியைக் கொன்று அதன் ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்டது.

பூ வேலைகள், எம்ப்ராய்டரி போன்ற கைவினை வேலைகள் ஆடையின்மீது நெய்யப்பட்டன. இவையும் ஆடைகளில் வரையப்பட்ட படங்களும் கடவுள்களின் உருவங்களாகவும் இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருந்தன.

சோளக் கடவுளான கேட்ஸால்கோயோட்டெல் மாயர்களுக்கு மிக முக்கியமானவர் என்பதால் அவர் படம் பெரும்பாலான ஆடைகளில் தீட்டப்பட்டது. அவர் பாம்பு வடிவானவர். எனவே பாம்புகள் மாயர்களின் ஆடைகளில் அடிக்கடி தோன்றின.

பெரும்பாலும் வீட்டுப் பெண்கள்தான் ஆடைகளைத் தைத்தார்கள், அவற்றில் ஓவியங்கள் வரைந்தார்கள், வேலைப்பாடுகள் செய்தார்கள். இதனால் பெண்களிடம் கற்பனைத் திறமை அதிகமாக இருந்தது. பெண்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுவதற்கு இந்தத் திறமை உதவியது. ஜேட் என்கிற பச்சை மணிக்கல் அதிர்ஷ்டமானது என்று மாயர்கள் நம்பினார்கள். இவற்றால் அங்கிகள்போல் உடைகள் தைத்து வீப்பிலின்மேல் அணிந்து கொண்டார்கள்.

உணவு, உடை ஆகிய அடிப்படைத் தேவைகளில் கடவுள்களிடம் மரியாதை காட்டிய மாயர்கள் ஆண்டவனிடம் மட்டுமல்ல, தம்மை ஆண்ட அரசர்களிடமும் மரியாதையும் பயமும் கொண்டிருந்தார்கள். அரசர்கள் கடவுள்களின் அவதாரங்கள் என்று நம்பினார்கள். அவர்கள் என்ன கட்டளையிட்டாலும் மறு பேச்சுப் பேசாமல் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

அரசர்களின் அதிகாரத்துக்கு எதிர்ப்பே இல்லாததால், நாட்டில் அமைதி நிலவியது. மன்னர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்த முடிந்தது.

புதுப் புது நகரங்களை ஏற்படுத்துவதில் அரசர்களுக்கு உற்சாகமும் ஈடுபாடும் இருந்தது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கணிசமாக உயர்த்த முடியும் என்பது அவர்களுடைய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை.

நகரம் உருவாக்கும்போது கட்டடங்கள் கட்ட வேண்டும். இதற்குக் கற்கள், சுண்ணாம்பு போன்ற பொருட்கள் பெரும் அளவில் தேவைப்படும். இந்தத் தொழில்கள் அமோகமாக வளரும்.

நூற்றுக்கணக்கில் கட்டடக் கலைஞர்கள், தச்சு வேலைக்காரர்கள், ஓவியர்கள் போன்ற பல்வேறுபட்ட தொழிலாளர்களின் உழைப்பு தேவை. இவர்களுக்கு வேலைகள் கிடைக்கும். வேலை வாய்ப்புகள் இருப்பதால் புதியவர்கள் இந்தத் தொழில்கள் படித்து இந்தத் துறைகளில் நுழைவார்கள்.,

அந்தக் காலகட்டத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், மாயர்கள் உருவாக்கிய சில நகரங்கள் பிரம்மாண்டமானவை. டிக்கல் (Tikal), எல் மிராடர் (El Mirador) போன்ற நகரங்களில் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்தார்கள்.

இந்த மக்களுக்குச் சோளம், கொகோ, உப்பு, மீன் ஆகிய உணவுப் பொருள்கள் வேண்டுமே? இவை கிராமங்களில் இருந்து வந்தன. கிராம மக்களின் பொருளாதார நிலை உயர்ந்தது.

நகரங்கள், கிராமப் பொருள்களை விற்க வாய்ப்பு கொடுக்கும் சந்தை ஆனது. தாம் பொருள்களைத் தயாரித்தால், அவற்றை விற்கும் சந்தை இருக்கிறது என்ற ஊக்கத்தால் மக்கள் தொழில்களில், வியாபாரத்தில் தைரியமாக ஈடுபட்டார்கள்.

நாட்டின் பல பாகங்களும் வணிகத்தால் இணைக்கப்பட்டன. வியாபார எல்லைகளைத் தாண்டி, தாம் எல்லோரும் ஒரே நாட்டினர் என்கிற பாசப் பிணைப்பையும் நகர உருவாக்கம் கொண்டு வந்தது.

நகரங்களின் உருவாக்கம், கட்டமைப்பு ஆகியவை பொருளாதார வளர்ச்சியின் கிரியா ஊக்கிகள் என்பது அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் கண்டறிந்த, அறியும் உண்மை. இந்தச் சித்தாந்தத்தை அன்றே நிரூபித்தவர்கள் மாயர்கள்.

0

http://www.tamilpaper.net/?p=8791

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 36

மாயர்கள் கணித மேதைகள்

எஸ்.எல்.வி. மூர்த்தி

mayat4-300x187.jpg

நாம் என்ன எண்முறை பயன்படுத்துகிறோம்? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10.

இவற்றின் முன்னோடியாக இந்தியா வழிகாட்டிய காரணத்தால், இந்த எண்கள் இந்து அராபிய எண்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த எண் முறையின் பெயர் தசாம்ச முறை (Decimal System). தசம் என்றால் பத்து. அதாவது, இந்தக் கணித முறை தச அடிப்படையைக் கொண்டது. அது என்ன தச அடிப்படை?

உதாரணமாக 2875 என்ற எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். இடமிருந்து வலமாக எண்களைப் பாருங்கள்.

முதல் இடத்தில் 5. இதன் மதிப்பு 5.

இரண்டாம் இடத்தில் 7. இதன் மதிப்பு 7 x 10 = 70.

மூன்றாம் இடத்தில் 8. இதன் மதிப்பு 8 x 102 = 8 x 100 = 800

நான்காம் இடத்தில் 2. இதன் மதிப்பு 2 x 103 = 2 x 1000 = 2000

இந்த அடிப்படையில், எண்ணின் மொத்த மதிப்பு, இரண்டாயிரத்து எண்ணூற்று எழுபத்து ஐந்து.

இந்த எண்முறை நாட்டுக்கு நாடு, கலாசாரத்துக்குக் கலாசாரம் மாறுபடும். தமிழ் எண் முறையில், இந்த எண்களை எப்படி எழுதுவார்கள்?

[im=http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2014/05/Evolution-of-number-system-258x300.png]

தமிழ் எண் முறையில் 0 கிடையாது.

மாயர்களும் கணித அறிவில் மாபெரும் முன்னேற்றம் கண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய எண்முறை வித்தியாசமானது. இந்து அரபிய எண்களில், தசாம்ச முறையில், 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்ற பத்து குறியீடுகள் உள்ளன.

மாயர்களின் எண்முறையிலும் பத்து எண்கள் உள்ளன. தமிழ் போலவே தனிப்பட்ட எண் முறையும் உண்டு. மேலே பார்த்ததுபோல், தமிழில் 9 குறியீடுகள் உள்ளன. ஆனால், மாயர்களுக்கு மூன்று குறியீடுகள்தாம். அவை :

015.jpg

இந்தக் குறியீடுகளை அடிப்படையாக வைத்து மாயர்கள் எண்களை எப்படி எழுதினார்கள்?

இப்படித்தான்.

Maya_numbers_0-20-300x140.png

எப்படி கூட்டல் கணக்குப் போட்டார்கள்?

. + .. = …

. . + ———- = .. —————

மாயர்களின் எண் முறை தசாம்ச முறை அல்ல. அது Vigesimal System என்று அழைக்கப்படுகிறது. அது என்ன புது முறை?

உதாரணமாக மாயர்களின் கீழ்க்கண்ட எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்; .

.. .. . ..

_____ _______

முன் போல் வலமிருந்து இடமாக எண்ணுவோம்.

முதல் இடத்தில் 5. இதன் மதிப்பு 5.

இரண்டாம் இடத்தில் 7. இதன் மதிப்பு 7 x 20 = 140.

மூன்றாம் இடத்தில் 8. இதன் மதிப்பு 8 x 202 = 8 x 400 = 3200

நான்காம் இடத்தில் 2. இதன் மதிப்பு 2 x 203 = 2 x 8000 = 16000

எண்ணின் மொத்த மதிப்பு, 16000 + 3200 + 140 + 5 = 19345

மாயர்களின் எண் முறையில் கூட்டல், கழித்தல் செய்யலாம். பெருக்கல், வகுத்தல் செய்ய முடியுமா, செய்தார்களா? நமக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

மாயர்களின் இந்த எண்முறை ஏன் உலக அளவில் வெற்றி காணவில்லை?

எல்லா நாடுகளும் தசாம்ச முறையைப் பின்பற்றுவதற்கு என்ன காரணம்?

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் ஒரு காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கிறது. நம் கைகளில் பத்து விரல்கள் இருக்கின்றன. நாம் சின்னக் குழந்தைகளாக இருக்கும்போது, அப்பா அம்மாவும், ஆசிரியர்களும், எப்படிக் கூட்டல் கணக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்?

இரண்டும் மூன்றும் கூட்டினால் விடை என்ன? இதை நாம் எப்படிச் சிறுவயதில் கற்றுக்கொண்டோம்? கை விரல்களைக் கொண்டுதான் அல்லவா?

தசாம்ச முறையை உலகம் ஏற்றது சரி. அது மாயர்கள் முறையைவிட எளிதானதாகவும் இருக்கலாம். ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், விஜெஸிமல் முறை கண்டுபிடித்த மாயர்களின் கணிதத் திறமையை, அறிவுக் கூர்மையை, இந்தக் காரணங்கள் கொஞ்சம்கூடக் குறைத்துவிட முடியாது.

காரணம்? இந்தக் கணிதத் திறமையை அடிப்படையாக வைத்து அவர்கள் வானியல் ஆராய்ச்சிகள் நடத்தினார்கள், நாள்காட்டிகள் உருவாக்கினார்கள். மனித சமுதாய முன்னேற்றத்தில் மாபெரும் சாதனைகள் அல்லவா இவை?

வானியல் சாதனைகள்

நாம் வாழும் உலகம் தனியான அமைப்பு அல்ல, மாபெரும் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி என்பது மாயர்களின் நம்பிக்கை. அவர்களுடைய இதிகாசக் கதைகள் இந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன.

உலகத்தை முமு முதற் கடவுள் படைத்தார். அந்த உலகத்துக்கு மூன்று பகுதிகள். பூமி. அதற்கு மேல் 13 வகை உலகங்கள் கொண்ட சொர்க்கம். வானத்தின் நான்கு ஓரங்களிலும் நான்கு கடவுள்கள் வானத்தைப் பத்திரமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பூமிக்குக் கீழே 9 வகை உலகங்கள் கொண்ட பாதாள உலகம். சொர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று வகை உலகங்களுக்கும் தனித்தனி ராஜாக்கள்.

தான் படைத்த உலகம் என்றும் செழிப்பாக இருப்பதற்காகக் கடவுள் உலக மரம் (World Tree) நட்டார். இதன் கிளைகள் சொர்க்கத்தில் உள்ளன. வேர்கள் பாதாளத்தில். இந்த மரம்தான் மூன்று உலகங்களையும் தாங்கிப் பிடிக்கிறது என்பது மாயர்களின் நம்பிக்கை.

இங்கே உலக மரம் என்று குறிப்பிடப்படுவது விஞ்ஞானம் விளக்கும் பால்வழி விண்கூட்டம்தான் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் பால்வழி விண்கூட்டத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன.

ரேடியோ மற்றும் ரேடார் வானியல் குறித்தெல்லாம் கி. பி. 1945 க்குப் பிறகுதான் விஞ்ஞான உலகம் தெரிந்துகொண்டது. அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மாயர்கள் எப்படிப் பால்வழி விண்கூட்டம் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள்? விடை தெரியாத ஆச்சரியம் இது!

ஓரியன் விண்தொகுப்பு (Orion Constellation) என்பது மிகப் பிரகாசமான நட்சத்திர மண்டலங்களுள் ஒன்று. தமிழில் ஓரியனைப் பிரஜாபதி என்று சொல்கிறார்கள். இது வேடன் வடிவம் கொண்டதாக வர்ணிக்கப்படுகிறது. அவன் கையில் வாள்போல் ஒரு பகுதி தெரியும். இந்தப் பகுதியின் பெயர் ஓரியன் நெபுலா.

orion-232x300.jpg

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான், ஓரியன் நெபுலா வானியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் புகைப்படமே 1880ல் தான் முதன் முதலாக எடுக்கப்பட்டது.

ஆனால், மாய நாகரிகப் பழங்கதைகளில் ஓரியன் விண்தொகுப்பு, நெபுலா ஆகியவற்றின் வர்ணனைகள் காணப்படுகின்றன. இவை புகைப்படம் காட்டும் தோற்றங்களோடு ஒத்தும் போகின்றன. விடை இல்லாத இன்னொரு ஆச்சரியம்!

உலகத்தை படைத்த முழு முதற் கடவுளான கேட்ஸால்கோயோட்டெல் நினைவாகக் கட்டப்பட்ட பிரமிட் சீசென் யீட்ஸா (Chichen Itza ) என்ற நகரத்தில் இருக்கிறது. இந்த பிரமிட் கி. மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

மார்ச் 21, செப்டம்பர் 23 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும், இந்தப் பிரமிடின் நிழல் இறக்கைகள் கொண்ட பாம்பு வடிவமாக, ஆமாம், கேட்ஸால்கோயாட்டெல் வடிவமாக விழுகிறது. பிரமிட் படிகளில் சூரிய வெளிச்சம் பளீரென்று அடிக்கிறது. பல நூற்றாண்டுகளாக, உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அந்த இரண்டு நாட்களில் தோன்றும் அதிசயத்தைப் பார்க்க வருகிறார்கள்.

மார்ச் 21, செப்டம்பர் 23 ஆகிய இந்த நாள்களின் பின்னால் விஞ்ஞானப் பின்புலம் உள்ளது. இவை சம பங்கு நாட்கள் (Equinox) அதாவது ஒரு வருடத்தில், இந்த இரண்டு நாட்களில் மட்டும்தான், பகல் பொழுதும் இரவுப் பொழுதும் சம அளவு நேரங்களில் அமையும். அதாவது, பன்னிரண்டு மணி நேரம் சூரியன் தெரிகிற பகல். பன்னிரண்டு மணி நேரம் சூரியன் மறைந்திருக்கும் இரவு.

சூரியன் மாயர்களின் முக்கியக் கடவுள். தங்கள் கோவில்களில் சூரிய வெளிச்சம் விழுவது நல்ல சகுனம் என்று அவர்கள் நினைத்தார்கள். கேட்ஸால்கோயாட்டெல் நினைவுச் சின்னத்தின் படிகளில், இந்த இரண்டு சம பங்கு நாட்களில் மட்டும் வெயில் விழும். மற்ற நாட்களில் வெயில் விழாது.

இப்படி வருமாறு எப்படி வடிவமைத்தார்கள், கட்டட நிழல் கேட்ஸால்கோயாட்டெல் வடிவாக எப்படி வருகிறது, சம பங்கு நாட்கள் பற்றி மாயர்களுக்கு எப்படித் தெரியும்? விடை இல்லாப் பல ஆச்சரியங்கள்!

சூரியன் மட்டுமல்ல, சந்திரனின் இயக்கத்தையும் அவர்கள் கூர்ந்து கவனித்தார்கள், பதிவு செய்தார்கள். அந்தப் பதிவுகள் சில ஆராய்ச்சிகளில் கிடைத்திருக்கின்றன.

இந்தக் கண்டுபிடிப்புகளுக்காக மாயர்கள் வான் ஆய்வுக்கூடங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். இங்கே தொலைநோக்கிகள் போன்ற கருவிகள் இருந்ததாகச் சான்றுகள் சொல்கின்றன.

காலண்டர்கள் என்று நாம் சொல்லும் நாள்காட்டிகள் காலத்தைப் பகுத்து ஒழுங்குபடுத்தி அமைக்கும் முறை. நாட்கள், மாதங்கள், வருடங்கள் எனக் காலம் படிப்படியாக அதிகரிக்கும் வகையில் பிரிக்கப்படுகிறது. காலண்டர்கள் சூரிய, சந்திரச் சுழற்சிகளின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன.

சூரிய சந்திர இயக்கங்கள் தெரிந்தவர்கள், கணிதத்தில் வல்லவர்கள், வான் ஆய்வுக்கூடங்கள் கொண்டவர்கள் என்ற பல திறமைகளையும் ஒருங்கிணைத்த மாயர்கள் தங்கள் காலண்டர்களை உருவாக்கினார்கள்.

நாம் கடைப்பிடிக்கும் கிரிகோரியன் காலண்டர் வருடத்தில் 365 நாட்களைக் கொண்டது. மாயர்களின் காலண்டர்களில் இரண்டு வகை காலண்டர்கள் முக்கியமானவை.

ஒன்று 365 நாட்கள் கொண்டது. வருடத்துக்கு 18 மாதங்கள். மாதத்துக்கு 20 நாட்கள். இந்தக் காலண்டரை ஹாப் காலண்டர் (Haab) என்று அழைத்தார்கள். மாதம் 20 நாட்களாக, இந்தக் காலண்டரில் வருடத்துக்கு 360 நாட்கள் வரும். ஆனால், வானியல் முறைப்படி வருடத்துக்கு 365 நாட்கள் வேண்டும் என்று மாயர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.

காலண்டர் வகுத்த 360 போக எஞ்சிய ஐந்து நாட்கள் அதிர்ஷ்டம் இல்லாத நாட்கள் என்று நம்பினார்கள். அந்த நாட்களில், எந்த நல்ல காரியங்களும் செய்யமாட்டார்கள். இந்தக் காலண்டர் சாமானியர்களின் உபயோகத்துக்காக உருவாக்கப்பட்டது. கி. மு. 550 – இல் இந்தக் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அடுத்த வகை காலண்டர் வருடம் 260 நாட்கள் கொண்டது. ஒவ்வொரு வருடத்துக்கும் 13 மாதங்கள், மாதங்களுக்கு 20 நாட்கள். இந்தக் காலண்டருக்கு இஸால்கின் (Isalkin) என்று பெயரிட்டார்கள். இது புனிதக் காலண்டர் என அழைக்கப்பட்டது.

நாம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என கிரகங்களின் பெயரில் கிழமைகளுக்குப் பெயர் வைத்திருக்கிறோம். மாயர்கள் இதே முறையில், தங்களுடைய மாதத்தின் இருபது நாட்களுக்கும் ஒவ்வொரு கடவுள் பெயர் சூட்டினார்கள்.

ஹாப், இஸால்கின் ஆகிய இரண்டு காலண்டர்களும் 52 வருடங்களுக்கு ஒரு முறை இணையும். இந்த இணைப்பு நடக்கும்போது, அதாவது 52 வருடங்களுக்கு ஒரு முறை உலகில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று மாயர்கள் நம்பினார்கள்.

மாயன் காலண்டர் 5126 வருடக் கால அளவு கொண்டது. 2012ம் வருடம் டிசம்பர் 21 அன்று இது முடிந்துவிட்டது. உலகம் அன்றோடு முடியப்போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணி என்று பலர் நினைத்தார்கள், பயந்தார்கள். ஆனால், அந்த பயங்கள் அர்த்தமற்றவை என்று காலம் நிரூபித்துவிட்டது. ஒரு வேளை, மாயன் காலண்டரின் அர்த்தம் வித்தியாசமானதோ, நாம் புரிந்துகொள்ளமுடியாத ஏதோ ஒரு தாத்பரியம் அதற்குள் மறைந்திருக்கிறதோ?

0

http://www.tamilpaper.net/?p=8804

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 37

கலையும் கலை சார்ந்த வாழ்வும்

எஸ்.எல்.வி. மூர்த்தி

creation1-300x200.jpeg

கி. பி. 250 – 900 காலத்தின் சிதிலம் அடைந்த கட்டடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். எகிப்தின் பிரமிட் போன்ற கட்டடங்கள், மன்னர்களின் அரண்மனைகள், கோவில்கள் ஆகியவை மிகுந்த கலைநயத்தோடு விளங்குகின்றன. குறிப்பாக மனித வடிவங்கள் மிகவும் துல்லியமாகப் படைக்கப்பட்டுள்ளன.

மாயர்கள் காலத்தில் மாடுகள், குதிரைகள் போன்ற உழைப்புக்குப் பயன்படும் மிருகங்கள் இருந்ததாக ஆதாரங்கள் இல்லை. அதனால், மனித முயற்சியும் உழைப்புமே இந்தக் கட்டடங்களை உருவாக்கப் பயன்பட்டன. கருங்கல், தண்ணீர் கலந்த சுண்ணாம்பு ஆகிய பொருட்கள்தாம் கட்டட மூலப்பொருட்கள்.

அரண்மனைகள் நகரங்களின் மையப்புறத்தில் இருந்தன. இவை பல மாடிக் கட்டடங்கள். ஏராளமான அறைகள் கொண்டவை. மன்னர், பிரபுக்கள் என தங்குபவர்களின் சமுதாய அந்தஸ்துக்கு ஏற்ப, அறைகளின் எண்ணிக்கைகள், வசதிகள், கலை நயங்கள் ஆகியவை இருந்தன.

மாயர்கள் அற்புதமான சிற்பங்களைக் கல்லிலும் மண்ணிலும் படைத்தார்கள். வகை வகையான வடிவ மண் பாண்டங்கள், பீங்கான் பாத்திரங்களின் மேல் தீட்டப்பட்ட ஓவியங்கள் ஆகியவை ரசிகர்களைப் பிரமிக்க வைக்கின்றன. மரப் பட்டைகளில், கடவுள்கள், இயற்கைக் காட்சிகள், மிருகங்கள். பறவைகள் ஆகிய ஓவியம் வரைவது மிகப் பிரபலமாக இருந்தது.

தங்கம், வெள்ளி, செம்பு, பவழங்கள், ரத்தினங்கள் போன்ற இயற்கைச் செல்வங்கள் அவர்களிடம் இல்லை. ஆனால், தங்கத்தில் அவர்கள் ஆலய மணிகளையும் கடவுள்கள் வடிவ முகமூடிகளையும் உருவாக்கினார்கள்.

ஜேட் (என்கிற பச்சை மணிக்கல்லால் செய்த காதணிகள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்திருக்கின்றன. இவை பெரும்பாலும் கடவுள்கள், மிருகங்கள் ஆகிய உருவங்களைத் தாங்கி இருக்கின்றன.

மாயர்களின் மத நம்பிக்கைகள்

மாயர்களின் வாழ்க்கையில் கடவுள்கள் மிக மிக முக்கியமானவர்கள். சாக்லெட்டுக்கு ஒரு கடவுள், சோளத்துக்கு ஒரு சாமி. மழை, காற்று, வானம், பிறப்பு, மரணம், கல்வி, சூரியன், சந்திரன், அன்பு, வியாபாரம், பாதாள உலகம் என எல்லாவற்றுக்கும் கடவுள்கள்!

மரணக் கடவுள் பெயர் ஆ புக் (Ah Puch). இடிக் கடவுள் பேக்காப் (Becab). நாலு பேக்காப்கள் பிரபஞ்சத்தின் நான்கு மூலைகளையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது மாய ஐதீகம்.

சாக் (Chaac) மாயர்களின் வருண பகவானான மழை தெய்வம். காமஸோட்ஸ் (Camazotz) என்பவர் வௌவால் சாமி. தற்கொலை செய்பவர்களைக் காப்பாற்றும் கடவுள் இக்ஸ்டாப் (Ixtab) ஸிப்கானா (Zipcana) பாதாள உலக பூதம்.

மாயர்களுக்கு 166 கடவுள்கள் இருந்ததாக ஆதாரங்கள் சொல்கின்றன.

மாயர்களின் கடவுள் நம்பிக்கை மிக ஆழமானது. கடவுள்கள்மேல் வைத்திருந்த பக்தியின் சின்னங்களாக அவர்கள் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டினார்கள். இந்தக் கோயில்கள் பிரமிட்களின் உச்சியில் இருந்தன.

எகிப்து பிரமிட்கள் உலகப் புகழ் பெற்றவை. பிரமிட் என்றால் கூம்பு வடிவம். அடிப்பகுதி நீண்ட சதுரமாக இருக்கும். நான்கு சரிவான முக்கோணப் பகுதிகள் உச்சியில் ஒன்றாக இணையும். மாயர்களின் பிரமிட்கள் இதே வடிவக் கட்டடங்கள்தாம்.

உச்சியில் இருக்கும் கோயில்களுக்குப் போக, பிரமிட்களின் பக்கப் பகுதிகளில் படி வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. கோயில்களை அழகிய சிற்ப வேலைகள் செய்யப்பட்ட கற்களால் கட்டினார்கள். தரையில் ஓவிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. சுவரிலும் ஓவியங்கள்!

கோயில்கள் மதச் சடங்குகளுக்கும், மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் சமுதாய

விழாக்களுக்கும் பயன்பட்டன. எனவே கோயில்களுக்கு மாய நாகரிகத்தில் மிக முக்கிய இடம் உண்டு.

கோயில் பூசாரிகளுக்கு சமுதாயத்தில் மிக உயர்ந்த மதிப்பு இருந்தது. அவர்கள் அறிவில் சிறந்தவர்களாக விளங்கினார்கள். கணிதம், வானியல் ஆகிய துறைகளில் அவர்களுக்கு மிகுந்த புலமை இருந்தது.

காலண்டர் கண்டுபிடித்த மாயர்களுக்கு நல்ல நாள், கெட்ட நாள் என நாள் பார்ப்பதில் அதிக நம்பிக்கை. வருடத்தில் ஐந்து நாட்கள் அதிர்ஷ்டம் கெட்ட நாட்கள். அந்த நாட்களில் ஒரு நல்ல காரியமும் தொடங்க மாட்டார்கள். பூசாரிகள்தான் நல்ல நாள், கெட்ட நாள் குறித்துக் கொடுப்பார்கள்.

மாயக் கோவில்களில் பலி கொடுப்பது வழக்கம். மனித பலி சாதாரணமாக இருந்தது.

கைதிகள், அடிமைகள், குழந்தைகள் ஆகியோரைப் பலி கொடுத்தால், ஆண்டவன் மிக்க மகிழ்ச்சி கொள்வார் என்று மாயர்கள் நம்பினார்கள். மன்னர் குடும்பத்தில் வாரிசு பிறக்கும் நாட்களிலும் மன்னர் பதவி ஏற்கும் தினங்களிலும் மனித பலி கொடுத்தேயாக வேண்டும். அப்போதுதான் ஆண்டவன் அவர்களையும் நாட்டையும் பத்திரமாகக் காப்பாற்றுவார்.

இந்தப் பலிகள் இரவு நேரங்களில், மைதானம் போன்ற பெரிய திறந்த வெளிகளில் நடக்கும். மக்கள் பெரும் கூட்டமாகக் கூடி இவற்றைப் பார்த்து ரசிப்பார்கள். பலர் தீப்பந்தங்கள் கொண்டு வருவார்கள், சங்கு ஊதுவார்கள். ஒரே கோலாகலக் கொண்டாட்டம் நடக்கும்.

மாயர்களின் நாகரிகத்தில் அவர்களுடைய இறுதிச் சடங்குகள் முக்கிய இடம் பிடித்தன. மரணம் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சிதான், இறப்பவர்களில் பெரும்பாலோனோர் மறுபடி பிறப்பார்கள் என்று நம்பினார்கள்.

உலகத்தில் நல்ல காரியங்கள் செய்பவர்கள், நாட்டுக்காக உழைப்பவர்கள், போர் வீரர்கள், பிறக்கும்போது இறக்கும் குழந்தைகள் ஆகியோர் மறு பிறவிகள் இல்லாமல் நேரடியாக சொர்க்க உலகம் போவார்கள் என்பது மாயர்களின் சித்தாந்தம். இந்த நம்பிக்கைகள் நம் இந்து மதத்தின் பிறப்பு-இறப்பு தத்துவங்கள் போலவேதான்.

ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் இந்து, மாய நம்பிக்கைகள் மாறுபடுகின்றன. தற்கொலை செய்து கொள்பவர்கள் பேய்களாக வேப்ப மர உச்சியில் வசிப்பார்கள், உலகத்தைச் சுற்றுவார்கள், மனிதர்களுக்குத் துன்பங்கள் தரும் வில்லன்கள் என்கிறது இந்து மதம். மாயர்களோ, தற்கொலை செய்து கொள்பவர்கள் மரணத்துக்குப் பின் நேராக சொர்க்கம் போகும் அதிர்ஷ்டசாலிகள்.

மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும் என்றும் மாயர்களுக்குத் தெளிவான எண்ணம் இருந்தது. சாதாரண மக்கள் மரணத்துக்குப்பின் பாதாள உலகம் போவார்கள். பணக்காரர்களும் பிரபுக்களும் சொர்க்கம் போவார்கள்.

வாழ்க்கையில் பாவம் செய்தால், கெட்டவர்களாக வாழ்ந்தால், அதற்குரிய தண்டனை மரணத்துக்குப் பின் கிடைத்தே தீரும். ஊருக்கு உழைக்கும் உத்தமர்களுக்கு மறு பிறவி கிடையாது. அவர்கள் மனித நிலையில் இருந்து கடவுள்கள் ஆவார்கள். இறந்தவர்களுக்கு மரியாதைகள், படையல்கள் செய்து அவர்களின் ஆவிகளை சந்தோஷமாக வைத்திருக்கப் பல சடங்குகள் வைத்திருந்தார்கள்.

மாயர்களின் இறுதிச் சடங்குகளிலும் நம் ஊர் சம்பிரதாயங்கள்போல் பல நடைமுறைகள் உள்ளன. நம் ஊரில் மரணம் அடைந்தவர்களின் வாயில் அரிசி போடுவார்கள். அவர்கள் சொர்க்கம் அல்லது நரகம் போவதுவரை அவர்களுடைய பசி தீர்க்க இந்த அரிசி உதவும் என்பது நம் நம்பிக்கை.

மாயர்களும் இப்படித்தான். இறந்தவர்களின் வாயில் அவர்கள் ஊர் “அரிசி”யான சோளம் போட்டார்கள். மாயர்களைப் பொறுத்தவரை சோளம் வாழ்க்கையின் அடையாளம். சோளத்தோடு மறு உலகம் போனால் இறந்தவர்களின் மறுபிறவி வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.

அமரர் ஆனவர்கள் மேல் உலகம் போக வழிச் செலவுக்குப் பணம் வேண்டுமே?

ஜேட் போன்ற விலை உயர்ந்த மாணிக்கக் கற்களும் அவர்களுடைய உடல்கள்மீது வைக்கப்பட்டன

இன்னொரு வினோதப் பழக்கமும் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட விசில் மறைந்தவர்கள் உடல்களோடு வைக்கப்பட்டது. இவை கடவுள்கள், மிருகங்கள் ஆகிய வடிவங்களில் இருந்தன. இந்த விசில்கள் உயிர் இழந்தவர்களைப் பத்திரமாக மேல் உலகம் கொண்டு சேர்க்கும் என்று நம்பினார்கள்.

சிவப்பு நிறம் பிறப்பு, மறு பிறவி ஆகியவற்றோடு தொடர்பு கொண்ட நிறமாகக் கருதப்பட்டது. உடலின் மேல் குங்குமம் போன்ற சின்னபார் என்ற சிவப்பு நிறத் தூள் தாராளமாகத் தூவப்பட்டது. இது ஒரு தாதுப் பொருள்.

உடல்கள் புதைக்கப்பட்டு கல்லறைகளும் அவற்றின்மேல் கோவில்களும் கட்டப்பட்டன. இந்த பந்தாக்கள் எல்லாம் கடவுள்களுக்கும் பணக்காரர்களுக்கும்தான். ஏழைகளை வெறுமனே புதைப்பதோடு சரி.

சில கல்லறைகளின் மேல் பிரமிட் போன்ற கட்டடங்கள் எழுப்பப்பட்டன. சில பிரமிட்களுக்கு 13 படிகள். சொர்க்கத்தில் 13 வகை உலகங்கள் இருப்பதாக மாயர்கள் நம்பியதன் பிரதிபலிப்பு இது. மற்றும் சில பிரமிட்களில் ஒன்பது படிகள் மட்டுமே. பாதாள உலகத்தில் ஒன்பது வகை உலகங்கள் இருப்பதாக அவர்கள் நம்பியது இதற்குக் காரணம்.

கல்லறைகளில் அழகிய பீங்கான் கைவினைப் பொருட்கள், ஜேட் ஆபரணங்கள், முகமூடிகள் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் மறைந்தவரின் உடலோடு சேர்த்துப் புதைப்பது வழக்கம். சில சமயம், மறைந்தவரின் வேலைக்காரர்களையும் தங்கள் எஜமானர்களோடு சேர்த்துப் “பரலோகம்: அனுப்புவதுண்டு.

காடுகளில் பிசாசுகள் இருக்கும் என்ற நம்பிக்கையும் பயமும் மாயர்களுக்கு உண்டு, அவற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பல வகையான தாயத்துகளை அவர்கள் அணிந்தார்கள்.

0

http://www.tamilpaper.net/?p=8843

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 38

எழுத்தும் கதையும்

எஸ்.எல்.வி. மூர்த்தி

mayan_glyphs-242x300.jpg

மாயர்களின் எழுத்து சித்திர எழுத்து என்ற வகையைச் சேரும். அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல், பட அமைப்புடைய எழுதுதல் முறையை அடிப்படையாகக் கொண்டது.

தமிழ் அகர வரிசை எப்படி வருகிறது? அ, ஆ, இ, ஈ, எ, ஏ என்று. மாயர்கள் மொழியில் இவை எழுத்துக்களாக இருக்காது. படங்களாக இருக்கும்.

இப்படி மாயன் மொழியில் சுமார் 800 குறியீடுகள் இருந்தன. எழுதக் கற்றுக் கொள்வது கடவுளின் ஆசீர்வாதத்தால் மட்டுமே நடக்கிற காரியம் என்று கருதப்பட்டது. எல்லா மாயர்களும் எழுதக் கற்றுக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டுமே மன்னர் அதற்குஅனுமதிப்பார்.

கல்வெட்டுகளிலும், மான் தோல், மர இலைகளால் தயாரிக்கப்பட்ட காகிதம் ஆகியவற்றிலும் இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி, தம் கருத்துக்களை மாயர்கள் வெளிப்படுத்தினார்கள்.

மாயன் இலக்கியம்

ஸ்பெயின் நாடு பெரும்பாலான பழங்கால மாயர் கதைகளைக் கொண்ட புத்தகங்களை அழித்தது. வழிவழியாக வரும் வாய்வழிக் கதைகளை இப்படி அழிக்க முடியாதே? அத்தகைய பல சுவையான கதைகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. முயலும் ஓநாயும் என்கிற ஒரு கதையைப் பார்ப்போம்.

காட்டில் ஒரு முயல் வசித்தது. ஒரு நாள் ஓநாய் அதைத் துரத்தியது. முயல் மிகுந்த புத்திசாலி. தன்னை ஓநாய் பிடித்துவிடும், அப்படிப் பிடித்தால், தன்னைக் கொன்று தின்றுவிடும் என்று அதற்குத் தெரியும். பலமும் வேகமும் கொண்ட ஓநாயோடு சண்டை போட்டு ஜெயிக்க முடியாது என்பதும் முயலுக்குத் தெரியும்.

என்ன தந்திரம் பண்ணலாம் என்று முயல் யோசித்தது. வழியில் ஒரு பாறையின் பக்கம் போனது. அந்தப் பாறையை இறுக்கமாகப் பிடித்தபடி நின்றது.

“முயலாரே, நீங்கள் ஏன் திடீரென நின்றுவிட்டீர்கள்? ஓட முடியவில்லையா? நான் உங்களைச் சாப்பிடப் போகிறேன் என்ற பயத்தால் ஓட முடியவில்லையா?” என்றது ஓநாய்.

“ஓநாய் மாமா, நீங்கள் என்னைச் சாப்பிடுவதுபற்றி எனக்கு பயமும் இல்லை, கவலையும் இல்லை. நீங்கள்தான் வலியே இல்லாமல் என்னைக் கொன்று விடுவீர்களே? உங்களை நினைத்துத்தான் நான் கவலைப்படுகிறேன்.”

“உளறாதே. என்னைப் பற்றி நீ ஏன் கவலைப்பட வேண்டும்?”

“என்னைக் கொன்ற உடனேயே, என்னைச் சுவைத்துச் சாப்பிடுவதற்கு முன்னால், நீங்கள் பரிதாபமாகச் செத்துப் போகப் போகிறீர்கள்.”

”என்னைக் கொல்லும் தைரியம் இந்தக் காட்டில் யாருக்கு இருக்கிறது? சிங்கமா, யானையா, புலியா?”

“இவர்களும் உங்களோடு சேர்ந்து சாகப் போகிறார்கள்.”

“முயலாரே, பயத்தில் உமக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன்.

நாங்கள் ஏன் செத்துப் போகப் போகிறோம்?”

“இன்னும் கொஞ்ச நேரத்தில் வானம் இடிந்து இந்தக் காட்டில் விழப் போகிறது.

இந்தப் பாறையின் அடியில் நின்றால் மட்டுமே நாம் தப்புவோம்.”

“எனக்கும் இடம் கொடும் முயலாரே.”

“ஒநாய் மாமா, உங்களுக்கு இல்லாத இடமா? இந்தப் பாறையிலிருந்து நான் விலகி வந்தால், அது உருண்டு கீழே என் மேல் விழுந்து என்னை நசுக்கிவிடும். நீர் ஒரு நிமிடம் பாறையைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளும். அதற்குள் நான் ஓடிப் போய் ஒரு மரக் குச்சி கொண்டு வருகிறேன். அதை தாங்கலாகக் கொடுத்து, பாறையை நேராக நிறுத்துவோம். அப்புறம் வானம் கீழே விழும்போது, நாம் இரண்டு பேரும் பாறையின் கீழ் பத்திரமாக இருக்கலாம். அப்புறம் நீங்கள் என்னைச் சாப்பிடலாம்.”

ஓநாய் பாறையைப் பிடித்துக் கொண்டது. முயல் ஓடிப் போயிற்று. நேரம் பறந்தது. முயல் வரவில்லை.

“முயலாரே, முயலாரே, என் கை வலிக்கிறது. சீக்கிரம் வாரும். நான் நகர்ந்தால், பாறை என் மேல் விழுந்து என்னைச் சட்டினி ஆக்கிவிடும்.”

முயல் அங்கே இருந்தால்தானே, ஒநாயின் சப்தம் அதன் காதில் விழும்?

தன்னைக் கொல்ல வந்த ஓநாயை, முயல் தன் தந்திரத்தால் வென்ற கதை இது. இந்தக் கதையில் முயல் புத்திசாலியாக, ஹீரோவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மாயர்களின் பெரும்பாலான கதைகளில் புத்திசாலி முயல்தான் ஹீரோ. இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

முயலைக் கெட்ட குணமுள்ளதாக, வில்லனாகக் காட்டும் சில கதைகளும் உள்ளன.

உதாரணத்துக்கு இதோ ஒன்று.

முயலுக்குக் கொம்பு உண்டா? கிடையாது. மானுக்குக் கொம்பு உண்டா? உண்டு. ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முயலுக்குக் கொம்புகள் இருந்தன, மானுக்குக் கொம்புகள் கிடையாது. எப்படி வந்தது இந்த மாற்றம்? சொல்கிறது மாயர்களின் கதை.

முயல் காட்டில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அதற்கு அழகான கொம்புகள் இருந்தன. இந்தக் கொம்புகள் வித்தியாசமானவை. தொப்பியைப் போல் இவற்றைக் கழற்றலாம், மறுபடியும் மாட்டிக் கொள்ளலாம். தன் கொம்புகளைப் பற்றி முயலுக்கு மிகுந்த கர்வம் உண்டு.

வழியில் ஒரு மான் வந்தது. முயலின் கொம்பை மான் மிகவும் ரசித்தது.

“முயலாரே, உங்கள் தொப்பி ரொம்ப அழகாக இருக்கிறது. நான் அதைக் கொஞ்ச நேரம் போட்டுக் கொண்டு பார்க்கலாமா?”

“தாராளமாக. ஆனால் ரொம்ப நேரம் நீங்கள் வைத்துக் கொள்ளக்கூடாது. என்னிடம் சீக்கிரம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.”

மான் முயலிடமிருந்து கொம்பை வாங்கியது, தலையில் போட்டுக்கொண்டது,வேகமாக ஓடிப் போனது. திரும்பி வரவில்லை.

என்ன செய்யலம் என்று முயல் யோசித்தது. மக்களுக்குக் குறை என்றால் மன்னனிடம்தானே முறையிடவேண்டும்? கடவுளுக்குச் சமமான அரசர்தானே ஏழை எளியோரைக் காப்பாற்றுவார்கள்?

முயல் மன்னரிடம் போனது.

“அரசரே, என் கொம்பை மான் என்னிடமிருந்து ஏமாற்றி எடுத்துக் கொண்டு போய்விட்டது. நீங்கள்தான் என் கொம்பை எனக்குத் திரும்பி வாங்கிக் கொடுக்க வேண்டும்.”

“சரி, உன் புகார் உண்மையானதாக இருந்தால் உனக்கு நியாயம் வாங்கிக் கொடுப்பது என் வேலை.”

“மன்னா, எனக்கு இன்னும் ஒரு வேண்டுகோள்.”

“என்ன அது? சொல்.”

“அரசரே, நான் உருவத்தில் சிறியவனாகச் இருப்பதால்தான் மான் போன்ற மிருகங்கள் என்னை ஏமாற்றுகின்றன. எனக்கு நீங்கள் கடவுளிடம் சொல்லிப் பெரிய உருவம் வாங்கித் தர வேண்டும்.”

“நீ நேர்மையாக நடந்தால் இவை அத்தனையும் உனக்குக் கட்டாயமாகக் கிடைக்கும். நான் உனக்கு ஒரு பரிட்சை வைக்கப்போகிறேன். அதில் நீ ஜெயித்தால் கொம்பும் பெரிய உருவமும் உனக்குக் கிடைக்கும்.”

“சொல்லுங்கள் மகராஜா.”

“நீ நான்கு மிருகங்களின் தோலை முதலில் எனக்குக் கொண்டு வா.”

முயல் வீட்டுக்குப் போனது. வெகு நேரம் ஆலோசித்தது. ஒரு திட்டத்தை முடிவு செய்தது. முயலுக்கு நன்றாகக் கிடார் வாசிக்கத் தெரியும். கிடாரையும் ஒரு பெரிய தடியையும் கைகளில் எடுத்துக் கொண்டு காட்டுக்குள் புறப்பட்டது.

கிட்டாரில் இனிய இசை எழுந்தது. ஒரு பெரிய பாம்பு எதிரே வந்தது.

“முயலாரே, முயலாரே, நீங்கள் இனிமையாக கிட்டார் வாசிக்கிறீர்கள். உங்கள் பாட்டுக்கு ஆட நான் ஆசைப்படுகிறேன்.”.

“ரொம்ப சந்தோஷம் பாம்பு அண்ணா. இதோ உங்களுக்காக ஒரு பாட்டு.”

பாம்பு தன்னை மறந்து ஆடியது. பாட்டில் லயித்திருந்த பாம்பின் தலையில் முயல் தன் தடியால் அடித்தது. பாம்பு இறந்தவுடன் அதன் தோலை முயல் எடுத்துக்கொண்டது.

அடுத்தது, சிங்கம், முதலை ஆகியவை முயலின் கொலைகாரத் திட்டத்துக்குப் பலியானார்கள்.

அடுத்ததாக முயல் பெரிய குரங்குக் கூட்டத்தைப் பார்த்தது. “இவர்கள் அத்தனை பேரையும் தீர்த்துக் கட்டினால் நிறையத் தோல்கள் தேறும்.”

குரங்குகள் புத்திசாலிகள். வெறும் பாட்டால் அவர்களை ஏமாற்ற முடியாது. எனவே முயல் நிறைய வாழைப் பழங்களைக் கைகளில் எடுத்துக்கொண்டு குரங்குகள் அருகே வந்தது.

“முயல் மாமா, முயல் மாமா, எங்களுக்குப் பழம் தாருங்கள்” என்று குரங்குகள் கெஞ்சின.

“காட்டில் இருக்கும் குளத்துக்குப் பக்கத்தில் மீன் பிடிக்கும் வலை இருக்கிறது. அதைக் கொண்டு வாருங்கள். எல்லாப் பழங்களையும் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.”

குரங்குகள் ஓடிப் போய் வலையைக் கொண்டு வந்தன. முயல் எல்லாப் பழங்களையும் அவர்களிடம் கொடுத்தது.

குரங்குகள் வாழைப் பழங்களைச் சாப்பிடத் தொடங்கின. அந்த ஆனந்த மயக்கத்தில் தம்மையே மறந்தன. முயல் வலை வீசியது. அத்தனை குரங்குகளும் வலைக்குள் மாட்டிக் கொண்டன. இப்போது முயல் எல்லாக் குரங்குகளையும் கொன்று தோலை எடுத்துககொண்டது.

அரசர் இட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டோம், திருட்டுப் போன கொம்பு திரும்பக் கிடைக்கும். யானை போலப் பெரிய உருவத்தோடு உலா வரலாம் என முயல் மனத்தில் ஆயிரம் ஆசைக் கனவுகள்.

“ராஜா, நீங்கள் ஆணையிட்டபடி மிருகங்களின் தோல்களைக் கொண்டு வந்திருக்கிறேன்.”

மன்னர் பார்த்தார்.

“முயலாரே, இத்தனை மிருகத் தோல்களை எப்படிச் சேர்த்தீர்கள்?”

முயல் தன் வீர சாகசங்களை விவரித்தது.

மன்னர் கோபப்பட்டார்.

“நீ நல்லவனாக இருந்தால், காட்டில் இறந்து கிடக்கும் மிருகங்களின் தோல்களைச் சேர்த்துக் கொண்டு வந்திருப்பாய். உன் சுயநலத்துக்காக, மற்ற மிருகங்களைக் கொன்ற நீ மகா அயோக்கியன். கொம்பும் பெரிய உருவமும் இருந்தால் நீ இன்னும் என்னென்ன கொடுமைகள் செய்வாயோ? உனக்கு இனிக் கொம்பு கிடையவே கிடையாது. அது மானுக்குத்தான். உன் உருவமும் சிறியதாகவே இருக்கும்.”

அத்துடன் முயலின் காதையும் மன்னர் பிடித்து இழுத்தார். முயலின் காதுகள் நீண்டுபோயின.

அதனால்தான் இன்றும் முயல்களுக்கு நீண்ட காதுகள் இருக்கின்றன. கொம்புகள் இல்லை. சக உயிர்களைக் கொன்றால் மன்னிப்பே கிடையாது, அரசரின் முடிவுதான் இறுதி முடிவு என்ற கருத்துகளை அழகாக வெளிப்படுத்துகிறது இந்தக் கதை.

மாயர்களின் பழங்காலக் கதைகள் இந்தியப் பஞ்சதந்திரக் கதைகள் போல் முயல், நரி, ஓநாய் போன்ற மிருகங்களை மையமாகக் கொண்ட நீதி போதனைக் கதைகள்.

0

http://www.tamilpaper.net/?p=8869

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 39

ரோம நாகரிகம்

எஸ்.எல்.வி. மூர்த்தி

ரோம நாகரிகம் (கி. மு. 753 – கி. பி. 476 )

தனித்துவம்

Spaeth-1-300x197.png

நாம் இதுவரை பார்த்த ஆறு நாகரிகங்களுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு. மெசபொடோமியா, எகிப்து, சீனா ஆகியவை பெரிய நாடுகள். மாயன் நாகரிகம் நடந்த இடம் இன்று ஐந்து நாடுகளாக இருக்கும் நிலப்பரப்பு. சிந்து சமவெளி சுமார் பதின்மூன்று லட்சம் சதுர மைல் பரப்பளவு. கிரேக்கம் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நகர ராஜ்ஜியங்கள் கொண்டது. ரோம நாகரிகம் தழைத்து வளர்ந்தது ரோம் என்கிற ஒரே ஒரு நகரத்தில்!

நாகரிகச் சான்றுகள்

பழங்கால நாகரிகங்களை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு முக்கியப் பிரச்னை தகுந்த ஆதாரங்கள் கிடைப்பதுதான். இந்த வாக்கு ரோமாபுரிக்குப் பொருந்தாது. ஏராளமான ஆதாரங்கள் கல்வெட்டுகளாக, பண்டைக் கால சரித்திரப் படைப்புகளாகக் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை:

புத்தகங்கள்

முதலில், கிரேக்க நாட்டு வரலாற்று ஆசிரியர் புளூடார்க். கி.மு 45 முதல் கி.மு 120 வரை வாழ்ந்த இவர் மொத்தம் 227 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவற்றுள் பேரலல் லைவ்ஸ் என்னும் நூல் ரோமாபுரியின் வரலாற்றுப் பிரியர்களுக்குத் தங்கச் சுரங்கம்.

இங்கிலாந்து நாட்டு வரலாற்று எழுத்தாளர் எட்வர்ட் கிப்பன் படைத்திருக்கும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற மாபெரும் வரலாற்றுப் புத்தகம். பன்னிரெண்டு வருட ஆராய்ச்சியில் உருவானது. ஆறு பாகங்கள், 2768 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு அது.

பாலிபியஸ் கி.மு. 200 – கி, மு 117 எழுதிய The Histories என்ற புத்தகம். 40 பகுதிகள் கொண்டது. இதில் கி.மு. 220 முதல் கி.மு. 146 வரையிலான ரோமாபுரி வரலாறு, ரோமின் அரசியல் சட்டம் ஆகியவை பற்றி விவரமாக எழுதியுள்ளார். இவற்றுள் 5 முழுப் புத்தகங்களும் 35 புத்தகங்களின் பகுதிகளும் கிடைத்துள்ளன.

சிசரோ கி.மு. 106 – கி. மு. 43 எழுதிய On The Republic, On The Laws என்னும் புத்தகங்கள் அன்றைய அரசியல் நிலைமையையும், நிர்வாகத்தையும் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இவர் எழுதிய 774 கடிதங்களையும் தேடிக் கண்டுபிடித்து, தொகுத்துப் பிரசுரித்திருக்கிறார்கள். அன்றைய ரோமை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் இவர்.

ரோம் என்றாலே, நம் நினைவுக்கு வருபவர் ஜூலியஸ் சீஸர். கி.மு. 100 முதல் கி. மு. 44 வரை வாழந்த இவர் மாவீரர் மட்டுமல்ல, மிகச் சிறந்த படைப்பாளி. Commentaries on the Gallic War, Commentaries on the Civil War ஆகிய இரண்டு புத்தகங்களும் சீஸரின் போர்க்கள நினைவுக் குறிப்புகள். அக்கால ராணுவம், போர் முறைகள், ஆட்சி, அரசியல் ஆகியவை பற்றித் தெளிவாக இவை விளக்குகின்றன.

சாலஸ்ட் (Sallust) கி.மு. 86 – கி. மு. 35. Jugurthine War, Catiline Conspiracy, Histories ஆகியவை இவருடைய படைப்புகள். அன்றைய அரசியலை, ராஜதந்திரங்களை, சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்ள இவை உதவும்.

லிவி (Livy) கி.மு. 59 – கி. பி. 17. முழுநேரச் சரித்திர எழுத்தாளர். ரோமாபுரியின் வாழ்க்கையை எழுதுவதற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். முப்பதாம் வயதில் ரோமாபுரியின் வரலாற்றை எழுதத் தொடங்கிய இவர் தன் 142 – வது புத்தகத்தை முடித்தபோது வயது 76.

ஸூட்டோனியஸ் (Suetonius) கி.பி. 70 – கி.பி. 130. பன்னிரெண்டு சீஸர்கள் என்கிற இவருடைய புத்தகம் ஜூலியஸ் சீஸர் முதல் டொமிஷியன் சீஸர் வரை கி.மு. 49 முதல் கி.பி. 96 வரையிலான காலகட்டத்தின் வரலாற்றை விவரமாகச் சொல்கிறது. பிற எல்லா ரோம வரலாறுகளும் பேரரசர்கள், அவர்கள் ஆட்சி, அரசியல், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவை பற்றியே எழுதப்பட்டுள்ளன. ஸூட்டோனியஸ் மட்டும்தான் பன்னிரெண்டு சீஸர்களின் அகம், புறம், அந்தப்புரம் என அவர்களின் லீலா விநோதங்களையும் விவரிக்கிறார்.

நாள் குறிப்புகள்

ரோமர்களின் வாழ்க்கையில் மதம், கோவில்கள், இறை வழிபாடு ஆகியவை முக்கியப் பங்கு வகித்தன. வருட வாரியாக டயரி போன்ற குறிப்பேடுகள் எழுத வேண்டியது கோவில் பூசாரிகளின் கடமைகளுள் ஒன்று. இவற்றில் உள்ளூர் நீதிபதிகளின் பெயர்கள், அவர்கள் பணியாற்றிய பகுதிகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் ஆகியவை பதிவாகியிருந்தன. இதேபோல் ஏராளமான பிரபுத்துவக் குடும்பங்களிலும் பதிவேடுகள் இருந்தன. கி. மு. 753 முதல் கி. மு. 200 வரையிலான 453 வருட வரலாற்றை உருவாக்க இந்தக் குறிப்புகள் மிக உதவுகின்றன. இவை, கி.மு. 133 – இல் Annales Maximi என்னும் தலைப்பில் ஒரே புத்தகமாகத் தொகுக்கப்பட்டன. பாப்பிரஸ் என்னும் செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் எழுதப்பட்ட இவற்றுள் பல சேதாரமின்றிக் கிடைத்துள்ளன.

ரோமன் நீதிபதிகளின் டயரிக் குறிப்புகள், Fasti. கி. மு. 300 தொடங்கி ரோம் செய்த ஒப்பந்தங்கள், சாதனைகள், போர் வெற்றிகள் ஆகியவை துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கல்வெட்டுக்கள்

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இன்றும் இருக்கும் Lapis Nige என்னும் கோவில் கல்வெட்டில் ரோமாபுரி பற்றிக் கண்டெடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கல்வெட்டு இதுதான். மதச்சடங்குகள், நியதிகள் ஆகியவை குறித்த விவரங்கள் இந்தக் கல்வெட்டில் கிடைக்கின்றன.

பொறிப்புக்கள்

அரசு ஆவணங்களைக் கற்களிலும், பித்தளைத் தகடுகளிலும் பொறிப்பது ரோமர் வழக்கம். ஒரு லட்சத்துக்கும் அதிகமான இத்தகைய பொறிப்புக்கள் / கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக, கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் சட்டங்கள், அரச ஆணைகள், முக்கிய நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், போர் வெற்றிகள், அரசர்களின் சாதனைகள் என அவர்கள் பொறிக்காத அம்சங்களே இல்லை. இதைவிடச் சிறந்த ஆதாரங்கள் வேறு என்ன வேண்டும்?

நாணயங்கள்

கி. மு. 300 வாக்கில் ரோம் வெண்கல நாணயங்களைப் புழக்கத்துக்குக் கொண்டுவந்தது. சீக்கிரத்திலேயே தங்கம், வெள்ளி நாணயங்களும் நடைமுறைக்கு வந்தன. இவற்றில் உள்ள படங்கள் ரோமன் அரசர்கள், போர்கள், வெற்றிகள், மதம், கடவுள்கள், முக்கியக் கட்டடங்கள் ஆகிய பல அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன.

காலகட்டங்கள்

கி. மு ஏழாம் நூற்றாண்டின் முடிவில் டைபர் நதியின் கரையிலிருந்து இட்ருஸ்கர்கள் (Etruscans) ரோமைக் கைப்பற்றினார்கள். அப்போது ரோம் நகரமாக இருக்கவில்லை. குடிசைகள் இருந்த சின்னக் கிராமம்.

கி. மு. ஐந்தாம் நூற்றாண்டின் முடிவில் உள்ளூர் மக்கள் இட்ருரியர்களை வெளியேற்றி தங்கள் குடியரசை ஏற்படுத்தினார்கள். கி. மு மூன்றாம் நூற்றாண்டில் அயல் நாடுகளை வென்றார்கள். இதற்குப் பின் பல உள்நாட்டுக் கலவரங்கள்.

கி. மு 27 – இல் ரோம சாம்ராஜ்யம் உருவானது. ஐநூறு ஆண்டுகளுக்குப் பரந்து விரிந்தது. 476 -இல் மேற்கு சாம்ராஜ்யம் எதிரிகளுக்கு வீழ்ந்தது. கிழக்கு சாம்ராஜ்யமும் நாகரிகமும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடித்தன.

ரோம் நகரம் பிறந்த கதை

கிரேக்கர்களின் போர்க் கடவுள் செவ்வாய். இவருக்கும் ரியா ஸில்வியா என்கிற பெண் பூசாரிக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள். இவர்கள் பெயர்கள் ரோமுலஸ், ரேமஸ். செவ்வாயின் எதிரியான அமுலியஸ் குழந்தைகளை டைபர் நதியில் எறிந்தான். ஒரு ஓநாய் அவர்களைக் காப்பாற்றியது. ஆட்டிடையன் ஒருவன் குழந்தைகளைக் கண்டுபிடித்தான். பதினெட்டு வயதில் தங்கள் பிறப்பு ரகசியம் புரிந்துகொண்ட அவர்கள் அமுலியஸைக் கொன்றார்கள்.ஆனால், விரைவிலேயே அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை வந்தது. ரோமுலஸ் ரேமஸைக் கொன்றார். கி. மு 753 – இல் ரோம் நகரை நிறுவி, அரச கட்டில் ஏறினார்.

அரசியல் கட்டமைப்பு

மேல்சபை, கீழ்ச் சபை என்று உலகம் எங்கும் இன்றும் பின்பற்றப்படும் மக்கள் பிரதிநித்துவ முறைக்கு அடிக்கோல் போட்டது ரோம்தான். ரோம் நகரை நிறுவிய ரோமுலஸ் அரசர் தொடக்க நாள்களிலேயே. நாட்டை நிர்வாகம் செய்யவும், தனக்கு ஆலோசனை கூறவும் இரண்டு சபைகள் உருவாக்கினார். அவை கமிஷா க்யூரியட்டா, செனட் என்பவை. இவற்றுள் நம் லோக் சபாபோல் மக்கள் குரலே மகேசன் குரலாக கமிஷா க்யூரியட்டா ஒலித்தது. செனட் அரசர்களை மக்கள் தேர்ந்தெடுக்க உதவுதல், பேரசர்கள் பாதை தவறும்போது அவர்களுக்குக் கடிவாளம் போடுதல் என ராஜ்யசபாவின் இலக்கணமாக, அறிவுஜீவிகளின் அரங்கமாகத் திகழந்தது. மன்னராட்சி மட்டுமே நிலுவையில் இருந்த பண்டைய காலகட்டத்தில், மக்கள் கருத்துக்கு மதிப்புக் கொடுத்த ரோமின் வழிகாட்டல்தான், ஏராளமான நாடுகளில் மக்களாட்சிக்கு மலரக் கிரியா ஊக்கியாக இருந்தது.

நாட்டின் போர்க்குணம்

கி.மு 753 – ல், ஒரே ஒரு சிறிய ஊராகப் பிறந்த ரோம், சுமார் 650 ஆண்டுகளில் இத்தாலி, கிரீஸ், திரேஸ், பாசிடோனியா, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், சிரியா, பாலஸ்தீனம், எகிப்து, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்தியதரைக்கடல் தீவுகள் ஆகிய பூகோளப் பாகங்கள்மீது போர் தொடுத்து வெற்றி கொண்டு 59 லட்சம் சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் தன் கொடியைப் பறக்க வைத்தது. இந்த ஏரியா எத்தனை பெரியது தெரியுமா? இந்தியாவின் பரப்பளவு 32,87,590 சதுரக் கிலோ மீட்டர்கள். அதாவது, இரண்டு இந்தியா அளவுக்கு! அண்டை நாடுகள்மீது போர் தொடுத்து, களமெல்லாம் கண்ட வெற்றிகள் இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணம். ரோமாபுரியின் படைபலம், பயன்படுத்திய ஆயுதங்கள், காலமாற்றங்களுக்கு ஏற்ப ஆயுதங்களில் வந்த புதுமைகள். அரசர்களின் ராஜ தந்திரங்கள், அவர்கள் வகுத்த யுத்த வியூகங்கள், தளபதிகளின் தலைமைப் பண்புகள், போர் வீரர்களின் கட்டுப்பாடு… என்று இன்றும் உலகம் வியக்க பல விஷயங்கள் ரோமில் உள்ளன.

சாதாரணமாகப் பண்டைய நாகரிகங்களில், எல்லா நாடுகளிலும் சிறிய போர்ப்படைகள் இருக்கும். யுத்தங்கள் வரும்போது, பெரும் படையினரைத் திரட்டுவார்கள், பயிற்சி தருவார்கள், களத்தில் இறக்குவார்கள். ஆனால், ரோமாபுரியில் ராணுவம், ஆட்சியின் ஒருங்கிணைந்த அம்சம். ஒவ்வொரு நகர சாம்ராஜ்யத்திலும் சுமார் 5000 காலாட்படை வீரர்கள் நிரந்தரப் படையாக இருந்தார்கள். இவர்களுக்கு, மாதச் சம்பளம் ஓய்வூதியம் ஆகியவற்றோடு நிலமும் வழங்கப்பட்டது. அமைதி காலத்தில் போர் வீரர்கள், பாதுகாப்பு, சாலை போடுதல், கட்டடங்கள் கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

0

http://www.tamilpaper.net/?p=8886

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 40

மாடல் நகரம்

எஸ்.எல்.வி. மூர்த்தி

4rome-300x199.jpg

இரண்டாம் நூற்றாண்டில் ரோம்தான் மேற்கத்திய உலகின் பெரிய, சிறந்த நகரம். பிரம்மாண்டமான பொதுமக்கள் கூடும் இடம், அதைச் சுற்றி அரசுக் கட்டங்கள் எனச் சீராக வடிவமைக்கப்பட்டிருந்தது. பொது இடங்களுக்கு அருகே குறுகிய தெருக்கள். இந்தத் தெருக்களில், மக்கள், வியாபாரிகள், சாமான் தூக்கிச் செல்லும் அடிமைகள் என ஒரே நெரிசல். இந்தத் தெருக்கள் மனிதர் நடப்பதற்கே. எந்த வண்டிகளும் போகக்கூடாது.

மக்கள் தீவுகளாக வாழவில்லை. சமுதாயக் கூட்டு வாழ்க்கை ரோமாபுரியின் பெருமைக்குரியச் சின்னம். சந்தைகள், விழாக்கள், விளையாட்டுக்கள், சந்திப்புகள் என அவர்களுக்குள் ஏராளமான உறவுச் சங்கிலிகள் இருந்தன. இதற்காகவே, நகரின் மையப் பகுதியில் ஃபாரம் என்னும் இடம் இருந்தது. இங்கே பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்கள் ஆகியவையும் நடந்தன.

அன்றைய ரோமில் குடிநீர் விநியோகம் இருந்திருக்கிறது. எனென்றால், நீர் நிலைகளிலிருந்து நகரின் பல பாகங்களுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய்கள்பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன. குடிநீரில் ஈயம் கலக்கக்கூடாது என இன்றைய அறிவியல் சொல்கிறது. இதையே அன்றைய ரோம் கடைப்பிடித்திருக்கிறது. ரோமில் அப்போது பல ஈயப் பட்டறைகள் இருந்தன. இவற்றில் வேலை பார்த்த பலருக்கு உடல்நலப் பிரச்சனைகள் வந்தன. இந்த அடிப்படையில், வீட்டுத் தண்ணீர்க் குழாய்களை ஈயத்தால் செய்யக்கூடாது, களிமண் குழாய்களை உபயோகிக்கவேண்டும் என்று அரசு நெறிமுறை வகுத்திருந்தது.

குடிநீர் விநியோகத்தோடு, கழிவுநீர் அமைப்பும் கனகச்சிதமாக இருந்தது. கி.மு. 600 – இல் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் Cloaca Maxima (இந்த லத்தீன் வார்த்தைக்கு மாபெரும் கழிவுநீர் அமைப்பு என்று பொருள்) என்னும் இத்திட்டம்தான் உலகின் கழிவுநீர்த் திட்டங்களுக்கு முன்னோடி.

ரோம் நகரத்தில் பல தாழ்வான பகுதிகள் இருந்தன. நகரமே மலைகளும் சமவெளிகளும் நிறைந்த இடம். இதனால், மழைக் காலங்களில் தாழ்வுப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது, மக்கள் நடமாட இடைஞ்சல் கொடுத்ததோடு அவர்கள் உடல்நலம் பாதிக்கும் நோய்கள் பரவவும் காரணமாக இருந்தது. மேற்கண்ட திட்டத்தின்மூலம் உபரித் தண்ணீர் வெளியேற்றப்பட்டு தைபர் நதியில் கலந்தது. இதன் சில பகுதிகள் பூமிக்கு அடியிலும், சில பகுதிகள் திறந்தவையாகவும் கட்டப்படிருந்தன. இந்தக் கழிவுநீர் அமைப்பின் சில பகுதிகள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

சமுதாய அமைப்பு

கி.மு. 600ம் ஆண்டே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினார்கள். கணக்கெடுப்பில் ஒவ்வொருவராக வந்து தாங்கள் சொல்லப்போவது அத்தனையும் உண்மை என்று சத்தியப் பிரமாணம் செய்யவேண்டும். அதற்குப் பிறகு தங்களின் வயது, சொத்து, தொழில் ஆகிய விவரங்களைச் சொல்லவேண்டும். இந்த விவரங்களின் அடிப்படையில் மக்கள் ஐந்து வகையினராகப் பிரிக்கப்பட்டார்கள். வரி விதிக்கவும், போர்களுக்கு வீரர்களைக் குறுகிய காலத்தில் திரட்டவும் இந்தப் புள்ளிவிவரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வீடுகள்

பிரம்மாண்டமான பெரிய பங்களாக்கள், தனி வீடுகள், வரிசை வரிசையாகச் சிறிய வீடுகள் என வகை வகையான வீடுகள் இருந்தன. எல்லா வீடுகளின் நடுப்பகுதியிலும், அட்ரியம் என்னும் முற்றம் இருக்கும். வீட்டின் அளவைப் பொறுத்து இவை சிறியவை அல்லது பெரியவையாக இருக்கும். அட்ரியம் விருந்தாளிகளை வரவேற்று உட்காரவைக்கும் அறையாகவும், குடும்பத்தார் எல்லோரும் சேர்ந்து பொழுதுபோக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. முற்றத்தைச் சுற்றியோ அல்லது வாசல் பக்கமோ நிறையச் சின்ன அறைகள் இருக்கும். சில வீடுகளில் தனியான குளியல் அறைகளும் இருந்தன. ஒரு கதவும், ஒன்றோ இரண்டோ ஜன்னல்களோ தெருவை பார்த்தபடி இருக்கும்.

வீட்டின் அளவும் அமைப்பும் வீட்டு சொந்தக்காரரின் பணவசதியைப் பொறுத்து அமைந்தன. பெரும் பணக்காரர்களின் வீடுகளில் பெரிய முற்றம் இருந்தது. இவை விருந்தாளிகள் உட்காரும் வரவேற்பு அறைகளாகவும், குடும்பத்தார் எல்லோரும் சேர்ந்து பொழுதுபோக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டன. முற்றத்தைத் தாண்டினால், டாபுலே என்னும் அறை வரும். இது குடும்ப ஆவணங்கள், முன்னோர்களின் பொருள்கள், படங்கள் ஆகியவை பாதுகாக்கப்படும் அறை. இவை தவிரப் படுக்கை அறைகள் (க்யுபிக்குலி), ட்ரிக்லினியா என்னும் சாப்பாட்டு அறை, ஓசி என்னும் வரவேற்பு அறை, அடுக்களை, கழிப்பறை எனத் தனித் தனி அறைகள் இருந்தன. சிலர் வீட்டில் நூலகங்களும் வைத்திருந்தார்கள்.

கி. மு. முதல் நூற்றாண்டில், மக்கள் தொகைப் பெருக்கத்தால், நகரங்களில் நிலம் தட்டுப்பாடானது. தனி வீடுகள் கட்டப் போதிய இடம் இல்லை. எனவே, வீடுகள் வரிசை வரிசையாகச் சேர்ந்திருக்கும் குடியிருப்புகள் வரத் தொடங்கின. அடுத்த கட்டமாக, மூன்றடுக்குக் கட்டடங்கள் வந்தன. இவற்றில் எட்டு குடியிருப்புகள் இருந்தன. சில குடியிருப்புகளில் தெருவை எதிர் கொண்டபடிக் கடைகளும் இருந்தன.

வீடுகளுக்குக் கற்களால் அஸ்திவாரம் போட்டார்கள். வீடு கட்ட வேலமரங்கள் பயன்படுத்தப்பட்டன. வேலமர விளார்களில் களிமண் தோய்த்து உபயோகப்படுத்தும் வழக்கம் இருந்தது. களிமண் செங்கல்களும் பயன்பட்டன. வீட்டின் கீழ்ப்பகுதியைச் சிவப்பாகவும், மேல்பகுதியை வெள்ளையாகவும் வண்ணம் அடிப்பார்கள்.

ரோமர்களுக்குத் தங்கள் வீடுகளை ஒவியங்களால் அலங்கரிப்பதில் அமோக விருப்பம். இயற்கைக் காட்சிகள் கொண்ட படங்களை வாங்கித் தங்கள் வீடுகளில் மாட்டினார்கள்.

வீட்டுச் சுவர்களைப் பல வண்ண மார்பிள் கற்களால் அலங்கரித்தார்கள்; வீட்டின் உட்புறச் சுவர்களில் மரங்கள், செடிகள், மிருகங்கள், கட்டங்கள் ஆகிய படங்கள் வரைந்தார்கள். தொடங்கினார்கள். வீட்டில் சிற்பங்கள் வைக்கும் பழக்கம் ஆரம்பத்தில் இல்லை, பின்னாட்களில்தான் வந்தது.

கடைகள்

வீடுகள், குடியிருப்புகள் ஆகியவற்றின் முன்பக்கம் கடைகள் இருந்தன. வீடுகளும் குடியிருப்புகளும் கட்டும்போதே கடைகள் அவற்றின் ஒரு பகுதியாகத் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டன. சாதாரணமாகக் ஓர் அறை மட்டுமே கொண்ட கடைகள் அவை. பல கடைகளில் சாமான்கள் ஸ்டாக் செய்துவைக்கக் கிடங்கும் இருந்தது. கடைகளில் உணவுப் பொருள்கள், வீட்டுச் சாமான்கள், ஒயின், ரொட்டி ஆகியவை விற்கப்பட்டன. கடைவீதிகளில் பலசரக்குக் கடைகளோடு, மதுபானம் அருந்தும் இடங்களும் இருந்தன. கிரேக்கம், அரேபியா, எகிப்து, கால் ஆகிய பல நாட்டு வணிகர்கள் அங்கே வருவார்கள்.

கட்டடக் கலை

கட்டடங்கள், ரோம சாம்ராஜியத்தின் பெருமையைப் பறைசாற்றும் ஒளிவிளக்குகள். இன்றய நிபுணர்களையே பிரமிக்கவைக்கும் பொறியியல் சாதனைகள். சில உதாரணங்கள்:

சர்க்கஸ் மாக்ஸிமஸ் (Circus Maximus)

கி. மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கம் இது. தேரோட்டப் பந்தயங்கள், வீர விளையாட்டுகள் ஆகியவை இங்கே நடந்தன. மரத்தால் உருவான இந்த அரங்கம் கி.மு. 31, கி. பி. 64 என்று இரண்டு முறை தீப்பற்றி எரிந்தது. இரண்டு முறையும் மறுபடி கட்டப்பட்டது. கி. மு. 103 ல் ரோம் தன் அதிகார உச்சியில் இருந்த காலம், ட்ராஜன் மன்னர் அரங்கத்தை 2000 x 500 அடி அளவில் பெரிதாக்கினார். அரங்கமும் மார்பிள் கற்களால் இரண்டு அடுக்கு மாளிகையாக உயர்ந்தது. இங்கே இறுதியாக கி. பி. 549ல் தேரோட்டப் போட்டி ஒன்று நடந்ததாக நிரூபணங்கள் கிடைத்துள்ளன. இன்று சர்க்கஸ் மாக்ஸிமஸ் இல்லை. அங்கே வெறும் புல்தரை மட்டுமே இருக்கிறது.

Colosseum ஸ்டேடியம்

50,000 பேர் உட்காரும் சுற்றரங்கம். மக்கள் ரசித்துப் பார்த்த வாள் சண்டை, வீரர்களுக்கான போட்டிகள், விலங்கு மனித விளையாட்டுப் போட்டிகள், மாதிரி கப்பற்படைப் போர்கள். இந்த ஆடுகளம் இன்று சிதிலமடைந்திருந்தாலும், நிலைத்து நிற்கிறது, பிரமிக்க வைக்கிறது. எப்போது கட்டினார்கள் தெரியுமா? கி.பி. 70 தொடங்கி, கி.பி. 80 முடித்த பொறியியல் பிரம்மாண்டம்!

பிரம்மாண்ட கட்டடங்கள் இன்னும் பல பண்டைய நாகரிகங்களிலும் உள்ளன. ஆனால், அவற்றை அன்றே, அறிவியல் பூர்வமாக அணுகியவர்கள் ரோமர்கள். மார்க்கஸ் விட்ருவியஸ் போலியோ (Marcus Vitruvius Pollio), கி.மு 80 முதல் கி.மு 17 வரை வாழ்ந்ததாகக் கருதப்படும் கட்டடக் கலை நிபுணர், பொறியியல் வல்லுநர், எழுத்தாளர். ஜுலியஸ் சீஸரின் போர்ப் படையில் பொறியியல் வல்லுநராகப் பணியாற்றிய இவர்தான் உலகத்தின் முதல் எஞ்சினியர் என்று சில சரித்திர ஆசிரியர்கள் சொல்கிறார்கள். டீ ஆர்க்கிட்டெக்ச்யுரா என்னும் தலைப்பில் கட்டடக் கலை பற்றிப் இவர் பத்துப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கட்டடக் கலைக் களஞ்சியம் இது. கட்டக்கலை தாண்டி கட்டட நிர்வாகம், சிவில் எஞ்சினீரிங், கெமிக்கல் எஞ்சினீரிங், மெக்கானிக்கல் எஞ்சினீரிங், மிலிட்டரி எஞ்சினீரிங், நகர உருவாக்கத் திட்டம் என ஏராளமான தொழில்நுட்பத் துறைகளை இந்தப் புத்தகங்கள் ஆழமாக அலசுகின்றன.

நெடுஞ்சாலை

Appian Way என்னும் சாலை ரோமின் புராதனப் பெருமைகளில் ஒன்று. கி.மு. 312 – இல் அப்போதைய கான்சலாக இருந்த அப்பியஸ் க்ளாடியஸ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. பெயர்க் காரணமும் அவர்தான். ரோம் நகரத்தையும், ப்ரிண்டிஸி துறைமுகத்தையும் இணைக்கும் இந்த 132 மைல் சாலை இன்றும் நிலைத்து நிற்கிறது. 2300 வருடங்களுக்கு முன்னால் ரோமர்கள் கையாண்ட தொழில்நுட்பம் இன்றைய பொறியியல் வல்லுநர்களையே பிரமிக்கவைக்கிறது.

பாதையில் ஒரு பகுதி காடும் புதருமான இடம், இன்னொரு பகுதி சதுப்பு நிலம், மிச்சப் பகுதி புழுதி படர்ந்த இடம். புதரையும், காட்டையும் வெட்டிச் சீராக்கினார்கள். சதுப்பு நிலத்தில் சேறை நீக்கி அடிப்பாகத்தை உறுதியாக்கினார்கள்.

இந்த அடிப்படை வேலைகள் முடிந்தவுடன் முழு சாலையும் தரைமட்டமாக்கப்பட்டது. அதன்மேல் ஜல்லி அடித்தார்கள். இதற்குமேல் சுண்ணாம்புக் கலவை பூசி பெரிய கற்கள் வைத்தார்கள், சமசீராய், கத்தியின் கூர்முனைகூட நுழையமுடியாமல் நெருக்கமாக, இறுக்கமாக சாலைகள் இருந்தன என்று ஆதாரங்கள் சொல்கின்றன.

சாலையின் நடுப்பாகம் மேடாகவும், ஓரங்கள் நடுவிலிருந்து ஒரே கோணத்தில் சரிவாகவும் இருந்தன. ஓரங்களில் பள்ளமான ஓடைகள் இருந்தன. மழை பெய்யும்போது தண்ணீர் கட்டாமல், போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க அவர்கள் செய்த யுக்தி இது. இந்த அபார வேலையை ஒரே வருடத்தில் முடித்துக் காட்டியது நம்ப முடியாத இன்னொரு ஆச்சரியம்!

http://www.tamilpaper.net/?p=8895

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 41

இசை, விளையாட்டு, குளியல், வாழ்க்கை

எஸ்.எல்.வி. மூர்த்தி

ரோம நாகரிகம் (கி. மு. 753 – கி. பி. 476 )

attila1-300x210.jpg

வசதியுள்ளவர்களின் அன்றாட வாழ்க்கை

அதிகாலை விழிப்பு. ஏழைகளுக்கு அன்னதானம். தன் நிலபுலன், விவசாயம் பற்றி விசாரித்துத் தகுந்த நடவடிகைகள் எடுத்தல், அரசாங்கப் பணிகள். அன்றாட வேலைகள் இத்துடன் முடிந்தன. லேசான சாப்பாடு, கொஞ்சம் தூக்கம். இதற்குப் பிறகு பொதுக் குளியல் அறைகளில் வெந்நீர்க் குளியல், பூங்காக்களில் உலா, உடற் பயிற்சிகள், புத்தகங்கள் படித்தல். மறுபடி வெந்நீர்க் குளியல், அடிமைகள் கொடுக்கும் மஸாஜ்.

குடும்பம்

ஆண்தான் குடும்பத் தலைவர். திருமணம் ஆனபிறகும், மகன் தன் வருமானம் முழுக்கத் தந்தையிடம் கொடுத்துவிட வேண்டும். அவர் காலம்வரை, அவன் தனக்கெனத் தனியாக எந்த சொத்துகளும் வைத்துக்கொள்ள முடியாது.

குடும்பத்தோடு வசித்து, அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து, ஆனால், தாமரை இலைத் தண்ணீர்போல் எஜமானர்களோடு ஒட்ட அனுமதிக்கப்படாத அடிமைகளின் வாழ்க்கை சோக காவியம். ஏழைகளும், கொடுத்த கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்களும், பிற நாடுகளிலிருந்து கைதிகளாகப் பிடித்துவரப்பட்டவர்களும் அடிமைகளாக்கப்பட்டார்கள். இவர்கள் சொந்தக்காரரின் சொத்து. அவர் அடிமைகளை வாங்கலாம், விற்கலாம். அடிமைகளின் குழந்தைகளும் அடிமைகள்தாம். அடிமைகளை வாங்கவும் விற்கவும் அடிமைச் சந்தைகள் இருந்தன.

வீட்டு வேலைகள், விவசாயம், தொழிற்சாலைகள் ஆகிய பல தளங்களில் அடிமைகள் பயன்படுத்தப்பட்டார்கள். பெரும்பாலான இடங்களில், அடிமைகளுக்கு அடி, உதை, அரைப் பட்டினி, அநியாய வேலைச்சுமை ஆகியவைதான் கிடைத்தன. அவர்களை அன்போடு நடத்தி, கல்வியறிவு கொடுத்து, வாழ்க்கை ஏணியில் ஏறவைத்த ஒரு சில நல்ல குடும்பங்கள் விதிவிலக்கானவை.

குழந்தைகள்

மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் கொள்கை. எனவே, குழந்தையின் வரவு கோலாகலமாக வரவேற்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் அதை அப்பா முன்னால் கொண்டுவந்து வைப்பார்கள். அவர் குழந்தையைக் கைகளில் தூக்கினால், அது தன் குழந்தை என்று ஒத்துக்கொள்கிறார் என்று அர்த்தம். அப்படித் தூக்காவிட்டால், அந்தக் குழந்தை உயிர் வாழ வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை அவருக்கு உண்டு. ஆரோக்கியமில்லாத குழந்தைகளும், உடல் ஊனமுற்ற குழந்தைகளும் கொல்லப்படும் அல்லது பெற்றோரால் கைவிடப்படும். யாராவது எடுத்து வளர்ப்பார்கள். பின்னர்அவர்கள் அடிமைகள் ஆகிவிடுவார்கள்.

குழந்தை பிறந்த எட்டு நாட்கள் விதவிதமான பூஜைகள், சடங்குகள், பரிகாரங்கள் நடக்கும். முக்கியமாக, காத்து கருப்புகள் குழந்தைளைத் தொந்தரவு செய்யும் என்று நினைத்தார்கள். இதற்குப் பரிகாரமாக, வீட்டு வாசலை இரவில் மூடுவார்கள். வாசலில் மூன்று ஆண் அடிமைகள் ஒரு கையில் கோடரியும், இன்னொரு கையில் உலக்கையும் வைத்துக்கொண்டு காவல் இருபார்கள். வீட்டு வாசலைக் கோடரியாலும், உலக்கையாலும் பலமுறை தட்டுவார்கள். பிறகு வாசல்புறத்தைச் சுத்தமாகப் பெருக்குவார்கள். இவற்றைச் செய்தால், துர்தேவதைகள் வீட்டுப் பக்கமே வராமல் பயந்து ஓடிவிடும் என்பது நம்பிக்கை.

குழந்தைகள் கழுத்தில், புல்லா என்னும் தாயத்தைப் பூசாரி கட்டுவார். தங்கத்தால் செய்யப்பட்ட அதனுள் மந்திரித்த ஈயத்தகடு வைக்கப்பட்டிருக்கும். சிறுவர்கள் இளைஞர்களாகும்போது, சில மதச் சடங்குகள் செய்துவிட்டு, இந்தப் புல்லாவைக் கழற்றவேண்டும். பெண் குழந்தைகளுக்கு புல்லா கிடையாது.

சமூக வாழ்க்கை

ஆண்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். ஃபாரம் என்னும் நகரின் மையப் பகுதியில் சந்தித்துப் பேசினார்கள். பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரைகளைக் கேட்டார்கள். வீர விளையாட்டுகளில் ஈடுபட்டார்கள். அல்லது அவற்றைக் கண்டு களித்தார்கள். பெண்களுக்கு இத்தனை சுதந்தரம் இல்லை. கடைகளுக்கும் சொந்தக்காரர்களையும் நண்பர்களையும் சந்திப்பதற்கும் மட்டுமே தனியாக வீட்டைவிட்டு வெளியே போனார்கள். திருவிழாக்கள், சர்க்கஸ், கோவில், விருந்துகள் ஆகியவற்றுக்குக் கணவனுடன் மட்டுமே போக அனுமதிக்கப்பட்டார்கள்.

சமூக உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் மூன்று விதமான மத அல்லது சமூகக் கொண்டாட்டங்களைத் திருவிழாக்களாக ஏற்பாடு செய்தது. இவை :

  • Feriae Stativae – ஒவ்வொரு வருடமும் குறிப்பிடப்பட்ட அதே நாட்களில் இந்த விசேஷங்கள் நடக்கும்.
  • Feriae Conceptivae- இவற்றுக்குக் குறிப்பிட்ட நாள்கள் கிடையாது. பூசாரிகள் ஒவ்வொரு வருடமும் இவற்றுக்கான நாட்களைக் குறித்துக் கொடுப்பார்கள்.
  • Feriae Imperativae – இவை வருடா வருடம் நடப்பவையல்ல. சாதாரணமாகப் போர்களில் வெற்றி பெற்றால் கொண்டாடப்படும் விழாக்கள் இவை.
உணவுகள்

கோதுமைக் கஞ்சியும் ரொட்டியும்தான் முக்கிய உணவுகள். ரொட்டியைத் தேன், பாலாடை, முட்டை, சிக்கன், மீன், இறைச்சி ஆகியவற்றோடு சேர்த்துச் சாப்பிட்டார்கள். மீனும், சிப்பியும் சுவையான உணவுகளாகக் கருதப்பட்டன. அவரைக்காய், வெங்காயம், பூண்டு, முட்டைக்கோசு ஆகிய காய்கறிகள் அவர்களுக்குப் பிடித்தமானவை. பழங்கள், தேன், வினிகர் என்னும் புளிச்சாறு ஆகியவற்றோடு சேர்த்து இறைச்சியும் காய்கறிகளும் சமைக்கப்பட்டன.

ரோமர்களுக்குப் பிடித்த பானம் ஒயின் என்னும் திராட்சை ரசம். ஆனால், இந்த ஒயின் போதைக்காக அருந்தப்படவில்லை. புளித்த திராட்சை ரசத்தில் தண்ணீர் ஊற்றி நீர்க்கவைத்துக் குடித்தார்கள். பால் குடிப்பது அநாகரிகமாகக் கருதப்பட்டது. பாலாடை செய்ய மட்டுமே பால் பயன்பட்டது.

பணக்காரர்களின் காலை உணவு பலமானது – பாலாடை, பழம், ரொட்டி, பால் அல்லது திராட்சை ரசம். பகல் உணவில் முதலில் முட்டை, மீன், பச்சைக் காய்கறிகள். அடுத்து வேகவைத்த மாமிசம், காய்கறிகள், கடைசியாகப் பழங்கள், இனிப்புக்கள். சோபாக்களில் படுத்துக்கொண்டு சாப்பிடுவார்கள். அடிமைகள் உணவு பரிமாறுவார்கள்.

உணவு சமைக்க மண், வெண்கலப் பாத்திரங்களும், பரிமாற மரம், வெண்கலம், வெள்ளி, எலும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட கரண்டிகளும் பயன்பட்டன. உணவைக் கை விரல்களால் சாப்பிட்டார்கள்.

ரோமன் ஆடைகள்

அன்றைய ரோமர்களின் ஆடைகள் அதிகமாகக் கிடைத்த ஆட்டு ரோமம், லினன் ஆகியவற்றால் நெய்யப்பட்டன. பட்டும், பருத்தியும் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பல உள்ளாடைகள் இருந்தன, பல வடிவங்களில் வந்தன. வடிவங்களுக்கேற்ப subligaculum, campestre, licium, cinctus என்னும் பல பெயர்களில் அழைக்கப்பட்டன. நம் ஊர்க் கோவணம் போன்ற இடுப்புத் துணியும் உண்டு. ஆண் பெண் இருபாலரும் இந்த உள்ளுடைகளை அணிந்தார்கள். இவற்றோடு பெண்கள் பிரா போன்ற மார்புக் கச்சு அணிந்தார்கள்.

மேலாடைகள் ட்யூனிக் என்று அழைக்கப்பட்டன. ஆண்களின் உடைக்கும், பெண்களின் உடைக்கும் ஒரே பெயர்தான். சாமானிய ரோமர்கள் உள்ளாடைகளுக்குமேல் ட்யூனிக் மட்டுமே அணிவார்கள். ஆண்களின் ட்யூனிக் அரைக்கைச் சட்டைபோல் இருக்கும், முட்டிவரை வரும். பெண்களின் ட்யூனிக்கில் சட்டை முழுக்கை. அவர்களின் கால்களை மூடித் தரையைத் தொடும் நீளம் இருக்கும்.

ரோமன் நாட்டுக் குடிமக்கள், வெளிநாட்டிலிருந்து வந்து ரோமில் வசிப்பவர்கள் ஆகிய எல்லோருமே ட்யூனிக் அணியலாம். ஆனால், ரோமன் பிரஜைகள் மட்டுமே அணிய அனுமதிக்கப்பட்ட உடை டோகா. போர்வைபோல் நீளமாக அரைவட்ட வடிவத்தில் இருக்கும். சுமார் 27 அடி நீளமும் 20 அடி அகலமும் சாதாரண அளவுகள். உடலின் மேல் பாகத்தையும் ஒரு கையையும் இது மறைக்கும். ஆரம்ப நாட்களில் வெற்றுடம்பில் டோகாவைப் போர்த்திக்கொள்ளூம் வழக்கம் இருந்தது. நாளவட்டத்தில் ட்யூனிக் அணிந்து அதன்மேல் டோகா போர்த்திக்கொள்ளும் நடைமுறை வந்தது.

ஆண்களும், பெண்களும் செருப்பு அணியும் வழக்கம் இருந்தது.

அழகுபடுத்துதல்

ஆண்கள் தாடி வளர்த்தார்கள், தினமும் சவரம் செய்துகொண்டார்கள். தலை முடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டார்கள். இளம்பெண்கள் முடியைச் சுருட்டி முதுகுப் பக்கமாய்ப் பந்துபோல் வைத்துக்கொள்வார்கள். திருமணமான பெண்கள் தலைமுடியைச் சுற்றி வளைத்து தலை நடுவில் பந்துபோல் ரிப்பன்களால் கட்டி வைத்துக்கொண்டார்கள். பொய்முடிவைத்துக் கேசத்தின் அடர்த்தியை அதிகமாக்கிக்காட்டுவது சர்வ சாதாரணமாக இருந்தது.

பெண்கள் இரும்பு, வெண்கலம், தங்கம் ஆகியவற்றால் செய்த நகைகளை அணிந்தார்கள். தம்மை அலங்கரித்துக்கொள்ள அவர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள் – நெக்லஸ் போன்ற கழுத்தணி, காதுத் தொங்கட்டான்கள், கைகளில் ப்ரேஸ்லெட்கள் ஆகியவை. தங்கத்தால் செய்யப்பட்ட இந்த நகைகளில் முத்துக்கள் பதிக்கப்பட்டிருக்கும்.

பொழுதுபோக்குகள்

விளையாட்டுப் போட்டிகள் – மக்கள் கூட்டம் அலைமோதிய இரண்டு நிகழ்ச்சிகள் தேரோட்டப் போட்டிகளும், கிளேடியேட்டர் சண்டைகளும்தாம். தேரோட்டிகளுக்கு நாடு முழுக்க ரசிகர் கூட்டம் இருந்தது. தேரோட்டிகளுக்கு அடுத்தபடியாக மக்கள் ஆதரவு பெற்றவர்கள் கிளேடியேட்டர்கள். லத்தீன் மொழியில் கிளேடியேட்டர் என்றால் வாள் வீரர் என்று பொருள். இவர்கள் பெரும்பாலும் அடிமைகள் அல்லது கைதிகள். வாள் சண்டை விளையாட்டை முழு நேரத் தொழிலாகக் கொண்டவர்கள்.

நாடக அரங்குகள் – விளையாட்டுகள் நடக்கும் நாள்களில் நாடகங்கள் அரங்கேறுவது வழக்கமாக இருந்தது. இதற்காக தியேட்டர்கள் என்னும் தனியான நாடக அரங்குகள் இருந்தன. நாடகங்களில் ஆண் அடிமைகள் மட்டுமே நடித்தார்கள். பெண் வேடங்கள் போடுவதும் இவர்கள்தாம். பாத்திரங்களுக்கு ஏற்ப முகமூடி அணிவார்கள். வயதைக் காட்ட வெள்ளை, கறுப்பு விக் போடுவார்கள். ஒரே நடிகர் இரண்டு வேஷம் நடிப்பதும் உண்டு. காமெடி, டிராஜெடி நாடகங்கள் ஆகிய இரண்டு வகைகளும் இருந்தன.

கி.மு. முதல் நூற்றாண்டில் ஊமைக்கூத்துக்கள் (pantomimes) தொடங்கின. பாட்டு, நடனம் ஆகியவற்றின் துணையோடு நடிகர்கள் சைகைகளால் நடிப்பை வெளிப்படுத்துவார்கள். காலப்போக்கில் ஊமைக்கூத்துக்கள் ஆபாசக் களஞ்சியங்களாயின.

பொதுக் குளிப்பிடங்கள் – ரோமன் பொழுதுபோக்குகளில் பொதுக் குளிப்பிடங்களுக்குத் தனி இடம் உண்டு. ஆண், பெண், ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருமே இந்த வசதியை அனுபவித்தார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான குளிப்பறைகள் இருந்தன.

பொதுக் குளிப்பிடங்கள் 32 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தன. சில குளிப்பிடங்களின் சிதிலங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன. குளிப்பிடங்களின் மையப் பகுதியில் 200 அடிக்கு 100 அடி அளவில் நீச்சல் குளம் இருக்கும். அருகில் சூடான தண்ணீர் கொண்ட தனி நீச்சல் குளமும் இருக்கும். நெருப்பின் மூலமாக நீராவியை உருவாக்கினர்கள். இதைத் தரையின் அடியில் ஓடும் குழாய்கள் மூலமாக நீச்சல் குளத்தின் அடிப்பாகத்துக்குக் கொண்டு போனார்கள்.

குளிப்பதற்கு மட்டுமல்லாமல், மக்கள் சந்திப்பதற்கும் இந்தக் குளிப்பிடங்கள் உதவின. கடைகள், உணவு விடுதிகள், பூங்காக்கள், உடற் பயிற்சி மையங்கள், மஸாஜ் செய்யும் இடங்கள், நூல் நிலையங்கள், பொருட்காட்சி சாலைகள் ஆகிய வசதிகளும் இந்தக் குளிப்பிடங்களில் வந்தன.

தினமும் ஒரு முறையாவது இங்கே வந்து குளித்துவிட்டுப் போவது எல்லா ரோமர்களின் பழக்கம்.

விளையாட்டுக்கள் – அரசாங்கத்தால் அடிக்கடி நாடு தழுவிய விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தப் பொது விளையாட்டுகளுக்கு லத்தீன் மொழியில் லுடி என்று பெயர். இவை சாதாரணமாக ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் நடந்தன.

உடற் பயிற்சிகள் – தைபர் நதிக்கரையில் காம்ப்பஸ் என்னும் பெயரில் விளையாட்டு மைதானங்கள் இருந்தன. பொது மக்கள் ஓடவும், உடற்பயிற்சிகள் செய்யவும் இங்கே வருவார்கள். இளைஞர்கள் மேற்கொண்ட முக்கிய உடற்பயிற்சிகள் ஓடுதல், குதித்தல், குஸ்தி, மல்யுத்தம், நீச்சல் போன்றவை. காலால் பந்தை உதைத்தல், கையால் தூக்கி எறிந்து பிடித்தல் போன்றவை.

பணம் படைத்தவர்களின் சிறப்பான பொழுதுபோக்குகள் – ஆடம்பர விருந்துகள், பாட்டு, நடனக் கச்சேரிகள், கவிதை அரங்குகள், பட்டிமன்றம் போன்றவை. இந்த வசதி இல்லாத சாமானியர்கள் சங்கங்கள் அமைத்தார்கள். இவைமூலமாக விருந்துகளும் பிற கோலாகலங்களும் நடத்தி, அந்தச் செலவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இசை ரசனை

ரோமர்கள் இசையை அனுபவித்தார்கள். குழந்தையின் பெயர் சூட்டு விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்கள், தனியார் விருந்துகள், மரண ஊர்வலங்கள் எனப் பிறப்பு முதல் இறப்புவரை ரோமர்கள் வாழ்க்கையில் இசைக்கு முக்கிய பங்கு இருந்தது.

ரோமின் தனித்துவமான சில இசைக் கருவிகள் இருந்தன. அவை:

வாயால் ஊதி வாசிக்கும் கருவிகள்: ட்யூபா என்னும் வெண்கல டிரம்பெட், கோர்னு (என்னும் ஆங்கில எழுத்து ஜி வடிவக் கருவி, புல்லாங்குழல் போன்ற ஒரு கருவி. சித்தாரா, லையர், லூட் ஆகியவை முக்கிய மீட்டும் இசைக் கருவிகள். ட்ரம், சிஸ்ட்ரம் போன்றவை நம் ஊர் மிருதங்கம்போல், தட்டுவதால் இசை எழுப்பும் இசைக் கருவிகள்.

0

http://www.tamilpaper.net/?p=8921

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.