Jump to content

ட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

MM001.jpg

 

விடிகாலையில், காகங்களின் சத்தம் கேட்டு விழித்தெழுந்த சேனாதி, கிணத்தடிக்குப் போய் முகத்தை அலம்பிவிட்டு, வீட்டுவாசலில் தொங்கிய திருநீற்று முட்டிக்குள் கையைவிட்டு எடுத்த திருநீற்றை முகத்தில் பூசியபடி, அப்பனே முருகா என்று உரத்தே சத்தம்போட்டார். அவர் கூப்பிடுவதும், முருகனிடமிருந்து பதில் வராததும் வழமையே எனினும், அவர் முருகனை அழைக்கும் உரத்த குரல், அவரது மனைவியாகிய சரசு என அழைக்கப்படும் சரஸ்வதியை நிச்சயம் நித்திரையிலிருந்து எழுப்பி விடும். அடுப்படிக்குப் போய், நேற்றே,அரைவாசியாய் எரிந்து முடிந்திருந்த ஒரு கங்குமட்டையிலிருந்து ஒரு துண்டுக்கரியை எடுத்துப் பல்லைவிளக்கிக்கொண்டு , பிள்ளையள் எழும்புங்கோவன் விடிஞ்சிட்டுது எண்ட படி, கேத்திலைத் தூக்கி அடுப்பில் வைத்துவிட்டுக் கிணத்தடியை நோக்கிப் போனாள்!

 

சேனாதியும், தனது முத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது மொரிஸ் மைனர் காரை நோக்கிச் சென்றார். அது அவருக்கு ஒரு குழந்தை மாதிரித் தான். அது தான் அவரது வருமானத்தின் பெரும்பகுதியை அவருக்கு ஈட்டித் தந்தது. மெல்ல அதை அன்போடு தடவிக்கொடுத்தவர், பக்கத்தில் நின்ற, தூக்குச் செம்பரத்தை மரத்திலிருந்து, மூன்று பூக்களைப் பிடுங்கி, அந்தக் காருக்குள் இருந்த முருகன், லட்சுமி, பிள்ளையார் ஆகியோருக்கு ஒவ்வொரு பூவாக வைத்தார். அதன் பின்னர், சிறிது திருநீறை எடுத்து, வண்டியைச் செலுத்தும் சக்கரத்தின் நடுவில் உள்ள வட்டத்தில், முருகா என்ற படி பூசினார்.

 

அதனைப் பார்த்துக்கொண்டிருந்த சரசுவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. ஒவ்வொரு நாளும், தனது கணவனின் இந்தச் செயலை, அவள் பார்த்துக் கொண்டிருக்கின்றாள், எவ்வளவு, மகிழ்ச்சியான காலங்கள் அவை என, அவளது மனது தனக்குள் நினைத்துக் கொண்டது. சேனாதி, ஓடிய அந்தக்கார், ஒருநாள் கூட, வேறொரு காருடனோ, வேறு எதனுடனுமோ மோதியது கிடையாது. தனது, இன்னொரு குழந்தையைப் போலத் தான், சேனாதி அந்தக் காரைப் பராமரித்தார். சேனாதிக்கும், மற்றவர்கள் தன்னை, ட்றைவர் சேனாதி என்று அழைக்கும்போது, புறக்டர் சேனாதி என்று அழைப்பது போல மிகவும் பெருமையாகவும் இருக்கும்!

 

அவளது நினைவுகள், கடந்த காலத்துச் சேனாதியை ஒரு கணம் நினைத்துப்பார்க்க, சரசுவின் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

 

சேனாதி, காரின் முன்பக்கத்தைத் திறந்து, எண்ணை, தண்ணி எல்லாம் ஒழுங்காக இருக்கின்றதா என்று சரி பார்த்த பின்னர், கார் முழுவதையும், ஈரத் துணியால் ஒருமுறை துடைக்க, அதுவும் பளபளவென்று, காலைச்சூரியனின் ஒளியில் மினு மினுத்தது.  பின்னர், காருக்குள் கிடந்த முதல் நாள் வீரகேசரிப் பேப்பரை எடுத்துக்கொண்டு சாய்மனைக்கதிரைக்கு வரவும், சரசுவும் முட்டைக் கோப்பியோடு வரவும் சரியாக இருக்கும்.  சுவரில் மாட்டப்படிருந்த ‘பெக்' கில் தொங்கிய சேட்டை எடுத்தவர், அதற்குள்ளிருந்த ‘சுவீப்' டிக்கட்டைக் கவனமாக எடுத்து, வீரகேசரிப் பேப்பரில் உள்ள, சுவீப் முடிவுகளுடன், ஒப்பிட்டுப் பார்த்த பின், ‘அட, மூண்டு நம்பரால இந்த முறை சறுக்கிப் போட்டுது' என்று கோப்பியுடன் நின்ற சரசுவைப் பாத்துச் சப்புக் கொட்டினார். அவர் ‘சுவீப்' டிக்கட் வாங்குவதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம், அவரது மூன்று பொம்பிளைப் பிள்ளைகள். அடுத்தது, அந்தச் சுவீப் டிக்கட்டின் முதலாவது பரிசு, ஒரு பென்ஸ் கார் என்பது. கடைசிக்காரணம், இவர் யாழ்ப்பாணச் சந்தையடியில் இருந்து காரை எடுக்கும் போது, இவரைக் காணும் சுவீப் டிக்கட் விற்பவன், போனாக் கிடையாது, பொழுது பட்டாக்கிட்டாது, என்று உரத்த குரலில் சத்தம் போடத் தொடங்குவதும் தான்!

 

சரி, இண்டைக்கு திங்கட்கிழமை எண்டது மறந்து போச்சுது என்று கூறியவர், கிழமை தெரியிறதுக்கு நான் என்ன கவுன்மேந்து வேலையா பாக்கிறன் என்று தனக்குத் தானே பதிலும் கூறிக்கொண்டார். இப்ப வெளிக்கிட்டாத்தான் 776 வாறதுக்குக் கொஞ்சம் முந்திப்போனால், போடிங்குக்குப் போற பெடியளைப் பிடிக்கலாம். இந்தப் பெடியளை ஏத்திக்கொண்டு போறதால அவருக்குக் கொஞ்சம் ‘லாபம்' அதிகமாக இருக்கும். பெரிய ஆக்களின்ர மடியளில, பெடியளை இருக்கவிடலாம் என்பதால், அதிக இடத்தை அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை. எனவே வருகின்ற முழுக்காசும் எக்ஸ்ட்ரா வருமானம் தான். வழியில, பொன்னர், போயிலைக்கட்டுக்களோட நிண்டதையும், காரை மறித்ததையும் கண்டார். உடனை அவருக்கு, அண்ணை, பின்னால பஸ் வருகுது என்று கூறியபடியே, விடிகாலைப் பயணிகளை ஏத்திக்கொண்டு போக இறுப்பிட்டியிலிருந்து வெளிக்கிட்டார். பொதுவாக, மீன், போயிலை போன்றவற்றை ஏத்துவது சேனாதிக்கு விருப்பமில்லை. சாமிப்படங்கள் இருக்கிறதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும், சேனாதியிடம் சில தொழில் தர்மங்களும் இருந்ததை மறுக்க முடியாது. பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களை, எந்த நேரத்திலும், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவதற்குச் சேனாதி ஒரு நாளும் காசு வாங்குவதில்லை. போகும் வழியில்,  வாற ஒவ்வொரு கோவிலடியிலும் , கண்ணைமூடி, நெத்தியையும் நெஞ்சையும் ஒருக்காத் தொட்டுக் கொள்ளவும் சேனாதி மறப்பதில்லை.

 

சேனாதியர் கார் ஓட்டுற விதமே அருமை. பாக்க வலு சந்தோசமாயிருக்கும். அந்தக் கோழி முட்டை மாதிரியிருக்கிற கியரின்ர நுனியைத் தொட்டுப்பாக்கச் சில வேளைகளில் ஆசை வருவதுண்டு. தம்பியென்ன, கடலுக்குள்ள எங்களைக் கவிழ்க்கிற பிளானோ, எண்ட அவரது கடுமையான தொனி, அந்த ஆசையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும். அதே போலத்தான், அவர் காரின்ர சிக்னலைப் போடும்போதும், காரின்ர கதவுக்குப் பக்கமாய், ‘பொப்' என்ற சத்தத்துடன், ஒரு சின்னத் தடி மாதிரி ஒண்டு, மேல உயர்ந்து பின்னர் கீழே போகும். அது வரப்போகும் நேரம் பார்த்துத் திடீரென அதை அமத்தும்  போது மட்டும் சேனாதிக்குப் பொல்லாத கோபம் வரும். எங்கட ரோட்டிலை, பஸ் ஓடினாலும், சேனாதியின்ர காருக்கு ஒரு தனி மவுசு இருந்தது. ஒண்டு, காரில, கெதியாப் போயிரலாம். மற்றது, காரில எப்பவும் நல்ல ‘லோட்' இருக்கிறபடியால, இந்தத் துள்ளலுகள் கொஞ்சம் குறைவா இருக்கும். அதோட கொஞ்சம் ஊர்ப் புதினங்களும், பயணிகளால், பகிரப்படுவதுண்டு. அப்போதெல்லாம், அவர், இவருடன் ஓடிப்போனார் என்ற கதைகள் அவ்வளவு விளங்காத காலம்.

‘தம்பி மார், பண்ணைப்பாலம் வருகுது. மணியண்ணையின்ர காரிலை, கையைக்காட்டிப்போட்டுப் போறார். போலீஸ்காரன் நிக்கிறான் போல கிடக்கு. எல்லாரும் ஒருக்காக் குனியுங்கோப்பு, என்று கூறினார். போலீஸ்காரனும், வெளியவந்து பாக்கிறதில்லை. தனது மேசையிலிருந்த படியே, கார்க் கண்ணாடிக்குள்ளால பாத்து ஆக்களை எண்ணுறதோட சரியென்ட படியால, சேனாதியும் ஒவ்வொரும் முறையும் தப்பிக் கொள்வார்.

 

யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பி வாற நேரம், அனேகமாக, கடைக்காரர் தங்கட கடைக்குச் சந்தையில சாமான் வாங்கி ஏத்துவினம். வாழைக்குலைகள், மரக்கறிகள்,உடுப்பு வகைகள் எண்டு நிறையச் சாமான் ஊருக்குப் போகும். அதோட, ஏதாவது கோவில் திருவிழா, கலியாணவீடு, செத்தவீடு எண்டால், சேனாதியின் காருக்கு நிரம்ப வேலையிருக்கும். பத்துமணிக்குப் பிறகு, பட பஸ், போனப்பிறகு, சனம் எவ்வளவு காசெண்டாலும் குடுத்து, ஊருக்குப் போக ஆயத்தமாக இருக்கும். அதோட, கொழும்புப் பயணகாரர் வாறபோதும், அவர்கள் சேனாதியை விரும்பி அழைப்பதுண்டு. கிழமையில, ஏழுநாளும் சேனாதிக்கு வேலையிருக்கும்.

 

ஒரு நாள் இரவு, ஒரு ஆறு  பெடியளவில, சேனாதியிட்ட வந்து, அண்ணை, உங்கட கார், எங்களுக்கு அவசரமாத் தேவைப்படுகுது, அலுவல் முடியத் திருப்பித் தந்திடுவம்  எண்டு கேட்டனர்.. அவர்கள் எல்லோருடைய கைகளிலும்,  துப்பாக்கிகள் இருந்தன. சேனாதிக்குப் பொதுவா, ஊரில எல்லாரையும் தெரியும். ஆனால், வந்த பெடியளைச் சேனாதி ஒரு நாளும் கண்டதுமில்லை. இல்லைத் தம்பிமார், எனக்குக் கார் தான் பிழைப்புக்கு வழி காட்டிறது, இதில்லா விட்டால், வீட்டில எல்லாரும் சிவபட்டினி கிடக்க வேண்டியது தான் என்று கூறவும்,.வந்தவர்கள், சேனாதியின் விளக்கத்தைக் கேட்பவர்களாக இல்லை.

அண்ணை, திறப்பைத் தாறீங்களோ அல்லது, வேற விதமா நாங்கள் ‘ஸ்டார்ட்' பண்ணுறதோ? எனக் கேட்கச், சரசுவும் பிள்ளையளும் அழத்தொடங்கி விட்டினம். சேனாதியும், மிகவும் தயக்கத்துடன் காரின் திறப்பைக் கொடுக்கவும், அவர்கள் காரை எடுத்துக் கொண்டு எல்லோரும் அதில் ஏறிக்கொண்டு போனதைப் பார்த்துக்கொண்டு, வாயடைத்துப் போன சேனாதி, அவர்கள் போன பின்பு தான் , தம்பியள், கார் கவனமப்பு என்ற வார்த்தைகளைத் துப்பினார்.

 

அதன் பின்பு, ஒரு மாதத்தின் பின்பு, அவரது கார் கோயிலடியில் நிற்பதாக, ஆரோ சொல்லக்கேட்டுப் போய்ப் பார்த்தார். அவரது காரை, அவராலேயே அடையாளம் காண முடியவில்லை. அதன் சில்லுகளும், காத்துத் திறக்கப்பட்டு, வெறுமையாகக் கிடந்தன. அந்தக்காரின் நிலையைப் பார்த்ததும், சேனாதியின் மனம் முற்றாக உடைத்து போய் விட்டது. அதை, ஒரு மாதிரிக்கட்டியிழுத்து, வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். அதன் ‘என்ஜின்' செத்துப்போயிருந்தது. அவரது மனமும் தான்.

 

இப்போது, கார் ஓடாமல் விட்டு ஐந்து வருடங்கள்  உருண்டோடி விட்டன

ஆனாலும், காலையில் எழுந்து, அதற்குப் பூவும், பொட்டும் வைப்பதை, அவர் இன்னும் நிறுத்தவேயில்லை.. ஒரு வேளை, அந்தக் காரின் ‘ஆன்மா' அவருக்குத் தெரிகின்றதோ, என்னவோ!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொறிஸ் மைனர்,சொமசெட்,ஏவோர்டி.....எங்கன்ட மக்களின் வருமானத்திற்கு முக்கிய பங்காற்றியவை...மீண்டும் ஒர் அருமையான பதிவை தந்த பூங்கயூரனுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை வீட்டையும் முதல் ஒரு மொறிஸ் மைனரும் பிறகு மொரிஸ் ஒக்ஸ்போட்டும் நிண்டது. பொருளாதாரத்தடை நேரம் பற்றறி எல்லாம் தட்டுப்பாடு அதுக்கு "செல்" வெட்டி வைக்கிறது. உண்மையில் அவை எல்லாம் ஒரு இனியகாலம்.

 

அதை விட எங்களுக்கு பருத்தித்துறை சயன்ஸ் சென்டரிலை தமிழ் படிப்பித்த "தம்பர்" ஒரு HONDA - CD 200 மோட்டார்சைக்கிள் வைத்திருந்தவர். அதில் பொடியள் தொட்டதற்கு அவர் சொன்னது. " என்னவும் பகிடி விடுங்கோப்பா அதுக்கு மேலை மட்டும் கை வைக்காதையுங்கோ, அது என்ரை காதலி" என்று அப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆத்மார்த்தமான உணர்வு இருக்கும் போல.

 

நல்லதொரு கதை இப்படி எத்தனை பேரின் வாழ்வாதாரங்கள் கண்முன்னே பறிக்கப்பட்டு நடுத்தெருவில் விட்ட கதைகளும் ஒன்றா, இரண்டா எல்லாவற்றையும் இழந்து வாழும் பலரை கண் முன் கொண்டு வந்துள்ளீர்கள்.

ஒரு காலத்தின் பதிவு. வாழ்த்துக்கள் புங்கை அண்ணா, தொடர்ந்து எழுதுங்கள்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பழைய நினைவுகள்.  ஒவ்வொரு வாகனமும் ஒரு கதை சொல்லும். நம்ம ஊரில்  இவ் வாறு இருவர் இருந்தனர்.

ஏனோ ராஜா கையவைச்சா அ து ராங்கா போனதில்லே .........என்ற பாடல் நினைவு வருகிறது ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ர  அப்பற்ற கதையல்லோ

கொப்பிக்கு காசு தரணும் புங்கையர்

 

எனது தகப்பனாருடைய  தொழில்  இது தான்

 மொறிஸ் மைனர் தான் முதல்ல வைத்திருந்தவர்

அதில மக்காட்டில மட்டும் 4 பேரை  ஏத்துவாராம்

பின்னர் ஆமட் கார்,சொமசெற்ஏபோர்டி..

 

அப்புறம்  அவருக்கு வயசு போக

அவை வீட்டில் நின்றபோது ரயர்கள்  சில்லுகள்  ரியூப்புக்கள் என்று ஒவ்வொன்றாக பிச்செடுத்து நாங்கள் கார் ஓட்டியது வேறு கதை......

 

அப்பரை   ஊரை மறுபடியும்  நினைக்க வைத்துவிட்டீர்கள்.

நன்றி  ஐயா..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

set-of-decal-stickers.jpg

 

1958MorrisMinor1000_03_700.jpg

 

 

நல்லதொரு அருமையான கதை. ஒவ்வொரு வரியையையும்... ரசித்து வாசித்தேன். :) 
எங்கள் சித்தப்பா... ஒருவரும் "மொறிஸ் மைனர்" வைத்திருந்ததால்... அதில் தான்,  யாழ் மத்திய கல்லூரியில் படிக்கும் காலங்களில், நாலாம் வகுப்பு மட்டும்  போய் வருவேன். அதனால்... அந்தக் கார் மிகவும் பரிச்சயம். இன்றும்... அந்தக் காரை, எங்காவது அருமையாகக் கண்டால்.. அருகில் சென்று ரசிப்பது வழக்கம். புங்கை சொன்ன மாதிரி... அதன் சிக்கனல் லைற், சுவராசியமானது. 

 

அந்த சிக்னலை, கையாலை... புடுங்கி எடுத்து, சித்தப்பாவிடம் பேச்சு வாங்கினது இன்னும்.... நல்ல ஞாபகம் இருக்கு. :lol: 

 

#####

ஒரு படம், மேலதிகமாக... இணைப்பதற்காகவும், எழுதிய கருத்தில்... சிறு மாற்றம் செய்வதற்காகவும், திருத்தப் பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ர  அப்பற்ற கதையல்லோ

கொப்பிக்கு காசு தரணும் புங்கையர்

 

எனது தகப்பனாருடைய  தொழில்  இது தான்

 மொறிஸ் மைனர் தான் முதல்ல வைத்திருந்தவர்

அதில மக்காட்டில மட்டும் 4 பேரை  ஏத்துவாராம்

பின்னர் ஆமட் கார்,சொமசெற்ஏபோர்டி..

 

அப்புறம்  அவருக்கு வயசு போக

அவை வீட்டில் நின்றபோது ரயர்கள்  சில்லுகள்  ரியூப்புக்கள் என்று ஒவ்வொன்றாக பிச்செடுத்து நாங்கள் கார் ஓட்டியது வேறு கதை......

 

அப்பரை   ஊரை மறுபடியும்  நினைக்க வைத்துவிட்டீர்கள்.

நன்றி  ஐயா..

 

புங்கையூரானின் கதையில் வரும், சேனாதி உங்கள் அப்பாவா விசுகு.

கதையின் இறுதியில், வந்த நிகழ்வும்... நிஜமாக இருக்கின்றதா? அல்லது.. கற்பனைக்கு எழுதப் பட்டதா? என்பதை.... நீங்களிருவரும் தான் சொல்ல வேணும். :rolleyes:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானின் கதையில் வரும், சேனாதி உங்கள் அப்பாவா விசுகு.

கதையின் இறுதியில், வந்த நிகழ்வும்... நிஜமாக இருக்கின்றதா? அல்லது.. கற்பனைக்கு எழுதப் பட்டதா? என்பதை.... நீங்களிருவரும் தான் சொல்ல வேணும். :rolleyes:  :)

 

 

இல்லை சிறி

ஆனால் புங்கையை  ( கன்னம் வைத்து அடிப்பதில் வல்லவர்)  நம்பமுடியாது.

அன்று திண்ணையில் எனது தகப்பனாரைத்தெரியும் என்று சொன்னார். :D

 

ஆனால் இறுதிப்பகுதி   எனது தகப்பனாருக்கானது அல்ல.

ஆனால் வாகனம்  வைத்திருந்த பலருக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

இப்படியான நிகழ்வுகளே எம்மை நல்லதை தெரிவு செய்ய  உதவி  செய்தன. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சிறி

ஆனால் புங்கையை  ( கன்னம் வைத்து அடிப்பதில் வல்லவர்)  நம்பமுடியாது.

அன்று திண்ணையில் எனது தகப்பனாரைத்தெரியும் என்று சொன்னார். :D

 

ஆனால் இறுதிப்பகுதி   எனது தகப்பனாருக்கானது அல்ல.

ஆனால் வாகனம்  வைத்திருந்த பலருக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

இப்படியான நிகழ்வுகளே எம்மை நல்லதை தெரிவு செய்ய  உதவி  செய்தன. :icon_idea:

 

புங்கையூரானின்... பதிலையும் பார்த்து விட்டு, எனது கருத்தை சொல்கிறேன் விசுகு. :D

Link to comment
Share on other sites

அருமையான கதை புங்கை.

 

நாம் செலுத்தும் வாகனங்கள் மீது எமக்கு இனம்புரியாத ஒரு நேசம் உருவாகுவது பற்றி இயல்பான நடையுன் கூறியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எழுதுவதில் புங்கையூரான் தனித் திறமை பெற்று விட்டார் :lol: வாழ்த்துக்கள்.எவ்வளவு வாசிச்சும் எனக்கு எழுத வருதேல்ல :(
 
புங்கையூரான் உங்கள் கதையில் போட்டு இருக்கும் கார் நிற்கும் இடம் லண்டனா :unsure:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் .

நானும் ஒரு மொரிஸ் மைனர் வைத்திருந்தேனே!

என்ன ராசியோ தெரியாது பொறுத்த பொறுத்த இடத்தில நிற்கும். சென் பற்றிக்ஸ்க்கு முன்னாலே ஒருவர் இருந்தவர், அவர்தான் பிழையை கண்டு பிடித்தவர்..திச்ற்றிபுட்டர் சூடாகுவதோ/ எதோ  என்று  கண்டு பிடித்தவர்

 

Link to comment
Share on other sites

எனது அயலவரும் இப்படி ஒரு கார் வைத்திருந்தவர். ஆனால் அவர் காருக்கு கேட்கும் காசுக்கு இன்னொரு கார் வாங்கலாம் என மக்கள் திட்டுவதை கேட்டிருக்கிறேன். :lol: இயக்கம் ஒரு போதும் அவரிடம் கார் கேட்டதில்லை. ஏனோ தெரியவில்லை.

 



கதை எழுதிய விதம் அருமை. புங்கையூரான் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

புங்கையூரான் உங்கள் கதையில் போட்டு இருக்கும் கார் நிற்கும் இடம் லண்டனா :unsure:

 

 

செங்கல்லு கட்டிடத்தையும், அந்த வெள்ளை வேலியையும் பார்க்கும் போது....

எனக்கு, அது லண்டன் மாதிரித்தான் தெரியுது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொறிஸ் மைனர்,சொமசெட்,ஏவோர்டி.....எங்கன்ட மக்களின் வருமானத்திற்கு முக்கிய பங்காற்றியவை...மீண்டும் ஒர் அருமையான பதிவை தந்த பூங்கயூரனுக்கு நன்றிகள்

நன்றிகள், புத்தன்!

 

அனுபவங்களை இரை மீட்பதே புலத்துத் தமிழனின் வாழ்வாகி விட்டது!

 

எல்லாம், உங்களிடமிருந்து கிறுக்கப் பழகியது தான்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை வீட்டையும் முதல் ஒரு மொறிஸ் மைனரும் பிறகு மொரிஸ் ஒக்ஸ்போட்டும் நிண்டது. பொருளாதாரத்தடை நேரம் பற்றறி எல்லாம் தட்டுப்பாடு அதுக்கு "செல்" வெட்டி வைக்கிறது. உண்மையில் அவை எல்லாம் ஒரு இனியகாலம்.

 

அதை விட எங்களுக்கு பருத்தித்துறை சயன்ஸ் சென்டரிலை தமிழ் படிப்பித்த "தம்பர்" ஒரு HONDA - CD 200 மோட்டார்சைக்கிள் வைத்திருந்தவர். அதில் பொடியள் தொட்டதற்கு அவர் சொன்னது. " என்னவும் பகிடி விடுங்கோப்பா அதுக்கு மேலை மட்டும் கை வைக்காதையுங்கோ, அது என்ரை காதலி" என்று அப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆத்மார்த்தமான உணர்வு இருக்கும் போல.

 

நல்லதொரு கதை இப்படி எத்தனை பேரின் வாழ்வாதாரங்கள் கண்முன்னே பறிக்கப்பட்டு நடுத்தெருவில் விட்ட கதைகளும் ஒன்றா, இரண்டா எல்லாவற்றையும் இழந்து வாழும் பலரை கண் முன் கொண்டு வந்துள்ளீர்கள்.

ஒரு காலத்தின் பதிவு. வாழ்த்துக்கள் புங்கை அண்ணா, தொடர்ந்து எழுதுங்கள்.. :)

நன்றிகள் ஜீவா!

 

சிறுகதைகள், உண்மையான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் போதே, அவை உயிர் பெறுகின்றன என்பது எனது கருத்தாகும்!

 

எனது முதலாவது கார், ஒரு டற்சன் செர்றி. மாணவனாக இருந்த காலத்தில், அதற்கு எண்ணெய் மாற்றுவது, பில்ரர் மாத்துவது, எங்காவது உரஞ்சுப்பட்டால், நெளிவெடுப்பது, கறல் உரஞ்சுவது, பெயின்ட் அடிப்பது போன்ற சகல வேலையும் நானே செய்தேன். அதன் பின்னர் எத்தனையோ கார்கள் என்னிடம் வந்து போய் விட்டன. ஆனால், நீங்கள் சொல்வது போல, அந்த முதலாவது காதலி, சில இரவுகளில், என் நினைவில் வந்து போகின்றாள்! :D     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எழுதுவதில் புங்கையூரான் தனித் திறமை பெற்று விட்டார் :lol:

அக்கா பகிடி விடுறியள் எண்டு நினைக்கிறன்... புலிக்குட்டிக்கு பாய்ச்சல் கத்துக்கணுமா..? புங்கை அண்ணாவின் எழுத்துகளில் தீராக்காதல் கொண்டவர்கள் நாங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பழைய நினைவுகள்.  ஒவ்வொரு வாகனமும் ஒரு கதை சொல்லும். நம்ம ஊரில்  இவ் வாறு இருவர் இருந்தனர்.

ஏனோ ராஜா கையவைச்சா அ து ராங்கா போனதில்லே .........என்ற பாடல் நினைவு வருகிறது ..

வணக்கம், நிலாக்கா! நலம் தானா?

 

அந்த நினைவுகளை எவ்வாறு மறக்க முடியும்?

 

இரவும், பகலும் எல்லா இடத்திலும் வரும் தான்! ஆனால், அந்த மண்ணின் வாசனை மட்டும், எனது மண்ணிலிருந்து மட்டும் தான் வரும்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ர  அப்பற்ற கதையல்லோ

கொப்பிக்கு காசு தரணும் புங்கையர்

 

எனது தகப்பனாருடைய  தொழில்  இது தான்

 மொறிஸ் மைனர் தான் முதல்ல வைத்திருந்தவர்

அதில மக்காட்டில மட்டும் 4 பேரை  ஏத்துவாராம்

பின்னர் ஆமட் கார்,சொமசெற்ஏபோர்டி..

 

அப்புறம்  அவருக்கு வயசு போக

அவை வீட்டில் நின்றபோது ரயர்கள்  சில்லுகள்  ரியூப்புக்கள் என்று ஒவ்வொன்றாக பிச்செடுத்து நாங்கள் கார் ஓட்டியது வேறு கதை......

 

அப்பரை   ஊரை மறுபடியும்  நினைக்க வைத்துவிட்டீர்கள்.

நன்றி  ஐயா..

நன்றிகள், விசுகர்!

 

உங்கடை அப்பா, நல்லாய்ப் பாடக்கூடியவர் என்று, எனது மாமியார் அடிக்கடி கூறுவார்! ஆனால், அவர் கார் வைச்சிருந்தது எனக்குச் சத்தியமாத் தெரியாது! நிச்சயம் அவருடைய காரிலை, ஆராவது ஒரு மனுசியின்ர மடியிலையிருந்து, நிச்சயம் பயணம் செய்திருப்பேன். சில முகங்கள், நினைவுக்கு வருகின்றன! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பினால்... நம்புங்கள்,
அந்த நாளில், புதுக் கார்... சிலோன் காசு, பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்.
இப்ப, ஸ்ரீலங்காவில்... அதன் மதிப்பு, என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் புங்கையூரன்.உங்கள் கதை அழகு......
 
நாங்கள்  ஏவோர்டி, மொறிஸ்மைனர், சோமசெற் எல்லாம் பாத்திருக்கிறம்.....ஆனால் ஏறேல்லை......ஏறி இறங்கினது முழுக்க வண்டில் மாடுதான்..அயிக்..அயிக்...அய்..அயிக்...சந்தோசம்...சிக்கனம்.....சுகாதாரம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், விசுகர்!

 

உங்கடை அப்பா, நல்லாய்ப் பாடக்கூடியவர் என்று, எனது மாமியார் அடிக்கடி கூறுவார்!

ஆனால், அவர் கார் வைச்சிருந்தது எனக்குச் சத்தியமாத் தெரியாது!

நிச்சயம் அவருடைய காரிலை, ஆராவது ஒரு மனுசியின்ர மடியிலையிருந்து, நிச்சயம் பயணம் செய்திருப்பேன். சில முகங்கள், நினைவுக்கு வருகின்றன! :D

 

பாட்டு அவரது பொழுது போக்கு.

தொழில் யாழ்ப்பாணத்துக்கு கார் ஓடுவதுதான்.

(பாட்டுக்காற.....................

கார்க்காற................. இது ரெண்டும் ஒருவர் தான்)

 

ஊரில் முதல் முதல் கார் வைத்திருந்தவர்களில் ஒருவர்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்துக்கு Taxi வந்தபோது அதை ஓடியவர் எனது தகப்பனாரே.

ஏனெனில் அவரிடம் மட்டுமே அதற்கான அனுமதிப்பத்திரம் இருந்ததாம்.

 

உங்களது கதை பொதுவாக யாழ்- ஊர் வாகன ஓட்டிகளைச்சொல்லி  நிற்கிறது.

அந்த காலமே ஒரு சுகம் தான்

(முக்கியமாக மடியிலிருந்து    போகுதல்.  அனேகமாக எல்லாக்கார்க்காறர்களும் பாவிக்கும் வசனம்.

உங்களால்  ஏறி  வரமுடியுமாக இருந்தால் நான் கொண்டு போய் விடுகின்றேன் என்பது தான். எத்தனை  பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கெல்லாம் பார்ப்பது கிடையாது. :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்டாசிச் சனியன்று  அம்மா காகத்துக்கு சோறு வைப்பார்.  பிறகு சொல்லுவார் நான் வச்ச உடனே  அந்தக் காகம் மட்டும் பறந்து வந்து வாய் நிறைய சோறு அள்ளிக் கொண்டு போய்விடும் என்று. இப்படியே அக்கம் பக்கம் ஒவ்வொரு அம்மாக்களும், மாமிகளும்,சின்னம்மாகக்ளும் பின்னேரம் திண்ணையில் இருந்து கதைப்பினம் . ஒருவர் அப்பளத்தை தூக்கிச்சுது எண்டும் ,மற்றவர் வடகத்தை எண்டும் சொல்லுவார்கள்.

 

அது போன்றதுதான் உங்கள் அழகான கதையும் .பலருடைய நெஞ்சுக்குள்ளும் இருந்ததை உங்கள் வலிமையான எழுத்துக்கள் மூலம் பதிவு செய்துள்ளீர்கள் .

 

எங்களிடமும் மைனர், மற்றும் வோக்ஸ் வேகன் டாக்சிகள் இருந்தன. முன்னுக்கு பூ  வைத்தல் , கோவிலுக்குப் போனால் போனட்டில் அழகாக திருநீறும்,பொட்டும்  இடுதல் , யாரும் சில்லில் கால் வைத்தாலோ, அல்லது காரில் சாய்ந்து நின்றால் போலிசின் குலோத்தால் அடித்தல் என்று பல நினைவுகள்......

 

நன்றி புங்கை ! :rolleyes:  :D

Link to comment
Share on other sites

கதை, அதை சொல்லிய விதம் அழகு உங்களை போன்ற எழுத்தாளர்கள் Sydney மண்ணில் இருப்பது அதைவிட பெருமை வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.