Jump to content

அப்பாவின் ஈர நினைவுகள்....: நிழலி


Recommended Posts

அப்பாவின் ஈர நினைவுகள்....

 


வேர்களில் இருந்து கசியும்
நீராய் அப்பாவின்
நினைவுகள்
எனக்குள்..

 

 

ஐந்து வயது வரை நடக்கமுடியாது
தவிக்கும் போது
தோள்களில் தூக்கி
திரிந்த காலங்கள்...
பனைவெளிகளின் ஊடாக
சைக்கிள் பாரில் எனை
வைத்து கதை
சொல்லிய பொழுதுகள்....
பெரும் குளக்கட்டின் ஓரம்
தடுக்கி விழாமல் இருக்க
விரல்கள் இறுக்கி
நடந்த நேரங்கள்...
பெரும் மழை சோ என்று கொட்ட
நனைதலின் சுகம் சொல்லித்
தந்த தருணங்கள்...

 


இப்பதான் நடந்ததாய்
தெரியும் பொழுதுகளெல்லாம்
எப்பவும் தொட முடியாத திக்கில்
உறைந்து விட்ட சித்திரங்களாய்...
ஆற்றாத் துயர் அணை மேவினும்
நெருங்க முடியாத தூரங்களாய்....

பசிய இலையொன்றின்
அந்திம காலத்து உதிரும்
தவிப்பில் அப்பாவை கண்ட
இறுதிப் பொழுதுகளில் தான்
வாழ்வின் நிதர்சனம்
எனக்குள் புகுந்து கொண்டது...
பெரும் மரமாய்
சூறைக் காற்றாய்
அலை எழும் கடலாய்
நான் கண்ட அப்பாவின்
உடல் தீயில் உருகிய
தருணங்களி தான்
வாழ்வின் வனப்பும் புரிபட்டது..

சாம்பலின் ஊடாக தேடி தேடி
'இது விலா எழும்பு
'இது மூட்டெழும்பு' என்று
அவரது
எலும்புகளை பொறுக்கிய
அந்த வினாடிகளில்தான்
வாழ்க்கையின் பரிமாணமும்
பிடிபட்டது..

இப்பவெல்லாம் அடிக்கடி
அவர் நினைவுகள் எழுகின்றன
இறந்த நாட்களில் உயிரற்றுக்
கிடந்த அவர் பற்றிய நினைவுகள்
இன்று உதிரம் பாச்சிய
காற்றாக மீண்டும் மீண்டும்
எனக்குள் எழுகின்றன

என் பிள்ளைகளை காணும் போதும்
அவர்களை நெஞ்சாரத் தழுவும் போதும்
தவறுகளைத் திருத்தும் போதும்
கண்டிப்பின் உச்சியில் நிற்கும் போதும்
அமைதியாக அவர்கள் உறங்கும் போதும்
மீண்டும் மீண்டும் என் அப்பாவின்
நினைவுகள் எழுகின்றன

அவர்கள் இடும் முத்தத்தின்
ஈரத்தில் அவர் கண்களில்
தெரிந்த ஈரம் எனக்குள்
தெரிகின்றது....

இப்படியான சில
கணங்களில்
நானே அவராக மாறிவிடுவம்
இல்லை அவரே நானாக
ஆகிவிடுவதும்
நடக்கத்தான் செய்கின்றன....

 

மார்ச், 25 2013

 

------------

 

இன்று என் அப்பாவின் 71 ஆவது பிறந்த தினம். காலையில் இருந்து மிதமிஞ்சி அருட்டிக் கொண்டு இருக்கும் அவர் பற்றிய நினைவுகளில் எழுதிய ஆக்கம் இது,

 

 

Link to comment
Share on other sites

இப்படியான சில

கணங்களில்

நானே அவராக மாறிவிடுவம்

இல்லை அவரே நானாக

ஆகிவிடுவதும்

நடக்கத்தான் செய்கின்றன....

 

காலவெளியில் அப்பா அம்மா என்ற பதவிகள் நிரந்தரமானவை . அவற்றை நிரப்ப மகனும் மகளும் சுழற்சிமுறையில் வந்து கொண்டேயிருப்பார்கள் . அப்பொழுது ஒவ்வொரு சம்பவமுமே தித்திப்பான நினைனைவுகள் தான் . ஆனால் , நவீன உலகியல் ஒழுங்கில் இந்த உணர்வுகளும் அளவிடக்கூடியதோ என்று எண்ண வைக்கின்றது . நினைவுக் கவிதைக்கு எனது பாராட்டுக்கள் நிழல் :) :) .

Link to comment
Share on other sites

இப்படியான சில

கணங்களில்

நானே அவராக மாறிவிடுவம்

இல்லை அவரே நானாக

ஆகிவிடுவதும்

நடக்கத்தான் செய்கின்றன....

 

காலவெளியில் அப்பா அம்மா என்ற பதவிகள் நிரந்தரமானவை . அவற்றை நிரப்ப மகனும் மகளும் சுழற்சிமுறையில் வந்து கொண்டேயிருப்பார்கள் . அப்பொழுது ஒவ்வொரு சம்பவமுமே தித்திப்பான நினைனைவுகள் தான் . ஆனால் , நவீன உலகியல் ஒழுங்கில் இந்த உணர்வுகளும் அளவிடக்கூடியதோ என்று எண்ண வைக்கின்றது . நினைவுக் கவிதைக்கு எனது பாராட்டுக்கள் நிழல் :) :) .

 

நன்றி கோமகன்.

 

நீங்கள் வாசிக்கும் போது இந்தக் கவிதையை முழுமையாக இணைக்க வில்லை. Notepad இல் எழுதி பின் அதில் இருந்து copy and paste செய்யும் போது முதல் பகுதியை கொப்பி பண்ண மறந்து விட்டேன். :(

 

இப்ப முழுமையாக இணைத்துள்ளேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் ஒரு தந்தையின் இழப்பு என்பது எதனாலும் ஈடு செய்ய முடியாத ஒன்று.

அப்பாவின் மரணத்துக்குப் போகும் பாக்கியம் கூட எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

அவர் இல்லாத காலங்களை எல்லாம் நினைத்தால் தந்தை என்ற பாத்திரம் வகிக்கும் பங்கு புரியும்.

இன்று எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நிற்கிறேன்.

எப்பவும் நினைப்பதுண்டு அப்பா இருந்தால் எப்படி இருந்திருப்பேன் என்று.

 

அம்மாவை விட எனக்கு எப்பவும் அப்பாவைத் தான் பிடிக்கும்.

என்னால் இன்னும் நம்ப முடியவில்லை அவரின் இழப்பை. :(

Link to comment
Share on other sites

அப்பாவின் ஈர நினைவுகள்....

என் பிள்ளைகளை காணும் போதும்

அவர்களை நெஞ்சாரத் தழுவும் போதும்

தவறுகளைத் திருத்தும் போதும்

கண்டிப்பின் உச்சியில் நிற்கும் போதும்

அமைதியாக அவர்கள் உறங்கும் போதும்

மீண்டும் மீண்டும் என் அப்பாவின்

நினைவுகள் எழுகின்றன

அவர்கள் இடும் முத்தத்தின்

ஈரத்தில் அவர் கண்களில்

தெரிந்த ஈரம் எனக்குள்

தெரிகின்றன.

------------

 

இன்று என் அப்பாவின் 71 ஆவது பிறந்த தினம். காலையில் இருந்து மிதமிஞ்சி அருட்டிக் கொண்டு இருக்கும் அவர் பற்றிய நினைவுகளில் எழுதிய ஆக்கம் இது,

 

பிரிவின் பின்னரே அதன் வலி தெரியும். பெற்றோர் எமக்காக பட்டு துன்பங்கள் எமக்காக இழந்தவற்றை எங்கள் பிள்ளைகளுக்காக நாங்கள் இழக்கிற போதே அதன் பெறுமதி புரியும்.

'பெற்ற மனம் பித்து என்பார் பிள்ளைமனம் கல்லு என்பார்   என்ற ஈழத்து மெல்லிசைப் பாட்டில் இப்படி ஒரு வரி வரும்:- அம்மா அப்பா ஆனபின்னே அனுபவம் விளங்கும் சும்மா சொன்னால் புரிவதில்லை இந்த தத்துவம்' இவ்வரி எல்லாப் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

அப்பாவின் பிரிவில் அந்த வாழ்வின் பிடிமானத்தை கவிதையாக்கி எனது அப்பாவையும் ஞாபகம் தந்து நிழலிக்கு நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, நானும் உங்களைப்போலவே, இளவயதில் அப்பாவை இழந்தவன் என்ற முறையில், உங்கள் கவிதையை, அந்த உணர்வுகளை,யதார்த்தமாகப் புரிந்து கொள்கிறேன்!

 

காலம் வலியை ஆற்றுகின்றது என்பது உண்மையே எனினும், எனது வாழ்வின் முக்கியமான ஒவ்வொரு கணங்களிலும் அவரது, நினைவு வந்து போகின்றது.!

 

எனது ஆதங்கம் எல்லாம் ஒன்றே ஒன்று தான்!

 

பழமரங்களுக்கு விதைகளை ஊன்றிய ஒருவன், அவற்றைச் செவ்வனே பராமரித்து வளர்த்த ஒருவன், அந்தப் பழமரங்கள் வளர்ந்து, பூக்களும் காய்க்களுமாகப் பூத்துக் குலுங்குவதைப் பார்க்க முடியாமல் போய் விட்டதே, என்ற ஆதங்கமே அது!

 

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும்,

தெய்வத்துள் வைக்கப்படும்'

 

என்ற வள்ளுவனின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, வாழ்வை, அவர்கள் வாழ்ந்த வழியில் நகர்த்துவதே, நாங்கள் அவர்களுக்குச் செய்யும் கைமாறாகும்!

 

என் பிள்ளைகளை காணும் போதும்
அவர்களை நெஞ்சாரத் தழுவும் போதும்
தவறுகளைத் திருத்தும் போதும்
கண்டிப்பின் உச்சியில் நிற்கும் போதும்
அமைதியாக அவர்கள் உறங்கும் போதும்
மீண்டும் மீண்டும் என் அப்பாவின்
நினைவுகள் எழுகின்றன!

 

பூவரசம் தடியொன்றை முறித்து,

பாவம் பாராமல் அடித்த வரிகள்,

எனது உடலில் கீறிய கோடுகளை விடவும்,

அவரது இதயத்தில் கீறிய கோடுகள்,

அவருக்கு மிகவும் வலித்திருக்கும்! :o ,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அப்பாவின் நினைவு இத்தனை ஆழமாய் உங்களில் வேரூன்றி விட்டதை என்னால் உணர
முடிந்தாலும் அந்த வேதனையை உணர முடியவில்லை ஏனெனில் இதுவரை நான் எதையும்
இழக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசிய இலையொன்றின்

அந்திம காலத்து உதிரும்

தவிப்பில் அப்பாவை கண்ட

இறுதிப் பொழுதுகளில் தான்

வாழ்வின் நிதர்சனம்

எனக்குள் புகுந்து கொண்டது...

பெரும் மரமாய்

சூறைக் காற்றாய்

அலை எழும் கடலாய்

நான் கண்ட அப்பாவின்

உடல் தீயில் உருகிய

தருணங்களி தான்

வாழ்வின் வனப்பும் புரிபட்டது..

சாம்பலின் ஊடாக தேடி தேடி

'இது விலா எழும்பு

'இது மூட்டெழும்பு' என்று

அவரது

எலும்புகளை பொறுக்கிய

அந்த வினாடிகளில்தான்

வாழ்க்கையின் பரிமாணமும்

பிடிபட்டது..

 

சோகம் சொல்லி மாளாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//இப்பவெல்லாம் அடிக்கடி
அவர் நினைவுகள் எழுகின்றன
இறந்த நாட்களில் உயிரற்றுக்
கிடந்த அவர் பற்றிய நினைவுகள்
இன்று உதிரம் பாச்சிய
காற்றாக மீண்டும் மீண்டும்
எனக்குள் எழுகின்றன//

 

இந்த வலி என்னவென்று மிகச் சிறுவயதிலேயே அறிந்தவன்.

Link to comment
Share on other sites

உங்கள் வலி எனக்கு புரிகின்றது, நானும் என் அப்பாவை நினைக்காத நாளில்லை. முதல் நாள் தொலைபேசியில் கதைத்துவிட்டு மறுநாள் மதியம கதைக்கவென்று காத்திருக்க அப்பாவை தேசத் துரோகிகள் சுட்டுவிட்டார்களாமென செய்தி. மகனாக இருந்து கடைசி காரியங்கள் கூட செய்ய முடியாத கையாறுநிலையில் அவதிப்பட்டேன். இன்னும் அந்த மன அழுத்தத்திலிருந்து மீளவில்லை

Link to comment
Share on other sites

அப்பாவின் பிரிவு துயரை கவிதை மூலம் பகிர்ந்து கொண்ட நிழலிக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பரையும் நினைக்க வைத்து விட்டீர்கள்.கவிதைக்கு பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

பின்னூட்டங்கள் இட்ட உறவுகளுக்கும்,விருப்புகளை தெரிவித்த உறவுகளுக்கும் என் நன்றி.

 

 

உண்மையில் ஒரு தந்தையின் இழப்பு என்பது எதனாலும் ஈடு செய்ய முடியாத ஒன்று.

அப்பாவின் மரணத்துக்குப் போகும் பாக்கியம் கூட எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

அவர் இல்லாத காலங்களை எல்லாம் நினைத்தால் தந்தை என்ற பாத்திரம் வகிக்கும் பங்கு புரியும்.

இன்று எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நிற்கிறேன்.

எப்பவும் நினைப்பதுண்டு அப்பா இருந்தால் எப்படி இருந்திருப்பேன் என்று.

 

அம்மாவை விட எனக்கு எப்பவும் அப்பாவைத் தான் பிடிக்கும்.

என்னால் இன்னும் நம்ப முடியவில்லை அவரின் இழப்பை. :(

 

அப்பாவின் நினைவுகள் மெல்ல மெல்ல உணர்வுகளாக பரிமாணம் அடைந்து நினைவுகளை உணர்ச்சிகளாக உணரும் சந்தர்ப்பங்கள்  மகன்களுக்கு ஏற்படும். அது ஒரு அற்புத பரிமாண வளர்ச்சி. உங்களுக்கும் அது வாய்க்கும் ஜீவா. அப்போது இன்னும் இன்னும் அதிகமாக உங்கள் அப்பாவை உங்களுக்குள்ளேயே உணர்வீர்கள்.

 

அம்மாக்களின் அன்பு கரு உருவான கணத்தில் இருந்து பிணைந்து இருப்பது. அப்பாக்களின் அன்பு ஆத்மார்த்தமாக கலந்து இருப்பது. இருக்கும் காலத்தில் பரிபூரண அன்பை அம்மாக்களுக்கு காட்ட கிடைக்கும் சந்தர்ப்பம் போல அப்பாக்கள் மீது காட்ட பெரியளவில் சந்தர்ப்பங்கள் வருவது இல்லை என்று நினைக்கின்றேன்.

 

 

பிரிவின் பின்னரே அதன் வலி தெரியும். பெற்றோர் எமக்காக பட்டு துன்பங்கள் எமக்காக இழந்தவற்றை எங்கள் பிள்ளைகளுக்காக நாங்கள் இழக்கிற போதே அதன் பெறுமதி புரியும்.


'பெற்ற மனம் பித்து என்பார் பிள்ளைமனம் கல்லு என்பார்   என்ற ஈழத்து மெல்லிசைப் பாட்டில் இப்படி ஒரு வரி வரும்:- அம்மா அப்பா ஆனபின்னே அனுபவம் விளங்கும் சும்மா சொன்னால் புரிவதில்லை இந்த தத்துவம்' இவ்வரி எல்லாப் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

அப்பாவின் பிரிவில் அந்த வாழ்வின் பிடிமானத்தை கவிதையாக்கி எனது அப்பாவையும் ஞாபகம் தந்து நிழலிக்கு நன்றிகள்.
 

 

எப்போதுமே பெண் பிள்ளைகளுக்கு பிடித்தமான உறவாக அப்பாக்கள் தான் முதலில் இருப்பர். நான் அப்பாவை உணரும் விதமும் என் அக்கா அப்பாவை உணரும் விதமும் வேறு வேறாக இருப்பதை பல தடவைகளில் கண்டிருக்கின்றேன்.  உயிருடன் இருக்கும் போது பருவம் எய்திய பின் தள்ளி நின்று மகளில் அன்பு செலுத்திய உறவாக இருக்கும் அப்பாக்கள் இறந்த பின் குழந்தைக் காலத்தில் நெருக்கமாக இருந்தது போன்றே மீண்டும் நெருங்கி விடுவர்.

 

உண்மைதான், நாங்கல் பிள்ளைகளாக இருக்கும் காலத்தை விட பொறுப்பான பெற்றோரான பின் தான் அவர்களை கிட்டத்தில் வைத்து உணர முடிகின்றது.

 

 

நிழலி, நானும் உங்களைப்போலவே, இளவயதில் அப்பாவை இழந்தவன் என்ற முறையில், உங்கள் கவிதையை, அந்த உணர்வுகளை,யதார்த்தமாகப் புரிந்து கொள்கிறேன்!

 

காலம் வலியை ஆற்றுகின்றது என்பது உண்மையே எனினும், எனது வாழ்வின் முக்கியமான ஒவ்வொரு கணங்களிலும் அவரது, நினைவு வந்து போகின்றது.!

 

எனது ஆதங்கம் எல்லாம் ஒன்றே ஒன்று தான்!

 

பழமரங்களுக்கு விதைகளை ஊன்றிய ஒருவன், அவற்றைச் செவ்வனே பராமரித்து வளர்த்த ஒருவன், அந்தப் பழமரங்கள் வளர்ந்து, பூக்களும் காய்க்களுமாகப் பூத்துக் குலுங்குவதைப் பார்க்க முடியாமல் போய் விட்டதே, என்ற ஆதங்கமே அது!

 

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும்,

தெய்வத்துள் வைக்கப்படும்'

 

என்ற வள்ளுவனின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, வாழ்வை, அவர்கள் வாழ்ந்த வழியில் நகர்த்துவதே, நாங்கள் அவர்களுக்குச் செய்யும் கைமாறாகும்!

 

 

பூவரசம் தடியொன்றை முறித்து,

பாவம் பாராமல் அடித்த வரிகள்,

எனது உடலில் கீறிய கோடுகளை விடவும்,

அவரது இதயத்தில் கீறிய கோடுகள்,

அவருக்கு மிகவும் வலித்திருக்கும்! :o ,

 

 

வலிமையான கருத்துகள் புங்கை. நன்றி

 

ஒரு அப்பாவின் நினைவு இத்தனை ஆழமாய் உங்களில் வேரூன்றி விட்டதை என்னால் உணர
முடிந்தாலும் அந்த வேதனையை உணர முடியவில்லை ஏனெனில் இதுவரை நான் எதையும்
இழக்கவில்லை.

 

நன்றி மெசோ அக்கா.

 

இழப்புகள் இல்லா வாழ்க்கை தொடர என் வாழ்த்துகள்.

 

 

சோகம் சொல்லி மாளாது.

 

ம்ம்ம்...

 

அந்த வரிகளை type செய்யும் போது கொஞ்சம் நடுக்கம் வருமளவுக்கு அந்த அனுபவம் உணர்வுகளாக மீண்டும் தாக்கியது எனக்கு.

 

 

//இப்பவெல்லாம் அடிக்கடி
அவர் நினைவுகள் எழுகின்றன
இறந்த நாட்களில் உயிரற்றுக்
கிடந்த அவர் பற்றிய நினைவுகள்
இன்று உதிரம் பாச்சிய
காற்றாக மீண்டும் மீண்டும்
எனக்குள் எழுகின்றன//

 

இந்த வலி என்னவென்று மிகச் சிறுவயதிலேயே அறிந்தவன்.

 

சிறிய வயதில் அப்பாவை இழக்கும் துயரம் கொடியது யாழ்வாலி. நான் அப்பாவை இழந்தது என் 30 இல். நீங்கள் இழந்து இருப்பது சிறு வயதில். கொடிய துயரம்.

 

உங்கள் வலி எனக்கு புரிகின்றது, நானும் என் அப்பாவை நினைக்காத நாளில்லை. முதல் நாள் தொலைபேசியில் கதைத்துவிட்டு மறுநாள் மதியம கதைக்கவென்று காத்திருக்க அப்பாவை தேசத் துரோகிகள் சுட்டுவிட்டார்களாமென செய்தி. மகனாக இருந்து கடைசி காரியங்கள் கூட செய்ய முடியாத கையாறுநிலையில் அவதிப்பட்டேன். இன்னும் அந்த மன அழுத்தத்திலிருந்து மீளவில்லை

 

ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொரு கவலைகள், இழப்புகள், வலிகள்..... காலம் எல்லாவற்றையும் ஆற்றிக் கொண்டு போகும் வந்தி.

 

 

அப்பாவின் பிரிவு துயரை கவிதை மூலம் பகிர்ந்து கொண்ட நிழலிக்கு நன்றி. 

 

நன்றி நண்பா.

 

எனது அப்பரையும் நினைக்க வைத்து விட்டீர்கள்.கவிதைக்கு பாராட்டுக்கள். :)

 

நன்றி சுவைப்பிரியன்.

Link to comment
Share on other sites

மனதை தொட்டது நிழலி.

சிறுவயதில் அப்பாவின் சைக்கிளில் தான் பாடசாலை செல்வேன் .கரியரில் இருந்து போகும் கதைகள் சொல்லிக்கொண்டே வருவார் .எட்டு மூலை பட்டம் கட்டித்தந்து தோட்டவெளிக்குள் போய் ஏற்றியது இன்னும் நினைவில் நிழலாடுகின்றது .அப்பாவின் துவாயில் முகம் துடைப்பதிலும் ஒரு சந்தோசம் .

இன்றும் பழைய கதைகளை திகதி வாரியாக சொல்லுவார் .ஆனால் ஒரே இழுவை .

நன்றி மீண்டும் பழையவற்றை மீட்க வைத்ததற்கு .

Link to comment
Share on other sites

நானும் அப்பா நினைவுகளில் ஏதும் எழுதலாம் என்று பார்க்கின்றேன். அப்பாவின் நினைவுகளிலான உணர்ச்சிகளின் வெள்ளத்தில் வார்த்தைகள் மூழ்கிப்போய்விட்டன. துயரமான விடயம் : எனது அப்பா உருவமாய் என்னுடன் இல்லை. மகிழ்ச்சியான விடயம் : நானும் நிச்சயம் அப்பா சென்ற இடத்தை - அது சூனியமாயினும் சரி, அல்லது வேறு ஏதாயினும் சரி, அங்கு சென்றடைவேன். எனவே அப்பாவிற்கும், எனக்குமான இந்த இடைவெளி தற்காலிகமானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அப்பா நினைவுகளில் ஏதும் எழுதலாம் என்று பார்க்கின்றேன். அப்பாவின் நினைவுகளிலான உணர்ச்சிகளின் வெள்ளத்தில் வார்த்தைகள் மூழ்கிப்போய்விட்டன. துயரமான விடயம் : எனது அப்பா உருவமாய் என்னுடன் இல்லை. மகிழ்ச்சியான விடயம் : நானும் நிச்சயம் அப்பா சென்ற இடத்தை - அது சூனியமாயினும் சரி, அல்லது வேறு ஏதாயினும் சரி, அங்கு சென்றடைவேன். எனவே அப்பாவிற்கும், எனக்குமான இந்த இடைவெளி தற்காலிகமானதே.

கோடியில் ஒரு வார்த்தை .மாப்பு உங்கள் சிந்தனை திறனுக்கு இது ஒன்றே போதும்.

Link to comment
Share on other sites

மனதை தொட்டது நிழலி.

சிறுவயதில் அப்பாவின் சைக்கிளில் தான் பாடசாலை செல்வேன் .கரியரில் இருந்து போகும் கதைகள் சொல்லிக்கொண்டே வருவார் .எட்டு மூலை பட்டம் கட்டித்தந்து தோட்டவெளிக்குள் போய் ஏற்றியது இன்னும் நினைவில் நிழலாடுகின்றது .அப்பாவின் துவாயில் முகம் துடைப்பதிலும் ஒரு சந்தோசம் .

இன்றும் பழைய கதைகளை திகதி வாரியாக சொல்லுவார் .ஆனால் ஒரே இழுவை .

நன்றி மீண்டும் பழையவற்றை மீட்க வைத்ததற்கு .

 

 

நன்றி அர்ஜுன்!

 

 

நானும் அப்பா நினைவுகளில் ஏதும் எழுதலாம் என்று பார்க்கின்றேன். அப்பாவின் நினைவுகளிலான உணர்ச்சிகளின் வெள்ளத்தில் வார்த்தைகள் மூழ்கிப்போய்விட்டன. துயரமான விடயம் : எனது அப்பா உருவமாய் என்னுடன் இல்லை. மகிழ்ச்சியான விடயம் : நானும் நிச்சயம் அப்பா சென்ற இடத்தை - அது சூனியமாயினும் சரி, அல்லது வேறு ஏதாயினும் சரி, அங்கு சென்றடைவேன். எனவே அப்பாவிற்கும், எனக்குமான இந்த இடைவெளி தற்காலிகமானதே.

 

விடை கொடுத்தல்தான் ஒவ்வொருவரின் இழப்பிலும் நிகழ்கின்றது. அனுப்பி வைத்து விட்டு போகக் காத்திருப்பவர்கள் நாம். ஒவ்வொரு இழப்பும் எம் வாழ்வை இன்னும் பிடிப்புக்குள்ளாக்கின்றது. வாழ்ந்து பார்க்கும் அவாவையும் அதிகரிக்கின்றது. சோகங்கள் என்பது இன்பத்தைப் போன்று கூட நிரந்தரமில்லை.

Link to comment
Share on other sites

நானும் அப்பா நினைவுகளில் ஏதும் எழுதலாம் என்று பார்க்கின்றேன். அப்பாவின் நினைவுகளிலான உணர்ச்சிகளின் வெள்ளத்தில் வார்த்தைகள் மூழ்கிப்போய்விட்டன. துயரமான விடயம் : எனது அப்பா உருவமாய் என்னுடன் இல்லை. மகிழ்ச்சியான விடயம் : நானும் நிச்சயம் அப்பா சென்ற இடத்தை - அது சூனியமாயினும் சரி, அல்லது வேறு ஏதாயினும் சரி, அங்கு சென்றடைவேன். எனவே அப்பாவிற்கும், எனக்குமான இந்த இடைவெளி தற்காலிகமானதே.

 

கரும்பு,  மனம் சலமற்று இருக்கும் போது எழுத தொடங்குங்கள்.

Link to comment
Share on other sites

என் பிள்ளைகளை காணும் போதும்
அவர்களை நெஞ்சாரத் தழுவும் போதும்
தவறுகளைத் திருத்தும் போதும்
கண்டிப்பின் உச்சியில் நிற்கும் போதும்
அமைதியாக அவர்கள் உறங்கும் போதும்
மீண்டும் மீண்டும் என் அப்பாவின்
நினைவுகள் எழுகின்றன//////////////////

 

எனக்கு எனது அப்பாவை ஓடிப்போய் பார்க்கணும் போல இருக்கு.............. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.