Jump to content

சிங்களவர்களும் தமிழர்களும்


Recommended Posts

 
ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்குப்பின்னால் தான் இலங்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகத் தொடங்கியது.
 
இந்தியாவில் இருந்த பல்லவ பேரரசுவின் எழுச்சியினால் வணிக ரீதியான மாற்றங்கள் மொத்தமும் இலங்கைக்கு சென்றடைந்தது. அப்போது இருந்த கடல் வணிகம் அதனை சாத்தியப்படுத்தியது. தென்னிந்திய வணிகர்கள் மூலம் இலங்கைக்கு தென்கிழக்காசியா, மேற்கிழக்காசியாவுடனும் நெருங்கிய வணிக உறவுகள் ஏற்பட்டன.
 
இந்த காலகட்டத்தில் உருவான கருத்துப் பறிமாற்றங்கள் தான் உள்ளே உள்ள சமூக அமைப்பையும் புரட்டிப்போட்டது. நீர்பாசன வளர்ச்சிகளும், விவசாய முன்னேற்றங்களும் தொடங்கி புதிய முன்னேற்றத்தை உருவாக்கியது.
 
ஒவ்வொரு காலகட்டத்திலும் வணிகம் என்ற நோக்கத்தினால் உள்ளே வந்து சேர்ந்தவர்களால் தமிழ் இனக்குழு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி வளரவும் தொடங்கியது.
 
ஒவ்வொரு காலகட்டத்திலும் இலங்கையில் ஆண்டு கொண்டுருந்த இனக்குழுவின் ஆளுமையில் இருந்தவர்கள் (சிங்கள தமிழ்) பாரபட்சமில்லாமல் தங்களை, தங்கள் ஆளுமையை, தன் சமய கொள்கைகளை, சொத்துக்களை பாதுகாக்க தென்னிந்தியாவில் இருந்து பாதுகாப்பாளர்கள், பிராமணர்கள், ஒவிய சிற்பக் கலைஞர்களளை கொண்டு வந்து சேர்த்துக் கொண்டே இருக்க தமிழ் இனக்குழுவின் எண்ணிக்கை மிக அதிகமாகிக்கொண்டே போனது.
 
ஒரு கட்டத்தில் கட்டுபடுத்த முடியாத சூழ்நிலையும் உருவாக தமிழ் இனக்குழு எங்கும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.
 
மற்றொரு சிறப்பம்சம் பௌத்த ஆளுமையில் இருந்தவர்கள் உருவாக்கி வைத்திருந்த உயர் பதவிகளில் கூட தமிழ் இனக்குழு இடம் பெற்று இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
இனக்குழுவாக இருந்து கொண்டும், அவவ்வபோது தங்களுக்கு தேவையான உதவிகளை, படைபலங்களை தென்னிந்தியாவில் பெற்றுக்கொண்டு தங்கள் ஆளுமையை நிலைநாட்டிக்கொண்டுருந்தவர்களின் அரசியல் உள் விவகாரங்களில் ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் தொண்டை மண்டலத்தில் ஆட்சிபுரிந்த பல்லவ பேரசு உருவான போது மகேந்திர வர்மன் முதல், முதலாம் நரசிம்மவர்மன் தொடர்ந்து என இலங்கையின் உள் விவகாரங்களின் கலந்து கொள்ள சூழ்நிலை உருவாக, முதன் முதலாக உதவி புரியும் நோக்கத்தோடு (680/720) படையெடுத்து இறுதியில் வந்த மானவர்மன் அநுராதபுரத்தின் மன்னராக முடிசூட்டப்பட என்று தொடக்கம் பெற்ற இந்த சரித்திர பக்கங்கள் மாறி மாறி அலைக்கழித்து உலகப் பேரரசுக்கு வழிகாட்டியாக இருந்த இராஜராஜ சோழன் வரைக்கும் தொட்டு தொடர்ந்து கொண்டு பயணம் செய்கிறது.
 
சங்க காலம் என்று வழங்கப்படும் வரலாற்றுப்பக்கங்களில் மூன்று நூற்றாண்டுகளைக் கொண்ட சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் எழுச்சியும், வீழ்ச்சியும் என்று எல்லாவிதங்களிலும் இலங்கையை பாதிக்க, பரவலாக்கம் இல்லாமல் அங்கங்கே ஆதிக்கம் செலுத்திக் கொண்டுருந்த தனித்தனி இனக்குழுக்களின் ஆளுமையிலும் மாற்றம் வந்தது.
 
ஆறாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையே வணிகர்கள் மூலம் உருவான கலாச்சாரங்கள்,உருவாக்கிய கோவில்கள், பாதுகாப்பாளர்கள், பிராமணர்கள், பெளத்த பிக்குகள் என்று மொத்தமாக ராஜராஜன் நுழையும் வரைக்கும் இனக்குழுக்கள் என்பதையும் தாண்டி வேறொரு புதிய பரிணாமத்திற்கு வந்து இருந்தனர். இந்த காலகட்டத்தில் நடந்த முக்கிய மாறுதல்கள் அத்தனையும் பின்னாளில் பத்தாம் நூற்றாண்டு காலத்தில் தமிழ் இனக்குழுவும் சிங்கள இனக்குழு என்றழைக்கபடும் ஹௌ இனக்குழுவும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் நிலைமை எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதை உணர்த்துவதாக இருந்தது.
 
ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரைக்கும் தமிழ்நாட்டில் ஆளுமையில் மேலோங்கியிருந்த பல்லவரையும், பாண்டியப் பேரரசையும் முடிவுக்கு கொண்டு வந்தது திருப்புறம்பியத்துப் போர்.
 
இது தமிழ்நாட்டில் திருப்புமுனையை உருவாக்கிய சோழப் பேரரசை உருவாக்க காரமணமாக இருந்தது. ஓன்பதாம் நூற்றாண்டில் உறையூர் பிரசேதத்தில் இருந்து தொடங்கிய விஜயாலாய சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றி ஒரு புதிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
 
இவரது மகன் ஆதித்த சோழன், அதற்குப் பிறகு (907) முதலாம் பராந்தகச் சோழன் ஆட்சியில் அரியணையில் அமர்ந்த போது உருவான எதிர்ப்பு வடக்கில் ராஷ்டிரர், சேரர் இவர்களுடன் இணைந்த சிங்கள மன்னர்கள். சூழ்ந்திருந்த சூழ்ச்சியையும், வலிமையில்லாத சோழப்பேரரசின் மொத்த புகழையும் மீட்டு எடுத்த ராஜகேசரி அருள்மொழிவர்மன் என்றழைக்கபடும் ராஜராஜசோழன் காலத்தில் உலகப்பேரரசு என்கிற அளவிற்கு தமிழ்நாட்டில் தொடங்கிய அவரது ஆளுமை மாலத்தீவு, லட்சத்தீவு, இலங்கை, என்று தொடங்கியது
 
அவரது மகன் ராஜேந்திர சோழன் (1012/1044) கிழக்கு கடற்கரையோரமாக, கங்கை கரை வரை வென்று வெற்றியுடன் கங்கை கொண்ட சோழன் என்ற வரலாற்றுப் புகழை பெற்றார். அதுவே அன்றைய காலகட்டத்தில் சீனா வரைக்கும் வணிக நோக்கங்களை சாத்தியப்படுத்தியது.
 
இவர்கள் காலத்தில் இலங்கையில் வணிகம் முதல் சமயம் வரைக்கும் மொத்தமாக மாற்றம் பெற்றது. குறிப்பாக நீர்ப்பாசன நோக்கங்கள் அத்தனையும் இந்த காலகட்டத்தில் புதிய பாதையை அடைந்து புத்தொளி பெறத்தொடங்கியது.
 
50 ஆண்டுகளாக தங்களின் ஆளுமைக்குள் வைத்திருந்த இவர்களின் இலங்கை ஆட்சி என்பது பின்னாளில் வந்த சிங்கள ஆதிக்கத்தால் கூட அன்று இவர்களால் உருவாக்கப்பட்ட நிகழ்வுகளை பின்னாளில் முழுமையாக மாற்றமுடியவில்லை என்பதும் சரித்திரப்பக்கங்கள் தரும் ஆச்சரியமான தகவல்கள்.
 
ஆனால் நீண்ட கால நோக்கம் எதுவும் இல்லாத சோழ அரசின் நோக்கங்கள் இலங்கையின் முழுமையையும் தங்களுடைய ஆதிக்கத்தில் கொண்டு வராத காரணத்தால் அங்கங்கே சிங்கள இனக்குழுவின் ஆளுமை இறுதிவரைக்கும் இருந்து இதுவே சோழப்பேரரசு வீழ்ச்சி அடையும் வரைக்கும் பின்னாளில் பல விபரீதங்களையும் உருவாக்கியது.
 
சோழப் பேரரசின் ஒரு அங்கம் தான் இலங்கை என்பதாக திருப்திபட்டுக் கொண்டார்கள்.
 
இவர்கள் காலத்தில் தங்கள் ஆளுமையில் இருந்த இலங்கையை சோழ நிர்வாக மண்டலமாக வைத்துக்கொண்டு ஆட்சிபுரிந்தனர். இதற்கென்று சோழ இளவரசர்களை அங்கங்கே அனுப்பி வைத்தனர். இவ்ர்கள் உருவாக்கிய சிவன் கோவில் (மாதோட்டத்து திருக்கேதீஸ்வரம்) திருகோணமலையின் கோணேஸ்வரமும் பின்னாளில் வந்த 17 ஆம் நூற்றாண்டியல் உள்ளே வந்த போர்த்துகீசியர்களால் உடைக்கப்பட்டு அவர்கள் நிர்வாக பரிபாலனத்திற்காக உருவாக்கப்பட்ட கோட்டைக்கு உதவியது.
 
மேற்காசியாவிலிருந்து வணிக ரீதியாக உள்ளே வந்த (பாரசீகம், ஈரானியம், அரேபியா) இஸ்லாமியர்களின் வருகையும், அவர்களின் கடற்கரைக்கு அருகே உள்ளே குடியிருப்புகளை உருவாக்கினார்கள்.
 
இதுவே இறுதிவரையிலும் மொத்த முஸ்லிம் மக்களும் கடற்கரை ஓரமாகவே தங்கள் வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து வந்தனர். இவர்களைப் பற்றிய மொத்த புரிதல்களும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான் சரித்திரம் பதிவு செய்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இடப்பெயர்ச்சியாய் பல்வேறு நோக்கத்திற்காக உள்ளே சென்றவர்கள் எந்த இனக்குழுவுடன் கலந்து சேர்கிறார்களோ காலப்போக்கில் அவர்களே பின்னாளில் சிங்கள மொழி பேசிய சிங்களர்களாக மாற்றம் பெற்று விடுகின்றனர்.
 
அதுவே தான் தமிழ் இனக்குழுவுடன் வந்து சேர்பவர்கள் தமிழ் மக்களாக இறுதி வரைக்கும் வாழ்கின்றனர்.
 
இந்த சூழ்நிலை ஐரோப்பியர்கள் உள்ளே நுழையும் 1505 வரைக்கும் இப்படித்தான் இருக்கிறது.
 
15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் உள்ளே நுழைந்த போது, அதுவே அவர்கள் ஆளுமைக்குள் இலங்கையை கொண்டு வந்த போது கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற கட்டாயப்படுத்தியதும், மாறாதவர்கள் துன்புறுத்தி சாகடிப்பதும் என் இலங்கையின் வரலாற்றுப் பக்கங்களில் கிறிஸ்துவம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது
 
அதுவே பின்னாளில் டச்சு அதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் என்று உள்ளே வந்தவர்கள் வணிக நோக்கத்தையும் தாண்டி கலாச்சார சீரழிவு தொடங்கி பல கண்ணீர் வரவழைக்கும் வாழ்க்கை முறையையும் உருவாக்கி இன்றைய பெரும்பாலான இலங்கை ஆட்சியாளர்கள் அத்தனை பேர்களும் கிறிஸ்துவத்தில் தொடங்கி, அதன் உட்பிரிவில் மாறி, இறுதியில் சிங்கள காப்பாளராக அங்கிட்டும் இங்கிட்டும் இல்லாத ஒரு புதிய பிறப்பாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்ட பாக்யசாலிகளை பெற்றது தான் இலங்கை அரசாங்கம்.
 
சோழர்கள் மொத்தமாக 1070 ஆம் ஆண்டு வரைக்கும் வட இலங்கையை தங்களுடைய ஆளுமையில் முழுமையாக வைத்திருந்தனர்.
 
இறுதி ஆண்டுகளில் சரிந்து கொண்டுருந்த சோழப்பேரரசை, வீழ்ச்சிகளில் இருந்தவர்களை வெற்றி கொண்டு விஜயபாகு என்ற சிங்கள மன்னர் ஆட்சிக்கு வந்த (1053) பொலன்னறுவையில் நிறுவினார்.
 
மத மாச்சரியம் இல்லாத மக்கள் தலைவனாக இவரது ஆட்சி சிறப்புடன் இருப்பது மற்றொரு மகத்தான் ஆச்சரியம்.
 
இன்றைக்கு பிரபல்யமாக இருக்கும் மத நல்லிணக்கத்தை அன்றே சாத்யப்படுத்தி செயலாக்கத்தில் காட்டியவர். இவர் காலத்தில் சிங்கள தமிழர் இணைப்பு சாத்யமானது எந்த அளவிற்கு என்றால் வலுவிழந்த சோழர்களுடன் சேர விரும்பாத இவன் தனது தங்கை மித்திராவை பாண்டிய இளவரசனுக்கு மனம் முடித்தான்.
 
இவர்களுக்குப் பிறந்த முதலாம் பராக்கிரமபாகு விஜயபாகு காலத்தில் தான் சிங்கள தமிழ் இனக்கலப்பும் உருவாகத் தொடங்கியது.. இந்த இனக்கலப்பு என்பது சமீப கால இலங்கை ஆட்சியாளர்கள் வரைக்கும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது, ஆட்சியில் இருந்த பண்டாரா நாயகா, ஜெயவர்த்னே வரைக்கும் தொட்டு தொடர்ந்து தமிழ் மரபில் வந்தவர்கள் தான் என்பதை ஆதாரங்கள் மூலமாக அற்புதமாக நமக்கு புரியவைக்கின்றது.
 
தமிழ் மற்றும் சிங்கள என்று வெவ்வேறு இனக்குழுக்களாக இருந்தாலும், மொழி, கலாச்சாரம், வழிபாட்டு முறைகள் என்று எல்லாவிதங்களிலும் வேறுபட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்தாலும் வடக்கு தெற்கு என்று மொத்த இலங்கையையும் இயற்கையாக உருவாகியிருந்த மிகப் பெரிய காடு இவர்களைப் பிரித்து வைத்திருந்தது முதல் ஆச்சரியம்.
 
14 ஆம் நூற்றாண்டில் வர்த்தகம் வளர்ச்சியடைந்த போது லவங்கம் என்ற பட்டையை உரிக்க காடுகளில் கூடுதலாக தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். சிங்கள மன்னர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த சாலியர் (நெசவுத் தொழில்) என்ற சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்தனர்.
 
இவர்கள் சிங்கள இனக்குழுவில் ஐக்கியமாக, இவர்களே காலப்போக்கில் தனியாக தனி சமூகப் பிரிவாக சேர்த்துக் கொள்ளப்பட்டு இறுதியில் சிங்கள இனக்குழுவாக மாறினர். இறுதிகாலம் வரையிலும் இவர்கள் சிங்கள சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகப்பிரிவாகவே உருவாகியிருந்தனர்.
 
வடக்கு ஆதிக்கம் என்பது தமிழர்களிடத்திலும், தெற்குப் பகுதி சிங்களர் என்றும் உருவாக்கியது. . ஆனால் இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் அந்தந்த இனக்குழுவும், ஆளுமையில் இருந்தவர்களும் மொத்தத்தில் அமைதியாகத் தான் வாழ்ந்தார்கள்.
 
ஐரோப்பியர்கள் உள்ளே நுழையும் வரைக்கும் இந்த இரண்டு இனக்குழுவிற்கிடையே உருவான பரஸ்பர போர்கள் என்பதெல்லாம் தங்களுடைய ஆளுமையை நிலைநாட்டக்கூடிய வகையில் தான் இருக்கின்றது.
 
இரண்டு இனக்குழுவாக இருந்தவர்கள் தவிர்த்து உள்ளே வந்த மலாய், (பின்னால் வரும் தந்தை செல்வா மலேசியாவில் ஈப்போவில் பிறந்து இலங்கையில் வந்து கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்திற்கு மாறி தமிழர்களின் தந்தையாக மாற்றம் பெற்றவர்) ஐரோப்பியர்கள் என்று தங்களுடைய குடும்பங்கள் தவிர்த்து இங்கேயும் மணம் புரிந்து புதிதான குழுக்களை உருவாக்கினர்.
 
பின்னால் வரும் தமிழ்த் தலைவர்கள் வந்து ஆண்டு கொண்டுருந்த ஐரோப்பியர்களை திருமணம் செய்து சிறப்பு சலுகைகள் பெறும் அளவிற்கு புதிய மேல்தட்டு கலாச்சார வாழ்க்கையையும் தொடங்கி வைத்தனர். இலங்கையின் தொடக்க கால தமிழ் தலைவர்கள் பெரும்பாலோனோர் ஐரோப்பிய பெண்மணிகளை மணந்து மேல்தட்டு வாழ்க்கையும் தமிழ் பெயர்களையும் கொண்டு வாழ்ந்தவர்கள்.
 
போர்த்துகீசியர்கள் எதிர்பாராத விதமாக இலங்கைக்கு எந்த நோக்கமும் இல்லாமல் உள்ளே வந்தனர். உள்ளே வந்தவர்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு, ஒற்றுமை இல்லாமல் இருந்தவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்து தங்கள் வணிக நோக்கத்தை தொடங்கி வைத்தனர்கள்.
 
அந்த வணிக நோக்கமே அடிப்படை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவிற்கு மொத்த தங்கள் ஆளுமையையும் உருவாக்கினர். மொத்த மக்களின் வாழ்க்கையை மாற்றவும் செய்தனர். இலங்கையில் இந்த காலகட்டங்களில் தான் கிறிஸ்துவம் அதிகமாக ஆழமாக ஊடுருவியது அதுவே இறுதி வரைக்கும் கவனமாக பாதுகாத்து உள்ளே இருப்பதும் சம கால இலங்கை வரலாற்றுப் பக்கங்கள் வரைக்கும் இருப்பதும் மொத்தத்திலும் ஆச்சரியமான ஒன்று.
 
தமிழராக பிறந்து, கலப்பினத்தில் உருவாகி, கிறிஸ்துவ பிரிவில் நுழைந்து,பௌத்த காப்பாளராக மாறியும் கலந்து கட்டிய சமத்துவபுரங்களாக ஒவ்வொரு சிங்கள தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மொத்தத்திலும் அதிகாரத்தை பிடிக்க எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வோம் என்பதாகத்தான் இருக்கிறது.
 
ஆனால் புத்தரின் கொள்கைப்படி வாழ்கிறோம் என்று சொன்ன அத்தனை சிங்கள தலைவர்களும் மறந்தும் கூட புத்தரின் கொள்கைகளை பின்பற்றவில்லை. ஆசையின் எல்லை எது என்பது உணர்ந்து வாழ்ந்து காட்டிய அவர்களின் வரலாறு எந்த வார்த்தைகளாலும் வர்ணிக்க முடியாது. புத்தரின் ஆசையைத் துற என்ற போதனை இன்று தென்னை மரக் கூட்டங்களுக்கிடையே காற்றில் அலைந்து கொண்டுருக்கிறது.
 
கிறிஸ்துவ சிங்களரும் மன்னிக்க தயாராய் இல்லை. இனவாதத்தை பௌத்த சிங்களரும் மறக்க விரும்பாத காரணத்தால் இன்று பாவமன்னிப்பு தரும் ஆலயத்தின் அத்தனை சுவர்களிலும் ரத்தக்கறை படிந்துள்ளது.
 
கொள்கையில்லாத இனவெறி தந்த இன்றைய ஆட்சியாளர்களின் வெற்றி என்பது இலங்கையில் வாழ்ந்து மடிந்த மொத்த அப்பாவி சிங்கள தமிழர்களின் சமாதியின் மேல் கட்டப்பட்டுள்ளது.
 
தொடர்ந்து பயணிப்போம்.
 
 

ஆரம்பம் முதல் பகுதி இரண்டாவது பகுதி மூன்றாவது பகுதி

 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.