Jump to content

கடந்து போகுமா கறுப்பு ஜூலை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்து போகுமா கறுப்பு ஜூலை?
கிஷோர்


Black-July-e1406180204600.jpg
படம் | Therepublicsquare

தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் மிகுந்த கணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று நேற்றல்ல, இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் அதி உச்சமே இறுதிக் கட்ட யுத்தத்தில் நடந்தேறிய சம்பவம் என பல்வேறு தரப்பாலும் கூறப்பட்டு வருகின்றது. ஆனாலும், இவ்வாறு காலத்திற்கு காலம் திட்டமிட்டு நிகழ்ந்தேறிய பல சம்பவங்களில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மறக்க நினைத்தாலும், மறையாமல் அடி மனதில் கறையாக படிந்த சம்பவம் தான் 1983 ஜூலை மாதம் நடந்தேறிய இனக்கலவரம். இவ் இனக்கலவரம் இலங்கையின் தலைநகரில் தமிழர்களின் இருப்பையே கேள்விக் குறியாக்கியது.

ஜூலைக் கலவரம் நடந்தேறி 31 வருடங்கள் உறுண்டோடினாலும் தமிழரின் மனத்தோடு ஆழமாக பதிந்துவிட்டது. வருடத்தில் மாதங்கள் பல கடந்தாலும் ஜூலை என்றதுமே தமிழரின் மனங்களில் 83 இன் கறைபடிந்த கறுப்பு ஜூலையே நினைவிற்கு வருகின்றது.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்படுகின்றார்கள். இதன் எதிரொலியாக தலைநகரில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பல சூறையாடப்பட்டு, கொழும்பு நகரின் அனைத்து தெருக்களிலும் இயங்கிய தமிழ் வர்த்தகர்களின் வியாபார நிலையங்கள், தமிழர்களின் வீடுகள்மற்றும் வாழ்விடங்கள், வாகனங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. வீதியில் சென்றோர், வீடுகளில் இருந்தோர், வயோதிபர், பெண்கள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் என பாகுபாடின்றி அனைவரும் தாக்கப்பட்டனர்.

நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இனக் கலவரத்தால், தமிழ் மக்கள் செய்வதறியாது அல்லோல கல்லோலப் பட்டார்கள். தமது உயிர்களை பாதுகாக்க எங்கு செல்வதென தெரியாமல் ஏக்கத்தோடு நின்றார்கள்.

ஜூலை 23இல் ஆரம்பித்த இனக்கலவரம் மாதத்தின் இறுதி வரை நீண்டு சென்றது. 83 கலவரத்தில் 400 முதல் 3,000 வரையானோர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும், பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழரின் வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன எனவும், கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன எனவும் ஜூலைக் கலவரம் சம்மந்தமான தரவுகள் குறிப்பிடுகின்றன.

தலைநகரில் இனக் கலவரங்கள் இடம்பெற்ற அதே சம காலப்பகுதியில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீதும் சிங்களக் கைதிகளால் கொடூரமான தாக்குதல்கள் இடம் பெற்றன. சிறைச்சாலையில் நிகழ்தேறிய கலவரச் சம்பவத்தில் 53 வரையான தமிழ் அரசியல் கைதிகள் மிலேச்சத்தனமாக அடித்துக் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு 1983 ஜூலையில் யாருமே எதிர்பார்த்திராத, முழுநாட்டையுமே கலங்க வைத்த சம்பவங்கள் நிகழ்தேறின. இது தமிழரின் வாழ்வில் ஆறாத வடுவாக நிலைத்து விட்டது.

1983 இனக்கலவரத்தில் தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமான உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள். பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினார்கள். இவ்வாறான இனக்கலவரத்தை இன்று நினைத்தாலும் இதயமே விறைத்து விடுகிறது.

83 ஜூலை இனக்கலவரம் பல நிகழ்வுகளை மாற்றிப் போட்டது. ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது. தமிழர்கள், பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மேல் – சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்து சந்தேகம் கொள்ள தலைப்பட்டனர். இந்த நாட்டிலே இனங்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியது. இக் கலவரத்திற்கு பின் பல்வேறு துன்பியல் சம்பவங்கள் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றதை அனைவரும் கண்கூடாக உணர்ந்துள்ளார்கள்.

1983 ஜூலைக் கலவரங்களை மீண்டும் நினைவுபடுத்தும் முகமாக நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களைக் கூறலாம். அன்று தமிழர்களுக்கு தலைநகரில் என்ன நடந்ததோ அதே போல் இன்று சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கும் நடக்கிறது. 1983களில் இலங்கையில் பொருளாதாரத்தில் தமிழர்களும் பிரதான பங்கு வகித்திருந்தார்கள். தலைநகரின் வர்த்தகத்தில் தமிழ் வர்த்தகர்கள் தான் முக்கிய பங்கு வகித்தார்கள். ஆனால், திட்டமிட்டு நிகழ்ந்தேறிய இனக்கலவரத்தால் தமிழ் வர்த்தகர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. அதே நிலை இன்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முளைத்துள்ளது எனலாம். இலங்கைத் தலைநகரில் தலை நிமிர்ந்து மிடுக்காக வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இதனை பொறுக்கமுடியாத சிங்கள இனவாதத்தின் கோரத்தாண்டவமே 1983 ஜூலைக் கலவரமாக உருவாகியிருந்தது. இன்று இலங்கையின் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் முஸ்லிம்களின் பங்கும் பிரதானமாக காணப்படுகிறது. அதனை அடக்குவதற்காக அண்மையில் அழுத்கம, பேருவளை போன்ற பிரதேசங்களில்பகிரங்கமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிடலாம். இந்தச் சம்பவங்கள் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை நாட்டு மக்கள் அனைவருக்கும் நினைவுபடுத்திச் சென்றுள்ளது. காலத்திற்கு காலம் பெரும்பான்மை இன ஆட்சியாளர்கள் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களை நிம்மதியாக வாழவிடாமல் திட்டமிட்டு தடுத்து வருகின்றனர். சிறுபான்மை இனத்தவர் தலையெடுக்கக் கூடாது என்ற எண்ணத்தை பெரும்பான்மை இனத்தவர் கொண்டு இருந்தால் நாட்டில் அவ்வப்போது கலவரங்களும் முறுகல் நிலையும் தவிர்க்க முடியாது.

1983களில் தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தமது சொந்தப் பணத்தில் வீடுகளையும், நிலங்களையும், சொத்துக்களையும் வாங்கி சுயமாக கௌரவமாக வாழ்ந்தார்கள். யார் நிலத்திலும் அவர்கள் அடாத்தாக குடியேறவில்லை. ஆனாலும், அவ்வாறு வாழ்ந்தவர்களையே அன்று தலைநகரில் இருந்து விரட்டினார்கள்.

இன்று வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் திட்டமிட்ட வகையிலே அபகரிக்கப்படுகிறது. அதேநேரம் தமிழர்கள் மட்டுமே பாரம்பரியமாக வாழ்ந்த பூமியில் சிங்கள மக்களை அடாத்தாக குடியேற்றி இனப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை இன்றைய அரசு மேற்கொண்டு வருகின்றது. வடக்கிலே நாவற்குழி,முல்லைத்தீவு, வவுனியா என பல்வேறு இடங்களில் இராணுவத்தின் பாதுகாப்போடு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு அவர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களும் வழங்கப்படுகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டது. ஆனால், அதேயிடத்தில் நீண்ட காலங்களாக வசிக்கின்ற தமிழ் மக்களுக்கு காணி உறுதிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் தமிழர்கள் பாரம் பரியமாக வாழ்ந்த நிலங்கள் இராணுவத் தேவைக்கு என்ற பெயரில் அபகரிக்கப்படுகின்றது. இதற்கு எதிராக அண்மைய நாட்களில் பல போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு வடக்கில் மிக வேகமாக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதும், தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் திட்டமிட்ட முறையில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதும் தமிழர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை உண்டாக்கியுள்ளது. இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் வடக்கில் மீண்டும் இனக் கலவரங்கள் உண்டாகி தமிழர்கள் தமது சொந்த நிலங்களில் இருந்தே விரட்டப்படுவார்களா? என்ற சந்தேகம் தமிழர்கள் மத்தியில் இப்போதே தோன்ற தொடங்கி விட்டது.

ஏனென்றால், கடந்த வருட இறுதிப் பகுதியில் நாவற்குழியில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு காணிகளை பங்கீடு செய்ய அளவீடுகளை மேற்கொண்டிருந்த சமயம், அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை சிங்கள மக்கள் இனத்துவேசத்தோடு விரட்டியடித்த சம்பவம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். இவ்வாறான நிலைமையை நோக்குகின்றபோது நாட்டில் இன்றும் கறுப்பு ஜூலையை நினைவுபடுத்துகின்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழுமா? என்ற வினா தமிழர்கள் மத்தியில் இன்று காணப்படுகின்றது.

இலங்கையில் இனங்கள் அனைத்தும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருக்குமானால் மக்கள் அனைவரையும் அவர்களின் சொந்த நிலங்களில் சுதந்திரமாக வாழ விடவேண்டும். இல்லையேல் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மறக்க நினைக்கின்ற கறை படிந்த கறுப்பு ஜூலை மீண்டும் மீண்டும் நினைவுகளில் தவழ்ந்து கொண்டே இருக்கும்.

 

http://maatram.org/?p=1539
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.