Jump to content

பங்குச் சந்தையின் வகைகள்


Recommended Posts

பங்குச் சந்தையின் வகைகள்

பங்குச் சந்தையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன

  • முதன்மைப் பங்குச் சந்தை (Primary Market)
  • இரண்டாம் நிலை பங்குச் சந்தை (Secondary Market)

முதன்மைப் பங்குச் சந்தை

ஒரு நிறுவனம் நேரடியாகப் பங்குகளை வெளியிடுவதற்கு முதன்மைப் பங்குச் சந்தை என்று பெயர். பொதுப்பங்கு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் முதலியவை, நிதி திரட்டும்பொருட்டு, பங்குகளை வெளியிடுகின்றன. அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்புபவர்கள், அதற்கான படிவங்களை நிரப்பி, முதலீடு செய்ய விரும்பும் தொகைக்கான காசோலை (Cheque) அல்லது வரைவோலையை (Demand Draft) இணைத்து, முகவர்கள் மூலமாக விண்ணப்பிப்பார்கள். அவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு, பங்குகள் ஒதுக்கீடு செய்யப் படலாம் அல்லது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படலாம். ஒரு நிறுவனம் முதன்முதலில் பங்குகளை விற்பனை செய்வதை 'முதல் பங்கு வெளியீடு' (Initial Public Offer- IPO) என அழைப்பர். அதற்குப் பின்னர் வெளியிடும் பங்குகளை 'தொடர் பங்கு வெளியீடு' (Follow on Public Offer- FPO) என்பர்.

பங்குகளின் அடிப்படை விலை 'முக மதிப்பு ' (Face value) என அழைக்கப்படும். அதாவது, ஒரு பங்கின் விலை ரூபாய் 10 என நிர்ணயிக்கப்பட்டால், அப்பங்கின் முக மதிப்பு ரூ.10.00 ஆகும். மீண்டும் பங்குகளை விற்கும் பொழுது, அப்பங்குகளுக்கான தேவை அல்லது கிராக்கி (Demand) எவ்வாறு உள்ளதோ அதற்கேற்றவாறு முக மதிப்பைவிட அதிகமாகவோ (Premium),குறைவாகவோ (Discount) அதே அளவிலோ (At Par) நிர்ணயிக்கப் படலாம்.

இரண்டாம் நிலை பங்குச் சந்தை

முதன்மைச் சந்தையில் பங்குகளை வாங்கியவர்கள், தம் பங்குகளை விற்கவோ, மற்றவர்கள் வாங்கவோ அணுகுவது இரண்டாம் நிலைப் பங்குச் சந்தை அல்லது வெளிச்சந்தை ஆகும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை(Listed shares) மட்டுமே வாங்கவோ விற்கவோ இயலும். அதாவது, பங்குகளை வெளியிட்ட நிறுவனங்கள், விதிமுறைப்படி பங்குச் சந்தையில் தங்கள் பங்குகளைப் பதிவு செய்து, பட்டியலில் சேர்க்கச் செய்ய வேண்டும். பின்பே அப்பங்குகளின் பரிவர்த்தனை நடைபெறும். பங்குகளின் விலை, நிறுவனத்தின் தரத்திற்கும், சந்தையின் பல்வேறு காரணிகளைப் பொறுத்தும், சந்தையில் அப்பங்குகளுக்கான தேவையைப் (Demand) பொறுத்தும் மாறிக்கொண்டே இருக்கும் (volatile). பரிவர்த்தனை செய்ய விரும்புபவர், சந்தை நிலவரத்திற்கேற்ற விலையைக் கொடுத்து பங்குகளை வாங்கவோ, அல்லது விலையைப் பெற்றுக்கொண்டு விற்கவோ செய்வார்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர் அந்நிறுவனத்தின் பங்குதாரர் எனப்படுவார். பங்குதாரருக்கு, நிறுவனத்தின் லாபத்தைப் பொறுத்து ஈவுத்தொகை/பங்காதாயம் (Dividend) கிடைக்கும். தேவையான பொழுது, தரகர்கள் மூலமாக, பங்குகளை விற்றுப் பணமாக்கிக் கொள்ளவும் செய்யலாம்.

பங்குத்தரகர்கள் (Stock Brokers):

பங்குச் சந்தையில், பங்குகளை நேரடியாக வாங்கவோ விற்கவோ முடியாது. அதற்கென உள்ள, பங்குச் சந்தையின் உரிமம் பெற்ற உறுப்பினர்கள் மூலமாகவே பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த உறுப்பினர்களே தரகர்கள்(Brokers) எனப்படுவர். பங்குச் சந்தையில் முதலீடு செய்யவோ, பரிவர்த்தனை (Trading) செய்யவோ விரும்புபவர்களிம் இத்தகைய தரகர்களிடம் இருவிதமான கணக்குகளைத் தொடங்க வேண்டும். அவை

(1) Demat Account (2) Trading Account.

Demat Account என்றால் என்ன?

வங்கிகளில் நாம் பணத்தை வரவு செலவு செய்வது போல, நாம் வாங்கும்/விற்கும் பங்குகளின் வரவு செலவைப் பராமரிக்க, தரகர்களிடம் நாம் தொடங்கும் கணக்கே 'டீ-மேட்' கணக்கு ஆகும். முந்தைய காலத்தில் பங்குகள் காகிதத்தில் இருந்தன. இப்பொழுது பங்குகள் Electronic Format இல் பேணப்படுகின்றன. இதனால், பரிவர்த்தனைக்கான காலம் மிகக்குறைவதோடு, வீட்டில் இருந்தவாறே பரிவர்த்தனை செய்யவும் இயலுகிறது. அது மட்டுமில்லை, Physical Share மூலம் பரிவர்த்தனை செய்வது மிகக் கடினமாக இருந்ததோடு, அப்பரிவர்த்தனைக்கு முத்திரைக் கட்டணம் வேறு செலுத்த வேண்டியிருக்கும். Demat Share Transactionஇல் இத்தகைய தொல்லைகள் இல்லை. தவிர, பங்குகளுக்காக நாம் விண்ணப்பம் அனுப்புகையில், நமது Demat Accountஇன் விவரத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால், பங்குகள் நேரடியாக, நமது கணக்கில் வரவு வைக்கப் படும்.

விற்கவோ, வாங்கவோ அல்லது நம் பங்குகளை அடகு வைக்கவோ விரும்பினால், நாம் Demat Account வைத்திருப்பது அவசியம்.

Demat Account தொடங்க, (இந்தியாவில்), வருமான வரி எண் (Permanent Account Number) கண்டிப்பாகத் தேவை. வங்கிக் கணக்கு தொடங்கத் தேவைப்படுவது போலவே நமது அடையாள அட்டை, தற்போதைய முகவரிக்கான சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவை இத்தரகர்களிடம் (நிறுவனங்கள்) Demat Accountக்கான விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டால், நமக்கான கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு எண் கொடுக்கப்படும். அதற்குப் பின், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் Physical Share-களை, Demat Share-களாக மாற்றிக்கொள்ளவும், புதிய பங்குகளை வாங்க/விற்கவும் முடியும்.

Trading Account என்றால் என்ன?

Demat Account நமது கணக்கில் உள்ள பங்குகள், பராமரிக்கப் படும். அவ்வளவே! நாம் வாங்கி விற்க வேண்டுமானால், வர்த்தகத்திற்கான தனிக்கணக்கு (Trading Account) தொடங்கியாக வேண்டும். Demat Account உள்ளவர்கள் மட்டுமே Trading Account தொடங்க முடியும். வீட்டில் இருந்தவாறே இணையம் மூலமாகக் கூட பங்குப் பரிவர்த்தனை செய்யலாம். அதற்கான கணிணி மென்பொருளைப் பங்குத் தரகு நிறுவனத்திடம் பெற்று ( ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி) நமது கணிணியில் நிறுவிக் கொள்ளலாம். இதைச் செய்தோமானால், சந்தை நிலவரத்தை உடனுக்குடன் அறிந்து வாங்குவதா / விற்பதா என்று முடிவெடுப்பதும் Trading செய்வதும் எளிதாக இருக்கும். ஆயினும், நமது பங்கு வணிகம், அப்பங்குத் தரகர் வழியாகவே நடைபெறுகிறது. ஆகவே, நமது பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவாறு, நாம் அவர்களுக்குக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.

பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

முதல் வகை - முதலீட்டாளர். (Investor)

இவர்கள் பங்குகளில் முதலீடு செய்து தக்க சமயத்தில், (அதாவது, பங்கின் விலை அவர்கள் எதிர்பார்க்கும் அளவு உயரும்பொழுதோ, அல்லது அவர்களுக்குப் பணம் தேவையான பொழுதோ ) விற்பனை செய்வர். இத்தகைய முதலீடுகள் குறுகிய கால முதலீடாகவோ(Short Term Investment), நீண்ட கால முதலீடாகவோ(Long Term Investment) இருக்கலாம்.

இரண்டாம் வகை - நாள்வணிகம் செய்வோர் (Day Trader)

இவர்கள் பங்குகளை அன்றே வாங்கி அன்றே விற்று லாபம் சம்பாதிக்க நினைப்பவர்கள். இப்பங்குகளின் விலை உயரும் அல்லது சரியும் என யூகித்து அதற்கேற்றவாறு வணிகத்தில் ஈடுபடுவர். இதில் லாபம் சம்பாதிப்பது எவ்வளவு சுலபமோ அத்தனைக்கத்தனை, போட்ட முதலை இழக்கும் வாய்ப்பும் அதிகம். மிகவும் கவனமாக விளையாட வேண்டிய அபாயகரமான விளையாட்டு இது.

நன்றி:ஈழநேசன் இணையதளம்

Link to comment
Share on other sites

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் pdf_button.png emailButton.png Written by Eelanation

பங்குச் சந்தை நிலையில்லாமல் மேலும் கீழும் ஊசலாடும் தன்மையுடையது. சொல்லப் போனால், அந்த ஊசலாட்டமே சந்தையின் உயிர்த்துடிப்பு. அது இல்லாமல் போனால் என்ன பரபரப்பு (Thriill) இருக்கமுடியும்? இந்த ஏற்ற இறக்கங்களே பங்குச்சந்தையின் மிக முக்கியப் பண்பாகும். இந்த ஏற்ற இறக்கங்கள் எதன் அடிப்படையில் உருவாகின்றன தெரியுமா?

  1. நாட்டில் நிலவும் அரசியல் / பொருளாதாரச் சூழ்நிலைகள் (நிதி நிலை அறிக்கை வெளியிடப்படுதல், வரவு செலவுத்திட்டம் (Budget)

  2. மத்திய வங்கி/நிதி அமைச்சகம் கொண்டுவரும் சில நெறிமுறைகள்/கட்டுப்பாடுகள் அல்லது சில விதிமுறைகள் விலக்கப் படுதல் (தொழிற்கொள்கை குறித்த அறிவிப்புகள், வெளிநாட்டு முதலீட்டுக்கான சட்ட திட்ட வரவுகள் முதலியன)

  3. உலகச் சந்தையில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் மாற்றங்கள் (அமெரிக்க வங்கிகளின் மோசமான நிலைமை, உலகப் பொருளாதாரத் தொய்வு)

  4. நிறுவனங்களின் காலாண்டு/ஆண்டு அறிக்கைகள் வெளியிடப் படுதல் அல்லது அந்நிறுவனங்கள் குறித்த சில தகவல்கள் (லேமன் நிறுவனம், சத்யம் நிறுவனம் )

  5. சில சமயம் எதிர்பாராத, பொய்யான வதந்திகள் கூட பங்குச் சந்தை நிலவரத்தை பாதிக்கின்றன.(யூக வியாபாரம் செய்பவரில் சிலர், இத்தகைய தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்பி லாபம் காண முயல்வதாகவும் சில சமயங்களில் குற்றச்சாட்டு எழுகிறது)

எது எப்படியோ, 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்பது போல, திறமையான, அறிவுக் கூர்மையும், சமயத்துக்குத் தக்கபடி செயல்படும் வேகமும் உள்ள முதலீட்டாளர்கள், எத்தகைய ஊசலாட்டத்திலும், லாபம் சம்பாதித்து விடுவர். குறைந்த பட்சம், நட்டமடையாமல் தப்பித்துக் கொள்வர். அது இல்லாதவர்கள் கதிதான் திண்டாட்டமாகிவிடுகிறது. ஆனால், சந்தை மிக அதிகமாக ஊசலாடிக்கொண்டே இருக்குமானால், சராசரி முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் அதில் ஈடுபட மாட்டார்கள் என்பது ஒரு குறை.

காளையும் கரடியும்.

பங்குச் சந்தையில் பங்குகளின் விலை ஏறுமுகமாக இருப்பின் அதைக் காளைச் சந்தை (Bull Market)எனவும், வீழ்ச்சியடையும்பொழுது கரடிச் சந்தை(Bear Market) எனவும் கூறுவது வழக்கம். ஏன் தெரியுமா? காளை வேகமாகத்தாக்கக் கூடியது என்றும் கரடி மந்தமானது என்றும் கருதப் படுகிறது. எனவே, பங்கு விற்பனை சூடு பிடித்து, விலைகள் ஏறுகையில் அது காளைச் சந்தை எனவும், பங்குகளின் விலைகள் சரிந்து, விற்பனை மந்தமாகும்பொழுது அது கரடிச் சந்தை எனவும் அழைக்கப் படுகிறது.

சிலர் "Bulle speculative" என்ற ஃபிரஞ்சு வார்த்தையில் இருந்து தோன்றியது எனவும், லண்டனில் கரடித்தோல்களை விற்பவர்கள், கரடிகளைப் பிடிப்பதற்கு முன்பே அதற்கு விலை பேசிவிடுவது வழக்கம் என்பதால், short sellingஐக் குறிக்க கரடிச் சந்தை என்ற சொல் பயன்படுத்தப் பட்டது எனவும், பொதுவாக சந்தை சரியும்பொழுதுதான் Short Selling செய்வது வழக்கம் என்பதால், சந்தையின் வீழ்ச்சியடையும்பொழுது அது கரடிச் சந்தை என வழங்கப்படுகிறது எனவும் கருதுகின்றனர்.

பொதுவாக, பணவீக்கம் குறைவாகவும், நாட்டின் பொருளாதாரம் சீராகவும், உற்பத்தி உயர்ந்தும் இருக்கும்பொழுது காளைச் சந்தைப் போக்கு நிலவுகிறது. இதற்கு நேரெதிரானது கரடிப் போக்கு. இப்போக்கு நிலவுகையில் நாட்டில் வேலையின்மையும், பணவீக்கமும் காணப் படுகிறது.

வரலாற்று நிகழ்வுகள்:

ஏப்ரல் 2003 முதல், ஜனவரி 2009 வரையுள்ள காலத்தில் மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து காளைச் சந்தைப் போக்கு நிலவியது. இந்த ஐந்து ஆண்டு காலத்தில், சென்செக்ஸ் புள்ளிகள் 2900த்தில் இருந்து 21000 வரை உயர்ந்தது. அதே போல், மிக மோசமான கரடிச் சந்தைப் போக்கு 1929ம் வருடம், வால் ஸ்ட்ரீட் சந்தையின் வீழ்ச்சியாகும். இந்நிகழ்வின்பொழுது சந்தையில் பங்குகளின் விலை 89% குறைந்தது.

கரடிச் சந்தையில் பங்குகளை வாங்கி, காளைச் சந்தையில் விற்பதே புத்திசாலித்தனம். ஆனால், பெரும்பாலானவர்கள், சந்தை உயரும்பொழுது ஆர்வத்துடன் பங்குகளை வாங்குவர். சந்தை சரிவில் இருக்கும்பொழுது, பயந்துபோய் விற்றுவிடுவார்கள். இதனால் பெரும் நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்காக இந்த ஆலோசனைகள்:

சந்தை எப்பொழுது ஏறும், எப்பொழுது சரியும் என்பதை, சாதாரணமாக முதலீட்டாளர்கள் அறிவது கடினம்.மென்மேலும் ஏறும் என்று நினைக்கும்பொழுது சரியத் தொடங்கும், சரிந்து கொண்டே போகும் என்று கணிக்கும்பொழுது திருப்பம் ஏற்பட்டு ஏறத்தொடங்கும்.

நீங்கள் ஒரு பங்கின் விலை ஏறும் என நினைத்து ரூ.200.00 என ஆயிரம் பங்குகளை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் வாங்கியபின் விலை சரிந்து ரூ. 150.00 ஆகிவிடுகிறது. நீங்கள் அதை நட்டத்துக்கு விற்றுவிடுகிறீர்கள். மறு நாளே அது 240.00க்கு ஏறிவிடுகிறது.உங்களுக்கு என்ன செய்வதென்றே புரிவதில்லை. இது உங்களுடையது மட்டுமல்ல, பலருக்கும் இதே அனுபவம்தான். இதற்கு என்ன செய்வது?

  1. நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகை முழுவதையும் ஒரே சமயத்தில், ஒரே பங்கில் போடாதீர்கள். (அதாவது, ரூ.200 என்ற விலையில் 200 பங்குகளை வாங்குகிறீர்கள்.)
  2. நீங்கள் வாங்கிய பங்கின் விலை இறங்கும்பொழுது மீண்டும் ( ரூ.150.00 என்ற விலையில் ) நூறு அல்லது இரு நூறு பங்குகளை வாங்குங்கள்.
  3. இவ்வாறு பங்குகளின் விலை சரியும்பொழுது வாங்குவதை, Averaging என்பர். விலை ஏறும்பொழுதும், உங்களிடம் உள்ள பங்குகளை மொத்தமாக விற்காதீர்கள். பாதியை மட்டுமே விற்பனை செய்யுங்கள். விலை மேலும் ஏறினால், மீதத்தை விற்கலாம். குறைந்தால், இன்னும் கொஞ்சம் பங்குகள் வாங்குங்கள்.
  4. பங்காதாயம் தரும் நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யவும். பங்குகளின் விலை இறங்கியிருக்கும் பொழுது, குறைந்தபட்சம் அதுவாவது கிடைக்கும். நட்டமான நிறுவனங்களின் பங்குகளை வாங்கவே வாங்காதீர்கள்.
  5. நிறையப் பணம் வைத்திருக்கிறீர்கள், துணிகரமான முதலீடுகளில் இறங்க விரும்புகிறீர்கள் என்றால் மட்டுமே Z வகை பங்குகளில் முதலீடு செய்யுங்கள். இல்லையெனில், நல்ல, தரமான நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யவும்
  6. பங்குச் சந்தை மிகுந்த மாற்றங்களுக்கு உட்படும்பொழுது, மிகவும் விழிப்புடன், சந்தை நிலவரத்தைக் கண்காணிப்பது முக்கியம்.
  7. கரடிச் சந்தை நிலவும் தருணமே முதலீடு செய்யச் சிறந்த தருணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  8. உயரே செல்லும் ராட்டினச்சக்கரம் (Giant wheel), கீழிறங்குவதும், கீழே உள்ள சக்கரம் மேலெழும்புவதும் இயற்கை. பங்குச் சந்தையும் அப்படித்தான். எனவே, கரடிச்சந்தை நிலவரத்தின் பொழுது, பீதியடைந்து, எல்லோரும் விற்கிறார்களே என்று நீங்களும் விற்க வேண்டாம். பொறுத்திருங்கள். முடிந்தால், மேலும் மேலும் நல்ல பங்குகளில் முதலீடு செய்யுங்கள்.

குறிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டிய விதி ஒன்று உண்டு. அது, உங்கள் அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடாது என்பதுதான். பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபடுகையில், ஒரே பங்கிலோ, ஒரே விதமான Industry இலோ உங்கள் பணத்தை முடக்காமல் பல விதப்பங்குகளிலும் பகிர்ந்து போடுவது, உங்கள் முதலீட்டை சந்தையின் ஏற்றத் தாழ்வு காரணமாக இழக்கும் அபாயத்தைக் குறைக்க வல்லது.

நன்றி:ஈழநேசன் இணையதளம்

Link to comment
Share on other sites

உள்ளிருப்போர் வர்த்தகம் - பங்கு வர்த்தக மோசடி

இன்று அமெரிக்காவின் பங்குச்சந்தையை, தவறு - அமெரிக்காவையே உலுக்கிக்கொண்டிருப்பது கல்லியான் ஹெட்ஜ் ஃபண்ட் (Galleon Hedge Funds) நிறுவனர் திரு ராஜ் ராஜரத்தினம் என்பவரும் மேலும் ஐந்து நபர்களும் செய்ததாகக் கூறப்படும் ஏறத்தாழ 60 மில்லியன் டாலர் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பங்குச்சந்தை தொடர்பான மோசடி. இவர்கள் மீது பிற நிறுவனங்களின் அந்தரங்கமான தகவல்களைத் திரட்டி, அந்தச் செய்திகளைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை Insider Trading என்பர். இதனைத் தமிழில் 'உள்ளிருப்போர் வர்த்தகம்' எனக் கூறலாம்.

உள்ளிருப்போர் வர்த்தகம் அதாவது Insider Trading என்றால் என்ன? அதைக்குறித்து, இந்தப் பங்குச்சந்தைப் பகுதியில் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

http--img823.imageshack.us-img823-2315-56957147.th.jpgபங்குச்சந்தைகளில் ஏற்படும் ஊசலாட்டத்திற்கும், பங்குகளின் விலை ஏறி இறங்குவதற்கும் நிறுவனங்கள் குறித்த தகவல்களும் காரணம் என்று முன்பே பார்த்தோம். நல்ல விதமான தகவல்கள் விலை உயர்விற்கும், எதிர்மறையான தகவல்கள் விலைச்சரிவிற்கும் காரணமாகிவிடும் என்பதையும் தெரிந்துகொண்டோம். ஆனால், பிறருக்கு, அதாவது பொதுமக்களுக்கு இத்தகவல்கள் தெரிவதற்கு முன்பாக யாருக்கெல்லாம் தெரிய வாய்ப்புண்டோ அவர்கள் அத்தகவல்களைப் பயன்படுத்தி சந்தையில் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்பது பொதுவான விதி. உதாரணமாக X என ஒரு நிறுவனம் இருப்பதாகக்கொள்வோம். அந்நிறுவனம் Y என்ற மற்றொரு நிறுவனத்துடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறது எனில், அந்தச் செய்தி வெளியில் தெரிந்த உடனேயே, X நிறுவனத்தின் பங்குகளின் விலை மளமளவென்று உயரத்தொடங்கும். ஆனால், இந்த ஒப்பந்தம் வரப்போகிறது என்பதை அதன் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இச்செய்தி தெரியுமுன்பே அறிந்திருப்பார்கள் அல்லவா? இச்செய்தி வெளியில் பரவுமுன்பே அவர்கள் குறைந்த விலையில் அப்பங்குகளை வாங்கி இலாபம் பார்ப்பது, அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது நபருக்கு இந்த இரகசியத்தகவலைக் கசியவிட்டு அவர்கள் இலாபம் பெற உதவுவது, அல்லது, பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒன்று X நிறுவனத்தில் உள்ள, இத்தகவல்களுக்கு அணுக்கமான (Persons with Potential Access) நபர்களிடம் இருந்து (கையூட்டு முதலியவற்றைக்கொடுப்பதன்மூலம்) இத்தகைய அந்தரங்கமான, இரகசியமான தகவல்களைத்திரட்டி தங்கள் ஆதாயத்திற்குப் பயன்படுத்துவது இவை எல்லாமே Insider Trading தான்.

இப்பொழுது Galleon Hedge Funds என்ற இந்த அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் திரு ராஜ் ராஜரத்தினம் மற்றும் இவருடைய கூட்டாளிகள் (இதில் ராஜிவ் கோயல் மற்றும் அனில் குமார் என்ற இரு இந்தியர்களும் அடக்கம்) , IBM, Google உட்பட்ட ஏறத்தாழ ஏழு நிறுவனங்களில் இருந்து, முக்கியமான இரகசியத்தகவல்களைத் திரட்டி அத்தகவல்களைத் தமக்கு / தமது நிறுவனத்திற்கு முறைகேடாக லாபம் பெறப்பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2006 முதல் 2008 வரையான காலகட்டத்தில் இவர்கள், மற்ற பல பெரிய நிறுவனங்களில் இருந்து, அந்த நிறுவனங்களின் ஆதாய விவரங்கள், அவர்கள் மேற்கொள்ளவிருந்த கூட்டு வர்த்தகங்கள் (Business Tie-Ups) முதலியன குறித்த பல தகவல்களைப் பரிமாறிக்கொண்டு அதன் மூலம் பல மில்லியன் டாலர் தொகை லாபம் அடைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

உள்ளிருப்போர் வர்த்தகம், அதாவது, முக்கிய அதிகாரிகள், பணியாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்குவர்த்தகம் செய்வதைக்குறித்து சட்டங்கள் பல, பெரும்பாலான நாடுகளில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் Employee Stock Option மூலம் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தவறாகக் கருதப்படமாட்டாது. ஆனால், ஒரு நிறுவனத்தின் வருடாந்திர, அல்லது காலாண்டுக் கணக்குகள் முடிவடைந்தபின், அத்தகவல்கள் வெளியில் பரவுவதற்குமுன் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், குறிப்பாக அத்தகவல்களைக் கையாளக்கூடியவர்கள் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்பது சட்டப்படி குற்றமாகக்கருதப்படுகிறது. அதே போல், அத்தகவல்களைக் கையாள்பவர்கள், பிற வெளியாட்களுக்கு அத்தகவல்களைக் கசிய விடுவதும் பெரிய குற்றமே ஆகும்.

அமெரிக்க நாட்டின் பங்குச்சந்தை குறித்த சட்டமாகிய Securities and Exchange Act of 1934 (USA) பிரிவு 16 இன் படி, உள்ளிருப்போர் என வரையறுக்கப்பட்ட பணியாளர்கள், இயக்குனர்கள் மற்றும் 10% சதவீதத்துக்கு அதிகமாகப் பங்குகளை வைத்திருப்பவர்கள், அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி ஆறு மாதத்திற்குள் விற்றுவிடுவார்களேயானால் அந்தப் பரிவர்த்தனையால் வரும் ஆதாயம் முழுவதையும், நிறுவனத்திற்குக் கொடுத்துவிடவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ள எவரும், அந்நிறுவனத்தின் பங்குகளில் வர்த்தகம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் Securities Exchange Board of India வும், உள்ளிருப்போர் வர்த்தகத்தைத் தடுக்க பல வித வரையறைகளையும் விதிகளையும் நிர்ணயித்துள்ளது.

ஆனால், ஹென்றி மான் (Henry Manne) ,மில்டன் ஃப்ரீட்மன் (Milton Friedman) முதலிய பல பொருளாதார நிபுணர்கள், இந்த உள்ளிருப்போர் வர்த்தகம் சட்டவிரோதமானது என்ற நிலையை மாற்றி அதனை சட்ட பூர்வமாக்கவேண்டும் என்று வாதிடுகின்றனர். உள்ளிருப்போர் வர்த்தகம் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பயனுள்ளதே என்று அவர்கள் கருதுகின்றனர். ஏனெனில், உள்ளிருப்பவர்கள் தமது நிறுவனத்தின் பங்குகளை பரிவர்த்தனை செய்கையில், விலை ஏற்றம் (அல்லது இறக்கம்) ஏற்படுமானால் அது சந்தையில் பிரதிபலிக்கத்தான் செய்யும் எனவும் அது அனைத்து முதலீட்டாளர்களுக்குமே நல்லதுதான் என்பதும் இவர்கள் கருத்து. மற்ற சந்தைகளில், குறிப்பாக நிலம் தொடர்பான வர்த்தகங்களில், உள்ளிருப்போர் வர்த்தகம் தவறாகக் கருதப்படாதபொழுது, பங்குவிற்பனையில் மட்டும் இந்தத் தடை எதற்கு என்பது இவர்கள் வாதம்.

ஆயினும் பங்குச்சந்தையைக் கண்காணிக்கும் நிறுவனங்கள், (e.g. Securities and Exchange Commission (USA), Securities Exchange Board of India ) முதலியவை உள்ளிருப்போர் வர்த்தகத்தை "மோசடி" என்றே கருதுகின்றன. இங்கிலாந்து, ஜப்பான் முதலிய நாடுகளிலும் உள்ளிருப்போர் வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. சொல்லப்போனால், 1988ம் வருடம் ஜப்பான் நாடுதான் முதலில் உள்ளிருப்போர் வர்த்தகத்திற்கு எதிரான சட்டத்தை இயற்றியது. 1998ம் ஆண்டில் 'International Organisation of Securities Commission' (IOSCO) என்ற சர்வதேச நிறுவனம் இயற்றிய, சந்தை தொடர்பான அடிப்படைக்கொள்கைகளில் முதலாவதாக, முதலீட்டாளர் பாதுகாப்பு விளங்குகிறது. உள்ளிருப்போர் வர்த்தகம் முதலீட்டாளர்களை ஏமாற்றவல்லதாகவும், ஒரு சாரார் மட்டும் நியாயமற்ற முறையில் பலன் பெறுவதாகவும் இருப்பதால் உள்ளிருப்போர் வர்த்தகம் தவறானது எனவும், வணிக நெறிமுறைகளுக்கு (Business Ethics) எதிரானதாகவும் கருதப்படுகிறது.

links

Galleon’s Rajaratnam Found Guilty

நன்றி:ஈழநேசன் இணையதளம்

Link to comment
Share on other sites

மூன்று பகுதிகளிலும் மிகவும் பயனுள்ள தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் அறிந்ததை தமிழில் வாசிக்கும்போது இவ்வளவு விளக்கமாக இந்தப்பதிவை எழுதியவரை நினைக்க வியப்பாக உள்ளது. பயன்படுத்தப்படும் தமிழ்க்கலைச் சொற்களும் அழகு. இணைப்புகளிற்கு நன்றி நுணாவிலான்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.