Jump to content

வேலையில்லா பட்டதாரி - விமர்சனம்


Recommended Posts

வேலையில்லா பட்டதாரி - விமர்சனம்
 

நட்சத்திரங்கள் : தனுஷ், அமலா பால், விவேக், சரண்யா, சமுத்திரக்கனி, சுரபி, செல் முருகன் மற்றும் பலர்
கதை, திரைக்கதை, இயக்கம் : வேல்ராஜ்
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : அருண்பாபு
எடிட்டிங் : ராஜேஸ் குமார்
தயாரிப்பு : தனுஷ்

63332_zps053be627.jpg
எஞ்சினியரிங் முடித்துவிட்டு வேலையில்லாமல் 'தண்டச்சோறாக' இருக்கிற வேலையில்லா பட்டதாரி வேலை கொடுக்கிற பட்டதாரியாக மாறி சாதிக்கிறதுதான் படத்தின் கதை.

63333_zps1431d8dc.jpg
இந்தச் சிறிய கதையை பெரிய கதையாக ரசிக்க வைக்கிறார் அறிமுக இயக்குநர் வேல்ராஜ். 'எந்திரிடா தண்டச் சோறு' என்று ஆரம்பிக்கிற படம் பின்னர் எந்த இடத்திலும் ரசிகர்களை தூங்க விடாமல் ரசிக்க வைக்கிறது.


பி.ஈ (பொறியியல்) பட்டம் பெற்ற வேலையில்லா பட்டதாரி ரகுவரனாக தனுஷ். ஆதரிக்கிற அம்மா சரண்யா, ஆத்திரப்படுகிற அப்பா சமுத்திரக்கனி, அடங்கிப்போகிற தம்பி எனச் சின்னக் குடும்பத்துல தன்னோட நாய், தன்னைப்போல நலிந்த மோட்டார் சைக்கிளுடன் வாழ்கிறான் ரகுவரன்.

63331_zps6797b56c.jpg
வழக்கம்போல பாழாப்போன பக்கத்துவீட்டுக்கு குடிவரும் நாயகி அமலா பால். நடிகை மாதிரி அழகான பொண்ணு என நம்பி பைனாகுலார் வைத்து தேடுகிற நாயகனின் காதல். இந்த சீன நிறுத்தவே மாட்டாங்க போல தெரியுது.


இவற்றுக்கு நடுவே சாதிக்க துடிக்கும் வேலையில்லா பட்டதாரியின் வேலை தேடும் படலம் என நகரும் கதையில் எல்லோரையும் வெறுப்பேற்றும் வில்லனாக வலம்வரும் ரகுவரன், ஹீரோவாக மாறி எப்படி தன்னுடைய பொறியியல் துறையில் சாதிக்கிறார் என்பதுதான் ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளும் மீதிக் கதை.

 

63334_zps4bf88580.jpg
இந்த மாதிரி கதாபாத்திரங்களுக்கு தன்னை விட்ட ஆளே இல்லை என்பதை நிரூபிக்கிறார் தனுஷ். சின்னச் சின்ன முகபாவங்களையும் ரசிக்க வைக்கிறார். துடுக்கான பையனாக இருந்து மிடுக்காக மாறும் தனுஷின் நடிப்பு தியேட்டரில் கைதட்டலை அள்ளுகிறது.

அம்மாவிடம் அடிவாங்குவது, கெஞ்சிக் கூத்தாடி பணம் கேட்பது. பக்கத்து வீட்டுப் பொண்ணு என தெரியாமல் அவரிடமே போதையில் உளறுவது, திறமைக்கு எங்கே வேலை கிடைக்குது என அலுத்துக்கொள்வது, சீரியல் பார்க்க துடிப்பது, வீட்டு வேலை செய்வது என முதல் பாதி முழுவதும் வேலையில்லா பட்டதாரிகளின் கஷ்டங்களை நகைச்சுவையாக சிந்திக்க வைக்கிறார். பிற்பாதியில் தாயை நினைத்து உருகும் இடங்களில் கண்ணீர் வரவழைக்கிறார் தனுஷ்.

63335_zpsebcbc49b.jpg


தன்னையும் தம்பியையும் அப்பா ஒப்பிட்டு பேச, 'பேர்ல கூட அவருக்கு கார்த்திக் ஹீரோ பேரு, எனக்கு வில்லனோட பேரு ரகுவரன்' என அங்கலாய்க்கும் இடம் அத்தனை பொருத்தமாக உள்ளது. அதே ரகுவரன் மூச்சுவிடாம ஒரு பக்க வசனங்களை பெற்றோரின் பெருமை பற்றி கூறுமிடம் சுப்பர். அதற்காக சொற்பொழிவாற்றுவது மாதிரி எங்கேயும் அறிவுரை கூறி அலுப்படிக்கவில்லை.

ஆனால் ஏராளமான இடங்களில் அண்ணாமலை ரஜினியையும் அவரது ஸ்டைலையும் ஞாபமூட்டுகிறார் என்றாலும் ரசிக்க முடிகிறது.


அணையப் போகின்ற விளக்கு பிரகாச எரிவது போல சினிமாவுக்கு முழுக்கு போடுற நேரத்தில் படத்தில் பளிச்சிடுகிறார் அமலா பால். தனுஷுக்கும் இவருக்கும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை என்றாலும் நினைவில் நிற்கும் பாத்திரமே.

 

ஒளிபதிவாளராக இருந்து இயக்குநராக அறிமுகமாகியுள்ள வேல்ராஜின் வரவு வரவேற்கத்தக்கது. தனுஷின் 25ஆவது படம். சில வருடங்களாகவே தனுஷின் படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்பதால் கூடுதல் சுமை. என்றாலும் காட்சிக்கு காட்சி தனுஷ் ரசிகர்களை குத்தாட்டம் போட வைப்பதுடன் பொதுவான ரசிகர்களையும் ரசிக்க வைக்கிறார்.

63336_zpsbcee2b24.jpg
சமூக வலைத்தளம் தவிர்க்க முடியாது என்பதை வேல்ராஜாலும் தவிர்க்க முடியவில்லை. திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான காட்சியமைப்பு பிற்பாத்தியை சற்றே நீண்டதாக காண்பிக்கிறது. தவிர்த்திருக்கலாம். ஆனாலும் இயக்குநர்களாக மாறும் ஒளிப்பதிவாளர்களிடம் சரக்கு இருக்கு என்பதனை இவரும் ஒப்புக்கொள்ளச் செய்கிறார்.

கண்டிப்பான அப்பாவாக சமுத்திரக்கனி நன்றாகவே நடித்திருக்கிறார் என்றால் அம்மா சரண்யா அழுத்தமான தாயாக இயல்பாக வாழ்ந்திருக்கிறார். இன்னும் பல வருடங்களுக்கு தமிழ் சினிமாவில் செல்ல அம்மா இவர்தான்.


இவர்கள் தவிர விவேக் அறிமுகமாவதிலிருந்து அவரது பார்வைக்கும் கூட தியேட்டர் குலுங்குகிறது. சீரியஸான காட்சிகளில் விவேக்கின் பார்வைகளும் சீரியஸாகவே உள்ளன. அதுதான் விவேக்கின் திறமை. செல் முருகன் ஒத்த சொல்லில் குபீரெனச் சிரிக்க வைக்கிறார். விவேக்குக்கு ஏற்ற மூடி.

இரண்டாவது நாயகியாக வரும் சுரபி எங்கே ரகுவரனை காதலிப்பதாகச் சொல்லி கொச்சையாக்கி விடுவாரோ என்று காட்சிகள் எதிர்பார்க்க வைத்தாலும் சும்மா அப்பப்போ வந்து போவதோடு நிறுத்திக்கொண்டது ஆறுதல். தனுஷின் தம்பியாக வரும் புதுமுகம் பெரிதாக ஈர்க்கவில்லை.


வில்லனாக வரும் அமுல் பேபி.... ஆமாங்க படத்துல அப்படித்தான் தனுஷ் அழைக்கிறார். 'உன்னைப் பார்த்தா எனக்கு வில்லனாவே தோணல அமுல்பேபி' என தனுஷ் கூறும்போது பார்க்கிற எங்களுக்கும் அதே பீலிங்தான்.

இளைஞர்களை கவரும் பாடல்கள். திரையரங்கில் ஆடித் தீர்க்கிறார்கள். குறிப்பாக் வட்ட கருவாட் பாடல். இதிலுள்ள கருத்துகள் இருக்கே.... ஷப்பா அணியே புடுங்க வேணாம். பின்னணி இசை காதை கிழித்தாலும் படத்தோட ஒன்றிப்போகுது.


ஒளிப்பதிவு செங்கல்லையும் மணலையும் நன்றாகவே காட்டுகின்றது. டொப் அங்கிளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். இயல்பான வசனங்கள். சில இடங்களில் பஞ்சாக தெறிக்கின்றன. சண்டைக் காட்சிகள் தனுஷுக்கு ஏற்ற ரகம். தொடர் தோல்விகளின் பின் தனுஷை வெற்றிப் பட்டதாரியாக மாற்றியிருக்கிறது இந்த வேலையில்லா பட்டதாரி.

மெட்ரோ நியூஸ் விமர்சனக் குழு
- See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=6333#sthash.Phe6ogRw.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.