Jump to content

பாலு மகேந்திரா சொக்கலிங்க பாகவதர் ஆனபோது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலு மகேந்திரா சொக்கலிங்க பாகவதர் ஆனபோது
வீ.எம்.எஸ். சுபகுணராஜன்


எழுபதுகளின் நடுவில், தமிழ் சினிமாவிற்கான புதிய பரிமாணத்தை உருவாக்கிய படைப்பாளிகளின் பட்டியலில் பிரதானமான இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. தமிழ் சினிமாவின் இயங்கு தளத்தை விரிவாக்குவதில் அவர்கள் செய்த பங்களிப்பு மகத்தானது. ஆனாலும், அக்காலகட்ட படைப்பாளிகள் ஒவ்வொருவரும் தமக்கேயான பிரத்யேக முறைமைகளில் அந்தத் தளத்தில் வினையாற்றினர். அந்த வினையாற்றலுக்கான பயிற்சிகளும் அறிதல்களும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையிலும் நேர்ந்தது. பாரதிராஜாவும் மகேந்திரனும் தமிழ் சினிமா உருவாக்க வெளியிலிருந்தே தமக்கான முறைமைகளைக் கற்றனர். ஆனால், முற்றிலும் கல்விப்புலம் சார்ந்த திரைக்கலைக் கல்வியை அதன் பிரதான கேந்திரமாகக் கருதப்படும் பூனா திரைப்படக் கல்லூரியில் கற்று, தமிழ் சினிமா உருவாக்க வந்த முதல் தமிழ் ஆளுமை பாலு மகேந்திரா.

பூனா திரைப்படக் கல்லூரி வழியாக அறிமுகமான அயலக சினிமாவும் திரைப்படக் கோட்பாடுகளும், இந்திய பிரதேசங்களில் உருவான திரைப்படங்களில் தமது தாக்கத்தை உருவாக்க முனைந்தபோது, இங்கு செயல்படத் துவங்கியவர், பாலு மகேந்திரா. பாரதிராஜாவும் மகேந்திரனும் உருவாக்கிய சினிமாக்களில் ‘தமிழ் வாழ்வு’ அவரவர் பாணியில் பதிவான காலத்தில் இயங்கியவர் அவர். இன்னும் சொல்வதானால் மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’ திரைப்பட உருவாக்கத்தில் ஒளிப்பதிவிலும் அதன் திரைக்கதை அமைப்பிலும் பெரும் பங்காற்றியவர். ஆனால், பாலு மகேந்திரா இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ அந்த வகையிலான ‘தமிழ் வாழ்வு’ அடையாளங்களை பிரதானப்படுத்தவில்லை. அவரது பின்னரான ‘கமர்சியல்’களும் பெரும்பாலும் ‘பண்ணிய கதைகளே’. என்பதுகளின் இறுதியில் அவர் உருவாக்கி தேசிய விருது பெற்ற ‘வீடு’, ‘சந்தியாராகம்’ திரைப்படங்கள் அவரது மிக முக்கியமான திரைப்படங்கள்தாம் என்றபோதும், அவற்றிலும் துலக்கமான அடையாளங்கள் வெகு சொற்பமே. அதிலும், முக்கியமாக ஈழமண்ணிலிருந்து வந்த ஒரு மா கலைஞனின் ‘சொந்த அடையாளம்’ அவர் திரைப்படங்களில் அறவே இல்லை. இந்தப் பின்னணியில்தான் ‘தலைமுறைகள்’ மிக முக்கியமான திரைப்படமாகிறது.

கணீரென்ற தேவாரப் பாடலுடன் துவங்கும் திரைப்படம் அந்தப் புள்ளியிலேயே தனது அடையாளத்தைத் துலக்கமாக்கிவிடுகிறது. ‘தலைமுறைகள்’ திரைப்படத்தின் பிரதான பாத்திரமான ‘சுப்பு’ என நண்பர் லட்சுமணனால் அழைக்கப்படும் சுப்பிரமணியபிள்ளை அல்லது சிவசுப்ரமணியபிள்ளை அல்லது இந்தரீதியிலான ஏதோவொரு பிள்ளையாக அறிமுகமாகும் இயக்குனர் பாலு மகேந்திராவை திரையில் பார்த்தபோது தவிர்க்கவியலாமல் சொக்கலிங்க பாகவதரின் நினைவு வந்து போனது. 2002இல் தனது தொண்ணூற்றிரண்டாவது வயதில் மரணமடைந்த சொக்கலிங்க பாகவதர், தன் வாழ்நாள் முழுவதும் நடிகர்தான் என்றபோதும் அவரது நீங்காத நினைவுகள் பாலு மகேந்திரா அவர்கள் உருவாக்கிய பாத்திரங்கள் வழி மட்டுமே.

முதுமையின் இயல்பையும் எளிமையையும் உருவகவடிவில் காட்சிப் படுத்தியவர் சொக்கலிங்க பாகவதர். ‘வீடு’, ‘சந்தியாராகம்’ இரண்டு திரைப்படங்களின் ஜீவனும் அவர் உருவழியே திரை இருப்புக் கொண்டது. அதிலும் குறிப்பாக, ‘சந்தியாராகம்’ படத்தை, அவரது உடல்மொழி வழங்கிய உத்தரவாதத்தினால் உந்துதல் பெற்று பாலு மகேந்திரா உருவாக்கிய சித்திரம் எனலாம். தனது தீவிரமான கதைக்களங்களுக்கான நாயகனாக தான் கண்டடைந்த அந்த நாயகன் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பும் தார்மீகப் பொறுப்பை பாலுமகேந்திரா ஏற்றிருக்கிறார். இந்த தார்மீக நடவடிக்கையில் அதியற்புதமான ரசவாதமொன்று நிகழ்ந்துவிட்டிருக்கிறது. சொக்கலிங்க பாகவதர் உடல்வழியாகப் பேசியதுவரை அல்லது நடமாடியது வரை அதனுள் கரைந்திருந்த தன் அடையாளத்தை ரகசியமாக்குவதில் வெற்றி பெற்றிருந்த பாலுமகேந்திரா இங்கு அரங்குக்கு வந்துவிட்டிருக்கிறார். நிகழ்களம், காலம் ஆகியவற்றைக் குலைத்துப் போட்டு ஒரு சமகாலக் கதை என்ற பாவனையில் தான் இதுவரை பேசத்தவறிய, பேசுவதைத் தவிர்த்த ‘தன் கதையை’ பேசிவிட்டிருக்கிறார்.

‘தலைமுறைகள்’ திரைப்படம் நிகழும் காலம் 2013ஆம் வருடம் என்று காட்டும் டைட்டில் கார்டை மட்டும் மறந்துவிட்டுப் பார்த்தால் அத்திரைப்படத்தின் காலம் எழுபதுகளில் உறைந்திருப்பது புலப்படும். அந்த வீடும் மனிதர்களும் அந்தக் காலத்தைச் சேர்ந்தவர்களே. அந்தப் பிரதேசத்திற்குள் நுழையும் ஒரேநவீன கருவி மாருதி வேகன் கார் மட்டுமே. அதேபோல் சென்னையும் காவேரிபுரமும் கதைநிகழும் களத்தை குழப்புவதற்கான பெயர்கள் மட்டுமே. அதிலும் காவேரிபுரம் எனும் கற்பித நிலம் சந்தர்ப்பவசமானதன்று. தமிழ் நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தை அதன் பெயர் மற்றும் பூகோள அடையாளங்களோடு குறிப் பிடுவது கதைக்களத்தினை, அதன் அந்தராத்மாவான மனிதனை சரியாகச் சுட்டாது என்பதுதான் இதன் நோக்கம். கதை நிகழும் காலம் ஏகதேசமாக எழுபதுகள் என்றால், அது நிகழும் பூமி பாலு மகேந்திராவின் பூர்வீகமான மட்டக்களப்பும் அதன் பகுதிகளுமே. பழமையும் மூப்பும் நிறைந்த அந்த வீடு ஒரு யாழ் வெள்ளாளக் குடியிருப்பே. சொக்கலிங்க பாகவதர் குரல்வழியாகப் பேசியது வரையிலான ‘மொழி’ இங்கு முற்றிலுமாக வேறாகியிருக்கிறது. பாலு மகேந்திரா தன் சொந்தக்குரலில் பேசத் துவங்கியதும் ‘அவரது கற்பிதங்கள்’ கரைந்து போகின்றன. சைவத்திலும் சாதியத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கையும், பெருமிதமும் கொண்ட யாழ் வெள்ளாளன் கொக்கரித்தபடி அந்தப் பழம் வீட்டின் முற்றத்தையும் உள்கட்டையும் முன் திண்ணையையும் நிறைத்து நிற்கிறான். ‘வீடு’ மற்றும் ‘சந்தியாராகம்’ திரைப்படங்களின் நாயகனான ‘கண்ணியமான’ மனிதனில்லை இந்தப் ‘பிள்ளை’. அதிலும் ‘சந்தியாராக’த்தில் தான் வளர்த்து ஆளாக்கிய அண்ணன் மகனின் ‘சூழல்’ தன்னை ஏற்க முடியாததை ‘மிகக் கண்ணியமாக’ ஒப்புக்கொண்டு எந்தவிதமான ‘இயல்பான’ எதிர்வினைகள் இன்றி அவ்விடத்தைவிட்டு அகன்றுவிடும் மனிதனில்லை இவன். நான்கு வருடங்களாகத் தன்னை ஒரு எட்டு வந்து பார்க்காத, அம்மையின் மரணச் செய்திக்கும் ‘அசையாத’ மகனை நம்பி சென்னை வந்து, அவனது ‘இருப்பில்’ தனக்கு இடமில்லை எனப் புரிந்ததும், தனது சுயகௌரவத்திற்கு ‘இழுக்கு’ ஏற்படாமல் விலகி விடும் மனிதனில்லை இவன். ‘முதியோர் இல்லம்’ எனும் வாய்ப்பு முதலிலேயே தெரிந் திருந்தால் துவக்கத்திலேயே மகன் வீட்டிற்கு வருவதைத் தவிர்த்திருப் பேன் என தெரிவிக்கும் ‘அப்பா’ இல்லை இவன்.

பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்து வீட்டின் வாசல் படலுக்கு வெளியே நிற்கும் மகனை, ‘கண்ட நாயெல்லாம்’ என்ற வசையுடன் எதிர்கொள்ளும் யாழ்ப்பாணத்து வெள்ளாளன் ‘சுப்பு’. தனது பக்கவாதநோய் பற்றிய செய்திகூட தனது மருத்துவரான மகனுக்குத் தெரிவிக்கப்படக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் அப்பன். சாதியையும் மொழியையும் மீறி ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு, மாலையும் கழுத்துமாக வந்து நிற்கும் மகனையும் அவனது மொழிபுரியாத இளம் மனைவியையும் சுடுசொற்களால் அர்ச்சனை செய்து ‘எடுப்பிற்கு’ வராதே என விரட்டுபவன் இவன். ‘என் எழவுல கூட விழக்கூடாதுடா’ என்ற தென் தமிழ்நாட்டு பேச்சின் அர்த்தம் கொண்ட யாழ்ப்பாணத்துச் சொல்தான் திரைப்படத்தின் காலத்தை, பூமியை நிர்ணயித்து விடுகிற சொல். அந்தப் புள்ளியில் சென்னையும் காவேரிபுரமும் கரைந்துபோய் யாழ் பூமி துலக்கமாக வெளிப்படுகிறது. இந்தப் புரிதல் ஏற்பட்டவுடன், தமிழ் அறியாத ‘அந்தப் பெண்’ ஒரு சிங்களப்பெண் தான் என்பதும் தெளிவாகிவிடுகிறது. தனது சமையலறையின் ‘சைவப் புனி தத்தை’ காத்துக்கொள்ள மகனின் ‘மனைவி’ தனியாக சமைத்துக் கொள்ளவேண்டுமென கட்டளையிடுகிறான். பிரசவிக்கப் போய்விடும் மகள் இல்லாத வீட்டில் தானே சமைக்க முனைந்து உதவவரும் மகனை உதாசீனம் செய்கிறான். இதெற்கெல்லாம் முத்தாய்ப்பாக தான் வாதம் வந்து கிடந்தபோது, இடத்தைவிட்டு அகலாமல் மருத்துவமனையில் பார்த்துக் கொண்ட ‘விஜிஅம்மா’ என்ற இரண்டாவது மனைவி அல்லது காதலியையும் அவளது மகளையும், தன் வீட்டில் ‘சேர்த்துக்’ கொள்பவனில்லை இந்த வெள்ளாளன். அக்கா பிரசவத்திற்குப் போய்விட்டாள் என்று அறிந்து அப்பனுக்கு சோறு கொண்டுவரும் ‘மகளிடம்’ தான் ‘வெளிச்சோறு’ சாப்பிடமாட்டேனென்பது தெரியாதா, என்று பொய் வீம்பு பேசும் மனிதன் பாலு மகேந்திராவின் பூர்விகப் பிரதேசத்தின் ‘ஒரு நாளைய’ ‘மன(ண)ம்’ மாறாத மனிதன். ஆனாலும், அவன் ‘மகளை’ ‘நீ யார்’ என்று கேட்பதில்லை. மாறாக அப்பனின் அதிகாரம் குறையாமல் ‘ஏண்டி பள்ளிக்கூடத்துக்கு போகலயா’ என்றுமட்டும் தன் உரிமையை நிலைநாட்டுகிறான். யாழ் வாழ்வின் அச்சு அசலான அடையாளங்களோடு பதிவாகியிருக்கும் இந்த உறவு மிக முக்கியமானது. சிறுவயதிலேயே தாயை (அக்காவின் சாயலிலான அம்மா) இழந்துவிட்ட டாக்டர் சிவராமனுக்கு ‘விஜிஅம்மா’ நினைவிருக்கிறது. திரைப்படத்தின் எந்த பிரேமிலும் வராத ‘விஜி அம்மா’ திரைப்படத்தின் மிக முக்கியமான பாத்திரம். ‘மகள்’ இயல்பாகவும் உரிமையாகவும் வந்து போகும் வீட்டிற்கு ‘விஜிஅம்மா’ வருவதேயில்லை. அந்த சிறுபெண்ணும் சுப்புவின் நேரடி ‘மகள்’ என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை. ஆனால், ‘விஜி அம்மா’ வேற்று சாதிப்பெண், அவர்களுக்கிடையிலான உறவு முறைப்படியான அல்லது அங்கீகரிக்கப்பட்ட உறவில்லை என்பது மட்டும் தெளிவாக இருக்கிறது.

வீம்பும் வீராப்புமான ‘பிள்ளை’ சற்று நெகிழ்வது மகனின் பரிவான சிசுருக்ஷையில் என்றால், கரைந்து அழுது விடுவது பேரனை இனம்கண்டு கொள்ளும் போதுதான்.

‘சந்தியாராகத்’தில் மனைவி விசாலாட்சி இறந்ததும் சொக்கலிங்க பாக வதர் அழும் அழுகையும், இங்கு ‘சுப்பு’வின் அழுகையும் நேரெதிர் தளங்களில் இயங்குபவை. அழுகை அதுவரையிலான ‘கம்பீரத்தை’ குலைப்பதில் ஒரேவிதமாக செயல்பட்டபோதும், ஒன்று நிராதரவாகி நிற்கும் அவலத்தையும், மற்றொன்று மீண்டுவிட்ட அல்லது தொடரப்போகும் ‘தன் அடையாளத்தை’ கண்டுகொண்டதன் நெகிழ்வின் வெளிப்பாடாகின்றது. தமிழ் வாத்தியாரான தாத்தாவுக்கு ‘தன் தொடர்ச்சி’ தமிழ் மொழியின்றி இருப்பதுதான் பெரும் அதிர்ச்சி. தன் இருப்பின் ஆதாரமான தன் மொழியை பேரனுக்குக் கடத்துவதில்தான் தன் தொடர்ச்சி உறுதியாகிறது என்ற சிந்தனை வந்ததும் திட்டங்கள் தெளிவாகின்றன. மகள் வயிற்றுப்பிள்ளைகளான மூன்று பேரப்‘பிள்ளைகள்’ இருந்தபோதும், மகனின் மகன் தொடர்ச்சியின் அதிகாரப்பூர்வமான அடையாளமாகிறான். அவன் தமிழ் கற்றுக்கொள்வதும், அதன்வழியாக ‘ஆதித்யா பிள்ளை’ ஆவதும் ‘சுப்புபிள்ளை’யின் ஆதர்சமாகின்றன. இந்தத் தொடர்ச்சியை உறுதி செய்யும் போக்கினை நிறுவும் காரியத்தில் துணை புரிபவள் ஸ்டெல்லா. ‘ஆதரவற்றோர் பள்ளி’யில் வளர்ந்து மருத்துவராகியிருக்கும் அந்த கிறித்தவப் பெண்ணுக்குக் கொண்டாட எந்தப் ‘பூர்வீகமும்’ இல்லை. எனவே இனம், மொழி, கலாசாரம் எனபது தன் கணவனது அடையாளம் சார்ந்ததாய் இருப்பதில் அவளுக்கு எந்த ஆட்சேபமுமில்லை. ஸ்டெல்லாவின் இந்த நடவடிக்கையே திரைப்படத்தின் ‘காலத்தை’ நிர்ணயிக்க உதவும் முக்கிய காரணி. 2013ஆம் ஆண்டில் இப்படி ஒரு தீர்மானம் சாத்தியமா என்பது கேள்விக்குரிய ஒன்று. பன்மைத்துவமும் பெண்ணியப் பார்வைகளும் பெருமளவில் துலக்கமடைந்துவரும் நாளில், பொருளாதார சுதந்திரமும் சமுகத் ‘தன்னிருப்பும்’ கொண்ட பெண்ணொருத்தி, இந்தவிதமான ‘புரிதலை’ பெறுவது சாத்தியமற்றதும் விரும்பத்தக்கதும் அல்லாமல் ஆகிவிடும் வாய்ப்பு மிக அதிகம். எனவேதான், இது பிரதானமாக அறுபதுகள் மற்றும் எழுபதுகளின் ‘மனநிலை’ எனத் தீர்மானிக்க வேண்டியதாகிறது. அதேபோல் திரைப்படத்தின் மொத்தப் பரப்பிலும் நிலப்பிரபுத்துவ விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதான போக்கும் பிரதானமாகிறது. சிவன் கோவில் சன்னிதானத்தில் நெல் பரப்பி ‘அ’ எழுதும் ஆதித்யா, அவனது ஆதித்யா பிள்ளையாக்கப்படுவதற்கான முனைப்பு எழும்போது சாதியை எதிர் கொள்ள வேண்டியவனாகிறான். சுப்புவின் சாதியத்தை மட்டுப்படுத்த கதைப் பரப்பில் வலிந்து நுழைக்கப்பட்டிருக்கிறார் ஒரு கிறித்துவப் பாதிரி. நாலு கிலோமிட்டர் நடந்துபோனால் மட்டுமே அடையக்கூடிய தேவாலயம் ஒன்று எங்கோ இருக்க பாதிரி மட்டும் அங்கியுடன் திரைப்படத்தின் பலகாட்சிகளில் பிரசன்னமாகிறார். அவரது இருப்பின் நோக்கம் சுப்புவின் ‘சாதிய விலக்கத்தை’ சாத்தியமாக்க மட்டுமே. இந்தப் புள்ளியில் யாழ் பகுதி கிறித்தவ வெள்ளாளர்கள் ஓரளவில் தங்களது பூர்வீக சைவத்தையும், கிறித்துவத்தையும் ஒருசேர கைக்கொள்பவர்களோ என்ற ஐயத்தை நானறிந்த புலம்பெயர் வாழ்விலிருந்து ‘கந்தசஷ்டி’க்கும், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும் வரும் ‘பாலசிங்கங்கள்’ உருவாக்கியபடி இருக்கிறார்கள். இதற்கு இணையாக திருப்பதி வெங்கடாசலபதியை வணங்க வரும் ‘பௌத்தப் புனிதன்’ ராஜபக்சேவும் நம்மைக் குழப்புபவர்களே. இலங்கையின் இறை நம்பிக்கைகள் தெளிவற்றுக் கலக்கும் தன்மை கொண்டவையோ என்ற ஐயம் எழாமலில்லை.

ஒருபுள்ளியில் ‘சாதியை விட்டுவிடும்’(!?) சுப்புவிற்கு பேரனிடம் ஒரே வேண்டுகோள்தான் மிச்சமாகிறது. அது ‘தாத்தாவையும் தமிழையும் மறந்து விடாதே’ என்பதே. பிற அடையாளங்களெல்லாம் பின் சென்றுவிட தாத்தாவும், தமிழும் ஒன்றாகி ஆதித்யாவின் பிரதான அடையாளமாகிறது. தமிழ் எனும் அடையாளத்தில் தன் இன்னபிற அடையாளங்களை கரைத்து விடுகிறான் ஆதித்யா. கவிதை நூலுக்கான விழா நடக்கும் அரங்கம் 2032இல் என்று காட்டப்பட்டாலும் அதன் அமைப்பு சமகால அடையாளங்கள் மட்டுமே கொண்டது. அது 2013ஆம் ஆண்டுதான். தாத்தாவின் மரணம் நேர்ந்தது தோராயமாக 1983களில் என அனுமானிக்க முடியும். அந்தவகையில் இறுதியில் பேச்சின்றி கண்ணீர் சொட்ட நிற்கும் ஆதித்யா தமிழின் / தமிழனின் உருவக அடையாளமாகிறான். இடையில் கடந்துவிட்ட முப்பது ஆண்டுகால வலிகளையும் துயரங்களையும் பேரிழப்புகளையும் கண்ணீரோடு கடந்துவிட முயல்கிறான். அதில் இணைகிறோம் பாலு மகேந்திராவோடு நாமும்.


http://www.kaatchippizhai.com/index.php?option=com_content&view=article&id=496:2014-01-20-08-39-55&catid=71:january-2014

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் படம் பார்க்க வில்லை . ஆனால் இவ்வளவு அலசல் இருக்கும் ஒரு திரைப்படம் நிச்சயம் சிறந்த படமாகவே இருக்கும்

இணைப்புக்கு நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலைக் கவனியுங்கள். நாயகனுக்கும் நாயகிக்கும் இடையில் பெரியளவு நெருக்கமான காட்சிகள் இல்லை. ஆனால் காமமும் விரகமும் ததும்பித் தளும்பும் பாடல். கருப்பு நிறத்தை அழகியல் கொண்டாட்டமாக மாற்றிய பாலுமகேந்திரா, அதைத் ‘திராவிட அழகு’ என்று குறிப்பிடவும் செய்தார். தமிழ் சினிமா ரசிகனுக்குப் பின்னணி இசை குறித்த பிரக்ஞை எப்படி இளையராஜாவின் வருகைக்குப் பிறகு உருவானதோ, அதுபோல ஒளிப்பதிவு குறித்த பிரக்ஞை பாலுமகேந்திராவின் வருகையால் சாத்தியமானது. ‘வீடு’, ‘சந்தியாராகம்’ வரிசையில் அவரது ‘மறுபடியும்’ முக்கியமான படம். ரெட்டைவால் குருவி, சதிலீலாவதி ஆகியவை இருதார மணம் கொண்ட ஒரு ஆணின் சிக்கலை காமெடியாகச் சொன்னவை. ஆனாலும் அந்தப் படங்கள் ஆணின் பார்வையிலிருந்தே பேசியது. ‘மறுபடியும்’ முற்றிலுமாக ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து இந்தச் சிக்கலை அணுகிய படம். ஆனால் அவர் ஏன் ‘அது ஒரு கனாக்காலம்’, ‘ஜூலி கணபதி’ மாதிரியான சுமாரான படங்களை எடுத்தார் என்று தெரியவில்லை. மேலும் ஆர்ட் பிலிம் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கும் கலைப்படங்களில் எல்லாக் காட்சிகளும் மெதுவாகத்தான் நிகழும் என்ற எண்ணம் ஏற்படவும் அவரது படங்கள் காரணமாயின. மணிவண்ணனின் ‘நாகராஜ சோழன்’ போல அல்லாமல் தான் விரும்பியபடி தனது கடைசிப்படத்தை அமைத்துக்கொண்ட வகையில் திருப்தியான முடிவெய்திருக்கிறார் பாலுமகேந்திரா

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாலு மகேந்திரா... தமிழ் சினிமாவின் வீடு!- இயக்குநர் ராம்
எங்கள் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு தாய் மண்ணின்மீது தாளாத பாசம். அங்கே அவர் வசித்த வீடு, வளர்த்த மாடு, அவரது அப்பா அவரது பால்யம் ஈழம் தொடர்பான கவலை எப்போதும் அவர் பேச்சில் ஒலிக்கும்.சினிமாவைத் தாண்டி பணம் பற்றியோ, வீடு பற்றியோ என்றைக்குமே அவர் யோசித்ததே இல்லை. 'வீடு’ படத்துக்காக ஒரு இடம் வாங்கிய போது தானாகவே ஒரு வீடு முளைத்தது. கதைப்படி பாதி கட்டிமுடிக்கப்பட்ட வீடு வெகுகாலம் பாதியிலேயே நின்று, பிறகுதான் முழுமை பெற்றது. அந்த வீட்டில் அவர் மாட்டிய புகைப்படம் 'வீடு’ படத்தில் நடித்த சொக்கலிங்க பாகவதர் படத்தைத்தான்.

அங்கே வருகின்ற எல்லோரிடமும் அந்த வீடு சொக்கலிங்க பாகவதர் வீடு என்று சொன்னார். அந்த வீடு பாகவதர் வீடு மட்டுமல்ல... பல உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஜாம்பவான்கள், இயக்குநர்கள், மாபெரும் நடிகர்கள், நடிகைகளின் வீடு. மொத்தத்தில் அது தமிழ் சினிமாவின் வீடு. அங்கே இரண்டு நாட்களுக்கு முன்பு சொக்கலிங்க பாகவதர் மகன் வந்த போது, தனது தந்தையின் போட்டோ ஹாலில் மாட்டியிருப்பதைப் பார்த்து கண் கலங்கினார்.

அந்த வீட்டுக்கு அணில்களும் பூனைக் குட்டிகளும் அனுதினமும் வரும். அவற்றுக்குத் தினமும் உணவு வைக்கும் அவர், 'இன்று முதல் இல்லை’ என்கிற செய்தியை அவற்றுக்கு யார் சொல்லுவார்? இனிமேல் என் மனம் கனக்கும்போது, யாரிடம்போய் நான் அழ முடியும்?

நான் இந்தியில் டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷியிடம் வேலை பார்த்தேன். அதன்பின் தனியாகப் படத்தை டைரக்ஷன் செய்ய இறங்கினேன். நான் பாலு மகேந்திரா சாரின் கேமராவுக்கு அடிமை. அதனால் என் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அவரை அணுகினேன்.

அப்போது 'அது ஒரு கனாக் காலம்’ படத்தை இயக்கிக்கொண்டு இருந்தார். கவிஞர் நா.முத்துக்குமார் அறிமுகத்தோடு டைரக்டரை அவரது அலுவலகத்தில் சந்திக்கப் போனேன். அப்போது என் கையில் சுத்தமாக பணமில்லை. முகத்தைக் கணித்து மனதைப் படிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. என் முகத்தைப் பார்த்தவுடன் ''சாப்பிட்டியா...?'' என்று அக்கறையாகக் கேட்டவர், உடனே தன் கையால் பிரெட்டும் சிக்கனும் வைத்து சாப்பிடக் கொடுத்தார்.

இன்னொரு நாள் அலுவலகத்துக்குப் போனேன். அப்போதும் என்னைக் கணித்தவர் உடனே தனது பர்ஸிலிருந்த 1,000 ரூபாயை எடுத்தார். 'இந்தா எனக்கு 500, உனக்கு 500 ஓகே-வா?’ என்றபடி பதிலை எதிர்பார்க்காமல் சட்டைப் பையில் பணத்தைத் திணித்தார்.

நான் அவரது அன்பில் கரைந்து போனேன். அதன்பின், 'அது ஒரு கனாக் காலம்’ படத்தில் சில நாள் உதவியாளராக வேலை பார்த்தேன். பிறகு நான் 'கற்றது தமிழ்’ இயக்கும்வரை அவரோடுதான் இருந்தேன்.

இப்போது குடியிருக்கும் சாலிகிராமம் வீடுகூட அவராக விரும்பி வாங்கியது இல்லை. அவரிடம் புரொடக்ஷன் மேனேஜராக வேலை பார்த்தவர் சண்டை போட்டுப் பிடிவாதமாக வாங்கிக் கொடுத்த வீடு. சொந்த ஊரைவிட்டு ஓடிவந்து திரிந்த முருகன் என்பவரை அழைத்து வந்து வீட்டில் சோறு போட்டு கல்யாணம் செய்து வைத்து, இப்போது தனது தயாரிப்பு நிர்வாகி பதவியும் கொடுத்து அழகு பார்த்தார். திக்கு தெரியாமல் திண்டாடிய பாஸ்கரன் என்பவரை வளர்த்து வந்தார். 

கோவையில் குடும்பத்தோடு என் மகள் பிறந்தநாளை கொண்டாடப் போகிறேன். அதற்கு நீங்கள் வரவேண்டும்...’ என்று கேட்டேன். 'பேத்தி பிறந்தநாளுக்கு தாத்தா வராமல் இருப்பேனா...’ என்று உரிமையாகச் சொன்னதோடு, கோவைக்கும் தேடிவந்து என் உறவினர்கள் மத்தியில் எனக்கு சிறப்புத் தேடித் தந்தார். என் வீட்டுக்கு வந்தபோது என் மகளை அவரே தனது கேமராவால் குழந்தை மாதிரி விதவிதமாய் ரசித்து ரசித்து போட்டோ எடுத்துக் கொடுத்தார். அவர் எடுத்த போட்டோதான் இப்போதும் என் வீட்டை அலங்கரிக்கிறது.

கடந்த தி.மு.க ஆட்சியில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம்  நடந்த முதல் நாள் இயக்குநருக்குக் கடுமையான காய்ச்சல். அதைப் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் யார் சொல்லியும் கேட்காமல் 3 மணி நேரம் நின்றார்.

கடந்த 11-ம் தேதி அன்று எப்போதும் போல் அலுவலகம் வந்திருக்கிறார். அன்று தன்னுடைய மாணவர்களோடு இணைந்து அவரது சினிமா பட்டறையில் அவர் இயக்கிய முதல் படமான 'அழியாத கோலங்கள்’ படம்தான் அவர் கண்கள் பார்த்த கடைசி படம்.

திரைப்படத்தைப் பார்த்து முடித்தவர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். பின்பு இயல்புக்கு வந்தவர், தன் மாணவர்களிடம், ''சினிமா கலைஞன் சினிமாவில் தன்னுடைய பலம் உச்சத்தில் இருக்கும்போதே மரணித்துப் போக வேண்டும்'' என்று உருக்கமாகச் சொன்னார்.

12-ம் தேதி இரவு வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுவிட்டு படுத்திருக்கிறார். அதிகாலை 5 மணிக்கு அகிலா அம்மா எழுப்பியிருக்கிறார். சுயநினைவில்லாமல் இருந்த இயக்குநரைப் பார்த்துப் பதறிப்போய் வடபழனி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார். டாக்டர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல் 13-ம் தேதி காலை 11-30 மணிக்கு உயிர் பிரிந்து விட்டது.

சினிமாவை சுவாசித்த ஒரு திரைக் கலைஞனின் உடல் அவரது சினிமா பட்டறையிலேயே கிடத்தப்பட்டிருப்பது அவர் எந்த அளவுக்கு சினிமாவை நேசித்தார் என்பதற்குச் சான்று.

தமிழ் சினிமாவுக்கு சினிமா மொழியை சொல்லிக் கொடுத்தவர் இன்று பேசா மௌனத்தோடு நிரந்தர உறக்கத்தில் இருப்பதைப் பார்க்கும்போது என் கண்களை மறைக்கிறது கண்ணீர் திரை.

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

பாலுமகேந்திராவின் சந்தியாராகம் (Sandhya Raagam) – காலத்தைக் கடந்த ஒரு படைப்பு

 
sandhya-raagam1-186x107.jpg

ஜூன் 9 2012, சனிக்கிழமை மாலை தற்செயலாக பாலுமகேந்திராவின் சந்தியாராகம் படம் எம்.எம் திரையரங்கத்தில் (M.M Theater) பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. இது தமிழ் ஸ்டுடியோ-வினரால் அரிய திரைப்படம் திரையிடல் என்ற நிகழ்வின் கீழ் நடாத்தப்பட்டது.  அவர்களுக்கு பாரட்டுக்கள்.

சந்தியாராகம் முதன் முதலில் பார்த்தது எனது மாணவப்பருவத்தில் என்பதாக ஞாபகம், அப்பொழுதே அதன் முழு ஆளுமை புரியாவிடினும் அது என்னுள் தாக்கத்தை புரிந்தே சென்றது ஏனெனில் எப்பொழுதும் நல்ல படங்கள் என்ற வரிசையில் அதனை என் நண்பர்களிடம் கூறுவேன். அது நடந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகி விட்டன ஆயினும் இன்றும் சந்தியாராகம் என்னைப் திரும்பவும் பாதித்தது. ஒரே ஒரு வித்தியாசம் முன்னர் பார்க்கும் போது கலரில் பார்த்ததாக நினவு. ஆனால் இம்முறை கறுப்பு வெள்ளையில் பார்க்கும் போது அதன் பதிவுகள் ஆளமாய் தெரிந்தன. பாலுமகேந்திராவும் கறுப்பு-வெள்ளயில் திரையிடவே விரும்பினார். ஏனெனில் கறுப்பு-வெள்ளையில் கதையின் பாத்திரங்கள் மட்டுமே அழுத்தத்தை கொடுக்கின்றன, இதனால் படம் இயக்குபவரின் நேர்த்தி மட்டுமே கதையின் ஆளுமையைச் செய்கின்றன இதில் சிறு பிழை விட்டாலும் படம் பார்ப்வர்களுக்கு தெரிந்துவிடும். அத்துடன் இப்படத்தில் குறைவான ஒலியே பயன் படுத்தப்பட்டுள்ளது. இங்கு காட்ச்சிப்படுத்தலும் நடிப்பவரின் இயல்பான நடிப்பும்தான் கதையைச் சொல்கின்றன.

sandhya-raagam2.jpg

இது இந்திய சினிமாவில் தலை சிறந்த படங்களில் ஒன்றாக இருக்ககூடியது என்ற பொழுதிலும் இதனைப் பல பேர் அறிந்திருக்கவில்லை. எப்பொழுதோ ஒருமுறை தூர்தர்சனில் போட்டதுடன் சரி (ஏனெனில் இது ஒரு  தூர்தர்சன் தாயரிப்பு).  இன்று இதன் ஒரு மூலப்பிரதி (Negatives) கூடக் கிடைக்காமல் எங்கோ கிடைத்த குறுந்தட்டுப் பிரதியின் மூலமே படத்தைப் பார்க்க நேர்ந்தது வேதனை அழித்தது. இதே நிலமை தான் வீடு படத்திற்கும் என்பதை பாலு மகேந்திரா சொல்லும் போது அந்தக் கலைஞ்ஞனுக்கு எவ்வளவு வலியை கொடுத்திருக்கும் என்பதை உணரக்கூடியதாக உள்ளது. இது தமிழ்நாடு  பெரிய திரைப்படத்துறையை (film industry) வைத்துள்ள போதும் எவ்வளவு பின் தங்கியுள்ளது என்பதை உணர்த்தியது. இவ்வளவு காலத்திற்கு ஒரு மூலப்பிரதி காப்பகம் இல்லை என்பதை மிகவும் வேதனையுடன் அந்தக்கலைஞ்ஞன் சொல்லும் போது ஒரு நெருடலாகவே இருந்தது.

sandhya-raagam6.jpg

இது ஒரு முதியவரின் கதையென்ற பொழுதிலும் – இது பொதுவான முதியவர்களின் பிரச்சனைகளை அவர்களின் வாழ்வை, அவர்களின் கௌரவத்தை (dignity), அவர்களின் ஆசைகளை, தெளிவாகப் படம்போட்டுக் காட்டுவதுடன், நகரமயமாதலில் நகர மையக்கருக் குடும்பங்களில் (nuclear family) எவ்வாறு முதியவர்கள் (சிலவேளைகளில் தவிர்க்கமுடியாமல்) புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பதையும் தெளிவாகக்காட்டி நிற்கின்றது. இது எண்பதுகளில் எடுக்கப்பட்ட பொழுதிலும் அது இன்றைய நிலையிலும், இனிவரும் காலங்களிலும் இது பொருந்தக்கூடியதாக உள்ளது, ஒரு சிறந்த கலைஞ்ஞனின் படைப்பானது காலத்தையும் வென்று நிற்கும் என்பதைப் பறை சாற்றி நிற்கின்றது.

sandhya-raagam20.jpg

கதையில் வீட்டிலிருந்து வெளிக்கிடும் முதியவர் (சொக்கலிங்க பாகவதர்) தனது விருப்பத்திற்கு ஏற்றபடி சுற்றித்திரிகின்றார். வயதுகள் ஏறியபொழுதும் மனசு எப்பொழுதும் இழமையாகவே இருக்கும் என்பதை இந்தக் குறும்பதிவுகள் ஆழமாகக் காட்டிச் செல்கின்றன. குளத்தில் கல்லெறிந்து அது தத்திதிச் செல்வதை ரசித்தல், பம்ம்பரம் சுற்றும் சிறுவர்களை வேடிக்கை பார்த்து பின்னர் அதிலிருந்த ஒரு சிறுவன் முதியவரின் கையில் பம்பரத்தை விடும்பொழுது அதை ஆசையாக பார்த்தல் போன்றன அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆசைக்கு வயதில்லை என்பதையும் வயதாக முதியவர்கள் குழந்தையைப் போல் நடக்க முற்படுவதும் தெளிவாகக் காட்ச்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

sandhya-raagam19.jpg

பின்னர் டீ கடையில் நடக்கும் இயல்பான  சம்பாசணையில் பிள்ளைகளை எதிர்பார்த்திருக்கும் முதியவர்களின் ஏக்கங்கள் பதியப்படுகின்றன. இதற்கிடையில் வீட்டில் முதியவரின் மனைவி அரிசியை துப்பரவு செய்து கொண்டிருக்கும் பொழுது அதில் விழும் தானியங்களை தின்பதற்காக நிற்கும் தாய் கோழியைப் பார்த்து அவள் சொல்லும் வார்த்தைகள் நெஞ்சைத் தைக்கின்றன. அதில் அவள் கூறுவாள்: பொத்திப் பொத்தி வள கொஞ்ச நாளில் குஞ்சுகள் எல்லாம் விட்டு விட்டு போய் விடும் என்பதைப் போல் சொல்லுவது, அவளின் தனிமையையும் ஏக்கத்தையும் உரித்துக் காட்டுகின்றது. அத்துடன் ஆண்கள் வயதானாலும் அவர்களுக்கென்ற ஒரு உலகம் இருப்பதையும் ஆனால் வீட்டில் இருக்கும் தாய்மாருக்கு பழகுவதற்கு ஒருவரும் இல்லாத நிலையையும் இந்தக் காட்சி சித்தரித்து நிற்கின்றது.

பின்னர் முதியவர் வீடு திரும்பும் போது காட்சிப் படிமங்கள் வெகு நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கின்றது. காலைக் கழுவி விட்டு சாப்பாடு கேட்கும் முதியவர், பதில் வராது கண்டு உள் நுழையும் போது காட்டப்படும் காட்ச்சியில் பதிவுகள் அற்புதமாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. கீரையுடன் முதியவள், கிட்டச்சென்று எழுப்பும் முதியவர், சரிந்துவிழும் அவள் உடல், எரியும் அடுப்பு பின்னர் எரியும் அவள் உடல் என்பன காட்ச்சிப் படிமங்களினூடாக கதைசொல்லும் நேர்த்தியைச் சொல்லிச்செல்லுகின்றன. இதில் திரைமொழி வார்த்தைகளைத்தாண்டி மிக விரிந்து மனங்களை கையகப்படுத்தி விடுகின்றது.

அதன் பின் நகரும் காட்ச்சிகளும் வார்த்தைகளில்லாமல் பரிணமிக்கின்றன. முதியவர் ரயிலில் பயணம் செய்தல், பின்னர் எல். ஐ. சி. கட்டிடம் என்று மிகவேகமாகவும், கதையை நேர்த்தியாகச் சொல்லிய வண்ணமும் வார்த்தைகளின்றி திரைமொழி நகருகின்றது.

sandhya-raagam16.jpg

அதன் பின்னர் தேடிச்சென்று அவரது தம்பியின் மகன் வீட்டை அடைதலிருந்து நகர வாழ்வின் அவலங்கள் சித்தரிக்கப்படுகின்றது. அச்சகத்தில் வேலைபார்க்கும் அவரின் மகன் (தம்பியின் மகன் – ஓவியர் வீர. சந்தானம்), மகனின் மனைவி (அர்ச்சனா) அவர்களின் சிறு மகள், ஒரு வீட்டில் பல குடும்பங்கள், அதில் ஒரு அறையில் அவர்கள் வசிப்பதுமாக நகரவாழ்வின் பொதுவான நிலைமைகளைச் சித்தரிக்கின்றன. அவர் குளிப்பதற்கு மருமகள் எடுத்துவைத்த தண்ணிவாளியை கண்டு அவர் அரண்டு போய் குழாயைத்திறந்து பார்ப்பதுவும் அதில் தண்ணி எப்பொழுதாவதுதான் வரும் என்பதை மருமகள் சொல்வதும் குளத்தில் குளித்தவருக்கு எப்படி நகரவாழ்வென்று சிறிது உணர்த்துவாதாக அவரின் நகர் வாழ்வு தொடங்குகின்றது.

sandhya-raagam14.jpg

முதியவரின் மகனின் சம்பளம் அவர்களது குடும்பத்திற்கே போதாமல் உள்ளதும் மருமகளும் கர்ப்பமாகியுள்ளதால் வரும் செலவுகளும் அவர்களை திண்டாடவைக்கின்றன. மருமகள் அவரை உபசரித்த போதும் அவர் இங்கேயே தங்கிவிட்டால் என்ன செய்வது எப்படிச் சமாளிப்பதென்ற பயமும் ஆட்கொள்ள, அதனைக்  கணவனிடம் கேட்க அவன் தன்னை ஐந்து வருடன் சோறு போட்டு வளத்தவரை நான் எப்படி போய் கேட்பது என்று கோபம் கொள்வதும் விறாந்தையில் படுத்திருந்த முதியவரைச் சங்கடப்படுத்தியபோதும் அவரும் ஒன்றும் செய்யமுடியாது இருத்தலும் முதுமையின் சுமையை உணர்த்தி நிற்கின்றன.

sandhya-raagam15.jpg

பின்னே அவர் வாழ்வு பேத்தியுடன் சந்தோசமாய் நகருதலும் அவர்களுக்கிடையிலான உறவும் அழகாகக் காட்ச்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன் அங்கேயிருக்கும் இன்னொரு வாயோதிபரும் இவருக்கு நண்பராகின்றார். அவர் சொல்லுவார்தனக்கு மூதியோர் இல்லம் போகத்தான் விருப்பம் ஆனாலும் அவரது மகன்கள் மரியாதையில்லை என்று சொல்லி தன்னைப்போட்டு முறித்தெடுக்கின்றார்கள் என்று கூறுவதும் இன்றைய வாழ்வின் நிதர்சனங்களைக்கூறிச்செல்கின்றன.

ஆயினும்  அவரது சின்னச் சந்தோசமும் தொடர்ச்சியாக நிலைக்கவில்லை ஏனெனில் அவர் பேத்திக்கு வாங்கிக்கொடுத்த வடையால் (food poisioning) உணவு நஞ்சாகி பேத்திக்கு உடல்நலம் குன்றியதால் மருமகள் கடிந்து கொள்வதும் அவரை வெகுவாகப் பாதித்து அவர் சொல்லாமல் முதியோர் இல்லத்திற்கும் போவதுமாகக் காட்ச்சி நகருகின்றது. முதியோர் இல்லத்தில் ஏன் நீங்கள் இங்கு வருகின்றீர்கள் உங்களின் மகனின் சம்பளம் போதுமாகத்தானே உள்ளதென்ற பொழுது அவர் தான் கடைசிவரையும் மரியாதையுடன் வாழவிரும்புவதாகச் சொல்வதும் பொதுவான வயதானவர்களின் மனநிலையைச் சித்தரிக்கின்றது.

sandhya-raagam11.jpg

மருமகள் பின்னர் குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டு கவலைப்படுவதும் பின்னர் அவரது கடிதம் கண்டு அவரைத்தேடிச்சென்று அவரை வீட்டிற்கு வரும் படி கூப்பிடுவதும் அதனை அவர் நாகரிகமாக மறுப்பதும் அழகாகக் காட்டப்படுகின்றன.

பின்னர் மருமகளுக்கு பிள்ளை பிறக்க  போய் பார்த்து போர்வையைத் தூக்கிப்பார்த்து அது ஆண் பிள்ளையென்றதும் சந்தோசப்படுவதும் வயதானலும் அவருக்குள் இருக்கும் ஆண் சிந்தனை மாறவில்லை என்பதை காட்டி நிற்கின்றது.

படம் முடியும் போது முதியவரின் விரல்கள் பேரனின் விரலைப் பிடித்த படி காட்ச்சிப்படுத்தப்பட்டு உறவுகளின் நம்பிக்கையை படரவிட்டு செல்கின்றது.

இதில் நடித்த சொக்கலிங்க பாகவதர் அந்த பாத்திரத்தில் அப்படியே வாழ்ந்துள்ளார். அர்ச்சனாவும் சந்தானமும் தமது பாத்திரங்களை மிகவும் நேர்த்தியியாகவே செய்துள்ளார்கள்.

படம் பார்த்தவர்களில் 90%-மேல் இளம் தலைமுறையினராக இருந்தபோதும் படம் பார்த்தபின் நிலவிய அமைதி அவர்களை இந்தப்படம் எவ்வளவுதூரம் பாதித்துள்ளதென்பதைக் காட்டியது. அதுவே ஒரு கலைஞ்ஞனின் வெற்றியை அவனுக்கு உரத்துக் கூறியிருக்கும்.

இதில் நடித்தவர்கள்:

சொக்கலிங்க பாகவதர்

அர்ச்சனா

ஓவியர் வீர சந்தானம்

டி.எஸ். ராஜலஷ்மி

டைரக்ரர் பாலா (துணை இயக்குனர், நடிகர்)

இசை: எல். வைத்தியநாதன்

இயக்கம்: பாலு மகேந்திரா

விருது: தேசிய விருது -1990

மாலியன்

ஜீன் 12-12

நன்றி: mix.looktamil.com

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.