Jump to content

முல்லையில் கொந்தளிக்கும் மீனவர் பிரச்சினை , என்னதான் நடக்கிறது முல்லைக் கரையில்?


Recommended Posts

முல்லையில் கொந்தளிக்கும் மீனவர் பிரச்சினை
 
Mullai-Fishing1-300x225.jpg
கொழும்பு மிரருக்காக ஜெரா
 
முல்லைத்தீவும் கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது.  கடவுளாக மதிக்கும் கடல், காலணியோடு கால் தடம் பதிக்காத மரியாதையுக்கும் – புனிதத்துக்குமுரிய கடவுள், தம்மிடமிருந்து பறிக்கப்படுவதை எதிர்க்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
 
வடக்கில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள், இந்தப் போராட்டம் தொடங்கியும் ஆறு ஆண்டுகள்தான். இலங்கையில் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளைக் கடந்த விழா தெற்கே மிடுக்குடன் கொண்டாடப்பட்டுக்கொண்டு இருக்கையில் முல்லைத்தீவு மீனவர்கள் தம் கடல் வளத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 
அடிக்கடி அத்துமீறும் இந்திய மீனவர்களின் அட்டகாசங்களினால் அவலத்தைச் சந்தித்துவரும் இந்த மீனவர்கள், இப்போது உள்ளூர் சட்டங்களை அமுல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
 

Mullai-fishing4.jpg

 

Mullai-fishing5.jpg

என்னதான் நடக்கிறது முல்லைக் கரையில்?
 
போர் ஓய்வுக்கு வந்தவுடன் முல்லைத்தீவின் கொக்குளாய், நாயாறு பகுதிகளில் பரவலான சிங்கள குடியேற்றங்கள் நடந்ததைப் பல ஊடகங்களும் பதிவுசெய்திருந்தன. அப்படிக் குடியேறியவர்கள் அனைவரும் சிலாபம், நீர்கொழும்பு பகுதிகளில் இருந்து வந்த சிங்கள மீனவர்கள். அவர்களின் நோக்கம் இந்தப் பகுதிகளில் சீசனுக்குத் தங்கியிருந்து மீன்பிடிப்பதே ஆகும்.
 
ஆனால் அந்த நோக்கம் முல்லைத்தீவுக் கரைகளைத் தொட்டு சில வாரங்கள் மட்டுமே இருந்தது. இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட சிங்கள மீனவர்களுக்கு அனைத்து அத்தாட்சிகளும் வழங்கப்பட்டன. இராணுவம், முல்லைத்தீவு மாவட்ட நீரியல் வள திணைக்கள அதிகாரிகள், நீரியல் வள அமைச்சு என அனைவருமே சிங்கள மீனவர்களை முல்லைக் கரைகளில் நிரந்தரமாகத் தங்கவைப்பதற்கான பணிகளைக் கச்சிதமாகக்  செய்தனர்.
 
கொக்குளாய் தொடக்கம் முல்லைத்தீவு வரை இருந்த தமிழர்களின் ஒன்பது பாடுகள் (கரைவலை தொழில் உரிமங்கள்) மக்களின் எவ்வித அனுமதியுமின்றி 22 பாடுகளாக மாற்றப்பட்டுச் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டன.  எந்தத் தரப்பின் அனுமதியுமின்றி கொக்குளாய் தொடக்கம், சாலை வரை வந்து மீன்பிடிக்க அவர்களுக்கு பூரண சுதந்திரமும் வழங்கப்பட்டது. ஒவ்வொருநாளும் தெற்கிலிருந்து முல்லைத்தீவிற்கு இடம்பெயரும் சிங்களவர்களுக்குப் பதிவுகள் தாராளமாகவே வழங்கப்பட்டன.
 
தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள்
 
சிங்கள மீனவர்கள் இங்கு குடியேறுவதில் விருப்பம் காட்டுவதற்கான பிரதான காரணம் என்னவெனில், முல்லைத்தீவு கடற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் கடல் வளம்தான். முல்லைத்தீவு மாவட்டத் தமிழ் மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதில்லை, அளவுக்கு அதிகமான மீன்களைப் பிடிப்பதில்லை எனப் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றுவதால் இந்தக் கடல் வளம் தேங்கியது. எனவேதான் அவர்கள் இதில் கண் வைத்தனர்.
 

Mullai-Fishing2.jpg

சுருக்கு வலை
 
இந்த வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறை இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் முல்லைத்தீவுக்கு வந்திருக்கும் சிங்கள மீனவர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள். அதனை யாரும் கண்டுகொள்வதில்லை என்கிறார் முல்லைத்தீவு மாவட்ட மீனவ சமாச தலைவர் மரியராசா.
 
“சுருக்கு வலை எனப்படுவது, வழமையான மீன்பிடி வலைகளை விட மிகச் சிறிய துவராங்களை உடையது. முட்டையைவிட்டு வெளியில் வந்த முதல் நாள் மீன் குஞ்சு தொடக்கம், பெரிய சுறா வரைக்கும் இந்த வலைக்குள் அகப்பட்டு விடும். படகை நடுக்கடலில் நிறுத்திவிட்டு, வட்டமாக சுருக்கு வலையை வீசி அப்படியே கடலை அரித்து எடுக்கிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் கடல் பாசியிலிருந்து மீன் குஞ்சுகள் வரை அனைத்தையும் வலை உருவிக்கொண்டு வந்துவிடும்.
 
கடலில் எதுவும் மிஞ்சாது. மீன் குஞ்சுகளை விட்டால்தானே அடுத்த முறை மீன் பிடிக்க கடலில் மீன் இருக்கும்.  எதிர்காலம் பற்றியோ, கடல் வள இருப்புப் பற்றியோ எந்தவித சிந்தனையுமின்றி தடைசெய்யப்பட்ட இந்த முறையைப் பயன்படுத்தி சிங்கள மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர். இதனால் நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோம்” என்று கொழும்பு மிரரிடம் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் மரியதாஸ்.
 
டைனமைற் மீன்பிடி
 
“சுருக்கு வலை மட்டுமல்ல, டைனமைற் அடித்தும் மீன் பிடியில் ஈடுபடுகின்றனர்” என்று அடுத்த குண்டையும் அவரே தூக்கிப் போடுகிறார். அதாவது “இரவில் படகுகளில் வலைகளுடன் நான்கைந்து மின்பிறப்பாக்கி இயந்திரங்களுடனேயே சிங்கள மீனவர்கள் கடலுக்குப் போகின்றனர். கடலில் படகுகளை நிறுத்திவிட்டு, இயந்திரங்களை இயக்கி, பாரிய பரா மின்குமிழ் வெளிச்சத்தைக் கடலினுள் பாய்ச்சுகின்றனர். இரவில் வெளிச்சத்தைக் கண்டால் எந்தப்பெரிய மீன் கூட்டமும் அதனைக் நோக்கிப் பறந்து வரும். மீன்கள் வந்தவுடன், வெளிச்சம் பாய்ச்சப்பட்ட பகுதிக்குள் டைனமைற் குண்டுகளை வீசி வெடிக்கச் செய்கின்றனர். வெளிச்சம் தேடி வந்த குஞ்சு, குறுமான் என எல்லா மீனும் மயங்கி மிதக்கத் தொடங்கும். அதனை வலையை வீசி அள்ளியெடுத்துக் கொண்டு கரைக்குத் திரும்புகின்றனர் சிங்கள மீனவர்கள்.
 
“கடலடியில் மயங்கிய நிலையில் அடித்துச் செல்லும் மீன்கள், மறுநாள் காலை கொக்கிளாய், செம்மலை தொடக்கம், சாலை வரை செத்துக் கரையொதுங்கும். இந்த முறையையும் பயன்படுத்தி மீன்பிடிக்க முடியாது. ஆனால் சிங்கள மீனவர்கள் இதைத்தான் இங்கு செய்கின்றனர். இதனால் கடல்வளம் அழிக்கப்படுவதுடன், இந்த மீனை சாப்பிடுபவர்களுக்கு இரசாயன தாக்கங்களும் ஏற்படுகிறது,” என்றார் மரியதாஸ்.
 
இயந்திரம் இழுக்கும் கரைவலை
 
மீன் பிடியில் கரைவலை எனப்படும் ஒருவகை தொழிலும் உண்டு. குறிப்பிட அளவு கடற்பரப்பை ஒருவருக்கு (சம்மாட்டி) அரச உறுதியுடன் எழுதிக் கொடுக்கப்படும். அவர் தொழிலாளர்களை வைத்து, கரையிலிருந்து ஆள் தெரியும் அளவுக்குளிட்ட  கடல் எல்லைக்குள் வலையை விரித்து மீன்பிடிப்பார். மீன் கரையிலிருந்து அரை வட்ட வடிவில் வலையை விரித்து, விரிக்கப்பட்ட வலையின் இரு அந்தங்களையும் மீனவர்கள் பிடித்துக்குகொண்டு பாட்டுக்கள் பாடிப்பாடி வலை இழுப்பர். அந்த அரைவட்ட வடிவ கடலுக்குள் அகப்படும் மீன்கள் வலையில் சிக்கி கரைக்குக் கொண்டுவரப்படும்.
 
ஆனால் தெற்கில் இதற்கும் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்கள். கரைவலையில் மனிதவலுவைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இயந்திரத்தைப் பயன்படுத்துவது. ஆனால் அதனை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் கடல் வள சுரண்டல் விரைவாக இடம்பெறுவதாகவும், ஆழ்கடல் வரைக்கும் நீண்ட வலைகளை மீனவர்கள் பயன்படுத்துவதால், ஆழ்கடல் மீன்பிடியும் பாதிக்கப்படுவதாகவும் கூறி அந்த இயந்திர மீன்பிடிக்கான அனுமதி வழங்கப்படவில்லை.
 
ஆனால் முல்லைத்தீவுக்கு வந்திருக்கும் சிங்கள மீனவர்கள் இயந்திரத்தை வைத்துக் கரைவலை தொழில் செய்கிறார்கள். கரைவலைக்கென ஒதுக்கப்படும் கடல் எல்லையையும் தாண்டி, ஆழமான கடல் பரப்பு வரைக்கும் வலையை விரித்து கடலை அரித்தெடுக்கிறார்கள்.
 
அட்டைபிடித்தலில் அட்டகாசம்
 
இலங்கைக் கடல் அட்டைகளுக்கு சந்தையில் நல்ல மதிப்பு உண்டு. முல்லைத்தீவை அண்டிய கடல் பகுதியில் கடல் அட்டை வளம் அதிகம். காரணம் இங்கு வாழும் தமிழ் மீனவர்கள் கடல் அட்டை பிடிப்பதை பெரிதாக விரும்புவதில்லை. எனவே இதில் சிங்கள மீனவர்கள்தான் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.
 
கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கெனவும் இலங்கையில் சில சட்டங்கள் உண்டு. அதனைப் பின்பற்றியே கடலட்டைகளைப் பிடிக்க வேண்டும். சிலிண்டர்களின் உதவியுடன் கடலுக்குள் இறங்கி சுழியோடி, கடல் நிலத்தில் ஊர்ந்து திரியும் அட்டைகளையே பிடிக்க முடியும். செயற்கை வெளிச்சம் பயன்படுத்தாது பகலில் இயற்கை வெளிச்சத்தின் உதவியுடனேயே அட்டைகளைப் பிடிக்கலாம். கரையிலிருந்து 20 கிலோமீற்றர்களுக்கு அப்பாலே அட்டைபிடிக்கவும் முடியும். இது சட்டம்.
 
ஆனால் முல்லைத்தீவில் கடலட்டைப் பிடியில் ஈடுபடும் மீனவர்கள் இந்த சட்டங்களை மதிப்பதில்லை. இந்தக் கடலில் 20 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் சுழியோட முடியாது. மிகவும் சுழற்சி கூடிய ஆழமான கடல். எனவே 20 கிலோ மீற்றர்களுக்கு உள்ளேயே, சிலிண்டர்களுடன் இரவில் கடலில் இறங்குகின்றனர் அட்டைபிடிப்பாளர்கள். அதுவும் பாரிய மின்விளக்குகளுடன். கடலுக்குள் பாய்ச்சப்படும் மின் ஒளி நீரைக் கொதிப்படையச் செய்கிறது. ஒளியைக் கண்டு பறந்து வரும் மீன்கள், அந்த நீர் சூடாக உணரப்படுவதால் வந்த வேகத்தில் ஆழ்கடலுக்குத் திரும்பிவிடுகின்றன. இதனால் 20 கிலோ மீற்றர்களுக்குள் தொழில் செய்யும் தமிழ் மீனவர்களுக்கு சிறு தொழிலிலும் எதுவும் கிடைப்பதில்லை.
 
பயனற்ற அதிகாரி தேவையில்லை
 
எனவே இந்த முறைகளைத் தடைசெய்யக் கோரி நீண்டகாலமாகவே முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் போரிடியும், கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். ஆனால் அதனைத் தடைசெய்வதற்கான நடிவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
 
ஐரோப்பிய ஒன்றியத் தடை
 
ஐரோப்பிய நாடுகளுக்கு குறித்த வகை மீன்களை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு இலங்கையாகும். கடந்த 2013 ஆம் ஆண்டில் 74 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான கடற்பொருட்களை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடமிருந்து இறக்குமதி செய்திருந்தது.
 
இலங்கையின் மீன்பிடி முறைகள் சர்வதேச வரன்முறைகளுக்கு அப்பால் பிற்பற்றபடுவதாகக் கூறிக் கடந்த கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கைக் கடற்பொருட்களின் ஏற்றுமதியை முற்றாகத் தடைசெய்திருக்கிறது.
 
இந்தத் தடைக்கு முன்பதாக, இந்த விடயம் தொடர்பில் அப்போதைய அரசிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சுமார் நான்கு வருடங்கள் பேச்சுக்கள் தொடச்சியாக இடம்பெற்றுவந்தன. ஆனாலும் வழமைபோலவே, அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் மஹிந்த ராஜபக்ஷ அரசு கவனம் செலுத்தியிருக்கவில்லை. இதன் பின்னரே கடந்த அக்டோபர் மாதம் விதிக்கப்பட்ட ஐரோப்பியத் தடை இவ்வருடம் ஜனவரி முதல் அமுலுக்கு வந்தது.
 

Mangala_EU-meeting.jpg

ஆனாலும், ஆட்சிப்பீடம் ஏறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசு, மேற்குலத்துடன் தமக்குண்டான நட்பினைப் பாவித்து இந்தத் தடையை நீக்கும் முயற்சியில் இறங்கியது.
 
கடந்த பெப்பிரவரி மாதம் 4 ஆம் திகதி இது குறித்த முக்கிய சந்திப்பொன்று வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர பிறசல்ஸில் நடாத்தியிருந்ததுடன், தடைவிலக்கலுக்காக ஏகப்பட்ட வாக்குறுதிகளையும் வழங்கியிருந்தார்.
 
இந்த விடயம் குறித்த விரிவான செய்திகளை கொழும்பு மிரர்தனது தமிழ், ஆங்கில இணையத்தளங்களில் தொடர்ச்சியாகப் பதிவிட்டிருந்தது.
 
இந்த வாக்குறுதிகளை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அளித்தவாக்குறுதிகளை நிறேவேற்றும் பட்சத்தில் ஐரோப்பாவிற்கான கடற்பொருள் ஏற்றுமதித் தடையை நீக்குவது குறித்துப் பரிசீலிக்கும்படி அது தனது உறுப்பு நாடுகளுக்கு அறிவிக்கும் என்று தெரிவித்தது,
 
இந்த நிலையில் தான் போரினால் மோசமாகக் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மீனவ மக்கள் தமது வாழ்வாதாரத்தைத் தக்கவைக்கும் நோக்கில் தற்போது போராடி வருகிறார்கள்.
 
“தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தும் சிங்கள மீனவர்கள் பக்கம், இராணுவம், முல்லைத்தீவு மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் அதிகாரி, நீரியல் வள அமைச்சு என அனைவரும் இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட எங்கள் பக்கம் யாருமில்லை. அதனால் தான் எங்களுக்குப் பயனற்ற இந்த நீரியல் வள அதிகாரியை மாற்றச் சொல்லி போராட்டம் நடத்துகின்றோம்,” என்கின்றனர் முல்லை வாழ் மீனவர்கள்.
 
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.