Jump to content

நம்பர் 1 மார்க் ஸூக்கர்பெர்க்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம்பர் 1 மார்க் ஸூக்கர்பெர்க்இனியது புதியது - 4முகில்

 

நிச்சயம் இவருக்குத் தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாது. தமிழ்ப் பெருங்கிழவி ஔவை பற்றியோ, அவள் அருளிய ஆத்திசூடி பற்றியோ, இந்த இளைஞர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இவர் தன் வாழ்க்கையில் அடைந்திருக்கும் இந்த உயரத்துக்கும், இத்தனை வெற்றிகளுக்கும் காரணம் ஆத்திசூடியில் சொல்லப்பட்டிருக்கும் ‘நல்விதிகளில் ஐந்தை’ நேர்மையுடன் கடைப்பிடித்ததே.

யார் இவர்? உலகின் இளம் பில்லியனர்களில் ஒருவரும், உலகின் நம்பர் 1 சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனருமான - மார்க் ஸுக்கர்பெர்க்.

‘மார்க் மை வேர்ட்ஸ்’ என ஔவை சொல்லி, மார்க்கின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ஐந்து நல்விதிகளை அவரது வெற்றிக் கதையுடன் சேர்த்தே பார்த்துவிடலாம்.

நியூயார்க் அருகில் உள்ள டாப்ஸ் ஃபெரி என்ற சிறு நகரத்தில் பல் மருத்துவராக இருந்தவர் எட்வர்டு. இவரது ஒரு வயது மகன் மார்க் ஸுக்கர்பெர்க் தத்தித் தத்தி நடக்கும் பருவத்தில் (1985), எட்வர்டு தனது கிளினிக்கில் புதிய கம்ப்யூட்டர்களை நிறுவினார். விவரம் அறியாத வயதிலேயே கம்ப்யூட்டர் ஸ்பரிசத்துடன் வளர்ந்தான் சிறுவன் மார்க். விளையும் பயிர் முளையிலேயே, தனி கம்ப்யூட்டர் கேட்டு  அடம்பிடித்தது. சமாளிக்க முடியாமல் பெற்றோரும் வாங்கிக் கொடுத்தனர். 10 வயது மார்க், அதில் படம் வரைந்தான்; படம் பார்த்தான். வேறு என்ன செய்ய? ‘கம்ப்யூட்டர் போரடிக்குதுப்பா!’ என அலுத்துக்கொள்ள, ‘சி++ ஃபார் டம்மீஸ்’ என்ற புரோகிராமிங் புத்தகத்தை தன் மகனிடம் விளையாட்டாகத் தூக்கிக் கொடுத்தார் எட்வர்டு. மார்க், அதில் லயித்தான். புத்தகத்தைப் படித்துப் புரிந்துகொண்டு, சிறு சிறு புரோகிராம்கள் எழுத ஆரம்பித்தான். அந்த ‘விளையாட்டு’ அவனுக்குப் பிடித்திருந்தது. மகனின் ஆர்வத்தைக் கண்டுகொண்ட எட்வர்டு, அருகில் நடந்த ‘புரோகிராமிங் வகுப்பு’க்கு அனுப்பினார். பொடியனின் ஆர்வமும் திறமையும், வகுப்பில் இருந்த சீனியர்களைத் திகைக்கச் செய்தன.

p70a.jpg

‘அப்பா, உங்க கம்ப்யூட்டரையும் கிளினிக் ரிசப்ஷன்ல இருக்கிற கம்ப்யூட்டரையும் ஒரே நெட்வொர்க்ல கொண்டுவாங்க’ என மார்க் கட்டளையிட, எட்வர்டும் அப்படியே செய்தார். டாக்டரும் ரிசப்ஷனிஸ்ட்டும் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்ளும்படி புதிய ‘சாட் புரோகிராம்’ எழுதி அசத்தினான் மார்க். இன்றைக்கு உலகையே ஃபேஸ்புக்கால் இணைத்துவைத்திருக்கும் மார்க் நிகழ்த்திய முதல் ‘சாட்’ அது.

வீடியோ கேம்ஸ்களில் மூழ்கிக்கிடக்கும் பதின் வயதில், மார்க் தன்னைப் போன்ற புரோகிராமிங் ஆர்வமுள்ள நண்பர்களுடன் சேர்ந்து புதிய கேம்ஸ்களை உருவாக்கினான். அதற்காக ‘புரோகிராமிங்தான் வாழ்க்கை’ என அவன் அப்போதே முடிவெடுக்கவில்லை. அது என்னவோ, செம்புலப் பெயல்நீர்போல, ‘பிஹெச்பி’யும் ‘சி ப்ளஸ் ப்ளஸ்’ஸும் அவனுள் இயல்பாகக் கலந்தன.

பள்ளி இறுதி ஆண்டில் ஒரு புராஜெக்ட் செய்ய வேண்டும். மார்க்கும் அவரது நண்பர் ஆடமும் இணைந்து ‘ஸினாப்ஸ்’ என்ற ஒரு புதிய மியூசிக் பிளேயரை உருவாக்கினார்கள். கம்ப்யூட்டரை உபயோகிப்பவர் என்ன மாதிரியான பாடல்களை அதிகம் விரும்பிக் கேட்கிறார் என அவரது ரசனையை ஸினாப்ஸ் மோப்பம் பிடித்துக்கொள்ளும். ஏற்கெனவே இருக்கும் பாடல்கள், புதிதாகச் சேர்க்கும் பாடல்கள் எல்லாவற்றிலும் இருந்து அவருக்குப் பிடித்த மாதிரியான பாடல்களைத் தானே தேர்ந்தெடுத்து, ‘ப்ளே லிஸ்ட்’ ஒன்றை உருவாக்கி ஒலிக்கச் செய்யும். பள்ளி அளவில் ஸினாப்ஸ் புகழ்பெற, மார்க்கும் ஆடமும் அதை இணையத்தில் இலவசமாக உலவ விட்டார்கள். உபயோகித்தவர்கள், உச்சி முகர்ந்து பாராட்டினார்கள்.

‘பள்ளிச் சிறுவர்’களின் அபாரத் திறமை, எட்டுத் திக்கும் எட்டியது. மைக்ரோசாஃப்ட் முதல் மியூசிக் மேட்ச் வரை, சிறிய பெரிய நிறுவனங்களின் ‘ஆஃபர் லெட்டர்’ இருவரது இன்பாக்ஸையும் தட்டியது. மார்க், சற்றே மிரளத்தான் செய்தார். ‘அதுக்குள்ளயா... அய்யோ, நான் காலேஜ் படிக்கணும்’! என நழுவினார். ‘சரி, ஒரு மில்லியன் டாலர் தர்றோம். அந்த ஸினாப்ஸை எங்ககிட்ட வித்துருங்க’ எனவும் கேட்டுப் பார்த்தார்கள். மைக்ரோசாஃப்ட் இரண்டு மில்லியன் தருவதாகவும் அழைத்தது. ஆனால், அங்கே மூன்று வருடம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன். மைக்ரோசாஃப்ட்டில் வேலை என்பது ஆகச்சிறந்த வெகுமதிதான். ஆனால், என் கல்லூரிக் கனவுகள்? கடும் குழப்பத்தில் தவித்த மார்க், இறுதியில் ‘குழந்தைத் தொழிலாளி’யாக மாற விரும்பாமல், ‘ஹார்வர்டு’ பல்கலைக் கழகத்தில் படிக்க விண்ணப்பித்தார்.

அங்கே ஒவ்வொரு செமஸ்டரின் ஆரம்பத்திலும், மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு உரிய பாடங்களைத் தேர்ந் தெடுக்க வேண்டும். தங்கள் நண்பர்கள், காதலிக்கத் துரத்தும் பெண்கள்/ஆண்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என விவரம் தெரிந்தால், தாங்களும் அங்கே நங்கூரமிடலாம் அல்லவா? அதைத் தொகுத்துச் சொல்லும் ஹார்வர்டுக்கு உரிய பொது இணையதளம் எதுவும் இல்லை. மாணவர்கள் தவித்தார்கள். அதற்காகவே மார்க், 2003-ம் ஆண்டு மத்தியில் ‘கோர்ஸ் மேட்ச்’ என்ற இணையதளத்தை இன்ஸ்டன்ட்டாக உருவாக்கினார். செம  ஹிட். தளத்தை உருவாக்க எந்தவித டேட்டாபேஸும் மார்க்கிடம் கிடையாது. ஒவ்வொரு மாணவரும் தளத்தினுள் நுழைந்து, தங்கள் விவரங்களைத் தாங்களே பதிவுசெய்துகொண்டனர். புதிய டேட்டாபேஸ் உருவானது. கோர்ஸ்  மேட்ச்-ன் இந்த மாடல்தான் ஃபேஸ்புக்கின் அடித்தளமும்கூட.

மார்க், ஃபேஸ்புக்கை நிறுவுவதற்கு பல ஆண்டுகள் முன்பே ஹார்வர்டில் ஒரு ‘ஃபேஸ்புக்’ புழக்கத்தில் இருந்தது. ஹார்வர்டு மாணவர்களின் சுயவிவரங்களும் புகைப்படங்களும் அச்சடிக்கப்பட்ட தொகுப்பு. இணைய வசதி வந்தபின் அவை டிஜிட்டல் வடிவில் கிடைத்தன. ஆனால், அவற்றை அந்தந்தத் துறை சார்ந்தவர்கள் மட்டுமே பார்க்க முடியும். மற்ற துறையினர் உள்ளே நுழைய முடியாது. செக்யூரிட்டி... பாஸ்வேர்டு... இத்யாதி.

p70b.jpg

‘மப்பும்’ மந்தாரமுமாக இருந்த ஒரு பொழுதில், மார்க்குக்கு ‘ஹார்வர்டிலேயே அழகான பெண் யார்... ஆண் யார்?’ என்பதைத் தேர்ந்தெடுக்கும் ஒரு புரோகிராம் எழுதும் கோக்குமாக்கு யோசனை தோன்றியது. நெட்வொர்க் வழியே ஹார்வர்டின் ஒவ்வொரு துறையில் இருந்தும் மாணவர்களின் விவரங்களைத் திருடினார். `ஃபேஷ்மேஷ்' என்றொரு புரோகிராம் உருவாக்கினார். இரண்டு பெண்களின் (அல்லது ஆண்களின்) புகைப்படத்தை ஒப்பிட்டு யார் அழகானவர் எனத் தேர்ந்தெடுத்தால், தேர்ந்தெடுக்கப்படாத படம் மறைந்து அடுத்த படம் தோன்றும். இப்படியே ஓட்டு அளித்துக்கொண்டே செல்லலாம். மார்க், ஃபேஷ்மேஷை உருவாக்கி இணையத்தில் ஏற்றிய சில மணி நேரத்திலேயே, மாணவர்கள் அதை மொய்க்க ஆரம்பித்தனர். ஓட்டுகள் குவியக் குவிய, ஹார்வர்டின் இணைய இணைப்பு டிராஃபிக்கால் செயல் இழந்தது. மார்க்கும் அத்துடன் ஃபேஷ்மேஷுக்குத் திரை போட்டார். தனக்குள் முடிவெடுத்தார். குற்றமான விளையாட்டைச் செய்யாதே.  `கோதாட்டு ஒழி'  .

சில நாட்களில் மார்க், பல்கலைக்கழகத்தின் விசாரணை வளையத்துக்குள் நிறுத்தப்பட்டார். புகைப்படங்களைத் திருடியது, இணைய இணைப்பைத் தவறாகப் பயன்படுத்தியது, அழகுக்கான ஓட்டு என்ற பெயரில் கறுப்பு இனத்தவரின் மனதைப் புண்படுத்தியது - இப்படிச் சில குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட மார்க், ‘சாதாரண மாணவன் ஒருவன் தகவல்களை எளிதாகத் திருடும் அளவுக்குத்தான் பல்கலைக்கழகத்தின் இணையதளப் பாதுகாப்பு இருக்கிறது என்பதை உணர்த்தியிருக் கிறேன். அதற்காகப் பாராட்டுங்கள்’ என்றார் சாமர்த்தியமாக. தண்டனை இல்லாமல் தப்பித்தார்.

அடுத்ததாக மார்க், ஹார்வர்டு மாணவர் களுக்கான புதிய சோஷியல் நெட்வொர்க் தளம் ஒன்றை அமைக்கும் யோசனையில் இறங்கினார்.       `தூக்கி வினை செய்'  அந்தச் செயலை முடிக்க என்னவெல்லாம் தேவை எனத் தீவிரமாகத் திட்டமிட்ட பின்பே முனைப்புடன் களத்தில் இறங்கினார். ‘கோர்ஸ் மேட்சை'விட அதிகப் பயனுள்ளதாக, குறிப்பாக சாட்டிங்கில் தொடங்கி டேட்டிங் வரை புதிய தளம் மாணவர்களுக்குக் கைகொடுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் செயலாற்றினார். தளத்தினுள் நுழைய அடிப்படைத் தேவை ஹார்வர்டு இமெயில் கணக்கு. மாணவர்கள் சுய விவரங்களைத் தாங்களே இதில் பதிவுசெய்துகொள்ளலாம். அடுத்தவர்களின் தகவல்களை நோட்டம்விடலாம். ‘கொஞ்சம் படிக்கிறேன்’, ‘நீச்சல் அடிக்கிறேன்’, ‘காதலில் துடிக்கிறேன்’ என ஏதாவது ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் போடலாம்.

`thefacebook.com' என, அந்தத் தளத்துக்காக இணையதள முகவரியை 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவுசெய்தார் மார்க். இரவு, பகல், பசி, தூக்கம் எல்லாம் மறந்து அடுத்த செமஸ்டர் தொடங்குவதற்கு முன்பாகவே தளத்தை இயக்கிவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இயங்கினார். சமயங்களில் சாண் ஏறாமலேயே முழம் சறுக்கியது. அத்தனை ‘எரர்’. `இதெல்லாம் தேவையா... அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்' என மார்க், தூக்கிப் போட்டுவிடவில்லை.  `ஊக்கமது கைவிடேல்'     தன்னலம் இல்லாத உழைப்பைக் கொட்டி தளத்துக்கு உயிர்கொடுத்தார் மார்க்.

மார்க்கின் நண்பர் சாவ்ரின், தளத்தில் 1,000 டாலர் முதலீடு செய்ய, மாதத்துக்கு 85 டாலரில் தளத்துக்காக ஒரு சர்வரை வாடகைக்கு எடுத்தார்கள். அந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி மார்க், தனது ஹார்வர்டு இமெயில் மூலம்   தி ஃபேஸ்புக்கின் முதல் உறுப்பினராகப் பதிவுசெய்தார். தளம் இயங்க ஆரம்பித்தது. ஆரம்பமே ரணகள ஹிட். ஒருசில நாட்களிலேயே ஹார்வர்டு வளாகத்தில் ‘ஹலோ'வுக்குப் பதிலாக, ‘நீ ஃபேஸ்புக்ல இருக்கியா?’ என எல்லோரும் கேட்டனர்.

p70c.jpgஹார்வர்டு பேராசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் உள்ளே ஊர்வலம் வர ஆரம்பித்தனர். ‘எங்க காலேஜுக்கும் இதே மாதிரி ஒரு வெப்சைட் தேவை... செஞ்சு தாங்க ப்ளீஸ்!’ என கோரிக்கைகள் மார்க்கை மொய்த்தன. இரண்டே மாதங்களில் அமெரிக்காவின் முக்கியமான கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஃபேஸ்புக்கின் நீலக்கொடி. ஏற்கெனவே ஏதாவது ஒரு சமூக வலைதளம் கால் பதித்திருந்த கல்லூரிகளில்கூட ஃபேஸ்புக் நுழைந்து அரியணையைப் பிடித்தது. பணம் போட்ட சாவ்ரின், விளம்பரங்கள் வெளியிட்டு பணம் சம்பாதிக்கவும் நினைத்தார். அதற்கு மார்க் சம்மதிக்கவில்லை. ‘இது ஜாலியான தளம். இன்னும் பல லட்சம் பேரைச் சென்றடைய வேண்டும். விளம்பரங்கள்,  உறுப்பினர்களுக்கு எரிச்சல் தரும். அதனால் ஃபேஸ்புக்கின் இமேஜ் கெடும்’ என்றார் தீர்க்கமாக. பின்பு உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிக்கொண்டே சென்றதால், செலவினங் களைக் கட்டுப்படுத்த, சிறிய வகை விளம்பரங் களை, உறுப்பினர்களைத் தொந்தரவு செய்யாத விதத்தில் வெளியிட அனுமதித்தார்.

ஃபேஸ்புக்கை லபக்கிக்கொள்ள சிறிய, பெரிய நிறுவனங்களின் தூண்டில்கள் நீண்டன. மார்க் எதிலும் சிக்கிக்கொள்ளவில்லை. ‘இந்த புராஜெக்ட் எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கே சலிப்புத்தட்டும் வரை இதை மென்மேலும் விரிவடையச் செய்வதில்தான் முழுக் கவனம் செலுத்தப்போகிறேன். இதை விற்பது குறித்தோ, பணம் சம்பாதிப்பது குறித்தோ கொஞ்சமும் யோசிக்கவில்லை’ என்றார்.

அந்த விடுமுறை காலத்தில், சீன் பார்க்கர் என்பவருடன் கைகோத்தார் மார்க். ஃபேஸ்புக்கின் அடுத்தகட்ட வளர்ச்சி அப்போது தொடங்கியது. பார்க்கர், இதே துறையில் சில தோல்விகளைக் கண்ட அனுபவஸ்தர்; ஆனால், திறமைசாலி. ‘இப்போது சிறிய அளவில் இருந்தாலும் ஃபேஸ்புக் ஒருநாள் உலகத்தையே தன் பிடிக்குள் கொண்டுவந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு நிறைய முதலீடு தேவை’ என வருங்காலத்தைச் சிந்தித்த பார்க்கர், புதிய முதலீட்டாளர்களை அழைத்துவந்தார். முதல் கட்டமாக ஆறு லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு கிடைத்தது. ஃபேஸ்புக்கின் புதிய தலைமைப் பொறுப்பாளராக பார்க்கர் பொறுப்பேற்றார். ஃபேஸ்புக்கில் வேறென்ன புதிய வசதிகள் சேர்த்து உலகத்தை வளைக்கலாம் என இரவு-பகலாக கோடிங் சிந்தினார் மார்க்.

விடுமுறை காலம் முடிந்தது. ஹார்வர்டுக்குத் திரும்பிச் சென்று படிப்பைத் தொடரலாமா...இல்லை ஃபேஸ்புக்கை நம்பி படிப்பை விட்டு விடலாமா? - குழப்பத்தில் தவித்தபோது, ஹார்வர்டின் பழைய மாணவரான பில்கேட்ஸ் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு, மார்க்கின் நினைவுக்கு வந்தது. ‘உங்கள் மனதில் ஏதாவது புது புராஜெக்ட் இருந்தால், அதில் முழுக் கவனம் செலுத்துங்கள். தேவைப்பட்டால், படிப்பைப் பிறகுகூட தொடரலாம். ஹார்வர்டில் அந்த வசதி உண்டு. ஒருவேளை வருங்காலத்தில் மைக்ரோசாஃப்ட் படுத்துவிட்டால், நான்கூட ஹார்வர்டுக்கு வந்து படிப்பைத் தொடர்வேன்’ என்றார் பில்கேட்ஸ். மார்க்கும் அதே முடிவெடுத்தார். தேவைப்படும் வரை ஃபேஸ்புக் குக்காக உழைப்பது, அதற்குப் பின் ஹார்வர்டுக்குத் திரும்பி வந்து படிப்பைத் தொடர்வது.

மார்க்கின் உடல், உயிர், நாடி, நரம்பு, ரத்தம், சதை, சிந்தனை, செயல் அனைத்திலும் ஃபேஸ்புக் நீக்கமற நிறைய... அதில் புதிய புதிய வசதிகள் பிறந்தன. அமெரிக்க இளைஞர் கூட்டம் ஃபேஸ்புக் போதையில் மணிக்கணக்கில் திளைத்தது. 2004-ம் ஆண்டு அக்டோபரில் அரை மில்லியன் உறுப்பினர்கள். அடுத்த ஆறே மாதங்களில் ஐந்து மில்லியன். எல்லோருக்கும் எல்லா விளம்பரங்களும் தோன்றி எரிச்சல்படுத்தாமல், ஏரியா வாரியாக குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டும் சென்று சேரும் லோக்கல் விளம்பரங்களை வெளியிட வழிவகுத்தார் மார்க். அது வருமான வாய்ப்புகளைக் கொட்டியது. thefacebook.com என்பது facebook.com ஆகப் பெயரில் சுருங்கி, புகழில் பரந்து விரிந்தது.

பெரிய நிறுவனங்கள், ஃபேஸ்புக்குக்கு 500 மில்லியன், 600 மில்லியன் என்ற விலையுடனும் வலையுடனும் சுற்றிச் சுற்றி வந்தன. `மாற்றானுக்கு இடம் கொடேல்'!  மார்க் அசைந்துகொடுக்கவில்லை. ‘சம்பாதிப்பதோ, பணத்தைக் குவிப்பதோ, எல்லோராலும் இயலும் காரியமே. ஆனால், ஃபேஸ்புக் போன்றொரு ஹிட் சமூக வலைதளத்தை எல்லோராலும் உருவாக்க இயலாது. இதை நான் விற்க மாட்டேன்’ எனத் தீர்க்கமான முடிவுடன் இருந்தார் மார்க். ஃபேஸ்புக்கின் நிர்வாக அதிகாரம் தன் கையில் இருந்தால்தான் தான் நினைத்ததை முழுமையாகச் சாதிக்க முடியும் என்ற சிந்தனைத் தெளிவு மார்க்கிடம் இருந்தது. மார்க்கின் வலதுகை யாகச் செயல்பட்ட பார்க்கர், வெளி முதலீடுகளைக் கொண்டுவந்து கொட்டினார். அதே சமயம் மார்க்கின் அதிகாரத்துக்கு இடையூறு வராத வகையில் கவனித்துக்கொண்டார்.

2006-ம் ஆண்டு செப்டம்பரில், மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் பொதுமக்களுக்கான சேவையையும் ஆரம்பித்தது ஃபேஸ்புக். 2007-ம் ஆண்டு, நிறுவனங்களுக்கான பிசினஸ் பக்கங்கள் தொடங்கப்பட்டன. அடுத்தடுத்து ஃபேஸ்புக் வால், நியூஸ் பீட், போட்டோ ஷேரிங், கேம்ஸ், குரூப்ஸ் எனப் புதிய வசதிகள் பளபளக்க, சமூகம் அள்ளி அணைத்து ‘லைக்’கிட்டு, அபாரம் என ‘கமென்ட்’ போட்டு, ‘ஃபேஸ்புக்குக்கு நீங்க வாங்க’ என தங்கள் கருத்துகளை எங்கெங்கும் ‘ஷேர்’ செய்ய ஆரம்பித்தது. ‘ஃபேஸ்புக்கை ஆரம்பிக்கும்போது அதற்குப் பின் இத்தனை  பெரிய வியாபார வாய்ப்பு இருப்பதாக நான் சத்தியமாக நினைக்கவில்லை’ என பிறகு சொன்னார் மார்க். 
இருந்தாலும் உறுப்பினர்களின் அந்தரங்கத் தகவல்கள் மற்றவர்களுக்குக் கசிந்துவிடுமோ என்ற சந்தேகம் வலுப்பெற்றது. மார்க் தெளிவாகப் பதிலளித்தார், ‘கசியாது... கசியவும்விட மாட்டோம்.’ அதற்கு ஏற்ப புதிய, பயனுள்ள பிரைவசி செட்டிங்களையும் கொண்டுவந்து நம்பிக்கையைப் பலப்படுத்தினார். கண்டம்விட்டுக் கண்டம், நாடுவிட்டு நாடு ஃபேஸ்புக்கின் கிளை பரவியது. 2009-ம் ஆண்டு மொபைல் போனில் ஃபேஸ்புக்கை உபயோகிப்போர் சதவிகிதம் உயர ஆரம்பித்தது. 2011-ம் ஆண்டு கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச பயனாளர்களைக்கொண்ட தளமாக புன்னகை சூடியது ஃபேஸ்புக். 2008-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலுக்கு, பின் 2011-ம் ஆண்டு எகிப்தியப் புரட்சிக்கு ஃபேஸ்புக் தான் கொ.ப.செ! மாபெரும் சமூக மாற்றங்கள் இப்போது ஃபேஸ்புக்கில் இருந்தும் தொடங்குகின்றன. நம் சமூகத்திலும் திராவிடத் தலைவர் தொடங்கி தெருவோர வியாபாரி வரை அனைவருக்கும் முகநூல் தனி முகவரி.

ஃபேஸ்புக்கில் போலியான பெயர்களில் திரியும் விஷமிகள், ஃபேஸ்புக்கின் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, மோசடிகளை அரங்கேற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள், அவை குறித்த வழக்குகள், பயனாளிகளின் தகவல்கள் திருட்டுப்போவது, அதற்காக ஃபேஸ்புக் வழக்குகளைச் சந்தித்து நஷ்டம் வழங்குவது, ஃபேஸ்புக் மூலம் அரசாங்கத் துக்குத் தகவல் கொடுக்கப்படுவது, இப்படி முகநூலின் குறும்புப் பக்கங்களுக்கும் குறைவு இல்லை. அதனால் மார்க் சந்திக்கும் தலைவலிகளும் ஏராளம். இதையெல்லாம் அமைதியாகச் சமாளித்துவிட்டு, அடுத்தடுத்த இலக்குகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மார்க் அடிக்கடி தனக்குள் சொல்லிக்கொள்ளும் வாசகம், ‘மிகப் பெரிய ரிஸ்க் எதுவென்றால், எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பதே!’

2014, டிசம்பர் கணக்குப்படி 1,390 மில்லியன் பயனாளர்களுடன் அசுர பலத்துடன் வலம்வருகிறது ஃபேஸ்புக். உலகின் இளம் பில்லினியர்களில் ஒருவரான மார்க்கின், 2015-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரச் சொத்து மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயைவிட அதிகம். இன்றைய தேதியில் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய வெற்றியாளர். அதையெல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் தன் சாதனை குறித்து மார்க் சொல்லும் வார்த்தைகள் மிக எளிமையானவை.

‘பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் தொடர்பில் இருக்க உதவுவது என்பது ஆச்சர்யமான விஷயம். அதைச் சாத்தியப்படுத்தியதை என் வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்!’
`பீடு பெற நில்!'

சீன கனெக்‌ஷன்!

உலகின் நம்பர் 1 மக்கள்தொகைகொண்ட சீனாவுடன் ஃபேஸ்புக்கை கனெக்ட் செய்வது, மார்க்கின் லட்சியங்களுள் ஒன்று. அதிக கெடுபிடிகள் காட்டும் சீன அரசு, மார்க்கிடம் இதுவரை மசியவில்லை. 2012-ம் ஆண்டு தன்  11 வருடக் காதலி பிரிஸில்லா சானை மணம்புரிந்தார் மார்க். பிரிஸில்லா, சீன வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்த சீன கனெக்‌ஷனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை!

p70d.jpg

சர்ச்சை... வழக்குகள்!

பணம் காய்க்கும் சோஷியல் சைட், கல்லடிபடத்தானே செய்யும். ஃபேஸ்புக்கை, மார்க்கைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள், வழக்குகள் உண்டு.
நரேந்திரா, கேமரூன், டெய்லர் மூவரும், மார்க் ஹார்வர்டில் படித்த காலத்தில் சீனியர்கள். ஹார்வர்டு கனெக்ட் என்ற பெயரில், ஹார்வர்டு மாணவர்கள் மட்டும் உபயோகிக்கும் வகையிலான ஒரு டேட்டிங் தளம் உருவாக்க நினைத்தார்கள். சில புரோகிராமர்கள் அரைகுறையாக வேலைசெய்துவிட்டுக் கழன்றுகொள்ள, மூவரும் மார்க்கின் உதவியை நாடியிருந்தனர். மார்க்கும் (எந்தவித முன்தொகையும் வாங்காமல், எழுத்துபூர்வமான ஒப்பந்தமும் இன்றி) புரோகிராமைச் சரிசெய்ய உதவுவதாக ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், இழுத்தடித்து எதையும் செய்யவில்லை. பின், மார்க் ஃபேஸ்புக்கை ஆரம்பிக்க, அது அதிரிபுதிரி ஹிட் ஆக, மூவரும் ‘மார்க் தங்கள் ஐடியாவைத் திருடிவிட்டதாக’ வழக்கு தொடர்ந்தனர். அதை முற்றிலும் மறுத்த மார்க், பிரச்னைகள் சுமுகமாக முடித்துக்கொள்ள தனிப்பட்ட முறையில் செட்டில் செய்துகொண்டார்.

ஃபேஸ்புக்கின் ஆரம்பகால முதலீட்டாளரான சாவ்ரினுக்கு ஆரம்பத்தில் 30 சதவிகிதப் பங்குகள் இருந்தன. வேறு பெரிய முதலீட்டாளர்கள் உள்ளே வந்தபோது, சாவ்ரினின் பங்குகள் குறைந்தன. ‘மார்க் என்னை ஏமாற்றுகிறார்!’ என சாவ்ரின் நீதிமன்றத்துக்குச் சென்றார். வழக்கை இழுத்தடிக்காமல், மார்க் தனிப்பட்ட முறையில் சாவ்ரினுடன் செட்டில் செய்துகொண்டார்!


பிளாக் மார்க்!

மார்க், பழைய மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் மிக்கவர். பிரெஞ்சு, லத்தீன், ஹீப்ரு, பழைய கிரேக்க மொழி எழுதவும் பேசவும் தெரியும். ஒரு ராஜாபோல பழைமையான மொழி பேசிக்கொண்டே, வாள் சண்டை போடுவதில் ஆர்வம் உண்டு. யூதப் பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் கடவுள் நம்பிக்கையற்றவர்.

உடை தேர்வில் பெரிய விருப்பம் கிடையாது. பெரும்பாலும் ஜீன்ஸ், டி ஷர்ட்டில் இருப்பார். பெரிய நிகழ்வுகளில்கூட அதே கோலத்தில் கலந்துகொள்வார்.
மார்க், 2011-ம் ஆண்டு முதல் சைவத்துக்கு மாறிவிட்டார். ‘இறைச்சி உண்பது என்னை நானே கொல்வதற்குச் சமம்’ என்பது மார்க்கின் கருத்து.

2010-ம் ஆண்டு, ‘Person of the Year’ கௌரவத்தை மார்க்குக்கு வழங்கியது டைம் இதழ்.

மார்க், ட்விட்டர் ஐ.டி-யும் வைத்துள்ளார். @finkd.

http://www.facebook.com/zuck- என்பது மார்க்கின் ஃபேஸ்புக் பக்கம். அதில் அவரை யாரும் Block செய்ய இயலாது!

நன்றி விகடன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.